தமிழ்த்துறை இலயோலா கல்லூரி அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் – பேரா. எ. பாவலன்

தமிழ்த்துறை இலயோலா கல்லூரி அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் – பேரா. எ. பாவலன்




பிப்பிரவரி 28, 2023 அன்று சென்னை இலயோலா கல்லூரி தமிழ்த்துறையில் பேராசிரியர் ந. சுப்பு ரெட்டியார் அறக்கட்டளை, தமிழ்ப் பண்பாட்டு மன்றம் அறக்கட்டளை மற்றும் எஸ்தர் ராஜம்மாள் அறக்கட்டளை ஆகிய மூன்று அறக்கட்டளைகளுக்கும் சொற்பொழிவுகள் நடந்தன. இந்த அறக்கட்டளைகளுக்கு வரவேற்புரையை அறக்கட்டளைப் பொறுப்பாளர் பேரா. முனைவர் இ. அமல்ராஜ் அவர்கள், அனைவரையும் வரவேற்பு செய்தார். வாழ்த்துறையை அருள் முனைவர் ஜெயராஜ் போனிபஸ் சே.ச. செயலர் மற்றும் தாளாளர் அவர்கள் வழங்கினார். அவர் தமிழ்த்துறை மாணவர்களையும், பேராசிரியர்களையும், சிறப்பு விருந்தினர்களையும் வாழ்த்திப் பேசினார். அப்பொழுது தமிழ் மொழியின் உயர்வையும், தமிழ் மொழியைப் பேசும்போது பிற மொழிகள் கலக்காமல் பேசுவதையும், அதன் அழகையும் கோடிட்டுக் காட்டினார்.

தலைமையுரை வழங்கிய தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் முனைவர் சூ. அமல்ராஜ் அவர்கள் இந்த அறக்கட்டள் உருவான வரலாறை விரிவாக எடுத்துரைத்தார். மேலும் தமிழ் மொழியையும், தமிழ் பண்பாட்டையும் மாணவர்களிடம் கொண்டு செல்லும் நோக்கத்தோடு இந்த அறக்கட்டளைகள் தொடங்கப்பட்டன. இந்த அறக்கட்டளைகளுக்கு பொறுப்பாசிரியர் பேரா. முனைவர் இ. அமல்ராஜ் அவர்கள் ஏற்கனவே இரண்டு அறக்கட்டளைகளை சிறப்பாக நடத்தி முடித்துள்ளார். இன்று மூன்றாவது அறக்கட்டளையைத் நடத்திக் கொண்டுள்ளார். அவருக்கு நம் அனைவர் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் இந்நிகழ்விற்கு வந்து ஆசியுரையும் வாழ்த்துரையும் வழங்கி சென்றுள்ள நம் கல்லூரி செயல தந்தை அருள் முனைவர் ஜெயராஜ் போனிபஸ் சே.ச. அவர்களுக்கும் தமிழ் துறை சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். சீரிய முறையில் செயலாற்றும் மாணவர்கள் அனைவரையும் பாராட்டி மகிழ்கிறேன் என்றார்.

இன்றைய அறக்கட்டளை சிறப்பு சொற்பொழிவாளர் எத்திராஜ் மகளிர் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் பேரா. முனைவர் அரங்க மல்லிகா அவர்கள் நாடறிந்த நற்றமிழ் அறிஞர். அவர் சமூக செயற்பாட்டாளர் என்ற அடிப்படையில் அறிமுகமானவர். அவருடைய பணியும் செயல்பாடும் எல்லோரையும் கவனிக்க வைத்தது. அப்படிப்பட்ட சமூக செயற்பாட்டாளர் முனைவர் அரங்கமல்லிகா அவர்களை நம் அனைவரின் சார்பாக வருக! வருக! என வரவேற்கிறேன்.

அடுத்து பேரா. முனைவர் த. அருள் பத்மராசன் அவர்கள் பொன்னேரி கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். அவர் சீரிய சிந்தனையாளர். இன்று சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் “நான் முதல்வன்” என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு இங்கு வந்துள்ளார் தொடர்ந்து இதுபோன்ற ஆய்வுச் சிந்தனைகளையும், உரைகளையும் வழங்கி தமிழுக்குத் தொண்டாற்றி வருபவர். அவர்களையும் நம் அறக்கட்டளைச் சொற்பொழிவுக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இதுபோன்ற அறக்கட்டளைகளைச் சொற்பொழிவுகள் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும், அவர்களின் முன்னேற்றத்திற்கும் துணைபுரிய வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டது. அதனால் மாணவர்கள் நன்கு கவனித்து எதிர்காலத்தில் நீங்களும் தமிழுக்கு இதுபோன்ற சிறந்த படைப்புகளைத் தர வேண்டும் என்று வாழ்த்தியும், வரவேற்றும் தலைமை உரையை நிறைவு செய்கிறேன் என்றார்.

சிறப்பு சொற்பொழிவாளர் பேரா. முனைவர் அரங்க மல்லிகா
தலைப்பு : சுற்றுச்சூழல் பெண்ணியம்

சென்னையின் அழகு இலயோலா கல்லூரிதான், என்று நான் குறிப்பிடுவேன். இந்த இயற்கைக் காட்சிகள் என்னை எப்பொழுதுமே ஈர்க்கும். ஒரு பக்கம் இறைபணியை சிறப்பாக செய்து கொண்டு, மற்றொரு பக்கம் இந்த சமூகத்தை மேம்படுத்துவதற்காக ஓர் அற்புதமான கல்விப் பணியை எந்தவிதமான சமரசமும் இல்லாமல் செய்து கொண்டிருக்கிறது என்பதனால், என்னை பொருத்தவரையில் சென்னை மாநகரின் அழகு என்றால் அது அறிவு கூடமாக இருக்கும் சென்னை இலயோலா கல்லூரி தான் என்பேன் என்றார். தொடர்ந்து செயளர்தந்தை, துறைத்தலைவர், அறக்கட்டளை பொறுப்பு ஆசிரியர், தன்னுடைய இன்னொரு சகப்பொழிவாளர், பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துக்களையும் வணக்கத்தையும் சொல்லி சுற்றுச்சூழல் பெண்ணியம் தலைப்பை தேர்வு செய்ததற்கான காரணத்தையும் விவரித்தார்.

இதுவரைப் பெண்ணியம் குறித்து பெண்கள் மத்தியில் பேசிக்கொண்டு இருப்பதை விட ஆண்கள் மத்தியில் பேசலாம் என்ற நோக்கத்தில் தான் இந்த தலைப்பைத் தேர்வு செய்தேன்.

இந்த உலகம் என்பது ஒரு தசை கலாச்சாரம் நிறைந்த நாடு. ஒரு பெண்ணை சக மனுசியாக பார்ப்பதில்லை. அப்படிப்பட்ட சூழலில் இன்றைக்கு இருக்கும் இந்த தசைக்கலாச்சாரம் திரைப்படம் அல்லது நமக்கு வந்து சேர்ந்துள்ள தவறான புரிதல்களால் நமக்கு வந்து சேர்ந்துள்ளது. முதலில் ஒரு பெண்ணை பார்க்கும் பொழுது நாம் எப்படி பார்க்கிறோம்? என்றால் அவளை வெறும் தசையாக தான் பார்க்கிறோம். பெண்களின் உணர்வுகளையும் அவர்களின் உரிமைகளையும் அவர்களின் விடுதலையையும் முன்வைத்து உருவான இயக்கம் தான் பெண்ணியம். இந்தப் பெண்ணியம் என்னும் சொல் அது விடுதலைக்கான குறியீடாக பார்க்கப்படுகிறது அது ஒரு concept. Feminism is Moment. அது ஒரு Ideology. இந்தக் கருத்தியலை தவறாக புரிந்து கொண்டால் கத்தி மேலே நிற்பதைக் போன்றது.

இன்று வரை பெண்களை சரியாக புரிந்து கொள்ள முடியாததற்கு காரணம் ஆக்ஷிபா கொலை வரை சென்று முடிந்துள்ளது. பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை. இன்னும் அங்கும், இங்குமான எத்தனையோ பாலியல் வன்கொடுமைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. 24 மணி நேரமும் ஒரு பெண்ணை காமம் சார்ந்து பார்த்துக் கொண்டே இருக்க முடியுமா? 24 மணி நேரமும் சோறு தின்றுகொண்டே இருக்க இருக்க முடியுமா? 24 மணி நேரமும் தூங்கிக் கொண்டே இருக்க முடியுமா?. முடியாது அல்லவா… எல்லா பெண்களையும் நாம் எப்படி பார்க்கிறோம் என்பதிலிருந்துதான் நாம் பெண்ணியத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

இன்று ஒரு வாதம் நடைபெறுகிறது. அது அபத்தமானது. அவர்களின் ஆடை கலாச்சாரத்தை பற்றி பேசுகிறார்கள்.பெண்கள் Modern Dress போட்டுக் கொள்வதால் மட்டும் தான் தவறு நடக்கிறதா? அப்படி அல்ல பெண்களை தவறாக பார்க்காதே என்று குழந்தை பருவத்தில் இருந்து நம் அம்மா நமக்கு சொல்லித் தரவில்லை. பெண்களின் வளர்ப்பைப் பற்றி தவறாக பேசும் இந்தச் சமூகம் ஏன்? ஆண் பிள்ளைகளின் வளர்ப்பைப் பற்றிப் பேசுவதில்லை. ஆண்கள் தலைமுடி சரியாக வெட்டிக் கொள்ளாத போதும், அவன் ரவுடியாக மாறும்போதும், அவனுடைய ஒழுக்கம் சரியில்லாத போதும் கேள்வி கேட்க மறுக்கும் இச்சமுகம் பெண்கள் மட்டும் அவர்கள் ஆடைகள் அணிவதில் குற்றம் கண்டுபிடிப்பது எந்த வகையில் நியாயம் அல்லது அவர்கள் போடும் ஆடைகளால் தான் இந்த சமூகத்தில் தவறு நடக்கிறதா? இன்னும் சொல்லப்போனால் அவர்கள் ஆடைகளை எல்லாம் திருத்திக் கொண்டு சரியாக போட்டுக் கொண்டாலும் இந்த சமூகம் மாறிவிடப் போகிறதா? அல்ல அப்படியல்ல இது ஆண்களுக்கு சொல்லிக் கொடுக்க மறந்த செயலால் வந்த வினை.

Feminism என்பது பெண் வேறு – பெண்ணியம் வேறு என்று பிரித்துப் பார்க்க முடியாது; பெண் வேறு சுற்றுச்சூழல் வேறு அல்ல. Women and Ecology என்பது ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. சம்பந்தப்பட்டது… எப்படி சம்பந்தப்பட்டது என்று பார்த்தால்? வேட்டை சமூகத்தில் இருந்த பெண்கள் தங்கள் உணவுகளுக்காக மிருகங்களை வேட்டையாடினார்கள். அவள்தான் வேட்டையாடி கொண்டுவந்த உணவுகளை பகிர்ந்து கொடுத்தாள். வேட்டையாடுவது அவ்வளவு இயல்பு அல்ல. வேட்டுவம் என்னும் ஒரு கவிதை நூல் அதன் ஆசிரியர் மௌனன் யாத்திரிக்கா அந்தக் கவிதை நூலில் வேட்டை சமூகத்தின் கலாச்சாரத்தை நவீன தமிழ் மொழியில் ஆனால் சங்க காலத்தின் தொடர்ச்சியாக தந்துள்ளார்.

அதில் காடுகளில் விலங்குகள் எங்கெங்கு இருக்கும். அதன் காலடி சுவடுகள் எது? அதனுடைய குடியிருப்பு எப்படி இருக்கும்?, அது எங்கு தங்கி இருக்கும்? என்பதையெல்லாம் வேட்டைச் சமூகத்தில் இருந்த பெண் நன்கு அறிந்திருந்தாள். அந்த அளவிற்கு கவனிக்கும் சக்தி கொண்டவளாக பெண் இருந்திருக்கிறாள். இதையெல்லாம் அந்தக் கவிதை நூலில் காண முடியும்.

What is role of ecology? பெண்களுக்கும் சுற்றுச்சூழலுக்குமான தொடர்பை எப்படி பார்க்க வேண்டும் என்றால்? சங்க இலக்கியப் பாடல் ஒன்று… சிறு வயதில் பெண் குழந்தை ஒன்று விளையாடும் பொழுது ஒரு புன்னை விதையை மண்ணில் புதைத்து விடுகிறாள். தான் சாப்பிட்ட உணவை பால் சோறு, தேன் சோறு, தண்ணீர் எல்லாம் அந்த விதைக்கு ஊற்றி வளர்த்து வருகிறாள். ஒரு நாள் அந்தப் பெண் வயது வந்த பருவம் கொண்ட பெண்ணாக மாறும் பொழுது, அவளுக்கு காதல் அரும்புகிறது. அப்பொழுது தலைவன் தன்னை மற நிழலில் உறவாட அழைக்கும் பொழுது, அந்த மரம் என்னுடைய சகோதரி… என் சகோதரிக்கு முன் எப்படி என்னால் காதல் முடிவு பேசமுடியும் என்று கேட்பதில்? இருந்து அவள் எந்தளவிற்கு அந்த மரத்தையும், இயற்கையும் தன்னுடைய உறவாக நினைக்கிறாள் என்பதை உணரமுடியும்.

அறிவுமதியின் நட்புக்காலம் என்கின்ற கவிதை நூலை எடுத்துப் பாருங்கள். தோழனுக்கும், காதலனுக்குமான உணர்வுகள் புலப்படும். அவள் உறவு புலப்படும். பெண்கள் பெரும்பாலும் காதலனுடன் இருப்பதைவிட தன் தோழனுடன்தான் இருக்க விரும்புவாள். நாம் எங்கு நின்று கொண்டிருக்கிறோம் என்றால் bear cultureரில் நின்று கொண்டிருக்கிறோம்.

இந்தியாவில் western culture உள்ளே வந்திருக்கிறது . westernனில் இந்தியாவின் culture சென்றிருக்கிறது. இங்கிருந்து அங்கு போனவர்கள் மடிசார் புடவை கட்டிக்கொண்டு கோவில் பூஜை போன்றவற்றில் கவனம் செலுத்துகிறார்கள். அங்கிருந்து இந்த கலாச்சாரத்தை அரைகுறையாக கற்றுக்கொண்டு நாம் செய்வது அறியாமல் கவலை அடைகிறோம். இது போன்ற சூழலில் தான் நாம் Ecologyயைப் பேச வேண்டும். Ecology genderருடன் தொடர்புடையது. ஒரு ஆண் பெண் சூழலுடன் இது தொடர்புடையதாக இருக்கிறது. பெண் இயற்கையுடன் தொடர்புடையவள் என்று எப்படி சொல்கிறோம் என்றால்? அவளுடைய கர்ப்பப்பை. அவள் கர்ப்பப்பையில் உள்ள நீர் எப்படி ஒரு குழந்தையைப் பெற்றுத் தருவதற்கு பனிக்குடம் பயன்படுகிறதோ? அந்த நீர் ஆணின் விந்தை உள்வாங்கி அது வளர்த்தெடுக்கிறது. அந்த நீர் இல்லை என்றால் வளராது. அப்பொழுது நீரும் பெண்ணும் ஒன்றாகி இருக்கிறாள். செம்புலப் பெயல் நீர் போல அன்புடைய நெஞ்சம் தாம் கலந்தனவே என்ற சங்கப்பாடலில் வரும் பொருள் என்ன செம்மண்ணில் நீர் கலந்து விட்டால் எப்படி பிரிக்க முடியாதோ? அப்படிதான் ஒரு ஆணினுடைய விந்தணு பெண்ணின் கர்ப்பப்பைக்குள் நுழைந்து விட்டால் அது கருவாக உருவாகிறது. அது அன்பை தருகிறது. அந்து அன்பின் அடையாளம்.

ஒரு ஆணும் பெண்ணும் இணைதல் என்பது, இந்த இடத்தில் பெண்கள் குழந்தைகளை உற்பத்தி செய்து தருபவளாக இருக்கிறாள். அதேபோன்று நாம் இயற்கைக்கு வந்தோம் என்றால்? ஒரு விதைப் போட்டால் செடியாய், கொடியாய், மரமாய் வளர்ந்து வரும்.காய் தரும், கனி தரும், மலர் தரும், எல்லாம் தரும். இந்தப் பக்கம் Nature gives எல்லா விதமான resource. அந்தப் பக்கம் women gives Reproduction. ஒரு பெண் மனித உயிரை தருகிறாள். இயற்கை வளங்களை தருகிறது. Nature = Women; Women = Nature

இப்படி அரிய பல தகவல்களைத் தந்து சுற்றுச்சூழல் பெண்ணியம் குறித்து பேராசிரியர் அரங்கமல்லிகா சிறப்பாக உரையாற்றினார்கள்.

சிறப்பு சொற்பொழிவாளர் பேரா. முனைவர் த.அருள் பத்மராசன்
தலைப்பு : எதிர்காலத் தமிழ்

எதிர்காலத்தில் தமிழ் மொழி எப்படி இருக்கும்? அதற்கு மாணவர்கள் ஆசிரியப் பெருமக்கள், மொழிகள் அறிஞர் என்று பலரும் ஆற்ற வேண்டிய பணிகளை எல்லாம் பட்டியலிட்டார். அவர் அரங்கத்தை வெறும் சொற்பொழிவு அரங்கமாக எண்ணாமல், பங்கேற்பாளர் அரங்கமாக மாற்றிக் கொண்டார். மாணவர்களை கேள்வி கேட்டு அவர்களுக்கு பதில் அளிக்கும் வண்ணமாக மாற்றி அனைவரையும் பங்கேற்கச்செய்தார். அதில் ஒரு மாணவர் தூய தமிழ் மொழியில் பேசுவது நல்லதா? அல்லது ஆங்கிலம் உள்ளிட்ட மற்ற மொழிகள் கலந்து உரையாடுவது நல்லதா? என்றார். மற்றொரு மாணவர் முன்பு எல்லாம் தமிழ் இலக்கியத்தை விரும்பி படித்தனர். ஆனால் இன்று தமிழ் படிக்க வரும் மாணவர்களை முன்பு போல் வரவேற்பு இல்லாமல் போனதற்கு காரணம் என்ன? இது போன்ற கேள்விகளை எழுப்பிய போது, மாணவர்களுக்கு புரியும் வகையில் எளிமையான மொழியில் பதிலளித்தார். தொடர்ந்து தமிழ் மொழி ஊடகங்களால் வளர்ந்து கொண்டிருக்கும் சூழலையும், கூறி மாணவர்களைச் சிந்திக்கும் எண்ணத்தைத் தூண்டினார்.

நிறைவாக மூன்றாமாண்டு தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர் வெ. ரூபன் நன்றி உரையைக் கூறி முடித்தார். இந்நிகழ்வை தன் குரல் வளர்த்தாலும், அழகான தமிழ் மொழியாலும் மூன்றாமாண்டு தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர் மாதேஷ் தொகுத்து வழங்கினார். இந்தளவில் அறக்கட்டளை சொற்பொழிவு சிறப்பாக நடைபெற்றது.

பேரா. எ. பாவலன்
drpavalan@gmail.com

இலயோலா கல்லூரி – பாரதியார் பிறந்த நாள் விழா நினைவு கருத்தரங்கம், நூல் வெளியீட்டு விழா

இலயோலா கல்லூரி – பாரதியார் பிறந்த நாள் விழா நினைவு கருத்தரங்கம், நூல் வெளியீட்டு விழா




12.12.2022 அன்று சென்னை இலயோலா கல்லூரி தமிழ்த்துறையும், சென்னைப் பல்கலைக்கழகம் அழிநிலை மொழிகள் நடுவம் நிறுவனமும் இணைந்து, பாரதியார் பிறந்த நாள் விழா நினைவுக் கருத்தரங்கமும், தமிழின் தொன்மை : அகழ்வாய்வுகள் என்ற ஆய்வு நூல் வெளியீடும் இனிதே நடைபெற்றது.

இறை வணக்கத்துடன், தமிழ்த்தாய் வாழ்த்துமுடிந்த பின்பு, கல்லூரிச் செயலர் அருள்முனைவர் போனிபஸ் ஜெயராஜ் சே.,ச. அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். பின்னர் தொன்மை: அகழ்வாய்வுகள் நூலை வெளியிட்டு ஆசியுரை வழங்கினார். அப்பொழுது பாரதியாரின் பிறந்தநாள் குறித்தும், மொழிகளின் முக்கியத்துவம் குறித்தும் அதில் தமிழ் மொழியின் முக்கியத்துவம் பற்றிய தன் கருத்துக்களை எடுத்துவைத்தார். குறிப்பாக இவ்வுலகில் 7000 மொழிகளுக்குமேல், பேசப்பட்டாலும் தமிழ் உள்ளிட்ட எண்ணிக்கையில் குறைவான மொழிகளுக்கு மட்டுமே செம்மொழி தகுதிக் கிடைத்துள்ளன. தொல்காப்பியத்தால், தமிழ் மொழி சிறந்து விளங்குகிறது. எந்த இடங்களுக்குச் சென்றாலும் மாணவர்கள் தாய்மொழியில் பேசவேண்டுமென்றும் வலியுறுத்தினார். மேலும் பாரதியார், தன்னுடைய கவிதைகளை இசை வடிவத்தில் எழுதிய அழகை வியந்து பேசினார். அப்பொழுது பாருக்குள்ளே நல்ல நாடு நம்ம பாரத நாடு என்ற கவிதையின் சிறப்பைப் பற்றி சிலாகித்துப் பேசியது உள்ளபடியே அத்தனை மகிழ்ச்சி அளித்தது. தமிழ்த்துறை எப்பொழுதும் தன் இலக்கை நிர்ணயித்து இயங்கிக் கொண்டிருக்கிறது. நூல் வெளியீடு, கருத்தரங்கம், இதுபோன்ற அறிஞர் பெருமக்களின் பிறந்தநாள் விழாக்கள் உள்ளிட்டவற்றை தமிழ்த்துறை மிக சிறப்பாக நடத்தி வருவதைக் கண்டு தமிழ்த்துறைத் தலைவர் சூ அமல்ராஜ் அவர்களையும், அவர்களுக்கு உற்ற துணையாக நிற்கும் மற்ற பேராசிரியர்களையும், மாணவர்களையும் இன்முகத்துடன் வாழ்த்திப் பாராட்டினார்கள்.

அடுத்து அழிநிலை மொழிகள் நடுவம் நிறுவனத்தலைவர் பேராசிரியர் முனைவர் ஏகாம்பரம் அவர்கள் பாரதியாரைப்பற்றி குறிப்பிடும்போது யாமறிந்த மொழிகளிலே…. யாமறிந்த புலவனிலே…. என்று சொல்லுவதற்கு பாரதிக்கு ஒரு தகுதி உண்டு. காரணம் அவன், பல மொழிகளைக் கற்றவன் மற்ற மொழிகளை விட தமிழ் மொழி உயர்ந்தது என்று சொல்லுவதற்கு அவனுக்கு ஒரு தார்மீக உரிமையும் உண்டு. இன்று வந்திருக்கக்கூடிய நூல்களில் மக்களிடம் அதிகமாக சென்றடைந்த நூல்கள் இரண்டு. ஒன்று திருக்குறள். மற்றொன்று பாரதி. இதில் எந்த கருத்து முரணும் இருக்காது என்று நம்புகிறேன். கிருத்துவத்திற்கும், பாரதிக்கும் தொடர்புகள் நிறைய இருக்கின்றன. பாரதியும் மக்களிடம் அதிகமாக சென்றடைந்தான். கிருத்துவமும் மக்களிடம் சென்றடைந்தது. இன்றைக்கு பாரதியின் பெயரை தன்னுடைய பெயருக்கு முன்னொட்டாகவும், பின்னொட்டாகவும் ஏன் வைக்கிறார்கள்? கவிதையை எழுதவரும் படைப்பாளிகள் பாரதியை முன்மாதிரியாகக் கொண்டிருக்கக் காரணம் என்ன? பாரதி ஏதோ ஒரு வகையில் அவர்களை பாதித்திருக்கிறான். அல்லது அவனுடைய கவிதை ஏதோ ஒரு வகையில் அவர்களை பாதித்திருக்கக்கூடும்.

பாரதிக்கும், கிறித்துவத்துக்குமான தொடர்பு முதலில் கல்வியிலிருந்து தொடங்குகிறது. கல்வி எல்லோருக்குமானது. இந்த உணர்வு எப்பொழுது வந்ததென்றால்? ஐரோப்பியர்களின் வருகைக்குப் பின்பு தான். கல்வி பரவலாக்கப்பட்டது. அதுவரை கல்வி ஒரு சாராருக்கு மட்டும்தான் என்றிருந்த நிலையில் பாரதி சொல்லுவான், அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்…. ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்று கூறியுள்ளார். அதே போன்று தான் இலயோலா கல்லூரியும். ஏழை எளியோருக்கு தான் முதலில் கல்வி தர வேண்டும். மட்டுமல்ல அவர்களைதான் முன்னேற்ற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தின் அடிப்படையில் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இவை எல்லாவற்றுக்கும் காரணம் அடிப்படையில் மனிதர்களை சமமாக பாவிக்கும் மனோபாவம். இந்த மனோபாவம் எங்கிருந்து வந்தது என்றால்? எல்லாம் இயேசு பெருமான் வழங்கிய கொடை. அதனால்தான் அவர்கள் கல்வியை பரவலாக்கினார்கள். பாரதிக்கும் – கிறித்துவ நிறுவனங்கள் வழங்கும் கல்விக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது. ஏதாவது பள்ளிக்கூடம் இல்லாத ஊர் இருந்தால் அதை கொளுத்து என்கின்றார் பாரதி.

அடுத்து இந்தியாவில் நிலவும் சாதிக்கொடுமை. ஐரோப்பியர்களிடம் இங்கிருந்தவர்கள் பட்டியலின மக்களைப் பற்றி எப்படி சொல்லிப் புரிய வைப்பது என்று தெரியாமல் அவர்களைத் தொடக்கூடாது தொட்டால் தீட்டு என்றனர். அப்பொழுது ஆங்கிலேயர்கள் எங்கள் ஊரில் கரண்டை தான் தொடக் கூடாது என்பார்கள். அதைத் தொட்டால் ஷாக் அடிக்கும் என்பதால் இங்கு வினோதமாக இருக்கிறதே மனிதர்களுக்கு மனிதன் தொடக்கூடாது என்றால்…. ?

இங்கு பாரதியார் சாதி ஒழிப்பிற்காக குரல் கொடுத்தவர். அதனால் தான் பொதுவுடமைக் கட்சி இயக்க தோழர் தா. பாண்டியன் அவர்கள் பாரதியும் சாதி ஒழிப்பும் என்ற நூலை எழுதியுள்ளார். அந்த நூல் அனைவரும் படிக்க வேண்டும். படரும் சாதிக்கு மருந்தவன் என்று பாரதியைப் பற்றி பாரதிதாசன் கூறியிருக்கிறார். பாரதியார் சார்ந்த சொந்த சமூகத்தால் அடைந்த கொடுமைகளுக்கு அளவே இல்லை. அவர் உயிருடன் இருந்தபோதே நான் இறந்தால் என்சவத்திற்குப் பின்பு இரண்டு பேர்க்கூட வரமாட்டார்கள் என்பதை, அந்த சமூகம் மெய்ப்பித்தது.

அதேபோன்று நந்தனைப் பற்றி பேசும் பொழுது, நந்தனைப் போன்ற ஒரு பார்ப்பான் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். பிறப்பால், உடல் நிறத்தால் மட்டுமே உயர்ந்தவர்கள் இல்லை. மாறாக குணத்தால் உயர்ந்தவர்களே உயர்வானவர்கள் என்ற உயர்ந்த நோக்கம் கொண்டவன். குறுகிய காலத்தில் வாழ்ந்தவன் பாரதி. வாழ்நாள் குறுகிய காலம் என்றாலும் அவன் இச்ச சமூகத்திற்கு நிறைவான செய்தியை விட்டுச் சென்றிருக்கின்றான். இப்படிப்பட்ட பாரதிக்கு இலயோலா கல்லூரியில் விழா எடுப்பது உள்ளபடியே அத்தனை மகிழ்ச்சியை அளிக்கிறது என்று தன் உரையில் குறிப்பிட்டிருந்தார்.

பேராசிரியர் ஏகாம்பரம் அவர்களைத் தொடர்ந்து சிறப்பு சொற்பொழிவாளர் கடற்கரய் மத்த விலாச அங்கதம் அவர்கள் பாரதியாரை பற்றி கூறும் பொழுது, பாரதிக்கு இறுதியாக ஒரு கனவு இருந்தது. கிருத்துவத்தின்பால் ஈடுபாடு கொண்ட பாரதி பைபிளை மொழிபெயர்க்க வேண்டும் என்று எண்ணினார். பிறப்பால் ஒரு சமூகத்தில் பிறந்த அவர், முற்றிலும் வேறான ஒரு சமயத்தின் வேதநூலை மொழிபெயர்க்க விரும்பினார். ஒருவேளை இயற்கை அவருக்கு வாய்ப்பு அளித்திருந்தால் பாரதியின் மொழிபெயர்ப்பில் ஓர் அழகான பைபிள் கிடைத்திருக்கும். ஆனால் காலம் அவருக்கு கையளிக்கவில்லை.

நவீன யுகத்தின் அடையாளமாக கருதப்படுபவன் பாரதி. ஏன்…? வேறெந்தப் புலவனுக்கும் இல்லாத சிறப்பு என்னவென்றால்? மற்றத் தமிழ் புலவர்கள் எல்லாம் அறத்தைப் பாடினார்கள், மறத்தைப் பாடினார்கள். இயற்கையை, பறவையை, விலங்குகளை, சுகத்தை, துக்கத்தை உள்ளிட்டவற்றைப் பாடினார்கள். இரண்டாயிரமாண்டு கவிதை பாரம்பரியம் கொண்ட பாரதி, விடுதலை வேட்கையைப் பாடினார். அதனால்தான் சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகளானப் பின்பும் பாரதியாரைப் பாடுகிறோம். அதுபோன்றே தான் நவீன கவிதையின் அடையாளமாக இருக்கக்கூடிய ஆத்திச்சூடி எல்லா கடவுளை வணங்குவதைப்போல, இயேசு பிரானை வணங்குகிறார். பாரதிக்கு சாதியின்பால், மதத்தின்பால் எந்த பற்றும் கிடையாது. ஆனால் மற்றவர்கள் பாரதியை ஒரு சாதிச் சிமிழுக்குள் அடக்க நினைக்கிறார்கள். அவரை எப்படியாவது ஒரு வலதுசாரி சிந்தனை மனநிலைக்குக் கொண்டு சேர்த்து விட வேண்டும் என்று பலரும் போராடுகிறார்கள். நூறு ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த புலவன் சாதியை மறுத்திருக்கிறான்.

தமிழில் மிகவும் ஆழங்கால் பட்டவர், தமிழில் நவீன கவிதைகளைப் பாடியவர் பாரதிதாசன். மிக நுட்பமான கவிஞர் பாரதிதாசன் பாரதியின் புலமையை ஏற்றுக்கொண்டு, நெறிமுறைகளின் தன்மைகளாக புதிய வாசம் பெற்றதனால் தான் தன்னுடைய பெயரை பாரதிதாசன் என்று வைத்துக்கொண்டார். அவர், ஒருபோதும் படிக்காமல் தாசன் ஆகவில்லை. படித்து விட்டுதான் தாசன் ஆகியுள்ளார். பாரதிக்கு முற்றிலும் வேறான அரசியல் பின்புலம் கொண்ட பெரியாரை தன்னுடைய இலக்காகவும், இலட்சியமாகவும் கொண்ட பாரதிதாசன், பாரதியை ஏற்றுக் கொள்கிறானே என்று அவரைப் பற்றி படிக்கப் போனவன்தான் நான், பாரதியில் வீழ்ந்தேன்.

1914 பாரதி புதுச்சேரியில் இருந்த போது மாபெரும் புயல் காற்று வீசியது. அந்தப் புயல் காற்றில் வீட்டின் கூரைகள் பீய்த்துக்கொண்டு எங்கோ சென்று காணாமல் போய்விட்டன. ஆடு, மாடுகள் எல்லாம் சாலைகளில் இறந்து கிடந்தன. பறவைகள் கொத்துக்கொத்தாக செத்து மடிந்து கிடந்தன. பட்டியலின மக்கள் வாழும் இடம் (சேரிக்குச்) சென்று அந்த மக்களுக்கு என்னவெல்லாம் தேவை என்பதை உணர்ந்து முதலில் கஞ்சி காய்ச்சி மக்களுக்கு கொடுத்து சேவகம் /ஊழியம் செய்தார்.

நண்பர்களே…. கிருத்துவத்தின் மிக முக்கியமான வார்த்தை ஊழியம். பாரதி சொல்கிறார் ஊருக்கு உழைத்திடல் யோகம் என்கிறார். யோகம் என்பது வீட்டில் அமர்ந்து கொண்டு தியானம் பண்ணுவது அல்ல. ஊருக்கு உழைத்திடல் யோகம் அப்படி என்றால் யோகமும் / ஊழியமும் எங்கு இருக்கிறது என்றால்..? ஊருக்கு உழைப்பதில் தான்.

இப்படி அரிய ஒவ்வொரு நிகழ்வுகளை எல்லாம் அடுக்கிக் கொண்டே சென்றார். புயலுக்கு பின் அமைதி என்பதைப்போல மாணவர்களும் அத்தனை அழகாக, பொறுமைக் காத்து செவிமடுத்தனர். அந்த அளவிற்கு ஒரு ஆழமான உரை.

பொழிவாளர் கடற்கரை மத்த விலாசம் அவர்கள் உரை ஆழமான ஏறக்குறைய தியான மனநிலைக்கு அழைத்து சென்றார்.

பொழிவாளரின் உரைக்குப் பிறகு, நன்றி கூறுவதற்காக தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் சூ. அமல்ராஜ் அவர்கள், அன்றைய முழு நாள் நிகழ்வையும், அத்துணை அழகாக தொகுத்துரைத்தார். குறிப்பாக நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்து நிறைவு விழா வரைக்கும் யாருடைய பெயரும் விடுபட்டு விடாமல் அதே சமயத்தில் தன் கவனத்தை அன்றைய நாள் முழுதும் நடந்த நிகழ்வில் செலுத்தியதை எடுத்து இயம்பும் வண்ணம் தொகுத்துரைத்தார்கள்.

முனைவர் எல். சூசை சகாயராஜா அவர்கள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

தமிழ்த்துறைப் பேராசிரியர் அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சி சிறக்க தங்கள் பங்களிப்பை நல்கினர்.

இது போன்ற நிகழ்வுகள் அறிஞர் பெருமக்களுக்கு மரியாதை அல்லது அவர்களை நினைத்துப் பார்ப்பது என்பது ஒரு புறம் இருந்தாலும், அடுத்த தலைமுறைக்குக் கடத்தி செல்வது முக்கிய காரணம் என்று சொல்ல முடியும். இவ்விழாவில் தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்கள் சுமார் 250க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

அடுத்த தலைமுறையிடம் ஒரு நல்ல விதையைக் கொடுத்திருப்பதைப் போல, பாரதியை அவருடைய பிறந்த நாளில் கடத்தி இருக்கிறோம் என்ற நம்பிக்கை துளிர்விடத் தொடங்கி விட்டது.

– பேரா எ.பாவலன்

இலயோலா கல்லூரில் தத்துவபோதகர் தமிழ் இலக்கிய மன்றம் தொடக்க விழா. பேரா. எ. பாவலன்

இலயோலா கல்லூரில் தத்துவபோதகர் தமிழ் இலக்கிய மன்றம் தொடக்க விழா. பேரா. எ. பாவலன்




7.9.2022 (திங்கள்) அன்று சென்னை இலயோலா கல்லூரியில் தமிழ்த் துறையில் தத்துவபோதகர் தமிழ் இலக்கிய மன்றத் தொடக்க விழா இனிதே நடைபெற்றது.

இந்நிகழ்வு முழுக்க முழுக்க தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது. அந்த வகையில் வரவேற்புரையை மூன்றாம் ஆண்டு மாணவர் துறைச் செயலாளர், பெ.தேவேந்திர பிரபு தன் கவிமொழியால் அனைவரையும் வரவேற்றார்.

அவரை தொடர்ந்து வாழ்த்துரை நிகழ்த்துவதற்காக கல்லூரிச் செயலர் அருள் முனைவர் ஜெயராஜ் போனிபஸ் சே.ச., அவர்கள் மாணவர்களையும், தமிழ்த் துறையைம் பாராட்டி வாழ்த்துரைத்தார். குறிப்பாக தொகுப்புரைச் செய்த தமிழ் இலக்கியம் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர் முகில்வேந்தன் அவர்களின் அகரத்தில் தொடங்கி, ஔகாரத்தில் முடிந்த ஓர் அழகான கவிதையால் தமிழையும், துறையையும், கல்லூரியையும், பொழிவாளரையும், துறைத் தலைவரையும், மாணவர்களையும், பாராட்டி வரவேற்ற முறையைக் கண்டு மகிழ்ந்தார். பின்னர் தமிழ்த்துறையில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள மாணவச் செயலர், துணைச் செயலர், இணைச் செயலர், கலைச் செயலர் உள்ளிட்ட பல பொறுப்பாளர்களுக்கு பட்டையம் வழங்கிப் பாராட்டினார்.

தலைமை உரை வழங்குவதற்காக தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் சூ. அமல்ராஜ் அவர்கள் தத்துவப் போதகரின் தமிழ் இலக்கிய மன்றத்தின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார். மிகுந்த உற்சாகத்துடன் பொறுப்பிலே பிறந்து தென்னம் புகழிலே கிடந்து… என்ற கவிதை வரியைச் சொல்லி ஆரம்பித்தார். பின்னர் தமிழ் இலக்கியத்திற்குள் தன்னுடைய பேச்சை தடம் மாற்றினார். ராபர்ட்-டி- நொபிலியைப் பற்றியும், அவர் உரைநடையின் தந்தை என்று போற்றப்படுவதற்கான காரணத்தையும், அவர் எழுத்துலகில் செய்த அற்புதங்களையும், மேலும் அவர் எழுதிய 40 நூல்களையும் குறிப்பிட்டு பேசினார். பின்னர் சிறப்பு விருந்தினரை, அவர் எழுதிய கவிதையைக் கொண்டே, அவர் எழுதிய நூல்களைக் கொண்டே அலங்கரித்தார்.

துறைத் தலைவரை தொடர்ந்து தத்துவ போதகர் தமிழ் இலக்கிய மன்றத்தலைவர் முனைவர் ஜா. அமிர்தலெனின் தமிழ்த் துறை நடத்தும் தத்துவ போதகர் தமிழ் இலக்கிய மன்றத்தின் முக்கியத்துவத்தை பதிவு செய்து, சிறப்பு விருந்தினரை ரத்தினச் சுருக்குமாக அறிமுகம் செய்தார். நாடறிந்த நல்லக் கவிஞர் திரைப்படத்துறையில் கவனிக்கத்தகுந்த படைப்பாளியாகவும் வளர்ந்துக் கொண்டிருக்கிறார். அவர் எதிர்காலத்தில் தன் கவிதைகள் மூலம் எட்டாத தூரங்களை எல்லாம் தொட வேண்டும் என்று வாழ்த்தி மாணவர்களையும், பேராசிரியர்களையும் பாராட்டி வரவேற்றார்.

பின்னர் சிறப்பு விருந்தினர் கவிஞர் அ. ப. இராசா அவர்கள், தனக்கும் இந்தக் கல்லூரிக்குமான தொடர்பு குறித்து அழகாக பதிவு செய்தார். எனக்கு இந்தக் கல்லூரியில் தமிழ்த் துறையில் படிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கல்வி கட்டணம் செலுத்த போதிய வசதி இல்லாத காரணத்தினால் இந்தக் கல்லூரியில் என் கல்வியைத் தொடர முடியாமல் போனவன் நான். இன்று திரைத்துறையில் பாடல் ஆசிரியர்களில் அதிக சம்பளம் பெறக்கூடியவனாக திரும்ப வந்திருக்கின்றேன் என்று சொல்லும்போது அரங்கம் அதிர பெரும் கரவொலி ஒலித்தது.

தமிழும், கவிதையும் என்னும் பொருண்மையில் தன்னுடைய பொழிவைத் தொடங்கினார். பல்வேறு காலங்களில் இருந்து வந்த தமிழ்இலக்கியம் உலக இலக்கியங்களை விட மேன்மையுற்ற வரலாற்றை கூறி மொழியையும், இலக்கியத்தையும் முன்னிறுத்தினார். இலக்கிய வடிவத்தில் மொழிக்கு தனித்த ஓர் அடையாளம் உண்டு. கவிதை எப்பொழுதும் தன் இருப்பில் இருந்து மற்றவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துக் கொண்டிருக்கும் அல்லது கிளர்ச்சியை ஏற்படுத்தும் என்கின்ற தொனியை முன்னிருத்தி திரைப்பட நடிகராகவும் இயக்குனராகவும் இருக்கும் பார்த்திபன் அவர்களின் வரலாற்றோடு பின்னிப்பிணைந்த ஒரு கதையை அத்துனை அழகாக மாணவர்களுக்குக் கடத்தினார். குறிப்பாக தொடக்க காலத்தில் இயக்குனர் பார்த்திபன் வாழ்க்கையில் எல்லா நிலைகளிலும் தோல்வி அடைந்த பிறகு, வாழ்வதற்கே வாய்ப்பு இல்லை அதனால் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று எண்ணி கடற்கரை ஒன்றில் அமர்ந்து தன் மரணத்தை குறித்துச் சிந்தித்துக் கொண்டிருந்தார். அப்பொழுதுதான் காற்றில் பறந்து வந்த காகிதம் ஒன்று தன் மீது விழுந்தது. அந்தக் காகிதத்தைப் பார்த்த பின்பு தான் அவர் தன் வாழ்நாளில் மரணத்தைக் குறித்து சிந்திப்பதைத் தவிர்த்துவிட்டார். காரணம் அந்த காகிதத்தில் கல்யாண்ஜி எழுதிய ஒரு கவிதை இருந்தது. அந்தக் கவிதை இதுதான்.

”இருந்து என்ன ஆகப்போகிறது
செத்துத் தொலைக்கலாம்
செத்து என்ன ஆகப்போகிறது
இருந்துத் தொலைக்கலாம்”

இந்த கவிதைதான் அவர் மரணத்தை தடுத்தது. ஆகவே இத்துனைப் பெரிய மாற்றத்தை கவிதையால்தான் பெற முடிந்தது. அதுமட்டுமல்ல அதன்பிறகு அவர் வாழ்க்கையில் பெரிய பெரிய சாதனைகள் செய்து… உயர உயர பறந்து கொண்டிருக்கிறார். இன்றைக்கு உலகத் திரைப்பட வளர்ச்சியில் ஆஸ்கர் விருது பெரும் அளவிற்கு உயர்நது நிற்கிறார் என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கதையைச் சொல்லி முடிக்கும்பொழுது மாணவர்கள் உறைந்துதான் போனார்கள்.

பின்மொழியைக் குறித்தும், இலக்கியத்தைக் குறித்தும் உரையாடத் தொடங்கினார். மொழி என்பது வெறும் கருத்துப் பரிமாற்றக் கருவி என்பதோடு நின்று விடுவதில்லை அல்லது அப்படி குறிப்பிடுவது தவறு. மொழி ஓர் இனத்தின் அடையாளம். அதனால் மொழி ஆராய்ச்சியாளர்கள், ஓர் இனத்தை அழிக்க நினைத்தால் முதலில் அந்த இனம் பேசும் மொழியை அழித்தால் போதும் தானாகவே அந்த இனம் அழிந்து போகும் என்ற ஆராய்ச்சியை முன்வைக்கின்றனர்.

தன்னுடைய பொருண்மையின் தலைப்பைக் கொஞ்சம் சுருக்கி அதே சமயத்தில் ஆழமாகவும் 1960 களுக்கு பிறகு தமிழ் கவிதைகளில் ஏற்பட்ட மாற்றம் என்ற தலைப்பில் பேசத் தொடங்கினார். குறிப்பாக எழுத்து, கசடதபற, ழகரம், வானம்பாடி இயக்கமுள்ளிட்ட காலங்களில் உருவான கவிதை வரலாற்றை சொல்லி மாணவர்களை சிந்திக்கத் தூண்டினார். கவிதை என்றால் என்ன என்பதற்கு வலம்புரிஜான் கூறிய இலக்கணத்தையும், கவிமணியின் கூற்றையும் உதாரணம் காட்டி கவிதையின் அழகையும், மானுடம்பாடி வெளிவந்த வானம்பாடி இயக்க கவிஞர்களைப் பட்டியலிட்டார். கவிக்கோ அப்துல்ரகுமான், தமிழன்பன், மேத்தா, இன்குலாப், வைரமுத்து உள்ளிட்டோர் மானுடத்தைப் பாடியே கவிதைப் படைத்தனர். அதனால் தான் இன்றளவும் கவிதை தன் இருப்பை உறுதி செய்துள்ளது. இரண்டாம் உலகப்போரின் முடிவுக்குப் பிறகு ஐரோப்பா தேசத்தில் ஏற்பட்ட மாற்றத்தால் உருவான உலக மையம், தாராள மையம் உள்ளிட்ட சித்தாந்தம் இலக்கியங்களில் எதிரொலிக்கத் தொடங்கியது. அது கவிதைகளிலும் பிரதிபலிக்க ஒருபக்கம் இதுபோன்ற தாக்கமும் மார்க்சியக் கோட்பாடும், இந்தியாவில் டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாள் நூற்றாண்டுக்குப் பிறகு குறிப்பாக 90களுக்கு பிறகு பெண்ணியம், தலித்தியம் என்ற சொல்லாடல் கவிதையில் இடம்பெறத் தொடங்கியது.

திருச்சி குளப்பாடி கிராமத்தில் பண்ணையார் ஒருவரின் கிணற்றில் தாழ்த்தப்பட்டோரின் குழந்தைகள் குளித்ததால் தண்ணீர் தீட்டாகிவிட்டது என்று சொல்லி கிணற்றில் மின்சாரம் வைத்து அந்த குழந்தைகளை கொலை செய்தார். அதைக் கண்டிக்கும் விதமாக வெகுண்டு எழுந்த கவிஞர் இன்குலாப் எழுதிய கவிதைதான் மனுசங்கடா நாங்க மனுசங்கடா எனும் கவிதை. இதுவரை எதையெல்லாம் கவிதையில் சொல்லக்கூடாது அல்லது சொல்ல முடியாத சொற்கள் என்று சொல்லப்பட்டதோ? அவற்றைக் கவிதையில் கொண்டு வந்து எல்லோரையும் உச்சரிக்கச் செய்தவர் கவிஞர் இன்குலாப்.

மேலும் எண்ணற்ற சமூக சிந்தனையோடு எழுதப்பட்ட கவிதைகளை எந்தக் குறிப்பும் இல்லாமல் சரளமாக பேசியழகு உள்ளபடியே மெச்சத் தகுந்தது. சமகால கவிஞர்களை எல்லாம் தொட்டுக்காட்டி இன்னும் நூற்றுக்கணக்கான கவிதைகள் இதுபோன்று வரவேண்டும் என்றும், கவிதையில் ஒளிந்திருக்கும் அழகியலையும், அரசியலையும் பற்றி மிக விரிவான ஒரு ஆய்வுரையை நிகழ்த்தினார். ஆனாலும் புதுக்கவிதை, மரபுக் கவிதைப் போல ஒரு இலக்கணக் கட்டமைப்பு இல்லாமல் எதை எதையோ கவிதை என்று பேசுகின்றனர் என்ற ஒரு உரையாடல் முன் வைக்கப்பட்டதையும், கவிஞர் வைரமுத்துகூட புதுக்கவிதை மிக தீவிரமாக பேசப்பட்ட காலத்தில் சந்த அடிப்படையில் மரபுக் கவிதையையே எழுதிய வரலாற்றையும் கோடிட்டு காட்டினார்.

மேலும், இன்றைக்கு புதுக்கவிதை ஒரு ஆரோக்கியமான சூழலில் வளர்ந்து வருவதை யாராலும் தடுக்க முடியாது. அதை காலம்தான் தீர்மானிக்கும் என்று கூறி, சுவாரசியம் சற்றும் குறையாமல் தன்னுடைய உரையை முடித்தார்.

இந்நிகழ்வில் தமிழ்த் துறைப் பேராசிரியர்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்கினர்.

அந்த வகையில் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சூ. அமல்ராஜ், முனைவர் டேவிட் ஸ்டான்லி, முனைவர் அ. பிரின்ஸ், முனைவர் ஐ. அமல்ராஜ், முனைவர் ஜா.அமிர்தலெனின், முனைவர் டான் ஸ்டோனி, முனைவர் ஞான யுவராஜ், அருள் தந்தை சகாயராஜ், முனைவர் எ.பாவலன், பேரா. சந்தியாகப்பர், முனைவர் சசகாயராஜா, பேரா. லெனின், பேரா. ஜெயக்கொடி உள்ளிட்ட பேராசிரியர்கள், இளங்கலை தமிழ் இலக்கியம் பயிலும் சுமார் 180க்கும் மேற்பட்ட மாணவர்களும், பொறுப்பில் இருந்த மாணவர்களும் அனைவரும் கலந்து கொண்டு, நிகழ்ச்சியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

சென்னை இலயோலா கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் நடைப்பெற்ற வீரமாமுனிவர் தமிழ்ப் பேரவை தொடக்க விழா –  பேரா. எ. பாவலன்

சென்னை இலயோலா கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் நடைப்பெற்ற வீரமாமுனிவர் தமிழ்ப் பேரவை தொடக்க விழா – பேரா. எ. பாவலன்




25.8.2022 அன்று சென்னை இலயோலா கல்லூரியில் தமிழ்த் துறை சார்பாக வீரமாமுனிவர் தமிழ் பேரவை சுழற்சி- 2 தொடக்க விழா இனிதே நடைபெற்றது.

இந்த விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக கவிஞர் கலைமாமணி ஆண்டாள் பிரியதர்ஷினி அவர்கள் கலந்து கொண்டார். தொடக்க நிகழ்வாக வரவேற்புரை தமிழ்த் துறைப் பேராசிரியர் ரேவதி ராபர்ட் (தலைவர், வீரமாமுனிவர் தமிழ் பேரவை சுழற்சி- 2) அவர்கள் நிகழ்த்தினார். அப்பொழுது இந்த விழாவில் கலந்துகொண்டு ஆசியுரை வழங்கும் கல்லூரி செயலாளர் அருள் முனைவர் ஜெயராஜ் போனிபஸ் சே,ச., அவர்களையும், தலைமையுரை நிகழ்த்துவதற்காக கலந்து கொண்ட இணை முதல்வர் முனைவர் ஜெ. ஏ.சார்லஸ் அவர்களையும், வாழ்த்துரை வழங்குவதற்காக வருகை தந்துள்ள தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சூ. அமல்ராஜ் அவர்களையும், முனைவர் ம. ஜெயப்பிரகாஸ் ரத்தின தியாகு சுழற்சி- 2 தமிழ்த் துறை ஒருங்கிணைப்பாளர் அவர்களையும், சிறப்பு விருந்தினர் ஆண்டாள் பிரியதர்ஷினி அவர்களையும், மாணவர்களையும் மற்றும் பேராசிரியர் பெருமக்களையும் தன் இனிமையான தமிழால் வரவேற்றார்.

அப்பொழுது இந்த விழா எத்துனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும், இந்த விழாவிற்கு வருகை தந்துள்ள சிறப்பு விருந்தினர் அவர்களையும் ரத்தின சுருக்கமாக, அதே சமயத்தில் கவிஞர் பாலரமணி அவர்களைக் குறித்தும் தன்னுடைய நினைவை அழுத்தமாகப் பதிவு செய்தார். கவிஞர் பாலரமணி அவர்கள் இன்றைய சிறப்பு விருந்தினர் ஆண்டாள் பிரியதர்ஷினி அவர்களின் கணவர்.

அவர் சென்னை பொதிகைத் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் இருந்தவர். அவர் எழுதிய அத்துனைப் பெரிய அழகான இலக்கண நூலை வெறும் பத்து ரூபாய்க்கு தமிழ்ச் சமூகத்திற்கு கொடுத்துத் தன் பங்கிற்கு அறிவு பால் ஊட்டிய தகைசால் பெருந்தகை என்ற செய்தியை சுட்டிக்காட்டும் போது ஒரு கணம் அரங்கமே அமைதியானது. அத்துடன் ஆண்டாள் பிரியதர்ஷினியை மிக நேர்த்தியான முறையில் அறிமுகம் செய்து வைத்தார்.

அடுத்ததாக ஆசியுரை வழங்குவதற்காக அருள் முனைவர் ஜெயராஜ் போனிபஸ் சே. ச., அவர்கள் தன் பங்கிற்கு தமிழின் உயர்வை தன் நாவால் தட்டி எழுப்பினார். அப்பொழுது வீரமாமுனிவர் எத்துனை பெரிய ஆளுமை மிக்கவர். அவர் தமிழுக்கு செய்த தொண்டுகளை நினைவு கூர்ந்தார். அத்துடன் சிறப்பு விருந்தினரையும் இன்முகத்துடன் பாராட்டி வரவேற்றார். ஆண்டாள் பிரியதர்ஷினி அவர்களின் தமிழ்ப் புலமையைத் தானும் அறிந்திருக்கிறேன். இன்னும் இன்னும் பல படைப்புகளை தந்து இச்சமூகத்திற்கு தொண்டாற்ற வேண்டும். அதேபோன்று ஒரு பொருத்தமான பொழிவாளரை அடையாளம் கண்டு தமிழ்த் துறை பேசிரியர் பெருமக்கள் மாணவர்களுக்கு கல்வி பால் ஊட்டுவதை மகிழ்ச்சிப் பொங்க தன்னுடைய கருத்தை முன்வைத்து உரையற்றினார்.

தலைமையுரை நிகழ்த்திய முனைவர் ஜே. ஏ. சார்லஸ் இணை முதல்வர் அவர்கள், ஆண்டாள் பிரியதர்ஷினி படைப்புகளில் இருந்தே தன்னுடைய உரையை நிகழ்த்தத் தொடங்கினார். அவர், தன்னுடைய எழுத்தால் இலக்கிய உலகத்தில் உச்சம் தொட்டவராக இருந்து கொண்டிருக்கிறார். பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றிருந்தாலும் கூட நல்ல மனித நேயம் மிக்க பண்பாளர் என்பதை நானும் அறிவேன். தமிழ்த் துறை எப்பொழுதும் மாணவர்கள் நலன்களில் அக்கறை கொண்டது என்பதற்கு இந்த வீரமாமுனிவர் தமிழ்ப் பேரவை ஒரு சாட்சி. இப்படிப்பட்ட தமிழ்த்துறை நடத்தும் விழாவில் பங்கெடுத்து இருப்பதும் எனக்கும் மகிழ்ச்சி. மேலும் துறைத் தலைவர் மற்றும் சுழற்சி- 2 ஒருங்கிணைப்பாளர் மேலும் வீரமாமுனிவர் தமிழ் பேரவையின் தலைவர் அனைவரையும் பாராட்டிய வரவேற்கிறேன். இத்துனை நேரம் பொறுமை காத்து செவிமடுக்கும் மாணவர்களுக்கும் என்னுடைய அன்பைத் தெரிவித்து அவர்களையும் வரவேற்று அமைகிறேன் என்று தன்னுடைய தலைமையுரையை அழகாக ஆற்றி முடித்தார்.

அதன் பிறகு தமிழ்த் துறைத்தலைவர் முனைவர் சூ. அமல்ராஜ் அவர்கள் வீரமாமுனிவரின் அருமை பெருமைகளை அடுக்கிக் கொண்டு சென்றார். அத்தோடு இல்லாமல் சிறப்புரை ஆற்றும் பொழிவாளரை தன் கவிதை மொழியால் அலங்கரித்தார். ஆண்டாள் பிரியதர்ஷினி எழுதிய நூல்களைத் தலைப்பாக அடக்கி… அடுக்கி.‌.. தன் கவிதையின் வார்த்தைகளைக் கோர்த்து… கோர்த்து… வாழ்த்துரை செய்தார். துறைத் தலைவரின் கவிதையைக் கண்ட பொழிவாளர் அவர்கள் புளங்காங்கிதம் அடைந்தார்.

துறைத்தலைவரைத் தொடர்ந்து, சுழற்சி-2 ஒருங்கிணைப்பாளர் முனைவர் ம. ஜெயப்பிரகாஸ் ரத்தின தியாகு அவர்கள் தன் பங்கிற்கு, செயலர், இணை முதல்வர், தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களையும் பாராட்டி வரவேற்பு நிகழ்த்தினார்.

பொருத்த முடைய விழாவிற்கு பொருத்தமானதோர் சிறப்பு விருந்தினராக அமைவது என்பது தனிச் சிறப்பு. அந்த வகையில் ஆண்டாள் பிரியதர்ஷினி அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தமிழ்த்துறை முன்னெடுத்து இருக்கும் வீரமாமுனிவர் தமிழ்ப் பேரவை குறித்தும் இலயோலா கல்லூரியின் சிறப்புகளையும் அடுக்கத் தொடங்கினார். அதுவரை சிறப்பு விருந்தினர் என்ன பேசுவார்?, எப்படி பேசுவார்? என்ற ஒரு எதிர்பார்ப்பு மாணவர்களிடம் நிலவியது. அப்பொழுதுதான் இந்தக் கல்லூரிக்கும், தனக்குமான உறவை அவர் ஓர் அற்புதமான கதை மூலம் சொல்லத் தொடங்கினார். தன்னுடைய கணவர் கவிஞர் பாலரமணி இந்தக் கல்லூரியின் பழைய மாணவர். என்னுடைய மகள், தன் தந்தைப் படித்த கல்லூரியிலேயே பயில வேண்டும் என்ற கொள்கையோடு இருந்து நம் இலயோலா கல்லூரியில் முதுகலை ஆங்கில இலக்கியம் பயின்றவர். இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். தான் படித்த கல்லூரியில் தன் பிள்ளையையும் சேர்த்து படிக்க அனுமதிக்கும் எண்ணம் எதன் அடிப்படையில் வாய்க்கப்படுகிறது என்றால்? அந்தக் கல்லூரி தான் படித்தக் காலத்தில் ஏற்பட்ட உணர்வின் அடிப்படையில் தான் அந்த வாய்ப்பு ஏற்படுத்தி தர முடியும். அந்த வகையில் என்னுடைய கணவர் கவிஞர் பாலரமணி அவர்களும், மகளும் இந்த கல்லூரியில் படித்தவர்கள் அதே கல்லூரியில் நான் தமிழ்த் துறையில் இன்றைக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரை நிகழ்த்துகிறேன் என்று நினைக்கும் போது உள்ளபடியே அத்தனை பெருமை கொள்கிறேன் என்று சொல்லும் பொழுது மாணவர்கள் கொஞ்சம் அதிர்ந்து தான் போனார்கள். அதன் பிறகு மாணவர்கள் கவனம் எங்கும் சிதையா வண்ணம் அவரை நோக்கியே அமைந்திருந்தது. இன்றையக் காலகட்டத்தில் மாணவர்களை அரங்கத்தில் அமைதியாக உட்கார வைப்பது என்பது பெரிய சவால் தான். அதுவும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் அமைதிக் காப்பது பொழிவாளரின் தனித்திறமைப் பொறுத்தது. அதனால்தான் இன்று பேச்சு ஒரு கலையாக மாறி வருகிறது.

வள்ளுவர் சொல்வதைப்போல, செவிக்கு உணவு இல்லாத போது சிறிது வயிற்றுக்கு ஈயப்படும் ரசனை குறையும் போது தான் அரங்கத்தில் சலசலப்பு ஏற்படும்.

ஆனால் சுமார் 30 நிமிடங்கள் வரை பொழிவாளர் தன் திறமையால் மாணவர்களை இலக்கியத்தின் மீது கவனத்தைத் திருப்பினார். மெல்ல.. மெல்ல… இலக்கியத்திற்கும் வீரமாமுனிவருக்குமானத் தொடர்பு குறித்து விவரிக்கத் தொடங்கினார். இத்தாலி தேசத்தில் இருந்து சமயத் தொண்டு செய்வதற்காக தமிழகத்திற்கு வந்தவர் தொடக்கத்தில் அவருக்கு தமிழ் தெரியாது. ஆனால் தன்னுடைய கடுமையான உழைப்பாலும், அசாத்தியமான தேடலாலும் தமிழைக் கற்று தேர்ந்து அடுத்த 30 ஆண்டுகள் தமிழைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் வீரமாமுனிவர். இது எல்லோருக்கும் வாய்க்கப் பெறுவதில்லை. இன்றையத் தலைமுறைகள் நாம் ஒருவேளை இத்தாலி தேசத்துக்கு சென்று அங்கு இருக்கக்கூடிய ஒரு மொழியை கற்று அங்கு எப்படி பாண்டியத்யம் பெற முடியுமோ அப்படித் தான் வீரமாமுனிவர் தமிழகத்திற்கு வந்து தமிழைக் கற்று தமிழில் ஆகச்சிறந்த நூல்களையும், படைப்புகளையும் வெளிக்கொணந்தார். அதிலும் குறிப்பாகக் தமிழில் எழுத்துச் சீர்திருத்தத்தை முதலில் செய்த பெருமைக்குரிய தகை சால் பெருந்தகை வீரமாமுனிவர்.

தொல்காப்பியர் காலத்தில் சொல்லப்பட்ட ஒரு நூற்பா ஒன்று “எகரமும் ஒகரமும் இயற்கை அற்றே” இந்த எகரமும் ஒகரமும் இடத்துக்கு ஏற்ப கொண்டு கூட்டிப் பொருள் கொள்ள முடியும். குறிலுக்கும் நெடிலுக்குமான வித்தியாசம் தெரியாத ஒரு காலகட்டம். அதுவரை தமிழில் ஆகச் சிறந்த அறிஞர் பெருமக்கள் எல்லாம் இருந்தார்கள். ஆனாலும் கூட அவர்கள் குறிலுக்கும், நெடிலுக்குமான வேறுபாட்டைக் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் தமிழே அறியாத வேறு மொழியைப் பேசும் ஒரு மனிதர் தமிழைக் கற்று உணர்ந்ததால் குறிலுக்கும் நெடிலுக்குமான வேறுபாட்டை எளிமையாகச் சொல்லிக் கொடுத்தார். அதேபோன்று ஒற்றைக் கொம்பு, இரட்டைக் கொம்பு என்று குறிலுக்கும் நெடிலுக்குமான அடையாளத்தை தெளிவுப்படுத்தினார். தேம்பாவணி என்னும் காவியத்தைப் படைத்து உலகத்தில் தலைசிறந்த ஒரு படைப்பை வெளிக்கொண்டு வந்த பெருமை அவருக்கு உண்டு. அகராதி இல்லாத காலகட்டத்தில் முதல் முதலில் சதுர அகராதியை கொண்டு வந்து தமிழுக்கு அறிமுகப்படுத்திய சிறப்பும் அவரைச் சாரும். உரைநடையின் தந்தை என்று போற்றப்படுவதற்கான காரணத்தையும், அதன் பின்புலத்தையும் அத்துனை ரசனையோடு மாணவர்களிடம் எடுத்து உரைத்தார்.

அவ்வப்போது மாணவர்கள் சோர்ந்து விடாமல் இருப்பதற்காக தன்னுடைய பேச்சை வலிந்து பேசவில்லை. மாறாக தன் பேச்சை வலிமையாக மாற்றியவர் ஆண்டாள் பிரியதர்ஷினி அவர்கள்.
அந்த வகையில் சரியான காலத்தில், சரியான நேரத்தில் அறுவடை செய்தது போல அவருடைய பேச்சு அத்தனை இனிமையாக அமைந்திருந்தது.

ஏற்கனவே இந்த வீரமாமுனிவர் தமிழ்ப் பேரவை மாணவர்களுக்காக மாணவர்களே முன்னின்று நடத்திய நிகழ்வு. நிகழ்ச்சி முடிவுக்கு எட்டிய பின்னரும் மாணவர்கள் பிரிய மனமில்லாமல் தாயார் ஆண்டாள் அவர்களிடம் அலாவிய காட்சி ஆசிரியர் பெருமக்களுக்கு மகிழ்ச்சி அளித்தது.

இப்படி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இலயோலா கல்லூரியில் தமிழ்த் துறை சார்பாக முன்னெடுக்கப்பட்ட இந்த விழாவிற்கு தமிழ்த்துறை மட்டும் அல்லாமல் மற்ற துறையில் இருந்தும் பேராசிரியர்களும் கலந்து கொண்டார்கள்.

மேலும் இந்நிகழ்வில்தமிழ்த்துறை பேராசிரியர்கள் பேரா. யுவராஜ், பேரா. சந்தியாகப்பர், முனைவர் சகாயராஜ், முனைவர் பி. லெனின், பேரா. மைக்கேல், பேரா. ஜெயக்கொடி, பேரா.தரன் கலந்து கொண்டனர்.

மாணவர்களும் இந்த விழாவைக் கொண்டாடி…கொண்டாடி… மகிழ்ந்தனர்.

பேரா. எ. பாவலன்,
உதவிப் பேராசிரியர்,
இலயோலா கல்லூரி,
சென்னை- 34

திருமலை சமுத்திரமும், நுங்கம்பாக்கம் ஏரியும் கட்டுரை – ராமச்சந்திர வைத்தியநாத்

திருமலை சமுத்திரமும், நுங்கம்பாக்கம் ஏரியும் கட்டுரை – ராமச்சந்திர வைத்தியநாத்




“சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரி கோயில் நிலத்தில் கட்டப்பட்டுள்ளது, அதன் குத்தகைக் காலம் முடிவுற்றபடியால், உடனடியாக அவர்கள் காலிசெய்வதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.” இது சமீப காலங்களில் சமூக ஊடகங்களில் விவாதிக்கப்படும் அதி முக்கியமானதொரு பொருளாக இருந்து வருகிறது.

இந்து அல்லாத சிறுபான்மையினர் நடத்தக்கூடிய கல்லூரிகள் மீது குறிவைத்துத் தாக்கப்பட்டு வருவதன் தொடர்ச்சியாக மட்டுமே இதை கொள்ளலாகாது.

தஞ்சை திருமலை சமுத்திரத்தில் தமிழக அரசு திறந்தவெளி சிறைச்சாலைக்காக ஒதுக்கப்பட்டிருந்த 20.62 ஏக்கர் நிலத்தில், எவ்வித ஒப்புதலும் ஆணையுமின்றி அத்துமீறி, சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் கட்டிய கட்டுமானங்களை அகற்ற வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்புக்குப் பின்னரும், சச்சரவு நீடித்துவரும் சூழலின் பின்னணியில் இதைப் பார்க்க வேண்டும்.

தவிர தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான தனியார் பொறியியல் கல்லூரிகள் சாதி மத இன பேதமின்றி அரசு நிலத்தையும், ஆறுகளையும், ஆற்றுப் படுகைகளையும் ஆக்ரமித்துதான் கட்டுமானங்களை நிறுவியுள்ளது. அவ்வப்போது வெவ்வேறு காரணங்களுக்காக ஒரு சில பொறியியல் கல்லூரிகளின் ஆக்கிரமிப்பினை அகற்றிட, அரசு தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதும், பின்னர் அடங்கிப் போவதும் சம்பிரதாய பூர்வமானதொன்றாக இருந்து வருகிறது. நகரத்தை பிழைப்பிடமாகக் கொண்டு ஆற்றுப் படுகைகளில் அடிப்படை வசதிகள் ஏதுமின்றி வாழ்வையே போராட்டமாகக் கொண்டிருக்கக்கூடியவர்கள் நிர்ப்பந்தமாகக் கருணையின்றி வெளியேற்றப்பட்டு, நகரிலிருந்து இருபது முப்பது கிலோமீட்டர்களுக்கு அப்பால் குடியேற்றப்படும் அதே நேரத்தில், அரசு நிலங்களையும் நீராதாரங்களையும் நீர்ப்படுகைகளையும் ஆக்ரமித்து வர்த்தக நோக்கில் பல அடுக்கு மாடி வளாகம் அமைத்திருப்போருக்கும், பொறியியல் தொழிற்சாலைகளை நடத்தி வருவோருக்கும் கரிசனம் காட்டப்பட்டு வருகிறது.

சாஸ்த்ரா விவகாரத்தில் ஆக்ரமிப்பு என்பதை வழக்கமான விதத்தில் ஏதோ ஒரு பகுதியில் நடைபெற்றதாகக் கொள்ளமுடியாது. முழு வளாகமும் அரசு நிலத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதோடன்றி, அன்றைய முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரனும், பண்ருட்டி ராமச்சந்திரனும் இந்த ஆக்ரமிப்புக்கு வாய்வழி ஒப்புதல் வழங்கியதாக நீதிமன்றத்திலேயே அவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆக்ரமிப்பை அகற்றுவதற்கு நிகராக அரசு நிலம் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

சாஸ்த்ரா விவகாரம் வெளியாகிய பின்னர் “தனியார் பொறியியல் கல்லூரிகள் அனைத்துமே இத்தகைய செயல்பாட்டைத்தான் கொண்டிருக்கின்றன, எனவே நகரில் ஆற்றோரத்தில் குடியிருப்போரை வெளியேற்றியதைப் போன்று, இவர்களின் ஆக்ரமிப்புகளை எவ்வித சமரசத்துக்கும் இடமின்றி அகற்ற வேண்டும்” என்று அழுத்தமாகக் குரல் எழுப்புவதற்கு மாறாக, குறிப்பிட்ட சில சிறுபான்மையினர் நடத்தும் கல்விக்கூடங்கள் மீது மட்டும் சமூக ஊடகங்களில் வலம்வரக்கூடிய நியாதிபதிகளும், நீதிமான்களும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். 

அடுத்த கட்டத்தில் லயோலா கல்லூரி குறிவைக்கப்பட்டுள்ளதைத்தான் “கோயில் நிலம்” என்ற கூக்குரல் வெளிப்படுத்துகிறது. 

குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் ஆகிய ஐந்திணைகளுக்கு அப்பால்  கோயில் நிலம் என்று ஏதோ வரையறை செய்யப்பட்டு வந்திருப்பதாக எவரும் கருதலாகாது.  தமிழகத்தில்  மன்னர்கள்  குறிப்பாகச் சோழர்கள் ஆட்சியில்  உருவான கோயில்களின் பராமரிப்புக்காகக் கோயிலுக்கான நிலங்களும், பிராமணர்களுக்கு சதுர்வேதிமங்கலங்களும்,  பிரம்ம தேசமும், சுரோத்திரியமும் ஒதுக்கப்பட்டு வந்திருக்கிறது. நாளடைவில் பல்வகை பயன்பாட்டுக்கு மக்களின் அடிப்படைத் தேவைக்கு  இந்த நிலங்கள் பயன்படுத்தப்பட்டு வந்திருப்பதை வரலாற்றில் அறியலாம். 

இறைவனுக்குரிய நிலங்கள் என்று பிரத்யேகமாக  இப்பூவுலகில் இல்லை என்பதையும்,  முன்னாளில் மன்னர்களும், பின்னாளில் தனிப்பட்ட நபர்கள், குடும்பங்கள்,  நிறுவனங்கள் போன்றவை பல்வேறு காரணங்களில் பேரில், தங்கள் சொந்த நிலங்களையும் ஏற்கனவே அனுபோகத்திலிருந்து வந்த அரசு நிலங்களையும் கோயில்களுக்குத் தானமாக வழங்கியவையே கோயில் நிலங்கள் என்று அழைக்கப்படுகின்றன என்பதையும் அறிதல் வேண்டும்.  இன்னும் சொல்லப்போனால் நில உச்சவரம்பு சட்டத்திலிருந்து தப்பிக்கும் பொருட்டு இறைவனுக்கு நஞ்சையும், புஞ்சையும் ஹெக்டேர் கணக்கில் அர்ப்பணிக்கப்பட்டு அவர்களே அவற்றின் பாதுகாவலர்களாகவும் இருந்து வருகின்றனர்.    இதைத்தவிரச் சென்னை மாநகர் உட்பட  மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சொந்த நலனைப் பாதுகாத்திடும் நோக்கில் பொதுப் பயன்பாட்டிலிருந்து வரக்கூடிய நிலங்களை இறைவனின் பெயரால்  ஆக்ரமிப்பது என்பது  மற்றொரு புறம் இருந்து வருகிறது.  

மதராஸில் முதன் முதலில் உருவான முறைப்படுத்தப்பட்ட மொத்த விலை மார்க்கெட்டான கொத்தவால் சாவடி என்பது கன்னிகா பரமேஸ்வரி தேவஸ்தானத்திற்குச் சொந்தமான நிலத்தில் உருவானதுதான்.  சரியாக முந்நூற்று பதினான்கு ஆண்டுகளுக்குப் பின்னரே  அம்மாவின் இடத்திலிருந்த  அந்த  அங்காடி வேறொரு அய்யாவின் இடத்திற்கு மாறியது.   ஆம் கோயம்பேடு குருங்கலீசுவரர் ஆலயத்திற்குச் சொந்தமான இடத்தில்தான் அங்காடி மட்டுமல்ல, புறநகரப் பேருந்து நிலையமும் உருவாகியது.   ரயில் பெட்டிகளை உற்பத்தி செய்யக்கூடிய ஐசிஎஃப் தொழிற்சாலையின் ஒரு சில பகுதிகள் ஜார்ஜ் டவுனில் உள்ள ஏகாம்பரேஸ்வரனுக்கு  சொந்தமான நிலத்தில்தான் உருவாயின. தற்பொழுது அவரது பிரதிநிதியாக கமலவினாயகர்   ஐசிஎஃப்பையொட்டிய பிரதான சாலையில் குடிகொண்டு மிச்ச நிலங்களைக் கண்காணித்து வருகிறார். இப்படி பல்வேறு கோயில் நிலங்கள் பொதுப் பயன்பாட்டிற்காகக் கையகப்படுத்தப்படுவது காலங்காலமாகவே இருந்து வருகிறது.  இன்னொரு பக்கத்தில் கோயில்களின் வருவாயைப் பெருக்கும் நோக்கில் கோயில்களுக்குச் சொந்தமான இடங்களில்  வர்த்தக வளாகங்களும், திருமண மண்டபங்களும், குடியிருப்புகளும்  கட்டப்பட்டு வாடகைக்கு விடப்படுகின்றன. சோழிங்கநல்லூர், தரமணி பகுதிகளில்  சாஃப்ட்வேர் பூங்காங்கக்களை உருவாக்கிடவும் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.   

கோயில் நிலங்கள் மட்டுமில்லை, கோயில் ஒன்றே பொதுப்பயன்பாட்டிற்காகக் கையகப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை இத்தருணத்தில் அகழாய்வாளர்களும், கரசேவகர்களும் அறிவது  முக்கியமானதாகும். இந்திய விண்வெளி ஆய்வுக்குழுவின் ராக்கெட் என்ஜினியராக சேர்ந்த அப்துல் கலாம் அவர்கள் ராக்கெட் ஏவுதளத்திற்கான இடம் தேர்வு செய்தது பற்றி அளிக்கும் தகவல் முக்கியமானது.  தும்பாவில் ரயில்வே இருப்புப் பாதைக்கும் கடற்கரைக்கும் இடையே இடம் முடிவு செய்யப்பட்டதாகவும், அந்த இடத்தில்  தூய மேரி மேக்டலீன்  தேவாலயம் இருந்தையும் மத முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடத்தை கையகப்படுத்துவது என்பது கம்பி மேல் நடப்பதைப் போன்றது  என்றும் கூறுகிறார். பின்னர் திருவனந்தபுரத்தில் பிஷப்பாக இருந்த ரெவரண்ட் டாக்டர் திரெய்ராவின் “ஆசியோடு” தேவாலய இடம் கையகப்படுத்தப்பட்டதும்,  அங்கே விண்வெளி மையத்தின் முதல் அலுவலகம் அமைக்கப்பட்டதையும், பிரார்த்தனை அறையில் முதல் ஆய்வுக் கூடமும், பிஷப்பின் அறையில் வடிவமைப்பு மற்றும் வரைகலை அலுவலகமும் மாற்றம் கண்டதென்றும்,  அடுத்த கட்டத்தில் தேவாலயத்தில் இந்திய விண்வெளி அருங்காட்சியகம் அமைந்ததையும் பெருமை பொங்க எழுதியுள்ளார்.  

சென்னையில் வரலாற்றின் துவக்க கட்டத்தில் கோயில் நிலங்கள் என்று பிரத்யேகமாக ஏதும் இருக்கவில்லை.  கோட்டையை விரிவுபடுத்திடும் நோக்கில் ஏற்கனவே இருந்த கோயில்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறது என்பதை வரலாற்றுக் குறிப்புகளின் மூலம் அறிகிறோம். மதராஸில் கிழக்கிந்திய நுழைவுக்குப் பின்னர் நகரில் ஏற்கனவே இருந்து வந்த நில உடமைகளில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.  முன்னர் மன்னர்கள்  ஒதுக்கியதைப்போன்று ராணுவ வீரர்கள், அதிகாரிகள், கம்பெனி நிர்வாகிகள், வர்த்தகர்கள், துபாஷிகள்  ஆகியோருக்கு கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு  கொடுக்கப்பட்டிருக்கிறது. 

கறுப்பர் நகரெனும் ஜார்ஜ் டவுனைச் சுற்றியுள்ள நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், கீழ்பாக்கம், பெரம்பூர், செம்பியம், புர்சவாக்கம், தொண்டையார்பேட்  ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய நிலப்படங்களில் ஏராளமான தகவல்கள் கொட்டிக் கிடைக்கிறது.  இவற்றைத் துல்லியமாகவே பார்க்கையில்  வியப்படைவோதடன்றி, புதுப்புது விவரங்களையும் அறியமுடியும்.  மேற்குறிப்பிட்ட பகுதிகளிலுள்ள பல்வேறிடங்கள் வெவ்வேறு நபர்களுக்கு சொந்தமானதாகவே இருந்திருப்பதை  அப்படங்கள் உணர்த்துகிறது. Thirumalaisamuththiramum Nunkampakkam Eriyum Article By Ramachandran Vaidhyanath திருமலைசமுத்திரமும், நுங்கம்பாக்கம் ஏரியும் கட்டுரை - ராமச்சந்திர வைத்தியநாத்1814ல் மேற்கொள்ளப்பட்ட சர்வேயின்படி வெளியிடப்பட்ட  1816ம் ஆண்டு நிலப்படத்தில் மேற்குறிப்பிட்ட கிராமங்களைத்தவிர  திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், ராயப்பேட்டை, மீர்சாஹிப்பேட்டை, கிருஷ்ணாம்பேட்டை ஆகிய கிராமங்களும் குறிப்பிட்டுக் காட்டப்படுகிறது. 

1816ம் ஆண்டு நிலப்படத்தின்படி பூந்தமல்லி சாலையில் ஸ்பர் டாங்க் எனப்படும் குளத்திற்கும் மெக்நிக்கல்ஸ் சாலைக்கும்  இடைப்பட்டதில் ஒரு பகுதி கர்னல் ஸ்மார்ட்க்கும் மற்றொன்று பெயர் குறிப்பிடப்படாததாகவும் உள்ளது. சாலையின் எதிரே தெற்கில் உள்ள பகுதி கர்னல் கென்னி, டெய்லர்  இன்னும் பலருக்குச் சொந்தமானதாகக் குறிப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளது.Thirumalaisamuththiramum Nunkampakkam Eriyum Article By Ramachandran Vaidhyanath திருமலைசமுத்திரமும், நுங்கம்பாக்கம் ஏரியும் கட்டுரை - ராமச்சந்திர வைத்தியநாத் 1909ம் ஆண்டு நிலப்படத்தில் ஸ்பர்டாங்கை யொட்டிய பகுதியில் அரசின் செங்கற் சூளை  இருப்பதையும், எதிரே உள்ள பகுதி லாண்டன்ஸ் தோட்டமாக பெயர் மாறியதையும் அறிய முடிகிறது.  அடுத்த இருபது ஆண்டுகளில் லாண்டன்ஸ் தோட்டத்திலும் செங்கற் சூளை இருந்த இடத்திலும் கீழ்பாக்கம் மருத்துவ மனையும், மருத்துவக் கல்லூரியும் உருவாயின.  ஸ்பர்டாங்கின் தென் கரையில் கூவத்தின் மறு புறத்தில் வானிலை ஆய்வு நிலையம் இருப்பதை இரு படங்களும் தெளிவு படுத்துகின்றன.  1816ம் ஆண்டு படத்தில் வானிலை ஆய்வு நிலையத்தை அடுத்துள்ளது ரிபோக் என்பவருக்குச் சொந்தமானதாகக் காட்டப்படுகிறது.  இங்குதான் பின்னாளில்  காங்கிரசின் வருடாந்திர மாநாடொன்று நடைபெற்றதும், மகளிர் கிறித்துவக் கல்லூரி உருவானதும் குறிப்பிடத்தக்கது.

கர்னல் கென்னி நிலப்பரப்பிற்கு மேற்கிலிருந்து அதாவது ஈகா திரையரங்கத்திலிருந்து துவங்கி,  தற்போதைய நியூ ஆவடி சாலை வரையிலான நிலப்பரப்பு  கர்னல்  கான்வே,  மெக்ராட், பெயர் குறிப்பிடப்படாத மற்றொருவர் ஆகிய மூவருக்குச் சொந்தமானதாக இருந்திருப்பதை 1816ம் ஆண்டு நிலப்படம் வாயிலாக அறிய முடிகிறது.  தற்போதைய பச்சையப்பன் கல்லூரிக்குக் கிழக்கில் அதாவது கான்வேயின் நிலப்பரப்பிற்கு எதிரே வாடல் என்பவருக்குச் சொந்தமானது என்பதையும் அறிய முடிகிறது.  கீழ்பாக்கத்தில் பெயின்ஸ் சிறுமியர் பள்ளி எதிரே ஆர்ம்ஸ்  சாலையையும் பர்னபி சாலையையும் இணைக்கக்கூடிய தெரு வாடல்ஸ் தெரு என்றழைக்கப்படுகிறது.  அந்த வாடல் இவராக இருக்கலாம்.  

சமீபத்தில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு உரிய   நிலம் மீட்கப்பட்டு, அந்த இடத்தில் அறநிலையத் துறையின் சார்பில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உருவானது பரவலாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.  1816ம் ஆண்டு நிலப்படத்தின்படி  ஏகாம்பரேஸ்வரருக்கு முன்னர் இந்த இடம் மெக்ராட் அல்லது பெயர் குறிப்பிடப்படாத இன்னொருவருக்குச் சொந்தமானதாக இருந்திருக்கிறது. பிந்திய ஆண்டுகளின்   நிலப்படங்கள் மூலம் இடைப்பட்ட காலத்தில் நில உடமைகளில் ஏற்பட்ட மாற்றங்களை நாம் அறிய முடியும். அவ்வாறே நகர வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படக்கூடியதும் பச்சையப்பன் கல்லூரிக்கு எதிர்ப்புறம் அமைந்துள்ள  சதுர்ப்புஜதாஸ் குடும்பத்தினருக்குச் சொந்தமான குஷால்தாஸ் தோட்டம்  அதே காலகட்டத்தில் கர்னல் கான்வே என்பவருக்குரியதாக இ ருந்திருக்கிறது.  

1814 ல் மவுண்ட்ரோடில் கன்னிமாரா மற்றும்  ஸ்பென்ஸர்ஸ் வளாகம் இருக்கக்கூடிய பகுதி  கஞ்சம் ஜில்லாவில் சர்ஜன் ஜெனரலாக இருந்த பின்னி என்பவருக்கு ஒதுக்கப்பட்டிருந்திருக்கிறது. அந்த அடிப்படையில்தான் அச்சாலை பின்னி சாலை என்றழைக்கப்படுகிறது.   பின்னியிடமிருந்து இத்தோட்ட வீடு ஜான் ப்ரூம்ஹாலுக்கும், அவரிடமிருந்து தாமஸ் ஷார்ட்டுக்கும்  கை மாறியது.  1854ல் சோமசுந்தர முதலியார் இதை வாங்கி இம்பீரியல் ஹோட்டலை நடத்தி வந்திருக்கிறார்.  பின்னர் குமாரகுரு முதலியார் மற்றும் சொக்கலிங்க முதலியார் ஆகியோரின் அனுபோகத்திலிருந்த இந்த இடத்தை  1891ல்  யூகின் பிலிப் ஓக் ஷாட் கிரயம் செய்து கொண்ட  பின்னர் கன்னிமாரா கட்டப்பட்டது.  

கன்னிமாரா எதிரில் காயிதே மில்லத் மகளிர் கல்லூரி இருக்கும் இடத்திலிருந்து தொடங்கி அண்ணா சாலை தபால் நிலையத்தின் பின்னுள்ள ஹாரீஸ் பாலம் வரை மவுண்ட் ரோடின் மேற்கில் உள்ள பகுதி நான்கு பேருக்கு மட்டுமே சொந்தமானதாகும்.  மகளிர் கல்லூரியும் முகமதன் பள்ளியும் இருக்கக்கூடிய பகுதி அன்றைய தினம் அரசால் சுங்குராம செட்டிக்கு வழங்கப்பட்டதாகும். பின்னரே கன்னிமாராவைப் போன்று பல கை மாறி அரசுக் கல்லூரி அங்கே உருவானது.  இதே சுங்குராமச் செட்டிக்கு 1717ல் அன்றைய கவர்னர் ஜோசப் காலட்  வழங்கிய  தோட்டம்தான்  1734ல் நெசவாளர்களுக்கான புதிய கிராமம்   சிந்தாதிரிப்பேட்டையை உருவாக்கிக் கொள்ளும் பொருட்டு  அதே அரசால் ஏற்கப்பட்டது.      

மதராஸ் எனும் சென்னையைப் பொறுத்தமட்டில் கோயிலுக்கு உரிய நிலங்கள் என்பது ஆதியிலிருந்து உருவாகவில்லை என்பதோடு ஒதுக்கப்பட்ட நிலங்களை ஏதோ ஒரு காரணத்தின் பேரில் வழங்குவதும், பின்னர் உரிமை மாற்றம் பெறுவதும் தொடர்ந்து நிகழ்ந்து வந்திருக்கிறது என்பதற்காகவே மேற்குறிப்பிட்ட தகவல்கள் சற்று விரிவாகவே தரப்பட்டுள்ளது.

லயோலா கல்லூரி விவகாரம் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.

ஸ்டெர்லிங் ரோடின் வட மேற்கில் தற்போது உள்ள இந்துக்களுக்கான மயானம் 1816ல் மட்டுமின்றி 1909ல் வெளியிடப்பட்ட நிலப்படத்திலும் குறிப்பிடப்படவில்லை. ஆற்காடு சாலையெனும் தற்போதைய கோடம்பாக்கம் நெடுஞ்சாலையை தெற்கு எல்லையாகவும், தற்போதைய ஏரிக்கரைச் சாலையை கிழக்கு எல்லையாகவும், பெயர் குறிப்பிடப்படாத பிந்திய நெல்சன் மாணிக்கம் சாலையை வடக்கு எல்லையாகவும், எம்எம்எடிஏவை மேற்கு எல்லையாகவும் கொண்டு நுங்கம்பாக்கம் ஏரி அமைந்திருக்கிறது. சூளைமேடு, புஷ்பா நகர், வள்ளுவர்கோட்டம், திருமூர்த்திநகர், ஜிஜி மருத்துவ மனை யாவுமே 1923-25ல் ஏரியை மேடடித்து உருவாக்கப்பட்ட பகுதிகளாகும்.

அவ்வாறே ஆர்காடு சாலையை வடக்கு எல்லையாகவும், மவுண்ட் ரோடை கிழக்கு எல்லையாகவும், கிட்டத்தட்ட கோடம்பாக்கம் மாம்பலம் ரயில் பாதையை மேற்கு எல்லையாகவும், சைதை மர்மலாங் பாலத்தை தெற்கு எல்லையாகவும் கொண்ட லாங்க் டேங்க் எனும் ஏரியும் அமைந்திருக்கிறது. இந்த ஏரியின் தென் கோடி சைதாப்பேட்டையில் கலெக்டர் கச்சேரி, அரசினர் கால்நடை மருத்துவ மனை, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, விவசாயப் பண்ணை, சைதை ரயில் நிலையம் ஆகியவை குறிப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளது. பழைய ஜெமினி படப்பிடிப்புக்கூடம், காங்கிரஸ் மைதானம், நந்தனம், தியாகராய நகர் முழுமையாகவும் லாங்க் டேங்கில் உருவான பகுதிகளாகும். பனகல் மன்னர் மாகாண முதலமைச்சராக இருந்தபோது மதராஸ் டவுன் பிளானிங் ஆக்ட் 1920ன்படி ஏரியை மேடடித்து உருவான பகுதிகள், தெருக்கள் யாவுமே ஜஸ்டிஸ் கட்சிப் பிரமுகர்கள், அன்றைய அரசு அதிகாரிகள், பொறியியலாளர்கள், சாக்கடை நோண்டுகையில் மரித்தோர் இப்படி பலரது பெயரைக் கொண்டது.

இப்போது நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் ரோடின் தென் மேற்கில் உள்ள சுடுகாட்டுக்கு வருவோம். இந்த முனையிலிருந்து அதாவது நெல்சன் மாணிக்கம் சாலையின் கிழக்கு கோடியிலிருந்து வள்ளுவர்கோட்டம் சாலையாக மாறிய வில்லேஜ் ரோடு சந்திப்பு வரை ஏரிக்கரைச் சாலை என்றுதான் அழைக்கப்படுகிறது. அதாவது இந்த இடத்தில் ஏரியொன்று இருந்தது உறுதி செய்யப்படுகிறது. வள்ளுவர் கோட்டம் பகுதியே ஏரிக்கரைப் பகுதி என்றுதான் இன்றும் அழைக்கப்பட்டு வருகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

லயோலா கல்லூரி 1925 ஜூலையில் நிறுவப்பட்டிருக்கிறது.

அதாவது ஏரியை மேடடித்த நிலத்தில் உருவானதாகத்தான் தெரிகிறது. இதில் விதி மீறல் ஏதேனுமிருப்பின் வெளிப்படையாகப் பகிர்வது அனைத்து கட்டுமானங்கள் விவகாரங்களிலும் லயோலாவை மட்டுமின்றி, வேறுபல கல்வித் தொழிற்சாலைகளையும் எச்சரிக்கையுடன் செயல்படச் செய்திடும். தவிர மக்கள் விழிப்புணர்வு கொள்ளவும் வழிவகுக்கும். அதை ஊடக அகழாய்வாளர்கள் செய்வார்களா?

இறுதியாக ஒரு கொசுறு தகவல்:

கமலாலயம் என்றாலே அந்தக் குளம்தான் எங்களுக்கெல்லாம் நினைவுக்கு வருகிறது. ஆனால் இந்த கமலாலயமோ ஏரியை மேடடித்த நிலத்தில் உருவானதுதான். ஏதோ கோயில் குளத்திற்கோ, சத்திரம் சாவடிக்கோ சொந்தமான நிலத்தில் உருவானதல்ல! இதில் யாதொரு சம்சயத்திற்கும் இடமளிக்க வேண்டாம்!

– ராமச்சந்திர வைத்தியநாத்