Manathil Odum Yutha Puyal Poem By Vasanthadheepan மனதில் ஓடும் யுத்தப் புயல் கவிதை - வசந்ததீபன்

மனதில் ஓடும் யுத்தப் புயல் கவிதை – வசந்ததீபன்




இருளுக்குள் விழித்தபடி மெழுகுவர்த்தி
எதிர் மதிலின்மேல் என் நிழல்
எனக்குள் ஒருவன்
முகத்தில் ஆயிரம் மின்மினிகள்
உதடுகள் தேனடைகள்
களி கொண்டு தாவும் பொன் மான் விழிகள்
எறும்பு அரிசியை இழுத்துச் செல்கிறது
வியப்பாய் இருக்கிறது
வீட்டிற்குள் மழை பெய்கிறது
காற்றைப் புகைப்படம் எடுத்தேன்

காற்றைக் காணவில்லை
மரங்கள் தான் தெரிந்தன
சுமையில்லாமல் பயணிக்க விரும்புகிறேன்
சுமைகள் கூடுகின்றன
சுமையற்ற பயணத்தை மனதுக்குள் வரைந்து பார்த்தேன்
நீருக்குள் இறங்கினேன்
கரையேறுகின்றன அலைகள்
மெல்ல நகைத்து அடங்கியது நதி
கிழிந்த கூரை
உடைந்த மதில்கள்
கவிதை தின்கிறான் கவிஞன் பாஷோ
சிலந்தி வலை
வருகிறது மூடுபனி
பொம்மைகளின் திருவிழா
தூரத்து மலைகள்
குருவிகள் பறந்து போகின்றன
நான் பார்க்கிறேன்
ஒரு துளி விழுந்தது
பல துளிகள் கலந்தன
முதல் துளியைக் காணவில்லை
புலம்புவதாய் நீங்கள் நினைக்கலாம்
பிதற்றுவதாய் நீங்கள் முடிவு செய்யலாம்
யாவும் உண்மை.