Marathin Manam Poem by Shanthi Saravanan சாந்தி சரவணனின் மரத்தின் மனம் கவிதை

மரத்தின் மனம் கவிதை – சாந்தி சரவணன்




மண்ணில் உரம் போட்டு
உன்னைக் கொல்ல நினைத்தேன்
நீ செடியாக, மரமாக வளர்ந்தாய்
பூக்கள் கொடுத்தாய்
பழங்கள் கொடுத்தாய்
நிழல் கொடுத்தாய்
என் மகளின் திருமணத்திற்கு
உன்னில் ஒரு பகுதியை
வெட்டி கட்டில் பீரோ
செய்து கொடுத்தேன்
மகள் மகிழ்ந்தாள்
மீண்டும் நீ துளிர் விட்டாய்;
மழை காலத்தில்
உன் கிளைகள்
என் வீட்டுக் கூரையானது
இதோ என் பேரக் குழந்தைகள்
ஊஞ்சல் கட்டி உன் மேல் ஆடுகிறார்கள்
காலம் கடக்கிறது
காலன் என்னை அழைக்கிறான்
இப்போதும்
உன் மேல் தான் நான் கிடத்தபட்டுள்ளேன்
இத்தனை செய்தும்
நீ எனக்கு நல்லவற்றை
மட்டுமே கொடுத்தாய், ஏன்?
என்ற மானுடனின் கேள்விக்கு
நகைத்து கொண்டே
சுமந்து கொண்டிருந்த
மரம் கதைத்தது
என்னிடம் இருந்ததை நான்
கொடுத்தேன்
உன்னிடம் இருந்ததை நீ கொடுத்தாய்
இருப்பதைத் தானே கொடுக்க முடியும் என
பதில் இல்லாமல்
எரிந்து கொண்டிருக்கிறேன்
மின்சார சவகிடங்கில்.