santhai novel book reviewed by s.p.agaththiyalingam நூல் அறிமுகம் : சந்தை - சு.பொ.அகத்தியலிங்கம்

நூல் அறிமுகம் : சந்தை – சு.பொ.அகத்தியலிங்கம்

கடல் ஒன்று கைக்குட்டை ஆனது….. “ நம்ம ஊர் சந்தைகள் நவீன மால்களாகும் நிகழ்வின் சமூக விவரிப்பே” யாழ்.எஸ். ராகவன் எழுதிய “சந்தை” நாவல் என ஒண் லைன் ஸ்டோரியாகச் சொல்லிவிடலாம். அபார்ட்மெண்டுகளில் உள்ள சிசிடிவி காமேரா எந்த பரபரப்பும் இன்றி…
இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @ 75 : தொடர் – 16 வேளாண்மைச் சிக்கல்களும் தீர்வுகளும் – பேரா.பு.அன்பழகன்

இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @ 75 : தொடர் – 16 வேளாண்மைச் சிக்கல்களும் தீர்வுகளும் – பேரா.பு.அன்பழகன்




அரசியலும் பொருளாதாரமும் நெருங்கிய தொடர்புடையது. மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸ் ஆகியோர் பொருளாதார அடிப்படைக்கும் மேற்கட்டுமானம் (அரசியல் மற்றும் சட்டம்) ஆகியவற்றுக்கும் இடையே இயங்கியல் தொடர்புகளைப் பற்றி விளக்கினார்கள். அரசியல்-பொருளாதார அடிப்படையில் உற்பத்தியின் செயல்பாடுகள் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்கள் காணப்படுகிறது என்று குறிப்பிட்டனர். லெனின், அரசியலானது பொருளாதாரத்தைவிட முன்னுரிமை அளிக்கத்தக்கது என்றும் இது குறிப்பாக சமூக போராட்டத்திற்கானது என்கிறார். தொன்மை அரசியல்-பொருளியல் அறிஞர்களின் கருத்துப்படி, அரசியல்-பொருளாதாரமானது முதலாளித்துவப் பிரச்சனைகளை நேரடியாக எதிர்கொள்வதற்கான பொறுப்புகளை உடையதாகும் என்கின்றனர். நவீன அரசியல்-பொருளாதாரமானது சமுதாயத்தில் தலையீடு செய்வதாக இருந்தது. மார்க்ஸ் தன்னுடைய புத்தகமான “A Contribution to the Critique of Political Economy” என்பதில் அரசியல்-பொருளாதாரம் என்பது நாட்டின் மக்கள்தொகை, மக்களிடையே குழுக்களின் பகுப்பு, நகரம், நாடு, ஆண்டு உற்பத்தி, நுகர்வு, விலை போன்றவற்றுடன் தொடர்புடையது என்று குறிப்பிடுகிறார். அரசியல் (மேற்கட்டுமானம்) மற்றும் பொருளாதாரம் (அடிப்படை) என்பது சூழ்நிலைக்கு ஏற்றதாக உள்ளது. மார்க்சிய நிலைப்பாடானது, நிலப்பிரபுத்துவம் அல்லது முதலாளித்துவத்திற்கு முந்தைய விவசாயக் கட்டமைப்பின் மாற்றம் விவசாயப் பிரச்சினையின் தீர்வு மூலம் நிகழ்கிறது என்கிறார். தொழில்துறைக்கு முந்தைய காலத்தில் விவசாயம் எந்த வெளிப்புறத் தூண்டுதலையும் பெறவில்லை விவசாயத்தில் தோன்றிய வெளிப்புறத் தூண்டுதல்களால் தூண்டுதல்கள் மற்றும் தொழில்துறையில் சார்பு தலைகீழாக மாறியது. மேற்கட்டுமானமும், அடிப்படையும் முரண்பாடு உடையது என்று மா சே துங் குறிப்பிடுகிறார்.

இந்தியாவைப் பொருத்த அளவில் பிரதன் என்பவர் அரசியல்-பொருளாதாரம் என்பது சமுதாயத்திற்கு ஆற்றலைப் பகிர்ந்தளிப்பது என்று குறிப்பிடுகிறார். இந்தியாவில் பிரிட்டிஷ் கிழக்கு இந்திய நிறுவனம் வாணிப நோக்கிற்காக நுழைந்து பின்னால் அது அரசியல் சார்ந்த நிலைப்பாட்டில் பயணித்து பொருளாதார வளத்தைச் சுரண்டியது. இதில் வேளாண்மைத்துறையானது முதன்மை பாதிப்பை எதிர்கொண்டது. இடைத்தரகர்களை உருவாக்கி உழவர்களிடமிருந்து கட்டாய வரிவசூல் செய்தது. இந்தியச் சுதந்திரப் போராட்டத்திற்கு விவசாயிகளின் எழுச்சி மிக முக்கியப் பங்கு வகித்தது. இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் பொருளாதார உத்திகளைப் பின்பற்றுவதில் அரசியல் முக்கியப் பங்கினை ஆற்றியது. நேருவின் ஆட்சிக் காலம் தொடங்கி இந்திரா காந்தியின் முதல் கட்ட ஆட்சிக் காலம் முடிய மூடிய பொருளாதார முறை பின்பற்றப்பட்டது. இந்திரா காந்தியின் இரண்டாம் கட்ட ஆட்சிக் காலம் தொடங்கி மன்மோகன் சிங்கின் ஆட்சிக் காலம் முடியச் சந்தைப் பொருளாதார முறைப் பின்பற்றப்பட்டது. மோடியின் ஆட்சிக்காலத்தில் பெருநிறுவனம் சார்ந்த பொருளாதார உத்திகள் பின்பற்றப்பட்டு வருகிறது.

மூடிய பொருளாதார முறையில் உள்நாட்டு அளவில் பல்வேறு சீர்திருத்தங்கள் இந்தியச் சூழலுக்கு ஏற்ப நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன் விளைவு உணவு உற்பத்தியில் பற்றாக்குறை நிலை போக்கப்பட்டு தற்சார்பினை அடைய முடிந்தது. நாட்டை பொருளாதார நிலையில் மேம்படுத்துவதற்காகப் பொதுத்துறைச் சார்பு உத்திகள் முன்னெடுக்கப்பட்டது. சந்தைப் பொருளாதாரத்தில் தாராள மயமாக்கல், உலக மயமாக்கல், தனியார் மயமாக்கல் நடவடிக்கையினால் இந்தியாவின் வர்த்தக நிலை, அந்நிய முதலீடுகள் அதிகரித்தது. இதனால் நுகர்வோர் பெரும் பயனை அடைந்தனர், பொருளாதார வளர்ச்சி முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்தது. ஆனால் சமுதாய ஏற்றத் தாழ்வுகள் அதிகரித்தது. பெருநிறுவனச் சார்பு முறை தற்போது நடைமுறையில் உள்ள நிலையில் விளிம்பு நிலையில் வாழ்கின்ற மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நிலமற்ற விவசாயக் கூலிகள், குறு, சிறு விவசாயிகள், சிறு வணிகர்கள், கிராமப்புற மக்கள் பெருமளவிற்குப் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலையின்மை, வறுமை, சமத்துவமின்மை அதிகரித்து வருகிறது.

இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் 1949ல் வேளாண்மைக்கான ஜெ.சி.குமரப்பா குழுவானது இடைத்தரகர்களை ஒழிப்பது, குத்தகைச் சீர்திருத்தம், நில உச்சவரம்பு, கூட்டுறவு வேளாண்மை போன்றவற்றைப் பரிந்துரை செய்தது. இதில் இடைத்தரகர்கள் ஒழிப்பு நடவடிக்கையைத் தவிற்று அரசியல் காரணங்களால் நிலஉச்சவரம்பு, குத்தகைச் சீர்திருத்தம் போன்றவை இன்றுவரை முழுமைக்காக நடைமுறைப்படுத்த முடியவில்லை. பஞ்சம், பட்டினி, வறுமை, அதிக இறப்பு போன்றவை இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு இருந்த நிலை சுதந்திரம் அடைந்த பிறகும் தொடரக்கூடாது என்ற அடிப்படையில் இந்தியாவின் முதல் பிரதமரான நேரு உடனடித் தீர்வாக உணவு இறக்குமதி செய்தார். நீண்ட கால அடிப்படையில் உணவுப் பற்றாக் குறையைப் போக்க பல்வேறு செயல் திட்டங்களைச் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டன. இதன் பயனாக 1980களில் இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவினை எட்டியது. ஆனால் இது வேளாண்மையில் ஏற்றத் தாழ்வுகளை (வட்டாரம் மற்றும் விவசாயிகளிடையே) அதிகரித்தது.

நில உச்சவரம்பு சட்டத்தின்படி (நில உச்சவரம்புச் சட்டம் 1961) உபரி நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு அவற்றை நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. இதன் விளைவு நிலமற்ற கிராமப்புறக் குடும்பங்கள் மொத்த அளவில் 1953-54ல் 23.09 விழுக்காடாக இருந்தது 2012-13ல் 7.41 விழுக்காடாகக் குறைந்தது. ஆனால் உபரி நிலங்கள் கையகப்படுத்துவது மிகவும் குறைவாகவே இருந்தது. இதே காலகட்டத்தில் சாகுபடி செய்யாதா நில உடைமையாளர்கள் மொத்தத்தில் 4.99 விழுக்காடாக இருந்தது 24.36 விழுக்காடாக அதிகரித்துள்ளது. குத்தகை சீர்திருத்தம் உழுபவருக்கே நிலம் சொந்தம் என்றும், வாடகையின் அளவும் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபாட்டுடன் நடைமுறைப் படுத்தியது. இதனால் 1953-54ல் மொத்த சாகுபடிப் பரப்பில் குத்தகைச் சாகுபடிப் பரப்பானது 20.34 விழுக்காடாக இருந்தது 2012-13ல் 11.30 விழுக்காடாகக் குறைந்தது. நில உச்சவரம்பும், குத்தகை சீர்திருத்தமும் எதிர்பார்த்த வெற்றியைத் தராததால் சமூகத்தில் அமைதியின்மை ஏற்பட்டு நாட்டின் பல பகுதிகளில் நக்சல்பாரி இயக்கங்கள் தோன்றத் தொடங்கியது. இது தொடர்ந்து அரசுக்கு பெரும் சவாலாக உள்ளது. மக்கள் தொகை 1951 முதல் 1981வரை அதிகமாக அதிகரித்தது இதனால் பல்வேறு பயன்பாட்டுக்காக நிலத்தின் தேவையும் அதிகரித்தது. 1991க்குப்பின் புதியப் பொருளாதாரச் சீர்திருத்த நடைமுறையினால் உள்கட்டமைப்பினை உருவாக்க முன்னுரிமை அளிக்கப்பட்டது. இதனால் நிலம் மாற்றுப் பயன்பாட்டிற்குப் (குடியிருப்பு, பல்வேறு உள்கட்டமைப்புகள்) பயன்படுத்தப்பட்டது இதற்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவது தொடர் நிகழ்வாகிப் போனது. சாகுபடி செய்யத் தகுதி வாய்ந்த நிலங்கள் தரிசு நிலங்களாக மாற்றியது. நிகர சாகுபடி பரப்பு குறையத் தொடங்கியது. இதனால் 1953-54ல் சராசரி நிலக் கையிருப்பு 1.95 ஹெக்டேராக இருந்தது 2013-14ல் 0.59 ஹெக்டேராகக் குறைந்ததுள்ளது.

உயர் விளைச்சல் தரக்கூடிய விதைகள், ரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லி, வேளாண் இயந்திரங்களைப் பயன்படுத்துதல், கடன் பெறுவதற்கான வசதி வாய்ப்புகள் உருவாக்கித் தருதல் ஆகியன பசுமைப் புரட்சியின் முக்கிய உத்திகளாக இருந்தன. இவற்றை 1980-90வரையில் மூன்று கட்டங்களாக நடைமுறைப்படுத்தியது (முதல் கட்ட காலத்தில் உணவு தானியத்திற்கானதாகவும், இரண்டாவது கட்ட காலத்தில் பழம் மற்றும் காய்கறிகள் உற்பத்திக்கானதாவும் மூன்றாவது கட்ட காலத்தில் எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள் உற்பத்திக்கானதாகவும் இருந்தது) இதன் விளைவு உணவுப் பொருட்களின் விளைச்சல் மற்றும் உற்பத்தித் திறன் அதிகரித்தது. பசுமைப் புரட்சியினால் வேளாண்மை மீதான பொதுச் செலவுகள் துவக்கத்தில் அதிகரித்தது, விவசாயிகளுக்கு இடுபொருட்களுக்கான மானியம் வழங்கப்பட்டது, வேளாண் விளைபொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை அறிவிக்கப்பட்டது. இதனால் விவசாயிகளுக்கு வேளாண்மை மூலம் பெரும் வருமானம் அதிகரித்தது, வறுமை குறைந்தது. எதிர் விளைவுகளாக மண்வளம் குறைந்தது, புதிய வகைப் பூச்சிகள் உருவாகி வேளாண் பயிர்களைத் தாக்கியது, நீர் இறைப்பிற்கு மின் மோட்டார்களின் பயன்பாடு அதிகரித்ததால் நிலத்தடி நீர் அதிக அளவில் உறிஞ்சப்பட்டது, பசுமைப் புரட்சி உத்திகளைப் பெரும்பான்மையான சிறு, குறு விவசாயிகளால் அணுக முடியாமல் இருந்தது, வோளண்மையில் முதலாளித்துவம் பெருக்கமடைந்தது, வேளாண் இடுபொருட்கள் விலை தொடர்ந்து அதிகரித்து, வேளாண் சாகுபடியை மேற்கொள்ள விவசாயிகள் முறைசார நிதி நிறுவனங்களில் அதிக வட்டிக்குக் கடன் பெற்று கடன் பொறியில் வீழ்ந்தனர், இதனால் விவசாயத் தற்கொலைகள் அதிகரித்தது.

1980களில் இரண்டாவது பாதியில் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது. சந்தைப் பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. உணவல்லா வேளாண் விளைபொருட்களின் தேவை பன்னாட்டு அளவில் அதிகமானதால் வருமான நோக்கின் அடிப்படையில்; உணவல்லா சாகுபடியை நோக்கி விவசாயிகள் பயணிக்கத் தொடங்கினர். இதனால் பாரம்பரிய வேளாண்மை சாகுபடி குறையத் தொடங்கி நவீன வேளாண்மை அதிகரித்தது. வேளாண் வர்த்தக கட்டுப்பாட்டில் தளர்வுகள் அளிக்கப்பட்டது. வெளிநாடுகளிலிருந்து வேளாண் பொருட்கள் தங்குதடையின்றி வரத் தொடங்கியது. தொழில்நுட்ப இறக்குமதிக்கு அனுமதி அளிக்கப்பட்டதால் வேளாண்மை உற்பத்தி அதிகரிப்பிற்கு இது உறுதுணையாக இருந்தது. இதனால் உள்நாட்டு உணவு உற்பத்தியும் அதிகரித்தது. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, நரசிம்மராவ், வாஜ்பாய், மன்மோகன் சிங் ஆட்சிக்காலங்களில் பன்னாட்டுச் சந்தையில் இந்தியாவின் பங்கெடுப்பினை உறுதிசெய்யவும் அயல் நாட்டு வர்த்தக நிலையை மேம்படுத்தவும் வேளாண்மைத் துறையில் பலவேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டனர். ஆனால் பன்னாட்டு அளவில் இந்தியாவின் தொழில்நுட்பத்தின் பயன்பாடு பின்தங்கிய நிலையில் இருந்ததால், வளர்ந்த மற்றும் இந்தியா போன்றே சில வளரும் நாடுகளுடன் போட்டியிட முடியாத நிலையே இருந்தது. மேலும் அரசானது வேளாண் துறைக்கான முக்கியத்துவத்தைக் குறைத்துக்கொண்டும் தொழில்துறை, சேவைத்துறைக்கும் முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியது. வேளாண்மையின் மீதான பொதுத் துறை முதலீடுகள் குறைக்கப்பட்டது. இந்தியப் பொருளாதாரத்திற்கு வேளாண்மைத் துறையின் பங்களிப்பானது தொடர்ந்து வெகுவாகக் குறைந்தது வந்தது.

1995ல் இந்தியா, உலக வர்த்தக அமைப்பில் உறுப்பு நாடாக இணைந்தபின் அதன் விதிமுறைகளைப் பின்பற்றவேண்டிய நிர்ப்பந்தம் உருவானது. வேளாண் தொழிலுக்கான ஒப்பந்தம் உலக வர்த்தக அமைப்பின் முக்கிய அங்கமாக இருந்தது. வேளாண் மானியம் 10 விழுக்காட்டிற்கு மிகாமல் இருக்கவேண்டும், வேளாண் வர்த்தகத் தடைகளைக் களைவது, நாட்டின் மொத்த நுகர்வில் 3 – 5 விழுக்காடு பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வது, பொதுவிநியோகம் சமுதாயத்தில் விளிம்பு நிலை மக்களுக்கானதாக மட்டுமே இருக்க வேண்டும், காப்புரிமையை நடைமுறைப்படுத்துவது போன்றவற்றை உலக வர்த்தக அமைப்பு நிர்ப்பந்தித்தது. பச்சை அறை (Green Box) மற்றும் நீல அறை (Blue Box) போன்றவற்றில் வளர்ந்த நாடுகள் மட்டுமே இடம்பெற்று, சுற்றுப்புறச் சூழல் மற்றும் தொழிலாளர்கள் ஆகிய நிலையினை அளவுகோலாக்க வைத்து வர்த்தக பரிமாற்றத்தை நடைமுறைப்படுத்தியதால் இந்தியாவின் துணி, தோல் போன்ற முக்கிய ஏற்றுமதி தொழில்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளது. மிகவும் வேண்டிய நாடு (Most Favoured Nation) என்ற அடிப்படையில் பாகுபாடு, இந்தியப் பாரம்பரிய வேளாண் மற்றும் தாவர உற்பத்தி பொருட்கள் பன்னாட்டு பெருநிறுவனங்களால் காப்புரிமையைப் பெற முயன்றது போன்றவை உலக வர்த்தக அமைப்பினால் இந்தியா எதிர்கொண்ட முக்கியச் சவால்களாக இருந்தது. அதேசமயம் உலக வர்த்தக அமைப்பு நடைமுறைக்குப் பின் இந்தியாவில் உணவு தானிய உற்பத்தி இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. மக்களின் உணவு நுகர்வுப் பழக்கத்தில் பெரும் மாறுதலுக்குள்ளானது. இதனால் பருப்பு மற்றும் தாவர எண்ணெய்யின் தேவை பல மடங்கு உயர்ந்துள்ளது. ஆனால் இதற்கு ஏற்ப உள்நாட்டில் உற்பத்தி அதிகரிக்காததால் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டியிருந்து. வேளாண்மை சாகுபடியில் ஈடுபட்டிருந்தவர்கள் குறிப்பாக வேளாண் தொழிலாளர்கள் வோளண் சாரத் தொழிலில் ஒப்பீட்டு அளவில் அதிக கூலி அல்லது ஊதியம் கிடைத்ததால் பெருமளவிற்கு அதிலிருந்து விடுபட்டு மாற்று வேலைகளுக்குச் செல்லத் தொடங்கினர். இக்கால கட்டத்தில் அரசு கிராமப்புறங்களில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தியது. இது பெருமளவிற்குக் கிராமப்புறப் பருவகால வேலையின்மையைக் குறைப்பதற்கு உதவியது. இவ் வேலைவாய்ப்பினால் கிராமப்புற மக்களின் வேளாண் சாரா வருமானம் அதிகரித்து, உணவல்லா நுகர்வுத் தேவையானது உயர்ந்தது. மொத்த நுகர்ச்சி செலவில் உணவல்லாச் செலவினத்தின் பங்கு அதிகரிக்கத் தொடங்கியது. வேளாண்மை இந்தியப் பொருளாதாரத்திற்கு அளித்து வந்த பங்களிப்பு வெகுவாகக் குறைந்தது அதேசமயம் பெருமளவிற்கு ஆண் விவசாயிகள் வோளண்சாரத் தொழிலை நோக்கிச் சென்ற அளவிற்குப் பெண் விவசாயிகள் செல்லாததால் வேளாண் தொழிலில் ஈடுபட்ட பட்டவர்கள் பெருமளவிற்குக் குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் இந்தியா உலக வர்த்தக அமைப்பினால் பெற்ற நன்மையைவிட எதிர்மறையே ஓங்கி இருக்கிறது. 2005ல் உலகமயமாக்கலின் நீட்சியாக இந்தியா ஏற்றுமதியைப் பெருக்கும் நோக்கில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை உருவாக்கியது. இதற்காகப் பெருமளவிற்கான வேளாண் விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. இதன் விளைவு விவசாயிகள் நிலமற்றவர்களாக மாற்றமடைந்தனர்.

மக்கள் தொகை வளர்ச்சி, நகரமயமாதல், தொழில் மயமாதல், உள்கட்டமைப்பு உருவாக்கப்படுதல் போன்ற காரணங்களினால் இந்தியாவில் நீர்நிலைகள் பல்வேறு பயன்பாடுகளுக்கு உள்ளாகியுள்ளது. இதனால் வேளாண்மைச் சாகுபடிக்குப் பயன்பாட்டிலிருந்த பாரம்பரிய நீர் ஆதாரங்கள் ஆக்கிரமிக்கப்படுவதால் வேளாண்மை பெருமளவிற்கு நிலத்தடி நீரைச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் உண்டாகியுள்ளது. மேலும் இந்தியாவில் அதிகமாக நீர் (பயன்படுத்துவது) செறிவுடைய பயிர்கள் அதிகமாகச் சாகுபடி செய்வதாலும், மின்மோட்டார் பயன்பாடு அதிகமாக உள்ளதாலும், குழாய்க் கிணற்றுப் பாசனம் ஆண்டுக்கு 5 விழுக்காடு அதிகரிப்பதாலும் நிலத்தடி நீர் மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது இந்தியா உலகிலேயே அதிக வறண்ட நிலப்பரப்பை உடைய நாடுகளில் ஒன்றாக உள்ளது. எனவே தொழில்நுட்பப் பயன்பாட்டை அடிப்படையாகக்கொண்டு விவசாயிகள் பயிர்செய்ய மானிய அடிப்படையில் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் இம் முறை இந்தியாவில் பாரம்பரிய சாகுபடி முறையிலிருந்து எளிதாக விவசாயிகள் விடுபட முடியாதல் இது தகுந்த வெற்றியடையவில்லை. தற்போது இந்தியா வறட்சியை தாக்குப்பிடிக்கும் பயிர் வகைகளைச் சாகுபடி செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பானது 2023ஆம் ஆண்டைச் சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளது. சிறுதானியங்கள் ஊட்டச்சத்து மிக்கது. இந்தியா உலக அளவில் குறைஊட்டசத்துடன் வாழும் மக்களில் முதன்மை இடத்தில் உள்ளது. சிறுதானியங்கள் வறண்ட பகுதிகளில் சாகுபடி செய்வதற்கு ஏற்றதாகும். இந்தியாவின் அதிக சாகுபடி பரப்பானது ஆண்டில் பெரும் பகுதி வறண்ட நிலையை உடையது. உலக அளவில் சிறுதானிய உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஆண்டுக்கு 12 மில்லியன் மெட்டிரிக் டன் சிறுதானிய உற்பத்தி நடைபெறுகிறது. இந்திய சுற்றுச் சூழல், நீர்வள ஆதாரம் குறைதல், நுகர்வு மாற்றமடைந்திருப்பது போன்ற நிலைகளை முன்னிறுத்தி அரசு சிறுதானிய உற்பத்திக்காக மேலும் முன்னுரிமையை அளிக்க வேண்டும்.

இந்தியா பசுமைப் புரட்சி மற்றும் உலக வர்த்தக அமைப்பு நடைமுறைப் படுத்தப்பட்டபின் அதிக விளைச்சல் தரக்கூடிய விதைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இவற்றைச் சாகுபடி செய்ய ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லி போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதன் விளைவு சுற்றுப்புறச் சூழல் மற்றும் நுகர்வோர் நலன் பாதிப்படைந்துள்ளது. எனவே அரசு இயற்கை வேளாண்மையினை நோக்கிய பார்வையை முன்னெடுத்துள்ளது. ஆனால் அரசு இதற்கான ஆராய்ச்சிக்கு நிதி ஒதுக்கீட்டை போதுமான அளவிற்கு உயர்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இயந்திரங்கள் வேளாண்மையில் அதிக அளவிற்குப் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இது ஒருபுறம் நேர்மறையாக நோக்க முடியும் காரணம் வேளாண்மை தகுந்த நேரத்தில் பயிர் சாகுபடிசெய்யத் துவங்குவது முதல் அறுவடை செய்வது வரை இதற்கான முக்கியத்துவம் காணப்படுகிறது. அதே சமயம் இதனால் இந்தியாவில் அதிக அளவில் வேளாண்மையைச் சார்ந்து வாழ்ந்து வரும் விவசாயக் கூலிகளின் வேலை இழப்பு ஏற்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவு வேளாண் சாரா வேலைகளுக்கு அதிகமாகச் செல்ல வேண்டிய நிலை காணப்படுகிறது. இந்நிலையைப் பொறுத்தவரையில் வேளாண் சார்புத் தொழிலில் தேவைக்கு அதிகமான விவசாயிகள் வேலைக்கான பங்கேற்பு வீணாகுவது குறைக்கப்படுகிறது. அதே சமயம் வேளாண் சாராத் தொழிலை நோக்கிச் செல்லும் வேளாண் தொழிலாளர்களுக்குப் போதுமான வாய்ப்புக்கள் உள்ளுரில் கிடைக்காததால் நகரங்களை நோக்கிச் செல்லுகின்றனர். இதனால் நகரமயமாக்கல் ஏற்பட்டு விளைநிலங்கள் மனைத் தொழிலுக்காகவும், தொழிற்சாலைகளுக்கும், உள்கட்டமைப்பிற்கும், மடைமாற்றம் ஏற்பட்டு நிகர பயிரிடும் பரப்பு குறையத் தொடங்குகிறது.

வேளாண்மையின் முக்கிய இடுபொருட்களாக இயந்திரங்கள் பயன்பாடு உள்ளதால் சிறு குறு விவசாயிகளால் இதனைச் சொந்தமாகப் பெற இயலாத நிலை காணப்படுகிறது. தனியார் வேளாண் இயந்திரங்கள் பயன்படுத்துவதால் வேளாண் இடுபொருட்களின் செலவு அதிகரிக்கிறது. இது போன்றே இதர இடுபொருட்களின் விலைகள் (குறிப்பாக ரசாயன உரம், பூச்சிக்கொல்லி, விதைகள்) பன்மடங்கு உயர்ந்துள்ளது. இவ் அதிகரிக்கின்ற இடுபொருட்களின் செலவிற்கு ஏற்பத் திரும்பு வீதம் விளைபொருட்களுக்குக் கிடைக்கப் பெறாததால் விவசாயிகள் இழப்பினைச் சந்திக்கின்றனர். இதன் எதிரொலியாக விவசாயத் தற்கொலைகள் அதிகரித்துக் காணப்படுகிறது. இயற்கை உரங்களைப் பயன்படுத்த அரசு விவசாயிகளை ஊக்குவித்துவந்தாலும் கடந்த காலங்களில் கால்நடைகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வந்துள்ளதால் இதன் மூலம் பெறப்படும் எருவின் பற்றாக்குறைக் காணப்படுகிறது. இது போல் மரங்கள் வழியாகப் பெறப்படும் தழை உரம், பசுந்தாள் உரம் போன்றவற்றிலும் பல்வேறு காரணங்களால் பற்றாக்குறை நிலவுகிறது. எனவே அரசு இயற்கை உரங்களைப் பயன்படுத்துவதற்கான இயக்கத்தை முன்னெடுப்பது அவசியமாகிறது.

இந்தியா சுதந்திரம் அடைந்து முதல் இரண்டு பத்தாண்டுகளில் தேசிய முன்னுரிமையின் அடிப்படையில் வேளாண்மைக்கான கடன் வழங்கப்பட்டது. ஆனாலும் நிதி நிறுவனங்கள் வேளாண்மைக்கான கடன் மொத்தக் கடனில் சிறிய அளவே பங்கினைப் பெற்றிருந்தது. நிறுவனம்;சாராக் கடன் வழியாக விவசாயிகள் பெருமளவிற்கு அதிக வட்டியில் கடன்பெற்று வந்ததால் விவசாயிகளைக் கடன் பொறியில் சிக்கவைத்தது. இதன் அடிப்படையில் இந்திரா காந்தி இரண்டு கட்டங்களாக வங்கிகளைத் தேசிய மயமாக்கி வேளாண்மைக்கானக் கடன் வழங்குவதை முன்னுரிமை என்று அறிவித்தார். இத்துடன் கிராமப்புற வட்டார வளர்ச்சி வங்கி, கூட்டுறவு வங்கி போன்றவற்றின் செயல்பாடுகள் முடுக்கிவிடப்பட்டது. 1991க்குப்பின் நரசிமம் குழுவின் பரிந்துரையின்படி வங்கிகளின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. 1988ல் தாராளக் கடன் முறையும், 2009-10ல் மிகக் குறைவாக 4 விழுக்காடு வட்டிக்கு வேளாண் கடனும் வழங்கப்பட்டது. தகுந்த காலத்தில் பெறப்பட்ட கடனைத் திரும்பச் செலுத்தும் விவசாயக் கடனின் வட்டி பூஜ்யமாக நிர்ணயிக்கப்பட்டது. உலக வர்த்தக அமைப்பு நடைமுறையில் வந்தபின் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதை ரகங்கள் பயிரிடுவதன் வழியாக வேளாண் செலவுகள் அதிகரிக்கத் தொடங்கியது. இதனை எதிர்கொள்ள விவசாயிகள் அதிக கடன் பெற வேண்டிய நிலை உருவானது. 1995 முதல் விவசாயிகளின் தற்கொலைகள் அதிக அளவில் காணப்படுகிறது இதற்கு முக்கியக் காரணங்களில் முதன்மையானதாக வேளாண் கடன் பளு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2019க்குப்பின் விவசாயிகள் வேளாண் பணிகளைத் துவக்குவதற்காகக் கடனாக இல்லாமல் மூன்று தவணைகளில் ரூ.2000 வீதம் சிறு, குறு விவசாயிகளுக்குப் பணமாக வழங்கி வருகிறது. இவ்வாறு பல்வேறு வேளாண்மைக்கான கடன் அளிப்பு முறைகளில் கடந்த காலங்களில் அரசு மேற்கொண்டாலும் தற்போதும் வேளாண்மைக்கான கடனானது நிறுவனம் சாரா வழியாக மூன்றில் ஒரு பங்கு பெறப்படுகிறது இது 1951ல் 7.2 விழுக்காடாக மட்டுமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையினைப் போக்க அரசு வேளாண்மையைத் தொழிலை லாபகரமானதாக உருவாக்க வேண்டும். குறைந்தபட்சம் வேளாண் விளைபொருட்களுக்குத் தகுந்த விலை கிடைக்க உறுதி செய்ய வேண்டும்.

வேளாண்மை உற்பத்தியில் உபரியை விவசாயிகள் விற்பனை செய்து வருமானத்தை ஈட்டுகின்றனர். வேளாண் பொருட்கள் சந்தைப் படுத்துதலின் வழியாகப் பெறப்படும் வருமானமானது விவசாயக் குடும்ப வருமானத்தில் முக்கியப் பங்கினை வகிக்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்தபின் வேளாண் பொருட்களைச் சந்தைப் படுத்த வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் ஏற்படுத்தப்பட்டு அதன் வழியாக வேளாண் உற்பத்தியை விற்பனை செய்ய வசதி ஏற்படுத்தித் தரப்பட்டது. இதனால் இடைத் தரகர்களின் சுரண்டல்கள் கட்டுப்படுத்தவும், உரிய விலை கிடைக்கவும் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டது. ஆனாலும் விவசாயிகள் பெருமளவிற்கு முறைப்படுத்தா விற்பனை அமைப்புகள் வழியாகவே அதிகமாக விளைபொருட்களைத் தற்போதும் விற்பனை செய்துவருகின்றனர். இதனால் இடைத்தரகர்கள், வணிகர்கள், முகவர்கள், உள்ளிட்டோர் பயனடைகின்றனர். ஆனால் விவசாயிகளுக்குத் தகுந்த விலை கிடைப்பதில் தடைகள் ஏற்படுகிறது. வேளாண் மண்டிகள் போதுமான அளவில் இல்லாததும், கிராமங்களுக்கானப் போக்குவரத்து இன்மையாலும், விவசாயிகள் பயிர் சாகுபடி செய்ய முன்பணமாக வணிகர்களிடம் பெறுவதாலும், சேமிப்பு கிடங்கு வசதியின்மையாலும், விவசாயிகளுக்குச் சந்தைகளைப் பற்றிய தெளிவின்மையாலும் விவசாயிகளின் விளைபொருட்களுக்குத் தகுந்த விலை கிடைக்காததற்கு முக்கியக் காரணங்கள் ஆகும். இதனைப் போக்க அடுத்த தலைமுறைக்கான சந்தை சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு APMC மாதிரிச் சட்டம் 2003 கொண்டுவரப்பட்டது. இதன்படி விவசாயிகளிடமிருந்து நேரடியாக விளைபொருட்களை வாங்குவது, ஒப்பந்தச் சாகுபடி முறையை மேற்கொள்வது, தனியார் மற்றும் கூட்டுறவுச் சந்தைகளை நிறுவுதல், சிறப்புச் சந்தைகளை உருவாக்குவது, தனியார்-பொது பங்கேற்புடன் சந்தைகளை மேம்படுத்துவது, தரம் பிரித்தல் மற்றும் தரப்படுத்துதல் போன்ற நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டது. 2016ல் நிதி அயோக்கினால் மாதிரிச் சட்டத்தில் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டி அவற்றைக் களைய முற்பட்டது. இதனைத் தொடர்ந்து ந- e-NAM 2016ல் நடைமுறைப்படுத்தப்பட்டு APMC கள் இத்துடன் இணைக்கப்பட்டு விவசாயிகள் தங்களின் பொருட்களை நாடுமுழுவதும் அதிக விலைக்கு விற்பனைச் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. 2020ல் இந்திய அரசானது மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்து அதன்வழியாக விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை அதிக விலைக்கு இந்தியாவின் எப்பகுதியிலும் விற்பனை செய்ய வழி வகுத்தது. ஆனால் இச்சட்டத்தால் சிறு, குறு, நடுத்தர விவசாயிகள் பயனடைவது சாத்தியமற்றது என்ற அடிப்படையில் இச்சட்டங்களுக்கு எதிராகப் பெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர். இக் கடுமையான எதிர்ப்பினால் அரசு இச் சட்டங்களை விலக்கிக்கொண்டது. இந்திய விவசாயிகள் பெருமளவிற்கு APMC மண்டிகளில் தங்களின் விளைபொருட்களை விற்க முடியாத நிலை நீடிக்கிறது. இதனால் விவசாயிகள் இழப்பினைச் சந்திக்கின்றனர். எனவே அரசு அதிக அளவிற்கான மண்டிகளை உருவாக்கித் தருவதும், அம் மண்டிகளில் அனைத்துவிதமான கட்டமைப்பினை உறுதி செய்வதும், இதில் ஏறப்படும் ஊழல்களைத் தடுப்பதும், வேளாண் பொருட்களுக்கு அரசு அறிவிக்கின்ற விலையினைக் கிடைக்க வழிவகை செய்வதும், கிடங்குகளை உருவாக்குவதும் முக்கியத் தீர்வாக அமையும். இத்துடன் அறுவடைக் காலங்களில் தேவைக்கு ஏற்ப கொள்முதல் நிலையங்களை உருவாக்கித் தருவதுடன் உடனுக்கு உடன் கொள்முதல் நடவடிக்கையை மேற்கொள்வதும் தலையாயக் கடமையாக இருக்கும்.

அரசு விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவது என்ற அறிவிப்பை 2016ல் வெளியிட்டு 2022ல் இதனை அடைய காலநிருணயம் செய்தது ஆனால் 2016ல் ரூ.8000 ஆக இருந்த வருமானம் 2022ல் ரூ.12400 என்ற அளவை மட்டுமே அடைந்துள்ளது. அதாவது மூன்றில் ஒரு பங்கு வருமானம் மட்டுமே அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடிப்படைக் காரணம் விவசாயிகளின் விளைபொருட்களுக்குச் சந்தையில் தகுந்த விலை கிடைக்காததாகும். குறைந்த பட்ச ஆதார விலையானது 23 விளைபொருட்களுக்கு மட்டுமே தகுதி உடையதாக உள்ளது. இதுவும் அனைத்து விவசாயிகளுக்கும் கிடைப்பதில்லை. குறைந்த பட்ச ஆதார விலை நிருணயம் செய்வதிலும் தேசிய விவசாயிகள் குழு அறிக்கையின் அடிப்படையில் பின்பற்றவில்லை. இதற்கு மாற்றாக அரசு பன்னாட்டுப் பெரிய நிறுவனங்களைக் களம் இறக்கி விவசாயத்தை ஒப்பந்த அடிப்படையில் சாகுபடி செய்ய முயற்சி செய்கிறது. அரசு குறைந்த பட்ச ஆதார விலைக்கு அளிக்கப்படும் மானியத்தை படிப்படியாகக் குறைக்க முயல்கிறது. இதனால் இந்தியாவில் பெருமளவிற்குச் சாகுபடி செய்யும் சிறு, குறு, நடுத்தர விவசாயிகளின் வாழ்வாதாரங்கள் பறிக்கப்படும் சூழல் நிலவுகிறது. இதனைப் போக்க அரசு குறைந்த பட்ச ஆதார விலையை அனைத்து வேளாண் விளைபொருட்களுக்கும், அனைத்து விவசாயிகளும் பயனடையவும் சட்டப்பூர்வமாக்குவதைத் தவிர வேறு வழியில்லை. இதனைச் சாக்குப் போக்கு காட்டி காலம் தாழ்த்துவது என்பது விவசாயிகளுக்கான சமூகநீதியைப் புறந்தள்ளுவதற்கு ஒப்பானதாகும்.

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது பசி, பட்டினி அதிகமாக இருந்தது. கிராமப்புறங்களில் வறுமையின் தாக்கம் பெரும் எண்ணிக்கையில் இருந்தது (1951-51ல் 47.4 விழுக்காடு மக்கள் கிராமப்புறங்களில் வறுமையில் இருந்தனர் இது 1966-67ல் 64.30 விழுக்காடாக அதிகரித்தது). உணவுப் பொருட்களின் பற்றாக்குறை தொடர்ந்து காணப்பட்டது. உணவு தானியத்திற்கு வெளிநாடுகளைச் சார்ந்து வாழ வேண்டிய நிலை இருந்தது. எனவே ஒரு நிரந்தரத் தீர்வாகப் பசுமைப் புரட்சி தொடங்கப்பட்டது. 1980களின் இரண்டாம் காலகட்டத்தில் இந்த நிலையிலிருந்து இந்தியா மீளத் தொடங்கியது, 1990களில் உணவு உற்பத்தியில் தன்நிறைவு என்ற நிலையினை அடைந்தது. இதனால் வறுமை பெருமளவிற்குக் குறைந்தது (1993-94ல் கிராமப்புற வறுமை 36.66 விழுக்காடாக இருந்தது 2011-12ல் 25.7 விழுக்காடாகக் குறைந்தது). 1991ல் நடைமுறைப்படுத்தப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்கள் பெருமளவிற்கு தொழில்துறையினையும், சேவைத் துறையினையும் நோக்கியதாக இருந்ததால் சமுதாய ஏற்றத்தாழ்வுகள் உருவாகத் தொடங்கியது. 1995ல் உலக வர்த்தக அமைப்பு ஏற்படுத்தப்பட்டபின் உலகமயமாக்கல் கொள்கை பின்பற்றப்பட்டதால் உணவுப் பொருட்களின் விலை பன்னாட்டு அளவில் ஏற்றத்தாழ்வுடன் காணப்பட்டது. பொது விநியோக முறையில் சமுதாயத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நோக்கியதாக இருக்க வேண்டும் என நிர்ப்பந்திக்கப்பட்டது. அதே சமயம் உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரிக்கத் தொடங்கியது. மக்களின் நுகர்வுக் கலாச்சாரம் மாற்றமடைந்தது. இதனால் இந்திய விவசாயிகள் அதிகமாகப் பாதிக்கப்பட்டனர். சமுதாயத்தின் கீழ் மட்டத்திலிருந்த பெருமளவிற்கான மக்களிடையே வறுமை அதிகமாக இருந்தது. எனவே இதனைக் கருத்தில் கொண்டு அரசு உணவுப் பாதுகாப்புச் சட்டம் (2013ல்) கொண்டுவரப்பட்டது. இதன் முக்கிய நோக்கமாக அனைவருக்குமான உணவு மற்றும் ஊட்டச்சத்து உறுதியளிப்பாக இருந்தது. இந்த அடிப்படையில் இந்திய உணவுக் கழகம் மற்றும் மாநில உணவுக் கழகங்கள் தங்களின் உணவு தானியப் பொருட்களின் இருப்பினை அதிகரிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உணவுக் கொள்முதல் நடவடிக்கையை மேற்கொண்டது. இதில் முக்கியமானது இக்கொள்முதல் வியாபாரிகள் வழியாக முதலில் நடைமுறைப்படுத்தப்பட்டது பின்னால் இது நேரடியாகவே அரசு கொள்முதல் நிலையங்களை அறுவடைக் காலங்களில் திறந்து உணவு தானியங்களை விவசாயிகளிடமிருந்து வாங்கியது. விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை நேரடியாக விற்பனைச் செய்வதால் அரசு கொள்முதல் விலை கிடைக்கப்பெற்று (இது குறைந்தபட்ச ஆதார விலையைவிடச் சற்றே அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது) பயன் அடைந்தனர். ஆனால் இம்முறையில் மிகக் குறைவான விவசாயிகளே பயன் அடைந்து வருகின்றனர் (அதிலும் பெரிய மற்றும் நடுத்தர விவசாயிகள் அதிகப் பயன் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது). அனைத்து விவசாயிகளும் பயனடையும் வகையில் அரசுக் கொள்முதல் நிலையங்களை அதிகரிப்பதும், குறைந்தபட்ச ஆதார விலையை அனைத்து விவசாயிகளுக்கும் கிடைப்பதை உறுதி செய்வதும் தற்போது முதன்மையான நடவடிக்கையாக இருத்தல் அவசியமாகிறது.

நாட்டின் மொத்த மதிப்புக் கூட்டலின் அடிப்படையில் பார்த்தால் இரண்டாம் நிலைத் துறையானது (தொழில் துறை உள்ளிட்டவை) 1950-51ல் 16.59 விழுக்காடுப் பங்களிப்பினை அளித்து வந்தது 2020-21ல் 26.98 விழுக்காடாகவும், சேவைத்துறையானது இவ்வாண்டுகளில் 25.74 விழுக்காடாக இருந்தது 54.27 விழுக்காடாகவும் அதிகரித்துள்ளது ஆனால் முதன்மைத் துறையானது (வேளாண்மை உள்ளிட்டவை) இவ்வாண்டுகளில் 57.67 விழுக்காட்டிலிருந்து 21.82 விழுக்காடாகக் குறைந்துள்ளது. அதேசமயம் வேளாண்மைத் துறையில் வேலை பங்கேற்பு ஆற்றலானது 1961ல் 72.50 விழுக்காடாக இருந்தது 2011ல் 57.41 விழுக்காடாகக் குறைந்துள்ளது. அதாவது இந்தியப் பொருளாதாரத்திற்கு வேளாண்மைத்துறை பங்களிப்பு பெருமளவிற்குக் குறைந்திருந்தாலும் அதிக அளவிலான வேலைவாய்ப்பை அளிக்கும் துறையாக தற்போதும் வேளாண் துறை இருந்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பருவகால வேலையின்மை, குறைவான வருமானம், வறுமை போன்ற அறைகூவல்களைத் தற்போது இத் துறையினைச் சார்ந்து வாழ்பவர்கள் எதிர்கொள்கின்றனர். எனவே அரசு ஆண்டு முழுவதும் விவசாயிகள் வேலைவாய்ப்பினை பெறும்வகையில் வேளாண் வழியாகவே அந்தந்தப் பகுதிகளில் பெறக்கூடிய விளைபொருட்களை அடிப்படையாகக் கொண்டு வேளாண் சார் தொழில்களை வட்டார அளவில் உருவாக்கித் தொடர் வேலைவாய்ப்பை அளிப்பது முக்கியமானதாகும். இதனால் வேளாண்மை, தொழில் வளர்ச்சி, ஏற்றுமதி போன்றவை மேம்படும் விவசாயிகளுக்கும் வருவாய் கிடைக்கும்.

சமனற்ற நிலப் பகிர்வு, நிலம் துண்டாடப்படுதல், சிறிய அளவிலான நிலக் கைப்பற்று, வேறுபட்ட குத்தகை முறை, என்ற பிரச்சனைகள் வேளாண்மையில் பெருமளவிற்குக் காணப்படுகிறது. உழுபவருக்கு நிலம் சொந்தம் என்ற முயற்சி முழுமை பெறவில்லை. கூட்டுறவு வேளாண்மை முயற்சியும் தோல்வியினை தழுவியுள்ளது. அன்மைக் காலமாக விவசாயிகள் காலநிலை மாற்றத்தினால் பருவம் தவறி மழை பொழிவு, கடுமையான வெப்பக் காற்று, புயல், வெள்ளம், போன்றவற்றால் பெரிதும் பாதிக்கின்றனர். பன்னாட்டு உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் கணிப்புப்படி (International Food Policy Resarch Institute) காலநிலை மாற்றத்தின் விளைவால் இந்தியாவில் உணவு உற்பத்தியானது 2030ல் 16 விழுக்காடு குறையும் இதனால் பசித்திருப்போர் எண்ணிக்கை 23 விழுக்காடு அதிகரிக்கும் என்கிறது. எனவே அரசு இவற்றை எதிர்கொள்ளக் காலநிலைக்கு ஏற்றப் பயிர்களைச் சாகுபடி செய்யவும், வேளாண் விளைபொருட்களைப் பாதுகாக்க உலர் இயந்திரங்கள், உடனடியாக விளைபொருட்களை விளைநிலங்களின் பகுதிகளிலே கொள்முதல் செய்தல், விவசாயிகளுக்கு வேளாண் சாகுபடியில் ஏற்படும் தோல்விகளுக்குத் தகுந்த இழப்பீடு, நீர் வடிகால்களை போர்க்கால அடிப்படையில் சீர் செய்தல், நீர்வழித் தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் போன்ற நடைமுறைகளை மேற்கொள்ளவேண்டும்.

இந்தியா சுதந்திரம் அடைந்தபின் அரசு வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டிற்கும் பல்வேறு கொள்கைகளை நடைமுறைப்படுத்தியது இதனால் வேளாண்மை உணவு தானியப் பற்றாக்குறையிலிருந்து தன்னிறைவும், அதனைத் தொடர்ந்து வேளாண் விளைபொருட்கள் ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடாகவும் மாற்றமடைந்தது. தற்போதைய நிலையில் பன்னாட்டு அளவில் உணவு தானிய விளைபொருட்களின் விலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுவதும், வேளாண் இடுபொருட்களின் விலை தொடர்ந்த அதிகரிப்பதும், உலகளாவிய அரசியல் சூழல் நிர்ப்பந்தங்கள் போன்ற நிலையினால் இந்திய வேளாண்மை பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளது. இதனை எதிர்கொள்ள வேளாண் விளைபொருட்களுக்கான சட்டப்பூர்வமான விலை உறுதியும், வேளாண்மைக்கான மானியங்கள் தொடர்ந்து அளிப்பது. வேளாண் சாகுபடியில் தேவைக்கு ஏற்ப மாற்றத்தை உருவாக்குவதும் தற்போது முன்னெடுக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு உள்ளது. இச் செயல்பாட்டிற் கு அரசியல் சார்ந்த முடிவுகள் முக்கியமானதாக இருக்கிறது. இந்திய வேளாண்மை என்பது வாணிபம் சார்ந்தது மட்டுமல்ல வாழ்வாதாரம், கலாச்சாரம், பண்பாட்டுச் சார்புடையது என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும்.

(முற்றும்)

இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @75 என்ற தொடரை வெளியிட்ட பாரதி புத்தகாலயத்திற்கும் இதற்கு உறுதுணையாக இருந்த அனைத்து தோழர்களுக்கும் வாசகர்ளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி – முனைவர் பு.அன்பழகன்

இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @ 75 : தொடர் – 14 நரேந்திர மோடியும் வேளாண்மைச் சந்தைப் பொருளாதாரமும் – பாகம்-1 பேரா.பு.அன்பழகன்

இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @ 75 : தொடர் – 14 நரேந்திர மோடியும் வேளாண்மைச் சந்தைப் பொருளாதாரமும் – பாகம்-1 பேரா.பு.அன்பழகன்




மன்மோகன் சிங்கின் முதல் கால கட்ட ஆட்சி சிறப்பானதொரு பொருளாதார வளர்ச்சியைக் கண்டது ஆனால் இரண்டாம் கால கட்ட ஆட்சியில் அந்த அளவிற்கு சோபிக்கவில்லை. அதற்கு முக்கியக் காரணம் வேளாண்மையில் ஏற்பட்ட சில நிகழ்வுகளாகும். காலம் தவறிய பருவ மழை, சில மாநிலங்களில் வறட்சி, சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு போன்றவை முக்கிய காரணிகளாக இருந்தன. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தாலும் விலை உயர்வு, நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு, அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் போன்றவை பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த நிலையில் ஏப்ரல் – மே 2014ல் நடைபெற்ற தேர்தலில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது, ஊழல் ஒழிப்பு, வேலைவாய்ப்பை உருவாக்குவது போன்ற உறுதிமொழிகளைப் பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க) தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவித்தது. இதன் பலன் இக் கூட்டணி 336 இடங்களில் பெரும் வெற்றியைப் பெற்றது. பா.ஜ.க தனித்து 282 இடங்களில் வெற்றி பெற்றது. நரேந்திர மோடி நாட்டின் 16வது பிரதமராக மே 26, 2014ல் பிரதமராகப் பதவி ஏற்றார். முழுமையாக ஐந்து ஆண்டுகள் 2019வரை பிரதமராக ஆட்சி செய்தார்.

இந்தியாவில் மோடிக்கு முன்பு நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் சுயச்சார்பை நோக்கிய பொருளாதாரக் கொள்கைகளை முன்னெடுத்திருந்தனர். நரசிம்ம ராவ், வாஜ்பாய், மன்மோகன் சிங் ஆகியோர்களின் ஆட்சி சந்தை சார்ந்த பொருளாதாரக் கொள்கைகளை நோக்கமாகக் கொண்டிருந்தது. ஆனால் மோடி அரசு துவக்கத்தில் தனித்துவமான கொள்கைகள் எதையும் முன்னெடுக்கத் திட்டமிடவில்லை. ஆனால் தேசிய அளவில் பல பிரதமர்கள் இதுவரை கடைப்பிடித்த கொள்கைகளை மாற்ற முனைந்தது. இந்தியக் கூட்டாட்சித் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்தியா பல்வேறு மொழி, கலாச்சாரம், இனம், இயற்கை சூழலைக் கொண்ட நாடு. இதற்கான முக்கியத்துவம் இவற்றின் இயல்பிற்கு ஏற்ப கொடுத்து வந்தநிலையில் ஒரே நாடு ஒரே கொள்கை என்பதை மோடி அரசு பின்பற்றியது.

இந்தியாவில் ஐந்தாண்டு திட்டங்களை உருவாக்கச் சோவியத் ரஷ்யாவை முன்மாதிரியாகக் கொண்டு மார்ச் 15, 1950ல் அன்றைய பிரமர் நேருவால் உருவாக்கப்பட்ட திட்டக்குழு 12 ஐந்தாண்டு திட்டங்களைத் தந்தது. இது கலைக்கப்பட்டு ஜனவரி 1, 2015ல் பிரதம மந்திரியைத் தலைவராகக் கொண்ட நிதி ஆயோக் (NITI Aayog) என்ற அரசுக்கு (ஒன்றிய, மாநிலங்கள்) உத்திகளையும், ஆலோசனைகளையும் வழங்கும் அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பானது திட்டக்குழு போல் அல்லாமல் அரசுக்கு ஆலோசனைகளை வழங்கும் ஆனால் கொள்கைகளை நடைமுறைப்படுத்தாது, நிதி ஒதுக்கீடு செய்யும் அதிகாரமற்றதாக இருக்கும், பகுதி நேர உறுப்பினர்களை நியமித்துக்கொள்ளும் என்ற இயல்புகளைக் கொண்டதாக உள்ளது. நிதி சார்ந்த நடவடிக்கைகளில் கவனம் செலுத்து பட்டு பணமதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரியினை நடைமுறைப்படுத்தியது. மோடியின் முதல் கட்ட ஆட்சிக் காலத்தில் இவ்விரண்டு நடவடிக்கைகளும் பெருமளவிற்குப் பொருளாதாரத்தின் மீது தாக்கங்களை ஏற்படுத்தியது.

நவம்பர் 8, 2016ல் 86 விழுக்காடு பண சுழற்சியைக்கொண்ட உயர் மதிப்புடைய ரூ.500, ரூ.1000 பணங்களை மதிப்பிழக்கச் செய்யப்பட்டது. இதன் வழியாகக் கருப்புப் பணம், கள்ளப் பணம், தீவிரவாதம் ஒழிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் அதிக அளவில் நீர்மப் பணம் புழக்கத்தில் பொருளாதார நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பண மதிப்பிழப்பு நடைமுறைப்படுத்தப்படும்போது உழவுப் பணிகள் துவங்குகிற காலம் எனவே அதிகமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இதுபோல் கட்டுமானத்துறை, சிறு, குறு தொழில்கள் பெருமளவிற்குப் பாதிப்பிற்கு உள்ளானது. இதனால் வேலை இழப்பு ஏற்பட்டு வேலையின்மை அதிகரித்தது. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவாக 6.1 விழுக்காடாக வேலையின்மை 2017-18ல் காணப்பட்டது.

காலம் காலமாக ஒன்றி, மாநில அரசுகள் பல்வேறு வரிகளை விதித்து வந்த நிலையில் இதனை முறைப்படுத்த ஒரே நிலையிலான வரியினை நாடு முழுவதும் விதிக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசானது சரக்கு மற்றும் சேவை வரியினை (ஜி.எஸ்.டி) கொண்டுவர முயற்சிகள் மேற்கொண்டது. நரேந்திர மோடி அரசு பதவி ஏற்றபின்பு இதனைச் சட்டமாக்கி ஜூலை 1, 2017ல் 17 மறைமுக வரிகளை ஒன்றிணைத்து நடைமுறைப் படுத்தியது. இது ஐந்தடுக்கு முறையில் மத்திய ஜி.எஸ்.டி, மாநில ஜி.எஸ்.டி, ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி என்ற வழிகளில் வரி விதிக்கப்படுகிறது. இந்த நடைமுறையினால் நுகர்வோர் அதிகம் பயனடைவார்கள் என்று கூறப்பட்டது. உண்மை நிலையில் இதனால் அரசுக்கான வருமானம் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது ஆனால் இது நடைமுறைப்படுத்தப்பட்டபின் நுகர்வுப் பொருட்களின் விலை குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நுகர்வோர், உற்பத்தியாளர்கள், சிறு வணிகர்கள், விவசாயிகள் பெருமளவிற்கு ஜி.எஸ்.டியால் பாதிக்கப்பட்டனர். பல மாநிலங்களின் சொந்த வரி மூலம் பெறப்படும் வருவாய் குறைந்தது. ஜி.எஸ்.டி வழியாகப் பெறப்பட்ட வருவாயையும் ஒன்றிய அரசு சரியாக மாநில அரசுகளுக்குப் பகிர்ந்தளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. பல சிறு, குறு தொழில்கள் இவ் வரியினால் பாதிக்கப்பட்டு, மூடப்பட்டது.

பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கையில் வேளாண்மை மேம்பாட்டிற்கான உறுதி மொழி, வாசகங்கள் (slogam), புதிய திட்டங்கள், நடவடிக்கைகள், ஏதும் பெரிய அளவில் இடம்பெறவில்லை. ஆனால் சில குறிப்பிட்ட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளாக இந்திய உணவுக் கழகம் திறம்படச் செயல்பட வைப்பது, விவசாயிகள் மேம்பட புதிய தொழினுட்பங்களைப் புகுத்துவது, தேசிய வேளாண் சந்தை அமைப்பது, மக்களின் பழக்கங்களோடு தொடர்புடைய வேளாண் விளைபொருட்களை மேம்படுத்துவது, விலை நிலைப்பு நிதியை உருவாக்குவது, வேளாண்மையை லாபகரமானதாக மாற்றுவது, மண் வளத்தைப் பாதுகாக்க நடவடிக்கை, இயற்கை சீற்றங்களால் ஏற்படும் வேளாண் இழப்பினைச் சரிசெய்யக் காப்பீட்டை நடைமுறைப்படுத்துதல் போன்றவை பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் வேளாண்மை சார்ந்ததாக இருந்தது.

மோடியின் முதல் கட்ட ஆட்சிக்காலமான 2014-15 முதல் 2018-19வரையில் மேற்கொண்ட முக்கியமான நடவடிக்கைகள், 1) நீர் பாதுகாப்பு மற்றும் அதன் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கும் பிரதம மந்திரி கிரிஷ் சிஞ்சாய் யோஜனா 2015ல் தொடங்கப்பட்டது. 2) பிப்ரவரி 2016ல் விவசாயிகளின் வருமானத்தை இரண்டுமடங்காக 2022க்குள் அதிகரிப்பது. 3) நிதி ஆயோக்கால் மார்ச் 2016ல் மாதிரி நில குத்தகைச் சட்டம் வடிவமைக்கப்பட்டுக் குத்தகைச் சட்டத்தை மேம்படுத்தி குத்தகை தாரர்கள் பயனடையச் செய்யப்பட்டது. 4) ஏப்ரல் 2016ல் பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா என்ற விரிவான பயிர்க் காப்பீடுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. 5) வேளாண் உற்பத்தி மற்றும் கால்நடை சந்தை படுத்துதல் (மேம்பாடு மற்றும் வசதியளிப்பு) சட்டம் 2017 நடைமுறைப்படுத்தப்பட்டது (ஏப்ரல் 2017ல்). இதன்படி மாநிலங்களில் இனம்கண்டுள்ள அனைத்து சந்தைகளையும் ஒருமுகப்படுத்துதல், தனியார் சந்தை, நுகர்வோர் சந்தை, நேரடிச் சந்தைப் படுத்துதல் போன்றவை அமைத்தல், கிடங்குகள், குளிரூட்டப்பட்ட சேமிப்பு கிடங்குகள் அனைத்தையும் சந்தை முற்றமாகப் பிரகடனப் படுத்துதல், சந்தை கட்டணம், முகவர் கட்டணம் போன்றவற்றில் நியாயமான முறையினைப் பின்பற்றுதல், மின்னணு வர்த்தகத்திற்கு ஒருநிலையிலான அனுமதி, சந்தைக் கட்டணங்கள் ஒரு நிலையில் மட்டும் விதிப்பது, கிராமிய சந்தைகளில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக வேளாண் விளைபொருட்களை வாங்க வழி செய்தல் போன்றவை நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டது.

6) ஆகஸ்ட் 2017ல் தண்ணீரை உச்ச அளவிற்குப் பயன்படுத்த நுண்ணீர் பாசன முறையினை ஊக்குவிக்க ‘ஒரு சொட்டு நீரில் அதிக விளைச்சல்’ (per drop, more crop) என்ற முறை முன்னெடுக்கப்பட்டது. 7) ஏப்ரல் 2018லிருந்து வேளாண் விளைபொருட்கள் ஏற்றுமதியை 2022-23ல் இரட்டிப்பாக்குதல். 8) பாரம்பரிய விவசாய மேம்பாட்டுத் திட்டம் (Paramparagat Krishi Vikaas Yojana) மார்ச் 2018ல் தொடங்கப்பட்டு இயற்கை வேளாண்மையை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. 9) பிரதான் மந்திரி அன்னதாதா வருவாய் பாதுகாப்பு இயக்கம் (Pradhan Mandri Annadata Aay Sanrakshan Abhiyan) செப்டம்பர் 2018ல் தொடங்கப்பட்டு விவசாயிகளுக்குக் கட்டுபடியாகும் விலையை வேளாண்மை விளைபொருட்களுக்கு உறுதி செய்வதாகும். 10) டிசம்பர் 2018ல் ‘வேளாண் ஏற்றுமதிக் கொள்கை’ வெளியிடப்பட்டது இதன்படி ஏற்றுமதியை இரட்டிப்பாக்குதல், இந்திய விவசாயிகளை ஒன்றிணைப்பது, வேளாண் விளைபொருட்களை உலகளாவிய மதிப்பு சங்கிலத் தொடரை உருவாக்குவதாகும். 11) குறு, சிறு விவசாயிகளின் வருமானத்தை உறுதிசெய்யும் விதமாகப் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா என்ற திட்டம் பிப்ரவரி 2019ல் தொடங்கப்பட்டது. 12) வேளாண்மைக்குப் பயன்படுத்தப்படும் யூரியாவினைப் பாதி அளவாக்க 2022-23 குறைத்தல்.

இந்தியாவில் விவசாயக் குடும்பங்கள் வேளாண்மை மற்றும் கால்நடைகள் வளர்த்தல் வழியாக மொத்த வருவாயில் 2002-03ல் 50.1 விழுக்காடு பெற்றிருந்தனர் இது 2015-16ல் 43.1 விழுக்காடாகக் குறைந்தது. இதே காலகட்டத்தில் கூலி வழியாகப் பெறும் குடும்ப வருமானமானது 38.7 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடாக அதிகரித்துள்ளது (Ashok Gulati 2021). பிப்ரவரி 28, 2016ல் பெல்லாரியில் நடந்த விவசாயிகளின் பேரணியில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளின் வருமானத்தை 2022ல் இருமடங்காக அதிகரிக்க உள்ளதாகக் குறிப்பிட்டார். அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜேட்லி 2017ல் தாக்கல் செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கையில் விவசாயிகள் வருமானத்தை இருமடங்கு அதிகரிப்பதைப் பற்றிக் குறிப்பிட்டார். இதற்காக அசோக் தல்வாய் தலைமையில் ஏப்ரல் 2016ல் ஒரு குழு அமைத்து ஆய்வு செய்யப்பட்டது. செப்டம்பர் 2018ல் இக் குழு அறிகையினை அரசுக்கு அளித்தது. இதன்படி 2012-13ல் விவசாயிகளின் மாத வருமானம் ரூ.8059 ஆக இருந்ததை 2022-23ல் ரூ.17862 ஆக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதன்படி ஆண்டுக்கு 10.4 விழுக்காடு வருமானத்தை 2015-16 மற்றும் 2022-23 இடையில் உயர்த்த இலக்கு வகுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் வேளாண் உற்பத்தித் திறனை அதிகரிப்பது, கால்நடை உற்பத்தித் திறனை அதிகரிப்பது, வள ஆதாரங்களைத் திறனாகப் பயன்படுத்துவது, வேளாண் உற்பத்திக்குத் திறனான பணமதிப்பினை உருவாக்குவது, இரண்டாம் நிலையிலான வேளாண் நடவடிக்கைகளின் பரவலை ஏற்படுத்துதல் போன்றவை முன்னெடுக்கப்பட்டது.

உணவு தானிய மேலாண்மை முறையினை அரசு தலையிட்டு நடைமுறைப்படுத்தியது. இதன்படி அரசு நெல், கோதுமைக்குக் குறைந்த பட்ச ஆதரவு விலையினை அளித்து கொள்முதல் செய்வது, கொள்முதல் செய்யப்பட்ட உணவு தானியங்களை 5 லட்சம் நியாய விலைக் கடைகள் வழியாகப் பொது விநியோக முறையில் பகிர்ந்தளிக்கப்பட்டது. 2013ல் பொது விநியோக முறையானது தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வந்தது. இதனை இந்திய உணவுக் கழகம் ஒருங்கிணைப்பு முகவராக இருந்து செயல்படுத்துகிறது. இதன்படி ஆண்டுக்கு 61.4 மில்லியன் மெட்ரிக் டன் தானியங்கள் 8.13 மில்லியன் மக்களுக்கு வழங்கப்பட்டது. மொத்த மக்கள் தொகையில் 67 விழுக்காட்டினர் இதனால் பயனடைந்தனர். பொதுவாக உணவுக்கான அதிகபட்ச மானியம் 2001-02முதல் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் 2016-17 மற்றும் 2017-18ல் இதற்கான மானியம் ரூ.1.1 லட்சம் கோடி, ரூ.1.0 கோடி என்று முறையே வழங்கப்பட்டது. 2017-18லிருந்து 2018-19ல் மானியமானது 71 விழுக்காடு அதிகரித்தது. 2001-02லிருந்து அடுத்து வந்த 17 ஆண்டுகளில் 10 மடங்கு உணவுக்கான மானியம் அதிகரித்திருந்தது.

உணவு தானிய மேலாண்மை முறையில் கிடங்குகள் பற்றாக்குறை, போக்குவரத்தில் முறையற்ற மேலாண்மை, கசிவுகள், போக்குவரத்து வழியாகப் பரிமாற்றம் செய்யும்போது தானியங்கள் சிந்துதல், இந்திய உணவுக் கழகம் திறனற்று இருப்பது போன்றவற்றால் அதிக செலவுகள், விரயங்கள் ஏற்படுகிறது எனவே இதனைச் சரிசெய்ய மோடி அரசானது சாந்த குமார் தலைமையில் உயர் மட்டக் குழு ஒன்றை அமைத்தது. இக்குழுவானது ஜனவரி 2015ல் தனது அறிக்கையை ஒன்றிய அரசுக்குச் சமர்ப்பித்தது. அதன்படி 1) நடைமுறையில் உள்ள உணவு தானிய வழங்கலைக் குறைத்து அதற்குப் பதில் ரொக்கப் பண மாற்றத்தை அனுமதிப்பது, 2) இந்திய உணவு கழகம் நடைமுறையினைச் சரிசெய்து புறக்கணிக்கப்பட்ட மாநிலங்களில் கொள்முதல் வழியாக உணவுப் பொருட்களைத் தகுந்த விலைகொடுத்து வாங்குதல், 3) தேசிய உணவுப் பாதுகாப்பினால் பயனடையும் 67 விழுக்காடு மக்களின் பங்கை (மொத்த மக்கள் தொகையில்) 40 விழுக்காடாக்கக் குறைத்தல், 4) மாநில மற்றும் தனியார்த் துறையினை ஈடுபடுத்தி வெளிப்புற நடவடிக்கைகளின் வழியாக உணவு தானிய இருப்பை அதிகரிப்பது, 5) அதிக அளவிற்கு விளைபொருட்களைக் கையாள வினியோகச் சங்கிலியை மேம்படுத்துவது, கணினி மயமாக்குவது, அதிக அளவிற்கு உழலுக்கு வழி வகுக்கும் உணவு தானியம் கையாளும் முறையினை ஒழிப்பது போன்றவை பரிந்துரைக்கப்பட்டது.

மார்ச் 31, 2018ன்படி இந்தியாவில் 6676 முறைப்படுத்தப்பட்ட மொத்த விலைச் சந்தைகள் இயங்கிவந்தது. ஆனால் தேவைக்கு ஏற்ற அளவில் இச் சந்தை இல்லாததால் அரசு பல்வேறு திட்டங்கள் வழியாக வேளாண் சந்தைகளைத் தொடங்கியது. வேளாண்மை மற்றும் கால்நடைகளைச் சந்தைப்படுத்துதல் சட்டம் 2017, 2018-19ல் கிராம வேளாண் சந்தை, 2016ல் தேசிய வேளாண்மைச் சந்தை, 2018ல் பிரதான் மந்திரி அன்னதாதா வருவாய்ப் பாதுகாப்பு இயக்கம், 2018ல் வேளாண் ஏற்றுமதி கொள்கை, வேளாண் உற்பத்தி மற்றும் கால்நடை ஒப்பந்த வேளாண் மற்றும் சேவைச் சட்டம் 2018, 2016ல் சந்தைப் படுத்துதலுக்கான உரிமத்தை விலக்கிக் கொண்டது போன்றவை வழியாக வேளாண் சந்தைப் படுத்துதலை மேம்படுத்தியது.

குறைந்த பட்ச ஆதார விலையை 2003ல் மாதிரி வேளாண் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதல் குழு (APMC) என்பதை ஏற்றுக்கொண்டு பல மாநிலங்கள் நடைமுறைப்படுத்தியது. இதனால் ஒப்பந்த மற்றும் நேரடிச் சந்தை படுத்துதலுக்குத் தனியாரை அனுமதித்ததால் இச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு 15 ஆண்டுகள் முடிவடைந்த நிலையிலும் பல மாநிலங்களில் குறைந்த அளவிலே சந்தைப்படுத்துதலில் சீர்திருத்தங்களைக் கொண்டுவர முடிந்தது. பொதுவாக வேளாண்மைச் சந்தையானது திறனற்றதாகவும், வெளிப்படைத் தன்மையற்றதாகவும், முற்றுரிமை உடையதாகவும் இருந்ததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். எனவே ஏப்ரல் 2017ல் வேளாண்மை உற்பத்தி மற்றும் கால்நடைகளைச் சந்தைப் படுத்துதல் (APLM) சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்படி மாநிலம் முழுவதும் ஒத்த நிலையிலான சந்தைகளைப் பிரகடனம் செய்தல், தனியார்ச் சந்தைகளை அமைப்பது. விவசாயி-நுகர்வோர் சந்தைகளை உருவாக்குதல், நேரடிச் சந்தையை ஏற்படுத்துவது, கிடங்குகள் மற்றும் குளிரூட்டப்பட்ட சேமிப்புக் கிடங்குகளைச் சந்தை முற்றமாக அறிவிப்பது, நியாயமான சந்தைக் கட்டணம் மற்றும் முகவர் கட்டண விதிப்பு, மின் சந்தை அமைப்பது போன்றவை உருவாக்கப்பட்டது.

மாதிரி ஒப்பந்த வேளாண் சட்டம் 2018ல் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன்படி விவசாயிகளுக்கும் வாங்குபவருக்கும் இடையே நேரடி ஒப்பந்த முறை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டது. ஏற்கனவே ஒப்புக் கொள்ளப்பட்ட ஒப்பந்த அடிப்படையில் விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை விற்றுப் பணம் பெறலாம் என்பதால் இழப்புகள் தவிர்க்கப்படும். வாங்குபவர்களும் குறிப்பிட்ட காலத்தில் விளைபொருட்களை விவசாயிகளிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். இந்த முறையில் இடைத் தரகர்கள் இல்லாமல் நடைபெறுவதால் விவசாயிகள் லாபம் பெற இயலும் (Pavneet Kauris et al 2018).

கிராமப்புற வேளாண் சந்தைகள் 2018-19ல் 22941 இருந்தன இதில் 22000 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் உதவியுடன் மேம்படுத்தப்பட்டது. 10000 கிராமப்புறச் சந்தைகள் வேளாண் சந்தைப்படுத்துதல் உள்கட்டமைப்பு நிதியினைப் பயன்படுத்தி உள்கட்டமைப்புகளை மேம்படுத்தப்பட்டது. வேளாண் நுட்ப உள்கட்டமைப்பு நிதியின் வழியாக ரூ.200 கோடி மதிப்பீட்டில் ஜூலை 1, 2015ல் தேசிய வேளாண்மைச் சந்தை அமைக்கப்பட்டது. ஏப்ரல் 14, 2016ல் மின்னணு தேசிய வேளாண்மைச் சந்தை தொடங்கப்பட்டது. இதன் முக்கிய நோக்கம் வெளிப்படைத்தன்மையைப் பின்பற்றுவது, உழவர்களின் வருமானத்தை அதிகரிப்பது, அதிக அளவில் வாங்குபவர்களை அந்த அந்த மாநிலத்திற்கு உள்ளேயும், வெளியேயும் உருவாக்கித்தருவது போன்றவையாகும். மின்னணு தேசிய வேளாண்மைச் சந்தையானது மூன்று முக்கிய முன் தேவைகளைக் கொண்டது. இதன்படி 1) மாநிலம் முழுவதும் வர்த்தகம் செய்ய ஒரே உரிமத்தை உறுதிசெய்வது, 2) மாநிலம் முழுவதும் ஒரே முனையத்தில் கட்டணம் விதிப்பது அல்லது மாநிலம் முழுக்க கட்டணமற்ற சந்தையினை அளிப்பது. 3) மின்னணு முறையில் ஏலம் நடத்துவது போன்றவையாகும். இத் திட்டத்தின்படி நாடுமுழுவதும் 585 வேளாண் உற்பத்தி மற்றும் சந்தைப் படுத்துதல் குழுக்கள் இணைக்கப்பட்டது. இதனால் 1.66 கோடி விவசாயிகள் பயனடைந்தனர். அதே சமயம் மின்னணு தேசிய வேளாண்மைச் சந்தையில் கட்டணமற்ற முறை பின்பற்றப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றது, விவசாயிகளுக்குத் தகுந்த விலை கிடைக்கவில்லை, விவசாயிகளுக்குப் பணம் செலுத்த மின்னணு பரிமாற்றம்; பயன்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் காணப்படுகிறது.

மோடி தலைமையிலான ஆட்சியின் முதல் கால காட்டத்தில் 2014ல் வறட்சி ஏற்பட்டது, அடுத்து 2015ல் கடுமையான வறட்சி நிலவியது இதனால் உணவு தானிய உற்பத்தி 13.03 மில்லியன் மெட்ரிக் டன், 0.5 மில்லியன் மெட்ரிக் டன் என்ற அளவு குறைந்தது. பருப்பு உற்பத்தி 2.1 மில்லியன் மெட்ரிக் டன், 0.8 மில்லியன் மெட்ரிக் டன் எனக் குறைந்தது. இதனால் உணவுப் பணவீக்கம் அதிகரித்தது. பருப்பிற்கான நுகர்வோர் விலையானது 2016ல் முதல் பாதியில் 33 விழுக்காடு அதிகரித்தது. உணவுப் பணவீக்கத்தில் குறிப்பாகப் பருப்பு விலை உயர்வினைக் கட்டுப்படுத்த அதன் உற்பத்தியை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி பருப்பிற்கானக் குறைந்த பட்ச ஆதரவு விலையினை அதிகரித்தது, பருப்பு இறக்குமதி செய்தது இதனால் விலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அடுத்தடுத்து வந்த ஆண்டுகளில் பருவமழை நன்றாக இருந்ததால் பருப்பு உற்பத்தி அதிகரித்தது. இந்த நிகழ்வுகளால் பருப்பு விலையானது 2017-18ல் கடுமையாக வீழ்ச்சியடைந்தது. இதுபோன்ற நிலையே எண்ணெய்வித்திலும் ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்பிற்கு உள்ளானார்கள். இதனைப் போக்க அரசு பிரதான் மந்திரி அன்னதாதா வருவாய்ப் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்பட்டது. இத் திட்டத்தின் முக்கிய நோக்கம் விவசாயிகளின் வேளாண் விளைபொருட்களுக்குக் கட்டுபடியாகும் விலையினை உறுதி செய்வதாகும். இத்திட்டத்தின் மூன்று உபதிட்டங்கள் இடம் பெற்றிருந்தது. 1) விலை ஆதரவு திட்டம்: இதன்படி ஒன்றிய அரசு இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் முகவராகச் செயல்பட்டுப் பருப்பு, எண்ணெய் வித்துக்கள், கொப்பரை போன்றவற்றுக்குத் தகுந்த விலையினை அளித்தது. இந்திய உணவுக் கழகத்தை இதில் ஈடுபடச் செய்தது. 2) விலைப் பற்றாக்குறையைச் செலுத்தும் திட்டம் (PDPS): இதன்படி இனம்காணப்பட்ட வேளாண் சந்தையில் பதியப்பட்ட விவசாயிகளுக்குத் தங்களின் விளைபொருட்கள் விற்பனையில் குறைந்த பட்ச ஆதார விலைக்கும் உண்மையில் விற்கப்படும் விலைக்கும் உள்ள வேறுபாட்டு விலைப் பற்றாக்குறையினை அறிந்து விவசாயிகளுக்கு நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கிற்குப் பணம் செலுத்துவதாகும். மேலும் வெளிப்படையான ஏலச் சந்தையினை விவசாயிகளுக்கு உருவாக்கித் தருவதாகும். 3) தனியார்த் துறை அனுமதி: கடந்த கால அனுபவத்தின் அடிப்படையில் அரசானது தனியார்த் துறையினை வேளாண் விளைபொருட்கள் கொள்முதல் செய்ய முன்னோட்ட அடிப்படையில் நடைமுறைப்படுத்தியது. ஆனால் மாநில அளவில் இதற்கான தகுந்த வரவேற்பு இல்லை. பிரதான் மந்திரி அன்னதாதா வருவாய்ப் பாதுகாப்பு இயக்கமானது சிறு, குறு விவசாயிகளிடையே சென்றடையாததால் இத் திட்டம் வெற்றிபெற இயலவில்லை.

2014ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் வேளாண் விளைபொருட்களுக்கு அதன் செலவுடன் 50 விழுக்காடு கூடுதலாக விலை அளிப்பதாக அறிவித்தது. இதன்படி 2018-19ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் குறைந்த பட்ச ஆதரவு விலையை A2 + FL என்ற அடிப்படையில் விலை தீர்மானம் செய்து அத்துடன் 50 விழுக்காடு கூடுதலாக சேர்த்து குறைந்த பட்ச ஆதரவு விலை அறிவிக்கப்பட்டது. ஆனால் C2 என்ற செலவினை கணக்கில் கொள்ளாமல் இவ்விலை அளிக்கப்பட்டதால் A2 + FL வானது C2 வைவிட 38 விழுக்காடு குறைவாக இருந்தது. அதே சமயம் இவ் விலை அறிவிக்கப்பட்டபோது பன்னாட்டுச் சந்தையில் வேளாண் விளைபொருட்களின் விலை வீழ்ச்சியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதுபோல் இவ் குறைந்தபட்ச விலை அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்கவில்லை காரணம் அரசு கொள்முதல் செய்யப்படும் கொள்முதல் மையங்களில் மட்டுமே இது பின்பற்றப்பட்டது. மேலும் இவ்விலை அறிவிக்கப்பட்டபோது எற்கனவே நடப்பில் இருந்த குறைந்த பட்ச ஆதரவு விலையைனைத்தாண்டி எந்த பெரிய மாற்றமும் எற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறைந்த பட்ச ஆதரவு விலையானது மொத்த வேளாண் விளைபொருட்களின் மதிப்பில் 6 விழுக்காடு மதிப்புடையவற்றுக்கு மட்டுமே பயனளிப்பதாக இருந்தது. இக் குறைந்த பட்ச ஆதரவு விலையானது மிகக்குறைவான விவசாயிகளுக்கு மட்டுமே பலனை அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரங்களைத் திறம்படப் பயன்படுத்தி வேளாண் வருமானத்தை அதிகரிக்க அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டது. இந்தியாவில் பாதிக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் இயற்கையைச் சார்த்திருக்கிறது. நீர்ப்பாசனம் அனைத்து விவசாயிகளின் நிலங்களுக்கும் கிடைக்கப்பெற வேண்டும் என்பதற்காகப் பிரதான் மந்திரி கிரிஷ் சிஞ்சாய் யோஜனா என்ற திட்டம் 2015ல் அறிமுகப்படுத்தப்பட்டது. 6 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்களுக்குச் செயற்கை நீர்ப்பாசன வசதி, 5 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலத்திற்குச் சொட்டுநீர் பாசனம், விவசாயப் பண்ணைகள் அமைப்பது, போன்றவற்றை இத்திட்டம் நிறைவேற்ற முனைந்தது. இதன்படி 99 முதன்மையான நீர்ப்பாசன திட்டங்களை இனம்கண்டு நீர்ப்பாசன வசதியை 2019க்கு முன்பு மேம்படுத்தத் திட்டம் வகுக்கப்பட்டது ஆனால் பிப்ரவரி 2019ல் 4 திட்டங்கள் மட்டுமே முடிவுறும் தறுவாயில் இருந்தது, 51.4 விழுக்காடு திட்டங்கள் டிசம்பர் 2019ல் முடிவுபெறும் தறுவாயில் இருந்தது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரண்டாம் கட்ட ஆட்சிக் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட மாற்றியமைக்கப்பட்ட தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில் இருந்ததை பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா (PMFBY) என்று பெயர் மாற்றம் செய்து 2016ல் இவ் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது. இப் புதிய திட்டம் விவசாயிகள் செலுத்தவேண்டியப் பிராமியத்தினை குறைத்துச் செலுத்த வழிவகுத்தது மட்டுமல்ல சில கட்டுப்பாடுகளையும் விலக்கிக் கொண்டது. 2015-16ல் இத் திட்டமானது மொத்த விளைநிலப் பரப்பில் 22 விழுக்காடு நிலங்களை உள்ளடக்கியிருந்தது, 2017-18ல் இது 29 விழுக்காடாகவும், 2018-19ல் 29.33 விழுக்காடாகவும் அதிகரித்தது. இதனால் 1.56 விவசாயிகள் பயனடைந்தனர். இக் காப்பீட்டில் பயனடைய ஆதார் இணைப்பு கட்டாயம் என்பதால் முழு அளவிற்கு விவசாயிகளுக்குப் பலன் சென்றடையவில்லை. நெசவாளர்கள் இத்திட்டத்தின் வழியாகக் கடன்பெற வசதி ஏற்படுத்தித் தரப்பட்டது ஆனால் இதில் பல முறைகேடுகள் காணப்பட்டது, மாநில அரசு கால வரையறைக்குள் விவரங்களைச் சமர்ப்பிக்கவில்லை என்பதால் காப்பீட்டுத் தொகை பெறுவதில் கால தாமதம் ஏற்பட்டது. காப்பீட்டு நிறுவனங்கள் தாமதப்படுத்திக் காப்பீட்டுத் தொகையை வழங்கியது. காப்பீட்டு நிறுவனங்கள் அதிகமாக இந்த திட்டத்தால் லாபம் அடைந்தது. தோட்டக்கலை மற்றும் அதனைச் சார்ந்த துறைகளுக்கு இந்த காப்பீடு நடைமுறைப்படுத்தவில்லை. எனவே அக்டோபர் 1, 2018ல் அரசு இந்த திட்டத்தில் சில மாறுதல்களைச் செய்து (தாமதமாக வழங்கும் காப்பீட்டுத் தொகைக்கு அதற்கான வட்டியையும் சேர்த்து வழங்குதல், சராசரி நகர்விற்குக் கடந்த 7 ஆண்டுகளில் 5 ஆண்டுகளை எடுத்துக்கொள்வது, விவசாயிகளுக்குக் காப்பீடு செய்ய மேலும் கால அவகாசம் அளிப்பது, அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளையும் கணக்கில் கொள்வது) நடைமுறைப்படுத்தியது. ஆனால் திறனற்ற நடைமுறை, வெளிப்படைத் தன்மையற்ற நிலை, தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டாதது போன்ற பின்னடைவுகள் இத் திட்டத்தில் காணப்பட்டது.

இந்தியாவில் குறு, சிறு விவசாயிகள் (2 ஹெக்டேர் நிலத்திற்குக் கீழ் வைத்திருப்பவர்கள்) 2015-16ஆம் ஆண்டு தரவுகளின்படி மொத்த விவசாயிகளில் 86 விழுக்காடு உள்ளனர். இவர்கள் தங்களின் வேளாண் பணியினை மேற்கொள்ள முறைசாராக் கடன்களை அதிமாகப் பெறுவதால் கடன் தொல்லைக்கு ஆளாகி தற்கொலை செய்துகொள்கின்றனர். NCRBயின் தரவுகளின்படி 1995முதல் 2016ஆம் ஆண்டுவரை 3 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 2012-13ஆம் ஆண்டு தரவுகளின்படி பெரிய விவசாயிகளின் குடும்ப வருமானம் சிறு விவசாயிகளின் குடும்ப வருமானத்தைவிட 5.6 மடங்கு அதிமாக உள்ளது. பெரிய விவசாயிகள் ஒரு ஹெக்டேருக்கு சராசரியாக ரூ.46307 வருவாய் ஈட்டுகின்றனர் ஆனால் சிறு விவசாயிகள் ரூ.44345 மட்டுமே ஈட்டுகின்றனர். விவசாயிகளின் மொத்த வருமானத்தில் 47.9 விழுக்காடு மட்டுமே வேளாண்மை சாகுபடியினால் கிடைக்கிறது (Suijit Mistra et al 2021). இயற்கைச் சீற்றங்கள், காலநிலை மாறுபாடு போன்றவற்றால் சிறு, குறு விவசாயிகள் அதிக இழப்பினை எதிர்கொள்கின்றனர். இதன்பொருட்டு ஒன்றி அரசானது பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தை 2019ல் நடைமுறைப்படுத்தி குறு, சிறு விவசாயிகளுக்கு எந்த விதக் கட்டுப்பாடுமின்றி ஆண்டுக்கு ரூ.6000 ரொக்கத்தை அவர்களின் வங்கிக் கணக்கில் மூன்று தவணைகளில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது. 2019-20ல் இத் திட்டத்திற்கு ரூ.75000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு முதல் தவணையினை ஏப்ரல் 1, 2019ல் விவசாயிகளின் கணக்கில் செலுத்தப்பட்டது. மார்ச் 7, 2019ன் படி 2.2 கோடி விவசாயிகள் இதனால் பயனடைந்தனர். இத்திட்டமானது நில உடைமையாளர்களுக்கும், பயிரிடப்படக்கூடிய நிலத்திற்கு மட்டுமே பொருந்தக்கூடியதாகும். அரசு ஊதியம் பெறுபவர்கள், குத்தகை தாரர்கள், நிலமற்ற விவசாயிகள் இத்திட்டத்தைப் பயன்படுத்தமுடியாது. மேம்படுத்தப்படாத நில ஆவணங்கள், விவசாயிகளிடையே வங்கிப் பழக்கமின்மை போன்ற காரணங்களால் இத்திட்டம் முழு அளவிற்கு வெற்றிபெறவில்லை. அத்திமான அளவிற்கு இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படுவதால் (ஜி.டி.பியில் 0.4 விழுக்காடு) அரசின் நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கக் காரணமாக உள்ளது.

வேளாண்மை மற்றும் அதனைச் சார்ந்த துறைகளின் உள்கட்டமைப்பினை மேம்படுத்தி வேளாண் தொழில் முனைவோர்களை ஈடுபடச் செய்யவும், வேளாண் வணிகத்திற்கு நிதி உதவியினைச் செய்யவும், ராஷ்டிரிய கிரிஷ் விகாஸ் யோஜனா திட்டத்தை 2018-19ல் தொடங்கப்பட்டது. இதுபோன்று வேளாண்மை இயந்திரமயமாக்கலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. வேளாண் கழிவுகளால் பஞ்சாப், ஹரியானா, உத்திரப் பிரதேசம் மாநிலங்களில் வேளாண் கழிவுகளை எரிப்பதால் டெல்லியில் சுற்றுச் சூழல் பாதிப்படைகிறது எனவே இதனைக் கையாள்வதற்கு நிதி உதவி மற்றும் மானியத்தில் இயந்திரங்கள், கருவிகள் வழங்கும் திட்டமும், வாடகைக்கு இயந்திரங்கள் அளிக்கும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டது. விவசாயிகளிடையே சுற்றுப்புறச் சூழல் மாசடைவதை அறியவும் மாற்று நடைமுறையினைக் கடைப்பிடிக்கவும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. உள்நாட்டுக் கால்நடைகளைப் பாதுகாக்கவும் அவற்றை அதிகரிக்கவும் ராஷ்டிரிய கோகுல் திட்டம் 2014ல் தொடங்கப்பட்டது. பிரதான மந்திரி கிசான் சம்பதா யோஜனா என்ற திட்டம் ரூ.6000 கோடி செலவில் 2016-2020க்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன்படி உணவுப் பூங்கா அமைத்தல், முன்னோக்கி-பின்னோக்கிய தொடர்புகளை உருவாக்குவது, உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டுக்கு உள்கட்டமைப்பை அமைப்பது, சங்கிலித் தொடர் குளிர்பதனக் கிடங்கு மற்றும் மதிப்புக் கூட்டல் கட்டமைப்பை ஏற்படுத்துதல், வேளாண்-செயல்பாட்டுத் தொகுதிகளுக்குக் கட்டமைப்பை உருவாக்குதல் போன்றவை வலுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

Source: Pulapre Balakrishnan 2022.

மோடி பிரதமராகப் பதவி ஏற்றபோது நிதிப் பற்றாக்குறையானது 2013-14ல் 4.4 விழுக்காடாக இருந்தது இது அடுத்து வந்த ஆண்டுகளில் குறைந்து 3.4 விழுக்காடாக 2018-19ல் இருந்தது. பணவீக்கம் பொருட்களின் விலையினைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பெட்ரோல் விலை, உணவுப் பொருட்களின் விலைகள் குறைந்ததால் பணவீக்கமானது 2013-14ல் 9.5 விழுக்காடாக இருந்தது 2018-19ல் 3.4 விழுக்காடாகக் குறைந்தது (Pulapre Balakrishnan 2022). இதில் அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் பணவீக்கம் குறையவில்லை என்றும் எரிபொருள் (பெட்ரோல்-டீசல்) விலை பன்னாட்டு அளவில் குறைவது என்பது பணக் கொள்கைக்கு அப்பாற்பட்ட புறக் காரணியாகும் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. பொருளாதார வளர்ச்சி 2013-14லிருந்து 2016-17 வரை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும் 2017-18ல் 1.3 விழுக்காட்டுப் புள்ளிகள் குறைந்தது. இது மேலும் 2018-19ல் 0.9 விழுக்காட்டுப் புள்ளிகள் குறைந்தது. இதற்கு முக்கியக் காரணம் பணமதிப்பிழப்பு நடைமுறைப்படுத்தப்பட்டதும், சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்பட்டதுமாகும். இதன் விளைவு வேலையின்மை அதிகரிக்கத் தொடங்கியது (வேலையின்மை 2015-16ல் 5 விழுக்காடும், 2017-18ல் 6.1 விழுக்காடும், 2018-19ல் 5.8 விழுக்காடுமாக இருந்தது). இத்துடன் தொழிலாளர் பங்கேற்பு ஆற்றலும் குறையத் தொடங்கியது. மோடி தொன்மைப் பொருளியல் அறிஞர்கள் கடைப்பிடித்த “குறைந்த பட்ச அரசு” என்ற உத்தியைப் பின்பற்றி பன்னாட்டு நிறுவனங்கள், பெருநிறுவனங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். 2008ல் ஏற்பட்ட உலகளாவிய நிதிச் சிக்கலிருந்து பல நாடுகள் முழுமையாக இயல்பு நிலைக்குத் திரும்பாததால் இந்தியாவின் அயல்நாட்டு வர்த்தகம் பெருமளவிற்குப் பாதிக்கப்பட்டிருந்தது. மோடி பதவி ஏற்ற அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு வேளாண்மையின் வளர்ச்சியானது பூஜ்யத்திற்குக் கீழ் சென்றது. வெளிநாட்டு முதலீடு வரத்து குறைந்தது, தேவை குறைந்தது. உற்பத்தியாளர்கள் பணமதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரியால் பாதிக்கப்பட்டு உற்பத்தியை நிறுத்தி இருந்தனர்.

வேளாண் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது மோடியின் முதல் கட்ட ஆட்சிக் காலத்தில் சராசரியாக 2.9 விழுக்காடு வளர்ச்சியடைந்தது இது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அடைந்ததைவிட (4.3 விழுக்காடு) குறைவாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய வேளாண் துறையின் செயல்பாடுகள் ஏற்ற இறக்கங்களுடன் காணப்படுவதற்கு முக்கியக் காரணம், இந்திய வேளாண்மை அதிக அளவில் பருவமழையினை சார்ந்திருப்பதாகும். 49 விழுக்காடு விளைநிலங்கள் மட்டுமே நீர்ப்பாசன வசதியைப் பெற்றுள்ளது. பருவமழையானது 2002ல் -19.2 விழுக்காடு குறைவான மழையும், 2004ல் -13.8 விழுக்காடும், 2009ல் -21.8 விழுக்காடும், 2014ல் -12 விழுக்காடும், 2015ல் 14 விழுக்காடு குறைவாக மழையினைப் பெற்றுள்ளது. இதனால் உணவு தானிய உற்பத்தியானது இக்கால கட்டங்களில் குறைந்திருந்தது. இந்தியச் சுதந்திரம் அடைந்து தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு ஆண்டுகள் வறட்சியினை 1965 மற்றும் 1966லும், 1986 மற்றும் 1987லும், 2014 மற்றும் 2015லும் எதிர் கொண்டுள்ளது. மோடி ஆட்சியில் இத்தகைய தொடர் இரண்டு ஆண்டுகள் வறட்சியினை சந்தித்தால் வேளாண்மை பாதிக்கப்பட்டது. இதைத் தவிர உள்நாட்டில் விலையில் எற்றத் தாழ்வு நிலவியதும், உலகளாவிய அளவில் வேளாண் விளைபொருட்களின் விலை வீழ்ச்சி அடைந்திருந்தது. இத்துடன் மின்னணு தேசிய வேளாண்மை சந்தை (e-NAM) மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் (Farmer Producer Company) போன்றவற்றால் வேளாண்மையின் லாபம் பாதிக்கப்பட்டது. அரசியல் கட்சிகளின் உறுதிமொழிகள் நிறைவேற்றாமல் இருந்தது, பண மதிப்பிழப்பு நடவடிக்கையினால் நீர்மமாகப் பணம் பயன்படுத்த முடியாமல் போனது போன்றவை வேளாண்மை வளர்ச்சிக்கான தடைகளாக இருந்தது. இதன் காரணமாக மோடி ஆட்சியின் முதல் கால கட்டத்தில் வேளாண் வளர்ச்சி குறைந்ததற்கான முக்கியக் காரணமாக அறியப்படுகிறது.

அசோகா குலாட்டி, ஸ்வேதா சைனி மற்றும் ரஞ்சனா ராய் (2021) என்பவர்களின் ஆய்வுப்படி A2 செலவை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால் நெல்லின் லாப விளிம்பானது (விழுக்காட்டில்) 2012-13 108 ஆக இருந்தது 2015-16ல் 90 ஆகக் குறைந்துள்ளது, கோதுமை 183லிருந்து 155 ஆகக் குறைந்துள்ளது, கரும்பு 183லிருந்து 153ஆகக் குறைந்துள்ளது, சோளம் 101லிருந்து 79ஆகக் குறைந்துள்ளது. பருப்பு வகைகள் மட்டும் அதிகரித்துள்ளது. இச்செலவுடன் சொந்த உழைப்பிற்கான பணமதிப்பு, சொந்த நிலத்தின் வாடகை மதிப்பு, சொந்த மூலதனத்திற்கான வட்டியும் சேர்த்துப் பார்த்தால் லாப விளிம்பானது எதிர்மறையில் காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ரிச்சா குமாரின் (2019) ஆய்வின்படி வேளாண் பயிர்களில் புதிய பூச்சிகளின் தாக்குதல் ஏற்படுவது, அதிக களைகள் உருவாகுவது, மண்ணின் வளத் தன்மை குறைந்து வருவது, ரசாயன உரத்திற்கு மாற்று நடைமுறையில் பயன்படுத்த முன்வராத நிலை, இடுபொருட்களின் விலைகள் கணிசமாக அதிகரித்திருப்பது, மானியம் மற்றும் கடன் நிவாரணம் தொடர்ந்து அதிகரித்திருப்பது போன்றவை அன்மைக் காலங்களில் வேளாண்மையில் காணப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார் (Richa Kumar 2019).

சுக்பால் சிங்கின் (2013) ஆய்வுப்படி 2003ஆம் ஆண்டு தரவுகளின்படி 40 விழுக்காடு இந்திய விவசாயிகள் வேளாண் தொழிலை விருப்பமின்றி தொடர்வதாகவும், இதற்கு முக்கியக் காரணம் குறைவான லாபம், அதிகமான இடர், வேளாண் தொழிலில் ஈடுபடுவதால் சமூகத்தில் குறைத்து மதிப்பீடு செய்யப்படுவது போன்றவை என்று குறிப்பிட்டுள்ளார். இவர்கள் நல்வாய்ப்புகளை எதிர்நோக்கியுள்ளனர், அவ் வாய்புகள் அமையப்பெற்றால் வேளாண்மையிலிருந்து வெளியேறத் தயாராக உள்ளனர் என்கிறார். மற்றொரு வகையில் வேளாண்-வேளாண் சாரா வருமானத்தின் இடைவெளியானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று இவ் ஆய்வு குறிப்பிடுகிறது. 1980களின் இடையில் இவ் இடைவெளியானது 1:3 என்று இருந்தது, 1990களின் மத்தியில் இது 1:4.8 என அதிகரித்தது, 2011-12ல் இது 1:3.12 என்று மாற்றமடைந்தது. வேளாண்மையில் வருமானம் இரு மடங்காக அதிகரிக்க வேண்டுமென்றால் 20 ஆண்டுகளுக்கு மேல் எடுத்துக்கொள்ளும் என்று புள்ளிவிவர ஆதாரங்களுடன் இவ் ஆய்வு தெரிவிக்கிறது (Sukhpal Singh 2018 2018).

இந்தியா இத்துவரையில்லாத காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டுள்ளது, விவசாயிகள் லாப விளிம்புநிலை குறைந்து வருவது என்பது வேளாண்மையின் இந்திய தற்போது எதிர்கொள்ளும் மிகப் பெரிய அறைகூவலாக உள்ளது. இந்தியாவில் சராசரி சாகுபடிப் பரப்பானது தொடர்ந்து குறைந்து வருகிறது இதற்கு முக்கியக் காரணம் குடும்ப அமைப்பின் பிரிகையால் நிலம் துண்டாடப் படுவதாகும். இந்த நிலை தொடர்ந்தால் விவசாய வருமானம் மேலும் குறையும். தற்போது அதிகரித்திருக்கும் வேளாண் உற்பத்தி போதுமான அளவில் இல்லை. இதனை மேலும் அதிகரிக்க அரசு அடிப்படையாக வேளாண் துறையுடன் தொடர்புடைய உள்கட்டமைப்பினை உருவாக்க வேண்டும், காலநிலை மற்றும் பருவநிலை மாற்றம் போன்றவற்றை உணர்ந்து இடுபொருட்களை மாற்றிப் பயன்படுத்தவேண்டும். இந்திய விவசாயிகள் வேளாண் செயல்பாடுகளில் எவ்வித திறன் மேம்பாட்டையும் பெற்றிருக்கவில்லை என்பதால் அவர்களின் திறன் மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும்.

-பேரா.பு.அன்பழகன்

இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @75 : தொடர் – 4 லால் பகதூர் சாஸ்திரியும் உணவு பற்றாக்குறையும் (1964-66) – பேரா.பு.அன்பழகன்

இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @75 : தொடர் – 4 லால் பகதூர் சாஸ்திரியும் உணவு பற்றாக்குறையும் (1964-66) – பேரா.பு.அன்பழகன்




லால் பகதூர் சாஸ்திரி நேரு தலைமையிலான அமைச்சரவையில் 1951-1956ல் ரயில்வே அமைச்சராகவும், 1957முதல் நாட்டின் முதல் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு அமைச்சராகவும் பின்பு வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராகவும் இருந்தார். 1961ல் உள்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். நேரு மறைந்த பிறகு லால் பகதூர் சாஸ்திரி 9.6.1964ல் இந்தியாவின் இரண்டாவது பிரதம மந்திரியானார். ஜனவரி 11, 1966வரை 19 மாதங்கள் இவர் ஆட்சியிலிருந்தார். இவரை மறைக்கப்பட்ட பிரமதர் என்று அழைப்பதுண்டு. சாஸ்திரி பிரதம அமைச்சராகப் பொறுப்பேற்றபோது, அரசியல் ரீதியாக இந்தி எதிர்ப்பு, பஞ்சாப் தனிமாநிலக் கோரிக்கை, கோவாவை மகாராஷ்டிரா மாநிலத்துடன் இணைப்பது போன்றவை அறைகூவல்களாக இருந்தது. பொருளாதார நிலையில், சில ஆண்டுகளாகப் பொருளாதாரத் தேக்க நிலை, தொழில் வளர்ச்சியில் சரிவு, செலுத்து நிலை இருப்பில் (Balance of Payment) மோசமான நிலை, கடுமையான உணவு பற்றாக்குறை போன்றவை முதன்மையான பிரச்சனைகளாக இருந்தது. பல மாநிலங்களில் வறட்சி நிலவியதால் உணவுப் பொருள் உற்பத்தி குறைந்தது. 1939-1952 காலகட்டங்களில் உணவு பற்றாக்குறை காணப்பட்டது. 1953-54 முதல் 1958-59வரையிலான காலகட்டங்களில் உணவுப் பொருட்களின் விளைச்சல் அதிகமாக இருந்ததால் நிலைமை சீராக இருந்தது. அதற்கடுத்த ஆண்டுகளில் தேக்கமான நிலையே நீடித்தது. 1962-63ல் சாதகமற்ற காலநிலையினாலும், வெள்ளத்தாலும் கோதுமை, அரிசி பற்றாக்குறை நிலவியது. இக்காலத்தில் கோதுமை உற்பத்தி 10.8 மில்லியன் டன்னாக இருந்தது (முந்தைய ஆண்டில் 12.0 மில்லியன் டன்னாக இருந்தது). செப்டம்பர் 1963க்கு பின்பு கோதுமை விளைச்சல் அதிகரித்ததாலும், உத்திரப் பிரதேசம், பஞ்சாப், பீகார், ராஜஸ்தான், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் அதிக அளவிற்கு உணவுப் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டது. 1962-63ல் நெல் மற்றும் இதர தானியங்களின் விளைச்சல் 31.9 மில்லியன் டன்னாக இருந்தது (முந்தைய ஆண்டில் 34.8 மில்லியன் டன்னாக இருந்தது). இதனால் நியயாவிலைக் கடைகள் மூலமாக 1962ல் 1 மில்லியன் டன், 1963ல் 1.1 மில்லியன் டன், 1964ல் 1.3 மில்லியன் டன் உணவுப் பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. அதே சமயம் 1962-63ல் பொதுச் சந்தையில் உணவுப் பொருட்களின் விலை 33 விழுக்காடு அதிகரித்திருந்தது. இதனிடையே இந்திய அரசு பாக்கிஸ்தான், கம்போடியா, தாய்லாந்து நாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி செய்தது. சந்தையில் அரிசி விலை அதிகரித்திருந்தது பொருளாதார அளவில் மட்டுமல்ல அரசியல் மட்டத்திலும் முக்கிய பிரச்சனையாக உருவெடுத்தது. எனவே அரசு துரிதமாக உணவுப் பதுக்களைக் கடுமையாகக் கையாண்டு தடுத்தது. அதிக உணவு உற்பத்தி செய்ய அடுத்த போத்திற்கு (season) வழிவகை செய்தது. கோதுமையை, ஆஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்ய அன்னிய செலாவணியை ஒதுக்கியது, விவசாயிகளை நேரடியாகச் சந்தித்தது அவர்களை ஊக்குவித்து ராபி போகத்திற்கு அதிக பயிர் செய்யும்படி செய்தது. இதற்கிடையே தென்னிந்திய மாநிலங்களில் அரிசி பற்றாக்குறை கடுமையாக இருந்தது. அந்நியச் செலாவணி கையிருப்பும் குறைந்திருந்தது. எனவே சில நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி நெல் உற்பத்தியினைப் பெருக்கவும், அதற்கானச் செலாவணியினை குறிப்பிட்ட கால இடைவெளியில் செலுத்தவும் வழிவகை செய்யப்பட்டது. மேலும் இச்சிக்கலைப் போக்கக் கம்பு, கேழ்வரகு, சோளம், திணை போன்ற உணவுப் பொருட்கள் மாற்றாக வழங்கப்பட்டன. 1965ல் இந்த நிலைமையே நீடித்தது. 1966-67ல் பீகாரில் பஞ்சம் உருவெடுத்தது. இதனால் 60 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டனர். இதனைப் போக்க அமெரிக்காவிலிருந்து கோதுமை இறக்குமதி செய்து சமாளித்தது (Rakesh Ankit 2020). 1965-1966ல் இந்தியா, அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டன் கோதுமையினைப் பொதுக் கடன் திட்டம் (பி.எல்.480) மூலம் இறக்குமதி செய்தது. இதனால் 40 மில்லியன் மக்களின் பசி போக்கப்பட்டது. அடுத்தடுத்த ஆண்டுகளில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டதால் இந்தியா உணவு இறக்குமதி செய்தது இதனால் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்தது. இதன் எதிரொலியாக 1966ல் இந்தியாவின் பண மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக ஒரு டாலருக்கான பணமாற்று மதிப்பினை ரூ.4.76லிருந்து ரூ.7.50 ஆகக் மாற்றப்பட்டது. இதனால் கடும் எதிர்ப்புகளை அரசு எதிர்கொண்டது (Ramachandra Guha 2017).

உணவுப் பற்றாக்குறை கடுமையாக இருந்ததால் பொதுமக்களுக்கு உணவுத் தேவையினைக் குறைக்க வாரத்தில் ஒருநாள் உண்ணா நிலையில் இருக்க வேண்டும் என்று சாஸ்திரி வேண்டுகோள் வைத்தார். இதற்கான பலன் நாடுமுழுவதும் காணப்பட்டது. இதனை “சாஸ்திரி விரதம்” என்று அழைக்கப்பட்டது. தீவிர உணவு பற்றாக்குறையினைப் போக்கத் தினமும் ஒருவேளை உணவினை தவிர்க்கும்படியும் கோரிக்கை வைத்தார். இதனால் உணவின்றி தவித்த மக்களுக்கு உணவு அளிக்கப்பட்டது. வேளாண் உற்பத்தியினை அதிகரிக்கவும் இறக்குமதியினைக் குறைக்கவும் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் விதமாக “ஜெய் கிசான்-ஜெய் ஜவான்” என்ற முழுக்கதை முன்னெடுத்தார்.

உணவு பற்றாக்குறையினைப் போக்க அரசு உணவு கூட்டுறவுச் சட்டத்தை நிறைவேற்றியும், விவசாயிகளை அதிக அளவிற்கு உற்பத்தி செய்யவும் ஊக்குவித்தது. விவசாயக் கடன் வசதியினை உருவாக்கியும், ரசாயன உரம் பயன்படுத்தவும், நீர்ப்பாசன வசதி மற்றும் விவசாய ஆலோசனைகளையும் விவசாயிகளுக்கு அரசு வழங்கியது. விளைச்சல் உயர வாய்ப்பு இருந்த அதேசமயம் கட்ச் முதல் காஷ்மீர் வரை கோடைக்கால தாக்கத்தினால் 1965ல் உணவுப் பஞ்சம் ஏற்பட்டு விலைகள் அதிகரித்தது. ஒட்டுமொத்தமாகவே சாஸ்திரி பிரதம அமைச்சரான காலத்தில் உணவுப் பஞ்சம் பெருமளவிற்கு இருந்தது. இதற்காக நீண்டகால தீர்வாகப் பசுமைப் புரட்சி வித்திடப்பட்டது. நேருவால் கடைப்பிடிக்கப்பட்ட தொழில் சார்ந்த அணுகுமுறையில் மாற்றப்பட்டு சாஸ்திரி காலத்தில் வேளாண் சார் அணுகுமுறை பின்பற்றப்பட்டது. சாஸ்திரி வேளாண்மைக்காக கடைப்பிடிக்கப்பட்ட கொள்கைகளையும் அணுகுமுறைகளையும் தன்னுடைய அமைச்சரவையினைச் சார்ந்த டி.டி. கிருஷ்ணமாச்சாரி, நாடாளுமன்ற கம்யூனிஸ்ட் உறுப்பினர்களான ஹரின் முகர்ஜி மற்றும் பூபேஷ் ஆகியோரால் கடும் விமர்சனத்துக்கு ஆளானது.

பஞ்சத்தால் இந்தியாவின் உணவுத் தொகுப்பின் இருப்பு தீர்ந்திருந்தது. உணவு உற்பத்தியில் உபரியாக இருந்த சில மாநிலங்கள் இந்த நிலைமையினை தீர்க்க ஒத்துழைப்பை அளிக்கவில்லை. இத்துடன் இந்தியா-பாக்கிஸ்தான் போரைக் காரணம் காட்டி பி.எல் 480 ஒப்பந்தம் மூலம் அமெரிக்கா இந்தியாவிற்கு உணவுக்காக அளித்த அனைத்து மானியத்தையும் நிறுத்திவிட்டது. சாஸ்திரி அனைத்து மாநில முதல்வர்களுக்கும், இடைத்தரகர்களையும், உணவு பதுக்கலையும் கட்டுப்படுத்த ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்று கடிதம் எழுதினார். எதிர் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டி, இது ஒரு தேசியப் பிரச்சனை என்றும் இதனை அரசியலாக்க வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்தார். இதன் அடிப்படையில் இரண்டு முக்கிய முடிவுகளை மேற்கொண்டார். 1) 1 மில்லின் மக்கள்தொகைக்கு அதிகமாக இருந்த 6 நகரங்களில் விகிதாச்சார உணவு விநியோகமும், முறைசாரா உணவு விநியோகத்தை 1 லட்சம் மக்கள்தொகைக்கு மேல் உள்ள 105 நகரங்களில் நடைமுறைப்படுத்தினார். 2) உணவுப் பொருட்களை அதிக விலைக்கு விற்ற வியாபாரிகள் மீது வழக்குத் தொடுத்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது (Ramachandra Guha 2017). அரசு வரையறுக்கப்பட்ட நிலையில் உணவு பகிர்மான முறையினை நடைமுறைப்படுத்தியது. இது இந்தியாவில் உள்ள 7 முக்கிய நகரங்களில் மட்டுமே சாத்தியப்பட்டது. 1965ல் மாநில உணவு வாணிபக் கழகம் தோற்றுவிக்கப்பட்டது. இதன்படி மாநில அரசு நேரடியாகவே வேளாண் உணவுப் பொருட்களை வெளிச் சந்தையில் கொள்முதல் செய்தது. ஆனால் இது போதுமான அளவிற்கு வெற்றியினை பெறவில்லை. எனவே நீண்டகால அடிப்படையில் உணவு உற்பத்தியைப் பெருக்கவும், சுயச்சார்பினை அடையவும் கொள்கைகள் வகுக்கப்பட்டு பசுமைப் புரட்சிக்கு வித்திடப்பட்டது. இதனை இந்திரா காந்தி பிரதம அமைச்சராக இருந்த காலத்தில் தீவிரமாக நடைமுறைப்படுத்தினார் (Bipan Chandra 2008).

சாஸ்திரி பிரதமராக இருந்தபோது மூன்றாவது ஐந்தாண்டு திட்டம் தோல்வியினை எதிர்கொண்டது. நாட்டின் தேசிய வருமானம் குறைவான அளவிற்கே வளர்ச்சியினை கண்டது. பொருட்களின் விலை அதிக அளவிற்கு உயர்ந்தது. உணவு தானியப் பற்றாக்குறை கடுமையாக நிலவியது. எனவே உணவு உற்பத்தியினை அதிகரிக்கப் பசுமைப் புரட்சிக்கு வழிவகுத்தார். நேருவின் ஜனநாயக சோசியலிசக் கொள்கையினை சாஸ்திரி பின்பற்றினாலும், நேருவினால் அமைக்கப்பட்ட திட்டக்குழுவினை மாற்றி அமைத்தார். இதன்படி திட்டக்குழுவின் உறுப்பினர்களின் காலம் வரையற்ற நிலையில் இருந்ததைக் குறிப்பிட்ட காலம்வரை பணியாற்ற வழிவகை செய்தார். மேலும் திட்டக்குழுவிற்கு இணையாக “தேசிய வளர்ச்சிக் குழு” 1964ல் பொருளாதார, அறிவியல் அறிஞர்களைக் கொண்டு உருவாக்கினார். சாஸ்திரி நேரு வழியில் பயணித்தாலும் கனரக தொழிலுக்கு முன்னுரிமை என்று இருந்ததை வேளாண்மைக்கான முன்னுரிமை என மாற்றி அமைத்தார்.

தன்னுடைய அமைச்சரவை சகாக்களையும், உயர் அதிகாரிகளையும் ‘கிராமங்களுக்குச் செல்லுங்கள், மக்களையும், விவசாயிகளையும் சந்தியுங்கள்” என்றார்.

நேருவினால் முன்னெடுக்கப்பட்ட கனரக தொழிலுக்கான வளர்ச்சியானது சாஸ்திரி காலகட்டத்தில் வேளாண்மையினை மேம்படுத்த முன்னுரிமை தரப்பட்டது. சாஸ்திரி பிரதம மந்திரி ஆனதும் முதல் பணியாக வேளாண்மைத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டினை அதிகரித்தார். மழை பொய்த்துப்போனதால் உணவு உற்பத்தி குறைந்து, பற்றாக்குறை நிலவியது. அரசின் உணவுக் கையிருப்பும் குறைந்துவிட்டது. இதனைப் பயன்படுத்தி கள்ளச் சந்தை நடவடிக்கைகள் பெருகியது என்பதை உணர்ந்து இதற்கு நீண்டகாலத் தீர்வினை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் தன்னுடைய அமைச்சரவையில் உணவு மற்றும் வேளாண்மை அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியம் அவர்களிடம் இதற்கான பொறுப்பினை ஒப்படைத்தார். சுப்பிரமணியம் உடனடியாக வேளாண் விஞ்ஞானிகளை அங்கீகரித்து, அவர்களின் ஊதியத்தை உயர்த்தி, வேலைக்கான சூழ்நிலையினை மேம்படுத்தி அரசின் அதிகார வர்கம் தலையிடாமல் பார்த்துக்கொண்டார். வேளாண்மையில் தனியார் துறையினை ஊக்குவிப்பது, தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள், அன்னிய நேரடி முதலீடு போன்றவை நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தை புத்துயிர்பெறச் செய்தார், மாநிலங்கள் வேளாண் பல்கலைக்கழகங்கள் துவக்கவும், அதில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. வேளாண் சாகுபடியினை அதிகரிக்கப் பரிசோதனை பண்ணைகள், இந்திய விதைக் கழகம் போன்றவை உருவாக்கப்பட்டது. பி.சிவராமன், எம்.எஸ்.சாமிநாதன் போன்ற வல்லுநர்களின் ஆலோசனைகளின்படி மெக்சிகன் கோதுமை விதை வகையினை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. 1965ல் இந்திய-அமெரிக்க (சுப்பிரமணியம் – ஃபிரிமேன்) ஒப்பந்தத்தின்படி இந்தியா கணிசமான அளவிற்கு வேளாண்மை மீதான முதலீட்டை அதிகரிக்கவும், கிராமப்புறக் கடன் வழங்கச் சீர்திருத்தங்களை கொண்டுவரவும், ரசாயன உர உற்பத்தியினைப் பெருக்கி அதன் பயன்பாட்டை அதிகரிக்கவும் முடிவு எடுக்கப்பட்டது (Ramachandra Guha 2017). வேளாண்மை உற்பத்தியினை அதிகரிக்கச் சந்தை நோக்கு முறை பரிந்துரைக்கப்பட்டது.

எல்.கே.ஜா தலைமையில் குழு அமைக்கப்பட்டு அதன் பரிந்துரையின் அடிப்படையில் இந்திய உணவுக் கழகம் 1964ல் துவக்கப்பட்டது. இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவினை அடைய மூன்று முக்கிய பிரகடனங்கள் செய்யப்பட்டது (அதிக மகசூல் தரும் உயர் ரக விதைகள் பயன்படுத்துதல், உழவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குதல், நீர்ப்பாசன விளைநிலங்களுக்கு மேம்படுத்தப்பட்ட இடுபொருட்களைப் பயன்படுத்துதல்). வலதுசாரி கட்சியினரும், எதிர்க் கட்சிகளும் வேளாண்மையில் முன்னெடுக்கப்பட்ட செயல்களால் முதலாளித்துவ விவசாயம் உருவாகும் என்றும் பெரிய விவசாயிகளுக்கு மட்டுமே பயன் உடையதாக இருக்கும் என விமர்சனம் செய்யப்பட்டது. ஆனால் 1966-67ஆம் ஆண்டு வேளாண்மையில் கடைப்பிடிக்கப்பட்ட புதிய முறையினால் கோதுமை உற்பத்தியானது 5.5 விழுக்காடு அதிகரித்தது. சாஸ்திரி இந்தியாவில் வேளாண்மையில் முதல் சீர்திருத்தத்தினை கொண்டுவந்தார் இதனால் இன்று உணவு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவினை அடைந்தது மட்டுமல்ல உலகில் வேளாண்மை உற்பத்தியில் முன்னணி நாடாகவும் உள்ளது.

வேளாண்மை செலவு மற்றும் விலைக் குழு 1965ல் துவக்கப்பட்டது, இக்குழுவானது வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச விலையினைத் தீர்மானிப்பதற்கான பரிந்துரையினை வழங்குகிறது. முதன் முதலில் கோதுமைக்கான குறைந்த பட்ச ஆதார விலையினை இக்குழு பரிந்துரைத்தது. பழமையான நெல் ரகங்களின் பயிர்செய்யும் கால அளவு குறைந்தது 6 மாதங்களாக இருந்தது இதனைக் குறைக்கும் பொருட்டு குறுகிய கால நெல் ரகமான ஐ.ஆர்8 அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் ஆண்டுக்கு மூன்று போகம் பயிரிடும் நிலை உருவாக்கப்பட்டது. இதுபோன்றே கோதுமையில் புதிய ரக விதைகள் அறிமுகப்படுத்தப்பட்டது (ICAR 2022).). இவருடைய காலத்தில் உணவு பற்றாக்குறை அதிக அளவிலிருந்ததால் 1966-67ல் 10 மில்லியன் டன் உணவு தானியங்கள் இறக்குமதி செய்யப்பட்டது. அரசின் பல்வேறு நடவடிக்கையின் காரணமாக இது 1970ல் 3 மில்லியன் டன்னாகக் குறைந்தது.

சாஸ்திரி காலத்தில் வெண்மைப் புரட்சிக்கு அடிக்கோலப்பட்டது. பால் உற்பத்தியைப் பெருக்கி, அளிப்பினை அதிகரிக்கத் தேசிய பிரச்சார இயக்கத்தை உருவாக்கினார். குஜராத் மாநிலத்தில் உள்ள ஆனந்தில் 1965ல் குரியனால் தேசிய பால் வளர்ச்சி கழகமும், அமுல் பால் கூட்டுறவும் தொடங்கப்பட்டது. இதன் அடிப்படையில் பால் பற்றாக்குறையாக இருந்த இந்தியா தன்னிறைவினை அடைந்துள்ளது. இன்று உலக அளவில் அதிக பால் ஏற்றுமதி செய்யும் நாடாக மாற்றமடைந்துள்ளது.

சாஸ்திரி காலத்தில் 1964-65ல் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.8.96 லட்சம் கோடியாக இருந்தது 1965-66ல் ரூ.8.73 லட்சம் கோடியாகக் குறைந்தது அதாவது 2.63 விழுக்காடு குறைந்தது. தலா வருமானம் ரூ.16836 ஆக இருந்தது ரூ.16423ஆக குறைந்தது அதாவது 2.45 விழுக்காடு குறைந்தது. வேளாண்மையும் அதனைச் சார்ந்த துறையும் நாட்டின் நிகர தேசிய உற்பத்திக்கு 1965-66ல் ரூ.99.45 மில்லியன் பங்களிப்பினை வழங்கியது (1964-65ல் இது ரூ.102.14 மில்லியனாக இருந்தது) (Jagdish N Bhagwati and T.N.Srinivasan 1975).

அட்டவணை: சாஸ்திரி காலத்தில் இந்தியப் பொருளாதார மாற்றம் (2011-12 விலை அடிப்படையில்)

விவரங்கள்         1964-65 1965-66
வேளாண்மையும் அதனைச் சார்ந்த துறைகளின் வளர்ச்சி (விழுக்காடு) 8.7 -9.6
உற்பத்தி, கட்டுமானம், மின்சாரம், எரிவாயு, தண்ணீர் வழங்கல் துறைகள் (விழுக்காடு)  7.4 3.3
வர்த்தகம்உணவகம், போக்குவரத்து, தகவல் தொடர்பு (விழுக்காடு) 6.7 1.9
நிதி, மனைத் தொழில், தொழில்முறை சேவை (விழுக்காடு)    2.8 3.0
மொத்த உள்நாட்டு உற்பத்தி (ரூ.கோடியில்) 896221 872598
தலா வருமானம் (ரூ) (at NNP)   16836 16423

Source: GoI (2022): Economic Survey 2021-2022.” Ministry of Finance, Government of India.

ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்திக்கு வேளாண்மையும் அதனைச் சார்ந்த துறைகளும் 57 விழுக்காடு பங்களிப்பும், தொழில் துறை 28 விழுக்காடும், சேவைத் துறை 15 விழுக்காடு பங்களிப்பும் 1950-51ல் இருந்தது 49 விழுக்காடு, 31 விழுக்காடு, 21 விழுக்காடு என முறையே 1964-65 மாற்றமடைந்தது. சாஸ்திரி ஆட்சிக் காலத்தில் மூன்றாவது ஐந்தாண்டு திட்டமானது தோல்வியினைத் தழுவியது. அதிக மக்கள் தொகை பெருக்கம், விலைவாசி உயர்வு, உணவுப் பற்றாக்குறை போன்றவை நிலவியது (Sanjeet Kashyap 2019).

சாஸ்திரி பிரதம அமைச்சராக இருந்தபோது அரசியல் ரீதியாகக் கட்சிக்கு உள்ளேயும் வெளியிலும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார். பல பிரச்சனைகளுக்கு உடனுக்குடன் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தினார் என்றும், காஷ்மீர் பிரச்சனை, பாக்கிஸ்தானுடனான போர், வியட்நாம் போர் மீதான நிலைப்பாடு போன்றவை  இந்தியப் பொருளாதாரத்தை வெகுவாகப் பாதித்தது. உஸ்பெகிஸ்தான் என்ற நாட்டில் உள்ள தாஷ்கண்ட் என்ற இடத்தில் இந்தியா-பாக்கிஸ்தான் ஒப்பந்தம் கையெழுத்தான 10.01.1966ல் திடீரென சாஸ்திரி காலமானர். சாஸ்திரி ஆட்சிக் காலத்தில் நவீன வேளாண் வளரச்சிக்கான அடித்தளத்தை உருவாக்கினார், தாரளமயக்கொள்கைக்கான முன்னெடுப்பும் இவர் காலத்தில்தான் தொடங்கப்பட்டது. இவரைப் பற்றி இந்திரா காந்தி குறிப்பிடுகையில் “அவர் இயல்பாக மிகவும் கண்ணியமானவர், அமைதியானவர் ஆனால் போரின் போது அவர் நமது மன உறுதியை வலுவாக ஊக்குவித்தார், நாட்டின் ஒற்றுமை மற்றும் வலிமைக்கு பங்களித்தது தேசத்திற்குத் தலைமையை ஏற்று வழிநடத்தினார்” என்றார்.

சாஸ்திரி 582 நாட்கள் மட்டுமே பிரதமராக இருந்தாலும், இவருடைய காலத்தில் பல்வேறு பிரச்சனைகள் காணப்பட்டன அதனைத் திடமாகவும், நீக்குப்போக்குடன்  எதிர்கொண்டார். இவர் சிறந்த நிர்வாகியாகத் திகழ்ந்தார், சிக்கல்களைத் தீர்க்க கூட்டு முயற்சியினை மேற்கொண்டார். தன்னுடைய அமைச்சரவை முடிவுகள்  தீவிர ஆலோசனைக்குப் பிறகே மேற்கொண்டார் (Ramandeep Kaur 2019). வேளாண்மை வளரச்சிக்காக அவர் மேற்கொண்ட முயற்சியே இன்று இந்தியா உலக அளவில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி செய்யும் முன்னணி நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது.

– பேரா.பு.அன்பழகன்