Kalai's Poems கலையின் கவிதைகள்

கலையின் கவிதை




கட்டணமும் கடவுளும்
*****************************
எப்போதும்போல எதுவுமில்லாதவர்
ஏமாந்தே எலும்பாகிறார்…
எல்லாமுடையவர்
வசதியோடு வள்ளலாகிறார்…
தெய்வமும் கைவசமிருப்பதை கொடுத்துதான் நிற்கிறது
இருப்பிடத்திலிருந்து!
கட்டணமென்றால் சிறப்பு
தரிசனத்தில் வரம்
கட்டணமில்லையென்றால் கடைசியிலேதான் என்ற
சுகவாசிகளின் சூட்சுமங்கள்தான்
தெய்வங்களுக்கும் தெருகோடிகளுக்கும் தெரிவதில்லை பாவம் ….

மணமகளே மணமகள் வா வா !
********************************************
வானளாவிய பெண்ணுரிமை
பேசும் குடும்பமானாலும்
சமைச்சுப் போடுவதில்
அன்னபூரணியாகவும்
வீட்டைப் பாதுகாப்பதில்
காவலாளியாகவும்
இல்லத்தை ஒழுங்குபடுத்துவதில் வேலைக்காரியாவும்
கணவனைக் கவனிப்பதில் விலைமாதராகவும்
வாரிசை
வளர்த்தெடுப்பதில்
தாயாகவும்
வந்தவர்களை வரவேற்று வயிறார சோறிடுவதில்
சர்வராகவும் இருந்தால் மட்டும்
போதும் என்கிறார்கள்
மணமகள் தேடும் போது!