பன்மைத்துவத்தை சிதைக்கும் பொது சிவில் சட்டம் – பெ.ரவீந்திரன், வழக்கறிஞர்
கடற்கரை தாகம் கவிதை – பூ.கீதா சுந்தர்
பள்ளிப் பருவத்தில்
திரை போட்ட
அவள் முகம் காண விரும்பியவர்களுக்கு
காணக் கிடைத்தன
அவளின் பாதவிரல்களே…
அவளின்
கொள்ளை அழகை
கொள்ளை கொண்டு
போனது திருமணம்
என்னும் திருப்பம்…
தந்தையின்
நன்றியுணர்வால்…
திருமணம் போன்றே
முதலிரவிலும் விருப்பமின்றியே களையப்பட்டன
மன ஆடையும்
உடல் துகிலும்!
உடன் இருந்தவனின்
குடி போதை நாற்றத்தில் திக்கு முக்காடி
திணறியது
அவள் சுவாசம்
காலச் சக்கரத்தில் ஒட்டிய
கசடென
நோய்மை குடியேறியவனைக் காத்திருந்து
தூக்கி சென்றான்
மரணதேவன்
கையில்
குழந்தை கனக்க
அவளோ
கைம்பெண்ணாய்..
தான் தனியல்ல
துணை உண்டென
தேற்றிய மனதுடன்
உச்சி முகர்ந்தாள்
மடந்தை.
கணவனால்
களவாடப்பட்ட
பொழுதுகள் கனக்கவில்லை
அது எதுவும்
அவள் மனதில் நினைவிலில்லை
சட்டென ஒரு நாள் உணர்ந்தாள
தன் இளந்தாகம்
தினம்
இரவுகளின்
கோரப் பற்கள்
கிழித்திட தொலைந்தது
அவள் தூக்கம்
தலையில்
ஊற்றிய தண்ணீரால் அடங்காத நெருப்பு
அணைபட மறுத்தது…
உடைபட துடித்தது…
வளர்(த்)ந்த மகனிடம் மறுமணத்திற்கு
கேட்டாள்
மறுவாய்ப்பு..
இத்தனை நாட்களுக்குப்
பின்னுமா
இந்த எண்ணம்
வெளியிலென்ன
பேசுவார்களென
வெகுண்டான் அவன்..
இறுதிவரை
அவளின் முகமும்
அகமும் தெரியாமல்
மூடியது சமூதாய மேகம்
என்றென்றும் தீராது
கடற்கரை தாகம்
பூ. கீதா சுந்தர்
சென்னை
நூல் அறிமுகம்: விட்டல்ராவின் ”மீண்டும் அவளுக்காக” – பாவண்ணன்
மனம் என்னும் விசித்திர ஊஞ்சல்
ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கு முன்பாக அஞ்சலை என்றொரு நாவல் வெளிவந்து வாசகர்களின் கவனத்தை ஈர்த்தது. அதை எழுதியவர் கண்மணி குணசேகரன். அஞ்சலை என்னும் இளம்பெண்ணை அவளுடைய அக்காள் கணவனே இரண்டாம்தாரமாக மணந்துகொள்ள விரும்புகிறான். ஆனால் அஞ்சலையின் தாயாருக்கு அதில் உடன்பாடில்லை. அவளைப் பழிவாங்கும் எண்ணத்தோடு புதிய இடத்திலிருந்து ஒரு மாப்பிள்ளையை பெண் பார்க்க அழைத்து வருகிறான் மருமகன். திருமணத்துக்குத் தேதி குறித்துவிடுகிறார்கள். மணமேடையில் அமரும்போதுதான் பக்கத்தில் அமர்ந்திருக்கும் மணமகன், பெண் பார்க்க வரும்போது மாப்பிள்ளை என தனக்குச் சுட்டிக் காட்டப்பட்ட ஆளல்ல என்பதை அவள் உணர்கிறாள். அண்ணன் கட்டழகன். ஏற்கனவே திருமணமானவன். அவனைக் காட்டி நம்பவைத்து நோஞ்சானான தம்பிக்கு திருமணம் செய்துவைக்கிறார்கள். அந்த இல்வாழ்க்கையில் அவள் எப்படி சிக்கிச் சீரழிந்தாள் என்பதுதான் நாவலின் களம். இன்றளவும் வாசகர்கள் விரும்பிப் படிக்கும் நாவல் வரிசையில் அஞ்சலையும் ஒன்றாக இருக்கிறது.
அஞ்சலை வெளிவருவதற்கு இருபது ஆண்டுகளுக்கு முன்னால் எழுத்தாளர் விட்டல்ராவ் திருமணத்தில் நிகழும் ஆள்மாறாட்டத்தை முன்வைத்து ஒரு நாவலை எழுதினார். மீண்டும் அவளுக்காக என்பது அந்நாவலின் தலைப்பு. தீயூழின் விளைவாக, அந்த நாவல் வெளிவந்த காலகட்டத்தில் அது சரியான வகையில் எதிர்கொள்ளப்படாமலேயே போய்விட்டது. அவருடைய நாவல் பட்டியலில் இடம்பெறும் ஒரு பெயராக மட்டுமே நின்றுவிட்டது.
கதையின் நாயகன் பசுபதி என்னும் இளைஞன். விமானப்படைப்பிரிவில் வேலை செய்பவன். அவனுக்குத் திருமணம் செய்துவைக்க விரும்புகிறாள் அவன் தாய். ஆனால் முதுமையின் காரணமாக அவளால் நாலு இடங்களுக்கு அலைந்து திரிந்து பெண் பார்க்க முடியவில்லை. எல்லைப்பகுதியில் பணிபுரியும் பசுபதிக்கோ பெண் பார்ப்பதற்காக ஊருக்கு வந்து செல்ல நேரமில்லை. ஊரிலேயே இருக்கும் மூத்த சகோதரனுக்கு அத்திருமணத்தில் எந்தவிதமான ஆர்வமும் இல்லை. வீட்டிலிருக்கும் மற்றொரு இளைய சகோதரனோ கூச்ச சுபாவத்தின் காரணமாக மற்றவர்களை நிமிர்ந்து பார்த்து பேசக்கூட தயங்கி ஒதுங்கிச் செல்பவனாக இருக்கிறான். அப்படிப்பட்டவனை அழைத்துச் சென்று ஒப்புக்கு ஒரு பெண்ணைப் பார்த்துப் பேசி முடிவு செய்கிறார் அவன் தாய்மாமன்.
பசுபதிக்கு பெண்ணின் புகைப்படம் மட்டும் அனுப்பிவைக்கப்படுகிறது. பெண்ணின் தோற்றம் நிறைவளித்ததால் அங்கிருந்தபடியே திருமணத்துக்குச் சம்மதம் தெரிவிக்கிறான் அவன். மணமேடைக்கு வந்த பிறகுதான் புகைப்படத்தில் பார்த்த பெண் வேறு, மணமகளாக அமர்ந்து தாலி கட்டிக்கொண்டவள் வேறு என்பதை அவன் உணர்கிறான். அவளோடு சேர்ந்து வாழ விருப்பமில்லாமல் அவன் கிராமத்தைவிட்டு அடுத்த நாளே வெளியேறி எல்லைக்குச் சென்றுவிடுகிறான். அதற்குப் பின் உறவினரை வெறுத்து ஒதுங்கி வாழ்கிறான்.
அன்றே சட்டப்படியான மணவிலக்குக்கு அவன் முயற்சி செய்யத் தொடங்குகிறான். ஆனால் அவன் பிரிந்து செல்ல நினைத்தாலும் அந்தப் பெண் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவிக்கிறாள். அதனால் மணவிலக்கு முயற்சி தோல்வியடைந்துவிடுகிறது. அந்தச் சலிப்பில் ஊர்ப்பக்கம் செல்வதையே நிறுத்திவிடுகிறான் பசுபதி. ஒருபக்கம் அவன் முயற்சிகளையும் மறுபக்கம் மணமகள் சார்பாக அவளுடைய தந்தை இருவரையும் சேர்த்துவைக்க எடுக்கும் முயற்சிகளையும் மாறிமாறி விவரித்தபடியே செல்கிறது நாவல். இறுதியில் அவன் மனம் மாறும் விதமாக ஒரு சூழல் உருவாகிறது. வாழ்நாள் முழுதும் ஒதுக்கி விலக்கிவைக்க வேண்டும் என நினைத்த பெண்ணை தன்னுடன் இணைத்துக்கொண்டு சேர்ந்து வாழத் தொடங்குகிறான் பசுபதி.
மனத்துக்கும் மனித ஆசைகளுக்கும் உள்ள தொடர்பு விசித்திரமானது. மாறிக்கொண்டே இருப்பதுதான் அதன் இயல்பு. மனத்துக்கும் மனிதர்கள் எடுக்கும் முடிவுகளுக்கும் உள்ள தொடர்பும் விசித்திரமானது. ஒரு கட்டத்தில் வேண்டாம் என்று முடிவெடுக்கும் மனம் இன்னொரு கட்டத்தில் வேண்டும் என்று முடிவெடுக்கிறது. ஒவ்வொன்றுக்கும் ஒரு பின்னணி இருக்கிறது. மனம் செயல்படும் விதத்தை உறுதியான சூத்திரங்களைக் கொண்ட கணக்கு என வகுத்துவிட முடியாது. சூத்திரங்களே இல்லாமல் சுதந்திரமான செயல்பாடுகளைக் கொண்டது மனம். ஒன்றை ஏற்பதற்கும் மறுப்பதற்கும் அந்தச் சுதந்திரமே காரணம். விட்டல்ராவின் நாவல் அந்தச் சுதந்திரத்தை ஆய்வுப்பொருளாக்குகிறது.
பசுபதியின் வாழ்க்கையை ஒரு கோடு என வைத்துக்கொண்டால், அக்கோட்டைச் சுற்றி பல கோடுகளை முன்னும் பின்னுமாக இணைத்து நாவலின் கட்டுமானத்துக்குப் பயன்படுத்திக்கொள்கிறார் விட்டல்ராவ். சுவாமிநாதன் – வேதவல்லி இணையரின் வாழ்க்கை ஒரு கோடு. கணவனை இழந்த லீலாவதியம்மாளின் வாழ்க்கை இன்னொரு கோடு. சாதிப் பிரச்சினையிலிருந்து தப்பிக்க விமான எல்லைப்படையில் வேலை செய்துவருபவனை மணம் செய்துகொண்டு வெளியேறும் திருத்துளாவின் வாழ்க்கை மற்றொரு கோடு. ஐசக் தம்பதியினரின் வாழ்க்கை பிறிதொரு கோடு. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான விருப்பத்தோடு வாழ்கிறார்கள். ஒரு புதிய தொடர்பின் வழியாக தனக்குத் தேவையான ஒரு விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ள நினைக்கிறார்கள். எதிர்பார்ப்பில்லாமல் பழகுகிறவர்களே இல்லை. திகைப்பூட்டும் அந்த உண்மை, விட்டல்ராவ் சித்தரிக்கும் வெவ்வேறு காட்சிகளின் வழியாக திரண்டு வந்து முகத்தில் அறைகிறது.
எல்லையிலிருந்து விடுப்பில் சென்னை வரும் திட்டமிருப்பதாக பசுபதி தெரிவிக்கும் ஒவ்வொரு சமயத்திலும் சுவாமிநாதனின் மனைவி வேதவல்லி, டில்லி வழியாக வரும்போது ஏதேனும் சில பொருட்களை வாங்கிவருமாறு கடிதம் எழுத வைக்கிறாள். ஒருமுறை மோடாக்கள். இன்னொருமுறை பாசுமதி அரிசி. மற்றொருமுறை கம்பளி ஆடைகள். லீலாவதி அம்மாளுக்கு பொருள்கள் சார்ந்த எதிர்பார்ப்பு எதுவுமில்லை மாறாக, தன் மகள் மணம் செய்யவிருக்கிற இளைஞனின் நடத்தையைப்பற்றி விமானப்படைப்பிரிவில் தீர விசாரித்து தகவல் சேகரித்துத் தெரிவிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறாள். அவனிடமிருந்து பதில் கிட்டாத நாட்களில் அவள் ஏமாற்றத்தில் மூழ்கிவிடுகிறாள். அவன் நேரில் வந்திருந்தபோது அவளைச் சந்தித்து, எல்லைப்பிரிவில் பணிபுரியும் மாப்பிள்ளை வேண்டாம் என்று யோசனை சொல்கிறான். ஆனால் அவளுக்கு அந்த யோசனையில் நாட்டமில்லை.
பசுபதியோ வேறொரு நெருக்கடியில் மூழ்கியிருக்கிறான். மனைவியிடமிருந்து மணவிலக்கு பெறமுடியவில்லை என்கிற வருத்தம் ஒருபக்கம் இருந்தபோதும், மனைவியின் அப்பா விமானப்படைத்துறை மேலாளர்களுக்கு அடிக்கடி எழுதும் புகார்க்கடிதங்களால் மீண்டும் மீண்டும் விசாரணைக்கு ஆட்படவேண்டிய நெருக்கடிகள் அவனைத் தடுமாற வைக்கின்றன. இடமாற்றல் பெற்று அவன் எந்த ஊருக்குச் சென்றாலும், அதை எப்படியோ தெரிந்துகொள்ளும் அவர் உடனடியாக முகாம் தலைவருக்கு புகார்க்கடிதம் எழுதி நெருக்கடிகளை உருவாக்கிவிடுகிறார்.
அடிக்கடி நிகழும் துறைரீதியான விசாரணைகளையும் நெருக்கடிகளையும் தவிர்ப்பதற்காக, வேலையை உதறிவிட்டு விமானப்படைப்பிரிவிலிருந்து வெளியேறிவிடும் முடிவை எடுக்கிறான் பசுபதி. அது பல விதங்களில் தனக்கு மனவிடுதலையை அளிக்கும் என அவன் நினைக்கிறான். ஓய்வூதியம் பெறுவதற்கான குறைந்தபட்ச ஆண்டுகள் வரைக்கும் பணியில் நீடித்த பிறகு, வேலையை உதறி துணிச்சலாக வெளியேறிவிடுகிறான். முன்னாள் படைவீரர் என்னும் பிரிவில் ஏதேனும் ஒரு வேலை தனக்குக் கிடைத்துவிடும் என்றொரு நம்பிக்கை அவனை இயக்குகிறது. வேலைக்காக நேரிடையாக அணுகிச் செல்லும்போது கிட்டும் அனுபவங்கள் அவன் நம்பிக்கையைச் சிதறடித்துவிடுகின்றன.
துறை விசாரணை என்கிற பெயரில் மன அழுத்தம் கொடுக்கும் நிலை இனிமேல் ஏற்பட வழியில்லை என்றான பிறகு மணவிலக்கு தொடர்பாக நேரிடையாக ஒருமுறை பேசிப் பார்க்கலாம் என நினைத்து ஊருக்குச் செல்கிறான் பசுபதி. பெண்ணின் தந்தையாரும் உறவினர்களும் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வருகிறார்கள். ஆனால், அவர்கள் மணவிலக்குக்குச் சம்மதிக்க மறுக்கிறார்கள். ஆள்மாறாட்டம் செய்து நிகழ்த்திய திருமணத்தை பிழை என ஒருவரும் உணரவில்லை. ஒருவரும் எதிர்பாராத விதமாக மணப்பெண்ணே அந்தச் சபையில் தோன்றி, மணவிலக்குக்குச் சம்மதமென்று தெரிவித்துவிட்டுச் செல்கிறாள். பல ஆண்டுகளாக சேர்ந்து வாழ விரும்புவதாகச் சொல்லிக்கொண்டே இருந்தவள் எதிர்பாராத விதமாக மனம் மாறி பிரிந்துசெல்ல சம்மதித்த காரணம் அவனுக்குப் புரியவே இல்லை. மணவிலக்குக்காக வந்தவன், மணவிலக்கு செய்யும் முடிவை எடுக்கத் தடுமாறுகிறான்.
தொடக்கத்தில் இருந்த உறுதியை அக்கணத்தில் இழந்துவிட்டோம் என்பதை பசுபதியால் புரிந்துகொள்ள முடிகிறது. ஒருவகையில் அவன் எடுத்த முடிவுக்கும் அதில் அவன் காட்டிய உறுதிக்கும் அவனுடைய வேலைச்சூழலும் ஒரு காரணம். விமானப்படைப்பிரிவு ஊழியன் என்னும் அடையாளம் அப்படியெல்லாம் ஒரு வேகத்துடன் யோசிக்கத் தூண்டியது. வேலை தேடி அலையும் ஒரு சராசரி இளைஞனாக நிற்கும் தருணத்தில் அந்த வேகமில்லை. அதனால் அவனால் பழைய முடிவை எடுக்கமுடியவில்லை. அதில் உறுதி காட்டவும் அவனால் முடியவில்லை. நண்பன் வழியாக அவன் தெரிந்துகொண்ட இன்னொரு நிகழ்ச்சியும் அவன் தடுமாற்றத்துக்குக் காரணமாகிவிட்டது. தொடக்கத்தில் அவன் மணவிலக்கு வழக்கு வெற்றி பெறுவதற்காக, மணமகளுக்கு ஏற்கனவே ஓர் ஆணுடன் தொடர்பு இருந்தது என்றொரு கட்டுக்கதையை வழக்கில் சேர்த்துக்கொள்ளலாம் என்று பலரும் ஆலோசனை சொன்ன போதும், அதற்கு உடன்பட மறுத்தவன் பசுபதி. அவர்கள்தான் உண்மையை மறைத்தார்கள் என்றால் நாமும் உண்மைக்கு மாறாக பொய் சொல்வது பெரும்பிழை என்று எடுத்துரைத்து, அவர்கள் திட்டத்தையே உதறியிருந்தான். அந்தப் பழைய செய்தி எப்படியோ அவள் காதுகளை அடைந்துவிட்டது. உண்மையிலிருந்து பிறழ விரும்பாத பசுபதியின் நிலைபாடு அவளைக் கவர்ந்துவிட்டது. அவன் வழியிலிருந்து விலகிச் செல்ல அவள் அறிவித்த முடிவுக்கு அதுவே காரணம். நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, மணவிலக்குத் திட்டத்தை கைவிட்டு, அவளோடு சேர்ந்து வாழ நினைக்கிறான் அவன்.
ஆள்மாறாட்டத் திருமணம், மணவிலக்கு முடிவு, சேர்ந்து வாழ எடுக்கும் முடிவெடுக்கும் திருப்பம் என்ற மூன்று புள்ளிகளிடையே நிகழும் உணர்ச்சிக்கொந்தளிப்பு மிக்க நாவலை, விமானப்படை நிலைய பின்னணியில் புதுமையான முறையில் விட்டல்ராவ் எழுதியிருக்கிறார். விமானப்படைப்பிரிவில் பள்ளியிறுதிப்படிப்பை முடித்துவிட்டு அடிமட்ட ஊழியர்களாகச் செல்பவர்களின் செயல்பாடுகளை கச்சிதமான சிறுசிறு காட்சிகள் வழியே சித்தரித்திருக்கிறார். விமானப்படைப்பிரிவில் ஊழியர்களாக இருப்பவர்களின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்த முற்படும் நிர்வாகம், அவர்களுடைய குடும்பவாழ்க்கையின் நலன்சார்ந்தும் பொறுப்புணர்ச்சியோடு நடந்துகொள்கிறது என்னும் தகவலை விட்டல்ராவின் நாவல் உணர்த்துகிறது.
துறைசார்ந்த விசாரணைகளில் சிக்கி பசுபதி படும் பாடு தமிழ் நாவல்களில் இதுவரை முன்வைக்கப்படாத காட்சியாகும். எந்திரமயமான செயல்பாடுகள் மிகுந்த ஓர் உலகத்தின் ஒரு பகுதியாக அமைந்திருக்கும் துறையில், மனிதநலம் சார்ந்த செயல்பாடுகளை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஒன்று எந்திரமயமான குணம். மற்றொன்று இயற்கையான குணம். இரண்டும் நிறுவனத்தின் குணங்கள் என்னும் எல்லைக்கு அப்பால் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அதே விகித அளவில் செயல்படும் குணங்களாக உள்ளன. அந்த உண்மையை விட்டல்ராவ் இந்த நாவலில் பல பாத்திரங்கள் வழியாக உணர்த்தியிருக்கிறார்.
ஒரு கட்டத்தில் இவரால் நமக்கு எவ்வளவு தொல்லை என ஒரு கட்டத்தில் சலித்துக்கொள்கிறாள் வேதவல்லி. இன்னொரு கட்டத்தில் பசுபதி தன் மனைவியை அழைத்துக்கொண்டு வரவிருக்கிறான் என்னும் செய்தியைக் கேள்விப்பட்டதும் தன் அறையிலிருக்கும் மின்விசிறியைக் கழற்றி அவனுக்காக ஒதுக்கியிருக்கும் அறையில் பொருத்த யோசனை சொல்கிறாள். இப்படி நாவலெங்கும் விரவியிருக்கும் பல தருணங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம். இரு குணங்களுக்கிடையில் ஊடாடும் ஊசலென மனம் இயங்கும் விதம், புரிதலின் எல்லைக்கு அப்பாற்பட்ட ஒரு விசித்திரம்.
– பாவண்ணன்
நூல் அறிமுகம்: அராபத் உமரின் ”நசீபு” – தேனி சுந்தர்
தொகுப்பில் உள்ள ஒரே ஒரு கதை மட்டும் புக் டே இணைய தளத்தில் வாசித்து உள்ளேன்.. இது குறித்து தோழர் உமரிடம் கேட்டுத் தான் தெரிந்து கொண்டேன்..
இந்த நூலை வாசிக்கும் போது அப்படியொரு தேவை எழவில்லை.. இஸ்லாமிய கலைச் சொல் அகராதி போல நாம் அறிந்து கொள்ள பல புதிய வார்த்தைகள் இருந்தன.. அடைப்புக் குறியீட்டில் அதற்கான பொருளும் சொல்லப் பட்டிருக்கிறது..
புதிய வார்த்தைகள் மட்டும் அல்ல. இஸ்லாமிய குடும்பங்களில் பெண்களின் வலி மிகுந்த, நாம் அறியாத அவர்களின் வாழ்க்கை பக்கங்களையும் வாசித்து அறிய முடியும்..
சிறு வயதில் திருமணம், வரதட்சணை, மதத்தின் பெயரால் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் என பொதுவாக பேசத் தயங்கும் விசயங்களை பேசி இருக்கிறார் அராபத் உமர்.. அதுவும் தனது முதல் தொகுப்பில்..!
மாணவர் பருவத்தில் இருந்தே வாசிப்பும் எழுத்துமாக வலம் வந்தவர் தோழர் அ.உமர் பாரூக் . குறைந்த வயதில் அதிக நூல்கள் எழுதியதற்காக பாராட்டுப் பெற்றவர்..
அவருடைய தூண்டலும் துணையும், கூடவே அவரது சுய வாசிப்பும் தேடலும் அராபத் உமர், தேனி மாவட்டத்தில் “முதல் இஸ்லாமிய பெண் சிறுகதை எழுத்தாளர்” என்கிற முத்திரை பதிக்க உதவி இருக்கிறது..
ஒரு சிலர் எழுதிக் கொண்டிருந்தாலும் தேனி மாவட்டத்தில் “நசீபு” தான் ஒரு பெண் சிறுகதை எழுத்தாளர் எழுதி வெளிவந்துள்ள முதல் தொகுப்பு எனும் போது பாராட்ட வார்த்தைகள் இல்லை..
மாவட்டத்தில் மட்டுமல்ல மாநிலத்திலேயே இஸ்லாமிய பெண் சிறுகதை எழுத்தாளர்கள் எண்ணிக்கை மிக மிக குறைவு தான்..
சரி , கதைகளுக்கு வருவோம்.. தொகுப்பில் உள்ள 7ல் நான்கு கதைகள் குடும்பங்களில் ஏற்படும் இறப்புகள், அதனால் குடும்பங்களில் ஏற்படும் உளவியல் சிக்கல்கள், மனப் போராட்டங்கள் குறித்து மிக யதார்த்தமாக பதிவு செய்யப் பட்டிருக்கின்றன..
பரக்கத் மட்டும் மோசமான யதார்த்தத்தை மாற்றி அமைக்கும் பெண்ணாக வருகிறாள். ஆயிஷாவும் கூட தடைகளை உடைக்கும் ஆய்தமாக கல்வி இருக்கும் நம்புகிறாள்.. அதைத் தன் குழந்தைக்கு அளிக்க விரும்புகிறாள்.. ஆனால் அந்த குடும்பமே இணைந்து அவளது கனவைப் பொசுக்கி மண்ணறைக்கு அனுப்புகிறது.. ஆயிஷாவின் கனவுக்கு தடையாக இந்த கதையில் இருப்பது போல சமூகத்திலும் சில குழுக்கள் இருக்கின்றன என்பதைத் தான் கர்நாடகாவில் ஒரு இசுலாமிய பெண்ணுக்கு எதிராக நின்று ஒரு கும்பல் கோசமிட்ட சம்பவம் நினைவூட்டுகிறது..
ஈமான் கதை , பொது முடக்கக் கால துயரத்தை பேசுகிறது.. கோழிக் கறி வெட்டி சம்பாதித்து, அதில் குழந்தைகளுக்கு துணி எடுத்துக் கொண்டு செல்லும் அகமது, தன் வீட்டிற்கு பயறு குழம்பு வைக்க சாமான்கள் வாங்கும் இடம் பெருந்துயரம்.. அந்த கடைக்கார அக்கா தான், மனித மனங்களில் ஈவு இரக்கம் இன்னும் வற்றிப் போய் விடவில்லை என உணர்த்தும் விதமாக, கறி எடுக்க பணம் கொடுத்து அனுப்புகிறார்.. கனமான கதை..! அறிஞர் அண்ணா எழுதிய செவ்வாழை கதை எனக்கு நினைவு வந்து மீண்டும் அதை இணையத்தில் தேடி வாசித்தேன்..
தொகுப்பில் கதைகளை வாசிக்கும் போது இஸ்லாமிய குடும்பங்களில் இவ்வளவு ஆணாதிக்கம் நிலவுகிறதா என்ற சிந்தனை தோன்றுவதைத் தவிர்க்க இயலவில்லை. அதே போல அவர்களது அன்றாட வாழ்வில் இரண்டற கலந்திருக்கும் மத நடைமுறைகள் ஆண்களுக்கு துணையாக, பக்க பலமாக இருக்கிறது…
ஜெனி தன் அம்மா ரோஜாவிடம் கேட்கிறாள்.. “இத்தா எல்லாம் ஆண்களுக்கு கிடையாதா? இந்த ஹதீஸ், சட்டமெல்லாம் எழுதியது ஆம்பளைகளாம்மா..?!”
எல்லாம் நம்ம தலையெழுத்து (நசீபு – என்பதன் அர்த்தமும் அது தான்..!) என்று தான் பெண்கள் பொழப்பு நடத்த வேண்டி இருக்கிறது.. மூன்று நான்கு தலைமுறை நிகழ்வுகளை, தன் பேரனின் மனைவி செரினாவுடன் பகிர்ந்து கொள்ளும் சுபைதா பாட்டி கடைசியில் வெத்திலை, பாக்கை ஓங்கி ஓங்கி இடிக்கும் இடம் நம் உள்ளங்களில் அதிர்வை உருவாக்குகிறது..
சிறுகதை உலகில் நல்லதொரு இடம் காத்திருக்கிறது.. தோழர் அராபத் உமர் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்…
நூல்: நசீபு
ஆசிரியர்: மு. அராபத் உமர்
பக்கம்: 103
விலை: ரூபா 120/
வெளியீடு: டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
– தேனி சுந்தர்
நூல் அறிமுகம்: தாணப்பன் கதிரின் ’சுற்றந்தழால்’ – விஜயராணி
சகோதரர் தாணப்பன் கதிர் தென்தமிழகத்தின் நெல்லைச்சீமையின் பரந்துபட்ட வாசிப்பாளர் மட்டுமின்றி ‘காணிநிலம்’ காலாண்டிதழின் ஆசிரியர் குழுவில் ஒருவர். இவர் எல்லா இலக்கிய அமைப்புகளிலும் இயங்கிவருவது மட்டுமின்றி தான் வாசித்த நூல்களுக்கு சிறந்த விமர்சன உரையும் தந்து பல குழுக்களில் பகிர்ந்து எல்லோருக்கும் வாசிப்பைத் தூண்டுவதோடு எனக்கு சற்றே பொறாமையையும் (அநியாயத்துக்கு எப்பிடி இம்புட்டு வாசிக்கிறார்னுதான்) தூண்டுகிறார்.
கதை கவிதை என்று பரவலாக எழுதினாலும் இது இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு என்ற போதிலும் நேர்த்தியாக அவர் வாசிப்பைப் போலவே மனதோடு இசைகிறது அத்தனை கதைகளுமே!
இருபது ஆண்டுகளுக்கு முன்பு வாசித்த சு. சமுத்திரம் எழுதிய வாடாமல்லி வாசித்த போதான துயரம் இன்றைக்கும் பாலின மாற்றத்தின் வதை, மனதைத் துயரப்படுத்தாமல் எந்தக்கதையையும் கடக்கவிட்டதில்லை. அந்த வகைமையில் அந்தத் துயரை பிருகன்னளையும் தருகிறாள். என்றாலும் கதையின் நிறைவில் தாய்க்குத் தாயாகிற காட்சி கண்ணில் விரிகிறது.
நாட்டுமாடுகளின் அழிவைச்சொல்லும் ஆநிரை கதையாகட்டும் சாலையை சீர்படுத்துகிறோம் என்பதைச் சொல்லும் ‘வளைவி’லாகட்டும் அரசு மற்றும் அதிகாரிகளின் மெத்தனப்போக்கை சொல்லமறக்கவில்லை.
எங்கள் வீட்டருகில் இருக்கும் காலிமனை தேடி வந்து இதுவரை ஏழுமுறை கன்று ஈன்ற நிகழ்வும் பெண்கள் நாங்கள் பண்டுவம் பார்த்த கதையும் அதன்பிறகு மாட்டுக்குச் சொந்தக்காரர் ஒரு நன்றிகூடச் சொல்லாமல் அழைத்துச் செல்வதும் வாடிக்கையானாலும் அந்த வாயில்லாச்சீவனின் நம்பிக்கையை நாங்கள் ஒருபோதும் சிதைத்ததில்லை.
எளிய வாழ்வே ஆனாலும் ஆநிரையில் கஷ்டப்பட்டுப் பணத்தைக் கட்டியும் மீட்காமல் விடப்பட்ட கருத்தமாடு அம்மா….வென அழைப்பதைக் கேட்டு கந்தன் மட்டும் மனசுடைந்து அழவில்லை…நாமும்கூட.
என்னதான் நவீனம் வந்தாலும் ஈரமுள்ள மனிதர்கள் மண்ணில் வாழ்வதாலேயே இந்த பூமி இன்னும் நிலைத்திருக்கிறது போல. எல்லோரும் எல்லாமும் சமமாகப் பெற வேணும் என்ற ஆதங்கத்தை ஆசிரியரின் மனதிலுள்ள “ஈரம்” சொல்கிறது.
நாட்குறிப்பு நமக்குத் தந்த வரலாற்று ஆவணங்கள் ஒரு புறமெனில் தனிமனித அடையாளங்களும் அது தரும் மென்னுணர்வும் காலப்பொக்கிஷமாய் வாசிக்கும் போதெல்லாம் அதுவொரு உணர்ச்சிக் கடல். அதில் மூழ்கி முத்தும் எடுக்கலாம், உப்புக்கரிக்க கண்ணீரும் சிந்தலாம். கார்த்தி போல பிள்ளைகளின் ஏக்கமும் அன்பும் மனதை நிறைக்கிறது.
தொகுப்பிலுள்ள தலைப்பிலான கதை முழுக்க முழுக்க அன்பில் தோய்ந்த வரிகள். அடர்பச்சை ரோஸ் வண்ணங்களில் கடைசலில் செய்யப்பட்ட மரப்பேழையும் உள்ளிருந்த உருட்டுமஞ்சள் மற்றும் பழுப்பேறிய பிச்சிப்பூ வாசமும் வாசிக்கும் நொடி நாசியேறுகிறது.
காலம் செல்லச்செல்ல எல்லாம் நல்லபடியாகவே நடந்தேறினாலும் ஏதோ ஒரு செயற்கைத்தனம் போலவே திருமணபந்தம் நிகழ்ந்துவிடுவதும் நிதர்சனத்துயரம்.
இதற்கு அடுத்தபடியான “செம்புலப்பெயல்நீர்” கதை நாளைய தலைமுறைக்கான திருமண பந்தத்திற்கான நம்பிக்கையைச் சொல்லாமல் சொல்கிற நேர்த்தி அழகு.
எல்லா நடுத்தரக்குடும்பங்களிலும் புதிதாக வந்து சேரும் ஒவ்வொரு பொருளும் ஒரு கதையைத் தம்முடன் கொண்டு வந்துவிடுகின்றன. நல்ல அவதானிப்பும் எழுத்துத்திறமையும் இருப்பதால் ஆசிரியர் குக்கருக்கு அழகாய் ஒரு கதை சொல்கிறார்.
“புத்திர பாசம்” கதையெல்லாம் அநேகமாக பல வீடுகளில் நடைமுறையில் சமீபமாக கண்டுகொண்டுதான் இருப்போம். அதென்னவோ தெரியவில்லை எந்தத் தென்னை மரத்திலிருந்தும் தென்னமட்டையோ ஏன் கூந்தல்கூட யார்தலைமீதும் விழாத அதிசயம் இன்றும் கூடத் தொடர்கிறது. ஆனாலும் வீட்டை விரிவாக்கம் செய்வதற்கோ நவீனப்படுத்துவதற்கோ அல்லது கதைகூறுவதுபோல மின்கம்பிக்கு இடையூறென்றோ வெட்டுப்படத் தயாராய் இருக்கும் தென்னை மரங்கள் புத்திரபாசத்தைத் தாங்கி நிற்பவைதான்.
இப்படியே தொகுப்பில் உள்ள எல்லாக் கதைகளையும் சொன்னால் நீங்கள் வாங்கி வாசிக்க வேண்டாமா?
நூல்: சுற்றந்தழால்
ஆசிரியர்: தாணப்பன் கதிர்
விலை : ரூ.120/-
பக்கம்: 108
வெளியீடு: சந்தியா பதிப்பகம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
வேசம்! சிறுகதை – வேலுச்சாமி
உண்மையாக ஆண்,பெண் இருவரும் மனதளவில் விரும்பி திருமணம் செய்வதும் உண்டு. ஒருவரை ஏமாற்றி, பொய்யுரைத்து அழகுக்காகவோ, சொத்துக்காகவோ, பழிவாங்கவோ காதல் திருமணங்கள் அபூர்வமாக சில நடப்பதும் உண்டு. இந்த இரண்டாவது வகையான காதலில் மாட்டித்தவிப்பவள் தான் மீரா!
மீரா எம்.எஸ்ஸி., படித்து விட்டு ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்க்கிறாள். பள்ளிக்கு தன் அக்கா குழந்தையை விட்டுச்செல்ல, திரும்ப கூட்டிச்செல்ல தினமும் வந்த கருண் அடிக்கடி பேச்சு கொடுப்பதும், நடந்து வருபவளை தன் பைக்கில் அழைத்து வருவதுமென நெருங்கிப்பழக, விடுமுறை நாட்களில் ஊட்டி, கொடைக்கானல் என சுற்றுலா ஸ்தலங்களில் சுற்ற ஆரம்பித்து விட்டனர்.
“இத பாரு அரசி, உம் பொண்ணுக்கு கண்ணால ஆச வந்திருச்சுன்னு நெனைக்கிறேன். படிக்காம, வேலைக்கும் போகாம, அப்பா, அம்மாவ மிரட்டி சொத்த எழுதி வாங்கி வித்து குடிச்சே அழிச்சிட்டு, ஊர் பூராம் கடன் வாங்கிட்டு சுத்தற கண்ணாம் பையன் கூட உம் பொண்ணு சுத்தறான்னு கேள்விப்பட்டேன். பையன் நமக்கு பழைய சொந்தம்னாலும் ஒழுக்கமில்லியே…?!”
என சலித்துக்கொண்டவர் தொடர்ந்து அக்கரையாக பேசினார்!
“நாலுபேரு நாலு விதமா பேசறாங்க. எம் பையன் கந்துவுக்கு என்ன கொறைச்சல்? வருசத்துக்கு மூணு பட்டம் முழுசா எடுக்கறான். படிக்காட்டியும் ஒழுக்கமா இருக்கான். கடன் கிடையாது. பண்பா, அன்பா நடந்துக்குவான். ஊன்னு சொல்லு உடனே கண்ணாலத்த முடிச்சிடலாம். அம்பது ஏக்கரா இருக்கு அம்மணி. யோசன பண்ணிட்டு சொல்லியனுப்பு. பரிசம் போட வாரேன்” என சொல்லி விட்டு புல்லட்டில் புழுதி பறக்க சென்றார் மீராவின் மாமன் செல்லதுரை.
“லுங்கி கட்டி, மங்கி கணக்கா முடிவிட்டுட்டு சுத்தற மாமா பையன் கந்து வை என்னோட புருசனா நெனைச்சு பார்க்கவே முடியலை. கருணோட கருணையான மனசும், ஒரு போனடிச்சா சொன்னதச்செய்யற வேலைக்காரனா உடனே வந்து நிக்கறதும், யோசிக்காம கேட்டதை வாங்கிக்கொடுக்கிறதும், முகத்தை சிரிச்ச மாதிரி வச்சுக்கிறதும் எனக்கு ரொம்பவும் பிடிச்சுப்போச்சு. அதுவும் உன் அம்மாவோட பழைய சொந்தம், முறைப்பையன் முறைதான்னு சொன்னான். கருண் இல்லாம இனி மீரா இல்லை”என்றாள் தாயிடம் மிகவும் உறுதியுடன் மீரா!
“முறைப்பையனா இருந்தாலும், முறையானா பையனா இருக்கோணும்னு தான் பெத்தவங்க நாங்க நெனைப்போம். நீ இவ்வளவு பிடிவாதமா இருக்கறேன்னா அவன் சூனியக்காரன் கிட்டப்போய் மை வாங்கி உம்மேல தடவியிருப்பான். இல்லேன்னா மந்திரிச்சு விட்ட கோழி மயக்கத்துல சுத்தி சுத்தி வாரமாதிரி நீ இருந்திருப்பியா..? எங்கண்ணஞ்சொல்லாமிருந்தா எனக்கெங்க போய் இதெல்லாந்தெரியப்போகுது?” சொல்லி பெருமூச்சு விட்ட தாய் அரசியால் அதற்க்கு மேல் பேச முடியவில்லை. கண்ணீரை மட்டுமே பதிலுக்கு சிந்தினாள்.
‘முழுக்க நனைந்த பின் முக்காடு எதுக்கு? ‘என நினைத்த மீரா, கருணின் பெற்றோரை சந்திச்சு திருமணம் பற்றி பேச எண்ணியவளாய் அவன் வீட்டுக்கே சென்றவள் கருணின் கணீர் குரலைக்கேட்டு நெலவோரம் ஒதுங்கி நின்றாள்.
“மாப்ளே இந்த டைம் எனக்கு சுக்கிரன் உச்சத்துல நின்னு வேலை செய்யறான். மீரா நான் விரிச்ச வலைல கச்சிதமா மாட்டிட்டா. ஒரே பொண்ணு, படிச்ச பொண்ணு, அதுவும் வசதியான பொண்ணு. பத்தனப்பு வருசம் பூரா வெளைஞ்சேருக்கும். பணங்காசுக்கு பஞ்சமிருக்காது. அவள கல்யாணம் பண்ணிட்டா காலத்துக்கும் இப்படியே மனம்போல வாழ்ந்துக்கலாம். ஒரு கொழந்தீன்னு பொறந்துட்டா நாம சொல்லறத அவளக்கேக்க வப்போம். அது வரைக்கும் நன்றியுள்ள நாயா நடிப்போம்”என்ற கருணின் பேச்சின் உள்ளர்த்தம் புரிந்த மீராவுக்கு உடம்பு நடுங்கியது. அவன் தம்மை திட்டமிட்டு ஏமாற்றுவதாக புரிந்து கொண்டாள்!
அடுத்த நொடியே டெண்டுல்கர் அடிச்ச சிக்சர் பந்தாக வீடு வந்தவள், தன் தாயிடம் சென்று பாசமாக கட்டியணைத்தவாறு, தன் தாய் மாமன் மகன் கந்துவை திருமணம் செய்ய ஒத்துக்கொண்ட போதும் தாயின் கண்களில் கண்ணீர் வந்தது….! இப்போது வந்தது ஆனந்தக்கண்ணீர்!
அன்னூர் K.R.வேலுச்சாமி
srivelanastro@gmail.com
செல்:9842236995
பரக்கத் சிறுகதை – மு.அராபத் உமர்
”எக்கா….. ஜன்னத்தக்கா…. இங்க வந்து பாரு ஓ மகே செஞ்சுருக்க காரியத்த….” என்று தெருக்குழாயில் தண்ணீர் பிடித்துக்கொண்டே சத்தம் போட்டாள் பேகம். பெரிய இரண்டு தெருக்களை இணைக்கும் சந்தில் தெருக்குழாய் அமைந்திருந்தது. சிறிது சிறிதாக நான்கு ஐந்து முட்டுச் சந்துகளும், அடர்த்தியாக வீடுகளும் அங்கிருந்தன. அந்த ஊரிலேயே முதன் முதலில் அவர்களின் சந்துக்கு தான் அடிகுழாய் போட்டார்கள் என்று புதிதாக வருபவர்களிடம் பெருமை பேசுவார்கள் அப்பகுதி மக்கள்.
அதிகமாக அந்த தெருவில் இருப்பவர்கள் சொந்த வீட்டுக்காரர்களாகவே இருந்தனர். இரண்டு மூன்று அடுக்கு மாடி வீடுகளும், நிறைய குடிசை வீடுகளும், ஓட்டு வீடுகளும் இருந்தன. அதில் ஒரு பெரிய காம்பவுண்டு வீடும் இருந்தது. அந்த தெருவில் ஜன்னத் கணவன் இன்றி ஒரு மகனுடன் ஒரு சிறிய குடிசை வீட்டில் இருந்தார். ஜன்னத்திற்கு ஒரு கண்ணில் பூவிழுந்தது என்று கூறுவார்கள். அன்று வெள்ளிக்கிழமை காலையில் தெருக்குழாயில் தண்ணீர் வந்து விட்டது. பெண்கள் காலை வேலைகளைப் பார்த்துக்கொண்டே தண்ணீர் பிடிப்பது என்பதே சிரமமான வேலை. அதிலும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் நேரத்தில் இவை நடந்தால்…
“நாசமா பேறவே…. எந்த நேரத்துல தண்ணிவிடனும்ன்னு தெரியாதா.. பொசகெட்டவே” இன்னும் திட்டுவதற்கு என்ன என்ன வார்த்தைகள் உள்ளதோ அனைத்தையும் பெண்களிடம் இருந்து கேட்கலாம், தெருக்குழாய்களில் தண்ணீர் வரும் போது.
“ஆமாடி… அவே…. நாசமா போனா பத்து நாளைக்கு விடுற தண்ணியும் விடமாட்டே. கொடம் நெறஞ்சுருச்சு மூடிட்டு தூக்கிட்டுப்போ..” என்றாள் பக்கத்தில் நிற்கும் பெண் ஒருத்தி. இவ்வளவு பரபரப்பிலேயும் ஜன்னத்தின் மகனைப் பார்த்தவுடன் சத்தம் குடுத்தாள் பேகம்.
பேகத்தின் சத்தம் கேட்டு திடுக்கிட்டாள் ஜன்னத். மனதிற்குள் ஏதேதோ ஓடின ”அவனுக்கு தண்ணி போடும் பழக்கம் இல்லையே. அத எங்கினையும் பழகிட்டானா….” என்று மனதிற்குள் புலம்பிக்கொண்டே வெளியில் வந்தாள். அந்த சந்தின் துவக்கத்திலேயே அவனையும், உடன் ஒரு பெண்ணையும் நிற்க வைத்திருந்தனர். அவனைச் சுற்றி பெண்கள் கூடிவிட்டனர். ஜன்னத்திற்கு ஒரு கண்ணில்தான் பார்வை என்பதால் பதறிய நிலையிலேயே அருகில் போனாள். ஜன்னத் பார்ப்பதற்கு குட்டையாக இருந்தாலும், உழைத்து உழைத்து இறுகிய உடல். மகன் நிஜாம் லாரியில் டிரைவராக வேலை செய்கிறான். ஆந்திராவுக்கு அடிக்கடி லாரியில் போனவன் அங்குள்ள பெண்ணை விரும்பி தன்னுடன் அழைத்து வந்துவிட்டான். ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்டவள். ஒல்லியான உடல் வாகு. வெள்ளைநிறம், சுருட்டை முடி. பார்த்த உடன் ஈர்க்கும் முக அமைப்பு. நேர் வாகு எடுத்து பின்னலிட்டிருந்த சடை. இடுப்புவரை நீளமிருந்தது. புடவையை தலையில் பேட்டு அவனுடன் நின்றிருந்தாள். இதற்கு நேர் எதிரானவன் நிஜாம். நிஜாமின் மீது கொண்ட அதீத அன்பினால் அவனுடன் வாழ ஆசைப்பட்டு வந்துவிட்டாள். தமிழ் கொஞ்சம் தெரிந்து வைத்திருந்தாள் அந்த பெண். லாரியில் இருந்து இறங்கும் நாள் என்று எதிர் பார்த்து காத்திருந்த ஜன்னத்திற்கு அந்த நிகழ்வு அதிர்வை ஏற்படுத்தியது.
”அடப் பாவி யாருஞ் செய்யாத காரியத்த, ஏண்டா இப்டி ஏ தலையில கல்லத்தூக்கி போட்ட… பாவிப்பயலே…. எந்தக் காட்டுச் சிறுக்கியோ… எங்க இருந்துடா இவள இழுத்துட்டு வந்த ” என்று அழுது கொண்டே அவனை அடித்தாள் ஜன்னத்.
“ம்ம்மா… நல்ல புள்ளமா… எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்துச்சு.. நம்ம குடும்பத்துக்கு ஏத்த பொண்ணுதேம்மா… அவளுக்கு யாருமில்லமா, நம்மாளுகதே…” என்று கெஞ்சும் தொனியில் அவன் சொல்லி முடிப்பதற்குள் ஜன்னத் துவங்கினாள்.
“அட நாசமா பேற பயலே, யாருமில்லாத அனாதச் சிறுக்கிதான ஒனக்கு கிடச்சுச்சு… அதுவு……மில்லாம மூஞ்சியப் பாத்தா நம்மாளுக மாறியா இருக்கு….காஃபிரு {மற்ற மதத்தினரை அவ்வாறு கூறுவார்கள்} கூப்ட்டு நடுமனைல ஏத்தவா” என்று கத்திக்கொண்டே அவளையும் கன்னத்தில் இரண்டு அறை அறைந்தாள் ஜன்னத்.
“ம்ம்ம்மா…… காஃபிரு இல்ல உருது பேசுற முஸ்லிதே” என்றான் நிஜாம்.
“துலுக்க பய… மாதுரியடா பேசுர….. காஃபிருகலோட சேந்து சேந்து எப்டி பேசுறே பாரு” என்று கோபத்திலும், பதட்டத்திலும் என்ன பேசுவதென்றே தெரியாமல் புலம்பினாள் ஜன்னத்.
சத்தம் கேட்டு பெரிய வீட்டு அத்தா வெளியில் வந்தார். அவர் பெயர் கான் முகமது என்றாலும் அந்த தெருவில் பெரிய வீட்டுஅத்தா என்றே அழைப்பார்கள். அவர் பேச்சிற்கு மறுப்பு கூற மாட்டார்கள். அனைவருக்கும் அவர்மேல் தனி மரியாதை உண்டு. உதவி என்று கேட்பதற்கு முன்பே அவர்களின் நிலை புரிந்து உதவி செய்வார். அவரின் சொந்த வீடுதான் அந்த காம்பவுண்டு வீடு. மிகவும் குறைந்த பணத்திற்கு வாடகைக்கு விடுவார். அங்கு வாடகைக்கு வந்து தங்குபவர்கள் வெளியூர்களுக்கு சென்றால் மட்டுமே மாறிப்போவார்கள்.
“ஏ…. ஜன்னத்து ஏ…. என்ன சத்தம் போட்டுட்டு இருக்க” என்றார்.
“அத்தா… இவஞ் செஞ்ருக்க காரியத்த பாத்திங்களா..” என்று கதறினாள் ஜன்னத்.
“ம்ம்ம்ம்… கேட்டுக்கிட்டுதே இருந்தேன். அவனுக்கு புடிச்ச புள்ளைய கட்டலாம்ன்னு கூப்ட்டு வந்துருக்கான். முஸ்லிம் புள்ள தான. என்ன நாம தமிழ் பேசுவோம்… அவங்க உருது பேசுவாங்க… அவ்வளவுதேன. அவே விருப்பத்த ஒண்ட்ட தான சொல்றேன். எங்குனையும் போய் கல்யாணம் பன்னியா கூட்டிட்டு வந்துட்டான்.. அத்தா, அம்மா இல்லாத புள்ள ஜன்னத்து ஒன்னிய அண்டி இருந்துக்கும்… வீட்டுக்கு கூப்ட்டு போ. ஆக வேண்டியதப் பாரு” என்றார்.
“கல்யாணோம் என்னாண்டு முடுச்சானோ வீட்ல என்னான்டு ஏத்துறதுத்தா” கொஞ்சம் நிதானித்துக்கொண்டு ஜன்னத் கேட்டாள். அதற்குள் முந்தரிக் கொட்டையாய் முந்தினான் நிஜாம்
“இன்னுங் கல்யாணம் முடிக்கலத்தா… ”
”கல்யாணம் முடிக்காம சின்னப்பிள்ளையை வீட்ல வைக்க முடியாது நிஜாமு… இன்னக்கி சாந்தரோ மகரிபுக்கு அப்புறோம் கல்யாணம் முடிச்சர்லாம்… நா ஜமாத்துல பேசிர்றேன்” என்றார் கான் முகமது.
பேகம் முன் வந்து “கல்யாணம் முடியுற வரைக்கும் பொண்ணு எங்க வீட்ல இருக்கட்டும்” என்றாள். மாலையில் மகரிபு தொழுது முடித்து வீட்டிற்கு வரும்போது கான் முகமது ஜமாத்துடன் வந்தார்.
“பொண்ணு பேரு என்ன நிஜாமு… அதாவது தெரியுமா…?” கான் சிரித்துக் கொண்டே கேட்டார். “வச்ச பேரு நொக்கத்து…. நான் பரக்கத்துன்னு கூப்டுவேன்” என்றதும் கான் சிரித்துக்கொண்டே
“பரக்கத்….. நல்ல பேரு …. அதுவே இருக்கட்டும்… நம்ம பக்கம் நொக்கத்துண்ணா புரியாது” என்றார். அனைவரின் சம்மதத்துடன் கல்யாணம் நடந்து முடிந்தது. ஜன்னத் கொஞ்சம் கொஞ்சமாக சமாதானமானார்.
“அத்தா… ஒன்னு சொல்லனு” தயக்கத்துடன் ஜன்னத் கூறினாள்.
“ என்ன… சொல்லு” என்றார் கான்.
“வீடு சின்னது அங்க தங்க சவுரியம் பத்தாது… அதுனால தனியா வீடு பாத்து வச்சுறலாம்ன்னு யோசிக்கிறேன்” என்று இழுத்தாள்.
“ம்ம்ம்… புரியுதும்மா…. நம்ம காம்பவுண்டு வீடுகல்ல ஒன்னுகாலியாத்தே இருக்கு அதுல இருக்கட்டும்” என்றார் கான்.
“சரிங்கத்தா… “ என்று ஜன்னத்தின் மகன் கூறினான்.
” சரிப்பா…. மாசம் இருபது ரூபா வாடக குடுத்துரு, அம்மாவையும், சம்சாரத்தையும் நல்லா பாத்துக்க” என்றார் கான்.
”சரிங்கத்தா…” என்று சந்தோஷத்துடன் சென்னான் நிஜாம்.
புது வீட்டில் வாழ்க்கையைத் துவங்கினார்கள். ஜன்னத்தும் முதலில் கோபமாக இருந்தாலும், மகனின் பாசம் அவளை மாற்றியது. ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவள் என்றாலும், தமிழ் நாட்டில் ஒரு பகுதியில் உள்ள முஸ்லிம் கலாச்சாரத்தைக் கற்றுக்கொண்டாள். அங்கிருந்தவர்கள் ஒரே குடும்பத்தினரைப் போன்று பழவதால் அவர்களின் பேச்சு வழக்கு அவளுக்கும் அப்படியே வந்து விட்டது.
திருமணமாகி எட்டு மாதங்கள் ஆயின. அந்த தெருவில் இருந்தவர்கள் பரக்கத்திடம் ஏதும் விசேசமில்லையா என்று கேட்க துவங்கினர். ஒவ்வொரு மாதமும் எதிர்பார்த்தாள் பரக்கத். ஒரு நாள் இரண்டு நாள் தள்ளி இருந்தாலே இந்த மாதம் கரு உருவாகிவிட்டதோ என்று எதிர்பார்த்தாள். ஓரிரு நாட்களிலேயே தலைக்கு குளிக்கும் போது அவளால் அழுகையை அடக்க முடியவில்லை. திருமணமாகி ஒரு வருடம் முடிந்தது. முதல் திருமண நாள் அன்று லாரி ஓட்டம் முடிந்து வீட்டுக்கு வந்து விட்டான் நிஜாம். பரக்கத்தை வெளியில் கூட்டிக்கொண்டு போக ஆசைப்பட்டான்.
“பரக்கத்து… நாளைக்கு நாம வெளியில போகனும். சீக்கிரமாவே கெளம்பிரு. ஏ ஃபிரண்டுட்ட பைக்கு கேட்ருக்கி அதுல போலாம்” என்றான் நிஜாம்.
“எங்க போறோம்” என்றாள் பரக்கத்.
“அதெல்லாம் சொல்லமுடியாது…. நம்ம போகும்போது பாத்துக்க” என்றான் கொஞ்சும் தொனியில் நிஜாம்.
“இல்லங்க இன்னக்கி பீரியட் ஆக வேண்டியது….. இன்னு வரல நாமவெளில போய் அலையுறதுல வந்துருச்சுன்னா. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்” என்றாள் பயத்துடன்.
“இங்க வாடி…. ஏ அருமபொண்டாட்டி. புள்ள அல்லா குடுக்குறது. நம்ம எதுவு செய்ய முடியாது. அவனுக்கு தெரியும்ல எப்ப குடுக்கனும்ன்னு. சும்மா…. மூச்சுக்கு முன்னூறுதடவ அல்லா, அல்லான்னு சொன்னா போதுமா … நம்பு” என்று அவளை சமாதானப் படுத்தி சம்மதிக்க வைத்தான்.
மறுநாள் காலையில் பரக்கத் சீக்கிரமாக கிளம்பினாள். நிஜாம் வாங்கிக் கொடுத்த புதுச் சேலையை கட்டி, தலை நிறைய பூவைத்து அது வெளியில் தெரியாத வாறு தலையில் சேலையை போட்டுக்கொண்டு வண்டியில் ஏறினாள். முதல்முறை என்பதாள் வண்டியில் உள்ள கம்பியை ஒருகையில் இறுக்கமாகப் பிடித்திருந்தாள். இன்னொரு கையில் சேலை தலையிலிருந்து கீழே விழாமல் அதையும் அவ்வப்போது சரி செய்து கொண்டாள். அவள் முகத்தில் தெரியும் சந்தோசத்தை கண்ணாடியில் பார்த்து மகிழ்ந்துகொண்டே வண்டியை ஓட்டினான் நிஜாம்.
நேராக வண்டி வைகை டேமை நோக்கி போய் நின்றது. பரக்கத்திற்கு சந்தோசம் தாங்க முடியவில்லை.
“ஏங்க இந்த எடத்த நா ஒரு படத்துல பாத்துருக்கே…” என்று பரபரப்பாக கூறினாள். நிஜாமின் ஊரில் இருந்து நாற்பது நிமிடம். ஆனாலும் சந்தோசத்தில் களைப்பே தெரியவில்லை இருவருக்கும். டிக்கட் வாங்கிவிட்டு உள்ளே போனதும், அங்கு இருக்கும் செடி, கொடியில் மலர்ந்திருக்கும் பூக்கள், பூப்போன்று தண்ணீர் வருவது அனைத்தையும் அதிசயமாக பார்த்தாள். சிறிது தூரம் மேலே சென்றவுடன் குழந்தைகள் விளையாடுவதற்கு பூங்கா அமைக்கப்பட்டிருந்தது. அங்கு சென்றவுடன் பரக்கத்திற்கு சிரிப்பு அடக்க முடியவில்லை. கீழே விழுவது போல சிரித்தாள். நிஜாமிற்கு எதுவும் புரியாமல் அவள் சிரிப்பதையே பார்த்துக்கொண்டிருந்தான். இங்கு வந்த பிறகு, அப்படி அவள் சிரித்து ஒரு முறைகூட அவன் பார்த்தது இல்லை.
“ஏண்டி இப்டி சிரிக்கிற, என்ன….” என்று அவனும் சிரித்துக்கொண்டே கேட்டான்.
ஒரு யானையின் சிலையை காண்பித்து மறுபடியும் சிரிக்க தொடங்கினாள்.
“என்னடி லூசு மாதிரி சிரிச்சுட்டு இருக்க, என்னன்னு சொல்லிட்டு சிரி” என்றான்.
“அந்த யானைய பாத்திங்களா குண்டி வழியா போய்ட்டு வாய்வழியா வர்ர மாதிரி கட்டிருக்காங்க” என்று சொல்லிக்கொண்டே குழந்தை போல மறுபடியும் சிரித்தாள். சிரிது நேரத்திலேயே அங்கிருந்த குழந்தைகளுடன் சேர்ந்து அவளும் விளையாட துவங்கினாள். அங்கு விற்ற மாங்காய், சிப்ஸ், சர்பத் என்று சாப்பிட்டதால் மதிய உண்வு தேவைப்படவில்லை இருவருக்கும். மாலை மணி ஐந்தை நெருங்கியது. வீட்டிற்கு போவதற்கு தயாரானாள். இரவு நன்றாக தூங்கினாள் பரக்கத். பத்து நாட்கள் கடந்த பின்பு காலையில் எழுந்ததும் ஒமட்டிக்கொண்டு வாந்தி வந்தது. பரக்கத்தின் மாமியாரின் வருகைக்காக காத்திருந்தாள். பத்துமணிக்கு அவள் வந்ததும், பரக்கத் அவளிடம் கூறினாள். “நாள் தள்ளிப் போயிருக்கு மாமி…” ஜன்னத்திற்கு மகிழ்ச்சி தலைக்கேறியது
“இதுக்கு பேருதேல மசக்க… ஒனக்கு புடிச்சத சாப்டு. இனிதே நீ கவனமா இருக்கனும். புடிச்சத சாப்டனும்ன்னு இஷ்ட்டத்துக்கு சாப்ட்டுட்டு இருக்க கூடாது. சத்தானதா சாப்டு. ஒனக்கு என்னா வேணுமே எண்ட்ட கேளு… அவன்ட்ட சொல்லிட்டியா” என்றாள் ஜன்னத்.
“வெளிய பேய்ருக்காங்க வரவும் சொல்லனும்” என்றாள் பூரிப்புடன். நிஜாமிடம் சொன்னதும் தலைகால் புரியவில்லை. வேலைக்கு போன நாட்கள் போக வீட்டில் இருக்கும் நாட்களில் அவளைத் தாங்கினான். பத்து மாதத்தில் ஒரு அழகான ஆண்குழந்தையைப் பெற்றாள். அழகாக நாட்கள் நகர்ந்தது. மாதங்கள் போய் வருடங்கள் ஆகின.
“ஏங்க இந்த மாசம் லாரிக்கு போய்ட்டு சீக்கிரம்மா வந்துருங்க புள்ளைக்கு பொறந்த நாள் வருது” என்றாள். மறுநாள் லாரிக்கு கிளம்பினான்.
“பரக்கத்து நா ஓனர்ட்ட பேசிட்டீ… லாரி திரும்ப லேட் ஆச்சுன்னா நா அந்த தேதிய ஒட்டி பஸ்ல வந்துர்ரீ. கூட வர்ரவுங்க லாரிய எடுத்துட்டு வந்துருவாங்க” என்றான்.
நாட்கள் கடந்து பிறந்த நாள் தேதி வந்தது. பரக்கத்தும் குழந்தையும் ஆவலுடன் எதிர் பார்த்தனர். பரக்கத்தின் கணவன் வேலை செய்யும் லாரியின் ஓனர் பெரிய வீடு அத்தா கானை பார்க்க வந்தார். ஜன்னத்தையும், பரக்கத்தையும் கான் ஆள்விட்டு அழைத்தார். இருவரும் வந்ததும் லாரியின் முதலாளி ஜன்னத்திடம் தயங்கித் தயங்கி வார்த்தைகள் தடுமாறி
”அம்மா……. லாரி திரும்ப வரும்போது மதுர பக்கத்துல வேற ஒரு லாரில மோதிடுச்சு………” என்று அவர் முடிப்பதற்குள்
“அவருக்கு ஒன்னு ஆகலைலண்ணே…….” என்றாள் பரக்கத்.
“இல்லம்மா……ரெண்டு பேரு……..” என்று அவர் கூறும்போதே புரிந்தது அவர்களுக்கு.
ஜன்னத் பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினாள்… “என்ன…. பெத்தவனே…… எனக்கு முன்னாடி என்னிய விட்டுட்டு போய்ட்டியா, ஏ புள்ள இல்லாம நா என்னாம்பி…… ஏ ராசாவ நா என்னாண்டு பாப்பி….” ஜன்னத்தின் குரல் கேட்டு தெருவே கூடின. பரக்கத்தால் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடிய வில்லை. உலகமே நின்றதுபோல இருந்தது.
“அங்க ஆக வேண்டியத நான் பாத்துட்டீன்த்தா இன்னு மூனுமணி நேரத்துலகொண்டு வந்துருவாங்க, இங்க நீங்க பாத்துக்கோங்க…” ஜன்னத்தின் அருகில் போய் “உங்களுக்கு எந்த உதவினாலும் கேளுங்கம்மா…” என்று சொல்லிவிட்டு கிளம்பினார் முதலாளி.
கான் கூறுவதற்கு வார்த்தைகள் அற்று அமர்ந்திருந்தார். அங்கு கூடியவர்கள் பரக்கத்தை அழைத்துக்கொண்டு போனார்கள். பரக்கத்தின் அமைதியைப் பார்த்து ”அழுதுரு அழுதுரு..” என்று கூறிப்பார்த்தனர். ஆனால் அவள் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. மீண்டும் அனாதை ஆகிவிட்டதுபோல உணர்ந்தாள். உலகமே இருட்டிவிட்டது போல இருந்தது.
மூன்று மணி நேரத்தில் பரக்கத்தின் கனவனைக் கொண்டு வந்தனர். போஸ்ட்மார்டம் செய்து குடுத்திருந்ததால் முகத்தை முழுமையாக யாராலும் பார்க்க முடியவில்லை. எல்லோரும் கதறும் சத்தம் கேட்டும் பரக்கத் அமைதியாகவே இருந்தாள். நிஜாமின் உடல் அருகில் அமர்ந்து முகத்தைப் பார்த்தவாறே அமர்ந்திருந்தாள். அரை மணி நேரத்தில் உடலை பள்ளிவாசலுக்குத் தூக்கிச்சென்றனர். அப்போதும் பரக்கத் அழவேயில்லை என்பதை தெருவே பேசியது. ஒரு வாரம் கடந்தது, பரக்கத் மகனையும் மறந்து தன் நினைவே இல்லாமல் இருந்தாள். ஜன்னத்திற்கு பயம் வந்தது. எழுந்து பரக்கத்தின் அருகில் போனாள். பேகம் பரக்கத்திடம் ஏதேதோ பேசிப்பார்க்கிறாள், எதற்கும் அசைவு இல்லை அவளிடம்.
ஓங்கி பளார் என்று பரக்கத்தின் கன்னத்தில் அறைந்தாள் ஜன்னத். அப்போது தான் நிலைகுத்தி நின்றிருந்த கண்கள் அசைந்தன.
“என்னாடி ஆச்சு ஒனக்கு, நீயு இப்டி இருந்து போய்ட்டனா புள்ளைய தெருவுலையாடி விட முடியு. அவெஞ் சாப்டானா இல்லையான்னு பாத்தியா. ஏ எனக்கு மட்டு புள்ளையில்லையா நிஜாமு….. கஷ்டமாத்தே இருக்கு அதுக்கு அப்டியே ஒக்காந்திருந்தா போனது திரும்ப வந்துரும்மா…. வருத்தோ வயித்துக்கு தெரியுமா, அடுத்தவேலையே பசிக்கும். அதாண்டி வாழ்க்க.. எந்திருச்சு பொழப்ப பாப்பிய இருளடிச்ச மாதிரி ஒக்காந்துருக்கா” என்று கண்களில் கண்ணீருடன் சொல்லிக்கொண்டே நடந்தாள். நின்றிருந்த அம்மாவை ஓடி வந்து கட்டி அனைத்தான் பரக்கத்தின் மகன் காஜா.
“ம்ம்மா…. பசிக்கிது, ஏதாவது செஞ்சு குடும்மா” என்றான் காஜா. வெளியில் வந்தாள் பரக்கத் மகனை தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டாள். அப்போது கண்ணீருக்கு இடையில் ஒன்றை முடிவு செய்தாள். மகனை பசியுடன் விட்டுவிடக் கூடாது என்று. கையில் இருந்த பணத்தை வைத்து ஒரு மாதம் ஓடியது. தினமும் பேகம் பரக்கத்தை வந்து பார்த்துவிட்டு குழந்தைகளுக்கு ஏதாவது ஒன்றை சாப்பிடுவதற்கு கொண்டு வருவாள். வீட்டுக்கு வந்த ஜன்னத்திடம்
“மாமி கையில பணம் ஏது இல்ல அடுத்த மாசத்துல இருந்து என்ன பன்றதுன்னு தெரியல” என்றாள் பரக்கத். பகலில் வேலையை முடித்துவிட்டு பரக்கத்திற்கு துணையாக வந்துவிடுவாள் பேகம். அன்றும் அவள் உடனிருந்தாள்
”ஏதாவது வேலைக்கு போகவா” என்றாள் பரக்கத்.
“புள்ளையை என்ன செய்வ… ஒன்னையவிட்டுட்டு இருக்க மாட்டானே” என்றாள் ஜன்னத்.
ஆழ்ந்து யோசித்துவிட்டு ”பேசாம ஏதாவது கட போடுறியா” என்றாள் ஜன்னத்.
”ஏ…. இட்லி கட போடுல நல்லா…. ஏவாறோ ஆகும் . அதும் ஒ பஞ்சு போல இட்லி, தண்ணியா தேங்கா சட்னி, கூடவே அந்த மொளகா சட்னி எல்லருக்கு புடிக்கும்ல நமக்கு தெரிஞ்ச வேலைய நம்ம திருப்தியா பன்னலாம். என்னா ஜன்னத்தக்கா நா சொல்றது” என்றால் பேகம்.
“ஆமா பரக்கத்து அல்லா மேல ஈமான வெச்சு ஆரம்பிக்கலாம். ஒங்க மாமா ஒ… புருசே சின்ன பயலா இருக்கும்போதே எறந்துட்டாரு. என்னா பன்றதுன்னு ஒன்னு வெளங்கல. நாம சும்மா இருந்தாலு நம்ம வயிறு சும்மா இருக்குமா. புள்ளைக்காக வாவது ஏதாவது செய்யனும்ல. வட சுட்டுத்தே விக்க ஆரம்பிச்சேன், அதுல இருந்து வந்த பணத்துலதே அவன ஆளாக்குனே… அதுலதே ஏ… பேரு ஊர்ல எல்லாரு வட ஜன்னத்துன்னு கூப்ட ஆரம்பிச்சாக. நோம்பு நேரத்துல நல்லா ஏவாரம் இருக்கும். இட்லிக்கடைல என்ன வந்தர போகுதுன்னு யோசிக்காத அல்லா மேல ஈமான வை, அவே வெதச்சதுக்கு தண்ணி ஊத்த மாட்டானா” என்றாள் ஜன்னத்.
பரக்கத் மிகவும் தயக்கத்துடன் கேட்டாள்
“ இல்ல மாமி இன்னு இத்தா முடியல, அதா யோசனையா இருக்கு”.
“படச்சவனுக்கு தெரியாதா..? யாரு….எதுக்காக என்னா செய்யிறாங்கன்னு..? சட்ட திட்டமெல்லா நம்ம போட்டுக்கிட்டதுதானே… ஊரு பேசும்ன்னா, நேத்து என்னைய பேசுச்சு, இன்னக்கி ஒன்னைய பேசும், நாளைக்கு யாரையோ…. எப்பிடி இருந்தாலும் பேசுவளுக பேசிக்கிட்டுத்தான் இருப்பாளுக… பேச்சு வரத்தாஞ் செய்யும்….கண்டத யோசிக்காம வேலைய ஆரம்பி..” என்று சொல்லிக்கொண்டே வெளியே நடந்தாள் ஜன்னத். பரக்கத்தின் மனதில் நம்பிக்கை துளிர்த்தது.
பரக்கத்தின் இத்தா காலம் முடிவதற்குள் வீட்டு வாசலில் ஒர் இட்லிக் கடை உருவாகிவிட்டது. இட்லியைப் பற்றிய பேச்சு தெரு முழுவதும் நிறைந்திருந்தது. யாரும் இத்தாவைப் பற்றி பேசவேயில்லை.
– மு.அராபத் உமர்
healerarafath@gmail.com
பாண்டிமுனி சிறுகதை – இரா.கலையரசி
பளபளன்டு விடியற நேரத்துல,மெட்டா நடந்து வருது பாண்டியம்மாள் சேவல். “கொக் கொக்” கழுத்தை தூக்கி கொண்டையை ஆட்டுற அழக நாள் பூராவும் பார்க்கலாம். தூரத்து மேகம் சாவாவ பார்த்து கண்ண சிமிட்டுது. செவசெவன்டு திமிறி நிக்குது “பாண்டி” ஆமாம் ! அதேன் அதோட பேரு. குத்தி இடிச்ச குருணையைக் கொண்டாந்து போட்டா பாண்டியம்மாள்.
“குட்டி கண்ணு” ” செல்ல தேனு” குரலைக் கேட்டதும் மிடுக்கா ஓடி வந்திடுச்சு.’என்னா! ஒரு அழகு? என் ராசா என் மன்மதன்..’ கொஞ்சி விளையாடுறா பாண்டியம்மாள்.
வெரசா நடந்து வந்துக்கு இருக்காரு மாயாண்டி. பாண்டியம்மாள் அப்பன். காட்டுல மொச்சை போட்டு இருக்காரு. ஒரு ஏக்கரா நெலந்தான் அதுல உசுரா இருக்காரு.
மழை போக்கு காட்டிக்கே இருக்கு. வர மாட்டேனு வம்பு பண்ணிகிட்டு இருக்கு. ரொம்ப தவிச்சு போனாரு.
வளர்ந்து நிக்கிற வெள்ளாமையா நிக்கிறா பாண்டியம்மாள். வெளச்சலும் இல்ல. பாண்டியம்மாள் கலியாணத்தையும் நடத்த முடியல.
“என்னா மனுசா இப்புடி கெறங்கி போய் இருக்க. மதியம் கஞ்சி குடிக்க வாரேனுட்டு வராமலே இருந்துகிட்ட.” கேட்கிறாள் பவளம்.
“அடி போடி புள்ளயா வளத்த செடிங்க. மழை இல்லாமல் காய்ஞ்சு கெடக்குதுங்க. வகுத்துக்கு இல்லாட்டி என்னா இப்ப?”
“அட கூறு கெட்ட மனுசா.? ஒன்னைய நம்பி தான் மொத்த குடும்பமும் ஒக்காந்து இருக்கு.இந்தா ஒன் மகள் எப்புடி இருக்கான்டு பார். வெவரம் பத்தாத புள்ளையா இருக்கா பாண்டியம்மாள். இவள் சோட்டு காரிக கையில ஒண்ணும் வயித்துல ஒண்ணுமா இருக்காங்க.
நம்ம புள்ள வெளைஞ்ச கதிரா இருக்கு. பருவத்துல பயிர் செய்யனுமுன்னு நான் சொல்லி தெரிய வேண்டியது இல்ல.
“அதெல்லாம் தெரியாமலயா இருக்கு. கைக்கும் வாய்க்கும் பத்தாத பொழப்பு.”
“குண்டுமணி கருகமணியுமா சேர்த்து வச்சது இருக்கு.”பக்கத்து தெருவுல போட்ட லட்ச ரூவா சீட்டு ஒண்ணு இருக்கு. மத்ததுக்கு கடன் வாங்கிக்கிற வேண்டியது தான். கையும் காலும் தானய்யா நமக்கு மொதலு. அத வச்சு தான் இத்தனை காலமும் பொழச்சோம். இனியும் பொழப்போம்”.
முழிச்சு பார்த்துக்கு இருந்த கம்மங்கஞ்சிய புளிச்ச தயிரை விட்டு கரைச்சு குண்டா சட்டிய எடுத்து வச்சா பவளம்.
தொண்டைகுழில உருண்டு உருண்டு பயணிக்குது கம்பங்கஞ்சி. “ஒத்த மிளகாய ஒரு கடி கஞ்சிய ஒரு குடி”னு “மடக் மடக்”குனு குடிக்க பசிக்கு அத்தனை ருசியா இருந்துச்சு.
பவளம்,கருமாயபட்ட கரிச காட்டு பொழப்புல எந்த நல்லது பொல்லதையும் பார்த்தது இல்ல.தங்கம் விக்கிற விலைக்கு நம்ம அந்த பக்கம் கூட போக முடியாது போல.
“ஓலைக்கும் கொலுசுக்குமே நம்ம தெணறிப் போறோம்.”
வாயில வழிஞ்ச கஞ்சிய வியர்வையில ஊறுன துண்டுல துடைச்சுகிட்டாரு.
“அந்த மீனாட்சி மாலை எடுத்து குடுப்பா”. மதுர தெசய பார்த்து ஒரு கும்பிடு போட்டா பவளம்.
நல்லா உடம்ப நிமித்தி முன்னும் பின்னும் நடை படிச்சுக்கு இருக்கு சாவா.கொள்ள தூரம் நடந்து போயிட்டா பாண்டியம்மாள்
கறுப்ப அள்ளி தெளிச்ச நெறத்துல இருப்பா பாண்டியம்மாள். கருநாகம் படமெடுத்த மாதிரி விரிஞ்சு கிடக்கு தலைமுடி.குட்டி மொச்சை சிரிச்சது மாதிரி அடுக்கி வச்ச பல் வரிசை. வழுக்க இளநியா வளவளப்பா கை காலு.கருவண்டு திராட்சைய கொத்தி தின்னுரும் அது கெனக்கா.இவள் கண்ணு. முழிய கண்டு பறவைங்க கொத்தி தின்னாலும் தின்னுரும் அம்புட்டு அழகு. வெள்ளந்தி மனுசங்க வாழுற வெளுத்து போகாத வாழ்க்கையில இலவம்பஞ்சா லேசா வாழுறா பாண்டியம்மாள்.
அவள் வீட்டு சாவா மேல அவளுக்கு உசுரு.வேண்டியத வாங்கி போடுவாள். அவங்க அப்பா வீட்டுல இருக்க வச்சா, இவள் பஞ்சொடைக்க போயிர்ரா. புளி தட்ட போயிடறா.அதுல வர்ர காசுக்கு அவள் பாண்டிக்கு, பட்டணம் பெருமாள் கடையில நல்ல குருணை அரிசியா வாங்கிப் போடுவா. அவ சாவாவ யாரும் வஞ்சா சண்டைக்கு வரிஞ்சி கட்டுவாள். அவளுக்கு மட்டும் புரியற மாதிரி பேசுதுனு பல பேர் சொல்ல கேட்ருக்காங்க. ஒரு தடவ பொன்னாத்தா வீட்டுல காய போட்டு இருந்த கம்ப கொத்தி தின்ருச்சு பாண்டி. வெளக்கமாத்த எடுத்து வெளாச பறந்து போயி கல்லுல முட்டி விழுந்திருச்சு.
”கொக் கொக் “னு சத்தம் கேட்டதும் பறந்துக்கு வந்துட்டா பாண்டியம்மாள்.
‘யாத்தே! என்னா இப்புடி அடிச்சுக்கு இருக்க சின்னம்மா.தெரியாமல் வந்திருச்சு.இனி வராமல் பார்த்துக்கறேன்’
ஆத்துல பாய்ஞ்ச வெள்ளமா கண்ணு பொங்குது.கல்லடி பட்ட இடத்துல லேசா ரத்தம் கசியுது.உசுரே போயிருச்சு அவளுக்கு.
நல்லா கனத்து போயிருக்கு சாவா.! செமக்க முடியாமல் வாரா பாண்டியம்மாள். அன்னைக்கு முழுக்க சாப்புடல. அழுது மாயிறா பாண்டியம்மாள்.
“அட கிறுக்கு பய மவளே!ஆடு சாவால்லாம் மனுசங்க வகுத்துக்கு தான்டி வளக்கறோம். நீ இதுக மேல இம்புட்டு பாசம் வெக்காதடி.அதுக தான் நம்மள அண்டி பொழைக்கனும். நாம இல்லடி.”
காதுல ஒண்ணும் ஏறல அவளுக்கு. மஞ்சள் பொடிய போட்டு சாவாட்ட பேசிகிட்டு இருக்கா.அதுவும் “கொக் கொகக்..கொக் கோ “ன்டு எதையோ பேசிகிட்டு இருக்கு.
வானம் புழுங்கி போயி கெடக்கு. காத்து மருந்துக்கும் வீசல. ஊரே வகுத்துலயும் வாயிலயும் அடிச்சுக்குது. தொண்டைய நனைக்கத் துளி தண்ணீயும் இல்ல. கத்தாழ கூட வெயில தாங்க முடியல. புழுங்கி கனத்து போயி இருக்கு வானம். நட்சத்திரங்க எல்லாம் சனங்கள உத்து பார்த்துக்கு இருக்கு. எவனாவது நம்மள பார்க்கறாங்களான்டு அதுகளும் பார்க்குது.
நடுசாமம் கடந்திருச்சு. குடுகுடுப்ப. சத்தம் காதுகள தட்டி எழுப்புது. வெரசா வீட்டுக்கு வாசக் கதவுல காதைக் கொண்டு போனா பவளம்.
“கண்ணாளம் தடை இருக்கு. ரத்த புலி கெட்குது. ரத்த பலி கேட்குது. மாலை கூடணும்னா ரத்த பலி கேட்குது. பிரியமானத விட்டு குடுக்கணும். பிரியமானத விட்டுக் குடுக்கணும்.”
மஞ்சன் தாலி கழுத்துல ஏற பாண்டி முனிக்கு ரத்த பலி காட்டணும்னு சொல்லி போயிட்டான்.
.
பொழுது விடிஞ்சு பாண்டி கூவ ஆரம்பிச்சிருச்சு. பஞ்சாரக் கூடைய பொத்துனு போட்டா பவளம்
“.ம்.உனக்கு ஆயுசு அம்புட்டு தான். நல்ல குருணை அரிசிய போட்டா பாண்டிக்கு. யப்பே பாண்டிமுனி! உனக்கு தான் கொண்டு வாரேன். என் மவளுக்கு மாலை எடுத்து குடுன்னு வேண்டிகிட்டா.”
“இந்தா! ஆம்பள நம்ம பொண்ணுக்கு நல்ல இடமா அமையணும்னா பாண்டிக்கு ரத்த பலி குடுக்கனும்.”
“பாண்டியம்மாளுக்கு தெரிய வேணாம்”.
றெக்கைய விசிறிகிட்டு பறக்க முயற்சி செய்யுது. காத்துல நீச்சல் அடிக்க பார்க்குது. கொண்டைய சிலுப்பி அலக துருத்தி புழுக்கள கொத்தி கொத்தி திங்குது. ராசா தலையில பவளத்த வச்சது மாதிரி கொண்டை அழகா இருக்கு. நடக்கற நடையில ஆளுக வெலகி ஓடணும். அம்புட்டு தெனாவட்டு அதுக்கு.அப்ப தான் பாண்டியம்மாள் ஒறக்கம் கலைஞ்சு வாறா.
ஆத்தா கவனிக்கற விதம் அவளுக்கு ஆச்சர்யமா இருக்கு.அங்கயும் இங்கயுமா ஓடிக்கே இருக்கு சாவா. ‘இரு உன்னைய அறுத்து சட்டியில கொதிக்க வைக்கிறேன்’னு பேசுன ஆத்தா இப்ப குருணைய போடுறானா ….அதுவே ரொம்ப திகிலா இருக்கு அவளுக்கு. ஆனால், எதுவும் பேசல.
“இந்தாடி நாளைக்கு கோயிலுக்கு போறோம். வீட்ட நல்லா அலசணும்டி. போயி ரெண்டு நடை தண்ணீர் எடுத்தா போ”ன்டு பத்தி விட்டா ஆத்தா.
பித்தளை கொடத்த தூக்கிட்டு பாண்டியம்மாள் நடக்கவும், அவங்க அப்பா வாசலுக்கு வரவும் சரியா இருந்தது. நெலையில தலை தட்ட, லேசா புடிச்சுக்கே வந்தாரு
“கெரகம் சரி இல்ல. சாமக் கோடாங்கி சொன்னது சரியா போச்சு. இந்தாய்யா! புள்ளைக்கு நல்லது நடக்கனும்னா இந்த பாண்டிய நம்ம பாண்டிமுனிக்கு பலி குடுக்கணும்.
“நாளைக்கு மருதைக்கு போறோம். ஆமாம்! சொல்லிபுட்டேன்” னா பவளம்.
“இவள் யாருடி! அஞ்சு காசு இல்ல.மருதைக்கு போறாளாம் மருதைக்கு”.
“அதெல்லாம் கந்துவட்டி கணேசன் கிட்ட வாங்கியாச்சு. நீ கெளம்பற வழி பாரு”ன்னு மொறச்சா பவளம்.
‘முந்துனா முட்டுது பிந்துனா எத்துது….என்னா பொழப்பு’ன்டு வெசனபட்டுக்கே போறாரு மாயாண்டி.
இந்தா அந்தான்டு காச பெரட்டிட்டா பவளம். சொந்தம் பந்தமுன்டு யாரையும் கூப்புடல. வெளியேற தயாரா இருக்காங்க. நல்லா ஒறங்கிக்கு இருக்கு.பாண்டி. அத பொத்துனாப்ல எடுத்து காலைக் கட்டி ஒடம்ப கட்டிபைக்குள்ள போட்டா பவளம்.
பதறிப் போனா பாண்டியம்மாள். ‘ஏன்? கட்டி வச்சிருக்க’னு கத்த ஆரம்பிச்சுட்டா.கிலுகிலுப்ப தராத குழந்தையா அடம் பிடிக்கிறா.
“பாண்டிக்கு நேந்திருக்கு….அதுக்கு ‘குக்கு நோவு’ வந்துச்சுல்ல ….அப்ப சாக பொழைக்க கெடந்துச்சு. அதுக்கு தான் அத தூக்கி வாரோம்”னு சொன்னத நம்பிட்டா.
பஸ்ஸுக்கு காத்து கெடந்து நின்டுக்கே போறாங்க. பாண்டி நல்ல புள்ளையா அடங்கி உட்கார்ந்து இருக்கு. வெரசா எறங்கறாங்க சனங்க.
நல்ல கூட்டம் சனங்க வண்டி புடிச்செல்லாம்வந்திருக்காங்க. பெருசா அசலூர்லாம் போனதில்ல பாண்டியம்மாள். வீரபாண்டி கோயில் திருவிழாக்கு வருசத்துக்கு ஒருக்கா கூட்டி போவாங்க.அதுவும் காசு பெரட்டலனா இல்ல.. புள்ளைங்க வேண்டிய பொருள வாங்கிக்கு இருக்குதுங்க. பாண்டிமுனி கிட்ட வந்துட்டாங்க.
நல்லா ஆள் உயர சிலையா இருக்கு. சம்மணம் போட்டு உட்கார்ந்து இருக்கு. பார்க்கவே பயமா இருந்துச்சு பாண்டியம்மாவுக்கு.
“புள்ளைக்கு நல்ல இடமா பார்த்து குடு.அவள் வளர்த்த பாண்டிய உனக்கே குடுத்துடறே”னு வேண்டிகிட்டா பவளம்.
கருப்பட்டி நெறத்துல அய்யனார் குளத்து கெண்டை மீனுங்க தவ்வி வெளியேறுனது கெனக்கா இருக்கு பாண்டியம்மாள் கண்ணுங்க.
பையில இருந்த பாண்டிய பக்குவமா எறக்குனா பவளம். அறுப்பு கூடத்துக்கு போறா. ஒண்ணும் தெரியாமல் முழிச்சுக்கே இருக்கா பாண்டியம்மாள். அங்கங்க சிந்தி கிடக்கற ரத்தம் அவளுக்கு மயக்கத்த கொண்டாருது. பையில இருந்த சாவாவ எடுத்து அருக்க கத்திய தூக்குன நொடி,”ஏய்!” னு சத்தம் போட்டு கண்ண உருட்டி தெறட்டி பல்ல நெறிச்சு அருள் இறங்கி ஆட ஆரம்பிச்சுட்டா பாண்டியம்மாள்.
‘பச்ச மண்ணு வளத்த உசுர பலி குடுக்க வந்தீகளா? மனுசங்க ஆசையா வளக்கற உசுரும் என் உசுரு தான். பாண்டிய விட்ரு விட்ரு’ ன்னு கைய முறுக்கி திருப்பி அந்த ஆட்டம் ஆடுறா பாண்டியம்மாள்.
மயங்கி விழுந்தவள தாங்கி புடிச்சா பவளம். சனங்க அவள பாண்டியாவே பார்க்கறாங்க.
.
“இன்னும் உத்தரவு வரல. அறுக்கக் கூடாதுன்னு சொல்லிட்டாங்க. இன்னும் நெனவு திரும்பல அவளுக்கு.
ஆனால், எதையோ? சாதிச்ச நிம்மதி மட்டும் இருக்கு.” காத்துல அசையற இலைங்க பூவ உதிர்த்து பாண்டி ய பார்த்து சிரிக்குது.
– இரா.கலையரசி








