சீட்டுக்கட்டில் சிறுவர்களுக்கான கணிதம் (seetukattil siruvargalukkana kanitham) – நூல் அறிமுகம்
பதிமூணில் ஒண்ணு – நூல் அறிமுகம்
ராபர்ட் கனிகல் எழுதிய “அனந்தத்தை அறிந்தவன் (மாமேதை ராமானுஜனின் வாழ்க்கை) – நூலறிமுகம்
கவியோவியத் தொடர் யுத்த கீதங்கள்: கொம்பு முளைத்த நாற்காலி 35 – நா.வே.அருள்
அதிகாரத்திற்குக் கொம்பு முளைத்த விஷயம்
உலகத்திற்கே தெரிந்துவிட்டது.
விவசாயி தலையில்
மிளகாய்த் தோட்டங்கள்!
அதிகாரத்திற்கு
முதலில் செயலிழக்கும் உறுப்புகள்
அதன் கண்கள்.
அதிகாரம் தற்போது
மிகவும் பழுத்துவிட்டது
ஊன்றுகோல் இல்லாமல் விழுந்துவிடும் ஆபத்து
சுருள் முள்வேலிகள்
ஆணிக் கம்பங்கள்
தெருக்களில் கல்வாரி மலைகள்
அதிகாரத்திற்கு
ஒரு குதிரையின் லாடம் மற்றும்
இரும்புத் தொழிற்சாலை போதும்.
வயல்வெளி அதற்கொரு கிழிந்த ரூபாய் நோட்டு.
கடவுளின் கைத்தொழிலில்
சாத்தான்களின் நிர்வாகம்
ஜனநாயகம் ஒரு ஷோ கேஸ் பொம்மை
அதிகாரம்
வெளுத்துப்போன கர்ப்பப் பையில்தான்
வளரத் தொடங்கியது
அதன் நிழலே அதனை
மெல்ல மெல்லத் தின்னத் தொடங்குவதால்
காணாமல் போய்விடுகிறது
விசித்திரம் என்னவெனில்
அதிகாரத்தின் இறுதி ஊர்வலம்
பட்டாபிஷேகம் போல் பளபளக்கும்!
கவிதை – நா.வே.அருள்
ஓவியம் – கார்த்திகேயன்
கவியோவியத் தொடர் யுத்த கீதங்கள்: பட்டாம் பூச்சியின் சிறகுகளும் வெட்டுக்கிளியின் கால்களும் 34 – நா.வே.அருள்
பட்டாம் பூச்சியின் சிறகுகளும் வெட்டுக்கிளியின் கால்களும்
********************************************************************
கடவுளின் தலையை
ஞானி பொருத்திக் கொள்கிறபோது
அவனது பெயர் விவசாயி.
விவசாயியின் இதயம்
எப்போதும் தரிசாய் இருப்பதில்லை
அது
நாற்காலிகளை மரங்களாக்கிவிடுகிறது
மரங்களைத் தோப்பாக்கிவிடுகிறது
தோப்புகளை வனமாக்கிவிடுகிறது.
உலகத்திலேயே தனக்குப் பிடித்தமான ஒன்றை
இடச்சொல்லி
விவசாயியிடம் ஓர் உண்டியலைக் கொடுத்தால்
அவன் ஒரு விதையைத்தான் தேர்ந்தெடுப்பான்.
அவன் வளர்த்த அட்டைகள்
அவனது வயலில்
அறுவடைகளை உறிஞ்சத் தொடங்கிய பின்புதான்
அவனது உடலின் குருதி குறைய ஆரம்பித்தது.
அவனது கவலையெல்லாம்
விளைச்சலில் இறங்கும் பூச்சிகள் அல்ல
அவனது வயலில் இறங்கிய
திசையெல்லாம் பறந்துகொண்டிருக்கும்
பட்டாம் பூச்சியின் சிறகுகளும்
வெட்டுக்கிளியின் கால்களும் கொண்ட
புதிய விலங்குகள்!
அவை விநோத மொழி பேசுகின்றன
அவை
பாசனத்திற்கான தாகத்தின் கடலைப்
பருகிவிடுகின்றன.
அவனது கூரையின் வானமும்
தரையின் மண்ணும் களவாடப்படுகின்றன.
அவன் மீது மரணம்
ஒரு மலிவான பொருளைப்போலத் திணிக்கப்படுகிறது.
சாணம் பூச மறந்த விதை
கெட்டுப் போவதைப்போல
எதிரிகளின் மூளை செயலற்றுவிடுகிறது.
விவசாயிகளை வெல்ல நினைப்பவன்
முதலில் ஆயுதங்களைக் கீழே எறிந்தாக வேண்டும்
விவசாயிகள் முன் நிராயுதபாணியாக
நிற்க வேண்டும்!
கவிதை – நா.வே.அருள்
ஓவியம் – கார்த்திகேயன்
கவியோவியத் தொடர் யுத்த கீதங்கள்: தந்திரங்கள் 33 – நா.வே.அருள்
தந்திரங்கள்
*****************
மகாத்மா காந்தியின் மார்பில்
குண்டு துளைத்தது ஒரு விஷயமேயில்லை
இன்னும் சொல்லப் போனால்
எப்படி இறந்து போனார் என்பதை
மர்மத்தின் போர்வையால் மூடிவிடமுடியும்.
காந்தி பயன்படுத்திய
ஒவ்வொரு பொருளும்
காட்சிக்கு வைக்கப்படுகிற அதே அரங்கத்தில்
அவர் ஒரு விநோதமான ஏலப்பொருளாகிவிட்டார்.
எல்லாவற்றையும் விட
மகாத்மா காந்தியின் உருவப் படத்தில்
வேறொரு பிம்பத்தைச் செருகுவது
ஒரு தந்திரமான கலை.
ஒரு கழிவறையில் வெளித்தள்ளப்படும்
கழிவுகளைப் போல
மகாத்மாவின் நினைவுகள்
மக்களின் மனங்களிலிருந்து
அகற்றிச் சுத்தம் செய்யப்படுகின்றன.
மகாத்மாவின் பிரார்த்தனை உன்னதமானது
அது ஒரு விவசாயியை பிரதமராக்கும்
தூய்மை வாய்ந்தது.
பாராளுமன்றப் பாசனத்திற்கு
ஒரு விவசாயியைத்தான் விரும்பினார்.
இது நம்பிக்கைத் துரோகிகளின் காலம்
விவசாயி என்கிற வார்த்தையை மறந்துபோன
மூளைதான் அரசாங்க நாற்காலியின் காட்சிப்பொருள்
தலைநகரமே மரண பஜனைக்குத் தயாராகிவிட்டது
மகாத்மாவின் கனவுப் பிரதமர்களைக்
குறிபார்த்துக் கொண்டேயிருக்கின்றன
கோட்சேக்களின் குண்டுகள்!
கவிதை – நா.வே.அருள்
ஓவியம் – கார்த்திகேயன்
கவியோவியத் தொடர் யுத்த கீதங்கள்: வியூகங்கள் 32 – நா.வே.அருள்
வியூகங்கள்
******************
காட்டுப் பன்றிகள்
வயலில் இறங்குவதைப் பார்த்த விவசாயிகளால்
அமைதியாக உறங்க முடியவில்லை.
இப்போது காட்டுப் பன்றிகள்
யானைகளைப்போலப் பருத்துவிட்டன
அவை
வயல்களை விழுங்கி விடுகின்றன
விவசாயிகளின் கிணறுகளைக்
குருதியால் நிரப்பிவிடுகின்றன.
அவை
முதலில் விவசாயிகளைக் கொன்றுவிட்டு
பிறகு வயல்களைத் தின்றுவிடுகின்றன.
அவை
நாற்காலிகளின் கீழே
சூழ்ச்சிகளின் புதர்களில் வசிக்கின்றன.
அரண்மனையின் முன் கட்டப்பட்டிருந்த
ஆராய்ச்சி மணிகளின் நாவுகளைக் கொறித்துவிடுகின்றன.
ஒரு கடுங்குளிரில்
பனிப் போர்வையின் வெடவெடப்பில்
விவசாயிகள் குப்புற விழுந்த போதுதான்
பின்னாலிருந்து
ஓநாய்களைப்போலத்
தனித்தும் பின் கூட்டமாகவும்
யுத்தத் தந்திரங்களால்
வியூகம் வகுக்கின்றன.
சில நேரங்களில்
காட்டுப் பன்றிகள் இறங்கிய வயல்களில்
விவசாயிகள்
செயலிழந்து தலைகவிழ்ந்து நிற்க நேரிடுவது
நம் காலத்து மிகப் பெரிய அபத்தம்தான்!
கவிதை – நா. வே. அருள்
ஓவியம் – கார்த்திகேயன்
கவியோவியத் தொடர் யுத்த கீதங்கள்: ஒரு நாக்கின் நீளம் 31 – நா.வே.அருள்
ஒரு நாக்கின் நீளம்
*****************************
அதிகாரத்தின்
நாக்குக்குச்
சிறகுகள் முளைக்கத் தொடங்குகின்றன.
அது வாய்க்கு வெளியே
வெகுதூரம் பிரயாணம் செய்து
சென்று சேருமிடம் கொலைக்களம்.
வளையும் உலோகத்தாலான அதன் நாக்கு
பொய்களின் உலைக்களத்தில்
வடிவமைக்கப்படுகிறது.
செய்நேர்த்தியுடன் செய்வதற்கு
நாட்பட்ட தீயில்
இதமான சூட்டில்
வாட்டி எடுக்க வேண்டும்.
நடனமிடும் நாக்கு
அழகாகக் குரைப்பதற்குப் பயிற்சிகள்
எடுத்துக் கொள்கிறது.
கால்களை நாவால் சுத்தம் செய்யும்
தொழில் நுட்பம் பழக்க
நிறைய தொழிற்கூடங்கள்..
சுருக்கம் விழுந்த வயிறுகளின் பட்டினிதான்
பொய்களின் நாவுகளுக்கான
ரொட்டித்துண்டு.
சப்பாத்துகளின் தோல் ருசியில்
நாகரிகமாகப் பருத்துவிடுகிறது
நாக்கு.
உலகின் எந்த நதியைவிடவும் நீளமானது
உலகின் எந்த மலையை விடவும் பெரிதானது
உலகின் எந்தக் கடலைவிடவும் ஆழமானது
பொய்களின் நாக்குதான்.
அது புரள்வதற்காக வதைமுகாம்களின் குருதியில்
உமிழ்நீர் சுரந்துகொள்கிறது.
கோட்டை அகழியின்
முதலைகளைத் தீனியாக்கிக் கொள்கிறது.
அதன் ஒற்றை உடலைச் சுமப்பதற்கு
எட்டுக்கால் நாய்கள்
எப்போதும் தயாராய் இருக்கின்றன..
கான்கிரீட் சவப்பெட்டியில் பாதுகாப்பான அறையில்
தனது காதலியுடன் இறந்துபோன ஒரு குரங்கை
காட்டுக்கு ராஜாவாகிவிட்டதாகக்
கதை சொல்கிறது.
இப்போதோ சுவற்றில் எழுதப்பட்ட
சரஜீவோ என்கிற வார்த்தையைக் கண்ட
பாபிலோனிய பெல்ஷாஜ்ஜர் போல
மரணத்தின் வீதிகளில்
தலைதெறிக்க ஓடத் தொடங்கிவிட்டது.
கவிதை – நா.வே.அருள்
ஓவியம் – கார்த்திகேயன்
பின்குறிப்பு
இட்லரின் பிரச்சார அமைச்சனை அறிஞர் அண்ணா–கோணிப்புளுகன் கோயபல்ஸ் என்பார்.
இட்லர் செத்த பின்பும்கூட கோயபல்ஸ் கடைசி நேரத்தில்
—
சிவப்பு மிருகங்களுக்கெதிராக -தலைநகரின் மையத்தைப்பாதுகாப்பதற்காக இட்லர் முன்னணிப்படையில் நிற்கிறார்- என்று புளுகினான்.
அதற்கு ஒரு எழுத்தாளன் பதில் எழுதினான்—
உண்மையில் அந்தக்குரங்கு தனது காதலியோடு கான்கிரீட் சவப்பெட்டியில் பாதுகாப்பான அறையின்
ஆழத்தில் இறந்து கிடக்கிறது–என்று.
பின்பு பாசிஸ்டுகள் அனைவரும் செஞ்சேனையால் அழிக்கப்பட்டனர். வரலாறு மறப்பதேயில்லை.








