உக்ரைனிலிருந்து உருகும் குரல்… கவிதை – கவிஞர் இளங்கதிர்

உக்ரைனிலிருந்து உருகும் குரல்… கவிதை – கவிஞர் இளங்கதிர்



C:\Users\Admin\AppData\Local\Microsoft\Windows\INetCache\Content.Word\275134455_330758799080859_8966752150790129236_n.jpg

தாயும் தந்தையும்
தம் மகனை
அனாதை என்று பிரகடனப்படுத்திய
அவலம் நிகழ்ந்திருக்கிறது…

அம்மா…
இனி என்று உன்னைப்பார்ப்பேன் என
உடைந்து போன குழந்தை..
எங்குபோகிறோம் என்றே
தெரியாமல் …
பிஞ்சுக்கால்கள் உக்ரைன் நாட்டின் எல்லையைக்
கடந்தன..

அம்மாவின் அணைப்பில்
ஆனந்தம் பெறவேண்டிய
அந்தச் செல்லமகன்
கொடிய பயணத்தைக் தொடங்குகிறான்…
அடிபட்டால் மருந்திட்டு இனி
அன்னையில்லை …

துயருற்றால்
தோளில் தூக்கி மகிழ்விக்கும்
தந்தையில்லை …
கண் கலங்கினால்
கண்ணீர் துடைக்கும்
கரங்கள் இல்லை…

வீடுவிட்டுப்போன மகன்களுக்கே
இருக்குமிடம் உறுதியில்லை…
நாடுவிட்டுப்போன இம்மகனுக்கு
வீடெங்கே ?

பிறநாட்டின் மொழி தெரியுமா?
அடுத்த நாட்டில் யாரையும் தெரியுமா?
அடுத்த வேளை உணவு கிடைக்குமாவென
அறியாத குழந்தை …

பிஞ்சு விரல் பிடித்துக்கொண்டு
பள்ளிக்கு அனுப்பவேண்டிய அம்மா
உடன் வரவில்லை…
பட்டப்பகலில்
நட்டநடு வீதியில்
கண்ணீருடன்
தந்தையும் தாயும்
‘போய்விடு மகனே,
நீயாவது பிழைத்துக்கொள்’ என
அனுப்பிவைத்தபோது
அவர்கள் இதயம்
சுக்குநூறாக உடைந்திருக்குமே…

ஏ, தேசங்களே,
ஏன் இல்லை  உங்களுக்கு இதயம்?
உங்களுக்கு மண்தான் பெரிதா
மனிதன் இல்லையா?

-கவிஞர் இளங்கதிர்