Karkavi's Poems 3 கார்கவியின் கவிதைகள் 3

கார்கவியின் கவிதைகள்

தினப்பிரதி
*************
நேற்றைப் பிரதி எடுத்து
கசக்கிய கண்களுடன்
கோழிக்குஞ்சுகளை திறந்துவிட்டு
தூக்கத்தின் விழிப்பில்
சமையலறை அடைகிறாள் அம்மை….

அயர்ந்த உறக்கத்தில்
தலைக்குமேல் வானொலியை
ஒரு திருகு திருகி
வாயடைத்து மறுபக்கம் புரள்கிறார் அப்பன்…

நிமிராத இருசக்கர வாகனம் மேல் ஏறி
எட்டி எட்டிப் பார்த்து அழைக்கிறது
‘பாப்பு’ எனும் பூனை…..

எழுந்தாரா என மகனைக் கேட்ட ஒலியில்
தட்டுத் தடுமாறி தேடுகிறார்
அப்பன் ஆறாம் விரல் சுருட்டை….

திருந்தவே மாட்டார் எனப் பொறுமிக்கொண்டே
பொறுப்பாக டீ கொண்டு வைத்துச் செல்கிறார் அம்மை…..

இன்று போல்தான் தினமும் எனத் தோன்றிய
வார்த்தைகளைச் சரளப்படுத்தி
கடுகுடன் சேர்ந்து வெடித்துக் கொண்டே அவள்….
அம்மா….

இடியும் இங்குண்டு..!
************************
ஆணாகப் பிறந்துவிட்ட காரணத்தால்- என்
மழையின் ஈரத்தை அறியாதவன் நான்…!

உணர்வுகளை உள்ளடக்கி- என்
உறவுகளுக்காகவும்
குடும்பத்திற்காகப் பிறப்பெடுத்தவன் நான்…!

மழை நீரைத்தொட்டாலும்
ஏதோ ஒர் வெறுமை- என்னை
ஈரமாக நனைக்கிறது…!

பணம் என்ற சொல்லுக்கு- என்
உடல் முழுதும் ரணமும்
உள்ளங்கை செந்நிறமும்
பதிவேடுகள் அமைக்கின்றன…!

பிறப்பு
படிப்பு
காதல்- என்
வாழ்க்கை இத்தனையும்
இளகிய கசப்பு பாகாய் கரைந்தோடுகிறது மனதில்……!

இரை போட்டால்
திடுக்கிடும் பூனைக்குட்டிகளின் நிலை போல
வெறுமையிலும்
நிம்மதியின்மையிலும்- என்னை
ஆட்கொள்கிறது
அவ்வப்போது
மூடிய மனதில்
இடியும் இங்குண்டு
என்று….!

கடைசிப் பக்கம்
*******************
ஆறாம் வகுப்புப் படிக்கும் மாணவன்
தினம் தூக்கும் சோல்னா பையில் நிரம்பிய கல்வியை
தினம் சுரண்டி
மென்று செல்கின்றனர்
கழுதை கெட்டாலும் வராத குட்டிசுவர் மேதைகள்…
இல்லத்தை அடைந்ததும் திருப்பித் திருப்பிப் பார்க்கிறான்
இன்றைய நாள் முடிவின்
நாளைய கடைசி பக்கங்களை…!

நடனமாடும்_கனவு
***********************
நான்கு அறைகளை இருகப்பற்றி
போர்வை போர்த்திக் கொள்கிறது உறக்கம்
யாரோ கைப்பிடிக்கிறார்
கன்னத்தை கிள்ளுகிறார்
இதழுக்கு ஈரம் சேர்க்கிறார்
‘ச்சி’ என முனகலோடு புரண்டு படுக்கும் மகளைக் கண்டு
கண்ட கனவை எல்லாம் இடது கையில் போர்வையாய்
ஓரம் தள்ளும்
எதிர்கால கனவாடிய
பெற்றோரின் கனவு

Pen Gnani Poem By K. Punithan. பெண் ஞானி கவிதை - க. புனிதன்

பெண் ஞானி கவிதை – க. புனிதன்




ஆணுக்கு
வீடு வாசல்
தெரு
புளிய மரம்
தம் அடிக்கும்
நிழல் கூடம்
என்று வெவ்வேறு நிலம் இருக்கிறது

வீடு
தெருமுக்கு தேநீர் கடை
எங்கே வேண்டுமானாலும்
தேநீர் பருக முடியும்

புத்தர் உள்பட
எந்த ஆணாய் இருந்தாலும்
துறவி ஆகிறேன் என
வெளியேற முடியும்

களி மண்ணில்
சின்ன சிலை செய்து
வீட்டில் வைத்து கொண்டாடும்
பெண்ணின் துறவறம் வேறு

நறுக்கும்
வெண்டை காயில்
ஒதுக்கி வைக்கும்
காம்பை கூட
கலை பொருளாய் பார்க்கும்
அவள் அக மகிழ்வு வேறு

Kalandarin Karuppai Poem By Karthigaiselvan செ.கார்த்திகைசெல்வனின் காலண்டரின் கருப்பை கவிதை

காலண்டரின் கருப்பை கவிதை – செ.கார்த்திகைசெல்வன்




ஆணும் பெண்ணும்
ஒரு நாணயத்தின்
இரண்டு பக்கங்கள்….
காலத்தின் விரல்கள்
சுண்டிவிட்டாலும்
தலையோ பூவோ
விழுந்தாக வேண்டும்….
ஆணே பூவென்றும்
பெண்ணே தலையென்றும்
நாம் புரிந்துகொண்டால்
அது நம் அறியாமை….
பெண் தலையில்தான்
பூக்கள் ஆயுட்காலம்
கழிக்கின்றன…

ஆணும் பெண்ணும்
ஒரு நாளின்
இரண்டு பக்கங்கள்….
எத்தனை முறைகள்
புரட்டினாலும்
இரவும் பகலும் வந்தே
தீரும்….
ஆணே பகலென்றும்
பெண்ணே இரவென்றும்
நாம் புரிந்துகொண்டால்
அது நம் அறியாமை…
இரவுகளே விடியுமென்ற
நம்பிக்கையைத் தருகின்றன..

ஆணும் பெண்ணும்
ஒரு வீட்டின்
இரண்டு துளைகள்…..
எத்துணை அழகாக
வீடு கட்டினாலும்
வாசலும் ஜன்னலும்
அமைத்தே ஆகவேண்டும்…
ஆணே வாசலென்றும்
பெண்ணே ஜன்னலென்றும்
நாம் புரிந்துகொண்டால்
அது நம் அறியாமை…
ஜன்னல்களே வெளிச்சத்தைத்
தீர்மானிக்கின்றன…

ஆணும் பெண்ணும்
ஒரு மரத்தின்
எதிரெதிர் துருவங்கள்….
மையப்புள்ளி நிலப்பரப்பு
என்றாலும் கீழேயும்
மேலேயும் வளர்ந்தாக வேண்டும்….
ஆணே மேல்பகுதி என்றும்
பெண்ணே கீழ்ப்பகுதி என்றும்
நாம் புரிந்துகொண்டால்
அது நம் அறியாமை….
வேர்கள் பிடித்திருப்பதால்தான்
கிளைகள் நடனமாடுகின்றன…

ஓ பெண்ணே…..!
நாங்கள் சதிகாரர்கள்தான்….
நாங்கள்தான் உன்னை
உடன்கட்டையில் ஏற்றிக்
கொன்றோம்….

ஓ பெண்ணே….!
நாங்கள் நாசக்காரர்தான்…
நாங்கள்தான் உனக்குக்
குழந்தைத் திருமணம்
நடத்தி வதை செய்தோம்….

ஓ பெண்ணே…..!
நாங்கள் ஆதிக்கவாதிதான்….
நாங்கள்தான் உன்னை
குழந்தைப் பெற்றுத்தரும்
இயந்திரமாகவே இயக்கிவந்தோம்…..

ஓ பெண்ணே….!
நாங்கள் கொலைகாரர்தான்….
நாங்கள்தான் நீ
பிறந்த உடனேயே
சிசுக் கொலைகள் செய்தோம்….

ஓ பெண்ணே….!
நாங்கள் மதம்பிடித்தவர்தான்…
நீ காதலொன்று
கொண்டாலும் நாங்கள்தான்
ஆணவக்கொலை செய்தோம்….

ஓ பெண்ணே…..!
நாங்கள் பச்சோந்திகள்தான்….
பொதுவெளியில் உனக்கொரு
தேசியகீதம் பாடிவிட்டு
மறைமுக மரணகீதமும் பாடினோம்….

அன்பின் ஐந்திணையில்
வாழ்ந்தவளே!
தூதுசென்று போர்களைத்
தடுத்தவளே!
புலியை முறத்தால் விரட்டியவளே!
புதல்வனைப் போருக்கு
அனுப்பியவளே!
அதியமானிடம் நெல்லிக்கனி
பெற்றவளே!
புறமுதுகிடாமல் நெஞ்சில்
வேல் வாங்கியவளே!

உயர்திணையில் வருபவளே!
அஃறிணைகளின் ஆதிக்கத்தை
வீழ்த்தி உயரத்திற்கு வந்தவளே!
என்றும் நீ நெஞ்சம் உயர்த்தியே
யாவையும் எதிர்கொள்கிறாய்..!
இருந்தும் உன் முதுகிலல்லவா
அம்புகளை இன்று பாய்ச்சுகிறார்கள்…!
நீ உயர்திணை மட்டுமல்ல….
உயிர்த்திணையும் நீதான்….

இதோ பிறந்து கொண்டிருக்கிறது
புத்தாண்டு….!
இந்தச் சமூகமும் புதிதாய்
பிறக்கட்டும்…..