பணமதிப்பழிப்பு நாடும் நடப்பும் | Panamathippazhippu

ம.மு.அரங்கசுவாமி எழுதிய “பணமதிப்பழிப்பு நாடும் நடப்பும்” – நூலறிமுகம்

"அவலை நினைத்து உரலை இடித்த கதை" இச்சிறுநூல் நவம்பர் 8 2016 அன்று இந்தியப் பிரதமர் அறிவித்த ரூபாய் 500,ரூபாய் 1000 நோட்டுகள் மதிப்பழிப்பு செய்யப்பட்ட செய்தியையும், அதன் தொடர் நிகழ்வுகளான மக்களின் துயர்கள் ஆகியவை குறித்து மட்டும் விளக்கவில்லை. காகிதப்…
நிரல்களின் நிழல்கள்: தொடர் 1 – நவநீதன்

நிரல்களின் நிழல்கள்: தொடர் 1 – நவநீதன்



இராஜீவ் காந்தி சாலை….

“ராஜீவ்காந்தி சாலை” நாவலை வாசிக்க ஆரம்பித்து அடுத்த நாள் காலை ஆபிஸ்க்கு திருவான்மியூர் இரயில் நிலையத்திலிருந்து காரப்பாக்கத்திற்கு சென்று கொண்டிருந்தேன். அது விவரித்த இன்றைய ராஜீவ் காந்தி சாலை இருந்த இடத்தின் பழைய படிமத்தை நினைவில் மீட்டு கொண்டு வர முயற்சித்தேன். எவ்வளவு முயற்சித்தும் முடியவில்லை. அடர் பசுமை வயல் வெளிகளும், தோப்புகளும், முந்திரி காடுகளும் என எப்படி யோசித்தாலும் கற்பனை கட்டத்துக்குள் அடங்க மறுக்கிறது. ஏனெனில் இராஜீவ்காந்தி சாலையின் பரிணாமம் அந்த மாதிரி பிரமாண்டமானது. மலை போன்று எழுந்து நிற்கும் பெருங் கட்டிடங்களின் கண்ணாடிகளில் தன் வாழ்வாதாரத்தினை தொலைத்த பழைய கிராமவாசிகளும், புதிய வாழ்வியலை பெற்ற நவ நாகரீக மனிதர்களும் தான் ஒளிப்படமாக ஓடுவது போல் தெரிகிறது. அதிவிரைவாக நடந்தேறி மிகப் பெரிய சமூக பரிமாணத்தின் காலத்தையும், அந்த காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கு மனிதர்களின் வாழ்வியலையும் மிக நேர்த்தியாக விநாயக முருகன் எழுதியுள்ளார்.

ஒவ்வொரு சமூக மாற்றமும் பழைய உற்பத்தி முறையை அழித்து புதியதை நிறுவுவதின் வழியே தான் தன்னை நிலைநிறுத்திக்கொள்கிறது. இது வெறும் உற்பத்தி முறையோடு மட்டும் பாதிக்காமல் அந்த உற்பத்தியில் ஈடுபடும் மனிதர்களையும் சுற்றுச்சூழலையும் சேர்த்தே மாற்றத்திற்கு உள்ளாக்குகிறது. நாவல் விவரிக்கும் கதை மாந்தர்களும், அவர்கள் வாழ்ந்த சூழலியலும் இந்த பொருளாதார, கலாச்சார மாற்றத்தின் சூழலில் பெற்ற ஏற்ற, இறக்கங்களை மிக தெளிவான அரசியல் பார்வையோடு முன்வைப்பதே இதன் மிகப்பெரிய பலம். ஐடி நிறுவன ஊழியர்கள் மட்டும் அல்ல, பூர்வீகமாக அப்பகுதியில் இருந்தவர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், ரோட்டோர மனநிலை பாதிப்பிற்குள்ளானவர்கள் என பலதரப்பட்ட மாந்தர்களை வாசகர்களுக்கு அறிமுகம் ஆகிறார்கள்.

“இந்த நகரத்தில் பைத்தியகார விடுதிகள் உள்ளனவா, மிகப்பெரிய பைத்தியக்கார விடுதிக்குள் இருந்து நாம் இயங்குகிறோமா?” என்று ஆசிரியர் தனது முன்னுரையில் குறிப்பிடுகிறார். வாசிக்கும்போது வாசகனுக்கும் அப்படியே உணரமுடிகிறது. தனது இருப்பை நிலைநிறுத்திக்கொள்ள எந்த எல்லைக்கும் போகும் பைத்தியகாரத்தனமான நபர்களும் வருகிறார்கள். தனது கடின வாழ்விலும் அன்பினை அள்ளித்தரும் நபர்களும் வருகிறார்கள். பணத்தை சம்பாத்திக்க உருவான குரோதத்திலும், மனிதர்களிடையே நம்பிக்கையின்மையற்ற வாழ்வின் இன்றைய காலகட்டத்தில் இந்த எளிய மனிதர்களை இருளின் ஒளிக்கீற்றாக இருக்கின்றனர்.

வானுயர்ந்த கண்ணாடி கட்டிடங்களின் உள்ளே நவநாகரீகமாக வேலையில் உள்ளோம் என கூறிக்கொள்ளும் மனிதர்களின் இருள்வெளிகளை ஆசிரியர் வெளிச்சமிட்டு காட்டுகிறார். மித மிஞ்சிய ஊதியம் என்றாலும் அதன் பின்னணியில் உள்ள அளவுக்கதிகமான வேலைப்பளுவும், மன அழுத்தங்களும் இந்த நவநாகரீக மாந்தர்களின் வாழ்நாளை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் சிதைத்து கொண்டுள்ளது. தனது இருப்பை தக்கவைத்துக்கொள்ள, சக ஊழியரின் இருப்பை காலி செய்யும் மனப்பான்மை மிகுந்த மனிதர்களிலும் இந்த நாகரீக வளாகத்தில் உலவுகின்றனர்.

ஐடி உலகம் தந்த மன உளைச்சல்களால் தற்கொலைக்கு உள்ளாகும் மனிதர்களின் கதைகள் நெஞ்சை பதறசெய்கிறது. நாவலில் குறிப்பிடப்படும் தற்கொலைகள் வேலைப்பழுவினால் மட்டுமல்ல இந்த ஐடி கலாச்சாரம் உருவாக்கியுள்ள சமூக நெருக்கடியினாலும் தான். ஐடி நிறுவனங்கள் வந்த பின்னர் திடீர் ஏற்றம் பெற்ற தனிநபர் வருமான வளர்ச்சி தேவைக்கு அதிகமான நுகர்வுகலாச்சாரத்தையும், வித விதமான கடன்களையும் சேர்த்தே கொண்டு வந்தது. அதன் வேகத்தில் அடித்துச்செல்லபட்ட பலரின் வாழ்வு விவரிக்கிறப்படுகிறது. மேலும் மனித உறவுகளையும், உறவுகளின் மீதான நம்பிக்கையையும் இந்த கலாச்சாரம் உடைத்திருப்பதையும் வாசிப்பின் வழியே உணர முடிகிறது. உறவினை மீறிய காமம் குறித்து அதிகமாக நாவல் பேசுவதுபோல தோன்றினாலும் அதற்கான சூழலை ஐடி உலகம் வழங்கியது குறித்தும் தெளிவாக பேசுகிறது.

மாபெரும் பொருளாதார பேரெழுச்சியின் பின்னால் தங்கள் வாழ்வினை தொலைத்த இந்த நிலப்பரப்பின் பூர்வக்குடிகள் குறித்தும், வலுக்கட்டாயமாக்க இடப்பெயர்வு செய்யப்பட்ட உழைப்பாளி மக்கள. குறித்தும் இதில் பேச தவறவில்லை. இன்று உருவாகியுள்ள கண்ணகி நவர், செம்மஞ்சேரி எல்லாம் ஐடி நிறுவனங்களின் கடைநிலை வேலையை செய்வதற்கென்றே செயற்கையாக உருவாக்கப்பட்ட குடியிருப்புகளாகவே வாசிக்கும்போது உணர முடிகிறது. நிலப்புலன்கள் வைத்து வாழ்ந்தவர்கள் தங்கள் பொருளாதாரம் பறிக்கப்பட்டு தினக்கூலிகளாக, ரோட்டுக்கடை நடத்துபவர்களாக மாறியுள்ள அவலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மனநலம் பாதிக்கப்பட்டு சாலைகளில் திரிபவர்கள் குறித்த பதிவு மனிதம் குறித்து கேள்வி எழுப்புகிறது.

இந்த நாவலை ஒரு சாரம்சத்தில் எழுதுவதென்பது கடினம். ஏனெனில் அத்தனை கதைகள், அத்தனை கதை மாந்தர்கள் சமகால மனிதர்களின் பிரதிபலிப்பாக அனைத்து பக்கங்களிலும் நிறைந்திருக்கின்றனர். நான்-லீனியர் முறையில் கதை சொல்லப்பட்டிருந்தாலும் ஒவ்வொரு கதை மாந்தர்களும் அந்த குறுக்கு கோடுகளில் ஏதோவொரு புள்ளியில் சந்தித்து கொள்கின்றனர் என்பது எழுத்தாளர் விநாயக முருகன் எழுத்தின் சிறப்பம்சம்.

-நவநீதன்

நூல் : இராஜீவ் காந்தி சாலை நாவல்
ஆசிரியர் : விநாயக முருகன் 
விலை : ரூ.₹320/-
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
[email protected]

ஜேசு ஞானராஜின் கவிதைகள்

ஜேசு ஞானராஜின் கவிதைகள்




1
உணவு!
அந்தி மயங்கியது!
மேற்குத் தொடர்ச்சி மலை
மஞ்சளும் சிவப்புமாய் ஒளிரத் தொடங்கியது!
கழுத்தில் கட்டிய மணிகள் ஒலிக்க
மாடுகள் வீடு நோக்கி நடைபயின்றன!
ஆட்டுப் பட்டிக்குள்
ஏழு சுரங்களும்
ஏப்ரலின் அடுத்த மாதத்தைப்
பாடத் தொடங்கின!
ஓடையிலிருந்து வெளிவந்த
வாத்துக்கூட்டம்
வீட்டைப் பார்த்து விரைந்தன!
அம்பு வடிவில் பறக்கும் கொக்குகள்
கூடுநோக்கி போய்க்கொண்டிருந்தன!
வேப்பமர உச்சி
காக்கைக் கூட்டில் குஞ்சுகள்
கீச் கீச் சென
தாயைத் தேடிக் கொண்டிருந்தன!
வேகமாய் வீடு நோக்கி நடக்கும்
வேடனின் முகத்தில்
கொள்ளை சந்தோஷம்!

2
சுழற்சி!
சூரியனின் காந்தப் பார்வையில்
மோகம் கொண்டு மயங்கிய கடல்
கருமேகக் குழந்தை உருவாகிறது!
கடல் பால் கொண்ட
காதல் தோல்வியால்
கோபமான பெருங்காற்று
மழை மேகத்தை அலைக்கழிக்கிறது!
மிரண்டு போன கார்மேகம்
அழுது தீர்க்க நதி உருவாகிறது!
தன் குழந்தையை
உடனே கூப்பிட்டு
அடைக்கலம் கொடுக்கிறது கடல்!

3
கடன் கொடுத்த பணம்!
இரவு சாப்பாடு முடிந்து
முற்றத்திலிருந்த நார்க்கட்டிலில்
அமர்ந்திருந்தார் அப்பா!
வாசல் படியில் உட்கார்ந்து
வாகாக கால் நீட்டினாள் அம்மா!
வெற்றிலைப் பெட்டியைத் திறந்து
தோதான கொட்டைப்பாக்கை
அப்பாவுக்குத் தந்தாள்!
சுண்ணாம்பு பாக்கெட்டை
மெதுவாகப் பிதுக்கி
நுனி கிள்ளிய வெற்றிலையில்
வைத்து நீட்டினாள்!
பாக்கை கடித்துக் கொண்டே
விரித்த வெற்றிலையில்
சுண்ணாம்பைத் தடவி
வாயில் குதப்பினார் அப்பா!
திருவிழாவுக்கு வாங்கிய
தேன் குழல் மிட்டாய்
ஓலைப் பெட்டியில்
பாதி நிரப்பிய அடுப்பு குப்பை
துப்பட்டியாக மாறி இருந்தது!
கடைத்தெரு குப்புசாமி என்று
ஆரம்பித்தாள் அம்மா!
‘ம்’ கொட்ட ஆரம்பித்தார் அப்பா!
மேகத்துள் மறைந்திருந்த முழு நிலவு
அம்மாவின் கதையைக் கேட்க
மெதுவாக எட்டிப் பார்த்தது!
வானத்து நட்சத்திரத்தில் ஒன்று
கீழ்த்திசையில் ‘சர்ர்ர்’ரென்று இறங்கி மறைந்து போனது!
பக்கத்து கோவிலில்
மணி ஒன்பது அடித்தது!
இலங்கை வானொலியில்
ராக தீபம் முடிந்து
செய்தி பேசிக்கொண்டிருந்தது!
எதிர்வீட்டு ஆள் உயர மண் சுவரில்
வெள்ளை நிறப் பூனை யொன்று
பதுங்கிப் பாயத் தயாராகிக் கொண்டிருந்தது!
ஓட்டுக் கூரைக்குள்
ஒளிந்திருக்கும் சுண்டெலிக்கு
அதிர்ஷ்டம் இருந்தால்
பூனையின் பசியைத் தின்று
உடனடியாக கடவுளிடம்
பேச வாய்ப்பிருக்கிறது!
தெருவில் பால்காரரின் சத்தம்
தேய்ந்து மறைந்து போனது!
அம்மாவின் பேச்சில்
குப்புசாமி இறந்து போயிருந்தார்!
அப்பாவின் நாளைய சட்டையில்
ஆயிரம் ரூபாய்
காணாமல் போயிருந்தது!

4
இரவும் பகலும்!
இரவைத் தின்று கொண்டிருந்த
காலத்துக்கு அகோர பசி!
கதவைத் திறந்து
எட்டிப் பார்த்த சுக்கிரன்
பட்டென்று சாத்திக் கொண்டான்!
மீந்து போன இரவுகளை
கையில் எடுத்த நிலவன்
செய்வதறியாது திகைத்தான்!
நட்சத்திரங்களை ஊசியாக்கி
இரவைத் தைத்துக் கொடுத்தேன்!
என் கடவுள் நீதான்
என்ற சந்திரனை
மெதுவாகத் தின்று கொண்டிருந்தான் சூரியன்!
செய்வதறியாது திகைத்துக் கொண்டிருக்கிறேன் நான்!

5
கடவுளைக் காணும் ஆவலில் கடவுள்!
உலகம் முடியப் போகிறது!
கடவுள் வருகிறார்!
அந்த நபரின் குரல்
ஆகாயம் வரை கேட்டது!
உண்டியல்கள் வேகமாய் நிறைந்தன!
பண நோட்டுகளில்
காணிக்கைப் பெட்டிகள்
மூழ்கிக் கொண்டிருந்தன!
இதோ வந்து கொண்டிருக்கிறார்!
வந்தே விட்டார்!
குரலின் டெசிபல் கூடியது!
அனைவரும் வாசலைப் பார்த்தனர்!
கடவுளும் தான்!

6
தோட்டா சொன்ன ரகசியம்!
பட்ட்ட்ட்…………..
காது வரை வந்த ரகசியம்
அதோடு நின்று விட்டது!
எதுவும் புரியாது குழம்பிய மனம்
கண்களைப் படம் வரையச் சொன்னது!
கண்களின் கேள்விகளுக்கு
காது மௌனம் சாதித்தது!
நிலை அறியா மூளையோ
மதுவில் ஊறிய ஆப்பிள் காயாய்
கனத்துக் கிடந்தது!
சரக்…..சரக்…..சரக்!
வேகமாக நடக்கும் வேடுவனின்
தோள் பையில்
முயலின் சூடான ரத்தம்
இப்போது படம் வரைய ஆரம்பித்தது!

7
பால்!
நாற்காலியில் அமர்ந்து
பாட்டிலில் பால் குடித்தான் பேரன்!
பாட்டி படுக்கையில்
மேசைக்கரண்டியில் பால் குடித்தாள்!
முன்னது உள்ளே இறங்கியது!

8
தாரமும் தாசியும்!
தரையை மேயும் நிழலுக்கு
சூரியனும் விளக்கொளியும் ஒன்றுதான்
இருளைத் தொடும் வரை!

9
புதுக் கல்வி ஆண்டு!
எல்லா குழந்தைகளும்
தேர்ச்சி பெற்றனர்
கற்றுத் தந்த ஆசிரியரைத் தவிர!

10
நல்லாட்சி!
ஆணவப் படுகொலையை
ஆவணப் படுத்திய கடைசி தேதி
யாருக்கும் ஞாபகம் இல்லை!

11
மதம்!
அசோகரின் வாளால்
வெட்டுண்ட கிளியோபாட்ராவின் வீட்டில்
பௌத்தம் தூக்கிலிட்டுக் கொண்டது!

12
வாசலில் வாழைமரம் கட்டி
பந்தல் போட்டு மின்விளக்கு அலங்காரங்கள் செய்து
காய்கறிகள் வெட்டி
பதினாறு வகை
கூட்டுப் பொரியலுடன்
கறிசோறும் சாம்பார் ரசமும்
ரெடி பண்ணி
மாப்பிள்ளை பொண்ணுக்கான
மேடை அலங்காரமும் முடிச்சு
அரிசி பெட்டியுடன்
வாழைக்குலையும் ஏந்தி
மாமா மாமி சித்தப்பா சித்தி
பெரியம்மா பெரியப்பா
எல்லோரும் வந்திருக்க
செல்லக் குழந்தைகளின் உற்சாகத்துள்ளல்களில்
புத்தாடைகள் சரசரக்க
பாட்டியின் கைத்தடி மட்டும்
மூலையில் தனியாகக் கிடக்கிறது!

13
நிசப்தமான அந்த முன்னிரவில்
கொலுசு கட்டிய நீரோடை
சலசலத்து ஓடிக் கொண்டிருந்தது!
போட்டிக்கு மெட்டு கட்டிக்கொண்டிருந்தது
மாக்கிரி தவளை!
ஆயுள் முடியப் போகும்
தெருவோர ட்யூப் லைட் போல
விட்டு விட்டு
சத்தமிட்டுக் கொண்டிருந்தது
துள்ளிக் குதிக்கும்
கருப்பு நிற பாச்சான்!
விடாமல் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது
சீமை உடையில் குடியிருக்கும்
மிரியான் வண்டு!
இந்நிலையில்-
அமைதியான சத்தத்துடன்
ஓடைக் கரையில் அமர்ந்து
தண்ணீரில் நனைந்து விளையாடும்
நான்கு கால்களில்
இரண்டு மட்டும் என்னுடையது!

14
இரவைச் சுருட்டிக் கக்கத்தில் வைத்து
நடந்து கொண்டிருந்தேன்!
கோட்டானும் அரவமும்
உணவு தேட தோதான நேரமான
இரவைத் திரும்பத் தர சொன்னது!
கல்லறைக்குள்ளிருந்து
வெளிவந்த ரத்த காட்டாரி
மக்களை பயமுறுத்த
இரவு தான் சரியென கேட்டது!
எரிந்து கொண்டிருந்த பிணம்
எழும்பி வந்து
இரவில் தான் சரியாக எரிய
முடியுமென யாசித்தது!
தர முடியாதென வேகமாக நடந்தேன்!
இரவு இல்லையேல்
என் வருமானம் கிடையாதென
ஏக்கமாய் வந்து நின்றான்
இரவுக் காவலாளி!
கக்கத்தில் இருந்த இரவை எடுத்து
சந்தோஷமாய் அவனிடம் தந்தேன்!

15
எல்லோரையும் காப்பாற்ற
வேண்டுபவனின் கையில்
குளித்து மாலை சூடிய பெரிய ஆடு!
அரிவாளுடன் வந்து கொண்டிருக்கிறார் கடவுள்!

16
ஜாஸ் இசையில் மிதந்த வெள்ளைக்காரனை
தமிழ்ப் பாவால்
மிரட்டி வெளுத்த
கருப்பு மீசைக்காரன்!

17
கை நிறைய பணம் இருந்தும்
செலவழிக்க முடியவில்லை
வங்கியில் பணம்
பட்டுவாடா செய்பவர்!

18
விதை நெல்லை மட்டும்
விட்டு சென்ற அப்பாவுக்கு
வாய்க்கரிசி போடக் கூட வழி இல்லை!
– இப்படிக்கு
வங்கியால் வீடு பூட்டி
சீல் வைக்கப்பட்டு
நடுத்தெருவில் நிற்கும்
விவசாயி குடும்பம்!

29
பீடை யென
ஒதுக்கப்பட்டவளுக்கு
நடு வீட்டில்
தடபுடல் விருந்து!
அன்று பாட்டியின் நினைவு நாள்!

20
பத்தி புகையும்
அப்பாவின் புகைப்படத்தின் முன்
உணவு படைக்கப்பட்டது!
தினமும் விரட்டப்படும்
பிச்சைக்காரனுக்கு
இன்று சிவப்புக் கம்பள வரவேற்பு!

-ஜேசு ஞானராஜ்,
ஜெர்மனி

நூல் அறிமுகம்: பல்லவி குமாரின் ‘ஊடு இழை’ சிறுகதை – பெரணமல்லூர் சேகரன்

நூல் அறிமுகம்: பல்லவி குமாரின் ‘ஊடு இழை’ சிறுகதை – பெரணமல்லூர் சேகரன்



ஊடும் பாவுமான எளிய மக்களின் வாழ்க்கைக் கதைகள்
———————-
“இலக்கியத்தைக் கட்டளையிட்டு உருவாக்க முடியாது” என்பார் லெனின். உண்மைதான். இயல்பாய் இழைந்தோடும் அருவி போன்றது இலக்கியம். வாழ்வனுபவத்தின் கண்ணாடியால்.. பல வண்ணங்களோடு பல வடிவங்களோடு உருவாகும் படைப்பே இலக்கியமாக, அழியாத இலக்கியமாக நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கும்.

அன்றாடம் வாழ்க்கையோடு மல்லுக்கட்டும் எளிய மக்களின் சராசரி வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டும் சிறுகதைகளாக ‘ஊடு இழை’ சிறுகதைத் தொகுப்பைக் கொண்டு வந்துள்ளார் கவிஞர் பல்லவி குமார். இச்சிறு கதைகள் போன்ற மக்கள் இலக்கியமே அழியாத இலக்கியமாக விளங்கும் என்பதில் ஐயமில்லை.

இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள 15 சிறுகதைகளும் நாம் அன்றாடம் சந்திக்கும் கதை மாந்தர்களே. வாழ்க்கைப் போராட்டத்தில் அவரவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைக் கதை நேர்த்தி குன்றாமல் ஊடும் பாவுமாக படைத்துள்ளார் பல்லவி குமார்.

பொருளாதாரம் தான் உறவு முறையையே தீர்மானிக்கிறது என்றார் மார்க்ஸ். அதை எளிமையாக ‘அம்மாசி தாத்தா’ சிறுகதை மூலம் உணர்த்தியுள்ளார் நூலாசிரியர். பெற்ற தந்தையே ஆயினும் பணம் சம்பாதித்துக் கொண்டு வந்தால்தான் சாப்பாடும் மரியாதையும் கிடைக்கிறது என்பதை அம்மாசி தாத்தா பாத்திரத்தின் வழி நம்மைக் கரைய வைக்கிறார் பல்லவி குமார். நாள்தோறும் அரங்கேறி வரும் ஆணவக்கொலையின் அவலங்களை உணர்த்துகிறது ‘சாட்சி’ சிறுகதை. “ஆணவக்கொலை தொடர்பாகச் சிறப்புச் சட்டங்களை இயற்றி கறாராக அமுல்படுத்த வேண்டும்” என்னும் கோரிக்கையை வைத்துப் போராடிக் கொண்டிருக்கும் இடதுசாரிகள் நம் மனதில் வருகிறார்கள். மாடும் மனிதனும் ஒன்றாக வதைபடுவது இச்சமூகத்தின் மீதான கோபத்தை ஏற்படுத்துகிறது. இக்கதையில் ‘ஆச்சரியக் குறிகளாக வந்து விழும் மழைநீர்’, ‘முருக்கிப் போட்ட துணிபோல் கிடந்தான்’ என்னும் வர்ணனைகள் யதார்த்தக் காட்சிகள்.

கடந்த ஐம்பதாண்டுகளில் இல்லாத வேலையின்மை நாட்டில் கோரத் தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக ‘கனல்’ சிறுகதை தகிக்கிறது.

இத்தொகுப்பின் தலைப்புக் கதையான ‘ஊடு இழை’ குறிப்பிடத்தக்கச் சிறுகதை எனலாம். சண்டை சச்சரவு இல்லாத குடும்பம் இருக்க முடியாது. ஆயிரம் சண்டை சச்சரவுகள் இருந்தாலும் குடும்ப உறவுகளுக்கு ஒன்று வந்துவிட்டால் ‘தானாடாவிட்டாலும் தன் தசையாடும்’ என்பதற்கொப்ப சண்டை சச்சரவுகளைக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு அன்யோன்யமாக இயங்குவது குடும்பத்தின் இயல்பு என்பதை அழகுறக் கதையாக்கியுள்ளார் நூலாசிரியர். “தறியில எந்த சிக்கலும், எவ்வளவு சத்தமும் வந்தாலும் ஊடு இழை மட்டும் அறுவாம ஓடிக்கிட்டு இருந்துதுன்னா.. நெசவு நல்லா இருக்கும். அதுமாதிரி நெசவாள  குடும்பத்துல எந்த சிக்கலும் எவ்வளவு சச்சரவு வந்தாலும் வீட்டுக்கு வந்த பெண் மட்டும் இழுத்துப் புடிச்சிக்கிட்டு போய்ட்டான்னா.. அந்த குடும்பம் நல்லாயிருக்கும்” என்பது காலங்காலமாக பெண்களே குடும்பத்தில் அனுசரித்துப் போக வேண்டும் என்பது எளிய குடும்பங்களில் இன்னமும் விரவிக் கிடக்கின்றன என்தற்கு இக்கதையும் ஒரு உதாரணம்.

‘கல்லு வூடு’ கனவில் ஓயாதுழைக்கும் குடும்பம்.. குறிப்பாக காமாட்சி கல்லு வூட்டில் கண்ட அவலக் காட்சிக்குப் பிறகு கல்லு வூடு பிரம்மை தகர்ந்து தனது கூரை வீட்டு மகிழ்ச்சியே மகத்தானது என்று எண்ணும் நிலை. ஆக.. கூரை வீடா கல்லு வீடா என்பதல்ல பிரச்சினை. வீட்டில் வாழும் மாந்தர்களின் நடவடிக்கைகளே வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன என்பதைப் பூடகமாக இக்கதை மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. மண்ணுக்கும் மரத்துக்குமான உறவைத் தன் சொந்த அனுபவம் போல  இயல்பாகக் கதை சொல்கிறார் பல்லவி குமார்.

இன்றளவும் கிராமங்களில் நம்பப்படும் செய்வினை, ‘செய்வினை’ கதை மூலம் வாசகர்களுக்கு நினைவூட்டப்படுகிறது. ஆனால் இக்கதையில் மூடநம்பிக்கைகளையும் அறிவியலையும் ஒருங்கிணைத்துச் சென்று வெற்றி பெற்றுள்ளார் நூலாசிரியர்.

‘பிராது’ எனும் சிறுகதையில் குறி சொல்வது, பிராது கட்டி விடுவது போன்றவை பாத்திரங்களின் வழி இயல்பாக வந்து போகின்றன. ஆனால் இறுதியில் தனக்கு வரவேண்டிய பதவி உயர்வு பறிபோனதற்கு யார் மேல் பிராது கட்டுவது எனும் கேள்விக் கணையுடன் கதையை முடித்திருப்பது சிறப்பு.

இத் தொகுப்பில் உள்ள சில கதைகளில் நெசவுத் தொழில் காட்சிப்படுத்தப்படுவதும் அத்தொழிலில் கையாளப்படும் சிறுசிறு வேலைகளுக்கான வட்டார  வழக்குச் சொற்களை லாவகமாகக் கையாண்டுள்ளதும் பாராட்டத்தக்கது.

வெவ்வேறு கருப்பொருள்கள் போன்ற நல்ல சிறுகதைகளுக்குரிய இலக்கணங்களுடன் பெரும்பான்மை அளவில் பாத்திரங்களைப் படைத்துள்ள ஆசிரியரின் நடைச் செழுமையைப் போற்றியுள்ள எழுத்தாளர் ஜீவகாருண்யனின் அணிந்துரையை வழிமொழியலாம். இந்நூலை அழகுற வெளியிட்டுள்ள ‘தமிழ்ப் பல்லவி வெளியீடு ‘ பாராட்டுக்குரியது‌.

“கலை இலக்கியங்கள் யாவும் மக்களுக்கே” எனும் உயர்ந்த நோக்கில் வெளிவந்துள்ள எளிய மக்களின் வாழ்வியல் குறித்த “ஊடு இழை’ சிறுகதைத் தொகுப்பினை வாங்கிப் படிக்க வேண்டியது வாசகர்களின் கட்டாயக் கடமை.

– பெரணமல்லூர் சேகரன்

நூலின் பெயர் : ’ஊடு இழை’ சிறுகதைத் தொகுப்பு
நூல் ஆசிரியர் : பல்லவி குமார்
பக்கம்: 132

விலை : ₹125
வெளியீடு : தமிழ் பல்லவி
9/1ஏ இராஜ வீதி, கூட்டுறவு நகர்
பெரியார் நகர் (தெற்கு)
விருத்தாசலம் 606 001
கடலூர் மாவட்டம்
04143238369, 9942347079

வசந்ததீபன் கவிதைகள்

வசந்ததீபன் கவிதைகள்



இடையறாது
********************
வட்டிப்பணம் வாங்கிக் குவித்தார்
சொத்துக்களை ஊரெங்கும் நிறுவினார்
அண்ணாக்கயிறை அவிழ்த்து
அவரைப் புதைத்தார்கள்
ஆயிரம் வண்டிகள் நிறைய தங்கம்
ஆயிரம் கூடைகளில் நவமணிகள்
இறந்த பின் அவர்  கூட
எடுத்துச் செல்வாராம்
உப்பாக நீரில் கரைகிறேன்
நிறமாக வானவில்லில் பூக்கிறேன்
ஒற்றை நட்சத்திரமாகி ஜொலிக்கிறேன்
கனவுகளை விற்கிறேன்
கனவுகளை வாங்குகிறேன்
கண்ணீர் தான்  லாபம்
அடித்துச்  செல்லப் படுகிறேன்
ஆறு தன் போக்கில் போகிறது
என்னைப் போல பலர்
நீ அனுபவித்த வேதனை
நான் உணரவில்லை
பிறப்பைத் தரும் உன்னை
உதாசீனம் செய்கிறேன்
விளைநிலங்கள் விசும்புகின்றன
நெல்லென்று கூழாங்கற்களைக்
விழுங்குகின்றன பறவைகள்
அனல்காற்று அலறியபடி ஓடுகிறது
பட்டாசு ஆலை வெடிக்கிறது
மனித உறுப்புகள் பறக்கின்றன
உருப்படியாய் எதுவும் அகப்படவில்லை
ஆதி அல்லாடுகிறது
அந்தம் திண்டாடுகிறது
நாதியின்றி உலகம் உருண்டோடுது
காளி எத்தனை காளிகளடா
ரணகாளி பத்ரகாளி வனக்காளி சுடுகாட்டுக்காளி
பெண் அழிய
வேடிக்கைப் பார்க்கின்றன
அது நடக்கக் கூடாது
இது நடக்கணும்
இது நடக்கக் கூடாது
அது நடக்கணும்
மனசுக்குப் பசி அதிகம்.
மீதமான சொல்
*******************
கவிதை இசையைத் தேடுகிறது
இசை கவிதையைத் தேடுகிறது
இரண்டும் குரலைத் தேடுகிறது
நவீனகாலத்தில் பேயாவது பிசாசாவது
கேலிசெய்து சிரிக்கின்றன சினிமாக்கள்
பேய்ப்படங்களின் கோரப்பிடியில் ஜனங்கள்
மெய்யைத் தேடும் மெய்
பொய் தினம் தினம்
 தன்னைப் புதுப்பிக்கும்
கைகழுவிப் போகும் யாவும்
வனாந்தரக் காற்று போல சுதந்தரமானவன்
நீரோடை போன்று குளுந்த மனசுடையவன்
பறவையாய் சோற்றுக்கு பறந்தலைகிறான்
உண்மை அன்பு கோபப்படும்
உசுரையே அர்ப்பணிக்கும்
ஊறு விளைவிக்காது
யாருக்கு காவல்?
யாரைக் காப்பாற்றுகிறீர்கள்?
சோறா? கூலிக்கான தொண்டூழியமா?
வேகம் வேகம் வேகம்
அதிவேகம் அசுரவேகம்
விபத்து ஆபத்து சிதறிப்போனது பஸ்.
புல்லாய் வாழ்கிறாய்
பூச்சியாய் திரிகிறாய்
கல்லாய்ச் சமையும் சாபம் பெறுவாய்.
தண்ணீரின் நிறம் புத்தொளியாய் மின்னும்
கனிவின் பழிப்பில் மழையெனச் சொரியும்
கவண் தெறிப்பில் சில்லுகளாய்ச் சிதறும்.
வசந்ததீபன்
Enge Sendrai Kavithai By Saravibi RosiChandra எங்கே சென்றாய் ? கவிதை - சரவிபி ரோசிசந்திரா

எங்கே சென்றாய் ? கவிதை – சரவிபி ரோசிசந்திரா



எங்கே சென்றாய் நீ
எங்கே சென்றாய்
எங்கே சென்றாய் நீ
எங்கே சென்றாய்

என்னை நீ தொலைத்து எங்கே சென்றாய்
என்னை நீ அழைத்து எங்கே சென்றாய்

தினந்தோறும் பணந்தேடி
எங்கே சென்றாய்
திசைதோறும் புகழ்தேடி எங்கே சென்றாய்
உடலுக்குள் உயிர் காணாமல்
எங்கே சென்றாய்
உடலை தினம் பேணாமல்
எங்கே சென்றாய்

எங்கே சென்றாய் நீ
எங்கே சென்றாய்
எங்கே சென்றாய் நீ
எங்கே சென்றாய்

எதிலும் நான் தெரிகின்றேன்
எங்கே சென்றாய்
எல்லாம் நான் அறிகின்றேன்
எங்கே சென்றாய்

பேதமின்றி அள்ளித் தந்தேன்
எங்கே சென்றாய்
பேரிடரிலும் துணை வந்தேன்
எங்கே சென்றாய்
மும்மலம் நீ அறியாமல்
எங்கே சென்றாய்
முற்பிறவி நீ தெரியாமல்
எங்கே சென்றாய்

எங்கே சென்றாய் நீ
எங்கே சென்றாய்
எங்கே சென்றாய் நீ
எங்கே சென்றாய்

உயிர்தோறும் என்னைக் காணாமல் நீ எங்கே சென்றாய்
உள்ளத்தில் என்னை எண்ணாமல் நீ எங்கே சென்றாய்

சிற்றின்பத்தை ரசித்த நீ
எங்கே சென்றாய்
சிந்தையை வெறுத்த நீ
எங்கே சென்றாய்
நான் அக்கத்தில்
இருக்கின்றேன் நீ
எங்கே சென்றாய்
நான் பக்கத்தில்
பார்க்கின்றேன் நீ
எங்கே சென்றாய்

எங்கே சென்றாய் நீ
எங்கே சென்றாய்
எங்கே சென்றாய் நீ
எங்கே சென்றாய்

நிம்மதியாய் தினம் வருகின்றேன்
எங்கே சென்றாய்
நிம்(ம)தியை மறந்து நீ
எங்கே சென்றாய்

கார்கவியின் கவிதைகள்

கார்கவியின் கவிதைகள்




அளவறிந்து_வாழ்..!
***************************
இரவு பகல் பாராமல் சுக துக்கங்களை மறந்து
பணத்திற்காக ஓடுகிறான் குடும்ப தலைவன்…….

எவ்வளவு பெற்றால் இல்லை என்ற வாரத்தையை மட்டும்
நுனி நாக்கில் வைத்திருக்கிறாள்
குடும்பத் தலைவி…….

அப்பன் சேர்த்த சொத்துக்களை இளமையிலிருந்தே
விரயத்தில் முனைப்பாகிறான் மூத்த மகன்……..

தனக்கு மூத்தவன் பார்த்துக் கொள்வான் என
அண்ணனை மிஞ்சி வலம் வருகிறான் இளைய மகன்…….

இவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையும்
வாசலில் யாரோ அழைத்தது போல் எட்டிப் பார்க்கிறது
வாசலில் இப்பொழுது எழுதப்பட்டு நகரும்
“ஆசையில் வாழாதே அளவறிந்து வாழ்”
என வண்ணம் குழைப்பவனின்
தூரிகையில் சொட்டும் கடைசி சொட்டு………

வெண்புகை
******************
இருசக்கர வாகனங்களும் அவ்வப்போது வந்து செல்லும்
நான்கு சக்கர வாகனங்களும்……..
நின்று செல்லும் முச்சந்தியில்
நான்கு கால் ஊன்றப்பட்டு….
ஆலாக்கு நீரில் இரண்டு அடுக்குகளாய் வெந்து
திணறுகிறது இட்டலிகள்

மூன்று ஈடு முடிந்ததும் நீரை அளந்து ஊற்றும் வேளையில்
சாலையை அளந்து வருகிறான் கணவன்…..
வட்ட நாற்காலிகளில் தட்டேந்தி நிற்பவர்க்கு
சுடச்சுட பசியாற்றும் இவளுக்கு முட்டி மோதி தட்டி தூக்கி
சத்தமில்லாமல் மறுகி தவிக்கும் காற்றோடும் காலத்தோடும்
கலந்த தலையெழுத்தாய் கரைந்து வெளியேறுகிறது
கவலை நீரில் கொதித்தெழுந்த வெண்புகை……..

உண்மையான மழை
***************************
நான்கு கால் சௌக்கை மரங்களின் தாங்களில்
தகரங்களை தாங்கியபடி நிற்கிறது பந்தல்
குளு குளு ஏசிபாக்சின் மேல குதுகலமாய்
நிரந்தர துயில் கொள்கிறார் துக்கசாமி

முகம் மறைக்க மாலை நிரம்பியது
யாரோ ஒரு சொந்தகாரன் எடுத்து ஓரம் அடுக்கி வைக்கிறான்…
மனைவி ஒருபக்கம் கண்ணீரில்
மகன்கள் ஒருபக்கம் அடுத்தகட்ட பணிகளில்…
மருமகள் தலையிலும் காலிலும் பிடித்த வண்ணம் அழுகை…
மகள்கள் பெட்டியை பிடித்த வண்ணம் கண்ணீரில் புலம்பிடும் பழைய கதைகள்

தெரிந்தும் தெரியாமல் பெரியோர் அழுகைக்கு ஈடுகொடுத்து
தேம்பலில் அமர்ந்தழும் பேரபிள்ளைகளை என பந்தல் நிரம்பிய நிலையில்
யாரும் அறியாத ஆன்மாவாய் பந்தல் நடுவே நாற்காலி போட்டு
அனைத்தையும் பார்த்து வான் நிமிர்கிறார் துக்கசாமி

நிரந்த பிரவை ஆறுதல் செய்திட
அளவில்லாமல் கொட்டித் தீர்க்கிறது…
இந்த துக்கங்கள் தொண்டையை நனைத்தபடி உண்மையான மழை……..

Raju Arokiyasamy Kavithaigal ராஜு ஆரோக்கியசாமி கவிதைகள்

ராஜு ஆரோக்கியசாமி கவிதைகள்

சலனமற்ற நதியாய்
ஓடப் பார்க்கிறேன்
நான் வேண்டி விரும்பாமலே
சேரும் சுயநல சாக்கடைகள்

எல்லாவற்றையும் மீறிய
ஆத்ம திருப்தி
அந்தப் புள்ளியில்
செல்லாமல் போகும் பணம்

பொய்மையில் சிக்கியழியும்
நீர்க்குமிழியல்ல நான்
உண்மையோடு உருண்டாலும்
மணலாகி மகிழும் பாறை

கீறி ஆற்றுகிறேன்
ஆறாப் புண்
நீ கிழித்த
என்மனக் கடிதங்கள்

உன் ஞாபகங்களைத்
துடைத்து எறிகிறேன்
அழுக்கு நீரில்
ஆயிரம் செந்தாமரைகள்

Pothum endru solvathu Unavil Mattumalla Article By Karkavi போதும் என்று சொல்வது உணவில் மட்டுமல்ல - கார்கவி

போதும் என்று சொல்வது உணவில் மட்டுமல்ல – கார்கவி

வாழ்வில் எத்துணையோ இடங்களில் மனிதன் போதும், மனம் நிறைவாகி விட்டது என்றது ஒரு போதும் சொன்னதில்லை…

அப்படி ஒருவன் சொல்கிறான் என்றால் அவன் மனம் விரும்பி, வயிறு நிரம்பி அதற்கு மேல் உண்டால் வெடித்துவிட கூடுமோ என்ற சிறு அச்சத்திலும், பெரும் நிறைவிலும் கூறும் இடம் உணவாகத்தான் இருக்க கூடும் என்பது அனைவரும் அறிந்த விடயமே…

ஆனால் அது மட்டும் முடிவல்ல….

தம்பி தங்கைக்காக போதும் எனலாம்… அம்மாப்பா வின் அன்பை போதும் எனலாம்…

ஏதோ ஒரு கையேந்திபவனில் உனக்கு வரவிருக்கும் இட்டலியின் பெயரில் ஊர்ந்துவரும் பிச்சைகாரன் பெயர் உள்ளதென்றால் அங்கு போதும் எனலாம்…..

மற்றவனின் பணம் உன்னிடம் வந்தால் உனக்கானது இல்லை என்று போதும் எனலாம்…

அடுத்த குடம் ஊற்றினால் நிறைந்துவிடும் தொட்டியில் அளவாக ஊற்றிட போதும் எனலாம்….

அடுத்தநாள் வேண்டி அளவாக இரை தூவி விட்டு அடுத்த கோழிகளுக்கு வேண்டுமென அந்த இடத்தில் போதும் எனலாம்…..

அதீத கஸ்டத்தில் ரணத்தை மறைத்து சிரித்துகொண்டே போதுமென சொல்லிவிடலாம் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற கடவுளிடம்…..

ஆயாவின் வெத்தலையில் வெந்துவிடாது இருக்க சுண்ணாம்பு போதும் எனலாம்….

சுற்றாத்தார் வத்தி வைப்பில் சுருக்கென கண்படுமே கண்டதெலாம் போதும் எனக்கும் காலம் உண்டு என போதும் எனலாம்…

இருபது வயதினில் வரும் கோவத்தினை போதும் எனலாம்….

கொஞ்சிடும் சேவலை கோழி முட்டையிடும் வரை போதும் எனலாம்…

எட்டாவது பிரசவத்திலும் பெண் என்றால் இதற்குமேல் வேண்டாம் என பெண்ணே போதும் எனலாம்….

போதும் என்பதற்கு உணவு மட்டும் அல்ல… உறவுகளையும் பல நேரங்களில் போதும் எனலாம்…

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து…