Matram Kavithai By Dharma Singh மாற்றம் கவிதை - ஐ. தர்மசிங்

மாற்றம் கவிதை – ஐ. தர்மசிங்

விடியலை
கூவி எழுப்பியது சேவல்
கடிகாரமாய்
நேரம் காட்டியது சூரியன்

விரல் கொண்டு
மணலைக் கிளறி
எழுதிப் படித்தார்கள்

ஓலைச்சுவடிகளில்
வரலாற்றை
கண்டு கொண்டார்கள்
வியர்வைகளை
காசாக்கும்
வித்தைகளைக் கற்றார்கள்

ஏர்முனைகளால்
தேசத்தை
நிமிரச் செய்தார்கள்

கொண்டாடும் விழாக்களால்
ஒற்றுமையை
வளர்த்தார்கள்
பொங்கி வழியும்
பானைகளால்
மனம் நிறைந்தார்கள்

வரம்பின்றி
பெற்ற பிள்ளைகளை
இறைவனின் கொடைகளாகக்
கொண்டாடினார்கள்

குடிசை வீட்டிலும்
குறட்டையொலியொடு
தூங்கினார்கள்

கதைச் சொல்ல
நரைத்த தலையோடு பாட்டி
குழப்பத்திலிருந்து விடுபட
உதாரணங்களோடு தாத்தா

தோளில் சுமந்து செல்ல
தடந்தோள்களோடு
தாய்மாமன்

சுகமாக தலைகோத
அத்தையிடம்
அன்பான விரல்கள்

கட்டிப் பிடித்து முத்தம் தர
கருணை நிரம்பிய சித்தி
கைப்பிடித்து அழைத்துச் செல்ல
புன்னகையுடன் சித்தப்பா

காலங்காலமாக முற்றத்தில்
நினைவுகளைச் சுமக்கும்
கயிற்றுக் கட்டில்

கொல்லைப்புற தோட்டத்தில்
பட்டாம்பூச்சிகள் கொஞ்சி விளையாடும்
பசுமையான தோட்டம்

தொழுவத்தில்
கேட்டுக் கொண்டிருக்கும்
” ம்மா ” எனும் சப்தங்கள்
” ம்மே” எனும் சப்தங்கள்

வாசலில் விட்டு விட்டு ஒலிக்கும்
” லொள்…லொள்…” சப்தங்கள்
” மியாவ்… மியாவ்…” சப்தங்கள்

வெள்ளை மனங்களோடு
கலகலப்பாக இருந்தது
கூட்டுக் குடும்பமாய்
அந்தக் காலம்…

ஆரவாரங்கள் குறைந்து
அமைதியாக இருக்கிறது
இன்றைய டிஜிட்டல் உலகம்
ஆளுக்கொரு அலைபேசியோடு…

Sakthiyin Kavithaigal 5 சக்தியின் கவிதைகள் 5

சக்தியின் கவிதைகள்

காகங்கள்…….!!!!!
*********************
அதிகாலை வேளையிலே
குடிசையின் மீது மேல்
அமர்ந்த காகங்கள்
கரைந்து
கொண்டிருக்கின்றன,

காலையிலிருந்து காதுகள் வலி
ஏற்பட ‘கா கா ‘என கரைந்து கொண்டிருந்த காகங்களை
குழந்தைகள் இட்லியால்
அடித்து துரத்துகின்றனர்

தூங்கி எழுந்த அம்மா
காகங்கள் கரைவதை கண்டதும்
நம் வீட்டிற்கு உறவினர்கள்
வருவார்கள் என்று கூறுகிறாள்,

அறிவழிகியும் அறிவழகனும்
வீட்டின் வாசலில் ஓடிப்போய் பார்க்கிறோம், வாசலில்
கணக்கு நோட்டுகளோடு
நிற்கிறார் வெள்ளிக்கிழமை தண்டல்காரர்,

தண்டல்காரனும் உறவினர்
ஆகிறார் வாரம் ஒருமுறை
வீட்டு வாசலில் வந்து நின்று நலம் விசாரித்து விட்டு செல்வதால்……!!!!

மனிதர்களுக்காக பறவைகள்
***********************************
மனிதர்களின் தேவைகளுக்காக
மர விதைகளை விதைக்கின்றன எவ்வித எதிர்பார்ப்பு
இல்லாத பறவைகள்,

மனிதனின்
சுவாசக்காற்றுக்காக
சூழலியல் வள்ளுஞராகின்றன
மரம் நடும் பறவைகள்,

வண்ண  வண்ண பறவைகள்
வெவ்வேறு விதமான
மர விதைகளை விதைக்கின்றன
குளக்கரையின் மேடுகளை சுற்றி,

பறவைகள் விதைத்த
மரத்து நிழலில் கட்டில் போட்டு
கால் நீட்டி உறங்குகின்றனர்
மரம் நடாத மனிதர்கள்,

வளர்ந்த மரங்களின்
கிளைகளை  வெட்டி குடிசைகளை
அமைத்துக்கொள்கிறான் பறவைகளுக்கு தண்ணீர் வைக்காத மனிதன்,

மனிதன் அடியோடு
வெட்டிய மரங்களுக்காக
வேகமாக பறந்த பறவைகள்
வானத்தை கிழித்து
நீரை கொட்டுகிறது கண்ணீர் துளிகளாக ,

ஊரெங்கும் பறவைகள்
ஊரெல்லாம் மரங்கள்
மரங்களில்லாமல்  மனிதனா
பறவைகளில்லாமல்
மரங்களா ….!!!!!!! 

தங்கேஸ் கவிதைகள் 34 Thanges Poems 34

தங்கேஸ் கவிதைகள்




கவிதை 1
கண்களை மூடிக்கொள்கிறேன்
இன்னொரு முறை விழிகளுக்குள் பறந்து போ பறவையே!
அந்த இளவேனிற் காலம் திரும்பி வரும்போது
ரேடியோப் பூக்கள் பூத்த மலைச்சரிவுகளில்
நாம் பசுந்தளிர்களிடம் உரையாடியபடி நடந்து கொண்டிருப்போம் !
பால்கொடிகள் என் மேனியெங்கும் பற்றிப் படர
மெய்சிலிர்ப்பில் நான் மீண்டும் பனிச்சிலையாகி விடுவேன்.

தெளிந்த வானமும்
அதன் மீது நிலவும்
அரைவட்டமடித்துப் போகும்
வெண்நாரைக்கூட்டங்களும்
மீண்டும் தோன்றும் போது
கடைக்கண்ணோரம் துளிர்க்கும்
ஒரு துளி கடலில்
நீ படைத்த அத்தனை உயிரினங்களும் உன் முன்னால்
இரகசியமாய் நீந்தி மறைந்து விடும் கண நேரத்தில்

கவிதை 2
கடவுள் புன்னகைக்க வந்து விடுவார்
காற்றில் மிதந்து வரும் வார்த்தைகளென
தாழப்பறக்கின்றன
அதிகாலையின் முதல் பதிவை எழுதும்
வண்ணத்துப்பூச்சிகள்

காலைப்பறவைகள்
பனித்துளிகளில் தேங்கியிருக்கும்
ஈரக்காற்றை இறக்கைகளால் கிழிக்காமல்
கவனமாக நீந்திப்போகின்றன
மரங்கள் தியானித்துக்கொண்டிருக்கின்றன
இன்னும் கண் திறக்காமல்

செங்கல் பொடியையும் சாம்பலையும்
வரிகளாய் உடம்பில் தெளித்திருக்கும்
சங்குப்பூனையும்
உறுத்தும் மியாவிற்குப் பயந்து
நீட்டி சோம்பல் முறிக்கும்
அருக்கம் புல் புதரிலிருந்து

தெருநாய்கள் அடையாளம் தொலைந்து
சண்டையிடாமல் இருக்கும்
சற்று வெயிலேறும் வரைக்கும்

நசுக்கப்பட்ட சிவப்புத்தக்காளியாய்
தோற்றம் கொள்ளக் காத்திருக்கிறது
இன்றைய அதிகாலைச்சூரியன்

இன்னொரு தென்னங்கீற்றாய்
தலைகீழாகத் தொங்கி கிடக்கிறது
பச்சை அரவம் ஒன்று
கடைசி இரவும்
சொட்டிக்கொண்டிருக்கிறது
இருள் நதியாய்
அதன்மீது

தாயின் வெப்பச் சிறகுகளுக்குள் பதுங்கியிருக்கும்
காக்கைக் குஞ்சுகளுக்கும்
தாய்ப் புறாவின் வெது வெதுப்பில்
கண்ணயர்ந்திருக்கும் புறா குஞ்சுகளுக்கும்
இந்த நாள்
இன்னும் ஒரு காணாத
கனவென
இருக்கக்கூடும்

டப் டப் டப்டப் டப் டப்
இன்றைய அதிகாலையின் முதல் பதிவு
பூமியின் தோலை கிழித்துப்பறக்கின்றன
நான்கு கால்கள் இரண்டு கால்கள்

பெட்ரோலைக் குடித்துப்
புகையைத் துப்பி
சற்றதிர்ந்து விழித்த
அதிகாலையின் முகத்தில்
கரியைப் பூசி
விரைகின்ற ஒரு காரியமாய்

தென்னையில் அமர்ந்திருந்த
குரங்கொன்று அதிர்ந்து
பட படத்து
கிளைக்குக் கிளை தாவ
காக்கைகள் பட படத்து
ஓலமிட்டு அலற

காயை காலை நீட்டி
கதை கதையாய்க் கதைத்து
நடக்கிறார்கள்
அஷ்ட கோணலாய்

கும்பல் கும்பலாய் நின்று
செய்கிறார்கள் சிரிப்பு வைத்தியம்
அணில் பிள்ளைகள்
தலை தெறிக்க ஓடுகின்றன
மறு கூடு தேடி

மது வாசனையும்
சிகரெட் புகையும்
ஊது வத்தி வாசனையும்
பரவ ஆரம்பிக்கிறது
தெருக்களில்

குப்பைத் தொட்டிக் கருகில்
குவிந்து கிடக்கின்றன
காலி மதுப்புட்டிகளும்
சுருட்டி மடக்கப்பட்ட
பேப்பர் பொட்டலங்களும்
தண்ணீர் பைகளும்
குரல் உயர்த்தாத தெருநாய்களும்

மற்றும் நைந்த துணிகளுக்குள்
நைந்த உடல்களும்
சற்று நேரத்திற்கெல்லாம்
கடவுள் வந்து விடுவார்
ஒரு உக்கிரக புன்னகையோடு