தொடர்- 3 : சனாதனம்: எழுத்தும் எதிர்ப்பும் – எஸ்.ஜி. ரமேஷ்பாபு
பிறை 1: பிறைபொழுதின் கதைகள் – ம.மணிமாறன்
நூல் அறிமுகம்: P.K.Yasser Arafath, G.Arunima ‘The Hijab’ – ஆர்.விஜயகுமார்
“உங்கள் முகத்தை மறைத்திருக்கும் இந்த முக்காடு அழகாக இருக்கிறது ,
அதைக் கொண்டு தேசிய கொடியை உருவாக்கி இருந்தால் இன்னும் அழகாக இருந்திருக்கும்”
என்று இசுலாமிய சமுகத்தை சேர்ந்த கவிஞர். மாஜாஸ் லக்னாவியின் சுதந்திர போராட்ட அறைகூவல் மிகவும் பிரபலமானது.
சுதந்திர போராட்டத்தில் இசுலாமியர்களின் பங்கு மிகவும் முக்கியமானது, பாகிஸ்தான் என்ற நாடு மத அடிப்படைவாத அடிப்படையில் பிளவுபட்ட பிறகும், மதச்சார்பற்ற இந்தியாவுடன் தங்களை பிணைத்துக்கொண்ட இசுலாமியர்கள் ஜனநாயகத்துடன் நடத்தப்படுகிறார்களா என்பதை முன்வைக்கும் மிகவும் முக்கியமான நூல் “The Hijab – Islam, Women and the Politics of Clothing”.
அனைத்து மதங்களும் பெண்களை கீழ்மைப்படுத்தும் நடவடிக்கைகளையே வரலாறு நெடுகிலும் பின்பற்றி வருகிறது. இதில் எந்த மதத்திற்கும் விதிவிலக்கு கிடையாது இந்தியாவில் பெரும்பான்மை மதம் என்ற அடாவடித்தனத்துடன் சிறுபான்மையின மதங்களை நசுக்கும் வலதுசாரிகளின் ஒரு நடவடிக்கையாகவே கடந்த ஆண்டு கர்நாடகத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணியக்கூடாது என்ற பிரச்சனை உருவாக்கப்பட்டு தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் அது கண்டனத்திற்குரிய பேசு பொருளாக மாறியது. இந்திய உச்ச நீதிமன்றமும் தடை செல்லும் என்று அறிவித்துள்ளது. ஹிஜாப்பை பெண்களின் உரிமை, மதத்தின் அடையாளம் என்பதை தாண்டி உலக அரசியல், இனவரைவியல், வலதுசாரி மேலாதிக்கம், ஆணாதிக்கம், கலாச்சாரம், பண்பாடு என்று வெவ்வேறு ஆய்வு தளங்களில் பல்வேறு நபர்களால் செறிவு மிக்க விவாதங்கள் இந்நூலில் முன்வைக்கப்படுகிறது.
இந்திய அரசியலமைப்பு எந்த ஒரு தனிநபரும், எந்த மதத்தையும், கலாச்சாரத்தை, பண்பாட்டை, பழக்கவழக்கத்தை, மொழியை பின்பற்ற உரிமை உள்ளவர்கள் என்கின்ற அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. கொரோனாவிற்குப் பிறகு ” New Normal ” என்று அதிகம் பேசப்படுகிறது. தற்போதைய இந்திய ஆட்சி பாசிச கொள்கைகளுக்கு ஆதரவாக இந்திய மக்களை ஜனநாயக வெளியிலிருந்து, மதச்சார்பற்ற மனங்களை தாண்டி வலதுசாரி திருப்பத்திற்கு நியூ நார்மலாக மாற்ற பல்வேறு பிரச்சனைகளை உருவாக்குகிறது, அது CAA, காஷ்மீர் 370 நீக்கம், அயோத்தி தீர்ப்பு, சபரிமலை பெண்கள் அனுமதி, Triple Talaq, என மிகப் பெரிய அளவிலும், சின்னஞ்சிறு அளவிலும் மிகத் தீவரமாக அரசு துணையுடன் நடைமுறைப்படுத்தப்படுகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற உத்தரப்பிரதேச தேர்தலில் தற்போதைய அம்மாநில முதல்வர் முன்வைத்த 80% Vs 20% என்ற கோஷம் சாதாரணமாக கடந்து போகக்கூடியதா?
ஹிஜாப்பின் அரசியல் என்று ஹிலால் அகமதுவும்,ஹிஜாப், மாட்டிறைச்சி தடை மற்றும் சகிப்புத்தன்மையை மையமாக வைத்து தன்வீர் ஃபாசிலும், கள அனுபவத்துடன் சிரின் செய்த்தி எழுதிய இறையாண்மையுள்ள உடல் கட்கரை, மண்டல் கமிஷன் அறிக்கைக்கு பிறகான இந்திய அரசியல் வெளி எவ்வாறு சிறுபான்மையினருக்கு எதிரானதாக மாற்றப்பட்டுள்ளது என்று அலசும் யாசர் அராபத்தின் முன்வைப்புகள், இந்திய உடைகள் மற்றும் ஹிஜாப் தடை குறித்த அருணிமாவின் கட்டுரை, வேற்றுமைகளை அங்கீகரித்து ஒற்றுமையை கற்றுக் கொள்வது எவ்வாறு என கர்நாடக ஹிஜாப் தடை அரசியலை முன்வைத்து நவநீத ஷர்மா மற்றும் ஹரிகிருஷ்ண பாஸ்கரன் முன்வைக்கும் உண்மைகள், சமூகப் பங்கேற்பு மற்றும் பொதுவெளிக்கு பெண்களை அழைத்து வருவதில் ஹிஜாபின் பங்கு எவ்வாறு உள்ளது என்று சிஜிலாசின் ஆய்வு, பெண்களுக்கு ஹிஜாப் அவசியமா? இல்லையா? என்று நூர் சாகிர் முன் வைக்கும் உரையாடல், கதர் ஆடை அணிவது இந்திய சுதந்திர போராட்டத்தின் ஒரு முக்கிய நடவடிக்கை, ஆனால் இந்தியாவில் பெண்களின் உடைகளை தேர்வு செய்வதற்கு கலாச்சார காவலர்களுக்கு என்ன அவசியம் என்று பேசும் ஜமீலின் கேள்விகள் என ஹிஜாப் பற்றிய அறிமுகம் அது குறித்த அரசியல் பிரதிணை ஏற்படுத்தும் கட்டுரைகள் மூன்றாவதாக வரலாறு தனிமனித அனுபவம் ஆய்வுகள் நான்காவதாக பெண்களின் உரிமைகள் குறித்து முன்வைக்கப்படும் கருத்துக்கள் இறுதியாக ஒரு சிறுகதை என்று மொத்தம் ஐந்து பகுதிகளாக வரலாற்று ஆய்வாளர் யாசர் அராபத் மற்றும் டெல்லி JNU பேராசிரியர் அருணிமா ஆகியோரால் இணைந்து தொகுக்கப்பட்டுள்ளது.
இந்திய சுதந்திர போராட்டத்தில் சிறுபான்மையின இசுலாமியர்களின் பங்கு எவ்வளவு முக்கியமான ஒன்றாக இருந்துள்ளது. குறிப்பாக முதல் விடுதலை போர் என்று சொல்லக்கூடிய 1857 புரட்சியில் மட்டும் 225 இசுலாமிய பெண்கள் கொல்லப்பட்டதாக பிரிட்டிஷ் ஆவணங்கள் கூறுகிறது. மேலும் பல்வேறு போராட்டங்களை தலைமையேற்று நடத்திய இசுலாமிய வீராங்கனைகளான அபாதி பானோ பேகம், பீபி அம்துஸ் சலாம், பேகம் அனிஸ் கித்வாய், பேகம் நிஷாதுன்னிசா மோஹானி பாஜி ஜமாலுன்னிசா, ஹஜாரா பீபி இஸ்மாயில், குல்சும் சயானி, சையத் ஃபக்ருல் ஹாஜியா ஹாசன்……. என்று பட்டியல் நீண்டுக் கொண்டே செல்லும். சுந்திர இந்தியாவை உருவாக்குவதற்கு பாடுபட்ட ஒரு சமூக மக்களை அச்சத்திற்கு உள்ளாக்கும் “New Normal” இந்தியாவை இன்றைய ஆட்சியாளர்கள் உருவாக்கி வருகிறார்கள். சுதந்திர காற்றை சுவாசிக்கும் ஒவ்வொருவரது மனசாட்சியையும் இந்நூல் வாசித்தப்பின் உலுக்கும்.
நூல் : The Hijab
ஆசிரியர் : P.K.Yasser Arafath, G.Arunima
விலை : ரூ.₹599
பக்கம் – 240,
வெளியீடு : Simon & Schuster பதிப்பகம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
[email protected]
தீனதயாள் உபாத்தியாயா வெறுப்புகளின் பிறப்பிடம் கட்டுரை – மாதா
முஸ்லீம்களை பகைக்கவோ, விலக்கி வைக்கவோ வேண்டியதில்லை. ஆனால் அவர்களை தூய்மை படுத்த வேண்டும. பிஜேபி யின் முந்தைய அவதாரமான ஜனசங்கத்தின் கலாச்சார, அரசியல் வழிகாட்டியும், ஆர்எஸ்எஸ் முக்கிய தலைவர்களில் ஒருவருமான பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு கூறினார். அந்நியர்கள்; (முஸ்லீமகள்) முன் இரண்டு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று இங்குள்ள தேசிய (இந்து) இனத்தையும், அவர்களது கலாச்சாரத்தையும் சுவீகரித்து அதன்படி வாழவேண்டும். இரண்டு, தேசிய இனம் அனுமதிக்கும் வரை இங்கு வாழ்ந்துவிட்டு, பின்னர் தேச நலனுக்காக நாட்டைவிட்டு வெளியேறிவிட வேண்டும். இந்துஸ்தானத்திலுள்ள அந்நிய மக்கள் இந்துக் கலாச்சாரத்தை, ஏற்றுக்கொண்டு, வேதங்களின் புனிதங்களைப் புரிந்துகொண்டு வாழவேண்டும். முஸ்லீம்களுக்கென்று தனி விழாக்கள் கிடையாது. இந்து தெய்வங்களை வழிபட்டு, அவர்களின் கொண்டாட்டங்களில் கலந்துகொள்வதோடு, தங்களின் தனித்துவத்தை வெளிப்படுத்தக் கூடாது. குடியுரிமையோ, அடிப்படை உரிமைகளோ, சிறுபான்மையினருக்கான முன்னுரிமையோ அவர்களுக்கு கிடையாது என்றார்.
தீனதயாள் உபாத்தியாயா உத்தர பிரதேசம் மதுராவில் 1916ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 25ம் நாள் பிறந்தார். 1937ல் அவர் ஆர்எஸ்எஸ்ஸில் சேர்ந்து அரசியலில் நுழைந்தபோது அவருக்கு வயது இருபத்தொன்று. அப்போது ஆர்எஸ்எஸ் தலைவராக இருந்த கோல்வால்க்கரின் போதனைகளாலும், தன்னுடைய வீரிய செயல்பாடுகளாலும் அமைப்பின் இரண்டாவது பெருந்தலைவராக உருவானார். இந்துக்கள் அல்லாதவர்களெல்லாம் அந்நியர்கள். அவர்கள் தூய்மைப்படுத்த வேண்டியவர்கள் என்று “நாம் அல்லது நமது வரையறுக்கப்பட்ட தேசம்”; என்ற நூலில் கோல்வால்க்கர் கூறியுள்ளார். இறைச்சியை சிறுசிறு துண்டாக்கும் கூரிய கத்திபோல் வன்மத்துடன் வெறுப்பு வார்த்தைகளை எழுதியுள்ளார். உபாத்தியாயாவும் அவரைப் பின்பற்றியே செயல்பட்டு வந்தார். இந்துக்கள் தூய்மையான இனம் என்ற கோல்வால்க்கரின் கூற்று, ஜெர்மானிய இனம்தான் தூய்மையானது, அவர்கள் உலகை ஆளப் பிறந்தவர்கள், மற்ற இனங்களெல்லாம் அடிமைப்படுத்தப்பட வேண்டியவை அல்லது அழிக்கப்பட வேண்டியவை என்று ஹிட்லர் கூறிய பயங்கரமான பாதையை நோக்கிச் சென்றது. ஜெர்மானியர்கள் உயர்ந்த ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று அதிபர் ஹிட்லர் தனக்குத்தானே வரையறுத்துக்கொண்டு, நாட்டில் இனத்தூய்மை செய்வதற்காக யூத இன மக்களை குவியல் குவியலாக உயிரோடு புதைத்தும், கொத்து கொத்தாக விஷ வாயு செலுத்தியும் லட்சக்கணக்கான மக்களை இன ஒழிப்பு செய்தார். அவருடைய இனத்தூய்மைவாதம் உலக மக்களை பெரும் அதிர்ச்சியடையச் செய்தது. ஆனால் இந்தியாவில் கோல்வால்க்கர் கூறும்போது, ஹிட்லரின் செயல்பாடுகள், இந்துஸ்தானத்தில் இனத்தூய்மை செய்து, ஒரே இனம் ஒரே நாடு என்று ஆக்குவதற்கு நமக்கு படிப்பினைகள் கிடைக்கின்றன. ஜெர்மானிய இனமும் கலாச்சாரமும் நமக்கு வேறுபாடாக இருந்தாலும், நம் தேசத்தில் நாம் ஒரே இனமாக ஒன்றுபடுத்துவதற்கு நாஜிகளின் நடைமுறைகள் நமக்கு பலன் தரும் வழிகாட்டுதலாக அமையும் என்றார்.
சமயச் சார்புள்ளவர்கள்கூட சகிக்க முடியாத, மனித குலத்துக்கு எதிரான நாஜி கொள்கைகள் கோல்வால்க்கரின் புத்தகத்தில் இருக்கிறது. விடுதலையடைந்த முதல் முப்பது ஆண்டுகளில் மதச்சார்பின்மையும், ஜனநாயகமும், சோசலிசக் கருத்துக்களும் மேலோங்கி இருந்ததால், கோல்வால்க்கரை பொதுவெளியில் பெரிய தலைவராக அவர்களால் உருவாக்க முடியவில்;லை. ஆர்எஸ்எஸும் அப்புத்தகத்தைப் பற்றி அடக்கியே வாசித்தது. ஆனால் அதன் ஸ்தாபன அமைப்புக்குள் கோல்வால்க்கரின் கருத்துக்கள் தொடர்ந்து போதிக்கப்பட்டுக் கொண்டேயிருந்தன. தீனதயாள் உபாத்தியாயா பொறுப்புக்கு வந்தவுடன் இப்பிரச்சனையைக் கையிலெடுத்தார்; குருஜியின் சீடரான உபாத்தியாயா, மற்ற ஆர்எஸ்எஸ் தலைவர்கள் போலில்லாமல் தனது வசீகரிக்கும் மொழியில் கோல்வால்க்கரின் சித்தாந்தங்களை மிக வீரியத்துடன் அரசியல் தளத்தில் புகுத்தினார். இந்திய வரலாற்றில் கடந்த பத்து நூற்றாண்டுகளாக முஸ்லீம்கள் தொடர்ந்து தொல்லையாக இருக்கிறார்கள். நாம் நாஜிகளிடமிருந்து உத்வேகம் பெற்று, பாரதத்திலுள்ள ஆறுகோடி(அன்று) இஸ்லாமியர்களை அழிக்க வேண்டும் அல்லது நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்ற கோல்வால்க்கரின் கருத்துக்களிலிருந்து மாறுபடுகிறார். இதையே உபாத்தியாயா நளினமாக தன்னுடைய “அகண்ட பாரதம்”- நோக்கங்களும், அர்த்தங்களும் என்ற கட்டுரையில், முஸ்லீம்கள் அனைவரும் தங்களை முழுமையாகத் தூய்மைப்படுத்திக்கொண்டு, இந்து இனத்தோடு கரைந்துகொள்ள வேண்டும் என்று கூறியதோடு, இந்தியராக இருப்பதற்கு இவையே தகுதிகள் என்றார். அவர்களுடைய அகராதியில் இந்தியன், பாரதிய என்பதற்கு ஒரே அர்த்தம் இந்து என்பதே. கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக தேசியவாதத்திற்கு “பாரதிய” என்ற பெயர் சூட்டி, மற்றவர்கள் மீது திணித்து போலியான பெரும்பான்மையைக் காட்டுகிறார்கள். இந்து என்ற வார்த்தையை ஒவ்வொருவரின் உள்ளத்திலும் விதைக்க வேண்டும். அதில்லாமல் சிவில் சமூகத்தை அணிதிரட்டி தேசிய ஒருமைப்பாட்டை உருவாக்க முடியாது. பாரதிய என்ற இந்து அடையாளத்தை ஒரு நாளும் மறக்கமாட்டேன். இது குருஜியிடமிருந்து நான் கற்ற பாடம் என்று தீனதயாள் கூறினாhர். இந்த அடிப்படையில்தான் அவர்கள் அமைத்த கட்சியின் பெயர்களான பாரதிய ஜனசங்கம் என்பது இந்து ஜனசங்க கட்சி என்றும், பாரதிய ஜனதா கட்சி என்பது இந்து ஜனதா கட்சி என்றும் பொருள்படுகிறது.
நாம் யார்? ஏன்ற கேள்வி எழுப்பி, அதற்கு தீனதயாள்ஜி பதிலளிக்கும்போது, நமது தேசியவாதம் என்பது இந்து தேசியவாதமே என்பதை அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும் என்றார். வெளியிலிருந்து நாட்டிற்குள் ஊடுருவி வந்தவர்கள் இந்து கலாச்சாரத்திற்கு தகுந்தாற்போல் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். இந்து தேசியவாதத்தை ஏற்றுக்கொள்பவரே இந்தியக் குடிமகனாகக் கருதப்படுவார். உடலின் உஷ்ணத்தை அளவிடும் வெப்பமானி போல் இந்து என்ற உணர்வு இருக்க வேண்டும். வெப்ப அளவு குறைந்தால் உடல் நலக்குறைவு ஏற்படுவதுபோல் உணர்வின் அளவு குறையக் கூடாது. ஏனென்றால் இந்து கலாச்சாரத்தின் மீதுதான் நமது தேசம் கட்டமைக்கப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள முஸ்லீம்களானாலும், கிறிஸ்தவர்களானாலும் அவர்கள் பாரம்பரியமான இந்து கலாச்சாரத்தை தழுவிக் கொள்ள வேண்டும். இதில் எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை. அவர்கள் இந்து பெருங்கலாச்சாரத்தில் கலந்து தங்களை தேசியவாதிகளாக அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டுமென்றார். அவரவர் தெய்வங்களை வழிபட அனுமதித்தால் அவர்களை இந்திய தேசியத்திலோ, கலாச்சாரத்திலோ சேர்த்துக்கொள்ள முடியாது. பாரம்பரியமிக்க இந்தியக் கலாச்சாரத்தைக் கடைப்பிடித்து ராமரையும், கிருஷ்ணரையும் வழிபடுபவர்கள் எவ்வாறு வெளிதேசத்திலிருந்து வந்தவர்களை தேசியவாதிகள் என்று அழைக்க முடியும்? எவரொருவர் இஸ்லாத்தைத் தழுவி இருக்கிறாறோ, அந்த வினாடியே அவர் நாட்டின் பாரம்பரியத்திலிருந்து துண்டிக்கப்பட்டு, அந்நியக் கலாச்சாரத்தோடு இணைந்து விடுகிறார். மேலும் அவர்கள் அமைப்பாய்த் திரண்டு, இந்தியக் கலாச்சாரத்தின் விழுமியங்களையும், மரபுகளையும், வழிபாட்டு தலங்களையும் அழிக்க நினைக்கிறார்கள் என்று முஸ்லீம் சமூகத்தின் மீது வெறுப்புகளையும், அவதூறுகளையும் அள்ளி வீசினார்.
1965ல் பாகிஸ்தானை இந்தியாவோடு இணைக்க வேண்டும் என்ற நிகழ்ச்சியில் தீனதயாள் உபாத்தியாயா வெறியுட்டும் வகையில் உரையாற்றினார். இந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் அனைவரும் அந்நியர்கள். அக்பரை எதிர்த்து போர் செய்த ராணா பிராதாப்சிங்;, அவுரங்கசீப் மீது கொரிலா யுத்தம் நடத்திய சத்ரபதி சிவாஜி, மற்றும் சத்ராசல், துர்க்கா தேவி ஆகியோர் தேச பக்தர்கள் என்றார். அவுரங்கசீப் இங்கு வாழ்ந்து, ஆண்டு, வளங்களையும், செல்வங்களையும் அனுபவித்து கட்டாய மதமாற்றம் செய்த அவர் அந்நிய ஆட்சியாளர்தானே? அக்பர் நல்லவராக இருக்கலாம். ஆனால் அவர் நம்மவர் இல்லை. அக்பர் சாம்ராஜ்யத்தில் இந்துக்கள் அனைவரும் அடிமைகளாகவே இருந்தோம். தற்போது பாஜக தலைவர்கள் தாஜ்மகாலுக்கு எதிராக கருத்துக்கள் கூறுவதை, உபாத்தியாயா அன்றே முகலாயச் சின்னங்கள் எல்லாம் அவமானங்கள் என்றார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியாவில் எல்லா மன்னர்களும் தங்களுக்குள் போர் செய்துகொண்டேதான் இருந்தார்கள். யுத்தம் இல்லாத குறுநிலமே இல்லை. அப்படியிருக்க உபாத்தியாயா வெறியைத் தூண்டிவிட்டு பேசினார். இந்து மன்னர்கள் தங்களுக்குள் போரிட்டு அழிந்துபோன சரித்திரத்தை சாதுர்யமாக மறைத்தார். அவர் வாதப்படி பார்த்தால் தங்களுக்குள் சண்டையிட்ட இந்து மன்னர்கள் எல்லாம் தேச விரோதிகளா? வரலாற்று உண்மைகளை மறைத்து, உணர்ச்சிகளைத் தூண்டி, வெறுப்பேற்றி, மக்கள் திரளில் வெறியேற்றுகின்ற செயலைச் செய்தார்.
பல வகையான தானியங்களையும், பருப்பு வகைகளையும் கலந்து உணவு தயாரிக்க முடியும். ஆனால் அதில் மண்ணும், கல்லும் சிறிய அளவில் கலந்திருந்தால் கூட ஒட்டு மொத்த உணவும் பாழாகிவிடும். நீங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் உங்கள் உடம்பின் வெப்பத்தை சீராக வைத்திருக்க வேண்டும்.அதில் சமரசம் செய்துகொண்டால் நோய்கள் உருவாகும். இதே கோட்பாடுகளைத்தான் வாழ்க்கையிலும், தேசத்திலும் கடைப்பிடிக்க வேண்டும். தானியங்களிலும், பருப்புகளிலும் கலந்துள்ள கல்லையும், மண்ணையும் களைய வேண்டும். தேசத்தின் தேகத்தில் வெப்பம் குறைந்துள்ளதால் அந்நிய நோய்கள் உருவாகின்றன. இந்துக்கள் தீய சக்திகளை அழித்தொழிக்கும் சிந்தனைகளிலிருந்து பின் வாங்கக் கூடாது. இஸ்லாமியர்களை தேசியவாதிகளாக்கி, பொருத்தமான இந்தியர்களாக்குவதுதான் இதற்கு தீர்வு என வாதிட்டார். அவர்கள் இந்துக் கலாச்சாரத்தைத் தழுவுவது என்றால், ராமரையும், கிருஷ்ணரையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
அரசியலமைப்புச் சட்டம் வந்ததிலிருந்து இன்று வரை மதச்சார்பற்றவர்களும், ஜனநாயகவாதிகளும் உயர்த்திப் பிடிக்கின்ற “வேற்றுமையில் ஒற்றுமை” “கூட்டாட்சித் தத்துவம்”போன்ற உன்னதமான கோஷங்களை தீனதயாள் உபாத்தியாயா பகிரங்கமாக எதிர்த்துப் பேசினார். தேச ஒற்றுமையும், ஒருமைப்பாடும் ஒரேவிதமான கலாச்சாரத்தின் மீதுதான் கட்டப்பட முடியும். நாட்டு மக்கள் வழிபாட்டு முறையிலும், உணவு, உடை பழக்கங்களில் வேறுபாடுகள் இருந்தாலும், அவர்கள் ஒரே கலாச்சாரத்தோடு இணைந்து செயல்பட முடியும். ஆனால் தாய் நாட்டை வணங்குவதில் எந்த வேறுபாடும் இருக்கக்கூடாது என்றார். அவர் சொல்லுகிற தாய்நாடு என்பது அரசியலமைப்புச் சட்டம் கூறுகிற இந்தியா அல்ல. அவர்கள் நிர்மாணிக்க விரும்புகிற “இந்து ராஷ்ட்ரம்” என்பதாகும். காங்கிரஸ் கட்சியும், கம்யுனிஸ்ட்டுகளும் இந்து-முஸ்லீம் ஒற்றுமை என்று தவறான வழியில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள் ஒதுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை அரசியல் ஆதாயத்திற்கும், வாக்கு வங்கியாகவும் பயன்படுத்துகிறார்கள். இந்தத் தவறை இப்போது மட்டுமல்ல, சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்தே செய்து வருகிறார்கள் என்றார்.
ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து புறப்பட்டு, கைபர், போலன் கணவாய்கள் வழியாக இந்தியாவில் ஊடுருவி தங்களை நிiநிறுத்திக் கொண்டார்கள் என்ற வரலாற்று உண்மையை இந்துத்துவவாதிகள் என்றுமே ஏற்றுக்கொள்வதில்லை. அவர்கள் உயர்த்திப் பிடிக்கின்ற வேதங்களின் அடிப்படையிலான கலாச்சாரத்தை உருவாக்கிய ஆரியர்கள் அந்நிய இனத்தைச் சேர்ந்தவர்கள். ஆகவே அவர்கள் கூறுகிற கலாச்சார தேசியம் என்பது அந்நிய கலாச்சாரமே.
முஸ்லீம்கள் தனிப்பட்ட முறையில் நல்லவர்களாக இருக்கலாம். சிவாஜி படையிலும், பேஷ்வாக்கள் போர்செய்த போதும் முஸ்லீம் வீரர்கள் வெற்றி தேடித்தந்தார்கள். ஆனால் அவர்களெல்லாம் கோடிக்கணக்கான முஸ்லீம்களின் பிரதிநிதிகள் அல்ல. தனிநபருக்கும், சமூகத்திற்கும் உள்ள வித்தியாசத்தை உபாத்தியாயா விளக்கினார். ஒருவர் தனிப்பட்ட வாழ்வில் சிறந்து விளங்கலாம். சமூகத்தில் அவர் தீயவராக இருக்கலாம். அதுபோல் சமுதாயத்தில் சிறந்த மனிதராக உள்ள ஒருவர் சுயவாழ்வில் மோசமானவராக இருக்கலாம். இங்கே நான் கூறக்கூடியது என்னவென்றால் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு இந்து தீயவராக இருக்கலாம். அதே வேளையில் சமூகமாக திரளும் போது நல்லதையே நினைக்கிறார்கள். ஆனால் மறுபுறத்தில் தனிப்பட்ட வாழ்வில் நல்லவர்களாக இருக்கும் முஸ்லீம்கள் ஒன்று சேரும்போது, அவர்கள் தனித்திறன் மறைந்து தீயசெயல்களையே சிந்திக்கிறார்கள். இவைதான் நாள்தோறும் கிடைக்கிற அனுபவங்கள் என்றார்.
சாதி அடுக்குகள் பற்றி இங்கே பிரச்சனைகள் நடக்கின்றன. இவை மேலைநாட்டு சிந்தனைகளிலிருந்து வரக்கூடிய கருத்துக்கள். உள்ளுக்குள் முரண்பாடுகள் இருந்தாலும் இந்தியாவில் ஒரே கலாச்சாரமாகத்தான் கட்டமைக்கப்பட்டுள்ளது. இங்கே சாதிப் படிநிலைகள் தொடர்கின்றன. ஒரு சாதிக்கும் மற்றொரு சாதிக்கும் ஏற்படும் மோதலை நாம் ஏற்பதில்லை. நாம் ஏற்றுக்கொண்ட நான்கு வர்ணக் கொள்கைகளின்படி, படைப்புக் கடவுளாகிய பிரம்மாவின் தலையிலிருந்து பிறந்தவர்கள் பிராமணர்கள். தோள்களிலிருந்து பிறந்தவர்கள் சத்திரியர்கள். வயிற்றிலிருந்து பிறந்தவர்கள் வைஸ்யர்கள். கால்களிலிருந்து பிறந்தவர்கள் சுத்திரர்கள்.(மனிதர்களுக்கு யாரும் பிறக்கவில்லையா?) எப்படி ஒரு உடலிலுள்ள தலை, தோள், வயிறு, கால்கள், எந்த பிரச்சனையும் இல்லாமல் தனித்து இயங்குகிறதோ, அதேபோல்தான் நால்வருணத்திலுள்ள சாதிகளும் முரண்பாடில்லாமல் அதனதன் போக்கிலேயே தனித்து செயல்பட வேண்டும். ஒரே உடம்பிலுள்ள பல்வேறு உறுப்புகளின் இயக்கத்தில் மோதல்களோ, முரண்பாடுகளோ இருப்பதில்லை. இந்த அடிப்படை கட்டமைப்புகளை மாற்ற விரும்புகிறவர்கள்தான் மோதலை உருவாக்குகிறார்கள் என்றார். வர்ணாசிரமக் கொள்கைகள் நாகரீக சமுதாயத்திற்கு எதிரானது என்பதை அவர் உணரவில்லை.
இந்தியாவை மதச்சார்பற்ற நாடாக அறிவித்திருப்பது பாரதத்தின் ஆன்மாவை சிதைப்பதாகும். மதச்சார்பற்ற நாட்டில் பாரம்பரியமும், கலாச்சாரமும் அழிக்கப்பட்டு, துயரங்களே தொடர்கின்றன என்று அலிகாரில் நடந்த கூட்டத்தில் பேசினார். மதச்சார்பின்மை கோட்பாடு அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ளதால் மட்டும் உபாத்யாயா எதிர்க்கவில்லை. அந்த சட்டத்தையே அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அரசியலமைப்புச் சட்டத்தில் முதல் வரியில் குறிப்பிட்டுள்ள கூட்டாட்சி தத்துவத்தை வலுப்படுத்துகிற “இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம்” என்பதை உபாத்தியாயா முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. இது நாட்டு பிரிவினையை நோக்கி இட்டுச் செல்லும். இந்த சட்டம் பாரதத்தின் ஆன்மாவை, கலாச்சாரத்தை பிரதிபலிக்கவில்லை என்றார். நமது உள்ளார்ந்த லட்சியங்களும், தேசிய உணர்வுகளும் அரசியலமைப்புச் சட்டத்தில் பிரதிபலிக்க வேண்டும். கோட்பாடுகளில் நாம் ஒட்டு வேலை செய்து அந்நியர்களைத் திருப்தி படுத்திக்கொண்டிருக்கிறோம். அரசியலமைப்புச் சட்டத்தை ஆங்கிலத்தில் தயார் செய்ததை தீனதயாள் உபாத்தியாயா ஏளனம் செய்தார். அரசியல் நிர்ணய சபையில் தேசவிரோத சக்திகள் புகுந்து சட்டத்தை ஆங்கிலத்தில் இயற்றி இருக்கிறார்கள். இந்தியில் எழுதியிருந்தால் அதன் சொற்களஞ்சியத்திலிருந்து உச்சரிக்கும் வார்த்தைகள் பாரதத்தின் வாழ்வு முறையை பிரதிபலித்திருக்கும். ஆனால் ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்ட சட்டம் இந்திய உணர்வுகளைவிட ஆங்கில மோகத்தையே பிரதிபலிக்கிறது. நமது அரசியலமைப்புச் சட்டம் இந்தியாவில் பிறந்த ஆங்கிலக் குழந்தை. அது பரிசுத்தமான இந்தியா என்பதற்குப் பதில் ஆங்கிலோ இந்தியக் குணங்களோடு இருக்கிறது என்றார்.
தவறான வழிகாட்டுதலால் ஆவேசப்பட்டு வெள்ளையர்களை விரட்டிவிட்டு ஆட்சியில் அமர்ந்துகொண்டார்கள். சுதந்திரத்தின் உண்மையான பலன் நமக்கு கிடைக்கவில்லை. ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து போராடுவது என்பது உண்மையான நாட்டுப் பற்று கிடையாது. தேசபக்திக்கு கலாச்சார தேசியத்தின் நேர்மறை உணர்வுகள் தேவைப்படுகிறது. சுதந்திரப் போராட்டத்தின் போது அதன் தலைவர்கள் ஆங்கிலேயர்கள் மீது பலமான எதிர்ப்புக் கருத்துக்களைப் பரப்பினார்கள். மக்கள் மத்தியில் எதிர்மறையான சிந்தனைகளை விதைத்தார்கள். இதனால் பிரிட்டிஷாரை எதிர்ப்பவர்களெல்லாம் தேசபக்கதர்களென்று அழைக்கப்பட்டார்கள். இதுவா தேசபக்தி? தற்போது மக்கள் படுகின்ற துயரங்களுக்கெல்லாம் காரணம் அவர்கள்தான். போலியான தேசபக்தியைப் பரப்பி, உண்மையான தாய்நாட்டுப் பற்றை புறக்கணித்தார்கள். உண்மையான தேசியவாதம் என்பது இந்து கலாச்சார தேசியவாதம்தான். தன்மானமுள்ள இந்துக்கள் ஒருநாள் அந்நிய நகலான அரசியலமைப்புச் சட்டத்தை தூக்கி எறிவார்கள. பாரதத்தின் பண்பாடுகளையும், கலாச்சாரத்தையும் உள்ளடக்கிய புதிய சட்டத்தை உருவாக்குவார்கள். உபாத்தியாயா விடுதலைப் போரில் பங்கேற்காதது மட்டுமல்ல, ஆர்எஸ்எஸ் சித்தாந்தப்படி ஆங்கிலேயருக்கு சேவகம் செய்து சுதந்திரப் போராட்டத்திற்கு எதிராக களமிறங்கினார். கோடிக்கணக்கான மக்கள் தியாகம் செய்து பிரிட்டிஷாரின் கொடுங்கோல் ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்றதை கேவலமாகப் பேசினார்.
இந்தியாவில் முஸ்லீம்களை அரசியல் ரதியாகத் தோற்கடிக்கும் வரை பாகிஸ்தான் பிரச்சனை தீராது. அவ்வாறு தோற்கடிக்கப்பட்ட பின்புதான் அவர்களை இந்துக் கலாச்சாரத்தோடு இணைக்க முடியும். தோல்விகள் அவர்களது சிந்தனையை மாற்றும். பின்னர் இந்துக் கலாச்சாரம்தான் தங்களுடையது என்றும், பாரத்மாதா தான் தங்களது தாய்நாடு என்பதையும் உணர்வார்கள்.
இந்து-முஸ்லீம் ஒற்றுமையை தொடர்ந்து வலியுறுத்தி செயல்பட்டுக்கொண்டிருக்கிற காங்கிரஸ், கம்யுனிஸ்டுகளின் தேசபக்தி பொய்யானது. நாட்டை பிரிவினை செய்து சுதந்திரம் அடைவதற்கு முன்பே இத்தகைய குழுக்களுடன் சமரசம் செய்துகொள்ளும் அரசியல் இன்றுவரை தொடர்ந்து நீடிக்கிறது. ஆனால் இந்த முயற்சி வெற்றிபெற முடியாது. ஏனென்றால் தேசபக்தியும், தேசவிரோதமும் ஒன்றாக பயணிக்க முடியாது என்று ஏளனம் செய்தார். முஸ்லீம்களை தேசியவாதிகளாக ஆக்குவதற்கு பாரதிய ஜனசங்க கட்சியில் செயல் திட்டம் வகுத்துள்ளோம். அத்திட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்தினால் இந்தியாவில் இஸ்லாம் துடைத்தெறியப்படும், கலாசசார ஒருமை மூலம் ஒழிக்கபபடும்; என்றார். அந்தோ! இறுதியில் உபாத்தியாயா உத்தர பிரதேச மாநிலம் மொகல்சாராய் ரயில் நிலையத்தில் 1968ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11ம் நாள் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக செயல்பட்டு, பிரிட்டிஷாருக்கு சேவகம் செய்தவர் தீனதயாள் உபாத்தியாயா. சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்கமுடியாது என்றும், தேசிய மூவர்ணக் கொடியை ஏற்றமுடியாது என்றும் பகிரங்கமாக அறிவித்த ஒருவருக்கு பிஜேபி அரசு உபாத்தியாயா பெயரில் ஏராளமான தேசிய நலத்திட்டங்களும், பல பல்கலைக்கழகங்களும், கல்வி நிலையங்களையும் ஆரம்பித்து உள்ளது. தங்களது வெறுப்பரசியல் மூலம் சிவில் சமூகத்தைக் கைப்பற்ற மிக விரைவாக செயல்பட்டு வருகிறார்கள். தீனதயாள் உபாத்தியாயாவின் சித்தாந்தங்கள் தற்போது அரசு அதிகாரத்தை கைப்பற்றி உள்ளது. அவருடைய கொள்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.
தீனதயாள் உபாத்தியாயா பெயரில் பிஜேபி அரசு ஆரம்பித்துள்ள தேசிய நலத்திட்டங்கள்- கல்வி நிறுவனங்கள்.
* தீனதயாள் உபாத்தியாயா கிராம் ஜோதி யோஜனா.
* தீனதயாள் உபாத்தியாயா உன்னத் கிருஷி சிக்ஷா யோஜனா.
* தீனதயாள் உபாத்தியாயா கிராமின் கௌசல்யா யோஜனா.
* தீனதயாள் அந்தோதயா யோஜனா.
* தீனதயாள் உபாத்தியாயா சௌபாக்யா யோஜனா.
* தீனதயாள் ஸபார்ஷ் யோஜனா.
* தீனதயாள் உபாத்தியாயா ஸ்வாலம்;பன் யோஜனா.
கல்வி நிறுவனங்கள்
* பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா சேகாவதி பல்கலைக் கழகம்- சிகார்.
* பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா பல்கலைக் கழகம் – கோரக்புர்.
* பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா மருத்துவக் கல்லூரி – ராஜ்கோட்.
* பண்டிட் தீனதயாள் பெட்ரோலிய பல்கலைக் கழகம் – ராய்சன்.
* தீனதயாள் உபாத்தியாயா தொல்லியல் கல்லூரி – நொய்டா.
நினைவு மையங்கள்
* தீனதயாள் ரயில்வே ஸ்டேசன் – மொகல்சாராய்.
* தீனதயாள் மருத்துவமனை – அலிகார்.
* பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா நினைவு மையம், 63அடி உயர சிலை திறப்பு – வாரணாசி.
மாதா
சிபிஐ(எம்)தேனி மாவட்டக் குழு உறுப்பினர்
முகவரி:-
மாதா
மே-பா மா.தங்கராசு
75- கிழக்குதெரு
சக்கம்பட்டி, ஆண்டிபட்டி – அஞ்சல்
தேனி – மாவட்டம் 625512
செல் – 9442452505
நூல் அறிமுகம்: ஏ.ஜி.நூரானியின் ஆர்.எஸ்.எஸ். இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல் தமிழில்: ஆர். விஜயசங்கர் – பெரணமல்லூர் சேகரன்
நூல் : ஆர்.எஸ்.எஸ். இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல்
ஆசிரியர் : ஏ.ஜி.நூரானி
தமிழில்: ஆர். விஜயசங்கர்
விலை : ரூ.₹ 800/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]
சிறந்த பத்திரிக்கையாளரும் எழுத்தாளரும் வழக்கறிஞருமான ஏ.ஜி. நூரானியின் ‘ஆர்.எஸ்.எஸ். இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல்’ எனும் நூலின் தமிழாக்கத்தை பத்திரிகையாளர் ஆர். விஜயசங்கர் மூலம் பாரதி புத்தகாலயம் அழகுற அச்சிட்டு பதிப்பித்துள்ளது.
இந்நூலின் 25 தலைப்புகளில் 626 பக்கங்களும் பின்னிணைப்புகள் 198 பக்கங்களும் என 824 பக்கங்கள் படிப்பதற்கு முதலில் மலைப்பாக இருந்தாலும் படிக்கப் படிக்க அறியப்படாத புதிய புதிய செய்திகளாக தொடர்ந்து கொண்டே போகிறது. சுரங்கப்பாதை போல போய்க் கொண்டேயிருந்தாலும் அடைய வேண்டிய இலக்கை அடைந்தது போன்ற உணர்வை இறுதியில் பெற முடிகிறது.
சில மிரட்டும் மொழிபெயர்ப்பு நூல் போலன்றி மூல தமிழ் நூலை வாசிப்பது போன்ற உணர்வே மேலிடுகிறது. அவ்வகையில் வெகு நேர்த்தியாக மொழி பெயர்த்துள்ள ஆர். விஜயசங்கர் அவர்களையும் அவருக்கு உறுதுணையாக இருந்த கமலாலயன் அவர்களையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
இந்நூலின் முகவுரையின் இறுதியில் நூலாசிரியர் “எதையும் சீர்தூக்கிப் பார்த்து சிந்திப்பதற்காகப் படியுங்கள்” என்று கூறியிருப்பது பொருள் பொதிந்தது. மேலும் மொழிபெயர்ப்பாளர் உரையில் நோக்கம் குறித்துக் குறிப்பிட்டுள்ள முக்கியமான அம்சம் “அறிவுப் பூர்வமற்ற ஒன்று நாட்டிற்கு எவ்வளவு அபாயகரமானது, அரசியல் அமைப்பு அல்ல என்று கூறிக்கொண்டே ஒரு அரசியல் கட்சியைத் தன் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து மத்தியில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றித் தன்னுடைய இந்து ராஷ்டிரக் கனவை நோக்கி ஆர்.எஸ்.எஸ். எவ்வளவு விரைவாக நகர்கிறது என்கிற வரலாற்றை தமிழ் வாசகர்கள் அறியச் செய்வதுதான் இந்த மொழிபெயர்ப்பின் முக்கிய நோக்கம்” என்று குறிப்பிடப்பட்டிருப்பது வெற்றி அடைந்துள்ளது எனலாம். இரண்டு ஆண்டுகளாக மொழிபெயர்ப்பாளர் உழைத்த உழைப்பு வீண்போகவில்லை. அது வெற்றி அடைந்திருக்கிறது என்பதை நூல் முழுவதையும் படித்தபின் உணர முடிகிறது.
இந்திய சுதந்திரப் போரில் பங்கு பெற்று ரத்தம் சிந்தி, சிறைப்பட்டு, இளமையை இழந்து, சித்திரவதைக்குட்பட்டு குடும்பத்தை இழந்த தியாகிகளுள் இஸ்லாமிய மக்கள் குறிப்பிடத்தக்க முத்திரை பதித்துள்ளனர் என்பதை வரலாற்று ஆவணங்கள் பறை சாற்றுகின்றன. இந்தியச் சுதந்திரப் போரின் முக்கியமான கட்டமான சிப்பாய் கலகம் என சொல்லிக் கொடுக்கப்பட்ட சிப்பாய் புரட்சியில் இஸ்லாமியர்களின் பங்கு மகத்தானது என்பதை ‘அறிமுகம்’ எனும் முதல் தலைப்பிலேயே அறியலாம். இப்பகுதியில் இந்துக்களைக் காட்டிலும் இஸ்லாமியர்களைக் கண்டே பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அதிகம் அஞ்சினர் என்பதையும் ஆகவேதான் அவர்கள் மீது அதிகமான அடக்குமுறை ஏவப்பட்டது என்பதையும் டெல்லி மண்டலத்தில் இருந்த முஸ்லீம்களின் அசையா சொத்தில் நான்கில் ஒரு பங்கு அதிக வரிகள் வாயிலாகப் பறிக்கப்பட்டதும் அதே நேரத்தில் இந்துக்களின் மீது 10 சதவீத வரியே விதிக்கப்பட்டது என்பதையும் தெரியப்படுத்துகிறார் நூலாசிரியர். மேலும் பிரிட்டிஷாரின் பிரித்தாள் சூழ்ச்சியில் சிக்குண்ட பல தலைவர்களை நூலில் பார்க்க முடிகிறது. பஞ்சாப் சிங்கம் என போற்றப்பட்ட லாலா லஜபதிராய் இந்து மகா சபையின் கூட்டத்தில் கலந்து கொண்டு தலைமையுரை ஆற்றியதும் அதுசமயம் “இந்திய தேசிய காங்கிரஸ் பெரும்பாலும் ஒரு இந்து அமைப்பு என்பதை மறைப்பதில் பயனேதும் இல்லை” எனப் போட்டு உடைப்பதும் கவனிக்கத்தக்கது. ஆனால் இந்துக்களின் நலன்களை முதன்மைப்படுத்தும் அரசியல் பார்வை, தேசத்தின் மீது மத-கலாச்சார ஒற்றைத் தன்மையைத் திணிக்க வேண்டும் என்கிற ‘சர்வாதிகார’ ஆசை கொண்டிருக்க வேண்டும் என்பதில்லை என்பதையே லஜபதிராயின் கண்ணோட்டம் காட்டுவதாகக் குறிப்பிடுகிறார் நூலாசிரியர்.
“ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு பவுத்தம் இந்தியாவின் பெரும் மதமாக இருந்தது என்னும் வரலாற்று ஆசிரியர் ரொமிலா தாப்பரின் கூற்று சிந்திக்கத் தக்கது. பவுத்தம் கடுமையான தாக்குதலைச் சந்தித்திருக்கும் என ஊகிக்க முடிகிறது.
பவுத்தத்தை அழித்து, இஸ்லாத்தை அழித்து இந்துத்துவாவைக் கட்டி எழுப்ப சாவர்க்கர் துவங்கி வரிசையாக பணியாற்றி அவர்கள் அளவில் வெற்றி முகமாக பயணித்துக் கொண்டிருப்பது வெள்ளிடை மலை. இந்துத்துவம் மதக்கோட்பாடு அல்ல. அது ஓர் அரசியல் கோட்பாடு அந்தக் கோட்பாட்டினைப் புதிதாகப் படைத்தார் சாவர்க்கர்.
“நான் ராமர் என்ற காரணியைத் திறம்படப் பயன்படுத்தாமலிருந்தால், டெல்லி பாராளுமன்றத் தொகுதியில் தோற்றிருப்பேன்” என்று அத்வானி கூறியதாகவும், “இந்தியாவில் இருக்கும் முஸ்லிம்கள் அனைவரும் முகமதியா இந்துக்கள் தான், இந்தியாவிலிருக்கும் கிறிஸ்தவர்கள் அனைவரும் கிறிஸ்டி இந்துக்கள் என்று நான் கூறுகிறேன். கிறிஸ்துவத்தையும், இஸ்லாத்தையும் அவர்களுடைய மதமாக ஏற்றுக்கொண்ட இந்தியர்கள் தாம் அவர்கள். எனவே முஸ்லிம்களையோ இந்துக்களையோ அவர்களுக்கே உரிய தனி அடையாளங்களுடன் ஏற்றுக் கொள்ள முடியாது. அவர்கள் இந்துமத மயமாக்கப்பட வேண்டும்” என 1991-ஜனவரி 12ல் பா.ஜ.க. தலைவர் முரளி மனோகர் ஜோஷி பேசியிருப்பதிலிருந்தே ஆர்.எஸ்.எஸ்.சின் கொள்கையில் சமரசம் என்பதே கிடையாது. சிறுபான்மையினர் சரணாகதி அடைய வேண்டும் என்பதில் குறியாக இருந்துள்ளது என்பதை அறிய முடிகிறது.
இப்போதிருக்கும் அரசாங்கம் இந்தியாவை ஓர் இந்து நாடாக பிரகடனப்படுத்தும் வகையில் ஓர் அரசியல் சட்ட திருத்தத்தை செய்யவேண்டியதில்லை. அது ஓர் இந்து நாட்டை ஆள்வதைப் போன்றே ஆட்சி செய்தால் போதும். இதைத்தான் நரேந்திர மோடி குஜராத்திலும், 2014 முதல் இந்தியாவிலும் செய்கிறார். ஜனநாயகமற்ற இந்திய மண்ணின் மீது போடப்பட்டிருக்கும் ஜோடனைதான் ஜனநாயகம். மோடியின் திட்டமான நிறுவனங்களில் இந்துத்துவாவாதிகளை நிரப்புவது, யோகிகளை முதலமைச்சர்களாக்குவது, காபினட் முறையை முடக்குவது, ஆட்சிப் பணியைத் தன் ஆளுகைக்குள் கொண்டு வருவது, நீதித்துறையைத்தன் செல்வாக்கிற்குள் கொண்டு வருவது என தனது நிகழ்ச்சி நிரலை அமுல்படுத்திக் கொண்டிருக்கிறது பா.ஜ.க. அரசு.
மனித உரிமைகளுக்கான கிறிஸ்தவர்களின் அமைப்பு 1998-டிசம்பர் 4 அன்று வெளியிட்ட கடிதத்தில் “நாடு சுதந்திரம் பெற்ற 50 ஆண்டுகளை விட அதிகமான தாக்குதல்கள் ஜனவரி 1998 முதல் கிறிஸ்தவ சமூகத்தின் மீது நடந்து வருகின்றன. கன்னியாஸ்திரீகள் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். பாதிரியார்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். பைபிள் எரிக்கப்பட்டுள்ளது. மதாலயங்கள் இடிக்கப்பட்டுள்ளன.
கல்வி நிலையங்கள் தாககப்பட்டிருக்கின்றன. மத நம்பிக்கையாளர்கள் துன்புறுத்தப்பட்டிருக்கின்றனர்.”
என குறிப்பிடப்பட்டுள்ளது உற்று நோக்கத்தக்கது.
இது கோல்வால்கரின் சிந்தனைக் கொத்தில் குறிப்பிட்டுள்ள ‘முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், கம்யூனிஸ்டுகள்தாம் உள்நாட்டு அபாயங்கள் என்பதை ஒத்துள்ளன.
ஆர் எஸ் எஸ்ஏன் உருவாக்கப்பட்டது எனும் தலைப்பில் நூராணி ஆதாரங்களை அடுக்குகிறார்.
“ஒரு புறத்தில் அன்னிய நிர்வாகத்தின் அரசியல் ஆதிக்கமும் மறுபுறத்தில் முஸ்லிம்கள் செய்யும் சித்திரவதையும் கத்தரிக்கோலின் இரு கத்திகளுக்கு இடையே நாம் சிக்கிக் கொண்டிருக்கிறோம். இந்துக்களை முஸ்லிம்களாக்குவதற்காக அவர்கள் நம்மீது தொடுத்திருக்கும் தாக்குதல்களையும் நம் மகள்களையும், மருமகள்களையும் அவர்கள் பாலியல் வன்புணர்வு செய்வதையும் குறித்து நான் பேசத் துவங்கினால் என் உணர்ச்சிகளை என்னால் கட்டுப்படுத்த இயலாது. எனவே நான் அவை குறித்து அதிகம் பேசவில்லை. கிறிஸ்தவர்கள் நம்மை காயப்படுத்துகிறார்கள். இந்தத் தாக்குதல்களில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள வேண்டுமானால் நாம் நம்மை ஒரு அமைப்பாக்க வேண்டும். இந்த ஒரு நோக்கத்திற்காகத்தான் 1925 ஆம் ஆண்டில் ஆர். எஸ். எஸ். உருவாக்கப்பட்டது.”
மறு ஆண்டே மோதிலால் நேரு தன் மகன் நேருவுக்கு இவ்வாறு கடிதம் எழுதியுள்ளார்.
“மதரீதியான வெறுப்பும் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பதும் சகஜமாக நடக்கிறது. நான் முழுவதுமாக வெறுத்துப் போய்விட்டேன். பொது வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறலாம் என நினைக்கிறேன். அதற்குப் பின் என் நேரத்தை எப்படிச் செலவிடுவது என்பதுதான் எனக்குக் கவலை. நான் காங்கிரசின் கவஹாத்தி மாநாட்டிற்காகக் காத்திருக்கிறேன். அதுவரை பேசப் போவதில்லை. மாளவியா – லாலா கும்பல் பிர்லாவின் பண உதவியுடன் காங்கிரசைக் கைப்பற்ற நினைக்கிறார்கள்.”
தாராள பண உதவி செய்பவர் பிர்லாவாக மட்டும் இருக்க முடியாது. ஆர். எஸ். எஸ் பங்கும் இல்லாமல் இருக்க முடியாது.”
இந்திய தேசியத்தின் மீதான உறுதிப்பாடு எனும் தலைப்பில் 1886ல் நடந்த இரண்டாவது காங்கிரஸ் மாநாட்டின் அறிக்கையில் “காங்கிரஸ் என்பது உலகியல் நலன்களை சார்ந்த சமூகமேயன்றி ஆன்மீக நம்பிக்கைகளுக்கானது அல்ல என்பதால் அரசியல் பிரச்சனைகளைப் பேசுவதில் அதிலிருக்கும் ஒருவர் மற்றவரை பிரதிநிதித்துவம் செய்கிறார் என்பதே அவர்களின் தகுதி. இந்த நாட்டில் அவர்களின் பொது நலன்கள் ஒரே மாதிரியானவை என நாங்கள் கருதுகிறோம்; இந்துக்களும் கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும், பார்சிகளும் தத்தமது மத சமூகங்களின்
பிரதிநிதிகளாக இருந்து பொதுவாழ்வில் எழும் மதம் சாராத பிரச்சனைகளை விவாதிக்கலாம்” என மதச்சார்பின்மை நிலை தெளிவாக உணர்த்தப்பட்டுள்ளது.
இந்தியச் சுதந்திரத்திற்கு முன்பாகவே ஆர்.எஸ்.எஸ். அனைத்து அமைப்புகளிலும் ஊடுருவிக் கால் பரப்பியதை இந்நூல் படம்பிடித்துக் காட்டுகிறது.
“ஆர்.எஸ்.எஸ்.ஸின் யுக்தி பலனளிக்காது. அதற்கு இந்தியா முழுவதிலும் 1500 கிளைகளும் 2 லட்சம் உறுப்பினர்களும் இருப்பதாக அக்டோபர் 25, 1942 அன்று கோல்வால்கர் கூறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அதன் உறுப்பினர்கள் குடிமைச் சமூகம் மற்றும் ராணுவத்தின் அனைத்து முக்கியச் சேவைகளிலும் ஊடுருவி விட்டனர். நம்பத் தகுந்த அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும், குமாஸ்தாக்களையும் உறுப்பினர்களாக இணைத்துக் கொண்ட ஆர்.எஸ்.எஸ் மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரிலிருந்த துப்பாக்கி தொழிற்சாலையிலும், கமாரியாவிலிருந்த ஆயுத உற்பத்தித் தொழிற்சாலையிலும் ஷாகாக்களை அமைத்தது. எனினும் பிரிட்டிஷ் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. காரணம் ராஜனை மிஞ்சிய ராஜ விசுவாசியாய் ஆங்கில அரசுக்கு ஆர்.எஸ்.எஸ். வெண்சாமரம் வீசி வந்தது.
இன்றைய பாசிச அரசின் வித்து அக்காலத்திலேயே ஐரோப்பிய பாசிஸ்டுகளின் உதவியுடன் ஆர்.எஸ்.எஸ். வயல்களில் விதைக்கப்பட்டது. சாவர்க்கரின் ஹிட்லர் மீதான புகழ்ச்சி ஹிட்லரை ஒரு ஹீரோவாக வழிபடுவதற்கு இட்டுச் சென்றது. அவர்களின் கருத்துகளுக்கு வங்காளமும் பம்பாய் மாகாணமும் நல்ல விளைநிலமாக இருந்தன. 1931ல் மூஞ்சே இத்தாலிக்குச் சென்றதும், முசோலினியைச் சந்தித்ததும் வரலாற்றில் திருப்புமுனைகளாயின. போர்க்கொள்கையும், இனவாதமும் இருதரப்பையும் இணைத்த சபையானது.” எனும் குறிப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. எனவேதான் “இத்தாலிக்கு ஃபாசிஸ்டுகள் எப்படியோ, ஜெர்மனிக்கு நாஸ்திகர்கள் எப்படியோ, அப்படி இந்தியாவிற்கு ஆர்.எஸ்.எஸ். என்றாக வேண்டும் என்றுதான் ஆர்.எஸ். எஸ். நம்புகிறது என்று 1933லேயே உளவுத் துறையின் அறிக்கை எச்சரித்துள்ளது உற்று நோக்கத்தக்கது.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு சாவர்க்கர் மன்னிப்புக் கடிதங்கள் எழுதி எழுதி அம்மணமானது அனைவரும் அறிந்ததே. 1913, நவம்பர் 14ல் சாவர்க்கர் சமர்ப்பித்த கடிதத்தில் “நான் எந்தத் திறன் அடிப்படையில் வேண்டுமானாலும் அரசுக்குச் சேவகம் செய்யத் தயாராயிருக்கிறேன். அரசு எனும் பெற்றோரின் வீட்டுக்குத் திரும்புவதைத் தவிர ஊதாரி மகனுக்கு என்ன வழி?”
இப்படிக் கேவலப்பட்ட சாவர்க்கர் காந்தி கொலை வழக்கில் வழக்கைத் தவிர்ப்பதற்காக பிப்ரவரி 22-1948 அன்று மும்பையில் காவல் துறை ஆணையருக்கு “அரசாங்கம் சொல்லும் எந்தக் காலம் வரையிலும் நான் மதவாதம் அல்லது அரசியல் சார்ந்த எந்தப் பொது நிகழ்விலும் கலந்து கொள்வதைத் தவிர்ப்பேன்” என்றார். சாவர்க்கர் எந்த அளவிற்கு வேண்டுமானாலும் இறங்கிச் செல்லத் தயாராக இருந்தார் என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது. உண்மையான எந்த தேச பக்தரும் இவரை மன்னிக்க மாட்டார். ஆனால் காலக் கொடுமையால் சாவர்க்கர் வழிபாட்டிற்குரியராகவும் ஆக்கப்பட்டிருக்கிறார் எந்த மனிதரின் கொலைச் சதியில் சாவர்க்கர் ஈடுபட்டாரோ அவருடைய படத்திற்கு நேராக பாராளுமன்ற மைய மண்டபத்தில் சாவர்க்கரின் படமும் மாட்டப்பட்டிருக்கிறது என்னும் ஆதங்கம் நூலாசியருடையது மட்டுமல்ல. நம்முடையதும்தான்.
1996ல் கோல்வால்கர் எழுதிய ‘சிந்தனைக் கொத்து’ என்கிற புத்தகம் இன்றளவும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் பைபிளாகப் போற்றப்படுகிறது. கோல்வால்கரின் பட்டியலில் ஏராளமான ஹீரோக்களின் பெயர்கள் இருந்தன. ஆனால் அதில் ஒரு முஸ்லிம் பெயர் கூட இல்லை என்னும் நூலாசிரியர் பண்டைக்கால இந்தியாவில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை இருந்தது என்று மும்பையின் ரிலையன்ஸ் ஹர்கிசோன்தாஸ் மருத்துவமனையில் மோடி ஆற்றிய
உரைக்கு இவரே ஊக்க சக்தியாக இருந்துள்ளார் என்கிறார்.
கோல்வால்கரின் சிந்தனைக் கொத்து என்ற நூலின் 10 மற்றும் 11ஆம் அத்தியாயங்களை விஞ்சும் வகையில் ‘உள்நாட்டு அபாயங்கள்’ என்று தலைப்பிடப்பட்ட 12ஆம் அத்தியாயத்தில் முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் மற்றும் கம்யூனிஸ்டுகள் என்று உள்நாட்டு அபாயங்களாகக் குறிப்பிடுவதையும் அதனடிப்படையில் இப்போதும் அவ்வாறே நாடாளும் ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள் இம்மூன்று பிரிவினரையும் பரம எதிரிகளாகக் கருதுவதையும் பார்க்க முடிகிறது.
“ஆர்.எஸ்.எஸ்.ஸினை ஓர் அபாயகரமான அமைப்பாகவும் ஃபாசிஸம் என்கிற சொல்லின் கறாரான பொருளுக்கு உகந்ததாகவுமே” நேரு கருதினார் எனும் நிலையில் இத்தகைய அபாயத்தை மக்கள் மத்தியில் நேரு ஏன் அம்பலப்படுத்தவில்லை எனும் கேள்வி இயல்பாகவே எழுகிறது.
நேருவின் அமைச்சரவையில் ஆர்.எஸ்.எஸ்.காரரான டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி அமைச்சராக இருந்தது ஏற்க இயலாத முரண். “உங்கள் வீட்டின் மேல் பக்வா ஜண்டாதான் பறக்கிறது . மூவண்ணக் கொடி இல்லை என்பதே எனக்குத் தெரியாது. தேசியக் கொடியல்லாத வேறு ஒரு கொடியை ஓர் அமைச்சர் பறக்க விடுவது எனக்கு விசித்திரமாகத் தெரிகிறது” எனப் பேசிவிட்டு நேருவால் எப்படி எளிதாகக் கடந்து செல்ல முடிந்தது என்பதும் உளவுத் துறையின் பணி குறித்த கேள்வியும் விடையின்றித் தொக்கி நிற்கின்றன. முளையிலேயே கிள்ளி எறிந்திருக்க வேண்டிய களையை ஆல் விருட்சமாக விட்டதில் நாட்டை ஆண்டவர்களுக்குப் பங்கு இருந்திருக்கிறது என்பதில் ஐயமில்லை.
‘ஆர்.எஸ்.எஸ்.ஸும் காந்தி படுகொலையும்’ எனும் தலைப்பிலான கட்டுரையில் ஒரு கொலைகாரன் அரசியல் வசைபாடுவதை ஒரு நீதிபதி ‘கண்ணீர் மல்கக்’ கேட்டது யாரும் கேட்டிராத செயல் எனக் குறிப்பிடும் நூலாசிரியர் கொலைக் குற்றவாளி நாதுராம் கோட்சேக்கு எதிராக பெரும் ஆதாரங்கள் இருந்தன எனப் பட்டியலிடுவதும் குறிப்பிடத்தக்கவை.
காந்தியின் படுகொலையை ஒட்டி ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கு 04.02.1948ல் தடை விதித்த காங்கிரஸ் அரசு குறுகிய காலத்திற்குள்ளாகவே ஜூலை11,1949 அன்று தடையை நீக்கியது.
ஆர்.எஸ்.எஸ். ஜனசங்கம் என்னும் அரசியல் அமைப்பைத் துவக்கியது. “ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கு முறை தவறிப் பிறந்த குழந்தைதான் ஜனசங்கம்” என்று நேரு கூறியது வரலாற்றுப் பதிவு.
1957-ஜனவரி 7 தேதியிட்ட ‘ஆர்கனைசர்’ இதழில் ‘இந்தியக் கலாச்சாரம்’ குறித்த தீர்மானத்தில்..”தேசியத்தை வளர்ப்பதற்காக நாட்டில் வாழும் அனைவரும் ஒரே கலாச்சாரத்தை உள்வாங்கிக் கொள்ள வேண்டுமென்று பாரதீய ஜனசங்கம் உறுதியேற்கிறது. இந்தக் கடமையை நிறைவேற்ற சமுதாயமும் அரசாங்கமும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்” குறித்து அன்று பட்டியலிடப்பட்டவற்றை இன்று மோடி அமுலாக்கி வருகிறார் எனின் மிகையன்று. பா.ஜ.க. சமீப காலங்களில் வெளியிட்டு வரும் தேர்தல் அறிக்கைகள் போன்ற ஆவணங்களில் வெளிப்படுத்திய கொள்கைகள் அந்தப் பழைய ஆவணத்தில் கலாச்சார தேசியம் என்ற பெயரில் கூறிய கருத்துக்களின் மறுபதிப்புக்கள்தான் என தெளிவுபடுத்தியுள்ளார் நூலாசிரியர். ஒரு நாடு, ஒரு மக்கள், ஒரு கலாச்சாரம் என்கிற கருத்தின் அடிப்படையில் அமைந்த தேசிய உணர்வை முடுக்கி வலுப்படுத்துவது அதிகாரம் குவிக்கப்பட்ட ஒற்றை ஆட்சியினால்தான் முடியும். கூட்டாட்சித் தத்துவம் தேச ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் எனும் ஜனசங்கத்தின் 1965ஆம் ஆண்டின் கொள்கை விளக்கத்தைக் குறிப்பிட்டு அதுவே ‘பழைய கள் புதிய மொந்தை’ யாக பா.ஜ.க.வின் கொள்கையாக இருப்பதை உணர முடிகிறது.
பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லி உண்மையாக்கும் கோயபல்ஸ் பாணியில் ஆர்.எஸ்.எஸ்.ஸும் சங்பரிவாரங்களும் செயல்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே.
“விவாகரத்து பெற்ற ஒரு இஸ்லாமியப் பெண் இரண்டாண்டுகளுக்குள் பிள்ளை பெற்றால் அக்குழந்தை அவளுடைய முதல் கணவனால் உண்டானதாகக் கருதப்பட வேண்டும் என குரான் கட்டளையிடுகிறது” எனும் பொய்யைக் கோல்வால்கர் திரும்பத் திரும்பச் சொல்லி உண்மையென கட்டவிழ்த்து விட்டு முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்வைப் பரப்பினார்.
நச்சரவமான ஆர்.எஸ்.எஸ். மீது கடும் தொடர் நடவடிக்கையை நேருவும் அவரைத் தொடர்ந்து வந்த பிரதமர்களும் மேற்கொள்ளவில்லை. இடதுசாரிக் கட்சிகளைத் தவிர பிற எதிர்க்கட்சிகளின் பார்வையும் ஆர்.எஸ்.எஸ். மீது மென்மைத்தன்மை மிக்கதாகவே இருந்தது. எனவேதான் 1974ல் ஜெயப்பிரகாஷ் நாராயணன் துவங்கிய முழுப் புரட்சி இயக்கத்தில் ஆர்.எஸ்.எஸ்.ஸால் எளிதாக இணைய முடிந்தது.
மேலும் “1974ல் பீகாரில் தான் துவங்கிய ஆர்.எஸ்.எஸ்.ஸின் உதவியை ஜெ.பி. ஏற்றுக் கொண்டது பெரிய சோகமாகிறது. அப்படிச் செய்ததன் மூலம் ஒரு வாசகர் சக்திக்கு அவர் கவுரவத்தை வழங்கிவிட்டார் என்கிறார் நூலாசிரியர்.
1975ல் இந்திரா காந்தி பிறப்பித்த அவசரநிலைப் பிரகடனத்தின் பின்னணியில் 1977ல் நடைபெற்ற தேர்தலில் இந்திரா காந்தியைத் தோற்கடித்து காங்கிரஸ் அல்லாத அரசை அமைக்க மாற்றுக் கட்சி தோற்றுவிக்கப்பட்டது. அதில் ஆர்.எஸ்.எஸ்.ஸைச் சேர்ந்தவர்கள் இணைந்தது கொள்கை அடிப்படையில் முரணானது. புதிதாக அமைக்கப்பட்ட மக்களவையில் 85 உறுப்பினர்கள் ஆர்.எஸ்.எஸ்.ஸுக்குக் கட்டுப்பட்டவர்கள் என்பது சாதாரண விசயமல்ல. கொள்கை அடிப்படையில் எதிரும் புதிருமான தலைவர்கள் ஒன்றுபட்டு செயல்படுதல் சாத்தியமற்றது. அதிகாரப் போட்டி வேறு. எனவே ஜனதா அரசு 1979ல் கவிழ்ந்தது. பாரதீய ஜனதா கட்சி தோற்றுவிக்கப்பட்டது.
1980ல் உருவான பாரதீய ஜனதா கட்சி இன்றளவும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் செயல்பாட்டு அணிதான். ஆர்.எஸ்.எஸ். என்பது தாய். பா.ஜ.க. அதனுடன் தொப்புள் கொடியினால் இணைக்கப்பட்ட குழந்தை. பா.ஜ.க. தோன்றிய முதல் பத்தாண்டுகளுக்குள்ளாகவே இந்துத்துவம் என்பதை வெளிப்படையாக பரப்புரை செய்யத் துவங்கியது.
பா.ஜ.க. 1981ல் பொய்ப் பரப்புரை ஒன்றைக் கட்டவிழ்த்து விட்டது. திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரம் கிராமத்திலிருக்கும் அனைத்து தலித் குடும்பங்களும் இஸ்லாமிய மதத்தினைத் தழுவக் காரணம் இஸ்லிமியத் தலைவர்களும் பணமும்தான் என்று குற்றம் சாட்டப்பட்டு தாக்குதலுக்கு உள்ளாகினர். ஆனால் இந்திய அரசின் பட்டியலின் மக்கள் மற்றும் பழங்குடியினர்க்கான பிராந்திய ஆணையரின் அறிக்கை இந்தக் குற்றச்சாட்டு பொய்யானது என அம்பலப்படுத்தியது என்பதை நிறுவுகிறார் நூலாசிரியர். மீண்டும் 1985ஆம் ஆண்டு புகழ்பெற்ற ஷாபானு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்யும் விதமாக 1986ல் இயற்றப்பட்ட முஸ்லிம் பெண்கள் விவாகரத்துச் சட்டம் பாபர் மசூதியின் பூட்டுக்களைத் திறக்க பிரதமர் ராஜீவ் காந்தியைத் தூண்டியதாகவும் அதன் தொடர்ச்சியாக ராமர் கோயில் புத்துணர்ச்சி பெற்று இந்து-முஸ்லிம் சமூகத்தினரிடையே இருந்த உறவைக் கெடுத்ததாகவும், நாட்டின் மதச்சார்பின்மை மதிப்பீடுகளின் அடிப்படையைத் தகர்த்ததாகவும் பொய்ப்பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டனர் என்பது புலனாகிறது.
பாபர் மசூதியை அகற்ற வேண்டும் என்று ஏப்ரல் 8,1984 அன்று சங்பரிவாரமான விஸ்வ இந்து பரிஷத் அறைகூவல் விடுத்தது. ரத யாத்திரையும் துவக்கப்பட்டது. ராமர் கோயிலைக் கட்டுவதற்காக 2000க்கும் மேற்பட்ட ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் ராம்ஷிலா என்கிற பெயரில் பூஜையால் புனிதப் படுத்தப்பட்ட செங்கற்களை அயோத்தி நோக்கி சுமந்து செல்லும் இந்த இயக்கத்தை வி.எச்.பி நடத்தியது. கருணை ததும்பும் ராமனின் பிம்பம் திரிசூலம், வில், அம்பு ஏந்திய வீரனைப்போல மாற்றி வடிவமைக்கப்பட்ட சுவரொட்டிகளை வி.எச்.பி. வெளியிட்டது.
1990, ஆகஸ்ட் 7 அன்று அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீட்டினைப் பரிந்துரைத்த மண்டல் கமிஷன் அறிக்கையை அமுல்படுத்துவதாக பிரதமர் வி.பி.சிங் அறிவித்தார். கூர்மையாக எதிர்வினையாற்றிய அத்வானி ரத யாத்திரை திட்டத்தை அறிவித்தார். ரத யாத்திரையின்போது பீகாரில் முதல்வர் லல்லு பிரசாத் யாதவ் அத்வானியைக் கைது செய்யவும் விபி.சிங்.அரசுக்கான ஆதரவை பா.ஜ.க. வாபஸ் பெற்றது. வி.பி.சிங் அரசு வீழ்ந்தது.
1991, ஜுன் 21ல் காங்கிரஸ் தலைமையிலான நரசிம்மராவ் அரசு பொறுப்பேற்றது. அப்போதே காவி உடையணிந்த பா.ஜக. பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தது இந்நூலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதே ஆண்டு கணிசமான ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளும் இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளும் பா.ஜ.க.வில்
இணைந்த செய்தியை விவரிக்கிறார் நூலாசிரியர்.
மீண்டும் ரத யாத்திரை.
“அத்வானியின் ரத யாத்திரை பி.ஜே.பி.யால் எடுக்கப்பட்ட முடிவல்ல. அது ஆர்.எஸ்.எஸ்.ஸினால் வடிவமைக்கப்பட்ட யுக்தி” எனும் நூலாசிரியர் கட்சியின் சின்னமான தாமரையைப் பெரிய அளவில் சுமந்து சென்ற அந்த டொயோட்டா ரதம் அவர்களின் அரசியல் நோக்கத்தை அறிவித்தது என்கிறார்.
1992 டிசம்பர் 6 அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அன்றைய பிரதமர் நரசிம்மராவிற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் அனைத்து அதிகாரங்களை வழங்கியிருந்த போதிலும் அவர் வெறுமனே வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தார். உலகின் முன் இந்தியா வெட்கித் தலை குனிந்தது. ஆர்.ஏஸ்.எஸ், வி.எச்.பி. பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகள் தடை செய்யப்பட்டன. உ.பி. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய பா.ஜ.க. அரசுகள் கலைக்கப்பட்டன. குதிரைகள் பறந்த பிறகு லாயம் பூட்டப்பட்டன.
அரசியல் சட்டப்பிரிவு 370ஐ நீக்குவது, ராமர் கோவில் கட்டுவது, பொது சிவில் சட்டம் இயற்றுவது என்னும் இந்துத்துவ நிகழ்ச்சி நிரல்கள் மீது ஆர்.எஸ்.எஸ்.ஸின் கவனம் சென்றது. இன்றளவும் படிப்படியாக அவை நிறைவேறறப்பட்டு வருவது கண்கூடு.
பா.ஜ.க.வை ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்குவது ஆர்.எஸ்.எஸ். அதன் தலைவர் சுதர்சன் பேசியவை அனைத்தும் நச்சுத்தன்மை வாய்ந்தவையே.
“முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் கடலில் தூக்கி எறிய வேண்டும். அவ்வாறு செய்ய இயலாதென்பதால் அவர்களை இந்திய மயமாக்க வேண்டும். இந்துத்துவம் என்பதன் மறைமுகம் அது.
சங்க பரிவாரம் என்னும் ஆர்.எஸ்.எஸ். குடும்பத்தின் அங்கங்கள் குறித்து பாரத் பூஷன் குறிப்பிடும் பட்டியல் மிக நீளமானது. அப்பட்டியல் முழுவதையும் வாசித்தால் இந்தியா முழுவதும் அந்தந்த மாநிலத்தின் தன்மைக்கேற்ப சங் பரிவாரம் எடுத்துள்ள பல அவதாரங்களை அறியலாம். குஜராத் அரசு தன் ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ். நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் மீதிருக்கும் தடைய நீக்கும் விதமாக அரசுப் பணியாளர் நடத்தை விதிகளைக் திருத்திய தையும் அதற்கு அப்போதைய குடியரசுத் தலைவர் ஆட்சேபனை தெரிவித்த போதிலும் பிரதமர் வாஜ்பாய் ஆதரவுடன் தடையை நீக்கியதையும் இந்நூல் விளக்குகிறது.
2002ல் குஜராத்தில் நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவமும் அதனைத் தொடர்ந்து அரங்கேறிய முஸ்லிம்களின் படுகொலையும் இந்நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
“குஜராத் படுகொலையினால் மோடி அரசியல் ரீதியாக பாதிப்படைவதற்குப் பதிலாக, அத்வானியை ஓரம் கட்டிவிட்டு பிரதமர் பதவிக்கான பா.ஜ.க.வின் வேட்பாளரானார். அத்வானி செய்த உதவிக்குப் பரிசாக முக்கியமான நேரத்தில் அத்வானியைத் தகுந்த சடங்குகளுடன் பரணில் தூக்கிப் போட்டார் என்னும் வார்த்தைகள் அர்த்த அடர்த்தி மிக்கவை.
“காங்கிரசும் பாகிஸ்தானும் ஏதோ ஆபத்தான செயலில் ஈடுபட்டிருப்பதால் டிசம்பர் 12 அன்று நடக்கவிருக்கும் தேர்தலின்போது குஜராத்தியர் கவனமாக இருக்க வேண்டும்” என்று மோடி பேசியதன் தீய எண்ணத்தையும் அப்பட்டமான பொய்களையும் கலந்து சேற்றை வாரி இறைப்பதில் மோடி எந்த அளவிற்கு இறங்கிச் செல்லத் தயங்க மாட்டார் என்பதையே இந்த பேச்சுக்கள் காட்டுகின்றன என்கிறார் நூலாசிரியர்.
“பிப்ரவரி 27 அன்று கோத்ராவில் நடந்த ரயில் படுகொலையைத் தொடர்ந்து குஜராத்தில் நிகழ்ந்த வன்முறைகளுக்கு மாநில நிர்வாகம் மறைமுக ஆதரவு அளித்தது மட்டுமன்றி, முதல்வர் நரேந்திர மோடியின் அரசாங்கம் வி.எச்.பி/பஜ்ரங் தளத்தின் அதிரடிப் படையினர்க்கு வேலையை முடிக்க 24 மணி நேரம் கொடுத்தது.” எனும் தி டெலிகிராப் பத்திரிகை செய்தியை ஆதாரமாக்கிப் படம் பிடித்துக் காட்டுகிறது இந்நூல்.
2005-ஜுன் 15ல் நீனா வியாஸ்’தி இந்து’ பத்திரிக்கையில்..”மக்களுக்குப் பதில் சொல்ல பா.ஜ.க கடமைப்பட்டதல்ல; நாட்டுக்கு நல்லது எது என தமக்குத் தெரியும் என்று நினைத்த சூப்பர் தேசியவாத, சூப்பர் தேசபக்தக் கூட்டம் ஒன்றிற்குத்தான் பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறது என்பதை அக்கட்சி மிகத் தெளிவாக உணர்த்தி விட்டது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை ஆர்.எஸ்.எஸ் ஒருபோதும் ஏற்றுக் கொண்டதில்லை என்பதை மறந்து விடாதீர்கள். பா.ஜ.க. எப்போதாவது தன் சொந்த பலத்தில் ஆட்சிக்கு வந்துவிட்டால், ஆர்.எஸ்.எஸ். என்கிற தேர்ந்தெடுக்கப்படாத ஒரு அமைப்புதான் நாட்டை ஆளும். ஜனநாயக இந்தியா என நாம் இன்று அறிந்து வைத்திருக்கும் ஒன்று பழைய கதையாகி விடும்.” என்று தீர்க்கதரிசனமாக எழுதியிருக்கிறார் என்பதை இன்றைய யதார்த்தக் களநிலவரம் மெய்ப்பிறக்கிறது.
இந்துஸ்தான் டைம்ஸ் 2005-அக்டோபர் 24ல் “பா.ஜ.க சரியான வழியில் செல்கிறதா என்பதைக் கண்காணித்து உறுதி செய்வதுதான் எங்கள் வேலை” என்று மோகன் பகவத் பேசியதாக குறிப்பிடப்பட்டிருப்பது சாதாரண விசயமன்று. ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க.வுக்குப் பரிந்துரைத்த 5 அம்சங்களாக 1. இந்துத்துவக் கொள்கைக்கு முதன்மை 2. அமைப்பை பலப்படுத்துவது 3. தொண்டர்களுக்கும் பயிற்சி அளிப்பது 4. நன்னடத்தை 5.கலந்தாலோசனை செய்வதற்கான கட்சி அமைப்பு ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.
இவை இன்றளவும் ஆர்
எஸ்.எஸ், பா.ஜ
க.வால் பின்பற்றப்படும் அன்றாட நடைமுறை வேலைகள் என்பது அனைவரும் அறிந்ததே.
“பெண்கள் 10 குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று சுதர்சன் சொன்னதும் “12 மகன்களைக் கொண்டிருக்கும் ஒரு தம்பதியரின் சந்ததி 1200 ஆண்டுகளில் 1200 ஆகப் பெருகியிருக்கும். 11 மகன்களைக் கொண்ட குடும்பம் 1100 சந்ததிகளை உருவாக்கியிருக்கும். மூன்று குழந்தைகளைக் கொண்ட குடும்பத்திற்கு 38 வாரிசுகள் இருப்பர். ஆனால் இரண்டே மகன்களைக் கொண்ட குடும்பத்தினுடைய சந்ததி பூஜ்யத்திலேயே இருக்கும்” என பீதி கிளம்பியதும் “இந்துக்கள் குடும்பக் கட்டுப்பாட்டினைக் கைவிட வேண்டும்” என்று பேசியதும் மதவெறிப் பரப்புரைதானே!
ஆர்.எஸ்.எஸ்.ஸில் சேர்வதற்கு முன் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதிமொழியைக் குறிப்பிடும் நூலாசிரியர், இவ்வுறுதி மொழியை ஏற்றபின் அந்நபர் பிரதமர் ஆகும்போது ஏற்கும் உறுதி மொழியையும் குறிப்பிட்டு ஆர்.எஸ்.எஸ். எப்படி மக்களை ஏமாற்றுகிறது என் விவரிப்பது முக்கியமானது.
ஆர்.எஸ்.எஸ் கூறும் அகண்ட பாரதத்தில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பூட்டான் நேபாளம், பங்களாதேஷ், மியான்மர், இலங்கை ஆகிய நாடுகள் அடங்கும் என்பதை மோகன் பகவத் வாய்வழி அறியமுடிகிறது. அவர் சொல்கிறார்: “தேசப் பிரிவினை தீர்மானமானதல்ல. அதனை ரத்து செய்வது பாகிஸ்தான் உட்பட அனைத்து தரப்புகளின் நலனுக்கு உகந்தது என்பதால் நாங்கள் அதைச் செய்வோம். காந்தாரம் என்று ஒரு காலத்தில் அறியப்பட்ட ஆப்கானிஸ்தானத்தில் ரத்த ஆறு ஓடியிருக்கிறது. பாகிஸ்தான், பங்களாதேஷ், திபெத், மியான்மர் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் நிலையைப் பாருங்கள். அகண்ட பாரதத்திலிருந்து அவை பிரிந்து சென்ற பிறகு என்ன மகிழ்ச்சியைக் கண்டன?”
இந்நூலின் முக்கியமான இன்றைய தேவையான பகுதியாக விரிகிறது ‘மோடியின் தலைமையில் ஆர்.எஸ்.எஸ். ராஜ்யம்”. காங்கிரஸ் இல்லாத பாரதம் என்ற முழக்கத்தை முன்வைத்து நேருவின் மரபினை முற்றிலும் அழித்து எதிர்க்கட்சிகளே இல்லாத ஓர் ஆட்சியை அமைக்கும் எண்ணத்துடன் சர்வாதிகாரியாகக் காய்களை நகர்த்தி வருகிறார் மோடி.
“கிறிஸ்துவர்களை மீண்டும் இந்துக்களாக மாற்றுவதில் ஆர்.எஸ்.எஸ் பிரதான கவனம் செலுத்துகிறது. வனவாசி கல்யாண் ஆஸ்ரமம், ஏகல் வித்யாலயா, சேவா பாரதி, விவேகானந்தா கேந்திரா, பாரத் கல்யாண் பரிஷத், ஃபிரண்ட்ஸ் ஆஃப் டிரைபல் சொசைட்டி, ஆகிய ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் ஆதிவாசிகள் மத்தியில் பணிபுரிவது இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது.
அவற்றுள் சில துளிகள்:
மார்ச் 2015ல் இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் காவி ஆட்சியாளர்களின் ருசிக்கேற்றபடி மாற்றியமைக்கப்பட்டது. மதச்சார்பற்ற நாட்டைத் தகர்த்து ‘ஏகத்தலைவர்’ கோட்பாட்டின் அடிப்படையிலான ஒரு இந்து நாட்டை உருவாக்க படிப்படியாக முன்னேறி வருகிறது. இந்தியாவின் சிறுபான்மையினரை, குறிப்பாக முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் அரசியல் முக்கியத்துவம் இல்லாதவர்களாக்கி ஒழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அரசின் உதவி ஆர்.எஸ்.எஸ்.ஸின் நடவடிக்கைகளுக்குப் புது வேகமளித்தது. 2012க்கும் 2014க்கும் இடைப்பட்ட காலத்தில் ஆண்டிற்கு 2000 என்கிற விகிதத்தில் ஆர்.எஸ்.எஸ் ஷாகாக்களின் எண்ணிக்கை அதிகரித்தது. 2015க்குள் இந்தியா முழுவதிலும் 51,335 ஷாகாக்கள் தினசரி பயிற்சி நடத்தும் நிலை ஏற்பட்டது என டைம்ஸ் ஆஃப் இந்தியா மூலம் விவரிக்கிறார் நூலாசிரியர்.
அறிவியலுக்குப் புறம்பான பழமைவாத மூடநம்பிக்கை கருத்துக்கள் விதைக்கப்படுவது இந்த அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. “பறந்து கொண்டிருக்கும் விமானங்களை மாயமாய் மறையச் செய்யும் வேதியியல் சூத்திரத்தினை மகரிஷி பரத்வாஜ் என்பவர் எழுதிய வைமாணிக சாஸ்திரம் பரிந்துரைத்தது. மனிதர்களைக் குளோனிங் முறையில் தயாரிக்க முடியும் என்பதன் முதல் சான்றுதான் கௌரவர்கள் என்றும் புற்றுநோயை கோமியத்தால் குணப்படுத்த முடியும் என்ற ஆர்.எஸ்.எஸ்.ஸின் கருத்தை ஆளும் பா.ஜ.க.வினர் கூறி வருவதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் மூலம் குறிப்பிடப்பட்டுள்ளதும் இந்தியாவின் பின்னோக்கிய பயணத்தை உணர்த்துகிறது.
“நாடு முழுவதும் கல்வியைக் காவி மயமாக்கும் பணியைச் செய்து வருகிறேன். அதனை விரைவில் செய்து முடிக்க நினைக்கிறேன். உலக வளர்ச்சிக்கு நமது வல்லுநர்கள் என்ன பங்களித்திருக்கின்றனர் என்று நாம் உலகிற்குச் சொல்லிக் கொடுப்போம்” என்று தீனா நாத் பாத்ரா எனும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் தத்துவவியலாளர் உயர்கல்வித்துறை ஆலோசகராகி இவ்வாறு கூறியிருப்பதை எப்படி எளிதாகக் கடந்து செல்ல முடியும்?
2016-ஜூலை 27 அன்று மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆர்.எஸ்.எஸ்.ஸின் மூத்த நிர்வாகிகளுடன் ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டு புதிய கல்விக் கொள்கை குறித்து ஆலோசனைகளைப் பெற்றதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை மூலம் தெளிவுபடுத்தியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
ஒரே அடியில் இந்திரா காந்தி நேஷனல் சென்டர் ஃபார் தி ஆர்ட்ஸ் நிறுவனத்தின் அறங்காவலர் குழுவை மாற்றியமைத்து தனக்கு விருப்பமானவர்களை நியமித்ததை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது இவ்வத்தியாயம்.
நிதியமைச்சகம் நடத்திய பொருளாதார மாநாட்டிற்கு அழைக்கப்பட்ட ஜீன் ட்ரேஸ் ரயிலில் சென்று கொண்டிருக்கும்போதே பேச்சாளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டார். நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் நாளந்தா பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். நேஷனல் புக் டிரஸ்ட் தலைவர் ஏ. சேதுமாதவனைப் பதவியிலிருந்து இறங்கிச் சொல்லிவிட்டு அந்த இடத்திற்கு ஆர்.எஸ்.எஸ். கருத்தியலாளர் ஒருவரை நியமித்தது மோடி அரசு.
2015-ஆகஸ்ட்3 நாளிட்டு ஏசியன் ஏஜ் பத்திரிகைச் செய்தி:-
“மோடி அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பின் மதக்கலவரங்கள் அதிகரித்துவிட்டன; 2015ன் முதல் 6 மாதங்களை அதற்கு முந்தைய ஆண்டின் 6மாதங்களோடு ஒப்பிடும்போது மதக் கலவரங்கள் அதிகரித்திருக்கின்றன என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.”
2015-அக்டோபர் 29 அன்று மதச்சார்பின்மைக்காக வீரமாகப் போராடி வரும் சமஹத் அமைப்பின் பதாகையின் கீழ் திரண்ட 53 வரலாற்றியலாளர்கள் அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒரு கண்டன அறிக்கையை வெளியிட்டனர் இது இந்திய அரசியல் வரலாற்றில் இதுவரை நிகழ்ந்திராதது. பலர் பல விருதுகளைத் திரும்ப மத்திய அரசிடமே கொடுத்ததும் நிகழ்ந்தது.
இந்திரா காந்தி தேசியக் கலைகளின் மையத்தின் அறங்காவலர் குழு மாற்றியமைக்கப்பட்ட போது அதன் தலைவரான இந்தியாவின் வெளியுறவுத் துறையின் மதிப்புமிக்க தூதுவராக இருந்த சின்மயா காரேகான் நீக்கப்பட்டு ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர் ராம் பகதூர் ராய் நியமிக்கப்பட்டார்.
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் அமுலாகும் திட்டங்களைக் குறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸ் நடத்திய ஒரு சர்வேயில் கிடைத்த தகவலாக இந்த அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டவை அதிர்ச்சி தருகின்றன. அவை: “பாடப் புத்தகத்தில் மாற்றம் செய்வது; சூரிய நமஸ்காரம்; பசுவதை கண்காணிப்பு; ஆர்.எஸ்.எஸ் ஷாகாக்களில் அரசு ஊழியர்கள் பங்கேற்பதன் மீதிருந்த தடையை நீக்குவது; நகரங்களின் பெயர்களை மாற்றுவது; நிறுவனங்களின் பெயர்களை மாற்றுவது”
பத்திரிகையாளர் கௌரி லங்கேஷின் படுகொலைக்கு நியூயார்க் டைம்ஸ் நேரடியாக குற்றம் சாட்டியது இந்தியப் பிரதமர் பதவிக்கு வெட்கக்கேடானது. ஆனால் அவருக்கு அதைப் பற்றியெல்லாம் கவலையில்லை. மருத்துவர் நரேந்திர தபோல்கர், கல்புர்கி, கோவிந்த் பன்சாரே ஆகியோரைக் கொன்ற ‘சனாதன் சன்ஸ்தா’ அமைப்பே கௌரி லங்கேஷையும் சுட்டுக் கொன்றது. சனாதன் சன்ஸ்தா என்பதும் சங் பரிவாரம் என்னும் நிலையில் பிரதமரிடம் என்ன பதிலை எதிர்பார்க்க முடியும். வழக்கமான கள்ள மௌனம்தான்.
2018ல் இறுதி ஆட்டம் எனும் அத்தியாயத்தில் 2014ல் அடைந்த தேர்தலில் அடைந்த பலன்களை 2019ல் அடைவதிலும், ஒரு கட்சி ஆட்சி முறையை அமைப்பதிலும் காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவதிலும் மட்டுமே குறியாக இருக்கிறார் மோடி. சுருக்கமாகச் சொன்னால் 2025ல் நடக்கவிருக்கும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் நூற்றாண்டுக்கு இந்தியாவைத் தயார் செய்கிறார் என்னும் நூலாசிரியரின் வார்த்தைகள் அர்த்த முக்கியத்துவம் வாய்ந்தவை எனின் மிகையன்று.
குஜராத் பில்கிஸ் பானு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் குஜராத் அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தியச் சுதந்திரதினப் பவளவிழாவை முன்னிட்டு விடுவிக்கப் பட்டிருப்பதும் அவர்களுக்கு மலர்மாலையும் இனிப்பும் கொடுத்து கொண்டாடியிருப்பதும் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியது போலானது. இது சட்டப் போராட்டம் நடத்திய பில்கிஸ் பானுவிற்கு மட்டுமல்லாமல் சட்டத்தை நம்பும் அனைவருக்குமே மாபெரும் அதிர்ச்சிதான். அதைவிட கூடுதலான அதிர்ச்சி சட்டப் போராட்டம் நட்த்திய சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செதல்வாத், மற்றும் காவல் துறை உயர் அலுவலர் சிரீ குமார் ஆகியோர் சர்வாதிகாரமாகச் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதன் மூலம் ஜனநாயகத் தூண் இடிக்கப்பட்டிருப்பதையே காட்டுகிறது.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் “ஆர்.எஸ்.எஸ். சார்புடைய தன்னார்வத் தொண்டு நிறுவனம் கல்கத்தாவில் நடத்திய நிகழ்ச்சியில் எல்லை பாதுகாப்புப் படையின் தலைமை இயக்குநர் கே.கே. ஷர்மா தன் சீருடையிலேயே கலந்து கொண்டது எப்படி? என் எழுப்பியிருக்கும் கேள்வி ஒவ்வொரு இந்தியரும் எழுப்ப
வேண்டிய கேள்வி தானே!
தி டெலிகிராப் பத்திரிகையில் 2018-மார்ச் 11ல் “இந்தியாவின் புவியியல் பரப்பில் 96 சதவீதத்திற்கும் மேலான இடங்களில் ஆர்.எஸ்.எஸ். செயல்படுவதாக அதன் இணை பொதுச் செயலாளர் கிருஷ்ண கோபால் கூறியதாகக் குறிப்பிட்டிருப்பது கவனிக்கத்தக்கதும் எச்சரிக்கை கொள்ள வேண்டியதும் ஆகும். மேலும் நாட்டிலிருக்கும் 37190 இடங்களிலுள்ள பூங்காக்களில் 58976 ஷாகாக்களை தினசரி நடத்துவதாகக் கூறும் அதன் ஆண்டறிக்கை புள்ளிவிவரங்கள் அதிர்ச்சி அளிக்கிறது.
ஆர்.எஸ்.எஸ்.ஸும் வன்முறையும் எனும் அத்தியாயத்தில் ஆர்.எஸ்.எஸ்.ஸின் மதவெறி வன்முறைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலிருந்து இன்றுவரை அதன் ஆக்டோபஸ் கரங்கள் நச்சு விதைகளைத் தூவியபடியே வளர்ந்து வருகிறது. இது மனிதகுலத்திற்கே ஆபத்தானது.
கலவரம் குறித்து டொனால்ட் ஈ. ஸ்மித் “உயிர்களையும் உடைமைகளையும் அதிகம் இழப்பவர்கள் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர்தான்.” எனக் குறிப்பிடுவது உள்ளங்கை நெல்லிக்கனி. 1961ல் நடைபெற்ற ஜபல்பூர் கலவரமாகட்டும், 1970ல் நடைபெற்ற பிவாண்டி கலவரமாகட்டும் 1979ஆம் ஆண்டு நடைபெற்ற ஜாம்ஷெட்பூர் கலவரமாகட்டும், 1982 மண்டைக்காடு கலவரமாகட்டும், 1992ல் நடைபெற்ற பாபர் மசூதி இடிப்பு மற்றும் இடிப்பைத்தொடர்ந்த கலவரமாகட்டும், 2002 கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்த குஜராத் கலவரமாகட்டும் ஸ்மித்தின் கூற்றே காட்சிகளாயின.
ஆர்.எஸ்.எஸ்.ஸின் சந்ததிகளாக சங் பரிவார காவிக் கும்பலை அம்பலப்படுத்துகிறார் நூலாசிரியர். இந்தியாவின் மாநிலங்களின் தன்மைகளுக் கேற்ப பற்பல அவதாரங்களில் வலம் வரும் இந்துத்துவா அமைப்புகளின் பட்டியல் மிக நீண்டது. அவை ஒவ்வொன்றுமே மதவெறி என்னும் நஞ்சு தேங்கிய கொடுக்குகளைக் கொண்டவை. அனைத்துக்கும் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். செயல்படும் விதத்தையும் ஆதாரமான நிதியைக் கையாள்வது குறித்தும் விரிவாகக் குறிப்பிடும் நூலாசிரியர் இறுதியில் “ஆர்.எஸ்.எஸ்தான் நாட்டிலேயே மிகப் பெரிய பணக்கார அமைப்பு என்கிறார்.
பின்னிணைப்பாக நூலாசிரியர் தரும் 200 பக்கங்கள் முக்கிய ஆவணங்கள். ஆர்.எஸ்.எஸ். இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல் என்பதற்கான அதிகாரப்பூர்வமான ஆதாரங்கள். ஆர்.எஸ்.எஸ். தோன்றியதிலிருந்து அதன் சர்சங்சாலக்குகள் என உயர் பதவியை வகித்தவர்கள் கையாண்ட ஆவணங்கள் தரப்பட்டுள்ளன. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், சுதந்திர இந்தியா என அரசுகளுக்கு எழுதிய கடிதங்கள் ஆவணப் படுத்தப் பட்டுள்ளன. சாவர்க்கரின் சரணாகதியாகும் மன்னிப்புக் கடிதங்கள், மகாத்மா காந்தியின் படுகொலையின் பின்னணியில் தடைசெய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ் மீதான தடை நீக்கக் கோரிய கடிதங்கள், இந்திரா காந்தி பிறப்பித்த அவசரநிலைப் பிரகடனத்தையொட்டி கைதான ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் விடுதலை பெற வேண்டி எழுதிய கடிதங்கள் என அனைத்தும் இடம் பெற்றுள்ளன. அக்கடிதங்கள் மூலம் ஆர்.எஸ்எஸ். தனக்குக் காரியம் ஆக வேண்டும் என்றால் எந்த அளவிற்கும் கீழிறங்கிச் செல்லும் என்பதை உணர முடிகிறது.
நூல் நெடுகிலும் ஆதாரங்களின் அணிவகுப்பும் பின்னிணைப்பான ஆதாரங்களும் ‘ஆர்.எஸ்.எஸ் இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல்’ என படம் பிடித்துக் காட்டுகின்றன. இந்நூல் உண்மையான தேச பக்தி கொண்டோர் மற்றும் மனித நேயத்தை உயர்த்திப் பிடிப்பவர்கள் வீடுகளின் நூலக அலமாரியில் இடம் பெற வேண்டிய நூல். வரலாற்று ஆவணமாகப் பாதுகாப்பதன் மூலம் நாமும் நமது தலைமுறையும் மதச்சார்பற்ற இந்தியாவைப் படைக்க துணை நிற்கும் எனின் மிகையன்று.
– பெரணமல்லூர் சேகரன்
(கைபேசி எண்
9442145256)
நூல் அறிமுகம்: ஜி.ராமகிருஷ்ணனின் ’மகாத்மா மண்ணில் மதவெறி’ (நாம் யார் பக்கம்..?! – தேனி சுந்தர்
தோழர் ஜி.ராமகிருஷ்ணன் அவர்கள் நக்கீரன் இதழில் தொடராக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு தான் இந்நூல்..
ஜனவரி,30 மகாத்மா காந்தி நினைவு நாள் என்று சாதாரணமாகச் சொல்லி விடலாம். ஆனால் காந்தி படுகொலை செய்யப்பட்ட நாள்.. இந்துத்வ கும்பலின் சதித் திட்டத்தின் படி கோட்சே என்கிற இந்து மத வெறியன் மகாத்மா காந்தியைச் சுட்டுக் கொன்ற தினம் என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்ல வேண்டிய அவசியம் உள்ள காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்..
கடந்த ஜனவரி 30 அன்று கோவையில் நடந்த நிகழ்வில் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டுள்ளார்.. மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பின் போது கோட்சே-வின் பெயரை பயன்படுத்தக் கூடாது என்று எதிர்ப்பு வருகிறது. எங்கிருந்து எதிர்ப்பு வருகிறது என்பது தான் அங்கே கவனிக்க வேண்டிய விஷயம்.. நிகழ்ச்சி நடத்த அனுமதி கொடுத்துப் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல் துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர் ஆகியோர் தான் தடுக்கின்றனர்.. காந்தியைக் கொன்றவன் கோட்சே என்பது இதுவரை யாரும் சொல்லாத தகவலா..? உலகம் அறியாத உண்மையா? நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட ஒரு குற்றவாளியின் பெயரை ஏன் சொல்லக் கூடாது..? அந்த குற்றச்சாட்டின் பேரில் நாடு முழுக்க தடைவிதிக்கப்பட்ட அமைப்பு ஆர்.எஸ்.எஸ். என்பதை எத்தனை ஆவணங்களிலிருந்து அழிக்க முடியும்..? திருத்த முடியும்..??
சூரியன் கிழக்கில் உதிக்கிறது என்கிற அளவுக்கு மறுக்க முடியாத ஒரு உண்மையைப் பேசுவதற்குக் கூட அனுமதிக்காத ஒரு காவல் துறை அதிகாரி.. அதுவும் தமிழ்நாட்டில்.. அதுவும் தேசிய கட்சியின் தேசிய அளவிலான பொறுப்பில் இருக்கும் ஒருவரை தடுக்கும் அந்த தைரியம் தான் நமக்கு அச்சமூட்டும் ஆச்சர்யம்..! அது தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பலம்..! சூட்சமம்..!!
அந்த சம்பவம் தான் வகுப்புவாத அபாயம் குறித்த தொடரை எழுத வேண்டும் என்கிற உத்வேகத்தை தோழர் ஜி.ஆர். அவர்களுக்கு அளித்திருக்கிறது..
சுதந்திர போராட்டத்திற்கு முன்பும் பின்பும் இந்துத்வ சக்திகள் எப்படி செயல்பட்டனர். தமிழகம் மட்டுமின்றி கேரளம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இவர்கள் எவ்வாறு செயல்பட்டனர். மக்கள் மத்தியில் பிரிவினையை, மத வெறி உணர்வைத் தூண்டி எவ்வாறு மோதல்களை அரங்கேற்றுகின்றனர் என்பதையெல்லாம் சொல்லிச் செல்கிறார்..
இந்துத்வா என்பது வேறு, இந்து மதம் என்பது வேறு.. இந்துத்வா என்பது ஒரு அரசியல் செயல்திட்டம்.. இந்த அரசியல் செயல்திட்டத்தை அமலாக்க இந்து மத உணர்வை அவர்கள் எவ்வாறு பயன்படுத்துகின்றனர்.. இறை பக்தி உள்ளவர்கள் மதப் பற்று உள்ளவர்களாக மாற்றப்படுவதும் மதப் பற்று உள்ள அப்பாவிகள் மதவெறி ஊட்டப்பட்டு மதக் கலவரங்களில் அடியாட்களாக பயன்படுத்தப்படுவதும் அவர்களின் வகுப்புவாத தந்திரம் என்பதை விளக்குகிறார்..
இந்துத்வா, வகுப்புவாத சிந்தனைகளின் வளர்ச்சி கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு மட்டுமல்ல இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கே ஆபத்து ஆகும். இந்த ஆபத்து இன்று உருவானதில்லை.. இந்தியாவை இந்து ராஷ்டிரமாக உருவாக்க வேண்டும்.. நால்வருண அமைப்பையும் சாதிய பாகுபாடுகளையும் பெண்களை சக மனுஷியாக மதிக்காமல் இழிவுபடுத்தும் அம்சங்களை உள்ளடக்கிய மனுநீதி தான் நாட்டின் சட்டமாக இருக்க வேண்டும் என்று கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாக சொல்லி வருபவர்கள்.. அதை நடைமுறைப்படுத்த அதிகாரம் வேண்டும். அதற்காகவே ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள்.. அதைத் தான் கொஞ்சம் கொஞ்சமாக செய்து கொண்டும் இருக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறார் தோழர் ஜி.ஆர்.
இந்துத்வா அடிப்படைவாதிகள் மட்டுமல்ல. இஸ்லாமிய, கிறித்தவ மத அடிப்படைவாத அமைப்புகளும் ஆபத்தானவை தான் என்று சுட்டிக்காட்டுகிறார்.. சிறுமி என்றும் பாராமல் சுட்டுத் தள்ளப்பட்ட சிறுமி மலாலாவை எடுத்துக் காட்டி சொல்கிறார்.. சூரியன் தான் மையம், பூமி உள்ளிட்ட கோள்கள் சுற்றி வருகின்றன என்கிற உண்மையைச் சொன்னதற்காக கலிலியோவை வீட்டுச் சிறையில் வைத்த, புருனோவை நெருப்பிட்டுக் கொன்ற கிறித்தவ அடிப்படைவாத சம்பவங்களை எடுத்துக் காட்டி சொல்கிறார்..
மதம் வேறு அரசியல் வேறு என்று இருக்க வேண்டும்.. மதம் வேறு அரசு வேறு என்று இருக்க வேண்டும்.. இரண்டும் கலந்தால் என்ன ஆகும் என்பதற்கு உதாரணங்கள் தான் இவை..
ஆர்.எஸ் எஸ். கும்பலின் முன்னோடிகள் சாவர்க்கர், ஹெட்கேவர், முஞ்சே கோல்வால்கர்.. இவர்களின் முன்னோடிகள் ஹிட்லரும் முசோலினியும் தான்..
இனவெறி, மதவெறி தலை தூக்கினால், பரவினால் உலகம் என்னவாகும் என்பதற்கு இவர்களே சாட்சி.. உலகின் பல கோடி மக்களை தங்களின் வெறியால் பலிகொண்ட பாசிச, நாசிச சக்திகளின் வழித் தோன்றல்கள் நம் தேசத்தை என்ன செய்வார்கள்..? என்ன செய்யப் போகிறார்கள் என்ற அச்சம் இந்த நூலை வாசித்த ஒவ்வொருவருக்கும் எழும்..
அதே நேரத்தில் அன்றைய பாசிச சக்திகளுக்கு எதிராக கலை இலக்கிய பண்பாட்டு இயக்கங்கள் எவ்வாறு போராடினார்கள் என்கிற உதாரணங்களை எல்லாம் கூறி நீங்கள் யார் பக்கம் என்று கேட்டு கடைசி அத்தியாயத்தைத் தொடங்குகிறார்..
மதவெறிக்கு மாற்று மத நல்லிணக்கம்.. வெறுப்புக்கு மாற்று அன்பு.. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்துக்கே எதிராக ஒரு அபாயம் தலை தூக்கும் போது ஜனநாயகத்தை, சோசலிசத்தை, மதச்சார்பற்ற குடியரசு என்கிற அதன் மாண்பைக் காக்கிற கடமை இந்திய மக்கள் ஒவ்வொருவருக்கும் உண்டு..
இந்து மத வெறி கொண்ட ஆட்சி என்பதால் இந்துக்களுக்கு சாதகமாக நடந்து கொள்ளும் என்று கூட பலர் நினைக்கலாம்.. தொழிலாளர் சட்டங்கள், வேளாண் சட்டங்கள், பெட்ரோல், சமையல் எரிவாயு விலை உயர்வு, புதிய கல்விக் கொள்கை என விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து வித மக்களுக்கும் எதிராகத் தான் இந்த ஆட்சி நடைபெற்று வருகிறது என்பதையும் பல்வேறு உதாரணங்களுடன் சொல்லி இருக்கிறார்..
வேறு யாருக்காக தான் இந்த ஆட்சி நடைபெறுகிறது என்ற கேள்வி எழுவது இயல்பு தான். அதானி, அம்பானி போன்ற பெரும் கார்பரேட்டுகளின் நலன் ஒன்றையே பிரதானமாக கொண்டு செயல்படுகிறது. கொரனா பெருந்தொற்று காலத்தில் கூட மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்கும் விதமாக ஒன்றும் செய்யாமல் பெரு முதலாளிகளுக்குச் சாதகமாகவே அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.. விளைவாக உலகப் பணக் காரர்கள் வரிசையில் பிரதமரின் கூட்டாளிகள் வேகவேகமாக முன்னேறி வருகிறார்கள் என்பதையும் சுட்டிக் காட்டி உள்ளார்..
இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை என்கிற பன்முக கலாச்சாரத்தைப் பாதுகாக்கிற, மக்கள் மத்தியில் ஒற்றுமையை, அறிவியல் மனப்பான்மையை உருவாக்குகிற பக்கமா? இல்லை அதற்கு எதிர்ப் பக்கமா? எந்தப் பக்கத்தில் நிற்கப் போகிறோம் என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும்..
இன்றைய சூழலில் மிக மிக அவசியம் வாசிக்க வேண்டிய நூலாக, நக்கீரன் பதிப்பக வெளியீடாக வந்துள்ளது மகாத்மா மண்ணில் மதவெறி..!
– தேனி சுந்தர்
நூல் : மகாத்மா மண்ணில் மதவெறி
ஆசிரியர் : ஜி.ராமகிருஷ்ணன்
விலை : ரூ: ₹125
வெளியீடு : நக்கீரன்
தொடர்புக்கு : 044 – 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
இது என் வீடு என்னை யாராலும் இங்கிருந்து வெளியேற்ற முடியாது: நசிருதீன் ஷா உடன் நேர்காணல் – கரண் தாப்பர் | தமிழில்: தா சந்திரகுரு
நடிகர் நசீருதீன் ஷாவுடன் கரண் தாப்பர் நடத்திய நேர்காணல் தி வயர் யூடியூப் சேனலில் 2021 டிசம்பர் 28 அன்று பதிவேற்றம் செய்யப்பட்டது. வகுப்புவாத துருவமுனைப்பிற்கு உள்ளாக்கப்பட்டுள்ள நாட்டில் இப்போது ஒரு முஸ்லீமாக இருப்பதன் பொருள் பற்றி நடிகர் நசீருதீன் ஷா அந்த முப்பத்தைந்து நிமிட உரையாடலில் விரிவாகப் பேசினார். இந்திய முஸ்லீம்களை இனப்படுகொலை செய்வதற்கான அழைப்புகள் எந்தவொரு விளைவுகளுமில்லாமல் ஒலித்துக் கொண்டிருக்கும் சூழலில் முஸ்லீம்கள் உணர்ந்துள்ள காயங்களுக்கு சாளரத்தைத் திறந்து வைப்பதாக அந்த உரையாடல் இருந்தது. அவர்களுடைய உரையாடலின் முழுமையான எழுத்தாக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. முழு நேர்காணலை இங்கே காணலாம்.
கரண் தாப்பர்: ஹரித்துவாரில் பத்து நாட்களுக்கு முன்பு நடந்த தர்ம சன்சத் கூட்டத்தில் முஸ்லீம்களை இனப்படுகொலை செய்வது, இனச் சுத்திகரிப்பு செய்வது என்று ரத்தவெறி கொண்ட குரல் எழுப்பப்பட்டது. ரோஹிங்கியாக்களுக்கு மியான்மரில் என்ன நடந்ததோ அதை இங்கே முஸ்லீலிம்களுக்கு நாம் செய்ய வேண்டும் என்று அந்தக் கூட்டத்தில் ஹிந்துக்களுக்கு கூறப்பட்டது. இந்திய குடிமக்கள் தங்களுடைய சக குடிமக்கள் மீதே இதுபோன்று திரும்புவார்கள் என்று என் வாழ்நாளில் ஒருபோதும் நான் நினைத்ததில்லை. ஆனால் அதுதான் இப்போது நடந்தேறியிருக்கிறது. எனவே நான் இன்றைக்கு உங்களிடம் ‘நரேந்திர மோடியின் இந்தியாவில் ஒரு முஸ்லீமாக இருப்பதை எவ்வாறு உணர்கிறீர்கள்?’ என்று ஓர் எளிய, வெளிப்படையான கேள்வியைக் கேட்க விரும்புகிறேன்…
இன்றைக்கு எனது விருந்தினர் இந்தியாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவர். அவரது வாழ்க்கையில் ஒரேயொரு அடையாளம் மட்டுமே அவரிடம் இருந்து வந்திருக்கிறது. மதம் என்பது முக்கியமில்லை என்று தன்னை இந்தியர் என்று அவர் நினைத்தது சரிதான். இருப்பினும் இன்றைக்கு அவரது சொந்த நாட்டு மக்களில் பலரும் அவர் மீது மத அடையாளத்தைத் திணிக்கிறார்கள். இப்போது அனைவராலும் நன்கு அறியப்பட்ட, மிகவும் மதிக்கப்படுகின்ற நடிகர் நசிருதீன் ஷா என்னுடன் இணைகிறார்.
நசீருதீன் ஷா! ஹரித்துவாரில் பத்து நாட்களுக்கு முன்பு நடந்த அந்த தர்ம சன்சத் கூட்டத்தில், இன அழிப்புக்காக முஸ்லீம்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என்று ரத்தவெறி கொண்ட அழைப்பு விடுக்கப்பட்டது, மேலும் மியான்மரில் ரோஹிங்கியாக்களுக்கு செய்யப்பட்டதை இங்கே ஹிந்துக்களுக்குச் செய்ய வேண்டும் என்று அவர்கள் சொன்னார்கள். உங்கள் சொந்த நாட்டு மக்கள், சக குடிமக்கள், உங்கள் சமூகத்தைப் படுகொலை செய்யுமாறு அழைப்பு விடுத்தது குறித்து உங்களிடம் என்ன மாதிரியான உணர்வு இருந்தது?
நசிருதீன் ஷா: என்னிடம் ஏற்பட்ட முதல் எதிர்வினை கோபம். இங்கே நடந்து கொண்டிருப்பது முஸ்லீம்களிடம் பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்துகிற கூட்டு முயற்சியாகும். அவுரங்கசீப் மற்றும் முகலாய ஆக்கிரமிப்பாளர்களை துணைக்கழைத்து தலைமையில் இருப்பவர்களிலிருந்து தொடங்கி பலரும் பேசுவதன் மூலம் பிரிவினைவாதமானது ஆளும் கட்சியின் கொள்கையாக மாறி விட்டதாகவே தோன்றுகிறது.
அவர்களுக்கு (வலதுசாரி ஆர்வலர்கள்) என்ன நடக்கப் போகிறது என்று தெரிந்து கொள்வதற்கு நான் ஆர்வமாக இருந்தேன். ஆனால் அவர்களுக்கு எதுவும் நடக்கவில்லை என்பதில் எனக்கு எந்தவொரு ஆச்சரியமுமில்லை. ஏனெனில் இங்கே விவசாயிகளை மோதிக் கொன்ற அமைச்சருக்கு எதுவும் நடக்கவில்லை. அவர் பதவி நீக்கம் செய்யப்படவில்லை, தண்டிக்கப்படவில்லை, அவர் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, அமைச்சர் பதவியை விட்டு விலகுமாறு அவர் கேட்டுக் கொள்ளப்படவில்லை. அந்த விவகாரம் நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் நான் அதிக விவரங்களுக்குள் செல்லவில்லை. ஆனாலும் இப்போது இங்கே எங்களை (சிறுபான்மை சமூகத்தினர்) பயமுறுத்துவதற்கான முயற்சி நிச்சயமாக இருக்கிறது. ஆனாலும் ‘நாம் பயந்து விடக் கூடாது’ என்பதை ஒரு பலகையில் எழுதி நான் எப்போதும் கைகளில் ஏந்திக் கொண்டிருக்கிறேன்.
வேடிக்கையாகச் சொல்வதென்றால் பயப்படுவது என்பது – ‘நீங்கள் இந்தியாவில் இருக்கப் பயப்படுகிறீர்கள்’ என்று எப்போதும் என் மீது சுமத்தப்பட்டு வருகின்ற குற்றச்சாட்டு. அது ஏன் சொல்லப்பட்டதென்றால், சில மாதங்களுக்கு முன்பு எனது குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி நான் கவலைப்படுவதைப் பற்றி பேசியிருந்தேன். ‘என் வாழ்க்கை முடிந்துவிட்டது. என் வாழ்க்கையில் இன்னும் எனக்கு பத்து ஆண்டுகளே எஞ்சியிருக்கின்றன. அதனால் நான் அதைக் காண்பதற்கு உயிருடன் இருக்க மாட்டேன். ஆனால் என்னுடைய குழந்தைகளின் நிலை என்னவாகும் என்பது குறித்து எனக்கு கவலையாக இருக்கிறது. காவல்துறை ஆய்வாளரின் மரணத்தைக் காட்டிலும் ‘பசுவின் மரணம்’ இப்போது முக்கியத்துவம் பெறுவது மிகவும் சோகமானது’ என்று நான் அப்போது கூறியிருந்தேன்.
சில காரணங்களால் அந்த அறிக்கை என்னை கேலி, வெறுப்பு மற்றும் தவறான அச்சுறுத்தல்களின் தொடர் இலக்காக ஆக்கியது. அதனால் நான் முற்றிலும் குழம்பிப் போனேன். ஏனென்றால் நான் ஆத்திரமூட்டுகின்ற வகையில் எதையும் பேசியிருக்கவில்லை. பத்து ஆண்டுகளுக்கு முன்பு நான் நடித்திருந்த ஒரு திரைப்படம், எ வெட்னஸ்டே அந்த நேரத்தில் இழுத்துக் கொண்டு வரப்பட்டது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் நடித்த ‘சர்ஃபரோஷ்’ படமும் அப்போது இழுக்கப்பட்டது.
சர்ஃபரோஷ் திரைப்படத்தில் உளவுத்துறை ஏஜெண்டாக வரும் நான் பாகிஸ்தான் கஜல் பாடகராக நடித்திருந்தேன். எ வெட்னெஸ்டே திரைப்படத்தில் கொல்லவில்லையெனில் அவர்கள் தப்பித்து விடுவார்கள் என்று அஞ்சி நான்கு பயங்கரவாதிகளை தனியொரு ஆளாகக் கொல்ல முடிவு செய்கின்ற பாத்திரத்தில் நான் நடித்திருந்தேன். என்னைப் பற்றி பதிவு செய்யப்பட்டிருந்த வீடியோவில் லாகூருக்கு ஒருமுறை சென்றிருந்த போது நான் பேசியதுடன் அந்த இரண்டு படங்களும் அருகருகே இணைத்துக் காட்டப்பட்டன. லாகூருக்கு சென்றிருந்த சமயத்தில் என்னிடம் லாகூருக்கு வந்திருப்பதை நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது. ‘வீட்டில் இருப்பதைப் போலவே உணர்கிறேன்’ என்று சொன்னேன். அது அவர்களைக் கோபமடையச் செய்திருக்கும் என்று தோன்றுகிறது. ‘வீட்டில் இருப்பது போல உணர்ந்தால் நீங்கள் அங்கேயே சென்று விடுங்கள்’ என்று கூற ஆரம்பித்தார்கள்.
அவ்வாறு ஏன் அவர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று எனக்குப் புரியவே இல்லை. ஒருவரின் வீட்டிற்கு செல்லும் நீங்கள், அங்கே உங்களுக்கு மிகவும் வசதியாக இருந்தால், அவர்கள் உங்களை நன்றாக நடத்தினால் ‘என் வீட்டைப் போலவே இருக்கிறது’ என்று சொல்ல மாட்டீர்களா? அவர்களுக்கு அந்தப் பேச்சு எ வெட்னெஸ்டே திரைப்படத்தில் கரப்பான் பூச்சிகள் போன்றவற்றிடமிருந்து வீட்டைச் சுத்தம் செய்வது பற்றி நான் பேசிய பேச்சுக்கு முரண்பட்டதாக இருந்திருக்கிறது. ‘இவர் மிகப் பெரிய துரோகி. ஒருபுறம் அவரது திரைப்பட பிம்பம் இவ்வாறு சொல்கிறது – ஆனால் நிஜ வாழ்க்கையில் அவர் சொல்வது இதுதான்’ என்று அவர்களால் காட்டப்பட்டது.
நான் இங்கே நன்கு வரவேற்கப்பட்டிருக்கிறேன், மிகவும் வசதியாக உணர்கிறேன் என்றுதான் நான் நிஜ வாழ்க்கையில் சொல்லியிருந்தேன். நமது பிரதமரும், பாகிஸ்தான் பிரதமரும் பள்ளி மாணவிகள் போல கைகளைப் பிடித்துக் கொண்டு லாகூர் விமான நிலையத்தின் தரைப்பாலத்தில் அதே சமயத்தில் நடந்து கொண்டிருந்தனர்.
கரண் தாப்பர்: முற்றிலும் உண்மை. நான் இப்போது தெரிந்தே தர்ம சன்சத் கூட்டத்தில் இருந்த இரண்டு நபர்கள் பேசியவற்றை மேற்கோள் காட்டப் போகிறேன், ஏனென்றால் அங்கு பேசப்பட்ட சில விஷயங்கள் எந்த அளவிற்கு அதிர்ச்சியூட்டுபவையாக, ரத்தவெறி கொண்டவையாக, பயங்கரமானவையாக இருந்தன என்பதை பார்வையாளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
‘மியான்மரைப் போல இங்குள்ள காவல்துறையினர், அரசியல்வாதிகள், ராணுவம் மற்றும் ஒவ்வொரு ஹிந்துவும் ஆயுதம் ஏந்தி இந்த சுத்திகரிப்பு இயக்கத்தை நடத்த வேண்டும். அதைத் தவிர வேறு தீர்வு எதுவுமில்லை’ என்று சுவாமி பிரபோதானந்தா அங்கே பேசினார். பின்னர் பூஜா ஷகுன் பாண்டே ‘அவர்களில் இருபது லட்சம் பேரைக் கொல்வதற்கு நம்மில் நூறு பேர் தயாராக இருந்தால் போதும், இந்தியாவை ஹிந்து நாடாக மாற்றுவதில் நாம் வெற்றி பெற்று விடுவோம்’ என்று பேசினார். உங்கள் வாழ்நாளில் நீங்கள் எப்போதாவது முஸ்லீம்களைப் பற்றி அவர்களுடைய சொந்த ஹிந்து சகோதர சகோதரிகளே இவ்வாறாகப் பேசுவார்கள் என்று நினைத்திருப்பீர்களா? சக குடிமக்களே இப்போது உங்கள் மீது தாக்குதலை நடத்தப் போவதாகச் சொல்கிறார்கள்.
நசிருதீன் ஷா: இது போன்ற விஷயங்களைக் கேட்கும் போது மன உளைச்சலே ஏற்படுகிறது. மேலும் தாங்கள் என்ன பேசுகிறோம் என்பது அவர்களுக்குத் தெரியுமா என்பது உண்மையில் எனக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது. அவர்கள் இப்போது அழைத்துக் கொண்டிருப்பது முழு அளவிலான உள்நாட்டுப் போருக்கே ஆகும்… நம்மிடையே இருந்து வருகின்ற இருபது கோடிப் பேர் இதை எங்கள் தாய்நாடு என்றும் நாங்கள் இந்த இடத்திற்குச் சொந்தக்காரர்கள் என்றும் கூறி திரும்ப எதிர்த்துப் போராடும் போது அவர்கள் அனைவரையும் அவ்வளவு எளிதில் அழித்து விட முடியாது.
நாங்கள் இங்கேதான் பிறந்தோம், எங்கள் தலைமுறைகள் இங்கேயே வாழ்ந்து மடிந்திருக்கின்றன. அத்தகைய இயக்கம் ஏதேனும் தொடங்குமானால், அது மிகப் பெரிய எதிர்ப்பையும், கோபத்தையும் நிச்சயம் சந்திக்கும் என்றே நான் உறுதியாக நம்புகிறேன். இப்போது அதுபோன்று பேசுபவர்களுக்கு எதிராக எதுவும் செய்யப்படுவதிவில்லை. ஆனால் அதேசமயத்தில் ஒரு கவிஞர், நகைச்சுவை நடிகர் தான் சொல்லப் போகின்ற நகைச்சுவைக்காக கைது செய்யப்படுகிறார். ஆனால் யதி நரசிங்கானந்த் இதுபோன்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்… வெறுக்கத்தக்க வகையில் பேசுகின்ற இந்த யதி நரசிங்கானந்த் சொல்வது… முற்றிலும் அருவருப்பானவையாக, அபத்தமானவையாகவே இருக்கின்றன. அச்சுறுத்தல்கள் இல்லையென்றால் அந்த பேச்சுகள் உண்மையில் வேடிக்கையானவையாகவே இருக்கும்.
கரண் தாப்பர்: தாங்கள் ஓர் உள்நாட்டுப் போருக்குச் சாத்தியமான சூழ்நிலையை உருவாக்கி வருகிறோம் என்பதை அவர்கள் உணரவில்லை என்று நீங்கள் மிக முக்கியமான ஒன்றை சொன்னீர்கள். இருபது கோடி முஸ்லீம்களைத் தாக்கி கொல்லப் போவதாக தர்ம சன்சத் மிரட்டுவதாலேயே நாட்டில் உள்ள முஸ்லீம்கள் அனைவரும் கீழே விழுந்து அவர்களிடம் சரணடைந்து விடப் போவதில்லை. அவ்வாறு பேசுபவர்கள் நமது நாட்டின் ஒருமைப்பாட்டிற்கே அச்சுறுத்தலை விடுத்துள்ளனர்.
நசிருதீன் ஷா: ஆம், நீங்கள் சொன்னதைப் போல் அவர்கள் தங்களால் இயன்றவரையிலும் இங்கே இருக்கின்ற சக குடிமக்களை மிரட்டி வருகிறார்கள். முகலாயர்கள் செய்த ‘அட்டூழியங்கள்’ என்று சொல்லப்படுபவை மீது தொடர்ந்து வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருப்பது உண்மையில் ஆச்சரியமளிப்பதாகவே இருக்கிறது. அவர்கள் முகலாயர்கள் இந்த நாட்டிற்குப் பங்காற்றியவர்கள் என்பதை மறந்து விடுகிறார்கள்; நீடித்து நிற்கின்ற நினைவுச்சின்னங்கள், வரலாறு, கலாச்சாரம், நடனம் மற்றும் இசை மரபுகள், ஓவியம், கவிதை மற்றும் இலக்கியம் ஆகியவற்றை நமக்கு விட்டுச் சென்றவர்கள் முகலாயர்கள் என்பதை மறந்து விடுகிறர்கள். தைமூர், கஜினி முகமது அல்லது நாதர் ஷா பற்றி யாருமே பேசுவதில்லை. ஏனென்றால் அந்த வரலாறு குறித்த அறிவு கொண்டவர்களாக அவர்கள் இல்லை. அவர்களைப் பொறுத்தவரை முகலாயர்கள் இங்கே வந்த கொள்ளையர்கள், கொள்ளையடித்து விட்டுச் சென்றவர்கள் எனப்து மட்டுமே… இந்த இடத்தை தங்கள் தாயகமாக்கிக் கொள்வதற்காக முகலாயர்கள் இங்கே வந்தனர். விரும்பினால் நீங்கள் அவர்களை அகதிகள் என்று வேண்டுமானால் அழைத்துக் கொள்ளலாம், மிகவும் வசதியுடன் இருந்த அகதிகள். ஆனால் முகலாயர்கள் மீது இப்போது தேவையில்லாமல் குற்றம் சாட்டப்படுகிறது. ‘அட்டூழியங்கள்’ என்று அவர்களால் விவரிக்கப்படுகின்ற செயல்களுக்கு இந்தியாவில் உள்ள ஒவ்வொரு முஸ்லீமும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டுமென்று சொல்வது உண்மையில் கேலிக்குரியதாகவே இருக்கிறது.
கரண் தாப்பர்: நசீருதீன் ஷா, உங்களுக்குத் தெரிந்திருக்கும். மக்களை கலங்கச் செய்திருப்பது தரம் சன்சத்தில் பேசிய பேச்சுகள் மட்டும் அல்ல… அதற்கான எதிர்வினையும்தான். காவல்துறையினர் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமலே நாட்கள் பல கடந்து சென்று விட்டன. இன்று வரையிலும் யாரும் கைது செய்யப்படவில்லை. இறுதியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டபோது, அது வெறுமனே ‘மத விரோதத்தைத் தூண்டுகின்ற’ என்ற மிகக் குறைவான குற்றத்திற்கானதாக மட்டுமே இருந்தது.
உத்தரகாண்ட் காவல்துறை தலைமை இயக்குனர் மிக முக்கியமான ஊபா சட்டம் (சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்) பயன்படுத்தப்படவில்லை என்றும் அது பயன்படுத்தப்படாமலேகூட போகலாம் என்றும் தி ஹிந்து பத்திரிகையிடம் உறுதி செய்துள்ளார். கடந்த ஆண்டு கோவிட்-19 பரவியதாக தப்லிகி ஜமாஅத் மீது குற்றம் சாட்டப்பட்ட வேளையில் சிலர் மீது கொலைக் குற்றமே சுமத்தப்பட்டது. பாகிஸ்தானின் கிரிக்கெட் வெற்றியைக் கொண்டாடிய காஷ்மீர் மாணவர்கள் மீது தேசத்துரோகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. காவல்துறை மிக நியாயமாக, நேர்மையாக இருக்கிறது என்று நீங்கள், முஸ்லீம்கள் நம்புகிறீர்களா? இந்த கொடூரமான குற்றவாளிகளை சட்டத்தின் முன்பாக கொண்டு வந்து காவல்துறை நிறுத்தும் என்று முஸ்லீம்கள் நம்புகிறார்களா?
நசிருதீன் ஷா: அது காவல்துறைக்கு யார் உத்தரவு பிறப்பிக்கிறார்கள் என்பதைப் பொறுத்திருக்கிறது. நீதித்துறையின் இந்த வகையான பாகுபாடு மிக மேலே இருந்து தொடங்குகிறது. எல்லா வழிகளிலும் அது அங்கிருந்தே பரவுகிறது. உயர்மட்டத்தில் இருப்பவர்களே முன்னுதாரணமாகத் திகழ்கின்றனர். எனவே உத்தரவின் பேரிலேயே காவல்துறை செயல்படலாம். மக்களை அடிப்பதில் காவல்துறையினரிடம் மகிழ்ச்சி அல்லது ஏதாவது ஒரு உணர்வு இருக்கிறதா என்பது இங்கே முக்கியமாக இருக்கிறது. பொதுமுடக்கத்தின் போது நாம் பார்த்த காட்சிகளிலிருந்து காவல்துறையினர் அவ்வாறு செய்து வருவதை நம்மால் வெளிப்படையாகக் காண முடிந்திருக்கிறது. காவல்துறையில் முஸ்லீம்களின் பிரதிநிதித்துவம் மிகக் குறைவாக அல்லது கொஞ்சம் அதிகமாகவே இருந்தாலும், கூட்டத்தின் மீது லத்தி கொண்டு அடிக்க உத்தரவைப் பெற்றுக் கொண்ட முஸ்லீம் காவலர் ஒருவர் மிகவும் மகிழ்ச்சியுடன் அதற்கு கீழ்படிவார் என்றால் என்ன செய்வது? இந்த விஷயத்தில் அவருக்கான தேர்வு என்று எதுவும் இருக்கவில்லை.
கரண் தாப்பர்: காவல்துறை எவ்வாறு நடந்து கொள்கிறது, எப்படி எதிர்வினையாற்றுகிறது, நேர்மையாக அல்லது நியாயமாக அவர்கள் நடந்து கொள்வார்களா, சட்டத்தின் முன்பு குற்றவாளிகளைக் கொண்டு வந்து நிறுத்துவார்களா என்பது மேலிட உத்தரவுகளைப் பொறுத்தது என்று மிக முக்கியமான விஷயத்தைப் பற்றி சொல்லியிருக்கிறீர்கள். அரசியல் எதிர்வினை எவ்வாறு இருக்கிறது என்று பார்ப்போம். கண்டிக்கின்ற வகையில் ஒரு வார்த்தையைக்கூட வெளியிடாத உத்தரகாண்ட் அரசு, ஒன்றிய அரசு, பிரதமர் ஆகியோரின் மௌனம் காதைச் செவிடாக்குகிறது. அது எதுவும் நடக்கவில்லை அல்லது நடப்பவற்றை பொருட்படுத்தவில்லை என்று அவர் கூறுவதைப் போலவே உள்ளது.
நசிருதீன் ஷா: அவர் கவலைப்படவில்லை. உண்மையில் அவர் கவலைப்படுவதே இல்லை. தான் வருந்தத் தேவையில்லை என்று கருதுகின்ற விஷயத்திற்காக தன்னுடைய வருத்தத்தை வெளிப்படுத்துபவராக அவர் இருப்பதால் அவரை ஒரு பாசாங்குக்காரர் என்றுகூட உங்களால் குற்றம் சாட்ட முடியாது. அவர் ஒருபோதும் அகமதாபாத் படுகொலைகளுக்காக மன்னிப்பு கேட்டதில்லை, அதுமட்டுமல்ல… அவர் வேறு எதற்குமே மன்னிப்பு கேட்டதாக இருக்கவில்லை. விவசாயிகள் விஷயத்தில் அரை மனதுடன் அவர் கேட்டிருந்த மன்னிப்பும்கூட வஞ்சகம் நிறைந்த மன்னிப்பாகவே இருந்தது.
மோசமாகப் பேசியவர்களில் யாரையும் தண்டிக்கும் வகையில் ஒரு வார்த்தைகூட அவரிடமிருந்து வரவில்லை. உண்மையில் அந்த நபர்களை ட்விட்டரில் பின்தொடர்பவராகவே அவர் இருக்கிறார். அதை அவர் ஏன் செய்கிறார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும். அதில் ஒருவித மகிழ்ச்சியை அவர் பெறுகிறார்.
கரண் தாப்பர்: இந்த நாட்டின் தலைவராக இருக்கின்ற பிரதமர் மௌனம் சாதிப்பது தார்மீக ரீதியாக மட்டுமே சிக்கலானதாக இருக்கவில்லை. அவருடைய மறைமுகமான ஆதரவு இனப்படுகொலைக்கு அழைப்பு விடுப்பவர்களுக்கு இருக்கிறது என்பதைக் காட்டுகின்ற தெளிவான அறிகுறியாகவே அவரது மௌனம் இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? அவர்களை ஒரு விதத்தில் அவர் ஊக்குவித்தே வருகிறார். அவர்களை நீங்கள் சொல்வதைப் போல அவர் தண்டிக்கவில்லை, அவர்களைக் கண்டிக்கவில்லை. உங்கள் சமூகத்தைப் படுகொலை செய்ய நினைக்கும் அவர்களுக்கு மேல்மட்டத்தில் இருந்து மௌன ஆதரவு இருப்பது உங்களுக்கு கவலை அளிப்பதாக இருக்கிறதா?
நசிருதீன் ஷா: அதுவொன்றும் முழுக்க ஆச்சரியமளிப்பதாக இருக்கவில்லை என்றாலும். கவலைக்குரியதாகவே இருக்கிறது. ஆனாலும் அது ஏறக்குறைய நாம் எதிர்பார்த்ததுதான். இப்படி நடந்து விடுமோ என்று நான் பயந்து கொண்டிருந்தேன். ஆனாலும் அனைவரின் மோசமான எதிர்பார்ப்புகளையும் தாண்டி மிகவும் மோசமாக விஷயங்களாக அவை எவ்வாறு மாறின என்பதை நான் சொல்ல வேண்டும். இவ்வாறு ஆத்திரமூட்டப்பட்டாலும் மௌனம் காக்கின்ற தலைவர், எல்லோரிடமும் அக்கறை காட்டுபவராக தன்னைக் கூறிக் கொள்பவர், மக்களுடைய வளர்ச்சிக்காகப் பாடுபடுவதாகச் சொல்லிக் கொள்பவர், எந்தவொரு மதத்துக்கும் எதிராக தனக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லை என்று சொல்லிக் கொள்பவர் நம்மிடையே இருந்து வருகிறார் என்பதுதான் இப்போதுள்ள பிரச்சனை. அவர் கணக்கிலடங்கா கேமராக்களின் துணையுடன் தனது சொந்த மத நம்பிக்கைகளை அணிவகுத்துச் சென்று காட்டுபவராக இருக்கிறார். அதே நேரத்தில் அவர் முஸ்லீம்களைப் பற்றி குறிப்பிட்டவர்களின் ஆதரவைப் பெறும் வகையில் பேசுவதற்கான நேரத்தையும் கண்டுபிடித்து வைத்துக் கொள்கிறார். அது நிச்சயமாக கவலைக்குரியதாகவே இருக்கிறது. ஆனாலும் இதுகுறித்து என்ன செய்ய முடியும் என்று எனக்குத் தெரியவில்லை.
கரண் தாப்பர்: முஸ்லீம்களுக்கு எதிராக நடந்துள்ள சமீபத்திய சீற்றமாக ஹரித்துவாரில் நடந்திருப்பது வேதனையளிப்பதாக உள்ளது. 2014ஆம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றதில் இருந்து கடந்த ஏழு ஆண்டுகளாக முஸ்லீம்கள் மிது லவ் ஜிகாத் என்று பலமுறை குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றது. பசுக் கொலைக்கு அவர்கள் ஆளாகியுள்ளனர். காவலர்கள் மற்றும் கும்பல்களால் தாக்கப்பட்டுள்ளனர். யோகி ஆதித்யநாத் போன்ற பாஜக மூத்த தலைவர்கள் பகிரங்கமாக அவர்களை மீண்டும் மீண்டும் பரிகாசம் செய்து வருகிறார்கள். தங்கள் சொந்த நாட்டிலேயே இரண்டாம் தர குடிமக்கள் என்ற நிலைக்கு முஸ்லீம்கள் தள்ளப்பட்டிருக்கிறார்களா?
நசிருதீன் ஷா: இரண்டாம் தரக் குடிமக்களாகத் தாழ்த்துவதற்கான செயல்பாடுகளிலேயே அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். எல்லாத் துறைகளிலும் அது நடந்து வருகிறது. ‘திரைப்படங்கள் சமூகத்தைப் பிரதிபலிக்கின்றன அல்லது சமூகம் திரைப்படங்களைப் பிரதிபலிக்கிறது’ என்று கூறியது உண்மைதான். திரைப்பட உலகில் நடப்பது நிச்சயமாக நாட்டில் பிரதிபலிக்கிறது.
மலேர்கோட்லா மாவட்டத்தில் உள்ள ஜித்வால் கலான் கிராமத்தில் மசூதி கட்டுவதற்காக முஸ்லீம் குடும்பங்களுக்கு தனது பூர்வீக நிலத்தை வழங்கிய விவசாயி ஜக்மெல் சிங் (நடுவே வெள்ளைத் தலைப்பாகை அணிந்துள்ளவர்)
அது முஸ்லீம்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கிப் பரப்புகின்ற முயற்சியாகவே இருக்கிறது. முஸ்லீம்கள் அதற்கு ஒருபோதும் அடிபணிந்து விடக்கூடாது என்பதையே நான் எப்போதும் கடைப்பிடித்து வருகிறேன். நெருக்கடி என்று வந்தால் அதை எதிர்த்து நின்று போராடுவோம் என்பதால் ஒரு விஷயம் நம்மைப் பயமுறுத்துகிறது என்பதை நாம் ஏற்றுக் கொள்ளக் கூடாது. நம்மிடம் ‘ஹிந்துக்களும் முஸ்லீம்களும் ஒன்றாக வாழ முடியாது’, ‘இருவரின் கலாச்சாரங்கள் ஒன்றுக்கொன்று வேறுபட்டவை’ என்று வெளிப்படையாகக் கூறுகின்ற மூத்த தலைவர் அரசியலமைப்பிற்கு முரணாகவே நடந்து கொள்கிறார் இல்லையா? அவர் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகவே நடந்து கொள்கிறார் இல்லையா? அவர் அதைப் பற்றி எதுவும் நினைத்தவராகத் தெரியவில்லை. அவர் தொடர்ந்து ‘தகனம் செய்யும் மயானம் – கல்லறை’ (சம்ஸ்தான் – கப்ரிஸ்தான்), ‘மசூதி – கோவில்’ போன்ற வேறுபாடுகள் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார். முக்கிய பெரும்பான்மை என்று தாங்கள் உணர்கின்ற ஹிந்துப் பெரும்பான்மையினரை ஒருங்கிணைப்பதற்காக அவர்களைப் பிரித்தாண்டு ஆட்சியதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் மிகச் சிறந்த வழியை பாஜக கண்டுபிடித்து வைத்திருக்கிறது. அவர்கள் யாருக்கும் பிடி கொடுப்பதில்லை. முஸ்லீம்கள் ஓரங்கட்டப்பட்டு தேவையற்றவர்களாக ஆக்கப்படுகிறார்கள். அவர்களைத் தேவையற்றவர்கள் என்று நிரூபிக்கும் வகையிலான செயல்முறைகள் படிப்படியாகத் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.
கரண் தாப்பர்: நீங்கள் மிக முக்கியமான ஒன்றைச் சொன்னீர்கள். ஆனால் அதை மெதுவாகச் சொன்னீர்கள். அவ்வாறு நீங்கள் அதைச் சொன்னதாலேயே அது மிகவும் சக்தி வாய்ந்ததாகிறது. நெருக்கடி வந்தால் எதிர்த்துப் போராடுவோம் என்று சொன்னீர்கள். அதுதான் அவர் உங்களுக்கு விட்டுச் செல்கின்ற கடைசி வழி இல்லையா? உங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், உங்கள் நிலையைத் தற்காத்துக் கொள்ளவும் நீங்கள் ரகசியமாகப் போராட வேண்டும்.
நசிருதீன் ஷா: ஆம். அப்படி ஒரு நிலைமை வந்தால் நாங்கள் அவ்வாறே செய்வோம். எங்கள் வீடுகளையும், தாயகத்தையும், குடும்பங்களையும், குழந்தைகளையும் நாங்கள் பாதுகாத்து வந்திருக்கிறோம். எங்களுடைய நம்பிக்கைகளைப் பற்றி நான் பேசவில்லை; நம்பிக்கைகள் மிக எளிதாக அச்சுறுத்தலுக்குள்ளாகின்றன. அதாவது அவ்வப்போது ‘இஸ்லாம் ஆபத்தில் உள்ளது’ என்று கூறபப்டுவதை நான் கேட்டு வந்திருக்கிறேன். இப்போது ஹிந்து மதம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாக நாம் கேள்விப்பட்டுக் கொண்டிருப்பதை நீங்கள் எவ்வளவு அபத்தமானவராக இருக்க வேண்டும் தெரியுமா? எங்களை விட பத்துக்கு ஒன்று என்ற அளவிலே அதிக எண்ணிக்கையில் இருந்து கொண்டு ‘என்றாவது ஒரு நாள் ஹிந்துக்களைக் காட்டிலும் முஸ்லீம்கள் அதிகமாக இருக்கப் போகிறார்கள்’ என்று இன்னும் பிரச்சாரம் செய்து வரப்படுகிறது. ஹிந்துக்களின் எண்ணிக்கையை என்றாவது ஒரு நாள் முஸ்லீம்கள் மிஞ்சுவதற்கு எந்த விகிதத்தில் நாங்கள் சந்ததியை உருவாக்க வேண்டும் தெரியுமா? நாங்கள் ஏன் அதை விரும்ப வேண்டும்? இருக்கின்ற இடத்தில் நாங்கள் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறோம்; எங்களால் முடிந்ததை நாட்டிற்காகச் செய்திருக்கிறோம். நிம்மதியுடன் வாழத் தகுதியானவர்கள் என்றே எங்களை நாங்கள் முழுமையாக உணர்கிறோம்.
கரண் தாப்பர்: இன்னும் ஒருபடி மேலே செல்ல விரும்புகிறேன்… இன்றைக்கு அந்தக் கும்பல் குர்கானில் முஸ்லீம்களை தொழுகை நடத்த விடுவதில்லை. உத்தரப்பிரதேசத்து கிராமங்கள், சிறு நகரங்களில் காய்கறிகள் மற்றும் வளையல்களை முஸ்லீம்கள் விற்பதை அந்தக் கும்பல் அனுமதிப்பதில்லை. குஜராத் நகரங்களில் முஸ்லீம்கள் அசைவ உணவுக் கடைகளை நடத்துவதற்கு அந்தக் கும்பல் அனுமதிக்காது. குஜராத்தில் உள்ள ‘தொந்தரவுக்குள்ளான பகுதிகள் சட்டம்’ ஹிந்துக்களுக்கானது என்று கருதப்படும் பகுதிகளில் முஸ்லீம்கள் சொத்துக்களை வாங்குவதை அனுமதிக்காது. நீங்கள் வாழ்ந்து வருகின்ற நாடு மிகக் கூர்மையாக துருவப்படுத்தப்படுவதை, ஹிந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையிலான பிளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை நீங்கள் காண்கிறீர்களா?
நசிருதீன் ஷா: அது அதிகரிப்பதற்கு ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அதற்கு ஊக்கமளிக்கப்படுகிறது. வெவ்வேறு விஷயங்களைப் போதிக்கின்ற இரண்டு வெவ்வேறு மதத்தினரிடையே உள்ள வெறுப்பு இயல்பானது என்றால், சீக்கியர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே வெறுப்பும் குரோதமும் அதிகமாக இருக்க வேண்டும் அல்லவா? சீக்கியர்களும், முஸ்லீம்களும் தேசப் பிரிவினையின் போது எதிரிகளாக இருந்தவர்கள், ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டவர்கள், இருதரப்பிலும் சிந்திய ரத்தத்தைக் கண்டவர்கள். ஆனால் இன்றைக்கு தொழுகை நடத்த விரும்பும் முஸ்லீம்களுக்காக சீக்கியர்கள் தங்களுடைய குருத்வாராக்களை திறந்து வைத்திருக்கும் நேரத்தில் ஹிந்து அடிப்படைவாதிகள் கூட்டம் வந்து முஸ்லீம்களின் தொழுகையைச் சீர்குலைக்க முயல்கிறது. சீக்கியர்கள் மட்டுமே இப்படியானதொரு நற்காரியத்தைச் செய்யும் அளவிற்கு உன்னதமானவர்களாக இருக்கிறார்கள். இந்த வகையான நற்செயலை முஸ்லீம்கள் பிரதிபலிப்பார்கள் என்பது எனக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது.
கரண் தாப்பர்: இந்திய முஸ்லீம்களைப் போன்றவராக நீங்கள் இல்லை என்பது எனக்குத் தெரியும் என்றாலும் நான் உங்களிடம் ஒரு கேள்வியைக் கேட்க விரும்புகிறேன். அது இரண்டு ஆண்டுகளாக உங்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கும் கேள்வி. நரேந்திர மோடியின் இந்தியாவில் ஒரு முஸ்லீமாக இருப்பதை நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள்?
நசிருதீன் ஷா: மிகவும் கோபமாக, வெறுப்பாக உணர்கிறேன். அன்புத் தலைவரை கேள்வி எதுவும் கேட்காமல் வணங்கி வருபவர்கள் அவரைப் பற்றி நகைச்சுவையாகப் பேசுவதைப் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதால் அவர்களுக்காகப் பரிதாபப்படுகிறேன். நான் பாதுகாப்பற்றவனாக உணரவில்லை. ஏனென்றால் இது எனது வீடு என்று எனக்கு நன்கு தெரியும். என்னை யாரும் இங்கிருந்து வெளியேற்ற முடியாது. எனக்கான இடத்தைக் கொண்டிருப்பதற்குத் தேவையான வகையில் எனது பணிகளை நான் செய்திருக்கிறேன். ஆனாலும் ஆளுங்கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்களிடமுள்ள வெளிப்படையான உணர்வுரீதியான வெறுப்பே என்னை அதிகம் கோபப்படுத்துகிறது. அது என்னை அதிகம் தொந்தரவு செய்கிறது. எதிர்காலத்தில் அது அவர்களுக்குத் தீங்கு விளைவிக்கப் போகிறது என்பதை அறிந்தே இருக்கிறேன்.
கரண் தாப்பர்: இதை இப்படிச் சொல்லலாம் என்று நினைக்கிறேன்: நீங்கள் பாரபங்கியில் பிறந்தவர். அஜ்மீர் மற்றும் நைனிடாலில் படித்தவர். இந்தியாவின் தலை சிறந்த நடிகர்களில் ஒருவராக இருக்கிறீர்கள். உங்கள் சகோதரர் ராணுவத்தின் துணைத்தலைவர் பதவி வரை உயர்ந்தவர். ‘பாகிஸ்தானுக்குச் செல்லுங்கள்’ என்று திரும்பத் திரும்பச் சொல்லப்படுகின்ற போது உங்கள் இருவருக்குள்ளும் என்ன மாதிரியான உணர்வு எழுகிறது?
நசிருதீன் ஷா: அதைக் கேட்டு நாங்கள் சிரித்துக் கொள்வோம். ‘பாகிஸ்தானுக்குப் போ’ என்று சொல்பவர்களைப் பார்த்து ‘கைலாசத்திற்கு போ’ என்று சொல்ல நினைக்கிறேன். உண்மையில் அது மிகவும் அபத்தமானது… ‘உருது பாகிஸ்தானிய மொழி’ அல்லது அந்த வார்த்தை… தீபாவளி விளம்பரத்தில் வந்த அந்த வார்த்தை என்ன… ‘ரிவாஸ்’ – ‘ரோஷ்னி கா ரிவாஸ்’ அல்லது அதுபோன்று ஏதாவது… அவையெல்லாம் எவ்வளவு அபத்தமானவை? ஹிந்தி, உருது, மராத்தி, குஜராத்தி மொழிகளில் எத்தனை பார்சி வார்த்தைகள் உள்ளன தெரியுமா? அரேபிய மொழி வார்த்தைகள் எத்தனை உள்ளன என்று தெரியுமா? முஸ்லீம்களின் மொழி உருது என்று தவறாகக் கருதப்படுகிறது. அது முஸ்லீம்களின் மொழி அல்ல, பஞ்சாப், மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசத்தின் மொழி என்று பலமுறை ஜாவேத் அக்தர் கூறியிருக்கிறார். துரதிர்ஷ்டவசமாக பாகிஸ்தான் உருதை முஸ்லீம் மொழி என்பதாக முத்திரை குத்தி விட்டது.
கரண் தாப்பர்: நரேந்திர மோடியின் இந்தியாவில் வாழ்ந்து வருகின்ற முஸ்லீம் என்ற முறையில் கோபம், வெறுப்பை நீங்கள் உணர்கிறீர்களா?
நசிருதீன் ஷா: சரிதான்.
கரண் தாப்பர்: அவ்வாறு உணர்வது மகிழ்ச்சி தருகின்ற வழியாக யாருக்கும் இருக்கப் போவதில்லை.
நசிருதீன் ஷா: இல்லை. அது அப்படி இருக்காது. நமது பிரதமர் நகைப்புக்குரிய அறிவியல் அறிக்கைகளை வெளியிடுவதைப் பார்க்கும் போது, நிறைய நேரம் உண்மையை அவர் மூடிமறைப்பதைப் பார்க்கும் போது, உண்மைகளை அவர் சிதைப்பதைப் பார்க்கும் போது, எதிரிகள் மீது குற்றம் சாட்டுகின்ற போது அவர் என்ன செய்கிறார் என்பதைப் பார்க்கும் போது, இந்த அளவிற்கு அரசியல் உரையாடல்கள் தரம் தாழ்ந்தவையாக ஒருபோதும் என் நினைவில் இருந்ததில்லை என்றே தோன்றுகிறது.
கரண் தாப்பர்: உங்களிடம் நான் பேச விரும்புவது முஸ்லீம்களுக்கு என்ன நடக்கிறது என்பதைப் பற்றி மட்டும் அல்ல என்பதால் இந்த கட்டத்தில் நமது விவாதத்தைச் சற்று விரிவுபடுத்திக் கொள்ளலாம். ஒட்டுமொத்த இந்தியாவிலும் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி உங்களிடம் பேச விரும்புகிறேன். உங்கள் மனைவி ஹிந்து. உங்கள் குழந்தைகள் நவீன, மதச்சார்பற்ற, முன்னோக்குப் பார்வையுடன் வளர்க்கப்பட்டுள்ளனர். இந்தியா இந்த மாதிரியான நாடாக மாறியதை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?
நசிருதீன் ஷா: அதைச் சொல்வது மிகவும் கடினம். அதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும் என்றாலும் நமது மத அடையாளங்களை முன்னிறுத்திச் செல்லாமல் இருப்பது முக்கியம் என்பதை உறுதியாக அறிந்திருக்கிறேன். நான் மதம் முக்கியத்துவம் பெறாத நாள் என்று ஒரு நாள் வரும் – நிச்சயமாக அது ஒரு கற்பனாவாத விருப்பமாக இருந்தாலும் – என்றே நம்புகிறேன். நாங்கள் திருமணம் செய்து கொள்ளவிருந்த போது, எங்கள் குடும்பத்தில் இருந்த பெரியவர் ஒருவரைக் கலந்தாலோசித்தோம். அவர் அப்போது எங்களிடம் ‘அரசியல் பிரச்சனை எதுவும் இருக்காது. ஆனால் வீட்டில் ஹிந்து மதம் இருக்குமா அல்லது முஸ்லீம் நெறிமுறை இருக்குமா, மது அனுமதிக்கப்படுமா, இறைச்சி சாப்பிடலாமா, ஹோலி கொண்டாடப்படுமா… என்பது போன்ற சமூகப் பிரச்சனைகள் நிச்சயமாக இருக்கும்’ என்று கூறினார்.
அரசியல் பிரச்சனை இருக்காது என்ற அவரது கூற்று முற்றிலும் தவறாகிப் போனது. எந்தவொரு சமூகப் பிரச்சனையும் எங்களுக்கு இருக்கவில்லை. எங்களுடைய நண்பர்கள் பலரும் மதங்களை மறுத்தே திருமணம் செய்து கொண்டுள்ளனர். சொல்லப் போனால் என்னுடைய பிள்ளைகள் ஒரே மதத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியை முதன்முதலாகச் சந்தித்த போது ஆச்சரியப்பட்டுப் போனார்கள். எங்கள் நண்பர்களில் பலரும் ஹிந்து-முஸ்லீம், முஸ்லீம்-கிறிஸ்துவர், ஹிந்து-கிறிஸ்துவர், யூதர்-சீக்கியர் அல்லது அது போன்று திருமணம் செய்து கொண்டவர்களே. அவர்களை அவ்வாறு வைத்திருப்பதற்கான நம்பிக்கையுடன் இருந்த நாடு. இது அப்படிப்பட்ட நாடாக இருந்தது என்று பிள்ளைகளிடம் சொன்னோம். எனக்கும் அதுபோன்ற நாடாக இருந்தது என்றே சொல்லப்பட்டிருந்தது.
பாகிஸ்தானுக்கு செல்வதற்கு எனது தந்தை மறுத்தார். அப்போது அவரது சகோதரர்கள், என் அம்மாவின் சகோதரர்கள் மற்றும் எனது குடும்பத்தைச் சேர்ந்த பலரும் இங்கிருந்து வெளியேறினர் என்ற போதிலும் என் தந்தை இங்கிருந்து செல்வதற்கு மறுத்து விட்டார். நமக்கு அங்கே எவ்வளவு எதிர்காலம் இருக்குமோ அதே அளவு இங்கேயும் இருக்கும் என்று நன்கு உணர்ந்தவராக அவர் இருந்தார். இன்றைய இந்தியாவில் இப்போது நான் குழந்தையாக இருந்திருப்பேன் என்றால் என்ன மாதிரியான எதிர்காலம் எனக்காகக் காத்திருக்கிறது என்று சொல்ல எனக்கு நிச்சயம் தெரிந்திருக்காது.
கரண் தாப்பர்: இன்றைய இந்தியா உங்களை வெளியேற்றியிருக்கலாம். உண்மையில் அது வெளியேற வேண்டுமென்று உங்களை விரும்பச் செய்திருக்கலாம்.
நசிருதீன் ஷா: அவ்வாறு செய்திருக்கலாம் என்றாலும் அவ்வாறு செய்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். ‘ஓடி ஒளிந்து கொள்’ என்பது என் வழி அல்ல. நான் அதைச் செய்யப் போவதில்லை. எத்தனை மிரட்டல்கள் வந்தாலும் அதுபற்றி எனக்கு கவலையில்லை. இங்கே எவ்வளவு அச்சுறுத்தல்கள் இருந்தாலும் அது பற்றி எனக்குக் கவலையில்லை. இங்கிருந்து கொண்டே நான் அதைச் சமாளிப்பேன். அதுபோன்று இருக்குமாறு என் குழந்தைகளுக்கும் கற்பிப்பேன்.
கரண் தாப்பர்: நசீர்! அனைவரும் சேர்ந்து ஈத், கிறிஸ்துமஸை ஒன்றாகக் கொண்டாடிய அறுபது, எழுபதுகளில் வளர்ந்தவர்கள் நீங்களும் நானும் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். மூன்று நாட்களுக்கு முன்பு உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டது. ஆனால் அசாமில் கிறிஸ்தவ கொண்டாட்டத்தில் பங்கேற்ற ஹிந்துக்கள் மீது பஜரங் தளம் வன்முறையில் ஈடுபட்டது. குர்கான் மற்றும் பட்டோடியில் பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்தவர்களால் பள்ளியில் சிறுவர்களுக்காக நடந்து கொண்டிருந்த அபிநய நாடக நிகழ்ச்சி சீர்குலைந்தது. அம்பாலாவில் தேவாலயங்கள் சேதப்படுத்தப்பட்டன. கர்நாடகாவில் கொண்டாட்டங்கள் நிறுத்தப்பட்டன. ஹிந்துக்கள் சகிப்புத்தன்மையற்றவர்களாக மாறி வருகிறார்களா என்ற கேல்விக்கு இல்லை என்று பதில் இங்கே இருக்குமானால் இதுபோன்ற சகிப்பின்மை எங்கே இருந்து வருகிறது?
நசிருதீன் ஷா: நான் சொன்னதைப் போல இது முற்றிலும் உருவாக்கப்பட்ட வெறுப்பு. அடுத்தவர் கொண்டுள்ள நம்பிக்கைகளை சகித்துக் கொள்ளாத தன்மை. மத நம்பிக்கை என்பது மிகவும் ஆபத்தான விஷயம். அது உங்களைத் தீவிர வன்முறைக்கு இட்டுச் செல்லக் கூடியது. தேவாலயங்கள், மசூதிகள் சேதப்படுத்தப்படுவதைப் போல யாராவது ஒருவர் கோவிலைச் சேதப்படுத்த முயன்றால் என்ன நடக்கும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள். அவ்வாறு சேதப்படுத்துபவர் மீது நடவடிக்கை எடுப்பதில் நீதி ஒருபோதும் தாமதிக்காது. ஆனால் மற்ற வழிபாட்டுத் தலங்களை சேதப்படுத்துபவர்களுக்கு அதுபோன்று எதுவும் நடக்காது. ‘உங்கள் கடவுளை விட என்னுடைய கடவுள் பெரியவர்’, ‘நீங்கள் நம்புவதை வணங்குவதற்கான உரிமை உங்களுக்குக் கிடையாது’ என்று சொல்வது உண்மையில் மிகவும் அபத்தமானது. நிலைமை அபத்தமான நிலையை எட்டிக் கொண்டிருக்கிறது.
கரண் தாப்பர்: அன்னை தெரசாவின் மிஷனரி ஆஃப் சேரிட்டிக்கு வெளிநாட்டில் இருந்து நிதி பெற அனுமதி இல்லை என்று சொல்லப்பட்டதை நேற்று பார்த்தோம். அது கிறிஸ்துமஸ் தினத்தன்று அறிவிக்கப்பட்டது. அதை தற்செயல் நிகழ்வு என்று நினைக்கிறீர்களா? தேதி, நேரம் போன்றவை திட்டமிட்டு தந்திரமாக நிகழ்த்தப்பட்டது என்று நினைக்கிறீர்களா? கிறிஸ்தவர்களுக்கான மோசமான செய்தியை கொண்டு சென்று சேர்ப்பதற்கான மற்றொரு வழியாகவே அது இருந்தது.
நசிருதீன் ஷா: அது நிச்சயமாக வேண்டுமென்றே செய்யப்பட்டதுதான். வேண்டுமென்றே செய்யப்படாமல் உள்ளதாக நிச்சயம் இருக்க முடியாது. கிரீன்பீஸ், அம்னெஸ்டி இந்தியா அமைப்புகளுக்கு வழங்கப்பட்டு வருகின்ற நிதி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. சமூகத்தின் நலனுக்காக உழைக்கின்ற பலருக்கும் எல்லா வகையிலும் தடை ஏற்படுத்தப்படுகிறது. அது ஏன் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. முற்போக்காகத் தெரியும் அனைத்தும் அரசுக்கு எதிரானவையாகவே தோன்றுகின்றன. அமைதியான தேவாலய பிரார்த்தனையைச் சீர்குலைக்கும் வன்முறைக் கும்பல் அங்கேயே அமர்ந்து பஜனை பாடத் தொடங்குகிறது என்ற இன்றைய உண்மை நினைத்துப் பார்க்கவே முடியாததாக உள்ளது. இதற்கு முன்பாக இதுபோன்று ஒருபோதும் நடந்ததே இல்லை. இந்தச் செயல்கள் வெளிப்படையாக மேலிருந்து ஒப்புதலைப் பெற்றே நடைபெறுகின்றன.
கரண் தாப்பர்: பெரும்பாலும் இதுபோன்ற செயல்கள் நிறுத்தப்படும் அல்லது கண்டிக்கப்படும். செயலில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படுவார்கள். ஆனால் இப்போது அப்படி எதுவுமே நடக்கவில்லை.
நசிருதீன் ஷா: அப்படி எதுவும் நடக்கவில்லை, நடப்பதற்கான வாய்ப்பில்லை. அது இன்னும் மோசமாகக் கூடிய வாய்ப்பே இருந்து வருகிறது.
கரண் தாப்பர்: யாருமே நினைத்துப் பார்க்க முடியாத அளவிலே நமது நாடு மாறிக் கொண்டிருப்பது மதத்தின் அடிப்படையில் மட்டுமல்ல. விமர்சகர்கள் மற்றும் கருத்து வேறுபாடு கொண்டவர்களுக்கு இப்போது என்ன நேர்கிறது என்பதைப் பாருங்கள். அவர்கள் மீது தேசத்துரோகக் குற்றம் சாட்டப்படுகிறது. பாராளுமன்றத்தைப் பாருங்கள். அது செயல்படாதது மட்டுமல்ல, பொருத்தமற்றதாகவும் ஆகிவிட்டது. ஊடகங்களைப் பாருங்கள் — பெரும்பாலானவை உறுமுகின்ற காவல் நாய்களாக இருப்பதைக் காட்டிலும் அரசின் மடியில் கிடக்கின்ற நாய்களாக இருக்கவே விரும்புகின்றன. நீதித்துறையும் கூட அரசாங்கத்தை சங்கடப்படுத்தக்கூடிய வழக்குகளை வேண்டுமென்றே, தெரிந்தே ஒத்தி வைக்கிறது. நம்முடைய இளமைக் காலத்தில் நம்மை மிகவும் பெருமைப்படுத்திய ஜனநாயகத்தின் மீது இந்தியாவிற்கு இருந்த உறுதி, அரசியலமைப்பு விழுமியங்களுக்கான நமது அர்ப்பணிப்பு போன்றவையெல்லாம் தோல்வியடையும் நிலையில் இருக்கின்றனவா?
நசிருதீன் ஷா: நிச்சயமாக அது சில பிரிவுகளில் அவ்வாறுதான் இருக்கின்றது. நீதித்துறை மிகப்பெரிய அழுத்தங்களின் கீழ் செயல்பட்டு வருவதால் அவை குறித்து அவ்வாறு தீர்மானிப்பது மிகவும் அவசரப்படுவதாக இருக்கும் என்றே நினைக்கிறேன். இப்போதெல்லாம் உச்சநீதிமன்றம் தன்னை உறுதிப்படுத்திக் கொண்டு வருவது மிகவும் நம்பிக்கைக்குரிய அறிகுறியாக இருக்கிறது.
அழிவும், இருளும் நம்மைச் சூழ்ந்துள்ள போதிலும் நம்பிக்கைக்குரிய அறிகுறிகளும் இருப்பதாகவே நான் கூறுவேன். ஜனநாயகத்திலிருந்து நாம் விலகிச் செல்கிறோம் என்று சொல்வது முன்கூட்டியதாகவே இருக்கலாம். சில சமயங்களில் நாம் ஜார்ஜ் ஆர்வெல்லின் 1984இல் வாழ்கிறோம் என்று தோன்றுகிறது. செய்தித்தாளைத் திறக்கும் போதெல்லாம் கள்ளச் சிரிப்புடன் அந்த ‘பிக் பிரதர்’ உங்களை வரவேற்பார். அங்கே ‘இரண்டு நிமிட வெறுப்பு’ அன்றாடம் கொண்டாடப்படுகிறது. ஃபேஸ்புக் மற்றும் அனைத்து சமூக ஊடக விஷயங்களிலும் அது நடந்து கொண்டிருக்கிறது. உண்மையாகச் சொல்வதென்றால் அது இரண்டு நிமிட வெறுப்பு அல்ல – இருபத்திநான்கு மணிநேர வெறுப்பு. அங்கே ‘பிக் பிரதரை நான் நேசிக்கிறேன்’ என்ற கீதம் தொடர்ந்து இசைக்கப்படுகிறது. குடிமக்கள் அனைவருக்கும் ‘நான் பிக் பிரதரை நேசிக்கிறேன்’ என்று சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுத்தப்படுகிறது. அது போல சில சமயங்களில் உணர்கிறேன் என்றாலும் அதைச் சொல்வது மிகவும் முன்கூட்டியதாகவும் தெரிகிறது. ஜனநாயகம் என்பது இந்தியாவைப் பொறுத்தவரை சமீபத்திய நிகழ்வாகவே இருக்கிறது. எழுபது ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா அரசமுறை கொண்டதாக இருந்தது. அதற்கு முன்பு மொகலாயர் காலத்திற்குப் பிறகு ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்ட மகாராஜாக்களின் கூட்டமாக இருந்தது. இந்த நாட்டில் ஜனநாயகம் தன்னுடைய வெற்றியைக் கண்டடைந்திருக்கிறது என்றும் நடந்து செல்கின்ற எந்தவொரு நபரும் தவறாக எடுத்து வைக்கின்ற காலடிகளில் அதுவும் ஒன்றாக இருக்கிறது என்றும் நான் நினைக்கிறேன்
கரண் தாப்பர்: முற்றிலும் சரி. அரசியல் நிர்ணய சபையில் ஆற்றிய உரையில் டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் ஜனநாயகத்தை மிகவும் மாறுபட்ட பரப்பில் இருக்கும் மேல் மண் என்பதாகக் குறிப்பிட்டார். நான் முடிப்பதற்கு முன்பாக நீங்கள் பிக் பிரதர் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஒரு கணம் அதைப் பற்றி பேச விரும்புகிறேன். இப்போது வெளிப்படுகின்ற ஆளுமை வழிபாட்டில் ஓர் ஒளிவட்டம் உள்ளது. பிரதமரைக் கண்டு அவரது சொந்தக் கட்சியே பயப்படுகிறது. அவரை விமர்சித்தால் உங்கள் மீது ட்ரோல்களின் பட்டாளமே வந்து இறங்குகிறது. தன்னை மூன்றாவது நபராக மட்டுமே அவர் குறிப்பிட்டுக் கொள்வதை நான் கவனித்திருக்கிறேன்.
நசிருதீன் ஷா: ஆமாம். அது முரணாக இருக்கிறது. உங்களுடைய வார்த்தைகள் மீதே மிகப் பெரிய மதிப்பீட்டைக் கொண்டிருப்பது, முகஸ்துதியால் எளிதில் பாதிக்கப்படுவது, தவறாக பல விஷயங்களையும் பேசுவது, தனக்குக் கல்வி இல்லை என்று வெளிப்படையாகப் பெருமை பேசுவது – பிரதமர் ஆவதற்கு முன்பு அவர் இதைச் செய்திருந்தார். அது வீடியோவில் உள்ளது. அவர் அதில் ‘நான் எதுவும் படிக்கவில்லை’ என்று கூறியிருக்கிறார். அந்த நேரத்தில் அது அவைவரையும் வசீகரமான பேச்சாகக் கருதப்பட்டது. ஆனால் அவர் சொன்ன, செய்திருக்கும் விஷயங்களைக் கொண்டு பார்க்கும் போது இப்போது அது நம்மையெல்லாம் அச்சுறுத்துவதாக இருக்கிறது. எல்லா இடங்களிலும் தானே மையமாக இருக்க வேண்டும் என்ற அவரது ஆசை, ‘M’ என்ற எழுத்தில் தொடங்கும் மற்றொரு வார்த்தைக்கு மிக அருகே உள்ளது. அதை நான் சொல்லமாட்டேன். ஆனாலும் அவர் ஒரு ராஜாவாக, கடவுள் போன்ற அந்தஸ்துக்கு உயர்த்தப்படுகிறார். நம்மில் எவருக்குமே அது நல்ல விஷயமாக இருக்க முடியாது.
கரண் தாப்பர்: இந்த நேர்காணலை இன்னும் ஒரே ஒரு கேள்வியுடன் முடிக்கிறேன்: இந்தியா எப்படியெல்லாம் மாறி வருகிறது என்பது பற்றி சிந்திக்கும் போது, உங்களிடம் தோன்றுகின்ற உணர்வுகளை நீங்கள் எவ்வாறு விவரிப்பீர்கள்? வருத்தப்படுகிறீர்களா? ஏமாற்றமடைந்து, மனச்சோர்வடைந்திருக்கிறீர்களா அல்லது விரக்தி உணர்வைப் பெறும் அளவிற்குச் சென்றிருக்கிறீர்களா?
நசிருதீன் ஷா: விரக்தி உணர்வை நான் நிராகரிக்கின்றேன். ஏனென்றால் அது எதற்கும் வழிவகுத்துத் தரப் போவதில்லை. சோகமாக, கோபமாக உணர்கிறேன்; இவை தானாகச் சரியாகி விடும் என்று நம்புகின்ற அளவிற்கு நம்பிக்கையுடையவன் நான் இல்லை என்றாலும் ‘அகாதிஸ்ட்’ என்று அழைக்கப்படுகின்ற வகையில் இருப்பவனாக – காலம் வட்டங்களில் நகர்வதாக இருப்பதால், விஷயங்கள் சரியாக இல்லை என்றாலும் இறுதியாக பழைய நிலைக்குத் திரும்பி விடும் என்று நம்புகின்றவனாக இருக்கிறேன். எந்தவொரு கொடுங்கோலரும் இறுதியில் கவலைப்படும் நிலைக்கே வந்து சேர்ந்திருக்கின்றனர். அந்தச் சுழற்சி இந்தியாவிலும் விரைவிலேயே முழுவதுமாக வரும். அதைப் பார்க்க நான் இல்லாமல் போயிருக்கலாம். தாலி கட்டுவது போன்ற மூடநம்பிக்கைகளை நம்புகின்ற தலைவர்களுடன் நாம் இன்னும் சில வருடங்கள் சேர்ந்து வாழ வேண்டியிருக்கலாம். ஆனாலும் ராட்டினம் முழுவதுமாகச் சுழன்று பழைய நிலைக்கு வரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
கரண் தாப்பர்: ஒருவேளை அது ஆறுதல்படுத்திக் கொள்ளும் வகையில் இருக்கலாம். பேச்சுவழக்கில் சொல்வது போல் ‘இதுவும் கடந்து போகலாம்’. ஆனால் இருக்கின்ற ஒரே பிரச்சனை என்னவென்றால், இப்போதைய நிலைமை எவ்வளவு காலம் நீடிக்கும், எப்போது முடியும் என்று நமக்குத் தெரியாது. நசிருதீன் ஷா, இந்த நேர்காணலுக்கு மிக்க நன்றி. கவனமாக இருங்கள். பாதுகாப்பாக இருங்கள். புத்தாண்டு வாழ்த்துகள்.
நசிருதீன் ஷா: புத்தாண்டு வாழ்த்துகள், கரண். வாழ்த்துகள்.
https://thewire.in/communalism/full-text-naseeruddin-shah-karan-thapar-interview
நன்றி: வயர் இணைய இதழ்
தமிழில்: தா.சந்திரகுரு
பாசிஸ்ட்டுகள் வன்முறைக்கு அழைப்புவிடுத்திருக்கிறார்கள் – தமிழில்: ச.வீரமணி
பாசிஸ்ட்டுகள் வன்முறைக்கு அழைப்புவிடுத்திருக்கிறார்கள் – தமிழில்: ச.வீரமணிஹரித்வாரில் டிசம்பர் 17-19 தேதிகளில் நடைபெற்ற சாமியார்களின் நாடாளுமன்றத்தில் முஸ்லீம்களைத் தாக்கி, அவர்களை ஒட்டுமொத்தமாகக் கொலை செய்து அவர்களை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று சாமியார்கள் வெறுப்பை உமிழ்ந்து இரு வாரங்களுக்கும் மேலாகியும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. முதலாவதாகப் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் ஒருவரின் பெயர் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. அவரும் யார் என்றால், முஸ்லீம் மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறியவராவார். பின்னர், மற்றொரு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதில் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்த யதி நரசிங்கானந்த் உட்பட நால்வரின் பெயர்கள் இடம் பெற்றிருக்கின்றன.
ஜனவரி 1 அன்று உத்தர்காண்ட் காவல்துறை இது தொடர்பாகப் புலன் விசாரணை மேற்கொள்வதற்காக ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டிருப்பதாக அறிவித்திருந்தது. இதற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரியிடம் முஸ்லீம்களுக்கு எதிராக வெறுப்பைக் கக்கிய நபர்கள் கைது செய்யப்படுவார்களா எனக் கேட்டபோது, அவர் புலன்விசாரணையின்போது உருப்படியான சாட்சியம் எதுவும் காணப்பட்டால் பின் கைதுகள் மேற்கொள்ளப்படலாம் எனத் தெரிவித்துள்ளார்.
சாமியார்கள் முஸ்லீம்களைக் ஒட்டுமொத்தமாகக் கொலை செய்திட வேண்டும் என்று பேசியது தொடர்பாக ஏராளமான சாட்சியங்கள் சமூக வலைத்தளங்களில் வலம்வந்துகொண்டிருக்கின்றன. அந்த நிகழ்வு நேரடியாக ஒளிபரப்பப்பட்டது, அந்த சமயத்தில் சாமியார்கள் கக்கிய வெறுப்பு உரைகள் விரிவான அளவில் சுற்றுக்கு விடப்பட்டிருக்கின்றன. அங்கே பேசிய சாமியார்கள் அனைவருமே ஆயுதங்களை ஏந்த வேண்டும் என்றும், முஸ்லீம்களைக் கூண்டோடு கொலை செய்திட வேண்டும் என்றும், அவர்கள் குடியிருக்கும் கிராமங்களை பூண்டோடு அழித்திட வேண்டும் என்றும் பேசியிருக்கிறார்கள். ஒரு சாமியார், தனக்கு வாய்ப்பு கிடைத்தால் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கைக்கூட துப்பாக்கியால் சுட்டுக் கொல்வேன் என்று கொக்கரித்தார்.
இவர்களின் பேச்சுக்கள் “வெறுப்பு உரைகள்” என்று மட்டும் அமைந்திடவில்லை. மாறாக, அவை முஸ்லீம்களுக்கு எதிராக இனப்படுகொலை செய்திட வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட வேண்டும் என்று வெளிப்படையாகவே தூண்டும் விதத்தில் அமைந்துள்ளவைகளுமாகும். ஆனாலும், உத்தர்காண்ட் காவல்துறை இன்னமும் இந்த சாமியார்களின் பேச்சுகளுக்கு எதிராக வலுவான சாட்சியங்களைத் தேடிக் கொண்டிருக்கிறதாம். இவர்கள் பதிவு செய்திருக்கும் முதல் தகவல் அறிக்கையில் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 153-ஏ பிரிவு மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது அவர்கள் மதத்தின் அடிப்படையில் இரு குழுக்களுக்கு இடையே வெறுப்பு உணர்வை அல்லது குரோதத்தை அல்லது ஒற்றுமையின்மையைத் தூண்டும் விதத்தில் நடந்துகொண்ட குற்றத்தை மட்டும் குறிக்கிறது. ஆனால், இவர்கள் புரிந்துள்ள குற்றம் மிகவும் அதிகமானவைகளாகும்.
சாமியார்கள் நாடாளுமன்றத்தை நடத்தியவர்களோ, அதில் பங்கேற்றவர்களோ இவ்வாறாக தங்கள் மீது முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டிருப்பதுபற்றி, கிஞ்சிற்றும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இந்த நிகழ்வு நடைபெற்றதற்கு ஒருவாரம் கழித்து, டிசம்பர் 28 அன்று, பல மடாலயங்களைச் சேர்ந்த சாமியார்களின் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் 21 சாமியார்களைக் கொண்ட கேந்திரமான குழு (core committee) ஒன்று ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. சாமியார்கள் நாடாளுமன்றத்தை நடத்திய நரசிங்கானந்த் மற்றும் ஐந்து பேர் இதில் இடம் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் இஸ்லாமுக்கு எதிரான தங்கள் போராட்டத்தைத் தொடர்வது எனத் தீர்மானித்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, அவர்கள் குரானுக்கு எதிராகவும், நகரில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் முஸ்லீம் மௌலானாக்கள் மற்றும் இமாம்களில் பலருக்கு எதிராகவும் ஹரித்வார் கோட்வாலி காவல்நிலையத்தில் புகார் பதிவு செய்யும் அளவுக்கும் சென்றிருக்கிறார்கள்.
சாமியார்கள் நாடாளுமன்றம் என்பது இந்தியாவை “இந்து ராஷ்ட்ரமாக” மாற்றுவதற்கான திசைவழியில் ஓர் அடி எடுத்து வைத்திருப்பதாகவே அவர்கள் கூறுகிறார்கள். மேலும் அவர்கள், இஸ்லாமுக்கு எதிராகப் போராட அறைகூவல் விடுத்திருப்பதுடன் மடாலயங்கள் இந்து தர்மத்தைப் பாதுகாப்பதற்காக ஆயுதந்தாங்கிய குழுக்களுக்கு ஆயுதப்பயிற்சி அளிப்பதற்கான மையங்களாகவும் இருந்திடும் என்றும் அறிவித்திருக்கிறார்கள்.
நாட்டில் தற்போதுள்ள சட்டத்தின்படி, இவ்வாறு அழைப்பு விடுப்பதும், வன்முறையைத் தூண்டுதல் என்பதும் தேசத்துரோகக் குற்றம் என்பது உச்சநீதிமன்றத்தின் தேசத்துரோகக் குற்றப்பிரிவு குறித்து அளித்துள்ள தீர்வறிக்கைமூலம் தெளிவான ஒன்றாகும்.
ஹரித்வார் சம்பவம் சில விஷயங்களைத் தெளிவுபடுத்தி இருக்கிறது. முஸ்லீம்களுக்கு எதிராகப் பேசியதுடன், அவர்களை அழித்து ஒழித்திட வேண்டும் என்றும், அவர்களுக்கு எதிராக வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்த, காவி உடை தரித்த ஆண்களும், பெண்களும் ஏனோதானோ பேர்வழிகள் அல்ல. அவர்கள் அனைவருமே ஆர்எஸ்எஸ்/பாஜக உட்பட இந்துத்துவா சக்திகளின் மிக முக்கியமான நபர்களாவார்கள். அவர்களுக்கு அரசின் ஆதரவும் அரவணைப்பும் இருந்து வருவது தெளிவாகவே தெரிகிறது. இதனை, உத்தர்காண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, சாமியார்கள் நாடாளுமன்றத்தை நடத்திய ஸ்வாமி பிரபோதானந்த் என்பவர் கால்களில் விழுந்து வணங்கியதிலிருந்து நன்கு அறிந்துகொள்ள முடியும்.
ஹரித்வார் நிகழ்வு, ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்களைச் சேர்ந்த தலைவர்களின் மதவெறிப் பேச்சுக்களின் ஒரு பகுதியேயாகும். இப்போது இது அதிகமாகி இருக்கிறது. உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், முஸ்லீம்களுக்கு எதிராகக் குரைத்துக்கொண்டிருக்கும் பேச்சுக்கள் அதிகரித்திருப்பதும், பாஜக நாடாளுமன்ற உறுப்பினரான தேஜஸ்வி சூர்யா சமீபத்தில் மடாலயங்களையும், கோவில்களையும் இஸ்லாமுக்கும், கிறித்தவத்திற்கும் மதம் மாறியவர்களை மீளவும் இந்துயிசத்திற்குக் கொண்டுவருவதற்கான இடங்களாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பேசியிருப்பதும் இவற்றின் தொடர்ச்சியேயாகும். இவை, முஸ்லீம்களுக்கு எதிரான “வெறுப்புப் பேச்சுக்கள்” மட்டுமல்ல.
இவற்றின் அடிப்படையில் நாள்தோறும் நாட்டின் பல பகுதிகளில் முஸ்லீம்களுக்கு எதிராகவும், கிறித்தவர்களுக்கு எதிராகவும் நேரடியாகவே வன்முறைத் தாக்குதல்களில் ஈடுபடுவதும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் தெருக்களில் கூவி விற்பனை செய்யும் முஸ்லீம்கள், ஊர் ஊராகச் சென்று விற்பனை செய்யும் முஸ்லீம்கள், ஆட்டோ-ரிக்சா ஓட்டும் முஸ்லீம்கள் வன்முறைத் தாக்குதல்களுக்கு உள்ளாவதும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.
கர்நாடக மாநிலத்தில் கிறித்தவர்கள் தாக்கப்படுவதும், அவர்களின் தேவாலயங்கள் தாக்கப்படுவதும் நாளும் நடைபெறும் நிகழ்வுகளாக மாறிக்கொண்டிருக்கிறது.
பஜ்ரங் தளம், விசுவ இந்து பரிசத் மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின்கீழ் இயங்கும் இதர பிரிவுகள் பல, சாமியார்கள் நாடாளுமன்றத்தை நடத்திய சாதுக்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் பாஜக-வின் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் – இவர்கள் அனைவருமே இந்துத்துவா சேனையின் பல அங்கங்களாவார்கள். இவர்கள் அனைவருமே அரசமைப்புச்சட்டத்தை சீர்குலைத்திடும் நடவடிக்கைகளிலும், தாங்கள் ஆளும் மாநிலங்களில் இந்து ராஷ்ட்ரத்தை அமல்படுத்துவதற்கான வேலைகளில் வெறித்தனமாக ஈடுபட்டுக் கொண்டுமிருக்கிறார்கள்.
இந்துத்துவா பாசிஸ்ட்டுகள் நாட்டிற்கு ஆபத்தாக இராட்சதத்தன்மையுடன் வளர்ந்து கொண்டிருப்பதை, நாட்டிலுள்ள மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளில் சில இன்னமும் சரியானமுறையில் புரிந்துகொள்ளாமல் இருப்பது வருத்தத்திற்குரியதாகும். பாசிஸ்ட்டுகளின் வெறித்தனமான நடவடிக்கைகளுக்கு எதிராக சிலர் அறிக்கை விடுவதுடன் தங்கள் வேலையை முடித்துக்கொள்கிறார்கள். உத்தரப்பிரதேசத்திலும் உத்தர்காண்டிலும் சட்டமன்றத் தேர்தல்கள் விரைவில் நடைபெறுவதையொட்டி இதை ஒரு பிரச்சனையாக பார்க்காமல் தவிர்க்கவே அவர்கள் விரும்புகிறார்கள்.
இன்றைய நிலையில் பாசிஸ்ட்டுகளின் நடவடிக்கைகளுக்கு எதிராக வெறுமனே கண்டனத் தீர்மானங்கள் மட்டும் போதுமானதல்ல. இவர்களின் நடவடிக்கைகளுக்கு எதிராக அனைவரின் ஒன்றுபட்ட நடவடிக்கையும் அவசியத் தேவையாகும். பாஜக ஆளும் மாநிலங்களில் பாசிஸ்ட் இந்துத்துவா அமைப்புகள் வெறித்தனமான நடவடிக்கைகளில் ஈடுபடும்போது, இவர்களின் வெறித்தனமான நடவடிக்கைகளை, ஒன்றுபட்டு எதிர்த்து முறியடித்திட வேண்டியது, அனைத்து மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.
(ஜனவரி 05, 2022)
நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி