தொடர் 26 : பாடல் என்பது புனைபெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 26 : பாடல் என்பது புனைபெயர் – கவிஞர் ஏகாதசி




நண்பர் பாடலாசிரியர் ந.முத்துக்குமார் அவர்கள் இயக்குநர் பாலுமகேந்திரா அவர்களின் சிஸ்யர்களில் ஒருவர். நானும் அவரும் பேசும்போதெல்லாம் அவர் அடிக்கடி, கதையை தயார் செய்து தயாரிப்பாளர்களிடம் சொல்லி இயக்குநர் ஆகிடு ஏகாதசி, நாற்பது வருசம் பாட்டெழுதி சம்பாதிக்கிற பணத்த ஒரு படத்தில் சம்பாதிச்சிடலாம் என்பார். அவர் சொன்னது எத்தனை அனுபவப்பூர்வமானது என்பதை நான் இன்றுவரை உணர்ந்தவண்ணம் உள்ளேன். இங்கே “ஒரே படத்தில் பெரிதாக சம்பாதித்து விடலாம் என்பதை” அவ்வாறாக எடுத்துக் கொள்ளாமல், சம்பள விசயத்தில் பாடலாசிரியர்களுக்கு இழைக்கப்படும் வதைகளைத் தான் புரிந்துகொள்ள வேண்டும்.

இரண்டாயிரம் ரூபய்க்கு ஒரு பாடலை எழுதக்கேட்டு நாளொன்றுக்கு ஐயாயிரம் ரூபாயிக்கு மது அருந்திக் கொண்டாடும் மகான்களே இங்கு அதிகம். இது எனக்கு முதல் படம் பார்த்துச் செய்யுங்கள் அடுத்த படத்தில் நீங்கள் கேட்கிற சம்பளத்தைக் கொடுக்கிறேன் சார் என்பார்கள். நாமும் எழுதிவிடுகிறோம். அவர்கள் அடுத்த படத்தில் அள்ளிக் கொடுப்பார்கள் என்பதை நம்பி அல்ல நமக்கு வயிற்று வலி என்பதால் ஒண்ணாரூபாய்க்கும் எழுத ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கிறது பல நேரங்களில். அதே சமயத்தில் அள்ளிக் கொடுப்பதாக சொன்னவர்கள் அடுத்த படத்தில் நேராக முன்னணி பாடலாசிரியர்களிம் போய் நின்று விடுகிறார்கள். அவர்கள் இரண்டாவது படத்திலேயே பெரும் கூட்டணியோடு கைகோர்த்துக் கொள்கிறார்கள். ஆனால் மூன்றாம் நிலைப் பாடலாசிரியர்கள் முதல் பட இயக்குநர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் முட்டுக் கொடுத்தபடி மட்டுமே வாழ்வைக் கடக்கிறார்கள்.

பெரும்பாலோனோர் பாடலை எழுதி வாங்கிக் கொண்டு. சம்பளத்தை பாடல் பதிவின் பின் கொடுப்பதையே விதிமுறையாகக் கையாளுகிறார்கள். பாடல் பதிவு நடைபெற இரண்டு வருசம் ஆனாலும் நாம் காற்றைக் குடித்துக் கொண்டு காத்துக்கொண்டிருக்க வேண்டும். அதிலும் பாடலை முடித்துக் கொடுத்தபின் படம் நின்றுவிட்டால் நாமம் தான் போடுவார்கள் வேறு வழியில்லை. அவரவர் வேலை முடிந்துவிட்டால் அவரவருக்கான ஊதியத்தை கொடுத்துவிட வேண்டும். ஒரு பாடலாசியருக்கு ஒப்பந்தம் செய்யும் போது ஒருபகுதி முன்பணமும் பாடலை எழுதித்தந்து இறுதிசெய்தபின் மறுபகுதிப் பணமும் கொடுத்திட வேண்டும் என்பதுதான் என்னைப்போன்ற பாடலாசிரியர்களின் விருப்பமாக இருக்கிறது. இதுதான் சரியான விசயமும் கூட. ஆனால் ஒரு திரைப்படம் தொடங்கும்போது எல்லாருக்கும் முன் பணம் கொடுத்து ஒப்பந்தம் செய்வார்கள். பாடலாசிரியர்களை மட்டும் பந்தாடுவார்கள். அதே சமயம் கவிஞர்களை மரியாதையோடும் அன்போடும் நடத்துபவர்களும் உண்டு. நான் சம்பளம் பெறாமல் பாடல் எழுதி பாட்டும் படமும் வெளியாகாமல் போனவை நூற்றுக்கும் மேல்.

இத்தனை காயங்களுக்குப் பிறகு நாம் முன் பணம் பெற்றுக்கொண்டே பாடல் எழுதவேண்டும் என்கிற முடிவிற்கு வரவேண்டியுள்ளது. இதில் பலருக்கும் என் மீது தவறான அபிப்ராயம் வந்துவிடுவதை நான் என்ன செய்ய முடியும். அப்படித்தான் சமீபத்தில் ஒரு பெரிய படம். அதன் மேனேஜர் பாடல் எழுதக் கேட்டார். ஒரு சம்பளம் முடிவு செய்து பின் பாடலுக்கான சூழலை இயக்குநரிடம் கேட்டுவிட்டு மெட்டை வாங்கிக் கொண்டு வந்து எழுதத் தொடங்கும் முன் முன்பணம் கேட்டேன். அதற்கு அவர் முன் பணம் கொடுத்தால்தான் எழுதுவீங்களா என்றார். நானோ, நான் அப்படிச் சொல்லவில்லை முன் பணம் பெற்றுக் கொண்டால் இந்த படத்தில் நான் பாடல் எழுதுவதற்கான சாட்டிசியமும் உத்தரவாதமுமாகிவிடும் என்றேன். அதற்கு அவர் நீங்கள் பாடல் எழுதுவதற்கு முன் முன்பணம் கேட்பது அதிர்ச்சியாக இருக்கிறது என்றார். பிறகென்ன, நீங்கள் அதிர்ச்சியோடே இருங்கள் எனச் சொல்லிவிட்டு என் முடிவில் மாற்றமின்றி முன் பணம் பெற்ற பின்னரே தான் பாடல் எழுதிக் கொடுத்தேன். நானாவது முன்பணம் பெற்று எழுதுகிறேன். ஆனால் அய்யா கவிஞர் வாலி அவர்கள் முழுப் பணத்தையும் பெற்றுக்கொண்ட பின்னரே பேனாவையே திறப்பார்.

சில இயக்குநர்கள் கதை தயாராவதற்கு முன்னரே பாடலை முடித்துவிடும் முனைப்பில் இறங்கி நம்மை வதைப்பதுமுண்டு. அது அவரவர் இஷ்டம் எனினும் அதை செய்துகொடுக்க இயலாத சூழலில் நம் மீது உமிழப்படும் பொல்லாப்பு ஏற்புடையதல்ல தானே. இதில் அம்மன் ஆல்பத்தையும் கம்யூனிஸ்ட் அல்லாத கட்சி ஆல்பத்தையும் தவிர்த்துவிடுகிறேன். அதே சமயம் விசய ஞானமுள்ள இளம் இயக்குநர்கள் குறும்படமோ பெறும்படமோ நேர்மையோடு எடுக்க முற்படுகிறபோது என் ஒத்துழைப்பு அவசியம் இருக்கும்.

நான் திரைப்படத்திற்காக எழுதுகிற பாடல்களை இணைய தளத்தில் தேடினால் கிடைத்துவிடும். ஆனால் எல்லா தனியிசைப் பாடல்களையும் இதுபோல் இணையதளத்தில் கண்டுபிடிக்க முடியாது. பல பாடல்கள் மேடையிலேயே நின்றுவிடுகிறது. எல்லா தனியிசைப் பாடல்களையும் பதிவு செய்தல் என்பது அத்தனை சுலபமான காரியமல்ல. அதற்கு பெரும் பொருளாதாரத் தேவை இருக்கிறது. அப்படியே செலவு செய்து தயாரித்தாலும் பிஸ்னஸ் சிக்கல் இருக்கிறது. அதுவும் போக ஒரு திரைப்படப் பாடல் என்பது அந்த குறிப்பிட்ட படத்தின் கதைக்காக எழுதப்படுவது தான். ஆனால் தனியிசைப் பாடல்கள் பலகோடி கதைகளைக் கொண்ட மனித சமூகத்திற்காக எழுதப்படுவது. திரைப்பாடப் பாடல்கள் மேல் பொது மக்களுக்கு பெரிதும் ஈர்ப்பிருப்பினும் இது மாதிரி சந்தர்ப்பத்தில் நான் தனியிசைப் பாடல்களின் வரிகளைப் பதிவு செய்ய தவறவிடக்கூடாதென விரும்புகிறேன்.

Paadal Enbathu Punaipeyar Webseries 26 Writter by Lyricist Yegathasi தொடர் 26 : பாடல் என்பது புனைபெயர் – கவிஞர் ஏகாதசிசுகந்தி என்கிற பாடல் பாடுகிற ஒரு பெண்ணை விருதுநகர் மாவட்டத்தில் நடந்த ஒரு தமுஎகச மாநில மாநாட்டில் சந்தித்தேன். அந்தப் பெண் தோழர் தபேலா குமாரின் மனைவி என்றறிந்தேன். அவர் என்னுடை “மல்லிக் கொடியே மகனே ராசா” என்கிற சோகத் தாலாட்டை என் முன் பாடிக் காட்டினார் வியந்தேன். குரலில் அத்தனை இனியை. இனிக்க இனிக்க சிலர் பேசுவர். இவர் இனிக்க இனிக்க பாடுபவர். அதற்கு முன் அப்பாடலை திருவுடையான் மட்டுமே பாடினார். இவர் அவருக்கு இணையாகப் பாடினார். திருவுடையான் போட்ட மெட்டை அவரைத் தவிர வேறொருவர் பாடுவது சிரமம். அதை இவர் செய்தது சவாலான விசயம். அதன் பிறகு சுகந்தியோடு தோழமை இன்றுவரை நீடிக்கிறது. எனது பல தனியிசைப் பாடல்களை பாடியுள்ளார். ஏர் டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் டாப் 10 வரை வந்து உலகத் தமிழர் நெஞ்சங்களில் இடம் பிடித்தார். இப்போது திரைப்படங்களிலும் மேஸ்ட்ரோ இளையராஜா உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர் பலரின் இசையிலும் பாடிக் கொண்டிருக்கிறார்.

ஒரு நாள் திடீரென அழைத்து தோழர் தமிழ் தேசிய அமைப்பொன்றின் மேடை. தமிழரின் நிலை குறித்து அவசரமாக ஒரு பாடல் வேண்டும் எனக்கேட்க அடுத்த சில மணித்துளிகளில் எழுதி அனுப்பி வைத்தேன். அதற்கு மிகச் சிறந்த மெட்டொன்றை அமைத்து அன்று மாலையே பாடி அசத்தினார். அந்த பாடலும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

பல்லவி

தொண்டக் குழிக்குத் தண்ணி கேட்டோம்
தப்பிருக்கா – அட
கண்டவங் கிட்ட மிதிவாங்குறோமே – தமிழா
துப்பிருக்கா

எத்தனை மறியல் எத்தனை மரணம்
நல்லது நடந்திருக்கா
மத்திய மாநில சர்க்காருக்கு
மான ரோசமிருக்கா

சரணம் – 1

உலகத்திலே மூத்த குடி
நம்ம தானடா – இப்ப
உலை வைக்கத் தண்ணி இல்ல
உண்மை கேளடா

நடுவர் மன்றத் தீர்ப்பைத் தானே
நாடு மதிக்கல – நம்ம
ஏழை சனங்க வயித்துக்குத்தான்
சோறு கிடைக்கல

கோடி கோடியா அடிச்ச மந்திரி
குதூ கலத்தில – எங்க
விவசாய சனத்தப் பாரு
கோ வணத்தில

சரணம் – 2

இந்தியாவ கூறுபோட்டு
விக்கத் திட்டமோ – பங்கு
தண்ணியத்தான் குடுத்தாத்தான்
என்ன நட்டமோ

வானம் பூமி காத்தும் மழையும்
யாருக்குச் சொந்தம் – இத
கேக்க நாதி இல்லாமத்தான்
ரோட்டுக்கு வந்தோம்

அழுத கண்ணீர சேத்திருந்தா
அணையக் கட்டிருப்போம் – அட
மூணு போகம் தானியத்த
வெளைய வச்சிருப்போம்

தொடர் 24 : பாடல் என்பது புனைபெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 24 : பாடல் என்பது புனைபெயர் – கவிஞர் ஏகாதசி




2004 ஆம் ஆண்டு ஏவிஎம் ஸ்டுடியோவில் “சண்டக்கோழி” படம் சூட்டிங் நடந்துகொண்டிருந்தது. அப்போதெல்லாம் ஏவிஎம், பிரசாத் போன்ற ஸ்டுடியோக்களுக்குள் அத்தனை சுலபத்தில் நுழைந்துவிட முடியாது. செக்குரிட்டி தொரத்திவிடுவார் அல்லது ஆயிரத்து எட்டுக் கேள்விகள் கேட்பார். அத்தனைக்கும் பதில் தெரிந்திருக்கவேண்டும். ஒரு மார்க் மிஸ் ஆனாலும் உள்ளே செல்ல முடியாது. அல்லது டிப்டாப் ட்ரெஸ் அணிந்து யாரையும் கண்டு கொள்ளாமல் விருவிருவென நடந்தால், விஐபியென நினைத்து விட்டுவிடுவார்கள். சும்மாவே நம்ம ட்ரெஸப் பாத்து நாய் குரைக்குது இதுல எங்க போறது விஐபி கெத்துக்கு. இந்தக் கோடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கைப்பேசிக் காலம் வந்தது. ஸ்டுடியோவுக்குள் போகும்போதே ஏதோ முக்கியமான கால் பேசுவதுபோல் ஆக்ட் பண்ணியபடி உள்ளே சென்றால் நம்மை வழிமறிக்க மாட்டார்கள். இப்போது வரை நான் இந்தக் கொள்கையைத் தான் பின்பற்றுகிறேன். ஏனென்றால் அவர்களைப் பொறுத்தவரை விஐபி என்றால் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் மட்டும் தான். அது ஒரு பஞ்சாயத்துக் காட்சி ராஜ்கிரண் நடித்துக் கொண்டிருந்தார். ஒரு மனிதர் பம்பரம் போல் சுற்றிக்கொண்டிருந்தார். அவர் தான் இயக்குநர் லிங்குசாமி என்பது நான் ஏற்கனவே அறிந்ததுதான், ஆனால் அவர் வேலை செய்யும் விதத்தைப் பார்த்ததில் எனக்கு அவர்மேல் இருந்த மரியாதை மேலும் கூடியது. விசால் நாயகனாக நடித்த அந்தப் படம் ரிலீஸ் ஆகி சக்கைப் போடு போட்டது. நண்பர் கவிஞர் ந. முத்துக்குமார் எழுதிய “தாவணி போட்ட தீபாவளி வந்தது என் வீட்டுக்கு” பாடல் பெரிய ஹிட்.https://bookday.in/paadal-enbathu-punaipeyar-webseries-24-writter-by-lyricist-yegathasi/

இயக்குநர் லிங்குசாமி என்பவருக்குள் மிகச் சிறந்த கவிஞர் இருப்பார். மிகச் சிறந்த ரசிகர் இருப்பார். அவருக்கு திரைப்பட நண்பர்களுக்கு இணையான இலக்கிய நண்பர்கள் உண்டு. இவ்விரண்டுக்கும் இணையான சாமானிய மனிதர்களின் நட்பும் உண்டு. அத்தனை எளிமை. அத்தனை இனிமை. ஒரு நாள் அவரிடமிருந்து ஓர் அழைப்பு வந்தது. நான் எனது ஹைக்கூ நூலான “ஹைக்கூ தோப்பு” ஐ அவருக்குக் கொடுக்க எடுத்துக் கொண்டு அலுவலகம் சென்றேன். அவரை நான் சந்திக்கிறவரையிலும் எனக்குள் முதன் முதலில் நான் அவரை நேரில் பார்த்த “சண்டக்கோழி” படப்பிடிப்பும் அவரது பரபரப்பும் மட்டுமே வந்து வந்து போனது. அலுவலகம் கலையால் நெய்யப்பட்டிருந்தது. அவரது அழகிய மனம் போல் அலுவலகமும் இருந்தது. அடுத்தபடியாக அவரின் மூன்றாம் கை இயக்குநர் கவிஞர் பிருந்தாசாரதி அண்ணன் அலுவலகத்தை அலங்ரித்துக் கொண்டிருந்தார்.

எனது “ஆத்தா ஓஞ்சேல” பாடலை மனம் திறந்து பாராட்டினார் என்று மட்டும் சொல்லிவிட முடியாது. உச்சபட்ச பாராட்டுக்குமேல் ஒன்றிருந்தால் எப்படி இருக்கும் அப்படி இருந்தது எனக்கது. பின்பு எனது சில திரைப்பாடல்கள் மற்றும் சில ஹைக்கூ கவிதைகளை சிலாகித்தார். நான் எனது நூலை அவருக்களித்தேன். அவர் அவரது “லிங்கூ” எனும் அழகிய நூலை எனக்களித்தார். பல பேச்சுக்கள் ஓடின. இறுதியாக அழைத்த விசயம் சொன்னார், நான் தற்போது இயக்கும் படத்தை முடித்துவிட்டு “சண்டக்கோழி – 2” எடுக்கும் திட்டம் இருக்கு,. அதில் நீங்கள் ஒரு பாடல் எழுதவேண்டும் என்றார். என் மனம் அப்போதே என் காலில் கத்தியைக் கட்டி களம் இறங்கத் தயாராகியது.

ஏறத்தாழ ஓராண்டுக்குப் பிறகு அவரிடமிருந்து அழைப்பு வந்தது. “சண்டகாகோழி – 2” தொடங்கியாச்சு வாருங்கள் யுவன் சங்கர் ராஜா ஸ்டுடியோ என்றார். அது ஓர் இரவு சந்திப்பு. வந்து சிறிது நேரம் காத்திருப்பின் பின் நண்பர் யுவன் சங்கர் ராஜா வந்து கீபோர்டில் விரல்கள் பாவ, மெட்டு ஈரத்தரையாய் இதம் வார்க்க, “கம்பத்துப் பொண்ணு கம்பத்துப் பொண்ணு” சொற் பூக்கள் உதிரத்தொடங்கின. சரியாக ஓர் இரண்டுமணி நேரத்தில் பாடல் ரெடியானது. அந்த வாரத்திலேயே குரல் பதிவு நடந்தது. யுவன் சங்கர் ராஜா கொஞ்சிக் கொஞ்சிப் பாடித் தந்தார். பாடலைக்கேட்ட அண்ணன் லிங்குசாமி அவர்கள் என்னைக் கட்டியணைத்து எனக்கு ந.முத்துக்குமார் கிடைச்சிட்டார் என நெகிழ்ந்தார். நான் சிறகடித்தேன். அவருக்கு “தாவணி போட்ட” தீபாவளியைப் போல் குறைவின்றி ஒரு பாடல் வேண்டும் என்பது இலக்கு. ந.முத்துக்குமார் இல்லாததால் நடந்தேறாமல் போய்விடுமோ என்கிற சந்தேகம் இருந்திருக்கிறது அவருக்கு. அது இப்போது அறவே இல்லை. “பாம்பாட்டம் ரெட்ட சடடா” வரியை கொண்டாடினார். படப்பிடிப்பில் பலமுறை கதாநாயகன் விசால் ரசித்தது “ஈசல் றெக்கை பிச்சு வந்து இதயத்த நெஞ்சுக்கிட்ட” வரியை என அந்தப் பாடலுக்கு ரசிகர்கள் ஏராளம். படத்தில் அந்தப் பாடலை மிக அழகாய் விஷுவல் செய்திருப்பார்கள். அந்த திருவிழா கூட்டத்தில் விசாலும் கீர்த்தி சுரேஷும் மான்கள் போல் ஓடி கொஞ்சுவது பார்ப்பவர்களையும் காதலிக்கச் சொல்லும்.https://bookday.in/paadal-enbathu-punaipeyar-webseries-24-writter-by-lyricist-yegathasi/

பல்லவி:
கம்பத்துப் பொண்ணு…
கம்பத்துப் பொண்ணு…
கண்ணால வெட்டித் தூக்குற
எங்கூருக் காத்து சூறாளி போல
புழுதிப் பறக்கத் தாக்குற

ஆலமரத்து எலடா
அவ கன்னக் குழியில விழடா
பாம்பாட்டம் ரெட்டச் சடடா – இப்போ
பாக்குது என்னத் தொடடா

அடடடட…
மஞ்ச செவப்புக் கண்ணாடி போல
என்ன நீ சாய்க்காத
அடி கட்டிக்கிடக்குற ஆட்ட நீயும்
அவுத்துட்டு மேய்க்காத

போடி போ தாங்கல
ராத்திரிப் பூரா தூங்கல

கம்பத்துப் பொண்ணு… ஏ
கம்பத்துப் பொண்ணு…
கம்பத்துப் பொண்ணு…
கம்பத்துப் பொண்ணு…
கண்ணால வெட்டித் தூக்கற
எங்கூருக் காத்து சூறாளி போல
புழுதிப் பறக்கத் தாக்குற

சரணம் – 1
தாவணி காத்துதான் வாழுற மூச்சடி
பேசுன பேச்செல்லாம் சக்கர ஆச்சடி
அம்மியா அரைக்கிற ஆளா நீ அசத்துற
மின்னல கண்ணுல வாங்கி மின்சாரத்தப் பாச்சுற

சவ்வு மிட்டாயி வாட்சப் போல
என்னதான் கட்டிக்கிட்ட – அடி
குச்சி ஐஸு கறையப் போல
சட்டையில ஒட்டிகிட்ட

கடுங்காபி இதம் போல
மனச நீதான் ஆத்துற
கம்பத்துப் பொண்ணு… ஏ
கம்பத்துப் பொண்ணு…

சரணம் – 2
ராட்டினம் போலத்தான் தூக்கி நீ சுத்துற
மெல்லுறேன் முழுங்கறேன் வார்த்தையே சிக்கல
கையில பேசுற கண்ணுல கேக்குற
காதுல கம்மலப் போல மனச நீயும் ஆட்டுற

பஞ்சு மிட்டாயி ரெண்டத் திருடி
கன்னத்தச் செஞ்சுக்கிட்ட – அடி
ஈசல் றெக்கையைப் பிச்சு வந்து
இதயத்த நெஞ்சுக்கிட்ட

ஆத்தாடி காத்துல
உன் பேரத்தான் கூவுறேன்…
கம்பத்துப் பொண்ணு… ஏ
கம்பத்துப் பொண்ணு…

கம்பத்துப் பொண்ணு…
கம்பத்துப் பொண்ணு…
கண்ணால வெட்டித் தூக்கற
எங்கூருக் காத்து சூறாளி போல
புழுதிப் பறக்கத் தாக்குற

கம்பத்துப் பொண்ணு… ஏ
கம்பத்துப் பொண்ணு…

இந்தப் பாடலுக்கு சிங்கப்பூரில் கூடுதலான வரவேற்பும் கொண்டாட்டமுமாம், நான் இயக்கிய முதல் திரைப்படத்தின் தயாரிப்பாளர் துவார் ஜி. சந்திரசேகர் சொன்னார். காரணம் “கம்பம்” என்பதற்கு கிராமம் என்பது அங்கே பொருளாம். அப்படியெனில் அந்தப் பாடல், “கிராமத்துப் பொண்ணு…
கிராமத்துப் பொண்ணு…” என்ற அர்த்தத்தில் தங்கள் மொழியில் முதல் வரி அமைந்தவண்ணம் வந்துள்ள பாடலென மகிழ்ந்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் இந்தப் பாடலுக்காக 2018 ம் ஆண்டின் சிறந்த பாடலாசிரியர் V4 அவார்ட் எனக்குக் கிடைத்தது. இந்த விருது நிகழ்விற்குத்தான் நான் முதன்முதலாக குடும்பத்தோடு சென்றிருந்தேன். விருதைப் பெற்று நான் பேசியது,

“பாட்டெழுத வாய்ப்பளித்த அண்ணன் லிங்குசாமி அவர்களுக்கும், விருதுக் குழுவினருக்கும் மற்றும் எந்த ஒரு அடிப்படை வசதியையும் செய்து கொடுக்காமல் பாட்டெழுதும் சம்பளத்தில் கடனுக்கு வட்டி கட்டிக்கொண்டு, கதை கவிதை பாடலெனச் சுற்றித்திரியும் ஒரு பைத்தியத்தை இத்தனை ஆண்டுகளாக பொறுத்தருளும் என் குடும்பத்திற்கும் என் நன்றி”