Kaviyoviyathodar-Yuththa geethangal 18 by Na ve Arul நா.வே.அருளின் கவியோவியத் தொடர்-யுத்த கீதங்கள் 18

கவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் 18 – நா.வே.அருள்



தனியார் மன்னன்
**************************
இது ரொம்ப மோசமான செய்திதான்
ஆனால் நாடே பரபரப்பாகப் பேசிக்கொள்கிறது
மன்னன்
தனது சிம்மாசனம் என்று நினைவில்லாமலேயே
அவனிடம் வந்த இரண்டு வைர வியாபாரிகளிடம்
விற்றுவிட்டு நொறுக்குத் தீனி வாங்கியிருக்கிறான்!

இதற்கெல்லாம்
மன்னனின் நோய்தான் காரணமென்று
ஒரு வதந்தி உலவுகிறது.

மறதி
ஒரு மோசமான நோய்
அதிலும் கோமாளி மன்னர்களைத்தான் அது
அதிகம் பாதிக்கிறது என்றொரு பேச்சு.

மறதி
மூளையின் சவ்வுத்தோலை
ஒரு பாலாடையைப்போல புசித்துவிடுகிறது.

ஐஸ் உருகி
கடைசியில் குச்சி மட்டுமே எஞ்சி நிற்பதுபோல்
மன்னனைப் பரிதாபமாக்கிவிடுகிறது
மறதி

மறதியால் பீடிக்கப்பட்ட மன்னன்
முதலில் மறந்துவிடுவது
தனது நாட்டைத்தான்.
அதற்கப்புறம் ஒவ்வொரு பிரஜையாக மறக்க ஆரம்பிக்கிறான்.
அந்தப்புரத்து மகாராணிகளே இப்போது
ஆதார் அட்டைகளுடன் அலைந்துகொண்டிருப்பதாக வதந்தி.
அவ்வளவு ஏன்?
நிலைக் கண்ணாடியைப் பார்த்தபோதும்
சுய பிம்பமே நினைவுக்கு வராத
சித்த சுவாதீனம்

அப்புறமும் எதற்கிந்த
பட்டினியில் உருக்குலைந்துபோன உணவு உற்பத்தியாளர்கள்
நள்ளிரவில்
ஆராய்ச்சி மணியை அடித்துக் கொண்டேயிருக்கிறார்கள்?

மோசமான செய்தியாக இருந்தாலும்
நம்பவேண்டியதாகத்தான் இருக்கிறது….
மன்னன்
தனது சிம்மாசனம் என்று நினைவில்லாமலேயே
அவனிடம் வந்த இரண்டு வைர வியாபாரிகளிடம்
விற்றுவிட்டு நொறுக்குத் தீனி வாங்கியிருக்கிறான்!

கவிதை – நா வே அருள்
ஓவியம் – கார்த்திகேயன்

Kaviyoviyathodar-Yuththa geethangal 17 by Na ve Arul நா.வே.அருளின் கவியோவியத் தொடர்-யுத்த கீதங்கள் 17

கவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் 17 – நா.வே.அருள்



உலகிலேயே சிறந்த கவிதை
********************************************

விவசாயியின் சாபம் மண்ணாலானது
ஆனாலவன் அவ்வளவு லேசில் சபிப்பதில்லை

வெளியே தெரிவதில்லை
எனினும்
விதைக்குள் புதைந்து கிடக்கும் விருட்சத்தைப் போல
அவன் ரௌத்ரம் பிரம்மாண்டமானது
காட்சிகளின் விதைகளாக இருக்கும் அவனது
கருவிழிகளிலிருந்துதான்
கருணையின் விருட்சங்கள் வேர்விடுகின்றன.

உலகிலேயே சிறந்த நிலப்பரப்பு
விவசாயியின் இதயம்தான்.
அவனது நெற்றியின் தேசியக் கொடியில்தான்
அசோகச் சக்கரங்கள் உருள்கின்றன.
அன்பு ஊற்றெடுக்கும் விவசாயியின் கிணற்றில்
பாசனத்துக்குப் பஞ்சமேயில்லை.

உலகிலேயே மிகச் சிறந்த கவிதை
வயல்களின் தாள்களில் விவசாயி எழுதும்
உழவுதான்.
விவசாயி எழுதும் கவிதைகளைப் படிக்காமலேயே
கிழித்துப் போடுபவன்தான்
உலகிலேயே மோசமான சர்வாதிகாரி.

விவசாயிக்கு
எவ்வளவு பெரிய மலைப்பாம்பும்
ஒரு மண்புழுதான்
ஒரு மண்புழுவைத் தூண்டிலில் செருகும்போது
அவன் விவசாயி அல்ல
மீனவனாகிவிடுகிறான்.

சேறுதான் விவசாயியின் சிம்மாசனம்
புரியாதவர்களுக்கோ
ஒவ்வொன்றையும் உள்ளிழுத்துக் கொள்கிற
உளைக்கும் புதைசேறு
பூமியைப் புரட்டிப்போட வரும் புல்டோசர்களைக் கூட
அது புசித்துவிடும்!

கவிதை – நா வே அருள்
ஓவியம் – கார்த்திகேயன்

Kaviyoviyathodar-Yuththa geethangal 16 by Na ve Arul நா.வே.அருளின் கவியோவியத் தொடர்-யுத்த கீதங்கள் 16

கவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் 16 – நா.வே.அருள்



பாவ யாத்திரை
************************
இன்றைய உணவு மேசையில்
நான் எடுத்துக் கொண்ட உணவு கழுத்துக்குக் கீழே
இறங்குவதாயில்லை
ஒருவேளை அது
என் சகோதரனின் கழுத்தைக் கயிறு இறுக்கிக் கொண்டிருக்கிற
காரணத்தால் இருக்கலாம்.

உணவைத் தொண்டைக்குக் கீழே தள்ளுவதற்கு
மிகவும் சிரமமாயிருக்கிறது.
அதுமட்டுமல்ல
குமட்டல் எடுக்கும் மனசை
என்னதான் செய்வேன்?

மனசை
எந்திரத்தின் ஒரு பகுதிபோலத் தனியே
கழற்றி வைக்க முடியாதா?

முந்நூறு விவசாயிகளின் பிணங்களின் மேல்
தேசிய கீதம் பாடிய எனது வாய்க்கு
இன்றைய தண்டனையாகத்தான்
எனது இந்த உண்ணா நோன்பு!

அரசாங்க முத்திரை குத்திய மௌனத்தைப்
பத்திரப்படுத்திக் கொள்ளும்
எனது இருத்தலுக்கு என்ன அர்த்தம்?
ஒருவேளை
நான் இறக்கிறபோது
எனது பல்லக்கை அலங்கரிக்க
இந்த வாழ்க்கையின் அவமானம் தேவைப்படலாம்!

கவிதை – நா.வே.அருள்
ஓவியம் – கார்த்திகேயன்

Ram Periyasami's Pidivathangkalil tholainthu vidugirai Poetry Sannatham Kavithai Thodar (Series 24) By Poet Na. Ve. Arul. Book Day, Bharathi Puthakalayam

கவிதைச் சந்நதம் 24 – நா.வே.அருள்



கவிதை உலகத்திற்கு நல்ல காலம். காதலீ….. என்று விளித்துத் தொடங்கிய பழைய காலம் ஒரு பழைய பேப்பர் கடையில் தேய்ந்த பொருளைப்போலப் போடப்பட்டுவிட்டது. இளைஞர்களின் டிஜிட்டல் பேனாக்கள் இன்ஸ்டாக்ராம் காலத்திற்கு ஏற்றபடி புதிய புதிய பூக்களைப் பூக்கத் தொடங்கிவிட்டன.

கவிதை உதிரத்தின் பூ. அவ்வளவு புதுமையாக – ஃபிரஷ்ஷாக – இருக்க வேண்டும் அது. கவிதையின் மணம் நாசிக்கு இதுவரை முகர்ந்திராத மணத்தைத் தந்தாக வேண்டும்.

“ஒரு நிகழ்ச்சியை விவரிக்க எண்ணும்போது அதற்கு இதுவரை இல்லாத ஒரு சொல்லைப் பயன்படுத்த நாம் விரும்புகிறோம். ஏனெனில், நாம் அனுபவித்த அந்த நிகழ்ச்சி அதுவரை அனுபவித்த ஒன்றாக இருப்பது இல்லை. அனுபவத்தைச் சொற்களுக்குக் கொண்டு வருகையில் அந்தச் சொற்களுக்கும், அனுபவித்த நிகழ்ச்சிக்கும் இடையே ஓர் உறவு தோன்றும். இந்த உறவுதான் “பொருளின் பொருள்”. (மா.அரங்கநாதனின் “பொருளின் பொருள் கவிதை”).

இந்த பொருளில், ராம் பெரியசாமியின் இந்தக் கவிதை ஒரு புதிய கவிதைப் பூ!
“பிடிவாதங்களில் தொலைந்து விடுகிறாய்”.

சட்டென்று கவிதை நம் மனதில் தீப்பற்ற வைக்கிறது. கவிஞனின் காகிதத்தில் ஏற்கெனவே தீவைத்திருப்பவள் அவளது காதலி. கவிஞனோ கவிதையில் தீவைக்கத் தொடங்கிவிட்டான்.

“ஒரு பழைய கண்ணாடியில்
என் முகம் பார்த்துக் கொள்கிறேன்
ஒவ்வொரு நாளைக்குமான நாட்குறிப்புகள்
என் முகத்தில் ரேகைகளாய் ஆழமாய் பதிந்திருக்கின்றன ..”

ஒரு பழைய கண்ணாடியில் முகம் பார்ப்பது எவ்வளவு சுவாரசியம்! ஒரு பழைய கண்ணாடியில்தான் கண்ணாடியின் முகமும் தெரிந்துவிடும். ஒவ்வொரு நாளைக்குமான நாட்குறிப்புகள் ரேகைகளாகிவிடுகின்றனவாம். ரசம் போன காதலனின் வரைபடத்தை ஒரு பழைய கண்ணாடி காட்டிக் கொடுத்துவிடுகிறது. ஆனால் கவிஞனோ தனது காதல் ரேகைகளைக் கண்டுபிடித்துவிடுகிறான். அதுவும் காதலின் புதிய கவிதை ரேகை! காணாமல் போன காதல் நதியும் கண்ணாடியில் தெரிந்துவிடுமல்லவா?

“காலம் ஒரு எந்திரம்
பழுதடைகிற அன்புகளை
சுவற்றில் கிறுக்கியோ
எழுதித் தீர்த்தோ
ஆசுவாசம் கொள்கிறது என் எழுதுகோல்…”

கால எந்திரம் என்கிற ஒரு கவிதையை எழுதியிருக்கும் என்னை இந்தச் சொற்சேர்க்கை சொக்க வைத்துவிடுகிறது. இந்தக் கவிஞனோ லாவகமாகக் காலத்தையே எந்திரமாக்கிவிடுகிறான். எதுவொன்று எந்திரமானாலும் இதயத்தனம் இல்லாமல் போய்விடும். எந்திரத்தனமான காலத்தை காதல் நினைவுகளுடன் எப்படிக் கடந்து செல்வது? அதனால் கவிஞன் என்ன செய்கிறான்? சுவற்றில் கிறுக்கியோ, எழுதித் தீர்த்தோ ஆசுவாசம் கொள்கிறான். எதையெல்லாம் எழுதித் தீர்க்கிறான்? பழுதடைகிற அன்புகளை!….பழுதடைகிற அன்புகளைப் பார்க்க வேண்டும் என்றால் இதய மெக்கானிக் ஷாப்புகளுக்குத்தான் போக வேண்டும். இதய பழுதுபார்க்கும் கடை சில நேரங்களில் சுவராக இருக்கிறது. சில நேரங்களில் தாளாக இருக்கிறது. ரிப்பேர் அதாவது பழுதுபார்க்கிற வேலை கவிதையாக இருக்கிறது. பழுதடைகிற அன்புகளை. கழிப்பறைச் சுவர்களில் எழுதிவைக்கிற நபர்களில் எத்தனைபேர் காதலர்களோ? யார் கண்டார்கள்?

“மரத்தின் மீது வாஞ்சையோடு ஊறும் ஓரிரை எறும்பால்
பாரங்களில்லை
பறவை தன் உலகை சுருக்கி கிளையில் அமர்வதைப் போல
உன் தோளில் சாய்கிறேன் …”

ஓரிரை எறும்பு! கொல்கிறான் கவிஞன். வார்த்தைதான் அவனுக்குக் கிடைத்த வாள். இரை சுமந்த எறும்பு மரத்திற்குப் பாரமா? என்று கேட்கிற கவிஞன் சொல்லாமல் சொல்கிறான்…. உன் நினைவென்னும் இரை சுமந்த நானும் உனக்குப் பாரமில்லைதானே? அதனால்… “உன் தோளில் சாய்கிறேன். ” அதுவும் எப்படியாம்?….உலகைச் சுருக்கிக் கிளையில் அமரும் ஒரு பறவையைப்போல… எனவேதான் இவனால் தான் எழுதிய நாட்குறிப்புகள் அனைத்தையும் காதலியின் ஒற்றைப் பெயராகச் சுருக்கிவிட முடிகிறது. இப்படிப்பட்ட காதலனைத் தோள் சாய வேண்டாம் என்று எந்தக் காதலியால் சொல்ல முடியும்?

“ஒரு கைப்பிடிக் கனாக்களிடம்
உன்னை ஒப்படைத்துவிட்டேன்
மரணமென்பது உயிர் பிரிவதிலிருந்து மட்டும் தொடங்குவதில்லை
என்னிலிருந்து நீ
பிரிவதாலும் நிகழும் …”

“காதலியே உன் கடைசி முத்தத்தை என் கல்லறைக்குக் கொண்டுவா” என்று மேத்தா எழுதிய போது புத்தம் புதுசாக இருந்த அந்த எழுதுமுறை இன்றைக்குப் பழசாகிவிட்டது. அதே விஷயம்தான்…. பழைய தோடுதனைப் போட்டு புதிய கம்மல் செய்வதுபோல செய்கிறான் கவிஞன். மரணம் என்பது நீ பிரிவதாலும் நிகழும். காதலியைக் கைப்பிடிக் கனாக்களிடம் ஒப்படைத்துவிடுகிறான். இனி, நான் ராம் பெரியசாமியை உங்களிடம் ஒப்படைத்து விடுகிறேன்.

இனி முழுக் கவிதை…..
பிடிவாதங்களில் தொலைந்து விடுகிறாய்
ஒரு பழைய கண்ணாடியில்
என் முகம் பார்த்துக் கொள்கிறேன்
ஒவ்வொரு நாளைக்குமான நாட்குறிப்புகள்
என் முகத்தில் ரேகைகளாய் ஆழமாய் பதிந்திருக்கின்றன …
காலம் ஒரு எந்திரம்
பழுதடைகிற அன்புகளை
சுவற்றில் கிறுக்கியோ
எழுதித் தீர்த்தோ
ஆசுவாசம் கொள்கிறது என் எழுதுகோல்…
மரத்தின் மீது வாஞ்சையோடு ஊறும் ஓரிரை எறும்பால்
பாரங்களில்லை
பறவை தன் உலகை சுருக்கி கிளையில் அமர்வதைப் போல
உன் தோளில் சாய்கிறேன் …
ஒரு கைப்பிடிக் கனாக்களிடம்
உன்னை ஒப்படைத்துவிட்டேன்
மரணமென்பது உயிர் பிரிவதிலிருந்து மட்டும் தொடங்குவதில்லை
என்னிலிருந்து நீ
பிரிவதாலும் நிகழும் …

Na. Ve. Arul Poetry in Tamil Language. Book Day And Bharathi Tv Are Branch of Bharathi Puthakalayam. நா. வே. அருள் கவிதை

நா. வே. அருள் கவிதை



அவன் ஒரு வழிப்போக்கன்
ஆயினும்
பூமியின் விருந்தாளி.

அவன்மேல் விழும் ஆயிரம் இலைகளின் நிழல்கள்
அவனை ஒரு
புனித மனநிலைக்குக் கொண்டுசெல்கின்றன.

ஒரு பைத்தியக்காரனைப்போல
அவன் ஓயாமல் வார்த்தைகளைத்
விதைத்துக் கொண்டேயிருக்கிறான்.

உணவு விடுதியில்
மேசை துடைப்பதைவிடவும் மேலான ஒரு கவிதையை
அவனால் எழுத முடியவில்லை.

அவன் தன்னையொரு கவிஞன் என்று சொல்லிக் கொள்வதில்லை
அவன் ஒரு வழிப்போக்கன்
ஆயினும்
பூமியின் விருந்தாளி.

முகம் துடைத்து அழுக்காகிப்போன
ஒரு கைக்குட்டையைப்போல
ஒரு மனிதனைத் தூக்கியெறிய
அவன் விரும்புவதேயில்லை.

ஆனால் அவன் ஒரு காலியான
தண்ணீர்ப்பாட்டிலைப்போல
எறியப்பட்ட நதிகள் ஏராளம்.
ஆனால் அவன் அறிந்துவைத்திருக்கிறான்
இந்தியாவின் கங்கையில் எறியப்பட்ட சடலம்
கனடாவின் ஃபிரேசர் நதியில்
உயிர்பெற்று நீச்சலடிக்கும் என்று.

காலம் ஒரு மனிதனின் இருக்கையின் கீழ்
உலைக்களத்தை வைத்துவிடுகிறது.
அவன் ஒரு காய்ச்சப்பட்ட இரும்பைப்போல
மீண்டும் மீண்டும்
சம்மட்டியால் அடிவாங்குகிறான்.

அவன் ஒருநாள்
ஆயுதமாக மாறுவான் என்பதை
அவனது உள்ளுணர்வு உணர்த்திக் கொண்டேயிருக்கிறது.
அவன் ஒரு வழிப்போக்கன்
ஆயினும் பூமியின் விருந்தாளி.

–நா.வே.அருள்

Mounan Yathriga (மௌனன் யாத்ரீகா) Poetry Sannatham Kavithai Thodar (Series 23) By Poet Na. Ve. Arul. Book Day, Bharathi Puthakalayam

கவிதைச் சந்நதம் 23 – நா.வே.அருள்



கவிதை உடும்புமௌனன் யாத்ரீகா

இது வரலாற்று உடும்பு. இதன் உடம்புக்குள் காட்டின் எலும்புகள். மென்மை, மிருது என்கிற வார்த்தைகள் மனிதன் காலப்போக்கில் தனது நாக்கில் கண்டெடுத்த போலி அல்லது பாசாங்கு நாகரிகத்தனத்தின் புதையல் வார்த்தைகள். இந்தக் கவிதையில் ஆவி பறக்கப் பறக்க ஆதி மனிதனின் வாழ்வியல் கவிச்சி.

ஆதிகாலம் வேட்டை என்பது இரையோடு சம்பந்தப்பட்டது. நவீன காலத்திலோ வியாபாரத்தோடு தொடர்பாகிவிட்டது. கவிஞன் உடும்பின் உடம்பு விலாசத்தைக் காட்டின் நெடியுடன் கவிதையாய் எழுதுகிறான்…. “முரட்டுக் கொடிகள் சுற்றிக் கொண்ட காய்ந்த மரத்துண்டு”. வேறு வரிகளிலும் எழுதிக் காட்டுகிறான்….“பச்சைக் காடுகள் விதைக்கப்பட்ட உடும்பின் கண்கள்”.

காலம் கணந்தோறும் வேட்டையை நடத்திக் கொண்டிருக்கிறது. ஒன்றை உண்டு ஒன்று வாழ்கிற உலக நியதி. ஒளியைக் கூட விழுங்கிவிடுகிற கருந்துளையின் கதை அறிவோம். ஜீவராசிகளிலேயே சிந்தனை வேட்டை நடத்துபவன் மனிதன்தான். மனிதனின் கண் உடும்பின் மேல். உடும்பின் கண்களோ நீலப்பறவை தங்கும் வங்கின் மேல். அது நுழைந்தவுடன் கவிதையில் ஒரு ஒலிக் காட்சி….“முட்டைகள் நொறுங்கும் சத்தம்”. நகுலனின் சாவின் முட்டையைப் பார்த்திருக்கிறது தமிழ்க் கவிதையுலகம். இந்தக் கவிஞனோ நீலப் பறவையின் முட்டையைப் பச்சை அண்டம் என்கிறான்.

“காட்டின் சகல இடங்களுக்கும் போகும்
ஒரு முதிர்ந்த விலங்கின் கண்களில்
நமக்கு முந்தைய தலைமுறையின்
பாதத் தடங்கள் நிச்சயம் இருக்கும்”

மனிதனின் வரலாறு விலங்கோடு சம்பந்தப்பட்டது. இந்த இடத்தில்தான் கவிதை இடப் பெயர்ச்சி நடத்துகிறது. உடும்பின் வரலாறு மனித வரலாற்றின் குறியீடாகிறது. கால்தடங்களையே காண மறுப்பது மக்களின் இயல்பு; கண்களில் கால்தடம் காண்பது கவிஞனின் வேலை! பிடுங்கிய கண்களில் இடுங்கிய தடங்கள். அவை கண்கள் அல்ல; காலத்தின் உண்டியல்கள்! அதில் குறைந்தது ஆயிரம் தடங்களின் அடையாளங்கள்.

இங்கு தொடங்குகிறது கவிதையின் டுவிஸ்ட்….
”இறந்த கண்கள் வேண்டாம்
உயிருடன் பிடிப்போம்
இந்தக் காட்டில் நம் வரலாறு மறைந்துள்ளது
முந்நூறாண்டுகள் வாழ்ந்த ஓர் உடும்புக்கு
நம் சரித்திரம் தெரியும்”

இது விலங்குகள் பிடிக்கிற வேட்டையல்ல. மனிதர்களுக்குக் காட்டின் கதைசொல்லும் கவிதையின் வேட்டை. வேட்டை ஒரு சாக்கு. துரத்திப் பிடிப்பதெல்லாம் ஒரு துயரம் மிகுந்த இழந்த காட்டின் இதயத்தை! வேட்டையில் இழந்த காட்டை வெற்றிகொள்ள உயிருடன் உடும்பைப் பிடிக்கிற உன்மத்த வெறி.

கவிதையின் டுவிஸ்ட் ஒரு கொண்டை ஊசி வளைவைப்போல சாகசம் புரியத் தொடங்குகிறது. வேட்டையில் பிடிக்கப்பட்ட மனிதர்கள் அடைக்கப்பட்ட கூண்டுகளை அடையாளம் காட்டுகிறான் கவிஞன்.

“சரித்திரத்தைத் தெரிந்து கொள் எந்தையே
உன் ஈட்டியைப் பிடுங்கிக் கொண்டு
ஜல்லி அள்ளும் கருவியை
உனக்குக் கொடுக்கப் போகிறார்கள்”

சினிமா முடிந்ததும் ஒரு காட்சியை (ஃபிரீஸ்) செய்வது போல – உறைய வைப்பதைப் போல – கவிதை முடிந்துவிட்டாலும் இரண்டு வரிகள் கவிதையை மனதில் உறைய வைத்துவிடுகின்றன….

“வரலாற்றுப் புகழ் மிக்க உடும்பு
அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தது.”

உடும்பின் பார்வையில் தெரிகிறது இழந்தவர்களின் துயர வரலாறு. வாசிக்க முடிந்தவர்கள் வாசித்துக் கொள்ளலாம். வரலாறு முக்கியம் அமைச்சரே என்பது வெறும் நகைச்சுவை வசனம் அல்ல…. அது வாழ்க்கையின் மீட்சி. உடும்பின் மூலமாக நம் முன்னோர்கள் நம்மை எச்சரிக்கிறார்கள். புரிந்து கொண்டால் பூமி நமக்குச் சொந்தம். இல்லையெனில் நாமே நமக்குச் சொந்தமில்லை.

மௌனன் யாத்ரீகா: கேள்விகளுக்கான பதில்கள்.

இனி முழுக் கவிதை.

வரலாற்றுப் புகழ் மிக்க உடும்பு

”முரட்டுக் கொடிகள் சுற்றிக் கொண்ட
காய்ந்த மரத்துண்டைப்போல்
உறுதியான வால்
நீலப் பறவைப் பதுங்கும் வங்கில்
நுழைவதைப் பார்த்தேன்

பச்சைக் காடுகள் விதைக்கப்பட்ட உடும்பின் கண்களை
அது எட்டிப் பார்க்கும்போது காண வேண்டும்
அகவன் மகனே!
உன் உண்டி வில்லை சுருட்டி வை”

“எலே மலைராசா…
நாட்டுக்குள் போய் வந்த காட்டாளா
முட்டைகள் நொறுங்கும் சத்தம் கேட்கிறது பார்
இந்நேரம் அதன் பிளந்த நாவின் நுனியில்
பச்சை அண்டத்தின் ருசி வழியும்
இன்று நம் அட்டிலில்
கூடுதல் மிளகை அரைப்பாள் நம் கிழத்தி’

“எச்சிலூறும் அந்த நத்தையை
ஓட்டுக்குள் கொஞ்சம் இழுக்கிறாயா?
காட்டின் சகல இடங்களுக்கும் போகும்
ஒரு முதிர்ந்த விலங்கின் கண்களில்
நமக்கு முந்தைய தலைமுறையின்
பாதத் தடங்கள் நிச்சயம் இருக்கும்
எனக்கதைக் காட்டு சிறுமலை நாடா ”

“என் ஈட்டியின் கூர்முனையால்
அதன் கழுத்துச்சதை அறுந்தால்
இரண்டு கண்களையும் பிடுங்கி
உன்னிடம் தந்துவிடுகிறேன்
அதற்குள் ஆயிரம் தடங்களாவது இருக்கும் ”

”இறந்த கண்கள் வேண்டாம்
உயிருடன் பிடிப்போம்
இந்தக் காட்டில் நம் வரலாறு மறைந்துள்ளது
முந்நூறாண்டுகள் வாழ்ந்த ஓர் உடும்புக்கு
நம் சரித்திரம் தெரியும்

சரித்திரத்தைத் தெரிந்து கொள் எந்தையே
உன் ஈட்டியைப் பிடுங்கிக் கொண்டு
ஜல்லி அள்ளும் கருவியை
உனக்குக் கொடுக்கப் போகிறார்கள்”

வரலாற்றுப் புகழ் மிக்க உடும்பு
அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தது.

மௌனன் யாத்ரீகா

Poet Na. Ve. Arul Two Poetries (தவம், மூச்சு) in Tamil Language. Book Day And Bharathi TV Are Branches of Bharathi Puthakalayam.

நா.வே.அருளின் இரண்டு கவிதைகள்



தவம்
********

அப்படியான ஓர் எழுதுகோலுக்காகத்தான் தவமிருக்கிறேன்.
கடை கடையாய் ஏறி இறங்கியாச்சு
எந்த எழுதுகோலும் போதுமானதாயில்லை
அது ரொம்பவும் குட்டையாக இருக்கிறது
மேலும் மொண்ணையாக …
சொல் புத்திக் கேட்டுக்கொண்டும்
சுயதம்பட்டம் அடித்துக்கொண்டும்…
இறைந்து கிடக்கும் மண்டையோடுகளைப் புறக்கணித்து
அவற்றின்மேல் அமரும் வண்ணத்துப் பூச்சிகளுக்குக்
கூண்டுகள் தயாரித்துக்கொண்டும்…
அபலைகளின் இதயத்தை அலட்சியம் செய்தும்
காலில் தட்டுப்படும் சடலத்தைக் கண்டு கொள்ளாமலும்…
எந்த எழுதுகோலும் போதுமானதாயில்லை.

காலத்தை மீட்கும் கனவுகளுடன்
புடம் போட்டெடுத்த ஒரு புதிய எழுதுகோல்!
கிடத்தினால் …
தேசத்தின் ஒரு முனை முதல் மறுமுனை வரை
தொடுகின்ற நீளம்
ஒரு நதியைப்போல வளைந்து வளைந்து ஓடி
மரங்களின் சருகுகளைப் படகுகளாக்கி
மண்ணில் புரண்டு கடலில் கலக்க வேண்டும்
கடலை மையாய்ப் புசிக்க வேண்டும்

எழுதுகோல்
உழவனின் தோளில் கலப்பையாய்
பாட்டாளி கையில் ஸ்பேனராய்
தொட்டுத் தொட்டு எழுத இதயமே மைக்கூடாய்
காதலர்களின் கண்களாய்
கடைசி வரைக்கும் கழன்று விழாத
ஆறாம் விரலாய்…

இஸ்லாம் கூறும் ஜனநாயகம் ! - Sri Lanka Muslim

மூச்சு
********

ஜனநாயகத்தின் கூரை மீதேறிக் கத்தும்
கவிஞனுக்கு
புகைக் கூண்டில்
சடலத்தின் நாற்றம் மூக்கைத் துளைக்கிறது.

ஜனநாயகத்திற்கோ
தனது முகத்தைப் பார்த்துக்கொள்ள
பொருத்தமானதாக
ஒரு நிலைக் கண்ணாடி கிடைத்தபாடில்லை

நாற்காலிகளின் சர்க்கஸ் கூடாரத்தில்
கவிஞன் மிகப் பெரிய கோமாளியாக்கப் பட்டிருக்கிறான்.
அவன் மூக்கின் நுனியில் செருகப்பட்டிருக்கும் பூசணிக்காய்
தலையில் பல கூம்புகள் கொண்ட குல்லாய்
முகம் முழுதும் கறுப்பு வண்ணம்
வன்முறைகள் ஏவப்படும் வனவிலங்குகளின் ரணங்களை
மேலும் காயப்படுத்தும் கைத்தட்டல்கள்

எழுத பேனா எடுக்கையில்
தாளின் கோடுகள்
சிறைக் கம்பிகளாக மாறிவிடுகின்றன.

வட்ட வடிவிலிருக்கும் நாடாளுமன்றம்
மிகக் கனத்தத்
தூக்குக் கயிறாகக் காட்சியளிக்கிறது!

வழக்குத் தொடுக்கமுடியாத
வார்த்தைகளாகத் தேடி
கவிதை எழுத ஆரம்பித்தால்
நல்ல கிளிக் கவிஞனாகலாம்.

கல்லறையை உறுதி செய்துவிட்டு
எழுத வந்த கவிஞன்தான்
மக்களுக்கான
பொழுதுபோக்கு எலும்புக்கூடு

இப்படியான நெருக்கடிகளில்
எழுத நேர்ந்த கவிதைகளில்தான்
ஜனநாயகம் தன் இறுதி மூச்சை விட்டுக்கொண்டிருக்கிறது.

–நா.வே.அருள்

Kavithai Ula Poetry Series by Poet Na. Ve. Arul. Its Contains Many Types of Poets Poetry in a Different Way. Book Day And Bharathi Puthakalayam

கவிதை உலா 8: மன ஊரின் கவிதைக் குடிசைகள்- நா.வே.அருள்



மன ஊரின் கவிதைக் குடிசைகள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கவிஞர்கள்

க. அம்சப்ரியா, ராம் பெரியசாமி, கோ. பாரதிமோகன், டீன் கபூர், கயல், அசோக்ராஜ்

சூட்சுமங்களை உள்ளடக்கிய சின்ன கவிதைகள் சிக்கனத்தின் செய்நேர்த்திகள். சொல்ல வந்ததைச் சுருக்கென்று சொல்லிவிடுகிற வசீகரமான வசியங்கள்; உள்ளத்தைக் கிள்ளும் வாய்த் துடுக்குகள். இலக்கை எய்தி இரையைக் கொத்திக் கொள்கிற சுருக்கச் சொல்லம்புகள்.

பூமி முழுவதும் ‘பொய்’களின் புல்வெளிகள். வசீகரமான ‘வஞ்சகப்’ பூக்கள். படபடக்கும் ‘துரோகங்க’ளின் பட்டாம் பூச்சிகள். பெரிய பெரிய ‘பேராசை’ மரங்கள். காணவில்லை அறிவிப்புப் பலகையின் கீழே சின்ன எழுத்துகளில் பரிதாபமாக எழுதப் பட்டிருந்தது… உருவப் பொலிவிழந்த “உண்மை.”

வரிசை

இந்த வரிசைக்கு எப்படி வந்தேன்
என்று தெரியவில்லை
பின்னால் என்னைவிட உயரமாக
இரண்டு பொய்கள்
முன்னால் என்னிலும் வலுவான
நாலைந்து துரோகங்கள்
வஞ்சகம்தான் வரிசையை
நடத்திக் கொண்டிருந்தது
கட்டக் கடைசியில் பேராசை
நின்று தள்ளிக் கொண்டிருந்தது
நிற்க முடியாமல் விழுந்த
என்னைக் கண்டு எல்லாம் சிரித்தன
என்ன சத்தம் என்று வஞ்சகம்
திரும்பிப் பார்த்தது
உண்மை விழுந்துவிட்டது என்றது
என் பின்னாலிருந்த பொய்!

–அசோக்ராஜ்

சண்டை போடுவதற்காகவே வாய் திறக்கும் காதலன், சாளரத்தைச் சாத்துகிற காற்றுதானே? கண் இல்லாத காற்றே! முகத்தில் அடித்த மாதிரி மூடிவிடுகிற உன்னிடம் முணுமுணுத்து என்ன பயன்? காதலி பாவம் வெக்கையில் கரைந்து போகிறாள்…. ஆனாலும் காதலில் உறைந்து போகிறாள்!

நுட்பத்தில் நெய்த கைக்குட்டைதான் இந்தக் கவிதை….
வருகைக்காக வைக்கப்பட்ட சாளரத்தை
அறைந்து சாத்தியடியே வரும் காற்று
சந்தித்த மறு நொடி
நீ துவக்கும் பிணக்கு.

No description available.

–கயல்.

பிரபஞ்சத்தின் மிகப் பெரிய பேரிடரே “மானுடன்”தான் போலும். மரம்தான். மரம்தான். எல்லாம் மரம்தான். மறந்தான். மறந்தான். மனிதன் மறந்தான்.” பாகப் பிரிவினையின் போது பங்குக்கு வந்து விடுகிற பங்காளிகள் மாதிரி, பார்வையில் படாதவர்கள் எல்லாம் பயன்களை அனுபவிக்க மட்டும் பக்கத்தில் வந்துவிடுகிறார்கள். விதைக்காதவர்கள் அறுவடைக்கு வருகிறார்கள்….

“விதையிடவில்லை
முளைத்த காலம் தெரியாது
வளர்ந்த காலத்தில்
நீரூற்றவில்லை
மரமான பின்
எங்கிருந்தோ வந்தார்கள்
பொருத்தமான ஆயுதங்களோடு”

No description available.

–க. அம்சப்ரியா

அப்துல் ரகுமானைத் தொடர்ந்து ஏராளமான இளைய சக்திகள் கஸலைக் கையில் எடுத்திருக்கிறார்கள். கவிஞர் பாரதி மோகன் கஸல்களின் பேருந்தில் ஜன்னலோரப் பிரசன்னம்! அவை கஸல்கள் அல்ல; காதலின் கையெறிகுண்டுகள்! ஆனால் அவை காதலிக்கோ புளகிக்கும் பூச்செண்டுகள். எல்லோரும் விண்மீனைப் பார்த்துத்தான் வியந்துபோவோம். கவிஞன் கதையைத் திருப்பிப் போடுகிறான். விண்ணுக்கு வாய்க்காத நீர்மீன்கள்… அபாரம் கவிஞனே… இதோ….

கண்ணீர்த் துளிகளில் மையெடுக்கிறான் இந்தக் கஸல் கவிஞன்.

பெருகினாலென்ன கண்ணீர்
எனது கஸலுக்கான மை அது
உனது வேலையெல்லாம்
தீராத துயரைத் தருவதே
புதிதொன்றுமில்லை புகாரி
கள்ளித் தோட்டத்தில் அலையும்
காற்று என் காதல்
அண்ணாந்து மட்டுமே பார்க்கலாம்
விண்ணிற்கு வாய்க்காத நீர்மீன்கள்
வலையோ தூண்டிலோ
தக்கை மூழ்கினால்
முடிந்தது எல்லாம்

No description available.
–கோ. பாரதிமோகன்

ஹைகூவை மிகவும் லாவகமாகக் கவிதையில் வைத்து புள்ளியைக் கோடாக்குகிறான் ஒரு கவிஞன். ஜப்பானியக் கவி பாஷோவின் பரிமாணங்கள் தமிழ்க் கவிதையுலகில் தனக்கான இடத்தைப் பரவலாகத் தக்கவைத்திருக்கிறது. உதிர்ந்த பூவின் வண்ணத்துப் பூச்சியைப் பார்த்த கண்கள்தாம் இப்போது வண்ணத்துப் பூச்சியின் இறக்கையில் வானவில்லைத் தரிசிக்கிறது. இறகு மனிதனுக்கு இறகு. காகங்களுக்கு காற்றில் சட சடத்து இறங்கும் சடலம்! வார்த்தைகளை வீழ்த்த வார்த்தைகளையே பயன்படுத்தும் விநோதம்தான் வாழ்க்கை! மனதிற்குள் கைநுழைத்துக் கண்டுபிடிக்கிறான் கவிஞன்.

வீழ்ந்து கிடந்த வண்ணத்துப் பூச்சியின் இறக்கையிலிருந்து
வானவில் எழுந்தது.

••••

மனிதன் யாதுமறியாது செல்கிறான்.
ஓர் இறகை உயிரென மதிக்கும்
காகங்கள் கரையத் தொடங்கின.

•••

நான்
நீ
என்ற பாகுபாட்டுடன்தான்
வாழ்கிறது
பிரபஞ்சம்.
சில வார்த்தைகள்
தப்பித்துக் கொள்வதற்காக
இன்னொரு வார்த்தையின் உதவியை நாடவேண்டி இருக்கிறது.

No description available.

–டீன் கபூர்

வாழ்க்கையை விதவிதமாகக் கவிதையில் ஓவியமாகத் தீட்டிவிடுகிறார்கள் நவீன கவிஞர்கள். அதிலொருவன்தான் ரணகளக் கவிஞன் ராம் பெரியசாமி. எந்தவிதப் புகார்கள் எழுதாமல் ஒரு மனு சமர்ப்பித்துவிடுகிற சாமர்த்தியம் நிகழ்கிறது ராம் பெரியசாமியின் இந்தக் கவிதையில். அய்யோ…. அம்மா…. பார்த்தீர்களா…. என்னே கொடுமை…. என்றெல்லாம் வியப்புக் குறி வார்த்தைகளை விலக்கிவிட்டு ஒரு சித்திரத்தைக் காட்டுகிறான். பாசி விலக்கித் தண்ணீர் குடிக்கிற பக்குவம். விளக்கமே தேவைப்பாடாத கவிதை… நம் மனசை விட்டு விலகவே விலகாத கவிதை!

ஒரு செருப்புடன்
வீட்டிற்கு வருகிறார் அப்பா…
குடம் ஓட்டையெனத்தெரிந்தும்
தண்ணீர் கொண்டு
வருகிறாள் அம்மா…
பொத்தான் இல்லாத சட்டையை ஊக்கு போட்டு
பள்ளி கிளம்புகிறாள் அக்கா..
பழைய சாதத்தை அடுப்பேற்றி
சொப்புச்சாமானில் சமைக்கிறாள் அம்முக்குட்டி.

No description available.

–ராம் பெரியசாமி

முந்தைய தொடர்களை படிக்க: 

தொடர் 1 :  கவி உலா – நா.வே.அருள்

தொடர் 2 : கவிதை உலா 2 – நா.வே.அருள்

தொடர் 3 : கவிதை உலா 3 – நா.வே.அருள்

தொடர் 4 : கவிதை உலா 4 – நா.வே.அருள்

தொடர் 5 : கவிதை  உலா 5 – நா.வே.அருள்

தொடர் 6 : கவிதை உலா 6 – நா.வே.அருள்

தொடர் 7 : கவிதை உலா 7 (சிலுவை ஆணிகள்) நா.வே.அருள்

Vasanthakumaran Poetry Sannatham Kavithai Thodar (Series 22) By Poet Na. Ve. Arul. Book Day Website is Branch Of Bharathi Puthakalaym.

கவிதைச் சந்நதம் 22 – நா. வே. அருள்

குழந்தையும் தெய்வமும் ஒன்று அல்ல ******************************************* குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று நினைத்தவர்களுக்குக் குழந்தைகளின் இன்னொரு உலகம் அதிர்ச்சியைத் தரும். அப்படித்தான், “குழந்தைகள் அன்பின் அவதாரங்கள் இல்லை” என்கிற கவிஞர் அப்துல் ரகுமானின் வாசகம் என்னை அதிர்ச்சி அடைய வைத்தது. அவரது…