ந க துறைவன் கவிதைகள்
கவிதைகள்-ந க துறைவன்
ந.க.துறைவன் : கவிதைகள்
அலைகள் தெரியாத குளம்
நீர்மறைக்கும் ஆகாயத்தாமரைகள்
கரையில் மீன்பிடித் தூண்டில்காரன்.
*
பால் முற்றிய சோளக்கதிர்கள்
காவல் பொம்மையை ஏமாற்றி
இரை தேடும் குருவிகள்.
*
எழுத்து ரூபம்
சொற்கள் அரூபம்
பேச்சினிடையே மௌனம்.
*
அழகு சிதைந்த மலைக்கோட்டை
யாருமற்ற பழைய அரண்மனை
உள்ளே விறகு வெட்டி.
*
மேகங்கள் பயணம்
எதையோ தேடி வானில்
அலையும் ஒற்றை பறவை.
*
இலைகள் மகிழ்ச்சி
வயல் நாற்றுகள் சிரிப்பு
வசந்த காலம்.
*
தவளைகள் நீண்ட உரையாடல்
மகிழ்ச்சி ஆரவாரம்
மழை குறித்து விமர்சனம்.
*
சூடான பால்
சர்க்கரை போட்டதும் மிதந்தது
உயிரற்ற எறும்புகள்.
*
கடந்து போகிறது காற்று
கடந்து போகிறது நிழல்
கடந்து போகிறது மனம்.
*
வாசலில் கோலம்
அழித்து விட்டு போகிறது
பால்காரன் சைக்கிள் டயர்.
*
அழகு மூலிகை வனம்
கொட்டும் அருவி
குரங்குகள் பருகும் குடிநீர்.
*
வாசலில் பூத்திருக்கு
சிவந்த செம்பருத்தி பூக்கள்
தெருவிற்கு அழகு.
ந க துறைவன் ஹைக்கூ கவிதைகள்
தியான நிலையில் மலை
அலைகின்றன மேகங்கள்
அமைதி தேடும் மனம்.
கற்பூர நெடி தாங்காமல்
படத்தின் பின்பறம் இருந்து
வெளியே வந்தது பல்லி.
பூரணமாய் நிறைந்திருக்கிறேன்
பௌர்ணமி நிலவொளியில்
புத்தனுடன் நான்.
கிளை கீழே விழாமல்
பாதுகாத்தது தாங்கி
மற்றொரு கிளை.
குயிலின் குரல் ஒலி கேட்டு
அதே குரலில் குரல் கொடுக்க
கற்றான் ஆதிமனிதன்.
கோயில் மணியோசை
என்னைச் சுற்றி ஒலி அதிர்வு
பூவிலிருந்து வெளியேறுகிறது வண்டு.
காலி டீ கோப்பை
சுற்றி சுற்றி வருகிறது
தாகத்தில் ஈ
கோடை வெப்பம்
மின்தடை புழுக்கம்
படுக்கையறை இருட்டில் பூனை.
பிரபஞ்ச சக்தியை
காதில் வைத்து கேட்டேன்
வலம்புரி சங்கின் ஒலி.
நிழல் கொடுக்கிறது
மரணக்குழி மேல்
வளரும் தும்பைச் செடி.