Nan Udhirndhu vitten Poem By Sudha நான் உதிர்ந்து விட்டேன் கவிதை - சுதா

நான் உதிர்ந்து விட்டேன் கவிதை – சுதா




பழுத்த இலை உதிர்வதைப் போல…
என் இலைக்கு சிறு தழும்பையும்
ஏற்படுத்தா வண்ணம் உதிர்ந்து விட்டேன்…

யாரும் பேசவில்லை என்ற
ஏக்கம் இனியில்லை…
யாரும் பார்க்க வரவில்லை
என்று நினைப்பும் இனியில்லை…

இப்போதும் கூட நான் அமர்ந்த
இடம் வெறுமையாய் இல்லை…
நான் பயன்படுத்திய பொருட்கள்
யாரோ ஒருவர் கையில்…

என் நினைவுகளும் அவ்வப்போது
அவரவர் மனதில்…நாட்பட நாட்பட
மங்கிப் போகும்…

மேற்கூரை பட்டுத் தெறித்த
மழைத் துளி பனித் துளியாய்க்
குளிர்ந்தது…குளிர்பதனப் பெட்டி
ஏனோ குளிர் தரவில்லை…

யாதொருவரின் வருகையும்
எனக்கு அவ்வளவு ஆனந்தத்தை
தரும்…அத்தனை உறவுகளும் கண்முன்
என் உதடு மட்டும் புன்னகைக்கவில்லை…

இடுகாட்டில் கூட கட்டியழ யாருமில்லை…
யாரும் தொட்டு தூக்கவும் இல்லை…
என் மகளின் ஸ்பரிசத்தையும்
என் மகனின் மூச்சுக் காற்றையும் எண்ணி
என் இறந்த உடல் ஏங்கித்தான் போனது…

காரியம் முடிந்து கடமைகள்
முடிந்து கலைந்து விட்டனர்…
இப்போது என் நினைவுகளை
மட்டும் சுமந்திருக்கிறது என்
வீட்டுத் தாழ்வாரம்…

ஒரு இலை உதிர மறு
இலை முளைக்கும்…ஆனால்
உதிர்ந்த இலையின் இடம்
எப்போதும் வெற்றிடமே…