Mouna Porattam Shortstory By Manavai Karnikan மௌன போராட்டம் குறுங்கதை - மணவை கார்னிகன்

மௌன போராட்டம் குறுங்கதை – மணவை கார்னிகன்

நாரதர் கலகம் நன்மையில் முடியும். இங்கே ஓர் நாரதர் கலகம் செய்கிறார். நன்மையில் முடியுமா? சகுந்தலா ஊருக்கு வரும்போதெல்லாம் கை சுமையுடன் தான் வருவாள். இந்த முறை மனச்சுமையுடன் வருகிறாள். எல்லாச் சுமையும் வசந்தாவின் மேல் இறக்கி வைக்க அரக்கப்பரக்க வந்து கொண்டிருக்கிறாள்.

வசந்தா இதற்கு முன்பு சகுந்தலா வருவதை அன்போடு அழைத்ததுண்டு. “வாங்கத்தே வாங்க நல்லா இருக்கீங்களா”. என்று கேட்பாள். இந்த முறை சிரம் தாழ்ந்து நிற்க்கிறாள்.

“இங்க பாரு வசந்தா. ஒங்க அம்மா அப்பா சுரோட இருக்கனும்னா,ஒழுங்கா சொன்னத கேட்டுக் கிடு இரு. இல்லைனா செத்துபோயிரு. அண்ணே எல்லா உங்கள சொல்லணும். பொட்ட புள்ளக்கிச் செல்லம் குடுத்து வளத்தா இப்படித்தான் வந்து நிக்கும்”.

“நாங்க என்னத்துக்கு சாவுரோம். சனியெ இவள கொண்ணுப்புட்டு ஏழாநாள் கருமாதிய வைச்சுட்டு போய்க்கிட்டே இருப்போம்” வசந்தாவின் அம்மா பற்கள் நெரிபடப் பேசுகிறாள்.

“அண்ணி நீங்க சும்மா இருங்க. ஆ ஊன்னா கைய ஓங்கிகிட்டு…நீங்க வெளிய போங்க நாங்க பேசிக்கிறோம்”.

வசந்தாவின் யாக்கை மட்டும் அல்ல. அவள் ஒட்டுமொத்த ஆசைகளும் கூனி குறுகி அமர்ந்தன ஒட்டுத்திண்ணையில்.

“எதாவது பதில் பேசுறளா, பெத்த வயிறு எரிச்சா. நல்லாயிருக்க முடியாதுடி. சொல்றத கேட்டு சந்திரன கட்டிக்க. தோட்டந் தொறவு காசு பணமுனு நிறையா கிடக்குது. ராணிமாரி இருக்கிறத விட்டுட்டு அவன கட்டிக்கிட்டு என்னடி பண்ண போற. இங்க பார்டி அவேன் நல்லவன் இல்லைனு சொல்றாங்க முந்தாநாளு கூட யாரோ ஒரு பொம்பள கூட முருகன் தேடர்ல பாத்தேனு சொல்றாங்க. நம்ம இனத்தான் தான். ஆனா அவன் சேர்க்கை சரியில்லை.”

எந்தப் பதிலும் வரவில்லை வசந்தாவிடம்

“அண்ணே இது சரிபட்டு வராது…நான் வாரேன். அண்ணி நீங்க எதும் பேசாதிங்க..”

“அவராச்சு அவரு பிள்ளையாச்சு”.

வீட்டிலிருந்து வெளியே வந்த சகுந்தலா, செருப்பை மாட்டிக் கொண்டே சமிக் ஞை செய்தாள் அண்ணியிடம்.

பாத்திரங்கள் உருண்டன.

அவளும் அப்பாவும் நள்ளிரவு நிசப்தம் கொள்வதுபோல் மௌனமாக.

அவர்களுடைய மௌனம் என்னவென்று எவருக்கும் தெரியாது.

ஒருவேளை அந்த நள்ளிரவு நகர்ந்த பின் விடியற்காலை ஏதேனும் தெரியக் கூடுமோ?