The story of the lying man (பொய் மனிதனின் கதை 13) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History

பொய் மனிதனின் கதை அத்தியாயம் 13 – ஜா. மாதவராஜ்



“ஒரு தேசம் பொய்யர்களுக்கு பழக்கப்பட்டு விட்டால்
உண்மையை மீட்டெடுக்க பல தலைமுறைகளாகும்”
                                                                                                       – கோர் விடால்

உத்திரப்பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் ஒரு கோவில் பூசாரி கிருஷ்ணர் சிலையை குளிப்பாட்டியபோது அவரின் கை தவறி கீழே விழுந்து கிருஷ்ணரின் கை உடைந்து போய்விட்டது. கிருஷ்ணரின் சிலையை நோயாளியாகப் பாவித்து உடைந்த கைக்குக் கட்டுப் போட்டு மருத்துவ சிகிச்சை அளிக்குமாறு மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு பூசாரி சென்றார். டாக்டர்கள் முதலில் மறுத்தார்கள். பூசாரியும் கூட வந்த காவிச் சங்கிகளும் கடுமையாகப் வற்புறுத்த வேறு வழி தெரியாமல் டாக்டர்கள் அந்த கிருஷ்ணர் சிலையோடு கையை சேர்த்து வைத்து கட்டுப் போட்டார்கள். சென்ற நவம்பர் மாதம் 20ம் தேதி பத்திரிகை செய்தி இது.
The story of the lying man (பொய் மனிதனின் கதை 13) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies Historyஉண்மையில் டாக்டர் என்ன செய்திருக்க வேண்டும். உடைந்த கிருஷ்ணர் சிலையை விட்டு விட்டு அந்த பூசாரிக்குத்தான் சிகிச்சை அளித்திருக்க வேண்டும். டாக்டர் அப்படி அறிவு பூர்வமாக செயல்பட்டிருந்தால் அவருக்கு சிகிச்சையளிக்கும் நிலை வந்திருக்கும். சமகால சமூகத்தின் ஒரு பகுதி மக்கள் அப்படி வெறிகொண்ட மனநிலைக்கு ஆட்பட்டிருக்கிறார்கள்.

இங்குதான் ராமர் பிறந்தார் என இந்துத்துவா சக்திகள் தொடர்ந்து தேசம் முழுவதும் ரதயாத்திரை செய்தார்கள். நானூறு ஆண்டு கால மசூதியை இடித்தார்கள். வரலாறு, ஆதாரங்கள் இல்லாமல் நம்பிக்கைகளை வைத்து நாட்டின் உச்சநீதி மன்றமே தீர்ப்பு எழுதிவிட்டது. பாவம் அந்த டாக்டர் வேறென்ன செய்வார்?

இந்த நாட்டின் பிரதமரே விநாயகருக்கு நடந்த அறுவை சிகிச்சை பற்றி பேசும்போது, அந்த கிருஷ்ணர் கோவில் பூசாரிதான் என்ன செய்வார்?
The story of the lying man (பொய் மனிதனின் கதை 13) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History“கணேஷ் என்னும் கடவுளை நாம் எல்லோரும் வணங்குகிறோம். யானையின் தலையும் மனிதனின் உடலும் கொண்ட அந்தக் கடவுள் மூலம் நம் முன்னோர்கள் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே அறுவை சிகிச்சை தெரிந்தவர்களாய் இருந்திருக்கிறார்கள்.”

2014 அக்டோபர் 25ம் தேதி மும்பையில் ரிலையன்ஸ் ஆஸ்பத்திரியில் நடந்த முக்கிய நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி பேசியதுதான் இது. தேசத்தின் முக்கிய மருத்துவர்கள், அத்துறை சார்ந்த விஞ்ஞானிகள், அமிதாப்பச்சன், கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் போன்ற பிரபலங்கள் எல்லாம் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்கள். பல்வேறு மதங்களும், நம்பிக்கைகளும் நிறைந்த 130 கோடி மக்களின் பிரதமராக மோடி பதவியேற்று அப்போது சில மாதங்களே ஆகி இருந்தன.

அத்தோடு மோடி நிற்கவில்லை. மேலும் தொடர்ந்தார். “மகாபாரதத்தில் கர்ணனை அவனது தாய் கர்ப்பம் தரித்து பெற்றெடுக்கவில்லை. இன்றைய மரபணு ஆராய்ச்சிகளை அன்றே நம் மூதாதையர்கள் அறிந்திருந்தார்கள்.”

“இன்றைய ஆகாய விமானம், ராக்கெட் எல்லாவற்றுக்கும் நம் நாடுதான் முன்னோடி. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அவை நம் நாட்டில் புழக்கத்திலிருந்தன.”

புராணங்கள் எல்லாவற்றையும் உண்மை போலும் சித்தரித்து மோடி பேசினார். மக்களை முட்டாள்களாக பாவிப்பதும், முட்டாள்களாக தொடர்ந்து வைத்திருக்க வேண்டும் என்பதும் அவரது நோக்கமாக இருக்கிறது. இந்துத்துவாவையும், மதவெறியையும் தீவிரமாக பரப்பும் அமைப்பைச் சேர்ந்தவர் மோடி என்னும் கண்ணோட்டத்தில் பார்த்தால் தெளிவாகப் புரியும். அவரது வார்த்தைகளில் ஏவிவிடப்படும் ஆபத்துக்கள் தெரிய வரும்.

அன்றைக்கு அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட இந்தியாவின் புகழ்பெற்ற டாக்டர்களும் விஞ்ஞானிகளும் கிருஷ்ணர் சிலைக்கு சிகிச்சை அளித்த அந்த டாக்டர் போல வேறு வழியில்லாமல் அமைதியாக இருந்தனர். மோடியின் பேச்சு குறித்த பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகளின் மீதும் மேலோட்டமான விவாதங்களே எழுந்தன. பிஜேபியின் தகவல் தொடர்பு குழுவைச் சேர்ந்தவர்களே மிக வேகமாக களத்தில் இறங்கி இருந்தார்கள்.

இயேசு கடலின் மீது நடந்தார் என்றால் நம்புவார்கள். மோடி சொன்னதை ஏன் நம்பக் கூடாது” என்றார் ஒருவர்.

யார் நம்பினார்கள்? அப்படி நம்புவதை யார் சரி என்று சொன்னார்கள்? அறிவியலுக்கு முரணான கருத்துக்களை எந்த மதமும், அமைப்பும், மனிதரும் பேசினாலும், பரப்பினாலும் அதை தவறு என சுட்டிக்காட்டி சரிசெய்ய வேண்டியது ஒரு அரசின் கடமை. இங்கு ஒரு அரசே அந்த தவறை அப்பட்டமாக செய்கிறது.

“இன்றைய கண்டுபிடிப்புகளுக்கெல்லாம் முந்திய விஞ்ஞானிகளாய் நமது ஆன்மீகவாதிகளும், ஞானிகளும் வாழ்ந்த நாடு இது. இப்படிப் பேசுவதற்கு மோடி போல ஒரு பிரதமர் வேண்டியிருக்கிறது” என பெருமிதம் கொண்டார் இன்னொருவர்.

ஆன்மீகத் தலைவர்களையும் ஞானிகளையும் ஏற்றுக் கொண்டவர்கள் அவர்களை மதிப்பது வேறு. அறிவியலுக்குப் புறம்பான அவர்களது கருத்துக்களை ஒட்டுமொத்த சமூகத்தையும் ஏற்றுக்கொள்ள திணிப்பது வேறு. அதிகாரத்தின் பேரில் புராணங்களில் வரும் கற்பனைகளையும், கட்டுக்கதைளையும் உண்மைகள் என சித்தரிப்பது பெரிய மோசடி.

மோடியே அப்படியெல்லாம் பேசியதும், தலைவன் எவ்வழியோ அவ்வழி தம் வழியென பிஜேபியினரும், இந்துத்துவா அறிவு ஜீவிகளும் வரிசை கட்டி பொய்களை அவிழ்த்துவிட்டார்கள்.
The story of the lying man (பொய் மனிதனின் கதை 13) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies Historyஒன்றிய அரசின் அமைச்சர் பியூஸ் கோயல் ஜி.டி.பி ((GDP) குறித்து விவரிக்கும்போது, “கணக்குகள், புள்ளிவிபரங்களின் அடிப்படையில் ஜி.டி.பியை அணுகாதீர்கள். புவியீர்ப்பு விசை குறித்து கண்டறிவதற்கு ஐன்ஸ்டீனுக்கு அவர் படித்த கணிதம் எல்லாம் உதவவில்லை. ஏற்கனவே இருக்கும் விதிகள் மூலம் அணுகினால் புதியவை எதையும் கண்டுபிடிக்க முடியாது.” என்று தன் அறிவை வெளிப்படுத்தினார். புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்தவர் நியூட்டன் என ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் அறிவான். பேரை தவறுதலாகச் சொன்னதைக் கூட விட்டு விடலாம்.

ஏற்கனவே இருக்கும் ஒன்றிலிருந்துதான் இன்னொன்று உருவாக முடியும். வெற்றிடத்திலிருந்து எதுவும் உருவாக முடியாது. இதுதான் விஞ்ஞானம். அதுபோல கற்ற கல்வியிலிருந்துதான், பெற்ற அறிவிலிருந்துதான் புதியன கண்டுபிடிக்க முடியும். அப்படி இல்லை என்று மறுப்பது விஞ்ஞானம், கல்வி மீது காட்டும் அலட்சியமே. இத்தனைக்கும் பியூஸ் கோயல் ஒரு சார்ட்டர்ட் அக்கவுண்டட். படிப்பில் அகில இந்திய அளவில் இரண்டாவது ரேங்க் பெற்றவர். யேல், ஆக்ஸ்போர்டு போன்ற புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் தலைமைப் பண்பு குறித்து வகுப்பு எடுத்தவர். இந்திய கல்வி முறை மீதே ஐயம் ஏற்படுத்தும் விதமாக அவரது கருத்துகள் இருந்தன.

ஒன்றிய மனிதவளத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், “அணுக்கள் மற்றும் மூலக்கூறுகள் குறித்து முதன் முதலாக கண்டறிந்தவர் பிரணவ் என்னும் ரிஷி” என்ற அறிவியல் உலகம் அறியாத தகவலைச் சொன்னார். அவர் ஒரு எம்.ஏ பட்டதாரி. கவிதையெல்லாம் எழுதி இருந்தார். கொஞ்சநாள் ‘டாக்டர்’ என்றும் கூட பேருக்கு முன்னால் போட்டு இருந்தார்.

“மகாபாரதம் காலத்திலேயே இண்டர்நெட் வசதிகள் இருந்தன. கண் தெரியாத திருதராஷ்டிரனுக்கு போர்க்களக் காட்சிகளை சஞ்சயன் அதன் மூலம்தான் விவரித்தான்” என்றார் திரிபுரா முதலமைச்சர்.

இராஜஸ்தான் மாநில கல்வி அமைச்சர், “பசுக்கள் மிகவும் புனிதமானவை. ஆக்ஸிஜனை உள்ளிழுத்து ஆகிஸிஜனையே வெளியிடும் ஒரே உயிரினம் பூமியில் பசுதான்” என்றார்.
The story of the lying man (பொய் மனிதனின் கதை 13) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies Historyஇந்திய அறிவியல் கழகத்தின் 102 வது மாநாட்டில் விமானம் ஓட்ட பயிற்சியளிக்கும் அகாதமியைச் சேர்ந்த கேப்டன் ஆனந்த் போடாஸ் என்பவர், “பூமியில் மட்டுமல்ல, கிரகங்களுக்கு இடையேயும் பறந்த விமானங்கள் எல்லாம் ஏழாயிரம் வருடங்களுக்கு முன்பே இந்தியாவில் இருந்தன” என்று ஒரே போடாக போட்டார்.

இந்திய அறிவியல் கழகத்தின் 105வது மாநாட்டில் ஒன்றிய அரசின் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், “ஐன்ஸ்டீனின் சார்பு கோட்பாட்டு விதியை (Theory of relativity) தோற்கடிக்கும் விதியொன்று வேதங்களில் இருப்பதாக விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் சொல்கிறார்” என்று வாய்க்கு வந்தபடி பேசினார்.

இந்திய அறிவியல் கழகத்தின் 106வது மாநாட்டில் உரையாற்றிய ஆந்திரா பலகலைக்கழக துணைவேந்தர் நாகேஸ்வரராவ், “கௌரவர்கள் 100 பேரும் ஒரே தாயின் வயிற்றில் பிறந்தவர்கள். அப்போதே சோதனைக் குழாய் மூலம் கர்ப்பம் தரிக்கும் மருத்துவமுறை இருந்திருக்கிறது” என்றார். மேலும் “எதிரிகளை தாக்கி அழித்துவிட்டு மீண்டும் நம்மிடமே வந்து சேரும் ஆயுதங்கள் இருந்திருக்கின்றன. விஷ்ணு சக்கரம் அப்படியானதுதான்” என்று குறிப்பிட்டார்.

அதே அறிவியல் கழகத்தின் மாநாட்டில் பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை பேராசிரியர் அஷ்னு கோஷ்லே என்பவர், “டைனசர்களை பூமியில் பிரம்மனே படைத்தார். டார்வின் தியரி எல்லாம் கட்டுக்கதை” என்று அளந்து விட்டார்.

மாலேகான் குண்டு வெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்டவரும், எம்.பியுமான பிரக்யா சிங் தாக்கூர், “பசுவின் மூத்திரத்தில் பெண்களின் மார்பகப் புற்று நோயை குணப்படுத்தும் மருந்து உள்ளது” என்றார்.

இராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதி மகேஷ் சந்திர ஷர்மா, ஆண்மயில் வாழ்நாள் ழுவதும் பிரம்மச்சாரி என்றும் ஆண்மயிலின் கண்ணீரை உட்கொண்டு பெண் மயில்கள் கர்ப்பம் தரிக்கின்றன” என தன் மேதாவிலாசத்தை காட்டினார்.

“யோகா மூலம் சுற்றுப்புற சூழலைக் கட்டுப்படுத்த முடியும்” என மோடியும் அவரது பொய்களை அவிழ்த்து விட்டுக்கொண்டே இருந்தார்.

கடந்த ஐந்தாறு வருடங்களில் மோடியின் தலைமையில், அவரது சகாக்களும், சங்கீகளும் விஞ்ஞானத்தின் மீது ஒரு தொடர் யுத்தமே நிகழ்த்தி உள்ளார்கள்.

இவைகளை வெறும் ஜோக்குகளாகவும், இப்படி பேசுகிறவர்களை முட்டாள்களாகவும் சாதாரணமாக கடந்து விட முடியாது. இந்து மதத்தை விஞ்ஞானமாக்குவதும், விஞ்ஞானத்தையே இந்து மதமாக்குவதும் மோடியின் – அவரது இந்துத்துவா சித்தாந்தத்தின் நோக்கம். அதைத்தான் தொடர்ந்து செய்து வருகின்றனர். அதுதான் அந்த பூசாரியை, உடைந்த கிருஷ்ணர் சிலையைத் தூக்கிக் கொண்டு டாக்டரிடம் கொண்டு செல்ல வைத்திருக்கிறது. அறிவியல் உண்மையை பேசவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவித்த அந்த டாக்டரின் இயலாமை ஒட்டு மொத்த சமூகத்துக்கும் நேர்ந்து கொண்டிருக்கிறது.

பள்ளியில் நியூட்டனை, ஐன்ஸ்டினை, அறிவியல் கண்டுபிடிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் நிலைமை என்னவாக இருக்கும். புதுமை குறித்த அவர்களது புரிதல்கள் என்னவாக இருக்கும். ஒரு குழப்பமான மனநிலையில் சிக்கிக் கொள்வார்கள். நவீனத்தை நோக்கி நகர முடியாமல் ஒரு தலைமுறையை மெல்ல மெல்ல முடக்கிப் போடும்.

கடந்த கால மகிமைகளையும், வீண் பெருமைகளையும் பேசிப் பேசி இருட்டுக்குள் மக்களைத் தள்ளுகிறார்கள். நிகழ்காலம், எதிர்காலம் குறித்த சிந்தனைகள் அற்ற வெளியில் குருட்டுப் பூனைகளாக்குகிறார்கள். தங்கள் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளிலிருந்து அரசுக்கும் அதிகாரத்துக்கும் எதிரான மனநிலை மக்களுக்கு உருவாகாமல் கவனத்தை திசை திருப்புகிறார்கள்.

அன்றைக்கு அந்த பூசாரி கிருஷ்ணர் சிலைக்கு மருத்துவ சிகிச்சை மட்டும் பெற்று செல்லவில்லை. சிகிச்சை அளிக்கப்பட்டதற்கான ரசீதையும் பெற்றுச் சென்றிருக்கிறார். அதில் சிகிச்சை அளிக்கப்பட்டவரின் பெயர் ஸ்ரீ கிருஷ்ணர் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஸ்ரீகிருஷ்ணரின் நோய் காலியாக விடப்பட்டு இருக்கிறது. அந்த நோய் என்னவென்று எழுதுவதில்தான் இந்தியாவின் எதிர்காலம் இருக்கிறது.

முந்தைய தொடரை வாசிக்க:
பொய் மனிதனின் கதை அத்தியாயம் 12 – ஜா. மாதவராஜ்

பொய் மனிதனின் கதை அத்தியாயம் 12 – ஜா. மாதவராஜ்

பொய் மனிதனின் கதை அத்தியாயம் 12 – ஜா. மாதவராஜ்



“விதிகள் மிக எளிமையானவை. அவர்கள் பொய் சொல்கிறர்கள். நமக்கு அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்பது தெரிகிறது. அவர்கள் பொய் சொல்வது நமக்குத் தெரியும் என்பது அவர்களுக்குத் தெரிகிறது. இருந்தாலும் அவர்கள் பொய் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். நாமும் அவர்களை நம்புவது போல காட்டிக் கொண்டு இருக்கிறோம்”
– எலினா கொரோகோவா

பாவம் திலிப்சிங் மாளவியா. தன்னைப் பற்றி நாட்டின் பிரதமர் பேசுவார் என்றோ, தங்கள் கிராமம் ஒரே நாளில் அவ்வளவு பிரபலம் ஆகுமென்றோ, தன்னைச்சுற்றி அவ்வளவு விவகாரங்கள் நடக்கும் என்றோ கனவிலும் கண்டிருக்க மாட்டார்.

மத்தியப்பிரதேசத்தில் போஜ்புரா என்னும் கிராமத்தைச் சேர்ந்த ஒரு எளிய கொத்தனார் அவர். ஃபேன், டிவி இல்லாத மிகச் சிறிய வீட்டில் வசித்து வரும் 71 வயது திலிப்சிங்கிற்கு 8 குழந்தைகள். ஐந்து பெண் குழந்தைகளுக்கு எப்படியோ திருமணமாகி விட்டிருந்தது. இன்னும் இரண்டு பெண் குழந்தைகள் வீட்டில் இருந்தனர்.

‘சுத்த இந்தியா’ (Clean India – Swachh Bharat) திட்டத்தில், கிராமப்புறங்களில் கழிப்பிட வசதி இல்லாத வீடுகளில் புதிதாக கழிப்பிடம் கட்டப்பட்ட சான்றிதழை அரசிடம் சமர்பித்தால், அவருடைய வங்கிக் கணக்கில் ரூ.12000/- செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. தேவையான பொருட்களை வாங்கித் தந்தால் போஜ்புரா கிராமத்தில் கழிப்பிடம் கட்டித்தருவதாகச் சொன்னார். அரசாங்கத்திடமிருந்து பணம் வந்த பிறகு அதற்குரிய கூலியை தந்தால் போதும் என்று ஒப்புக்கொண்டார். அதன் அடிப்படையில் கழிப்பிடங்கள் கட்டி கொடுத்திருந்தார்.

The story of the lying man (பொய் மனிதனின் கதை 12) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History
திலிப் சிங் மாளவியா

இந்திய வரைபடத்தில் புள்ளியிலும் புள்ளியாய் இருக்கக் கூடிய மிக மிகச் சிறிய அந்த கிராமத்தில் நடந்த ஒரு நிகழ்வு அது. நாட்டின் பிரதமர் மோடிக்கு அது பற்றிய தகவல் சத்தமில்லாமல் போய்ச் சேர்ந்தது. மாதந்தோறும் மக்களிடையே பேசும் ‘மனதின் குரல்’ (மான் கீ பாத்) வானொலி நிகழ்ச்சியில் 2015 டிசம்பர் 27ம் தேதியன்று மோடி திலிப்சிங் பற்றி குறிப்பிட்டார்.
“மத்தியப் பிரதேசத்தில் போஜ்புரா என்னும் கிராமத்தைச் சேர்ந்த திலிப் சிங் மாளவியா ஒரு கொத்தனார். அவருக்கு உயர்ந்த நோக்கம் இருந்தது. தனது கிராமத்தில் கட்டுமானப் பொருட்களை யாரேனும் தந்தால் அவர்களுக்கு இலவசமாக நான் கழிப்பிடம் கட்டித் தருகிறேன் என்று சொல்லியிருக்கிறார். 90 நாட்களில் 100 கழிப்பிடங்களை அந்தக் கிராமத்தில் கட்டிக் கொடுத்து இருக்கிறார். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு சில நேரங்களில் தேசம் குறித்து எதிர்மறையான பார்வைகள் எழுப்பப்படுகின்றன. ஆனால் நூற்றுக்கணக்கான திலிப்சிங்குகள் இப்படி தங்கள் சொந்த வழியில் தேசத்துக்கு நல்லது செய்துகொண்டு இருக்கிறார்கள். தேசத்தின் பலமும், நம்பிக்கையும் அவர்களே. அது போன்ற முயற்சிகளே வளர்ச்சிப்பாதையில் தேசத்தை இயல்பாக செலுத்தி விடுகின்றன. எனவே இந்த ‘மான் கீ பாத்’தில் திலிப் சிங்கை நாம் பெருமையோடு நினைவுகூர்வோம்”

போஜ்புரா கிராமம் உடனடியாக தேசத்திற்கு தெரிய ஆரம்பித்தது. அதற்கு முன்பு ஒருமுறை மான் ஒன்றை நாயொன்று கடித்துக் குதறிய போதும் அந்த கிராமம் பத்திரிகைகளில் செய்தியாகி இருந்தது.

இந்தியாவின் பிரதமரே தன் பெயரைக் குறிப்பிட்டது திலிப்சிங்கிற்கு சந்தோஷமாக இருந்தாலும், அந்த எளிய மனிதர் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவித்தார். உயர்ந்த இடத்தில் இருக்கும் பிரதமர் என்ன பேசி இருக்க வேண்டும்? ‘தன் கூலியைக் கூட பின்னர் பெற்றுக்கொள்கிறேன் என திலிப்சிங் கழிப்பிடங்கள் கட்டித் தந்திருக்கிறார். கிளீன் இந்தியா திட்டத்தின் படி, புதிதாக கட்டப்பட்ட அந்த கழிப்பிடங்களுக்குரிய பணம், உரியவர்கள் வங்கிக் கணக்கில் உடனடியாக செலுத்தப்படும். திலிப்சிங் தனது நியாயமான கூலியைப் பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்படும்’ என்பதுதானே நேர்மறையான சிந்தனையாக இருக்க முடியும்?

நாளைய தினம் எப்படி இருக்கும் எனத் தெரியாமல் இருண்டிருக்கும் தங்கள் காலத்திற்குள் இந்த தேசத்தின் கோடானு கோடி எளிய மனிதர்கள் ஒரு சிறு வெளிச்சத்திற்காக காத்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் திலிப்சிங் மாளவியா. தேசம், தியாகம், வளர்ச்சி, போன்ற பெரிய பெரிய வார்த்தைகளால் அவரது நம்பிக்கையைப் பிடுங்கிப் போட்டிருந்தார் மோடி.

அந்த கிராமம் பற்றி ஊடகங்களில் அடுத்தடுத்து செய்திகள் வர ஆரம்பித்தன. ‘போஜ்புராவில் மொத்தமே 53 வீடுகளே இருக்கின்றன. எப்படி 100 கழிப்பிடங்கள் கட்டியிருக்க முடியும்? என்று மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான கே.கே.மிஸ்ரா கேட்டார். “திலிப்சிங் இலவசமாக கழிப்பிடங்கள் கட்டிக்கொடுத்தார் என்றால் கிளீன் இந்தியாவுக்காக ஒதுக்கப்பட்ட நிதி என்னவாயிற்று?’ என்றெல்லாம் சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து ஊடகங்களும் பேச ஆரம்பித்தன.

மத்தியப்பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்த சிவ்ராஜ்சிங் சவுகான், “மான் கீ பாத்’ நிகழ்ச்சியை அரசியலாக்குவது காங்கிரஸின் விரக்தியைக் காட்டுகிறது என்று கிண்டலடித்து ஒரு ட்வீட் செய்தார். “மக்களோடு அரசை இணைத்துக் கொள்ளும் மான் கீ பாத் நிகழ்ச்சியில் நம் மக்களை பாராட்டியும் உற்சாகப்படுத்தியும் பிரதமர் பேசி இருக்கிறார். அது குறித்தெல்லாம் கேள்விகள் எழுப்புவதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை’ என அங்கலாய்த்து இன்னொரு ட்வீட் செய்தார்.

மத்தியப்பிரதேசத்தின் கிராமப்புற வளர்ச்சித்துறை அமைச்சராயிருந்த கோபால் பார்கவா, போஜ்புராவிவில் கட்டப்பட்ட கழிப்பிடங்கள் பற்றி ஆய்வு நடத்த உத்தரவிட்டார். திலிப்சிங்கின் உழைப்புக்கான கூலி குறித்து யாரும் பேசவில்லை. ஆய்வு நடத்தவில்லை. இன்றுவரை கொடுக்கப்பட்டதா என்றும் தெரியவில்லை.

தன்னிடம் கேள்விகள் கேட்ட நிருபர்களிடம், அந்த ஊரில் 23 கழிப்பிடங்களை கட்டியதாகவும், பக்கத்து கிராமங்களில் 20லிருந்து 25 கழிப்பிடங்கள் போலக் கட்டியதாகவும் திலிப்சிங் கூறினார்.

மாளவியாவின் கதை ‘சுத்த இந்தியா’வின் தோல்வியைக் காட்டுகிறது. மக்களின் இயக்கம் என்பது மக்களின் தலையில் கை வைப்பது அல்ல. மக்களையே முழுப் பொறுப்பாக்கி விட்டு அரசு வேடிக்கை பார்ப்பதும் அல்ல.

தொடர்ந்து எழுந்த குற்றச்சாட்டுகளை ஆராய்ந்ததில் மத்தியப்பிரதேசத்தில் மட்டும் கட்டப்பட்டதாகச் சொல்லப்பட்ட நாலரை லட்சம் கழிப்பிடங்கள் காணாமல் போயிருந்தன. தேசம் முழுவதும் எத்தனை கோடி கழிப்பிடங்களுக்கு இந்த கதி நேர்ந்திருக்கும் என்று கணக்கிட்டால் ‘சுத்த இந்தியா’வின் லட்சணம் தெரியும். மோடி பிரதமரானதும் உதிர்த்த ‘சுத்த’ பொய் அது. கங்கைக்கரையிலிருந்து அந்தக் கதை ஆரம்பித்தது.

The story of the lying man (பொய் மனிதனின் கதை 12) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History
நமாமி கங்கா திட்டம்

2014 மே 16 அன்று பாராளுமன்ற தேர்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மோடி தலைமையில் பிஜேபி வெற்றி பெற்றது. அடுத்த நாள் மே 17 அன்று வக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க மோடி வாரணாசி சென்றார். இந்துக்களின் புனித இடத்திலிருந்து தனது ஆட்சி தொடங்குகிறது என்பதற்கான குறியீடு அது. “கங்கைத்தாய் தன்னிடம் படிந்திருக்கும் அசுத்தங்களை போக்குவதற்கு ஒருவரை எதிர்பார்த்து இருந்தது. அந்தப் பணிக்கு என்னை தேர்ந்தெடுத்து இருக்கிறது” என இந்துக்களை மெய்சிலிர்க்க வைத்தார்.
கங்கையை சுத்தம் செய்யப் போகிறேன் என இருபதாயிரம் கோடி செலவில் ‘நமாமி கங்கா’ என்னும் திட்டத்தை 2014 ஜூனில் அறிவித்தார். அத்தோடு நிற்கவில்லை. 2014 அக்டோபர் 2ம் தேதி, மகாத்மா காந்தி பிறந்த நாளில், கையில் விளக்குமாறோடு டெல்லியில் காட்சி கொடுத்து ‘நாட்டையே சுத்தம் செய்யப் போகிறேன்’ என ‘சுத்த இந்தியா’ திட்டத்தை மோடி அறிவித்தார். நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் இந்த இயக்கத்திற்கு ஒத்துழைக்க வேண்டும் என அறைகூவல் விடுத்தார். முக்கிய பிரபலங்களையெல்லாம் ‘சுத்தமான இந்தியாவின்’தூதர்களாய் நியமித்து தன்னை மேலும் பிரபலமாக்கிக் கொண்டார். ‘இப்படி ஒருவரைத்தான் நாடு இத்தனை காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தது’ என ஊடகங்கள் வானுக்கும் பூமிக்கும் குதித்தன.

என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவும் திட்டமும் அரசிடம் இல்லை. ஆலைகளின் கழிவு, நதிகளின் அசுத்தம், மாசுக்கட்டுப்பாடு, சாலை வசதிகள், எளிய மக்களின் வாழ்க்கைத்தரம் என ஏராளமான மிக முக்கிய பிரச்சினைகளோடு பின்னிப் பிணைந்ததுதான் ‘சுத்த இந்தியா’. அப்படி எந்த பார்வையும் அரசிடம் இருந்ததாகத் தெரியவில்லை. குடித்து முடித்த வெற்று கோக் பாட்டில்களை என்ன செய்யப் போகிறோம்?’ என்னும் சிறிய யோசனை கூட இல்லை. ஆனால் அதுவே பெரிய பிரச்சினை என்பதுதான் கள நிலவரம். மோடி அறிவித்த‘கிளின் இந்தியா’வின் தலை எழுத்தே சரியில்லாமல் இருந்தது.

பிறகு கொஞ்சம் யோசித்து ‘சுத்த இந்தியா’ என்பது தொடர்ச்சியான கடைப்பிடிக்க வேண்டிய இயக்கம் என்பதையும், அதன் முதற்கட்டமாக அடுத்த ஐந்தாண்டுகளில் இந்தியாவில் ‘திறந்த வெளியில் மலம் கழிக்கும் நிலைமையை’ அடியோடு ஒழிக்கப் போவதாகவும் அறிவித்தார்.

அதுகுறித்தும் தெளிவு இல்லவே இல்லை. எல்லா வீடுகளிலும் கழிப்பிடங்கள் கட்ட வேண்டுமென்றால், முதலில் எல்லோருக்கும் வீடுகள் இருக்கின்றனவா? இருக்கும் வீடுகளுக்கு தண்ணீர் வசதி இருக்கிறதா? கழிப்பிடங்களில் இருந்து வெளியேறும் கழிவு நீர் வெளியேற என்ன வசதி? என்னும் அடிப்படை விஷயங்கள் குறித்து யோசனையும் அக்கறையும் இல்லை. வெற்றுச் சவடால்களாகவும் கூப்பாடுகளாகவுமே இருந்தன.

திட்டத்திற்கு போதுமான நிதி ஒதுக்கீடு இல்லை. அதிலும் கணிசமானத் தொகை விளம்பரங்களுக்குச் செலவழிக்கப்பட்டது. மிஞ்சியது கிராமப்புறப் பகுதிகளில் கழிப்பிடங்கள் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்டது.

The story of the lying man (பொய் மனிதனின் கதை 12) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History
அசுத்தமாகவே இருக்கும் கங்கை

ஒருபுறம் தேசத்தின் சொத்துக்களையும், வளங்களையும் தங்கள் இஷ்டத்திற்கு அம்பானிகளும் அதானிகளும் கபளிகரம் செய்ய அனுமதிக்கப்பட்டார்கள். இன்னொரு புறம் செய்த வேலைக்கு உரிய கூலியைக் கொடுக்காமல் திலிப் சிங் மாளவியாவை புலம்ப வைத்தார்கள். இரண்டையும் இணைத்துப் பார்த்தால் அங்கே ‘சுத்த இந்தியா’ மட்டுமல்ல, ‘மோடியின் இந்தியா’வும் தெரியும். 2019 பாராளுமன்ற தேர்தல் நெருங்க நெருங்க மோடி வாய் கிழிய அறிவித்த திட்டங்கள் குறித்தெல்லாம் விவாதிக்கப்பட்டன.
கங்கையை சுத்தம் செய்ய ஒதுக்கப்பட்ட 20,000 கோடியில் 2017 வரை மூன்று ஆண்டுகளில் 8.52 சதவீதமான தொகையே அரசு வழங்கி இருந்தது. ஆனால் கங்கையின் ஒரு சொட்டு நீர் கூட சுத்தம் செய்யப்படவில்லை என்று பத்திரிகையாளர் கவிஷ் கோலியும் நீரஜ் மஜும்தாரும் எழுதினார்கள். ஏன் கங்கையை சுத்தம் செய்ய முடியவில்லை என கவலையோடு சமூக ஆர்வலர்கள் பலரும் ஆய்வுகள் நடத்தி எழுதி வருகின்றனர். தன்னை சுத்தம் செய்ய வந்த மகனின் பொய்யையும் ஒரு குப்பையாக சுமந்தவாறு அந்த கங்கைத் தாய் ஓடிக்கொண்டு இருக்கிறாள்.

The story of the lying man (பொய் மனிதனின் கதை 12) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History
அவினாஷின் வீடு

திலிப்சிங் மாளவியாவின் துயரத்தையும் உள்ளடக்கியவாறு வீடுகளில் கழிப்பிடங்கள் கட்டித் தந்து ‘திறந்தவெளியில் மலம் கழிப்பதை ஒழிக்கும் திட்டமும்’ நாடு முழுவதும் பெரும் தோல்விடைந்து போனது. உலக சுகாதார அமைப்பு இன்னும் கிராமப்புற இந்தியாவில் 70 சதவீதம் பேர் திறந்த வெளியில் மலம் கழிப்பதாக 2018 இறுதியில் தெரிவித்தது.2019 செப்டம்பர் 30ம் தேதி விடிகாலையில் மத்தியப்பிரதேசத்தின் சிவபுரி கிராமத்தில் ரோஷினி, அவினாஷ் என்னும் இரண்டு தலித் குழந்தைகள் இரக்கமில்லாமல் அடித்து கொல்லப்பட்டார்கள் யாதவர்கள் குடியிருப்புகளின் அருகே அவர்கள் திறந்தவெளியில் மலம் கழித்தார்கள் என்பதுதான் இரண்டு கொலைகளுக்கும் காரணமாயிருந்தது.

The story of the lying man (பொய் மனிதனின் கதை 12) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History
சிவபுரி கிராமத்தில் உள்ள கழிப்பறை

“எங்களுக்கு எப்போதுமே கழிப்பிடம் என ஒன்று இருந்ததில்லை” என்று அழுகிறார் அவினாஷின் தந்தை மனோஜ்.
“கட்டப்பட்டு இருக்கும் கழிப்பறைக்கு தண்ணீர் வசதியே கிடையாது. தண்ணீருக்கு நாங்கள் வெகுதூரம் போக வேண்டும். எனவே நாங்கள் வெளியேதான் மலம் கழிக்கிறோம்” என்கிறார் இன்னொருவர். தேசமே அந்த செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தது.

அதற்கு இரண்டுநாள் கழித்து மோடியோ, “உலகமே இந்தியாவைப் பார்த்து ஆச்சரியப்படுகிறது. 60 மாதங்களில் 60 கோடி இந்தியர்களுக்கு 11 கோடி கழிப்பிடங்கள் கட்டியிருக்கிறோம். திறந்தவெளியில் மலம் கழிக்கும் அவலத்திற்கு நாம் முடிவு கட்டி விட்டோம்.” என 2019 அக்டோபர் 2ம் தேதி மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளில் அவரது ஆசிரமத்தில் நின்று கம்பீரமாக முழங்கிக் கொண்டு இருந்தார். உலகமே அவரது பொய்யைக் கண்டு வாயடைத்துப் போனது.

அடிப்படை வசதிகள் இல்லாத வறுமை, ஜாதீயக் கொடுமைகள் நிறைந்த தேசத்தில் மோடி உண்மைகளைப் பார்க்க வேண்டாம் என கண்களை மூடச் சொல்கிறார். ஆனால் கண்களை மூடினால் மட்டும் அல்ல, திறந்திருந்தாலும் இருட்டாகிக் கொண்டு இருக்கிறதே!

The story of the lying man (பொய் மனிதனின் கதை 11) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History

பொய் மனிதனின் கதை அத்தியாயம் 11 – ஜா. மாதவராஜ்



“மக்களில் சிலரை எல்லா நேரமும் ஏமாற்றலாம்.
எல்லா மக்களையும் சில நேரம் ஏமாற்றலாம்.
ஆனால் எல்லா மக்களையும் எல்லா நேரங்களிலும் ஏமாற்ற முடியாது.”
       – ஆப்ரஹாம் லிங்கன்

“இளைஞர்கள்தான் இந்த நாட்டின் சக்தி. நான் ஆட்சிக்கு வந்தால் அவர்களுக்கு உரிய மதிப்பளிப்பேன், அவர்கள் அனைவருக்கும் வாய்ப்புகள் உறுதி செய்யப்படும்“ என்று 2014 தேர்தல் பிரச்சாரத்தில், ’வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே என்னிடம் வாருங்கள்’ என்பதாய் மோடி கைகளை விரித்து அரவணைத்துக் கொள்ள முற்பட்டார். ‘பத்து ஆண்டுகளில் இருபத்தைந்து கோடி பேருக்கு வேலை வாய்ப்பளிப்பதாக’ தொலை நோக்குப் பார்வையை அச்சடித்து வெளியிட்டது பிஜேபி. நாடு முழுக்க அதைக் கொண்டு போய் சேர்த்தார்கள்.
The story of the lying man (பொய் மனிதனின் கதை 11) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies Historyஇந்திய வாக்காளர்கள் 80 கோடி மக்களில், குறிப்பாக 11 கோடி இளைஞர்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட துல்லிய தாக்குதல் அது. அவர்களை குறி வைத்துத்தான் மோடியும், இந்துத்துவ அமைப்புகளும் மிக முக்கியமாக செயல்பட்டனர். பிஜேபியின் தேர்தல் அறிக்கையில் , ‘Neo Middle Class’ என புதிதாக அழைத்தனர். ஏழ்மையிலிருந்து விடுபட்டு இன்னும் மத்தியதர வர்க்கமாக நிலை பெறாதவர்கள் என்று வகைப்படுத்தினர். முன்னேறத் துடிப்பவர்கள். படித்திருந்தும் உரிய வேலை கிடைக்காதவர்கள். திறமை இருந்தும் வாய்ப்புகள் கிடைக்காதவர்கள். விரக்தியடைந்தவர்கள். இவர்களைத்தான் lower middle class என தன் தீவீர ஆதரவாளர்களாக ஹிட்லர் ஜெர்மனியில் தக்க வைத்திருந்தான்.

நவீன தாராளமயக் கொள்கைகள் இந்தியாவில் அமல்படுத்தப்பட்டதற்கு பின்னர் பிறந்த குழந்தைகளே அந்த இளைஞர்கள். இருபது ஓவர் மேட்ச் காலத்தைச் சேர்ந்தவர்கள் அவர்கள். மாற்றங்களை உடனடியாக காணத் துடிப்பவர்கள். நுகர்வுக் கலாச்சாரத்திற்கு ஆட்பட்டவர்கள். வேகமும் துடிப்பும் மிக்கவர்கள். காத்திருக்கும் பொறுமையற்றவர்கள். விரல்நுனியில் உலகை காண்பவர்கள். கறுப்பு வெள்ளை டிவியை பார்க்காதவர்கள். சோவியத் ரஷ்யா குறித்து அறியாதவர்கள். முந்தைய தலைமுறையை ஏமாந்து போனவர்களாகவும், தாங்கள் விழித்துக் கொண்டவர்களாகவும் காட்ட முற்பட்டவர்கள்.
The story of the lying man (பொய் மனிதனின் கதை 11) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies Historyவரலாற்றில் தவறவிடக் கூடாத வாய்ப்பாக 2014 பாராளுமன்ற தேர்தலை மோடி வகையறாக்கள் கருதினர். சகல தந்திரங்களையும் செய்து ஆட்சி அதிகாரத்தை பிடிப்பதற்கு வெறி கொண்டு செயல்பட்டனர்.

தங்களின் பாதையில் முக்கியத் தடையாக அப்போது ராகுல் காந்தி அவர்களுக்குத் தெரிந்தார். 40 வயதான அவர் தன்னியல்பாக இளைஞர்களைக் கவர முடியும், 63 வயதான மோடிக்கு அது கடும் சவாலாக இருக்கும் என்று கணித்தனர். கொள்கைகள், சித்தாந்தங்கள், செயல்பாடுகளைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்து தனிநபர்களை முன்னிறுத்தி பேசுவதே அரசியல் எனக் கொண்டவர்கள் வேறென்ன செய்வார்கள்?

கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், ராகுலையும், காங்கிரஸையும் மக்களிடமிருந்து அந்நியப்படுத்துவது என்பது அவர்களின் வியூகமாக இருந்தது. 2004ம் ஆண்டு தேர்தலில் சோனியா காந்தியை தங்களின் ஆபத்தாக கருதி, போகுமிடமெல்லாம் ‘வெளிநாட்டவர்’ என்று முத்திரை குத்திப் பார்த்தவர்கள் அவர்கள்.

காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரேவின் இயக்கம் பெரிதாக பேசப்பட்டது. நிர்பயா மீதான கூட்டுப் பாலியல் வன்முறை மற்றும் கொலையை எதிர்த்து டெல்லியில் நடந்த போராட்டங்கள் நாடு முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தின. ’தலை நகரம் அல்ல. கொலை நகரம்.” என மோடி ஆக்ரோஷமாக தாக்கினார். எல்லாவற்றுக்கும் காங்கிரஸை காரணமாக்கிய காலம் அது. களத்திலிருந்து விலக்கப்பட்டு ராகுல் காந்தி இளைஞர்களின் கவனம் பெற முடியாதவராய் போனார்.

“60 ஆண்டுகள் காங்கிரஸுக்கு கொடுத்தீர்கள். நாட்டையே நாசமக்கி விட்டது. எனக்கு 60 மாதங்கள் கொடுங்கள். இந்தியாவின் எதிர்காலத்தையே மாற்றிக் கண்பிப்பேன். தேசத்தின் வளர்ச்சிதான் முக்கியம். நான் பிரதம மந்திரியாக இருக்கப் போவதில்லை. இந்த தேசத்தைக் காக்கும் காவல்காரனாகவே இருக்க விரும்புகிறேன். வாய்ப்பு கொடுங்கள்.”

நம்பிக்கையான மனிதராகவும், திடமான அரசியல் தலைவராகவும் தன்னை மோடி முன்னிறுத்திக் கொண்டார். விவேகானந்தரைப் பற்றி எப்போதும் பேசினார். விவேகானந்தர் இளைஞர்களை பெரிதும் ஆகர்ஷிக்கிறவராக இருந்தார்.விவேகனந்தரின் உரைகளும் அறைகூவல்களும், இளஞர்களை நோக்கியே இருந்தன. அவரைப் போலவே மோடி தானும் பிரம்மச்சாரி, அவரைப் போலவே தானும் இளைஞர்களை நேசிக்கிறவன் என காட்டிக் கொண்டார்.

மோடியும் இந்துத்துவ சக்திகளும், கார்ப்பரேட்களும் நினைத்தது நடந்தது. மோடி ஆட்சி அதிகாரத்துக்கு வந்தார். மக்களும், இளைஞர்களும் நினைத்ததுதான் நடக்கவில்லை. ஐந்தாறு ஆண்டுகளுக்குப் பிறகு மோடிக்கு வாக்களித்த இளைஞர்கள் மீண்டும் விரக்தியடைந்து போயிருந்தார்கள். தாங்கள் ஏமாந்து போனது குறித்து பேசினார்கள்.

இராஜஸ்தானில் கஸ்பாபோன்லி என்னும் சிறிய ஊரில் கல்லூரியில் முதுகலைப் படிப்பு முடித்திருந்தார் ராகேஷ்குமார். முப்பத்தொரு வயதாகிறது. வீடுகளுக்கு பெயிண்ட் அடிக்கும் தொழில் செய்து கொண்டு இருந்தார். பேண்ட்டில் கலர்ச் சிதறல்களோடு காணப்படும் அவர், “சென்ற முறை மோடிக்கு வாக்களித்தேன். வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக வாக்குறுதி தந்தார். நம்பினேன். இனி அவருக்கு வாக்களிக்க மாட்டேன்” என்றார்.

அதே ஊரில், “எனது நண்பர்கள் பலர் படித்து விட்டு வேலை கிடைக்காமல் நகரத்திலிருந்து திரும்பி வந்து விட்டார்கள்” என்றார் டீக்கடை வைத்திருக்கும் பப்லு ஷைனி என்னும் இளைஞர்.

‘பெண் குழந்தைகள் கல்வி கற்க வேண்டிய அவசியத்தை’ லாப நோக்கற்ற ஒரு குழுவிற்காக மகாராஷ்டிராவில் வீடு வீடாக பிரச்சாரம் செய்தவர் ஸ்ரீகாந்த் தத்தாத்ரேயா. முப்பது வயதாகும் அவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவருக்கு மாதம் ரூ.10000/- வரை கிடைக்கிறது. அவரது அண்ணன் ஆட்டோ ரிக்‌ஷா ஒட்டுகிறார். அவருக்கு மாதம் 8000 கிடைக்கிறது. இரண்டு பேரின் வருமானத்தில்தான் தத்தாத்ரேயா, அவரது பெற்றோர்கள், அண்ணன், அண்ணி,. அவர்களது இரண்டு குழந்தைகள் அடங்கிய குடும்பம் வாழ வேண்டும்.
The story of the lying man (பொய் மனிதனின் கதை 11) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies Historyஇரண்டு வருடங்களுக்கு முன்பு ரெயில்வேத் தூறையில் அறிவிக்கப்பட்ட 90,000 பணிகளுக்கு 2.8 கோடி பேர் விண்ணபித்து இருந்தார்கள். இந்த ஒரு வரிச் செய்தியில் இந்தியாவின் வேலையில்லாத் திண்டாட்டமும், இளைஞர்களின் அவல நிலையும் அப்பட்டமாய் தெரியும்.

ஒவ்வொரு வருடமும் படித்து முடிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை பத்து லட்சம். படிக்காத இளைஞர்களின் எண்ணிக்கை அதை விட அதிகம். அவர்களின் எதிர்காலத்திற்கும் நிரந்தர வருமானத்திற்கும் வழி எதுவும் ஏற்படுத்தவில்லை.

130 கோடி பேர் மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 46.7 கோடி பேர் வேலை பார்ப்பதாகவும், அதில் 50 சதவீதம் சுயதொழில் செய்கிறவர்கள். 33 சதவீதம் அன்றாடம் காய்ச்சிகள். எஞ்சிய 17 சதவீதம் பேரே நிரந்தர வேலையில் இருக்கிறார்கள். ப்ளும்பெர்க் ஆய்வு முடிவுகள் இப்படித்தான் சொல்கின்றன.

கொடுமை என்னவென்றால் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படாதது மட்டுமல்ல, இருந்த வேலைகளும் ஒழிக்கப்பட்டு இருந்தன. இருக்கும் காலியிடங்களுக்கும் ஆட்கள் எடுப்பதில்லை. சுதந்திர இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதத்தைத் தாண்டி இருக்கிறது. இதுவும் சரியான தரவு இல்லை, உண்மை இன்னும் மோசமானது என்கிறார்கள் ஆய்வாளர்கள். வேலை தேடித் தேடியே ஒரு பாதுகாப்பான நிலைக்கு வருவதற்குள் எங்கள் இளமையான காலம் கழிந்து விடும் போலிருக்கிறது என கவலை தெரிவிக்கின்றனர் இந்திய இளைஞர்கள்.

2013 நவம்பரில், “ப.சிதம்பரம் அவர்களே! பொருளாதாரம் மோசமாக இருக்கிறது. இளைஞர்கள் வேலை வேண்டும் என்கிறார்கள். சில்லறை அரசியல்களில் நேரத்தை செலவழிக்காமல் கையிலிருக்கும் வேலையைக் கவனியுங்கள்” என அப்போதைய நிதியமைச்சரைப் பார்த்து கிண்டலாய் பேசிய மோடி இப்போது கார்ப்பரேட்களுக்கு இந்தியாவையே விலை பேசும் ‘பெரிய அரசியலில்’ ஈடுபட்டிருந்தார்.

வருடத்திற்கு இரண்டு கோடி பேருக்கு வேலை அளிப்பதாக மோடி சொல்லவே இல்லை என்று பிஜேபி சொல்ல ஆரம்பித்து விட்டது. லக்னோவில் நடந்த ஒரு தேர்தல் பிரச்சாரத்தில் வருடத்திற்கு ஒரு கோடி பேருக்கு வேலை கொடுப்பதாகத்தான் பேசினார். இரண்டு கோடி என்று காங்கிரஸ் பொய் சொல்கிறது என்றார்கள். அதற்கும் காங்கிரஸை பொறுப்பாக்கினார்கள். மொத்தப் பிரச்சினையையும் திசை திருப்புவதற்கு மோடி அல்லும் பகலும் அயராமல் உழைத்துக் கொண்டிருந்தார்.
The story of the lying man (பொய் மனிதனின் கதை 11) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies Historyவருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் சென்ற வருடம் 55 லட்சம் பேர் புதிதாக பதிவு செய்யப்பட்டு இருப்பதை மோடி காண்பித்தார். அவையெல்லாம் புதிய வேலை வாய்ப்புகள் என்று கணக்கு சொன்னார். புதிய பென்ஷன் திட்டத்தில் இணைந்திருக்கும் புதிய கணக்குகளையும் வேலை வாய்ப்புகள் உருவக்கப்பட்டதன் எதிரொலியே என்றார். இப்படியே கூட்டிக் கூட்டி வருடத்திற்கு இரண்டரை கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாய் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அதையே தனது இணையதளத்திலும் சாதனையாக வெளியிட்டுக் கொண்டார்.

உண்மை என்னவென்றால், அணி திரட்டப்படாத தொழிலாளர்களாய் சில வருடங்கள் வேலை பார்த்து வருபவர்களுக்கு பி.எஃ பிடித்தம் செய்யப்பட்டு இருந்தன. அவைகளை புதிய வேலைவாய்ப்புகள் என்று ஜோடிப்பது எப்பேர்ப்பட்ட மோசடி.

அரசு சார்பில் தேவையான புள்ளி விபரங்கள் இல்லையென்பதும், இருக்கும் புள்ளி விபரங்களை மறைப்பதும் மோடி ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பிறகு தொடர்கதையாகி விட்டது. தங்களுக்குச் சாதகமான, ஆதாரமற்ற தனியாரின் புள்ளி விபரங்களை வெளியிட்டு அதன் மூலம் ’எல்லோரும் நலமாக இருக்கிறார்கள்’ என்று பொய்யான தோற்றத்தை காட்டுவதுதான் மோடியின் ஆட்சி. பொய்களின் ஆட்சி.

நிதியமைச்சராயிருந்த அருண் ஜெட்லியோ தனது வாதத் திறமையால் இன்னொரு தர்க்கத்தை முன்வைத்தார். “வேலை வாய்ப்புகள் இல்லையென்றால் இந்நேரம் இளைஞர்கள் தெருவில் இறங்கி போராடி இருப்பார்கள். கடந்த ஐந்து வருடங்களில் அப்படி எந்த போராட்டமும் நடைபெறவில்லை” என்றார். நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டமே இல்லையாம்.
The story of the lying man (பொய் மனிதனின் கதை 11) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History“வேலை வாய்ப்புகள் இருக்கவேச் செய்கின்றன. பக்கோடா விற்று ஒரு நாளைக்கு இருநூறு ருபாய் சம்பாதிக்க முடியும்” என்றார் மோடி ஒருநாள் வாயைத் திறந்து. அவரது skill India என்னவென்று அப்போதுதான் இளைஞர்களுக்கு புரிந்தது. அன்றைக்கு மோடி விவேகானந்தர் முகமூடியை கழற்றி வைத்திருக்க வேண்டும்.

Tourism, Physical infrastructure, Manufacturing, Global manufacturing hub, Agriculture, Foreign Direct investment, Skill Focusing, Massive open online courses, Education and Research, Sports, IT sector, Entrepreneurship என்று எவ்வளவு வேலைகளுக்கான வாய்ப்புகளை பிஜேபி தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது. கடைசியில் பக்கோடாவில் போய் நின்றது.

டெல்லி ஜந்தர் மந்தரில் 2019 பிப்ரவர் 7ம் தேதி முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியாவின் இளைஞர்கள் கூடி மோடி அரசுக்கு எதிராக குரல் எழுப்பினர். ’வாருங்கள் அருண் ஜெட்லி, இப்போது பேசுங்கள்’ என அவரையும் அழைத்தார்கள்.

The story of the lying man (பொய் மனிதனின் கதை 11) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History
Indian students march as they take part in the ‘Young India Adhikar March’ protest rally, in New Delhi on February 7, 2019.

“வருடத்திற்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பளிப்பதாக மோடி வாக்குறுதியளித்தார். ஆனால் அரசுத்துறையில் இருக்கும் 25 லட்சம் வேலைவாய்ப்புகளையும் கூட நிரப்பவில்லை” என்றார் மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து டெல்லிக்குப் போராட வந்திருந்த ஸ்ரீகாந்த் தத்தாத்ரேயா.

“பக்கோடா விற்பதும் வேலைதான் என பிரமர் சொல்வது வேதனையாய் இருக்கிறது. அது வேலையில்லை என நாங்கள் சொல்லவில்லை. ஆனால் அதற்கு எதற்கு உயர் படிப்பு? என்றார் பிரியா தாக்கூர்.

“பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்றவை சிறு வியாபாரிகளின் தொழில்களை எல்லாம் முடக்கி விட்டன. அங்கு வேலை பார்த்தவர்களின் வேலைகளும் பறி போய் விட்டன“ என்றார் 29 வயதான பங்க கலியா.

அதிகாரத்துக்கு வருவதற்கு தேவைப்பட்ட புதிய இந்திய வாக்காளர்களாகிய இளைஞர்கள், அதிகாரத்துக்கு வந்த பிறகு மோடிக்குத் தேவைப்படவில்லை. மோடியின் இந்தியாவுக்கு சக்தியாய் இருப்பவர்கள் கார்ப்பரேட்களே என்பதையும், மோடி அவர்களின் காவல்காரன் என்பதையும் டெல்லி போராட்டத்திற்கு வந்திருந்தவர்கள் புரிந்திருந்தார்கள்.

சமீபத்தில் இந்தியா டுடே நடத்திய கருத்துக் கணிப்பில், மோடியின் செல்வாக்கு வெகுவாக குறைந்து விட்டிருந்தது. 2019ல் 66 சதவீதம் ஆதரவு பெற்று யாரும் அருகில் இல்லாதவாறு காட்சியளித்தவர் 2020ல் 38 சதவீதமாக உயரம் குறைந்து 2021ல் 24 சதவீதமாக குள்ளமாகிப் போயிருந்தார்.

கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 86 சதவீதம் தங்கள் அன்றாட வாழ்க்கை குறித்தே கவலைப்பட்டு இருந்தார்கள். மோடியின் ஏழு ஆண்டு கால ஆட்சியின் மீது கரு நிழல் மெல்ல படர ஆரம்பித்து இருக்கிறது. அவரது பொய்கள் உருவாக்கியது அது.

இந்திய இளைஞர்கள் வேலை இழந்தது மட்டுமல்ல. எதிர்காலத்திற்கான நம்பிக்கையையும் இழந்து வருகின்றனர்.  அவர்களுக்கு நம்பிக்கையளிப்பதில்தான் தேசத்தின் எதிர்காலம் இருக்கிறது. இல்லையென்றால் இந்த அவநம்பிக்கைகளையும் கூட பசிச சக்திகளே வேறு உத்திகளில் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும். அதற்கென்று சில பொய்களை மோடி வைத்திருக்கவே செய்வார்.

பொய் மனிதனின் கதை அத்தியாயம் 10 – ஜா. மாதவராஜ்

பொய் மனிதனின் கதை அத்தியாயம் 10 – ஜா. மாதவராஜ்



“அப்பாவிகளின் நம்பிக்கையே, பொய்யர்களின் முக்கியமான ஆயுதம்”
– ஸ்டீபன் கிங்

2019 நவம்பரில் மத்தியப்பிரதேசத்தில் நடந்தது இது. பாரத ஸ்டேட் வங்கியின் குர்கான் கிளையில் ஹுக்கும் சிங் என்பவர் கணக்கு வைத்திருந்தார். வீடு கட்டுவதற்காக பணத்தை தன் கணக்கில் செலுத்தி சேமித்து வந்தார். ஒருநாள் கணக்கை சரி பார்க்கும்போது அதிர்ந்து போனார். தன் கணக்கில் இருந்து அவரே அவ்வப்போது பணம் எடுத்து வந்ததாக வங்கியின் ஆவணங்கள் காட்டின. வங்கியின் அதிகாரிகளிடம் புகார் அளித்த பிறகுதான் எல்லாம் தெரிய வந்தது.

அந்த கிளையில் இரண்டு வாடிக்கையாளர்கள் ஹுக்கும் சிங் என்ற பெயரில் இருந்திருக்கிறார்கள். இருவருக்குமே அந்தக் கிளையில் ஒரே சேமிப்புக்கணக்கு எண்ணைத் தெரியாமல் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இரண்டு பேரின் பாஸ்புக்கும் ஒன்று போலவே இருந்தன, பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்களைத் தவிர!

ஒரு ஹுக்கும் சிங் செலுத்திய பணத்தை இன்னொரு ஹுக்கும் சிங் எடுத்துக்கொண்டு இருந்திருக்கிறார். உண்மை தெரியவந்தவுடன் பணத்தை எடுத்த ஹக்கும் சிங் சொன்னதுதான் ஹைலைட். ‘இது மோடி போட்ட பணம் என்று நினைத்தேன்”

நம்பும்படி இல்லைதான். தனது மோசடி தெரிந்தவுடன் அதனை சமாளிப்பதற்காகவோ அல்லது தன் தரப்பை நியாயப்படுத்துவதற்கோ ஹுக்கும் சிங் சொல்வதாகத் தெரிகிறது. வங்கியின் மீது தவறு இருப்பதால் இது சிக்கலான பிரச்சினைதான். பீகாரில் நடந்த சம்பவத்தை அப்படிக் கருத முடியவில்லை.

பக்தியார்பூரில் வசிக்கும் 30 வயதான ரஞ்சித் தாஸ் அங்குள்ள தட்சண கிராம வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கிறான். அதில் இன்னொருவருடைய பணம் 5.5 லட்சம் தவறுதலாக 2021 மார்ச் மாதத்தில் வரவு வைக்கப்பட்டு விட்டது. அவன் அந்தப் பணத்தை எடுத்து செலவு செய்து வந்திருக்கிறான்.

உண்மையெல்லாம் தெரிந்த பிறகு வங்கி அதிகாரிகள் ரஞ்சித் தாஸை தொடர்பு கொண்டு கேட்டிருக்கிறார்கள். தன்னால் திருப்பித் தர முடியாது என்றும், எல்லாவற்றையும் செலவு செய்து விட்டதாகவும் சொல்லி இருக்கிறான். “உன் பணம் இல்லை என்று தெரிந்த பிறகு ஏன் எடுத்தாய்” என்று போலீஸ் கேட்டது.
The story of the lying man (பொய் மனிதனின் கதை 10) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History“என்னுடைய கணக்கில் 5.5 லட்சம் வரவு வைக்கப்பட்டதாக என் மொபைலுக்கு செய்தி வந்தது. பிரதமர் மோடி ஒவ்வொருத்தர் கணக்கிலும் பதினைந்து லட்சம் போடுவதாகச் சொல்லி இருந்தார். அதன் முதல் தவணையாக ஐந்தரை லட்சத்தை அனுப்பி இருப்பதாக நினைத்துக் கொண்டேன். அந்தப் பணத்தை நான் செலவழித்து விட்டேன்.” என்று சொல்லி இருக்கிறான்.

மொத்தப் பணத்தையும் ஒரே தடவையில் அவசரம் அவசரமாகவும் எடுக்கவில்லை ரஞ்சித் தாஸ். தன்னுடைய பணம் என்பதாகவே பல தவணைகளில் மூன்று மாதங்களாகத்தான் எடுத்திருந்தான். ஆகஸ்ட் மாதம்தான் வங்கிக்கு தெரிய வந்திருக்கிறது. ரஞ்சித் தாஸ் உண்மையிலேயே அப்பாவியாகவும் கருத இடமிருக்கிறது. இந்த இரண்டு சம்பவங்களிலும் குறித்து வைத்துக் கொள்ளக் கூடிய ஒன்று உண்டு. மோடி அப்படி சொல்லவில்லை என்றோ, ஒரு பிரதமரின் பெயரையே தங்கள் மோசடி காரியத்துக்கு பயன்படுத்தினார்கள் என்றோ சம்பந்தப்பட்டவர்கள் மீது எந்த குற்றமும் சுமத்தப்படவில்லை. நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஊழலற்றவராகவும், வளர்ச்சி நாயகனாகவும், தேசத்தை மீட்க வந்த இரட்சகனாகவும் பெரும் முழக்கங்களோடும் பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மோடி விமானத்தில் பறந்து பறந்து 2014 பாராளுமன்ற தேர்தலின் போது பேசியதுதான் இது:

“இந்தியாவில் உள்ள மோசடிப் பேர்வழிகள் தங்கள் கருப்புப் பணத்தை வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் டெபாசிட் செய்கிறார்கள் என்று உலகமே சொல்கிறது. வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் பதுக்கப்பட்டு இருப்பது நமது நாட்டின் பணம். என் சகோதர சகோதரிகளே, நீங்கள் சொல்லுங்கள், அந்த கருப்பு பணம் திரும்பி வர வேண்டுமா இல்லையா? திருடர்களால் பதுக்கி வைக்கப்பட்ட ஒவ்வொரு பைசாவையும் நாம் திரும்பப் பெற வேண்டாமா? அந்தப் பணத்தின் மீது நம் மக்களுக்கு உரிமை இல்லையா?” என வீராவேசமாக கேள்வி கேட்டார். “வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் அந்தத் திருடர்களால் பதுக்கப்பட்ட பணத்தை மட்டும் திரும்பக் கொண்டுவந்தால், ஒவ்வொரு ஏழை இந்தியனும் 15 லட்சம் முதல் 20 லட்சம் வரை இலவசமாகப் பெறுவான்.” என பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பரிக்க போகுமிடமெல்லாம் பெருஞ்சத்தமாய் கூவினார்.

மோடி பேசியதை ஊடகங்கள் தொடர்ந்து ஒளி பரப்பின. பிஜேபியின் தலைவர்களும், தொண்டர்களும் “மோடி பிரதமரானால் உங்கள் ஒவ்வொருவருக்கும் பதினைந்து லட்சம் கிடைக்கும்” என்று வீடு வீடாய் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். 100 நாட்கள் ஆனது. ஒன்றும் நடக்கவில்லை. மக்கள் முணுமுணுத்தார்கள். ஒரு வருடம் ஆனது வரவில்லை. கேள்விகள் எழுந்தன. மோடி தேர்தலுக்குப் பிறகு அந்த 15 லட்சம் குறித்து வாயேத் திறக்கவில்லை. பிஜேபியின் தலைவர்கள்தாம் ஆள் ஆளுக்காய் ஒவ்வொன்று பேசினார்கள்.

பாஜக தலைவர் அமித்ஷா சிரித்துக்கொண்டே “அது ஒரு எலக்‌ஷன் ஜும்லா” என்றார். தேர்தல் நேரத்தில் எல்லோரும் சொல்வதுதானே, அதையா சீரியஸாக எடுத்துக் கொண்டீர்கள் என்ற கிண்டல் தொனியில் பதில் இருந்தது. “நாங்கள் ஜெயிப்போம் என்று நினைக்கவில்லை. அதனால் அப்படியெல்லாம் வாக்குறுதிகள் கொடுத்தோம்” என்றார் நிதின் கட்கரி.
The story of the lying man (பொய் மனிதனின் கதை 10) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History“நிச்சயம் கொடுப்போம். கொஞ்சம் கொஞ்சமாக கொடுப்போம்” என சமூக நிதித்துறைக்கான இனையமைச்சர் ராம்தாஸ் அதவாலே. “அப்படி மோடி சொல்லவே இல்லை.”என்று மறுத்தார் ராஜ்நாத்.

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேட்டார்கள். அருண் ஜெட்லி எழுந்து, “அது ஒரு உதாரணத்திற்குச் சொன்னது.” என்றார். “வெளிநாட்டில் இருக்கும் கருப்புப்பணத்தை எல்லாம் கொண்டு வந்தால் ஓவ்வொரு இந்தியருக்கும் 15 லட்சம் பெறுமான பணம் கிடைக்கும் என்றால் வெளிநாட்டில் எந்த அளவுக்கு கருப்புப்பணம் இருக்கிறது என்பதை புரிய வைப்பதற்காக” என்ற தோனியில் சொல்லி தன் அறிவை புரிய வைத்தார்.

இதற்கெல்லாம் ஒரு படி மேலே போய் இராஜஸ்தான் மாநில பிஜேபி தலைவர் மதன்லால் சைனி, “மோடி பிரதமரான பிறகு மத்திய அரசும், மாநில அரசும் அறிவித்திருக்கும் பல்வேறு நலத் திட்டங்கள் மூலம் மறைமுகமாக ஏழை எளிய மக்களுக்கு 15 லட்சம் ருபாய் கொடுக்கப்பட்டு விட்டது” என மொத்தமாக ஊற்றி மூடப் பார்த்தார்.

மோடியோ “சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தி பாகிஸ்தானை நம் முன்னே மண்டியிடச் செய்தோம். காங்கிரஸ் நம் இராணுவ வீரர்களை நம்பாமல் கேள்விகள் கேட்கிறது. தேச துரோகிகள்” என்று மக்களின் கவனத்தை திசை திருப்ப தேசபக்தி மேட்டரை கையிலெடுத்தார். உடனே “Modi slams”, “Modi attacks”, “Modi’s masterstroke”, “Modi set agenda” என்று ஊடகங்கள் மாற்றி மாற்றிப் போட்டு ‘அவரு யாரு தெரியுமா’ என பிலிம் காட்டிக்கொண்டு இருந்தார்கள்.

முறையான பதில் எங்கிருந்தும் வராததால் இராஜஸ்தானில், ஜலாவர் மாவட்டத்திலிருந்து, கன்னையா லால் என்பவர், பிரதமர் அலுவலகத்துக்கு 8.2.2016 அன்று கீழ்கண்ட கேள்விகளை RTI மூலம் கேட்டே விட்டார்.
The story of the lying man (பொய் மனிதனின் கதை 10) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History“தேர்தலின் போது வெளி நாட்டில் இருந்து கறுப்புப் பணத்தை மீட்டு வந்து, ஒவ்வொரு இந்தியனுக்கும் 15 லட்சம் கொடுக்கப் போவதாக மரியாதைக்குரிய பிரதமர் மோடி கூறினார். அது என்ன ஆனது?

தேர்தலின்போது ஊழலை ஒழிப்பேன் என்று மரியாதைக்குரிய பிரதமர் கூறினார். ஆனால் 90 சதவீதம் அதிகரிக்கத்தான் செய்திருக்கிறது. ஊழலை ஒழிப்பதற்கான புதிய சட்டத்தை எப்போது கொண்டு வரப் போகிறார்?

அரசு Smart cities உருவாக்குகிறது. ராஜஸ்தானில் ஒரு கிராமம் கூட முன்னேறவில்லை. எந்தெந்த கிராமங்களின் நிலைமை மோசத்திலிருந்து படு மோசமாகி இருக்கிறது என்பதை அறிய விரும்புகிறேன். எப்போது இராஜஸ்தான் கிராமங்களுக்கு சாலை வசதிகள் செய்து தரப்படும்?”

பிரதமர் அலுவலகத்திலிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. கன்னையா விடவில்லை. சரியாக 30 நாட்கள் காத்திருந்து 9.3.2016 அன்று Central Information Commissionக்கு புகார் செய்தார்.

வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை நடைபெற்றது. இறுதியில் 30.8.2016 அன்று, கன்னையாகுமாரின் கேள்விகளுக்கு 15 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
The story of the lying man (பொய் மனிதனின் கதை 10) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies Historyஅதற்குப் பிறகு, கன்னையா லால் குறித்தும், அவருக்கு பிரதமரிடமிருந்து கிடைத்த பதில் குறித்தும் எந்தத் தகவலும் தெரியவில்லை. ஆனால் மக்கள் அந்த 15 லட்சத்தை மறந்த பாடில்லை. 2019 ஜூலை 30ம் தேதி மூணாறு தபால் அலுவலகத்தில் திரண்ட மக்களின் கூட்டத்தை ஒரு சிறு செய்தியாக இந்த தேசம் கடந்து விட முடியாது.

தேர்தலின் போது மோடி அறிவித்த பதினைந்து லட்சம் ருபாயை தபால் ஆபிஸ் மூலம் வழங்கப்பட இருப்பதாகவும், தபால் நிலையத்தில் கணக்கு ஆரம்பியுங்கள் என்று கிடைத்த எதோ தகவலை வைத்து எஸ்டேட்களிலும், தோட்டங்களிலும் வேலைபார்க்கும் தொழிலாளிகள் தங்கள் ஒருநாள் கூலியை விட்டு விட்டு, லீவு போட்டு அங்கு காத்து நின்றார்கள். எல்லோர் கைகளிலும் நூறு ருபாயும், ஆதார் அட்டையும், இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்களும் இருந்தன.

அந்த எளிய மக்கள் நீண்ட வரிசையில் அப்படி காத்துக் கிடந்தது இந்தியாவின் ஒரு மூலையில் இருக்கும் மூணாறில் என்று மட்டும் நினைத்தாலோ, அவர்களை முட்டாள்கள் என்றோ நினைத்தால் நம்மைப் போன்ற முட்டாள்கள் யாருமில்லை. மூணாறு அந்த நாளில் இந்த தேசத்தின் குறியீடாக இருந்தது.

தங்கள் வாழ்வில் எதாவது ஒரு அதிசயம் நிகழ்ந்து விடாதா? அன்றாடம் படும் துயரங்களுக்கு எதாவது ஒரு வழி கிடைக்காதா என காலமெல்லாம் ஏங்கிப் போனவர்கள் அவர்கள். என்றாவது ஒருநாள் “கடவுள் கண்னைத் திறப்பார்” என்று காத்திருப்பவர்கள் அவர்கள்.

தேர்தல் நேரத்தில் சொன்ன வெறும் வார்த்தைகள் அவை என அவர்கள் அதிலிருந்து மீள முடியவில்லை என்பதை விட மீள விரும்பவில்லை என்பதுதான் சரியாக இருக்கும். அதிகாரத்துக்கு வந்ததும் அதை மோடியும், பிஜேபியும் மறந்து விட்டார்கள் என்னும் உன்மையை உள்ளுக்குள் அவர்களால் இன்னும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

மக்களின் துயரமான வாழ்வையும், அவலமான நிலையையும் வைத்து ஏமாற்றுவதைப் போல கொடிய காரியம் எதுவுமில்லை. அதை 130 கோடி மக்கள் நிரம்பிய தேசத்தில் அவர்கள் சர்வ சாதாரணமாக நிகழ்த்த முடிவது நம் சமூகத்தை அதிர்ச்சியோடும், பரிதாபமாகவும் பார்க்க வைக்கிறது.

மூணாறு போலீஸ் தரப்பில் வந்து, அது பொய்யான செய்தி என்று எடுத்துக் கூறி, அனைவரையும் கலைந்து செல்லுமாறு அறிவித்தார்கள். ஆனால் மக்கள் போலீஸ் சொன்னதை நம்பாமல் அங்கேயே இருந்திருக்கிறார்கள். அவர்களை திருப்பி அனுப்புவது பெரும் பாடாகி இருக்கிறது.

இப்படி பொய்யான செய்திகளை பரப்புகிறவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என மூணாறு காவல் நிலைய கண்காணிப்பாளர் அறிவித்தார். யார் பரப்பியது என்பது அகில உலகத்துகே தெரிகிறது. யார் அவர் மீது வழக்குப் பதிவது? கைது செய்வது? அதற்கும் இந்த தேசத்தின் பிரஜை ஒருவர் துணிந்து விட்டார்.
The story of the lying man (பொய் மனிதனின் கதை 10) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History2020ம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலத்தில், ராஞ்சி ஹை கோர்ட்டில், ஹெச்.கே.சிங் என்னும் வழக்கறிஞர், “மோடியும் அமித்ஷாவும் மக்களை ஏமாற்றி விட்டார்கள் என வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். இந்திய தண்டனைச் சட்டத்தின் (Indian penal Code) செக்‌ஷன் 415 (cheating), செக்‌ஷன் 420 (dishonesty) மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் (Representation of the people Act) செக்‌ஷன் 123 (b) பிரகாரம் வழக்கு பதியப்பட்டு இருந்தது.

2020 பிப்ரவரியில் ஆரம்பித்த விசாரனையின்போது, “2013-2014ல் நடந்த விஷயத்திற்கு இப்போது ஏன் வழக்குத் தொடுக்கிறீர்கள்” என நீதிபதிகள் தரப்பில் கேள்வி கேட்கப்பட்டது.

“தேர்தலின் போது சி.ஏ.ஏவை (CAA) கொண்டு வருவதாகச் சொன்னோம் அதனால் இப்போது கொண்டு வருகிறோம் என மோடியும் அமித்ஷாவும் சொன்னார்கள். அப்படித்தானே பதினைந்து லட்சம் ருபாய் எல்லோர் கணக்கிலும் வரவு வைக்கப்படும் எனச் சொன்னார்கள். அதை சொல்லித்தானே ஆட்சிக்கு வந்தார்கள். இப்போது அதனை நிறைவேற்றவில்லை என்றால், மக்களை ஏமாற்றுவதாகத்தானே அர்த்தம்?” என்று வாதாடி இருக்கிறார் ஹெச்.கே.சிங். வழக்கு பின்னொரு தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. அந்த வழக்கின் தற்போதைய நிலை, போக்கு என்னவென்று தெரியவில்லை.

மோடி மீதும், அமித் ஷா மீது எத்தனையோ வழக்குகள் தொடுக்கப்பட்டு இருந்தன. அதிலிருந்தெல்லாம் அவர்கள் விடுவிக்கப்பட்டும் விட்டார்கள். எல்லாம் எப்படி என்று தெரியும். இந்த வழக்கின் முடிவு என்னவாகும் என்றும் தெரியும்.

ஆனால் இந்த நாட்டின் பிரதமர் மீது, இந்த நாட்டின் பிரஜை ஒருவர் cheating case தொடர்ந்திருப்பது எவ்வளவு அவமானகரமானது. ஏழெட்டு வருடங்களுக்கு முன்னால் மோடி சொன்ன பொய்யை மக்கள் இன்னும் மறக்கவில்லை என்பது வரலாற்றில் எவ்வளவு முக்கியமானது.

References:
* ‘PM Modi sent me money’: Bihar man refuses to return Rs 5.5 lakh to bank, arrested (Times of India, Sep 15, 2021)
* Huge crowd flocks to Munnar post office to get ‘Rs 15 lakh promised by Modi’ (Mathrubhumi, Jul 30, 2019)
* Thought Modi ji Was Giving This Money’, PM’s Promise of Rs 15 Lakh Landed This Man in Trouble – Here’s How (India.com, Nov 22, 2019)
* BJP has fulfilled PM Modi’s campaign promise of giving Rs 15 lakh: Rajasthan party chief (Hindustan times, jul 18, 2018)
* Twitter remembers PM Modi’s ‘Rs 15 lakh promise’, trends #15LakhAaGaye as India crosses 15 lakh COVID-19 cases (Free Press, Jul 29, 2020)
* Rs 15 lakh promise: PM Modi, Amit Shah face charges of cheating, dishonesty in Ranchi court (India Today, Feb 3, 2020)

The story of the lying man (பொய் மனிதனின் கதை 9) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History

பொய் மனிதனின் கதை அத்தியாயம் 9 – ஜா. மாதவராஜ்



“பொய்யர்கள் ஒருபோதும் மனதார மன்னிப்பு கேட்பதில்லை.
வஞ்சகம் அவர்களது முழுமையான வாழ்க்கை முறையாகும்.
தங்கள் பொய்யின் விளைவுகளைப் பற்றி யோசிக்காமல்
தங்களை முன்னிறுத்திக்கொண்டே இருப்பார்கள்.
மேலும் மேலும் பொய்களை சொல்லிக்கொண்டே இருப்பார்கள்”
                                               – கேத்தி பர்ன்ஹாம் மார்ட்டின்

“நாம் காரை ஒட்டிச் செல்கிறோம். அல்லது வேறொருவர் கார் ஒட்ட, நாம் பின்னிருக்கையில் அமர்ந்து செல்கிறோம். அப்போது ஒரு நாய்க்குட்டி குறுக்கே வந்து சக்கரத்தில் மாட்டிக் கொள்ள நேரிட்டால் நமக்கு வேதனையாய் இருக்குமா இருக்காதா? நானும் மனிதன்தான். எங்காவது கெட்டது நடக்கும்போது கவலை வரத்தான் செய்யும்”The story of the lying man (பொய் மனிதனின் கதை 9) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies Historyகுஜராத் கலவரங்களுக்கு காரணமானவர் என குற்றம் சாட்டப்பட்ட மோடி, 2013ம் ஆண்டு சிறப்பு புலனாய்க் குழுவால் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்ட பின்பு வெளியிட்ட கருத்து அது. “கலவரங்களுக்காக நீங்கள் வருத்தப்படுகிறீர்களா?” என்பது அவரிடம் பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு மோடி அளித்த பதில் அது.மோடி கவலைதான் பட்டிருந்தார். வருத்தப்படும் தொனி கூட அவரது வார்த்தைகளில் இல்லை. அப்படி கார்ச்சக்கரத்தில் மாட்டிக் கொள்லாமல் தப்பிப் பிழைத்த இரண்டு ‘நாய்க் குட்டிகளை’ 17 வருடங்கள் கழித்து ராய்ட்டர்ஸ் நிறுவனம் போய் சந்தித்தது.

The story of the lying man (பொய் மனிதனின் கதை 9) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History
Pooja Jadhav, 18, poses with her mother at the entrance of her house in Ahmedabad

குஜராத்தில் அகமதாபாத்தில் குப்பை கொட்டும் இடம் அருகே வசித்து வந்த முகமது ரஃபிக்கும், சேரிப்பகுதியில் வசித்து வந்த பூஜா ஜாதவும்தான் அவர்கள். இருவருமே 2002ம் ஆண்டு குஜராத் கலவரங்களில் தப்பிப் பிழைத்த போது, ஒரு வயதுக் குழந்தைகள்.

2019ல் அவர்களுக்கு பதினெட்டு வயதாகி முதன் முறையாக ஓட்டுப் போட தகுதியான பிறகு, ராய்ட்டர்ஸ் நிறுவனம் இருவரையும் அருகருகே நிறுத்தி பேச வைத்தது. “காமிக்ஸ் புத்தகங்களைப் படித்தோ, சுவாரசியமான கற்பனைக் கதைகளைக் கேட்டோ குழந்தைகள் வளருவார்கள். நாங்களோ இந்து முஸ்லீம் கலவரங்களைப்பற்றி கேட்டுத்தான் வளர்ந்தோம்” முகமது ரஃபீக் தனது செல்போனை நோண்டியபடி பேசினான். இழப்புகளும், வலியும் அவனது வார்த்தைகளில் தோய்ந்திருந்தன.

ஒரு மாத காலம் நீடித்த கலவரங்களின் போது நரோடா பாட்டியாவில் மட்டும் 800 முஸ்லீம்களும் 255 இந்துக்களும் கொல்லப்பட்டனர். அங்குள்ள சேரிப்பகுதியில் ஃபர்னிச்சர் கடை வைத்திருந்தார் ரஃபீக்கின் தந்தை. மதவெறிக் கும்பல் அந்த கடைக்குத் தீ வைத்தது. தப்பி ஓடும்போது ரஃபிக்கின் தந்தை காலில் போலீஸின் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. உயிருக்குப் பயந்து நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்தனர். பின்னர் அகமதாபாத்தில் இருக்கும் மிகப் பெரிய குப்பைக் கொட்டும் இட த்திற்கு அருகில் வசித்து வந்தனர். “பிஜேபியின் மீது இருக்கும் ஆத்திரம் என் வாழ்வின் ஒரு பகுதியாகி விட்டது” என்றான் ரஃபீக்.

2002ல் ரஃபீக் குடும்பம் கொடூரமாக விரட்டப்பட்ட இடத்திற்கு அடுத்த சந்திலிருந்து அப்போது தப்பித்த இன்னொரு ஒரு வயது குழந்தைதான் பூஜா ஜாதவ். அவளது பார்வை முற்றிலும் வேறாக இருந்தது. கலவரம் முடிந்த பிறகு, சேதமடைந்திருந்த தங்கள் வீட்டிற்கே திரும்ப வந்து வாழ்த் தொடங்கியது அவளது குடும்பம். ஆனால் பக்கத்து வீடுகளில் ஏற்கனவே வசித்து வந்த முஸ்லீம்களுக்கு பதிலாக வேறு முஸ்லீம்கள் இருந்தார்கள். ”எங்களுக்கு வேறு வழியில்லாமல் அங்கு மாட்டிக் கொண்டோம்.” என்றாள் பூஜா.

“மோடியின் வெற்றி என் அம்மாவுக்கு சந்தோஷமளித்தது. அம்மாவின் சந்தோஷம் எனக்கு சந்தோஷம் தந்தது. எனக்கு முஸ்லீம்கள் மீது வெறுப்பு இல்லை. ஆனால் மோடி பிடிக்கும்.” என்றாள். “பிஜேபி ஆட்சி செய்யும் போது, பக்கத்தில் வசிக்கும் முஸ்லீம்களால் எங்களுக்கு தொந்தரவு வராது” என்று தொடர்ந்தாள். “முஸ்லீம்களுக்கும் இந்துக்களுக்கும் இடையில் இடைவெளியும், எல்லையும் இருக்க வேண்டும்” என்பதே அவளது முடிவான கருத்தாக இருந்தது. ”மோடி முஸ்லீம்களைப் பற்றி கவலைப்பட்டிருந்தால் நாங்கள் எப்படி நாத்தம் பிடித்த குப்பையில் கிடந்து வாழ்கிறோம் என்பதை வந்து பார்த்திருப்பார். முஸ்லீம்களை அவமதிக்கும் அவரது செயலே எனது அரசியல் முடிவை தீர்மானித்தது” என்றான் ரஃபீக்.

The story of the lying man (பொய் மனிதனின் கதை 9) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History
Mohammad Rafiq inside his house with his parents

முகமது ரஃபீக்கும், பூஜா ஜாதவ்வும் குஜராத் கலவரங்களிலிருந்து உருவானவர்கள். இருவரின் வாழ்க்கை நிலைமையில் பெரிய வித்தியாசமில்லை. இரண்டு குடும்பங்களும் அடுத்த வேளை உணவுக்கு அல்லல் பட்டன. இருவருமே படிக்கவில்லை. தினமும் 10 மணி நேரத்துக்கு மேல் உழைத்தார்கள். ஒரு நிரந்தரமான வேலை, நல்ல காற்றோட்டமான சூழலில் வசிப்பிடம் வேண்டும் என்னும் கனவுகளைச் சமந்திருந்தார்கள். இருவரும் 2019 பாராளுமன்ற தேர்தலில் முதன் முறையாக ஒட்டு போட இருந்தார்கள். அவர்களின் ஒட்டு யாருக்கு என்பதை அறிவதுதான் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் நோக்கம். பதினேழு வருடங்களும் அவர்களுக்குள் எப்படி உறைந்து போயிருந்தன என்பதை அழுத்தமாக உணர முடிகிறது.

தங்கள் அன்றாட வாழ்வின் பிரச்சினைகள், அவைகளுக்கான தீர்வுகள், அதையொட்டிய அரசியல் என்று அவர்களது சிந்தனைகள் விரியாமல், காயடிக்கப்பட்டிருந்தது. உள்ளுக்குள் அச்சம், வன்மம், பாதுகாப்பற்ற உணர்வு எல்லாம் நிறைந்திருந்தது. அவர்களை தனித்தனியாய் இரண்டு கூறுகளாக்கி, இடையே காலம் கோடு கிழித்து வைத்திருந்தது. இதுதான் கலவரத்தால் பாதிக்கப்பட்ட குஜராத்தின் கதை. ஷாஜஹான் பனோவும் அப்படி தப்பிப் பிழைத்த இன்னொரு நாய்க்குட்டிதான். அவனும் கடும் வெறுப்பில்தான் இருந்தான்.

2002ம் ஆண்டு சிறுவனான அவன் தன் அம்மாவோடு அகமதாபாத்தின் முக்கிய சந்தையில் காய்கறிகள் விற்றுக் கொண்டிருந்த நாளில் கலவரம் வெடித்தது. பயத்தோடு அன்று இரவு முழுவதும் அந்த சந்தையிலேயே ஓளிந்திருந்த அவர்கள் அடுத்த நாள் நிவாரண முகாம்களுக்குச் சென்றனர். அங்கே தங்கள் உறவினர்களும், நண்பர்களும் என்ன ஆனார்களோ என பதற்றத்துடன் பல மூஸ்லீம்கள் காத்துக் கிடந்தனர்.

ஒரு மாதம் கழித்தே அவர்கள் குடும்பத்தில் இருந்தவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்தனர். எட்டு மாதங்களுக்குப் பிறகு அவர்களுக்கு சிட்டிசன் நகரில் ஒரு சிறிய வீடு ஒதுக்கப்பட்து. முஸ்லீம் தொண்டு நிறுவனம் ஒன்று கட்டித் தந்த குடியிருப்புகள் அவை. இன்னும் அங்கேதான் இருக்கிறார்கள். ஒல்லியாய் காணப்படும் ஷாஜஹானுக்கு இப்போது 23 வயது.

The story of the lying man (பொய் மனிதனின் கதை 9) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History
Citizen nagar Houses of Muslim Victims of Communal riots, 2002

“இப்படி வசிக்க ஒரு இடமாவது கிடைத்ததில் மகிழ்ச்சிதான். ஆனால் நாங்கள் தினம் தினம் இந்தப் புகை, நாற்றம், குப்பைகளுக்குள் கிடந்து சாகிறோம். எந்த வசதியும் இல்லை. ஆனால் நாங்கள் வேறு எங்கே போக முடியும்?” வெறுத்துப் போய் பேசுகிறான் ஷாஜஹான். 2002ம் ஆண்டு குஜராத் கலவரங்களில் அவர்கள் தப்பிப் பிழைத்திருக்கலாம். ஆனால் கடுமையாய் அடிபட்டு காயங்களோடும், கொடூரமான நினைவுகளோடும் வாழ்ந்து கொண்டு இருந்தார்கள். இரண்டு லட்சத்துக்கும் மேலானவர்கள் இப்படி தாங்கள் கால காலமாய் வாழ்ந்த இடங்களை விட்டு அகற்றப்பட்டிருந்தார்கள். வாழ்க்கை முற்றிலுமாக புரட்டிப் போடப்பட்டிருந்தது. அவர்கள் பெரும்பாலும் முஸ்லீம்களாய் இருந்தார்கள்.

“பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த அரசு பெரிதாய் ஒன்றும் செய்யவே இல்லை.” என்றார் வழக்கறிஞர் ஷம்ஷத் பதான். முஸ்லீம் மக்களுக்கு சட்ட ரீதியாக நிவாரணம் பெற்றுத் தர போராடிக்கொண்டு இருந்தவர் அவர். “இன்றைக்கு இங்கு முஸ்லிம்களும், இந்துக்களும் அடுத்தடுத்த கட்டிட குடியிருப்புகளில் வசிக்கும் காட்சியை பார்க்க முடியாது. பிரிக்கப்பட்ட நகரமாகி விட்டது. முஸ்லீம்கள் ’கெட்டோ’க்களில் வாழத் தள்ளப்பட்டு விட்டார்கள்” என்று மேலும் சொன்னார். (கெட்டோ என்பது சிறுபான்மையினர் மட்டுமே வசிக்கும் மோசமான பகுதி. ஜெர்மனியில் ஹிட்லர் தலைமையிலான பாசிஸ்ட் அரசு நடத்திய இனப்படுகொலை காலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கெட்டோக்களில் யூதர்கள் ஒதுக்கப்பட்டு இருந்தார்கள்.)

பதற்றம் நிறைந்த இடங்களில் முஸ்லீம்களும், இந்துக்களும் ஒருவருக்கொருவர் தங்கள் இடங்களை விற்பதை கட்டுப்படுத்தும் சட்டம் ஒன்று, ‘The Distrubed Areas Act’ 1991ல் மதக்கலவரங்களை தடுக்கும் பொருட்டும், அமைதியை ஏற்படுத்தும் பொருட்டும் பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அந்தச் சட்டத்தில் உள்ளூர் அதிகாரிகளுக்கு மேலும் அதிகாரத்தை கொடுத்து திருத்தம் செய்திருந்தார் மோடி. “அது அரசே முன்னின்று நடத்திய பிரிவினை” என்றார் பதான்.

The story of the lying man (பொய் மனிதனின் கதை 9) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History
Mehtab Colony – Houses of muslim victims of Gujarat riots

“அதன் விளைவு, முஸ்லிம்கள் எல்லாம் இழிவான பகுதிகளில் மொத்தம் மொத்தமாய் ஒதுக்கப்பட்டனர். வளர்ச்சி, வாழ்க்கையில் முன்னேற்றம் எல்லாம் மாநிலத்தில் வேறு யாருக்காவது இருக்கலாம். நிச்சயமாக முஸ்லீம்களுக்கு இல்லை” என்று அவர் சொல்வதில், 2002 குஜராத் கலவரங்களுக்குப் பிறகான தொடர்கதை எவ்வளவு கொடுமையானது என்பது தெரியும். மொத்த அவலத்தையும், ஆபத்தையும் இரண்டே வார்த்தைகளில் சொல்கிறது அகமதாபாத்தில் இருக்கும் ஜுஹாபுரா பகுதி. அங்கு மட்டும் நான்கு லட்சம் முஸ்லீம்கள் இப்போது வசித்து வருகிறார்கள். ஏற்கனவே இருந்த முஸ்லீம்களோடு, கலவரங்களால் பாதிக்கப்பட்ட முஸ்லீம்களும் அங்கு சேர்ந்திருந்தனர். அகமதாபாத்தில் இருக்கும் இந்துக்கள் ஜூஹாபுராவை ‘குட்டி பாகிஸ்தான்’ என்றே அழைக்கிறார்கள்.

இந்துத்துவ அரசியலின் – மோடி ஆட்சியின் – நோக்கமும் பாதையும் அந்த ‘குட்டி பாகிஸ்தானில்’ இருக்கிறது. இந்திய பாசிசத்தின் அடையாளமும், தடயமும் அந்த ‘குட்டி பாகிஸ்தானில்’ இருக்கிறது. மக்களை பிளவு படுத்தி, சிறுபான்மை மக்களை ஓரிடத்தில் ஒதுக்கி, பெரும்பான்மை மக்களை அவர்களுக்கு எதிராக காலமெல்லாம் திரட்டி தங்கள் அதிகாரத்தை கேள்வி கேட்பாரில்லாமல் நிறுவும் அராஜகத்தை குஜராத்தில் மோடி காட்டி இருந்தார். மக்களை அவர்களின் நிஜமான பிரச்சினைகளிலிருந்து திசை திருப்பி அறிவு பூர்வமாக சிந்திக்க விடாமல், உணர்வுகளின் வலைகளில் வீழ்த்தி விட்டு, அவர்கள் மீது தங்கள் மிருகத்தனமான ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் பாசிச சாம்ராஜ்யத்தின் வேர் குஜராத்தில் ஆழமாக இறங்கி இருந்தது. பாவம் பூஜா ஜாதவ் என்ன செய்வாள்? குஜராத்தில் 2002ற்கு பிறகும் மதக் கலவரங்களும், பதற்றங்களும் நீடித்துக் கொண்டேதான் இருந்தன. வன்மத்தையும், பழிவாங்கும் இயல்புகளையும் விதைத்த நிலத்தில் வேறென்ன விளையும்?

தேசத்தில் நடந்த மதக் கலவரங்களின் சராசரியைக் காட்டிலும், குஜராத்தில் அதிகமாக நடந்து வந்தன என்றே புள்ளிவிபரங்கள் சொல்கின்றன. 2003ம் ஆண்டிலிருந்தே மதக் கலவரங்கள் நடந்து கொண்டுதான் இருந்தன.

The story of the lying man (பொய் மனிதனின் கதை 9) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History
Ahmedabad Bomb blasts 2008

அதிலும் 2008ம் ஆண்டு அகமதாபாத்தில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் பெரும் பதற்றத்தையும் சேதங்களையும் ஏற்படுத்தி இருந்தது. 21 இடங்களில் குண்டுகள் வெடித்தன. 56 மனிதர்கள் கொல்லப்பட்டனர். 200க்கும் அதிகமானோர் காயம் பட்டனர்.

ஆனால் மோடி குஜராத்தில் 2002ற்கு பிறகு கலவரங்களே நடக்கவில்லை என்றும், அமைதி நிலவுவதாகவும், வளர்ச்சி மட்டுமே ஒரே நோக்கமாகவும் சொன்னதையே சொல்லிக் கொண்டு இருந்தார். அவர் தனது சாம்ராஜ்ஜியத்தை குஜராத்திலிருந்து இந்தியாவுக்கு விரிவுபடுத்த ஆயுத்தமாகிக் கொண்டு இருந்தார். 2013ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மோடி டெல்லி ரமலான் மைதானத்தில் கூடியிருந்த முஸ்லீம் மக்களிடையே பேசினார். சிறுபான்மை மக்களிடையே திட்டமிட்டு முதன்முறையாக அவர் பேசிய கூட்டம் அது.

“கிரிக்கெட் மேட்சில், பட்டம் விடுவதில், இருசக்கர வாகனம் மோதியதில் உருவாகிய அற்ப காரணங்களுக்காக எல்லாம் மதக்கலவரங்கள் வெடித்த காலம் ஒன்று குஜராத்தில் இருந்தது. என்னுடைய 10 ஆண்டு கால ஆட்சியில் மீண்டும் அப்படி கலவரங்கள் நடக்க விடவில்லை. எனது மாநிலம் இப்போது முன்னேறிக்கொண்டு இருக்கிறது. ஜாதி, மதங்களைத் தாண்டி அனைவரும் சமமானவர்களாகவும் வளர்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்துபவர்களாகவும் இருக்கிறார்கள்.” இந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் எவ்வளவு பயங்கரமானவை என்பது இப்போது உண்மையை அறிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.

References:
* Polarised Politics: How two teenagers will vote after surviving 2002 Gujarat riots ( by Rupan Jain, Reuters, April 23, 2019)
* Muslims still consigned to Gujarat’s slums 15 years after 2002 Riots (by Rina Chandran, Wire, July 25, 2017 )
* Gujarat not riot–free since 2002 : Here’s the Proof (First Post, April 07, 2014)
* Meenakshi Lekhi’s Claim About ‘No Riots in Guj Post 2002’ is False ( The quint, Mar 17, 2020)
* 2008 Ahmedabad Bombings (Wikipedia)
* No Guilty feeling about Gujarat riots, says Modi (The Hindu, June 13, 2013)
* No riot in Gujarat during 10 year rule, Modi says in delhi ( The Times of India, Dec 1, 2013)

முந்தைய தொடரை வாசிக்க:
பொய் மனிதனின் கதை 8 – ஜா. மாதவராஜ்

The story of the lying man (பொய் மனிதனின் கதை 8) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History

பொய் மனிதனின் கதை 8 – ஜா. மாதவராஜ்



“ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னால் அது நம்பப்பட்டு விடும்”
  அடால்ப் ஹிட்லர்

The story of the lying man (பொய் மனிதனின் கதை 8) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History

“விக்கிலீக்ஸ் மிகச் சரியாகத்தான் சொல்லும். நான் ஊழலற்றவன் என அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது சந்தோஷமளிக்கிறது” என்று குஜராத் முதல் மந்திரியாய் இருந்த நரேந்திர மோடி 2011 மார்ச் 22ம் தேதி ஊடகங்களிடம் சொல்லி புளகாங்கிதம் அடைந்தார். “மக்களிடம் கேட்டறிந்தே அந்த செய்தி வெளியிடப்பட்டு இருக்கிறது” என்றும் தெரிவித்தார். இதனை அவரது வலைத்தளத்திலும் பதிவு செய்தார். அதே நாளில் குஜராத்தில் பண்டிட் தீனதயாள் பல்கலை கழகத்தில் பேசும்போதும், “நான் ஊழலற்றவன் என அமெரிக்கா சொல்லி விட்டது.” என்று தம்பட்டமும் அடித்துக் கொண்டார்.

விஷயம் என்னவென்றால் விக்கிலீக்ஸிலிருந்து மைக்கேல் ஓவன் என்பவர் 2006ம் ஆண்டில் மோடியை சந்தித்து உரையாடியிருந்தார். குஜராத் கலவரங்களால் ஏற்பட்ட களங்கத்தால் மோடியின் விசாவை அமெரிக்கா ரத்து செய்து விட்டிருந்தது. அதையொட்டி மனித உரிமை மீறல் குறித்தும், மேலும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் நடந்த உரையாடல்களின் அடிப்படையில் மோடி குறித்த ரிப்போர்ட் ஒன்றை விக்கிலீக்ஸுக்கு ஓவன் அனுப்பி இருந்தார்.

2011 மார்ச் 22ம் தேதி வெளியான ஹிந்து நாளிதழில் அந்த ரிப்போர்ட் பற்றிய தகவல்கள் குறித்த செய்தி ஒன்று வெளியாகி இருந்தது. ”குஜராத்தின் பொது வாழ்க்கையில் ஊழலை குறைத்தவர் போன்ற பிம்பத்தை மோடி வெற்றிகரமாக கட்டமைத்திருந்தார்.” என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

அதைத்தான் அப்போது குஜராத் முதலமைச்சராய் இருந்த நரேந்திர மோடி இங்கு முதலில் குறிப்பிட்டபடி தன் இஷ்டத்திற்கு திரித்துக் கொண்டார். அப்போது யாரும் பெரிதாய் அது பற்றி அலட்டிக்கொண்டதாய் தெரியவில்லை. 2013ம் ஆண்டில் பிஜேபியின் பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும், மோடியின் விசுவாசிகளும், பிஜேபி தொண்டர்களும், இந்துத்துவ வெறியர்களும் மோடி குறித்து நாடெங்கிலும் பற்ற வைத்த கதைகளில் அதற்கு கை, கால், வாய் எல்லாம் முளைத்திருந்தது.

The story of the lying man (பொய் மனிதனின் கதை 8) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History“அமெரிக்கா மோடியைக் கண்டு பயப்படுகிறது. ஏனென்றால் அவர்களுக்கு மோடி ஊழல் செய்யாதவர் என்று தெரியும்.” என விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே சொன்னதாக டுவீட்டரில் தொடர்ந்து செய்திகள் பரப்பி விடப்பட்டன. மோடிக்கு அது குறித்தெல்லாம் கொஞ்சம் கூட கூச்சமோ, வெட்கமோ இருக்கவில்லை.

2002ம் ஆண்டிலிருந்து குஜராத் முதலமைச்சராக இருந்த காலமெல்லாம் அவர் ஊழலற்றவர் என்ற பிம்பத்தை எப்படி கட்டமைத்திருந்தார் என்பதை முதலில் தெரிந்து கொண்டு இந்தக் கதையை தொடர்வோம்.

‘சுஜலாம் சுபலாம் யோஜனா’ என குடிநீர், விவசாயத்திற்கான நீர் வளத்தை விரிவுபடுத்தும் திட்டம் செப்டம்பர் 2004ம் ஆண்டு குஜராத்தில் கொண்டு வரப்பட்டது. திட்டங்களுக்கு பேர் வைப்பதில் எல்லாம் ஒரு குறையும் இருக்காது. டிசம்பர் 2005ற்குள் 4904 கிராமங்கள், 34 நகரங்களுக்கு அந்தத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என வரையறுக்கப்பட்டு இருந்தது. அதற்கான மொத்தச் செலவு 458.50 கோடி என நிதி ஒதுக்கப்பட்டது. ஒரு காண்டிராக்டருக்கு ஒரு காண்ட்ராக்டுதான் கொடுக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் அந்த திட்டம் 2008ம் ஆண்டு வரையிலும் கூட நிறைவேற்றப்படவே இல்லை. 911 கோடி ருபாய் செலவு செய்தும் 2524 கிராமங்கள், 19 நகரங்களில் மட்டுமே திட்டம் நிறைவேற்றப்பட்டு இருந்தது. விதிமுறைகளுக்கு எதிராக 106 காண்ட்ராக்டுகளை 16 காண்டிராக்டர்களுக்கு மொத்த மொத்தமாய் வழங்கி இருந்தது மோடியின் அரசு. வரையறுக்கப்பட்டதை விட அதிக நிதி அவர்களுக்கு கொடுக்கப்பட்டும் இருந்தது. இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளரின் (The Comptroller and Audit General of India – CAG) அறிக்கையில் அதில் நடந்த ஊழல்களும், முறைகேடுகளும் குறிப்பிடப்பட்டு இருந்தன.

The story of the lying man (பொய் மனிதனின் கதை 8) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History

குஜராத்தில் 2002ம் ஆண்டிற்கு பிறகான மோடி அரசின் நிர்வாகத்தின் லட்சணத்திற்கு ஒரு பதம் அது. ஆனால் “நான் ஊழல் செய்ய மாட்டேன், யாரையும் ஊழல் செய்ய விட மாட்டேன்” என 2007 டிசம்பர் மாதத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் மோடி தைரியமாக மார்தட்டி பிரச்சாரம் செய்தார். மூலை முடுக்கெல்லாம் இந்த வாசகங்கள் நிரம்பிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன.

அரசு அலுவலகங்களில், கீழ்மட்ட அளவில் லஞ்சத்துக்கு எதிரான தீவீரமான கண்காணிப்புகள் இருப்பதாய் காட்டிக்கொண்டு, அங்கங்கு சில அதிகாரிகளை கைது செய்து ஊழலுக்கு எதிரான தனது வேகத்தைக் காட்டிக் கொண்டார். ஊழலுக்கு எதிரான பெரும் யுத்தத்தை தான் தொடங்கி விட்டதாகவும், அதனை ஒழித்துக் கட்டாமல் விட மாட்டேன் என்றும் வாளை சுழற்றிக் கொண்டிருந்தார்.

மக்களின் பார்வைக்கு வராமல் உயர் மட்ட அளவிலான பெரும் ஊழல்கள் நடந்து கொண்டு இருந்தன. கார்ப்பரேட்களுக்கு முறைகேடாக சலுகைகள் வழங்கப்பட்டு வந்தன.

தொழில் வளர்ச்சி என்ற பேரில் டாட்டா, அதானி உட்பட பெருமுதலாளிகளுக்கு அடிமாட்டு விலையில் நிலங்களை வழங்கியதில் பல ஆயிரம் கோடிகள் அரசுக்கு இழப்புகள் ஏற்பட்டு இருந்தன. பெரும் முறை கேடுகள் நடந்திருந்தன. ‘Corrupt Modi’ என்னும் ஒரு இணையதளமே உருவாக்கப்பட்டு ஒவ்வொரு ஊழலும் கதை கதையாய் சொல்லப்பட்டு இருக்கிறது.

2007ம் ஆண்டு பெரும் ஆரவாரத்துடன் துவங்கப்பட்ட Gift City (Gujarat International Finance Tech City) திட்டம் இன்று வரையிலும் நிறைவேற்றப்படவில்லை. 12.26 லட்சம் சதுர அடி நிலம் அந்த திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டது. மொத்தம் 2700 கோடி மதிப்புள்ள நிலத்தை, சதுர அடிக்கு ரூ.1/- என கணக்கிடப்பட்டு ‘Gift’ போல கொடுக்கப்பட்டது.

முதலமைச்சராயிருந்த காலத்தில் அரசு விமானங்களையோ, வணிக ரீதியான விமானங்களையோ ‘ஏழைத்தாயின் மகனான’ மோடி பயன்படுத்தவில்லை. உயர் தர வசதிகளுடன் கூடிய தனி விமானங்களையே பயன்படுத்தி வந்தார். அவைகள் எல்லாம் அவரால் சலுகைகள் வழங்கப்பட்ட பெருமுதலாளிகளுக்குச் சொந்தமானவை. அதெல்லாம் ஊழல் கணக்கிலேயே இல்லை.

குஜராத் அரசின் இளம் வருமானத்துறை அதிகாரிகளுக்கான பணி நியமனத்தில் பல கோடி ஊழல் நடைபெற்றது. சர்ச்சைகள் எழுந்தன. சட்டசபையில் விவாதிக்க அனுமதி அளிக்கப்படவில்லை. காந்திநகரில் கோச்சிங் செண்டர் நடத்தி வந்த கல்யாண்சிங் சம்பவத் என்பவர், அவரிடம் பயிற்சி பெற்ற மாணவர்களிடம், வேலை பெற்றுத் தருவதாக லட்சக்கணக்கில் பணம் பெற்றதாக புகார்கள் எழுந்தன. விசாரனையில் அவர் பணம் பெற்றது தெரிய வந்தது.

அந்த கல்யாணசிங் பிஜேபி கட்சியைச் சேர்ந்த பிரமுகர் என்பதும், பிஜேபியின் பல நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்ட போட்டோக்களும் வெளியாயின. “பிஜேபி கூட்டங்களில் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்கிறார்கள். அவர்கள் செய்யும் தவறுகளுக்கெல்லாம் பிஜேபி எப்படி பொறுப்பாக முடியும். கல்யாணசிங் பிஜேபியில் எந்தப் பொறுப்பும் வகிக்கவில்லை” என விஜய் ருபானி கை கழுவிக் கொண்டார். அந்த ருபானி பின்னாளில் குஜராத் முதலமைச்சரானார். இதுபோல இடைத்தரகர்கள் மூலம் நடந்த பல ஊழல்கள் வெளிச்சத்துக்கு வரவே இல்லை.

சஹாரா குரூப் கம்பெனியிலிருந்து மோடியே 55 லட்சம் ருபாய் லஞ்சமாகப் பெற்றதாகவும் கூட ஒரு செய்தி கசிந்து கொண்டிருந்தது.

The story of the lying man (பொய் மனிதனின் கதை 8) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History

எந்த துறையையும் மோடி அரசு விடவில்லை. மீன்வளத்துறை அமைச்சராயிருந்த புருஷோத்தம் சோலங்கி டெண்டர் அறிவிக்காமல் முறைகேடாக லஞ்சம் பெற்று தனக்கு வேண்டியவர்களுக்கு காண்ட்ராக்ட் விட்டதாக இஷாக் மராடியா என்பவர் 2013, ஜனவரி 5ம் தேதி ஊழல் தடுப்பு ஆணையத்தில் புகார் அளித்தார். 400 கோடிக்கு மேலாக ஊழல் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. உள்ளூர் போலீஸ் இதனை விசாரிக்கக் கூடாது எனவும், சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் எனவும் அவரது வக்கீல் மூலமாக கேட்டுக் கொண்டார்.

ஆனாலும் காந்திநகர் காவல்துறையே அந்த குற்றச்சாட்டை விசாரித்து 2015ம் ஆண்டில் புருஷோத்தம் சோலங்கி மீது எந்த தவறும் இல்லையென அறிக்கை கொடுத்தது. உயர்நீதிமன்றம் அந்த அறிக்கையை நிராகரித்தது. ஷோலங்கி மீது கிரிமினல் நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்தது.

2018ம் ஆண்டில் தன் மீது நடக்கு விசாரனையை தள்ளுபடி செய்ய வேண்டும் என புருஷோத்தம் சோலங்கி குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். உயர்நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்தது.

2019ம் ஆண்டில் மே மாதம் குற்றச்சாட்டுகள் சுமத்தி வழக்கு தொடுத்த இஷாக் மராடியா மீது ஒரு கொலை வழக்கு சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். தன்னை அச்சுறுத்தவும், பழிவாங்கவுமே அரசு நடவடிக்கை எடுப்பதாக இஷாக் தெரிவித்தார்.

அதே சோலங்கி மீது தேர்தல் நேரத்தில் லஞ்சம் கொடுத்ததாய் ஆதாரங்களோடு தொடுக்கப்பட்ட இரண்டு வழக்குகள் 2019ம் ஆண்டில் நிரூபிக்கப்படாமல் தள்ளுபடி செய்யப்பட்டன, காவலாளி ஒருவரைக் கொல்ல முயன்றது மற்றும் பார்லர் ஊழியர் ஒருவரை அடித்தது போன்ற ரவுடித்தனங்களால் அவரது மகன் குஜராத் மாநிலம் அறிந்த பிரபலம். இந்த தகவல்களோடும் சேர்த்துப் பார்த்தால் மோடியின் குஜராத் அரசு எத்தகையது என்பது விளங்கும்.

திசை திருப்புவது, குற்றம் சுமத்துபவர்களை அச்சுறுத்துவது, குற்றம் நிரூபிக்கப்படாமல் போக வைப்பது என ஆட்சியில் இருந்த பிஜேபி தன் அதிகாரத்தை பிரயோகித்து உண்மைகளை விழுங்கியது.

மொத்தம் 17 முறைகேடுகளை எதிர்க்கட்சிகள் அம்பலப்படுத்திய போது, “காங்கிரஸ் என்ன யோக்கியமா” எனவும், “குஜராத் வளர்ச்சிக்கு எதிராக காங்கிரஸ் செயல்படுகிறது” எனவும் முத்திரை குத்தப்பட்டு புறந்தள்ளப்பட்டன.

லோக் ஆயுக்தா சட்டத்தின் பிரகாரம் குஜராத் மாநிலத்தில் ஊழல்களை விசாரிக்கும் அமைப்பை செயல்பட விடாமல் வைத்திருந்த பெருமை மோடியைச் சேரும். முடிந்தவரை அதனை நீர்த்துப் போகச் செய்திருந்தார். அவர்தான் அகில இந்திய அளவில் ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை கடுமையாக்கப் போராடிய அன்னா ஹசாரேவை ஆதரிக்கவும் செய்தார். “நாட்டின் விடுதலைப் போராட்டத்தை நேரில் பார்க்காத நமக்கு, ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரேவின் போராட்டம் அகிம்சை வழியின் மீது நம்பிக்கை கொள்ளச் செய்கிறது” என ட்வீட்டினார். தனது இணைய தளத்தில் எழுதவும் செய்தார்.

குஜராத்தில் நடந்த இந்த ஊழல்களுக்கு எதிரான சத்தங்கள் எல்லாம் மத்தியில் மன்மோகன் சிங் ஆட்சியில் வெளிவந்த ஊழல்களை எதிர்த்து நாடெங்கும் எழும்பிய சத்தங்களில் அடிபட்டுப் போனது. நாடே அன்னா ஹசாரேவின் பஜனையில் மூழ்கிப் போனது.

ஊழலின் ஊற்றுக் கண்ணாய் இருக்கும் முதலாளித்துவ அமைப்புக்குள், ஊழலை ஒழிப்பதற்கான வழி எப்படி இருக்க முடியும். அன்னா ஹசாரே முடியும் என்றார். இந்தியாவில் ஊழலை ஒழிக்க கார்ப்பரேட்களே அவரை தேர்ந்தெடுத்து அனுப்பி வைத்திருந்தார்கள். பெரும் நாடகமொன்று நாட்டு மக்கள் முன்பு நிகழ்த்தப்பட்டது. காங்கிரஸ், மன்மோகன்சிங் மீது மக்களின் கோபம் திரும்பியது. ஊழல் பேர்வழி மோடி கார்ப்பரேட்களின் அரவணைப்பில் பாதுகாப்பாக வலம் வந்தார்.

சரி, இப்போது தொடங்கிய பிரச்சினைக்கு வருவோம்.

“மோடி ஊழலற்றவர் என்பதை அறிந்து அமெரிக்காவே பயப்படுகிறது” என்றாலும் யார் கேட்க போகிறார்கள்? அமெரிக்கா வந்து மறுக்கப் போகிறதா என்னும் மூர்க்கத்தனமான தெனாவெட்டில் வெளியிடப்பட்ட சங்கிகளின் ட்வீட்களுக்கு விக்கிலீக்ஸே பதில் அளித்தது.

The story of the lying man (பொய் மனிதனின் கதை 8) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies HistoryThe story of the lying man (பொய் மனிதனின் கதை 8) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History“மோடி ஊழலற்றவர் என விக்கிலீக்ஸின் எந்த ஆவணத்திலும் குறிப்பிடப்படவில்லை” என்றும் “மோடியின் ஆதரவாளர்கள் தவறான செய்திகளை உக்கிரமாக பரப்புகிறார்கள்” என்றும், ”நரேந்திர மோடியின் பிஜேபி தவறான செய்திகளை பரப்புகிறது. அசாஞ்சே ஒருபோதும் மோடி ஊழலற்றவர் எனச் சொல்லவில்லை” என்றும் அடுத்தடுத்து டுவீட்டரில் விக்கிலீக்ஸில் மறுப்புகளை தெரிவித்தது.

ஒன்றிரண்டு ஊடகங்களும், அரசியல் கட்சிகளும், “இந்தியாவுக்கு அசிங்கத்தை ஏற்படுத்தி விட்டார்கள்.”, ”மோடி நம்பகத்தன்மையை இழந்து நிற்கிறார்” “பிரதம வேட்பளரான அவருக்கு இது பின்னடைவு” என்றெல்லாம் பேசினார்கள். எழுதினார்கள்.

சகலத்தையும் உதிர்த்த பிஜேபிக்கும், மோடிக்கும் கொஞ்சம் கூட உறைக்கவில்லை. “அமெரிக்காவின் சர்டிபிகேட் ஒன்றும் மோடிக்குத் தேவையில்லை.” என்று முகத்தைத் துடைத்துக் கொண்டார்கள். அவர்களே களத்தில் இறங்கினார்கள்.

”மோடி ஊழல் கறை படியாதவர்” என்று அவர்களே தொடர்ந்து விடாமல் சொல்லிக் கொண்டிருந்தார்கள். திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டு இருந்தார்கள்.

“இந்த தேசம் தான் என் குடும்பம். தனிப்பட்ட முறையில் எனக்கென்று குடும்பம் இல்லை. நான் யாருக்காக ஊழல் செய்ய வேண்டும்?” என மோடி நாட்டு மக்களிடம் தன்னைப் புனிதராகக் காட்டிக் கொண்டார்.

ஆனால் அவருக்கு குடும்பம் இருந்தது. இந்திய கார்ப்பரேட்கள்தான் அவரது குடும்பம். அந்த குடும்பத்திற்கு விசுவாசமான பிரதம சேவகன் அவர். நாடு, மக்கள் எல்லாம் பிறகுதான்.

அவரது 56 இஞ்ச் மார்பைத் திறந்து பார்த்தால் அங்கே அம்பானியும், அதானியும், டாடாவும் காட்சியளிக்கக் கூடும்.

References:
* I am glad that America admits Modi is incorruptible: Hon’ble CM ( Narendara Modi websidte)
* Modi supporters aggressively pushed fake Assange Endorsement (Published in Outlook on 17th Mar 2014)
* Narendra Modi’s incorruptibility: What WikiLeaks cable actually said (Ashish Mehta in GovernanceNow on Mar 20, 2014)
* Sujalam gets CAG rap (Written by Kapildev, DNA dated Feb 20, 2009)
* Kalyan sinh Champawat on remand for allegedly duping Talati job applicants (Desh Gujarat, Feb 18, 2014)
* Big Corporates got govt land cheap: CAG (Indian Express, Gandhi Nagar dated Apr 03, 2013)
* Rs 400 crore Fisheries scam: Gujarat HC rejects plea filed by BJP Minister (Ahmedanbad Mirror, Nov 05, 2021)
* 17 Scams that Narendra Modi does not want Lok Ayukta to probe (DNA, Aug 27, 2011)
* Anna-led movement reinforces confidence in non-violence – Narendra Modi (The Economic Times, Aug 28, 2011)
* Wikileaks never said Modi was incorruptible (Counter view dated Mar 18, 2014)

The story of the lying man (பொய் மனிதனின் கதை 7) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History

பொய் மனிதனின் கதை 7 – ஜா. மாதவராஜ்



”உண்மையான நேர்மையான மனிதனை விட
ஒரு பொய்யன் நம்பகத்தன்மை மிக்கவனாக தோன்றுவது
இன்றைய காலத்தின் பெரும் துரதிர்ஷ்டம்”

                                                                                               – முனியா கான்

“என் வாழ்க்கைல …. ஒவ்வொரு நாளும்….. ஒவ்வொரு நிமிடமும்….. ஏன் ஒவ்வொரு நொடியும் நானா செதுக்குனதுடா..” என்று நடிகர் அஜித் ஒரு படத்தில் பஞ்ச் வசனம் பேசுவார். திருமணமானதும் வீட்டை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் போய், அங்கங்கு சில வருடங்கள் அலைந்து திரிந்தது வரை வேண்டுமானால் மோடியும் இது போன்று “நானா செதுக்குனதுடா” என மார்தட்டிக் கொள்ளலாம். ஆர்.எஸ்.எஸ்ஸில் இணைந்த பிறகு இந்துத்துவா வெறி அவரை செதுக்கியது. அதன் தொடர்ச்சியாக பிஜேபியில் இணைந்ததும் அரசியல் அதிகாரம் அவரை செதுக்கியது. குஜராத் கலவரங்களுக்குப் பிறகு இறுதியாக இந்திய ஆளும் வர்க்கமான கார்ப்பரேட் உலகம் அவரை செதுக்க ஆரம்பித்தது.

The story of the lying man (பொய் மனிதனின் கதை 7) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History

பத்து வருடங்களில் மோடியை ஒரு ’பிராண்ட்’ (வியாபார அடையாளம்) ஆக முன்னிறுத்தி சந்தையில் இறக்குவதற்கு தயாராக்கி இருந்தார்கள். தேர்தல், ஜனநாயகம், வாக்குரிமை, மக்களின் பிரச்சினைகள் என்று பொழுதெல்லாம் மிகுந்த அக்கறை கொண்டு அலசி ஆராயப்படும் அரசியலின் முக்கிய அம்சங்கள் அனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு, இந்தியக் குடிமக்கள் அனைவரையும் தங்களின் ‘சந்தை’யாக கார்ப்பரேட் உலகம் உள்ளங்கையில் எடுத்து வைத்துக்கொண்டு உற்றுப்பார்த்தது.

The story of the lying man (பொய் மனிதனின் கதை 7) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History

தங்களின் புதிய பிராண்டை சந்தையில் அறிமுகப்படுத்தி, அதனை நோக்கி வாடிக்கையாளர்களை இழுக்கும் அனைத்து விளம்பர உத்திகளும், வியாபார உத்திகளும் திட்டமிட்டு வகுக்கப்பட்டன. அதற்கெனவே மும்பையைச் சேர்ந்த ஜெயினின் தலைமையில் ஒரு குழுவும், பிரசாந்த் கிஷோர் தலைமையில் ஒரு குழுவும், ஹிரேன் ஜோஷி தலைமையில் ஒரு குழுவும், அரவிந்த் குப்தா தலைமையில் ஒரு குழுவுமாக மொத்தம் நான்கு குழுக்கள் இணைந்து மோடியின் ஒவ்வொரு அசைவையும், வார்த்தையையும் அளந்து அளந்து செதுக்கி செதுக்கி வடிவமைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் யாரும் கண்ணுக்குத் தெரிய மாட்டார்கள். மோடி என்னும் பிராண்டின் முகம் மட்டுமே தெரியும். தெரிந்தது.

“விரும்பப்படுகிறாரோ , வெறுக்கப்படுகிறாரோ அது முக்கியமில்லை. ஒருவர் எவ்வாறு உணரப்படுகிறார் என்பதே முக்கியம். அதுதான் ஒருவரின் பிராண்ட்!” என்று அமெரிக்க மார்க்கெட்டிங் குருவும், பிராண்ட் குறித்து பல புத்தகங்கள் எழுதியவருமான டேவிட் ஆக்கர் சொல்கிறார். தொடர்ச்சியான, உறுதியான, செயல்பாடுகளின் மூலம் இந்த வகை பிராண்டு தன்னை நீட்டித்துக் கொள்ளும், இல்லையென்றால் ஒன்றுமில்லாமல் தன்னை அப்படியே கலைத்துக் கொள்ளும் என ‘பிராண்ட்’ குறித்த தன்மையை விவரிக்கிறார். 2003லிருந்து ‘துடிப்பு மிக்க’ குஜராத் (Vibrant Gujarat ) மூலம் மோடி அத்தகைய ‘பிராண்ட்’ ஆக உருவாக்கப்பட்டிருந்தார்.

பிஜேபியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட, தங்களின் பிராண்ட் நரேந்திர மோடிக்கு மூன்று முக்கிய சவால்கள் இருப்பதாக கார்ப்பரேட் உலகம் ஆராய்ந்து வைத்திருந்தது. முதலாவதாக மூன்று முறை குஜராத் முதலமைச்சராக இருந்த மோடி ஒரு பிரதேசத்தின் பிராண்ட் ( Regional Brand) ஆக மட்டுமே தென்பட்டார். அவர் அகில இந்திய அளவில் ‘பிராண்ட்’ ( National Brand) ஆக இல்லை. இரண்டாவது, 2002 குஜராத் கலவரங்களினால் ஏற்பட்ட கறைகள் மோடி மீது தேசீய அளவில் படிந்திருந்தது. மூன்றாவது, பெரும்பாலும் இந்தியிலேயே பேசும் அவர் நகர்ப்புறத்தைச் சேர்ந்த, மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களோடு நெருக்கமாக வேண்டும். 63 வயதான மோடி, அடுத்து வரும் தேர்தலில் 15 கோடி புதிய வாக்காளர்களான இளைஞர்களோடு தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும்.

தேசிய அளவில் மேலும் இருந்தது ஒரு பிராண்ட்தான். காங்கிரஸ் மட்டுமே. அதுவும் தனது பிராண்ட் தன்மையை இழந்து விட்டிருந்தது. அதற்கு ஒரு மாற்றை தேடிக் கொண்டு இருந்த நேரம் அது. மோடியை பிராண்ட் ஆக்குவதற்கு காங்கிரஸே இடம் கொடுத்திருந்தது.

ஒரு பொதுவான தேவையை உணர்த்தி அதற்குரிய விளைவுகளையும் ஒரு பிராண்டினால் உருவாக்க முடிந்தால், அதன் எல்லைகளை விரிவாக்க முடியும். என்கிற ‘இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிஸினஸின்’ பேராசிரியர் ஸ்ரீதர் சாமு, ஒரு பிரதேசத்தில் மட்டுமே இருந்த சரவண பவனும் ஹால்டராமும் எப்படி தேசீய பிராண்டாக தங்களை உயர்த்திக் கொண்டன என்பதை சுட்டிக் காட்டுகிறார்.

குறுகிய காலத்தில் தேசத்தின் குறுக்கும் நெடுக்குமாக 5000க்கும் மேற்பட்ட நிகழ்வுகளில், 470க்கும் மேற்பட்ட அரசியல் கூட்டங்களில் பறந்து பறந்து மோடி கலந்து கொண்டார். பறவையின் பார்வையில் மேலிருந்து பார்த்தால் இந்தியாவை அப்படியே இறுக்கப் பிணைத்த ஒரு சிலந்தி வலையைப் போல அவரது பயணத்தின் பாதைகள் இருந்திருக்கும்.

அடுத்ததாக மோடி மீது படிந்திருந்த குஜராத் கலவரக் கறைகளை என்ன செய்வது? ஒரு பிராண்டைப் பொறுத்த வரையில் அதை மறுக்கவோ, அது குறித்து மேலும் பேசாமல் கடந்து சென்று கொண்டே இருக்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் பேச ஆரம்பித்தால், அது குறித்த விவாதங்களும் நடந்து கொண்டே இருக்கும். மக்களின் நினைவுகளில் ஆழமாகப் பதிந்துவிடும். சர்ச்சைகளுக்கு இடமளிக்கக் கூடாது என்பது ஒரு ‘பிராண்டின்’ சூத்திரம்.

காட்பரிஸ் சாக்லெட்டில் புழு இருந்தது. கோக், பெப்சியில் நச்சுத்தன்மை இருந்தது. அந்த நேரத்தில் பதற்றத்தோடும் கடும் வேகத்தோடும் பேசப்பட்டன. கோக்கும் பெப்சியும் விற்றுக்கொண்டே இருந்தன. மெல்ல மெல்ல எதிர்ப்புகள் அடங்கி, முணுமுணுப்பாகி பின்னர் எந்தப் பேச்சும் இல்லாமலேயே போய்விட்டது. விளையாட்டு மற்றும் சினிமாவில் பிரபலமானவர்களின் கைகளில் பெப்சியும், கோக்கும் இருந்தன.

2003க்குப் பிறகு குஜராத் கலவரங்கள் குறித்து மோடி பேசுவதை குறைத்துக் கொண்டே வந்தார். அவரது ஒரே மந்திரமாக ‘வளர்ச்சி’ மட்டுமே இருந்தது. ஒவ்வொரு மாநிலத்திலும் மக்களின் அபிமானத்துக்குரியவர்கள் மோடியை சந்தித்த அல்லது மோடி அவர்களைப் போய் சந்தித்த நிகழ்வுகள் அரங்கேறின. அவர்கள் நெருங்கி நின்று சிரித்த வண்னம் நின்றிருந்த காட்சியளித்தனர். இரக்கமற்ற, கொடூரமான, வெறுப்பைக் கக்கிய உருவத்திலிருந்து உறுதியான, வேகமான, எதிர்காலம் குறித்து சிந்திக்கக் கூடிய கனவானின் உருவத்திற்கு மோடியின் பிம்பம் மாறியது. ‘புதிய மனிதா, பூமிக்கு வா’ என கார்ப்பரேட்கள் கொண்டாடினார்கள்.

பிறகென்ன? கண்கள் மற்றும் காதுகள் வழியாக 2013 இறுதியில் இந்திய மக்கள் அனைவருக்குள்ளும் “ஆப் கி பார் மோடி சர்க்கார்” என்ற வார்த்தைகள் சொருகப்பட்டன. அதாவது “இந்த தடவை மோடி அரசு!”

மூன்றாவது நகர்ப்புறத்து மக்களோடும் இளஞர்களோடும் தொடர்பு கொள்வதற்கு மோடி என்னும் பிராண்டுக்கு கிடைத்த வரப்பிரசாதம் சோஷியல் மீடியாக்கள். பிஜேபி தலைவர்கள் ஃபியூஸ் கோயல் மற்றும் அஜய் சிங் தலைமையில் ஒரு பெரும் படையே 24 மணி நேரமும் இயங்கியது. பிஜேபியின் தகவல் & தொடர்பு துறையினருக்கு இந்தியாவில் இருக்கும் ஃபேஸ்புக் ஊழியர்கள் பயிற்சி கொடுத்தார்கள்.

இங்கு செய்திகளும், தகவல்களுமே அறிவாகவும், ஞானமாகவும் சுருக்கப்பட்டு இருக்கிறது. தகவல்களை வடிகட்டி, கடந்த காலத்தின் பின்னணியோடு பகுத்துப் பார்ப்பதுதான் அறிவு என்பதை அறியாமல் இருக்கிறார்கள். இரண்டு ஃபார்வேர்டு மெஸேஜ்களை படித்து விட்டு எல்லாம் தெரிந்தவர்களாய் தங்களை கருதிக் கொள்கிறார்கள். நுனிப்புல் மேய்ந்துவிட்டு தொடை தட்டி பேசுவதில் கெட்டிக்காரர்களாகி கிடக்கிறார்கள். பெரும்பாலான இந்திய மத்தியதர வர்க்கத்தையும் படித்த இளஞர்களையும் பீடித்த சாபம் இது. ஒரு பிராண்டை அறிமுகப்படுத்துவதற்கும், வார்ப்பதற்கும் உற்ற சூழல் இது.

குஜராத்தில் எல்லா வாய்ப்புகளும், வசதிகளும் உருவாக்கப்பட்டிருப்பதாக, குஜராத்திற்கு வெளியே தொடர்ந்து வாட்ஸ் அப், ஃபேஸ்புக்கில் செய்திகள் ஃபார்வேர்டு ஆகிக் கொண்டே இருந்தன. டாட்டா, அம்பானி போன்ற கார்ப்பரேட்கள் வெளிப்படையாக மோடியை பாராட்டி வந்தார்கள். குஜராத்தில் தொழில்துறை, விவசாயத் துறை, தகவல் தொழில்நுட்ப துறை, உள் கட்டமைப்பு எல்லாம் அசுர வளர்ச்சி கண்டிருப்பதாக கற்பனைகளை அலை அலையாய் எங்கும் மிதக்க விட்டார்கள். ஆனாலும் மிக முக்கியமாக புதிய வாக்காளர்களான 15 கோடி இளஞர்களை மோடி என்னும் பிராண்ட் தன் பக்கம் கவர வேண்டி இருந்தது.

எல்லாம் தெரிந்த, வலிமையான ஒரு தந்தையின் பிம்பத்தை மோடிக்கு கட்டமைப்பதில் அவர்கள் ஈடுபட்டார்கள். மோடியின் சிறு வயதுக் கதைகளை காமிக்ஸ் மூலமாகவும், புத்தகங்கள் மூலமாகவும், வாய்மொழி வழியாகவும் பரப்ப ஆரம்பித்தார்கள். முதலைகள் நிறைந்த குளத்தில் நீந்திய சிறுவனாக ஒரு கதை. பின்னர் இளைஞனானதும் பொது வாழ்க்கைக்காக குடும்பத்தை விட்டு வெளியேறியதாக ஒரு கதை. இரண்டையும் இணைத்துப் பார்த்தால் துணிவும், அர்ப்பணிப்பும் மிக்க ஒரு பிம்பம் அரூபமாய் மூளையில் படரும்.

The story of the lying man (பொய் மனிதனின் கதை 7) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History

‘நரேந்திர மோடி’யை ‘நமோ’ என சமஸ்கிருதச் சொல்லாடலோடு அழைக்க ஆரம்பித்தார்கள். மிக எளிதாக பெரும்பாலான மனிதர்களுக்குள் ஊடுருவும் வார்த்தையானது.‘ப்ரோ’ என அழைத்துப் பழகும் இன்றைய நவயுக மனிதர்களுக்கும் ‘நமோ’ நெருக்கமானது. கடும் கிண்டல்களும், கேலிகளும் ஒரு புறம் எழுந்தாலும், ஊதிப் பெருக்கப்பட்ட அந்தக் கதைகளின் முன்னே அவையெல்லாம் அலட்சியப்படுத்தக் கூடிய அளவில் சொற்பமாகவே இருந்தன.

The story of the lying man (பொய் மனிதனின் கதை 7) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History

இளைஞனான மோடி துடைப்பத்தால் பெருக்குவதைப் போன்று வெளியிடப்பட்ட போட்டோவை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். வைரலாக எங்கும் பரப்பப்பட்டது. எளிமையான, பணிவான, உண்மையான, உழைக்கிற தோற்றம் யாரையும் சட்டென்று கவரும். அந்த போட்டோ பொய்யானது என்றும், போட்டோஷாப்பில் உருவமாற்றம் செய்யப்பட்டது எனவும் பின்னாளில் தெரிய வந்தது. அதற்குள் மக்களின் மனதில் அந்த பிம்பம் அழிக்க முடியாதபடிக்கு பதிய வைக்கப்பட்டிருந்தது.

ஃபேஸ்புக், ட்வீட்டரில் நரேந்திர மோடி 2009லிருந்தே இருந்தார். அதில் தொடர்ந்து அவர் பதிவு செய்தும் வந்திருந்தார். அவை யாவுமே அவரது நீண்ட கால, தீர்க்கமான இலக்குகளை நோக்கியதாக இருந்தன.

மிக முக்கியமாக, மோடியின் பேச்சாற்றலை குறிப்பிட வேண்டும். சிந்திக்கத் தூண்டாமல், உணர்ச்சி வசப்பட வைக்கும் தன்மை நிறைந்தது அது. வரலாற்றில் ஹிட்லரும் இது போன்று மக்களை ஆர்ப்பரிக்க வைக்கிற, வெறியேற்றுகிற பேச்சாளனாக இருந்தான். ’ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னால் அது நம்பப்பட்டுவிடும்’ என்பதை உலகுக்கு காட்டியவன். மோடி அப்படி மக்களை நம்ப வைக்க க் கூடியவராய் இருந்தார்.

The story of the lying man (பொய் மனிதனின் கதை 7) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History

2013 பிப்ரவரி 6ம் தேதி டெல்லி ‘ஸ்ரீராம் காலேஜ் ஆஃப் காமர்ஸில்’ மோடி பேசியது அன்றைக்கு இந்திய அரசியலில் ஒரு சாதாரண நிகழ்வாக தெரிந்திருக்க வேண்டும். 15கோடி முதன்முறை வாக்காளர்களை குறிவைத்து அந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தங்கள் எதிர்காலம் குறித்து கனவுகளும், கவலைகளும் நிறைந்த அந்த கல்லூரி மாணவர்கள் திரண்டிருந்தார்கள். மோடி என்னும் ’பிராண்ட்’ அன்றுதான் அறிமுகப்படுத்தப்பட்டது.

“இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய மகாத்மா காந்தியின், வல்லபாய் பட்டேலின் பூமியிலிருந்து நான் வந்திருக்கிறேன்” என்று ஆரம்பித்து அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் நன்கு திட்டமிடப்பட்டு முன்வைக்கப்பட்டவை.

“உலக வரைபடத்தில் தனக்கான இடத்தை இந்தியா கண்டு கொள்ள வேண்டுமானால், நல்ல நிர்வாகம் வேண்டும்” என்றார்.
“இது விவேகானந்தரின் 150வது ஆண்டு. இதனை நாம் ‘யுவ வருஷமாக’ நினைவு கூர்வோம்” என்றார்.

“ஒரு முறை வெளிநாட்டு தூதுவர் என்னை பார்க்க வந்தார். இந்தியாவின் சவால்கள் என்னவென்று நினைக்கிறீர்கள் என்று என்னிடம் கேட்டார். இருக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதுதான் சவால் என்றேன். அவர் ஆச்சரியமடைந்தார். உலகில் அதிகம் இளைஞர்களைக் கொண்ட நாடு இப்போது இந்தியாதான் என்று சொன்னேன்” என்றார்.

“இந்திய இளைஞர்கள் இங்கே புதிய வாக்காளர்களாக பார்க்கப்படுகிறார்கள். நம் இளைஞர்களை நான் புதிய சக்தியாக பார்க்கிறேன்.” என்றார்.

திரும்பத் திரும்ப இளைஞர்களை தூக்கி வைத்து கொண்டாடினார் மோடி. அந்த புதிய வாக்காளர்கள் அப்படியே வசியம் செய்யப்பட்டிருந்தார்கள். ஆரவாரித்துக் கிடந்தார்கள். தங்களை இரட்சிக்க வந்த தேவதூதன் மோடிதான் என்று நம்பினார்கள்.

“இந்தியாவை மாற்றுவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் மோடியிடம் அதற்கான ஆற்றலும் வேகமும் இருக்கிறது” என்றார் அந்தக் கல்லூரியில் பி.ஏ ஹானர்ஸ் படித்துக்கொண்டு இருந்த 19 வயதான அபிஷேக்.

“குஜராத்திற்கு மோடி நிறைய செய்திருக்கிறார். தேசீய அளவில் அவருக்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்” என்றார் மிடல் குப்தா என்னும் மாணவர்.
“நாம் வல்லரசாக வேண்டுமென்றால், நமது பொருளாதாரம் வளர்ச்சியடைய வேண்டும். அதற்கு சரியான மனிதர் மோடியே!” என்றார் செஜ்வால்.

அன்றைய மோடியின் பேச்சையும், மாணவர்களின் கருத்துக்களையும் இந்தியாவின் ஊடகங்களை அனைத்தும் மாற்றி மாற்றி ஒளிபரப்பின. ஃபேஸ்புக், ட்வீட்டர் எல்லாவற்றிலும் வைரலாயின. அதே நாளில் மோடியின் வருகையை எதிர்த்து அந்த கல்லூரி மாணவர்களில் சிலர் வெளியே நின்று கோஷங்கள் எழுப்பிக்கொண்டு இருந்தனர். ஊடகங்கள் அதனை கண்டு கொள்ளவில்லை. உலகமும் அறிந்திருக்கவில்லை.

எதிர்த்த அந்த மாணவர்களுக்குத் தெரிந்திருந்தது…. ‘திரும்ப திரும்பச் சொன்னாலும் பொய் உண்மையாகி விடாது’ என்பது. அதற்குப் பிறகான மீதிக் கதையும், இன்று வரையிலான தொடர்கதையும் அதுதானே.

பொய் மனிதனின் கதை 6-ஜா. மாதவராஜ்

பொய் மனிதனின் கதை 6-ஜா. மாதவராஜ்



“பொய் சொல்லவும், ஏமாற்றவும் தூண்டுகிறது அதிகாரம்”
                                                       – சமூக உளவியலாளர் கெல்ட்னர்

”மோடி எப்போதும் ஜெயித்துக் கொண்டே இருக்க வேண்டும் என நினைப்பார். இந்த இயல்பு அவருக்கு சிக்கலை ஏற்படுத்தும். எதாவது ஒரு உச்சத்தில்தான் அவரால் இருக்க முடியும். எதிர்காலத்தில் ஒன்று அவர் பிரதமராக வருவார். அல்லது ஜெயிலுக்குப் போவார்” என்று குஜராத்தின் முன்னாள் முதல்வர் ஒருவர் தன்னிடம் சொன்னதாக ’கேரவான்’ பத்திரிகையின் எக்ஸ்கியூட்டிவ் ஆசிரியர் வினோத் ஜோஸ் 2012ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி எழுதிய கட்டுரையில் ஒரு தகவல் இருக்கிறது.

அந்த குஜராத் முன்னாள் முதல்வர் யார் என்பதை அவர் குறிப்பிடவில்லை. மோடியை மிக நெருக்கமாக அறிந்தவர்களாகவும், சங் பரிவாரத்தை சேர்ந்தவர்களாகவும், குஜராத்தின் முன்னாள் முதல்வர்களாகவும் பின்னர் அவரது அரசியல் விரோதிகளாகவும் கேஷுபாய் படேலும், சங்கர்ஷின் வகேலாவும், சுரேஷ் மேத்தாவும் இருந்தார்கள்.

ஆர்.எஸ்.எஸ்ஸின் சாதாரண பிரச்சாரகராக இருந்து, குஜராத் மாநில பிஜேபியில் சேர்ந்து, அத்வானியின் ரத யாத்திரை உட்பட பல்வேறு யாத்திரைகளுக்கு வடிவம் கொடுத்தவராக செயல்பட்டு, குஜராத் மாநில இந்துத்துவ அரசியலில் முக்கியமானவராக உருவெடுத்து, ஆட்சி அதிகாரத்தில் மூக்கை நுழைத்து, அதனால் டெல்லிக்கு இடம் பெயர்க்கப்பட்டு, அங்கிருந்து குஜராத்தில் தன் இடத்திற்கான காய்களை நகர்த்தி, ஆர்.எஸ்.எஸ் அறிவுரையின் பேரில் வாஜ்பாயால் முதலமைச்சராக்கப்பட்டு, உள்கட்சி எதிர்ப்புகளை எல்லாம் ஓரம் கட்டி, குஜராத்தில் பிஜேபியின் முகமாகி, நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டு, இந்திய பிரதம மந்திரிக்கான பிஜேபி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மோடியின் அரசியல் பயணமெங்கும் வியாபித்திருப்பது ஒரே லட்சியம்தான். ‘அதிகாரம்!’

The story of the lying man (பொய் மனிதனின் கதை 6) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History
Advani Nomination Gandhi Nagar

எல்லாவற்றையும் மறைத்து ‘டீ விற்ற பையன் நாட்டின் பிரதமராக..’ என்று மட்டும் மோடியை அறிமுகப்படுத்தும்போது அதில் அவருடைய உழைப்பு, அதிர்ஷ்டம், அர்ப்பணிப்பு, அனைவரையும் ஈர்க்கும் ஒரு அதிசயம் எல்லாம் அரூபமாக மக்களின் மனதில் தகவமைக்கப்படுகிறது.

குஜராத்திலும் பின்னர் இந்தியாவிலும் அரசு அதிகாரத்துக்கு மோடி வந்ததும் சரி, பிஜேபி கட்சியிலும், இந்துத்துவா குழுமங்களிலும் சர்வ வல்லமை மிக்கவராக ஒரு இடத்தை அவர் பிடித்துக் கொண்டதும் சரி, தனித்தனி கதைகள் இல்லை. குஜராத் அரசியலில் செல்வாக்கு பெற்றிருந்த சங்கர்சிங் வகேலா மற்றும் கேஷுபாய் பட்டேலில் இருந்து, இந்திய அரசியலில் செல்வாக்கு பெற்றிருந்த வாஜ்பாய் மற்றும் அத்வானி வரை பல அதிமுக்கிய அரசியல் தலைகள் மோடி கடந்து வந்த பாதையில் அங்கங்கு வீழ்ந்து போனார்கள். தாங்க முடியாத துரோகத்தை பார்த்த அதிர்ச்சி அவர்களின் கண்களில் தேங்கி இருந்தன. அந்த பெருங்கதையின் சுருக்கமே அதிர்ச்சி தரக் கூடியது.

1970களில் குஜராத்தில் சங்கர்சிங் வகேலாவும், கேசுபாய் பட்டேலும் ஆர்.எஸ்.எஸ்ஸின் உறுப்பினர்களாக இருந்து இந்துத்துவாவை மக்களிடம் கொண்டு சென்ற இணை பிரியாத ஜோடிகளாய் அறியப்பட்டிருந்தார்கள். பின்னர் அவர்கள் ஜனசங் கட்சியிலும், பிஜேபி கட்சியிலும் பணியாற்றி குஜராத் அரசியலில் பிரபலமாகத் தொடங்கினார்கள். 1980களில் அதே போன்ற ஒரு இணை பிரியாத ஜோடிகளாய் நரேந்திர மோடியும், பிரவீன் தொகாடியாவும் குஜராத்தில் இந்துத்துவாவை வளர்ப்பதிலும் தங்கள் அமைப்புகளை வலுவாக்குவதிலும் வலம் வந்தார்கள். முன்னாள் பிஜேபி எம்.எல்.ஏ ஹரேஷ் பத், “இருவரும் ஒரே தட்டில் உணவு அருந்தும் அளவுக்கு நெருக்கமானவர்கள்” என ’தி வீக்’ பத்திரிகையில் சொல்லியிருந்தார். 1987ல் மோடி பிஜேபியில் இணைந்து மாநிலத்தின் அமைப்புச் செயலாளராகவும், கிட்டத்தட்ட அதே சமயத்தில் தொகாடியா விஸ்வ ஹிந்து பரிஷத்தின் பொதுச்செயலாளராகவும் தத்தம் பாதைகளில் பிரிந்து, ’இந்துத்துவா’வுக்காக செயல்பட்டார்கள்.

The story of the lying man (பொய் மனிதனின் கதை 6) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History
Advani ratha Yathra

’அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்டுவோம் என்னும் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் கோஷத்தை 1989ல் பிஜேபி கையிலெடுத்தது. குஜராத்தின் சோமநாதபுரத்திலிருந்து அத்வானி ரதயாத்திரையை ஆரம்பித்தார். அதற்கான ஏற்பாட்டிலும், பயணத்திலும் மோடி முக்கிய பங்காற்றினார். அத்வானிக்கு மிக நெருக்கமானார்.

1991ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் அத்வானியை எதிர்த்து பிரபல இந்தி நடிகர் ராஜேஷ் கன்னாவை டெல்லியில் நிறுத்தப் போவதாக காங்கிரஸ் அறிவித்தது. தேர்தலில் தனக்கு நிச்சயம் வெற்றி தரக்கூடிய நம்பிக்கையான தொகுதியை அத்வானி தேடியபோது குஜராத்தில் காந்திநகர் தொகுதியை அவருக்கு மோடி காட்டினார். அத்வானியின் நம்பிக்கைக்குரியவராய் மோடி உருவெடுக்கவும், காந்திநகர் தொகுதியில் ஏற்கனவே பிஜேபியின் எம்.பியாக இருந்த சங்கர்சிங் வகேலாவை குஜராத் அரசியலில் முக்கியமிழக்கச் செய்யவும் மோடி நகர்த்திய முக்கிய காய் நகர்த்தல் அது.

குஜராத்தில் 80களில் தொடர்ந்து நடந்த மதக் கலவரங்கள், தொகாடியாவின் வெறியேற்றும் பிரச்சாரம், அத்வானியின் ரத யாத்திரை எல்லாம் அம்மாநிலத்தை இந்துத்துவாவுக்கு இரையாக்கி இருந்தது. 1995ல் பிஜேபி ஆட்சிக்கு வந்தது. இரு முக்கிய தலைவர்களாய் இருந்த கேஷுபாய் பட்டேலுக்கும், சங்கர்சிங் வகேலாவுக்கும் அதிகாரப் போட்டி வெடித்தது. சங்கர்சிங் வகேலாவுக்கு மக்களிடமும், குஜராத் கட்சி அமைப்புகளிலும் செல்வாக்கு அதிகமாக இருந்த போதிலும் அத்வானியின் பரிந்துரையின் பேரில் கேசுபாய் பட்டேலே முதலமைச்சராக அறிவிக்கப்பட்டார். மோடியின் அடுத்த காய் நகர்த்தல் அது.

The story of the lying man (பொய் மனிதனின் கதை 6) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History
The old friends are in a distance. Modi and Togadia.

கேசுபாய் பட்டேலிடம் தொகாடியாவுக்கும் செல்வாக்கு இருந்தது. குஜராத் காவல்துறையில் தொகாடியாவின் சிபாரிசில் பலர் முக்கிய பதவிகளில் நியமிக்கப்பட்டனர். கேசுபாய் பட்டேல் முக்கிய அரசியல் ஆலோசனைகளை தொகாடியாவிடம் கேட்பது வழக்கமாயிருந்தது. அதே போல் மோடியும் கேசுபாய் பட்டேலிடம் தன் நெருக்கத்தை அதிகரித்துக் கொண்டார். கட்சியின் முக்கிய பொறுப்புகளில் கேசுபாய் பட்டேலுக்கும், மோடிக்கும் வேண்டியவர்களுக்கு பொறுப்பு அளிக்கப்பட்டது,

நிலைமைகளை கவனித்த சங்கர்சிங் வகேலா தனக்கான எம்.எல்.ஏக்களை சேர்த்துக் கொண்டு கேசுபாய் பட்டேல் அரசை கவிழ்த்தார். முதன்முதலாக ஒரு மாநிலத்தில் அமைந்த தங்கள் அரசைக் காப்பாற்ற டெல்லியிலிருந்து வாஜ்பாய் வந்தார். குஜராத் அரசியலில் இருந்து டெல்லிக்கு மோடியை வெளியேற்றவும், கேசுபாய் பட்டேலுக்கு பதிலாக ’நடுநிலையாளராக’ கருதப்பட்ட சுரேஷ் மேத்தாவை முதலமைச்சராக்கவும் வாஜ்பாய் ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் வகேலா சமரசத்திற்கு வந்தார்.

பிஜேபியின் தேசீய செயலாளராக மோடி டெல்லியில் பிஜேபி அலுவலகத்தில் நுழைந்தார். ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும், பிஜேபிக்குமான உறவைப் பேணி பராமரிப்பது மோடியின் காரியமாக இருந்தது. அங்கிருந்து வாஜ்பாய், அத்வானி போன்ற தலைவர்களின் காதுகளில் பேசிக்கொண்டே தனக்கான காய்களை நகர்த்தி வந்தார்.

The story of the lying man (பொய் மனிதனின் கதை 6) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History
Modi with Keshubai patel shankarsinh vaghela

தனக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என சங்கர்சிங் வகேலா திரும்பவும் கலகம் செய்தார். பிஜேபியிலிருந்து வெளியேறி ’ராஷ்டிரிய ஜனதா கட்சி’ ஆரம்பித்தார். காங்கிரஸோடு இணைந்து ஒரு வருடம் போல முதலமைச்சராக இருந்தார். பின்னர் நடந்த தேர்தலில் தோற்று முக்கியமற்றவராகிப் போனார். மோடியின் பாதையில் விழுந்த பிரபல தலை அது.

1998ல் மீண்டும் கேசுபாய் பட்டேல் முதல்வரானார். கேசுபாய் பட்டேலுக்கு எதிராக டெல்லியிலிருந்தபடியே மோடி காய் நகர்த்தினார். 2000ம் ஆண்டு குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பமும், நிவாரணப்பணிகளில் அரசு காட்டிய மெத்தனமும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தின. வேறொரு புதிய முகத்தை களம் இறக்கி மக்களை சமாதானப்படுத்தும் தங்களுக்கே உரித்தான பாணியை பிஜேபி கையாண்டது. அடுத்த முதலைச்சர் தொகாடியாவா, மோடியா என்று கூட பேச்சு வந்தது. டெல்லியிலிருந்த மோடி குஜராத்திலிருந்த தொகாடியாவை முந்தினார். ஆர்.எஸ்.எஸ் பரிந்துரை, அத்வானியுடனான ஆலோசனைக்குப் பின் மோடியை குஜராத் முதலமைச்சராக வாஜ்பாய் அறிவித்தார். கேசுபாய் பட்டேல் என்னும் அடுத்த தலை வீழ்ந்தது.

2001 அக்டோபர் 7ம் தேதி குஜராத் முதலமைச்சராக மோடி பதவி ஏற்றார். ஆறு மாதங்களுக்குள் தேர்தலில் நின்று அவர் வெற்றி பெற்றாக வேண்டிய நிலைமை ஆனது. கேசுபாய் பட்டேலுக்கு அடுத்தபடி கட்சியிலும், மக்களிடமும் செல்வாக்கு பெற்ற தலைவராக உருவெடுத்திருந்த, உள்ளாட்சித்துறை அமைச்சராயிருந்த ஹரேன் பாண்டியாவிடம் அவரது எல்லீஸ்பிரிட்ஜ் தொகுதியை தனக்கு விட்டுத் தருமாறு மோடி கேட்டார். பாண்டியா மறுத்து விட்டார். ராஜ்காட்-2 தொகுதியில் இடைத்தேர்தலில் நின்று 2002 பிப்ரவரி 25ம் தேதி மோடி வெற்றி பெற்றார்.

அதிலிருந்து மிகச் சரியாக இரண்டாவது நாளில், 2002 பிப்ரவரி 27ம் தேதி கோத்ராவில் சபர்மதி ரெயிலின் 6வது பெட்டி எரிக்கப்பட்டது என்றும், அயோத்திக்குச் சென்று திரும்பிய கரசேவகர்கள் எரித்துக் கொல்லப்பட்டார்கள் என்றும் செய்திகள் பரவின. விஸ்வஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் அமைப்புகள் முழு வேகத்தில் கலவரத்தில் இறங்கின. காவல்துறை வேடிக்கை பார்த்தது.

மனித உரிமை அமைப்புகள், உலக நாடுகள் எல்லாம் கண்டிக்கவும் விழித்துக் கொண்ட வாஜ்பாய் குஜராத் சென்று, “ராஜதர்மம் நடத்தப்பட வேண்டும்” என பத்திரிக்கையாளர்களிடம் தனது கண்டனத்தை மறைமுகமாகவும் சுருக்கமாகவும் தெரிவித்தார். அருகிலிருந்த மோடி வாஜ்பாயை உற்றுப்பார்த்து, “அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன்.” என்றார். வாஜ்பாயே வெலவெலத்துப் போன இடம் அது.

டெல்லிக்குத் திரும்பிய வாஜ்பாய், மோடி ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது அந்த அரசு கலைக்கப்பட வேண்டும் என கட்சியின் உயர் மட்டத்தில் தனது நிலைபாட்டை தெரிவித்தார். லால் கிருஷ்ண அத்வானி அதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததோடு, மோடி அரசு கலைக்கப்பட்டால், உதவிப்பிரதமராக இருக்கும் தானும் ராஜினாமா செய்வேன் என முரண்டு பிடித்தார். வாஜ்பாய் பின்வாங்கினார்.

கலவரங்கள் நடந்து முடிந்த மூன்று மாதங்களுக்கு பிறகு நீதிபதி கிருஷ்ணய்யர் தலைமையில் நடந்த உண்மையறியும் குழுவிடம் ஹரேன் பாண்டியா சாட்சியம் அளித்ததாக ஒரு செய்தி கசிந்தது. கோத்ராவில் ரயில் எரிக்கப்பட்ட அன்றிரவு மோடியின் இருப்பிடத்தில் நடந்த ரகசிய கூட்டத்தில், “நாளை இதற்கு நீதி கிடைக்க வேண்டும், இந்துத்துவா சக்திகளின் பழிவாங்கலுக்கு காவல்துறையினர் குறுக்கே வரக் கூடாது” என்று மோடி சொன்னதாக பாண்டே சாட்சியத்தில் வாக்குமூலம் அளித்ததாகவும் தெரிய வந்தது.

The story of the lying man (பொய் மனிதனின் கதை 6) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History
Haren Pandya death

அதனைத் தொடர்ந்து பிஜேபி கட்சித் தலைமையிடம் பாண்டியா குறித்து மோடி புகார் அளித்தார். அடுத்து வந்த குஜராத் சட்டசபைத் தேர்தலில் பாண்டியாவுக்கு எல்லீஸ்பிரிட்ஜ் தொகுதியை ஒதுக்க மோடி மறுத்தார். பதினைந்து வருடமாக அந்த தொகுதியின் வேட்பாளராக இருந்த பாண்டியா என்னும் பிராமணருக்காக கட்சியின் மேலிடமும் ஆர்.எஸ்.எஸும் மோடியிடம் வலியுறுத்தியது. அதற்கு செவி சாய்க்காத மோடி, தனக்கு உடல்நலமில்லை என ஆஸ்பத்திரியில் போய் படுத்துக் கொண்டார். அவர் இல்லாமல் சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்ள முடியாது என்பதை உணர்ந்த கட்சியின் மேலிடமும் ஆர்.எஸ்.எஸ்ஸும் பின்வாங்கியது. எல்லீஸ் பிரிட்ஜ் தொகுதி வேறு ஒருவருக்கு ஒதுக்கப்பட்டது.

2002ல் குஜராத்தில் நடக்க இருந்த அந்த சட்டசபைத் தேர்தலின் போது இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையிலிருந்து மோடியிடம், “உங்கள் அரசியல் லட்சியம் என்ன?” என்று கேட்கப்பட்டது. “நான் லட்சியங்கள் கொண்டவனில்லை. கொடுக்கப்பட்ட பணியைச் செய்யக் கூடியவன் மட்டுமே” என்று பதிலளித்தார்.

சரி, கதைக்கு வருவோம்.

பாண்டியாவை இழக்க விரும்பாத ஆர்.எஸ்.எஸ்ஸும் கட்சி மேலிடமும் அவரை பிஜேபியின் தேசீய செயலாளராக்கி டெல்லிக்கு வரவழைக்க முடிவெடுத்தது. டெல்லிக்கு புறப்பட வேண்டிய அன்று பாண்டியா அகமதாபாத்தில் வைத்து கொலை செய்யப்பட்டார். பாகிஸ்தான் தீவீரவாத அமைப்பான லஷ்கர்-இ-தைபானும் , தாவூத் இப்ராஹிமும் சேர்ந்து அவரைக் கொலை செய்ததாக காவல்துறையினரால் சொல்லப்பட்டது. 12 பேர் கைது செய்யப்பட்டு 8 வருடம் கழித்து குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்ப்டாமல் விடுதலை செய்யப்பட்டனர். குஜராத் ரெயில் எரிப்பு வழக்கு போல பாண்டியாவின் கொலையும் மர்மமாகிப் போனது. மோடியின் பாதையில் வீழ்ந்த இன்னொரு அரசியல் தலையாகிப் போனார் ஹரேன் பாண்டியா.

2004ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் பிஜேபி தோற்றது. இடதுசாரி கட்சிகள் மற்றும் மாநிலக் கட்சிகளின் ஆதரவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. தோல்விக்கு முக்கிய காரணமாக ‘குஜராத் கலவரங்களை’ வாஜ்பாய் சுட்டிக்காட்டினார். அத்வானி உட்பட யாரும் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. “புஷ்ஷைப் போல, ஏரியல் ஷரோனைப் போல இந்தியாவுக்கு மோடி வேண்டும்” என தொகாடியா கருத்து தெரிவித்தார். அசோக் சிங்கால் இறந்ததையொட்டி தொகாடியா விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவராகி இருந்தார் அப்போது. மோடிக்கு ஆர்.எஸ்.எஸ் ஆதரவு இருந்தது. அடுத்து நடந்த பிஜேபி உயர் மட்டக் கூட்டத்தில் கூட்டத்தில் வாஜ்பாய் முக்கியத்துவம் இழந்ததோடு மட்டுமில்லாமல், தனித்தும் விடப்பட்டார். மனநிலை, உடல்நிலை எல்லாம் பாதிக்க அவரும் அரசியலில் இல்லாமல் போனார்.

The story of the lying man (பொய் மனிதனின் கதை 6) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History
Modi and Advani

அடுத்து இந்தியாவில் பிஜேபியின் முகம் என நினைத்துக் கொண்டு இருந்த மோடியின் குருவான அத்வானிக்கும் சோதனை வந்தது. தீவீர இந்துத்துவா தலைவராக அறியப்பட்டதாலும் பாபர் மசூதியை இடிப்புக்கு மூல காரணமாக இருந்ததாலும் தன்னை நாட்டின் பிரதமராக ஏற்றுக் கொள்ள மக்களும், கூட்டணிக் கட்சிகளும் முன் வரவில்லை என்பதை அத்வானியும் அறிந்திருக்க வேண்டும். மோடி தன் மீது படிந்துவிட்ட அதுபோன்ற களங்கத்தை துடைப்பதற்காக கார்ப்பரேட்களின் அரவணைப்பில் ‘குஜராத் வளர்ச்சி’ என மடை மாற்றிய நேரத்தில் அத்வானியும் வேறு விதமான முயற்சியில் ஈடுபட்டார்.

2005ல் பாகிஸ்தானுக்குச் சென்று, தான் பிறந்த இடத்தை பார்த்த கையோடு ஜின்னாவின் கல்லறைக்குச் சென்று, ”ஜின்னா மதச்சார்பற்ற தலைவர்” என்றும் “ஜின்னா இந்து முஸ்லீம் ஒற்றுமைக்கு பாடுபட்டவர்” என்றும் யாரும் எதிர்பாராத வார்த்தைகளை வெளிப்படுத்தினார். ஆர்.எஸ்.எஸ்ஸும், விஸ்வ ஹிந்து பரிஷத்தும், பிஜேபியின் தலைவர்களும் அத்வானிக்கு கண்டனம் செய்தனர். தனக்கு நெருக்கடியும் சோதனையும் வந்த போதெல்லாம் பக்க பலமாகவும், அரணாகவும் நின்ற குருவின் பக்கம் நிற்காமல் மோடியும் அத்வானிக்கு எதிரே போய் நின்று கொண்டார். இந்துத்துவ அமைப்புகளுக்கு நம்பிக்கையானவராகவும். அபிமானம் மிக்கவராகவும் வெளிப்படுத்திக் கொள்ள கிடைத்த தருணத்தை மோடி இழக்க விரும்பவில்லை.

கூடவே தன் பால்ய நண்பரும், இந்துத்துவா பாதையில் கூடவே பயணித்தவருமான தொகாடியாவை ஒரம் கட்டும் காரியங்களையும் கவனமாக செய்து வந்தார். குஜராத் கலவரங்களுக்குப் பிறகு தொகாடியாவை கலந்தாலோசிப்பது, அவருக்கு முக்கியத்துவம் அளிப்பது எல்லாவற்றையும் படிப்படியாக நிறுத்திக் கொண்டார். 2008ல் அகமதாபாத் சாலையை விரிவுபடுத்த ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருந்த இந்துக் கோவில்களை இடிக்க மோடி உத்தரவிட்டபோது தொகாடியா அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். மோடி சட்டை செய்யவில்லை.

தன்னை முன்னிறுத்துவதில் மிகுந்த கவனமாக மோடி காய்களை நகர்த்தி வந்தார். ‘வளர்ச்சியின் நாயகன்’ என்றும் ‘இந்தியாவின் நம்பிக்கை’ என்றும் கார்ப்பரேட்கள் அவரை ஏற்கனவே தங்களுக்கான பிரதமராக முன்னிறுத்த தொடங்கி இருந்தனர். இந்துத்துவா கூடாரத்தில் அத்வானி மட்டுமே மோடியின் பாதையில் குறுக்கே இருந்தார். என்ன நடக்கப் போகிறது என்பது அவருக்குத் தெரிந்தே இருந்தது. தொடர்ந்து அரசு அதிகாரத்தில் இருந்த மோடி சக்தி வாய்ந்தவராக காட்சியளித்தார். ஒரு காலத்தில் இந்தியாவையே அதிர வைத்த, சென்ற இடமெல்லாம் நெருப்பை பற்ற வைத்த அத்வானி அன்று மோடியின் முன்னே மிகவும் பலவீனமாகவும், பழைய மனிதராகவும் ஆகிப் போயிருந்தார். அவருக்காக ஒலித்த குரல்களும் முணுமுணுப்பாக மட்டுமே கேட்டன. பிஜேபியின் பிரதம வேட்பாளரை முடிவு செய்யும் கூட்டத்திற்கு செல்லாமல், ராஜினாமா கடிதம் எல்லாம் கொடுத்து சண்டித்தனம் செய்து பார்த்தார். எல்லாம் பரிதாபமான, அவலமான காட்சிகளாகிப் போயின.

இந்துத்துவா அமைப்பில் இருந்து வேறு ஒருவரை பிரதம வேட்பாளராக யோசித்துக் கூட பார்க்க முடியாதபடி மோடி தனித்துத் தெரிந்தார்.

2014 பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், ’தி எக்கனாமிஸ்ட்’ பத்திரிகையிலிருந்து மோடியிடம் பேட்டி காணப்பட்டது. அதில் மோடி சொன்ன பதில்களில் ஒன்று: “நான் லட்சியங்கள் கொண்டவனல்ல. என் கடன் பணி செய்து கிடப்பதே.”

அன்றும் என்றும் ஒரே பொய்தான்.

Parents of students who committed suicide in NEET exam shed tears. நாங்க ஏழையா பொறந்தது தப்பா? அரசு பள்ளில படிச்சது தப்பா? - NEETஆல் உயிரிழந்த மாணவிகளின் பெற்றோர்

நாங்க ஏழையா பொறந்தது தப்பா? அரசு பள்ளில படிச்சது தப்பா? – NEETஆல் உயிரிழந்த மாணவிகளின் பெற்றோர்



#NEET #BJP #SFI

இந்திய மாணவர்கள் சங்கம் தமிழ்நாடு மாநிலக்குழு 03.10.2021 திருச்சியில் நடத்திய ”நீட் எதிர்ப்பு மாநாடு 2021”

NEET என்னும் கொடூர தேர்வால் உயிரிழந்த மாணவிகளின் பெற்றோர்கள் கண்ணீர் பேச்சு…

LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE

Follow Us on:-
Facebook: https://www.facebook.com/thamizhbooks/
Twitter: https://twitter.com/Bharathi_BFC

To Buy Tamil Book. Visit Us Below

https://thamizhbooks.com/

To Get to know more about tamil Books, Visit us Below,
https://bookday.in

நினைத்த நூல்கள்… நினைத்த நேரத்தில்…

பெற 044 2433 2924