இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @75 : தொடர் – 4 லால் பகதூர் சாஸ்திரியும் உணவு பற்றாக்குறையும் (1964-66) – பேரா.பு.அன்பழகன்

இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @75 : தொடர் – 4 லால் பகதூர் சாஸ்திரியும் உணவு பற்றாக்குறையும் (1964-66) – பேரா.பு.அன்பழகன்




லால் பகதூர் சாஸ்திரி நேரு தலைமையிலான அமைச்சரவையில் 1951-1956ல் ரயில்வே அமைச்சராகவும், 1957முதல் நாட்டின் முதல் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு அமைச்சராகவும் பின்பு வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராகவும் இருந்தார். 1961ல் உள்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். நேரு மறைந்த பிறகு லால் பகதூர் சாஸ்திரி 9.6.1964ல் இந்தியாவின் இரண்டாவது பிரதம மந்திரியானார். ஜனவரி 11, 1966வரை 19 மாதங்கள் இவர் ஆட்சியிலிருந்தார். இவரை மறைக்கப்பட்ட பிரமதர் என்று அழைப்பதுண்டு. சாஸ்திரி பிரதம அமைச்சராகப் பொறுப்பேற்றபோது, அரசியல் ரீதியாக இந்தி எதிர்ப்பு, பஞ்சாப் தனிமாநிலக் கோரிக்கை, கோவாவை மகாராஷ்டிரா மாநிலத்துடன் இணைப்பது போன்றவை அறைகூவல்களாக இருந்தது. பொருளாதார நிலையில், சில ஆண்டுகளாகப் பொருளாதாரத் தேக்க நிலை, தொழில் வளர்ச்சியில் சரிவு, செலுத்து நிலை இருப்பில் (Balance of Payment) மோசமான நிலை, கடுமையான உணவு பற்றாக்குறை போன்றவை முதன்மையான பிரச்சனைகளாக இருந்தது. பல மாநிலங்களில் வறட்சி நிலவியதால் உணவுப் பொருள் உற்பத்தி குறைந்தது. 1939-1952 காலகட்டங்களில் உணவு பற்றாக்குறை காணப்பட்டது. 1953-54 முதல் 1958-59வரையிலான காலகட்டங்களில் உணவுப் பொருட்களின் விளைச்சல் அதிகமாக இருந்ததால் நிலைமை சீராக இருந்தது. அதற்கடுத்த ஆண்டுகளில் தேக்கமான நிலையே நீடித்தது. 1962-63ல் சாதகமற்ற காலநிலையினாலும், வெள்ளத்தாலும் கோதுமை, அரிசி பற்றாக்குறை நிலவியது. இக்காலத்தில் கோதுமை உற்பத்தி 10.8 மில்லியன் டன்னாக இருந்தது (முந்தைய ஆண்டில் 12.0 மில்லியன் டன்னாக இருந்தது). செப்டம்பர் 1963க்கு பின்பு கோதுமை விளைச்சல் அதிகரித்ததாலும், உத்திரப் பிரதேசம், பஞ்சாப், பீகார், ராஜஸ்தான், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் அதிக அளவிற்கு உணவுப் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டது. 1962-63ல் நெல் மற்றும் இதர தானியங்களின் விளைச்சல் 31.9 மில்லியன் டன்னாக இருந்தது (முந்தைய ஆண்டில் 34.8 மில்லியன் டன்னாக இருந்தது). இதனால் நியயாவிலைக் கடைகள் மூலமாக 1962ல் 1 மில்லியன் டன், 1963ல் 1.1 மில்லியன் டன், 1964ல் 1.3 மில்லியன் டன் உணவுப் பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. அதே சமயம் 1962-63ல் பொதுச் சந்தையில் உணவுப் பொருட்களின் விலை 33 விழுக்காடு அதிகரித்திருந்தது. இதனிடையே இந்திய அரசு பாக்கிஸ்தான், கம்போடியா, தாய்லாந்து நாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி செய்தது. சந்தையில் அரிசி விலை அதிகரித்திருந்தது பொருளாதார அளவில் மட்டுமல்ல அரசியல் மட்டத்திலும் முக்கிய பிரச்சனையாக உருவெடுத்தது. எனவே அரசு துரிதமாக உணவுப் பதுக்களைக் கடுமையாகக் கையாண்டு தடுத்தது. அதிக உணவு உற்பத்தி செய்ய அடுத்த போத்திற்கு (season) வழிவகை செய்தது. கோதுமையை, ஆஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்ய அன்னிய செலாவணியை ஒதுக்கியது, விவசாயிகளை நேரடியாகச் சந்தித்தது அவர்களை ஊக்குவித்து ராபி போகத்திற்கு அதிக பயிர் செய்யும்படி செய்தது. இதற்கிடையே தென்னிந்திய மாநிலங்களில் அரிசி பற்றாக்குறை கடுமையாக இருந்தது. அந்நியச் செலாவணி கையிருப்பும் குறைந்திருந்தது. எனவே சில நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி நெல் உற்பத்தியினைப் பெருக்கவும், அதற்கானச் செலாவணியினை குறிப்பிட்ட கால இடைவெளியில் செலுத்தவும் வழிவகை செய்யப்பட்டது. மேலும் இச்சிக்கலைப் போக்கக் கம்பு, கேழ்வரகு, சோளம், திணை போன்ற உணவுப் பொருட்கள் மாற்றாக வழங்கப்பட்டன. 1965ல் இந்த நிலைமையே நீடித்தது. 1966-67ல் பீகாரில் பஞ்சம் உருவெடுத்தது. இதனால் 60 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டனர். இதனைப் போக்க அமெரிக்காவிலிருந்து கோதுமை இறக்குமதி செய்து சமாளித்தது (Rakesh Ankit 2020). 1965-1966ல் இந்தியா, அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டன் கோதுமையினைப் பொதுக் கடன் திட்டம் (பி.எல்.480) மூலம் இறக்குமதி செய்தது. இதனால் 40 மில்லியன் மக்களின் பசி போக்கப்பட்டது. அடுத்தடுத்த ஆண்டுகளில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டதால் இந்தியா உணவு இறக்குமதி செய்தது இதனால் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்தது. இதன் எதிரொலியாக 1966ல் இந்தியாவின் பண மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக ஒரு டாலருக்கான பணமாற்று மதிப்பினை ரூ.4.76லிருந்து ரூ.7.50 ஆகக் மாற்றப்பட்டது. இதனால் கடும் எதிர்ப்புகளை அரசு எதிர்கொண்டது (Ramachandra Guha 2017).

உணவுப் பற்றாக்குறை கடுமையாக இருந்ததால் பொதுமக்களுக்கு உணவுத் தேவையினைக் குறைக்க வாரத்தில் ஒருநாள் உண்ணா நிலையில் இருக்க வேண்டும் என்று சாஸ்திரி வேண்டுகோள் வைத்தார். இதற்கான பலன் நாடுமுழுவதும் காணப்பட்டது. இதனை “சாஸ்திரி விரதம்” என்று அழைக்கப்பட்டது. தீவிர உணவு பற்றாக்குறையினைப் போக்கத் தினமும் ஒருவேளை உணவினை தவிர்க்கும்படியும் கோரிக்கை வைத்தார். இதனால் உணவின்றி தவித்த மக்களுக்கு உணவு அளிக்கப்பட்டது. வேளாண் உற்பத்தியினை அதிகரிக்கவும் இறக்குமதியினைக் குறைக்கவும் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் விதமாக “ஜெய் கிசான்-ஜெய் ஜவான்” என்ற முழுக்கதை முன்னெடுத்தார்.

உணவு பற்றாக்குறையினைப் போக்க அரசு உணவு கூட்டுறவுச் சட்டத்தை நிறைவேற்றியும், விவசாயிகளை அதிக அளவிற்கு உற்பத்தி செய்யவும் ஊக்குவித்தது. விவசாயக் கடன் வசதியினை உருவாக்கியும், ரசாயன உரம் பயன்படுத்தவும், நீர்ப்பாசன வசதி மற்றும் விவசாய ஆலோசனைகளையும் விவசாயிகளுக்கு அரசு வழங்கியது. விளைச்சல் உயர வாய்ப்பு இருந்த அதேசமயம் கட்ச் முதல் காஷ்மீர் வரை கோடைக்கால தாக்கத்தினால் 1965ல் உணவுப் பஞ்சம் ஏற்பட்டு விலைகள் அதிகரித்தது. ஒட்டுமொத்தமாகவே சாஸ்திரி பிரதம அமைச்சரான காலத்தில் உணவுப் பஞ்சம் பெருமளவிற்கு இருந்தது. இதற்காக நீண்டகால தீர்வாகப் பசுமைப் புரட்சி வித்திடப்பட்டது. நேருவால் கடைப்பிடிக்கப்பட்ட தொழில் சார்ந்த அணுகுமுறையில் மாற்றப்பட்டு சாஸ்திரி காலத்தில் வேளாண் சார் அணுகுமுறை பின்பற்றப்பட்டது. சாஸ்திரி வேளாண்மைக்காக கடைப்பிடிக்கப்பட்ட கொள்கைகளையும் அணுகுமுறைகளையும் தன்னுடைய அமைச்சரவையினைச் சார்ந்த டி.டி. கிருஷ்ணமாச்சாரி, நாடாளுமன்ற கம்யூனிஸ்ட் உறுப்பினர்களான ஹரின் முகர்ஜி மற்றும் பூபேஷ் ஆகியோரால் கடும் விமர்சனத்துக்கு ஆளானது.

பஞ்சத்தால் இந்தியாவின் உணவுத் தொகுப்பின் இருப்பு தீர்ந்திருந்தது. உணவு உற்பத்தியில் உபரியாக இருந்த சில மாநிலங்கள் இந்த நிலைமையினை தீர்க்க ஒத்துழைப்பை அளிக்கவில்லை. இத்துடன் இந்தியா-பாக்கிஸ்தான் போரைக் காரணம் காட்டி பி.எல் 480 ஒப்பந்தம் மூலம் அமெரிக்கா இந்தியாவிற்கு உணவுக்காக அளித்த அனைத்து மானியத்தையும் நிறுத்திவிட்டது. சாஸ்திரி அனைத்து மாநில முதல்வர்களுக்கும், இடைத்தரகர்களையும், உணவு பதுக்கலையும் கட்டுப்படுத்த ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்று கடிதம் எழுதினார். எதிர் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டி, இது ஒரு தேசியப் பிரச்சனை என்றும் இதனை அரசியலாக்க வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்தார். இதன் அடிப்படையில் இரண்டு முக்கிய முடிவுகளை மேற்கொண்டார். 1) 1 மில்லின் மக்கள்தொகைக்கு அதிகமாக இருந்த 6 நகரங்களில் விகிதாச்சார உணவு விநியோகமும், முறைசாரா உணவு விநியோகத்தை 1 லட்சம் மக்கள்தொகைக்கு மேல் உள்ள 105 நகரங்களில் நடைமுறைப்படுத்தினார். 2) உணவுப் பொருட்களை அதிக விலைக்கு விற்ற வியாபாரிகள் மீது வழக்குத் தொடுத்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது (Ramachandra Guha 2017). அரசு வரையறுக்கப்பட்ட நிலையில் உணவு பகிர்மான முறையினை நடைமுறைப்படுத்தியது. இது இந்தியாவில் உள்ள 7 முக்கிய நகரங்களில் மட்டுமே சாத்தியப்பட்டது. 1965ல் மாநில உணவு வாணிபக் கழகம் தோற்றுவிக்கப்பட்டது. இதன்படி மாநில அரசு நேரடியாகவே வேளாண் உணவுப் பொருட்களை வெளிச் சந்தையில் கொள்முதல் செய்தது. ஆனால் இது போதுமான அளவிற்கு வெற்றியினை பெறவில்லை. எனவே நீண்டகால அடிப்படையில் உணவு உற்பத்தியைப் பெருக்கவும், சுயச்சார்பினை அடையவும் கொள்கைகள் வகுக்கப்பட்டு பசுமைப் புரட்சிக்கு வித்திடப்பட்டது. இதனை இந்திரா காந்தி பிரதம அமைச்சராக இருந்த காலத்தில் தீவிரமாக நடைமுறைப்படுத்தினார் (Bipan Chandra 2008).

சாஸ்திரி பிரதமராக இருந்தபோது மூன்றாவது ஐந்தாண்டு திட்டம் தோல்வியினை எதிர்கொண்டது. நாட்டின் தேசிய வருமானம் குறைவான அளவிற்கே வளர்ச்சியினை கண்டது. பொருட்களின் விலை அதிக அளவிற்கு உயர்ந்தது. உணவு தானியப் பற்றாக்குறை கடுமையாக நிலவியது. எனவே உணவு உற்பத்தியினை அதிகரிக்கப் பசுமைப் புரட்சிக்கு வழிவகுத்தார். நேருவின் ஜனநாயக சோசியலிசக் கொள்கையினை சாஸ்திரி பின்பற்றினாலும், நேருவினால் அமைக்கப்பட்ட திட்டக்குழுவினை மாற்றி அமைத்தார். இதன்படி திட்டக்குழுவின் உறுப்பினர்களின் காலம் வரையற்ற நிலையில் இருந்ததைக் குறிப்பிட்ட காலம்வரை பணியாற்ற வழிவகை செய்தார். மேலும் திட்டக்குழுவிற்கு இணையாக “தேசிய வளர்ச்சிக் குழு” 1964ல் பொருளாதார, அறிவியல் அறிஞர்களைக் கொண்டு உருவாக்கினார். சாஸ்திரி நேரு வழியில் பயணித்தாலும் கனரக தொழிலுக்கு முன்னுரிமை என்று இருந்ததை வேளாண்மைக்கான முன்னுரிமை என மாற்றி அமைத்தார்.

தன்னுடைய அமைச்சரவை சகாக்களையும், உயர் அதிகாரிகளையும் ‘கிராமங்களுக்குச் செல்லுங்கள், மக்களையும், விவசாயிகளையும் சந்தியுங்கள்” என்றார்.

நேருவினால் முன்னெடுக்கப்பட்ட கனரக தொழிலுக்கான வளர்ச்சியானது சாஸ்திரி காலகட்டத்தில் வேளாண்மையினை மேம்படுத்த முன்னுரிமை தரப்பட்டது. சாஸ்திரி பிரதம மந்திரி ஆனதும் முதல் பணியாக வேளாண்மைத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டினை அதிகரித்தார். மழை பொய்த்துப்போனதால் உணவு உற்பத்தி குறைந்து, பற்றாக்குறை நிலவியது. அரசின் உணவுக் கையிருப்பும் குறைந்துவிட்டது. இதனைப் பயன்படுத்தி கள்ளச் சந்தை நடவடிக்கைகள் பெருகியது என்பதை உணர்ந்து இதற்கு நீண்டகாலத் தீர்வினை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் தன்னுடைய அமைச்சரவையில் உணவு மற்றும் வேளாண்மை அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியம் அவர்களிடம் இதற்கான பொறுப்பினை ஒப்படைத்தார். சுப்பிரமணியம் உடனடியாக வேளாண் விஞ்ஞானிகளை அங்கீகரித்து, அவர்களின் ஊதியத்தை உயர்த்தி, வேலைக்கான சூழ்நிலையினை மேம்படுத்தி அரசின் அதிகார வர்கம் தலையிடாமல் பார்த்துக்கொண்டார். வேளாண்மையில் தனியார் துறையினை ஊக்குவிப்பது, தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள், அன்னிய நேரடி முதலீடு போன்றவை நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தை புத்துயிர்பெறச் செய்தார், மாநிலங்கள் வேளாண் பல்கலைக்கழகங்கள் துவக்கவும், அதில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. வேளாண் சாகுபடியினை அதிகரிக்கப் பரிசோதனை பண்ணைகள், இந்திய விதைக் கழகம் போன்றவை உருவாக்கப்பட்டது. பி.சிவராமன், எம்.எஸ்.சாமிநாதன் போன்ற வல்லுநர்களின் ஆலோசனைகளின்படி மெக்சிகன் கோதுமை விதை வகையினை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. 1965ல் இந்திய-அமெரிக்க (சுப்பிரமணியம் – ஃபிரிமேன்) ஒப்பந்தத்தின்படி இந்தியா கணிசமான அளவிற்கு வேளாண்மை மீதான முதலீட்டை அதிகரிக்கவும், கிராமப்புறக் கடன் வழங்கச் சீர்திருத்தங்களை கொண்டுவரவும், ரசாயன உர உற்பத்தியினைப் பெருக்கி அதன் பயன்பாட்டை அதிகரிக்கவும் முடிவு எடுக்கப்பட்டது (Ramachandra Guha 2017). வேளாண்மை உற்பத்தியினை அதிகரிக்கச் சந்தை நோக்கு முறை பரிந்துரைக்கப்பட்டது.

எல்.கே.ஜா தலைமையில் குழு அமைக்கப்பட்டு அதன் பரிந்துரையின் அடிப்படையில் இந்திய உணவுக் கழகம் 1964ல் துவக்கப்பட்டது. இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவினை அடைய மூன்று முக்கிய பிரகடனங்கள் செய்யப்பட்டது (அதிக மகசூல் தரும் உயர் ரக விதைகள் பயன்படுத்துதல், உழவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குதல், நீர்ப்பாசன விளைநிலங்களுக்கு மேம்படுத்தப்பட்ட இடுபொருட்களைப் பயன்படுத்துதல்). வலதுசாரி கட்சியினரும், எதிர்க் கட்சிகளும் வேளாண்மையில் முன்னெடுக்கப்பட்ட செயல்களால் முதலாளித்துவ விவசாயம் உருவாகும் என்றும் பெரிய விவசாயிகளுக்கு மட்டுமே பயன் உடையதாக இருக்கும் என விமர்சனம் செய்யப்பட்டது. ஆனால் 1966-67ஆம் ஆண்டு வேளாண்மையில் கடைப்பிடிக்கப்பட்ட புதிய முறையினால் கோதுமை உற்பத்தியானது 5.5 விழுக்காடு அதிகரித்தது. சாஸ்திரி இந்தியாவில் வேளாண்மையில் முதல் சீர்திருத்தத்தினை கொண்டுவந்தார் இதனால் இன்று உணவு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவினை அடைந்தது மட்டுமல்ல உலகில் வேளாண்மை உற்பத்தியில் முன்னணி நாடாகவும் உள்ளது.

வேளாண்மை செலவு மற்றும் விலைக் குழு 1965ல் துவக்கப்பட்டது, இக்குழுவானது வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச விலையினைத் தீர்மானிப்பதற்கான பரிந்துரையினை வழங்குகிறது. முதன் முதலில் கோதுமைக்கான குறைந்த பட்ச ஆதார விலையினை இக்குழு பரிந்துரைத்தது. பழமையான நெல் ரகங்களின் பயிர்செய்யும் கால அளவு குறைந்தது 6 மாதங்களாக இருந்தது இதனைக் குறைக்கும் பொருட்டு குறுகிய கால நெல் ரகமான ஐ.ஆர்8 அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் ஆண்டுக்கு மூன்று போகம் பயிரிடும் நிலை உருவாக்கப்பட்டது. இதுபோன்றே கோதுமையில் புதிய ரக விதைகள் அறிமுகப்படுத்தப்பட்டது (ICAR 2022).). இவருடைய காலத்தில் உணவு பற்றாக்குறை அதிக அளவிலிருந்ததால் 1966-67ல் 10 மில்லியன் டன் உணவு தானியங்கள் இறக்குமதி செய்யப்பட்டது. அரசின் பல்வேறு நடவடிக்கையின் காரணமாக இது 1970ல் 3 மில்லியன் டன்னாகக் குறைந்தது.

சாஸ்திரி காலத்தில் வெண்மைப் புரட்சிக்கு அடிக்கோலப்பட்டது. பால் உற்பத்தியைப் பெருக்கி, அளிப்பினை அதிகரிக்கத் தேசிய பிரச்சார இயக்கத்தை உருவாக்கினார். குஜராத் மாநிலத்தில் உள்ள ஆனந்தில் 1965ல் குரியனால் தேசிய பால் வளர்ச்சி கழகமும், அமுல் பால் கூட்டுறவும் தொடங்கப்பட்டது. இதன் அடிப்படையில் பால் பற்றாக்குறையாக இருந்த இந்தியா தன்னிறைவினை அடைந்துள்ளது. இன்று உலக அளவில் அதிக பால் ஏற்றுமதி செய்யும் நாடாக மாற்றமடைந்துள்ளது.

சாஸ்திரி காலத்தில் 1964-65ல் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.8.96 லட்சம் கோடியாக இருந்தது 1965-66ல் ரூ.8.73 லட்சம் கோடியாகக் குறைந்தது அதாவது 2.63 விழுக்காடு குறைந்தது. தலா வருமானம் ரூ.16836 ஆக இருந்தது ரூ.16423ஆக குறைந்தது அதாவது 2.45 விழுக்காடு குறைந்தது. வேளாண்மையும் அதனைச் சார்ந்த துறையும் நாட்டின் நிகர தேசிய உற்பத்திக்கு 1965-66ல் ரூ.99.45 மில்லியன் பங்களிப்பினை வழங்கியது (1964-65ல் இது ரூ.102.14 மில்லியனாக இருந்தது) (Jagdish N Bhagwati and T.N.Srinivasan 1975).

அட்டவணை: சாஸ்திரி காலத்தில் இந்தியப் பொருளாதார மாற்றம் (2011-12 விலை அடிப்படையில்)

விவரங்கள்         1964-65 1965-66
வேளாண்மையும் அதனைச் சார்ந்த துறைகளின் வளர்ச்சி (விழுக்காடு) 8.7 -9.6
உற்பத்தி, கட்டுமானம், மின்சாரம், எரிவாயு, தண்ணீர் வழங்கல் துறைகள் (விழுக்காடு)  7.4 3.3
வர்த்தகம்உணவகம், போக்குவரத்து, தகவல் தொடர்பு (விழுக்காடு) 6.7 1.9
நிதி, மனைத் தொழில், தொழில்முறை சேவை (விழுக்காடு)    2.8 3.0
மொத்த உள்நாட்டு உற்பத்தி (ரூ.கோடியில்) 896221 872598
தலா வருமானம் (ரூ) (at NNP)   16836 16423

Source: GoI (2022): Economic Survey 2021-2022.” Ministry of Finance, Government of India.

ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்திக்கு வேளாண்மையும் அதனைச் சார்ந்த துறைகளும் 57 விழுக்காடு பங்களிப்பும், தொழில் துறை 28 விழுக்காடும், சேவைத் துறை 15 விழுக்காடு பங்களிப்பும் 1950-51ல் இருந்தது 49 விழுக்காடு, 31 விழுக்காடு, 21 விழுக்காடு என முறையே 1964-65 மாற்றமடைந்தது. சாஸ்திரி ஆட்சிக் காலத்தில் மூன்றாவது ஐந்தாண்டு திட்டமானது தோல்வியினைத் தழுவியது. அதிக மக்கள் தொகை பெருக்கம், விலைவாசி உயர்வு, உணவுப் பற்றாக்குறை போன்றவை நிலவியது (Sanjeet Kashyap 2019).

சாஸ்திரி பிரதம அமைச்சராக இருந்தபோது அரசியல் ரீதியாகக் கட்சிக்கு உள்ளேயும் வெளியிலும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார். பல பிரச்சனைகளுக்கு உடனுக்குடன் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தினார் என்றும், காஷ்மீர் பிரச்சனை, பாக்கிஸ்தானுடனான போர், வியட்நாம் போர் மீதான நிலைப்பாடு போன்றவை  இந்தியப் பொருளாதாரத்தை வெகுவாகப் பாதித்தது. உஸ்பெகிஸ்தான் என்ற நாட்டில் உள்ள தாஷ்கண்ட் என்ற இடத்தில் இந்தியா-பாக்கிஸ்தான் ஒப்பந்தம் கையெழுத்தான 10.01.1966ல் திடீரென சாஸ்திரி காலமானர். சாஸ்திரி ஆட்சிக் காலத்தில் நவீன வேளாண் வளரச்சிக்கான அடித்தளத்தை உருவாக்கினார், தாரளமயக்கொள்கைக்கான முன்னெடுப்பும் இவர் காலத்தில்தான் தொடங்கப்பட்டது. இவரைப் பற்றி இந்திரா காந்தி குறிப்பிடுகையில் “அவர் இயல்பாக மிகவும் கண்ணியமானவர், அமைதியானவர் ஆனால் போரின் போது அவர் நமது மன உறுதியை வலுவாக ஊக்குவித்தார், நாட்டின் ஒற்றுமை மற்றும் வலிமைக்கு பங்களித்தது தேசத்திற்குத் தலைமையை ஏற்று வழிநடத்தினார்” என்றார்.

சாஸ்திரி 582 நாட்கள் மட்டுமே பிரதமராக இருந்தாலும், இவருடைய காலத்தில் பல்வேறு பிரச்சனைகள் காணப்பட்டன அதனைத் திடமாகவும், நீக்குப்போக்குடன்  எதிர்கொண்டார். இவர் சிறந்த நிர்வாகியாகத் திகழ்ந்தார், சிக்கல்களைத் தீர்க்க கூட்டு முயற்சியினை மேற்கொண்டார். தன்னுடைய அமைச்சரவை முடிவுகள்  தீவிர ஆலோசனைக்குப் பிறகே மேற்கொண்டார் (Ramandeep Kaur 2019). வேளாண்மை வளரச்சிக்காக அவர் மேற்கொண்ட முயற்சியே இன்று இந்தியா உலக அளவில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி செய்யும் முன்னணி நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது.

– பேரா.பு.அன்பழகன்

இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @75 : தொடர் – 3 நேருவும் வேளாண் உள்கட்டமைப்பும் (1951-1964) – பேரா.பு.அன்பழகன்

இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @75 : தொடர் – 3 நேருவும் வேளாண் உள்கட்டமைப்பும் (1951-1964) – பேரா.பு.அன்பழகன்




இந்தியா சுமார் 200ஆண்டுகள் காலனி ஆதிக்கத்திலிருந்த காலத்தில் தன்சொந்த அடையாளங்களை இழந்திருந்தது. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது நவீன தொழில்நுட்பம் உலக அளவில் பல மாற்றங்களை உருவாக்கியிருந்தது எனவே இந்தியா உலக நாடுகளுடன் போட்டியிட்டு வளரவேண்டிய நிலைக்கு வந்தது. அதிக அளவிலான வறுமை, கல்வியறிவின்மை, வேளாண்மையில் பாரம்பரிய பின்பற்றல், பாரம்பரிய கிராமப்புறத்து தொழில்களை அழித்தொழித்தது, குறைவான உற்பத்தித் திறன், நிலப்பிரபுத்துவம், இடைத்தரகர்களின் கொடுமைகள், அளவிற்கு அதிகமான வேளாண்மையின் மீதான வரி, வங்காளப் பஞ்சம், பாக்கிஸ்தானிலிருந்து அகதிகள் வருகை, உணவுப் பற்றாக்குறை, பணவீக்கம், அதிக அளவில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நிலமற்ற வேளாண்மை கூலிகளாக இருந்தது போன்றவற்றைச் சரிசெய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது. குறிப்பாக வேளாண் துறையில் உடனடி நடவடிக்கையாக ஜமீன்தாரி ஒழிப்பு, குத்தகைச் சீர்திருத்தம், கூட்டுறவு வேளாண்மை, சந்தைப்படுத்துதல், கடன் வசதி, போன்றவை இருந்தது (Sharma 2020). பல்வேறு துறைகளை வளர்ச்சியடையச் செய்யவும் பொருளாதார மேம்பாட்டை அடையவும் நேரு தலைமையிலான அரசுத் திட்டங்களை வகுத்தது. நேரு கலப்பு பொருளாதார முறையினை பின்பற்றினார். 15 மார்ச் 1950ல் நேருவைத் தலைவராகவும் பலதுறைகளின் அறிஞர்களை உறுப்பினராக கொண்டு திட்டக்குழு அமைக்கப்பட்டது. இக்குழு அரசுக்குப் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியது (Bipan Chandra et al 2000). மாநில அரசுகள் நாட்டின் வளர்ச்சிக்கு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற உயர்ந்த லட்சியத்துடன் உயர் அதிகார பீடமாகத் திட்டக்குழு செயல்பட்டது. நாட்டின் வளர்ச்சி ஒன்றே குறிக்கோள் என்ற அடிப்படையில் எவற்றுக்கு முன்னுரிமை தரவேண்டும் என்பதை வடிவமைத்துக் கொடுத்தது திட்டக் குழு (ஹரீஷ்கரே 2022). வேளாண்மை, இந்திய அரசியலமைப்பு ஏழாவது அட்டவணையில் பட்டியல் பிரிவு இரண்டில் 14ன் படி மாநில அரசுகளின் அதிகாரத்திற்கு உட்பட்டதாகும். ஆனால் சில அம்சங்கள் கூட்டுப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

வேளாண்மையும், தொழில் துறையும் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளது. தொழிற் புரட்சியின் விளைவால் இயந்திரக் கருவிகள், வேளாண் சாதனங்கள், ரசாயன உரம், மோட்டார் வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டது. இதனை அடிப்படையாக கொண்டு பல நாடுகள் வேளாண் உற்பத்தியில் தன்னிறைவினை அடைந்தது. இதுபோல் தொழில் துறைக்குத் தேவையானதைக் காப்பி, ரப்பர், சணல், பருத்தி, தேயிலை, கரும்பு போன்றவற்றை அளிக்கிறது. இரும்பு எஃகு, ரசாயனப் பொருட்கள், இயந்திரச் சாதனங்கள் போன்றவை நேரடியாகவே வேளாண்மைக்கான இடுபொருட்களை அளிக்கிறது. இதுபோல் பணித்துறை குறிப்பாக வர்த்தகம், நிதி நிறுவனங்கள், போக்குவரத்து வேளாண்மைத் துறையுடன் நெருங்கியத் தொடர்புடையது. எனவேதான் வேளாண்மைத் துறையினை இந்தியாவின் இதயம், முதுகெலும்பு என்று அடையாள படுத்தப்படுகிறது.

நேரு, தொழில் மற்றும் வேளாண்மை இரண்டிற்கும் முக்கியத்துவம் அளித்தார். நவம்பர் 1952ல் நேரு பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது “நாங்கள் நிச்சயமாகத் தொழில் துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம், ஆனால் தற்போதைய சூழலில் விவசாயம், உணவு மற்றும் விவசாயம் தொடர்பான விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். நமது அடித்தளமான விவசாயம் வலுவாக இல்லாவிட்டால் நாம் உருவாக்க விரும்பும் தொழிலுக்கு வலுவான அடித்தளம் இருக்காது” என்றார். எனவே விவசாய வளர்ச்சியானது தொழில் துறையின் வளர்ச்சிக்கு அடிப்படையானது என்று குறிப்பிட்டார். வேளாண்மையில் சீர்திருத்தம், பெரிய நீர்ப்பாசன கட்டமைப்பு திட்டங்கள், கூட்டுறவுக் கடன் நிறுவனங்களை வலுப்படுத்துவது, இடைத்தரகர்களை ஒழிப்பது, உழுபவர்களுக்கு நில உரிமை, சமுதாய மேம்பாட்டுத் திட்டங்கள், பரவலாக்கப்பட்ட திட்டங்கள், தீவிர பகுதி மேம்பாட்டுத் திட்டங்கள் போன்றவை நடைமுறைப்படுத்தப்பட்டது. நிலச் சீர்திருத்தத்தில் இரண்டு முக்கிய நோக்கங்கள் இடைத்தரகர்களை ஒழிப்பது, நில உச்சவரம்பு ஆகியனவாம். இச்சீர்திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டதால் உபரியான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு நிலமற்ற விவசாயிகளுக்கும், சிறு விவசாயிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. இதனால் இவ்விவசாயிகள் கடினமான உழைத்து வேளாண் விளைச்சலைப் பெருக்கும் நோக்கில் ஈடுபட்டனர். அதேசமயம் பகிர்ந்தளிக்கப்பட்ட உபரி நிலங்களைவிட உபரியாக கண்டறியப்பட்ட நிலங்கள் பல்வேறு காரணங்களினால் (அரசியல் மற்றும் சட்டச் சிக்கல்கள்) கையகப்படுத்த இயலாமல் இருந்தது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. வெகுசில மாநிலங்கள் மட்டுமே நிலச் சீர்திருத்தங்கள் சிறப்பாக நடைமுறைப்படுத்தியிருந்தது. எனவே நிலச்சீர்திருத்தம் நேருவின் ஆட்சிக் காலத்தில் முழுமையாக வெற்றிபெறவில்லை என்றே குறிப்பிட வேண்டும் (Tirthankar Roy 2020).

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இந்தியாவின் முதனம்மையான பிரச்சனையாக உணவு பற்றாக்குறை இருந்தது. இதனை போக்க நீண்ட கால மற்றும் குறுகிய காலத் தீர்வுகள் மேற்கொள்ளப்பட்டது. குறுகிய காலத் தீர்வாக இந்திய அரசு அமெரிக்காவுடன் பி.எல் 480 என்ற ஒப்பந்தத்தை ஏற்படுத்தி அமெரிக்காவின் உபரி உணவுப் பொருட்களை 1956 முதல் 1966 வரை இறக்குமதி செய்து உணவு பற்றாக்குறையினைப் போக்கியது. 1956ல் 3 மில்லியன் டன் உணவு தானியம் இறக்குமதி செய்யப்பட்டது இது 1963ல் 4.5 மில்லியன் டன்னாகவும், 1966ல் 10 மில்லின் டன்னாகவும் அதிகரித்தது (Manas Kumar Das, Contemporary History of India from 1947-2010) நீண்டகால நோக்கில் நேருவின் வேளாண்மை வளர்ச்சி கொள்கையினை நான்கு முக்கியக் குழுக்களாகப் பிரிக்கலாம் 1) உழவர் மேம்பாட்டிற்கானது, 2) சுற்றுச்சூழல் பாதுகாப்பு, 3) கிராமப்புற கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் இடுபொருட்களின் தேவைகளுக்கான உற்பத்திப் பகிர்வு, 4) வேளாண்மை மேம்பாட்டிற்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தினை துரிதப்படுத்துதல் ஆகும் (Swaminathan 1990). வேளாண்மைக்கான அடிப்படை கட்டமைப்பான நீர்ப்பாசனம், மின்சாரம், வேளாண் ஆராய்ச்சி, கடன் வசதி, சந்தைப் படுத்துதல், குத்தகை சீர்திருத்தம் போன்றவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. உழவர்கள் வேளாண்மையில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் பொருட்டு 1964ல் வேளாண் விளைபொருட்களுக்கான ஊக்க விலைக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டது. வேளாண் விளைபொருட்களுக்கு ஆதரவு விலையினை நிருணயம் செய்ய வேளாண் விலைக் குழு அமைக்கப்பட்டது. அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 1955 கொண்டுவரப்பட்டு உற்பத்தி, பகிர்வு பொருட்களின் விலை சரிசெய்யப்பட்டன.

ஜே.சி.குமரப்பா குழுவின் அறிக்கையின் அடிப்படையில் இந்திய வேளாண்மைக்கான முன்னெடுப்பினை 1951ல் முதல் ஐந்தாண்டு திட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது. முதல் ஐந்தாண்டு திட்டத்தின் மொத்த செலவு ரூ.1960 கோடியாகும் இதில் வேளாண்மைக்கு ரூ.601 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது அதாவது மொத்தத்தில் 31 விழுக்காடு பங்காகும். இதன் ஒருபகுதியாக நீர்ப்பாசன வசதியினை உருவாக்கப் பெரிய அணைகளான ஹிராகுட், பக்ரா நங்கல், சட்லெட்ஜ், நாகார்ஜூன சாகர், பவானி சாகர் கட்டப்பட்டது, இவற்றை நேரு இந்தியாவின் ‘நவீனக் கோவில்கள் என அழைத்தார். இந்தியப் பிரிவினையின்போது அதிகமான அகதிகள் பஞ்சாப் பகுதியில் வந்தடைந்தனர் இவர்களில் பெரும்பாலும் விவசாயிகளாக இருந்தனர். எனவே அரசியல் அழுத்தம் மற்றும் அகதிகளாக வந்த மக்களின் வாழ்நிலையினை கருத்தில் கொண்டு நீர்ப்பாசன திட்டத்தைப் பஞ்சாப் மாநிலத்தில் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. நாட்டின் பிற பகுதிகளில் கிராமப்புற மேம்பாட்டிற்கும் நிலச் சீர்திருத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது (Tirthankar Roy 2020). வேளாண்மை துறைக்கு முன்னுரை அளித்திருந்தாலும் தொழில் துறையின் வளர்ச்சியினை விரைவுபடுத்த வேண்டியிருந்தது. இதற்கு அடிப்படைத் தேவை ‘மின்சாரம்’ எனவே வேளாண்மை-தொழில் வளர்ச்சிக்கும் சேர்த்து மிகப்பெரிய நீர்த் தேக்கங்களைக் கட்ட முன்னுரிமை அளிக்கப்பட்டது (கே.என்.ராஜ் 2022). உரத்தொழிற்சாலை, எஃகு ஆலைகள் போன்றவை வேளாண் மேம்பாட்டிற்கு அடிப்படையானது எனவே இவற்றைத் துவக்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. 1950ல் ஜவுளி கொள்கை மாற்றியமைக்கப்பட்டது. இதனால் ஜவுளி தொழில் மற்றும் தோட்டப் பயிர்கள் மீது தனியார் முதலீடுகள் அதிகரித்தது. கைத்தறித் தொழில்நுட்பங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இந்தியாவில் சிறு நிலவுடையாளர்கள் அதிகமாக உள்ளனர். இதனால் அறிவியல் பூர்வமான வேளாண்மையினை மேற்கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது எனவே கூட்டுறவு பயிர்செய்யும் முறையினைக் கொண்டுவந்தார். இதனைத் தொடர்ந்து அடுத்த 10 ஆண்டுகளில் அதிக அளவிற்கான நிலங்கள் இம்முறையின் கீழ் வந்துவிடும் என்றார். ஆனால் நடப்பில் இது வெற்றிபெறவில்லை. அறிவியல் பூர்வமான நீர் மேலாண்மை, ஒருங்கிணைந்த பூச்சி கட்டுப்பாடு மற்றும் உயிர் ஊட்டச்சத்து, நிலம் சரியாகப் பயன்படுத்துதல், உணவு தானிய சேமிப்பு போன்றவை சுற்றுப்புறச் சூழலியல் வழியாகச் சாத்தியமாகும் என்ற அடிப்படையில் இதற்கான முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. வேளாண்மை வளர்ச்சியினை அடையக் கிராமப்புறச் சாலை, மின்சாரம், வேளாண் சந்தை போன்ற கட்டமைப்புகள் இன்றி முடியாது என்று கருதினார் (Swaminathan 1990).

கிராமப்புற மக்களின் வாழ்நிலையினை மேம்படுத்தத் தகவல்தொடர்பு, சுகாதாரம், கல்வி ஆகிய நிலைகளை உயர்த்தி வேளாண்மையில் மேம்பட்ட விதைகள், ரசாயன உரங்கள் பயன்படுத்தி உணவு தானிய உற்பத்தியினை அதிகரிக்க இரண்டு திட்டங்களான 1) 1952ல் சமுதாய மேம்பாட்டுத் திட்டம் (Community Development Project) என்ற வேளாண்மை விரிவாக்கத் திட்டம் தொடங்கப்பட்டது. 2) பஞ்சாயத்து ராஜ் குறித்து ஆய்விட 1957ல் பல்வந்ராய் மேத்தா தலைமையில் குழு அமைக்கப்பட்டது அரசின் அதிகார வர்க்கமானது இதில் போதுமான ஈடுபாட்டினை காட்டவில்லை என்று குற்றம் சாட்டி பல்வேறு பரிந்துரைகளை இக்குழு அரசுக்கு வழங்கியது (அன்சர் அலி 1972). இதன் அடிப்படையில் பஞ்சாயத்து ராஜ் 1959ல் கொண்டுவரப்பட்டது.

கரும்பு, கோதுமை, சணல் போன்றவற்றில் புதிய வகை விதைகள் அறிமுகப்படுத்தப்பட்டது. 1954ல் தேசிய அளவில் மாடுகளின் கொள்ளைநோய் ஒழிப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. 1958ல் தேசிய வேளாண்மை கூட்டுறவுச் சந்தை கூட்டமைப்பு தொடங்கப்பட்டது. கட்டாக்கில், மத்திய நெல் ஆராய்ச்சி நிறுவனம் துவக்கப்பட்டது. இரண்டாவது ஐந்தாண்டு திட்டம் தொழில் துறைக்கு (ரூ.1080 கோடி, அதாவது மொத்தத்தில் 24 விழுக்காடு ஒதுக்கீடு) முன்னுரிமை அளித்தாலும் வேளாண் துறைக்கான (ரூ.950 கோடி, அதாவது மொத்தத்தில் 20 விழுக்காடு பங்கு) முன்னுரிமையும் தொடர்ந்தது. தொழில் துறை வளர்ச்சி ஆண்டுக்கு 7 விழுக்காடு என்ற அளவினை அடைய வேளாண் துறையின் உயர் வளர்ச்சியின்றி அடைய முடியாது என்று கருதப்பட்டது. உண்மையில் பாதிக்கு மேற்பட்ட தொழில்கள் வேளாண் தொழிலினை அடிப்படையாகக் கொண்டிருந்தது. மேலும் தொழில் துறையினைவிட வேளாண் துறை வலுவான அடிப்படையினைக் கொண்டிருந்தது. மூன்றாவது ஐந்தாண்டு திட்டத்தின் மொத்த ஒதுக்கீடான ரூ.8580 கோடியில் வேளாண்மை மற்றும் அதனைச் சார்ந்த துறைகளுக்கு ரூ.1750 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது, இது மொத்த தொகையில் 21 விழுக்காடு ஆகும். இந்த திட்ட காலத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட வேளாண்மை திட்டம் கொண்டுவரப்பட்டது. வேளாண்மையில் புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்ட காலத்தில் உணவு தானிய உற்பத்தி, எண்ணெய் வித்துக்கள், பருத்தி, சணல் போன்றவை நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை அடைவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் முதல் ஐந்தாண்டு திட்டக் காலத்தில் வேளாண்மையில் அடைந்த முன்னேற்றம் இரண்டாவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் அடையவில்லை (முதல் ஐந்தாண்டு திட்டத்தில் உணவு தானிய உற்பத்தியின் இலக்கு 61.6 மில்லியன் டன் ஆனால் உண்மையில் 65.8 மில்லியன் டன் உற்பத்தி செய்யப்பட்டிருந்தது. இரண்டாவது திட்டக் காலத்தில் இதன் இலக்கு 80.5 மில்லின் டன் ஆகும் ஆனால் 79.7 மில்லியன் டன் உற்பத்தியை அடைந்திருந்தது). உணவு தானிய உற்பத்தி மற்றும் அளிப்பு குறைவான அளவிற்கு வளர்ச்சியினை அடைந்திருந்தது ஆனால் மக்கள் தொகை அதிகரிப்பின் விளைவால் உணவுத் தேவை அதிகமாக இருந்தது (அன்சர் அலி 1972). இதனால் பணவீக்கம் அதிகரித்தது. உணவு தானிய தேவையினை இரண்டாம் திட்டக் காலத்தில் சரியாகக் கணிக்கத் தவறியிருந்தது. இந்தியப் பொருளியல் அறிஞரான கே.என்.ராஜ் அவர்களின் கருத்துப்படி “1950களின் தொடக்கத்தில் கோதுமை, அரிசி உள்ளிட்ட உணவு தானியங்களின் விலை உயர்வு மிகப் பெரிய நெருக்கடியை அரசுக்கு ஏற்படுத்தியது. அத்தியாவசிய உணவு தானியங்களின் விலை உயரும்போது, குறைந்த வருவாய்ப் பிரிவினரை அது வெகுவாகப் பாதிக்கிறது. அதனால் திட்டமிட்டபடி பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் தடைகள் ஏற்பட்டுவிடுகின்றன” என்றார் (இந்து தமிழ் திசை, 31.08.2022, பக்கம் 9).

அட்டவணை: இந்தியப் பொருளாதார வளர்ச்சி (விழுக்காட்டில்)

விவரங்கள் 1900-01முதல்
1946-47 வரை
1950-51 முதல்
1964-65 வரை
முதன்மைத் துறை 0.4 2.6
தொழில் துறை 1.5 6.8
பணித் துறை 1.7 4.5
ஓட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP 0.9 4.0
தலா வருமானம் (GDP யில்) 0.1 1.9
மக்கள் தொகை 0.8 2.0

குறிப்பு: 1947க்கு முந்தைய புள்ளிவிவரம் பிரிக்கப்படாத இந்தியாவைப் பற்றியது.
ஆதாரம்: Pulapre Balakrishnan (2007): “Visible Hand: Public Policy and Economic Growth in the Nehru Era,” CDS, WP:391 (www.cds.edu).

1951-1956ஆண்டுகளுக்கிடையே வேளாண் உற்பத்தியானது 17 விழுக்காடு அதிகரித்தது ஆனால் தொடர்ந்து பருவ மழை பொய்த்ததினால் 1956-1961 ஆண்டுகளில் இது 16 விழுக்காடு மட்டுமே அதிகரித்தது. ஒட்டு மொத்தத்தில் உணவு உற்பத்தியானது 108 மில்லியன் டன்னாக (1951ல் 55 மில்லின் டன்னாக இருந்தது) நேருவின் காலகட்டத்தில் அதிகரித்தது. ஆனால் இது உணவுத் தேவையினை நிறைவுசெய்யவில்லை எனவே 4 மில்லின் டன் உணவு தானியம் இறக்குமதி செய்யப்பட்டது. வேளாண் உற்பத்தித் திறன் சிறிய அளவிலே அதிகரித்தது. நிலச்சுவாந்தாரர்களின் கடுமையான எதிர்ப்பினால் நிலச் சீர்திருத்தம் பெரிய அளவிற்கு வெற்றியடையவில்லை. நேரு பொதுத்துறைக்கு முக்கியத்துவம் அளித்ததால் வேளாண்மையில் தனியார்த் துறை கால்பதிக்காமல் போனது. விவசாயிகளின் தலைவராக அறியப்பட்ட சௌத்ரி சரண் சிங் நேருவின் விவசாயக் கொள்கையினைக் கடுமையாக எதிர்த்தார். 1951 முதல் 1964-65 முடிய உள்ள காலகட்டங்களில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 4 விழுக்காட்டினை எட்டியது. 1949-50 மற்றும் 1967-98ஆம் ஆண்டுகளுக்கிடையே உணவு உற்பத்தியில் 30 விழுக்காடு அதிகரித்தது ஆனால் உணவல்லாத உற்பத்தியில் 8 விழுக்காடு மட்டுமே அதிகரித்தது (அன்சர் அலி 1972). இது காலனி ஆதிக்க ஆட்சிக் காலங்களில் ஏற்பட்ட வளர்ச்சியைவிட அதிக அளவாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தொழில் துறையின் வளர்ச்சியானது ஆண்டுக்கு 7 விழுக்காடும், வேளாண் துறையின் வளர்ச்சி ஆண்டுக்கு 3 விழுக்காடும் இருந்தது. இது ஒப்பீட்டு அளவில் சீனா, ஜப்பான் போன்ற நாடுகளைவிட அப்போது அதிக அளவிலே இருந்தது. அதேசமயம் அதிகரித்த மக்கள் தொகைக்குத் தேவையான அளவிற்கு உணவு உற்பத்தி நடைபெறாததால் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்திருந்தது. வெளிநாடுகளிலிருந்து உணவுப் பொருள் இறக்குமதி செய்யப்பட்டதால் அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்தது. 1965-66 மற்றும் 1967-68ல் ஏற்பட்ட கடுமையான வறட்சியின் காரணமாக வேளாண்மை உற்பத்தி அதிகமாகப் பாதிக்கப்பட்டது. 1962ல் நிகழ்ந்த சீன படையெடுப்பு இந்தியப் பொருளாதாரத்தைப் பாதித்தது. வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு போன்றவற்றால் மக்களின் வாழ்க்கைத்தரம் பாதிக்கப்பட்டது. வேளாண்மையின் மேம்பாட்டிற்கு பல்வேறு திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்தினாலும், நேருவின் ஆட்சிக்காலத்தில் இடைத்தரகர்கள் ஒழிப்பில் முழு அளவிற்கு வெற்றிபெறவில்லை, புதிய வேளாண் தொழில்நுட்பங்கள் விவசாயிகளால் உடனடியாக ஏற்றுக்கொள்வதில் தயக்கம் நிலவியது போன்றவை வேளாண் வளர்ச்சியின் தடைக்கற்களாக அறியப்படுகிறது.

நேருவின் காலகட்டத்தில் பொதுத்துறை வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அரசின் முதலீடானது 1950-1964ஆண்டுகளுக்கிடையே மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12.9 விழுக்காடாக இருந்தது (Tirthankar Roy 2020) இதனால் மின்சார உற்பத்தி, நீர்ப்பாசனம், ரசாயன உர உற்பத்தி போன்றவை தொடங்கப்பட்டு வேளாண்மை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியது. இதுபோல் தொழில் துறையின் மீதான முதலீடானது வேளாண்மைத் துறையின் வளர்ச்சிக்கு உதவும் வகையிலிருந்தது. டிராக்டர் உற்பத்தி தொழிற்சாலை, நீர்ப்பாசன கட்டமைப்பிற்கு தேவையான சிமெண்ட் உற்பத்தி தொழிற்சாலை, ரசாயன உரம் தயாரிக்கும் தொழிற்சாலை போற்றவை நேரடியாகவே வேளாண்மையினை தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு அழைத்துச் சென்றது. தரமான விதைகள், வேளாண் ஆய்வகங்கள் போன்றவையும் வேளாண்மை வளர்ச்சியினை மேம்பாடு அடையச் செய்வதற்கு உதவியது. தொழில் மேம்பாட்டிற்கு உருவாக்கப்பட்ட உள்கட்டமைப்பான சாலை, பாலங்கள் போன்றவை வேளாண்மை மேம்பட வழிவகுத்தது. இந்தியாவின் நிலவிவந்த வறுமையினை ஒழிக்க உணவு உற்பத்தியில் சுயச்சார்பினை அடையவும், வேலைவாய்ப்பினை அதிகரிப்பதையும் முதன்மையாகக் கொண்டு திட்டங்கள் வகுக்கப்பட்டிருந்தன. நேருவின் அயல் நாட்டுப் பொருளாதாரக் கொள்கை அயல் நாட்டுப் போட்டியினைத் தவிர்க கட்டுப்பாடான (மூடிய) பொருளாதாரக் கொள்கை பின்பற்றப்பட்டது. உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்க பொது-தனியார்த் துறைகள் ஊக்குவிக்கப்பட்டது. இதற்காக இறக்குமதி சார்புநிலை பின்பற்றப்பட்டது. தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டதால் அளவிற்கு அதிகமான மனித ஆற்றல் வேளாண்மையிலிருந்தது தொழில் துறைக்கு மடைமாற்ற வழிவகை செய்தது. நேரு ஆட்சிக் காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியைவிட வேளாண்மை வளர்ச்சி அடைந்ததால் கிராமப்புற வறுமை குறைந்ததாக மான்டெக் சிங் அலுவாலியா குறிப்பிடுகிறார். இதுபோல் தல வருமானம் காலனி ஆதிக்கத்திலிருந்ததைவிட 50 விழுக்காடு நேரு காலத்தில் அதிகரித்திருந்தது, மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருந்தது.

நேருவின் ஆட்சிக்காலம் சுதந்திரம் அடைந்ததிலிருந்து அவர் மறைந்த 1964ஆம் ஆண்டுவரை உள்ளடக்கியதாகும். இக்காலகட்டங்களில் பொதுவாக நோக்கும்போது இந்திய வேளாண்மை புறக்கணிக்கப்பட்டதாகவே கருதவேண்டியுள்ளது. வேளாண்மையில் நிறுவன மாற்றங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருந்தது ஆனால் தொழில்நுட்ப மாற்றங்கள் ஏதும் நடைபெறவில்லை. முதல் ஐந்தாண்டு திட்டத்தில் மட்டுமே வேளாண்மைக்கு மொத்த திட்டச் செலவில் அதிக அளவாக ஒதுக்கீடு (வேளாண்மை மற்றும் நீர்ப் பாசனத்திற்கு 31 விழுக்காடு) செய்யப்பட்டிருந்தது அதற்கு அடுத்துவந்த ஐந்தாண்டு திட்டங்களில் ஒதுக்கீடு (விழுக்காட்டு நிலையில்) குறைக்கப்பட்டது. முதல் மற்றும் இரண்டாம் திட்ட காலத்தில் வேளாண் உற்பத்தி அதிகரித்ததற்கு முக்கிய காரணம் கூட்டுறவு வேளாண்மை, உள்கட்டமைப்பு, வேளாண் ஆராய்ச்சி, நிலச் சீர்திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டது, சாகுபடி பரப்பு அதிகரித்ததும் ஆகும். புதிய வேளாண்மை கொள்கை நடைமுறைகள் இயற்கையாகவே வேளாண்மை சிறப்பாகப் பயிரிடும் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது. இம்முறைகளினால், இந்தியா எதிர்கொண்ட உணவு பஞ்சங்களை எளிதாகக் கடந்துவர முடிந்தது (Bipan Cheandra et al 2008). ஆனால் 1960களின் பிற்பகுதியில் வேளாண்மையில் தேக்கநிலை உண்டானது. இதற்கு முக்கியக் காரணம் மக்கள் தொகை அதிகரிப்பாகும். அதிகரித்த மக்கள்தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தி செய்ய முடியாமல் போனது எனவே 1960களில் பிற்பகுதியில் உணவு தட்டுப்பாடு நிலவியது.

– பேரா.பு.அன்பழகன்

Co-leadership of the Communist Movement Kerala's first communist government and coup Web series 8 by Era. Sindhan இரா. சிந்தனின் தொடர் 8 கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை கேரளத்தின் முதல் கம்யூனிஸ்ட் அரசாங்கமும், கவிழ்ப்பும் !

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 8 : கேரளத்தின் முதல் கம்யூனிஸ்ட் அரசாங்கமும், கவிழ்ப்பும் ! – இரா. சிந்தன்

1957 ஆம் ஆண்டு, இந்தியாவில் கேரள மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சி, தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அதிகாரத்திற்கு வந்தது. இது உலகம் முழுவதுமே கவனத்தை ஈர்க்கும் நிகழ்வாக மாறியது. இந்த வெற்றிக்கு பின் 1958 ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஐந்தாவது அகில இந்திய மாநாடு அமிர்தசரசில் கூடியது.

Co-leadership of the Communist Movement Kerala's first communist government and coup Web series 8 by Era. Sindhan இரா. சிந்தனின் தொடர் 8 கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை கேரளத்தின் முதல் கம்யூனிஸ்ட் அரசாங்கமும், கவிழ்ப்பும் !

 

1952 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி பெற்ற வாக்குகள்  62 லட்சம் மட்டுமே. 1957 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் கட்சி பெற்ற வாக்குகள் 12 கோடியாக இருந்தது.

பீகார், உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் கட்சிக்கு மக்கள் பிரதிநிதிகள் வந்தார்கள். எனவே நாட்டின் அனைத்து சட்டமன்றங்களிலும் பிரதிநிதிகளைக் கொண்ட கட்சியாக கம்யூனிஸ்ட் கட்சி மாறியது. சென்ற மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட ‘புரட்சிகர எதிர்க்கட்சி’ என்ற நிலைப்பாடு நல்ல பலனைக் கொடுத்தது.

கவனமான மதிப்பீடுகள்

  1. தென் மாநிலங்களில் ஆந்திராவிலும், தமிழ்நாட்டிலும் கட்சி சிறு பின்னடைவுகளை எதிர்கொண்டபோதிலும், கேரளத்தில் ஆட்சி அமைக்க முடிந்தது மிக முக்கியமான சாதனையாகும். இருப்பினும் கேரளத்தில் கிடைத்த வெற்றியைப் பற்றி, தோழர் இ.எம்.எஸ் நம்பூதிரிபாட் மிகவும் கவனமான மதிப்பீடுகளை முன்வைக்கிறார்.
  2. இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி தலைமையேற்றது என்ற போதிலும், நாட்டில் பெரும்பான்மை மக்களுடைய ஆதரவைப் பெறுவது சாத்தியமாகவில்லை. 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளில் 48% மட்டுமே காங்கிரஸ்கட்சி பெற்றிருந்தது.
  3. இப்போதைய கேரள மாநிலத்திற்கு உட்பட்ட பகுதிகளான திருவாங்கூர், கொச்சி மற்றும் மலபாரில் காங்கிரஸ் கட்சியினால்  பெரும்பான்மை பெற முடியவில்லை. அதே சமயம் இந்தப் பகுதியில் தொழிலாளர்களும், விவசாயிகளும் கம்யூனிஸ்ட்இயக்கத்தின் பின் நின்றார்கள்.
  4. கேரள மாநில பகுதிகளில் தேசிய இயக்கத்தின் முகமாக கம்யூனிஸ்ட் தலைவர்களேஇருந்தார்கள்.
  5. விவசாயிகள் பிரச்சனைகளையும், மலையாள தேசிய இன பிரச்சனைகளையும்அறிவியல் பார்வையோடு முன்னெடுத்த காரணத்தால், கம்யூனிஸ்ட் கட்சி,கேரளத்தை ஒரு மாநிலமாக அமைக்கும் போராட்டத்தில் முன்னணியில் நின்றது.
  6. இருப்பினும் கூட, கம்யூனிஸ்ட் கட்சி பெற்றிருந்த மக்கள் ஆதரவும் ஒரு சிறுபான்மையான அளவிற்கே இருந்தது என்பதை அவர் பதிவு செய்கிறார். கம்யூனிஸ்ட் கட்சி பெற்ற வாக்குகள் 40% ஆகும். ஆனால் தேர்தல் முறையின் கரணமாக, இந்த வாக்குகளைக் கொண்டே அதனால் 52% இடங்களில் வெற்றிபெற முடிந்தது.

Co-leadership of the Communist Movement Kerala's first communist government and coup Web series 8 by Era. Sindhan இரா. சிந்தனின் தொடர் 8 கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை கேரளத்தின் முதல் கம்யூனிஸ்ட் அரசாங்கமும், கவிழ்ப்பும் !

‘மத்தியில் காங்கிரசின் சிறுபான்மை அரசு வந்ததைப் போலவே கேரள மாநிலத்திலும் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறுபான்மை அரசு ஆட்சிக்குவந்தது’ என்றுதான் இ.எம்.எஸ் குறிப்பிடுகிறார். அதுவே சரியான மதிப்பீடும் கூட.

ஆட்சியை தொடர முடியுமா?
இந்திய ஆளும் வர்க்கங்கள் மேற்சொன்ன வெற்றியை எளிதாக எடுத்துக்கொள்ளவில்லை. 1959 ஆம் ஆண்டில் ஜூலை மாதத்தில், கரள மாநில அரசாங்கம், அரசமைப்பின் 365 வது பிரிவினை பயன்படுத்தி கலைக்கப்பட்டது.

5 வது மாநாடு நடைபெற்ற காலத்திலேயே கல்வி மசோதாவிற்கு எதிராகவும் விவசாய உறவுகள் மசோதாவிற்கும் எதிரான போராட்டங்களை தூண்டிவிடும் வேலையை காங்கிரஸ் கட்சி தொடங்கிவிட்டிருந்தது. பின்நாட்களில் அது முஸ்லிம் லீக், கிறித்துவ குருமார்கள் மற்றும் மேல்தட்டு சாதி தலைவர்களோடு இணைந்து ‘விமோசன சமரமாக’ (விடுதலைப் போராட்டமாக) முன்னெடுக்கப்பட்டது.

முதலாளித்துவ – நிலவுடைமை அமைப்பிற்குள்ளாக ஒரு மாநில ஆட்சியை தொடர்ந்து நடத்துவதை ஆளும் வர்க்கங்கள் அனுமதித்திடுமா ? என்ற கேள்வி அப்போது கட்சிக்குள் தொடர்ந்து விவாதப் பொருளாக இருந்தது.

‘அசாதாரண மாநாடு’ என்று அழைக்கப்படும் ஐந்தாவது மாநாட்டில் கட்சியின் அமைப்பு விதிகளை மேம்படுத்துவது பற்றி கூடுதலாக விவாதிக்கப்பட்டது. உலக அளவில் சீன கம்யூனிஸ்ட் கட்சியும், சோவியத் ஒன்றிய கம்யூனிஸ்ட் கட்சியும் நேருவைப் பற்றி முற்போக்கான மதிப்பீட்டை எடுத்தன. அதனை பயன்படுத்திக்கொண்டு, உள்நாட்டில் கடைப்பிடிக்க வேண்டிய கொள்கையை முடிவு செய்வதற்கு ‘திருத்தல்வாதிகள்’ முயற்சித்தார்கள். இந்த திருத்தல்வாத போக்குகள் தொடர்ந்தது, பின்நாட்களின் கட்சி பிளவிற்கு வழிவகுத்தன.

இ.எம்.எஸ் வெளிப்படுத்தும் கவலை
கேரள சூழல் பற்றிய ஒரு தீர்மானம் அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும், கேரளாவில் நடந்துவரும் மாற்றங்களை அந்த மாநாடு சரியாக உள்வாங்கிடவில்லை. இதுபற்றி தோழர் இ.எம்.எஸ் கவலையுடன் இவ்வாறு பதிவு செய்கிறார், “”ஐந்தாவது மாநாடு இதில் எதைப்பற்றியும் விவாதிக்கவில்லை. மாநாட்டின் முடிவுகளில் மிக முக்கியமானது கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரான ஒரு குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் ஒரு மறுப்பு அறிவிப்பை மட்டும் வெளியிடுவது என்பதுதான். அதாவது இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி அமைதியான வழிமுறைகளையே மேற்கொள்ளும் என்றும் ஒரே கட்சியின் தலைமையை ஏற்படுத்தாது என்றும் அறிவிப்பதாக முடிவு செய்யப்பட்டது. அந்த முடிவின் பின்னணியில் கம்யூனிசத்தை நிலைநாட்டின அமைதியான சோசலிச புரட்சி என்ற சமூக ஜனநாயக நிலைப்பாடு இருந்தது வெளிப்படை”

‘சோசலிசத்தை நோக்கிய பயணம் அமைதியான முறையில் இருக்க வேண்டும். அதே போல கட்சி ஏற்படுத்த விரும்புகிற அரசியல் அமைப்பில், ஒரே கட்சியின் தலைமை என்ற நிலைமைக்கு இடமில்லை’ ஆகிய கருத்துக்கள் சரியானவையே ஆனால் கேரளத்தில்  கம்யூனிஸ்டுகள் தலைமையிலான மாநில ஆட்சியை ஸ்தம்பிக்கச் செய்யும் ஆளும் வர்க்கத்தின் அக்கிரமான முயற்சிகளை பற்றி கவனம் செலுத்த முடியாததற்கு திருத்தல்வாதப் போக்கே ஒரு காரணமாகும்.

ஏகாதிபத்தியமும், கேரள அரசாங்கமும்
கேரளத்தின் நிலைமைகளைப் பற்றிய கூடுதலான கவலையை தோழர் இ.எம்.எஸ் வெளிப்படுத்தியிருப்பது முக்கியமானது. கேரளாவில் அமையப்பெற்ற மாநில ஆட்சிக்கு பல்வேறு தடங்கல்கள் இருந்தன. அதனால் முதலாளித்துவ – நிலவுடைமைக் கொள்கைகளின் வரம்பிற்கு உட்பட்டு, ஒன்றிய அரசு வகுத்த கொள்கைகளுக்குள்ளாகவே செயல்பட முடியும். ஆனாலும், கேரள அரசு பல முற்போக்கான திட்டங்களை செயல்படுத்தி, விவசாயிகள் – தொழிலாளர்களுக்கான நிவாரணங்களை சாத்தியமாக்கியது. காங்கிரஸ் அரசு, காகித அளவில் மேற்கொண்ட பல அறிவிப்புகளை, கேரள அரசாங்கம் செயல்வடிவிற்கு கொண்டுவந்தது.

உதாரணமாக, நிலக் குவியலை உடைப்பதிலும், குத்தகை விவசாயிகளுடைய நில உரிமையை உறுதி செய்வதிலும் மேற்கொண்ட நடவடிக்கைகள் நிலவுடைமையாளர்களையும், சுயநல சக்திகளையும் ஆத்திரப்படுத்தின. அதிகாரப் பரவலாக்களுக்கு முன்னோடியாக அமைந்த மாவட்ட நிர்வாக மசோதா, கல்வி மசோதா, போலீஸ் கொள்கை, கூட்டுறவுஅமைப்புகளுக்கு ஆதரவு, மாநிலத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இருந்ததொழில் நிறுவனங்களுக்கு உதவி ஆகிய நடவடிக்கைகளை அந்த அரசாங்கம் மேற்கொண்டது. ஆட்சிக்கவிழ்ப்பின் மூலம், ஆளும் வர்க்கங்கள் இந்த மக்கள் நல நடவடிக்கைகளை முடக்க முயற்சித்தார்கள்.

இது ஏகாதிபத்திய சதியின் ஒரு பகுதியாகவே நடந்தது. இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக இருந்த எல்ஸ்வொர்த் பங்கர், கேரளாவில் அமையப்பெற்ற கம்யூனிஸ்ட் ஆட்சியை கவிழ்ப்பதில் அமெரிக்காவின் சி.ஐ.ஏ வகித்த பாத்திரம் பற்றிய ஒப்புதல் வாக்குமூலத்தை பின் நாட்களில் ஊடகங்களில் வெளிப்படுத்தினார். அதற்காக காங்கிரஸ் கட்சி உட்பட பல்வேறு சக்திகளுக்கு நிதி உள்ளிட்ட உதவிகளைச் செய்து ஆட்சிக் கவிழ்ப்பினை அமெரிக்கா மேற்கொண்டது. கொலம்பிய பல்கலைக் கழகத்தின் ஆவணங்களில் இந்த வாக்குமூலம் பதிவாகியுள்ளது.

பிற தீர்மானங்கள்
இந்த மாநாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுவந்த பின்னடைவு, ஐந்தாண்டு திட்டங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள், முற்போக்கான கொள்கைகளை அமல்படுத்துவதற்காக செய்ய வேண்டிய போராட்டங்கள் மற்றும் நாட்டின் பல பகுதிகளில் வெற்றிகரமாக முன்னேறிய  மக்கள் போராட்டங்கள் ஆகிய பல்வேறு விசயங்களும் விவாதிக்கப்பட்டன. கட்சிக் கிளை முதல், தேசியக் குழு வரையிலான அமைப்பு ஏற்பாடுகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

முந்தைய தொடர்களை வாசிக்க :

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 3 : பாசிச எதிர்ப்பும், தேசிய இன உரிமைகளும் ! – இரா. சிந்தன்

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 4 : குழப்பங்கள் அலையடித்த காலம் ! – இரா. சிந்தன்

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 5 : இந்தியாவின் புரட்சிப் பாதை ! – இரா. சிந்தன்

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 6 : வெளியே கடவுள், உள்ளே மிருகம் ! – இரா. சிந்தன்

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 7 : புரட்சிகர எதிர்க் கட்சியாக கம்யூனிஸ்டுகள் ! – இரா. சிந்தன்

Co-leadership of the Communist Movement Communists as the Revolutionary Opposition! Web series 7 by Era. Sindhan இரா. சிந்தனின் தொடர் 7 கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை புரட்சிகர எதிர்க் கட்சியாக கம்யூனிஸ்டுகள் !

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 7 : புரட்சிகர எதிர்க் கட்சியாக கம்யூனிஸ்டுகள் ! – இரா. சிந்தன்




1953 ஆம் ஆண்டில் மதுரையில் நடந்த, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 3 வது அகில இந்திய மாநாட்டுக்கு பின், நாட்டின் அரசியல் நிலைமைகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. அந்த மாற்றங்கள், காங்கிரஸ் கட்சி தொடர்பாக கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறை பற்றிய விவாதத்தை மீண்டும் முன்னுக்கு கொண்டுவந்தன.

ஆவடி சோசலிசம்:
அதாவது, அந்த காலகட்டத்தில் இந்திய அரசாங்கம் தனது இரண்டாம் ஐந்தாண்டு திட்டத்தை வகுத்திருந்தது. அந்த திட்டத்தை அமலாக்குவதற்கு சோவியத் ரஷ்யா உள்ளிட்ட சோசலிச நாடுகள் உதவி செய்தன. எனவே சோசலிச நாடுகளுடன் ஒத்துழைக்கும் போக்கினை வலதுசாரிகளின் எதிர்ப்பையும் மீறி மேற்கொண்டது நேருவின் அரசாங்கம். மேலும், 1955 ஆம் ஆண்டில் ஆவடியில் நடந்த காங்கிரஸ் மாநாடு ‘சோசலிச பாணியே தேசிய லட்சியம்’ என்ற அறிவிப்பையும் மேற்கொண்டது. இவையெல்லாம் காங்கிரஸ் அரசாங்கம் பற்றிய மதிப்பீடு குறித்த விவாதத்தை மீண்டும் எழச்செய்தன.

Co-leadership of the Communist Movement Communists as the Revolutionary Opposition! Web series 7 by Era. Sindhan இரா. சிந்தனின் தொடர் 7 கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை புரட்சிகர எதிர்க் கட்சியாக கம்யூனிஸ்டுகள் !
Avadi Socialim Image Credit: Frontline

எனவே, 1956 ஆம் ஆண்டு பாலக்காட்டில் நடந்த, கம்யூனிஸ்ட் கட்சியின் 4 வது அகில இந்திய மாநாட்டிற்கு முன்பாகவே, மத்தியக் குழுவில் பல்வேறு கருத்துக்கள் மோதின. அந்த விவாதங்களுக்கு பின் மாநாட்டில் ஒரே அரசியல் தீர்மானம் முன்வைக்கப்பட்டது. ஆனால் மாநாட்டில் இந்த தீர்மானத்திற்கு எதிராக புதிய தீர்மானம் முன்னெடுக்கப்பட்டது. பி.சி.ஜோசி, ராஜேஸ்வர ராவ், ரவி நாராயண ரெட்டி, எஸ்.எஸ்.யூசுப், பவானி சென், சோம்நாத் லகிரி, கே.தாமோதரன், அவதார் சிங் மல்ஹோத்ரா, ரமேஷ் சந்திரா ஆகியோர் அதில் ஈடுபட்டார்கள். அந்த தீர்மானம் ‘காங்கிரஸ் கட்சிக்கு எதிரான ஜனநாயக முன்னணி அமைப்பது பொருத்தமானதல்ல’ என்றும் காங்கிரசோடு நெருக்கமான உறவு கொள்ள வலியுறுத்துவதாகவும் அமைந்தது. இவர்களே பிற்காலத்தில் கட்சி பிளவுபட்ட பிறகு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களாக இருந்தார்கள் என்பதும் இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது ஆகும்.

நான்காவது மாநாட்டின் விவாதத்தில் பங்கெடுத்த ஒரு பிரதிநிதி ‘காங்கிரஸ் கட்சியோடு ஒத்துழைப்பது என்ற நிலைப்பாட்டைத் தாண்டி, காங்கிரசோடு சேர்ந்து கூட்டணி அரசாங்கம் அமைக்க வேண்டும்’ என்றும் வலியுறுத்தி பேசினார். ஆளும் வர்க்கங்களுடைய பிரதான கட்சியாக அமைந்த காங்கிரஸ் கட்சியோடு கம்யூனிஸ்டுகள் அணி சேர வேண்டும் என்ற அந்தக் கருத்து மாநாட்டு அரங்கத்தில் கடும் விவாதங்களை உருவாக்கியது. அந்த விவாதத்தின் முடிவில் சரியான நிலைப்பாட்டுக்கு மாநாடு வந்து சேர்ந்தது என்றபோதிலும், மாற்றுக் கருத்துக்கு மூன்றில் ஒரு பங்கு ஆதரவு இருந்தது என்பதையும் இ.எம்.எஸ் நம்பூதிரிபாட் பதிவு செய்கிறார்.

அரசியல் தீர்மானம்:
மாநாடு நிறைவேற்றிய அரசியல் தீர்மானத்தில் 6 பகுதிகள் இருந்தன. தேசிய விடுதலையையும், உலக சமாதானத்தையும், ஆசிய நாடுகளுக்கிடையிலான ஒற்றுமையையும் இந்தியா உயர்த்திப்பிடிப்பதை அந்த தீர்மானம் அங்கீகரித்தது. அதே சமயத்தில் உள்நாட்டில் அது கடைப்பிடித்த அரசியல், பொருளாதார கொள்கைகளை ஆய்வுக்கு உட்படுத்தியது.

Co-leadership of the Communist Movement Communists as the Revolutionary Opposition! Web series 7 by Era. Sindhan இரா. சிந்தனின் தொடர் 7 கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை புரட்சிகர எதிர்க் கட்சியாக கம்யூனிஸ்டுகள் !
Image Credit: Theprint

அதன்படி நேருவின் ஆட்சிக்காலத்தில் முன்னெடுக்கப்பட்ட இரண்டாவது ஐந்தாண்டுத்திட்டம், இந்தியாவின் திட்டமிடல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் என்று மாநாட்டு தீர்மானம் அங்கீகரித்தது. ஆனால் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் பிரச்சனையில் அரசு கடைப்பிடித்த அணுகுமுறை, ஆளும் வர்க்கங்களுக்கே சாதகமாக இருந்ததையும் சுட்டிக்காட்டியது.

நாட்டின் வளர்ச்சிக்கு தொழில்மய நடவடிக்கைகள் மிக அவசியம். அதற்கு அடிப்படையாக, நாட்டில் நிலச்சீர்திருத்தம் முன்னெடுக்கப்பட வேண்டும். ஆனால், நிலவுடைமையாளர்களிடம் குவிந்திருக்கும் நிலக் குவியல் உடைக்கப்பட்டால்தான் அது சாத்தியம். இந்தியாவின் ஆட்சியாளர்கள், நிலவுடைமையாளர்களுடன் சமசரப் போக்கையே கடைப்பிடித்தார்கள். அது அரசின் வர்க்கத்தன்மையின் வெளிப்பாடே ஆகும். எனவே கம்யூனிஸ்டுகள் இந்தப் போக்கோடு ஒத்துழைப்பதோ, அணி சேர்வதோ சாத்தியமே இல்லை என்ற சரியான முடிவே மேற்கொள்ளப்பட்டது.

அத்துடன், நாட்டின் முன்னேற்றத்திற்கு தொழிலாளிவர்க்கத்தின் ஒத்துழைப்பு அவசியம். அதற்கேற்ற விதத்தில் அரசின் வரிக்கொள்கையும், இதர கொள்கைகளும் மாற வேண்டும் என்று மிகச் சரியாகவே மாநாடு அரைகூவியது. எனவே, இவற்றை முன்னெடுக்கும் ஒரு புரட்சிகர எதிர்க் கட்சியாக செயல்படவேண்டும் என முடிவு செய்தார்கள்.

இதில் ‘புரட்சிகர எதிர்க் கட்சி’ என்பதன் பொருளை சற்று சுருக்கமாகப் பார்க்கலாம். நாடாளுமன்றத்தில் மட்டும் மாற்றுக் கருத்துக்களை முன்வைக்கும் செயல்பாட்டை அனைத்துக் கட்சிகளுமே மேற்கொள்வார்கள். ஆனால், ஒரு கம்யூனிஸ்ட் கட்சி, நாடாளுமன்றத்தில் போராடுவதோடு, களத்திலும் மக்களைத் திரட்டி போராட வேண்டும். முதலாளித்துவ – நிலவுடைமை அமைப்பிற்கு எதிராக தொழிலாளர்களையும், விவசாயிகளையும் திரட்டி, சட்டப்பூர்வமாகவும், சட்டப்பூர்வமற்ற வழிகளிலும் போராட வேண்டும் என்ற முடிவினையும் கட்சி முன்னெடுத்தது.

மொழிவழி மாநிலங்கள்:
மாநாட்டின் பிற தீர்மானங்களில் மாநிலங்களை வலிமைப்படுத்துவதுடன், நாட்டின் விடுதலையை உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. (சோவியத் ஒன்றிய கம்யூனிஸ்ட் கட்சியின் 20 வது மாநாட்டிற்கு சென்று திரும்பிய அஜாய் கோஷ் [பொதுச் செயலாளார்] ஒரு விரிவான அறிக்கையை சமர்ப்பித்தார். மேலும் மொழி அடிப்படையிலேயே மாநிலங்கள் அமைய வேண்டும் என்ற தீர்மானமும் முன்வைக்கப்பட்டு இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது)

இந்திய ஆளும் வர்க்கத்திற்கு மொழிவழி மாநிலங்களை ஏற்படுத்துவதில் உடன்பாடில்லை என்பதையும், மிகப்பெரும் மக்கள் போரட்டங்களை முன்னெடுத்ததன் பின்னணியில் ஆளும் வர்க்கங்கள் அதனை ஏற்றுக்கொண்டன என்பதையும் கம்யூனிஸ்டுகள் மேற்கொண்ட சரியான நிலைப்பாட்டுக்கு உதாரணமாக பார்க்கலாம்.

ஒரு லட்சம் உறுப்பினர்கள்:
இந்த மாநாட்டில் தோழர் கே.டி.கே.தங்கமணி உள்ளிட்ட தோழர்களை கொண்டு செயல்பட தகுதி ஆய்வுக் குழு அறிக்கையை சமர்ப்பித்தது. அதன்படி நாட்டில் மொத்தம் 75 ஆயிரம் கட்சி உறுப்பினர்களும், 30 ஆயிரம் பரிச்சார்த்த உறுப்பினர்களும் இருந்தார்கள். 427 பிரதிநிதிகள் வந்திருக்க வேண்டும், மாநாட்டில் பங்கேற்பு 407 ஆக இருந்தது.

Co-leadership of the Communist Movement Communists as the Revolutionary Opposition! Web series 7 by Era. Sindhan இரா. சிந்தனின் தொடர் 7 கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை புரட்சிகர எதிர்க் கட்சியாக கம்யூனிஸ்டுகள் !
Image Credit: Thewire

மேலும், 4 வது மாநாட்டின் விவாதம் அரசியல், தத்துவார்த்த பிரச்சனைகள் தொடர்பாகவே அமைந்திருந்த காரணத்தால், அமைப்பு விதிகளை மேம்படுத்துவது தொடர்பான விவதங்களை மேற்கொள்வதற்காக 6 மாத காலத்தில் ஒரு பிளீனம் (சிறப்பு மாநாடு) நடத்தவேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. ஆனால், 1957 தேர்தல் காரணமாக அந்த சிறப்பு மாநாட்டை நடத்த முடியவில்லை.

முந்தைய தொடர்களை வாசிக்க :

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 3 : பாசிச எதிர்ப்பும், தேசிய இன உரிமைகளும் ! – இரா. சிந்தன்

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 4 : குழப்பங்கள் அலையடித்த காலம் ! – இரா. சிந்தன்

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 5 : இந்தியாவின் புரட்சிப் பாதை ! – இரா. சிந்தன்

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 6 : வெளியே கடவுள், உள்ளே மிருகம் ! – இரா. சிந்தன்

சீனாவைப் பொறுத்தவரை, நேருவைப் போலவே மோடியும் நடந்து கொண்டிருக்கிறார் – ராமச்சந்திர குஹா (தமிழில்: தா.சந்திரகுரு)

சீனாவைப் பொறுத்தவரை, நேருவைப் போலவே மோடியும் நடந்து கொண்டிருக்கிறார் – ராமச்சந்திர குஹா (தமிழில்: தா.சந்திரகுரு)

அண்மையில் 20 இந்திய வீரர்களின் துயர மரணங்களுக்கு வழிவகுத்த லடாக்கில் ஏற்பட்ட மோதல்கள், சீனா குறித்த நமது அரசாங்கத்தின் கொள்கை மீது புதிய பார்வையைத் தூண்டியுள்ளது. அந்த உறவின் ராணுவம், உத்தி மற்றும் பொருளாதாரம் குறித்த அம்சங்களை, அந்தந்த துறைகளில் அதிகம்…
இந்தியா நேருவை மறக்க முடியாது -சுசில் ஆரோன் (தமிழில்: ச.வீரமணி)

இந்தியா நேருவை மறக்க முடியாது -சுசில் ஆரோன் (தமிழில்: ச.வீரமணி)

  (ஜவஹர்லால் நேரு ஜனநாயகத்தை ஆழப்படுத்துவதற்கும், அதற்கான அரசியலைக் கட்டமைப்பதற்கும் அடிக்கோடிட்டு இந்தியக் குடியரசை வடிவமைத்தார்.) நரேந்திர மோடி ஒப்புக்கொள்ள மாட்டார். ஆனாலும் ஜவஹர்லால் நேரு, இந்தியாவிற்கும் உலகத்துக்கும் ஒரு முத்திரையைப்பதித்துவிட்டுச் சென்றுள்ள வரலாற்றுச்சிறப்பு மிக்க தலைவர் என்பதை உலகம் அங்கீகரித்திட…