பிரிந்தாலும் உன்னை – நேயா புதுராஜா
பிரிந்தாலும் உன்னை…
———————————
எத்தனைத் துயர்களைக்
கொடுத்தாலும்…
உன்னை என்னால்
சபிக்க இயலாது…
என்றோ….
என் இனிய நேரங்களுக்கு
நீ காரணமாக இருந்திருக்கிறாய்…
என்றோ…
என் வலிகளை உன்னோடு
அணுக்கமாகப் பகிர்ந்திருக்கிறேன்…
என்றோ…
பொய்யாகவேனும் என்னை
பலவகையில் சமாதானப் படுத்தியிருக்கிறாய்…
என்றோ…
என் வரம்பு மீறல்களை
அனுமதித்திருக்கிறாய்…
என்றோ…
என் வயிறு உன்னால்
பசித்தீ அடங்கியது…
என்றோ…
என் கண்ணீர்த் துளிகள்
உன் சட்டையை நனைத்திருக்கின்றன..
என்றோ….
உன் மடி எனக்கு ஆறுதலாக
இருந்திருக்கிறது…
என்றோ…
என் பயத்தில் உன் கைப்பிடித்து
நடந்திருக்கிறேன்…
என்றோ…
உனக்கான பல நேரங்களை
எனக்காக செலவு செய்திருக்கிறாய்…
என்றோ….
என் தாகம் தணிக்கும்
நீராக நீ இருந்திருக்கிறாய்…
என்றோ…
யாருமற்ற தனிமைத்துயர்களில்
உன் இருப்பு மட்டுமே
எனக்குப் பலமாக….
கால ஓட்டத்தில்…
சில துரோங்களும்…
அணுக்கமின்மையும்…
புதிய தேடல்களுமாக…நீ…
உன் மன விலகலும்..உன்
மௌனங்களும் தொடர்ந்து
என்னைக் கொல்லாமல் கொல்கின்றன…
பிரிவுத்துயர் பிரசவ வலியிலும்
கேடாக இருக்குமென்று
இப்போது புரிகிறது…
ஆனாலும்…
உன்னை என்னால்
சபிக்க இயலாது…ஏனெனில்
நினைத்துப்பார்க்க பலநல்ல
நேரங்களை எனக்கு நீ தந்திருக்கிறாய்…
என் கண்ணீர் தவிர்த்து…
என் புன்னகையை
அள்ளிப்போ…
உனக்கான புத்தகத்தில்…
என் பக்கம் மறைந்துவிடுமா என்ன…
மாயை விலகி மறுபடியும்
நீ வரும் நாளை எதிர்நோக்கி…
நான்.



