Nilavu Poem By Poet Ilankathir கவிஞர் இளங்கதிர் நிலவு கவிதை

நிலவு கவிதை – கவிஞர் இளங்கதிர்




நீ மட்டும் எப்போதும்
உயரத்தில் நிற்கிறாய் ;
நடக்குமிடமெல்லாம்
நட்பாய் வருகிறாய் ;
உள்ளம் உறைந்தபோது
உன்னத ஒளி வீசுகிறாய்;
தோல்வியில் துவண்டபோது
வெற்றித்தீ மூட்டுகிறாய்;
காற்று அசைத்தபோதும்
கண்களிலிருந்து அகலாதிருக்கிறாய்.
சின்னஞ்சிறார்களின்
சிந்தை தொடும் உலகம் நீ
உனக்குள் வந்து
ஒளிந்துகொள்ள எண்ணும்
உள்ளங்கள்தான் எத்தனை?
காலம் எழுதிய கவிதையே,
குளிர்ச்சியை மட்டுமே வீசும்
குன்றாத விளக்கே!
அறிவியலால் உன்னைத்
தொட இயன்றாலும்
அகமகிழ்வு அளிப்பதில்
உனக்கு நிகர் நீதானே?