Nobel Prize in Physiology or Medicine 2021 Winners David Julius and Ardem Patapoutian மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2021

மருத்துவத்திற்கான 2021ம் ஆண்டின் நோபல் பரிசு – விஜயன்



அறிவியல் என்பது ஒரு தொடர்பயணம்
அறிவியல் என்பதே சிக்கலான கேள்விகளை எழுப்பி அதற்கான விடை தேடுவதுதான். ஒரு சிக்கலான கேள்விக்கான விடையைக் கண்டுபிடித்தவுடன் அத்துடன் அடுத்த சிக்கலானகேள்வி எழும். இதுவே அறிவியலின் தொடர்பயணமாக இருந்து வருகிறது. எனவே இன்றைய அறிவியல் கண்டுபிடிப்பு ஒன்று நேற்றைய அறிவியல் கண்டுபிடிப்பின் தொடர்ச்சியே. “மற்றவர்களைவிட மேலதிகமான விஷயங்களை நான் பார்த்திருக்கிறேனென்றால் எனக்கு முந்தைய மேதைகளின் தோளில் நின்று நான்பார்க்கிறேன் என்று அர்த்தம்“என்ற ஐசக் நியூட்டனின் கூற்று மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு வருகிறது. இதற்கு உதாரணத்தை மருத்துவத்திற்கான இந்த ஆண்டு நோபல் பரிசை நாம் கூறலாம்.

வெப்பம், குளிர்ச்சி, அழுத்தம் ஆகியவற்றை நமது உடல் உணர்தலுக்குப் பின்புலமாக உள்ள மூலக்கூறு இயக்கங்களை கண்டுபிடித்த இரு அறிவியலாளர்களுக்கு இந்த ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. ஒருவர் டேவிட் ஜூலியஸ் (David Julius) என்ற அமெரிக்கர். இவர் கலிஃபோர்னிய பல்கலைக் கழகத்தின் சான் ஃபிரான்ஸில்கோ வளாகத்தைச் சேர்ந்தவர். இன்னொருவர் ஆர்டெம் பாடாபௌடியன்(Ardem Pattapouttian) என்ற லெபனிய – அர்மீனிய அமெரிக்கர். இவர் கலிஃபோர்னியாவின் லஹொயா நகரிலுள்ள ஸ்கிரிப்ஸ் ஆய்வுக்கூடத்தைச் சேர்ந்தவர். பொதுவாக உணர்தல் என்பது மேல் தோலில் தூண்டப்பட்டு நமது நரம்பு மண்டலத்தில் மின்சமிக்ஞைகளாக மூளைக்கு சென்றடைந்து முளையால் கிரகிக்கப்பட்டு உணர்தலாகும். நரம்பு மண்டலத்தில் தூண்டுதல் எப்படி நடைபெறுகிறது என்பதே விடைதெரியாத கேள்வியாக இருந்தது. இதற்கான விடையை அதற்கே உரித்தான மூலக்கூறுகளின் இயக்கத்தை துல்லியமாக வரையறுத்ததால் இந்த இருவருக்கும் இந்த ஆண்டு நோபல் பரிசு கொடுக்கப்பட்டது.

சரி, நாம் ஐசக் நியூட்டனுக்கு வருவோம். டேவிட்டும், ஆர்டெம்மும் எந்த மேதைகளின் தோள்மீது நின்று கொண்டு இவற்றைப் பார்த்தார்கள்?இதை நாம் தேடினால் மேதைகளின் நீண்ட பட்டியல் ஒன்று நமக்கு கிடைக்கும். ஆம், உணர்வுகளை உடற்கூறியல் ரீதியாக விளக்கும் முயற்சி ஆயிரம் ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. பல்வேறு பண்டைய விளக்கங்கள் இன்றைக்கு நமக்கு சிரிப்பை வரவழைத்தாலும் அவையெல்லாவற்றையும் கடக்காமல் இன்றைய நிலைக்கு நாம் வந்திருக்க முடியாது. இந்த விளக்கங்கள் ஒரு குறிப்பிட்ட திசையில் திரும்பி இன்றைய நிலையை நோக்கி திருப்பிவிடப்பட்டது 17ம் நூற்றாண்டில்தான். அந்த நூற்றாண்டைச் சேர்ந்த ரெணே தெக்கார்தேயின் விளக்கத்தைப் பார்ப்போம். நமது உடலில் நெருப்பு படும்போது நெருப்பில் உள்ள துகள்கள் மூளையையும் நமதுமேல்தோலையும் இணைக்கும் இழை ஒன்றை உருவி எடுக்கிறது என்பதே அவர் கொடுத்த விளக்கம். இதனையடுத்து பத்தொன்பதாம் நூற்றாண்டில் வந்த விளக்கங்களில் முக்கியமானது,நமது தோலில் குறிப்பிட்ட சில இடங்களானது குறிப்பிட்ட அதாவது தொடுதல், வெப்பம், குளிர்ச்சி போன்ற உணர்வுகளை தூண்டும் ஆற்றல் பெற்றவை என்பதும் அவை வெவ்வேறு வகையான நரம்புகளை செயல்படுத்துகின்றன என்பதும்தான். இதனையடுத்து நரம்பு மண்டலத்தின் மீது ஆய்வாளர்களின் கவனம் திரும்பியது. தெகார்த்தே கூறிய இழை இப்பொழுது நரம்பாகிவிட்டது. இதிலிருந்து அறிதல் என்பது படிப்படியாகத்தான் முன்னேறி வருகின்றன என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

உணர்தல் என்ற புதிருக்கான விடையைத் தேடி..
இருபதாம் நூற்றாண்டில் உணர்தலுக்கான நரம்பியல் அமைப்புமுறைக்காக ஐந்து நோபல் பரிசுகள் கொடுக்கப்பட்டிருக்கிறது என்றால் அதற்குமுன்பு நடைபெற்ற பணிகளின் தொடர்ச்சியே என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும். 1906ம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசானது காமில்லோ கோல்ஜி, சான்டியாகோ ராமோன் கஜோல் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இவர்கள் நரம்பு மண்டலத்தின் கட்டமைப்பைக் கண்டறிந்ததற்காக கொடுக்கப்பட்டது. இவர்கள் உடலுக்குரிய உணர்தல் அமைப்புமுறையை உடற்கூறியல் அடிப்படையில் முதன்முறையாக விளக்கியிருக்கிறார்கள். இதற்கு அடுத்து 1932ம் ஆண்டின் மருத்துவத்திற்கான மற்றொரு நோபல் பரிசு சார்லஸ் ஷெர்ரிங்டன், எட்கர் ஆட்ரியன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இவர்கள் நரம்பு மண்டல அறிதலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றார்கள். ஆம், நியூரான்கள் என்ற விசேடமான செல்களின் செயல்பாடுகளைக் கொண்டு உடலுக்குரிய உணர்வு அமைப்புமுறையை இவர்கள் விளக்கினார்கள். இதற்கு அடுத்ததாற்போல், 1938ம் ஆண்டு நோபல் பரிசு நரம்புமண்டல ஆய்வுப் பணிக்காக கொடுக்கப்பட்டது. அனிச்சைச் செயல்களை தூண்டும் நரம்பிழைகள் பற்றி அறிதலுக்காக இது வழங்கப்பட்டது. இந்த நோபல் பரிசை வென்றவர் கோரினில் ஹேமேன்ஸ். இதற்கு அடுத்த கட்டமாக, ஒரு ஒற்றையிழை நரம்பின் வெவ்வேறு செயல்பாடுகளை ஜோசப் எர்லாஞ்சர், ஹெர்பர்ட் ஸ்பென்ஸர் காஸர் ஆகியோர் கண்டறிந்தனர். இவர்கள் 1944ம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசை வென்றனர். நரம்புமண்டல ஆய்வுப்பணிக்கான அடுத்த நோபல் பரிசு 1963ம் ஆண்டு ஹாட்கின், ஹகஸ்லே, ஜான் எக்லேஸ் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இவர்கள் அயனிகளின் இயக்க அடிப்படையில் நரம்புசெல்களின் செயல்பாட்டை விளக்கினர்.

தோல், தசைகளின் உணர்தலுக்கான நரம்பிழைகள் ஆகியவற்றின் வழியாக தூண்டலுக்கான ஆற்றல் பரவுவதை கோட்பாட்டடிப்படையில் இருபதாம் நூற்றாண்டின் இந்தக் கண்டுபிடிப்புகள் நிறுவியது. வெவ்வேறு வகையான நரம்பிழைகள், அவற்றால் கொண்டு செல்லப்படும் செய்திகள் கடத்தப்படும் வேகம், செயலூக்க ஆற்றல் எல்லை, பரவுதலுக்கு எடுத்துக் கொள்ளும் நேரம் போன்ற கண்டுபிடிப்புகள் நமது உடலின் இயக்கத்தை உணர்தல், இயங்குவெளிபற்றிய பிரக்ஞை, தொடு உணர்வு, வெப்பஉணர்வு, அசைவியக்க உணர்வுஆகியவற்றை திருப்திகரமாக விளக்குகிறது. எனினும் வெப்பம், தொடுதல் ஆகியவற்றின் ஏற்பிகள், அவற்றிலுள்ள மூலக்கூறுகள், இவை உணர்ந்து கொண்டதை நரம்பிழைக்களுக்கு சமிக்ஞைகளாக எவ்வாறு மாற்றப்பகிறது என்பது புரியாத புதிராகவே இதுவரை நீடித்து வந்தது.

நமது செயல்பாட்டில் நமக்கு சர்வ சாதாரணமாக தென்படும் விஷயங்களின் பின்னால் சிக்கலான பல செயல்பாடுகள் உள்ளன. நரம்பு மண்டலம் இல்லையேல் மனிதன் இல்லை என்னும் நிலைக்கு நமது நரம்பு மண்டலம் ஏராளமான பணிகளைச் செய்து கொண்டிருக்கின்றன. சில உதாரணங்களைப் பார்ப்போம். உடலுக்குரிய உணர்வு என்று நாம் வெறும் சொல்லால் அழைக்கப்படுவதற்கு பின்புலத்தில், நமக்கு புறத்தே உள்ள அழுத்தம், வெப்பம் போன்ற யாந்த்ரீக குணங்களை உடற்கூறியல் ரீதியான சமிஞ்கைகளாக மாற்ற வேண்டும். அடிப்படையில் இவை நுண்ணிய மின்சமிக்ஞைகளாக மாறுகின்றன. சமிக்ஞைகளை நரம்பிழைகள் மூலமாக மூளைக்கு கடத்த வேண்டும். மூளையானது இந்த சமிக்ஞைகளை பரிசீலித்து பதிவு செய்யும் அல்லது மேல் முடிவு எடுக்கும். அதேபோல் மூளை இடும் கட்டளைகளை சமிக்ஞைகளாக மாற்ற வேண்டும், அவை நரம்பிழைகள் மூலமாக தசைகளுக்கு வரவேண்டும் தசைகளை கட்டளைகளை நிறைவேற்றும் முகமாக சுருங்கி விரிந்து செயல்பட்டு நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும். இவ்வளவு சிக்கலான செயல்கள் நொடிப்பொழுதில் நடக்கிறது.

அடுப்படியில் நிற்கையில் தீப்பொறி ஒன்று நம் வலது கைமீது படுகிறது என்று வைத்துக் கொள்வோம். தீப்பொறியின் வெப்பத்தை மேல்தோல் ஏற்பி வெப்ப சமிக்ஞையாக மாற்றுகிறது. இந்த சமிக்ஞை நரம்பிழை மூலமாக தண்டுவடத்தின் வழியாக மூளைக்குச் செல்கிறது. சில சமயம் தண்டுவடமே கட்டளைகளை பிறப்பித்து அவற்றை மோட்டார் நியூரான்கள் மூலமாக தசைகளுக்கு அனுப்பும். எனினும் இந்த சமிக்ஞைகள் மூளையில் உள்ள நியூரான்கள் பரிசீலித்து வெப்பம் ஏற்படுத்திய வலியாக மாற்றி பதிவு செய்கிறது. மூளையானது இடது கையை வைத்து தீப்பொறி பட்ட வலது கையின் இடத்தை வெடுக்கென தேய்க்குமாறு கட்டளையிடுகிறது, தண்டுவடம் அல்லது மூளை இடும் கட்டளைகளை நியூரான்கள் சமிக்ஞைகளாக மாற்றி கட்டளைகளை இடது கையின் தசை நார்களுக்கு மோட்டார் நியூரான்கள் வழியாக அனுப்புகிறது. தசைநார்கள் சுருங்கி விரிந்து இடது கை இயங்கி உள்ளத்தின் கட்டளையை நிறைவு செய்கிறது. இது அவ்வளவும் கண்ணிமைக்கும் நேரத்தில் நடைபெற்றுவிடுகிறது. மூளையும் தண்டுவடமும் ஒரே நேரத்தில் சமிக்ஞைகளைப் பெற்று கட்டளைகளை பிறப்பிக்கின்றன. தண்டுவடம் இடும் கட்டளைகளை நாம் அனிச்சை செயல் (Reflexes) என்கிறோம். இந்த இரண்டு கட்டளைகளுக்கும் முரண்பாடு ஏற்பட்டால் மூளையின் கட்டளையே இறுதியாக ஏற்றுக் கொள்ளப்படும்.

தீங்குவிளைவிக்கும் வெப்பம் அல்லது அழுத்தம் போன்றவைகளை இரைச்சல் தூண்டுதல் (Noxious Stimuli) என்ற வகைப்பட்டவை. இவற்றை கடத்துபவை விசேடமான நரம்பிழைகள். இவை மிக மிக முக்கியமானவை. இரைச்சல் தூண்டல்கள் என்பவை உடனடி நடவடிக்கைகளை கோருபவை. அழுத்தம், வெப்பம், திரவ ஓட்டம், திரவ மட்டம் போன்ற பல்வேறு கூறளவுகளை உணர்ந்து வேதிவினைகளை கட்டுப்படுத்தி குறிப்பிட்ட வேதிப்பொருளை உற்பத்தி செய்யும் நோக்கத்தில் இயங்கும் ஒரு வேதியல் தொழிற்சாலையில்ஒரு குறிப்பிட்டகூறளவு ஒரு எல்லையைக் கடந்தால் இயக்குபவருக்கு எச்சரிக்கை சமிக்ஞை (Warning) கொடுக்க வேண்டும். அது மேலும் தொடர்ந்து மாறி ஆபத்து நிலையை அடையும் போது இயக்கத்தை நிறுத்தக் கோரும் எச்சரிக்கையை (Alarm) செய்ய வேண்டும். இரைச்சல் தூண்டுதல்கள் அவசர எச்சரிக்கைகளைக் கொடுப்பவை. வலிகள் இரைச்சல் தூண்டுதல் வகையைச் சேர்ந்தவை.

இப்படியாக உடலின் இயக்கமானது அது இயங்கும் சுற்றுச் சூழலை உன்னிப்பாக உணர்ந்து அதற்கேற்றாற் போல் தகவமைத்துக் கொள்ளும் ஆற்றலை உள்ளடக்கியதாக இருக்கிறது. இதற்கு முக்கியமான ஆரம்பகட்ட உணர்தல் செயல் என்பதை நாம் வலியுறுத்திச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இந்த ஆரம்பகட்ட உணர்தலுக்கு முக்கியமானது உடலில் பண்புபெயர்ப்பியாக (Transducer) செயல்படும் அமைப்புமுறையைப் பற்றிய சரியான புரிதல்தான். வெப்பம், குளிர்ச்சி, அழுத்தம் போன்ற கூறளவுகளை (Parameters) உடற்கூறு ரீதியாக உணரும் ஏற்பிகளானவை அவற்றை மின்சமிக்ஞைகளாக மாற்றும், பண்பு பெயர்ப்பிகளாக செயல்படுகின்றன. இந்த நுண்ணிய மின்சமிக்ஞைகள்தான் நரம்பிழைகள் மூலம் மூளைக்குச் செல்கிறது. ஆக, நமது மேல்தோலில் உள்ள ஏற்பிகள் எவ்வாறு பண்பு பெயர்ப்பியாக செயல்படுகின்றன? இக்கேள்விக்கான விடையைத்தான் இந்த ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல்பரிசு கண்டுபிடிப்புகள் கொடுக்கின்றன.

சிக்கலான விஷயத்திற்கு நீண்டகாலம் விடைதேடிக்கொண்டிருக்கும்போது யாரேனும் ஒருவர் ஏதாவது ஒரு அம்சத்தில் ஒரு வித்தியாசமான அணுகுமுறையை கையாள்வதன் மூலமே தேடுதல் நடவடிக்கையில் உடைப்பு ஏற்பட்டு முன்னேற்றம் நடக்கிறது. நெருப்பானது ஏற்பிகளை எரித்துவிடுமே. ஏற்பிகள் நெருப்பால் ஏற்படும் எரிச்சலை நுண்ணிய மின்சமிக்ஞையாக பிறகு எப்படி மாற்றமுடியும்? இப்படித்தான் ஆய்வாளர்கள் முட்டி மோதிக் கொண்டிருந்தார்கள்.

இதற்கிடையில் வெப்பம் ஏற்படுத்தும் எரிச்சலும், மிளகாய்ப்பொடி ஏற்படுத்தும் எரிச்சலும் ஒரே வகையைச் சார்ந்திருக்குமோ என்ற ஐயம் எழுந்து,ஆய்வாளர்கள் மத்தியில் எழுந்தது. மிளகாயை கடித்தால் மண்டையில் வியர்ப்பது போன்ற உணர்வு, சூடு ஏறுவது என்ற உணர்வு, உதட்டில் எரிச்சல் ஏற்படுவது போன்றவைகளுக்கான காரணம் என்ன என்று 1950களில் ஆய்வு நடத்தப்பட்டது. மிளகாயின் மூலக்கூறுகளை ஆய்வு செய்தபோதுஅதிலுள்ள கெப்ஸைஸின் (Capsaicin) என்ற மூலக்கூறுதான் இந்த விஷயங்களுக்குக் காரணம் என்று கண்டறியப்பட்டது. அதற்கடுத்த பத்தாண்டுகளில் உணர்வு நரம்பிழைகளை தூண்டும் ஆற்றல் கெப்ஸைஸின் மூலக்கூறுக்கு இருக்கிறது என்று கண்டறியப்பட்டது. அத்துடன் இந்த தூண்டுதலானது நரம்பிழைகளில் உள்ள அயனிப்பாதைகளில் தேவையில்லாத வெப்பத்தை உண்டாக்குகிறது என்றும் கண்டறியப்பட்டது. எனினும் வெப்பத்தை சமிக்ஞைகளாக மாற்றும் பண்புப் பெயர்ப்பிகள் இந்த அயனிப் பாதைகளா அல்லது வேறு ஏதேனும் உடற்கூறு அம்சமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

கடந்த ஐம்பது ஆண்டுகளில் மரபணு ஆய்வுகளில் தாவிப்பாய்ச்சல் முன்னேற்றம் ஏற்பட்டு மனித மரபணுக்கள் அத்தனையும் 2000ம் ஆண்டில் தொகுக்கப்பட்டுவிட்டது. மரபணுக்கள் (Gene) நமது செல்லுக்குள் சுருட்டி வைக்கப்பட்டிருக்கும் டிஎன்ஏவின் (DNA)இணைப்புச் சங்கிலிகள். குறிப்பிட்ட நீளமுள்ள டிஎன்ஏவை ஒரு குரோமோசோம் (Chromosome) என்றழைக்கிறோம். மனித செல்லுக்குள் 23 ஜோடி குரோமோசோம்கள் உள்ளன அதாவது 46 குரோமோசோம்கள் உள்ளன. ஒவ்வொரு மரபணுவும் உடலின் ஒவ்வொரு செயலையும் உறுப்புகளின் பண்புகளையும் தீர்மானிப்பவை. எதிரெதிர் திசையில் சுழன்று செல்லும் நூலிழை போன்ற அமைப்பே டிஎன்ஏயின் அமைப்பாகும்.டிஎன்ஏக்கு மூன்று முக்கியப் பணிகள் உள்ளன. ஒன்று, தன்னுருவாக்கப் பணி. இரண்டு, செல்பிரிதலின் போது புதிய செல்களை உருவாக்குவது. மூன்றவது, மூன்றாவது நமது உடலுக்குத் தேவையான புரோட்டீன்களைத் தயாரிப்பது. புரோட்டின்கள்தான் தசைகளாவும் திசுக்களாகவும் செயல்படுகின்றன அவை உணர்விகளாகவும் செயல்படுகின்றன.தசைகளின் இயக்கம், ஒளியை உணர்தல், தொடு உணர்ச்சி, வெப்பம் குளிர்ச்சி ஆகியவற்றை உணர்தல் போன்றவற்றிற்கு புரோட்டீன்களே காரணம். எனவே, செல்களுக்குள் உள்ள குரோமோசோம்களை,அதாவது டிஎன்ஏவை நாம் உடலமைப்பின் வரைபடம் எனலாம். குறிப்பிட்ட மரபணு குறிப்பிட்ட புரோட்டீனை உற்பத்தி செய்ய வேண்டிய செயல்முறையை (Receipe) தாங்கி நிற்கும். பொதுவாக மரபணுவின் பெயரே அது குறிப்பிட்ட செயல்முறையில் தயாரிக்கப்படும் புரோட்டீனின் பெயராகும். எப்படி தந்தையின் பெயரை மகனுக்குச் சூட்டுகிறோமோ அதுபோலத்தான் இதுவும். எல்லா செல்களிலும் எல்லா மரபணுக்களும் இருக்கும். எனினும், குறிப்பிட்ட பணியைச் செய்யும் செல்லில், குறிப்பிட்ட மரபணு மட்டும்தான் செயலூக்கமுள்ளதாக இருக்கும் மற்றவை அடங்கிக் கிடக்கும். உதாரணத்திற்கு மூக்கிலுள்ள செல்லில் வாசனையை உணரும் மரபணுவே செயலூக்கம் மிக்கது. வாசனை உணரும் ஆற்றல் உள்ள புரோட்டீன் தயாரிப்புக்கு இந்த மரபணு காரணமாகிறது. இதே மரபணுவானது நாக்கில் உள்ள செல்லில் செயலற்று அடங்கிக் கிடக்கும்.மனித மரபணுக்கள் 20,000-25,000 இருக்கிறது. ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர் வைக்கப்பட்டுவிட்டது. பொதுவாக இப்பெயர்கள் எண்களும் எழுத்துகளும் சேர்ந்த சிறிய ஒற்றைச் சொல்.

வெப்பத்தை உணர்தல் என்ற புதிர் தீர்க்கப்பட்டது

Nobel Prize in Physiology or Medicine 2021 Winners David Julius and Ardem Patapoutian மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2021
(படம் எண் 1) இப்படமானது டேவிட்டும் அவரது குழுவினரும் தண்டுவடத்தில் உள்ள நியூரான்கை கெப்ஸைஸின் மூலக்கூறுடன் பொருத்தி செய்யப்பட்ட ஆய்வை பிரதிபலிப்பது. இதில் VR1 ஏற்பி செயலூக்கமுள்ள நியூரானில் ஏற்பட்ட மாற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது

மரபணுத் தொகுப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் நமது உடலின் ஒவ்வொரு உணர்தல் செயல்பாட்டிற்கும், குறிப்பிட்ட மரபணுவே பொறுப்பு என்ற முடிவுக்கு 1990களிலேயே அறிவியலாளர்கள் வந்து சேர்ந்துவிட்டனர். எனவே வெப்பத்தை சமிக்ஞைகளாக மாற்றுவது நரம்பிழையின் அயனிப்பாதைகளா அல்லது மேல் தோலில் உள்ள வேறு ஏதேனும் ஏற்பிகளா என்ற கேள்விக்கு விடைகான டேவிட் ஜூலியஸ் கெப்ஸைஸின் என்ற மூலக்கூறுடன் இணையும் ஏற்பிகள் ஏதேனும் இருக்கிறதா என்று ஆய்வின் கவனத்தை திருப்பினார்.

Nobel Prize in Physiology or Medicine 2021 Winners David Julius and Ardem Patapoutian மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2021
படம் எண் 2 தண்டுவட நியூரான் ஒன்றினை உருப்பெருக்கியில் பார்த்தால் கிடைக்கும் படம் இது. இதில் அம்புக்குறியிட்ட இடங்கள் TRPV1 மரபணுக்கள்

அத்துடன், கெப்ஸைஸின் என்ற மூலக்கூறின் உடற்கூறியல் வினை பற்றி அறிந்தால் வலியை தாங்கிச் செல்லும் சமிக்ஞைகள் பற்றிய அறியமுடியும் என்று நம்பினார். ஆய்வைத் தொடர ஒரு அனுமானத்தை செய்தார். மனித மரபணுக்களில் ஏதேனும் ஒரு மரபணு உண்டாக்கும் புரோட்டீன்தான் இந்த கெப்ஸைஸினுடன் வினைபுரிகிறது என்பதே அந்த அனுமானம். கிட்டத்தட்ட 20,000 – 25,000மனித மரபணுக்கள் இருக்கின்றனவே இதில் எது உருவாக்கும் புரோட்டீன் கெப்ஸைஸினுடன் வினைபுரிகிறது என்று எவ்வாறு கண்டறிவது? நீண்ட பெரிய முயற்சி இது. அவரும் அவருடன் பணிபுரிந்து வந்த மைக்கேல் ஜே கேட்டரினா என்பவரும் இணைந்து கெப்ஸைஸினுடன் வினைபுரியும் சாத்தியமுள்ள மரபணுக்களின் தொகுப்பு ஒன்றை உருவாக்குவது என்று முடிவுக்கு வந்தனர். பிறகு அந்த தொகுப்பிலுள்ள மரபணுக்கள் உண்டாக்கும் புரோட்டீனை ஒவ்வொன்றாக கெப்ஸைஸின் மூலக்கூறுடன் பொருத்தி ஆய்வு செய்து புதிரை விடுவிக்கலாம் என்று முடிவெடுத்தனர். உணர்வுகள் கட்டளைகள் போன்றவற்றை பரிசீலித்து செயல்படுத்தும் செல்களை நாம் நியூரான்கள் என்று அழைக்கிறோம். நியூரான்கள் என்பவை விசேடமான செல்கள். எனவே டேவிட் குழுவினர் தண்டுவடத்தில் இருக்கும் நியூரான்களை (rodent dorsal root ganglia) எடுத்து அவற்றிலுள்ள முக்கியமான மரபணுக்களின் பிரதிகளை (cDNA) எடுத்து சேகரிக்கத் துவங்கினர். ஒரு நீண்ட நெடிய பயணத்திற்குப் பின் கள்ளன் அகப்பட்டான். ஆம் அவர்கள் தேடிய மரபணுவை அடையாளம் கண்டுவிட்டனர்.  இந்த மரபணு தயாரிக்கும் புரோட்டீனானது தற்காலிகமாக எதிரயனிப் பாதையை அமைக்கும் ஆற்றலுள்ள ஏற்பிகளின் குடும்பத்தைச் சார்ந்தது. (Transient Receptor Potential (TRP) Cation Channels).

Nobel Prize in Physiology or Medicine 2021 Winners David Julius and Ardem Patapoutian மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2021
படம் எண் 3 40o C வெப்பத்தை தாண்டியவுடன் TRPV1 மரபணுக்கள் உருவாக்கும் நுண்ணிய மின்சமிக்ஞைகள் எவ்வாறு மாற்றமடைகிறது என்று இப்படம் விளக்குகிறது

 

இவ்வகை எதிரயனிப்பாதை (Cation Channel) உருவாக்கும் ஏற்பிகளை வானிலாய்ட் ஏற்பிகள் என்றழைப்பார்கள். எனவே இதற்கு TRPV1 என்று பெயரிடப்பட்டது. TRPV1 ஏற்பிகள் பற்றிய குணாம்சங்கள் பற்றி இங்கே விளக்க வேண்டிய அவசியமில்லை. இத்துறையில் நிபுணத்துவம் பெறவிரும்புவர்கள் தெரிந்து கொள்ளட்டும். பொதுவான புரிதலுக்காக நாம் இத்துடன் நிறுத்திக் கொள்வோம். பின்னாளில் நடைபெற்ற ஆய்வுக்கூட ஆய்வு முடிவுகளும் அதையொட்டிய பல விஷயங்களும் TRPV1 என்ற புரோட்டீனைத் தாங்கி நிற்கும் ஏற்பிகளேவெப்பம் உண்டாக்கும் எரிச்சல் என்ற உணர்வை நரம்பிழைகளில் அயனிப்பாதையை உண்டாக்கி நுண்ணிய மின்சமிக்ஞைகளாக மாற்றும் பண்புபெயர்ப்பிகள் என்ற முடிவை உறுதி செய்தன. அருகிலுள்ள படங்கள் இதிலுள்ள ஆழமான விஷயங்களை சற்று எளிதாக்குகின்றன. TRPV1 கண்டுபிடிப்பானது ஒரு உடைப்பை ஏற்படுத்திய கண்டுபிடிப்பாகும். இதனைத் தொடர்ந்து குளிர்ச்சியை உணரும் புரோட்டீன் TRPM8 கண்டுபிடிக்கப்பட்டது. TRPV1ஐ கண்டுபிடிக்க எப்படி கெப்ஸைஸின் உதவியதோ, குளிர்ச்சி அறியும் மரபணுவான TRPM8 கண்டுபிடிக்க மென்தால் (Menthol) என்ற வேதிப்பொருள் உதவியது. மிளகாய்ப்பொடி எரிச்சலை ஏற்படுத்துவதுபோல், மென்தாலைத் தொட்டால் குளிர்ச்சி உணர்வு ஏற்படும். பெப்பர்மின்டில் மென்தால் உள்ளது. அதை சுவைக்கும்போது நாம் குளிர்ச்சியை உணர்வதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். தொடர்ச்சியாக நடைபெற்ற ஆய்வுகளின் விளைவாக வெப்ப உணர்வில் செயல்படும் பண்புபெயர்ப்பிகள் அனைத்தும் TRP குடும்பமாக அடையாளப்படுத்தப்பட்டுவிட்டன. TRPV1, TRPA1, TRPM2, TRPM8 போன்ற முக்கியமான மரபணுக்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவைகளின் குணாம்சங்கள் வரையறுக்கப்பட்டு ஆய்வுக் கூடத்தில் நிறுவப்பட்டுவிட்டன. இதன் மூலம் வலிஉணர்வின் ரகசியங்கள் அனைத்தும் கட்டுடைக்கப்பட்டுவிட்டன.

Nobel Prize in Physiology or Medicine 2021 Winners David Julius and Ardem Patapoutian மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2021
படம் எண் 4 உணர்வி நியூரான்கள் கெப்ஸைஸின் மூலக்கூறுவிற்கு ஆற்றும் எதிர்வினையை மரபணுவின் செயல்பாட்டை உருப்பெருக்கிக் காட்டும் உத்தி மூலம் விளக்கப்பட்டுள்ளது. இது TRPV1 மரபணுக்கள் கண்டுபிடிக்கப்பட்டதை உறுதி செய்கிறது. அத்துடன் வெப்பத்திற்கு எதிர்வினையாற்றும் இதர மரபணுக்களையும் கண்டுபிடிப்பதற்கு இது உதவியது, இவையெல்லாவற்றையும் இணைத்து வெப்ப உணர்தலின் மரபணுச் செய்திகளை இனம்காண முடிகிறது.

 

அழுத்தத்தை உணர்தல் என்ற புதிருக்கான தீர்வும் எட்டப்பட்டது
தொடுதல், கிள்ளுதல், குத்துதல், அடித்தல் உட்பட அனைத்தையும் உணருவது இயந்திர அழுத்த உணர்வாக வகைப்படுத்தப்படுகின்றன. வெப்பத்தை உணரும் ஏற்பிகள் இருப்பது போது அழுத்தத்தை உணரும் ஏற்பிகளும் இருக்கின்றன. இந்த ஏற்பிகளில் உள்ள குறிப்பிட்ட புரோட்டீன்கள் அழுத்தத்தை நுண்ணிய மின்சமிக்ஞைகளாக மாற்றும் பண்புப்பெயர்ப்பிகளாக இருக்கின்றன. இத்தகைய புரோட்டீன்களை அடையாளம் காணும் வேட்டையில் வெற்றிபெற்றவரான ஆர்டெம் பாடாபௌடியனுக்கு இந்த ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசின் அடுத்தபாதி பகிர்ந்தளிக்கப்படுகிறது.

இயற்பியலில் அழுத்தத்தை மின்சாரமாக மாற்றும் நிகழ்வுப் போக்கிற்கு அழுத்த-மின் விளைவு (Piezo Electric Effect) என்று குறிப்பிடுவார்கள். செல்களுக்குள்ளும் அழுத்தத்தை நுண்ணிய மின்சமிக்ஞைகளாக மாற்றும் ஆற்றல் உள்ளவைகள் இருப்பதால்தான் அழுத்த உணர்வுகள் நுண்ணிய மின்சமிக்ஞைகளாக மாற்றப்படுகின்றன.தவளையின் காதுக்குள் ஒலி நுழையும் பாதைக்குள் உள்ள முடியில் உள்ள செல்லானது அழுத்த உணர்வை தூண்டுதலுக்கு காரணமாகிறது என்பது 40 ஆண்டுகளுக்கு முன்பே அறியப்பட்டது. முதுகெலும்புள்ள பிராணிகளின் முதுகெலும்பு தண்டில் உள்ள செல்களில் உள்ள நியூரான்களில் இது இருக்கும் என்று ஆய்வு நடத்தப்பட்டது. லேசாகத் தொட்டவுடன் துடிக்கும் மிக்சிறிய புழுக்களில் தொடுஉணர்வு பிரதானமாக இருக்கும் என்று Caenorhabditis elegans என்ற ஒருவகை புழுவை ஆய்வு செய்தார்கள். குறிப்பாக சிறிய உயரினங்களில் நரம்பியல் ஆய்வுகள் செய்வது எளிது ஏனென்றால் அவைகளிடம் உள்ள நியூரான்கள் எண்ணிக்கை மனிதர்கள் போல் பல்லாயிரம் கோடிகளில் இருக்காது. இதேபோல் Drosophila melanogaster என்ற பழ ஈக்களிடமும் ஆய்வு நடத்தப்பட்டது, இவைகளில் ஏதேனும் செல்கள் கண்டறியப்பட்டால் அதுபோன்று இதர முதுகெலும்புள்ள பிராணிகளில் இருக்கிறதா என்று ஆய்வு நடத்தலாம் என்பதால்தான் இது நடந்தது. இதுபோல் தொடுதலுக்கு வெடுக்கென எதிர்வினையாற்றும் சில பாலூட்டிகளிடமும் ஆய்வுகள் நடைபெற்றன. எதிலும் முன்னேற்றமில்லை.

Nobel Prize in Physiology or Medicine 2021 Winners David Julius and Ardem Patapoutian மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2021
படம் எண் 5 – அசைவியக்க உணர்வை மூலக்கூறு அடிப்படையில் விளக்கும் படம்.

ஆக இதுபோன்ற செல்களை அறிந்து அதிலுள்ள மரபணுவை அறிந்துகொள்வது என்பது வைக்கோல் போரில் ஊசியைச் தேடுவதற்கு ஒப்பாகும். வெப்பஉணர்வு ஏற்பிகளிலுள்ள புரோட்டீனை கண்டுபிடிக்க தண்டுவட நியூரான்களை மட்டும் எடுத்து பரிசோதித்தது போல் இதிலும் அதுபோன்ற அணுகுமுறை வேண்டும். எனவே தேடுதலில் வெற்றிபெற சாத்தியமுள்ள வகைகளை மட்டும் அடையாளப்படுத்தி அதற்குள் தேடுதல் தொடர்ந்தால் குறிப்பிட்ட காலத்திற்குள் தேடுதல் பணியை முடிக்கலாம் என்று பாடாபௌடியன் முடிவு செய்தார். இயந்திர விசையால் நுண்ணிய மின்தூண்டல் நடைபெறும் பிளாஸ்மா ஜவ்வுகளில் உள்ள Neuro2A என்ற வகை செல்களை இவர் ஆய்வுக்காக தெரிவு செய்தார். இவற்றில் குறிப்பிட்ட 72 மரபணுக்களை பிரித்தெடுத்து ஆய்வுகளை தொடர்ந்தார். இவையனைத்தும் அயனிப்பாதையை உண்டாக்கும் புரோட்டீன்களை படைப்பவை. ஒவ்வொன்றாக ஆய்வுசெய்து வருகையில் அவர் தேடிய மரபணுவைக் கண்டடைந்தார். அது FAM38A என்ற மரபணுவாகும். இதற்கு PIEZO1 என்று மறுபெயரிட்டு அழைத்தார். மனிதக் கருநிலையில் உருவாகும் சிறுநீரகத்தில் உள்ள ஜவ்வுகளின் செல்கள் (HEK-293 அழுத்தத்திற்கு எதிர்வினையாற்றுகின்றன. இவை அழுத்தத்தால் அதிகளவில் மின்தூண்டல் பெறுகின்றன. இவற்றில் PIEZO1 புரோட்டீன்கள் இருப்பதால் இப்படி வித்தியாசமான எதிர்வினைகளை வருகின்றன என்பதை அறிந்தார். அவருடைய தேடலின் முதல் படியாக PIEZO1 அமைந்தது. இதன் குணாம்சத்தை ஆய்வு செய்து வரையறுத்தபின் இதே குணாம்சமுள்ள மரபணுக்கள் தண்டுவட நியூரான்களில் உள்ளனவா என்று ஆய்வு செய்தார். இதில் அவர் PIEZO2 என்ற மரபணுவை கண்டறிந்தார். PIEZO2 பற்றிய ஆய்வுகளைத் தொடர்ந்தார்.மேல்தோலின் அடுத்த அடுக்கில் உள்ள மெர்க்கல் செல்லானது (Merkel Cell) தொடுதலுக்கு எதிர்வினையாற்றும் தூண்டல் பெறுகிறதென்றும், இது தொடுதலின் போது PIEZO2 உண்டாக்கும் புரோட்டீன் தூண்டும் அளவிற்கு இருக்கின்றன என்பதை பாடாபௌடியன் ஆய்வின் வாயிலாக2014ம் ஆண்டில் நிறுவினார். இறுதியில் PIEZO2 என்ற புரோட்டீனே அழுத்த உணர்வை நுண்ணிய மின்சமிக்ஞைகளாக மாற்றும் பண்புப் பெயர்ப்பிகளில் உள்ளன என்றும் அறிவித்தார். அழுத்தத்தை உணர்தலை மூலக்கூறு மட்டத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிந்ததால் மேலும் பல ஆராய்ச்சிகள் தொடருவதற்கு இது வித்திட்டது. எனவே உடைப்பு ஏற்படுத்திய இந்தக் கண்டுபிடிப்பானது நரம்பியல் அறிவியலில் ஒரு புரட்சியை ஏற்படுத்திய கண்டுபிடிப்பாகும்.

இந்த ஆண்டின் நோபல் பரிசு
TRPV1, TRPM8, PIEZO புரோட்டீன்களில் அயனிப்பாதைகள் திறக்கப்படுகின்றன என்ற Nobel Prize in Physiology or Medicine 2021 Winners David Julius and Ardem Patapoutian மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2021 கண்டுபிடிப்பானது வெப்பம் குளிர்ச்சி, இயந்திரவிசை ஆகியவற்றை உணர்வதற்கும், நரம்பிழைகளில் கடத்தப்படக் கூடிய நுண்ணிய மின்சமிக்ஞைகளுக்கான பாதையை இந்த புரோட்டீன்கள் உண்டாக்குகின்றன  என்ற கண்டுபிடிப்பானது வலி சம்பந்தமான ஆய்வுகளையும் நரம்பு மண்டலத்தில் விடுவிக்கப்பட்டாத இதர புதிர்களை விடுவிப்பதற்கும் வழிகோழியதால் இந்த கண்டுபிடிப்புகளுக்கு நோபல் பரிசு வழங்குவதென நோபல் பரிசை தீர்மாணிக்கும் குழு அறிவித்திருக்கிறது. இந்த இரு கண்டுபிடிப்புகளானவை சட்டென நிகழ்ந்த கண்டுபிடிப்புகள் அல்ல. இவை பல ஆண்டுகளாக ஆய்வு செய்து கொஞ்சம் கொஞ்சமாக கண்டுபிடிக்கப்பட்ட ஆய்வு கருவிகளாலும், ஆய்வு முறைகளாலும், விடுவிக்கப்பட்ட இதர புதிர்களாலும் நிகழ்ந்தது. எனினும் இந்த இருவரின் பங்களிப்பானது அறிவியல் தொடர்பயணமானது முட்டுசசந்தில் முட்டி நிற்பதை தவிர்க்கும் முகமாக அதன் பாதையில் உடைப்பை ஏற்படுத்தியவை. அறிவியல் என்பது நிற்காமல் ஓடும் ஒரு தொடர்பயணம், இந்த தொடர்பயணமானது முட்டி நிற்கும் தருணங்களில் உடைப்பை ஏற்படுத்தி பயணத்தை தொடர உதவி செய்தவர்கள் அங்கீகரிக்கப்படுகிறார்கள். இவர்களின் பங்களிப்பும் இவர்களின் முன்னோர்களின் தோளில்நின்று இவர்கள் சற்று விசாலமாக பார்த்ததன் விளைவு என்பதும் மீண்டும் மீண்டும் நிரூபணமாகிக்கொண்டு வருகிறது ஏனென்றால் மனித அறிவு வளர்ச்சி என்பது ஒரு கூட்டு நடவடிக்கையாகும்.

இக்கட்டுரையானது நோபல் பரிசு இணையதளத்தில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரையின் அசல் மொழியாக்கம் அல்ல, அதன் தழுவலாகும். இதில் பிழைகள் இருப்பின் இணைப்ச் சொடுக்கினால் வரும் மூலக்கட்டுரையை வாசிக்க வேண்டும். https://www.nobelprize.org/prizes/medicine/2021/advanced-information/

 

Economics Nobel Prize 2021 Background Work of Labour Economics. தொழிலாளர் பொருளாதாரம் குறித்த ஆய்விற்கு வழங்கப்பட்ட உயரிய விருது

தொழிலாளர் பொருளாதாரம் குறித்த ஆய்விற்கு வழங்கப்பட்ட உயரிய விருது – உதித் மிஸ்ரா



ஆல்பிரட் நோபலின் நினைவாக பொருளாதார அறிவியலுக்கான ஸ்வெரிஜஸ் ரிக்ஸ்பேங்க் விருதைப் பெற்றுள்ள டேவிட் கார்ட், ஜோசுவா டி ஆங்க்ரிஸ்ட், கைடோ டபிள்யூ இம்பென்ஸ் ஆகியோர் கல்வி மற்றும் எதிர்கால வருவாய், குறைந்தபட்ச ஊதியம் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்புகளைப் பற்றிய விளக்கங்களை அளித்துள்ளனர்.

ஆல்பிரட் நோபலின் நினைவாக வழங்கப்படுகின்ற பொருளாதார அறிவியலுக்கான 2021ஆம் ஆண்டிற்கான ஸ்வெரிஜஸ் ரிக்ஸ்பேங்க் விருதை – பெரும்பாலும் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு என்று தவறுதலாகக் குறிப்பிடப்படுகின்ற – ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ் திங்களன்று (11/10/2021) அமெரிக்காவில் உள்ள பொருளாதார நிபுணர்கள் மூவருக்கு வழங்கியுள்ளது. அந்த விருதின் ஒரு பகுதி பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கற்பித்து வருகின்ற டேவிட் கார்ட், மற்ற பாதி எம்ஐடியின் ஜோசுவா டி ஆங்க்ரிஸ்ட் மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் கைடோ டபிள்யூ இம்பென்ஸுக்கு பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளது. ஒரு கோடி ஸ்வீடிஷ் குரோனர் என்ற அளவில் இருக்கின்ற அந்த விருதுத் தொகை (சுமார் 8.60 கோடி ரூபாய்) அதன்படி பிரித்துக் கொடுக்கப்படும். விருதைப் பெற்றிருக்கும் இம்பென்ஸ் தனது நீண்டகால நண்பர்களுடன் சேர்ந்து விருதைப் பெற்றுக் கொள்வதில் தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாகக் கூறினார்.

காரணமும், விளைவுகளும்

‘இந்த ஆண்டிற்கான விருதைப் பெறுபவர்கள் தொழிலாளர் சந்தை குறித்த புதிய நுண்ணோக்கை வழங்கியுள்ளனர். காரணம், அதற்கான விளைவுகள் குறித்து  என்ன மாதிரியான முடிவுகளை எடுக்க முடியும் என்பதை அவர்கள் நடைமுறை  சோதனைகளின் மூலம் காட்டியுள்ளனர். மற்ற துறைகளுக்கும் அவர்களுடைய அணுகுமுறை பரவி, அனுபவ ஆராய்ச்சியில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது’ என்று விருதிற்கான மேற்கோளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர்களுடைய ஆய்வுகளைப் புரிந்து கொள்வதற்கு ஊதியம் மற்றும் வேலைவாய்ப்புகளை குடியேற்றம் பாதிக்கிறதா? பள்ளிக்கல்வியில் முதலீடு செய்வது மாணவர்களுடைய எதிர்கால வருவாயை மேம்படுத்துமா? குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துவது வேலைவாய்ப்பு குறைவிற்கு வழிவகுக்குமா? என்பது போன்ற இன்றைக்கு சமுதாயத்தில் இருக்கின்ற மிக முக்கியமான சில கேள்விகளை நாம் கவனிக்க வேண்டும்.

காலகாலமாக, பல்வேறு நிலப்பரப்புகளில் தொடர்ந்து இருந்து வருகின்ற இந்தக் கேள்விகள் அனைத்தும் இன்றைக்கும் பொருத்தமானவையாகவே உள்ளன. ஆனால் சமவாய்ப்புடனான கட்டுப்பாடு கொண்ட சோதனையை நம்மால் உருவாக்க இயலாமையே இதுபோன்ற எந்தவொரு கேள்விக்கும் பதிலளிப்பதில் இருந்து வருகின்ற சிக்கலுக்கு காரணமாக இருந்து வருகிறது. அதாவது பள்ளிக்கல்வி குறித்த சமவாய்ப்புடனான கட்டுப்பாடு கொண்ட சோதனையில் சில குழந்தைகளுக்கு பள்ளிக்கல்வி வழங்கப்படுகின்ற அதே வேளையில் அவர்களுடன் ஒப்பிடுவதற்காக வேறு சில குழந்தைகள் பள்ளிக் கல்வியை இழந்து நிற்க வேண்டியிருக்கும் என்பதால் அதுபோன்ற சோதனைகளை மேற்கொள்ள முடிவதில்லை.

இந்த ஆண்டு விருதைப் பெற்றிருப்பவர்கள் தனித்து நிற்கும் இடமாக அது இருக்கிறது. தாங்கள் அடிக்கடி கவனித்து வந்த தொடர்புகளுக்குள் நுழைவதற்கான வழிகளைக் கண்டுபிடித்து, அந்த தொடர்புகள் காரணத்தை வெளிப்படுத்தினவா அல்லது வெளிப்படுத்தவில்லையா என்பதை அவர்கள் நிறுவியுள்ளனர். இந்த தொடர்பு என்பது ஒன்றாக நிகழ்கின்ற இரண்டு நிகழ்வுகளுக்கிடையில் இருப்பது. ஆனால் அந்த இரண்டிற்குமிடையே வெறுமனே இருக்கின்ற தொடர்பு மட்டுமே அதற்கான காரணத்தைக் குறிப்பிட்டுக் காட்டாது (காரணத்தைக் கண்டறிவதற்கு ஒரு நிகழ்வு மற்றொன்றை ‘ஏற்படுத்துகிறது’ என்பதற்கான தெளிவான புரிதல் தேவைப்படும்).

Economics Nobel Prize 2021 Background Work of Labour Economics. தொழிலாளர் பொருளாதாரம் குறித்த ஆய்விற்கு வழங்கப்பட்ட உயரிய விருது
கல்விக்கும் வருமானத்திற்கும் இடையில் உள்ள தொடர்பு

டேவிட் கார்ட்: ஊதியங்களும், வேலைகளும்

டேவிட் கார்டின் ‘நடைமுறை சோதனைகளின்’ (சமவாய்ப்புடனான சோதனைகளை ஒத்ததாக நிஜ வாழ்க்கையில் எழுகின்ற சூழ்நிலைகள்) பயன்பாடு அந்த தொடர்பை நன்கு விளக்குவதாகவும், முன்மாதிரியானதாகவும் இருக்கிறது.

Economics Nobel Prize 2021 Background Work of Labour Economics. தொழிலாளர் பொருளாதாரம் குறித்த ஆய்விற்கு வழங்கப்பட்ட உயரிய விருது

பொதுவாக அதிக அளவில் தரப்படுகின்ற ஊதியம் நிறுவனங்களுக்கான செலவுகளை அதிகரிக்கும் என்பதால் அது முதலாளிகளுக்கு குறைவான எண்ணிக்கையில் நபர்களை வேலைக்கு அமர்த்துவதற்கே வழிவகுத்துத் தரும் என்ற அடிப்படையில் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துவது வேலைவாய்ப்புக்கு குறைவிற்கே வழிவகுக்கும் என்று கருதப்பட்டு வருகிறது. அப்படியென்றால் அதிக அளவிலே வழங்கப்படுகின்ற ஊதியம் வேலைவாய்ப்பை ‘வீழ்த்துவதற்கான’ காரணம் ஆகி விடுகிறதா? அதிக ஊதியம், குறைவான வேலை வாய்ப்பு என்று இந்த இரண்டு விஷயங்களும் பல சமயங்களில் ஒன்றாக நிகழ்ந்திருப்பதால் அதிக ஊதியம் குறைந்த வேலைவாய்ப்புக்கு வழிவகுக்கும் என்ற தவறாக நம்பிக்கை ஏற்பட்டுள்ளதா?

Economics Nobel Prize 2021 Background Work of Labour Economics. தொழிலாளர் பொருளாதாரம் குறித்த ஆய்விற்கு வழங்கப்பட்ட உயரிய விருது

இந்தக் கருத்தைப் பரிசோதிக்க டேவிட் கார்ட் ‘நடைமுறை சோதனையைப்’ பயன்படுத்தினார். நியூஜெர்சியில் ஒரு மணிநேர குறைந்தபட்ச ஊதியம் 4.25 டாலர் என்ற அளவிலிருந்து 5.05 டாலர் என்பதாக 1992ஆம் ஆண்டு அதிகரிக்கப்பட்டது.  நியூஜெர்சியில் இருந்த வேலைவாய்ப்பின் தாக்கத்தை ஆலன் க்ரூகருடன் இணைந்து ஆய்வு செய்த டேவிட் கார்ட், அதனை கிழக்கு பென்சில்வேனியாவின் அண்டைப் பகுதிகளில் இருந்த வேலைவாய்ப்புடன் ஒப்பிட்டுப் பார்த்தார். அவர்களுடைய ஆய்வின் முடிவுகள் குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிப்பது வேலைவாய்ப்பு குறைவிற்கு வழிவகுக்காது என்பதையே காட்டின என்று ராயல் ஸ்வீடிஷ் அகாடமி குறிப்பிடுகிறது. மேலும் 1990களின் முற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட டேவிட் கார்டின் ஆய்வு முடிவுகள் ஏற்கனவே வழக்கமாக இருந்து வந்த அறிவிற்கு எதிராக இருந்தன என்றும் புதிய பகுப்பாய்வுகள் மற்றும் கூடுதல் நுண்ணோக்குகளுக்கு அவை வழியெற்படுத்திக் கொடுத்தன என்றும் அகாடமி குறிப்பிடுகிறது.

ஆங்க்ரிஸ்ட், இம்பென்ஸ்: கல்வியும், ஊதியமும்

Economics Nobel Prize 2021 Background Work of Labour Economics. தொழிலாளர் பொருளாதாரம் குறித்த ஆய்விற்கு வழங்கப்பட்ட உயரிய விருது

ஆங்க்ரிஸ்ட், இம்பென்ஸ் ஆகியோர் காரணத்திற்கான தொடர்புகளைப் பகுப்பாய்வு செய்வதற்கான முறையான பங்களிப்புகளுக்கான அங்கீகாரம் கொண்டுள்ளனர். நடைமுறை சோதனைகளில் கிடைத்த தரவைப் புரிந்து கொள்வதற்கு அவர்கள் உதவினார்கள். மருத்துவ சோதனை அல்லது சமவாய்ப்புடனான கட்டுப்பாடு கொண்ட சோதனையைப் போல நடைமுறை சோதனையில் ஆய்வாளர் சோதனையின் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை என்பதால் துல்லியமான முடிவுகளை எடுப்பது, காரணங்களைத் தொடர்புபடுத்துவது கடினமாகிறது. எனவே அவர்களுடைய பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.

எடுத்துக்காட்டாக ஒரு குழுவாக இருக்கின்ற மாணவர்களுக்கு கட்டாயக் கல்வியை ஓராண்டிற்கு நீட்டிப்பது (ஆனால் மற்றொரு குழுவிற்கு அல்ல) குழுக்களில் உள்ள அனைவரையும் ஒரே மாதிரியாகப் பாதிக்கலாம் அல்லது பாதிக்காமலும் போகலாம். ‘சில மாணவர்கள் எப்பொழுதும் படித்துக் கொண்டே இருப்பார்கள், அவர்களைப் பொறுத்தவரை கல்வியின் மதிப்பு பெரும்பாலும் அந்தக் குழுவைப் பிரதிநிதிப்படுத்துவது மாதிரி இருக்காது. எனவே அந்தக் கூடுதல் ஆண்டின் விளைவுகளைப் பற்றி ஏதேனும் முடிவுகளை எடுக்க முடியாது. 1990களின் நடுப்பகுதியில் இந்தச் சிக்கலைத் தீர்த்து வைத்த ஆங்க்ரிஸ்ட், இம்பென்ஸ் இருவரும் காரணம் மற்றும் அவற்றின் விளைவுகள் பற்றிய துல்லியமான முடிவுகளை நடைமுறை சோதனைகளின் மூலம் எவ்வாறு எடுக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டினர்’ என்று அகாடமி குறிப்பிட்டுள்ளது.

இந்தியச் சூழல் 

இந்தப் பொருளாதார வல்லுநர்களின் வழிமுறை, ஆய்வுகள், கண்டுபிடிப்புகள் தொன்னூறுகளின் முற்பகுதியிலும் நடுப்பகுதியிலுமாக இருந்தன. அவை ஏற்கனவே இந்தியா போன்ற பல வளரும் நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

எடுத்துக்காட்டாக குறைந்த பட்ச ஊதியங்களை அதிகரிப்பது தொழிலாளர்களைப் பொறுத்தவரை எதிர்மறையாகவே இருக்கும் என்று இந்தியாவிலும் பொதுவான நம்பிக்கை நிலவி வருகிறது. கடந்த ஆண்டு கோவிட் தொற்றால் அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கங்களை அடுத்து குறைந்தபட்ச ஊதியத்தை ஒழுங்குபடுத்துவது, பல தொழிலாளர் சட்டங்களை இடைநிறுத்தி வைப்பது போன்ற நடவடிக்கைகளின் மூலம் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்று உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்கள் வாதிட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்ட இத்தகைய கட்டுப்பாடுகளுக்கு எதிராக மனித மேம்பாட்டு நிறுவனத்தின் வேலைவாய்ப்பு ஆய்வு மையத்தின் இயக்குனரான பேராசிரியர் ரவி ஸ்ரீவஸ்தவா, சர்வதேச பொருளாதார உறவுகள் பற்றிய ஆய்வுகளுக்கான இந்திய கவுன்சிலில் உள்ள ராதிகா கபூர் போன்ற முன்னணி தொழிலாளர் பொருளாதார நிபுணர்கள் வாதிட்டனர்.

ஸ்ரீவஸ்தவா ‘அமெரிக்காவில் குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிப்பதற்கான நியாயத்தை ஆய்வுகள் வழங்கிய போதிலும் அதுகுறித்து பொருளாதார நிபுணர்கள் தங்களுக்குள் பிளவுபட்டே இருந்தனர். நான் அதை மற்ற ஆய்வுகளுடன் இணைத்து தேசிய அளவிலான குறைந்தபட்ச ஊதியத்தை நியாயப்படுத்துவதற்காகப் பயன்படுத்திக் கொண்டேன்’ என்று கூறினார்.

Economics Nobel Prize 2021 Background Work of Labour Economics. தொழிலாளர் பொருளாதாரம் குறித்த ஆய்விற்கு வழங்கப்பட்ட உயரிய விருது

இந்தியாவில் வேலைவாய்ப்பு குறைவதைப் பற்றி கவலை எதுவும் கொள்ளாமல் குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிக்க முடியும் என்பதே டேவிட் கார்டின் ஆய்விலிருந்து முக்கியமாக கற்றுக் கொள்வதாக இருக்கிறது என்று கபூர் கூறுகிறார். இந்தியாவில் தேசிய குறைந்தபட்ச ஊதியம் ஒரு நாளைக்கு 180 ரூபாய் என்ற அளவிலே மிகக் குறைவாக இருப்பதைச் சுட்டிக் காட்டவும் அவர் தவறவில்லை. மேலும் அவர் இப்போது ​​இந்தியாவில் குறைந்தபட்ச ஊதியச் சட்டம் உள்ளது; அது அமைப்புசாராத் துறை ஊழியர்களுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும், அமைப்புச்சாராத் துறைகளின் வருமானத்தை மேம்படுத்த குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிப்பது மிகவும் முக்கியம் என்றும் கூறினார்.

இந்தியப் பொருளாதாரத்தில், குறிப்பாக வருமான விநியோகத்தில் கீழ்நிலையில் இருப்பவர்களின் ஒட்டுமொத்த தேவைகளுக்கான தடைகளைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துவது வேலைவாய்ப்பைத் தடுத்து நிறுத்திடாது என்பதைக் கற்றுக் கொள்வது மிகவும் முக்கியமானதாகவே இருக்கும்.

https://indianexpress.com/article/explained/explained-top-prize-for-labour-economics-7566828/

நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ் 2021 அக்டோபர் 12 

தமிழில்: தா.சந்திரகுரு 

Nobel Prize in Physics 2021 Article By Prof. Joseph Prabagar. இயற்பியல் நோபல் பரிசு -2021 | ஜோசப் பிரபாகர். Book Day, Bharathi Puthakalayam

இயற்பியல் நோபல் பரிசு -2021 | ஜோசப் பிரபாகர்



அக்டோபர் மாதம் ஆரம்பித்தாலே உலகெங்கும் இருக்கும் அறிவியல் ஆர்வலர்களுக்கு உற்சாகமும் எதிர்பார்ப்பும் தொற்றிக்கொள்ளும். இந்த வருடம் இயற்பியலின் எந்தெந்த துறைகளின் கண்டுபிடிப்புகளுக்கு நோபல் பரிசு வழங்குகிறார்கள் என இயற்பியல் அறிஞர்கள் மத்தியில் பலவாறு கணிப்புகள் ஓடிக்கொண்டிருக்கும்.

2021 ஆம் வருடம் கொஞ்சம் வித்தியாசமாக ஒரு புதிய துறைக்கு அதுவும் மிக முக்கியமான துறைக்கு இயற்பியல் நோபல் பரிசு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆம் நோபல் பரிசின் ஒரு பாதி பூமியின் பருவநிலை மாற்றம் குறித்த கண்டுபிடிப்புக்கு அமெரிக்காவின் சுகுரா மனாபே மற்றும் ஜெர்மன் நாட்டை சேர்ந்த கிளாஸ் ஹாசல்மேன் என்ற இருவருக்கும், மற்றொரு பாதியானது சில பொருட்களில் உள்ள சீரற்ற அல்லது ஒழுங்கற்ற நிலையில் இயங்கும் அணுக்களின் இயற்பியல் பண்புகளை விளக்கும் கோட்பாட்டை உருவாக்கியதற்காக இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஜார்ஜியோ பரிசி என்ற இயற்பியல் அறிஞருக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. சுகுரா மனாபே ஜப்பானில் பிறந்து அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தவர். ஹாசல்மான் ஜெர்மன் மாக்ஸ் பிளாங்க் காலநிலை ஆராய்ச்சித்துறையில் பணிபுரிகிறார். பரிசி இத்தாலி நாட்டின் சபியேன்சா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார்.

Nobel Prize in Physics 2021 Article By Prof. Joseph Prabagar. இயற்பியல் நோபல் பரிசு -2021 | ஜோசப் பிரபாகர். Book Day, Bharathi Puthakalayam

காலநிலை மாற்றம் குறித்த ஆராய்ச்சி துறைக்கு கிடைத்த முதல் இயற்பியல் நோபல் பரிசு இதுவே. இன்றைய காலகட்டத்தில் நாம் உலக வெப்பமயமாதல் பற்றி அதிகம் பேசிக் கொண்டிருக்கிறோம் ஆகஸ்ட் மாதம் ஐ.நா வெளியிட்ட IPCC அறிக்கையில் 2100 க்குள் பூமியின் சராசரி வெப்பநிலை 2 டிகிரி கூடி விடும் என எச்சரித்திருந்தது.  இந்தIPCC ஆய்வறிக்கையில்  கூட மனாபே மற்றும் ஹாசல்மேன் இருவரின் கோட்பாடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்தச் சூழ்நிலையில் நோபல் பரிசானது இந்த துறைக்கு வழங்கப்பட்டுள்ளதால் கால நிலை மாற்றம் குறித்த மானிட சமூகம் விழித்தெழவேண்டிய தீவிரத்தை இது உணர்த்துகிறது.

முதலில் மனாபே மற்றும் ஹாசல்மேன் பங்களிப்பு குறித்து பார்ப்போம். சூரிய குடும்பத்தில் 8 கோள்கள் உள்ளன. ஏன் பூமியில் மட்டுமே உயிரினங்கள் இருக்கிறது? காரணம் பூமியின் காலநிலை மற்றும் வானிலையானது உயிரினங்களின் பரிணாம வளர்ச்சிக்கு ஏற்றதாக இருக்கிறது அல்லது இருந்தது.

200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இயற்பியல் அறிஞர் ஜோசப் ஃபூரியர் சூரியனிடமிருந்துவரும் சூரிய ஒளிக்கதிர்களை பூமி எப்படி உட்கவர்கிறது, எந்தளவுக்கு பிரதிபலிக்கிறது என்று ஆராய்ந்தார். சூரியனிடமிருந்து வரும் ஒளிக்கதிர்கள் கண்ணுறு ஒளிக்கதிர்கள் (சிவப்பு, நீலம் என ஏழு நிறம்).அப்படி வரும் சூரிய ஒளியை பூமி மீண்டும் அகச்சிவப்புக் கதிர்களாக வெளியிடுகிறது.

அகச்சிவப்புக்கதிர் என்பது கண்ணுறு ஒளியை விட நீண்ட அலை நீளம் கொண்டது. பூமியால் வெளியிடப்பட்ட இந்த அகச்சிவப்புக் கதிர்களை வளிமண்டலம் தடுத்து நிறுத்தி மறுபடியும் பூமிக்கு அனுப்புகிறது என்று பூரியர் கண்டறிந்தார். இப்படி அகச்சிவப்புக் கதிர்கள் மீண்டும் திரும்பி பூமிக்கு வருவதால்தான் பூமியின் சராசரி வெப்பநிலை 15 டிகிரி அளவுக்கு இருக்கிறது. ஒருவேளை வளிமண்டலம் இல்லை என்றால் எதிரொளிக்கப்பட்ட அகச்சிவப்புக்கதிர்கள் விண்வெளிக்கு சென்று விடும். இதனால் பூமியின் சராசரி வெப்பநிலை இரவு நேரத்தில் கிட்டதட்ட மைனஸ்18 டிகிரிக்கு சென்றுவிடும். எடுத்துக்காட்டாக நிலவில் வளிமண்டலம் இல்லை. அதனால்தான் நிலவின் இரவு நேர வெப்ப நிலை மைனஸ் 50 டிகிரிக்கு கீழே செல்கிறது. வளிமண்டலம்தான் நமது பூமிக்கு வெப்பப்பாதுகாப்பு உறையாக செயல்படுகிறது. சூரிய ஒளிக்கதிர்களை உள்ளே அனுமதித்து, பூமியிலிருந்து வெளியேறும் அகச்சிவப்புக் கதிர்களை தடுத்து நிறுத்தும் வளிமண்டலத்தின் இந்த செயலைநாம் பசுங்குடில் விளைவு என்று அழைக்கிறோம்.

ஃபூரியருக்கு பிறகு பல விஞ்ஞானிகள் பூமியின் வளிமண்டலம் எந்த அளவுக்கு அகச்சிவப்புக்கதிர்களை பிரதிபலிக்கிறது, மேலும் இது கால நிலையை பாதிக்கிறதா என்று ஆராய்ந்தார்கள். இந்த ஆராய்ச்சியை1900 ஆண்டுகளில் விஞ்ஞானி அர்ஹீனியஸ் அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றார்.

ஃபூரியர் வாழ்ந்த காலத்தில் அணுக்களைப் பற்றிய அறிவு குறைவாக இருந்தது.ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டு முடியும் போது நமக்கு அணுவைப் பற்றிய அறிவும், வேதியியல் அறிவும் மேம்பட்டிருந்ததால் வளிமண்டலத்தில் என்னென்ன வாயுக்கள் இருக்கின்றன, அந்த வாயுக்கள் எந்த அளவிற்கு அகச்சிவப்புக் கதிர்களை தடுத்து நிறுத்துகின்றன என்று அர்ஹீனியஸ் ஆராய ஆரம்பித்தார். வளிமண்டலத்தில் 90% சதவிகிதத்துக்கு மேல் நைட்ரஜன், ஆக்சிஜன் வாயுக்களும், மீதமுள்ள 10% க்குள்தான் நீராவி, கார்பன்-டை-ஆக்சைடு, ஓஸோன், மீத்தேன் என பல வாயுக்கள் உள்ளன. இதில் நைட்ரஜன், ஆக்சிஜன் அகச்சிவப்புக் கதிர்களை தடுப்பதில்லை. நீராவியும், கார்பன்-டை-ஆக்சைடும் தான் அகச்சிவப்புக் கதிர்களை தடுப்பதில் மிக முக்கிய பங்குவகிக்கின்றது என்று அவர் கண்டறிந்தார்.

Nobel Prize in Physics 2021 Article By Prof. Joseph Prabagar. இயற்பியல் நோபல் பரிசு -2021 | ஜோசப் பிரபாகர். Book Day, Bharathi Puthakalayam

ஏன் கார்பன் டை ஆக்சைடும், நீராவியும் அகச்சிவப்புக் கதிர்களை தடுத்து பூமிக்கு திருப்பி அனுப்புகின்றன? ஒவ்வொரு மூலக்கூறுக்கும் ஒரு குறிப்பிட்ட இயற்கையான மின்இருமுனைத்தன்மை(dipole moment) இருக்கும். அந்த மூலக்கூறை வந்து மோதும் மின்காந்த அலையானது அந்த மின் இருமுனைத்தன்மையைமாற்றினால் அம்மூலக்கூறு அந்த மின்காந்த அலையை உட்கவர்ந்து அந்த மின்காந்த அலையின் அதிர்வெண்ணில் அதிர ஆரம்பிக்கும். இந்த அதிர்வினால் மறுபடியும் அதே அதிர்வெண் உள்ள மின்காந்த அலையை மீண்டும் வெளியிடும்.

அகச்சிவப்புக்கதிர் ஒரு மூலக்கூறின் மின்இருமுனைத்தன்மையை மாற்ற வேண்டுமென்றால் அது ஒருதனிம மூலக்கூறாக இருக்கக்கூடாது. ஆக்சிஜன் மற்றும் நைட்ரஜன் ஆகியவை  ஒருதனிம மூலக்கூறுகள். அதனால் நைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் மூலக்கூறுகளில் அகச்சிவப்புக்கதிர்கள் மின்இருமுனைத் தன்மை மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை.

ஆனால் கார்பன்-டை-ஆக்சைடு அல்லது நீராவி மூலக்கூறுகள் இருதனிம மூலக்கூறுகள். எனவே கார்பன்-டை-ஆக்சைடு மற்றும் நீராவி மூலக்கூறுகள் இரண்டிலும் அகச்சிவப்புக்கதிர்கள் அம்மூலக்கூறுகளின் மின் இருமுனைத்தன்மையை மாற்றுவதால், இவை இரண்டும் பூமி வெளியிடும் அகச்சிவப்புக்கதிர்களை உட்கவர்ந்து அதே அதிர்வெண்ணில் அதிர ஆரம்பிக்கின்றன. இந்த அதிர்வினால் மறுபடியும் அகச்சிவப்புக்கதிர்களை மீண்டும் பூமியை நோக்கி வெளியிடுகின்றன. அது மறுபடியும் பூமியை நோக்கி வருகின்றது. இதைத்தான் நாம் புரிந்து கொள்வதற்கு எளிதாக கார்பன் டை ஆக்சைடு, நீராவி போன்றவை அகச்சிவப்புக்கதிர்களை தடுத்து நிறுத்தி பூமிக்கு அனுப்புகிறது என்கிறோம். மீத்தேன் கூட இதில் பங்கெடுக்கிறது. ஆனால் அதன் பங்கு மிகக்குறைவு.

அர்ஹீனியஸ் கருத்துப்படி வளிமண்டலத்தில் இப்போது இருக்கும் கார்பன்டை ஆக்சைடு அளவு பாதியாக குறைந்தால் நமது பூமி முழுவதும் பனிக்கட்டி காலத்திற்கு(ice age)சென்று விடும். அதேபோல் கார்பன்-டை ஆக்சைடு அளவு இரட்டிப்பானால் பூமி வெப்ப நிலையானது இப்போதிருக்கும் வெப்ப நிலையை விட5 டிகிரி முதல் 6டிகிரி வரை உயர வாய்ப்பு இருப்பதாகக் கணித்தார். ஆச்சரியம் என்னவென்றால் அவர் வாழ்ந்த காலத்தில் கணினி என்பது இல்லை. ஆனாலும் அவரால் இதைக் கணிக்க முடிந்தது என்பது அவரின் புத்திக்கூர்மையை நமக்கு எடுத்துக்காட்டுகிறது. அவரதுஇந்தக்கண்டுபிடிப்பானது கால நிலையைப்பற்றிய ஆராய்ச்சிக்கு ஒரு புதிய பாதையைத் திறந்து விட்டது.பின்னாளில் இதே அர்ஹீனியஸ் வேதியியலில் வேறொரு கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு வாங்கினார்.

அர்ஹீனியஸுக்கு பிறகு கால நிலை பற்றிய ஆய்வின் அடுத்த கட்ட பாய்ச்சல் என்பது இந்த வருடம் நோபல் பரிசு வாங்கியசுகுரோ மனாபெவால் நிகழ்த்தப்பட்டது. ஜப்பானில் பிறந்த மனாபே 1950களில்போருக்குப் பிறகு ஆராய்ச்சிக்காக அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். பிறகு அங்கே பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், வானிலை ஆராய்ச்சியாளராகவும் பணிபுரிந்தார்.

அர்ஹீனியஸின் ஆய்வு முடிவை உள்வாங்கிய மனாபே, கூடுதலாக பூமியின் மேற்பரப்பில் வெப்ப நிலை உயர்வால் உயரே செல்லும் காற்றில் உள்ள பல வாயு மூலக்கூறுகள் எவ்வாறு புவி வெப்ப மயமாதலைக் கூட்டுகிறது என்று யோசித்தார். கணக்கிட எளிதாக அவர் புவியின் முப்பரிமாண வளிமண்டலத்தை ஒரு பரிமாண வளிமண்டலமாக(one dimensional atmosphere)கற்பனை செய்து கொண்டார். இந்த ஒரு பரிமாண வளி மண்டலத்தில் இருக்கும் காற்று மற்றும் நீராவி மூலக்கூறுகளை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டார். இந்த ஒரு பரிமாண வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு அளவைக் கூட்டினால் என்ன நடக்கிறது என்று கணினி உதவியோடு கணக்கிட்டு பார்த்த போது அவர் கண்டறிந்தது என்னவென்றால் கார்பன் டை ஆக்சைடு அளவு இரட்டிப்பானால் பூமியின் வெப்ப நிலை 2 டிகிரி முதல்  3 டிகிரி வரை உயரும் என்பதுதான். இது ஒரு துல்லியமான முடிவு. இதைத்தான் தற்போது வெளியான IPCC ஆய்வறிக்கையும் கூறுகிறது. இது நடந்தது 1967 இல்.கால நிலை மாற்றம் குறித்த துறையில்,1967ஆம் ஆண்டின் அவர் வெளியிட்ட ஆய்வுக்கட்டுரை ஒரு மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. பிறகு 1975ஆம் வருடம் முப்பரிமாண வளிமண்டலத்துக்கும் தனது கணக்கீட்டை விரிவு படுத்தினார்.

அவரின் கண்டுபிடிப்பின்படிகார்பன் டை ஆக்சைடு அதிகரிப்பால் பூமியின் வெப்பநிலை அதிகரிக்கிறது. இவ்வெப்பநிலை அதிகரிப்பால் பூமி மேற்பரப்பின் உள்ள காற்றில் நீராவி மூலக்கூறுகள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. கார்பன் டை ஆக்சைடைப் போலவே நீராவி மூலக்கூறுகளும் ஒரு பசுங்குடில் வாயு. இன்னும் சொல்லப்போனால்கார்பன் டை ஆக்சைடை விட நீராவி மூலக்கூறுகள்தான் மிக அதிகப்படியாக அகச்சிவப்புக் கதிர்களை தடுத்து பூமிக்கு திருப்பி அனுப்புகிறது. இப்படி இந்த இரண்டு வாயுக்களும் ஒன்று சேர்ந்து புவியின் வெப்ப நிலையை கூட்டுகிறது. அதுவும் இந்த வெப்ப நிலை உயர்வு என்பது பூமியின் மேற்பரப்பிற்குத்தான். ஆனால் வளிமண்டலத்தின் மேலடுக்குகள் குளிர்ந்து விடுகின்றன என்று கண்டறிந்தார். ஒரு வேளை சூரிய வெப்பத்தால் இவ்வெப்ப நிலை அதிகரித்திருந்தால் முழு வளிமண்டலம், பூமியின் மேற்பரப்பு அனைத்தும் ஒரே மாதிரியாக அதிகரித்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடப்பதில்லை. பூமியின் மேற்பரப்பில் மட்டுமே இவ்வெப்ப நிலை உயர்வு இருக்கிறது.

Nobel Prize in Physics 2021 Article By Prof. Joseph Prabagar. இயற்பியல் நோபல் பரிசு -2021 | ஜோசப் பிரபாகர். Book Day, Bharathi Puthakalayam

வளிமண்டலத்தில் உள்ள நீராவி மூலக்கூறுகள் எண்ணிக்கையை பெரிதாக நம்மால் கட்டுபடுத்த முடியாது. ஏனென்றால் அது தினந்தோறும் மாறக்கூடிய வானிலையையும், மழை அளவையும், கடல் நீரோட்டைத்தையும் பொறுத்தது. நீண்ட கால அளவில் காற்றில் இருக்கும் நீராவியின் அளவு பெரிதாக மாறுவதில்லை. அதன் தற்காலிக மாற்றங்கள் இயற்கையில் நடப்பது. ஆனால் கார்பன் டை ஆக்சைடு இயற்கை அளவை விட மனித செயல்பாடுகளான காற்று மாசுபாட்டினால் உயர்ந்து வருகின்றன. எனவே புவியின் சராசரி வெப்ப நிலையை சீராக பராமரிக்க நமக்கு இருக்கும் ஒரே வழி வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடு அளவை கட்டுப்படுத்துவதுதான்.இதுதான் மனாபெயின் முக்கிய பங்களிப்பு.

அவர் காலத்தில் இருந்த கணினியின் வேகம் என்பது மிகக்குறைவு. ஒவ்வொரு கணக்கீடும் செய்து முடிக்க பல நாள் கணினியை நாம் இயக்க வேண்டும். இன்றைக்கு சில வினாடிகளில் முடியக்கூடிய கணக்கீடுகள் அன்றைக்கு நாள் கணக்கோ அல்லது மாதக்கணக்கோ ஆகியிருக்கும். இருந்தாலும் மனம் தளராமல் முயற்சி மேற்கொண்டதன் விளைவாக அவரால் இவ்வளவு துல்லியமாக கணக்கிட முடிந்தது. மனாபேவுக்கு பங்களிப்பிற்கு பிறகு உலகெங்கும் உள்ள வெப்பமானிகளின் தரவுகளையும், செயற்கைக்கோள் படங்களையும் ஆராய்ந்த பிறகு அறிவியல் உலகம் கால நிலை மாற்றம் குறித்த கோட்பாட்டு மாதிரிகள் உண்மையிலேயேஅறிவியல்பூர்வமானதுதான் என நம்ப ஆரம்பித்தது.

நோபல் பரிசு வாங்கியவுடன் மனாபெ கொடுத்த நேர்காணல் “பிரின்ஸ்டன்” பல்கலைக்கழகத்தின் யூடியுப் தளத்தில் இருக்கிறது. அறிவியலை நேசிக்கும் ஒவ்வொருவரும் அதைப்பார்க்க வேண்டும். மேலும் அவர் “Beyond Global Warming- How numerical models revealed the secrets of climate change”என்ற புத்தகமும் எழுதியிருக்கிறார். “ புவி வெப்பமயமாதலைக் குறைக்க முடியுமா? இது ஒரு சிக்கலான பிரச்சினைதானே?” என ஒரு பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு“ஆம். இது ஒரு சிக்கலான பிரச்சினைதான். ஆனால் புவி வெப்பமயமாதல் குறித்து உலகின் சில நாடுகள் செய்யும் அரசியலை விட இது மிக எளிதானதுதான்” என்று பதிலளித்துள்ளார்.

மனாபேவுக்குப்பிறகு கால நிலை மாற்றம் குறித்த ஆராய்ச்சி கணினி உதவியோடு நன்றாக வளர ஆரம்பித்தது. 1980 களில் கிளாஸ் ஹாசல்மான் இத்துறையில் நுழைகிறார். எப்படி அர்ஹீனியஸின் ஆராய்ச்சியை மனாபே அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் சென்றாரோ அதே போல் ஹாசல்மானும் மனாபேயின் ஆராய்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றார்.

அர்ஹீனியஸின் கணக்கீட்டில் மனாபே காற்று மூலக்கூறுகளின் பங்கை எவ்வாறு சேர்த்தாரோ அதே போல் ஹாசல்மான் தினந்தோறும் நடக்கும் வானிலை மாற்றங்களையும் மனாபெயின் கோட்பாட்டு மாதிரியோடு சேர்த்து பார்க்க வேண்டும் என்று யோசித்தார். இதற்கு அவர் உருவாக்கிய கோட்பாடு “ஸ்டோகாஸ்டிக்ஸ் காலநிலை மாதிரி(stochastic climate model)” ஆகும். அதாவது தினந்தோறும் நடக்கும் வானிலை மாற்றங்கள் எவ்வாறு நீண்ட காலத்தில் காலநிலை மாற்றத்திற்கு காரணமாக இருக்கிறது என்றுகண்டறிந்தார்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் பிரௌனியன் இயக்கம் பற்றிய கோட்பாட்டை உள்வாங்கி அவர் தனது மாதிரியைஉருவாக்கியிருந்தார். இங்கே ஒரு விஷயம் கவனிக்க வேண்டும். அதாவது வானிலை என்பது இடத்திற்கு இடம், நேரத்திற்கு நேரம் மாறுபடும். நேற்று இருந்த வானிலை, இன்று இருக்காது. இன்று இருந்தது நாளைக்கு இருக்காது.அதே போல் இந்த வானிலை மாற்றத்தை முன்கூட்டியே கணிப்பது மிகக்கடினம்.

ஹாசல்மான் தனது கோட்பாட்டு மாதிரியில் தினந்தோறும் நடக்கும்  வானிலை மாற்றங்களை இரைச்சலாக(noise)கருதி கணக்கீடுகளில் இணைத்து இந்த இரைச்சல்நீண்ட காலத்தில் காலநிலை மாற்றத்தை பாதிக்கிறது, கடலின்  சராசரி வெப்பநிலையை எவ்வாறு பாதிக்கிறது என்று எடுத்துரைத்தார்.எளிதாக விளங்கிக்கொள்ள நமது வீட்டருகே ஓரளவு பொறுத்து போகக்கூடிய அளவுக்கு ஒரு இரைச்சல் கேட்டுக் கொண்டிருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். ஓரிரண்டு நாட்கள் என்றால் பரவாயில்லை. ஆனால் இதே இரைச்சல் மாதக்கணக்கில், வருடக்கணக்கில் கேட்டுக்கொண்டே இருந்தால் கண்டிப்பாக அது நமது செவியை பாதிக்கும் அல்லவா. அதே போல்தான் இந்த வானிலை மாற்றங்களும் நீண்ட கால நோக்கில் கால நிலை மாற்றத்திற்கு வழிவகுக்கிறது.

ஹாசல்மானின் இன்னொரு மிக முக்கியமான பங்களிப்பு என்பது புவி வெப்பமயமாதலில் மனிதனின் பங்கு என்ன என்பதைக் கண்டறிந்ததுதான். பூமியின் வெப்பமயமாதல் என்பது இயற்கையாகவும் நடக்கலாம். அல்லது மனிதனின் நடவடிக்கைகளாலும் நடக்கலாம். இங்கே இயற்கையாக நடப்பது என்றால் எரிமலை வெடிப்பின் மூலம் கார்பன் டை ஆக்சைடு மூலக்கூறுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, அல்லது சூரிய வெப்பம் அதிகரிப்பு. செயற்கையாக என்றால் மனிதனின் நடவடிக்கைகளில் மூலமாக (தொழிற்சாலை வெளியிடும் வாயுக்கள், வாகனங்கள் வெளியிடும் வாயுக்கள்) என கார்பன் டை ஆக்சைடு எண்ணிக்கை அதிகரிக்கலாம்.ஹாசல்மான்  தனது ஸ்டோகாஸ்டிக்ஸ் கோட்பாட்டு மாதிரி மூலம் பூமியின் வெப்பநிலை அதிகரிப்பு மனிதனின் நடவடிக்கைகளால் எவ்வளவு அதிகரித்தது, இயற்கையான சீற்றங்களால் எவ்வளவு அதிகரித்தது என்று பிரித்து எடுத்து சொன்னார். இது மிகப்பெரிய சாதனை.

19ஆம் நூற்றாண்டில் இருந்து இன்று வரை கார்பன்-டை-ஆக்சைடின் அளவு பல ஆயிரம் ஆண்டுகளாக இருந்ததை விட40% சதவிகிதம் அதிகரித்தது என்றும் இது முழுக்க முழுக்க மனித நடவடிக்கைகளால் ஏற்பட்டது என்றும் அவர் கண்டறிந்தார்.

கீழே உள்ள படத்தில் உள்ள கருப்புக்கோடு1901 முதல் 1950 வரை உள்ள புவியின் வெப்ப நிலை மாறுபாட்டைகாட்டுகிறது.சிவப்புக் கோடு என்பது ஹாசல்மானின் ஸ்டோகாஸ்டிக்ஸ் மாதிரி மூலம் கணிக்கப்பட்ட பூமியின் வெப்ப நிலை மாற்றம்.  நீலக்கோடு என்பது இயற்கை சீற்றம், எரிமலை வெடிப்பு போன்றவைகளால் ஏற்பட்ட வெப்ப நிலை மாற்றம்.

Nobel Prize in Physics 2021 Article By Prof. Joseph Prabagar. இயற்பியல் நோபல் பரிசு -2021 | ஜோசப் பிரபாகர். Book Day, Bharathi Puthakalayam

(இவ்வரைபடம் நோபல் பரிசு இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது)

அவரின் கணக்கீட்டிலிருந்து ஒன்று தெளிவாக புரிந்தது. இப்புவி வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணம் இயற்கை அல்ல மனிதன்தான் என்பது. ஹாசல்மானின் இந்தக்கண்டுபிடிப்புக்கு முன்பு வரை புவிவெப்ப மயமாதலுக்கு , மனிதன் காரணமல்ல என்ற ஒரு பிரிவு, மனிதன்தான் காரணம் என்று இன்னொரு பிரிவு என அறிவியல் அறிஞர்கள் இரு வகையாக பிரிந்திருந்தார்கள். ஆனால் ஹாசல்மானின் இந்த ஆராய்ச்சி முடிவு புவி வெப்பமயமாதலுக்கு மனிதனின் நடவடிக்கைகளே மிக முக்கியமான காரணம் என்று அறிவியல் பூர்வமாக நிறுவியது. கடந்த நாற்பது ஆண்டுகளாக ஐக்கிய நாடுகள் புவி வெப்பமயமாதலுக்கு எதிராக நிறைய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்கு அறிவியல் பூர்வமான நம்பிக்கையை கொடுத்தது ஹாசல்மானின் ஆய்வுதான்.

மனாபே மற்றும் ஹாசல்மான் இருவரும் ஆராய்ச்சி முடிவுகள் கால நிலை மாற்றம் என்ற ஒரு புதிய அறிவியல் ஆராய்ச்சித்துறை உருவாக வழிவகுத்தது என்றால் மிகையாகாது.

நோபல் பரிசின் இரண்டாம் பாதி “ஸ்பின் கண்ணாடிகள்(spin glasses)” குறித்த ஆராய்ச்சிக்கு வழங்கப்பட்டது. அது என்ன “ஸ்பின் கண்ணாடிகள்”?இதைபுரிந்து கொள்வதற்கு முன்னால் நாம் தனித்தனியாக “ஸ்பின்” என்றால் என்ன? கண்ணாடி என்றால் என்ன? என்று புரிந்து கொள்வது அவசியம்.

ஒரு இரும்புத்துண்டை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் இருக்கும் இரும்பு அணுக்கள் சீரான முறையில் ஒரு குறிப்பிட்ட ஒழுங்கில் அமைந்திருக்கும். இரும்பு மட்டுமல்ல நாம் காணும் பெரும்பாலான பொருட்களில் உள்ள அணுக்கள் ஒருகுறிப்பிட்ட ஒழுங்கோடு படிக அமைப்பில் அமைந்திருக்கும். ஆனால் கண்ணாடிகளில் இருக்கும் அணுக்கள் அப்படி எந்த ஒரு ஒழுங்கமைவோடும் இருக்காது. கன்னா பின்னாவென்று ஒழுங்கற்ற நிலையில் அமைந்திருக்கும்.

Nobel Prize in Physics 2021 Article By Prof. Joseph Prabagar. இயற்பியல் நோபல் பரிசு -2021 | ஜோசப் பிரபாகர். Book Day, Bharathi Puthakalayam

“spin” ஆங்கில வார்த்தைக்கு “தற்சுழற்சி”என்று தமிழில் மொழி பெயர்க்கலாம். ஆனால் பெயருக்குஏற்றவாறு எந்த தற்சுழற்சியும் இங்கே நடப்பதில்லை. எனவே நாம் “ஸ்பின்” என்றே அழைப்போம். எலக்ட்ரானுக்கு நிறை என்பது ஒரு அடிப்படை பண்பு. அதே போல் “மின்னூட்டம்” என்பதும் ஒரு அடிப்படைப்பண்பு. அதே போல் “ஸ்பின்” என்பதும் எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான், குவார்க் போன்ற துகள்களுக்கு இருக்கும் ஒரு அடிப்படைப் பண்பு.

ஒரு எலக்ட்ரானை ஈர்ப்பு புலத்தில் வைக்கும் போது அது ஈர்ப்பு விசையை உணரும். இதற்கு காரணம் எலட்ரானின் நிறை. அதே எலக்ட்ரானை மின்புலத்தில் வைக்கும்போது மின்விசையை உணரும். இதற்கு காரணம் எலட்ரானின் மின்னூட்டம்.அதே போல் எலக்ட்ரானை ஒரு காந்தப்புலத்தில் வைத்தால் காந்த விசையை உணரும். இதற்கு காரணம் எலக்ட்ரானின் “ஸ்பின்” பண்பு. நிறை, மின்னூட்டம், வெறும் எண் மதிப்புகள். ஆனால் ஸ்பின் எண்மதிப்பு மற்றும்திசை என இரண்டும் உடையது. வெளியிலிருந்து கொடுக்கப்படும் காந்தப்புலத்திற்கு ஏற்றவாறு எலக்ட்ரான் தனது ஸ்பின் திசையை மாற்றிக்கொள்ளும்.

கடையில் போய் நாம் காந்தம் வாங்குகிறோம். இந்தக் காந்தப்பண்பிற்கு காரணம் அதில் இருக்கும் எலக்ட்ரானின்“ஸ்பின்”பண்புதான்.இக்காந்தத்தில் இருக்கும்எலக்ட்ரான்களின் “ஸ்பின்” அனைத்தும் ஒரே திசையில் இருக்கும். இதனால்தான் இந்த காந்தத்தன்மை உருவாகிறது. இதற்கு “பெர்ரோ காந்தத்தன்மை” என்று பெயர்.

சில உலோகக் கலவைகள் குறிப்பாக தாமிர அணுக்களின் படிக அமைப்பில் கொஞ்சம் இரும்பு அணுக்களை வைத்தால் இந்த இரும்பு அணுக்களில் இருக்கும் ஸ்பின்ஒரே திசையில் இருக்காது. ஒவ்வொன்றும் வெவ்வேறு திசையை நோக்கி இருக்கும்.இம்மாதிரியான உலோகக்கலவைகளில் எவ்வளவுதான் வெப்ப நிலையை குறைத்தாலும் ஒவ்வொரு இரும்பு அணுவின் ஸ்பின்னும் வெவ்வேறு திசையை நோக்கியே இருக்கும். இப்படி ஒழுங்கற்ற நிலையில் கன்னா பின்னாவென்று வெவ்வேறு திசையை நோக்கி இருப்பதால்தான் இந்த உலோகக்கலவைகள் “ஸ்பின் கண்ணாடிகள்” என்று அழைக்கப்படுகின்றன.

Nobel Prize in Physics 2021 Article By Prof. Joseph Prabagar. இயற்பியல் நோபல் பரிசு -2021 | ஜோசப் பிரபாகர். Book Day, Bharathi Puthakalayam

இந்த ஸ்பின் கண்ணாடிகளில் இருக்கும் ஸ்பின் திசைகளை கணித ரீதியாக  எப்படி கணிப்பது என்பது மிகப்பெரிய சவாலாக இருந்து வந்தது. 1950 களில் நோபல் பரிசு வாங்கிய பல அறிஞர்கள் இதைக் கணக்கிட முயன்றனர். ஆனால் யாருக்கும் வெற்றி கிட்ட வில்லை.

இந்த சிக்கலில் கடினத்தன்மையை புரிந்து கொள்ள மிக எளிதான உதாரணத்தை எடுத்துக்கொள்வோம்.மூன்று அணுக்களை மட்டும் முக்கோணத்தின் ஒவ்வொரு முனைப்புள்ளியிலும் வைக்க வேண்டும்.

Nobel Prize in Physics 2021 Article By Prof. Joseph Prabagar. இயற்பியல் நோபல் பரிசு -2021 | ஜோசப் பிரபாகர். Book Day, Bharathi Puthakalayam

இடது புறம் உள்ள அணுவின் ஸ்பின் மேல் நோக்கி இருந்தால், உச்சியில் இருக்கும் இரண்டாம் அணுவின் ஸ்பின் அதற்கு எதிர் திசையில் இருக்கும். இதுதான் இயற்கையான நடை முறை. அதாவது குறைந்த ஆற்றல் கொண்ட நிலை. இப்போது மூன்றாவது அணுவை (படத்தில் நீல வண்ணம்) முக்கோணத்தின்  வலது முனைப்புள்ளியில் வைத்தால் அந்த அணுவின் ஸ்பின் எந்த திசையை பார்த்திருக்கும்?. மேல் நோக்கி அமைந்தால் முதல் அணுவோடு முரண்பட வேண்டும், கீழ் நோக்கி அமைந்தால் இரண்டாம் அணுவின் ஸ்பின் திசையோடு முரண்பட வேண்டும். மூன்றாவது அணுவின் ஸ்பின்னுக்கு இது ஒரு இக்கட்டான நிலை. இதை விரக்தி நிலை (frustrated state) என்று அழைக்கிறார்கள். இது எப்படிஎன்றால் ஒருவருக்கொருவர் பகைவராக இருக்கும் இரண்டு பேரிடம் நட்பு கொள்வது எந்த அளவுக்கு கடினமோ அது போலத்தான்.

மூன்றாவது அணுவின் ஸ்பின் எந்த திசையை நோக்கும் என்று கணிப்பது உண்மையிலேயே மிகப்பெரிய சவால். மூன்று அணுக்களுக்கே இந்த நிலை என்றால் நூறு அணுக்கள் உள்ள அமைப்பில் ஸ்பின் திசைகள் எவ்வாறு அமைந்திருக்கும் என்று கணிப்பது எவ்வளவு சவாலான விஷயம் என்று நினைத்துப்பாருங்கள். ஏனென்றால் ஒவ்வொரு ஸ்பின்னின் திசையும் அதைச் சுற்றியுள்ள ஸ்பின்னின் திசைக்கு ஏற்ப இருக்கும்.

சென்னையில் போக்குவரத்து நெரிசலில் பைக் ஓட்டுபவர்களின் நிலைதான் இந்த ஸ்பின்னின் நிலையும். ஸ்பின்னின் திசையை நாம் ஓட்டும் பைக்கின் ஹாண்டில் பார் திசையாக நினைத்துக்கொள்ளுங்கள். நமது பைக்கின் ஹாண்டில் பாரின் திசையை நமக்கு அருகில் இருக்கும் பைக் ஓட்டுபவர் எந்த திசையில் வருகிறாரோ அதற்கு ஏற்றார்போல் நாம் மாற்றுவோம். அது போல் ஒவ்வொருவரும் அவரைச் சுற்றி இருக்கும் பைக்கின் திசையை பொறுத்து தனது ஹாண்டில் பார் திசையை மாற்றுவார்கள். போக்குவரத்து நெரிசலில் ஒவ்வொரு பைக்கும் எந்த திசையில் செல்லும் என கணிப்பது எவ்வளவு கடினம். அதே போல்தான்இந்த ஸ்பின் கண்ணாடி பொருட்களில் இருக்கும் அணுக்களின் ஸ்பின் திசையை கண்டறிவது மிகக்கடினம். பல ஆண்டுகள் சவாலாக விளங்கிய இப்பிரச்சினைக்கு பரிசி ஒரு புதிய கணித உத்தியை பயன்படுத்தி தீர்வு கண்டார். அதன் பெயர் “பிரதி சீர் உடைவு(Replica Symmetry breaking)”. இதை எளிமையாக சொல்ல வேண்டுமானால்எல்லாவிதமான சாத்தியமுள்ள ஸ்பின்னின் திசைகளைக்கொண்ட பல்வேறுபிரதி அமைப்பு மாதிரிகளை செய்து ஒவ்வொரு பிரதியும் அருகிலுள்ள பிரதியோடு எந்தளவுக்கு ஒத்துப்போகிறது என்று வகைப்படுத்தி  அதன் மூலம் இந்த ஸ்பின் கண்ணாடிகளின் பண்புகளை புரிந்து கொள்வது.

பரிசியின் இந்த புதிய கணித உத்தியானது பின்னாளில் மருத்துவத்துறை, நரம்பியல் துறை, செயற்கை நுண்ணறிவுஎன ஏகப்பட்ட துறைகளில் இருக்கும் சிக்கலான அமைப்புகளின் பண்புகளை விளக்க பயன்பட ஆரம்பித்தது.. ஏற்கனவே குறிப்பிட்ட போக்குவரத்து நெரிசலில் கூட இக்கணித உத்தியை பயன்படுத்தலாம்.

ஆழ்கடலில் மீன்கள் கூட்டமாகச் செல்வதைப் டிஸ்கவரி சேனலில் பார்த்திருப்போம்.ஒட்டு மொத்தமாக ஒரு ஒழுங்கில் சென்றாலும் அக்கூட்டத்தில் இருக்கும் ஒவ்வொரு மீனின் திசையும் அருகில் இருக்கும் மீன் செல்லும் திசையைவிட மாறுபட்டு இருக்கும். இதில் கூட பரிசியின் கணித உத்தியை பயன்படுத்தி ஒட்டு மொத்தமாக மீன்களின் செல்லும் திசையை கணிக்கலாம். இயற்கையில் இருக்கும் சிக்கலான அமைப்புகளின் சீரற்ற அல்லது ஒழுங்கற்ற நிலையில் இருக்கும் பண்புகளைப் பற்றிய ஆராய்ச்சிக்கு பரிசியின் பங்களிப்பு மிக முக்கியமானது.

இந்த வருடம் நோபல் பரிசு வாங்கிய மூவருமே மனித குலத்தின் மிகச்சிக்கலான பிரச்சினைகளைஆராய்ந்து அறிவியல்பூர்வமாக விளக்கியுள்ளார்கள். இதன் மூலம் இயற்கையை பற்றிய புரிதல் மனித குலத்திற்கு மேம்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த சிக்கலைத் தீர்க்ககூடிய வழிமுறைகளையும் அறிவியல் பூர்வமாக கூறியிருக்கிறார்கள். இது வருங்காலத்தில் ஆராய்ச்சியில் ஈடுபடப் போகும் இளைய சமுதாயத்துக்கு ஒரு கிரியா ஊக்கியாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. அதே சமயம், புவி வெப்பமயமாதலைத் தடுக்க நாடுகள் தக்க நடவடிக்கையை எடுக்க மக்கள் வலியுறுத்தவும், இந்த ஆராய்ச்சிகள் நேரடி சமூகப்பயன்பாடாக இருக்கின்றது என்பதும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம்.

நோபல் பரிசு இணைய தளத்தில் வெளியான இரு கட்டுரைகளைத் தழுவி எழுதப்பட்டுள்ளது.
ஜோசப் பிரபாகர், இயற்பியல் உதவி பேராசிரியர், லயோலா கல்லூரி, சென்னை
இக்கட்டுரை குறித்த கருத்துக்களை தெரிவிக்க – josephprabagar@gmail.com

Nobel Prize in Chemistry 2021 Winners Benjamin List and David W.C. MacMillan Their Work in Catalyst & Catalysis. வேதியலுக்கான நோபல் பரிசு 2021

வேதியலுக்கான 2021ம் ஆண்டு நோபல் பரிசு – விஜயன்



பள்ளிக் கல்வி வரை அறிவியல் படித்தவர்களுக்கு கிரியா ஊக்கி அல்லது வினையூக்கி என்றால் என்ன என்று தெரியும். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வேதிப்பொருட்கள் வினைபுரிந்து புதிய வேதிப்பொருட்கள்உருவாகிறது என்பது தெரிந்ததே. எனினும், இந்த வேதிவினையை துவக்க அல்லது துரிதப்படுத்த மற்றொரு வேதிப்பொருள் தேவைப்படுகிறது. இந்த மூன்றாவது வேதிப்பொருள் வேதிவினையில் பங்கெடுக்காமலேயே வேதிவினையை துவக்குகிறது அல்லது துரிதப்படுத்துகிறது. அந்த மூன்றாவது வேதிப்பொருளையே நாம் கிரியா ஊக்கி அல்லது வினையூக்கி என்கிறோம். கூட்டுச் செயல்பாட்டில் பல நேரங்களில் இதுபோன்று பார்த்திருக்கிறோம். ஒரு நபர் நேரடியாக எந்த வேலையிலும் ஈடுபடமாட்டார். ஆனால், அந்த கூட்டத்தில் அவர் இல்லாமல் எந்த வேலையும் நடக்காது. இவரை அந்தக் கூட்டத்தினர் கிரியா ஊக்கி என்றே அழைப்பர்.

ஒரு தச்சர் அல்லது கொல்லர் போன்றோரின் கைவண்ணத்தை நாம் வியந்து பார்ப்போமானால், அவர்கள் பயன்படுத்தும் கருவிகள் மேல் நமது கவனம் திரும்பும். விதவிதமான கருவிகளை வைத்து வியத்தகு மரச்சாமான்களையோ, அல்லது உலோகச்சாமான்களையோ அவர்கள் செய்கிறார்கள். எனவே அவர்களின் கருவிப் பெட்டியே நமக்கு முக்கியமானதாகிறது. அதே போல் ஒரு வேதியலாளர், பூமியில் இயற்கையாக கிடைக்கும் 102 தனிமங்களை வைத்து மனிதனுக்கு பயன்படும் விதவிதமான மூலக்கூறுகளை உருவாக்கிறார்கள் என்றால் அவரிடம் உள்ள கருவிப்பெட்டிக்குள் என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள நமக்கு ஆவல் ஏற்படும். ஆம், அவர் கருவிப் பெட்டிக்குள் இருப்பது விதவிதமான கிரியா ஊக்கிகளே.

சரி, இப்பொழுது ஏன் கிரியா ஊக்கி பற்றி பேச வேண்டும்? இந்த ஆண்டு வேதியலுக்கான நோபல் பரிசு பெற்ற இரு வேதியலாளர்கள் கிரியா ஊக்கிகள் பற்றி ஆய்வு செய்து, கிரியா ஊக்கிகள் ஆய்வுகளில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியவர்கள். ஒருவர் ஜெர்மனியில் உள்ள மாக்ஸ் பிளாங்க் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த பெஞ்சமின் லிஸ்ட் மற்றொருவர் அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டேவிட் மாக்மிலன். இவர்களால் அடையாளம் காணப்பட்டட அல்லது வகைப்படுத்திய கிரியா ஊக்கிகளைக் கொண்டு சிக்கலான மூலக்கூறுகளை எளிதில் உருவாக்கிட முடியும். குறிப்பாக நோய் தீர்க்கும் மருந்துகளை எளிய முறையில் உற்பத்தி செய்திட முடியும். ஆண்டு உலகப் பொருளுற்பத்தியின் மதிப்பில் 35 சதமான மதிப்புடைய பொருட்களின் உற்பத்தியில் கிரியா ஊக்கிகள் சம்பந்தப்பட்டிருக்கின்றன என்பதை வைத்து கிரியா ஊக்கிகள் மனிதனுக்கு எவ்வளவு முக்கியமானவை என்பதை நாம் அறியலாம். சரி இவர்கள் செய்த ஆய்வில் ஏற்பட்ட சுவாரஸிமான திருப்பத்தை பார்ப்போம்.

கிரியா ஊக்கிகள் பற்றிய அறிவு 19ம் நூற்றாண்டிலிருந்துதான் வளரத் துவங்கியது. ஹைட்ரஜன் பெராக்ஸைடு (H2O2) என்ற வேதிப்பொருள் இருக்கும் ஒரு குடுவையில் ஒரு சிறிய வெள்ளித்துண்டைப் போட்டால் ஹைட்ரஜன் பெராக்ஸைடு நீராகவும் (H2O) ஆக்ஸிஜனாகவும் (O2) சிதைகிறது. வெள்ளியில் எந்த மாற்றமும் நடைபெறவில்லை. இதுதான் சுவாரஸியத்தை கிளப்பிய முதல் நிகழ்வு. இங்கே வெள்ளி ஒரு கிரியா ஊக்கியாக செயல்படுகிறது என்பது பின்னாளில் அறியப்பட்டது. முளைவிடும் தன்மையுள்ள தானியங்களில் அடங்கியுள்ள முளைப்புக்கு காரணமான ஸ்டார்ச்சை ஒரு கிரியாஊக்கி கொண்டு குளுக்கோஸாக மாற்றமுடியும். உலோகங்கள் இயற்கையாகவே கிரியா ஊக்கிகள். காரணம் அவற்றின் அணுக் கருக்களை சுற்றி ஓடிக்கொண்டிருக்கும் எலக்ட்ரான்கள் மற்ற தனிமத்தின் அல்லது கூட்டுப்பொருளில் உள்ள அணுக்கருக்களுடன் இணைய முடியும் அல்லது அவற்றிலிருந்து எலக்ட்ரான்களை உலோக அணுக்கருக்களால் கவர்ந்திழுக்க முடியும்.

சரி, நிகழ்வைப் பார்த்துவிட்டோம். இதை எப்படி விளக்கப்போகிறோம்? ஸ்வீடன் நாட்டைச்சேர்ந்த ஜேக்கப் பெர்ஸீலியஸ் (Jacob Berzelius) 1935ம் ஆண்டில் வெள்ளியில் ஒரு விசேஷமான விசை (Force) இருக்கிறது என்றும் அது செயல்படும் முறையை கிரியா ஊக்கம் (Catalysis) என்றும் வெள்ளி என்ற உலோகத்திற்கு கிரியா ஊக்க விசை (Catalytic Force) இருக்கிறது என்றும் முன்மொழிந்தார். இருப்பினும் உலோக கிரியா ஊக்கிகளுக்கு ஒரு பிரச்சனை இருக்கிறது. வேதி வினையில் நீர் அல்லது ஆக்ஸிஜன் வெளிப்படுமானால் உலோகங்கள் நீருடன் அல்லது ஆக்ஸிஜனுடன் வினைபுரியத் துவங்கிவிடும். எனவே உலோக கிரியா ஊக்கிகளைப் பயன்படுத்தி புதிய மூலக்கூறுக்களை உருவாக்குவதற்கு ஒரு வரம்பு இருக்கிறது.

உலோகங்களைத் தவிர இன்னொரு வகை கிரியா ஊக்கிகள் உண்டு அவற்றை நாம் நொதிகள் (Enzymes) என்கிறோம். நொதிகள் புராட்டீன் வகையினத்தைச் சேர்ந்தவையே. புரோட்டீன்கள் அமினோ அமிலங்களால் உருவாக்கப்பட்டவை என்பதை நாம் அறிவோம். எனவே நொதிகள் பல்வேறு அமினோ அமிலங்கள் ஒன்றிணைந்து உருவாக்கப்படும் மாபெரும் மூலக்கூறுகளே. 2000ம் ஆண்டு முன்புவரை கண்டுபிடிக்கப்பட்ட கிரியா ஊக்கிகள் இந்த இரண்டு வகையைச் சேர்ந்தவை. 2000ம் ஆண்டில் மூன்றாம் வகை கிரியா ஊக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு கிரியா ஊக்கிகள் உருவாக்கத்தில் ஒரு பெரும் பாய்ச்சலான முன்னேற்றம் ஏற்பட்டது. மூன்றாம் வகை கிரியா ஊக்கிகளை கண்டுபிடித்த அந்த இருவரே இந்த ஆண்டுக்கான வேதியல் நோபல் பரிசைப் பெறுகின்றனர். எப்படி நடைபெற்றது என்பதைப் பார்ப்போம்.

Nobel Prize in Chemistry 2021 Winners Benjamin List and David W.C. MacMillan Their Work in Catalyst & Catalysis. வேதியலுக்கான நோபல் பரிசு 2021

கிரியா ஊக்கம் இரண்டு வகைப்படும். ஒன்று சமச்சீர் கிரியா ஊக்கம் (Symmetry Catalysis), இன்னொன்று சமச்சீரற்ற கிரியா ஊக்கம் (Asymmetry Catalysis). சமச்சீர் கிரியா ஊக்கத்தின் மூலம் கிடைக்கப்பெறும் மூலக்கூறுகளின் கட்டமைப்பை குறுக்கு நெடுக்காக வகுத்துப் பார்த்தால் கிடைக்கும் துண்டுகள் ஒரே மாதிரியாகவே இருக்கும். ஆனால் சமச்சீரற்ற கிரியா ஊக்கத்தில் கிடைக்கப் பெறும் மூலக்கூறுகளின் கண்ணாடி பிரதி பிம்பம் அவற்றைப் போலவே இருக்கும். நொதிகளின் சிறப்பம்சம் என்னவென்றால் ஒன்றுக்கும் மேற்பட்ட நொதிகள் அக்கம் பக்கமாக ஒரு வேதிவினையில் கிரியா ஊக்க வேலையை செய்ய முடியும். எனவே ஒரு சிக்கலான மூலக்கூறை உருவாக்க பல்வேறு நொதிகளை கிரியா ஊக்கிகளாக ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியும். கிரியா ஊக்கிகளான நொதிகள் இல்லாமல் உயிர் வாழ்வதற்கு தேவையான வேதிவினைகள் நடைபெற முடியாது.

எனவே புதிய புதிய நொதிகளை உருவாக்கும் முயற்சி விஞ்ஞானிகளிடம் மேற்கொள்ளப்பட்டது. இதன் ஒரு பகுதியாக தென் கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஸ்கிரிப்ஸ் ரிஸர்ச் இன்ஸிடிட்டியூட்டில் விஞ்ஞானி கார்லோஸ் பார்பஸ் தலைமையில் ஆராய்ச்சி நடைபெற்று வந்தது. அவருடைய குழுவில் முனைவர் பின்படிப்புக்காக சேர்ந்தவர் பெஞ்சமின் லிஸ்ட். கிரியா ஊக்கிகளை வைத்து வைரஸ்களை கவர்ந்திழுக்கும் நோயெதிர்ப்பொருள் (Catalytic Antibody) ஆய்வு செய்யும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருந்தார். அவர் நோயெதிர்ப்பொருள் உருவானதை பின்னோக்கி பார்த்து நடைபெற்ற வேதிவினைகளை வரையறுக்கும் வேலையைச் செய்து கொண்டிருந்தார். அவர்கள் பயன்படுத்திய நொதிகளில் உள்ள மூலக்கூறில் உலோக அணுவும் இருந்தததால், நடைபெற்ற வேதிவினைக்கு காரணமாக அமைந்தது உலோக அணுவா அல்லது ஒட்டுமொத்த நொதியா என்ற சந்தேகம் அவருக்கு ஏற்பட்டது. நொதிகளில் பல்வேறு அமினோ அமிலங்கள் இருக்கிறது என்று ஏற்கனவே கூறியிருக்கிறோம். அவர் பயன்படுத்திய நொதியின் ஒவ்வொரு அமினோ அமிலத்தையும் ஆய்வு செய்தார் இறுதியில் புரோலைன் என்ற அமினோ அமிலம் ஒரு கிரியா ஊக்கியாக செயல்படுகிறது என்பதைக் கண்டறிந்தார்.

சில கரிம வேதிப்பொருட்களில் உள்ள கார்பன்-கார்பன் பிணைப்பை ஆல்டால் வினை மூலமாக ஏற்படுகிறது என்று குறிப்பிடுவார்கள். ஆல்டால் வினை பொதுவாக கரிம வேதிப்பொருட்களான ஆல்டிஹைடு, ஆல்கஹால் ஆகியவற்றிற்கிடையே ஏற்படும். பெஞ்சமின் லிஸ்ட் புரோலைனை ஒரு கிரியா ஊக்கியாக பயன்படுத்தி ஒரு ஆல்டால் வினையை நிகழ்த்திக் காட்டினார். எனவே இதுவரை உலோகங்கள் மற்றும் நொதிகள் மட்டுமே கிரியா ஊக்கிகள் என்ற நமது புரிதலிருந்து புதிதாக மூன்றாவது வகை வேதிப்பொருளும் கிரியா ஊக்கியாக செயல்படமுடியும் என்பதை உறுதி செய்தார். இது ஒரு புதிய கண்டுபிடிப்பு. இக்கண்டுபிடிப்பை அவர் பிப்ரவரி 2000ல் ஒரு ஆய்வுக் கட்டுரையாக வெளியிட்டார்.

பெஞ்சமின் லிஸ்ட் ஆய்வுக் கட்டுரை வெளியாவதற்கு முன்பு டேவிட் மாக்மில்ன் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்திலிருந்து கலிஃபோர்னிய பல்கலைக்கழகத்தின் பெர்க்லி வளாகத்திற்கு வந்து சேர்ந்தார். இவரும் கிரியா ஊக்கிகளில் ஆய்வு செய்து வருபவர். இவர் ஆய்வுக்காக எடுத்துக்கொண்ட பிரச்சனை என்னவென்றால், உலோகக் கிரியா ஊக்கிகளைப் பயன்படுத்தி சமச்சீரற்ற கிரியா ஊக்கிகளை மேம்படுத்துவது என்பதுதான். உலோகக் கிரியா ஊக்கிகள் நீருடனும் ஆக்ஸிஜனுடனும் வினைபுரிவதை ஒரு ஆய்வுக்கூட மட்டத்தில் கட்டுப்படுத்த முடியும். ஆனால், ஒரு ஆலைத் தொழிலாக நடைபெறும்போது உலோக கிரியா ஊக்கிகளின் பிரச்சனை பூதாகரமானது. இதற்கு தீர்வு காண வேண்டும் என்றும் முடிவு செய்தார். எனவே, எதாவது ஒரு கரிம வேதிப் பொருளை கிரியா ஊக்கியாக பயன்படுத்த முடியுமா என்று ஆய்வு செய்தார். குறிப்பாக உலோகங்களில் உள்ள அணுக்கருவின் வெளிவட்டத்தில் சுற்றி ஓடிக்கொண்டிருக்கும் எலக்ட்ரான்களே அவற்றின் கிரியா ஊக்கத்திற்கு காரணமாகிறது என்பதால். கரிம மூலக்கூறு எதேனும் ஒன்றில் இதுபோன்ற கவர்ந்திழுக்கும் அல்லது தாவிப்பாயும் எலக்ட்ரான்கள் அம்மூலக்கூறின் எல்லையில் தென்படுகிறதா என்று ஆய்வு செய்தார். அதைவிட, நைட்ரஜன் போன்ற சில தனிம அணுக்களுக்கு எலக்ட்ரான்களை கவர்ந்திழுக்கும் ஆற்றல் அதிகம் என்பதால், இப்படிப்பட்ட தனிமங்கள் அடங்கிய ஒரு கரிம மூலக்கூறை (Organic Molecule) மின்னேற்றம் பெற்ற அயான்களாக பகுக்க முடியுமா என்பதையும் தேடினார். இறுதியில், அவர் நைட்ரஜன் அணு இருக்கும் கரிம மூலக்கூறுகளை இதுபோன்று பகுத்து இமினியம் அயான் (Iminium Ion) உருவாக்க முடியும் என்று கண்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து பல்வேறு கரிம மூலக்கூறுகளை வைத்து டையல்ஸ் -ஆல்டர் வேதிவினையை உருவாக்க முடியுமா என்று ஆய்வு செய்தார். ஆட்டோ டையல்ஸ், கர்ட் ஆல்டர் ஆகிய இரு விஞ்ஞானிகள் 1928ம் ஆண்டு கண்டுபிடித்த வேதிவினையின் பெயர் டையல்ஸ் -ஆல்டர் வேதிவினை. ஆறு கார்பன் அணுக்களைக் கொண்ட வளைய வடிவ மூலக்கூற்றை இவர்கள் வேதி வினைகள் மூலம் உண்டாக்கினார்கள். அதற்காக அவர்கள் வேதிலுக்கான நோபல் பரிசு 1950ம் ஆண்டு பெற்றனர். டேவிட் மாக்மிலன் அவருடைய முயற்சியில் டையல்ஸ் -ஆல்டர் வேதிவினையை உண்டாக்கி வெற்றி பெற்றார். அவர் உருவாக்கிய சில மூலக்கூறுகள் சமச்சீரற்ற கிரியா ஊக்கம் வகையைச் சேர்ந்தவை. தன்னுடைய கண்டுபிடிப்புக்கு கரிம கிரியா ஊக்கம் (Organo Catalysis) என்று மாக்மிலன் பெயரிட்டார். தன்னுடைய ஆய்வின் முடிவை பெஞ்சமின் ஆய்வுத்தாள் வெளியாவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே அறிவியல் இதழ் ஒன்றுக்கு அனுப்பி வைத்தார்.

Nobel Prize in Chemistry 2021 Winners Benjamin List and David W.C. MacMillan Their Work in Catalyst & Catalysis. வேதியலுக்கான நோபல் பரிசு 2021

இந்த இருவரின் கண்டுபிடிப்புகளும் மூன்றாவது வகை கிரியா ஊக்கிகள் இருப்பதை வெவ்வேறு வழிகளில் கண்டறிந்தது. முதலாமவரான பெஞ்சமின் லிஸ்ட், நொதிகளில் உள்ள அமினோ அமிலங்கள் மூலமாக அமினோ அமிலமான புரோலைன் ஒரு கிரியா ஊக்கி என்று கண்டறிந்தார். இந்த கிரியா ஊக்கியானது உலோக வகையுமல்ல, நொதி வகையுமல்ல. அதே போல் இமினியம் அயான்களை உருவாக்கும் கரிம வேதிப்பொருட்களை கிரியா ஊக்கிகளாக செயல்பட முடியும் என்று கண்டறிந்த இரண்டாமவரான மாக்மிலனின் முடிவும், இந்தவகை கிரியா ஊக்கிகள் உலோக வகையும் அல்ல நொதிகள் வகையும் அல்ல என்பதால் கரிம கிரியா ஊக்கிகள் என்ற பெயரைத் தாங்கி நின்று இவைகள் மூன்றாவது வகை கிரியா ஊக்கிகள் என்று அடையாளம் காணப்பட்டன.

இவர்களின் கண்டுபிடிப்பால் பல கட்ட வேதி வினைகளால் உண்டாக்கப்படும் புதிய மூலக்கூறுகளை ஒரு சில கட்ட வேதி வினைகளால் உண்டாக்க முடியும். இதன் பயனானது புதிய புதிய மருந்துகளை உருவாக்க நடைபெற வேண்டிய சிக்கலான பலகட்ட வேதிவினைகளை எளிதில் நடைபெறச் செய்ய முடிகிறது. எனவே,இருவரின் பணிகள் நோபல் பரிசுக்கு தெரிவு செய்யப்பட்டது. இந்த இவரும் இந்த ஆண்டுக்கான வேதியல் நோபல் பரிசை பகிர்ந்து கொள்கின்றனர்.

நோபல்பரிசு இணையதளத்தில் வெளியான வெகுமக்கள் தகவல் கட்டுரையைத் தழுவி எழுதப்பட்டது.

மூலக்கட்டுரை: https://www.nobelprize.org/prizes/chemistry/2021/popular-information/