Padugalam Book By Peramanallur Sekaran Bookreview By S. P. Agathyalingam நூல் மதிப்புரை: பெரணமல்லூர் சேகரனின் படுகளம்' நாவல் - சு.பொ.அகத்தியலிங்கம்

நூல் மதிப்புரை: பெரணமல்லூர் சேகரனின் படுகளம் நாவல் – சு.பொ.அகத்தியலிங்கம்

கூத்துக்கலையைச் சுற்றி…..

பெரணமல்லூர் சேகரனின் ‘படுகளம்’ நாவல் படித்தேன். தலைப்பும் அட்டையும் இந்நாவல் தெருகூத்து தொடர்பானது என அறிவித்தது. களமும் கதையும் அதுவேதான்.

தெருக்கூத்து கலைஞர் முருகேசன் மகன் கர்ணன் கூத்துக் கலைக்காக தன்னை அர்ப்பணித்து கொள்பவனாகவும், புதிய முயற்சி செய்பவனாகவும் காட்சிப் படுத்தப்பட்டிருக்கிறான். பெரியார் தொண்டரும் கட்டிட மேஸ்திரியுமான பலராமன் மகள் மண்டோதரி கதாநாயகி. இரு குடும்பமும் நட்பான குடும்பம். மண்டோதிரியின் தாய் கல்யாணிக்கு தன் அண்ணன் மணியின் மகன் ஐயப்பனுக்கு மகளைக் கட்டிகொடுக்க ஆசை. மண்டோதரியோ கர்ணனைக் காதலிக்கிறார். இந்த முடிச்சை சுற்றியும் தெருக்கூத்தைச் சுற்றியும் நாவலை கட்டி எழுப்புகிறார்.

சேகரன் அவருக்கே உரிய நாடக பாங்கில் கதையை நகர்த்திச் செல்கிறார். தெருக்கூத்து தன் பழமையான புராணத் தடத்திலிருந்து வெளியேறி புதுமையைப் படைக்க வேண்டும் என்கிற சேகரினின் ஆசையையும் அமைப்பு சார்ந்த பார்வையையும் இந்நாவல் நெடுக பிசைந்திருக்கிறார்.

தெருக்கூத்துக்கலையை அழியாமல் பாதுகாக்க வேண்டும், அதை நம்பி வாழும் கலைஞர்களை அமைப்பாக்கி வழிநடத்த வேண்டும் என்கிற தன் தீர்மானத்திற்கொப்ப பாத்திரங்களை கட்டமைத்திருக்கிறார். கதையைக் கொண்டு சென்றிருக்கிறார். ஆயின், தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வியல் போக்கு யதார்த்தத்தில் எப்படி உள்ளது என்பதை அனுபவ ரீதியாக அறிந்த களச்செயல்பாட்டாளர்கள்தான் உரசிப் பார்த்து உண்மை சொல்ல இயலும்.

மகாபாரதத்தை கட்டியங்காரன் கர்ணன் மூலம் கேள்விக்கு உட்படுத்தும் இடங்களை நான் ரசித்தேன். இதுபோன்று குறுக்கீடுகள் மூலம் விமர்சனப் பார்வையை உருவாக்குவது ஏற்கப்பட்ட கலையுத்தியே !

இந்நாவலில் சாதியம் தீண்டாமை, பண நெருக்கடி, சக பெண் தொழிலாளிக்கு பாலியல் சீண்டல் போன்ற பிரச்சனைகள் வருகின்றன. தீர்வும் உடனுக்கு உடனே காணப்பட்டு விடுகின்றன. இதுபோல் யதார்த்தமும் இருந்தால் நல்லதுதான். சரி, கற்பனையிலாவது அப்படி இருக்கட்டும் என்று நாவலாசிரியர் முடிவெடுத்திருக்கலாம்.

நான் வாசிக்கத்துவங்கிய காலத்தில் நாவல்களில் கதாபாத்திரங்கள் வில்லனைத் தவிர அனைவரும் ஒழுக்க சீலர்களாக நூறு விழுக்காடு உத்தமர்களாக இருப்பார்கள். நெடிய இடைவெளிக்குப் பிறகு அப்படி ஒரு நாவலை வாசிக்க வழி ஏற்படுத்தியுள்ளார் சேகரன். தொலைகாட்சி மெகா சீரியல்களில் வில்லத்தனமே எல்லா பாத்திரங்களிலும் ஓங்கி நிற்பதைத் தொடர்ந்து அவதானித்த சேகரன் அதற்கு நேர் எதிரான ஒன்றை கட்டமைத்திருப்பாரோ ?

“…புதினத்தின் பக்கங்கள் தோறும் பாத்திரங்களின் நேர்த்தியான உரையாடல்களும் ஆசிரியரின் கருத்துப் பதிவுகளும் களச் சித்தரிப்புகளும் கதையை செம்மை செய்யும் வகையில் இயல்புச் சீர்மையில் இடம் பெற்றுள்ளன.” என்கிறார் அணிந்துரையில் ப. ஜீவகாருண்யன். அது ஒரு வகையில் சரியே !

ஆயின், முன்னுரையில் சேகரன் வாக்குமூலம் கொடுத்திருக்கிறபடி அவரின் கருத்துவரைவுக்கு ஒப்ப பாத்திரங்களையும் உரையாடல்களையும் ஆக்கியிருக்கிறார் என்பதும் மேலும் பொருத்தமான வரையறை ஆகும்.

நூலறிமுகத்தில் கதைச் சுருக்கம் சொல்லிவிடக்கூடாது என்பதால் விட்டுவிடுகிறேன். வாசகர்கள் படித்து தீர்ப்பெழுதுங்கள் !

நூல்: படுகளம் நாவல் 
ஆசிரியர் :பெரணமல்லூர் சேகரன் 
வெளியீடு : பாரதி புத்தகாலயம் 
பக்கங்கள் : 360 , விலை : ரூ.340/
நூல் பெற : இன்கே க்ளிக் செய்யவும்: thamizhbooks.com
தொடர்புக்கு: 044 24332424 ,24332924 ,24356935
bharathiputhakalayam@gmail.com / www.thamizhbooks.com

Naraiyan Book By Thamizhkavi Bookreview By Karuppu Anbarasan நூல் மதிப்புரை: தமிழ்க்கவியின் "நரையன்" - கருப்பு அன்பரசன்

நூல் அறிமுகம்: தமிழ்க்கவியின் “நரையன்” – கருப்பு அன்பரசன்




“அன்றைக்குப் பிறகு அவளின் புருஷன் அவளை தொடுவதே கிடையாது”

என்னவாக இருக்கும்..? அவளே சொல்கிறாள். நேர்மையான மனதோடு அவசியம் வாசியுங்கள்.

செப்டம்பர் 10, 1993, வெள்ளிக்கிழமை காலை எப்பொழுதும்போல் அவனுக்கும் அவளுக்கும் விடிந்தது.. விடிந்தது என்னவோ அந்த வீட்டில் அவர்கள் இருவருக்கும் என்றாலும் வீட்டின் எல்லா வேலைகளையும் அந்த நிறைமாத கர்ப்பிணி மட்டுமே… அவனும் நிறைமாத கர்ப்பிணிக்கு ஆசைப்பட்டதை வாங்கிக் கொடுப்பது மட்டுமே இந்தக் காலத்தில் அவளுக்கு செய்யவேண்டிய கடமையாக நினைத்து கொண்டு அவளின் மன உணர்வை அறிந்து கொள்ள முயற்சி செய்யாமல் வழக்கம்போல் அலுவலகம் செல்வதற்காக தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறான்.

கடந்த 20 நாட்களுக்கு முன்னதாக அவளுக்கு வலி ஏற்பட.. அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பொழுது அவளை பிரசவ பகுதிக்குள் அட்மிட் செய்கிறார்கள்.. மூன்றாவது மாதத்திலிருந்து அந்த பெண்மணிக்கு தொடங்கிய மருத்துவ பரிசோதனை அடங்கிய நோட்டுப் புத்தகமும் அங்கே மருத்துவர்களின் மேசையில் அட்மிட் செய்யப்படுகிறது… நாள் முழுவதும் வைத்திருந்து வலி குறைந்தது கூடுவது காரணமாக அவருக்கு செயற்கையாக தொடர் வலி தருவதற்கு மறுநாள் தயாராகிறார்கள் மருத்துவர்கள்..

தலைமை மருத்துவர் அங்கே வந்து அந்த மருத்துவ பரிசோதனை புத்தகத்தை பார்த்த பொழுது அதில் இன்னும் 15 நாட்களுக்கு தேதி தள்ளி குறித்திருப்பதை கண்டுபிடிக்கிறார். உடனடியாக அந்தப் பெண்ணுக்கு செயற்கையாக வலி வருவதற்கான ஏற்பாடுகள் நிறுத்தி வைக்கப்படுகிறது… (நல்லா பார்த்தாங்க டீடெயிலு..!) அவளை அழைத்துக் கொண்டு மீண்டும் அவரது கணவன் வீட்டுக்கு வந்து சேர்கிறான்… அந்த பிரசவத்திற்கும் அவனுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லாதது போல… ஏதோ அந்த இரண்டு நாளையும் அவள் அவனிடமிருந்து பிடுங்கிக்கொண்டதைப்போல நினைத்துக் கொண்டு.

மீண்டும் இன்று வலி ஏற்பட, இதை தன் கணவருக்கு சொன்னால்.. எரிச்சலோடுதான் கேட்பார் என்று பயந்துகொண்டு பக்கத்தில் குடியிருக்கும் மீராவுக்கு தகவல் சொல்ல, மீரா அலுவலகம் கிளம்பிக் கொண்டிருக்கும் அவளின் கணவனை அழைத்து அவளின் நிலையை சொல்கிறார். மீண்டும் அதே மருத்துவமனை.. மருத்துவமனையில் அந்த பெண்மணிக்கு ஒதுக்கப்பட்ட படுக்கை எண் மட்டுமே மாற்றப்பட்டது.. மற்றபடி கடந்த வாரம் நடைபெற்ற அனைத்தும் முறையாக நடத்தினார்கள்.

அந்தப் பெண்மணிக்கு தொடர்ச்சியாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது இடுப்பு வலி.. அப்பாடா எப்படியும் இன்னிக்கு குழந்தை பெற்றிடுவார் இன்னொரு நாளைக்கு நாம வரத் தேவையில்லை என்று எண்ணிக்கொண்டு வெளியே காத்திருக்கிறார் அவரின் கணவர்.. வெள்ளிக்கிழமை காலை தொடங்கிய வலி அன்று பகலும் இரவும் தொடர்கிறது.. சனிக்கிழமை காலை வருகிறார் மருத்துவர்.. செவிலியர்களும் அவரை பரிசோதனை செய்து இன்று இரவுக்குள் பிரசவம் ஆகிவிடும் என்று சொல்கிறார்கள்..

கொஞ்சம் கொஞ்சமாக தொடங்கிய அவரின் பிரசவவலி கூடிக்கொண்டே இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை விடியற்காலை வரையும் வலி அதிகரித்துக் கொண்டே.. வெள்ளி சனி ஞாயிறு என மூன்று நாட்களும் அந்த கர்ப்பிணிப் பெண் மருத்துவமனை வராண்டாவில் நடக்கிறாள் படுக்கையில் படுக்கிறாள்.. நடக்கிறாள் படுக்கையில் மீண்டும் படுக்கிறாள்.. அவனுக்கோ ஒருபுறம் எரிச்சலாகவும் இன்னொருபுறம் வேதனையாகவும்.. உணர ஆரம்பிக்கிறான் அவளின் வேதனையை அவளின் கண்கள் வழியாக.

வலி ஞாயிற்றுக்கிழமையும் தொடர அந்த வலியின் உச்சமாக ஞாயிற்றுக்கிழமை இரவு அந்த பெண்ணுடைய குரல் மட்டுமே.. அழுகை ஒலி மட்டுமே.. அது அலறலாக எழும்ப மருத்துவமனையின் அமைதியை கிழித்துக்கொண்டு இருக்கிறது.. மருத்துவமனை வெளியில் அவன் மட்டுமே தனியாக அமர்ந்து அந்த வலியான அழுகையின் சத்தத்தை கேட்கும் மனவலிமை இல்லாதவனாக.. மருத்துவமனைக்குள் பசித்த பூனையைப் போன்று அங்குமிங்குமாக நடந்து கொண்டிருக்கிறான்.. காதல் மணம் புரிந்த தம்பதி தான் இருவரும்.. அவளின் அலறல் அவருடைய மனதை பிசைந்து கொண்டே இருக்கிறது.. பிரசவ வலியின் வேதனை பெரும் துயரம் அன்று இரவு முழுவதும் அவனை கண்மூட விடவில்லை.. அவனுடைய அடிவயிற்றில் உருவமற்று ஏதோ ஒன்று சதையைக் கிழித்துக்கொண்டு குடல் வழியாக நெஞ்சாங்கூட்டை நெருங்குவதை போன்று அந்த நேரம்ததை உணர்கிறான்..

ஒவ்வொரு நிமிடமும் அறிய முடியாத அச்சம் பயம் இயலாமை அவனுக்குள் புகுந்து அவன் உடலையும் சிந்தனையையும் எதையோ செய்து கொண்டிருக்கிறது.. ஏதாவது விபரீதம் நடந்து விடுமோ என்கிற உதறல் அவனுக்குள் ஒவ்வொரு நாழிகையும் அதிகரித்துக்கொண்டே.. தூங்காத இரவாக ஞாயிற்றுக்கிழமை அவனின் மன வலுவை சிதைத்துக் கொண்டே இருக்கிறது.. அந்தப் பெண்ணின் வேதனை மிகுந்த வலிகொண்ட அலறல் அவனுடைய விழி ரப்பையின் முடிகளை ஒவ்வொன்றாக பிடுங்கி எறிந்து கொண்டே.. இன்னொரு உயிரை கொண்டு வருவதற்காக ஓருயிர் படும் அவஸ்தை அவனுடைய இருதயத்தில் நெருப்பை அள்ளிக் கொட்டிக் கொண்டிருந்தது.. அந்த பெண்மணியின் குரல் மட்டுமே அழுகையாக இரவு முழுவதும்..

திங்கள் கிழமை புலர் காலைப் பொழுதின் 5 முப்பத்தி நான்கு மணிக்கு குழந்தையின் அழுகுரல் ஒலி அமைதியாக உறங்கிக் கிடந்த கதிரவனை மெல்ல வெளியே வா என்று தாயின் குருதி படிந்த தன் இதழ்களால் தாயின் வயிற்றுச் சூட்டின் கதகதப்போடு முத்தம் ஒன்றினை பதிக்கிறான் வாஞ்சையாக.

பிரசவ வலியின்.. வேதனையின்.. அழுகையின்.. துன்பத்தை அந்த இரவு மிகப் பெரும் காதலாக தன் மனைவி மீது கொள்ளச் சொல்லி அவனுக்குள் நிகழ்த்திவிட்டு சென்றது. புதிய ஒரு உயிரின் இதயம் துடிப்பதற்கு தாயின் இதயம் எத்தனை வேகமாக துடித்திருக்கும் ரத்தம் தெறித்திட அழுதிருக்கும் என்பதை.. வலித்திருக்கும் என்பதை அன்றுதான் முழுவதுமாக உணரத் தொடங்கினான். அவன்தான் இதை எழுதிக் கொண்டிருக்கும் இந்தக் கருப்பு.. பிரசவ வலியால் துடித்தவராக எனது இணையர் சுமதி.. அவளின் உயிர் சுமந்த இன்னொரு உயிராக மகன் சத்தியபாரதி..

நரையன் தொகுப்பில் இடம் பெற்றிருக்கக் கூடிய “கொடுத்த இன்பம்” சிறு கதையை வாசிக்கும் பொழுது அன்று நான் அறிந்த அத்தனை வலிகளையும் உணர முடிந்தது. பெரும்பாலும் எந்த ஆணுமே தன்னுடைய மனைவி பேறுகாலத்தில் அவளின் தாய் வீட்டிற்கோ அல்லது மருத்துவமனைக்கோ செல்லும் பொழுது அருகிலிருந்து பார்ப்பது என்பதும் அருகில் இருந்து அவளுக்கு தேவையான பணிவிடைகளை செய்வது என்பதுவும் குறைந்து போயிருக்கிறது. உலகமயமாக்கலும் நுகர்வு கலாச்சாரமும் நம் அனைவரையும் ஆட்கொண்டிருக்கும் இக்காலத்தில் கணவன் மனைவி உறவுகளுக்குள் மிகப்பெரியதொரு இடைவெளியினை அமைத்தும் உரையாடல்களையும் குறைத்தும் வைத்திருக்கிறது.

பேறுகால பெண்களுக்கு தேவைகள் என்பது பெரும்பாலும் ஏக்கம் நிறைந்ததாகவே இருக்கும். அவளுடைய மன உணர்வுகளின் தேவை உணரமுடியாமல் தனித்து விடப்பட்டு எல்லாமும் மருத்துவமனைகளிலும் அங்கு பணி புரியும் செவிலியர்கள் இடமும் அவைகள் ஒப்படைக்கப்படுகிறது பேறுகாலத்தில் இக்காலங்களில். குழந்தை பிறப்பிற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாக அந்தப் பெண் படக்கூடிய பெரும் துயரங்களை வலிகளை அதன் அவஸ்தைகளை நேரில் பார்க்கக் கூடிய ஆண்களுக்கு மீண்டும் தன்னுடைய மனைவியை குழந்தை பிறப்பிற்குகான கருவியாக்கி உட்படுத்த மாட்டான் அவள் மீது நிஜமான நேசம் கொண்டவனாக இருந்தால்.

அன்பின் அடையாளம் புது உயிர்களை படைப்பது என்றாலும் புது உயிர்களை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்துவது என்றாலும் இயற்கையின் அற்புதங்களில் மேன்மை களில் அழகில் சிறப்பு வாய்ந்தது என்றாலும் அதில் அந்தப் பெண்உயிர் மட்டும் படக் கூடிய வலிகளை சொல்லிமாளாது.. எழுதி மாளாது.. எந்த எழுத்துக்குள்ளும் அடங்க முடியாத வலி குழந்தை பிறக்கும் பொழுது இருக்கக்கூடிய அந்த உயிரின் வலி. அந்த வலியை விட நூறு மடங்கு மகிழ்வு இன்னொரு உயிர் இந்த மண்ணில் வந்து தன் முதல் அழுகையோடு காற்றை சீண்டும் போதும் போதும், தாயின் பச்சை இரத்தத்தின் ஈரத்தோடு நிலத்தைத் தீண்டும் போதும். வயிற்றில் பிள்ளையை சுமந்திருக்கும் பெண்ணும்; மழையைத் தேக்கி வைத்திருக்கும் கருமேகமும் எப்பொழுது மடை திறப்பார்கள் என்று எவருமே அறிய முடியாது.. இயற்கையின் படைப்புகளில் இந்த இருவருமே பேரழகானவர்கள்.

பெண்கள் அனைவருமே இந்த வலியினை கடந்து வந்திருந்தாலும் சக பெண்ணொருத்திக்கு இப்படியான வலி ஏற்படும் பொழுது எல்லா பெண்களுமே தனக்கான வலியாக நினைத்து அந்தப் பெண்ணுக்கு சுகமான பிரசவத்தை நடத்தி முடிக்க ஒவ்வொருவரும் தன்னால் முடிந்த அத்தனை உதவிகளையும், ஆலோசனைகளையும் பேரன்போடு செய்திடும் அக்கறையில் இருக்கும் மனித உள்ளங்களின் அழகுதான்
எல்லாவற்றிலும் பேரழகு.

அப்படியான பேரழகுகளை இந்த “கொடுத்த இன்பம்” கதையில் ஆசிரியர் சொல்லி இருக்கிறார். கதையில் சுகந்தியும்.. சுகந்திக்கு வலி ஏற்படும் பொழுது உடனிருந்து துடித்திடும் பெண்களும் பேரழகானவர்கள்.

“தான் அவளுக்கு கொடுத்துப் பெற்ற இன்பத்தை, இப்படித் திரட்டித் தந்திருக்கிறாள் என்று வியப்புறும் ஆண்களுக்கு ஒருபோதும் தெரியப்போவதில்லை அவள் பட்ட துன்பம்.. அதைத் தெரிந்துகொள்ள முயற்சி செய்யப் போவதுமில்லை ஆண்களின் உலகம்.

இதுநாள் வரையிலும் எத்தனை பெண்களோடு கலவியில் ஈடுபட்டோம்.. காதலிப்பதாக சொல்லி படுக்கையறை சுகத்தோடு முடித்துக்கொண்ட பெண்கள் எத்தனை பேர் என்பவையெல்லாம் ஆண்களின் உலகம் சூழ்ந்து நிற்கும் பொழுது பெருமையாக பேசியும். அவைகளை எழுத்திலும் கொண்டு வந்து பெண் உடல் குறித்தான தம் பார்வைகளை ஆண் திமிரோடு பொதுவிலும் வைப்பார்கள் வெட்கம் ஏதுமில்லாமல் கௌரவம் என்றே.. கேட்கும் வாசிக்கும் நாமும் இவைகள் எல்லாவற்றையும் மிகச்சாதாரணமாக கடந்து போய்க்கொண்டே இருப்போம்..

குழந்தைப் பருவம் தொடங்கி பதின்பருவத்தை ஊடுருவி கட்டாயத் திருமணத்திற்கு விருப்பமின்றி தலையசைத்து, திருமண உறவில் மனம் ஒன்றாத சூழலில் அதனை பக்குவமாக புரிந்து ஏமாற்றி அனுபவித்த ஆண் உடல்கள் எத்தனை எத்தனை என்பதையும்.. தான் மனமுவந்து கலவியில் ஈடுபட்ட ஆணிடம் நம்பி பல உண்மைகளை பகிர்ந்து கொண்டாலும் அந்த ஆணின் பார்வையில் தன்னை யாராக பார்க்கிறான் என்பதையும் இங்கு வெடிப்புறப் பெண்கள் பேசத் தொடங்கிவிட்டால் ஆண்களின் உலகம் முற்றாக பொதுவில் நிர்வாணப்படுத்தப்பட்டு கேவலப்பட்டு நிற்கும். அந்த வேலையினை “கற்பெனப்படுவது” என்கிற சிறுகதையில் ஆழமாகவும் காத்திரமாகவும் பேசி பொதுக் குளத்தில் ஒரு அதிர்வினை ஏற்படுத்தியிருக்கிறார் ஆசிரியர் தமிழ்க்கவி அவர்கள்.

கலவியும் காதலும் இரு பாலருக்கும் பொதுவானது ஆனால் அவை குறித்து பேசுவது என்பது இங்கு ஆண்களுக்கு மட்டுமே உரித்தானதாக மாறி இருக்கும் சூழலில் இந்த கதையில் பெண் ஒருவர் வலியோடு தான் கடந்து வந்த வாழ்வினைப் பேசுவார். “கற்பெனப்படுவது” இருபாலருக்குமானதே .

“பெண்ணுக்குள் என்ன உண்டு” என்கிற சிறுகதையிலும்.. அறிமுகமானவர்கள், அந்நியோன்யமானவர்கள் என நினைத்து பெண் பிள்ளைகளை அவர்களின் பாதுகாப்பில் விட்டுச் சென்றிடும் பொழுதினில் அங்கே இருக்கக்கூடிய ஆண்களால், மனதளவிலும் உடலளவிலும் பெண் குழந்தைகளின் உடல் என்னவாக இருந்தது.. எப்படிப் பார்க்கப்பட்டது.. நிகழும், தொடரும் கொடுமைகளை எவ்வாறு எதிர்கொள்கிறது என்பதை கதைக்குள் பெரும் வலியோடு கொண்டு கொண்டு வந்து இருக்கிறார் சிறுகதையாசிரியர்.

“சாவை நோக்கி” சிறுகதையில் எழுத்தாளரின் நேரடி கள அனுபவங்களிலிருந்து பெண் புலிகளின் மெச்சத் தகுந்த, மரியாதைக்குரிய, அனைவராலும் போற்றப்படுக்கூடிய வீரம் ஆண்களுக்கும் நிகரானது என்பதை சொல்கிறது. இலக்கு மட்டுமே குறிக்கோளாக கொண்ட போராளிகளின் நிகழ்கால சூழ்நிலை கணக்கில் எடுக்காமல் நேற்றைய நிலையிலிருந்து வடிவமைத்த திட்டத்தின் அடிப்படையில் செல்ல முற்படும் பொழுது எத்தகைய பெரும் இழப்புகளை சந்திக்க வேண்டியிருக்கிறது என்பதைச் சொல்லியிருக்கிறார்.
அக் கதையில் வரக்கூடிய கடைசி வாக்கியம்..

“பிள்ளை… நான் சாகலாம்.. நீ சாகலாம்.. “நாங்கள்” சாகக் கூடாது என்பதை மறந்திட்டியா..” இதில் வரக்கூடிய அந்த “நாங்கள்” என்கிற வார்த்தை ஆழம் மிகுந்ததாக அர்த்தம் பொதிந்ததாக அமைந்திருக்கிறது. அர்த்தமற்று மனித இழப்புகளை கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது “சாவை நோக்கி” சிறுகதை.

ஒப்பாரி என்கிற சிறுகதையில்.. செத்துப்போன பரமசிவத்தின் கடந்த கால வாழ்க்கையும்.. அவர் உடல் நலிவுற்றதும் மனைவி மற்றும் பிள்ளைகளால் சந்திக்கும் பாடுகளையும்.. கதையின் உச்சமாக மனைவியின் ஒப்பாரி வீடியோ படமாக்குவதாகும்.

சிறுகதைத் தொகுப்பின் தலைப்பு “நரையன்”.. தலைப்பின் பெயரில் இருக்கக்கூடிய சிறுகதை குறித்து நான் இங்கு எதுவும் சொல்லப் போவதில்லை. மிகவும் அழகிய நேசம் மிகுந்த வலிமிகுந்த கதை இது. அந்த உணர்ச்சியை அதிலிருக்கும் பேரன்பை நீங்கள் வாசிக்கும்போது அனுபவியுங்கள்.

தொகுப்பில் இருக்கக்கூடிய 15 கதைகளில் “காணி வைத்தியம்” என்கிற கதைக்குள் மட்டும் என்னால் முழுவதுமாக ஈடுபடுத்திக் கொள்ள முடியவில்லை..

“சிவில் பாதுகாப்பு” கதையோ காவல்துறையின் நிகழ்கால செயல்பாடுகளை பகடி செய்யக்கூடிய அளவில் இருக்கிறது.

“மாற்றங்கள்” என்ற கதை உலக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் நம்முடைய நிலத்திற்குமான தொடர்பு எப்படி வகை மாற்றம் செய்து ஆளும் அரசுகளால் கள்ளத்தனமாக மக்கள் மத்தியில் நிகழ்த்தப்பட்டு கொண்டிருக்கிறது என்பதை பேசுகிறது.

கதைகள் சொல்லும் அட்டைப்படத்துடன் அழகிய முறையில் வடிவமைத்து ஆசிரியரின் 15 கதைகளை தேர்வு செய்து தொகுப்பாக வெளியிட்டிருக்கிறார்கள் நடு வெளியீட்டகத்தார்.. அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

இலங்கைவாழ் தமிழ் மக்களின் வாழ்வியல் முறைகளை அவர்களின் மொழியிலேயே கதையாக நம் கையில் கொடுத்து பல கதைகளின் வழியாக அமைதியாக இருக்கும் குளத்திற்குள் ஒரு கல்லினை வீசி அதிர்வினை ஏற்படுத்தி இருக்கும் தமிழ்கவி என்கிற தமயந்தி அவர்களுக்கு அன்பும் வணக்கங்களும்.

நூல்: நரையன்
வெளியீடு: நடு_வெளியீடு
ஆசிரியர்: தமிழ்க்கவி
பக்கங்கள்: 128.
இந்திய விலை: 140/-
இலங்கை விலை: 400/-

கருப்பு அன்பரசன்.

Vara mudindhal Vandhuvidungal Thozhar Book By Sirajudeen Bookreview By Sekaran நூல் மதிப்புரை: சிராஜூதீனின் வர முடிந்தால் வந்துவிடுங்கள் தோழர் - பெரணமல்லூர் சேகரன்

நூல் மதிப்புரை: சிராஜூதீனின் வர முடிந்தால் வந்துவிடுங்கள் தோழர் நினைவுக் கட்டுரைகள் – பெரணமல்லூர் சேகரன்




நூல்: வர முடிந்தால் வந்துவிடுங்கள் தோழர் நினைவுக் கட்டுரைகள்
தொகுப்பு: சிராஜூதீன்
பக்கங்கள்: 232
விலை: ₹225
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்: thamizhbooks.com

“மனிதனுக்கு மிகவும் பிரியமானது அவனுடைய வாழ்க்கை! மனித வாழ்க்கை வாழ்வதற்கே! ஆனால் ஒருமுறை திரும்பிப் பார்த்துக் கொண்டால், பயந்தாங் கொள்ளி யாகவும், பயனற்றவனாகவும் வாழ்ந்தேன் என்று வெட்கத்துடன் தலைசாயும் நிலைமை வரக்கூடாது. அர்த்தமற்ற மனவேதனையுடன், சித்ரவதையுடன் வருடங்கள் உருண்டோடி விட்டனவே என கழிவிரக்கம் கொள்ளும் பிழைப்பு வேண்டாம்! என் வாழ்க்கை பூராவும் என் திறமைகள் அனைத்தையும் மனித சமுதாய விடுதலையென்னும் உலகிலேயே மகோன்னதமான இலட்சியத்திற்கே அர்ப்பணித்தேன் என்று கண்ணை மூடும் போது நினைக்கும்படி வாழ்வதுதான் மனித வாழ்க்கைக்குப் பெருமை அளித்திடும்”..ஆஸ்த்ரோவ்ஸ்கி

ஆஸ்த்ரோவ்ஸ்கியின்அர்த்த அடர்த்தி மிக்க வார்த்தைகள் கறுப்பு கருணாவுக்குப் பொருந்தியதால்தான் தான் இறப்பதற்கு முன் ” ஐ ஆம் எஸ்.கருணா, மெம்பர் ஆப் கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆஃப் இந்தியா மார்க்சிஸ்ட்” என்னும் வார்த்தைகளை உதிர்த்துவிட்டு மறைந்தார் கறுப்பு கருணா. இவர் அர்ப்பணிப்பு மிக்க வாழ்க்கையை வாழ்ந்ததால்தான் ‘வர முடிந்தால் வந்துவிடுங்களேன் தோழர் கருப்பு கருணா’ என்று உளப்பூர்வமான அஞ்சலி உரையை வழங்கியுள்ளார் இ.பா. சிந்தன். இதையே நூலின் தலைப்பாக்கி கறுப்பு கருணா குறித்த அஞ்சலி உரைகளின் தொகுப்பை உருவாக்கியுள்ளார் சிராஜூதீன்.

இந்நூலில் 34 தோழர்கள் கறுப்பு கருணாவுடனான தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். இத்துடன் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் இரங்கல் செய்திகளும் தொகுப்பாளர் சிராஜூதீனின் தொகுப்புரையும், சில கவிதைகளும் முத்தாய்ப்பாய் கறுப்பு கருணாவின் ‘ஒரு பெரும் கனவின் வெளிப்பாடு’ எனும் கட்டுரையும் இடம் பெற்றுள்ளன.

இந்நூல் கறுப்பு கருணாவின் இறுதி வார்த்தைகளில் இழைந்த பெருமைக்குரிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவண்ணாமலை மாவட்ட மாநாட்டில் அனைத்து பிரதிநிதிகளுக்கும் இலவசமாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

“நான் சுயமாக நிற்கவும் செயல்படவும் கற்றுக் கொண்டேன். கருணா தன்னை முழுமையாக பொது வாழ்க்கையில் ஈடுபடுத்திக் கொண்டதால் மொத்த குடும்ப பொறுப்புகள், முடிவுகள் என நானே எடுக்க அவர் கற்றுத் தந்தார்.” என்னும் கருணாவின் துணைவியார் செல்வியின் வார்த்தைகள் கருணாவுக்குப் புகழ் சேர்ப்பதோடு ஆண் கம்யூனிஸ்டுகள் தங்கள் வீட்டுப் பெண்களைப் பயிற்றுவிக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துவதாகவே உள்ளன.

திருவண்ணாமலை மலைமேடுகளில் போலித் திருட்டு சாமியார் நித்யானந்தா தனது அடிப் பொடிகளைத் தூண்டிவிட்டு குடில்கள் அமைத்து மலையை ஆக்கிரமிக்க இருந்த திட்டத்தைத் தனது தோழர்களுடன் தவிடுபொடியாக்கியிருக்கிறார் என்பதையும் சமூக ஊடகங்களில் கருணா குறித்தும் அவரின் மகள் குறித்தும் மிரட்டல் பதிவுகள் இடுவதும், கொலை மிரட்டல்கள் விடுப்பது எனவும் வழக்கம் போல ஆட்டங்கள் ஆடிய நித்யானந்தா கும்பலிடமிருந்து மலையை மீட்டு அண்ணாமலையாருக்குத் திருப்பித் தந்த கருணா ஒரு நாத்திகர் என்பதையும் இந்நூல் பதிவு செய்கிறது.

பாப்பம்பாடி ஜமாவின் அதிரும் பறையொலியில் எப்போதும் கருணா எழுப்பும் ஒலியும் கலந்திருக்கும் என்பதைப் பாராளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் இரங்கல் உரையில் காணமுடிகிறது.

கருணாவின் இன்னொரு முகமாக நகைச்சுவை ததும்பும் நடவடிக்கைகள் இருந்துள்ளன. சான்றாக தமுஎகச மாநிலப் பொருளாளர் ராமச்சந்திரன் நாடகச் சூழல் ஒன்றை விவரிக்கிறார்.

பிரளயன் டாக்டர்..
கிராம ஆஸ்பத்திரி சூழல்..
டாக்டர் ரூமுக்குள் நுழைவார்..

எஸ்…பேஷண்ட்..
ஒரு கையில் கட்டுடன் பேஷண்டாக கருணா…
டாக்டர்..என்னய்யா..
டாக்டர், என் கையில் அடி பட்டிடுச்சி சார்,
எங்கய்யா காமி,
கட்டுப்போடாத கைய காண்பிப்பார் பேஷண்ட்.
ஏன் அந்தக் கையில கட்டுப் போட்டு இருக்க?
அந்தக் கையிலும் அடிபடாமல் இருக்கத்தான் சார்,
பார்வையாளர்கள் மத்தியில் ஒரே ஆரவாரம்.

இப்படி கருணாவின் பிரசன்ஸ் ஆஃப் மைன்டும் நகைச்சுவையுணர்வும் நூலின் பல இடங்களில் காண முடிகிறது. “காவியற்ற தமிழகம், சாதியற்ற தமிழர், கீழடி நம் தாய்மடி” போன்றவை கருணாவின் மூலமாகவே உருவானவை என்பதை இந்நூலைப் படிப்பதன் மூலம் மட்டுமே உணர முடிந்தது.

கோட்டைப்பட்டி கிராமத்தின் கலை இரவுக்காக திருவண்ணாமலையிலிருந்து கிளம்பும்போது பணமில்லாத கையறு நிலையில் சமயோசிதமாய் கருணா பஸ்சில் மேளத்தை அடித்தபடியே மக்களிடமிருந்து பணம் வசூலித்த பாங்கினை இலட்சுமிகாந்தன் தனது அனுபவப் பகிர்வால் உணர்த்தும்போது கருணா கள செயல்பாட்டாளராய் ஜொலிக்கிறார் எனின் மிகையன்று.

இறப்பிற்குப் பின் தன் உடலை மருத்துவமனை ஆய்விற்குக் கொடுத்தது; உறவினர்கள் யாரும் எந்தச் சடங்குகளையும் தன் உடல்மீது செலுத்திவிடாதபடி தன் குடும்பத்தை அவ்வளவு துயரத்திலும் உறுதியுடன் இருக்க வைத்தது; அவரின் சவ ஊர்வலம் புறப்படும் முன்பு “யாரும் பூக்களைத் தூவி சாலையை மாசுபடுத்த வேண்டாம். அது கருணாவிற்குப் பிடிக்காது” என்று அந்தக் குடும்பம் அறிவித்தது, போன்றவைகள் எல்லாம் ஒரு நாளில் நடந்துவிட்ட ஒன்று அல்ல. அது தனது குடும்பத்தை ஒரு தோழர் எவ்வாறு உறுதியுடன் தயார் செய்துள்ளார் என்பதன் வெளிப்பாடுகள்தான் அவை என்று பிரளயன் கூறியிருப்பது பொருத்தமானதே.

இந்நூலில் சில ஆளுமைகள் கருணாவின் இயல்பான முரண்களைச் சுட்டிக் காட்டினாலும் “முரண்களோடு வாழ முடியும், தோழமை சேர முடியும், முன்னேறிக் காட்ட முடியும்-நோக்கம் உயர்வானதாக, சமுதாயத்துக்காக இருக்காமானால். அதற்கு நம்மோடு ‘வாழும்’ சாட்சிதான் கருணா” என்னும் அ.குமரேசனின் வார்த்தைகள் கருணாவின் யதார்த்த வாழ்வின் வெற்றியைப் படம் பிடித்துக் காட்டுகின்றன.

“முகநூல் வெளியில் தனக்கென பல்லாயிரக்கணக்கில் பின்தொடர்பவர்களை, கிட்டத்தட்ட 26000 பேர் வரை கொண்டிருந்தவர் கருணா. அவரது கூர்மையான எழுத்தும், பேச்சு பாணியிலான நகைச்சுவையும், எதையும்
இடதுசாரி, பெரியாரிய, அம்பேத்கரியப் பார்வைகளோடு வழங்குகிற பாங்கும் அவருக்கென தனித்த வகையிலான பின் தொடர்பவைகளை அதிகரித்தன” என்னும் சிரீரசாவின் வார்த்தைகளிலிருந்து கருணாவின் முகநூல் மேன்மையை உணர முடிகிறது.

“பொது நிகழ்வுக்கு வசூல் பண்றப்போ கூச்சமே படக்கூடாது தோழா.. மக்கள் கிட்ட காசு வாங்கிதான் தோழா நிகழ்ச்சி நடத்தனும்” எனும் கிருஷ்ணமூர்த்தியின் பதிவு மூலம் உண்டி குலுக்கிககள் கம்யூனிஸ்டுகள் என்பதை கருணா நினைவுபடுத்தியுள்ளார்.

பவாவின் ‘ஏழுமலை ஜமா’ வை கருணா படமாக உருவாக்கினார் என்பதை விட மு. பாலாஜி கூறியுள்ளதைப் போல மக்களிடம் வசூலித்து உருவாக்கப்பட்ட படம் நாமறிந்த வகையில் இது ஒன்றுதான் என்னும்போது மெய் சிலிர்க்கிறது.

“அமைப்பைக் குடும்பமாகவும்
குடும்பத்தை அமைப்பாகவும்
கலைத்துப் போட்டு கொண்டாடிய
சமகாலச் சித்தன் அவன்”
என கவிஞர் வெண்புறா குறிப்பிட்டுள்ளதன் அர்த்தம் கருணாவைக் கொண்டாடும் அவரது துணைவி செல்வி கருணாவை பொக்கிஷம் என்பதிலிருந்தும் அவரது மகள் “எங்கப்பா எங்களுக்கு எதையும் போதிக்கவில்லை. சுயசிந்தனையோடு வாழக் கற்றுக் கொடுத்தார்” என்பதிலிருந்தும் புலனாகும்.

“இப்போது வரை ஒன்றை எனக்குள் கேட்டுக்கொண்டே இருக்கிறேன். எப்படி ஒரு மனிதனால், தன் வாழ்வின் இறுதி நொடிகளில் தன் நிலை குறித்தோ, தன் குடும்பத்தார் குறித்தோ ஒரு வார்த்தையையும் உச்சரிக்காமல், தன்னை ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் என்று பெருமையோடு அறிவித்துக் கொள்கிறபடி ஒரு வாழ்வை வாழ்ந்து காட்டினார். நம்மால் வாழ்ந்துவிட முடியுமா?” என் வினவும் வசந்துக்கு..

“போய் வா கருணா! உன் தொடர்ச்சியில் தமிழகமெங்கும் நிறைந்திருக்கிறார்கள். அதுபோதும். ஒரு களப்பணியாளனின் மரணத்தை மதிப்பிட..சமூகம் பெருமிதத்தால் நிறைய” என்ற பவாவின் கூற்றே பதிலாக உள்ளது.

இந்நூலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோரின் புகழுரைகள் சிறப்பு மிக்கவை.

அற்புதமான தோழரின் இழப்புக்குக் காரணமான புகைக்கும் பழக்கத்தை முன்னிறுத்தி “ஓர் இலட்சியத்துக்காக நம் உடல், பொருள், ஆவியை இயக்கத்துக்கு அளித்துவிட்டவர்கள் தம் உடலைப் பேணுவது ஓர் ஸ்தாபனக் கடமை என்று நம் முன்னோடிகள் சொல்லுவார்கள். இந்த உடல் உனக்கானதில்லை. இயக்கத்துக்கானது என்பார்கள். அச்சொற்களை தோழர்கள் மதிக்க வேண்டும். உடலைப் பேண வேண்டும். கருணாவின் பாதியில் முடிந்த வாழ்வு நமக்குச் சொல்லும் பாடம் அது” எனும் ச. தமிழ்ச்செல்வனின் வார்த்தைகள் முக்கியமானவை.

இந்நூலை வாங்கிப் படிக்க வேண்டியதும் தத்தம் வாழ்க்கையில் பொருத்திப் பார்த்து முன்னேற வேண்டியதும் முற்போக்காளர்களின் மகத்தான கடமை.

முகாமி சிறுகதைத் தொகுப்பு

நூல் மதிப்புரை: அய் தமிழ்மணியின் முகாமி சிறுகதைத் தொகுப்பு – தேனி சீருடையான்




நூல்: முகாமி சிறுகதைத் தொகுப்பு
ஆசிரியர்: அய். தமிழ்மணி
வெளியீடு: பாரதி புத்தகாலயம்.
பக்கம்: 183
விலை: 175/
புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்: thamizhbooks.com

சமன்குலைந்த வாழ்வைச் சமப்படுத்தும் குரல்கள்!

தமிழ்ப் பேரகராதியில் தேடியபோது முகாமி என்ற சொல், கிடைக்கவில்லை. முகாந்திரம் என்ற வார்த்தையின் பெர்ய்ச் சொல்லாக இருக்கக் கூடும் என நினைத்துக் கொண்டேன். கம்பம் பள்ளத்தாக்கு நிலப் பகுதியில் புழக்கத்தில் இருக்கிற முக்கியமான மக்கள் மொழி முகாமி. பழைய சொல் என்றாலும் புதுமையாய்த் தோன்றுகிறது. நவீன பெயரிடுதல் முறையில் பல பழைய பெயர்கள் புதிய முகம் காட்டி நிற்கின்றன. ”சனம்புக்கீரை, மேநீர், பெயல்” உள்ளிட்ட பல பெயர்கள் வெகுகாலம் புழக்கத்தில் இல்லாத நிலையில் மனித உச்சரிப்பு அவற்றுக்குப் புதுப் பொலிவைத் தருகின்றன.. பழமையை மீட்டெடுத்தல் என்ற பண்பாட்டுச் செயல்பாட்டில் இவையெல்லாம் வரிசைகட்டி நின்று உதவி செய்கின்றன. இந்தத் தலைப்பை தேர்ந்தெடுத்ததற்காகவே நூலாசிரியருக்கு முதல் வாழ்த்தைச் சொல்லலாம்.

தமிழ் மணியும் தோழமை உரை எழுதியுள்ள அ, உமர் பரூக்கும் இலக்கிய்த் துறையில் தங்கள் முதல் ஆசான் என்று குறிப்பிடுவது அ. பீர்முகம்மது அப்பா அவர்களை. அவர் தொழிற்சங்கத் தலைவர். இலக்கியத்தின்பால் ஆழ்ந்த ரசனை உள்ளவர். முற்போக்குப் படைப்புகள் அனைத்தையும் வாசித்த போது அவற்றின்மேல் அவருக்குப் போதாமை இருந்தது. பொருளாதாரக் கூறுகளை முன்வைத்த பிரச்சார மேடைகளாய் அவை திகழ்கின்றன எனக் கூறினார். இலக்கியங்கள் பச்சை மரத்து நிழலாக இருக்க வேண்டுமே தவிர பட்ட மரத்து நிழலாக இருக்கக் கூடாது என்றார். அல்லி உதயன், தேனிசீருடையான். ம, காமுத்துரை ஆகியோர் எழுதிக் கொண்டிருந்த இடைக் காலத்தில் அவர்களோடுதான் முதல் பழக்கம் ஏற்பட்டது அப்பாவுக்கு. அவர்களுக்கும் அவரே ஆசானாக்த் திகழ்ந்தார். ஒவ்வொரு படைப்பையும் முழுமையாய் வாசித்து ரசனைப் படுத்தும் முறையைப் போதித்தார். “ஆகவே” சிறுகதைத் தொகுப்பை அவரே வடிவமைத்தார்.

முகாமித் தொகுப்பின் முக்கியக் கதைகளில் ஒன்று முகாமி. கதாநாயகனின் தந்தை ஒரு கட்டுமான தொழிலாளி. பேப்பர் வாசிப்பின்மூலம் தனது உலக அறிவையும் அரசியல் அறிவையும் வளர்த்துக் கொண்டவர். திராவிடச் சிந்தனையாளரான அவர் மகனின் போக்கறிந்து தன் கால்களையும் இடது பாதையில் பயணிக்க அனுமதித்தார். கதாநாயகனின் அம்மா அவ்வப்போது அவர் வெளியில் சென்று வருவதை, உடல் நிலை கருதி முட்டுக் கட்டை போட்டாலும் சமாதானம் செய்து தன் பயணத்தைத் தொடர்ந்தார்.

மகனிடம் கற்றதை மகனுக்கே திருப்பிச் சொல்லி நல்வழிப் படுத்துவது இந்தக் கதையின் முக்கிய அம்சங்களில் ஒன்று. மகன் எழுதி அரங்கத்தில் வாசித்துவிட்டு வந்த கவிதையை அவரும் வாசித்துவிட்டுச் சொல்கிறார். “நாம வாழுற எடம் குப்பதேன்; குப்பையா இருக்குன்னுதேன் எழுதணும்; குப்பையாவே இருக்குன்னு எழுதக் கூடாது. மாத்துறதுதேன் நம்ம வேல; குப்பையா இருக்கது எல்லாருக்கும் தெரியுமே.”

ஓர் எளிய மனிதரின் இலக்கியத்துக்கான எளிய வழிகாட்டுதல் அபாரமானது. ஒரு கட்டுமானத் தொழிலாளியின் நாவிலிருந்து இப்படியான வார்த்தைகள் வரக் காரணம் என்ன? யோசிக்கும் போது அறிவுத் தேடலும் அவர் இணைந்து செயல்படும் அமைப்பும்தான் என்று சொல்லாமல் சொல்கிறது கதை.

எந்தக் குறைபாடும் இல்லாமல் வேலை செய்த அப்பாவைப் பார்த்து முத்துராசு அண்ணன் கேட்பார். “இவ்வளவு வெவரமா வேல செய்யிறியே யாருண்ணே ஒன்னோட முகாமி?”

அதற்கு எந்த யோசிப்பும் இல்லாமல் இயல்பாய்ப் பதில் சொல்கிறார்; “உழைப்புத்தான் என்னோட முகாமி.” இந்த இடத்தில் கதை உச்சம் பெறுகிறது. முகாமி என்ற சொல்லுக்கான அர்த்தமும் புரிபடுகிறது. “வழிகாட்டி.”

கந்துவட்டிக்கும் அரசியலுக்குமான நெருக்கத்தை அம்பலப் படுத்தும் கதை “கருப்பையாவின் கந்துவட்டிக் கணக்கு.” வாசிக்க வாசிக்க சினிமாப் படம் ஓடுவது போல ஓடுகிறது. தேர்தல் களத்தில் பட்டுவாடா ஏஜண்ட்டுகளாகப் பெரும்பாலும் கந்துவட்டிப் பேர்வழிகளே நியமனம் பெறுகிறார்கள். தேனி உட்பட தென் மாவட்டங்களின் நிலமை அதுதான். (அதிமுக அரசியலே உள்ளடக்கமாய் இருக்கிறது.)

தன்னிடம் கந்துக்குப் பணம் வாங்கிய நபர்கள் மூலம் ஓட்டு சேகரிப்பில் ஈடுபடுகிறான் கருப்பையா. அவன் கட்சியைச் சேர்ந்த தக்காளிச் செல்வம் கருப்பையாவின் துணையோடு சட்டமன்ற உறுப்பினனாக வெற்றி பெறுகிறான். கருப்பையாவின் விசுவாசத்தை மெச்சி, ஐந்து கோடி ரூபா சொத்தை பினாமியாக அவன் பேரில் எழுதி வைக்கிறான். அடுத்து வந்த நகர்மன்றத் தேர்தலிலும் நாற்பத்தி ஐந்தாயிர்ம் ஓட்டுகளுக்கான பணத்தை கருப்பையாவிடம் ஒப்படைக்கிறான் செல்வம். குறைந்தது ஒருகோடி ரூபாயைச் சுருட்டிவிட வேண்டும் என்ற கோதாவில் கணக்குப் போட்ட கருப்பையா பட்டுவாடாவைக் குறைத்துக் கொள்கிறான். தன் கட்சி ஜெயிக்காது என்ற கள நிலவரம் புரிந்த கருப்பையா மேலும் இறுக்கிப் பிடித்து இன்னும் சில கோடிகளைச் சுருட்டுகிறான்.

ஜெயிக்க வாய்ப்பே இல்லை என அறிந்த செல்வம் கருப்பையாவைக் கூப்பிட்டு பினாமி சொத்தையும் பட்டுவாடாப் பணத்தையும் திருப்பித் தந்துவிடும்படி கூறுகிறான். தான் முழுமையாய்ச் செலவ்ழித்துவிட்டதாக எவ்வளவோ சொல்லியும் செல்வம் கேட்கவில்லை. ஒரு கட்டத்தில் கருப்பையா பணம் தர மறுத்துவிடுகிறான். அவனைப் போகச் சொல்லிவிட்டு அடியாட்களை வைத்து மரண அடி அடித்து குற்றுயிரும் குலை உயிருமாய்த் தூக்கி ஓடையோரம் எறிந்து விடுகிறான்.

இந்தக் கதை சினிமா பாணியில் அமைந்துள்ளது. மிக முக்கியமான புள்ளி எதுவென்றால் கந்துவட்டிக் கணக்குத்தான். கருப்பையாவுக்கு எல்லாமே தெரியும். பினாமிச் சொத்து, பட்டுவாடாச் செய்யாமல் ஒதுக்கி வைத்த கள்ளச் சொத்து; கட்சிக்கு வெற்றி கிட்டும் போது விட்டுவிடுவார்கள். தோல்வியென்றால் திருப்பிக் கேட்பார்கள்; தராவிட்டால் கொலை செய்யவும் அஞ்ச மாட்டார்கள். இதுதான் பிழைப்புக் கட்சிகளின் அரசியல் கள யதார்த்தம். அப்படி இருக்கும் போது அவன் தர மறுப்பதன் நோக்கம் கந்துவட்டி சார்ந்த உளவியல்தான். கந்துவட்டியால் பணப் பெருக்கம் கண்டவர்கள் அதைச் செலவழிக்கவோ நல்லதுக்குப் பயன்படுத்தவோ செய்யாமல் சேமிப்புக் கிடங்குக்குள் திணித்து வைப்பார்கள். இந்த உளவியலை அழகாகச் சித்தரிக்கிறது “கருப்பையாவின் கந்துவட்டிக் கணக்கு.”

இந்தத் தொகுப்பின் எல்லாக் கதைகள் பற்றியும் அணிந்துரையில் தமிழ்ச் செல்வன் சொல்லிவிட்டார். அதற்குமேல் பேசுவதற்கு எதுவும் இல்லை.

ஆனாலும் ஒன்றைச் சொல்லவேண்டும். “கெடாவெட்டு” என்னை அதிகன் கவர்ந்ததற்குக் காரணம் அந்த எளிய உழைப்பாளிப் பெண்களின் எழுச்சிதான். கணவன்களின் கயமைத் தனத்தை எதிர்க்கும் அந்தக் குணம் மகத்தானது. படிப்பறிவில்லாத அவர்கள் ஆண்களுக்குப் பாடம் கற்பிக்க வேண்டுமென்றால் அவர்களைப் போலவே பகடி செய்யவேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள், கணவனைப் போலவே மனைவியரும் குடித்துக் கும்மாளம் அடிக்கிறார்கள். ஆண்களைப் போலவே இவர்களும் செய்தால் இருவருக்கும் என்ன வித்தியாசம் என்ற கேள்வியைத் தவிர்க்க முடியாதுதான்.

ஆணின் அக்கிரமத்துக்கு எதிர் அக்கிரமம் செய்தால் ஒரு தீர்வை நோக்கி இழுத்துச் செல்ல முடியும். பெண்களின் எழுச்சி எந்த வகையிலானதாய் இருந்தாலும் இன்றைய சமூகப் பண்பாட்டுத் தளத்தில் அது ஏற்கப்பட வேண்டிய கருதுகோளே. சமன் குலைந்த வாழ்வைச் சமன்படுத்த ஆயிரம் ஆயிரம் தத்துவங்கள் உலக அரங்கில் உலவிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்றாக இந்தக் கெடாவெட்டு நாயகிகளின் குரலும் இருந்துவிட்டுப் போகட்டுமே.

“உன்னை அடித்தால் நீயும் அடி” என்றார் சீனிவாசராவ். இது ஜாதீயப் போராட்ட்த்தின் எதிர்வினை மட்டுமல்ல; குடும்பநிலைப் போராட்டத்தின் எதிர்வினையும்தான். இந்தக் கதை சமுதாயத்தை அடுத்த கட்டத்துக்குக் கடத்தும் பரிணாமக் கடப்பாட்டை உட்கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல.

முகாமியின் பெரும்பாலான படைப்புகள் இன்றைய கட்சி அரசியல் ராஜபாட்டையில் நடைபோட யத்தனிக்கின்றன. தமிழ்ச்செல்வன் சொல்வது போல அவை காலத்தின் தேவையாய் இருக்கின்றன. ஆனாலும் கலா ரசனையோடும் பூடகத் தன்மையோடும் கூறும் போதுதான் வாசக மனசைப் பெரிதும் ஈர்க்கும்.

சமீபத்தில் நான் வாசித்த ஒரு பதிவை இங்கே குறிப்பிட வேண்டும். ‘”ஊரெல்லாம் உலகெல்லாம் தீபங்கள் எரிந்துகொண்டிருக்கின்றன. மின் ஒளி அணைந்து விண்ணெல்லாம் மண்ணெல்லாம் இருள் கவ்வியது. எங்கிருந்தோ கடமுடாவெனச் சத்தம்! நாலாதிசைகளிலும் பேய்க் கூட்டம் பதறிப் பதறி ஓடுகிறது. அங்கங்கே வெடிச் சத்தம் வேறு. இவற்றைக் கண்டு பயந்த மனிதக் கூட்டம் தீபத்தை அணைக்க மறந்து வீட்டுக்குள் முடங்கியது. காலையில் எழுந்து பயந்தபடி வெளியில் எட்டிப் பார்க்கிறாள் குடும்பத் தலைவி. ஐந்து வீடு தள்ளி ஒரு வீட்டைத் தகரச்சாய்புப் போட்டு மறைத்துக் கொண்டிருந்தார்கள் ஊழியர்கள். விசாரித்த போது அந்த வீட்டில் ஒருவருக்குக் கொரோனாவாம்.

அன்றைய செய்தித் தாளின் வந்த முக்கியச் செய்தி.- பத்து நிமிட தீபம் ஏற்றியதில் மின் வாரியத்துக்குப் பலகோடி நட்டம். மின் இயக்கத்தின் எல்லாத் தேவைகளும் நிறுத்தப் பட்டதால் ரத்தம் உறைந்த நரம்பு மண்டலமாய் மின் வழித் தடங்கள் செயலிழந்தன சில இடங்களில் பலத்த சத்தத்தோடு மின்பாதைகள் வெடித்துச் சிதறின..”

இந்தப் பத்தியும் கூட அரசியல்தான் பேசுகிறது.