nool vimarsanam : 'The Freedom Circus' -by ko.ramakrishnan நூல்விமர்சனம் : 'The Freedom Circus' - கொ.ராமகிருஷ்ணன்

நூல்விமர்சனம் : ‘The Freedom Circus’ – கொ.ராமகிருஷ்ணன்

யூதர்களை அழிக்கும் நாஜிக்களின் தொடர்ந்த இனவெறிப் படுகொலைகளாலும்,இரண்டாம் உலகப் போரினாலும் பாதிக்கப்பட்ட ஒரு யூத குடும்பத்தின், மரணத்திற்கெதிரான போராட்டத்தின் விளைவுகளை, உணர்ச்சிப்பூர்வமாக காட்சிப்படுத்துகிறது 'The Freedom Circus' என்ற இந்த ஆங்கில நூல். கதையின் கதை போலந்தின் வார்ஸாவில், செருப்பு தைக்கும்…
நூல் விமர்சனம்: இரா. நாறும்பூநாதனின் யானைச் சொப்பனம் – விஜிரவி

நூல் விமர்சனம்: இரா. நாறும்பூநாதனின் யானைச் சொப்பனம் – விஜிரவி




திருநெல்வேலி என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது தாமிரபரணி ஆறு, பாரதி மணிமண்டபம், இருட்டுக்கடை அல்வா போன்ற பொதுவான சில விஷயங்களே… அதைத் தாண்டி நெல்லையின் வரலாற்றுச்சின்னங்கள், வரலாற்று மனிதர்கள் போன்ற அடிப்படைத் தகவல்களை முகநூலில் எழுத்தாளர் நாறும்பூநாதன் அவர்கள் எழுதியதை ‘’யானைச் சொப்பனம்’’ என்ற நூலாக ஆக்கியிருக்கிறார்கள் நூல்வனம் பதிப்பகத்தார். மிக எளிய விஷயங்களை கூட கட்டுரையாக்கி இருப்பது சுவாரஸ்யம் தருகிறது. நாம் தினமும் உபயோகிக்கும் ஊக்கு, மருதாணி, தலைக்கு தேய்க்கும் சீயக்காய், வாழ்த்து அட்டைகள், பிள்ளையார் எறும்பு, பவுண்டன் பேனா, பந்திசாப்பாடு போன்றவற்றை சில கட்டுரைகளில் பாடுபொருளாக்கியிருக்கிறார் ஆசிரியர். புதுமைப்பித்தனைப் பற்றி அறியாத பல விஷயங்கள், ஜோல்னா பையில் அம்சங்கள் என சுவாராயம் கூட்டுகிறது புத்தகம்.

சில கட்டுரைகள் சிறுகதை வடிவில் அமைந்திருப்பது சிறப்பு. தமிழ் வார இதழ்களில் வெளிவரும் தொடர் கதைகளை அழகாக பைண்டு செய்து வைத்து ஒரு நூலகம் போல உருவாக்கி, கேட்பவர்களுக்கு படிக்கத் தந்து, ‘’புத்தகம் படிக்கப் படிக்கத்தான் உயிர்பெறும். வெறுமனே அலமாரியில் இருந்தால் உயிரற்று தான் இருக்கும். ஒவ்வொரு முறை படிக்கும்போதும் எழுதிய ஆசிரியரும் உயிர் பெறுவார்’’ என்று சொல்லும் பாடலிங்கம் அண்ணாச்சி ஓர் அழகிய கதாபாத்திரமாக மிளிர்கிறார் இந்த புத்தகத்தில் மட்டுமல்ல…. நிஜ வாழ்விலும் கூடத்தான். அதிலும் புத்தகத்தை திருப்பித் தரும் வாசகர்களிடம் அதிலிருந்து சில கேள்விகளை கேட்பார் என்ற தகவலும் சுவாரஸ்யம் கூட்டுகிறது.

தன் கணவன் ஆசை ஆசையாய் வாங்கி போட்ட நான்கு பவுன் தங்க நகைகளை வங்கியில் அடகு வைத்து மீட்க முடியாமல், அது ஏலத்துக்கு வரும்போது ‘’ஒரே ஒரு தடவ அந்த வளையலை கண்ணுல காட்டுங்க… தொட்டுப் பாத்துக்குறேன். அதை என்னால மீட்க முடியாது. ஆனால் அதைப் பார்க்கிறப்போ என்னுடைய செத்துப்போன புருஷனின் ஆசை முகம் அதுல தெரியும்’’ என்று சொல்லும் போது அங்கயற்கண்ணி யோடு சேர்ந்து நமது கண்களும் கலங்கும். ஒரு அருமையான சிறுகதையை படைத்திருக்கிறார்.

அதைப்போல நிஜ சம்பவங்களை வைத்து எழுதப்பட்ட ‘’ஒரு இந்திய குடிமகனின் கதை’’யும் தரமான ஒரு சிறுகதை என்பதில் ஆச்சரியமில்லை. கதை சொல்லியும் அந்த ரகம் தான். கேரளா எழுத்தாளர்களுக்கு அம்மண்ணில் கிடைக்கும் மரியாதையும், வரவேற்பும் தமிழ் எழுத்தாளர்களுக்கு இங்கு இல்லை என்ற ஏக்கத்தை ஒரு கட்டுரையில் வெளிப்படுத்தியிருக்கிறார். கி ராஜநாராயணனின் புகழ்பெற்ற சிறுகதையான ‘’கதவு’’, கோவில்பட்டி, நாச்சியார்புரம் பகுதியை சேர்ந்த ரங்கசாமி வீட்டில் நடந்த ஜப்தி சம்பவத்தின் அடிப்படையில் அமைந்தது என்கிற விஷயமும் தெரிய வருகிறது.

நெல்லையின் பெருமிதமாய் வாழ்ந்து, பலரால் அறியப்படாமலேயே மறைந்து போன தொல்லியல் ஆய்வாளர் செந்தில் சிவகுமாரன், அயோத்திதாச பண்டிதர், ஆப்ரஹாம் பண்டிதர், பேராசிரியர் டேவிட் பாக்கியமுத்து பற்றிய ஆசிரியரின் ஆதங்கம் சுமந்து சில கட்டுரைகள். எட்டயபுரத்தின் அருகே பிதப்புரம் கிராமத்தில் மகாகவி பாரதியின் தந்தை சின்னச்சாமி ஐயரால் ஒரு நூற்பாலை கட்டத் திட்டமிடப்பட்டு, எட்டயபுரம் மன்னரால் ஆதரவு அளிக்கப்பட்டு, கட்டிட வேலையும் ஆரம்பிக்கப்பட்டு, ஆங்கிலேய அரசால் தடுக்கப்பட்ட வரலாற்றை ‘’ வெள்ளையனை எதிர்க்க வித்தூன்றிய இடம் ‘’ கட்டுரையில் காண முடிகிறது. நொடித்துப் போன தன் தந்தையை எண்ணி,

‘’ ஈங்கு இதற்கிடை எந்தை பெருந்துயர்
எய்தி நின்றனன் தீய வறுமையான்;
ஓங்கி நின்ற பெரும்செல்வம் யாவையும்
ஊணர் செய்த சதியில் இழந்தனன்’’

என அந்த மகாகவி மனம் நொந்து பாடுகிறான். வறிய நிலைக்கு குடும்பம் செல்ல, படிப்பைக் கூட தொடர முடியாமல் உள்ளம் வெதும்பி,

‘’எந்த மார்க்கமும் தோற்றிலது: என்செய்வேன்
ஏன் பிறந்தனன் இத்துயர் நாட்டிலே’’
என்ற பாரதி தன் இளம் வயதிலேயே ஆங்கிலேயரை விஷம் போல வெறுத்தான். ஒருவேளை நூற்பாலை துவக்கப்பட்டு, பாரதியும் மேற்படிப்பு படித்திருந்தால், தமிழகத்திற்கு ஒரு கவிஞன் கிடைத்திருப்பான். ஆனால் உணர்ச்சி கொப்பளிக்கும் ஒரு தேசியக் கவி கிடைக்காமலேயே கூடப் போயிருக்கலாம் என்ற ஆசிரியரின் வரிகளின் யோசிக்க வைக்கின்றன.

மொத்தம் ஐம்பத்தி ஒன்பது கட்டுரைகள் இந்தப் புத்தகத்தில்.முகநூல் பதிவுகள் என்பதால் சிலது சிறியனவாகவும், சிலது பெரிதாகவும் இருக்கின்றன. நெல்லைத் தமிழில் வாசிப்புக்கு சுவை கூட்டி , நெல்லை வரலாற்றின் ஆவணங்களை உள்ளடக்கிய படைப்பு இது.

நூல் : யானைச் சொப்பனம்
ஆசிரியர் ; இரா. நாறும்பூநாதன்,
பதிப்பகம்; நூல் வனம்
விலை; 120

Mustafavai Suttukondra Oriravu Book By Agaramuthalvan Bookreview By Yusuf Jakir நூல் விமர்சனம்: அகரமுதல்வனின் முஸ்தபாவைச் சுட்டுக்கொன்ற ஓரிரவு - மீ.யூசுப் ஜாகிர்

நூல் விமர்சனம்: அகரமுதல்வனின் முஸ்தபாவைச் சுட்டுக்கொன்ற ஓரிரவு – மீ.யூசுப் ஜாகிர்




தோழர் சிவராமன் அவர்களின் இல்லத்தில் உள்ள நூலகத்திலிருந்து பகிர்ந்து கொண்ட நூல். நான் வாசிக்கும் முதல் ஈழத்தமிழ் எழுத்தாளரின் புத்தகம் இது. மொத்தம் பத்து சிறுகதைகள். கதைகளுக்கு உள்ளே செல்வதற்கு முன் நாஞ்சில் நாடன் அவர்கள் பார்வையில் கதைகளைப்பற்றிய சிறு சுடரை மனதில் ஏற்றி வைத்துவிடுகிறார். கதைகளை படிக்க, படிக்க மனதில் செந்தழல் பற்றி எரிகிறது. ஈழத்தமிழ் முள்ளிவாய்க்கால் பிரச்சனைகளை அனைவருமே அறிந்திருப்போம். ஆனால் அந்த போராட்டகளத்தில், போர் சூழ்ந்த இடத்தில், கூட்டம் கூட்டமாக அடைத்து வைக்கப்பட்டு இருந்த முகாம்களில் மரணத்தை எந்நேரமும் எதிர்பார்த்து இருக்கும் நபர்களின் அருகில் சென்று அதன் கொடூரமுகம் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளவேண்டுமானால் நூலை கட்டாயம் வாசியுங்கள்.

கண்களை மூடியதும் உறக்கம் வரும் நமக்கும், கனவில் கூட மரணம் கண்டு அதிர்ந்து எழும் அவர்களுக்கும் இடையேயான வலிகளையும்,நம் சுதந்திரத்தையும் ஒப்பிட்டு பார்த்து கொள்ளலாம்.

முதல் கதை “மரணத்தின் சுற்றிவளைப்பு” காதல் மனைவி குழந்தை உண்டாகி இருக்க, அவளை பிரிந்து ஏதோ ஒரு முகாமில் ராணுவத்திடம் சிக்கி பல சித்திரவதைகளை அனுபவிக்கும் கணவனின் காதல், வலி, பிள்ளையின் பெயராவது விடுதலையாக காதில் விழாதா என்று ஏக்கத்துடனே மரணித்துக்கொண்டிருக்கும் சாபத்தை கதையாக எழுதி இருக்கிறார். கதையையே கவிதையாக்கி இருக்கிறார்.

ஒவ்வொரு கதையையும் படித்து முடித்தபின் மனதின் விசும்பலை ஆசுவாசப்படுத்திக்கொண்டு தான் அடுத்த கதைக்குள் பயணிக்க வேண்டும். இல்லையேல் கடல் கரை தாண்டுவதை போல, கண்ணீரும் கன்னம் தாண்டும்.

“திருவளர் ஞானசம்பந்தன்” சிறுகதையில் எங்கிருந்தோ வலுக்கட்டாயமாக இழுத்துவந்து முகாம்களில் ஒன்றாக வாழும் மக்களுக்கே இடையே இருக்கும் சண்டைகள், பாசங்கள் பற்றிய கதை. வாழ்வியலை இழந்து நிற்கும் ஒவ்வொருவருக்கும் ஆறுதலாக இன்னொரு உறவு, தொப்புள் கொடி சொந்தமில்லாமல் இருந்தாலும், உணர்வுகளால் நிரம்பத்தரும் அதிசயம் இயல்பாகவே வருகிறது என்பதை உணர்த்துகிறது.

அனைத்து கதைகளையும் பற்றி முழுவதுமாய் எழுதிவிட ஆசை தான். ஆனால் ஒரு படைப்பின் ருசியை நீங்களே வாசித்து பார்த்து, அது தரும் காதலையும், கண்ணீரையும், வலியையும் அனுபவித்து பாருங்கள். சில கதைகளுக்குள் நான் நுழைந்து விட, ஏதோவொரு முகாமில் நானும் சிக்கி தவிக்கும் வேதனையை உணரத்தொடங்கினேன். அடுத்த நொடி மரணம் சூழ்வதாக இருந்தால் நான் எதைப்பற்றி யோசிப்பேன்.

“கிழவி” சிறுகதையில் தாய்,தந்தை இழந்த தனது பேத்தியை முகாமின் கொடூரத்தில் இருந்து தப்பிக்க வைக்க திட்டமிட்டு இருவரும் தப்பி செல்ல ஆயத்தப்படும் நொடிகளில் நம்மையும் அறியாமல் பதற்றம் தொற்றிக்கொள்கிறது.

“முஸ்தபாவை சுட்டுக்கொன்ற ஓரிரவு” கதையில் இந்த அவலங்கள் மனிதர்களுக்கு மட்டும் நிகழவில்லை. மனிதர்களோடு இருந்த விலங்குகளுக்கும் நிகழ்ந்த அவலத்தை குருதிக்கறைகளின் தடத்தோடு சொல்லி இருக்கிறார்.

“பிரேதங்கள் களைத்து அழுகின்றன” சிறுகதையில் மரணத்தின் விளிம்பில் இருந்தாலும் ஒரு நிச்சயமில்லாத வாழ்க்கையை போரின் குண்டுகளில் இருந்து தப்பி வாழும் உறவுகள் வாழ்ந்தாலும், தன்னை பீடித்த நோயால் ஒன்றாய் தற்கொலை செய்து கொள்ளும் போது, மனதின் விசும்பல்களை ஆற்றுப்படுத்த முடியவில்லை.

“பிட்டுப்பூசை, பெய்துகொண்டிருக்கும் மழை”சிறுகதைகள் போர்க்களத்தில் கூட காதல் துளிர்க்கும் என்பதையும், மரணம் நிச்சயம் என்னும் போதும் ஒன்றாய் சாகவேண்டும் என்று விரும்பும் இதயங்கள், மரணம் எந்த நொடியில் ஸ்பரிசித்தாலும் காதலால் அதை ஏற்றுக்கொள்ளவும் தயார்ப்படுத்திக்கொள்ளும் போது, நம்முடைய மரணத்தை நினைத்துப்பார்க்காமல் இருக்கமுடியாது.

கதைகள் எல்லாமே மரணத்தின் ஓலங்களையும், குண்டு சத்தங்களையும், குருதி படிந்த நாட்டின் காற்றில் கூட குருதி வாசம் வீசும் என்பதாக மரணத்தையும், அதனை நேசிக்கும் மக்களின் துயரத்தையும் அனுபவித்து, கதையாக்கி இருக்கிறார் எழுத்தாளர் அகரமுதல்வன். கதைகளை படித்து முடித்தபின் நம் கைகளும், சிந்தனைகளும் எவ்வளவு சுதந்திரமாக இருக்கிறது என்பதை உணரும் போது அவை கதையாகவே இருந்தாலும் அப்படி நிஜத்தில் இருப்பவர்களுக்காக இறைவனிடம் கையேந்தி பிரார்த்திக்க மனம் துடிக்கிறது.

நூல்: முஸ்தபாவைச் சுட்டுக்கொன்ற ஓரிரவு
ஆசிரியர்: அகரமுதல்வன்
பக்கங்கள்: 111
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ்.