குறும்பட விமர்சனம்: OBSESSED – பாரதிசந்திரன்
எப்பத்தான் இதையெல்லாம் விடப் போறீங்களோ?
– பாரதிசந்திரன்

கொரானா காலத்தில், ஒரு சராசரி குடும்பத்தின் நடவடிக்கைகளை அச்சுப் பிறழாமல் ஒளிந்திருந்து படம் எடுத்து இருக்கிறது இயக்குநர் நாதனின் கேமரா.
திரைக்கதை எழுதி நடிக்க வைத்து, வெட்டி ஒட்டிய வேலை அல்ல இது. மேடை நிகழ்ச்சி ஒன்றை, திருமண நிகழ்வு ஒன்றை, எப்படிக் கேமராக்கள் வலித்துத் துடைத்துப் பதிவு செய்யுமோ அது போல், மன உறுத்தலின் ஒட்டுமொத்த உணர்வுகளையும் இக்குறும்படம் அப்படியே பதிவு செய்துள்ளது.
தூரமாய் அல்லது மேலிருந்து வாழ்வைப் பெரும்பாலும் பலரும் அணுகுவதில்லை. உள்ளே கிடந்து உழன்று, சிலநேரம் மகிழ்ந்து, வெறுத்து, சிலாகித்து வாழ்வதாக ஒன்றையே பலரும் அணுகுகின்றனர். பூரணத்துவம் அறிவை உணர்ந்திடச் செய்வதிலிருந்து விலகியே இருக்கும் என்பது தான் தத்துவார்த்தமான உண்மை.
”பயம்’, ’பாசம்’, இவை மனம் அணுகும் இரு கூறுகள். எங்கும் இவை இரண்டும் உலக ஜீவராசிகளிடம் நெருங்கி இணைபாதையில் தொடர்ந்து வந்து தொல்லைகளை உச்சத்திற்கே கொண்டு செல்லும் என்பதை வாழ்ந்து உணர்ந்தவர்கள் புரிந்து இருப்பார்கள்.
பிறர் மேல் ”பாசம்” மிகுவதாலேயே தவறு ஏற்பட்டு, அவர் பாதிப்பாரோ என்கிற ”பயம்” அதோடு எழுகிறது. பாசம் இல்லாத எவற்றின் துன்பமும் நம்மை ஒன்றும் செய்வதில்லை.
வாழ்க்கை என்னும் மிகப்பெரும் கடலின் ஆழத்தை அதை நீந்தியே ஆகவேண்டும் என்கிற எழுதப்படாத விதியை வாழ்ந்து துன்பம் ஏற்று வாழ்ந்து மடிகிறவர்கள் தான் இவ்வுலகத்தில் அதிகம் என்பதைக் குறும்படத்தின் கதாநாயகனும் ஏற்றுக்கொண்டு வாழ்க்கையை வாழ்ந்து காட்டியிருக்கிறார்.
குறும்படத்தின் கதை:
தலைவன், அவனது தாயார், மனைவி, மகன் மகள் என இரண்டு குழந்தைகள். இதுதான் குடும்பம். அப்பார்ட்மெண்ட் வாழ்க்கை. தன்னைச்சுற்றிக் கொரானாவால் இறந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் எனக் காற்றில் வரும் தொடர் செய்திகள்.
தொலைக்காட்சியைத் திறந்தால் நீலநிற மூட்டைகளாய் பிணங்களின் அணிவகுப்பு, மருத்துவர்களின் அதிபயங்கரப் பயமுறுத்தல்கள், சுடுகாட்டில் இடமின்மை என நீண்டு கொண்டே செல்லும் அச்சுறுத்தும் ஏவுகணைகள் நம் அனைவர் வீட்டிற்குள்ளும் வெடித்தன.
அரசாங்கத்தின் வழிநடத்தலில், பார்ப்பவையாவும் கொரானாபூதமாகவே இருந்தன. இதைத்தான் கதாநாயகன் அனுபவிக்கின்றான். வீட்டிற்குள் சிறை. யாரும் யாரையும் எதையும் தொடக்கூடாது. தொட்டால் உடனே கையைக் கழுவ வேண்டும்.
வீட்டின் கதவை யார் தட்டினாலும். பேசினாலும். அவர்கள் மூலம் நோய் நமக்கு வந்துவிடும் என்ற பேரச்சம். எனவே, கொடூரமான செயலாக அதைக் கருதுதல், அதற்கான முன்னேற்பாடுகள், பின்னேற்பாடுகள் எனப் பாதுகாப்பு வளையத்தைக் கொண்டு வருவது, என நடுக்கங்கள் ஒவ்வொன்றும் குறும்படத்திற்குள் கூறப்பட்டிருக்கின்றன.
பக்கத்து வீட்டிற்கு வந்த குரானா நம் வீட்டிற்குள்ளும் வந்துவிடும் என்கிற பயம். நோய் போய்விட்ட மேல் வீட்டு மாமா காலையில் கோவிலுக்குப் போய் வருகிறேன் என்று செல்லுதல், தொலைபேசியில் பேசிய மாமியிடம் பேசுதல், சோப்புக்குப் சோப்புப் போட்டுக் கழுவுதல், தண்ணீர் கேனைச் சுத்தம் செய்து, செய்து வைத்தல், கதவின் கைப்பிடியை மீண்டும் மீண்டும் கழுவுதல், வீட்டின் முன்புறக் காலடியை, கார்பெட்டைச் சுத்தம் செய்தல், காய்ச்சல் இருக்கிறதா எனப் பார்க்க வந்த அரசு ஊழியரிடம் கோபித்துக் கொள்ளுதல், மற்றும் சண்டை போடுதல் எனப் பயம் எதிலும் பயம். அதைவிட யாரையும் இயல்பாய் செயல்பட விடாமல் தடுத்தல் என்கிற பாசம்.
அடேயப்பா முழுநீளப்படம் போல் தோன்றுகிறது. படம் பார்த்து முடிக்கும் பொழுது ஒவ்வொருவருக்கும் நடந்து இருக்கும் நிகழ்வுகள் அவர்கள் மனதில் நீண்டு, வேறுவேறு சித்திரங்களையும் உணர்வுகளையும் படத்தோடு சேர்த்து நீட்டிக்க வைத்திருக்கின்றன.
ஆக, நாதன் அவர்களின் வெளிப்பாடு மட்டுமல்ல, இக்குறும்படத்தைப் பார்ப்பவர்கள் ஒவ்வொருவரின் வாழ்வில் நிகழ்ந்த அத்தனை அனுபவங்களும் வெளிப்பாடுகளும் படம் பார்க்கும் பொழுது அனைவருக்கும் அந்த அனுபவங்களோடு இக்குறும்படம் நீள்கிறது. இது ஒரு மாபெரும் சாதனைப் படம் தான். காட்சிகள் ஒவ்வொருவருக்கும் வேறு வேறு காட்சியாகியிருக்கின்றன.
படம் பார்ப்பவர்களின் அனுபவங்களும், காட்சி நீட்டிப்பும், நீள்சதுரமாகி படத்துடன் இணையும் பொழுது அவர்களின் வாழ்வியல் படமாகவும் இது மாறிவிடுகிறது. எனவே, இயக்குனர் நாதன் அவர்களின் படம் மட்டுமல்ல இது யார் இதைப் பார்க்கிறார்களோ அவர்களே இயக்குனராகவும் இருக்கின்ற ஒரு படம்.
உளவியல் வெளிப்பாடுகள்:
நுணுக்கமாக இரண்டு மூன்று இடங்களில் உளவியல் வெளிப்பாடுகள் காட்சிகளாக ஆக்கப்பட்டுள்ளன. சில நேரங்களில் நாமே நம் செயலைப் பார்த்து வெட்கப்படுவோம் அல்லது வேதனைப்படுவோம். இக்காரியத்தை நாம் சிறுபிள்ளை போல் செய்துள்ளோம் என்பதாக அந்தச் செயல் நடக்கும் பொழுதும் அல்லது அதற்குப் பிறகாவது நாம் உணர்வோம். இதைக் கதாநாயகனாக இயக்குனர் சில காட்சிகளில் தன் சிறுவயதுப் பிராந்தியத்தில் செய்வது போல மனதால் நினைத்துப் பார்ப்பது போல் காட்சி அமைத்துள்ளார். இது ஒரு உளவியல் பார்வை ஆகிறது.
இரண்டு குழந்தைகள் தான் இவருக்கு. இவரின் இளம் வயது போன்ற ஒரு கதாபாத்திரம் மூன்று இடங்களில் வந்துவிட்டுச் செல்லுகிறது. அது சிறு பிள்ளையாக நடந்து கொள்கிறோம் என்கிற இவரின் எண்ணத்தை வெளிப்படுத்தும் காட்சியாக அமைந்திருக்கிறது. இவர் அமர்ந்திருக்கும் இருக்கையில் திடீரென்று இவரைப் போன்ற ஒரு பையன் அமர்ந்து கொண்டு நெற்றியைத் தடவி கொண்டு அமர்ந்திருப்பதைக் கதாநாயகனின் தாய் ஒரு பார்வை பார்த்து விட்டுச் செல்லுவார்.”என்ன இது சின்னப் புள்ள தனமா இருக்கு”என்பதைப் போல் அவர் மனநிலை. அதையும் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.
அதேபோல் படத்தின் முடிவில், அப்பாவிடம் பையன் ”தரையில் கையூன்றிய அதை நினைவு படுத்திவிட்டேன். சாரி அப்பா, இப்படி உங்களை என்னால பார்க்க முடியல, நீங்க வெளில போயிட்டு வாங்கப்பா” எனக் கெஞ்சுவான் மனம்வாடி அவன் கூறும் வார்த்தைகள் உளவியலின் மிகச்சரியான வெளிப்பாட்டு வார்த்தைகளாகும். தந்தையை இப்படிக் காண முடியாத ஒரு குழந்தையின் இயக்கத்தை ஏக்கத்தை இந்த இடத்தில் நம்மால் உணர முடிகிறது.
தன் அண்ணனை மட்டும் அப்பா கட்டிப்பிடித்து நிற்கிறார். தன்னைக் கட்டிப் பிடிக்கவில்லை எனக் கோபம் கொண்டு தங்கை ஓடுவது, அவள் மனநிலையைப் பாசத்திற்காக ஏங்கும் தன் தந்தை தன்னை அணைக்க வேண்டும் என்ற ஏக்கத்தை மிக அழகாக அந்தக் காட்சி நமக்குத் தருகிறது. அவளைச் சமாதானப்படுத்த அவள் பின்னாலே ஓடுவதும் அவளை அழைப்பதும், உணர்வுகளின் ஒட்டுமொத்த வெளிப்பாடுகளாக அந்தக் காட்சிகள் நம் மனதை வாட்டி எடுக்கின்றன.
அப்பப்பா என்ன உணர்வுப்பெருக்கு இந்த இடங்களில். ”எப்பத்தான் இதையெல்லாம் விடப் போறீங்களோ” என்று கேட்கும் மனைவிக்கு, ”உங்க மேல இருக்கிற பாசத்தை விட்டுடேண்ணா இதை எல்லாம் போட்டுடுவேன். எல்லார் மேலேயும் இருக்கிற பாசம் தான் என்னை இப்படி இருக்கச் செய்கிறது”என்னும் வசனம் ஒன்றே போதும் தந்தையின் கடமை உணர்வையும், குடும்பத்தின் மேல் அவர் கொண்ட பாசத்தையும் வெகுவாக விளக்கிச் செல்கிறது.
நடிப்பில் யாரும் சோடை போகவில்லை. இடையிடையே கர்நாடக சங்கீதம் பாடும் பெண் குழந்தை, நடனத்தைப் பழகும் பையன். இவர்களின் திறமையையும் கதையோடு வெளிப்படுத்தி உள்ளார் இயக்குனர். தந்தையின் அரவணைப்பை விரும்பும் மகளிடம் வெறுப்பைத் தந்தை காட்ட, தாயிடம் அக்குழந்தை செல்லுகிறது. தாய் அந்தப் பெண் குழந்தையைக் கட்டி அணைக்கக் கூடாது என்கிறார் தந்தை. இருந்தாலும் தாய், ”அவள் என்ன செய்வாள் நான் கட்டிப்பிடிப்பேன்” என்று கூறுவாள். அனைத்து நபர்களும் மிகையில்லாமல் இயல்பாய் இதுபோன்ற காட்சிகளில் அற்புதமாக நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். சில இடங்களில் மட்டும் இசை அற்புதமான மனநிலையை நெஞ்சில் உற்பத்தி செய்கிறது. எடிட்டிங் சரியாகக் கதையைப் பார்வையாளனுக்குத் தருகிறது.
ஒரு குடும்பமே ஒட்டுமொத்தக் கலைஞர்களாக வடிவம் எடுத்துள்ளனர் இக்குறும்படம் மூலமாக.
நிழலோவியம் கூடக் கவிதை பேசியிருக்கிறது. கணினி கூடக் கொரானா பாடம் எடுத்து இருக்கிறது. எல்லாவற்றையும் பேச வைத்திருக்கிற மாயாஜாலம் இக்குறும்படத்தில் நிகழ்ந்திருக்கிறது.
மொத்தத்தில் இதைவிடச் சிறந்த ஆவணப்படமான கலைப்படம் இக்காலத்தில் வேறொன்றும் இருக்காது என்பதை அடித்துச் சொல்லலாம்.
படக்குழு:
எழுத்து
ஒளிப்பதிவு
எடிட்டிங்
ஒலி வடிவமைப்பு
மற்றும்
இயக்கம்
நாதன். ஜி
இக்குறும்படம் குறித்த விமர்சனம் ஒன்று:
இந்தப் படம் இறந்த காலத்தில் கிடைத்த அதே உணர்வை மீண்டும் கிளறிவிட்டது. ஒரு நல்ல படம் அதைத்தான் செய்யும். நாதன் ஜி துல்லியமான காட்சி அமைப்புகள் மூலமாக கதையின் உள்ளீடு பார்வையாளரைச் சென்றடையும் படி உருவாக்கியிருக்கிறார். பொதுவாக புகைப்படக்காரனின் உளவியல் அசாதாரணமானது. சாதாரணமாக பாம்பினைப் பார்த்தால் பயத்தில் வெலவெலத்துப் போகிற ஒரு புகைப்படக்காரன், கையில் கேமராவோடு இருந்தால் நெருங்கி படமெடுக்கத் துவங்கிவிடுவான். அவனுக்குப் பயம் என்ற உணர்வே மறந்து போய்விடும்.
கொரோனா செய்திகளால் அரண்டு போயிருக்கும் இந்தப் படத்தின் நாயகனும் ஒரு புகைப்படக்காரனே! கேமராவிற்கு முன்னால் சானிடைசர் நிற்க முடியுமா,என்ன? தெளிவான, சுருக்கமான படைப்பு. வாழ்த்துக்கள் நாதன் ஜி”
இக்குறும்படத்தைக் காண: https://www.youtube.com/watch?v=DzDEkxzwOvg எனும் பக்கத்திற்குச் செல்லவும்.
பாரதிசந்திரன்.
9283275782
