வேலை கவிதை – மு.அழகர்சாமி

வேலை கவிதை – மு.அழகர்சாமி




அண்டை வீட்டுச்
சேவலையும்
அசந்து படுத்திருக்கும்
மனைவியையும்
எழுப்பிவிட்டு.

அவசர கதியில்
தொலைதூர
அலுவலகப்பணிக்காக
பயணம் தொடர்கிறது
ஒவ்வொருநாளும்..

எங்க ஊருக்கு வரும்
முதல் பேருந்தை பிடித்தால்தான்
அலுவலகத்திற்குப்
பத்து மணிக்குப்

போகமுடியும்..

அதையும் விட்டுவிட்டு
மூன்று நாள் அனுமதி போட்டு
அரைநாள் விடுப்பையும்
இழந்தது உண்டு..

பிள்ளைகள்
தூங்கும் போது
கிளம்பி வருவதும்..
இரவில் அவர்கள்
தூங்கும் போது
நான் செல்வதுமான
வாழ்க்கை தொடர்கிறது..

நிறுத்தம் வந்ததும்
பேருந்தை விட்டு இறங்கி
ஐந்தாவது தளத்திற்கு
இருக்கைக்கு வந்தால்
அதற்குள்
நிரம்பி வழியும்
அலுவலக மின்னஞ்சல்
அறிக்கை கேட்டு

அனைவருக்கும் வணக்கம்
சொல்லி..கேட்ட அறிக்கைக்கு
பதில் கொடுத்துக்கொண்டே
இருந்தால்..

திறமைக்கு
சவால் விடுவதாய்
அடுத்தடுத்து
தலைமை இடத்திலிருந்து
வந்து கொண்டே
இருக்கும்..

நம்மை
பரபரப்பிலேயே!
வைத்துக்கொள்வதில்
அவர்களுக்கு
அவ்வளவு
ப்பிரியம்..

மதிய உணவும்
எனக்கு
இன்னொரு
அறிக்கையாகவே!
தெரியும்..

பகல்நேரங்களை
முழுவதுமாக திண்றுவிடும்
முழுநேர அறிக்கைகள்

அலுவலகம் முடிந்தால்
அர்ஜுனனுக்கு தெரியும்
பறவையைப்போல
வீடு தெரியும்..

இடைநில்லாப் பேருந்தாய்
வீடு சென்றால்..
அண்டை வீட்டு
சேவலும் மீண்டும்
தூங்கிடும் …

என்
மனைவி
பிள்ளைகள்
மட்டும்
விதிவிலக்கா???….

மு.அழகர்சாமி
கடமலைக்குண்டு

முபாரக் கவிதைகள்

முபாரக் கவிதைகள்




வேலைமுடிந்து
வீடு திரும்புமென்னிடம்
கேட்பதற்கென எத்தனையோ
கேள்விகள் வைத்திருக்கிறான் மகன்,
என்ன வேலை பார்க்குறிங்க
எங்க வேலை பார்க்குறிங்க,
உங்க அலுவலகத்தில்
எத்தனை பேர் வேலை பாக்குறாங்க,
எவ்வளவு சம்பளம் வாங்குறிங்க
வேலை சுலபமாகயிருக்குமா
கடினமாயிருக்குமா,
என நீண்டு கொண்டேயிருக்கின்றன
மகனின் கேள்விகள்,
அவன் ஊருக்குப்போன
நாளொன்றில்
கேள்வி கேட்க யாருமில்லாத போது
பதிலே சொல்ல முடியாத
கேள்வியாய்ப் பயமுறுத்துகிறது… என் தனிமை!

*******************

அழகாக இருப்பதால்
அனுதினமும்
தனது புகைப்படங்களை
முகநூலில் பதிவிடும்
அவனின் புகைப்படங்களைத் தற்போது
பார்க்க முடிவதில்லை…
இப்போது
அவன் மனம் அழகாகியிருக்கலாம்!
– மு.முபாரக்

காணாமல் போன புன்னகை சிறுகதை – சக்தி ராணி

காணாமல் போன புன்னகை சிறுகதை – சக்தி ராணி




‘லேட் ஆச்சே ஆபிஸ் போகணுமே…’ என்று அவசர அவசரமாகப் படுக்கையில் இருந்து எழுந்தான் ராம்.

அலாரம் வைத்த கைபேசியைத் தேடினான். படுக்கையில் இல்லை. அதைத் தேடுவதற்கும் அவனுக்கு நேரம் இல்லை. பல் துலக்கிக் கொண்டே பாத்ரூமிற்குள் ஓடினான்.

.” பிரியா…டவல் எடுத்துட்டு வா” என்று குரல் கொடுக்க, “வருகிறேன்…வருகிறேன்” என்று மெதுவாக வந்தாள்.

“லேட்…லேட்….எல்லாம் லேட்…ஏன்டி இப்படி பண்ற, சீக்கிரம் எழுப்பியிருந்தா நான் இப்படி ஓட வேண்டியிருக்குமா?” என்றான்.

“உங்களுக்குத் தான் உங்க கைப்பேசி இருக்கே அப்புறம் என்ன நான் ? அது தான் எப்போதும் உங்களோட பேசிக்கிட்டே இருக்கும்”.

“அதைத் தான்டி காணோம்…ரவிக்கு போன் பண்ணி கார் கொண்டு வரச் சொல்லணும். அப்போ தான் ஆபிஸ்க்கு போக முடியும்…மீட்டிங் வேற கரெக்ட் ஆ ஆரம்பிச்சுருவாங்க” என்றபடி தேடத் துவங்கினான்.

“எங்கு தேடியும் கைப்பேசி காணவில்லை. கார் ஸ்டாண்ட்ல போய் பார்த்துக்கிறேன் கார் இருக்குதானு…ம்ம்..” என்று ஓட ஆரம்பித்தான்.

சுட்டெரிக்கும் வெயிலில் வேகமாக ஓடினான். வியர்வை சட்டையை நனைத்தது. எதையும் பொருட்படுத்தவில்லை. காரில் ஏறி, ‘அம்பத்தூர் செல்ல வேண்டும்’ என்றான்.

டிரைவரும், ‘சரி சார்!’ என்று புறப்பட்டார். கொஞ்ச தூரம் பயணித்ததுமே போக்குவரத்து நெரிசலில் கார் புகுந்தது.

“என்ன சார்… இப்படி நெரிசல்ல போறீங்க. வேற வழி இல்லையா…நான் சீக்கிரமா போகணும்” என்றான்.

“எல்லா பாதையும் இப்படி தான் சார் இருக்கு. இருங்க சார்… சீக்கிரம் போய்டலாம்” என்றார் அவர்.

கோபத்தின் உச்சியில் இருந்தாலும் மனதின் படபடப்பு அடங்கவே இல்லை… ‘போக்குவரத்து நெரிசலும் குறையவில்லை. கையில் போன் இல்லையே… எந்த தகவலும் சொல்லவும் முடியல. என்ன நடக்குனு தெரிஞ்சுக்கவும் முடியல…’ என முணுமுணுத்துக்கொண்டே அமர்ந்திருந்தான்.

ஓரளவு நெரிசல் குறைய…ஆபிஸ் வந்தடைந்தான். காருக்குப் பணம் கொடுத்துவிட்டு வேக வேகமாக ஓடினான். அவன் கதவைத் திறக்கும் நேரம் மீட்டிங் முடிந்திருந்தது.

‘ஐயோ…’ எனத் தலையில் கை வைத்தவனாய் தரையில் அமர்ந்தான்…மிகுந்த கோபத்துடன் அலுவலக உரிமையாளர் “அப்படியே…வீட்டிற்கு போய்விடு.. ஒரு வேலை கொடுத்தா அதைப் பண்ண வழியில்லை” என்று கடிந்து கொண்டார்.

எவ்வளவோ மன்னிப்பு கேட்டும் உரிமையாளர் மனம் கொஞ்சமும் இறங்கவில்லை…மனம் நொந்தவனாய் வெளியில் வருகிறான்.

கைப்பேசி இல்லாமல் எவ்வளவு நஷ்டம் என நினைத்துக்கொண்டே நடக்க ஆரம்பிக்கிறான். கஷ்டம்…அவமானம் மனதிற்குள் இருந்தாலும் தனிமையில் அவனை உணர அவனுக்கே நேரம் கிடைத்தது போல் உணர்கிறான்.

லேசான புன்னகை…அருகேயிருக்கும் டீ கடையில் அமர்ந்து டீ குடிக்கிறான்…அங்குள்ள தொலைக்காட்சியில் கிரிக்கெட் ஒளிபரப்பப்பட்டிருக்கிறது.

தோனியின் இரசிகனாய் சிறுவயதில் பார்ப்பது போல் உணர்வுப் பூர்வமாய் பார்க்கத் துவங்குகிறான்.

கைப்பேசியில் அலுவல் நேரங்களில் மறைத்து மறைத்து ஸ்கோர் மட்டும் தான் பார்த்தோம் நேத்து வரை…இன்னைக்கு இப்படி பார்க்கமுடியுது என்று எண்ணியவாறே புன்னகைத்தான்.

மேட்ச் முழுவதும் பார்த்துவிட்டு சிறுவன் போல துள்ளிக்குதித்து வீட்டிற்கு வந்தான்.

“என்னங்க அதுக்குள்ள ஆபிஸ் முடிஞ்சா…?” என்று மனைவி கேட்க நடந்ததைக் கூறுகிறான்.

நம்மை எதுவும் குற்றம் சொல்வாரோ என்ற எண்ணத்தில் பிரியா அவனைப் பார்க்க… அதைப் புரிந்து கொண்டவனாய்… வா.. நாம சேர்ந்து சமைக்கலாம். காய்கறிலாம் நானே கட் பண்றேன் என்று செய்ய ஆரம்பித்தான்…

ஆச்சர்யமாய்ப் பார்த்த பிரியா, “நீங்களா இது…முகம் கொடுத்து பேசுறதுக்கே நேரம் இல்லைன்னு சொல்வீங்க. இப்ப என்னனா , எனக்கு உதவிலாம் செய்றீங்க!” எனக் கேட்டாள்.

“எல்லாம் அப்படித்தான்” என்றான்.

இருவரும் புன்னகையும், உரையாடலுமாய் சமைத்துக் கொண்டிருக்கும் போது கைப்பேசியின் சிணுங்கல் எங்கிருந்தோ கேட்க வேகமாய்த் தேடி ஓடினான்.

உரிமையாளரின் அழைப்பு, மீண்டும் உடனே அலுவலகம் வா என்றழைக்க, “கிடைத்து விட்டது கைபேசி. என் புன்னகை தொலைந்து விட்டது” என புறப்பட்டான்.

– சக்தி ராணி

தங்க மீன் சிறுகதை – கவிதா ராம்குமார்

தங்க மீன் சிறுகதை – கவிதா ராம்குமார்




மாலை நேரம் ஆகாயத்தின் விளிம்பில் சிவப்பு சாயத்தை பதமாக வண்ணம் தீட்டிக் கொண்டிருந்த சூரியன் அஸ்தமித்து கொண்டிருந்தான்.

“மிஸ் மாலதி, யூ ஆர் அப்பாயின்டெட்”.

வேலை கிடைத்த செய்தி அவள் கண்களில் ஆனந்த மழை, மனதில் ஒரு நம்பிக்கை, ஏதோ சாதித்தது போல ஒரு உணர்வு.

“தி ஃப்யூச்சர்” என்ற அந்த அலுவலகம் கடற்கரையை பார்த்தபடியே அமைந்திருந்தது.

மிக பிரம்மாண்டமான அடுக்குமாடி கட்டிடம் அது. நீல நிறக் கண்ணாடிகளால் அந்த ஆகாயத்தின் சாயலாகவே தன்னை அடையாளம் காட்டிக் கொண்டது.

அலுவலகத்தின் நுழைவாயில் கதவுகளில் மயில் தோகை விரித்தபடி வரையப்பட்டிருந்த அந்த ஓவியம் அவளை வரவேற்கும் வண்ணமாய் வண்ணம் தீட்டப்பட்டிருந்தது … அவள் பாதங்களை சுமக்கும் அந்த தரைகள் பளிங்குபோல் பளபளப்பாக மின்னியது ,நவ நாகரீகத்தில் ஆன உடைகளை அணிந்திருந்தனர் அங்கிருந்த ஊழியர்கள், உள்புறம் ஆகவே மேலே செல்வதற்கான படிக்கட்டுகள் வளைவாக அமைக்கப்பட்டிருந்தது…..

பணியில் சேர்ந்தவர்களுக்கு முதலாளி அவர்களின் கரங்களால் அப்பாயின்மென்ட் லெட்டரை வழங்குவது அந்த அலுவலகத்தின் வழக்கமாக இருந்தது.

ஊழியர் ஒருவர் மாலதியை மேல் மாடியில் உள்ள அந்த சொகுசு அறையில் சிறிது நேரம் காத்திருக்கும்படி சொன்னார்.

நேரம் இரவு எட்டு மணி ஆனது, அவளும் காத்திருந்தாள்.

மின் விளக்கின் வெளிச்சம் அந்த அறை முழுக்க பரவி இருந்தது .

வெகு நேரமானதால் சற்று அவள் எழுந்து அந்த அறையின் ஜன்னல் அருகே சென்றாள்.

அவளது விரல் ஜன்னலில் இருந்த திரைச்சீலையை நகர்த்தியது…

இருள் நிறைந்த அந்த திசையில் கடல் அலைகளின் ஓசை அவள் காதுகளில் ஓயாமல் ஒளித்துக் கொண்டே இருந்தது.

சிறுவயதிலிருந்தே அவள் தந்தையின் முகத்தை பார்த்ததில்லை . அம்மாவின் வார்த்தைகளில் அப்பா என்றும் ஒரு ராஜாவாகக் காட்சியளிப்பார்.

அப்பா அரசாங்க ஊழியர் ,அவரின் ஓய்வூதியம் மூவாயிரத்தை தொட்டது இல்லை,இன்று இருக்கும் விலைவாசியால் பல குடும்பங்கள் கண்ணீரில் மிதக்கின்றன.

இருபத்தி ஐந்து வருடங்களாக அப்பாவின் பிரிவை தாங்க முடியாத சரஸ்வதி பாட்டி இந்த உலகத்தை பிரிந்து தற்போது மூன்று மாதங்கள் ஆகிறது .

மாலதிக்கு அவள் அம்மா மட்டும் தான் துணை உலகமும் கூட.

அவளைக் கடந்து சென்ற ஒவ்வொரு இரவுகளிலும் அவளுக்கு நினைவுக்கு வருவது சரஸ்வதி பாட்டியின் வார்த்தைகள் “உங்க அம்மா மகாலட்சுமி குடும்பத்தை கட்டுக்கோப்பா நடத்தி வந்தா , அவள ராணி மாதிரி பார்த்துகிட்டான் எம் பய. சந்தோஷமா இருந்தாங்க. நீ பிறந்த நேரம் எம் பய ராஜேந்திரன் என்ன விட்டுட்டு போயிட்டான் . துரதிர்ஷ்டசாலி உன்னோட அம்மா “என மாலதியின் பாட்டி அவளை திட்டாத நாட்களே கிடையாது.

வேலை கிடைத்த செய்தி அவளது உள்ளத்தில் ரணமாக இருந்த அந்த வார்த்தைகளுக்கு தற்காலிக மருந்தாக அமைந்தது.

அப்பா இருந்திருந்தால் அம்மாவை எப்படி பார்த்துக் கொள்வாரோ அதுபோல் நானும் அவர்களைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் நிறைந்திருந்தால்.

“கிரிக் “என்ற சத்தம் அறையின் கதவு திறக்கப்பட்டது, அவளும் திரும்பினாள் .

மகேஷ் சின்ன முதலாளி அனைவரையும் வசீகரிக்கும் அவனின் முகம். நல்ல உயரம், அவன் அணிந்திருந்த கோட் சூட்டுக்கு ஏத்த உடலமைப்பு.

அவளைக் கண்ணிமைக்காமல் பார்த்தபடி, “ஆர் யூ மாலதி” என கேட்டுக்கொண்டே அவனது இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

ஜன்னலின் கதவை மூடியவள், ” எஸ் ஐ அம் மாலதி “என கூறியபடி அவள் அமர்ந்திருந்த நாற்காலியின் பக்கத்தில் வந்து நின்றாள்.

“ப்ளீஸ் டேக் யுவர் சீட்” என அவன் கூற சிறு புன்னகையோடு தலையசைத்தவளின் நினைவுக்கு அந்த ஊழியர், ‘வயதானவர் ஒருவர் வருவார்’ என சொன்னது நினைவுக்கு வந்தது ஒன்றும் புரியாமல், மௌனமாக சிறிது தயக்கத்தோடு இருக்கையில் அவள் அமர்ந்து கொண்டாள்.

மேஜை மீது இருந்த புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தான் மகேஷ்.

அவளும் அவளது கையில் கட்டியிருந்த வாட்ச்யில் நேரத்தை அடிக்கடி பார்த்தபடி இருந்தாள் .

அந்த அறை முழுக்க நிசப்தமாக இருந்தது.

வெகு நேரமானதால் மகேஷ் பேச்சை ஆரம்பித்தான் “மிஸ் மாலதி சரியா தானே கூப்பிட்டேன் மிஸ் தான நீங்க”.

“ஆம் நான் மிஸ் தான், மிஸஸ் இல்லை ஏன் கேக்கறீங்க மிஸ்ஸா தான் இருக்கணுமா”.. என அவளின் பதில் கொஞ்சம் கோபம் கலந்த இசையாக வந்தது..

“சும்மாதான் கேட்டேன் தப்பா எடுத்துக் கொள்ள வேண்டாம்” என கூறினான் மகேஷ்

பாவம் அவனுக்கு பெண்களிடம் என்ன பேசுவதென்றே தெரியவில்லை… அதனால் என்னவோ அவனுக்குப் பெண் நண்பர்களே கிடையாது…

அவன் தந்தையின் விருப்பப்படி லண்டனிலுள்ள அலுவலகத்தின் மிக முக்கியமான பணிகளை மகேஷ் கவனித்து வருகின்றான். இன்று ஒரு சின்ன கருத்தாய்வுக்காக சென்னைக்கு வரச் சொல்லி இருந்தார் தந்தை .

அவன் மீண்டும் புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டினான். முடியவில்லை….பெருமூச்சுவிட்டான்.

ஒரு அளவுக்கு மேல் அவனால் இருக்கையில் அமர முடியவில்லை. எழுந்து நடந்தான்,ஏதோ ஒன்றில் அகப்பட்டுக் கொண்டவன் போல் உணர்ந்தான். சொகுசு அறையாக இருந்தாலும் அவனுக்கு வேர்த்துக் கொட்டியது. ஜன்னலைத் திறந்தான். சில்லுனு ஒரு காற்று அவனைத் தொட்டு கடந்து சென்று அவள்மீது பட்டது. அவள் காதோரம் அணிந்திருந்த ஜிமிக்கி கம்மல் அவனைப் பார்த்து சிரித்தது….

கடற்கரையின் காற்று பட்டு அவள் சிலிர்த்து போனாள்.

என்ன அழகு, என்ன குரல்,

அவள் கட்டியிருக்கும் கருப்பு நிற புடவையில் அவள் மேகம் போல் காட்சியளித்தாள்.

அவளது கூந்தலை முன்புறமாக போட்டிருந்தாள் நல்ல அடர்த்தியான நீளமான கூந்தல் அது .அவள் தலையில் வைத்திருந்த மல்லிகை பூ வாசம் அவன் அடித்திருந்த சென்ட் வாசத்தை விட நல்ல நறுமணத்தோடு ஒருவித தடுமாற்றத்தை அவனுள் ஏற்படுத்தியது …அவ்வப்போது, அவள் சிரிக்கையில் அவள் கன்னத்தில் விழும் குழிக்குள் விழுந்தான் மகேஷ்.

அவனுக்கு அவளைப் பிடித்திருந்தது.

இருவருக்கிடையே இருக்கும் மவுனத்தை உடைக்க காற்று தன் கைகளால் ஜன்னல் கதவை சடாரென்று மூட அறையின் கதவு திறந்தார் அந்த வயதானவர்.

ராமா,ராமா …என்று உச்சரித்துக் கொண்டே தனது கையில் இருந்த கார் சாவியையும்,கைபேசியையும் மேஜை மேல் உதறி விட்டு இருக்கையில் அமர்ந்தார் அந்த வயதான ராமா என்கிற ராமச்சந்திரன்.

கோவமான சூழ்நிலைகளிலும் சரி, சந்தோஷமான சூழ்நிலைகளிலும் சரி மனுஷன் தன்னை நிதானத்துடன் வைத்துக் கொள்வதற்குத்
தனது பெயரையே அடி‌க்கடி உச்சரித்துக்கொள்வார்…..அது அவரது பழக்கத்தில் ஒன்றாகவே அமைந்துவிட்டது.

“வாடா மகேஷ், பிரயாணம் எல்லாம் எப்படி இருந்தது, இப்படி வந்து உட்காரு ” என்று தன் அருகில் அவனை அழைத்தார் ராமச்சந்திரன்.

மகேஷ்,அவர் அருகில் இருந்த வெள்ளை நிற சோபாவில் அமர்ந்தவாறு “பிரயாணம் நல்லபடியா இருந்தது பா, உங்களை பார்க்கறதுக்கு தா ரொம்ப நேரம் ஆயிடுச்சு” என்றான்.

மாலதியை பார்த்து “உங்கள பற்றி கொஞ்சம் சொல்லுங்க ” என்று அவளிடம் இருந்த சர்டிஃபிகேட்ஸ்யை வாங்கிய படி கேட்டார் ராமச்சந்தின்.

“என் பெயர் மாலதி “என்று ஆரம்பித்தவள் தான் எம் எஸ் சி கம்ப்யூட்டர் சயன்ஸ் படித்திருப்பதாகவும், தனக்கு தந்தை இல்லை…. தாயாருடன் வாழ்ந்து வருவதாகவும் கூறினார்.

“மிஸ் மாலதி அலுவலகத்தின் விதிப்படி உங்களுடைய ஒரிஜினல் சர்டிஃபிகேட்ஸை இங்கு ஒப்படைக்க வேண்டும் “என்று கூறிக்கொண்டே மகேஷை மேனேஜர் சம்பத்திடம் ஒரு சின்ன வேலை காரணமாக பார்த்து வருமபடி அனுப்பினார் ராமச்சந்திரன்.

சில மணி நேரங்கள் பார்த்த முகமாக இருந்தாலும், பிரிவின் துயரம் மௌனம் மட்டுமே மிஞ்சும் என்று அவளை கடந்து சென்றான் மகேஷ்.

ராமச்சந்திரன் தனது நாற்காலியில் சாய்ந்து சகஜமாக கேட்பது போல் மாலதியை நிமிர்ந்து பார்த்து “எங்களுக்கு ஹார்டு வொர்கிங் பெண்மணிகளை விட ஸ்மார்ட் வொர்கிங் பெண்மணியாக நீங்கள் இருந்தீர்கள் என்றால் இந்த வேலை உங்களுக்கு உறுதி… என்ன சொல்றீங்க ? “என்று அவளைப் பார்த்து கேட்க, அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

மறுபடியும் அவரைப் பார்த்து “என்ன சொல்றீங்க சார்” என்று கேட்க, அவர் மீண்டும் “நீங்கள் என்னுடன் ஸ்மார்ட்டா வொர்க் பண்ண வேண்டும் “என்று அவளை ஒருவிதமாக பார்த்துக்கொண்டு அதன் அர்த்தத்தை விளக்கினார்…. அதன் அர்த்தம் அவர் மனதில் இருக்கும் வக்கிரத்தை பிரதிபலித்தது.

அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. பார்ப்பதற்கு நாகரிகமாக தோன்றினாலும் என்ன ஒரு வக்கிரபுத்தி கொண்ட மனிதராக இருக்கிறார்கள் என மனதில் எழுந்த கேள்விகள் கோபமாக வெளிப்பட்டது. ஆம் மேஜைமேல் இருந்த காகிதங்களை பல பாகங்களாக கிழித்து வேலைக்காக வரும் பெண்களிடம் அவர்களின் உணர்ச்சிகளோடு விளையாடும் உங்கள மாதிரி ஆளுங்களோட முகத்திரைகளை கட்டாயம் கிழிக்க வேண்டும் என்று அவர் முகத்தில் விட்டெறிந்தாள். காகிதங்களின் வேகம் அம்புகள் போல் மிகக் கூர்மையாக அவரின் முகத்தை கிழித்து சிகப்பு நிறமாக மாறியிருந்தது.

ஒரு நீண்ட சலசலப்புடன் அறையைவிட்டு வெளியேறிய மாலதி தனது கைப்பையை தோளில் மாட்டிக்கொண்டு விறுவிறுவென்று அலுவலகத்தை விட்டு வெளியேறினாள்.

“என்னாச்சு அறை முழுக்க காகிதங்களாக கிடைக்கிறது” என்று கேட்டுக்கொண்டே வந்த மகேஷிடம் “அறையை சுத்தம் செய்வதற்கு ஆட்களை வரச்சொல், பிழைக்கத் தெரியாத பெண்மணிகளை என்ன சொல்வது ராமா ராமா”என்று உச்சரித்துக்கொண்டே நகர்ந்தார் ராமச்சந்திரன்.

முன் வாசல் படிக்கட்டில் அமர்ந்தவாறு வெகுநேரமாக அம்மா மகாலட்சுமி அவளுக்காக காத்துக் கொண்டிருந்தார் . ஒரு வழியாக வீட்டுக்கு வந்து சேர்ந்தாள் மாலதி.

மாலதி அம்மாவை “ஏன் இவ்ளோ நேரமா கண்ணு முழிச்சுக்கிட்டு உடம்பை கெடுத்துக்கிறீங்க, சாப்பிட்டு தூங்க வேண்டியது தானே தொடர்ந்து போன் பண்ணிகிட்டே இருக்கீங்க”என கடிந்து கொண்டவளின் மனதில் அலையாக மீண்டும் மீண்டும் அலுவலகத்தில் நடந்த சம்பவம் அலைமோதிக் கொண்டிருந்ததன் வெளிப்பாடு.

“சாரி மா”என அவரின் கைகளை பிடித்த படி கேட்டால்.

அம்மா மகாலட்சுமி , “பரவாயில்லை மா! வா உள்ள போகலாம் , காலைல வீட்டை விட்டு போன பொண்ணு பத்திரமா வீட்டுக்கு வரும் வரைக்கும் என்னை போல் எல்லா பெத்தவங்களுக்கும் மனதில் அன்றாடம் நடக்கும் போர் மா இது அத வார்த்தைகளால சொல்லி மாளாது” என சொல்லிக்கொண்டே முந்தானையில் தனது முகத்தைத் துடைத்துக் கொண்டு மாலதியை உள்ளே அழைத்துச் சென்றார்.

அதிகாலை குளிர்ந்த காற்று…. அவளுக்குள் இருந்த வெப்பம் தணிந்து புதிய வேலைக்காக புன்னகையோடு தன்னை தயார் செய்து கொண்டிருந்தால்.

‘சரி மா!., நா கிளம்புறேன்’ என்று கதவை திறந்தவளுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது,யூகிக்க கூட முடியவில்லை வீட்டு வாசலில் மகேஷ் நின்றுகொண்டிருந்தான்…

“உள்ளே வரலாமா மாலதி.,”

“வாங்க மகேஷ்..”

” இந்தாங்க உங்களுடைய சர்டிஃபிகேட்ஸ். நேத்து மறந்து விட்டுட்டு போயிட்டீங்க.,அதான் கொடுத்துட்டு போகலாம்னு வந்தேன்..”

அலுவலகத்தின் அறையை சுத்தம் செய்த ஊழியர் மகேஷிடம் ஒப்படைத்திருந்தார்.

“ரொம்ப நன்றி மகேஷ், மன்னிச்சிடுங்க இப்படி வந்து உட்காருங்க..” என அவனை அமரச் செய்து விட்டு அம்மா மகாலட்சுமியை அழைத்து வந்து அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.

அம்மா மகாலட்சுமி மிகுந்த கோபத்துடன் அவனிடம் “வேலைக்காக வந்த பொண்ணுங்ககிட்ட இப்படித்தான் அநாகரிகமா பேசுவீங்களா, உங்க வீட்டிலேயும் பொண்ணுங்க இல்லை?” என்று ஆதங்கத்துடன் கத்தினாள்.

மகேஷ்க்கு ஒன்றும் புரியவில்லை,

மாலதி ,”அம்மா இவர் காரணம் இல்ல மா” என்று சொல்ல.

அங்கு அடர்ந்த மௌனம் நிலவியது.

கனத்த இதயத்துடன் நேற்று அலுவலகத்தில் நடந்ததை மகேஷிடம் கூறினாள் மாலதி.

“அவமானமா இருக்கு நடந்த தவறுக்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் அம்மா” என்றான் மகேஷ்.

“நல்லவன் போல் தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளும் சில மனித மிருகங்களுக்காக நீ என்ன செய்வ தம்பி”.,

“இதெல்லாம் அவமானமா? பிழைக்கத் தெரியாதவன்னு நம்மளையே சொல்வாங்க” என்று சுவரில் மாலையுடன் தனது கணவரின் புகைப்படத்தை பார்த்தபடி “நீங்கள் சொன்ன வார்த்தை உண்மை தாங்க” என நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுதார் அம்மா மகாலட்சுமி.

மாலதி “இதுவும் கடந்து போகும் அம்மா, சூழ்நிலை எப்பொழுதும் ஒரே மாதிரி இருப்பதில்லை” என சமாதானம் செய்தாள்.

மகேஷின் அலைபேசி அடித்தது, “ஹலோ நான் நவீன் பேசுறேன் டா, நாளைக்கு என்னுடைய புதிய அலுவலகத்தின் திறப்பு விழா நீ கண்டிப்பா வரனும் நீதான் டா சிறப்பு விருந்தினர் சரியா “என்று அழைத்தவனுக்கு “கண்டிப்பாக நான் வருகிறேன்” என கூறினான்.

சடாரென அவனுக்கு ஒரு யோசனை வந்தது,

“மாலதி இந்தாங்க என்னுடைய கல்லூரி கால நண்பன் நவீனின் விசிடிங் கார்ட், நீங்க போய் அவர பாருங்க, அவர் ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினியர் ,அவரின் அலுவலகத்தில் உங்களுடைய குவாலிஃபிகேஷனுக்கு ஏத்தமாதிரி கண்டிப்பா ஒரு வேலை இருக்கும்” என்று தன்னை சார்ந்தவர்களால் ஏற்பட்ட தவறுகளைச் சரி செய்தான் மகேஷ்.

இம்முறை இவர்களின் சந்திப்பு மன்னிப்பும், நன்றியும் சமமாக கலந்த கலவையாக காலத்தால் இணைக்கச் செய்தது.

பாசதீபங்கள் சிறுகதை – ச. லிங்கராசு

பாசதீபங்கள் சிறுகதை – ச. லிங்கராசு




சில்லெனக் குளிர்காற்று முகத்தில் அறைய, அதைப் பொருட்படுத்தாது வண்டியின் வேகத்தை அதிகப்படுத்தினான் செழியன். வளைவுகளைச் சீராகக்கடந்த அந்த இருசக்கர வாகனம் தன்கடமையைச் சரியாகச் செய்துகொண்டிருந்ததது. வண்டியின் வேகத்தைவிட அவன் மனதின் வேகம் அதிகமாக இருந்தது.’ இன்று எப்படியாவது மலரிடம் பேசி திருமணத்திற்குச் சம்மதம் வாங்கிவிடவேண்டும்’ மனதோடு பேசிக்கொண்டான் செழியன்.

செழியன், ஒன்றிய அரசின் அலுவலகத்தின் இளநிலை எழுத்தராகப் பணிபுரிபவன். மலர் சுமாரான தோற்றத்தில் அறிவாற்றல் கொண்ட பெண். வாசிப்பு அவளை
முற்போக்கான சிந்தனை கொண்ட பெண்ணாக மாற்றி இருந்தது. அவளுடைய அணுகுமுறை, பேச்சு, வேலையின் மீது அவளுக்கிருந்த அக்கறை, நல்ல இரசனை இவையெல்லாமே செழியனை ஈர்த்தது.

மலைவாசஸ்தலத்தில் அமைந்திருந்த ஒன்றிய அரசின் அலுவலகத்தில் கருணை அடிப்படையில் வேலையில் சேர்ந்த மலர்,ஆரம்பத்தில் தானுண்டு தன்வேலை
என்றிருந்தவள் நாளடைவில் எல்லோருடனும் சகஜமாகப்பழக ஆரம்பித்திருந்தாள்.

மலர் பிறந்து ஒருவருடத்திற்குள் தாயின் அரவணைப்பையும் பாசத்தையும் இழந்தாள். உடன்பிறந்த அக்கா அன்னையானாள். தந்தையையும் பிரிந்து ஒருவருடம்
ஓடிவிட்டது. இந்த அலுவலகத்தில் பணியிலிருந்தபோது அவர் மறைந்ததால் கருணை அடிப்படையில் மலருக்கு இளநிலை எழுத்தர் வேலை கிடைத்து.
உடன்பிறந்த அண்ணன் அண்ணியுடன் ஐக்கியமாகி வெகு நாட்களாகிவிட்டது.

தந்தை இரு பெண்களையும் கண்களாய் நினைத்தவர்.இரண்டு பெண்களுக்குமே அவர் நல்ல வசதிகளை ஏற்படுத்திவிட்டுத் தான் மறைந்தார்.
அக்காவும் தங்கையும் பாசமலர்களாய்த் திகழ்ந்தார்கள். மலரின் வாழ்க்கையில் இப்படி ஒரு துயரக்கதையா? செழியன் இதை எல்லாம் கேள்விப்பட்டதும் மலர்
மீது அனுதாபம் கொண்டான்.

காலம் மலரையும் செழியனையும் நண்பர்களாக்கியது. ஆனால் அலுவலகமோ அவர்களை வழக்கமான பார்வையில் வைத்திருந்தது. நண்பர்களைக் காதலராக்கிப் பார்ப்பதும், காதலர்களைக் கணவன் மனைவியாக் கிப்பார்ப்பதும் அலுவலக உலகத்திற்குக் கைவந்தநிலையாயிற்றே!

பரஸ்பரம் தங்களின் வாழ்வியல், வாசிப்பு, இசை ரசனையைப் பற்றிப் பேசியவர்கள், திருமணம் என்ற வாழ்கையில் கடந்து போகமுடியாத முக்கிய விடயத்தில் வந்துநின்றார்கள். செழியனே இதை ஆரம்பித்து வைத்தான்.ஒரு வாரம் வரை இந்த பேச்சு நடந்துகொண்டு இருந்தது. அலுவலகம் அருகே வந்ததும் வண்டியின் வேகத்தைக்  கட்டுப்படுத்திய செழியன் அதைச் சாந்தப்படுத்தி நிறுத்திவிட்டு அலுவலகத்தின் உள்ளே சென்றான். அலுவலகம் களைக்கட்ட ஆரம்பித்திருந்தது.
மதிய உணவுக்குப்பின் மலரிடம் பொதுவான சில விசயங்களைப் பேசிய செழியன், முக்கியமான விசயத்திற்கு வந்தான்.

” என்ன மலர் இந்த ஒருவாரமா நானும் கேட்டுக்கொண்டிருக்கிறேன், பிடிகொடுக்காமல் இருக்கிறீர்கள்? நானும் என்மனைவி தமிழரசியும் இரவு வெகுநேரம் பேசி ஒரு முடிவுக்கு வந்திருக்கிறோம், அவள் தம்பி புகழுக்கு உங்களைப் பேசி முடிக்கலாமென்று……” அவன் முடிக்கவில்லை.

“எனக்கு இந்த திருமணம் பத்திலெல்லாம் எந்த கனவும் இல்லே ஆர்வமும் இல்லே இதைபத்திஎல்லாம் நீங்க வலைப்படாதீர்கள் செழியன்” என்று சிரத்தையின்றி பதில்சொன்னாள் மலர்.

” என்சிங்க உங்கள் உண்மையான நண்பனா நலம்விரும்பியா இதை நான் செய்யக்கூடாதா”

செழியனின் குரலிலிருந்த பவ்வியம் மலரை ஏதோசெய்தது. அதைச் சரிசெய்யும் நோக்கில் மலர், “என்  உடன்பிறந்தவன் கூட  இதையெல்லாம் நினைக்காதபோது நீங்கள் சிரத்தை எடுப்பதைப் பார்த்து நிறையப் பெருமைப்படுகிறேன் செழியன் ஆனால்……..”

“என்ன ஆனால்…அக்காவைப் பற்றி கவலைப்படுகிறீர்களா…நல்ல ஒரு கருணை இல்லத்தில் அக்காவை………..”

“நிறுத்துங்கள் செழியன்” மலரின் குரல் ஓங்கியது. அனைவரும் திருப்பிப் பார்த்தார்கள். செழியன் அதிர்ச்சியடைந்தான்.  மலர் இப்படிக் குரலுயர்த்திப் பார்த்ததில்லை. மலர் தாழ்ந்த குரலில், ஆனால் தீர்க்கமாகச் சொன்னாள்.

“என் அக்காவைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் செழியன்?  அவள் எனக்குத் தாயானவள். இரண்டு வயதில் நான் தாயை இழந்தபோது, அக்கா தனக்கு நடக்க இருந்த திருமணத்தையே தூக்கி எறிந்துவிட்டு என்னைத்தான் பறாதகுழந்தையாய் ஏற்றுக்கொண்டு இன்றுவரை பாசத்தைத் தந்துகொண்டிருக்கிறாள்.  பொதுவாக வயதானவர்கள் குழந்தைக் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இந்தக் குழந்தையைத் தவிக்கும்படி செய்துவிட்டு நான் மணவாழ்க்கையைப் பற்றி நினைக்கமுடியுமா? அப்படி நினைத்தால் நான் உடன் பிறந்தவளாக இருக்கமுடியாது.
கடைசிவரை எனக்காக அவள் அவளுக்காக நான்……என்னை மன்னியுங்கள் செழியன்

செழியன் திக்பிரமைகொண்டவனாய் மலரையே பார்த்துக்கொண்டிருந்தான்.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்கட்டுரைகள் (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.