Posted inPoetry
ஒருதலைக் காதல் கவிதை – சுதா
புயலடித்து ஓய்ந்த
சாலையில் சிதறிக்கிடக்கும்
உதிர்ந்த சருகுகளின் ஊடே…
அவனோடு நடந்த
என் கால்தடமொன்று
விசும்பி அழும் சத்தம் மட்டும்
யாரும் அறிந்திலர்…
கடல் மணல் முழுவதும்
அவன் காலடித்தடம்…
அவன் கால்பதித்த மணலை
கையில் எடுக்க நினைத்தேன்…
மணல் முழுவதும்
கடலலைகளுக்குள் காணாது போனது…
கல்லூரி முடிந்து
கதை கதைத்து…
கலைந்து செல்லும் வேளையில்
என் காதல் நாங்கள் அமர்ந்து பேசிய
மரப்பலகையில் வைத்துச் சென்ற
கைகுட்டையோடு முடிவுற்றது…
மீண்டும் சந்தித்தோம்…
மீண்டும் மீண்டும் சந்திக்கிறோம்…
எதேச்சையாய் பலமுறை சந்திக்கிறோம்…
அவன் மீது என் காதல்
எங்கே எனத் தேடி
ஓய்ந்து போனது மனது…
காலத்தால் காணாது போனவற்றில்
என் காதலும்…
