Paadal Enbathu Punaipeyar Webseries 17 Written by Lyricist Yegathasi தொடர் 17: பாடல் என்பது புனைப்பெயர் - கவிஞர் ஏகாதசி

தொடர் 17: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

விஜய் டிவியில் ஒருமுறை கவிப்பேரரசு வைரமுத்து அவர்களிடம் ஷங்கர் – ஏ.ஆர். ரகுமான் – வைரமுத்து கூட்டணியில் வரும் பாடல்கள் எப்போதும் வெற்றிப் பாடல்களாகவே அமைகின்றனவே அதற்கு என்ன காரணம் என்று ஒரு கேள்வி கேட்கிறார்கள். அதற்கு கவிப்பேரரசு அவர்கள், நாங்கள் புதிய படம் ஒன்றுக்கு பாடலை உருவாக்கும் பணிக்காக அமரும்போது, அந்த அமர்வின் முதல் பாடலை சிறந்த பாடலாக உருவாக்க அதற்குமுன் எங்கள் கூட்டணியின் உச்சப் பாடலை அளவீடாக வைத்துக்கொண்டு அந்தப் பாடலை தாண்டும் பாடலொன்றை உருவாக்கிவிட்டால் இது சிறந்த பாடலாகிவிடும் என்று முடிவு செய்வோம். பின்பு அடுத்த பாடலை சிறந்ததாக உருவாக்க வேண்டும் எனில் இதற்கும் முன்னான பாடலைத் தாண்ட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு வேலை செய்வோம். இப்படியாக ஒன்றை ஒன்று ஒன்றை ஒன்று தாண்டுமாறு உருவாக்கிக் கொண்டே வரும் உத்தியே எங்களின் தொடர் வெற்றிக்குக் காரணம் என்று பதிளித்தார். இந்நிகழ்வை தொலைக்காட்சியில் பார்த்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர்களில் ஒருவரான தோழர் ஜி. ராமகிருஷ்ணன் அவர்கள் என்னிடம் கூறி, இந்த பாணியை நம் தோழர்கள் மக்களிடம் கொண்டு சென்றால் என்ன என்று கூறினார்.

Paadal Enbathu Punaipeyar Webseries 17 Written by Lyricist Yegathasi தொடர் 17: பாடல் என்பது புனைப்பெயர் - கவிஞர் ஏகாதசி
தோழர் ஜி. ராமகிருஷ்ணன்

இதுபோல் எப்போதும் அவர் புதிய சிந்தனையை எப்படி மக்களுக்காகப் பயன்படுத்துவது என்று யோசித்துக்கொண்டே இருப்பார். அதே போல் வைரமுத்து அவர்கள் குமுதத்தில் தொடராக எழுதிவந்த சிறுகதை சிலவற்றை வாசித்துவிட்டு தான் எழுதி அப்போது நூலாக வெளிவந்திருந்த தமிழக விவசாயிகள் பற்றிய ஒரு ஆவண நூலை அவரிடம் தந்தால் அதன் வெளியை சிறுகதைகளாக அவர் மக்களுக்குப் படைக்கக் கூடும் என்றெண்ணி என்னிடம் தந்தனுப்பினார், நான் கொண்டுபோய் சேர்த்தேன். நல்ல விசயத்தை யார் சொன்னாலும் பாராட்டுவார். அதன் வழியே நிறைய நல்ல திரைப்படங்களுக்கு தீக்கதிர் இதழில் விமர்சனம் எழுதியுள்ளார்.

ஒருமுறை ஜி. ஆர் அவர்கள் கட்சி அலுவலகத்தை சுத்தம் செய்கையில் கிடைத்த பழைய செம்மலரை வாசிக்கையில் அதில் பிரசுரமாகியிருந்த என் பாடல் ஒன்றை வாசித்துவிட்டுப் பாராட்டினார். அந்தப் பாடல் பெண் விடுதலைக்காண பாடல்.

பல்லவி:
பெண்கள் கூடிப் பேச வேண்டும்
பிரபஞ்சத்தை ஆளவேண்டும்
ஒரு பூ மட்டும் மாலை ஆகாது
ஒரு நூல் மட்டும் சேலை ஆகாது
நமது வாழ்வை நாமே வாழ
முடிவு எடுப்போம் – இனி
எவர் தடுத்தாலும் பொறுக்காமல் தானே
போர் தொடுப்போம்

சரணம் – 1
பக்தி பக்தி என மோகம் கொண்டு
பணிந்தே கடந்துவிட்டோம்
ஆண்களின் தேரை தோளில் சுமந்தபடி
குனிந்தே நடந்துவிட்டோம்

பின்னே செல்லவா நாம் பிறந்தோம்
தோழி கேளடி
பிள்ளைப் பெற்று பிள்ளைப் பெற்று
இளைத்தோம் பாரடி

குடும்பம் நடத்தவும் தெரியும்
கோட்டையை ஆளவும் தெரியும்
உலக்கைப் பிடித்தக் கைகள் இனிமேல்
உலகம் எங்கிலும் விரியும்

சரணம் – 2
இரவு பகல் எனும் பேதம் கிழித்துக்
குப்பையில் வீசுவோம்
எந்த நேரமும் நமது நேரம்தான்
எழுந்து பேசுவோம்

தோல்வி என்பது கிடையாது
தொடர்ந்து ஓடிடுவோம்
துணியைப் போலே இருட்டைத் துவைத்துக்
கொடியில் போட்டிடுவோம்

வாசல் படிகளைக் கடப்போம்
வழித்தடம் புதிதாய் படைப்போம்
சிறைகளின் கதவு திறக்காவிட்டால்
சிறகுகளாலே உடைப்போம்

ஜி. ஆரைப் போலவே எழுத்தாளர் ச.தமிழ்செல்வன் அவர்களையும் என் ஆழ்மனதை ஆசுவாசப் படுத்துபவராக பார்க்கிறேன். அவர் தொடர்ந்து பெண்ணடிமைக்கு எதிராக மிக நுட்பமாக செயலாற்றி வருகிறார். அவர் எழுதிய பல நூல்கள் இந்த விசயத்தை வலியுறுத்துகின்றன. அதில் மிக முக்கியமானதாக நான் பார்ப்பது அவரின் “எசப்பாட்டு” என்கிற கட்டுரை நூல்தான். அது ஒவ்வொரு ஆணின் கையிலும் இருக்க வேண்டிய பொக்கிசம். உலகம் முழுக்க இருக்கும் பெண்களின் விலங்குகளையும் விடுதலையையும் பற்றிப் பேசும் நூல். அவர் தன் வாழ்வையும் பேசுவதைப் போலவே நடத்துகிறார் என்பதே ஆச்சரியம். பெரும்பாலும் எல்லா படைப்பாளிகளும் பேனாவை வைத்து எழுதிக் கொண்டும், வானத்தைப் பார்த்துச் சிந்தித்துக் கொண்டும், புகைத்துக் கொண்டும் ஃபோட்டோவிற்குப் போஸ் கொடுத்துக் கொண்டிருக்கையில் அம்மி அரைத்தபடியான தனது புகைப்படம் சமூக ஊடகங்களில் வலம் வந்ததை பெருமையாக எண்ணிய மாமனிதர் இவர்.

Paadal Enbathu Punaipeyar Webseries 17 Written by Lyricist Yegathasi தொடர் 17: பாடல் என்பது புனைப்பெயர் - கவிஞர் ஏகாதசி
எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன்

தோழர் ச.தமிழ்செல்வன் அவர்கள் நான் எழுதி உலகத் தமிழ் நெஞ்சங்களில் தனி நாற்காலி போட்டமர்ந்திருக்கும் “ஆத்தா ஓஞ்சேல” பாடலுக்கு எதிர்மறை கருத்துரைப்பவர். பெண்ணை அல்லது தாயை கனிவோடும் தெய்வீகத் தன்மையோடும் பார்ப்பதை விரும்பாதவர். பெண்ணுக்கு சுதந்திரமே முக்கியமென்று கருதுவதால் பெண்ணை வீரமெழ பாடவேண்டும் என விரும்புபவர். தமுஎகச வின் மாநில கௌரவத் தலைவராக இருந்து ஆயிரக்ணக்கான தோழர்களுக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கும் தோழர் ச.தமிழ்செல்வனின் கருத்தில் எனக்கும் முழு உடன்பாடுண்டு எனினும் கரடுமுரடான மனித மனங்களின் முதல் நிலை கட்டமைப்பிற்கு கண்ணீரை வரவழைத்து நெகிழச் செய்யும் “ஆத்தா ஓஞ்சேல” போன்ற பாடல் பெரிதும் பயன்படும் என்று நம்புகிறேன். இப்பாடல் ஒலிக்கும் மேடையெல்லாம் இதற்கு எதிர் கருத்து வைத்துவந்த அவர் ஒருநாள் என்னை அழைத்து, மனதை கலங்கடிக்கும் பாடல் எழுதும் உங்களால் தான் கம்பீரமான பாடலையும் எழுதமுடியும் என உசுப்பேத்தி விட்டதில் உதித்த பாடல் தான் கீழே.

பல்லவி:
தேவதையும் இல்ல தெய்வமும் இல்ல
மனுசி தானம்மா நீ
பெண்ணின் குணமெனச் சொன்னவை எல்லாம்
பழமை வாதிகளின் பொய்

நிமிரவும் கொஞ்சம் திமிரவும்
தோழி வாராய்.. மூன்றாம் போராய்..

சரணம் – 1
நிலவென்று போற்றி கவிதைகள் பாடி
துணிகள் துவைக்க விட்டானே
மலரென்று கொஞ்சி மகிழ்ந்தவன் உன்னை
சமையலறையில் நட்டானே

தலையில் மட்டுமா நேர்கோடு
வளைவு எதற்கு வாழ்வோடு
நெஞ்சம் வேண்டும் நெருப்போடு
அன்பால் செய்து தந்தாலென்ன
திரிய வேண்டுமா விலங்கோடு

சமத்துவ கொள்கையில் ஒத்துப் போகிற
கணவனோடு நீயும் கருத்தரி
பிள்ளை பெற மட்டுமே பெண்ணென்றால் – உன்
கர்ப்பப் பையினை அறுத்தெறி

சரணம் – 2
மதமெல்லாம் கூடி மடமைகள் செய்துன்னை
அடிமைப் பொருளென வைத்ததம்மா
பக்தியில் நீயும் றெகையை மறக்க
மண்ணுக்குள்ளே தான் புதைத்ததம்மா

என்ன ஆடை உடுத்த வேண்டும்
என்ன வேலை பார்க்க வேண்டும்
நீயே முடிவை எடுக்க வேண்டும்
உரிமை சாவி எவன் கொடுப்பதும்
நீதான் பூட்டை உடைக்க வேண்டும்

கால காலமாய்க் காத்து வந்ததால்
உன்னதுதானே நெருப்பு
உனை அடிமை செய்திடும் கொடிய மிருகத்துக்கு
கொள்ளி வைப்பதுன் பொறுப்பு

முந்தைய தொடர்களை வாசிக்க:

தொடர் 12: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 13: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 14: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 15: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 16: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

Paadal Enbathu Punaipeyar Webseries 16 Written by Lyricist Yegathasi தொடர் 16: பாடல் என்பது புனைப்பெயர் - கவிஞர் ஏகாதசி

தொடர் 16: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

2004 ஆம் வருடம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சென்னை பழவேற்காட்டில் “கிழக்கு கடற்கரை” பயணத்திற்கான ஒரு நாடக பாடல் உருவாக்க முகாமை நடத்தியது. அதிலே நாடகவியலர் தோழர் பிரளயன், பிரகதீஸ்வரன், பாடகர் கரிசல் கருணாநிதி, நீலா அக்கா, தஞ்சை செல்வி, கவிஞர் தனிக்கொடி, ரோஸ்முகிலன், நான் உள்ளிட்ட பல படைப்பாளிகள் கூடி பத்து நாட்கள் தங்கி பல நாடகங்களையும் பாடல்களையும் உருவாக்கினோம். அதற்கு தோழர் கமலாலயன் அவர்கள் பொறுப்பேற்றிருந்தார். பத்துநாள் முழுவதும் கடற்கரையில் வாழ்ந்தது எனக்குள் பல்வேறு புதிய படிப்பினையைத் தந்து.

என் அடிமனதில் தங்கியிருந்ததென்னவோ செம்மண் வாசம். ஆடுகள் உடலுரசிச் செல்லும் மொட்டை மதில்கள். சாப்பிடுகையில் வாஞ்சையோடு கையைத் தட்டி சோறு கேட்கும் பூனைகள், நடுவீடுவரை வந்து பாசத்தை அள்ளித்தரும் நாய்கள், மீசை மனிதர்கள், தண்டடட்டிப் பாட்டிகள், வேம்புகள் மற்றும் பாம்புகள் தாம்.

சென்னை நகர வாழ்வின் அந்நாளைய ஐந்தாண்டு அனுபவம் எப்படி இருந்திருக்கும் என்பதை அடியேன் சொல்லி தாங்களுக்குத் தெரியவேண்டியதில்லை. சிமிண்ட் ஓட்டின் கீழ் பொழியும் வெக்கை மழை. சாலை எங்கிலும் மனித எந்திரத்தின் நெரிசல் மிகுந்த போக்குவரத்து. அதிகாலையில் சேவலுக்குப் பதிலாகக் கூவும் அடிகுழாய்களின் இருமல் சத்தம். இப்படி இற்ற நிகழ்வுகள் எத்தனை சொல்வது.

பழவேற்காட்டில் நாங்கள் தங்கியிருந்தது ஒரு புயல் காப்பகம். நான் பேருந்தை விட்டு இறங்கியதும் அம்சவள்ளி எனும் பெயர்கொண்ட ஒரு சிறு ஹோட்டலில் இறால் பிரியாணி சாப்பிட்டேன். அப்படி ஒரு சுவை. அந்த உணவை அன்றைக்குத்தான் முதன் முதலாக சாப்பிட்டேன், அதன் பிறகு அப்படியொரு இறால் பிரியாணி எனக்கு கிடைக்கவேயில்லை. இருந்த பத்து நாட்களும் கடல் வாசம். எல்லா நாட்களும் மீன் சாப்பிட்டோம் வயிற்றுக்கு ஒன்றுமே ஆகவில்லை. இதுவே வீட்டில் நடந்திருந்தால் கழிப்பறை கிழிந்திருக்கும். ஆனால் எங்கள் உழைப்பு அப்படி இருந்தது. பாட்டு எழுதுறதுல என்ன உழைப்பிருக்கு என்று தானே கேட்கிறீர்கள். ஆமாம், பாட்டெழுதுவதற்காக யோசித்தபடியே நடந்துகொண்டிருப்பேன். அதுதான் பேருழைப்பாயிற்று, காரணம் நடந்தது கட்டாந்தரை அல்ல கால் பதியும் மணல்.

ஒரு நாள் கூத்துக்கே இந்த கதியெனில் கர்ப்பப் பையிலிருந்து பிறந்து மணலில் விழுந்த என் ஏழைத் தொழிலாளர்களின் நிலையை யோசித்துப் பார்க்கிறேன். அங்கிருந்து பல ஊர்களுக்கு பேக் வாட்டரில் படகுப் பயணமாகத் தினமும் சென்று வந்தேன். நண்பர்கள் கிடைத்தார்கள். அவர்களின் காதல் கதைகள் கிடைத்தன. தமிழ்நாடு அறிவியல் இயக்க நூல்கள் வானத்திலும் கடலிலும் முங்கி முங்கி ஆய்வு செய்த அதியத் தகவல்களைத் தந்தன. மக்களோடு பேசினேன் மணலோடு பேசினேன். கடலோடு பேசினேன் கரையோடு பேசினேன். உண்ட நேரம் உறவாடிய நேரம், உட்கார்ந்த நேரம் ஊர் சுற்றிய நேரம் போக ஒரு பத்துப் பாடல்கள் எழுதினேன்.

அதில் ஒன்று உங்களுக்கு,
பல்லவி
வௌவால் மீனக் குழம்பு
வச்சா ருசி
வஞ்சரய வறுத்துத்
தின்னா ருசி

வாளக் கருவாடு
என்ன ருசி – ஏ
சம்சாரம் சமைச்சா
எல்லாம் ருசி

சரணம் – 1
ஆழத்தில் வாழுது சுறா
அருகினில் வாழுது கெண்ட
சளிக்கு திங்கலாம் காரப்பொடி- அதுல
மருத்துவ குணமுண்டு நியாயப்படி

தொட்டாலே அரிக்கும் செஞ்சொரி- கை
பட்டாலே வழுக்கும் நலங்கொழஞ்சான்
முள்ளால அடிக்கும் மஞ்சவேலா- ஒரு
பறவையா இருக்குது மயில்கோலா

சரணம் – 2
விசத்தக் கக்குது செல்லி
மாட்ட மறுக்குது விலாங்கு
அல்லி எலபோல செம்படக்கா – இது
இரண்டாம் தாய்ப்பால் கேட்டுக்கக்கா

மீனுல சின்னது செனாக்கூனி
யானை போல் பெரியது திமிங்கலம்
மிட்டாய் போல் சுவை தரும் இறாலு – நண்டு
பட்டாம்பூச்சி தான்டா கோபாலு

மீன் என்கிற ஒற்றை சொல் தவிர வேறு சொல் தெரியாதவனுக்கு இத்தனை வகை மீனின் பெயரையும் அதனதன் குணங்களையும் மட்டுமன்றி ஒரு பாடலையும் தந்தனுப்பிய அந்த உப்புக்காற்றின் உன்னத வாசம் எந்தப் பூவுக்குமில்லை. இதை எழுதிய நாளின் மாலையில் நண்பர் கரிசல் கருணாநிதி ஒரு கானா மெட்டுக்கட்டி அன்றைய இரவிலேயே மீனவ மக்கள் முன் பாட, அவர்கள் எழுந்தாடிய பாதத் தடங்களை என் இதயத்திலிருந்து இன்னும் எந்த அலைகளாலும் அழிக்க முடியவில்லை.

Paadal Enbathu Punaipeyar Webseries 16 Written by Lyricist Yegathasi தொடர் 16: பாடல் என்பது புனைப்பெயர் - கவிஞர் ஏகாதசி

ஒருமுறை என் நண்பர்கள் சிலரோடு திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள அணைப்பட்டி சென்றிருந்தேன். அந்த ஊருக்கு ஆறும் ஆஞ்சநேயர் கோவிலும் அழகு. நிறைய புகைப்படங்கள் எடுத்தேன். மதியம் ஆனதால் பசித்தது சாப்பிடச் சென்றோம். ஒரு ரகசியம் சொல்லட்டுமா.. அங்கு சாப்பிடுவதற்காகத்தான் சென்றோம். காரணம் அங்கே மீன் சாப்பாடு உலகப் பிரபலம். சாப்பிட்டோம். என்ன ருசி தெரியுமா… சரி விடுங்க இதைப் பற்றி இன்னொரு பத்தி எழுதினால் நான் அணைப்பட்டிக்கு கிளம்பவேண்டியதாகிவிடும்.

Paadal Enbathu Punaipeyar Webseries 16 Written by Lyricist Yegathasi தொடர் 16: பாடல் என்பது புனைப்பெயர் - கவிஞர் ஏகாதசி

அருள்நிதி நடித்து, நண்பர் கணேஷ் விநாயக் அவர்கள் இயக்கிய “தகராறு” படத்தில் ஒரு கொண்டாட்டப் பாடல். தரண் இசை. வேல்முருகன் சின்னப்பொண்ணு குரல். படத்தின் நீளம் காரணமாக இந்தப் பாடல் இசையாக வெளியானது ஆனால் வீடியோவாகப் படத்தில் இடம்பெறவில்லை. ஆனாலும் அந்தப் பாடல் பட்டி தொட்டிகளில் ஒலித்தவண்ணமே உள்ளது. இந்த பாடல் எப்போதும் எனக்கு அணைப்பட்டியை நினைவுப் படுத்திக் கொண்டே இருக்கும். காரணம்,

“ஏ அன்ன நட அழகு நட
அசத்துறாடா ஆப்பக்கட
சின்ன இட மின்னும் உட – அவ
அங்கமெல்லாம் தங்க கட”

என்னும் பல்லவி கொண்ட பாடலின் இரண்டாவது சரணத்தில்,

“நீ அணப்பட்டி மீன் குழம்பு
அடி அம்சவள்ளி பிரியாணி
ராணி விலாஸ் சாப்பாடு – நா
செஞ்சிருக்கேன் ஏற்பாடு”

இந்த வரிகளில் அணைப்பட்டி மீன் குழம்பும், அம்சவள்ளி பிரியாணியும் இப்போது உங்களுக்கும் தெரியும், ஆனால் “ராணி விலாஸ்” சாப்பாடு பற்றித் தெரியாதல்லவா.. இந்த ஹோட்டல் எனது பணியான் கிராமம் அருகே உள்ள செக்காணூரனி எனும் ஊரின் மதுரை சாலையில் அமைந்துள்ளது. அந்த ஊரையும் அந்த ஹோட்டலையும் பற்றி எனது, “மஞ்சள் நிற ரிப்பன்” சிறுகதையில் நிறையவே எழுதியிருக்கிறேன். அந்த கடையின் ரசம் போல், குடல் குழம்பு போல், கரண்டி ஆம்லெட் போல் பருப்புக் கூட்டு போல் பரிமாறும் பாலாஜியைப் போல் வேறெங்கும் காணேன். இப்போதும் ஊருக்குச் சென்றால் ஒருமுறையாவது அங்கு சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். இத்தனை சுவை எப்படி தயாராகிறதென்று சமையலறையை ஒருநாள் எட்டிப்பார்த்தேன். உள்ளே என் அம்மா போன்று சிலரும் என் அக்கா போன்று சிலரும் இருந்தார்கள்.

என் மனதில் ஏறிக்கொண்ட எவரையும் நான் எதற்காகவும் இறக்கிவிடுவதில்லை. எழுதும் கதைகளிலும் பாடல்களிலுமாக அவர்களின் பெயர்களை இடம்பெறச் செய்து என் இதய மடியை அகலம் செய்து கொள்கிறேன்.

முந்தைய தொடர்களை வாசிக்க:

தொடர் 12: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 13: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 14: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 15: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 15: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 15: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி




இயக்குநர் பிரசாத் முருகேசன் அவர்களும் இயக்குநர் வசந்தபாலன் அவர்களின் நண்பர் வரதராஜன் அவர்களும் என்னை சந்தித்தார்கள். எனக்கு நண்பர் வரதராஜன் அவர்களை “வெயில்” படத்திலேயே தெரியும். சசிக்குமாரை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்க முயற்சி எடுத்துக் கொண்டிருப்பதாகவும் அந்தப் படத்திற்குத் தேவையான பாடல்களை எழுதித் தருமாறும் அதற்கான மெட்டுக்களைத் தந்தார்கள் ஆனால் சம்பளம் இப்போது எங்களால் தர இயலாது. தயாரிப்பு நிறுவனத்தில் முறைப்படி ஒப்பந்தமான பின் கொடுத்து விடுகிறோம், அதற்கு சில மாதங்கள் ஆகலாம், இப்போது நீங்கள் இந்த உதவியை செய்து தாருங்கள் என்று அன்போடு கேட்டுக் கொண்டனர். ஒரு இளைஞனின் திரைப்படக் கனவு மெய்ப்பட தமது பங்களிப்பும் இருந்தால்தான் என்னவென்று தோன்றியது. ஒப்புக் கொண்டு எழுதினேன். அந்தப் படம் தான் “கிடாரி”

Paadal Enbathu Punaipeyar Webseries 15 Written by Lyricist Yegathasi தொடர் 15: பாடல் என்பது புனைப்பெயர் - கவிஞர் ஏகாதசி

அந்தப் பயணத்தில் எனக்களித்த பிரசாத் முருகேசனின் அன்பு, அவர்கள் சொன்னதுபோல் பிற்காலத்தில் கொடுத்த சம்பளத்திற்கும் மேலானது. அவர் தந்த பணத்தை செலவு செய்து விட்டேன், இன்னும் அப்படியேதான் இருக்கிறது அவரின் அன்பு. அந்தப் படத்தில் நாயகி நாயகனை எண்ணி எண்ணி உருகுகிறது போல் ஒரு சூழல். சஞ்சனாவின் குரல் கல்லுக்கும் காதல் வரச் செய்யும்.

“மீசை முடி வாங்கியாந்து
மூக்குத்தியா போடப் போறேன்
வாசப்படி தாண்டிப் போயி வாழப்போறேன் வாழப்போறேன்

சட்டம்பள போலவந்து
சட்டுன்னுதான் கைய நீட்ட
நெஞ்சுக்குழி கேட்ட தண்ணி
ஆத்தில் ஏது

துள்ளுக்கெடா
போல நானும் நாளும்
துண்டுபட்டேன் உள்ளுக்குள்ள
ஏன் தானோ

நா ஊர்வழிய மறந்துபுட்டேன்
உன் மடிசாய
வா உன்வழிய
தெறந்துபுட்டேன் என் கொடிகாய

நெஞ்சுக்குள்ள நின்னு கிட்டு கொட்டடிச்சு வாரானே
மஞ்சனத்திப் பூவபோல
மனங்கொத்தி போறானே

உறங்கி நாளாச்சு
உடம்பு நூலாச்சு
உசுரே மருகாதே
திருட வருவானே

பாடல் எழுதுவது எப்படி என்று சில நண்பர்கள் என்னிடம் கேட்பார்கள். என் அனுபவத்தை அவர்களிடம் பகிர்வேன். பாடல் எழுதல் முறையில் ஒவ்வொருவருக்கும் ஒரு பாணி இருக்கிறது. அது அவரவர் உயிர்வழி உருவாவது. அந்த உக்தி அவர் தவழ்ந்து, நடந்து, விழுந்து கண்டடைந்ததாகும். பாடல் எழுதும் பாணியில் பத்தாயிரம் ரகமுண்டென்றால் ஏற்கிறதா மனம், ஆனால் உண்மையே.

உதாரணத்திற்கு நான் பாடல் எழுதத் தொடங்குவதற்கு முன் இயக்குநர் கூறிய திரைப்படத்தின் சூழலை மனதில் ஊறப்போடுகிறேன். அந்தப் படம் ஒரு கலைப்படமா, கமர்சியல் படமா என்று தெரிந்து கொள்கிறேன். பாடலுக்குள் நடமாடவிருக்கும் கதாபாத்திரங்களின் குணங்களை நினைவில் நிறுத்திக் கொள்கிறேன், காதல் பாடலெனில் நாயகர்களின் அழகையும். பின்பு கதை நடக்கும் நிலத்தையும் மொழியையும் பிறகு இந்தப் பாடலை எந்தக் கோணத்தில் கொண்டுசெல்லப் போகிறோம் என்பதையும் முடிவு செய்கிறேன், காரணம் பாடலுக்கான கோணங்களுமே எல்லையற்றவை தான்.

இப்போது ஒரு வட்டத்திற்குள் நின்று யோசிக்காமல் விரிந்த நோக்கில் குறிப்புகளை நிறைய எடுத்துக் கொள்கிறேன். அவை பெரும்பாலும் புதியனவாக இருக்கிறதா என்பதைப் பார்த்துக் கொள்கிறேன். பாடலுக்குரிய மெட்டை ஒரு நான்கு முறையாது கேட்கிறேன். அதன் தத்தகார அளவைப் புரிந்து கொள்கிறேன். என் மனம் எடுத்து வைத்திருக்கும் குறிப்புகளிலிருந்து முதல் வார்த்தையை கவனத்தோடு தயாரிக்கிறேன். காரணம் ஒரு பாடலுக்கு முதல் வார்த்தை கேட்போரின் நாக்கில் கரைவதாகவும் பின் உள்சென்று உறைவதாகவும் இருக்க வேண்டும், அப்போதுதான் தூக்கத்திலும் அந்த வார்த்தையை முணுமுணுப்பர்.

ஒரு பாடலில் சரணம் பல வைத்துக் கொண்டபோதும் பல்லவி ஒன்றை மட்டும் வைத்துக்கொள்வதற்குக் காரணமே பாடலை நினைவில் வைத்துக் கொள்வதற்குத் தான். ஒரே பல்லவி அடிக்கடி வருவதன் மூலமே அந்தப் பாடலுக்கும் இரசிகனுக்குமான நெருக்கம் கூடுகிறது.

அதே நேரத்தில் பாடலில் குறைந்த பட்சமாக எதுகை மோனை இலக்கண அழகை தவறவிடாமல் பார்த்துக் கொள்கிறேன். நம் முன் லட்சம் வார்த்தைகள் இருப்பினும் ஒரு பாடல் தனது சந்தத்திற்கு இசைச் சொற்களையே கோருகிறது. அப்படியாகப் பாடலை வார்க்கிறபோது தான் அதன் சந்தம் பாடலின் நோக்கத்தை சரியாக நம் காதுக்குள் நுழைத்து இதயம் வரை எடுத்துச் செல்லும். காது காயமின்றி இனிமையும் கொள்ளும். மெட்டுக்கு எழுதுகிற பாடல் மீட்டர் இடிக்காமல் இருக்க வேண்டும். மெட்டுக்கு அல்லாமல் எழுதினாலும் அங்கே சந்தம் இடிக்காமல் எழுத வேண்டும். இப்படி எழுதுகிற பாடல் ஒரு பல்லவி, இரண்டு சரணம் எழுதி முடிவதில்லை. மாறாக 5 பல்லவி 10 பல்லவி மற்றும் 5 சரணம் 10 சரணம் என நீள நீள எழுதியே ஒரு பல்லவி இரு சரணம் என்கிற இன்றையத் திரைப்படத்தின் ஒரு பாடலை உருவாக்குகிறோம். அப்படியெனில் மற்ற மற்ற பல்லவி சரணங்களை என்ன செய்வீர்கள் எனக் கேட்கத் தோன்றலாம் உங்களுக்கு, விற்காதவற்றை இதே சூழலை ஒத்த இன்னொரு புதிய பாடல் எழுதக் கிடைக்கும் போது அதன் குறிப்புகளில் இதை சேர்த்துக்கொள்வேன். குறிப்புகளில் தான் வைத்துக்கொள்ள முடியும், காரணம் அதன் மெட்டு வேறு இதன் மெட்டு வேறு.

நீங்கள் வாசித்து வந்தது ஒரு பாடலை உருவாக்குவதில் என் அணுகுமுறை. என் எதிர்காலத் திட்டத்தில் என்னைப் போன்ற பாடலாசிரியர்கள் ஒரு 25 பேரையாவது அழைத்து அவரவர் அணுகல் முறையை பகிர்ந்து கொள்ளச் செய்ய வேண்டும் என்று யோசித்திருக்கிறேன். அப்படியாகப் பகிரப்படும் போது தமிழ் பாட்டுச்சூழல் பெரும் செறிவும் செழிப்பும் பெறும்.

Paadal Enbathu Punaipeyar Webseries 15 Written by Lyricist Yegathasi தொடர் 15: பாடல் என்பது புனைப்பெயர் - கவிஞர் ஏகாதசி

2004 ஜூலை 16, உலகம் மறக்க முடியாத ஒரு கறுப்பு தினம். கும்பகோணத்தில் ஒரு தனியார் பள்ளிக்கூடம் தீப்பிடித்து 94 இளம் தளிர்கள் சாம்பலான கண்ணீர் தினம் அது. நான் திருமணம் முடித்து சில மாதங்களே ஆகியிருந்த நேரம். தனக்கே நிழற்ற நேரத்தில் இன்னோர் உயிரையும் சேர்த்துக் கொண்டு வாழ்ந்தவொரு வெப்ப காலத்தில் இந்த சேதி கேட்டு நான் வெடித்துவிட்டேன். வீடு செல்ல மனசின்றி வீதியில் நின்று ஒரு ஒப்பாரியை எழுதித் தீர்த்தேன்.

பல்லவி
ஊரு ஒறங்கலையே – ஒருவா
சோறு எறங்கலையே
பள்ளிக்கூடம் போன மக்கா
எரிஞ்சு போனீகளே
பெத்தவுக நாங்கருக்க
பிரிஞ்சு போனீகளே

கொடும நடந்துருச்சு – அழது
குளமும் நெறஞ்சிருச்சே

சரணம் – 1
அலமாரி பொம்மைகள் தேடுதே உன்ன
அவைகளுக்கு என்ன சொல்ல
இருக்கிற சீருடை யாருக்குக் கண்ணே
ஏஞ் செல்லமே நீயும் இல்ல

அரைக்கிற தேங்காய்க்குக்
கைநீட்டப் புள்ளருக்கா
இடுப்புல உக்கார
இனிமேதான் யாரிருக்கா

விளையாண்ட தடமெல்லாம்
கூட்டி அழிச்சிட்டோமேமே
கொஞ்சி வளர்த்திட்டக்
குருவி தொலைச்சிட்டோமே

ஆலைச் சங்காய் அழுதீரோ
தீக்கிரை ஆகயில
அம்மாவென்று அழைத்தீரோ
உயிர்விட்டுப் போகயில

சரணம் – 2
ஆணியில் தொங்கிய பையொண்ணு எங்கே
அதுவும் காணலியே
காலையில் சாப்பிட்ட ஈயத் தட்டில்
ஈரம் காயலியே

சுவரெல்லாம் ஓவியம்
கிறுக்கிட யார் இருக்கா(ர்)
எரிஞ்சு நீ போயிட்ட
கூப்பிடப் பேர் இருக்கா

பாக்குற தெசயெல்லாம்
பத்தி எரியுதப்பா
எரிகிற தீயெல்லாம்
புள்ள முகம் தெரியுதப்பா

விண்மீனாய் வானத்தில் பூப்பீரோ காலத்தின் ஒரு நாளில்
அநாதைப் பெற்றோரை பார்ப்பீரோ வருமந்தத் திருநாளில்

இந்தப் பாடலை அண்ணன் கரிசல் குயில் கிருஷ்ணசாமி அவர்களின் முகவரிக்கு அனுப்பி வைத்தேன். தாயாய் மாறி மெட்டமைத்துத் தந்தார் அல்லது கண்ணீரை மொழிபெயர்த்துத் தந்தார் என்று தான் சொல்ல வேண்டும். அப்படி ஒரு மெட்டு. அடுத்தபடியாக இந்நப் பாடலை மெட்டோடு நண்பர் கருணாநிதிக்கு அனுப்பினேன், ரொம்ப ஒப்பாரியாக இருக்கென்று அவர் அந்தப் பாடலை மேடைகளுக்கு எடுத்துச் செல்லவில்லை. பிறகு நடிகரும் பாடகருமான பெரியகருப்பத்தேவர் அப்பாவிடம் சென்று கிருஷ்ணசாமி அண்ணனின் குரலை டேப் ரெக்கார்டரில் போட்டுக் காட்டினேன். தொடர்ந்து மூன்று முறை கேட்டார். கண்களிலிருந்து நீர் ஒழுகிக்கொண்டே இருந்தது. நா தழுதழுக்க அவர் சொன்ன வார்த்தை,

“பாடும் போது என்னால் அழாமல் இருக்க முடியாது.. அழதுகொண்டு என்னால் பாட முடியாது.”

முந்தைய தொடர்களை வாசிக்க:

தொடர் 10: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 11: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 12: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 13: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 14: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 14: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 14: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி




தமிழகத்தின் மிகச்சிறந்த பேச்சாளர். இவர் மேடையில் நின்றால் மேடை கம்பீரம் கொள்ளும். இவரின் கண்கள் பார்வையை வீசி நம்மை அளக்கிற போது மொத்த கவனமும் அவரின் கையுக்குள் அடங்கிவிடும். பிறகு சிரிப்பது அழுவது கொந்தளிப்பதென நம்மின் வெவ்வேறு உணர்வுகளை அவரின் பேச்சு வெளிக்கொணரச் செய்யும். இராமய்யாவின் குடிசை, உண்மையின் போர்க்குரல் வாச்சாத்தி, என்று தணியும் போன்ற காத்திரமான நுட்பம் மிகுந்த சமரசமற்ற ஆவணப் படங்களை இயக்கியவர். இவரின் கட்டுரைத் தொகுப்புகளும் சிறுகதைத் தொகுப்புகளும் முக்கியமானவை. பாரதியார் மீது தீராத காதல் கொண்டவர்.

இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் நண்பராகவும் அசோசியேட் டைரக்டராகவும் பணிபுரிந்தவர். “என்று தணியும்” என்கிற திரைப்படத்தை இயக்கியவர். இவருக்கு இவ்வளவு பெரிய அறிமுகம் தேவைப்பட்டிருக்காது, முதல் வாக்கியமே அவரின் முகம் சொல்லியிருக்கும். இருப்பினும் இப்படி கடைசியில் பெயர் சொன்னால் கவிதை போன்றோர் அழகிருக்கும் அதனால். அவர் தான் தோழர் பாரதி கிருஷ்ணகுமார். இவரை பி.கே என தோழர்கள் அழைப்பர்.

Paadal Enbathu Punaipeyar Webseries 14 Written by Lyricist Yegathasi தொடர் 14: பாடல் என்பது புனைப்பெயர் - கவிஞர் ஏகாதசி

இவர் மேடையில் என் தனி இசைப் பாடல் வரிகளை மேற்கோள் காட்டிப் பேசும்போது பெரும் மகிழ்ச்சியாக இருக்கும். அவருக்கு தெலுங்குப் படம் ஒன்றை ரீமேக் செய்யும் வாய்ப்பு வந்தது. நான் படத்தின் மொத்தப் பாடல்களையும் எழுதுவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டு பணியைத் தொடங்கினோம். இசை பிரபாகர். நகர வாழ்வின் சீர்கேடுகளைச் சித்தரிப்பது படத்தின் சூழல்.

பல்லவி:
நகரா இது நரகம் தானா
புதிதாய் ஒரு கிரகம் தானா
மனிதா நீ மனிதன் தானா
புதிதாய் வந்த மிருகம் தானா

இதயம் அதை மூடிவிட்டு
எதை நீ இங்கு தேடுகின்றாய்
கடனை வாங்கி வீடு கட்டி
கதவைச் சாத்தி ஓடுகின்றாய்

பெருமூச்சுதான் தெரு கேட்குதே
வழி தேடியே வயதாகுதே

சரணம் – 1
அழகாய் ஒரு வாழ்க்கை இல்லை
அடிமைத்தனம் மீளவில்லை
உறைந்தோம் சொட்டு ஈரமில்லை
உணவை உண்ண நேரமில்லை

எதைத்தான் நீ தேடுகின்றாய்
எறும்பாய் தினம் ஓடுகின்றாய்
உறக்கம் ஒரு விருந்தானதே
உணவும் இங்கே மருந்தானதே

சரணம் – 2
பாசம் விற்கும் பாக்கெட்டிலே
உறவும் வந்தால் படிக்கட்டிலே
மரணம் நடக்கும் எதிர்வீட்டிலே
இதயம் கிடக்கும் கிரிக்கெட்டிலே

இதயம் மிஷின் ஆனதடா
சிரிப்பும் மறந்து போனடா
கரவை செய்யும் மாடுமிங்கே
காகிதம் தின்று வாழுதடா

இந்தப் பாடலைப் பார்த்த பாரதி கிருஷ்ணகுமார் அவர்கள் வெகுவாகப் பாராட்டினார். வாசிப்பும் ஆராய்ச்சியும் மிகுந்த ஓர் இடதுசாரி ஆளுமை என் வரிகளை ஒவ்வொன்றாய்ச் சொல்லி சொல்லி சிலாகித்தபோது என் கால் பாதம் தரையில் இல்லை. அந்தப் படம் எடுக்கப்பட்டு திரைக்கு வந்திருந்தால் நகர வாழ்வில் சிக்குண்டு கிடக்கும் மனித வாழ்வின் வெக்கை அசலாக வெளிப்பட்டிருக்கும். அந்தப் படத்திற்கு “நண்பர்கள்” என்று பெயர் சூட்டியிருந்தார். நடிகர் விஜயின் “நண்பன்” படம் அதற்குப் பிறகு வந்தது. இந்தக் கதை பத்து நகரவாசிகளைப் பற்றியது. நகர வாழ்வு தந்த நெருக்கடி தாங்காமல் மரணத்தைத் தேடிச் செல்லும் மனிதர்கள் தாம் இந்த பத்துப் பேரும்.

தற்கொலைக்குத் தள்ளப்பட்ட மனிதர்கள் ஒன்று கூடுகின்றனர். ஒவ்வொருவருக்கும் ஒரு பிரச்சனை, ஆனால் ஒவ்வொருவரும் சாக முடிவெடுக்கும் அளவிற்குப் பிரச்சனை என்பது அவர்களின் கணக்கு. நூறு நூறு விசயங்கள் பேசி. தற்கொலைகளுக்கான காரணங்கள் விவாதிக்கப் பட்டு இறுதியில் பேருந்து ஒன்றில் அந்த பத்து நண்பர்களும் ஏறிய பின்னர் படத்தின் இன்னோர் பாடல் தொடங்குகிறது.

பல்லவி:
அடடா இது சவப்பெட்டியா
நகரும் ஒரு பூந்தொட்டியா … (2)

இரையும் தேடிப் போகவில்லை
இதமாய் கொஞ்சம் வாழவில்லை
அடையும் நோக்கம் எதுவுமில்லை
உடைய செல்லும் பானைகளோ

நிறைவேறுமா – இது
பிழையாகுமா

சரணம் – 1
சருகாய் மனம் இளைத்தாரோ
சாவை வேண்டி அழைத்தாரோ
நரம்பே இல்லா வீணைகளோ
மதில்மேல் பத்துப் பூனைகளோ

முருகா வழி போகவிடு
முக்தி அடைந் தாகவிடு
கடனை கட்டு ஆளவிடு
கருணை கொண்டு சாகவிடு

தன்னை தூக்கியே – அட
தானே ஊர்வலமோ

சரணம் – 2
கடவுள் விரல் நீட்டவில்லை
பணமும் தலை காட்டவில்லை
உடலும் உயிர் தாங்கவில்லை
உலகம் விட்டுப்போக வந்தாரோ

பயணம் இங்கு போறோரை
மரணம் தடுத்தல் நியாயமில்லை
உலகம் கிழித்துப் போட்டிடுமோ
இவர்கள் ஒரே ஜாதகமோ

ஒத்த தேரிலே – அட
பத்து பேர் தானடா

இந்தப் பாடலை நான் வாசிக்கக் கேட்டுவிட்டு சில விநாடிகள் அமைதியாக இருந்தார் பி.கே. எப்படி இருக்கு தோழர் பாடல் என்றேன், அதற்கு அவர் தன் இரு முழங்கைகளையும் விரித்துக் காட்டினார். இரண்டு முழங்கைகளும் புல்லரித்திருந்தன.

நாகமலையின் அடிவாரத்தில் எங்கள் பணியான் கிராமம். கிழக்கும் மேற்கும் வீடுகள். வடக்கும தெற்குமே எங்களுக்கு விளையாடக் கிடைத்த திசைகள். வடக்கே மலை. தெற்கே காடு. அதற்காக பாம்புக்கும் தேளுக்கும் இவ்விரு திசையே வாழ்விடமெனக் கருதிவிடக் கூடாது. அவை திசையெட்டும் வாழும். வேறும் பாம்பும் தேளும் மட்டும் தானா என்று குறைபட்டுக் கொள்கிறீர்கள் தானே.. இருங்கள் வருகிறேன். என் சொக்கர் சியான் வீட்டுத் தாழ்வாரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட முள்ளம் பன்றி முட்கள் இருந்தன. அதன் கதை பெரிது. அந்தக் கதையை நான் சொல்லப் போவதில்லை ஏனெனில் இது கதைத் தொடரல்ல. உடும்புகள் செல்லமாய் ஓடித்திரியுங்கள் சுவர்களில், என் மாமன்மார்களின் கண்களில் சிக்கிவிட்டால் தான் பிரச்சனை அவற்றுக்கு.

மற்றபடி இன்று நாகமலையில் மான்கள் அதிகமாகிவிட்டதால் ஒத்தையில் பைக் ஓட்டி வருகிற பயல்கள் சாலைகளில் அவை குறுக்கும் மறுக்குமாக பாய்கையில் சிக்கி விழுந்துவிடுகிறார்களாம். நரி அண்ணன்கள் எப்போதும் பிரபலம் தான், காவல்கார்களின் கண்களைக்கட்டி மலையில் ஆடுகளை மேய்த்து விடலாம் ஆனால் ஆடுகளை துவம்சம் செய்திடும் நரிகளே இங்கு ராஜா. அப்பறம் ‘கடைசி விவசாயி’ படத்தில் மாயாண்டி பெரியவர் மயிலை ரசிக்கிறார் அவ்வளதான். அந்நாளில் டேப் ரெக்கார்டரில் பாட்டைப் போட்டுவிட்டு நானும் மயிலும் நடன நிகழ்ச்சியே நடத்தியிருக்கிறோம்.(இதை நீங்கள் அப்படியே நம்பினால் நான் பொறுப்பல்ல).

எல்லாவற்றையும் விட உடைசாளி முட்களே என் பால்யத்தின் வில்லன்கள். உள்ளூர் பள்ளி முடித்து ஆறாம் வகுப்பிற்கு பெரிய பள்ளிக்கூடம் சேர்க்கும்போதுதான் செருப்பு வாங்கித் தருவேன் என்பது என் ஏழை ராஜ மாதாவின் கட்டளை. அதுவரைக்கும் உடை முள்ளுக்கு என் பாதங்களை ஒப்புக் கொடுத்துத்தானே ஆகவேண்டும். ஒரு நாள் என் உள்ளங்காலில் உடை முள் குத்தி ஒரு அங்குலம் இறங்கிவிட்டது.

உக்கார்ந்து பிடிங்கிப் பார்க்கிறேன், உயிர் போகிறது ஆனால் முள் வரவில்லை. எத்தனை குல தெய்வங்களைக் கூப்பிட்டிருப்பேனோ. பதினொரு வயதில் செருப்பு வந்துவிட்டது எனக்கு, ஆனால் இப்போதும் நாகமலை உச்சியிலிருந்து அடிவாரம் வரை என்னால் வெறும் பாதத்தோடு ஓடியபடி இறங்கிவர முடியும். ( குறிப்பு: நான் வேகமாக இறங்குவேன் என்றுதான் சொன்னேன், ஏறுவதில் வெறும் பாதம் என்பது சரி. வேகம் என்பதெல்லாம் நினைத்து மட்டுமே பார்க்கலாம்.)

Paadal Enbathu Punaipeyar Webseries 14 Written by Lyricist Yegathasi தொடர் 14: பாடல் என்பது புனைப்பெயர் - கவிஞர் ஏகாதசி

நினைத்துக்கூடப் பார்க்கவில்லை, நான் விளையாடித் திரிந்த காடும் மலையும் என் திரைப்படப் பாடலுக்கான சூழலாக அமையுமென்று. தம்பி பிரசாத் முருகேசன் ஒரு திரைச் சித்திரம் இயக்கினார். சசிக்குமார் நாயகன் வேல ராமமூர்த்தி வில்லன். மற்றும் நிகிதா விமல், நெப்போலியன். S.R.கதிர் ஒளிப்பதிவு. தர்புகா சிவா இசை. படம் “கிடாரி”. படத்தில் மூன்று பாடல்கள் எழுதினேன் அவற்றுள். இன்று ஒன்று.

பல்லவி:
வெட்டருவா வீச்சருவா
போற இடம் வெட்டவெளி
எட்டு திக்கும் கள்ளிச் செடி
பதுங்குதடா ரெட்டப் புலி

வலசாருக் கூட்டம்
வழி சொல்லும் போடா
உட முள்ளு பாஞ்சா
உயிர் போகும் தான்டா

சரணம்:
யாராரோ காடு பாத்தாக
சாமி பூதம் எல்லாம்
கிடையாடு போட்ட பாதையில்
நீயும் நானும் போறோம்

ஊருக்குள் பல வேஷந்தான்
ஒரு நேரம் வன வாசந்தான்
சூதாட்டம் அட ஆடாம
சூரியனும் இங்கு முளைக்காதா

எளியது விடும் மூச்சில்
வலியது உலை காய்ச்சும்
உண்மையில் அரிசியில – அட
எவனுக்கும் பேர் இல்ல

முந்தைய தொடர்களை வாசிக்க:

தொடர் 10: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 11: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 12: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 13: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 13: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 13: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி




ஒரு பாடல் வெற்றி பெறுகிறதென்றால் அந்தப் பாடலாசிரியனுக்கு அந்தப் பாடலை ஒத்த சூழலுக்கு அதிக வாய்ப்பு வரும். அந்தப் பாடலை முன்னுதாரணமாகச் சொல்லி “அதைப்போல” வரிகள் இருந்தால் நன்றாக இருக்குமென அடுத்தடுத்து பாடல் எழுத அழைக்கும் இயக்குநர்கள் கூறுவார்கள். அதே தாக்கத்தை வெற்றி பெற்ற படமும் ஏற்படுத்தும். இயக்குநர்களிடம் கதை கேட்கும் தயாரிப்பாளர்கள் அந்தப் படத்தின் பெயர் சொல்லி “அதைப்போல” ஒரு கதை இருந்தா உடனே பண்ணிடலாம் என்பார்கள். இந்த அணுகுமுறை சரியா என்றால் நிச்சயம் இல்லை என்று சொல்வேன்.

இந்த விசயத்தை நம் ஆட்கள் சிலரின் விவசாய முறையை உதாரணமாகக் காட்டலாம். ஒருவர் வெங்காயம் விளைவித்த நேரத்தில் சந்தையில் அதற்கு நல்ல விலையென்று கேள்விப்பட்டால், ஊரே வெங்காயத்தை நடுவார்கள், பின்பு குறிப்பிட்ட பொருள் மட்டுமே சந்தையில் அதிகம் குவியும்போது விலைச் சரிவு ஏற்பட்டு விவசாயம் நட்டமாகும். இது போன்ற சிக்கலை சினிம பல காலகட்டங்களில் சந்தித்திருக்கிறது.

இதே போலே ஒரு பாடலாசிரியருக்கு எந்தப் பாடல் முதல் வெற்றியை ஈட்டித் தருகிறதோ அந்தப் பாடலின் ரகம் அவரின் அடையாளமாகிவிடும். அது கிராமத்துப் பாடலென்றால் அவருக்கு அது தான் வரும் என்றும் அது நகரத்துப் பாடலென்றால் இவருக்கு இதுதான் வரும் என்றும் முத்திரை குத்திவிடுவார்கள். இதில் நானும் சிக்கிக்கொண்டவன் தான். என்னை கிராமத்துப் பாடல் எழுதும் பாடலாசிரியர் பட்டியலில் வைத்திருக்கிறார்கள் அதற்குக் காரணம், என் முதல் பாடலும் என் முதல் வெற்றிப் பாடலும் கிராமத்து சூழல் கொண்டது என்பதனால்.

இதிலிருந்து மாறுபட்டு பல நகரத்துப் பாடல்கள் எழுதியிருக்கிறேன், அந்தப் படங்கள் வெற்றி பெறாததால் பாடல் வெளியே தெரியவில்லை. வெளியாக இருக்கும் நகரத்தை நிலமாகக் கொண்ட படங்களில் ஒன்றுதான் “சட்டென்று மாறுது வானிலை”. இதிலிருந்து இன்னொரு பாடல்,

பல்லவி:
சுடச்சுட விழிகளில் இரு சூரியன் தருகிறாய்
தொடத்தொட அருகினில் ஒரு நிலவென வருகிறாய்
உன் வீட்டின் வாசலில் செய்தித்தாளைப் போல்
வந்து வீழ்கிறேன் நானடி
என் வெள்ளை வானத்தில் நீ வண்ணம் பூசினாய்
என் வெட்கப் பூவினை தீண்டினாய்

சரணம் – 1
வளையலின் அளவெடுத்து இடையினைப் படைத்தானோ
திருஷ்டிகள் கூடாதென்று என் இதயத்தை உடைத்தானோ
வாழ்க்கையே இன்று பூக்களாய் அட வாசனை சொல்லுதே
வானவில் சொல்லா வண்ணம் என் தேகத்தைக் கொல்லுதே
அன்பே உன் கையில் ரேகை போல் நானிருப்பேன்
வீட்டின் கண்ணாடி போல் என்றும் காத்திருப்பேன்

சரணம் – 2
இமைகளைத் தொலைத்தாயோ கண்களைத் திறந்து வைக்க
காதலை அழைத்தாயோ உயிரினை விருந்து வைக்க
வார்த்தைகள் நீயும் பேசிட சில வாரங்கள் ஆகுதே
வானமும் எந்தன் மூச்சினில் பல மாதமாய் வேகுது
அன்பே முள் மீது பனித்துளி நீ அல்லவா
வெட்கம் உடையாமல் உன்னை நான் அள்ளவா

பொதுவாக, பாடகர்கள் எல்லா பாடல்களையும் பாடிவிடுவார்கள், ஆனால் எந்தப் பாடலின் அழகான வரிகளால் தாங்கள் ஆட்கொள்ளப் படுகிறார்களோ அதைக் கொண்டாடிவிடுவார்கள். ஏனெனில் வெறுமனே பாடுவதற்கும் கொண்டாடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. அப்படித்தான் இந்தப் பாடலை ஒலிப்பதிவு செய்து கொண்டிருக்கும் போது நடந்தது,

“வளையலின் அளவெடுத்து
இடையினைப் படைத்தானோ
திருஷ்டிகள் கூடாதென்று – என்
இதயத்தை உடைத்தானோ”

என்ற வரிகளைப் பாடும் பொழுது, சற்றுப் பதிவை நிறுத்தி இந்தப் பாடலை யார் எழுதியது என்று கேட்டு மனதாரப் பாரட்டிவிட்டு மீண்டும் பாடத் தொடங்கினார் பாடகர் உன்னிமேனன் அவர்கள். இந்தப் பாடத்தில் நான் எழுதிய மூன்று பாடல்களை மட்டும் அல்ல மொத்தப் பாடல்களையும் இசையமைப்பாளர் ஷியாம் இழைத்து இழைத்து இனிமை செய்திருக்கிறார். எல்லா புகழும் இயக்குநர் ரவிபெருமாளுக்கே.

Paadal Enbathu Punaipeyar Webseries 13 Written by Lyricist Yegathasi தொடர் 13: பாடல் என்பது புனைப்பெயர் - கவிஞர் ஏகாதசி

இந்தியாவின் மிகச் சிறந்த நடன இயக்குநரும் இயக்குநருமான பிரபு தேவா அவர்களிடம் உதவியாளராகப் பணிபுரிந்த நண்பர் ஷக்தி வசந்த பிரபு அவர்கள் “ஏன் இந்த மயக்கம்” எனும் படத்தை இயக்கினார். அதன் கதை மிக முக்கியமானது. நம் பெண் பிள்ளைகள் இணையதள காமுகர்களிடம் சிக்கி வாழ்வைத் தொலைத்துக் கொள்ளும் கொடுமையை அசலாகக் காட்டிய படம் அது. நானும் சக்தி வசந்த் பிரபுவும் நெருங்கிய நண்பர்கள். பல கதைகளைப் பேசி விவாதித்திருக்கிறோம். வாழ்வில் எது நடப்பினும் அதிர்வின்றி கடந்து பயணிக்கும் அன்பர். உழைப்பை தன் நிழலாக உடன் வைத்துக்கொள்பவர். அவர் படத்தில் மூன்று பாடல்கள் எழுதினேன். அதில் “ஒரு காதல் ரீங்காரம்” எனும் பாடலின் சரணத்தில்,

“வான வில்லிலே தோன்றும் காதல்
எந்த வண்ணத்தில் மறைந்திருக்கும்
பூவனத்திலே தோன்றும் காதல்
எந்தப் பூவினில் நிறைந்திருக்கும்

காதலில் யாரும் ஏழைகள் இல்லை
காசுகள் பார்த்தா காதல் வரும்
சாலை எங்கிலும் தூறல் பூக்கும்
காட்சி இன்றியே காதல் வரம்”

என எழுதியிருப்பேன். சித்தார்த் பாபு அவர்களின் இசை பாதங்களை தாளமிட வைக்கும். ஷான் ஜான்ஷனும் அருண் பிரபாகரும் என் வரிகளுக்கு வலு சேர்த்திருப்பார்கள்.

“மழைக்காலம்” படம் 2012 ல் வெளி வந்தது. அதன் இயக்குநர் எஸ். தீபன் அவர்கள் என் நண்பர். அவரின் இயற்பெயர் தங்கராஜ். அவர் போராட்டம் நானறிவேன். திரைப்படத் துறையில் ஒருவர் முதல் பட வாய்ப்புப் பெற்று இயக்குவது என்பதை உணர்ந்தாலே தவிர ஒருவர் சொல்லி ஒருவருக்குக் கடத்த முடியாது. இவரின் முதல் பட போராட்டமும் அதுபோன்றதுதான். இந்த “மழைக்காலம்” படத்தில் ஒரு காதல் பாடலும், ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான நட்பைப் போற்றும் பாடலும் எழுதினேன்.

Paadal Enbathu Punaipeyar Webseries 13 Written by Lyricist Yegathasi தொடர் 13: பாடல் என்பது புனைப்பெயர் - கவிஞர் ஏகாதசி

எல்லா பாடலாசிரியர்களின் பாடல் பட்டியலிலும் காதல் பாடல்களே நிரம்பி வழியும். மாற்றுச் சூழலுக்கு பாடல் வாய்ப்புக் கிடைப்பதென்பது அரிதிலும் அரிது. நட்பைப் பற்றிய பாடல் வரிசையில் ஆண்களின் நட்புப் பற்றியும் பெண்களின் நட்புப் பற்றியும் நிறையப் பாடல்கள் வந்திருக்கின்றன ஆனால், ஆண் பெண் நட்புப் பற்றிய பாடல் மிகவும் குறைவு. காரணம் ஆண்-பெண் நட்பு என்பதை புரிந்து கொள்ளும் பண்பைப் பின்னுக்கிழுக்கும் பிற்போக்குத் தனங்கள் இங்கே வேரூன்றியிருக்கின்றன. இந்த விசயத்தில் நகரத்தில் கொஞ்சம் முன்னேற்றம் இருக்கிறதெனச் சொல்லலாம். “சக்கரைக் கட்டி” படத்தில் ‘டாக்ஸி.. டாக்ஸி’ , “ஆட்டோகிராஃப்” படத்தில் ‘கிழக்கே பார்த்தேன்’, “பாண்டவர் பூமி” படத்தில் ‘தோழா தோழா’ போன்ற சில பாடல்கள் மட்டுமே நம்மிடம் இருப்பதாய்ப் பார்க்கிறேன். எனது பாட்டுப் பயணத்திலும் ஒரு ஆண்-பெண் நட்புப் பாடல் எழுதும் வாய்ப்பு பெற்றதைப் பெருமையாகக் கருதுகிறேன். இப்பாடலுக்கு இசை: பிரேம் ஆனந்த். குரல்: ஹரீஷ் ராகவேந்திரா – சைந்தவி.

பல்லவி:
ஆண்:
தேவதை நீ தான் மண்ணில் எனக்கென
தோழியாய் பிறந்திட்டாய் – அடி
உனக்கென கடவுள் உயிரையும் கேட்டால்
ஏற்பேன் தருவதாய்

அட நிலவிலும் கூட கறையுண்டு பெண்ணே
நட்பில் இல்லையம்மா
நடு ஆற்றில் அள்ளிய நீரைப் போலவே
உன் மனம் வெள்ளையம்மா

பெண்:
தேவனே நீ தான் மண்ணில் எனக்கென
தோழனாய்ப் பிறந்திட்டாய் – அட
உனக்கென கடவுள் உயிரையும் கேட்டால்
ஏற்பேன் தருவதாய்

சரணம் – 1
ஆண்:
புகைப்படம் எடுத்தால் பிரிவோம் என்று
நாம் அதை விரும்பல

பெண்:
நான் இரண்டடி குறளில் ஓரடி பிரித்தேன்
பொருளொண்ணும் இருக்கல

ஆண்:
நீ பேசும் வார்த்தைகள் கவிதையாகும்
இரவெல்லாம் பேசடி

பெண்:
நீ தூக்கம் இழந்தால் உன்னுடல் மெலியும்
கொஞ்சம் தூங்குடா

ஆண்:
அடி சண்டை போடவா சாதம் ஊட்டவா
சொல்லடி செல்லத் தோழி

சரணம் – 2
ஆண்:
தாயும் தந்தையும் தராத சுகத்தை
தோழி நீ தந்திட்ட

பெண்:
என் பூமியும் சாமியும் தராத வரத்தை
தோழனே தந்திட்ட

ஆண்:
நான் ஒற்றைச் சிறகிலும் உயரப் பறப்பேன்
என்னுடன் நீ இரு

பெண்:
உன் கண்கள் துடிக்க கைகள் தந்தியே – நீ
கடவுளின் திருவுரு

ஆண்:
அட நீயும் நானும் தான் இரட்டைப் பிறவியோ
சொல்லடி செல்லத் தோழி

முந்தைய தொடர்களை வாசிக்க:

தொடர் 8: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 9: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 10: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 11: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 12: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 12: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 12: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி




இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் தீவிர ரசிகன் நான். அவரின் “என் இனிய தமிழ் மக்களே” குரலை கேட்கிற போதெல்லாம் என் மனம் இப்பவும் சிறகடிக்கும். இவரிடம் உதவி இயக்குநராக சேர்ந்துவிட வேண்டும் என்பது என் கனவு. அந்நாளில் என் உடன்பிறவாச் சகோதரர் அண்ணன் ஐந்துகோவிலான் அவர்கள் அவரிடம் உதவி இயக்குநராக பணி செய்துகொண்டிருந்தார். ஒரு உதவி இயக்குநராக இருந்துகொண்டு இயக்குநரிடம் இன்னொருவருக்கு உதவி இயக்குநர் வாய்புக் கேட்பதெல்லாம் ஒரு சங்கடமான விசயம்.

அதே போல் திரைப்பட ஸ்டில் ஃபோட்டோகிராபர் “அருள் ஸ்டுடியோ” மனோகரன் அண்ணனிடமும் யாரிடமாவது உதவி இயக்குநராக சேர்த்துவிடும்படி கடிதம் மூலம் தொடர்பில் இருந்தேன். முதலில் யாரிடமாவது உதவி இயக்குநராக உள் நுழைந்து கொண்டால் பின்னர் பாரதிராஜா அவர்களிடம் சேர்வதற்கு சென்னையிலிருந்தபடியே முயற்சி செய்யலாம் என் எண்ணம், ஆனால் சொல்லும்படியாக ஒன்றுமே சாதிக்காமல் காலம் ஓடிக் கொண்டே இருந்ததை என்னால் ஏற்க இயலாமல் எந்த ஒரு செயல்பாடும் களத்திலிருக்கும் போதுதான் சாத்தியம் என்று முடிவெடுத்தேன்.

Paadal Enbathu Punaipeyar Webseries 12 Written by Lyricist Yegathasi தொடர் 12: பாடல் என்பது புனைப்பெயர் - கவிஞர் ஏகாதசி

வத்தலக்குண்டு G.தும்பைப்பட்டியில் என் அக்கா ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் குமுதம். அது பாரதிராஜா அவர்கள் திருமணம் முடித்த ஊர். அங்கே இயக்குநர் இமயத்தின் நண்பர் கோபால் அவர்களிடம் என்னை குமுதம் அக்கா அறிமுகம் செய்து வைத்தார். அதன் பின் கோபால் அவர்கள் பாரதிராஜா அவர்களிடம் நான் உதவி இயக்குநராக சேர்ந்துகொள்ள ஒரு சிபாரிசுக் கடிதம் கொடுத்து அனுப்பினார். கடிதம் பெற்றுக் கொண்டு பார்சன் காம்ப்ளக்ஸ் முன் நின்றேன் அது இமயத்தின் அலுவலகம். அவர் “கிழக்குச் சீமையிலே” வெற்றியைக் கொண்டாட வெளிநாடு போயிருப்பதாகச் சொன்னார் செக்யூரிட்டி. அதை கேட்டு விட்டு வெளியேறுவதைத் தவிர வேறுவழி அப்போதைக்குத் தெரியவில்லை எனக்கு.

நடிகர் பெரியகருப்பத்தேவர் அப்பாவின் வீட்டிற்குச் சென்று விசயத்தைக் கூறினேன். பாரதிராஜா சாரிடம் எவருடைய சிபாரிசும் செல்லாது என்கிற உண்மையைத் தெரிந்து கொண்டு அந்த கடித்தை சூட்கேஸின் அடியில் வைத்துவிட்டேன். சாப்பிட எதுவும் இல்லையென்றால் அக்கம் பக்கத்தில் பஸ்ஸிற்கு காசு புரட்டிக் கொண்டு நம் வீட்டிற்கு வந்துவிடு. இங்கு எப்போதும் உணவிருக்கும். பட்டினி மட்டும் கிடந்துவிடாதே என்று நந்தனம் வீட்டிலிருந்து பெரியகருப்பத்தேவர் அப்பா சொன்னது இன்னும் என் காதுகளில் கேட்கிறது ஆனால் இன்று அவர் இல்லை. நான் அவர் வார்த்தைகளை புதிதாக வாய்ப்புத் தேடிவரும் தம்பிமார்களிடம் சொல்கிறேன். அந்த நல்ல இதயம் நூறு படங்களுக்கும்மேல் நடித்தும், தம்பி ஞானகரவேல் எழுதிய “சிவகாசி ரதியே” பாடலை பாடியும் நம்மோடு இருக்கிறார். இன்று அவரது மூத்த மகன் இனிய தம்பி விருமாண்டி “ரணசிங்கம்” என்கிற படத்தை இயக்கி வெற்றிபெற்றுள்ளதை நினைத்து புளகாங்கிதம் அடைகிறேன்.

பிற்காலத்தில் “அன்னக்கொடி” படத்தில் ஒரு பாடல் எழுதி அதற்கு பாரதிராஜா அவர்களின் கையால் கையெழுத்திட்ட சம்பளக் கவரை வாங்கி வெளிவந்தது அதே பார்சன் காம்ப்ளக்ஸ் தான். பின்னொரு நாள் தேனியில் இருந்துகொண்டு அழைத்தார் போனேன். அன்னக்கொடி படத்தின் அதுவரைக்கும் எடுத்துள்ள 3.30 மணிநேர ரஷ் காண்பித்தார். அதில், மனைவியை சந்தேகிப்பதையும் கொடுமைப் படுத்துவதையுமே வாழ்வாகக் கொண்ட ஒரு முரட்டுத்தனமான கணவனிடமிருந்து தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள தப்பித்து காடு கரை தாண்டி ஓடிவந்து எதார்த்தமாக தன் காதலனின் குடும்பத்திலேயே அடைக்கலமாகிற ஒரு மாறுபட்ட சூழலைச் சொன்னார்.

படத்தில் காட்சியாகக் கூற வேண்டுமானால் நான் ஏழு காட்சிகளை எடுக்கவேண்டும். படம் மிகவும் பெரிதாகி விடும்., ஆனால் ஏழு காட்சிகள் சொல்லவேண்டிய விசயத்தை நீ மூன்று நிமிடங்களில் சொல்லி முடிக்க வேண்டும் என்றார் இயக்குநர் இமயம். அந்த பாடலைத் தான் சென்ற வாரம் தொடங்கினேன், இப்போது முடித்தும் வைக்கிறேன். இது ஜி.வி. பிரகாஷ் குமாரும் பூஜாவும் பாடியது. வெயிலில் நனையும் இவர்களது குரலை ஒலி கேட்டுப் பிரமிக்கலாம்.

ஆண்:
உண்ணப் பழ மில்ல
உக்காரக் கொப்பு மில்ல – இனி
எங்கதான் போவாளோ
எங்க கிளி

ஆண் – பெண்
மகளேன்னு மாரடிக்க
ஒரு தாயுமில்ல – ஒரு
தாயுமில்ல
ஆத்தான்னு ஓடிவர
ஒரு அப்பனுமில்ல – ஒரு
அப்பனுமில்ல

பெண்:
சுத்திரது இந்த பூமியா
ஏ பக்கத்தில நிக்கிறது சாமியா
ஒன்னப் பாத்தது – ஏ
ரெண்டாம் பொறப்பு
இனிமேல் ஏது என்
உசுருக்கு இறப்பு

ஆண்:
உசுர எடுத்துக்கிட்டு
ஒருநாள் போனபுள்ள
தொட்டிச் சீல சுத்திக்கிட்டா – இவ
இனி இந்த வீட்டுப் புள்ள

இயக்குநர் இமத்திற்கும் எனக்குமான தொடர்பு என்பது மிகச் சிறியது தான். ஆனால் அது சிலந்தி வலை போன்று பின்னப்போனது. நான் அவரைப் பற்றி எதை எழுதினாலும் அதற்கு மேலும் எழுத முன்னும் பின்னும் இருந்துகொண்டே தான் இருக்கிறது.

ஒருவன் உண்மையாய் காதலிக்கப்படுகிற ஒரு விசயம் அவனிடம் ஒரு நாளில் வந்தடைந்தே தீரும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை. அப்படித்தான், இலக்கியம் தெரிந்த ஓர் உதவி இயக்குநர் வேண்டுமென அண்ணன் சீமான் அவர்களிடம் பாரதிராஜா அவர்கள் கூற, அவரைச் சுற்றி ஆயிரம் பேர் இருந்தபோதும் சீமான் அண்ணன் என்னை அழைத்துக் கொண்டு அறிமுகம் செய்து வைத்தார். அந்த நாளன்று அவரிடம் நான் ஒரு குறுங்கதை சொன்னதும் அவரோடு அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டதும் மறக்க முடியாத தருணம்.

தமிழ்த்திரை சேனலுக்காக அவர் இயக்கிய “மயிலு குயிலு” நிகழ்ச்சிக்கு அவரோடு உட்கார்ந்து காட்சிகளை விவாதித்தபோது அவரிடம் நான் கண்ட ஈடுபாட்டை எண்ணி வியந்திருக்கிறேன். உதவி இயக்குநர்களை வெறும் எடுபுடியாக மட்டும் பயன்படுத்தும் பல இயக்குநர்களுக்கு மத்தியில் அவர் உதவியாளர்களின் சிந்தனையை மதித்து அவர்களை வார்த்தெடுக்கும் விதம் கண்டு நெகிழ்ந்திருக்கிறேன்.

எனது “கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை” படத்தைப் பார்த்து விட்டு அவர் 20 நிமிடங்கள் பாராட்டிப் பேசியது இன்னும் என் இதயத்தில் மிதக்கிறது. என் நடிப்பையும் இயக்கத்தையும் கூட அவர் பாராட்டியது எனக்குள் இன்னும் பூக்காலமாக இருக்கிறது.

ஒருமுறை கலைஞர் டிவிக்காக அவர் இயக்கிய “தென்பாண்டி சிங்கம்” தொடரில் என்னை நாயகனாக நடிக்கக் கேட்டு நான் பாடல் எழுதும் பணி கெட்டுவிடுமே என்றெண்ணி மறுத்தபோது. “நீ நடி.. சங்கரபாண்டி வந்துட்டா ஒன்ன விட்டுடுறேன்” எனச்சொல்லி தேனிப்பக்கம் ஒரு கிராமத்தில் அவர் இயக்கத்தில் ஒருநாள் கதாநாயகனாக நடித்துவிட்டு மறுநாள் சங்கரபாண்டி வந்ததும் நான் சென்னை வரை அவர் முன் நடித்ததை எண்ணி தலைகால் புரியாமல் ஆனந்தித்ததை எப்படி சொல்வேன்.

“மதயானைக் கூட்டம்” பாடல் வெளியீட்டு விழாவில் என்னைப் பாராட்டி அன்பெனும் மழையில் நனைத்தது தொடங்கி இன்றுவரை எங்கு பார்த்தாலும் நான் எழுதி வெளியாகிற புதிய பாடல்களையெல்லாம் கேட்டுவிட்டு பாராட்டுகையில் என் விழிகளில் நீர் முட்டாமல் என்ன செய்யும். என் உடல் சோறு தின்று வளர்ந்தது ஆனால் என் உயிர் அவரின் சினிமா உண்டு வளர்ந்தது.

“எவன் எவனோ என் காசைத் தின்கிறான் என் பிள்ளை நீ ஏன் தள்ளி நிக்கிற அடிக்கடி அலுவலகம் வா.. என்ன வேணும்னாலும் கேளு செய்யிறேன்” என்று சொன்ன அவர் தாயன்பின் முன்னால் உருகிக் கிடக்கிறேன்.

‘மஜா’ ‘கண்ணும் கண்ணும்’ போன்ற படங்களில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து பின்னாளில் “சட்டென்று மாறுது வானிலை” எனும் படத்தை இயக்கிய என் நண்பர் ரவி பெருமாள் என் பயணத்தில் மறக்க முடியாத பண்பாளர். எப்போதும் இனிமையாகப் பேச அவரைப் போன்று என்னாலெல்லாம் இயன்றதில்லை. அவர் இயக்கிய படத்திற்கு மூன்று முத்தான பாடல்களை எழுதினேன். படம் வெளியாவதில் தாமதமாகிக் கொண்டிருக்கிறது, ஆனாலும் உற்சாக குறையாத மனிதர். அவர் படத்திற்கெழுதிய ஒரு பாடலின் ஒரு சரணத்தை மட்டும் இப்போதைக்கு உங்களுக்கு. இது காதலனும் காதலியும் படுக்கையறையில் எழுதிய காமத்துப்பால். ஷியாம் இசையில் உன்னிமேனனும் சித்ராவும் உருக்கி உருக்கி ஊற்றித் தந்த பாடல் இது.

Paadal Enbathu Punaipeyar Webseries 12 Written by Lyricist Yegathasi தொடர் 12: பாடல் என்பது புனைப்பெயர் - கவிஞர் ஏகாதசி

ஆண்:
யாழ் தொட்டு நான் மீட்ட
உடல் கொண்டு வந்தாய்
உன் சிணுங்கலையே
இசையெனத் தந்தாய்

பெண்:
தேரொன்றை மலர் தான்
இழுத்திடும் இங்கே – என்
தேவைகள் அறிந்து
முழங்கிடு சங்கே

ஆண்:
என் ஆறாம் திணை
நீயல்லவா
உனை ஏழாம் சுவை
எனச்சொல்லவா

பெண்:
நீ யானைக் கன்று
போன்றல்லவா
பூவே என்று
பொய்சொல்லவா

ஆண்:
காமம் தான்
உயிரினை எரிக்க – அன்பே
படுக்கைகள் எதற்கடி
நாம் விரிக்க

முந்தைய தொடர்களை வாசிக்க:

தொடர் 8: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 9: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 10: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 11: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

Paadal Enbathu Punaipeyar Webseries 11 Written by Lyricist Yegathasi தொடர் 11: பாடல் என்பது புனைப்பெயர் - கவிஞர் ஏகாதசி

தொடர் 11: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி



Paadal Enbathu Punaipeyar Webseries 11 Written by Lyricist Yegathasi தொடர் 11: பாடல் என்பது புனைப்பெயர் - கவிஞர் ஏகாதசி
ஊர் எல்லையில் இருக்கும் கருப்புசாமி சிலையை எவராலும் புகைப்படம் எடுக்க முடியாது என்பது எங்கள் ஊர் சனங்களின் நம்பிக்கை. எனக்கு எதையும் புதிதாகச் செய்யவேண்டும் என்பதும் அதற்கான துணிவை வரவழைத்துக் கொள்வதும் பிடித்தமான விசயம் இப்போது வரையிலும் கூட. இதற்கு முன் கடவுள் தொடர்பான அனுபவம் ஒன்றிரண்டு எனக்குள் இருந்தது.

நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது ஒருநாள் மதிய உணவ வாங்க தட்டோடு வரிசையில் நின்றிருந்தேன், ‘எ’ பிரிவின் தமிழாசிரியர் தாராப்பட்டி பெரியசாமி அவர்கள் வரிசை கண்காணிப்பு பணியில் இருந்தார். நான் அன்றைக்குத்தான் அவர் முகத்தை மிக அருகில் பார்த்தேன். அவரின் மீசை சிற்றெறும்பின் ஒரு வரிசை போன்றிருந்தது எனக்குள் பெரும் சிரிப்பை வரவழைத்தது, இருப்பினும் அடக்கிக் கொண்டு பக்கத்தில் இருந்த என் நண்பனிடம் “இங்க பார்றா இந்த வாத்தியாருக்கு எத்தனூண்டு மீசைன்டு” எனச் சொல்ல, இது தமிழ் அய்யா காதில் விழுந்து மறுநொடி எதிரே பார்த்தார், நான் நின்றிருந்தேன். அந்த வாக்கியத்தையைச் சொன்னது நான்தான் என்பது என் முகத்தில் எழுதி ஒட்டியிருந்தது போலும் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார்.

என் செவிப்பறை அதிர்ந்த விசயம் என் வகுப்பறை முழுக்க நிரம்பி வழிந்தது. மன்னிக்கணும் பள்ளிக்கூடமே நிரம்பி வழிந்திருக்கிறது, காரணம் நான் பள்ளியின் கதாநாயகன், அடித்தவர் என்னை அறிந்திருக்கவில்லை போலும்.

“அறிந்திருக்கவில்லை என்றால் அப்புறமென்ன கதாநாயகன்”

என்றுதானே கேட்கிறீர்கள். அது அப்படித்தான். இந்த லட்சணத்திற்கே நான் முட்டி முட்டி மக்கப் பண்ணிக் கிடந்து, செத்து சுண்ணாம்பானது எனக்குத்தான் தெரியும். அடுத்து வகுப்பிற்கு வந்த குருசாமி வாத்தியார்,

“யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்இழுக்குப் பட்டு”

என்கிற அய்யன் வள்ளுவரின் குரலோடு வகுப்பைத் தொடங்கினார் என்பதல்ல செய்தி. துயரம் தாளாது நான் அன்று மாலை எங்கள் ஊர் காளியம்மன் கோவிலில் முன் நின்று என் கோரிக்கையை முன்வைத்தேன். அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோரிக்கை என்னவென்றால்,

“சாமி…, என்னை ஒரு சிறுவன் என்றுகூட பாராமல், விபரம் தெரியாமல் பேசிவிட்ட ஒரு சாதாரண விசயத்திற்காக ஈவு இரக்கமின்றி அறைந்த பெரியசாமி அய்யா, இந்தப் பள்ளியிலிருந்து மாற்றலாகிப் போய்விட வேண்டும்” என்பதுதான். இதில் என் கண்ணியம் என்னவென்றால், நான் பெரியசாமி அய்யாவை வேறு பள்ளிக்கு மாற்றத் தான் சொன்னேனே தவிர காளியிடம் அவரை வேலையிலிருந்தே தூக்கச் சொல்லவில்லை. இன்னொன்று நான் உங்களிடம் தமிழய்யாவிற்கு நாங்கள் வைத்திருந்த ‘மூக்கு நோண்டி’ என்கிற பெயரை சொல்லாமல் மறைத்ததும்தான். இன்னும் அவர் மேல் இவனுக்குக் கோபம் தீரவில்லை என்பது உங்கள் மைண்ட் வாய்ஸ் இல்லையா. இல்லை என் கோபம் அய்யா மீது அல்ல, அவரை பள்ளியிலிருந்து மாற்றலுக்கு வழிவகை செய்யாத கடவுள் மீதுதான். கடவுள் என்னைக் கண்டு கொள்ளவில்லை. பிறகென்ன நானும் கடவுளைக் கண்டுகொள்ளவில்லை. மிக்க நன்றி பெரியசாமி அய்யா உங்களின் அறை தான் ஒரு பகுத்தறிவுவாதி உருவாக மூல காரணம்.

பல்லவி
காவிகள் செய்யும் லீலையை இனியும்
ஒத்துக் கொள்வதா
ஆவிகள் பேசும் என்கிற சொல்லை
நம்பிச் செல்வதா

மருந்திட்டால் போதும்
ஆறிவிடும் காயம்
இல்லாத கடவுளை
இழுப்பதென்ன நியாயம்

சரணம் – 1
தேர்வினில் வெல்லத் தேங்காய் உடைத்தல்
எப்படி ஞாயமடா
ஒழுங்காய்ப் படித்தால் உடைக்கும் தேங்காய்
சட்டினி ஆகுமடா

வைத்திடும் பொங்கலை வாரி வழித்து
சாமி தின்கிறதா
வட்டிக்கு வாங்கி வீட்டிற்கோர் ஆடு
வெட்டு என்கிறதா

பேய்கள் வருவதை நாய்கள் அறித்திடும்
பேச்சினை நம்பாதே
பூனை குறுக்கே விதவை எதிரே
தடையெனக் கொள்ளாதே

வேல்கள் உடம்பில் குத்திக்கொள்ளும்
வேண்டுதல் தேவையா
வாள்கள் சுமக்கும் சாமியின் உருவம்
வன்முறை தானய்யா

சரணம் – 2
கூழுக்கு வழியின்றி குடிசைக்குள் வாழும்
ஏழைகள் ஒரு பக்கம்
பாலுக்குள் நாளும் நீச்சல் அடிக்கின்ற
சாமிகள் யார் பக்கம்

மூக்குத்தி இல்லாமல் தங்கச்சி கல்யாணம்
நடக்காமல் இருக்கு
தெய்வத்தின் உண்டியல் தங்கத்தைத் தின்று
செறிக்காமல் கிடக்கு

ஆசைகள் துறந்த சாமியார் கூட்டம்
ஏசியில் வாழ்கிறது
பூஜைக்கு வந்த பெண்களின் கற்பு
தீபத்தில் வேகிறது

தூணிலும் துரும்பிலும் சாமிகள் இருந்தால்
தவறுகள் நடந்திடுமா
பூகம்பம் வந்திங்கு பூமியும் பிளந்து
உயிரினம் அழிந்திடுமா

இந்தப் பாடலை முற்போக்கு மேடையெங்கும் தோழர் துரையரசன் அவர்கள் தானே அமைத்த மெட்டில் பாடி கேட்போரை விழிப்படையச் செய்துகொண்டிருக்கிறார், மற்றும் பாடலையே தனது சுவாசமாகக் கொண்டு என்னற்ற சமூகப் பாடலை இடைவிடாது பாடிக் கொண்டிருக்கும் தோழர் உமா சங்கரும் இப்பாடலைப் பாடி பதிவு செய்திருக்கிறார்.

இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் எங்கள் ஊர் எல்லையில் விட்டுவிட்டு வந்த கனவாய் கருப்புசாமியை அழைத்து வருகிறேன். நண்பர்கள் பந்தமும் கூட கட்டினார்கள் கருப்பனை புகைப்படம் எடுத்தால் கருப்பன் கருப்பாக இருக்கமாட்டான் ஃபிலிம் வெள்ளையாகத்தான் வருமென்று. நான் 1997, 98 களில் “விவிட்டார்” அப்படின்னு ஒரு காமிரா வைத்திருந்தேன். சனங்களின் அறியாமையை போக்குவதற்காக காமிராவை கழுத்தில் மாட்டி களத்தில் இறங்கினேன், அதாவது கருப்பனின் காம்பவுண்ட் சுவரில் ஏறி நின்று ஓர் அழகான ஃபிரேம் வச்சு புகைப்படம் எடுத்துவிட்டு இறங்கினேன். பிறகு மதுரையில் கிளாசிக் லேபில் பிரிண்ட்க்கு கொடுத்தேன்.

அய்யோ.. நண்பர்களிடம் சவால் விட்டோமே, கருப்பன் வருவாரா வெள்ளையன் வருவாரா என்றெல்லாம் பதட்டத்தில் நான் காத்திருக்கவில்லை. கருப்பன் மிக அழகாக கலர்ஃபுல்லாக குறையின்றி நேர்த்தியாக ஜம்மென்று வந்திருந்தார். பிறகென்ன ஒரு பகுத்தறிவாளன இந்த சனங்க அன்புத் தொல்ல செஞ்சு, கருப்பனை முந்நூறு காப்பி பிரிண்ட் போடச் சொல்லி வீட்டு வீட்டுக்கு மாட்டிக்கிட்டாய்ங்க.

Paadal Enbathu Punaipeyar Webseries 11 Written by Lyricist Yegathasi தொடர் 11: பாடல் என்பது புனைப்பெயர் - கவிஞர் ஏகாதசி

“அன்னக்கொடியும் கொடிவீரனும்” என்று முதலில் பெயர் சூட்டப்பட்ட ஒரு திரைப்படம், பிறகு அந்தப் படம் “அன்னக்கொடி” என பெயர் மாற்றம் பெற்று வெளியானது. இந்தப் படம் ஜாதியத்திற்கு எதிரான கருவைக் கொண்டது. இசை ஜி.வி. பிரகாஷ் குமார். ஒளிப்பதிவு சாலை சகாதேவன். இதில் நாயகனாக லட்சுமணனும் நாயகியாக பிரபல நாயகி ராதா அவர்களின் மூத்த புதல்வியான கார்த்திகா மற்றும் மணிவண்ணன் மனோஜ் போன்றோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் டைட்டில் ஸாங் எழுதும் வாய்ப்புக் கிடைத்தது. ஒரு சிறுதெய்வ வழிபாட்டுப் பாடல் வழியாக படத்தின் மையக் கருத்தை வலியுறுத்துகிற வகையே சூழல்.

கொலை வாள எடுங்கடா
குரல்வலைய அறுங்கடா
கொடி வீரன் சாமிக்கு
கோபங்கள் தீரட்டும்

கெட்டவன் பொறந்திட்ட ஊருக்கு – அட
கொடிவீரன் கிளம்புவான் போருக்கு

சாதிய அழிங்கடா
சாஸ்த்திரம் கிழிங்கடா
கொடிவீரன் சாமிக்கு
காய்கறிகள் ஆறட்டும்

சூதுகளை நாளும்
சொக்கப்பன் கொளுத்துவோம்
கேக்காமல் சுத்தினால்
பூமியைக் கொளுத்துவோம்

துடியான சாமிக்கு
பலிகடா நேர்ந்தது
இன்னைக்குத் தானடா
பட்டகடன் தீர்ந்தது

இந்தப் படத்தின் இயக்குநர் பெயரை சஸ்பென்ஸாக கடைசியில் சொல்லலாம் என்றுதான் பொறுத்திருந்தேன். எங்களுக்குத் தெரியாதாடா டே… ஓ சஸ்பென்ஸில் மண்ணப்போட என்று நீங்கள் கொந்தளிப்பது எனக்கு அக்யூரெட்டா தெரியுது, இருந்தாலும் அவர் பேர லாஸ்ட்டா சொன்னா நல்லாருக்குமென்று தோன்றியது அவ்வளவுதான். அவர் பெயர் இயக்குநர் இமயம் பாரதிராஜா. இவரை எனக்கு அப்பாவாகப் பார்க்கத் தோன்றும் நண்பராகப் பழகத் தோன்றும்.

Paadal Enbathu Punaipeyar Webseries 11 Written by Lyricist Yegathasi தொடர் 11: பாடல் என்பது புனைப்பெயர் - கவிஞர் ஏகாதசி

நான் கருப்பசாமியைப் புகைப்படம் எடுத்த கதையையெல்லாம் சொன்னேன், ஆனால் நான் மதிக்கும் கருப்பசாமி செவக்காட்டு மண்ணின் சிகரம் பாரதிராஜா தான். அன்னக்கொடி படத்தில் இன்னொரு முக்கிய பாடலுக்கு என்னை அழைத்த தருணத்தையும் எனக்கும் அவருக்குமான இனம்புரியா காதலையும் அடுத்த வாரம் பகிர்கிறேன்.

ஆண்:
அன்னமே – ஏ
அன்னமே
தெச தொலச்ச – ஏ
அன்னமே

நீ எங்க போற மலங்காட்டுல
நீ எங்க போற தனியே…

பெண்:
தப்பி வாரா ஒரு
தங்கப் பொண்ணு
செங்காட்டு மண்ணே
சொல்லாதே

ஓடிவார இங்க
ஒத்த பொண்ணு
நடுக் காட்டு முள்ளே
குத்தாதே

முந்தைய தொடர்களை வாசிக்க:

தொடர் 5: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 6: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 7: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 8: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 9: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 10: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

Paadal Enbathu Punaipeyar Webseries 10 Written by Lyricist Yegathasi தொடர் 10: பாடல் என்பது புனைப்பெயர் - கவிஞர் ஏகாதசி

தொடர் 10: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி




ஒரு பாடலை எழுத எவ்வளவு நேரத்தை எடுத்துக் கொள்கிறீர்கள் என ஒவ்வொரு பாடலாசிரியரிடமும் கேட்கப்படும் கேள்விக்கு கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் சொன்ன பதில் அழகானது அதே நேரம் ஆச்சரியமானது. அதிக பட்சம் அரை மணி நேரம் என்கிறார். சில பாடல்களை பத்து நிமிடங்களில் எழுதியதாகவும் பதிவு செய்திருக்கிறார். அது அந்தத் துறையில் அவருக்கு இருக்கும் பேராற்றல். நானெல்லாம் பாடல்களை எழுதுகிற அவஸ்தையை அருகில் இருந்து நீங்கள் பார்த்தீரேயானால் என் தெரு இருக்கும் திசையைக் கூட திரும்பிப் பார்க்க மாட்டீர்கள். காரணம், எழுதும் பாடலுக்குள் ஓர் எழுத்தும் எனக்குப் பிடிக்காமல் இருக்கக் கூடாது என்கிற எனது தீவிரம், மற்றும் குப்பைத் தொட்டியில் போடுவதற்கொரு பாடல் வேண்டும் என்று கேட்டாலும் அதை அழகான பாடலாகவே எழுதித்தரும் பழக்கம் என்னிடம் உண்டு. அதனால் அந்த அவஸ்தையை நான் விரும்பியே ஏற்றிருக்கிறேன்.

Paadal Enbathu Punaipeyar Webseries 10 Written by Lyricist Yegathasi தொடர் 10: பாடல் என்பது புனைப்பெயர் - கவிஞர் ஏகாதசி

எழுதி மெட்டமைப்பதில் மெட்டுக்கொரு பரிமாணமும், மெட்டுக்கு எழுதுவதில் எழுத்துக்கொரு பரிமாணமும் உண்டு. இதை அனுபவத்தால் மட்டுமே அறிந்து கொள்ள முடியும். மெட்டுக்கு எழுதும் போது எனக்கு நேரம் கொஞ்சம் அதிகம் தேவைப்படுகிறது. மெட்டில்லாமல் எழுதுகிறபோது நேர மிச்சமும் சுதந்திரமும் கிடைக்கிறது.
ஒரு பாடல் எப்படி எழுதப் பட்டாலும் அதற்கு இசை அத்துணை முக்கியம். இசை தான் எழுத்துக்களை தேனில் ஊறவைத்து தேரேற்றுகிறது. இசை தான் எழுத்துக்களுக்கு போதை ஊற்றிக் கொடுக்கிறது, அதன் தள்ளாட்டமே நடனமாகிறது. இதை கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தான்,

“கவிதை
மொழிக்கு ஆடை கட்டுகிறது
இசை தான் றெக்கை கட்டுகிறது” என்பார்.

திரைப்படங்களில் ஒரு பாடல் எப்படி உருவாகிறது என்பதைப் பற்றி அறிந்து கொள்வது பலருக்கும் பிடித்தமான விசயமாக உணர்கிறேன் காரணம், நான் கல்லூரிகளுக்கு விருந்தினராகப் போகிற போதும், நண்பர்கள் வட்டாரத்திலும் நான் பாடலாசிரியரான காலந்தொட்டே கேட்டு வருகிறார்கள் இந்தக் கேள்வியை.

கதையை உருவாக்கும் போதே ஒரு இயக்குநர் பாடலுக்கான இடங்களையும் முடிவு செய்து விடுகிறார். தயாரிப்பாளரிடத்திலும் கதாநாயகன் கதாநாயகியின் முன் கதை சொல்லும்போதும் பாடல் வருகிற இடங்களைக் குறிப்பிடுகிறார். பின்னர் இசை அமைப்பாளரிடம் கதை சொல்லி முடித்து பாடலுக்கான சூழலையும் சொல்லுகிறார். இசையமைப்பாளர் இயக்குநர் திருப்தி கொள்ளும்படியான அளவுக்கு மெட்டுக்களைப் போட்டுக் காட்டுகிறார். இறுதியாக ஒரு படத்திற்கு ஐந்து அல்லது ஆறு பாடல்களுக்கான மெட்டுக்களைத் தேர்வு செய்து கொள்கிறார்கள். அதன் பின்னர் ஒவ்வொரு பாடலையும் யார் எழுதினால் நன்றாக இருக்கும் என்று கவிஞர்களின் சமீபத்திய வெற்றிப் பாடல்களை வைத்துக்கொண்டு திட்டமிடுகிறார்கள். அதன்படியே ஒவ்வொரு மெட்டையும் அந்தந்த கவிஞர்களுக்குக் கொடுத்து எழுத வைக்கிறார்கள்.

இன்று நீங்கள் கேட்கும் பிரபலமான பாடல்களின் மெட்டுக்கள் அனைத்தும் முதன் முதலில் கேட்கும்போது பாடலை எழுதப்போகிறவர்களுக்கு கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போன்று இருக்கும் . ஆரம்ப காலத்தில் தத்தகாரம் புரியாமல் அண்ணன் இயக்குநர் அருள்ராஜன் அவர்களிடம் அவரின் படப்பிடிப்பிற்கு நடுவில் கேட்டுத் தெரிந்திருக்கிறேன். அதன் பின் என் நண்பர் இசையமைப்பாளர் செல்வ தம்பியிடம் சந்தேகத்தை கேட்டுத் தெளிவு பெற்றிருக்கிறேன்.

இப்படி அல்லல்பட்டு தத்தகாரத்தை உள்வாங்கி பின் சொன்ன சூழலுக்கு மீட்டர் பிசகாமல் எழுதவேண்டும். ஒரு பாடலுக்கு ஒன்பது பாடல் எழுத வேண்டும். அப்போது தான் ஒரு பாடல் உருவாகும். இயக்குநரின் விருப்பத்திற்கேற்ப ஒவ்வொரு பல்லவியிலும் ஒவ்வொரு சரணத்திலும் இரண்டு இரண்டு வரிகளாகப் பொறுக்கி ஒன்று சேர்த்து ஒரு பாடல் உருவாகும். அப்படித்தான் “பீமா” படத்தின் “மெகு மெகு” பாடலுக்கு நண்பர் நா. முத்துக்குமார் 20 பல்லவி நாற்பது சரணம் வரை எழுதினார். ஆடுகளம் படத்தின் “ஒத்த சொல்லால” பாடலுக்கு நண்பர் வெற்றிமாறன் அவர்கள் கேட்காமலேயே 15 பல்லவி, 15 சரணம் எழுதிக் கொடுத்தேன். அவர்களுக்கு எல்லாம் பிடித்துப் போய் எதை வைப்பது எதை ஒதுக்குவது என்பதில் சிரமம் இருந்ததாக இசை அமைப்பாளர் ஜீ.வி. பிரகாஷ்குமார் சொல்லியிருக்கிறார்.

ஒரு பாடலுக்குத் தேவையான ஒரு பல்லவி இரண்டு சரணங்களை எடுத்துக் கொண்டு இயக்குநரும் பாடலாசிரியரும் இசையமைப்பாளரிடம் செல்ல, அங்கே வரிகளை இசையமைப்பாளர் அந்த மெட்டிற்குப் பாடிப் பார்ப்பார். எங்காவது மீட்டர் இடித்தால் பாடலாசிரியரை அதை சரிசெய்து கொண்டு பின் ட்ராக் சிங்கர் வைத்து அல்லது இசையமைப்பாளரே ட்ராக் வாய்ஸ் பாடி வைத்துக் கொள்வர். அவசரமாகப் படப்பிடிப்பிற்குக் கிளம்பும் இயக்குநர்கள் ட்ராக் வாய்ஸை மட்டும் பெற்றுக்கொண்டு செல்வதுண்டு. அவசரமில்லையெனில் இந்தப் பாடலுக்குத் தேவையான பாடகரைத் தேர்வு செய்து குரல் பதிவு நடத்தி தேவையான இசைக் கோர்வைகளைச் செய்து மிக்ஸிங் மாஸ்டரிங் செய்யப்பட்டு பாடல் இறுதி நிலை அடைகின்றது.

ஒரு பொறுப்பு மிக்க பாடலாசிரியராக நான் பாடல் பதிவின் போது பாடகரின் மொழி உச்சரிப்பை மிக உற்று கவனிக்கிறேன். மொழி சிராய்ப்பு நடக்கவிடாமல் முடிந்த அளவு சரி செய்கிறேன். பாடல் வெளியீட்டு விழாவிற்குச் சென்று எழுபது சேனலுக்கு பேட்டி கொடுக்கிறோனோ இல்லையோ, பாடல் பதிவில் கலந்து கொள்ள பெரும்பாலும் தவிர்ப்பதில்லை. எனக்கு அதைவிட இதுதான் முக்கியம், காரணம் பாடல் பதிவின் போதுகூட பாடலின் மெருகேற்றலுக்காக சில வார்த்தைகளை மாற்றம் செய்வேன். இப்படித்தான் நண்பர்களே ஒரு பாடல் உருவாகிறது.

எழுதுகிற எல்லா பாடல்களும் ஒலிக்கூடத்தின் பதிவுவரை செல்வதில்லை. ஒலிப்பதிவு செய்த எல்லா பாடல்களும் திரைக்கு வருவதில்லை. திரைக்கு வரும் எல்லா பாடல்களும் வெற்றி பெறுவதுமில்லை. அதே போல் வெற்றிபெறும் பாடல்கள் எல்லா நல்ல பாடல்களும் அல்ல வெற்றி பெறாத பாடல்கள் எல்லாம் மோசமும் அல்ல. ஏனெனில் பெரிய ஹீரோக்களுக்கு எழுதப்படுகிற சுமாரும் சூப்பராகிவிடும். புது முகங்களுக்கு எழுதப்படுகிற சூப்பரும் சுமாராகிவிடும்.

திரைப்படப் பாடல்களைப் பொறுத்தவரை பல்லவியின் முதல் இரண்டு வரிகள், மக்கள் முணுமுணுப்பதாக இருக்க வேண்டும் என்று பார்த்துக்கொள்வது வழக்கம். என்னைப் பொருத்தவரை எல்லாவரிகளுக்கும் மெனக்கிடுகிறேன். ஆனாலும் மக்கள் பாடலின் முதல் இரண்டு வரிகளைத் தாண்டி அந்தப் பக்கம் போகமாட்டார்கள். பாடல்களை மனனம் செய்துவந்து பாராட்டுகின்ற சில ரசிகமணிகள் இந்த லிஸ்டில் அடங்கார். ஒரு பாடலின் சரணங்களுக்கே இந்தக் கதி என்றால், “ராக்கமா கையத் தட்டு” பாடலின் இடையே வரும் ‘குனித்த புருவமும்” போன்ற துண்டு வரிகளைப் பிழைக்க வைப்பது பெரும் பாடு. ரஜினி படம் என்பதால் நாவுக்கரசர் எழுதிய தேவாரம் தப்பித்தது. அப்படியான பாடல்கள் எனக்கும் பல அமைந்ததுண்டு அவற்றில் சில உங்களுக்காக.

“ஈட்டி” படத்தில் ‘பஞ்சு மிட்டாய் மேல தீயப் பத்த வச்சாடா”‘ எனும் பாடலின் நடுவே, இளம் பெண்கள் குழுவாகக் கூடி மையத்தில் நின்றாடும் நாயகியின் அழகைப் பாடுவதாக,

“பேரழகாள் வருகின்ற
தெருவை அறிவானோ
கார்முகிலாள் தருகின்ற
அமுதம் குளிப்பானோ
கூர் விழியால் ஒருநாளிவன்
குத்திச் சரிவானோ”

“மதயானைக் கூட்டம்” படத்தில் புஷ்பவனம் குப்புசாமி பாடிய “கொம்பு ஊதி கொட்டடிச்சு கெளப்புங்கடா சக்க” என்கிற ஒரு திருமண விழா பாடலில், மணமக்களுக்கு திருமணம் முடிந்து முதலிரவுக்கு அனுப்பி வைக்கும் போது மணமகனின் நண்பர்கள் பாடுவதாக அமைந்த வரிகள்,

“சாமந்திப் பூவா
சக்கரப் பாகா
பாத்திட்டு வந்துதான்
சொல்லுங்க…

மூச்சுல வெயில்
கொட்டுறா குயில்
எதுக்க ஆம்பள
நில்லுங்க…

ஒத்தடம் போலத்தான்
நடந்தாள்
ஒருத்தரும் பாக்காத
தடந்தான்

தாழம்பூ அவளோட
நெறந்தான் – அவன்
தன்னையே மறந்து
கெடந்தான்”

நண்பர் பிரசாத் முருகேசன் இயக்கத்தில், தர்புகா சிவா இசையில் “கிடாரி” படத்தில் மூன்று பாடல்கள் எழுதியுள்ளேன், அதன் முழு அனுபவத்தை வேறொரு கட்டுரையில் சொல்ல இருக்கிறேன், அதற்கும் முன்னதாக அந்தப் படத்தில் வரும், “வண்டியில நெல்லு வரும் வண்டியில நெல்லு வரும்” எனும் நண்பர் அந்தோனிதாஸ் பாடிய பாடலின் குறுக்காக, சசிக்குமாரும் அவரது காதலி நிகிதா விமலும் ஒரு சிறு வீட்டிற்குள் திட்டமிட்டுச் சந்தித்துக் கொள்கிறார்கள். அவள் முழு மூர்க்கத்தில் காதலனை சுவற்றில் சார்த்தி முத்தம் வைத்து முதலடி எடுத்து வைக்கையில் மனதின் தவிப்பை மருகலாய் எழுதினேன்.

“விரல் தொடும் தூரத்தில்
வர மிருக்கு
போதும் போதுமே நா வாழ
விடிய மறந்திடு ராத்திரியே
வேற எதுவும் வேணா
உருவம் பாத்தே
உசுரு போதே
என்ன மாயந்தான் நீ செஞ்ச

யாத்தே தாங்கல
தூத்தக் காட்டுல
போத ஏத்துதே மீச
தீபம் ஊமையா
போக சாபந்தான்
நானும் போடத்தான் ஆச

முந்தைய தொடர்களை வாசிக்க:

தொடர் 5: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 6: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 7: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 8: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 9: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

Paadal Enbathu Punaipeyar Webseries 9 Written by Lyricist Yegathasi தொடர் 9: பாடல் என்பது புனைப்பெயர் - கவிஞர் ஏகாதசி

தொடர் 9: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி




எல்லாத் திருவிழாக்களையும் விட தமிழர்களுக்குத் தைத்திருநாள் முக்கியமானது. ஏனெனில், திருவிழா பத்து நாட்கள் இருக்கும் போதே இதற்கான ஆயத்தப் பணி தொடங்கிவிடும். அதேபோல் இந்தத் திருவிழாதான் ஆடு மாடுகள் மற்றும் விவசாயத்திற்கு துணைபுரிகிற அல்லது வளர்ப்பு விலங்கினங்களுக்கான திருவிழாவாகும்.
விலங்கினங்களுக்கான இவ்விழாவில் மனிதன் விருந்தினராகக் கலந்து கொள்கிறான்.

எங்கள் ஊர்களில் பொங்கல் விழாவிற்கு மட்டுமல்ல என்ன விழா வந்தாலும் அதற்கு முன் கந்துவட்டி கடை முன் எம் ஏழை எளிய மக்கள் நின்று விடுவார்கள். விழாக் காலங்களில் மட்டும் தான் கிராமத்து மக்கள் மகிழ்வோடு இருப்பார்கள் மற்ற நாட்களில் உழைத்துக் கொண்டிருப்பார்கள். அதனால் தான் கடன் பெற்றாவது வீட்டிற்குள் மகிழ்ச்சியைக் கூட்டி வருவார்கள். காலமெல்லாம் உழைப்பவர்கள் எதற்காக கடன் பெற வேண்டும் என உங்களுக்குத் தோன்றும் தான். ஆனால் கொடுக்கப்படும் கூலிப் பணம் அன்றாடம் குடலை நிரப்பத்தான் சரியாய் வரும். இன்னொன்று விழாக்களுக்கு விருந்தினர்களை அழைத்து உபசரிக்கும் பழக்கம் கிராமத்தில் உயிர்ப்புடன் இருக்கின்றன. இதை அவர்கள் சுமையென நினைத்ததில்லை ஒருபோதும். ஒரு விழாவிற்கு கடன் பெறுவதும் அதை அடுத்த விழாவரை கட்டுவதும் இவர்களுக்கு வழக்கம். என்ன கஷ்டம் என்றால் கிராமத்தில் மாதம் ஒரு திருவிழா வரும். இந்த சூழலில் நான் எழுதிய ஹைக்கூ ஒன்று நினைவிற்கு வருகிறது.

“திறந்தே இருக்கின்றன
திருவிழா காலத்திலும்
அடகுக் கடைகள்”

Paadal Enbathu Punaipeyar Webseries 9 Written by Lyricist Yegathasi தொடர் 9: பாடல் என்பது புனைப்பெயர் - கவிஞர் ஏகாதசி

எங்கள் கிராமத்தில் பொங்கல் வரப்போகிறது என்றால், ஒரு வாரம் முன்பே என் அம்மா நாகமலையின் அடிவாரத்தில் புற்றுமண் அள்ளி வந்து வீட்டின் சிறு சிறு ஓட்டைகளைத் தீற்றுவார். பிறகு சாணம் கரைத்து அந்த இடங்களில் மெழுகி விடுவார். சுவரில் ஈரம் காய்ந்தபின் சிமெண்ட் தொட்டியில் ஊறப் போட்டிருந்த சுண்ணாம்புப் பாலெடுத்து வீட்டிற்கு வெள்ளை பூசுவோம். பின்னர் காவிப் பொடியாலான நீள் கோலத்தால் வீடு அழகாகும். கிராமப் புறங்களில் போகிக்கு எரிக்க ஒன்றுமிருக்காது காரணம் நகரங்களில் எரிக்கப்படுகின்ற பழைய பொருட்கள் இங்கே வாழ்வோரின் அத்தியாவசியப் பொருட்கள் ஆகும். தை ஒன்றாம் தேதியன்று மாவிலை கூரைப்பூ ஆவாரம்பூ போன்றவற்றை முடிசெய்து வீட்டின் முன் கூரையில் செருகுவோம். விவசாய நிலத்தின் வடகிழக்கு மூலையில் செருகி வைப்பதும் ஏன் அவரவர் வீட்டருகிலோ தொலைவிலோ வைத்திருக்கும் சாணக் குப்பைகளிலும் இதை செருகி வைப்போம்.

எங்கள் பணியான் கிராமத்து தலைமேடு தான் நாகமலை. அங்கிருந்து கூரைப்பூவும் ஆவாரம் பூவும் அம்மா பறித்து வந்து விடுவார்கள், ஆனால் மாவிலைக்குப் பெருங் கஷ்டம். ஊர் முடிவில் ஒரு மாந்தோப்பு இருக்கிறது. தோப்புக்காரர், கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி காவல் காத்துக் கொண்டிருப்பார். அவர் கண்ணைக் கட்டிவிட்டு மாவிலை பறித்தால் தான் பொங்கல் காலை எங்கள் ஊரின் கூரைகளுக்கு வந்துசேரும். வேறு வழியின்றி எங்கள் திருட்டு நடந்தேறும். வருடா வருடம் அவரும் நாங்களும் அப்படி அப்படியே தான் இருக்கிறோம். பொங்கலோ.. பொங்கல்..!

ஆடு மாடுகளை ஊருணியில் அழுக்குத் தீரக் குளிப்பாட்டி வண்ண வண்ண பொட்டு வைத்து வெயிலில் உலரச்செய்து பின் பச்சைப் புற்களை தின்க விடுதலும், வாசலில் பொங்கலிட்டு கரும்பு வைத்தலும், ஊரில் ஒரு குழு வீடு வீடாக வந்து வட்டி தெளித்தலும், காலை மாலையில் தொடங்கும் சாமியாட்டமும் எழுத வேண்டுமென்றால் இங்கே எனக்கு வழங்கப்பட்ட பக்கங்கள் பத்தாது. அத்தனை அழகு. அத்தனையும் அழகு.

எனது “Oru Cup Tea” யூ டியூப் சேனலில் பொங்கலுக்கு ஒரு பாடல் உருவாக்கலாம் எனத் திட்டமிட்டு எழுதினேன். எழுதிமுடித்து தோழர் சுகந்திக்கு அனுப்பினேன். அந்த வரிகளுக்கு சுகந்தி அமைத்த மெட்டும் பாடிய விதமும் எனக்கு கேட்கும் நாளெல்லாம் பொங்கல் வந்து போனது.

பல்லவி:
தை தை தை தைமாதத் திருவிழா
தலைநிமிர்ந்து நடந்த எங்கள்
தமிழனோட திருவிழா
கை கை கை கைமாறுத் திருவிழா
உலகுக் கெல்லாம் சோறுபோட்ட
உழவனுக்குத் திருவிழா

வீட்டுக்கு வண்ணங்கள் தீட்டணும் – நம்ம
வீதிக்கு மாவிலையில் தோரணம் – பொட்டுப்
பூக்களை மாட்டுக்கும் சூட்டணும் – நம்ம
நேசத்த உலகுக்குக் காட்டணும்

சரணம் – 1
பருத்தி நூல்களால் ஆடைகளை நெய்து
உடுத்தி நடந்தது தமிழ்நாடு
கருத்திலே கலையின் நுட்பத்திலே
சிறந்து விளங்கிய பண்பாடு

மெரினா கடற்கரை மீதினிலே
வீரத்தைக் காட்டினோம் பாத்தீரோ
சங்க காலத்து ஓலைகளில் – எங்கள்
சக்கரைத் தமிழைக் கேட்டீரோ

குழு:
அட கோலத்தில் அரிசி மாவு தான்
அதன் மத்தியில் பூசணிப் பூவுதான்
அட பொங்கிடும் பொங்கச் பானைதான்
அங்கே ஆடிடும் கரும்புத் தோகைதான்

சரணம் – 2
சாலை மனிதர்கள் இளைப்பாற
திண்ணை கட்டியது தமிழினம் தான்
வாழை இலையில் விருந்து வைத்து
வாட்டம் போக்கியதும் தமிழினம் தான்

சிலம்பம் கபடி வழுக்குமரம் – ஜல்லிக்
கட்டு வில்வித்தை ஆடிடுவோம்
சிந்துச் சமவெளிக்கு முழுந்தியது – எங்கள்
கீழடி என்றே பாடிடுவோம்

குழு:
நாங்கள் சாதி மதங்களை அறுத்திடுவோம்
நல்ல சமத்துவப் பொங்கலை வைத்திடுவோம்
அந்த உதய சூரியனின் கிழக்குதனை
எங்கள் உலகின் திசைக்குத் திருப்பிடுவோம்

தை மாதம் முழுக்க நாடு பூராவும் ஜல்லிக்கட்டு நடக்கும். அந்த ஜல்லிக்கட்டு வீர விளையாட்டிற்கு எத்தனையோ தடைகள் வந்தன. தமிழரின் ஒரு பண்பாட்டு அடையாளம் அழிந்துவிடக் கூடாது என்பதற்காக உலகம் முழுக்க வாழுகின்ற தமிழ் பெருமக்கள் கொடுத்த குரலின் ஓசை வானம் தொட்டுத் திரும்பியதை எவராலும் மறுக்க இயலாது.

என் நண்பர் முருகேஷ் பாபு அவர்கள் ஒரு மருத்துவர். திரைப்படத்துறையில் நெறியாள்கை செய்வதில் விருப்பம் உள்ளவர். அவர் தமிழ் கலாச்சாரத்தின் மீது தீராக் காதல் கொண்டவர். அவர் ஒரு வீடியோ பாடல் ஒன்றை இயக்குவதற்காக, ஜல்லிக்கட்டுப் பாடல் ஒன்று வேண்டும் என என்னிடம் கேட்டார். அவருக்காக எழுதிய பாடலில் கரும்பைப் போல ஒரு துண்டு தருகிறேன்.

“வாடி வாசல் தள்ளி நின்னு
தாவிப் பாயிடா – அட
வால் பிடிச்சா வெற்றி இல்ல
ஏறிப் பாயிடா
வாங்கி வரும் பரிசையெல்லாம்
சீரு செய்யுடா
திண்ணையில தூங்குறவன்
வீரன் இல்லடா”

Paadal Enbathu Punaipeyar Webseries 9 Written by Lyricist Yegathasi தொடர் 9: பாடல் என்பது புனைப்பெயர் - கவிஞர் ஏகாதசி

தமிழர் திருநாளையும் ஜல்லிக்கட்டையும் பல திரைப்படங்கள் உன்னதமாகப் பதிவு செய்திருக்கின்றன. அதில் ஜல்லிக்கட்டை மிகத் தத்துரூபமாகக் காட்டிய படம் விருமாண்டி. என் நண்பர் இயக்குநர் விக்ரம் சுகுமாரன் அவர்கள் “தேரும் போரும்” என்கிற படத்தை இயக்கப் போவதாக செய்திகள் பார்த்திருப்பீர்கள். அந்தப் படத்திற்கு நண்பர் ஜஸ்டின் பிரபாகரன் அவர்கள் இசை. ‘அட்டைக்கத்தி’ தினேஷ் நாயகன். இரண்டு பாடல்கள் உருவாக்கப்பட்டன. இரண்டும் நானே எழுதியிருந்தேன். அவற்றில் ஒன்று ஜல்லிக்கட்டுப் பாடல். மிக மிக நேர்த்தியாக உருவாக்கினோம். ஏதோ சில காரணத்தால் படம் இடை நிற்க. அதே ஜஸ்டின் பிரபாகரன் இசையில் நான் பாடல் எழுதி, சாந்தனு நாயகனாக நடிக்கும் “இராவண கோட்டம்” எனும் படத்தைத் தொடங்கி படப்பிடிப்பை முடித்தும் விட்டார். ஒரு படம் நிற்கக் கூடாது. அது எண்ணற்ற தொழிலாளிகளின் வாழ்வு. தடைகள் தீர்ந்து “தேரும் போரும்” வரக் காத்திருப்போம். இது அந்த ஜல்லிக்கட்டுப் பாடலின் பல்லவி.

“வீரத்துக்குப் பேரு போன
வேலுநாச்சி ஆண்ட சீம
சூறக் காத்தா சுத்தி ஆடும்
காளமாட்டப் புடிடா மாமெ

நம்ம மானங்காத்த மருதுபாண்டி
அந்த மண்ணில் பாரு மஞ்சுவிரட்டு
அட கொம்பு குத்தி கொடலு சரிஞ்சா
ஒரு துண்டெடுத்து அள்ளிக்கட்டு

அட சீத்தி அடி ஏத்தி – நம்ம
சில்லாவே அதிரட்டும் ஆத்தி”

முந்தைய தொடர்களை வாசிக்க:

தொடர் 5: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 6: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 7: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 8: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி