இளையவன் சிவா கவிதைகள்

இளையவன் சிவா கவிதைகள்




1.
உங்கள் சாதிப் பாலுணர்வின் வன்பசியைப் போக்குமெனில்
என் அம்மணம் ஒன்றும் அசிங்கமாகிவிடுவதில்லை.
நீங்கள் வரிசை கட்டி
ருசி பார்க்கும்
என் சதைத் துண்டங்களில்
ஒழுகும் குருதியில்
அழிந்து கொண்டிருக்கும்
தீண்டாமை வலிகள்.
வாருங்கள் என் உடல் மீது
மேயும் உங்களின் தேகத்தில்
பாலெனக் குருதியைப் புகட்டி
பண்பாடுகள் கட்டிக்காக்கும்
அவரவர் அம்மாக்களைத்
தேடிப் பார்க்கிறேன்.

2.
பனியைப் பருகும்
பகலவனின் வேகமென
உன் மௌனத்தை மொழிபெயர்க்கும்
என் மனவோட்டம்
எப்படியோ பொருந்திப் போகிறது
உன் புறக்கணிப்போடு.
உனக்கான சூரியனாக
உதிக்கும் என்னை
பார்வையில் பனியாக்கி விடுகிறாய்.
உனக்கான பாடுபொருளாகவோ
தேடுபொருளாகவோ
மாறிப்போன பின்னே
நானாக இல்லாத என்னை
எவ்விடம் தேட?

3.
பாலைவனத்திற்குள்
தேடிக் கொண்டிருக்கிறது
பறக்கும் பட்டாம்பூச்சி
மலரும் மரத்தை
மழை நீரில் மின்னும் வண்ணங்களை
தன்னோடு உலா வரும் பூச்சிகளை
எல்லைகளைக் காட்டும் பசுந்தடங்களை.
மணல் வெளிக்குள்
நுழைந்த பின்னும்
தன்நிலை மறவாமல்
போகுமிடமெங்கும்
வனத்தைச் சுமந்து செல்லும்
பட்டாம்பூச்சியின் அன்பை
வானம் மழையென நீட்டுகிறது.

இளையவன் சிவா
மடத்துக்குளம்

சசிகலா திருமால் கவிதை

சசிகலா திருமால் கவிதை




காயங்களையும் ஏற்கத் துணிகின்றேன்…

ப்ரியங்கள் மட்டுமே குவிந்திருந்த
நம் உறவின் நடுவே
அர்த்தமற்ற புரிதல்களால்
மனதில் உண்டான விரிசலினூடே…
புதிதாய் முளைத்தெழுகிறது
பிரிவின் கோடொன்று…

மௌனம் எனும் கோடரி கொண்டு
மனதினைப் பிளக்கின்றாய்
நிராகரிப்பு எனும் ஆயுதமேந்தி
நிற்கும் உன்னிடம்
என் இதயத்தின் வலியுணர்த்த இயலாமல்
வெற்றுச் சடலமென
வீழ்ந்து கிடக்கிறேன் நான்…

உயிர் கொண்ட உறவுகள் ஓர்நாள்
நம்மை உயிரோடு கொல்லும் என்பதை
உணர்த்திச் செல்கிறாய்..
நீ கொடுத்த காதலை ஏற்றுக் கொண்டவள்
நீ கொடுக்கும் காயங்களையும்
ஏற்கத் துணிகின்றேன் இன்று…

என்றேனும் என்நிலை உணர்வாய்
என்ற நம்பிக்கையில்…
காத்திருக்கிறேன் நான்..
உன் மனகசப்புகள் தீரும் வரை
கண்ணீரோடும் கனத்த மனதோடும்…

சசிகலா திருமால்
கும்பகோணம்.

து.பா.பரமேஸ்வரியின் கவிதைகள்

து.பா.பரமேஸ்வரியின் கவிதைகள்




இப்போதும் நீ எனக்கு
*************************
மழலைப் பாதப் பயிலகம்
தடுமாறி வீழும் போதெல்லாம்
அள்ளியெடுத்து ஆரப்புதைத்து
தழுவுவாய் அம்மாவாக…

உனது ஆறுதல் வெப்பத்தைச்
சுவைக்கவே
மீண்டும் அடி வைப்பேன்
ஆசையாய்..

துளிக் கண்ணீரையும் சகிக்காத
உனது பேரன்பில்
எனது வலியும் கூட வலுவிழக்கும்…

இன்றும் நீ இப்படித்தான்..
எட்ட நின்று காட்டிக் கொடுக்கும்
உனது விழிவழி..
பளிங்கு பாசாங்கு ஒவ்வொன்றையும்

துள்ளித் திரியும் வாலிப முறுக்கு
அசட்டையாய் வன்மம் செய்யும்
சறுக்கல் மட்டுமே புலப்படும்..
மீதம் வீழ்த்திய பின் புலம்பும்

விசனமின்றி கைகொடுப்பாய்…
நொடிந்திடும் என் பாதங்களுக்கு..
அதே விசேஷ சாயல்
உனக்கே உனக்கான…
பிரத்யேக முறுவலுடன்..

பரிச்சயம் தான் எனக்கு
விழிகள் உதிர்க்கும்
கண்ணீர் வரிகளைத்
துடைத்துத் தூர்வாரும்
ஒரு அப்பாவாக..

தாழிட்ட இதயவாசல்
*************************
காதலர் தினமன்று மட்டுமே
சிலாகித்துப் பரிமாறும் நமது அன்பு..
இதுவரை காதல் என்பது போலவே
தான் உச்சிமுகர்கிறேன்..

தொலைவில் நின்று கொண்டு
நலத்தை மட்டுமே சம்பிரதாய காதலாக முன்வைக்கும்
உனது பிரியங்களை
காதலர் தினத்தின் அர்த்தராத்திரிகள்
எனது செவிகளைச் சன்னமாகச் சொல்லி விட்டுப் போகும்..

அந்த ஒற்றைத் திளைப்பிற்காக
ஆண்டு முழுமையும்
தவமிருக்கிறேன் …
விழியும் வழியும் மொழியும் பூக்க……..

இன்றும் நீ தாழிட்ட
இதய வாசல் திறக்கப்படாமல் தான் இருக்கிறது…
சாவியை கையிலேந்தியே..

ஞாயிறில் ஞாயிற்றின் மெத்தனம்
***************************************
முன்னிரவும் பின்னிரவும் பிரிந்து
கற்கலின் கடன் தீர்க்க
ஜன ஜந்துக்கள் ஒன்றும்
காடுகரை
களப்புமேடு
யாவும் தேடித்திரிய
நீலம் பாரித்த வானவள்
அங்கசுத்தி முடித்து
உடுப்பு மாற்ற பரிதவிக்கிறாள்…
வசந்தக்குளிரின் சுகவாசியாக
பஞ்சணையில் கதகதக்கும் கரும்போர்வை நீக்காது
சோம்பல் முறிக்கும் ஆதவனின் நிலைக்கதவு திறக்க வேண்டியே..

பாலியல் பரிசுத்தம்
*************************
பாலியல் பேதமற்ற பரிபாஷணை
இடைமறியாத இங்கிதத்தில்
மாடிமுகப்பிற்கு மகனை விரட்டுகிறாள் அன்னை…

கொஞ்சமும் சூதற்ற சம்பாஷணை
சற்றும் வாதமற்ற மொழியில்
தோழியிடம் அன்பைப் பரிமாறுகிறான் பிள்ளை..

உணர்வு புனிதம்போற்ற
உரிமைநம்பகம் சிறக்க
பாலியல் பரிசுத்தம் பறைசாற்ற
பக்கத்து அறைக்குப் பெயர்கிறாள்
அலைபேசி மகளின் மாற்றாந்தாய்..

கைம்பெண் கடன்
*********************
வாழ்வதையில் வதங்கி
மொழி தொலைத்து
மௌனம் தரித்து
உற்றார் நழுவி
உறவு உதிர்ந்து

அடுக்களை கூடாரவிருந்தாகி
அறுசுவை உணவில் கசப்பாகி
விழிகளுக்கு மட்டிலும் உவர்ப்பாகி
புதியன கழித்து
பழையன புகுத்தும்…
மனிதவிலக்கான..
அவளின் பற்றறுந்த கூடு தான்..
எங்ஙனம் வேகும்…?

இப்போதும் நீ எனக்கு….
***************************
மழலைப் பாதப்பயிலகம்
தடுமாறி வீழும் போதெல்லாம் அள்ளியெடுத்து ஆரப்புதைத்து
தழுவுவாய் அம்மாவாக…

உனது ஆறுதல் வெப்பத்தைச்
சுவைக்கவே
மீண்டும் அடி வைப்பேன்
ஆசையாய்..

துளிக் கண்ணீரையும் சகிக்காத
உனது பேரன்பில்
எனது வலியும் கூட வலுவிழக்கும்…

இன்றும் நீ இப்படித்தான்..
எட்ட நின்று காட்டிக் கொடுக்கும்
உனது விழிவழி..
பளிங்கு பாசாங்கு ஒவ்வொன்றையும்

துள்ளித் திரியும் வாலிப முறுக்கு
அசட்டையாய் வன்மம் செய்யும்
சறுக்கல் மட்டுமே புலப்படும்..
மீதம் வீழ்த்திய பின் புலம்பும்

விசனமான்றி கைகொடுப்பாய்…
நொடிந்திடும் என் பாதங்களுக்கு..
அதே விசேஷ சாயல்
உனக்கே உனக்கான…
பிரத்யேக முறுவலுடன்..

பரிச்சயம் தான் எனக்கு
விழிகள் உதிர்க்கும்
கண்ணீர் வரிகளைத்
துடைத்துத் தூர்வாரும்
ஒரு அப்பாவாக..

து.பா.பரமேஸ்வரி
சென்னை

நூல் அறிமுகம்: மு.ஆனந்தனின் கைரதி 377 மாறிய பாலினரின் மாறாத வலிகள் – சசிரேகா

நூல் அறிமுகம்: மு.ஆனந்தனின் கைரதி 377 மாறிய பாலினரின் மாறாத வலிகள் – சசிரேகா




நூல் : கைரதி 377 மாறிய பாலினரின் மாறாத வலிகள்
ஆசிரியர் : மு.ஆனந்தன் 
விலை : ரூ.₹ 120
வெளியீடு : பாரதி புத்தகாலயம்

தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
bharathiputhakalayam@gmail.com

எனக்கும் கூட ஒரு கைரதியை தெரியும் பொதுவாக வெளியில் வேளையாக கிளம்பி போகும் போது சில மனிதர்கள் தற்செயலாக அல்லது எதேச்சையாக நிறைய முறை கண்ணில் பட்டுக்கொண்டே இருப்பார்கள்,அது மாதிரி அவளும் அடிக்கடி கண்ணுக்கு படுவாள், நிறைய கைரதிகளை பார்த்திருக்கிறேன் ஆனாலும் கூட இந்த புத்தகத்தை படிக்கும்போது அவள் தான் கண் முன்னே விடாபிடியாக வந்து நிற்க்கிறாள். காரணம் என் 5 வயது பெண் குழந்தை. அவளை முதல் முறை பார்க்கும்போது அவளுக்கு 4 வயது இருக்கும். ஏதோ புதிய வகை உயிரினம் போல பார்த்துட்டே இருந்தவ ஆர்வம் தாங்காம என்னிடம் கேட்டேவிட்டாள் “அம்மா அவங்க Boy – ஆ? Girl – ஆ?”

அவ கேள்வி மிக தெளிவா என்னோட கண்ண பாத்து நான் என்ன சொல்லப் போறேன் அப்படின்ற ஆர்வத்தோட என்னை எதிர்நோக்கின ஒரு கேள்வி. பதில் தான் கொஞ்சம் கடினம் அவுட் ஆப் சிலபஸ் போல பதில் சொல்ல தெரியல எனக்கு.

நானும் என் மகளும் ஒரு துஷ்டி வீட்ல நைட்டி அணிந்து மேலே ஒரு துண்டு போட்டுக் கொண்டு பந்தியில் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்த அவளை பார்த்தபோது, அவங்க நம்ம மாதிரி ஒரு பொண்ணு தானே சொல்லி இருக்கலாம்? இல்ல boy தான் ஃபேன்ஸி டிரஸ் மாதிரி வேஷம் போட்டு இருக்காங்க அப்படின்னு சொல்லி ஏமாத்திரலாம்?

ஒருவேளை அந்த உக்காந்திருக்கிறவங்க யாருன்னு கேட்டிருந்தா? ஆனா அவளோ boy-ஆ இல்ல girl- ஆ? அப்படின்னு ரெண்டுல ஏதாவது ஒன்ன நான் சொல்லணும் சரியா சொல்லணும் இல்லனா திரும்ப அதிலிருந்து என்னை கேள்வி கேட்பா கண்டிப்பா எனக்கு அதுக்கும் பதில் தெரிய போறதில்லை, இருந்தாலும் அவகிட்ட நான் அவங்க ஒரு கேர்ள் தான் அப்படின்னு சொன்னதும் இல்லம்மா கிடையாது அப்படின்னு அவ நம்பள, அது எப்படி அவங்க கேர்ள் அப்படின்னு அவளுக்கு சொல்லி புரிய வைக்கிற அறிவு என்கிட்ட இல்ல அதுதான் உண்மை.

என்கிட்டயே புரிதல் இல்லாத போது என் குழந்தைக்கு எப்படி நான் அவளை அறிமுகம் செய்ய முடியும், அதைவிட முக்கியம் நாலு வயது குழந்தைக்கு எவ்வளவு கவனிப்பு இருக்கு. ஆச்சரியமான தருணம் அது, கிட்டத்தட்ட அவ கேட்டா எல்லா கேள்விக்கும் அவ நம்பக்கூடிய பதிலை சொல்லி இருக்கிறேன். ஆனால் இந்த கேள்விக்கு பதில் சொல்ல தெரியல.

அதனால அந்த கைரதி என் மனசுல நிக்குறா. என்னைய எப்படி உன் அடுத்த தலைமுறைக்கு சொல்ல போற? என்னன்னு சொல்ல போற? அப்படின்னு கேட்டு நிக்கிறா.

மனசுல மட்டும்தான் அப்படி கேள்வியா நிக்கிறா, ஆனா அடுத்து அடுத்து அவளை பார்த்த சமயங்கள்ல அவ என்னைக்குமே மெதுவா நடந்து நான் பார்த்ததே இல்ல. மற்ற கைரதிகள் போல ஒரு தோற்றம் அவ கிட்ட கிடையாது, கைரதிகளுக்குன்னே ஒரு விதமான கேஸ்வலா நடை இருக்கும், அகலமான தொப்பை வயிறு தெரிய சேலை உடுத்தி, லோ நெக் ப்ளவுஸ் போட்டுட்டு, மெனக்கிடும் ஒப்பனைகளையும், இவகிட்ட நான் பார்த்ததே இல்லை.

எப்பவும் கண்ணியமான, நேர்த்தியான விதத்துல சுடிதார் இல்ல ஆடி மாசம் அம்மனுக்கு நேர்ந்துகிட்ட மாதிரி மஞ்சள் புடவையில் கழுத்து நிறைய மாலை போட்டுக்கிட்டு ஏதோ தீ மிதிச்சா ஒரு நடை நடப்பாங்களே? கால் தரையில் படாமல் ஓட்டமும் நடையுமா அப்படித்தான் ஓடிக்கிட்டே இருப்பா. அவ ஏன் இப்படி ஓட்டமும் அடையுமா இருக்கான்னு கைரதி 377 படிச்ச பின்ன தான் புரிஞ்சுகிட்டேன்.

வாசிப்பு எப்பவுமே மனிதத்தை மேலும் மனிதமாக்கும்,எப்பவோ அவர்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் எனக்குள் வந்தது உண்மைதான், ஆனால் கைரதி வாசித்த பின்னால்தான் புரிந்தது ஏற்றுக்கொள்ளவோ போனால் போகட்டும் என வாழ அனுமதிக்க நாம புனிதர்கள் ஒன்னும் இல்ல, அவர்களுக்கும் பூமியில் வாழப் பிறந்தவர்கள் தானே, உலகில் மலத்தில் நெளியும் புழுவிற்கு கூட சுயமும், சுதந்திரமும் இருக்கும் போலும், இவர்களை நாம் சமூகத்தில் புழுவைக் காட்டிலும் கீழாக நடத்துகிறோமோ என்ற வெறுப்பும், கோபமும் 11 கதைகளில் வரும் கைரதி, கைரதன், இருணர் அவர்களின் உளவியல், வாழ்வியல் சொல்லாடல் அப்பப்ப! எல்லாமே சாதாரண மனிதராகிய நமக்கு ரொம்ப புதுசு.

ஓட்டமும் நடையுமாய் வெளித்தோற்றமாய் பார்த்தவளை கொஞ்சம் நெருக்கமாய் புரிதலுடன் பார்க்க உதவிய புத்தகம் இது. இந்த கதைகளில் வரும் பழைய புராண காலத்து ஓலையக்காவாகட்டும், இலாவாகட்டும், மாத்தராணி ஆகட்டும் எல்லோருமே புத்தகத்தின் ஆசிரியர் நமக்கு அறிமுகம் செய்யும் ஒவ்வொருவரும் நிராகரிக்கப்பட்ட வாழ்வியலின் சான்றாக நம் கரம் பற்றி, இங்க பாரு உன்னை போல வாழ முடிகிற ஒரு மனிதி, மனிதனையோ நீ ஏன் சித்திரவதை செய்கிறாய் என கேட்பது போல இருக்கும்.

கைரதியை லாக்கப்பில் வைத்து நிர்வாணமாக்கியதும் ஒரு நிமிடம் ”ஓலையக்காவா மாறி சுள்ளிகள் பொறுக்கி தன்னை எரிக்கலாம் என்று சுற்றிப் பார்த்தால் அங்கே வெறும் சு** தான் இருந்தன” என கதையை முடிக்கும் இடமாகட்டும், எத்துனை அவசரம் என்றாலும் பொது இடத்தில் சிறுநீர், மலம் கழிக்க சங்கடப்படும் பெண் பிறப்பை போல மலம் கழிப்பது கூட வாழ்நாள் சாதனையாக மாறிப்போன சமூக கட்டமைப்பு அதிலும் கைரதிகளுக்கு என்று தனித்த கழிவரையும் கிடையாது, 377 கைரதியின் வரும் வக்கிரம் பிடித்த ஆண்கள் ஆகட்டும் சரி, அரசு சலுகை பெற தன்னை கைரதியாக பதிவு செய்து கொள்ள மருத்துவமனை செல்லும் கைரதியின் கதையாகட்டும், பாவ சங்கீர்த்தனத்தில் வரும் குரு பட்டம் பெற ஏங்கும் கைரதியை பார்த்து என்னதான் இருந்தாலும் எந்த மதத்திலும் பெண் தலைமை என்பது அல்லவே என சொல்லும் ஆணாதிக்க புறவழிக்கு, கைரதியின் கேலியும், அமைதியும், கூச்சலும், வலியும் சொல்லி தீராது நிறைவாக முடிக்கும் போது உங்கள் மதத்திற்கும் ஆனாதிக்கத்திற்குமே பாவ மன்னிப்பு அளிக்கிறேன், இனிமேலாவது பெண்ணை பெண்ணானவளான என்னை இந்த மதம்மும், சமூகமும் சமமாய் மதிக்கட்டும் என பாவமன்னிப்பு அளிக்கப்பட்டது.

அப்படித்தான் ஓட்டமும் நடையுமாய் நடக்கும் நான் பார்த்த கைரதி அவள் எதிர்ப்படும் அனைத்தையும் மன்னிக்கிறாளோ என்னவோ?

கைரதியின் காதலை ஏற்றுக் கொள்ளும் மாரிமுத்துவை போல, கைரதியின் உணர்வு புரிந்து கூடுதலாய் நாப்கின் வாங்கி வைக்கும் பூர்விகா போல, நானும் நிச்சயமாய் இந்த புத்தகத்தை என் 5 வயது மகளுக்கு வாசிப்பு வாசம் பெற்றவுடன் கொடுப்பேன் அவள் மனதில் கேள்வியாய் நிற்கும் கைரதியை புரிந்து கொள்ளும் பதிலாய்!

– சசிரேகா

நூல் அறிமுகம்: மு.ஆனந்தனின் கைரதி 377 மாறிய பாலினரின் மாறாத வலிகள் – சண்முகசாமி

நூல் அறிமுகம்: மு.ஆனந்தனின் கைரதி 377 மாறிய பாலினரின் மாறாத வலிகள் – சண்முகசாமி




நூல் : கைரதி 377 (மாறிய பாலினரின் மாறாத வலிகள்)
ஆசிரியர் : மு.ஆனந்தன்
விலை : ரூ.₹110
பக்கங்கள் – 120
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
bharathiputhakalayam@gmail.com

திருநர்களின் வாழ்வில் நடைபெறும் மறுக்கப்பட்ட வாய்ப்புகள் என்னவென்று ஓரளவு தெரிந்தே தான் இருக்கிறேன்/றோம். ஆனால் மிகத் துல்லியமாக அவர்களின் கொடுந்துயரம் நிறைந்த வாழ்வை இல்லையில்லை பூமி தன்னிடத்தில் இருப்போரை வெளியில் தூக்கி வீசாததால் வேறு வழியின்றி திருநர்கள் நடைப்பிணமாக வாழும் இப்பூமியின் வாழ்வை தோழர் மு.ஆனந்தன் அவர்கள் கதைகளாக (இந்நூலை வாசித்தால் கதையா இல்லை வாழ்க்கைப் போராட்டக் களமா என வாசகர்கள் உணரலாம்) தொகுத்து வழங்கிய விதம் உள்ளபடியே பூமியின் ஈர்ப்பை விட அதிக ஈர்ப்பை ஆசிரியரிடம் நாம் பெறுவோம்.

இந்நூலில் ஒவ்வொரு தலைப்பிலும் வரும் கைரதி/கைரதன் வாழ்வுப் போராட்டம் நம்மை ஒன்று வெட்கித் தலைகுணிய வைக்கும் அல்லது ஆனந்தக் கண்ணீரில் மிதக்க வைக்கும். அதுமட்டுமா முக்கியமான இடத்தில் கதாப் பாத்திரங்களுக்கு உவமையும், வர்ணனையும் கொடுக்கும் அழகே அழகு. இந்த வர்ணனை/உவமைகளை தேடிப் பொருத்துவதற்கே தோழருக்கு நிறைய காலம் ஆகியிருக்கும் என நினைக்கிறேன்.

உதாரணமாக
*JNU பல்கலைப் பதிவாளரிடம் கைரதன் மற்றும் தோழர்கள் குழு, ‘விண்ணப்பத்தாளில் ஆண், பெண் என இரண்டு தேர்வு தானே இருக்கு ஏன் மாற்றுப்பாலினத் தேர்வு இல்லை’ என கேட்கும்போது,
பதிவாளரின் பதிலில்லா உணர்வை ‘பிரியாணிக்கு தம் வைத்தது போல் அவர் குமுறிகிட்டிருக்கார் அவர் பதிலே அளிக்கவில்லை’ என எழுத்தாளர் நச்சின்னு வைத்த பேனா முள் அப்படியே நம்மில் எழுதியதாகவே உணர்வோம்.

*’ஓலையக்கா லாக்கப்’ கதையில் சந்தேகத்தின் பேரில் காவல்நிலையம் அழைத்துச்செல்லப்பட்ட கைரதி காவலர்களின் வசவுகளால் நொறுங்கிப்போய் இருக்க ‘நீ ஆம்பளையா பொம்பளையான்னு பார்க்கனும் கழற்றுடி துணியை என உருவியபோது கைரதி தன் மானத்தைக் காத்துக்கொள்ள தன்மீது தீவைத்துக்கொள்ள சுள்ளிகளைத் தேடினால். ஆனால் சுற்றிலும் சு…….களாகவே இருந்தன என்று ஆசிரியர் எழுதிய போது நம் மனம் குன்றி அப்படியே அந்த சு…களை அறுத்தெறிய வேண்டும் என்று மனம் குமுறியது.

இந்நூலில் எதை எழுதுவது எதை விடுவது என்று தெரியவில்லை தோழர்களே.

கழிவறைக்காக லாட்ஜில் வேறுவழியின்றி எவ்வளவு வேண்டுமானாலும் பணம் கட்டிட எல்லா லாட்ஜிலும் கைரதிகள் ஏறியிறங்கி அவமானப்பட்டதையா;

இல்லை வேலை செய்து வாழவேண்டும் என்று பூமிப்பந்தில் இடமில்லாமல் சுற்றிவரும் கைரதியை லாக்கப்பில் வைத்து காவல் மிருகங்கள் பாலியல் ரணக் கொடூரம் செய்து நீதிமன்றத்தில் ‘தகாத உறவு கொண்டனர்’ என்று பொய்கூறி அந்தக் காவல் மிருகங்களே பல ஆண்டுகள் சிறை தண்டனை வாங்கித் தந்தையா;

இல்லை காவல்துறையால் தேடித்தேடி கைது செய்யப்பட்ட கைரதிகள் என்ன படித்துள்ளனர் என்று நல்ல உள்ளம் கொண்ட பெண் காவல் தெய்வத்தால் கேட்கப்பட்டபோது அமைதியாக இருந்து இறுதியில் ‘மருத்துவர்’ என்று அந்தக் கைரதி கூறியபோது இந்த உலகமே அரண்டது போன்ற உணர்வா;

இல்லை பாவ மன்னிப்பு எல்லோருக்கும் கிடைப்பது போல் எனக்கும் கிடைக்குமா? நான் திருச்சபையில் உயர்ந்த பதவியில் அமரமுடியுமா? என்று வாடிகன் பாதிரியாரிடம் பாவமன்னிப்பு கேட்ட கைரதிக்கு ‘பெண்ணிற்கு அப்பதவி வழங்கமுடியாது’ என பாவமன்னிப்புக் கூண்டே மறுத்ததையா

எதை எழுதுவது எனத் தெரியவில்லை தோழர்களே. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் இனி திருநர்களின் குறிப்பான பிரச்சினைகளை சமூகத்தில் வைத்து அவர்களின் இயல்பான வாழ்க்கைக்கு நம்மால் முடிந்த குரலை எழுப்பவேண்டும் என்ற உள்ளுணர்வு பீறிட்டு வெளிவந்ததை உணர்ந்தேன் தோழர்களே!

இறுதியாக இந்த உலகத்தைப் பார்த்து ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்,

“பொதுவான கழிவறைகளில் ‘ஆண், பெண்’ மட்டுமே இருக்குமே, இனி கூடுதலாக ‘கைரதி, கைரதன்’ எனக் கூடுதலாக இரண்டு கழிவறைகளை ஏற்படுத்த வேண்டும் என்று இந்த உலகம் குரலெழுப்புமா? நான் எழுப்புகிறேன் தோழர்களே உடனே கழிவறையில் நான்கு அறைகள் கொண்ட தடுப்புகளை உருவாக்கு அரசே” என்று.

அடுத்து பள்ளிகளே, மாணவர்களில் இருக்கும் கைரதி, கைரதன்களைக் கண்டு அவர்களின் வாழ்க்கைக்கு உறுதுணையான ஆத்மார்த்தமான வார்த்தைகளை வாஞ்சையுடன் வடித்திடுமாறு வேண்டுகிறேன் சமூகம் தானாகவே மாறும்.

ஆஹா அணிந்துரை வழங்கிய தோழர் #அழகியபெரியவன் அவர்களின் வார்த்தை சும்மா நச்.

‘அறியாமையுடன் திரியும் மனிதரின் பார்வையில் உடன்பாடில்லாதவை எவையுமே விலக்கப்பட்டவைதான். மாறிய அல்லது திரிந்த பாலினக் கூறுகளை அவர்கள் மூர்க்கமாக விலக்குகின்றனர். ஏனெனில் அவர்களால் அத்திரிந்த பாலினக் கூறுகளின்மீது கற்பு, ஆணாதிக்கம், சாதி, மதம், வணிகம் ஆகிய அளவுகோல்களை துல்லியமாக ப் பொருத்த முடிவதில்லை!’

தோழர் #பிரியாபாபு அவர்கள் ‘திருநர் இலக்கியத்தின் புதிய முகம்’ என்று இந்நூலுக்கு மகுடம் சூட்டியிருப்பார்.

முதல் பதிப்பு ஜூன்-2022, இரண்டாம் பதிப்பு ஆகஸ்டு-2022. இதுவே இந்நூலின் மகத்துவத்திற்கு சாட்சி.

ஏராளமான தரவுகளைக் காண அவசியம் அனைவரும் ‘கைரதி377’ நூலை வாங்கி வாசிக்க வேண்டுகிறேன் தோழர்களே!

தோழர் #முஆனந்தன் அவர்களே தங்களின் உயிரோட்டமான எழுத்திற்கு செவ்வணக்கம்!

தோழமையுடன்
சண்முகசாமி இராமசாமி
புதுச்சேரி
செல்-9443534321

சாந்தி சரவணனின் கவிதைகள்

சாந்தி சரவணனின் கவிதைகள்




பேசி என்ன பயன்?

என் மௌனம்
உனக்கு புரிந்து இருந்தால்
நான் உச்சரிக்கும் வரிகளில்
வலம் வரும்
வார்த்தைகளின் வலிகள்
உனக்கு புரிந்திருக்கும்!

வார்த்தைகளை
கோர்த்திருக்கும்
எழுத்துகளின்
ஏக்கம் புரிந்திருக்கும்!

ஆனால்
உனக்கு தான் என்
மௌன மொழியே
புரியாதே!

பின் உன்னிடம்
பேசி எனன பயன்?

கடவுள் இருக்கானா?

தொட்டிலில்
சிசுவும்

கட்டிலில்
முதுமையும்

பார்வையில்
பேசிக் கொண்டன…

கடவுள் இருக்கிறானா என?

அனாதை இல்லத்தில்.

– திருமதி. சாந்தி சரவணன்

நூல் அறிமுகம்: மு.ஆனந்தனின் கைரதி 377 மாறிய பாலினரின் மாறாத வலிகள் – பிச்சுமணி

நூல் அறிமுகம்: மு.ஆனந்தனின் கைரதி 377 மாறிய பாலினரின் மாறாத வலிகள் – பிச்சுமணி




நூல் : கைரதி 377 (மாறிய பாலினரின் மாறாத வலிகள்)
ஆசிரியர் : மு.ஆனந்தன்
விலை : ரூ.₹110
பக்கங்கள் – 120
வெளியீடு : பாரதி புத்தகாலயம்

தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
bharathiputhakalayam@gmail.com

கைரதி377. வெறுமனே படித்து கடக்கும் கதைகள் இல்லை. சொந்த மண்ணிலே அகதிகளாக இல்லை.. இல்லை.. சொந்த தாய் தந்தையாலே உறவுகளாலே நிராகரிக்க பட்ட, பொது சமூகத்தால் சக மனிதாரக ஏற்றுக்கொள்ள தயங்கும், ‘பாலின அடையாள சுதந்திரத்தை வேண்டி வாழும் மனிதர்களின்’ வலி மிகுந்த வாழ்க்கை வரலாறு.

“கேள்விகளை உருவாக்கியே பழக்கப்பட்ட அதிகார மூளை ஒரு உண்மையான கேள்வியை எதிர்க்கொள்ளும்போது முகத்தில் கடுகடுப்பை கடன் வாங்கியாவது பூசிக் கொள்ளும்”
இந்த அதிகார மூளை மற்றும் ஆதிக்கமூளைகள் என்பது அரசு உயர் பொறுப்பில் இருப்பவர்களுக்கு மட்டும் அல்ல சக மனிதர்களின் உள்ளுணர்வை புரிந்துக் கொள்ளாத அல்லது சில மனிதர்களை இந்த பூமிக்கு அப்பாற்பட்டவர்களாக கருதும் மூளையும் அப்படிப்பட்டது தான்.

ஒரு அரசு பேரூந்தில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் இருவர் இருக்கும் சீட்டில் தனியாக அமர்ந்திருந்தான். பேரூந்தில் அவனிருந்த சீட்டில் மட்டுமே இடமிருந்தது .40 வயது மதிக்கத்தக்க ஒருவர் அந்த சீட்டில் அமர போனார். அவரின் தோற்றம் அவரை ஒரு திருநங்கை என பேரூந்தில் இருந்த அனைவராலும் ஊகிக்க முடிந்தது. அந்த மாணவன் அருகில் திருநங்கை அமர்ந்தவுடன்.. ஏய் எங்க வந்து உட்காருத என்று ஆவேசமாக எழுந்தான் மாணவன். பஸ்ஸில் இருந்த அனேகம் பேர்கள் கேலி சிரிப்புடன் அந்த திருநங்கை அமர்ந்தது தப்பு என்ற தோணியில் அந்த திருநங்கை மீது தனது ஆதிக்க பார்வை செலுத்தினர். நடத்துநர் ஒரு படி மேலே போய் உங்களுக்கு ரெம்ப கொழுப்பு கூடிப் போச்சு என்று வாய்விட்டே நக்கலடித்தார்.

அந்த திருநங்கை நான் டிக்கெட் எடுத்து இருக்கேன்.. இடம் இருந்துச்சு அதான் உட்கார்ந்தேன் இதிலென்ன தப்பு? என்று தனது கரகரப்பான குரலில் சொன்னவுடன் அதுவரை கேலியும் கிண்டலுமாக இருந்த முகங்கள் அவளின் கேள்வியை எதிர்கொள்ள முடியாமல் கடுகடுப்பை முகத்தில் அப்பிக்கொண்டு நடத்துநர் சொன்னதை உதட்டில் முனுமுனுத்தார்கள். இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு மேல் இருக்கும்.

கைரதி377 ‘இதரர்கள்’ கதையை படித்ததும் இந்த சம்பவம் நினைவுக்கு வந்தது. அந்த பேரூந்தில் திருநங்கைக்கு பக்கம் நின்று பேசா மடந்தை யாக நானிருந்தேன் என்ற குற்றவுணர்வு இன்னும் என்னை விட்டு போகவில்லை. என்னை போல் இந்த கதைகளை படிக்கும் ஒவ்வொருவரும் ஒரு நிகழ்வு நினைவுக்கு வரலாம்.

பொதுச் சமூகம் ‘கைரதி’களை தம்மோடு இணைத்துக் கொள்ள தவறி இருக்கிறது என்பதை உணர்த்தலாம்.

மாற்றுத் திறனாளிகள் கர்ப்பிணி பெண்கள் மற்றும் வயதானவர்கள் ஏன் நாய் பூனை என அனைத்து உயிரினங்கள் மீதும் மனிதாபிமான அடிப்படையில் அணுகி இரக்கம் காட்டும் பொதுச் சமூகம். திருநங்கை திருநம்பி மீது அனுதாபம் காட்ட மறுப்பதோடு அவர்களை கேலிச் சொற்கள் மூலம் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு கொஞ்சமும் தயங்காமல் ஒதுக்கி வைக்கிறது.

சினிமாவும் ஊடகமும் அவர்களை பாலியல் தொழிலாளிகளாக கையெந்தும் பிச்சைக்காரர்களாக மனிதசமூகத்திற்கு அப்பாற்பட்டவர்களாகவே காட்ட முனைந்திருக்கிறது.

மூன்றாம் பாலினத்தவர்கள் குறித்து நான் படித்த முதல் புத்தகம் வாடாமல்லிதான்.

1990 களில் எழுத்தாளர் சு.சமுத்திரம் அவர்கள் வாடாமல்லி நாவல் எழுதுவதற்கு முன் அவர்கள் வாழ்க்கை மையப்படுத்தி சிறுகதை ஒன்றை எழுதி ஒரு பத்திரிகைக்கு அனுப்ப.. அந்த பத்திரிகை அதை பிரசுரிக்க தயங்கி பிரசுரிக்காமலே சாக்கு போக்கு சொன்னார்களாம். அவர்கள் பற்றி செக்ஸ் சம்பந்தமான கதைகளை பிரசுரித்து பழக்கப்பட்ட பத்திரிகைகளுக்கு அவர்கள் வாழ்க்கை கதையை பதிவு செய்ய தயங்கினார்கள் என்பதை சு.சமுத்திரம் அவர்கள் குறிப்பிட்டு இருக்கிறார். எப்படியாவது அவர்களை பற்றி இலக்கிய உலகில் பதிவு செய்திட எண்ணி வாடாமல்லி நாவலை எழுதியாகவும் குறிப்பிட்டிருப்பார்

தமிழ் இலக்கிய உலகில் மூன்றாம் பாலினத்தவர்கள் குறித்து படைப்புகள் குறைவுதான்.இந்த நூலின் முன்னுரையில் தோழர் பிரியாபாபு அவர்கள் குறிப்பிட்டதுபோல் பெண் இலக்கியங்கள் தலித் இலக்கியங்கள் ஏன் இப்பொழுது குழந்தைகள் இலக்கியங்கள் பேசப்படும் அளவிற்கு கூட திருநர் இலக்கியம் பேசப்படவில்லை என்ற வருத்தத்தை கைரதி போக்கி இருக்கிறது.

ஆண்னை போல் பெண்ணுக்கு வன்மை, கோபம், ஆளும் திறன், உண்டென்பதை ஆண்கள் ஒத்துக் கொள்ள வேண்டும் என்று பெரியார் சொன்னதை போல்..

ஆண்களை போல் பெண்களை போல்.. மாறிய பாலினதவர்களுக்கும் ஆசை, கோபம், மானம், வீரம், காதல், சுயமரியாதை, உண்டென்பதை ஒத்துக் கொள்ள வேண்டும். அதை இந்த புத்தகம் படிக்கும் யாவரும் உணர்வர்.

மொத்த 11 கதைகள். ஆனால் ஒவ்வொரு கதையும் ஊடே சென்று நம்மை நாம் காணலாம். இந்த சமூகத்தில் நாம் கைரதிகளை எப்படி அணுகினோம் அவர்களின் வலியை எப்படி புரிந்துக் கொண்டோம். அவர்கள் வாழ்வு இப்படியும் இருக்குமா? அவர்களை அந்நியபடுத்தும் நமது மனிதநேயம் எத்தகையது? என்று நம்மை உலுக்கலாம்

தன் மானம் காக்க சுள்ளி தீயில் வெந்த ஓலையக்காவின் வைராக்கிய நெருப்பு கைரதியின் நெஞ்சிலும் அணையாமல் இருக்கிறது.

இதரர்கள் கதையில் கைரதிகிருஷணன் மூலம் விண்ணப்பங்களில் சிறப்பு பாலினம் என்று குறிப்பிடாததை மட்டுமல்லாமல்.. நீங்கள் அலியா?ஹிஜராவா யூனக்கா? என்ற கேள்வியை எழுப்பி அதற்கு நூலாசிரியர், கைரதிகிருஷ்ணன் மூலம் தரும் பதில்கள் கதைமாந்தர்களை மட்டும் அல்ல கதை வாசிக்க வாசகரையும் உறையவைக்கும்.

கூடுதலாய் ஒரு நாப்கின். பெண்ணாய் உணரும் கைரதி,வெளிபடுத்த முடியாத ஏக்கங்களின் வெளிபாடு. கதையில் வரும் பூர்வீகா முகத்தில் பூசப்பட்ட போலி கற்பிதங்கள் துடைத்துப் செல்லும் தருணத்தில் கதை படிப்பவர்கள் பூர்வீகா மாறிவிடுவார்கள்.

திருநங்கை நலவாரியத்தில் உதவித்தொகை பெற கைரதி அனுபவிக்கும் கொடூர வலியை சொல்லும் கதை ஜாட்ளா.

இயற்கை உபாதைகளை கழிக்கக் கூட விடாமல் இந்த சமூகம் திருநங்கைகளை என்ன படுத்துகிறது என்பதை சொல்லும் அடையாளங்களில் அவஸ்தை.

சட்டபூர்வமாக வதைக்கும் 377 ஆம் பிரிவின் கீழ் கைரதி கதை என சிறப்பு பாலினத்தவரின் வாழ்க்கை ரணங்களை அழுத்தமா சொல்லுகிறது.

அழகன் என்கிற போர்க்குதிரை,மாத்தாராணி கிளினிக் போன்ற கதைகள் கைரதிகளுக்கு பொது சமூகம் மீதான நம்பிக்கையுட்டும் கதைகள்

இலா. இது முற்றிலும் மாறுபட்ட கதை சிலநாட்கள் கைரதனாகவும் சில நாட்கள் கைரதியாகவும் வாழும் சூழலை பற்றியது. இந்த கதை சொல்லப்படும் விதமும் கதைகளமும் ஆச்சரியப்படவைத்திருக்கிறது.

அதே போல நஸ்ரியா ஒரு வேஷக்காரி கதையும் ஆணாக வாழ்வை விரும்பும் கைரதனின் வாழ்க்கை.

தோழர் மு.ஆனந்தன் அவர்கள் பேசாப்பொருளை பேச துணிந்திருக்கிறார் என்பதை தாண்டி இது தொடர்ந்து சமூகத்தில் பேசும் பொருளாக வேண்டும் என்பதை ஒவ்வொரு கதையும் நமக்கு உணர்த்துகிறது.
மூன்றாம் பாலினத்தவர்கள் பற்றி அழுத்தமாக பதிவு அதே நேரத்தில் அவர் கதை மாந்தர்கள் கதைக்களம் என எல்லாவற்றையும் அடையாளம் காட்டி இருக்கிறார்.

சிறப்பு பாலினத்தவரின் மீதான நிராகரிக்கும் பார்வைக்கு சாதி மதம் இனம் மொழி என வேறுபாடுகள் எதுவும் கிடையாது.

“நான் எல்லா மதங்களும் பாவமன்னிப்பு வழங்குகிறேன் இனிமேலாவது மதங்கள் பெண்களை சமமாக நடத்தட்டும்” என்று கைரதியா மாறிய கென்னடியின் குரல் இரட்டை விடுதலைக்கு அடித்தளமிடுகிறது.

ஒரு நல்ல படைப்பு சக மனிதர்களின் வலியை எழுத்தின் மூலம் கடத்தி விட வேண்டும் அதே சமயத்தில் அவர்களின் உரிமைகளையும் பேசவேண்டும். கைரதி377 அதை செய்திருக்கிறது.

இந்த சிறுகதைகள் தொகுப்பின் மூலம் தோழர் மு.ஆனந்தன் மனதுக்கு நெருக்கமாகவிட்டார். உங்கள் கைகளை இறுக்கப் பற்றி கொள்கிறேன். அன்பும் வாழ்த்தும் தோழர்.

– பிச்சுமணி

க.சம்பத்குமாரின் கவிதைகள்

க.சம்பத்குமாரின் கவிதைகள்




வலி
******
நீ உனது பக்கத்திலிருந்து
விசிறியடிக்கிறாய்
நஞ்சின் குணமேறிய
சொல் ஒன்றை

விலகியிருக்காமல்
சிறு புன்னகையால்
ஏற்கிறேன் அதை

உன் மார்பைக் குறிபார்த்து
என்னுள்ளும் சுரக்கிறது
அதே கனத்தோடு
ஒரு சொல்

நெருஞ்சியில் பாதம்பட்ட
சிறுமியின் லாவகத்தோடு
பிடுங்கி எறிகிறேன்
என்னிலூறும் அச்சொல்லை
எனது பக்கத்திலிருந்து நான்.

இரத்தப் பிசுபிசுப்பு
************************
பள்ளி வளாகத்தின் கழிவறையில்
பீச்சியடித்த மூத்திரத்தில்
சரிந்து வீழ்ந்தது நெடுஞ்சுவர்

கனத்துக் கிடந்த இடிபாடுகளில்
எஞ்சிய உயிரோடு
மல்லாந்து கிடக்கிறேன்

குளிரத் தொடங்கிய என் உடல்
பதறும் கரங்கள் அள்ளி எடுக்கையில்
சின்னஞ்சிறு ஆட்டுக்குட்டியென
ஓடோடித் திரிந்த மைதானத்தை
கடைசிமுறை திரும்பிப் பார்க்கிறது

வலிமிகுந்து நினைவுகள் அழிய
செந்நிற திரவமாய் வழிகிறது
என் வாழ்வின் முடிவு

எல்லாம் அடங்கிய நொடியில்
அகலாமல் ஒட்டிக் கொள்கிறது
என் இரத்தத்தின் பிசுபிசுப்பு
அதிகாரத்தின் கரங்களில்
என்றென்றைக்கும்.

க. சம்பத்குமார்

சே.கார்கவி கவிதைகள்

சே.கார்கவி கவிதைகள்




வாழ்க்கை என்பது மழைத்துளியின் ஆரம்பம் வரை……
*************************************************************
எத்தனை மௌனங்களை இடிகளாய் ஏற்பது
எத்தனை இன்னல்களை மின்னல்களாய் ஏற்பது
மேகம் விலகுமென
நீண்டநேரமாக நிலவிற்கு காத்திருக்கிறது
மண்ணில் வாழ் குழந்தை…..!

மாடியிலிருந்து வானை கீற முயன்ற கல்
காற்றைக் கிழித்த திருப்தியில் பூமியை அடைந்தது…..!

காற்றைக் கிழித்து விழுந்த கல்
குழுந்தைகளுக்கு
ஆற்றில் கோலம் வரையும் புள்ளிகள் ஆகிவிட்டன….!

ஆற்றில் உருவான வளைய கோலம்
அடுத்த கரையை தொடும் முன் முற்றுப் பெறுகிறது,
சிறு மீன் துள்ளி மீண்டும் உருவாக்கிய இன்ப வளையத்திற்கு முன்….!

மீனின் துள்ளலும், ஆற்றின் கரையோர சிறுவர்களின் நீச்சலும்

ஒன்றாகவே மூழ்குகின்றன,
மொத்தமாக உலகை நகர்த்தும் ஆற்றின் நீரோட்டத்தில்…..!

ஓடும் ஆற்று நீரின் உச்சபட்ச தேவை என்னவென்றால்
அதன் வாழ்க்கை என்பது மழைத்துளியின் ஆரம்பம் வரை
என்பதில் எந்த மாற்றமும் இல்லை………!

மெல்லியதொரு_இறுக்கம்
*******************************
இறுக அழுத்தி
கரம்பற்றி நகரும்
துணைகளுக்கு
இறுக்கத்தை மேலும் கற்றுத்தருகின்றன
இருவித்திலை தாவரங்கள்….

யதார்த்தமாக
கரம் கோர்த்த ஒரு மோதிரத்தின் வலி
கரம் மாறும் பொழுது வலிக்கத்தான் செய்கிறது்…….

ஒத்து ஊதும் நாயனத்தின் இறுதியில் இரு உள்ளங்களின் சிரிப்புதான்
நுரையீரலை இசைப்படுத்துகிறது…….

கைப்பிடித்து
முகம்பார்த்து
பூச்செண்டை விசிறி எறியும் பொழுது அறிவதில்லை
எறிவது மீண்டும் தரை திரும்புமென…….

சிவப்புக் கம்பள விரிப்புகளுல்
அவ்வப்போது விருப்பப் பாதங்களும்
அன்றாடம் வெறுப்பு பாதங்களும் சற்று அதிகமாகவே பதிவுறுகிறது……..

கடற்கரைப் பாதங்கள்
***************************
உனது மொத்த தலைகணத்தையும் இறக்கி வைத்த
பள்ளத்தில் நிரம்பி வழிந்து ஆரம்பமாகிறது
அலைகளின் தலைகணநிரப்பங்கள்………….

உனது ஒட்டுமொத்த எடையை அழுத்தி நகர்ந்த உனக்கு
என்னை மிதித்து சென்றதாக கவலையில்லை
நன்றிகெட்ட முன்னேற்றச்சுவடுகளாய்……..

அழைத்து சென்றேன்
அழித்து சென்றது
எழுந்து நடந்தேன்
என்னை ஒரு நூல் இறக்கியது………..

மணற்கம்பளத்தை வரியில்லாது மிதித்து சென்று
எறி இறங்க இயலாத நண்டுகளை படைத்ததுதான்
ஆகச்சிறந்த படைத்தலாகிறது…….

உனது அருகில் நான்
எனது அருகில் நீ
பாதியாக்கப்பட்ட யாரோ ஒருவர்
இங்காவது ஒற்றுமைக் காப்போம்
அலையடிக்கும் வரையில்………

அவளுக்கான அழுத்தங்களை
எடையாக்கி மிதித்து சென்றேன்
நீரின்றி நினைவுகள் மணலாய் ஒட்டியது…
நீர்பட்டு விரக்திகள் நீரோடு வழிந்தோடியது……….

அலைகளின் ஓயாத கரையேறுதலி்ல்
பலர் அறிய இயலாமல் போய்விடுகிறது
நேற்றைய நலம் விரும்பிகளின்
உண்மையான் கடற்கரைப் பாதங்கள்………

கவிஞர் சே.கார்கவி