நூல் : கைரதி 377 (மாறிய பாலினரின் மாறாத வலிகள்)
ஆசிரியர் : மு.ஆனந்தன்
விலை : ரூ.₹110
பக்கங்கள் – 120
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
bharathiputhakalayam@gmail.com
கைரதி377. வெறுமனே படித்து கடக்கும் கதைகள் இல்லை. சொந்த மண்ணிலே அகதிகளாக இல்லை.. இல்லை.. சொந்த தாய் தந்தையாலே உறவுகளாலே நிராகரிக்க பட்ட, பொது சமூகத்தால் சக மனிதாரக ஏற்றுக்கொள்ள தயங்கும், ‘பாலின அடையாள சுதந்திரத்தை வேண்டி வாழும் மனிதர்களின்’ வலி மிகுந்த வாழ்க்கை வரலாறு.
“கேள்விகளை உருவாக்கியே பழக்கப்பட்ட அதிகார மூளை ஒரு உண்மையான கேள்வியை எதிர்க்கொள்ளும்போது முகத்தில் கடுகடுப்பை கடன் வாங்கியாவது பூசிக் கொள்ளும்”
இந்த அதிகார மூளை மற்றும் ஆதிக்கமூளைகள் என்பது அரசு உயர் பொறுப்பில் இருப்பவர்களுக்கு மட்டும் அல்ல சக மனிதர்களின் உள்ளுணர்வை புரிந்துக் கொள்ளாத அல்லது சில மனிதர்களை இந்த பூமிக்கு அப்பாற்பட்டவர்களாக கருதும் மூளையும் அப்படிப்பட்டது தான்.
ஒரு அரசு பேரூந்தில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் இருவர் இருக்கும் சீட்டில் தனியாக அமர்ந்திருந்தான். பேரூந்தில் அவனிருந்த சீட்டில் மட்டுமே இடமிருந்தது .40 வயது மதிக்கத்தக்க ஒருவர் அந்த சீட்டில் அமர போனார். அவரின் தோற்றம் அவரை ஒரு திருநங்கை என பேரூந்தில் இருந்த அனைவராலும் ஊகிக்க முடிந்தது. அந்த மாணவன் அருகில் திருநங்கை அமர்ந்தவுடன்.. ஏய் எங்க வந்து உட்காருத என்று ஆவேசமாக எழுந்தான் மாணவன். பஸ்ஸில் இருந்த அனேகம் பேர்கள் கேலி சிரிப்புடன் அந்த திருநங்கை அமர்ந்தது தப்பு என்ற தோணியில் அந்த திருநங்கை மீது தனது ஆதிக்க பார்வை செலுத்தினர். நடத்துநர் ஒரு படி மேலே போய் உங்களுக்கு ரெம்ப கொழுப்பு கூடிப் போச்சு என்று வாய்விட்டே நக்கலடித்தார்.
அந்த திருநங்கை நான் டிக்கெட் எடுத்து இருக்கேன்.. இடம் இருந்துச்சு அதான் உட்கார்ந்தேன் இதிலென்ன தப்பு? என்று தனது கரகரப்பான குரலில் சொன்னவுடன் அதுவரை கேலியும் கிண்டலுமாக இருந்த முகங்கள் அவளின் கேள்வியை எதிர்கொள்ள முடியாமல் கடுகடுப்பை முகத்தில் அப்பிக்கொண்டு நடத்துநர் சொன்னதை உதட்டில் முனுமுனுத்தார்கள். இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு மேல் இருக்கும்.
கைரதி377 ‘இதரர்கள்’ கதையை படித்ததும் இந்த சம்பவம் நினைவுக்கு வந்தது. அந்த பேரூந்தில் திருநங்கைக்கு பக்கம் நின்று பேசா மடந்தை யாக நானிருந்தேன் என்ற குற்றவுணர்வு இன்னும் என்னை விட்டு போகவில்லை. என்னை போல் இந்த கதைகளை படிக்கும் ஒவ்வொருவரும் ஒரு நிகழ்வு நினைவுக்கு வரலாம்.
பொதுச் சமூகம் ‘கைரதி’களை தம்மோடு இணைத்துக் கொள்ள தவறி இருக்கிறது என்பதை உணர்த்தலாம்.
மாற்றுத் திறனாளிகள் கர்ப்பிணி பெண்கள் மற்றும் வயதானவர்கள் ஏன் நாய் பூனை என அனைத்து உயிரினங்கள் மீதும் மனிதாபிமான அடிப்படையில் அணுகி இரக்கம் காட்டும் பொதுச் சமூகம். திருநங்கை திருநம்பி மீது அனுதாபம் காட்ட மறுப்பதோடு அவர்களை கேலிச் சொற்கள் மூலம் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு கொஞ்சமும் தயங்காமல் ஒதுக்கி வைக்கிறது.
சினிமாவும் ஊடகமும் அவர்களை பாலியல் தொழிலாளிகளாக கையெந்தும் பிச்சைக்காரர்களாக மனிதசமூகத்திற்கு அப்பாற்பட்டவர்களாகவே காட்ட முனைந்திருக்கிறது.
மூன்றாம் பாலினத்தவர்கள் குறித்து நான் படித்த முதல் புத்தகம் வாடாமல்லிதான்.
1990 களில் எழுத்தாளர் சு.சமுத்திரம் அவர்கள் வாடாமல்லி நாவல் எழுதுவதற்கு முன் அவர்கள் வாழ்க்கை மையப்படுத்தி சிறுகதை ஒன்றை எழுதி ஒரு பத்திரிகைக்கு அனுப்ப.. அந்த பத்திரிகை அதை பிரசுரிக்க தயங்கி பிரசுரிக்காமலே சாக்கு போக்கு சொன்னார்களாம். அவர்கள் பற்றி செக்ஸ் சம்பந்தமான கதைகளை பிரசுரித்து பழக்கப்பட்ட பத்திரிகைகளுக்கு அவர்கள் வாழ்க்கை கதையை பதிவு செய்ய தயங்கினார்கள் என்பதை சு.சமுத்திரம் அவர்கள் குறிப்பிட்டு இருக்கிறார். எப்படியாவது அவர்களை பற்றி இலக்கிய உலகில் பதிவு செய்திட எண்ணி வாடாமல்லி நாவலை எழுதியாகவும் குறிப்பிட்டிருப்பார்
தமிழ் இலக்கிய உலகில் மூன்றாம் பாலினத்தவர்கள் குறித்து படைப்புகள் குறைவுதான்.இந்த நூலின் முன்னுரையில் தோழர் பிரியாபாபு அவர்கள் குறிப்பிட்டதுபோல் பெண் இலக்கியங்கள் தலித் இலக்கியங்கள் ஏன் இப்பொழுது குழந்தைகள் இலக்கியங்கள் பேசப்படும் அளவிற்கு கூட திருநர் இலக்கியம் பேசப்படவில்லை என்ற வருத்தத்தை கைரதி போக்கி இருக்கிறது.
ஆண்னை போல் பெண்ணுக்கு வன்மை, கோபம், ஆளும் திறன், உண்டென்பதை ஆண்கள் ஒத்துக் கொள்ள வேண்டும் என்று பெரியார் சொன்னதை போல்..
ஆண்களை போல் பெண்களை போல்.. மாறிய பாலினதவர்களுக்கும் ஆசை, கோபம், மானம், வீரம், காதல், சுயமரியாதை, உண்டென்பதை ஒத்துக் கொள்ள வேண்டும். அதை இந்த புத்தகம் படிக்கும் யாவரும் உணர்வர்.
மொத்த 11 கதைகள். ஆனால் ஒவ்வொரு கதையும் ஊடே சென்று நம்மை நாம் காணலாம். இந்த சமூகத்தில் நாம் கைரதிகளை எப்படி அணுகினோம் அவர்களின் வலியை எப்படி புரிந்துக் கொண்டோம். அவர்கள் வாழ்வு இப்படியும் இருக்குமா? அவர்களை அந்நியபடுத்தும் நமது மனிதநேயம் எத்தகையது? என்று நம்மை உலுக்கலாம்
தன் மானம் காக்க சுள்ளி தீயில் வெந்த ஓலையக்காவின் வைராக்கிய நெருப்பு கைரதியின் நெஞ்சிலும் அணையாமல் இருக்கிறது.
இதரர்கள் கதையில் கைரதிகிருஷணன் மூலம் விண்ணப்பங்களில் சிறப்பு பாலினம் என்று குறிப்பிடாததை மட்டுமல்லாமல்.. நீங்கள் அலியா?ஹிஜராவா யூனக்கா? என்ற கேள்வியை எழுப்பி அதற்கு நூலாசிரியர், கைரதிகிருஷ்ணன் மூலம் தரும் பதில்கள் கதைமாந்தர்களை மட்டும் அல்ல கதை வாசிக்க வாசகரையும் உறையவைக்கும்.
கூடுதலாய் ஒரு நாப்கின். பெண்ணாய் உணரும் கைரதி,வெளிபடுத்த முடியாத ஏக்கங்களின் வெளிபாடு. கதையில் வரும் பூர்வீகா முகத்தில் பூசப்பட்ட போலி கற்பிதங்கள் துடைத்துப் செல்லும் தருணத்தில் கதை படிப்பவர்கள் பூர்வீகா மாறிவிடுவார்கள்.
திருநங்கை நலவாரியத்தில் உதவித்தொகை பெற கைரதி அனுபவிக்கும் கொடூர வலியை சொல்லும் கதை ஜாட்ளா.
இயற்கை உபாதைகளை கழிக்கக் கூட விடாமல் இந்த சமூகம் திருநங்கைகளை என்ன படுத்துகிறது என்பதை சொல்லும் அடையாளங்களில் அவஸ்தை.
சட்டபூர்வமாக வதைக்கும் 377 ஆம் பிரிவின் கீழ் கைரதி கதை என சிறப்பு பாலினத்தவரின் வாழ்க்கை ரணங்களை அழுத்தமா சொல்லுகிறது.
அழகன் என்கிற போர்க்குதிரை,மாத்தாராணி கிளினிக் போன்ற கதைகள் கைரதிகளுக்கு பொது சமூகம் மீதான நம்பிக்கையுட்டும் கதைகள்
இலா. இது முற்றிலும் மாறுபட்ட கதை சிலநாட்கள் கைரதனாகவும் சில நாட்கள் கைரதியாகவும் வாழும் சூழலை பற்றியது. இந்த கதை சொல்லப்படும் விதமும் கதைகளமும் ஆச்சரியப்படவைத்திருக்கிறது.
அதே போல நஸ்ரியா ஒரு வேஷக்காரி கதையும் ஆணாக வாழ்வை விரும்பும் கைரதனின் வாழ்க்கை.
தோழர் மு.ஆனந்தன் அவர்கள் பேசாப்பொருளை பேச துணிந்திருக்கிறார் என்பதை தாண்டி இது தொடர்ந்து சமூகத்தில் பேசும் பொருளாக வேண்டும் என்பதை ஒவ்வொரு கதையும் நமக்கு உணர்த்துகிறது.
மூன்றாம் பாலினத்தவர்கள் பற்றி அழுத்தமாக பதிவு அதே நேரத்தில் அவர் கதை மாந்தர்கள் கதைக்களம் என எல்லாவற்றையும் அடையாளம் காட்டி இருக்கிறார்.
சிறப்பு பாலினத்தவரின் மீதான நிராகரிக்கும் பார்வைக்கு சாதி மதம் இனம் மொழி என வேறுபாடுகள் எதுவும் கிடையாது.
“நான் எல்லா மதங்களும் பாவமன்னிப்பு வழங்குகிறேன் இனிமேலாவது மதங்கள் பெண்களை சமமாக நடத்தட்டும்” என்று கைரதியா மாறிய கென்னடியின் குரல் இரட்டை விடுதலைக்கு அடித்தளமிடுகிறது.
ஒரு நல்ல படைப்பு சக மனிதர்களின் வலியை எழுத்தின் மூலம் கடத்தி விட வேண்டும் அதே சமயத்தில் அவர்களின் உரிமைகளையும் பேசவேண்டும். கைரதி377 அதை செய்திருக்கிறது.
இந்த சிறுகதைகள் தொகுப்பின் மூலம் தோழர் மு.ஆனந்தன் மனதுக்கு நெருக்கமாகவிட்டார். உங்கள் கைகளை இறுக்கப் பற்றி கொள்கிறேன். அன்பும் வாழ்த்தும் தோழர்.
– பிச்சுமணி