உழைப்பே உயர்வு சிறுகதை – விஜி ரவி
இந்திரபுரி நாட்டின் மன்னர் பீமசேனனுக்கு சித்தார்த்தன் என்ற மகன் இருந்தான் . அவன் ஒரு முழுச் சோம்பேறி. ஒரு இளவரசனுக்குரிய கடமைகள் எதுவும் செய்யாமல் எப்போதும் உண்பது , உறங்குவது என வீணே காலம் கழித்தான். தன் நண்பர்களுடன் வெட்டி அரட்டை அடிப்பது, வனங்களுக்கு சென்று விலங்குகளை வேட்டையாடுவது என பொறுப்பில்லாமல் சுற்றித் திரிந்தான். குதிரையேற்றம், போர்ப்பயிற்சி முதலியவற்றை தன் தந்தையின் வற்புறுத்தலின் பேரில் கற்றிருந்தாலும் அதை பயிற்சி செய்யாமல் அசட்டையாக இருந்தான்.
மன்னர் பீமசேனன் தன் மகனிடம் “சித்தார்த்தா … ஒரு நாட்டின் தலைவன் எப்பொழுதும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் . தன் மக்களை பாதுகாக்கவும் நாட்டை எதிரிகளிடமிருந்து காத்துக் கொள்ளவும் தொடர்ந்து போர் பயிற்சியில் ஈடுபட வேண்டும். நீ இப்படி வீணே காலம் கழிப்பது எனக்கு மிகவும் கவலையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. எனக்கும் வயதாகிக் கொண்டே போகிறது . நீ பொறுப்புள்ள ஆண்மகனாக இருந்தால் தானே நான் உனக்கு முடிசூட்ட முடியும்…?” என்றார்.
“தந்தையே நம் நாட்டைப் பாதுகாக்க ஏராளமான படைவீரர்களும், தளபதியும், சேனைகளும் இருக்கும்போது நான் ஏன் இவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டும் ….?” என்றான்.
” என்னதான் சிறந்த படையும், திறமையான வீரர்களும் இருந்தாலும் அவர்களை வழி நடத்திச் செல்ல வலிமையான , வீரமான மன்னன் வேண்டும் …’ என தந்தை கூறிய அறிவுரைகள் சித்தார்த்தனின் காதுகளில் ஏறவே இல்லை. மிகுந்த மன வருத்தத்துடன் மன்னர் அரண்மனைத் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தார். அவர் முகம் வாடி இருப்பதை கண்ட தோட்டக்காரர் சிந்தாமணி மன்னரை வணங்கி அவரது முகவாட்டத்திற்கான காரணம் கேட்டார் . மன்னரும் தன் கவலையை எடுத்துரைக்க, ” கவலைப்படாதீர்கள் மன்னவா….! நாளை இளவரசரை தோட்டத்திற்கு அழைத்து வாருங்கள். அவர் மனம் மாற ஒரு வாய்ப்பு அமையும் ..’’ என்றார்.
சிந்தாமணி ஏறக்குறைய ஐம்பது வருடங்களுக்கும் மேலாக அரண்மனைத் தோட்டத்தில் பணிபுரிந்து வருகிறார் . அதனால் அவர் மேல் மன்னருக்கு எப்போதுமே மரியாதையும் அன்பும் உண்டு. அடுத்த நாள் காலை தன் மகனை தோட்டத்திற்கு அழைத்து வந்தார் மன்னர். அவர்களை வணங்கி வரவேற்ற பெரியவர் சிந்தாமணி ஒரு தட்டில் மாம்பழங்கள் , மாதுளம் பழங்கள் , பப்பாளி ,கொய்யா போன்றவற்றை வைத்து அவர்களை சாப்பிடச் சொன்னார் . சாப்பிடுவதில் விருப்பம் உள்ள இளவரசன் “”ஆஹா…! என்ன அருமையான சுவையான மாம்பழங்கள்….கொய்யாப்பழம் கூட இனிக்கிறதே….பப்பாளியும் அருமை ….”என கூறிக்கொண்டே பழங்களை சாப்பிட்டு முடித்தான்.
அதன்பின் இளநீர் களை வெட்டி அவர்களுக்கு குடிக்கக் கொடுத்தார். “ஆஹா… இளநீர் கற்கண்டு போல் இனிக்கிறதே.. ” என்று பாராட்டினான் இளவரசன் . “இளவரசே.. இந்த இளநீரைத் தந்த மரத்தின் வயது நாற்பது….. அதோடு நீங்கள் சாப்பிட்ட அந்த மாம்பழங்களைத் தந்த மரத்தின் வயது 50. உங்கள் தந்தை சிறு குழந்தையாக இருக்கும்போது நான் நட்ட மரம் அது. முறையாக பராமரித்ததால் இன்று வரை கனிகளைத் தந்து மகிழ்கிறது அந்த மரம்..”என்றார் . “என்ன..? ஐம்பது வருடங்களாக காய்க்கிறதா…?” என வியந்தான் இளவரசன்.
“ஆமாம் இப்போது கூட சில புதிய செடிகளை நட்டுப் பராமரித்து வருகிறீர்களே… ஏன்..?ஏற்கனவே நம் தோட்டத்தில் ஏகப்பட்ட செடிகள் , மரங்கள் இருக்கின்றனவே …. இன்னும் எதற்கு புதிது புதிதாக செடிகள் மரங்களை நடுகிறீர்கள் தாத்தா…? “என்றான் இளவரசன்.
“என்னுடைய தொழில் செடி கொடிகளை நடுவது, பராமரிப்பது, நீர் விடுவது. இந்த மரங்கள் எல்லாம் என் குழந்தைகள் போல. அவற்றின்மீது உயிரையே வைத்துள்ளேன். என் மகன்கள், பேரப்பிள்ளைகள் அனைவரும் இந்த அரண்மனையிலேயே மன்னர் தயவால் நல்ல பணிகளில் உள்ளனர். என்னை வீட்டில் ஓய்வெடுக்குமாறு கூறினர். ஆனாலும் என்னுடைய கடைசி மூச்சு வரை நான் உழைக்க விரும்புகிறேன். நான் இறந்து போன பின்னாலும் நான் நட்டு வைத்த மரங்கள், செடிகள் பிறருக்கு பயன் தர வேண்டும். அதனால் தான் இந்த எண்பது வயதிலும் நான் வேலை செய்கிறேன் ..” என்றார் சிந்தாமணி .
இதைக் கேட்ட இளவரசன் ஆழமாக சிந்திக்கத் தொடங்கினான். “ஒரு 80 வயதுப் பெரியவர் நாள் முழுக்க ஓயாமல் உழைக்கிறார் . 25 வயதான நான் உழைப்பு பற்றி சிறிதும் சிந்திக்காமல் முழு சோம்பேறியாக இருக்கிறேனே.. “என்று தன்னைப்பற்றி முதல் முறையாக வருந்தினான். “தந்தையே தோட்டக்காரத் தாத்தாவினால் எனக்கு புத்தி வந்தது. உழைப்பின் அருமையை உணர்ந்து கொண்டேன். இனிமேல் நீங்கள் ஆசைப்படும்படி நான் நிறையப் போர்ப் பயிற்சிகளை பயிற்சி செய்வேன். பொறுப்புள்ள இளவரசனாக இருப்பேன் “என்றான் . மாறிய அவன் மனதைக் கண்டு மன்னரும் சிந்தாமணித் தாத்தாவும் மனம் மகிழ்ந்தனர் .
ஐந்து லட்சம் குறுங்கதை – இரா. கலையரசி
“பயங்கரமா இருக்கும். நீ எப்படி அங்கேயே இருக்கமுடியும் சொல்லு. எனக்கு என்னமோ சரியா படல பார்த்துக்க”னு சொன்ன சம்பத் திகிலோட தான் இருந்தான்.
“சரி எல்லாத்தையும் எடுத்து வச்சுக்க. அவங்க கிட்ட பேச வேண்டியதை எல்லாம் பேசிட்டியா?”
“ஆமாம் பேசிட்டேன். ஐந்து லட்சம் ரூபாய் நிச்சயமா தருவாங்க”.
அந்த ஒரு நாள் இரவு பத்தி யோசிக்க, யோசிக்க பயம் பிடரியை பதம் பார்த்தது. அந்த வீட்ல ஒரு நாள் இருக்க இரவின் இருளுக்கு துணையாக இரண்டு பெட்டி மட்டுமே இருந்தது.
“சரக் சரக்” கால் சத்தம் அடுத்த அறையில் கேட்டது. முன்னும் பின்னும் அசைந்த திரைசீலையில் பெண் ஒருத்தி நடக்க ஆந்தைகள் அலறின.
அரண்மனை முழுசா ஆட்கள் பேசும் சத்தம். ஆனால் ஆட்கள் இல்லை. ஏதாவது எபக்ட்ஸ்னு நினைத்தவனுக்கு பல அறையில் இருந்து வரிசையாக வந்தபடி இருந்தனர்.
மயங்கி விழுந்தவரை தாங்கின கைகள்.
“யோவ் எந்திரியா ..நாங்க தான் தெரியாமல் மாட்டிகிட்டோம். உனக்கு அறிவில்ல?” என்றது ஒரு குரல்.
“அஞ்சு லட்சம் லாம் இல்ல. ஆள் புடிக்றாங்க கிட்னி திருட. இது தெரியாமல் வந்து மாட்டிகிட்டியேடா” னு ஒப்பு வச்சு அழுகறாங்க.
நூல் மதிப்புரை: முனைவர் மணி.மாறனின் தஞ்சையும் அரண்மனையும் – முனைவர் பா. ஜம்புலிங்கம்
முனைவர் மணி. மாறன் எழுதியுள்ள தஞ்சையும் அரண்மனையும் என்னும் நூல் சுற்றுலாப்பயணிகளுக்கான ஒரு அழகிய கையேடாக மட்டுமன்றி, பொதுமக்களுக்கும் பயன்படும் வகையில் அமைந்துள்ள நூலாகும். நூலை வாசிக்கும்போதே தஞ்சாவூரையும், அருகிலுள்ள பகுதிகளையும் சுற்றிவந்த ஓர் உணர்வு ஏற்படுகிறது.
இந்நூல் தஞ்சாவூரின் வரலாற்றுச்சிறப்புகளையும், கலையின் அருமைகளையும் மிக நுணுக்கமாக எடுத்துரைக்கிறது. தேவையான இடங்களில் ஒளிப்படங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
பல நூற்றாண்டுகளைக் கண்ட கோட்டையும் அகழியும் சூழ்ந்த தஞ்சாவூரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அரண்மனை, கலைக்கூடம், காவல் கோபுரம், சங்கீத மகால், சரசுவதி மகால் நூலகம், மராட்டா தர்பார் ஹால், ராயல் அருங்காட்சியகம், சரபோஜி அருங்காட்சியகம், அரசு அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள், ஐந்தடுக்கு மாளிகையான சர்ஜா மாடி, இந்தியாவிலுள்ள பெரிய பீரங்கிகளில் ஒன்றான இராஜகோபால பீரங்கி அமைந்துள்ள பீரங்கி மேடு, மணிக்கூண்டு, சிவகங்கைப்பூங்கா, இராஜராஜேச்சரம் எனப்படுகின்ற தஞ்சாவூர் பெரிய கோயில், தமிழ்ப் பல்கலைக்கழகம், ராஜராஜன் மணிமண்டபம். மாரியம்மன் கோயில் உள்ளிட்ட பல இடங்களைப் பற்றி இந்நூலில் காணலாம்.
தஞ்சாவூர் வீணை, தஞ்சாவூர் ஓவியங்கள், தஞ்சாவூர் கலைத்தட்டு, தஞ்சாவூர் மாலைகள், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, உலோகச் சிலைகள் தயாரிப்பு, குத்துவிளக்குகள், நெட்டி வேலைப்பாடு, பட்டுப்புடவை உற்பத்தி, கலம்காரி துணி வேலைப்பாடு, கோயில் குடை வேலைப்பாடு என்ற வகையில் கலைகளின் தாயகமாக தஞ்சாவூர் விளங்குவதை இந்நூல் விவாதிக்கிறது. தஞ்சாவூரின் சிறப்புகள் சிலவற்றை இந்நூலிலிருந்து காண்போம்.
“2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்கத் தமிழ் நூல்களில் தஞ்சாவூர் என்ற ஊர் பற்றிய குறிப்பு எங்கும் காணப்பெறவில்லை. சோழ நாடாகத் திகழ்ந்த இம்மாவட்டத்தின்கண் உள்ள வல்லம், ஆவூர், ஆர்க்காடு, கிழார் போன்ற ஊர்களைப் பற்றிய குறிப்புகள் சங்கத் தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன.” (ப.8)
“சாகித்ய ரத்னாகரம், இரகுநாத விலாசம், இரகுநாதப்புதயம், மன்னாருதாச விலாசம் போன்ற நாயக்கர் காலத்தில் எழுந்த நூல்களின் வழியாக தஞ்சைக் கோட்டை, அகழி, அரண்மனை பற்றிய செய்திகளை அறிய முடிகிறது.” (ப.9)
“தற்போது ஆயுத கோபுரம் என்றழைக்கப்படும் எட்டு அடுக்குகள் கொண்ட மாட மாளிகையே இந்திரா மந்திரம் எனப்படுவதாகும். ஒவ்வொரு அடுக்கின் நடுப்பகுதியிலும் மன்னரின் படுக்கைக்குரிய கட்டில்களும், விதானங்களும் இருந்ததற்கான அடையாளங்களை இன்றும் காணலாம்.” (ப.16)
“….பெரிய கோயில் வளாகத்தில் பெய்யும் மழை நீர் முழுவதும் வீணாகாமல் இருக்கும் பொருட்டு மாமன்னன் இராஜராஜனால் சிவகங்கை என்ற பெயரில் குளம் வெட்டி காக்கப்பெற்று, அக்குளத்தில் நீரானது சேகரிக்கப்பட்டது. மழைநீர் சேகரிப்பின் வழிகாட்டி மாமன்னன் இராஜராஜனே ஆவான்…” (ப.32)
தஞ்சாவூரைப் பற்றி மட்டுமன்றி அருகிலுள்ள மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த திருவையாறு, சுவாமிமலை, தாராசுரம், கும்பகோணம், திருபுவனம், சிதம்பரம், தரங்கம்பாடி, பூண்டி மாதா கோயில், கல்லணை, திருவாரூர், நாகூர், வேளாங்கண்ணி, மனோரா, அலையாத்திக் காடுகள், புதுக்கோட்டை, கங்கைகொண்ட சோழபுரம், நவக்கிரகத் தலங்கள் ஆகிய ஊர்களைப் பற்றிய பறவைப்பார்வையினையும் இந்நூல் கொண்டுள்ளது.
தஞ்சாவூரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களைக் காண விரும்புவோருக்கும், புகழ் பெற்ற கலைகளைப் பற்றி அறிந்துகொள்ள விழைவோருக்கும் இந்நூல் மிகவும் உதவியாக இருக்கும். அரிதின் முயன்று செய்திகளைத் திரட்டி, சிறப்பான நூலை எழுதியுள்ள நூலாசிரியருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.
நூல் : தஞ்சையும் அரண்மனையும்
ஆசிரியர் : முனைவர் மணி. மாறன்
பதிப்பகம்: ஏடகம், 2481, ஜவுளி செட்டித்தெரு, தெற்கு வீதி,
தஞ்சாவூர் 613 009, (அலைபேசி 82487 96105)
பதிப்பாண்டு: அக்டோபர் 2021
விலை ரூ.100