Posted inPoetry
பாவ(லை) வனங்கள் கவிதை – ரா. சிவக்குமார்
கத்தியோடு ரத்தமின்றி
யுத்தமொன்று நடக்குது
காட்டில் மரங்கள்
உன்னை விட உயர்ந்தவன் என்பதால்
என் மீதும் வன்முறையா?
வெட்டப்பட்ட மரங்கள்.
நிராயுதபாணியாய் நிற்கின்றோம்
இருந்தும் எங்கள் மீதும் போரா?
நீங்கள் அறுப்பது
என் அடியல்ல
உன் தலைமுறை
என் நிழலில் அமர்ந்து கொண்டே
என்னை வெட்டத் திட்டம் தீட்டுகிறாய்.
நீயும் புத்தனாகு
போதி மரமென்று தப்பித்து கொள்வேன்.
என் சந்ததியின் அழிவில்
மீண்டும் வனமாவோம்.
பாவ வனமாவோம்.
எங்களுக்கும் குருதி இருந்திருந்தால்
சமுத்திரமும் சிவப்பாகிப்
போயிருக்கும்.
என் காட்டில் உன் காலடி தடம்
என் மரணத்தின் நாள் குறிக்கும்
காலனின் தடம்.
இதுவும் கடந்து போகும்
உங்களுக்கு மட்டுமல்ல
எங்களுக்கும் தான்.