கவிதை: ‘அழகு’ – கவிஞர் பாங்கைத் தமிழன்
பாங்கை தமிழனின் கவிதைகள்
பெயரற்ற காதலர்
*********************
எனக்கு
மிகவும் பிடித்தமானவர்
அந்த நாயகனும்
நாயகியும்!
இன்றும்
என்றும்
இளமை…. இனிமை
நிரந்தரமானவர்!
சாயமாக
இனமும் சாதியும்
பூசி அறியா
புனித காதலர்கள்!
அந்ந
நாயகனும் நாயகியும்!
அவர்களுக்குப்
பெயர்கூட இல்லை….
பெயர் பார்த்து
சாதியப் பெருமை பேசி
பீற்றிக் கொள்வர்
என்பதால்;
பெயரும் அற்றவர்கள்!
அவனுக்குத்
தலைவன் என்றும்
அவளுக்குத் தலைவி என்றும்
பெயர்!
சங்ககால இலக்கியம் காட்டும்
நாயகன்..
நாயகி!
பெயரற்ற காதல்
ஆனால்
பெருமை மிகு காதல்!
‘தமிழை விட தரணியில் ஏதுமில்லை’
******************************************
புகட்டுங்கள்
இது
தாய்ப்பால் நிகர்!
ஊட்டுங்கள்
இது
அமிழ்து!
நாவினிக்கத்
தடவுங்கள்
இது
தேன்!
சுவைக்கக்கொடுங்கள்
இது
முக்கனிக் கலவை!
குடிக்கக் கொடுங்கள்
இது
நனி பசு நல்கியப் பால்!
உண்ணக் கொடுங்கள்
இது
அதியன் ஔவைக்குக் கொடுத்த நெல்லி!
சொல்லிக் கொடுங்கள்
இது
சுந்தரம்!
தொட விடுங்கள்
இது
பனி மலர்!
சுவாசிக்க விடுங்கள்
இது
பொதிகை தென்றல்!
பூசி விடுங்கள்
இது
பொதிகை சந்தனம்!
குளிப்பாட்டுங்கள்
இது
குற்றால அருவி!
நனைய விடுங்கள்
இது
அந்தி மழை!
அணிவித்து மகிழுங்கள்
இது
பூவாடை!
நீந்த விடுங்கள்
இது
காவேரி!
ஏற்றி விடுங்கள்
இது
திருவாரூர் தேர்!
வணங்கச் சொல்லுங்கள்
இது
தஞ்சை பெரிய கோயில்!
தாகம் பருகச் சொல்லுங்கள்
இது
தாமிரபரணி/சிறுவாணி!
‘இது’தான் ‘தமிழ்’!
இதைவிட ஏதுமில்லை
ஒரு குழந்தைக்கு
‘மொழி’!
இதைவிட ஏதுமில்லை
நம் குழந்தைகட்குத் தாலாட்டு!
இதுவே உயர்வுதரும்!
புரட்சித் தலைவன்
*********************
மண்ணிலே மனிதராக
மலர்ந்திட்ட மானுடர்க்கு
மானிட சமூகம்தானே
துணையென நிற்க வேண்டும்!
வேண்டுவோர் வேண்டாதோரே
வேண்டாமே எண்ணந்தன்னில்;
எல்லோரும் மனிதரென்ற
எண்ணமே வேண்டும் வேண்டும்!
மனிதரை மதிப்போர் யாரும்
மாநில பெருமை கொள்வர்;
மக்களின் மனம் உயர்ந்தே
மாமணி பெறுவார் பேரே!
ரஷ்யாவின் நாடு தன்னில்
ரட்சகன் தோன்றினானே
லெனின் எனும் புரட்சியாளன்
பூகோளம் புரட்டினானே!
விளைகின்ற பயிர்கள்தானே
முளையிலே தெரியும் என்பார்
இளமையில் தெரிந்தார் நல்ல
இளகிய மனத்தினாலே!
அம்மாவை அணுகிக் கேட்பார்
அன்புடன் காசு வேண்டி;
அம்மாதான் கொடுக்கும் காசால்
அடைபட்டக் கிளியை வாங்கி
ஆகாயம் பறக்கச் செய்து
ஆனந்தம் பொங்கி வாழ்வார்!
கிளிகளை கூண்டுக்குள்ளே
கீழமை எண்ணம் கொண்டு
அடைத்திடும் பாவந்தன்னை
அவரென்றும் விரும்ப மாட்டார்!
பறவைகள் பறந்து சென்று
பரவசம் அடைவதைப்போல்
மனிதரும் அடிமையின்றி
மண்ணிலே வாழ வேண்டி;
தன்வாழ்வை அவருக்கீந்தார்
தன்மானத் தலைவரானார்!
அவன்தானே புரட்சியாளன்
அதையெப்போ புரிவோம் நாமே!?
பாங்கைத் தமிழனின் கவிதைகள்
‘ச்சே… ச்சே… ‘
****************
வேட்டி கட்டத் தெரியாதவனுங்க….
சேலை கட்டத் தெரியாதவளுங்க….
தாடி, மீசையோடத் திரியும்
காட்டு வாசிங்க…
பாடத் தெரியாதவனுங்க
தப்பாட்டம் ஆடறவனுங்க…
மண் சட்டிப்பானையில்
பொங்கித் திங்றவனுங்க.
மண் குடிசை…
சேறு.. சகதியில்
உழல்றவனுங்க….
தலை சீவத் தெரியாதவனுங்க….
கைநாட்டுக் குப்பனுங்க…
கூழும்…. கஞ்சியும்…
பசியும் பட்டினியுமா….
கூலி வேலை பிழைக்கறவனுங்க….
நாகரிகம் தெரியாத
Countrybroots!
ஹலோ….
சார் சொல்லிட்டீங்களா?
ட்ரெஸ் சென்ஸ்
மேக்கப் மேக்கிங்
பூசு மினுக்கல்
ஆட்டம் போட
பாட்டுப்பாட
பல்லைக்காட்ட
காட்டானுக்கும் தெரியும்!
சோத்துக்கு
நிலம் உழைக்கணும்,
மூட்டைத் தூக்கணும்,
ரோடு போடணும்
எரி குளம் வெட்டணும்
ரோடு பெருக்கணும்….
பாவி…. பாவி…
உன்னோடப் பொணத்தை
தூக்கணும்…. எரிக்கணும்….
பொதைக்கணும்…..
ஏதுடா நேரம்?
‘எழுதுவோரே…எழுதுவோரே.’..!
*************************************
எழுதுவோரே எழுதுவோரே
எதையெதையோ எழுதுவோரே……
கதைகள் பல எழுதுவோரே
காதலினை எழுதுவோரே….
இயற்கைதனை எழுதுவோரே
இளமைதனை எழுதுவோரே!
ஊர்க்கதைகள் எழுதுவோரே
உலகம் பற்றி எழுதுவோரே!
கனவுகளை எழுதுவோரே
கன்னியரை எழுதுவோரே!
அழகுதனை எழுதுவோரே
அன்பபைப் பற்றி எழுதுவோரே!
அம்புலியை எழுதுவோரே
அதனழகில் மயங்குவோரே!
வாலிபரை எழுதுவோரே
வம்பு தும்பு எழுதுவோரே!
மேகமதை எழுதுவோரே
மேதினியை எழுதுவோரே!
மேட்டுக்குடி எழுதுவோரே
நாட்டு வளம் எழுதுவோரே!
பாட்டு பல எழுதுவோரே
பரிதியினை எழுதுவோரே!
பாரறிந்து எழுதுவோரே
பாதம் தொட்டு வேண்டுகிறேன்!
பசியில் வாடும் மக்கள் துயர்
பாட்டினிலே எழுதுமய்யா…
பாழும் மதம் சாகச்சொல்லி
பழித்து நீயும் எழுதுமய்யா;
சாதிகளை வெறுத்து நீயும்
சமத்துவத்தை எழுதுமய்யா;
நொந்து நொந்து வாழ்க்கையின்றி
வேகுவோரை எழுதுமய்யா!
உழைப்போரை எழுதுமய்யா
உழுவோரை எழுதுமய்யா!
தொழுவாரே உம்மையிவர்
தூய்மை உள்ளத்தாலே என்றும்!
‘மதமதை மண்ணில் புதை’
******************************
சமயங்களாலே சஞ்சலந்தானே…
சரித்திரம் இதைத்தான்
சொல்லுது தானே!
சமயங்கள் எல்லாம்
சந்தனமில்லை;
சாக்கடை என்றால்
வந்திடும் தொல்லை!
மனிதரை வகுத்தது
மதங்கள் தானே?
மதிப்பது அதனை
மதியில்லை தானே!
மதமது என்ன
மானமா மதிக்க?
மனிதத்தை மிதிக்கும்
மிருகம் தானே!
சதிபல செய்வது
மனிதனைக் கெடுப்பது
விதியெனும் விஷவிதை
விதைப்பது மதமது!
அமைதியைக் கெடுப்பது
அருவருப்பானது
அவணியை அழிப்பது
அர்த்தம் இல்லாதது!
சூழ்ச்சிகள் நிறைந்தது
சூழலை அழிப்பது
சூதும் வாதும்
வேதனை கொடுப்பது!
மதிதனை மயக்கிடும்
மாயப் பிசாசது;
விடியலைத் தடுத்திடும்
விடியா இரவது!
புரிந்திட வேண்டுமே
புவியினில் யாவரும்
புதுயுகம் வேண்டிடின்
புதைக்கணும் மதமதை!



