எது பெருமை? கவிதை – பாங்கைத் தமிழன்
சாமியும்
பக்தியும்
சாமியார்களும்
மத வழிபாடுகளும்
வீட்டுக்கு வீடு
வளர வேண்டும்!
பக்தி மார்க்கத்தில்
தேசம்
மூழ்கித் திளைக்க
வேண்டும்!
ஆடைகளும்
அலங்காரங்களும்
சமயக் குறியீடுகளாய்
சந்தோஷப்பட வேண்டும்!
ஆன்மிக பூமியென
ஆரவாரம்
எங்கும் ஒலிக்க வேண்டும்!
மதம் பிடித்தவர்களாக
மக்கள் மாறிட வேண்டும்!
கல்வியெல்லாம்
சமயக் கல்வியாக….
தொழில்களெல்லாம்
மத வழிபாடுகளாக….
கண்டுபிடிப்புகளெல்லாம்
மத எச்சங்களாக….
தேசம் முழுவதும்
சமய கோஷங்களும்
எங்கும் எதிலும்
இறைவா…. இறைவா…
என்றே…..
இரவும் பகலும்
மக்கள் ஆராதித்துக்
கிடக்க வேண்டும்!
உன்னுடைய மதம் பெரிதா
என்னுடைய மதம் பெரிதா
என்று
எங்கும்
விவாதங்கள்
நடந்து கொண்டேயிருக்க வேண்டும்!
இதைவிட
என்ன வேண்டும்?
மக்களின் மகிழ்ச்சிக்கு!
மதம் பிடித்து வாழ்ந்தால்
சதமடித்து வாழலாம்!
ஆன்மிக
தேசமென்ற
அடையாளம் போதும்!
இதைவிட
எது பெருமை
ஒரு நாட்டுக்கு? ! ? !
பாங்கைத் தமிழன்.
