Posted inPoetry
பறவை நோய் கவிதை – க. புனிதன்
அன்னத்தின் காயத்திற்கு
மருந்திட்ட
சித்தார்த்தன் வழியில் கோழிகள் வளர்த்தேன்
அன்னம் போலவே இருந்தது
வெக்கைக் கழிசல் நோய் வந்து
கோழிகள் செத்து போயின.
மனம் சோகையான கோழி போலவே
நீண்ட உறக்கத்திற்குப் போனது
உறக்கத்தில் இருப்பது போல்
நடித்து வலையில் இருந்து
தப்பித்த விலங்கு போல்
மனம் விழித்து கொண்டது
இயற்கையைக் கவனிக்க
ஆரம்பித்தேன்
எலுமிச்சை மரத்திற்கு
வேப்பம் புண்ணாக்கு இட்டேன்
என் உடம்பில் பூத்த
காயங்களே
ரோஜா பூக்கள் ஆயின.
மாட்டுச் சாணத்தை
மண் புழு எருவாக்கி
வயலில் விவசாயம் செய்தேன்
மனம் மகிழ்வாய் இருந்தது.