தாய்ப்பால் எனும் ஜீவநதி பாகம் – ΙΙ : தொடர் 18 – டாக்டர் இடங்கர் பாவலன்

தாய்ப்பால் எனும் ஜீவநதி பாகம் – ΙΙ : தொடர் 18 – டாக்டர் இடங்கர் பாவலன்



தாய்ப்பால் எனும் ஜீவநதி ΙΙ
மகனுக்குத் தாய் எழுதிய வாழ்த்துக் கடிதம்

அன்பு மகனே!

நம் வீட்டு மருமகள் பிள்ளை பெற்று இப்போது வீடு வந்து சேர்ந்திருக்கிறாள். அவளின் துயரோ ஒருகாலமும் நீ அறியாதது. வாழ்வின் கிடைத்தற்கரிய இக்கணத்தில் பிள்ளை பெற்று, பாலூட்டி வளர்ப்பதற்கான துயரத்தில் நீயும் அவளோடு துணை நிற்க வேண்டும் மகனே! காலங்காலமாய் இது பெண்களின் விசயம், இதைப் பற்றியெல்லாம் எதுவும் தெரியாது, பெரியவர்களே பார்த்துக் கொள்வார்கள், பிள்ளையைத் தூக்கிக் கொஞ்சுவதற்கே அச்சமாக இருக்கிறதென்ற உப்புக்குப் பெறாத காரணங்களையெல்லாம் இனி நீயும் பழைய ஆண்களைப் போல சொல்லிக் கொண்டிருக்க முடியாது. உனக்குக் கர்ப்பப்பை இல்லை, பாலூட்ட மார்புகள் இல்லை என்பதற்காக எதிலிருந்தும் ஒதுங்கிக் கொள்ளவும் முடியாது.

இப்பெருமைக்குரிய பொழுதில் நீ உன் தந்தையைப் பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும் மகனே! எப்போதும் எவரையும் கடிந்து கொள்ளாத, வெள்ளந்தியான சிரிப்பை மட்டுமே எல்லாவற்றிற்கும் பதிலாகத் தருகிற, உன் மீதான பேரன்பையெல்லாம் ஒரு சொல்லில் வார்க்கத் தெரியாத உனது அப்பாவைப் பற்றி புரிந்து கொள்வதற்கு இக்கணமே பொருத்தமானது. மகப்பேற்றில், பிரசவத்தில், பாலூட்டும் காலத்தில் ஆண்களின் பங்கு என்னவென்று விளங்காமலே இத்தனையாண்டு காலம் ஆண்கள் கடந்து வந்துவிட்ட போதிலும் உன் தந்தை உனை எப்படியெல்லாம் போற்றி வளர்த்தார் என்பதையெல்லாம் இப்போது தந்தையாகிவிட்ட நீயும் அறிந்து கொள்ள வேண்டிய காலத்தின் கட்டாயம் வந்துவிட்டது மகனே!

எனக்கு மெல்ல பிரசவ வலியெடுக்கத் துவங்கிய அந்த உயிர்த்துடிப்பான நாட்களின் துவக்கத்திலிருந்தே உன் அப்பாவும் திட்டமிட்டு ஒருமாத கால நீண்ட விடுப்பு எடுத்துக் கொண்டார். குமரிக் கடலின் சூரியோதயத்தின் போது அக்கணத்தில் இருக்க வேண்டியதன் பரவசத்தைப் போலவே நீ பிறக்கப் போகிற தருணத்தின் நித்திய கணத்தில் இருக்க வேண்டுமென்ற பேரன்பின் பொருட்டு அவர் வேலையைத் துறந்திருந்தார். எனது மகப்பேறு காலத்தில், பிரசவத்தின் போதான பயத்தில், தனிமையில் என அம்மா, அத்தையென்று பெண்கள் உடனிருக்க வேண்டிய அத்தனை இடத்திலும் அவரே உடனிருந்து என்னைக் கவனித்துக் கொண்டார். இதையெல்லாம் வேறெவரும் சொல்லியோ, கட்டாயப்படுத்தியோ, அறிவுறுத்தலின் பேரிலோகூட அவர் செய்யவில்லை. அடிவயிற்றிலிருந்து எழுகிற பெண்மையின் பெருவலியை எப்படியேனும் ஆணாய்ப் பகிர்ந்து கொண்டுவிட வேண்டும் என்கிற உள்ளன்பினால் எழுந்த பேருணர்ச்சி தான் அது.

பெருவலியில் பற்களைக் கடித்து கைகளை முறுக்கி அலருகிற போதெல்லாம் என் கைகளைப் பற்றி வயிற்றைத் தழுவி என்னை ஆறுதல்படுத்தபடி இருப்பார். அவரது கைகளில் பத்திரமாய் இருக்கிற ஓருணர்வே எனக்கு அவ்வலியைக் கடக்க பேருதவியாய் இருந்தது மகனே! அப்போதெல்லாம் நான் அழாதிருப்பதற்கு அவர் அருகாமையில் இருந்த ஒற்றை கணமே போதுமானதாயிருந்தது. பிரசவத்திற்கு முந்தைய பத்து நாட்களும், நீ பிறந்த பின்னால் இருபது நாட்களுமாக அவர் என்னோடிருந்த முப்பது நாட்களும் உளப்பூர்வமான குடும்பத்தின் இன்பத்தில் திளைத்திருந்தேன். பிரசவித்த கட்டில் விளிம்பில் ஒருபுறம் கட்டியணைத்தபடி நீ துயில் கொண்டிருக்க மறுபக்கமாக நாற்காலியில் அமர்ந்து என்னை அரவணைத்தபடியே மருத்துவமனையின் ஊழிக் காலங்களில் நம் இருவருக்காக அவர் தூங்காமலே சாய்ந்திருப்பார்.

வீடு வந்துவிட்ட காலங்களில் உன் பாட்டி அருகாமையில் இருந்தாலும்கூட நீ பசியென்று அழும் போது உனைத் தூக்கி மடியிலே கிடத்திப் பாலூட்ட வைப்பதற்காக உன் தந்தையே உடனிருந்து பார்த்துக் கொண்டார். உனக்குப் பாலூட்டிய பின்னால் உள்ளங்கையில் வாங்கி அவரின் நெஞ்சில் போட்டு முதுகையத் தட்டிக் கொடுத்தபடி எந்நேரமும் வீட்டிற்குள் பூனையைப் போல் நடந்தபடியே இருப்பார். உடல் அயர்ச்சியில் நான் கண்ணசருகிற போதெல்லாம் உனக்கென நான் சேமித்து வைத்திருந்த தாய்ப்பாலினை குடுவையில் எடுத்து உன் பசிதீரப் புகட்டி உனை அவரேதான் துயில் கொள்ள வைத்திருக்கிறார். அவரால் ஒரு தந்தையாக மட்டுமின்றி தாயாகவும் கூட எல்லா தருணங்களிலும் இருக்க முடிந்தது உனக்கும் எனக்கும்கூட வாய்த்த பேரதிர்ஷ்டம் தான்.

உனக்குத் தாய்ப்பாலினை எடுத்து பாட்டிலின் வழியே புகட்டுகிற போது வயிற்று வலியில் அடிக்கடி உடம்பை முறுக்கிக் கொண்டிருப்பாய். உனக்கு வலியென்று வந்தால் உரக்கவும் அழ மாட்டாய். அச்சமயம் உடம்பைப் பிழிகிறது போல முறுக்குவாய். பிறந்த குழந்தைகளுக்கு குடல் வளர்ச்சி முழுமையடையாத காரணத்தினால் சரியாகச் செரிமானமாகாத பாலானது குடலிற்குள் காற்றாய் நிறையத் துவங்கிவிடுமாம். அப்படி உருவாகிற காற்றை வெளியேற்றுவதற்கு வயிற்றிலிருக்கிற தசைகளே உதவுகிறதாம். ஆனால் வயிற்றின் தசைகள் முழுவளர்ச்சி கொள்ளாத பிள்ளைப் பருவத்தின் காரணமாக காற்றைச் சரியாக உன்னால் வெளியேற்ற முடியவில்லை. அச்சமயத்தில் நெஞ்சுக்கும், வயிற்றுக்குமிடையே மூச்சுவிடுவதற்கு உதவுகின்ற உதரவிதான தசையைப் பயன்படுத்தி உந்திதான் முக்கியபடி காற்றையும் நீ வெளியேற்றிக் கொண்டிருப்பாய்.

இதையெல்லாம் நீயும் முக்குவது போலே ஏனோ அடிக்கடி செய்து கொண்டிருந்தாய். அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து முறுக்கிக் கொள்ளத் துவங்கி பொழுது விடிகிற ஆறுமணி வரையிலும் இதையே தான் தூங்காமல் விழித்திருந்து செய்தபடி இருப்பாய். அப்போதைய நிலையில் குடற்காற்றை வெளியேற்றி உனை ஆசுவாசப்படுத்துவதற்கு உன்னைக் குப்புற படுக்க வைக்க வேண்டும். அப்படிப் படுக்க வைப்பதன் வழியே உன் வயிற்றுக்கான ஒத்துழைப்பினை வெளியிலிருந்து கொடுக்கும் போது உனது முக்குவதெல்லாம் குறைந்து நீயுமே அப்போது இயல்பாகிவிடுவாய்.

ஆனால் நீயோ அப்போது தான் பிறந்த சிறுபிள்ளையாய் இருந்தாய்! உன்னைத் தரையில் கீழே படுக்க வைப்பதற்கு தந்தையின் மனம் ஒப்புக்கொள்ளவில்லை. அதிகாலையில் அலாரம் போல் அழுகிற குரலுக்கு எழுகிற உன் அப்பா உன்னோடிருக்கிற அத்தனை நாட்களும் நெஞ்சின் மேல் போட்டு அள்ளியணைத்துக் கொள்வார். உனக்கு என் கதகதப்பையும் தாண்டி அப்பாவின் கதகதப்புதான் அப்போது தேவையாய் இருந்தது. இதனால் நீயோ உடலின் முறுக்கம் குறைந்து நல்லபடியாக துயில் கொண்டிருப்பாய். ஆனால் அப்படி உனைக் கிடத்திக் கொண்டே அப்பாவால் படுக்க முடியாது. அந்நிலையில் முன்தாழ்வாரத்தில் போடப்பட்ட நாற்காலியில் சாய்ந்து உனை சேர்ந்தணைத்தபடி அமர்ந்து கொள்வார். இரவின் பூரண நிலவோடும் நட்சத்திரங்களோடும் துவங்குகிற இத்தூக்கம் நான் விடிய கண்விழித்துப் பார்த்து உனை நான் அள்ளிக் கொள்கிற வரை தொடர்ந்து கொண்டேதான் இருக்கும் மகனே!

சிசேரியன் வலியும் தழும்பும் காரணமாக துவக்க காலத்தில் என்னால் அமர்ந்து உனைக் குளிக்க வைப்பதற்கு முடியவில்லை. உனைத் தொட்டுக் கால்களில் கிடத்தி நீரள்ளி உனைப் பூஜிப்பதற்கான பேறு எனக்கு அப்போது கிடைக்கவில்லை மகனே! கனிந்த பழத்தின் மிருதுவாகிய உனைத் தூக்கி காலில் கிடத்திக் குளிக்க வைப்பதற்கு எங்களுக்கே அப்போது அச்சமாயிருக்கும். ஆனாலும் உனை பேரன்போடு தூக்கி இருகால்களையும் தரையில் பரப்பியபடி உனை அதன் கால்வாயில் இருத்தி பொற்சிலைக்கு பாலபிஷேகம் செய்விப்பதைப் போல பொறுமையோடு குளிப்பாட்டிக் கொண்டிருப்பார். உனை வாங்கி நாங்கள் எண்ணெய் தேய்த்து, கண்ணத்தில் திருஷ்டிப் பொட்டு வைத்து கூச்சத்தில் நெளிந்து நீ பொங்கிச் சிரிக்கிறவரையிலும் உடன் உதவியபடிதான் இருப்பார். அச்சமயத்தில் உன் பாட்டி அருகிலிருந்தும்கூட எவ்வித கூச்சமோ, தயக்கமோ இல்லாமல் உன்னை வளர்ப்பதென்பது தனக்குரிய ஒரு அங்கமாகவே அவர் நினைத்துச் செய்தபடி இருப்பார்.

இரவு நேரங்களில் சிறுநீர், மலம் கழிப்பதற்கென்று உனக்குப் பருத்தித் துணியிலான ஆடைகளையே உபயோகப்படுத்தினேன். உனது அசைவுகளின் அசௌகரியத்தைக் கவனத்தபடியே உன் அப்பா எழுந்து வந்து அவராகவே உனைக் கழுவிச் சுத்தம் செய்து கொண்டிருப்பார். உனக்குப் புத்தாடை அணிவிப்பதிலிருந்து அத்துணிகளை துவைத்து உலர வைப்பது வரையிலுமாக அவராகவே விரும்பி அதைச் செய்து கொண்டிருப்பார். இது என் வேலை, உன் வேலை என்கிற பாகுபாடெல்லாம் இதுவரை அவர் எவ்விசயத்திலுமே துளியும் நடந்து கொண்டதுமில்லை. ஆக, உனது மனைவி, மகள் விசயத்திலும்கூட நீ அப்பாவைப் போல அல்லது அதற்கும் மேலாகவே இருப்பாய் என்று நம்புகிறேன் மகனே!

நீ பிறந்த தருணத்திலிருந்து ஒரு தாயாக நான் எந்த அளவிற்கு உன் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்தவளாக இருந்தேனோ அதற்குத் துளியும் குறைவில்லாத உன் தந்தையின் இருப்பின் அன்பின் மகத்துவமும் வாய்ந்த்து தான் மகனே! உனையள்ளி தோளில் துயில் கொள்ள வைப்பது, தாலாட்டுப் பாடுவது என அவரது அன்பின் வாசம் எப்போதும் உன் மீதே கமழ்ந்தபடியே இருக்கும். மகனே, இதையும்விட மகத்தான ஓரிடத்தை உன் பிள்ளைக்கும் மனைவிக்கும் கிடைக்கச் செய்ய வேண்டுமென நான் உன்னிடம் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இப்படியாகத்தான் என்னால் உனக்கு தந்தைக்கான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ள முடிகிறது மகனே! அன்பு வாழ்த்துக்கள்.

டாக்டர் இடங்கர் பாவலன்

தாய்ப்பால் எனும் ஜீவநதி பாகம் – ΙΙ : தொடர் 16 – டாக்டர் இடங்கர் பாவலன்

தாய்ப்பால் எனும் ஜீவநதி பாகம் – ΙΙ : தொடர் 16 – டாக்டர் இடங்கர் பாவலன்



தாய்ப்பால் எனும் ஜீவநதி ΙΙ
16. தாய்ப்பாலூட்டுவதை எப்போது நிறுத்துவது

பெரும்பாலான பெற்றோர்களுக்கு பிள்ளைகள் வளர வளர பால்குடியை எப்படி மறக்கடிப்பது என்கிற எண்ணமே மனதில் ஓடிக் கொண்டிருக்கும். ஆனால் சாலையோர கடை நிறுத்தங்களில் தாய்மடியை முட்டி முட்டி மண்டியிட்டு பாலருந்திக் கொண்டிருக்கும் வளர்ந்த ஆட்டுக்குட்டிகளையும், பசுவின் கன்றுகளையும் பற்றிச் சிந்திக்கிற போது நாம் மட்டும் ஏன் குழந்தைக்குப் பாலூட்டுவதைக்கூட சிரமம் தரக்கூடிய மகப்பேற்றின் ஓர் அங்கமாக பார்க்கத் துவங்கிவிட்டோம் என்று தான் யோசிக்கத் தோன்றுகிறது.

இச்சமயத்தில் இதைப் பற்றி விவாதிப்பதற்கு முன்பாக நம் பால்யகாலம் எழுப்புகிற புதிர் கேள்விக்கு விடை தேடியாக வேண்டும். கிராமத்துத் திடலில் புழுதி பறக்க ஓடியாடித் திரிந்த பால்ய கால நினைவுகளில் நம் வயதையும் மீறிய பிள்ளைகள் பள்ளிகளில், தெருக்களில் முன்பற்கள் துருத்தியபடியிருக்க, விரல் சுவைத்தபடியே திரிவதை அங்கொன்றும் இங்கொன்றுமாக பார்த்திருப்போம். ஆனால் இப்போது ஏன் நம்மால் விரல் சுவைத்துத் திரிகிற பிள்ளைகளை வீடுகளில், சாலைகளில், பள்ளிகளில் எங்குமே நாம் காண முடிவதேயில்லை என்பதைப் பற்றி நாம் எப்போதாவது அக்கறையுடன் யோசித்துப் பார்த்திருக்கிறோமா?

சட்டென்று நம்மோடு பால்ய காலங்களில் விதவிதமாக விரலைச் சவைத்தபடி சுற்றித் திரிந்த, அப்படி விரலைச் சவைத்தபடி திரிவதால் கேலி கிண்டலுக்கு ஆளாகிற, அப்படி எந்த விமர்சனத்திற்கும் தலைசாய்க்காமல் தன்போக்கில் விரலை உதட்டிற்குள் திணித்து மேற்சட்டையில் எச்சில் வடித்தபடி தெருக்கிளில் உலாவுகிற, அப்படித் திரிகிற பிள்ளையின் வாயிலிருந்து விரலை விடுவிப்பதற்காக வற்றல், மிளகாய், குமட்டிக்காய் என்று கசப்பு, உரப்பு என விரல்களில் தடவித் தடவி அப்பழக்கத்தைப் போக்க தெருதெருவாகத் துரத்துகிற, அவ்வாறு துரத்திப் பிடிக்க ஊர்ச் சிறுவர்கள் பெரியவர்களென திரண்டு அதனையே ஒரு திருவிழாக்கோலமாக ஆக்கிவிடுகிற நிகழ்வுகளெல்லாம் நம் மனக்கண் முன்னே வந்து போகிறதல்லவா!

ஆனால் இப்போதெல்லாம் பிள்ளைகளும் சமத்தாக பள்ளியில் வாத்தியார் விரலை அமைதி காக்கச் செய்கிற அரிதான பொழுதைத் தவிர கைகள் வாயிற்குச் செல்வதேயில்லை. அப்படியே தப்பித்தவறி விரல் வாயருகே சென்றாலும்கூட ஆரோக்கியத்தைக் காரணம் காட்டி, சீ..! அழுக்கு என்று கைகளைக் கழுவிக் கழுவி கைரேகை தீர சுத்தம் செய்கிற பெற்றோர்களும் இப்போது நிறைய வந்துவிட்டார்கள். சரி, அதுபோகட்டும். பிள்ளைகள் இப்போது விரல் சுவைப்பதேயில்லை என்பதற்கான காரணத்தை உணர்ந்து கொண்டால் எப்போது பிள்ளைக்கு பால்குடி மறக்கடிக்கலாம் என்பதற்கான தேடலுக்கு விடையும் கிடைத்துவிடும்.

பெண் திருமணமாகி குழந்தைப்பேறு பெறுவதென்பது எப்படி அவ்வளவு முக்கியத்துவத்தோடு இச்சமூம் முன்பு பார்த்ததோ அதேயளவு இடத்தை பாலூட்டுவதற்குமே கொடுத்திருந்தது. அப்போது பிள்ளைக்குப் பாலூட்டுவதென்பது பெண்ணின் வாழ்வில் மிகவும் முக்கியமான ஒன்றாகவே கருதப்பட்டது. கருவில் வளருகிற பிள்ளையை இம்மாதம் வரையிலும் வளர்ந்தால் போதுமென்று பாதியிலேயே பிரசவித்து வெளியே எடுக்க முடியுமா? அதேபோல மார்பிலிட்டு பாலூட்டுகிற காலத்திலும் இவ்வயது வரையிலும் பாலூட்டினால் போதுமென்று நிறுத்தவும் முடியாது, கூடாது.

அப்போதெல்லாம் பிள்ளைக்கு ஐந்து வயது, ஆறு வயது வரையிலும் பாலூட்டுவது என்பதெல்லாம் மிகவும் சர்வ சாதாரணமாக பார்க்கப்பட்டது. பிள்ளைகள் ஓடியாடி விளையாடித் திரிகிற போது தெருவில் புழுதியில் உழன்றபடியே வந்து அம்மாவின் மடியில் உட்கார்ந்து பாலருந்திவிட்டுப் போய் மறுபடியும் விளையாடுகிற ஒன்றை வெகு இயல்பாகவே அப்போதெல்லாம் காண முடியும்.

அதாவது பிள்ளைகளுக்கு நம் தாயின் மார்பிலே பாலருந்திக் குடிக்கிறோம் என்கிற தன்னுணர்வு பெறுகிற வயதைக் கடந்தும் அப்போது தாய்மார்கள் பாலூட்டிக் கொண்டிருந்த காரணத்தால் அவர்கள் மார்பின் காம்பைக் கவ்விச் சுவைத்த பழக்கத்தை சுலபத்தில் விட முடிவதில்லை. ஆகையால் காம்பைப் போலவே தன்மையுடைய விரல்களை வாயில் சவைத்தபடியே அதன் நினைவில் பாலூட்டுகிற மற்ற கணங்களில் திரிந்து கொண்டிருப்பர். ஆனால் இப்போதெல்லாம் பிள்ளைக்கு மார்பில் பாலூட்டுகிற உணர்ந்து நினைவில் பதிவதற்கு முன்பாகவே புட்டிப்பாலிற்கும் இணை உணவிற்கும் குழந்தைகள் பழக்கமாகிற காரணத்தினால் இப்போது வயதாகிய பின்னரும்கூட விரல் சூப்பிக் கொண்டிருக்கிற, அதனால் தெத்துப்பற்களோடு திரிகிற பிள்ளைகளை நாம் பார்க்க முடிவதில்லை.

ஆக, தாய்ப்பாலை நாம் முழுவதுமாக குழந்தைகளுக்குப் புகட்டுவதில்லை என்பதை இதை வைத்தே புரிந்து கொள்ள முடிகிறதல்லவா! ″என்னால் இனியும் உடல் நோக தாய்ப்பால் புகட்ட முடியாது, நான் வேலைக்குச் செல்ல வேண்டியிருப்பதால் புட்டிப்பாலுக்குப் பழக்கப் போகிறேன், பிள்ளையை உடனிருந்து பார்த்துக் கொள்ள யாருமில்லை என்பதால் பால்குடியை நிறுத்தப் போகிறேன், வீட்டு வேலைகளை என்னால் சரிவர கவனிக்க முடியவில்லை என்பதாலே இதைச் செய்ய வேண்டியதிருக்கிறது, சீக்கிரமாக பால்குடியை மறக்கடிக்காவிட்டால் பின்னாளில் நிறுத்துவது கடினம்″ என்ற எத்தனையோ நமக்கான காரணங்களைச் சொல்லி குழந்தைக்கான தாய்ப்பாலை மறுப்பது என்பதும்கூட ஒரு குற்றம்தான், அடிப்படி மனித உரிமை மீறல் தான்.

எனக்கு வேண்டிய வரையிலும் தாய்ப்பாலைக் குடித்துக் கொள்வேன்! என்பது ஒரு குழந்தையின் அடிப்படை உரிமை. அதிலே பிள்ளை பெற்ற காரணத்தை வைத்துக்கூட ஒரு தாய் பால்கூடி மறக்கடிப்பதை முடிவு செய்ய முடியாது. தாய்ப்பால் தனக்கு இனி வேண்டுமா, வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டியது அந்தக் குழந்தை மட்டுமே. ஆகையால் எப்போது தாய்ப்பால் நிறுத்துவது, எப்படி தாய்ப்பால் புகட்டுவதை நிறுத்துவது என்பதெல்லாம் நமது கையிலே ஒன்றும் இல்லை.

பொதுவாக பிள்ளைகள் வளர்ந்து வருகிற சமயத்தில் தாய்ப்பாலூட்டுகிற நம் சிரமங்களைச் சொல்லி அவர்களுடன் உரையாடுகிற போது தாங்களாகவே மாற்று உணவு எடுத்துக் கொள்கிறேன் என்று குழந்தைகள் ஒப்புக் கொள்வதாக பல இடங்களில் தாய்மார்கள் சொல்லி வைத்திருப்பதுகூட ஒருவேளை நமக்கு உதவியாயிருக்கும்.

– டாக்டர் இடங்கர் பாவலன்

நூல் அறிமுகம்: என்.மாதவனின் ”13 லிருந்து 19 வரை” – தி.தாஜ் தீன்

நூல் அறிமுகம்: என்.மாதவனின் ”13 லிருந்து 19 வரை” – தி.தாஜ் தீன்




நூல் : 13 லிருந்து 19 வரை
ஆசிரியர் : என்.மாதவன்
விலை : ரூ.₹ 60/- 
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

இன்றைய காலகட்டத்தில் பதின் பருவத்தினரைக் (Teenager) நாம் கையாள்வது ஒரு பெரும் சவாலாக சிக்கல் நிறைந்த task ஆகவே இருக்கிறது. பதின் பருவக் குழந்தைகளையோ, பெற்றோர்களையோ அல்லது ஆசிரியர்களையோ சாடாமல் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளத் தூண்டும் கருத்துகள் உள்ள புத்தகம்.

பெரும்பாலும் பதின்ம வயது (13 – 19 வரை) என்பது ஒருவித குழப்பமான பருவம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

நாம் எல்லோருமே இதனைக் கடந்து வந்திருந்தாலும் கூட நாம் அப்பருவத்தில் இருந்தது எல்லாம் பெரும்பாலும் மறந்தே விடுகிறது, மறக்காமல் இருந்தாலும் அதனை வெளிகாட்டுவதில்லை.

பதின்ம வயதில் ஏற்படும் உடல் மாற்றம் சார்ந்த குழப்பங்கள். பெரும்பாலும் தம்மைப் பலரும் கவனிக்க வேண்டும், பாராட்ட வேண்டும், தன் அழகை தானே ரசிக்க தூண்டும் எண்ணம், எதிர் பாலின ஈர்ப்பு, தன்னை சார்ந்த குழுவினரின் தூண்டல்கள். பெற்றோர், ஆசிரியர் மற்றும் சமூகத்தின் எதிர்பார்ப்பு, ஒப்பீட்டு பேச்சுகள் இதுபோல ஏராளமான சவால்களைச் சமாளித்து வரும் அவர்களது உணர்வுகளை உணர்ச்சிப் பூர்வமாக அல்லாமல் அறிவுப்பூர்வமாகப் புரிந்து கொள்ள முயற்சிப்பதே பலனளிக்கும்.

இந்த பதின் பருவத்தில் உள்ளவர்களை அவர்களது கேள்விகளுக்கான பதில்களை சரியான அணுகுமுறையில் அவர்களை அறியச் செய்தல் மட்டுமே அவர்களை சிறந்த மனிதானாக மாற்ற இயலும் வழி.

குடும்பம், கல்வி நிலையங்கள், சமூகம் ஆகியோரின் பங்கு மிக முக்கியமானது. ஆனால் அவர்களை நேர்கோட்டில் வளர்த்தெடுக்க வேண்டிய இம்மூன்று முனையும் தவறுகள் செய்வோரைத் திருத்துவதை விட தண்டிப்பது எளிது என்ற காரணத்தால் எப்போதும் அதனையே செய்கிறோம். ஏதேனும் தவறு செய்தால் திட்டுவது, அடிப்பது, மிரட்டுவது, சக வயதில் உள்ளவரை வைத்து Compare செய்வது. இது அனைத்தும் எதிர் விளைவுகளையே ஏற்படுத்துகிறது.

13லிருந்து 19வரை உள்ள இளைஞர்களை முறையாக வளர்த்து எடுக்காவிட்டால் அவர்கள் வழி தவறிப் போகும் அபாயமே அதிகம். அதே போன்று சினிமா மற்றும் ஊடகங்களின் தாக்கம் மற்றும் ஆதிக்கம் இப்பருவத்தினரிடம் மேலோங்கியே இருக்கும். ஆகவே திரைப்படங்களும், சின்னத்திரை நிகழ்ச்சிகளும், முறையான தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஆனால் இந்த வயதை வைத்து தான் அவர்களை கேடான வழியில் செல்ல தூண்டும் விதமாக பெரும்பாலும் படங்கள் இடம் பெறுகின்றன.

மேலும் ஆசிரியர் மாதவன் குறிப்பிடுவது பள்ளிகளில் ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு எளிமையாக வாழுவது மிகப்பெரிய ஆளுமை என்ற கருத்தை அவர்களிடையே விதைக்க வேண்டும் என்கிறார். கற்றலின் முறைகளை தெளிவு படுத்த வேண்டியது ஆசிரியப் பெருமக்களின் கடமை என சுட்டி காட்டியுள்ளார்.

மாணவர்களின் கற்றலில் எதை நினைவில் வைத்திருக்க வேண்டும்,எதைக் கற்று மறக்க வேண்டும்,எதைக் கற்கவே கூடாது என்பன போன்ற விசயங்களில் தெளிவான சிந்தனையை ஏற்படுத்துவது ஆசிரியர்களின் கைகளில் உள்ளது என்பதை நினைவு படுத்துகிறார்.

இளைஞர்களை முறையான விதத்தில் வளர்த்தெடுப்பதில் குடும்பம், பள்ளி, சமூகம் இந்த மூன்றின் பங்களிப்பே முக்கியம். இளையோருக்கு சரியான வழிகாட்டுதலை அளிப்பதன் மூலம் அவர்களை நன்றாகவும், நல்லவர்களாகவும் வாழப் பயிற்றுவிக்க வேண்டும்.

இறுதியாக ஆசிரியர் கூற வருவது Teenager வயது உடையவர்களை கையாளும் வழி தெரியாமல் திணறும் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சிறந்த வழிகாட்டியாய் இந்நூல் உள்ளது.

தி.தாஜ் தீன்
தி கிரசண்ட் மேல்நிலைப் பள்ளி
ஆவணியாபுரம்,ஆடுதுறை

எதனாலே எதனாலே? கட்டுரை – இரா. கோமதி

எதனாலே எதனாலே? கட்டுரை – இரா. கோமதி




கேள்வி: பெண் குழந்தைகளுக்கு  இரண்டு முறை ‘பங்க்ஷன்’ செய்வது எதனாலே?
ச. வைஷ்ணவி, விவேகானந்தா பள்ளி, புதுவை.

‘எங்க கிளாஸ்ல கூட படிக்கிற பசங்களுக்கு இரண்டு தடவை பங்க்ஷன் பண்றாங்க. ஏன் எனக்கு மட்டும் வைக்கல?’ என்று என் மகள் என்னை பார்த்து கேட்டாள். நான் அவரிடம் பேச துவங்குகினேன். இங்கு பங்க்ஷன் என்று அவள் குறிப்பிடுவது ‘மஞ்சள் நீர் சடங்கைதான்’ என்பதை குறிப்பிட விரும்புகிறேன். பொதுவாக பெண் குழந்தைகள் பூப்பெய்தவுடன் ‘தண்ணீர் ஊற்றுவது’ என்றும் சில மாதங்கள் கழித்து ஐயர் வைத்து தீட்டு கழிப்பதை ‘மஞ்சள் நீராட்டு விழா’ என்ற பெயரிலும் கொண்டாடுவது வழக்கமாகும். என் மகளுக்கு இதில் முதல் சடங்கு மட்டும் செய்தோம். இதை மனதில் வைத்து தான் என் மகள் என்னிடம் கேட்கிறாள். அதுவும் தற்போதெல்லாம் மஞ்சள் நீர் என்பது ஆடம்பர விழாவாக கொண்டாடப்படுவதை சமுதாயத்தில் அவள் பார்க்கிறாள். பெரிய மண்டபம், பத்திரிக்கை, பட்டுப்புடவை, ஒப்பனை, அலங்காரம், சீர்வரிசை என்று ஆடம்பரத்தின் உச்சம் தொடும் செயல்கள் அரங்கேரி வருகின்றன. இவற்றை கேள்விப்படும் குழந்தை நமக்கு ஏன் இதெல்லாம் செய்யவில்லை என்று கேட்கிறாள். அவளுக்கு விளக்குவது எனது கடமை அல்லவா! விளக்கினேன்.

“அப்படி சடங்குகள் எல்லாம் வைக்க கூடாதுமா’, என்றேன். அவள் ஏன் என்று கேட்டாள். ‘ஏனென்றால் இவ்வாறு பங்க்ஷன் வைப்பதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. ஒன்று அறியாமை, மற்றொன்று பணம். ஆனால் பாவம் ஏழை மக்களிடம் பணம் இல்லை என்றாலும் கடனை வாங்கி பெரிய அளவில் மஞ்சள் நீராட்டு விழா நடத்துவதை பார்க்கும் போது பாவமாக உள்ளது.

“இவை இரண்டும் தான் காரணம் என்றால் எப்படிமா” என்று கேட்டாள். “ஆமாம் டா!  அக்காலத்தில் பெண் குழந்தைகள் வயதுக்கு வந்து விட்டால் உடனே திருமணம் செய்து வைத்துவிடுவார்கள். எனவே இம்மாதிரி சடங்குகளுக்கு ஏற்பாடு செய்து தங்கள் சாதி சனங்களை அழைத்து, எங்கள் மகள் திருமணத்திற்கு தயாராகி நிற்கிறாள் நீங்கள் யாரேனும் எங்கள் மகளைப் பெண் கேட்டு அணுகலாம் என்று சொல்லும் சடங்கு தான் இந்த மஞ்சள் நீர் சடங்கு. அந்த சடங்கின்போது பெண் குழந்தைக்கு சிறப்பான முறையில் ஆடை அலங்காரம், ஒப்பனை நகை எல்லாம் உடுத்தி ஊர் முன் அமர வைத்து நலங்கு வைப்பர். ஊர்  பெண்கள் இக்குழந்தைகளின் அருகில் வந்து நலங்கு வைத்து தங்கள் குடும்பத்திற்கு இப்பெண்  பொருத்தமானவளா என்று முடிவு செய்வர். அதோடு அப்பெண்ணின் பெற்றோர்கள் இந்நிகழ்வை ஏற்பாடு செய்யும் விதம், சொந்த பந்தங்கள் செய்யும் சீர்வரிசை முறைகள் போன்றவற்றை வைத்து இக் குடும்பத்தின் பொருளாதார நிலையையும் எடை போடுவர். இது தான் சடங்கு செய்வதன் அடிப்படையாகும்.

இப்போது நீயே சொல் இன்று நம் நாட்டின் சட்டப்படி பெண்களில் திருமண வயது என்ன? ‘என்று கேட்டேன். ’21’ என்றாள். சட்டமே ஒப்புக்கொண்டாலும் தற்போது பெற்றோர்கள் யாரேனும் தங்கள் குழந்தைகளை 11,12 வயதில் திருமணம் செய்து கொடுப்பார்களா? இல்லை தானே பின் ஏன் இந்த காலத்திற்கு பொருந்தாத சடங்கை இன்னும் நாம் செய்ய வேண்டும். அதிலும் நம் பிள்ளை என்ன கடையில் ஜோடித்து வைக்கப்படும் அலங்கார காட்சி பொருளா? அல்லது சந்தையில் விற்பனைக்காக வைக்கப்படும் விற்பனை பொருளா? என்ன செய்கிறோம் என்பது புரியாமலேயே காலம் காலமாக இதுதான் பழக்க வழக்கம் என்று பேசுவதும், செய்வதும் சரிதானா என்று பெற்றோர்கள் சிந்திக்க வேண்டும். நம் பிள்ளையை நாலுபேர் ரசிக்கும் வகையில் அலங்காரம் செய்து காட்சிப்படுத்துவது சரியா? இல்லை கல்வியில் அவர்கள் சிந்தனையை சீர்படுத்தி செலுத்த வழிவகை செய்வது சரியா என்று பெற்றோர்கள் தான் யோசிக்க வேண்டும். இவற்றையெல்லாம் என் மகளிடம் கூறினேன்.

‘அதிலும் இந்த விழாவை ஆடம்பரமாக செய்வது பெரும் முட்டாள்தனம். இவ்வாறு கடுமையான வார்த்தையை பயன்படுத்த காரணம் உண்டு. ஏனென்றால் சடங்கு செய்வதே அர்த்தமற்றது என்று இருக்கும் போது அதில் பெரும் தொகையை செலவழிப்பது என்பது ஒரு சமூக சீரழிவாகவே நான் பார்க்கிறேன். சிகரெட் பிடிப்பதும், மது அருந்துவதும், களியாட்டம் போடுவதும் எல்லாம் சமூகத்திற்கு எந்த பயனும் தராமல் சமூகத்தை சீரழிக்கின்றன என்றால் இவ்வாறு பெரும் செலவழித்து செய்யப்படும் ஆடம்பர மஞ்சள் நீராட்டும் சீர்கேட்டை தான் செய்கிறது. இவை அனைத்தும் கேட்ட என் மகள் கடைசியாக என்னிடம் கேட்டாள், ‘நம்மகிட்ட அவ்வளவு பணம் இல்லாததால் தான் இதை நாம செய்யலயா மா? ‘ என்று. ‘இல்லை நமக்கு கொஞ்சம் அறிவு இருப்பதால் தான் நாம் இதை செய்யவில்லை என்று சொல்லி முடித்தேன்.

– இரா. கோமதி, ஆசிரியர்
சவராயலு நாயகர் அரசு பெண்கள் தொடக்கப்பள்ளி, புதுச்சேரி.

நூல் அறிமுகம்: பிரசாந்த் வே யின் ’பறக்கும் யானைகள்’ – ராகேஷ் தாரா

நூல் அறிமுகம்: பிரசாந்த் வே யின் ’பறக்கும் யானைகள்’ – ராகேஷ் தாரா




நூல் : பறக்கும் யானைகள்
ஆசிரியர் : பிரசாந்த் வே 
விலை : ரூ. ₹40/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

கிம் கி டுக்கின் புகழ்பெற்ற ”Spring, Summer, Fall, Winter… and Spring” படத்தில் வரும் சிறுவன் ஒரு மீனை ஒரு கல்லில் கட்டி நீந்தவிடுவான். அதைப் பார்க்கும் அவனது குரு அவன் உடலோடு ஒரு பெரிய கல்லை கட்டிவிட்டு தண்டிப்பார். இதேபோன்ற ஒரு அனுபவம் எனக்கு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது கிடைத்தது. நண்பனோடு பேசிக்கொண்டு நடந்துகொண்டிருக்கும்போது எதார்த்தமாக அருகிலிருந்த வேப்பமரத்திலிருந்து ஒரு சிறு கொழுந்தை பிய்த்து வீசீனேன். அதை எங்கிருந்தோ பார்த்த பனிரெண்டாம் வகுப்பிற்கு  தாவரவியல் நடத்தும்  ஆசிரியர் ஓடி வந்து என் காதைப் பிடித்து திருகினார். வலி பொறுக்காமல் நான் கத்தத் தொடங்கினேன். அப்போது அந்த ஆசிரியர் “உனக்கு வலிக்கிற மாதிரிதான அதுக்கும் வலிக்கும். எதுக்கு சும்மா அத பிடிச்சு இழுக்குற’ எனக் கூறிட்டுச் சென்றார்.

அன்றிலிருந்து எதேர்ச்சையாக ஒரு பூவை பறிக்க நேர்ந்தாலும் காதைத் திருக அந்த ஆசிரியர் தூரத்திலிருந்து ஓடி வருகிறார் என்று ஒரு கனம் திரும்பிப் பார்க்கத் தோன்றும். குழந்தைகளின் மனம் இயல்பாகவே ஒருவித குறுகுறுப்பை விரும்பும் தன்மை கொண்டது. அவர்கள்  இந்த உலகத்தில் பார்க்கும் அனைத்தையும் ஆச்சரியத்தோடும் ஆர்வத்தோடும் பார்க்கக் கூடியவர்கள். எல்லாவற்றையும்  தெரிந்துகொள்ளும் ஆர்வம் அவர்களிடம் கனம் கனம் அதிகரித்துக்கொண்டே இருக்கும். சிறிய பூச்சிகளை பார்த்தால் அவற்றை புரட்டி பார்ப்பது. பூக்களைப் பார்த்தால் அதைப் பறித்து எறிவது என அனைத்தையும் பார்த்தும் தொட்டும் உணர முற்படுகின்றன. ஆனால், எல்லாவற்றையும் அறியும் அவர்களது குறுகுறுப்பை சரியாக வழிநடத்துவது மிக அவசியமானது. அறிய முற்படும் ஆவலில் நல்லது கெட்டது என பிரித்து அவர்களுக்கு உணரத்தெரியாது.

ஒரு குழந்தையின் மனம் எப்படிச் சூழலுடன் தனது முதல் அனுபவங்களை (நல்லதாகவோ , கெட்டதாகவோ) உணர்கிறதோ அதனடிப்படையில் தான் அவர்களின் ஆளுமை கட்டமைக்கப்படும். இந்த வழிகாட்டுதலைத் தான் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கற்பிக்க நினைக்கிறார்கள். ஆனால், பெரும்பாலும் இந்த வழிகாட்டுதலை பயத்தினை அடிப்படைக் கருவியாக பயன்படுத்தியே செய்கிறார்கள். எதிர்வினையாக குழந்தைகளிடம் ஒழுக்கம் குறித்த ஒவ்வாமையே உருவாகிறது. உலகம் முழுவதும் சிறார் இலக்கியம்,  சிறார் சினிமா என தனி கலைவடிவங்கள் செய்ய முற்படுவது இந்த வழிப்படுத்துதலைத் தான்.  இவை குழந்தைகளின் கற்பனை வளத்தை வளர்க்கிறது, மக்களின் தொன்மக்கதைகளை வாய்மொழியாக கடத்துகிறது. இந்த கதைகள் குழந்தைகளை அவர்களைச் சுற்றி இருக்கும் உயிர்ச்சூழலுடன் இணக்கமாக உணரச்செய்கிறது. இன்று குழந்தைகள் தான் இருக்கும் சூழலுடன் முற்றிலும் அறுபட்டவர்களாக தனித்து இருக்கிறார்கள். தன்னைச் சுற்றி இருக்கும் உயிர்களின் இருப்பையும் மனித வாழ்வில் அனைத்துயிர்களும் ஒன்றின் நிறைவிற்கு மற்றொன்று அவசியமானவை என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டியது நம் கடமையாகிறது

ஊடகவியலாளர் பிரசாந்த்.வே எழுதியுள்ள ”பறக்கும் யானைகள்” தொகுப்பில் இடம்பெற்ற கதைகள் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் உண்டான உறவை மிக எளிமையான அதே நேரத்தில் நீதியுணர்வுடம் உணர்த்தக் கூடிய கதைகள். ஒவ்வொரு உயிரும் அதனளவில் முக்கியமானது. அதற்கென்று செய்வதற்கு ஒரு பங்கு இருக்கின்றது.மேலும் இம்மாபெரும் பல்லுயிர்ச் சூழலில் தன்னலம் மட்டுமே கருதாமல் சமூகமாக ஒன்றினைந்து செயல்படுவது, மனிதனுக்கு இயல்பிலேயே இருக்ககூடிய பேராசைகள், போன்ற அடிப்படையான அறவுணர்வுகளை விலங்குகளின் வாழ்க்கைகளின் உலகில் சொல்கிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இதையெல்லாம் ஒரு ஆசிரியரின் கண்டிப்போடு செய்யவில்லை. மாறாக அவர்களின் கற்பனைகளை விரித்து அவற்றின் அனுபவங்களாக மாற்றுவது வழியாக இந்த கதைகள் அதை செய்கின்றன. அந்த வகையில் சிறார் இலக்கியத்தில் இந்தப் புத்தகம் மிகவும் முக்கியமானது.

– ராகேஷ் தாரா

நன்றி: பூவுலகின் நண்பர்கள்

பெற்றோர்களைக் கல்வியுடன் இணைப்போம் – விழியன்

பெற்றோர்களைக் கல்வியுடன் இணைப்போம் – விழியன்




முன்னெப்போதும் இருந்ததைக்காட்டிலும் பெருந்தொற்று பெரும் சிக்கல்களையும் சவால்களையும் நம் முன்னே வைத்துள்ளது. அதனை வெறும் கற்றல் இடைவெளி என்ற இடத்தில் மட்டும் நிறுத்திவிட முடியாது. ஆனால் புதைந்துள்ள சவால்கள் மெல்ல மெல்ல முகங்களை அங்கும் இங்கும் காட்டிக்கொண்டே வருகின்றன. போதைப்பொருட்களுக்கு அடிமையாவது, தொடரும் இளம்பருவத்தினரின் தற்கொலைகள், பெற்றோர்களிடம் அவர்கள் காட்டும் பெரும் எரிச்சல் என பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். அனைத்திற்கும் பல்வேறு காரணங்கள் உள்ளன. ஆனால் பெரும்பாலும் எல்லா இடங்களிலும் அந்தப் பழி சென்று சேரும் இடம் “பெற்றோர்கள்”. அவர்களிடம் பொறுப்பு உள்ளது. ஆனால் அவர்களிடம் மட்டுமா பொறுப்பு உள்ளது? அவர்களே குழந்தைகளுடன் பெரும்பாலான நேரங்களைச் செலவிடுகின்றனர். அவர்களே குழந்தைகள் எப்படி வளர வேண்டும் என கனவு காண்கின்றார்கள். ஆனால் அவர்களுக்கு முறையான வழிகாட்டுதலை இந்தச் சமூகம் கொடுத்துள்ளதா?

குழந்தை வளர்ப்பு என்பது மிகப்பெரிய காரியம். தற்சமயம் அதில் பல்வேறு இடங்களில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. குழந்தையின் பிறப்பு, சத்தான உணவு, ஆரோக்கியமான மனது, அறக் கருத்துக்கள், சுய சிந்தனை, நல்ல கல்வி, சிறந்த நண்பர்களை அடையாளம் காணுதல், சிக்கல்களை எதிர்கொள்ளுதல், உடலினைப் பேணுதல் என நீளும் பெரும்பட்டியல் அது. அதில் மிக முக்கிய அங்கமாக இருப்பது கல்வி. அதனைச் சுற்றியே குழந்தை வளர்ப்பு சுழல்கின்றது. நிலைமை இப்படி இருக்க, பெற்றோர்கள் கல்வி பற்றிய புரிதலில் விலகியே நிற்கின்றார்கள்.

ஒட்டுமொத்த சமூகத்திற்கும் இன்னும் கல்வி சென்று சேர்ந்துவிட்டதா என்றால் இன்னும் இல்லை. சமூகநீதி என்று பேசிக்கொண்டிருக்கும் இம்மண்ணிலேயே இந்நிலைமை எனில் இன்னும் இருக்கும் பிற மாநிலங்களின் நிலைமை இன்னும் கவலைக்கிடம். கல்வி ஒரு சமூக வளர்ச்சியின் குறியீடு. அது கல்வி பயில்வதோடு நிற்பதில்லை, மாறுதல்களை வாழ்விடத்தில் உண்டு செய்யும், தொழிலை இன்னும் செம்மையாக்கும், புதிய சிந்தனைகளைப் பரவச்செய்யும். கல்விப்பயன் அடைந்த சமூகம், தான் பெற்ற கல்வியை தன்னோடு நிறுத்தாமல் அடுத்த நிலையில் இருக்கும் மறுக்கப்பட்ட சமூகத்திற்குக் கைநீட்ட வேண்டும்.

அதற்கு முதலில் கல்வி பற்றிய உரையாடல்களை பெற்றோர் சமூகத்தில் ஏற்படுத்த வேண்டும். ஒட்டுமொத்த சமூகத்திலும் ஏற்படுத்த வேண்டும் என்றாலும் குறிப்பாக பெற்றோர் சமூகத்தில் இதனை ஆரம்பம்முதலே ஏற்படுத்த வேண்டும். பள்ளிக்கு நுழையும் முன் துவங்கி, அவர்களின் குழந்தைகள் பள்ளியினை முடித்து அடுத்தகட்டத்திற்கு நகரும் வரையில் பெற்றோர்களின் பங்கினைப் பற்றிய விழிப்புணர்வு செய்தல் அவசியம்.

பெற்றோருக்கான மேடைகள் எனும் தேவை:

குழந்தை வளர்ப்பு சிக்கல்களை பெற்றோர்கள் பேசிக்கொள்ளவும், குழந்தைகளைக் கையாளுதல், கல்வி பற்றிய புரிதல்கள் ஆகியவற்றைப் பேசிக்கொள்ளவும் ஒரு தளமே நம் சமூக அமைப்பில் இல்லை. பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் இருந்தாலும் அவை குழந்தைகளின் சிக்கல்களைப்பற்றிப் பேச சரியான தளமாக இல்லை. பெரும்பாலும் பள்ளி – குழந்தைகளின் உறவுச் சிக்கல்களைப்பற்றி உரையாட மட்டுமே அவை பயன்படுகின்றன. ஆனால் பெற்றோர்களுக்கான ஒரு மேடை அவசியமாக இருக்கின்றது. அந்த மேடை / களம் பள்ளியில் அமையுமாயின் இன்னும் சிறப்பாக இருக்கும். ஒரு சொல்வழக்கு உண்டு – “ஒரு குழந்தையை வளர்த்தெடுக்க ஒரு கிராமமே வேண்டும்”. இதுவும் அந்த வகையில் ஒரு செயல்பாடுதான். பெற்றோர்களுக்கான மேடையில் பல முக்கிய, அவசியமான விஷயங்களைப் பேசலாம். புரிந்துகொள்ளலாம். சம வயதுக் குழந்தைகளை எப்படிக் கையாள்கின்றனர் என்னும் அனுபவப் பகிர்வு பலரையும் விழிப்படையச் செய்யும். “என் மகன் இப்படிச் செய்தான், இப்படிக் கையாண்டேன்” போன்ற எளிமையான பகிர்வுகளில் ஆரம்பித்து, உடல் பற்றிய கருத்தரங்கங்கள், மனச்சிக்கல்கள், உரையாடல் கலைகள், பள்ளி முடித்தபின்னர் கல்லூரிக்குள் செல்வது, வாய்ப்புகள் என குழந்தைகள் சார்ந்து செயல்பட நீண்ட பட்டியல் உண்டு. இவை அனைத்தையும் பெற்றோர் மேடைகள் செய்யலாம். பெயரை என்னவேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம், உள்ளே என்ன செயல்பாடு என்பதே பிரதானம்.

பள்ளிக்குள் நுழைதல்:

பள்ளிக்குள் எப்போது குழந்தைகள் நுழைய வேண்டும், இருக்கும் கல்விமுறைகள் என்ன? அருகமைப்பள்ளிகளைத் தேர்ந்து எடுக்க வேண்டிய அவசியத்தை விரிவாகப் பேச வேண்டி உள்ளது. முன்பருவ கல்விபற்றி பல பொதுக்கருத்துக்களை சமுதாயம் கொண்டுள்ளது. முன்பருவ குழந்தை பராமரிப்பு என்பது என்ன, இப்போது இருக்கும் தேவையற்ற முன்பருவ பள்ளி பற்றியும் பேசலாம்.

வெவ்வேறு காலகட்டத்தில் கல்வி பற்றிய உரையாடல்கள்

குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குத் தேவை அறிவு, திறன்கள் மற்றும் பண்புகள். ஆனால் பள்ளி என்பது அறிவு வளர்ச்சிக்கு மட்டும் என்ற புரிதல்மட்டுமே உள்ளது. அறிவு என்றால் இன்னும்கூட அது தகவல் என்று மட்டும் சமுதாயம் நம்பிக்கொண்டு இருக்கிறது. இதனால்தான் மனப்பாடம் செய்யும் போக்கு இன்னும் நீடிக்கின்றது. மதிப்பெண்கள் பற்றிய பிம்பங்களை உடைக்க வேண்டும். இது போன்ற ஏராளமான விசயங்களை அசைக்க வேண்டியுள்ளது. இதற்கு ஏராளமான உரையாடல்கள் தேவை. குழந்தையின் வளர்ச்சியில் ஒவ்வொரு காலகட்டத்திலும் பல புரிதல்கள் தேவை. கலையின் அவசியம், எது கலை, எதை நம் குழந்தையிடம் பரிசோதிப்பது, வாசிப்பை ஊக்கப்படுத்துவது, பயணம் செய்வது, பழகுவது, ஒவ்வொரு தொழில்நுட்பத்தையும் அணுகுவது என எண்ணிலடங்காப் புரிதல்கள் முதலில் பெற்றோர்களுக்குத் தேவை. இவை எல்லாமே கல்வியுடன் நெருக்கமான தொடர்புடையவை.

அதிகரித்துவரும் சிறப்புக் குழந்தைகளைப் பற்றிய புரிதல்

முன்பைவிட இப்போது நிறைய சிறப்புக் குழந்தைகள் நம் சமூகத்தில் உள்ளனர். இந்தத் தலைமுறையில் இவ்வளவு அதிகமாக இருக்கின்றார்களா அல்லது இதுவரை கவனிக்கப்படாமல் கவனத்திற்கு வராமல் இருந்தார்களா தெரியவில்லை. இதனைப் பற்றிய புரிதல்கள் பெற்றோர்களுக்கு இல்லை. சில குறைபாடுகளை முன்னரே கண்டறிந்தால் விரைவாக இயல்பிற்குக் கொண்டுவரலாம். சில குறைபாடுகளுக்கு நீண்ட மருத்துவம்/ பயிற்சிகள் தேவைப்படும். ஆனால் சரியான நேரத்தில் இதனைக் கண்டறிதல் மிக அவசியம். இதனைக் கண்டறிய வேண்டும் என்றால் பொது சமூகத்திற்கும் பெற்றோர் சமூகத்திற்கும் இதைப்பற்றிய விழிப்புணர்வு அவசியம். இதனைப் பல்வேறு பிரச்சாரங்கள் மூலம் செய்ய வேண்டும். பள்ளிகள் இதனை மிகவும் கச்சிதமாகச் செய்ய முடியும்.

ஏன் பள்ளிகளில் இதனைச் செய்ய வேண்டுமென்றால்

  1. அந்தக் குழந்தைகள் இதே பள்ளிக்குச் சில ஆண்டுகளில் வரலாம். அப்போது நிலைமையைக் கொஞ்சம் சீராக்கி இருக்கலாம்.
  2. அதே பள்ளியில் சில சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர்களும் குழந்தைகளும் இருப்பார்கள். என்னதான் விளக்கம் கொடுத்தாலும் நேரிடையாக அதனை எதிர்கொள்ளும் பெற்றோர்களின் வார்த்தைகள் பெரும் நம்பிக்கை கொடுக்கும்.
  3. வெறும் சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு மட்டுமல்ல, விழிப்புணர்வானது ஒட்டுமொத்த பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் தரப்பட வேண்டும். அப்போதுதான் அனைவரையும் உள்ளடக்கிய பள்ளியாக / குழந்தையாக (inclusive schools) அது மாறும்.
  4. அதே பள்ளியில் சிறப்புப் பயிற்சிகளைத் தர இயலாது. ஆனால் வரும் பெற்றோர்களுக்கு எல்லாம் வழிகாட்டியாக அமையலாம்.

ஆசிரியர்பெற்றோர் புரிந்துணர்வு

குழந்தைகளுக்குத் தேவையான திறன்கள் என்ன என யூனிசெஃப் பட்டியலிட்டுள்ளது. அவை அனைத்தும் பள்ளி என்ற அமைப்பின் கீழ் மட்டும் சாத்தியமில்லை. ஆசிரியர்களும் பெற்றோர்களும் குழந்தைகளின் வளர்ச்சிக்காகப் பாடுபடுகின்றனர். அதேநேரம் இந்த இரண்டு நபர்களுக்குள்ளும் குழந்தையின் வளர்ச்சியில் நிறைய புரிந்துணர்வு அவசியம். பள்ளியும் வீடும் தேவையான களத்தினை அமைத்துக்கொடுக்க வேண்டும். பள்ளி தவறும் இடத்தில் வீடும், வீடும் தவறும் இடத்தில் பள்ளியும் கைகொடுக்க வேண்டும். பெற்றோர்கள் வேறு வடிவிலான ஆசிரியர்கள், ஆசிரியர்கள் வேறு முகம் வைத்திருக்கும் பெற்றோர்கள். இவர்கள் இருவருக்குள்ளும் இருக்கும் இணக்கம் மிக முக்கியம். குழந்தைகளை மிகச்சரியான பாதையில் நடக்க இது வழி வகுக்கும். இந்தப் புரிந்துணர்வினை ஏற்படுத்த பல சந்தர்ப்பங்களை உருவாக்குதலும் அவசியம். மேலே குறிப்பிட்ட நிகழ்வுகளை எல்லாம் ஒருங்கிணைத்தாலே இது எளிதாகச் சாத்தியமாகும்.

எல்லா பெற்றோர்களாலும் இதனைச் சாத்தியப்படுத்த இயலுமா?

எந்தக் காலகட்டத்திலும் அதற்குச் சாத்தியங்கள் குறைவே. பலவித குடும்பச்சூழல்களையும் சிக்கல்களையும் உள்ளடக்கியதாகவே இருக்கும் ஒவ்வொரு பள்ளிக்கும் விகிதாச்சாரமும் சிக்கல்களின் வீரியத்தன்மையும் மாறும். அதிலும் அருகமை பொதுப்பள்ளிகளில் பன்முகத்தன்மையுள்ள பெற்றோர்கள் இருப்பார்கள். எல்லோராலும் நேரம் ஒதுக்குவதும் சாத்தியமில்லை. நேரமும் ஆர்வமும் இருக்கும் பெற்றோர்கள் கண்டிப்பாக இணைய வேண்டும். ஏதோ ஒரு வகையில் பள்ளியின் ஆண்டு நடவடிக்கைகளில் திட்டமிடும்போது பெற்றோர்களை இணைக்கும் பணிகளைச் செய்ய வேண்டும்.

திட்டமிடுதல் சரியாக இருந்தால் எதுவும் சாத்தியமே. பள்ளியின் ஆண்டு நடவடிக்கைகளை (Calender) பள்ளிக்கல்வித்துறை ஆண்டின் துவக்கத்திலேயே அறிவித்துவிடுகின்றார்கள். அதே போல அதையும் உள்ளடக்கி ஒவ்வொரு பள்ளியும் ஒரு கேலண்டரை தன் பள்ளிக்கு மட்டும் வெளியிட வேண்டும். (மாநில அரசு அதற்கான சுதந்திரத்தையும் தர வேண்டும்). அதில் எங்கெல்லாம் பெற்றோர்கள் பங்குகொள்ளலாம், பங்களிப்புச் செய்யலாம் என்று முன்னரே அறிவிக்க வேண்டும். அதற்கு ஏற்ப பெற்றோர்களும் திட்டமிட்டுக்கொள்ளலாம்.

சுற்றுப்பயணங்களில் பங்குகொள்ளலாம், பள்ளி விழாக்களில் துணை நிற்கலாம், பள்ளி விழாக்களின் தயாரிப்புகளுக்குத் துணை நிற்கலாம். ஏராளமான தளங்களையும் இடங்களையும் அவர்களுக்கு உருவாக்கித்தர வேண்டும். மேலும் இப்படி ஆண்டிற்காக திட்டமிடலை சீராகச் செய்யும்போது மாணவர்களுக்கு திட்டமிட்டுச் செயல்படுத்தும் எண்ணம் ஆழமாக மனதில் பதியும். திட்டமிடுதலே வெகுவாகக் குறைந்துகொண்டே வருகின்றது.

சுருக்கமாக நன்மைகளும் விளைவுகளும்

பெற்றோர்களைக் கல்வியின்பால் இழுப்பதில் ஏராளமான விளைவுகளும் ஏற்படும்

  • கல்விபற்றி புரிதல் சமூகத்தில் பரவலாகும்.
  • கல்விபற்றி உரையாடல்கள் கல்வியினை அடுத்த நிலைக்கு நகர்த்தும்.
  • கல்வி நம் உரிமை என ஆழமாக சமூகம் புரிந்துகொள்ளும்.
  • அரசின் கொள்கைகள் இன்னும் கவனமாக வகுக்கப்படும்.
  • கல்வியைக் கொடுப்பது அரசின் கடமை, பெற்றோர்களும் சமூகமும் அதனை உறுதிப்படுத்தும், அதே நேரம் அந்தப் பொறுப்பினை ஒருகாலும் கைகழுவி விடக்கூடாது.
  • சமமற்ற கல்விச்சூழல் வேகமாக மாறி சமமான கல்விச்சூழலுக்கு மாறும்.
  • குழந்தைகளின் உலகம் இன்னும் வண்ணமயமாகும்.
  • காலத்திற்கு ஏற்ற சிக்கல்கள் உருவாகும். அதனை ஒவ்வொரு காலகட்டத்திலும் எதிர்கொள்ள புதிய புதிய உத்திகள் உருவாகும். பெற்றோர்கள் கல்வி அமைப்பிற்குள் செயல்பட்டால் எதனையும் தவிடுபொடியாக்கலாம்.

பெற்றோர்கள் கல்விக்குள் இன்னும் அதிகம் ஈடுபடுத்தப்பட்டால், நிறைய புரிந்துணர்வு கொடுத்தால், பள்ளியின் இயலாமைகளைப் புரிந்துகொள்வார்கள், அதே சமயம் இல்லம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் உணர்வார்கள். இந்த விழிப்புணர்வு, பள்ளியை இன்னும் பொறுப்புள்ளதாக மாற்றும். அடுத்த நிலையில், மாநில அரசுகளுக்குச் சிறப்பாக செயல்பட இன்னும் அழுத்தம் கொடுக்கும். கல்விக்கொள்கைகளை உருவாக்குவதில் பெரும்பங்கு வகிக்கும். புதிய தேசியக் கல்விக்கொள்கை வந்த சமயம் பெற்றோர் சமூகத்திடம் இருந்து பெரிய எதிர்வினையே வரவில்லை. இந்த பெரிய கல்விச்செயல்பாட்டில் என்னென்ன நடக்கின்றது என்ற புரிந்துணர்வு பெற்றோர் மத்தியில் குறைவே. விழிப்படைந்த பெற்றோர் சமூகம் இருக்கும்போது மக்கள் விரோத கல்விக்கொள்கைகளை அறிவிக்கவோ, நடைமுறைப்படுத்த நினைக்கவோ அரசு அஞ்சும். அப்படியான விழிப்படைந்த பெற்றோர்களாக மாற்ற முயல்வோம்.

– விழியன்

நூல் அறிமுகம்: ஜெயராணியின் உங்கள் குழந்தை யாருடையது? – அன்புச்செல்வன்

நூல் அறிமுகம்: ஜெயராணியின் உங்கள் குழந்தை யாருடையது? – அன்புச்செல்வன்




மனிதகுலம் வேட்டை சமூக நிலையில் இருந்து விலகி ஆற்றங்கரை நாகரீகங்களாக நிலைபெற்று நிலவுடைமை சமுதாய உருவாக்க காலகட்டத்தில் தொடங்கி, குடும்பம் – தனிச்சொத்து தோற்றவாயில் உறுதிப்பட்டு, நாளது தேதி வரை ஒவ்வொரு மனிதனின் குழந்தையையும் தனது சொத்து – சேமிப்பு முதலியவற்றுக்கான உடைமை வாரிசாகவே கருதி வருகிறது. அதிலும் குடும்பம் என்ற நிறுவனமயப்பட்ட அமைப்பு இறுகி கெட்டி தட்டிப் போன இந்திய/தமிழக சூழலில் தங்களின் குழந்தைகளை ஒரு தனி உயிரியாகப் பார்க்கவோ/கருதவோ நாம் (எந்தப் பெற்றோரும்) முயல்வதில்லை. விரும்புவதில்லை.

நூலாசிரியர் தோழர் ஜெயராணி சொல்வது போல கலீல் ஜிப்ரானின் ‘உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்லர்” என்ற கவிதை ஏற்படுத்திய அதிர்ச்சியையும் அதில் உள்ள உண்மையையும் அதன் விரிவான தளத்தில் நடைமுறை செயலாக்க நிரல்களாகவும் உரையாடல் முகிழ்க்கும் களமாகவும் சிந்தனா வெளியாகவும் நம்முன் வைக்கிறது இந்நூல். 13 கட்டுரைகளும் குழந்தை வளர்ப்பென்ற பெயரில் நாம் தற்போது மேற்கொள்ளும் குழந்தைகள் மீதான அடக்குமுறையையும் குழந்தை வளர்ப்பில் உட்பொதிந்துள்ள ஆதிக்க மனோபாவத்தையும் நமக்கு உறைக்கும் வகையில் எடுத்துக் கூறி, அதில் பெற்றோராகிய நாம் தவறும், தடம் மாறும் கணங்களையும் இடங்களையும் சுட்டிக்காட்டி அதற்கான மாற்று நடைமுறைகளையும் முன்வைக்கிறது இந்நூல்.

கட்டுரைகள்வழி இந்நூல் பேசும் உண்மைகள் நம்மை முகத்தில் அறைகிறது. நம் குழந்தைகளை பாதுகாக்கிறோம் – நான் அனுபவித்த கஷ்டங்களை என் பிள்ளைகள் அனுபவிக்கக்கூடாது – போன்ற சால்ஜாப்புகளை சொல்லியபடி> குழந்தைகளை ‘சவலை”ப் பிள்ளைகளாக்கி – அதன் வழியே – எதிர்கால சமூகத்தையே ‘சவலை” சமூகமாக்கிவிடும் ‘சமூகவிரோத” நடவடிக்கையே நமது தற்போதைய குழந்தை வளர்ப்பு முறை என்று விரிவாக முன்வைப்பதோடு> நம் வளர்ப்பு முறை எதை நோக்கி – எவ்வழி இருக்கவேண்டும் என்ற வழிமுறையையும் காட்டிச் செல்கிறது பிரதி.

இப்பிரதியில் முக்கியமான புள்ளிகளாக நான் கருதுவது – ஒரு தேர்ந்த மருத்துவராக/சிறந்த மனநல உளவியல் ஆலோசகராக முக்கியமான மாற்று வளர்ப்பு முறைகளை அறிமுகப்படுத்தும் நூலாசிரியர் – பகுத்தறிவு, சமூகநீதி, பால், இனம், சாதி, மதம், மொழி முதலிய அனைத்துக் கூறுகளிலும் சமத்துவம் ஆகிய கருத்தியல்களையும் வாழ்வியல் நடைமுறைகளையும் எவ்வாறு குழந்தைகளிடையே விதைப்பது போன்ற செயல்முறைகளையும் நம்மை உலுக்கி எடுத்து உரைத்துச் செல்கிறது. இதுவே பிற குழந்தை வளர்ப்பு நூல்களுக்கும் இப்பிரதிக்குமான முதன்மையான வேறுபாடாக முன்னின்று இதனை அறம் சார்ந்த நூலாகவும் உருமாற்றுகிறது.

குழந்தைமையைத் தாண்டிய/பதின்பருவத்தை தாண்டிய குழந்தைகளைக் கொண்டிருக்கும் பெற்றோர்களும் கூட கண்டிப்பாக வாசித்துணர வேண்டிய நூலிது. வாசிப்பது மட்டுமின்றி குழந்தை வளர்ப்பில் செயல்படுத்தப்படவேண்டிய நடைமுறைகளை தன்னுள் கொண்டிருக்கும் தவிர்க்கவியலா வாழ்வியல் நூலாகும்.

– அன்புச்செல்வன்

நூல் : உங்கள் குழந்தை யாருடையது?
ஆசிரியர் : ஜெயராணி
விலை : ரூ. ₹180.00
வெளியீடு : தமிழ்வெளி
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

நூல் அறிமுகம்: நா.ஞானபாரதியின் ’அபிநயாவின் தும்மல்’ – வெ.நீலகண்டன்

நூல் அறிமுகம்: நா.ஞானபாரதியின் ’அபிநயாவின் தும்மல்’ – வெ.நீலகண்டன்




நூல் : அபிநயாவின் தும்மல்
ஆசிரியர் : நா.ஞானபாரதி
விலை : ரூ. ₹140
வெளியீடு : பாரதி புத்தகாலயம்

தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

இடதுசாரி இதழ்கள்வழி அறியப்பட்ட இளம் தலைமுறைப் படைப்பாளி ஞானபாரதியின் முதல் சிறுகதைத் தொகுப்பு இது. இதில் இடம்பெற்றுள்ள 14 சிறுகதைகளும் வெவ்வேறு வாழ்க்கைச்சூழல்களில் வெவ்வேறு அனுபவங்களைத் தாங்கியதாக இருக்கின்றன. காட்டுக்குள் விலங்குகளைப் பார்க்கும் ஆவலோடு உள்ளே நுழைகிற நவீன், சார்லஸ், மாறன் வழி, ஒரு பழங்குடி மனிதனின் உள நேர்மையையும் வனத்தைப் ‘பாதுகாக்கும்’ ஒரு அதிகாரியின் வஞ்சனையையும் பேசுகிற முதல் சிறுகதையே நூலை விரைந்து வாசிக்கும் ஆவலைத் தூண்டுகிறது.

நம் வாழ்க்கைமுறையில் பெண்களுக்கு இழைக்கப்படும் வதைகள் குறித்த அழுத்தமான பதிவாக இருக்கிறது ‘தோசை’ சிறுகதை. திங்கள் தொடங்கி வெள்ளி வரை ஆசிரியையாக, சனியும் ஞாயிறும் மனைவியாகக் கடமையாற்றும் ஒரு பெண் பட்டினியோடு வயிற்றைத் தடவியபடி வகுப்புக்குள் செல்லும் அந்த கணம், சுளீரென்று மனதைத் தைக்கிறது. நம் குடும்ப அமைப்புகள் காலத்திற்கேற்றவாறு மாறிக்கொண்டேதான் இருக்கின்றன. ஆனால் எல்லா மாற்றங்களும் பெண்களை உபயோகிக்கும் யுத்தியுடனே இருக்கின்றன. மேலும் மேலும் அவர்களின் தலையில் சுமையேற்றுகின்றன.

‘வரலட்சுமி நோன்பு’ சிறுகதை, பெற்றோரை எதிர்த்து மணம் செய்துகொண்ட ஓர் ஆணின் மன உணர்வைப் பேசுகிறது. ஒரு ஞாயிற்றுக்கிழமையின் காட்சியை விரித்து அக்கதையை ஞானபாரதி நகர்த்திச்செல்லும் போக்கே அழகாக இருக்கிறது.

இந்த நூலின் ஆகச்சிறந்த கதையென ‘அபிநயாவின் தும்ம’லைச் சொல்லலாம். திருமண வாழ்க்கை பற்றி நிறைய கனவுகளோடு அறைக்கு வரும் அபிநயாவை ஓர் எந்திரம்போலக் கையாள்கிறான் கதிர், பெண்ணின் நிலையில் இருந்து அந்த அவஸ்தையை எழுதுகிறார் ஞானபாரதி

‘தண்டனை’, ஒரு ஆணவக்கொலையைக் காட்சிப்படுத்துகிறது. உயிராக நேசிக்கும் காதலன் விபத்தில் சிக்கிவிட காலம் கடந்து அது விபத்தல்ல, கொலையென்று உணர்கிறாள் மஹா. தந்தையையும் மாமனையும் பழிவாங்க மஹா எடுக்கும் முடிவு கதையின் மையமாக இருக்கிறது.

இந்நூலில் இடம்பெற்றுள்ள சில கதைகள் பிரசார நெடியோடு இருந்தாலும், உணர்வுகள் பூசி சமன்செய்கிறார் ஞானபாரதி.
வரவேற்கத் தகுந்த நூல்!

தாய்ப்பால் எனும் ஜீவநதி பாகம் – ΙΙ : தொடர் 7 – டாக்டர் இடங்கர் பாவலன்

தாய்ப்பால் எனும் ஜீவநதி பாகம் – ΙΙ : தொடர் 7 – டாக்டர் இடங்கர் பாவலன்



தாய்ப்பால் எனும் ஜீவநதி ΙΙ
பாடம் -4
குழந்தையின் பசியைக் கவனித்தல்

சத்தம் போடாதே, கவனி! என்று பிள்ளைகளின் சத்தத்திற்கு ஏற்ப ஆசிரியரின் கூக்குரலும் வகுப்பறையில் அதிகமாகவே இருக்கும். அமைதியாக உதட்டைக் குவித்து விரலை அதில் அதக்கியபடியே கப்சுப்பென்று கவனித்திருக்கும் பிள்ளைகளுக்கு முன்பு ஆசிரியர் மட்டும் ஏனோ மடமடவென பாடத்தை ஒப்பித்துக் கொண்டிருப்பார். ஆனால் நமது பள்ளியறையிலோ குழந்தைகள் கியாமுயாவென்று கத்திக் கொண்டிருக்க மாணவப் பெற்றோர்களாகிய நாமெல்லாம் சாந்தமாக அமர்ந்து அவர்களைக் கண்ணும் கருத்துமாக கவனிக்க வேண்டியிருக்கும். ஆம், அவர்கள் தானே இவ்வகுப்பறையில் நமக்கெல்லாம் வாத்தியார்களாக இருக்கப் போகிறார்கள்! பின்னே, குழந்தைகளின் பசியை வேறெப்படிக் கண்டறிவது?

குழந்தையின் வயிற்றுக்குள் தாய்ப்பால் செல்லச் செல்ல, அது நம்மைப் போலவே செரிமானமாக வேண்டி மெதுவாக குடலிற்குள் செல்வதற்கான அவசியமில்லாத காரணத்தால் அவர்கள் குடிக்க, சத்துக்களை குடல் உறிஞ்சிக் கொள்ள, மலம் சிறுநீரென கழிக்கவென்று சில நிமிடங்களிலேயே வெளியேறி வயிறும் சட்டென்று காலியாகிவிடும். அதுவும் நம்மைப் போல பற்களால், இரைப்பையால், குடல் நொதியால் அரைத்து அதை நையப்புடைத்து தாமதமாக மலத்தைக் கழிக்க வேண்டிய அவசியமும் அவர்களுக்கு இருப்பதில்லை. ஆக, இத்தகைய காலியான வயிற்றினாலே அடிக்கடி அவர்களுக்குப் பசித்துக் கொண்டேதானிருக்கும்.

அதேசமயம் பிறந்த பிள்ளைகள் பொழுதன்னைக்கும் தூங்கிக் கொண்டே தான் இருப்பார்கள். அவர்கள் எழுவதற்கான, உடலை முறுக்கிக் கொள்வதான, கண்ணைக் கண்ணைச் சிமிட்டிக் கொள்வதான முயற்சிகளெல்லாம் பசிப்பதற்கென அவர்கள் உருவாக்கிக் கொள்கிற சமிக்கைகள் தானே! ஆக, ஆரம்பகால கட்டத்தில் அய்யா..! அம்மா..! பசிக்குதம்மா! என்றெல்லாம் அவர்கள் நம்மிடம் தாய்ப்பால் கேட்டு வரமாட்டார்கள். நாம் தான் பிள்ளையின் பசியறிந்து ஊட்ட வேண்டியிருக்கும்.

அதாவது பிள்ளைகள் வயிற்றுக்குள் இருக்கிறவரை நஞ்சுப்பைதான் ஒரு தானியங்கி இயந்திரம் போல குழந்தையின் ஒவ்வொரு மாத வளர்ச்சிக்கும் ஏற்ப அம்மாவின் இரத்தத்திலிருந்து சத்துகளைக் கவனமாகக் கறந்தெடுத்து, அதைச் சரியான அளவில் கணக்கிட்டு கருவிற்கு ஊட்டி ஊட்டி வளர்த்தெடுக்கிறது. இதற்கெல்லாம் நமது உடலில் இயல்பாகவே இருக்கிற உயிர்க்கடிகாரத்தின் இயக்கமும், ஒவ்வொரு பிள்ளை பெற்ற தாய்மார்களுக்கென்றே இருக்கிற நுட்பமான உயிரியல் வடிவமைப்பும் தான் காரணமே. இதனால் தானே மனம்பிறழந்தவளால்கூட பிள்ளையை வயிற்றுக்குள் சீராட்டி வளர்க்க முடிகிறது!

ஏனென்றால் அவளது பித்தம் தெளியாவிட்டாலும்கூட அவளுக்குள் இயங்கிக் கொண்டிருக்கிற உயிர்க்கடிகாரம் அவளது பிள்ளையை முறையாகக் கவனித்துக் கொள்ளும். ஆனால் அதேசமயத்தில் பிள்ளை பிறந்தவுடனே தாய்ப்பால் புகட்டுவது என்பதோ முற்றிலும் அம்மாவின் மனக்கணக்கைப் பொறுத்தே அமைந்துவிடுகிறது அல்லவா! ″பிள்ளை அரைமணி நேரத்திற்கு முன்னாடி தான் பால் குடித்தான், இன்னும் இரண்டு மணி நேரம் கழித்து குடிக்கட்டும்″ என்றோ, ″பிள்ளை தூங்குகிறானே! அவனை எப்படி எழுப்பிப் புகட்டுவது? இன்னும் சற்று நேரம் கழித்து புகட்டுவோம்!″ என்றோ நமது புரிதலை வைத்துப் புகட்டுவது தானே இப்போது பிள்ளை பிறந்த பின்னால் உடலிற்கு வெளியே நடக்கிறது. ஆக, நஞ்சுப்பை உள்ளே தன்னியல்பில் செய்த வேலையை நாமோ வெளியே இருந்து கொண்டு விழிப்புணர்வுடன் இதைப் புரிந்து கொண்டு செய்ய வேண்டிய நிர்பந்தம் வந்துவிடுகிறதல்லவா! ஆனால், என்னவோ இதிலே தானே சிக்கலே வருகிறது?

குழந்தைகள் பிறந்த பின்னால் என்னதான் உடலானது மார்பகத்தின் வழியே பிள்ளைக்குப் பாலூட்ட ஆயத்தமாக இருந்தாலும், தாய்ப்பால் புகட்டுதல் தொடர்பான நம்முடைய புரிதலின்மை காரணமாக பிள்ளைக்குத் தாய்ப்பால் கொடுப்பதில் குறைபாடுகள் இருக்கத் தானே செய்கிறது. ஆகவே தான் பிள்ளையின் பசியை சரியாகக் கணக்கிட்டு அவர்களுக்குத் தக்க சமயத்தில் பசியாற்றுகிற வழிமுறையைக் கற்றுத் தேறுவதற்கு நம்முடைய பள்ளியில் கவனமாக இங்கே படிக்க வேண்டியிருக்கிறது.

ஒவ்வொரு குழந்தைகளுக்கென்றும் பிரத்தியேகமாக ஒரு பாஷை இருக்கிறது. அதுதான் அவர்களின் உடல்மொழி. நாம் என்ன மொழி பேசினாலும் குழந்தைகளின் உடல்மொழியைக் கற்றுத் தேர்ந்தால் மட்டுமே நம் பிள்ளையை வளர்த்தெடுக்க முடியும். ஆக, இங்கு நாம் கற்றுக் கொள்ள போவது என்னவோ உடல்மொழிப் பாடம் தான் தாய்மார்களே! பேசா மடந்தைகளின் சைகை பாஷைகளைக் கற்றுத் தருகிற செவித்திறன் குறையுடையோர் பள்ளியைப் போலவே, நாமும் இங்கே குழந்தைகளின் சப்தங்களை, அசைவுகளை, முகமாற்றங்களை அவை ஒவ்வொன்றுக்குமான அர்த்தங்களை என்று முறையாகக் கற்றுக் கொள்ளப் போகிறோம். ஏனென்றால் அவர்கள் வெளிப்படுத்துகிற ஒவ்வொறு அசைவிற்கும் ஒரு அர்த்தமிருக்கிறதே!

தாய்மார்களே, நாமெல்லாம் இன்னும் பச்சைப் பிள்ளையாய் இருக்கிறோம்! குழந்தைகள் அழுதால் தான் அவர்களுக்குப் பசிக்கிறதென்று மேம்போக்காக இன்னமும்கூட நாம் புரிந்து வைத்திருக்கிறோம். ஆனாலும் குழந்தைகள் அழுவதென்கென்று காரணமா வேண்டும்?

அருகாமையில் அம்மாவின் வாசமோ, தோலோடு தோலான நெருக்கமோ இல்லாமல் போகும் போதோ, பருத்தியாலான நைலான் போன்ற துணியின் மினுமினுப்பில் கிடந்து உழன்று கொண்டிருக்கும் குழந்தைக்கு அதனால் உண்டாகும் எரிச்சலிலோ, படுக்கை வாசத்திற்கு ஊர்ந்து வருகிற எறும்பின் கடியாலோ, அடிக்கடி உச்சா போவதினால், மலம் கழிப்பதினால் உண்டாகிற அசௌகரியத்தினாலோ குழந்தைகளும் அழுது ஆர்ப்பாட்டம் செய்தபடி இருக்கிறார்கள் தானே? ஆனாலும் இது என்னவோ காக்கி உடையணிந்தவர்கள் எல்லாம் கூர்காவாகிப் போன கதைதான்.

இந்த சமயத்தில் பிள்ளைகள் அழுவது ஒன்றுமட்டுமே பசிக்கான அர்த்தமல்ல என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும். ஒருவகையில் குழந்தைகள் பசிக்கையில் அழத்தான் செய்கிறார்கள் என்றாலும்கூட அது அவர்களது பசிக்கான இறுதிகட்ட முயற்சியாகத் தானே இருக்கிறது? ஆம், அழுகை என்பது பசித்து பசித்து ஒவ்வொன்றாக பிள்ளைகள் வெளிப்படுத்துகிற சமிக்கைகளை நாம் உதாசீனப்படுத்துகிற போதுதான் அவர்களின் கடைசி முயற்சியாக, அதுவும் ஒருவித விரக்தியாக அழுகையை வெளிப்படுத்துகிறார்கள்! இதைப் பற்றி புரிந்து கொள்ள பசிக்கான உணர்வை எப்படியெல்லாம் அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள் என்பதான விசயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

ஏற்கனவே நாம் சொன்னபடி தாய்ப்பால் அருந்த அருந்த இரண்டு மணி நேரத்திற்குள்ளே குழந்தையின் வயிறு மொத்தமாகவே காலியாகி வயிறும் கூப்பாடு போடத்துவங்கிவிடும். ஆம், பிள்ளையின் வயிறோ பேசத் துவங்கிவிடும். ஆனால், அம்மாவின் காதுகளுக்குக் கேட்கிற அளவிற்கு சப்தம் எழுப்பத் தெரியாத வாயில்லா பிள்ளையாகிய இரைப்பையானது வேறுவழியின்றி குழந்தையின் மூளையை பசியின் நரம்புத் தூண்டலால் கிள்ளிவிட்டு அதற்கேற்ப சமிக்கைகளை வெளிப்படுத்த வைக்கும். இப்படிக் காலியாகிற வயிற்றின் ஆரம்பகட்ட உணர்வுகளையெல்லாம் பிள்ளைகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துகிறார்கள். ஒவ்வொரு குழந்தைகளுமே தனித்துவமானவர்கள், ஒவ்வொருவருமே வெவ்வேறு விதமான சமிக்கைகளை ஒரே காரணத்திற்காக வெளிப்படுத்துவார்கள் என்பதையெல்லாம் நாம் ஏற்கனவே புரிந்து வைத்திருக்கிறோம் அல்லவா!

அதாவது பசியின் துவக்கத்தில், தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகளோ சட்டென்று உடம்பை முறுக்கி எழுவார்கள். எழுவார்கள் என்றால், பிள்ளைகள் விசயத்தில் கண்ணை விழித்துக் கொண்டு காபி அருந்த படுக்கையிலிருந்து எழுவார்கள் என்று அர்த்தமில்லை. சாந்தமாக துயில் கொண்டிருக்கிற அவர்களோ கைகால்களை அசைத்தபடி உடலை நெட்டித்துக் கொள்வதும்கூட அவர்களைப் பொறுத்த வரையில் எழுவதுதான். ஒருசில குழ்நதைகள் அமைதியாக இருக்கும் போதே சட்டென்று சுறுசுறுப்பாகத் தெரிவார்கள். துருதுருவென முண்டத் துவங்குவார்கள். இதுவும் ஒருவகையில் பசியை வெளிப்படுத்துகிற சமிக்கைதான். வேறுசில குழந்தைகளோ இமைகள் மூடியபடியிருக்க அவர்களது கருவிழிகள் கடிகார நாக்கு அலைவுறுவதைப் போல அசைந்தபடி பசியை அறிவிப்பார்கள். சிலரோ கண்ணைக் கண்ணை சிமிட்டி தங்களது பசியை வெளிப்படுத்துவார்கள்.

பெரும்பாலான குழந்தைகள் வாயை அகலத்திறந்து மூடுவதும், பாம்பு போலான துருத்தலான நாக்கை நீட்டி காற்றிலே துலாவுவதும், அங்கு ஏதும் கிட்டாத இல்லாத போது உதட்டையே தழுவிச் சுவைப்பதும் அல்லது எவரேனும் தூக்கிக் கொஞ்சினால் அவர்களின் சட்டையையோ, தோலையோ விரல்களையோ சுவைப்பதும், அப்படியும் யாருமே அருகில் இல்லாத பட்சத்தில் தன் கைகால்களை முகத்தருகே கொண்டு வந்து விரல்களைச் சவைப்பதுமாக பசியுணர்ச்சியை தெரிவிப்பார்கள். சிலநேரங்களில் குழந்தைகளைச் சுற்றி போர்த்தியிருக்கிற துணியையே சவைத்தவாறு சப்தமெழுப்பியபடியும், வெறுமனே உதட்டைக் குவித்து பாலருந்துவது போலான சப்தமெழுப்பி நம்மைக் கவருவதைப் போலவும் செய்யத் துவங்குவார்கள். அப்படியும் இல்லாவிட்டால் ஙாக்…ஙாக்.. என்று கூவியபடி நம் கவனத்தைப் பெறுவதற்கு ஒரு ஆர்க்கஸ்ட்ரா நிகழ்ச்சியையே அவர்கள் அரங்கேற்றிக் கொண்டிருப்பார்கள். இச்சமயத்தில் அவர்களை அள்ளியெடுத்து மார்பருகே கொண்டு போனாலே அவர்களும் உடனே மார்பைக் கைகளில் பற்றி நுகர்ந்தபடி காம்பைக் கவ்விச் சுவைக்கத் துவங்கிவிடுவார்கள்.

பெற்றோர்களாகிய நாம் இதை வைத்தே பிள்ளைகளின் பசியையும், அவர்கள் பசியெடுக்கிற போதெல்லாம் பிள்ளைகள் எப்படியான உணர்வுகளை, சமிக்கைகளை வெளிப்படுத்துகிறார்கள் என்பதையும் கற்றுக் கொள்ள முடியும். அதேசமயம் இப்படியான உணர்வுகளை மட்டுமே பிள்ளைகள் வெளிப்படுத்த வேண்டுமென்ற எந்தக் கட்டாயமும் இல்லை. நாமெல்லாம் பிள்ளைகளைக் கூர்ந்து கவனிக்கத் துவங்கினாலே விளையாட்டுப் போக்கில் தங்களது பசியை வெளிக்காட்டுவதற்கு அவர்கள் செய்கிற சுட்டித்தனங்களை இன்னும்கூட நாம் நிறையவே கண்டுகொள்ள முடியும். தாயிற்கு மட்டுமே புரிகிற ஒரு மந்திரப் பார்வையோடு அவர்கள் பார்க்கிற போதும், மெலிசாக ஏக்கத்தைப் போலழுகிற பிள்ளையின் வித்தியாசமான குரலை வைத்தும், அவன் பால்தான் கேட்கிறான்..! என்று சில தாய்மார்கள் புரிந்து கொள்வதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

அதேசமயத்தில் அவர்களது பசியைக் கண்டுபிடித்து மார்பில் போட்டாலுமே சில குழந்தைகள் பாலைக் குடிக்காமல் மார்பில் வெறுமனவே வாய் வைத்துக் கொண்டு விளையாடியபடி இருப்பார்கள். வீட்டில் வளர்ந்த பிள்ளைகளே, எதைப் பார்த்தாலும் விளையாடுவதற்கு அதுவேண்டும், இதுவேண்டுமென்று அடம்பிடித்து எந்நேரமும் விளையாடத் துடிதுடிக்கிறார்களே! அப்படியிருக்க, இன்னும் தவழக்கூடத் தெரியாத பிள்ளைக்கு விளையாட உங்கள் மார்பைத் தவிர வேறென்ன இருக்கிறது, தாய்மார்களே?

குழந்தைகளைப் பொறுத்தவரை எதுவெல்லாம் உண்ணக் கிடைக்கிறதோ அதுவெல்லாம் விளையாடுவதற்குரிய விசயம்தான். அதனால் தான் உண்ணுவதற்கு சாதத்தைக் கொடுத்தால் சிதறடித்து விளையாடுவதும், விளையாட்டு பார்பி பொம்மையைக் கொடுத்தால் வாயில் சவைத்து பொன்னிற முடியைக் கடித்து தும்சம் செய்வதுமாக இருக்கிறார்கள். ஆக, மார்பில் போட்டு அவர்கள் விளையாடுகிறார்கள் என்றால் அதற்கும் நாம் அனுமதித்து மடியில் போட்டு தூங்க வைக்க வேண்டியதைத் தவிர வேறுவழியில்லை. ஆனால் போகிற போக்கிலே அவர்களும் பசிக்கேற்ப புசிக்கவும், பொழுதிற்கு விளையாடவும் மார்பைப் பற்றி புரிந்து கொள்வார்கள். அதேபோல நாமுமே மார்பில் விளையாடுகிறார்களா அல்லது பாலருந்துகிறார்களா என்பதை மார்பிலிட்ட அடுத்த கணமே கண்டுபிடிக்கிற அளவிற்குக் கற்றுத் தேர்ந்துவிட முடியும்.

ஆனால் இப்படியெல்லாம் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி அதையெல்லாம் பெற்றோர்களாகிய நாம் கண்டுகொள்ளாத போதுதான் குழந்தைகளும் விரக்தியாகி அதற்குரிய கோபத்தை வெளிக்காட்டுகிறார்கள். குழந்தைகளுக்கும் சிரிப்பு, அழுகை வருவது போல கோபமும் மனஅழுத்தமும் உண்டாகும் என்பதையும்கூட நாம் இக்கணத்திலே நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும் தாய்மார்களே!

குழந்தையை தாயிடமிருந்து பிரித்து தனியே தொட்டிலில் போடுகிற போதும், உறவினர்கள் அடிக்கடி பிள்ளையைத் தூக்கி வைத்துக் கொஞ்சுகிற போதும் இப்படியான பிள்ளையின் தனித்துவமான உணர்வுகளை ஒரு தாயினால் கண்டுகொள்ள முடியாமல் போகிறது. அப்போதுதான் அம்மா மீதான கோபத்தில் பசிக்கு உணவில்லாத ஏக்கத்தில் உரத்து பிள்ளைகள் அழுகிறார்கள். பசிக்கு அழுதழுது சோர்ந்து போய் எரிச்சலடைந்து ஒருகட்டத்தில் மீண்டும் அவர்கள் உறங்கியும் விடுகிறார்கள். வீட்டில் பசியென்று நுழைந்து உணவில்லை என்றதும் சட்டென்று பெரியவர்களாகிய நமக்கே கோபமும் எரிச்சலும் வருகிற போது பிள்ளைகளுக்கு மட்டும் வராதா என்ன?

இப்படி விரக்தியடைந்துவிட்ட குழந்தைகளுக்குப் பாலூட்டுவதற்கு முன்பாக நாம் அவர்களைச் சமாதானப்படுத்த வேண்டியிருக்கிறது. அழுகையின் துவக்கத்திலிருக்கிற பிள்ளைகள் மட்டும் மார்பில் போட்டதும் முரண்டு பிடிக்காமல் காம்பில் பொருத்தி மன்னிக்கும் மனப்பான்மையோடு நடந்து கொள்வார்கள். ஆனால் விரக்திநிலைக்குச் சென்ற, மார்பில் போட்டாலும் பால்குடிக்காமல் ஆர்ப்பாட்டம் பண்ணுகிற பிள்ளைகளை சில நொடிகள் அவர்களின் விரல்களை உதட்டில் சுவைக்க வைத்து அழுகையை ஆற்றுப்படுத்திவிட்ட பின்னரே பாலூட்ட செய்யலாம். அப்போது அவர்களும் அமைதியாய் நம் மார்பில் பாலூட்ட இசைவு தெரிவித்துவிடுவார்கள்.

இத்தகைய பசியுணரும் பயிற்சிகளை நாம் பள்ளியில் இருக்கிற காலத்திலேயே கற்றுக் கொள்ள முடியும். இதனால் பசித்து அழுவதற்கு முன்பே அவர்களின் ஆரம்பகட்ட பசியுணர்வைப் புரிந்து கொண்டு பிள்ளைக்குப் பாலூட்ட நாம் தயாராகிவிட முடிகிறது. துவக்கத்தில் எப்போதும் தூக்கநிலையிலேயே இருக்கிற பிள்ளைகளின் பசியுணர்வை அறிந்து கொள்ள கொஞ்சம் சிரமங்கள் இருந்தாலும் போகப்போக இதுவெல்லாம் சரியாகிவிடும் தாய்மார்களே! அதேசமயம் பிள்ளைகள் பசியில்லாமல் இருக்கையில் விடாப்பிடியாகப் பாலூட்டுவதையும் தவிர்த்துவிட வேண்டும். இதனால் அவர்கள் இயல்பாகவே பசித்து உண்ணுகிற உணர்வில் ஏதும் குழப்பம் வந்துவிடக் கூடாதல்லவா!

ஆக, இப்போது பிள்ளையின் பசியை எப்படியெல்லாம் அறிந்து கொள்ளலாம் என்று நாம் புரிந்து கொண்டாம். நம்முடைய ஆசானாகிய பிள்ளையிடமிருந்து நாமும் உடல்மொழிப் பாடத்தை இப்போது நன்றாகவே கற்றத் தேர்ந்துவிட்டோம். சரி, அடுத்தென்ன, இனி பாலூட்டத் துவங்கிவிடலாம் தானே!

– டாக்டர் இடங்கர் பாவலன்