ஷேக்ஸ்பியரின் உலகப் புகழ் பெற்ற காதல் காவியம் – தமிழில்: சிறுகதை வடிவில் தங்கேஸ்

ஷேக்ஸ்பியரின் உலகப் புகழ் பெற்ற காதல் காவியம் – தமிழில்: சிறுகதை வடிவில் தங்கேஸ்



ரோமியோ ஜுலியட்டின் தமிழ் மொழியில்

வெரோனாவின் முக்கிய வீதி . அது அந்த மாலைப்பொழுதில் பேரெழிலில் திளைத்துக் கொண்டிருந்தது.. ஒரு வீதி தன்னைத்தானே ரசித்துக் கொண்டாடுவதை அன்று தான் ஒவ்வொரு கண்களும் ஆச்சரியத்தோடு பார்த்துச் சென்றன.

‘ இருக்காதா பின்னே ! இன்ப ஒளி வீசும் ஜுலியட் என்னும் அழகுத்தாரகை அன்று தானே விண்ணிலிருந்து இறங்கி வந்து மண்மீது கால் பதிக்கப் போகிறது.

ஆம் ஜுலியட் என்னும் அழகு தேவதை அன்று இரவு நடக்கும் நடன விருந்தில் தான் விருந்தினர்களுக்கு முன் தோன்றி தரிசனம் தரப் போகிறாள். இது தான் சில நாட்களாக அந்த நகரத்தின் பேச்சாகவே இருந்து வந்தது.

அரசனுக்கு இணையான செல்வாக்கும் செல்வமும் பெற்றிருந்த குடும்பங்கள் இந்த நகரத்தில் இரண்டே இரண்டு தான். ஒன்று மாண்டேக் குடும்பம் மற்றொன்று கேபுலட் குடும்பம். மாண்டேக் குடும்பத்தின் இளைய சூரியன் ரோமியோ என்றால் கேபுலட் குடும்பத்தின் அழகுத் தாரகை ஜுலியட் தான் எழில் என்றால் வெறும் எழில் அல்ல பேரெழில் கொண்டவள் அவள் . அதற்கு மேலும் அவளது அழகை வர்ணிக்க முடியாது. நம்மால் முடியாது.

‘’ இன்றிரவு கேபுலட்டின் வீட்டில் நடைபெறப் போகும் நடனவிருந்தில் முதல் முறையாக ஜுலியட் கலந்து கொண்டு நடனமாடப் போகிறாள். அது மட்டுமா அவளது மனதுக்குப் பிடித்த மன்மதனை கணவனாகத் தேர்ந்தெடுக்கப் போகிறாள் அந்த அதிர்ஷ்டசாலி யாரோ ஒரு வேளை காதல் கடவுள் மன்மதனே ( குபிட் ) அவளது கரம் பிடிக்க அங்கே வந்தாலும் வரலாம் ‘’ என்று பேசிக் கொண்டார்கள்.

முன்னிருளில் கேபுலட்டின் அரண்மனை தேவலோகம் போல சொலி சொலித்துக் கொண்டிருந்தது. . விருந்து அறை நடன அறை வரவேற்பு அறை கணப்பு அறை என்று எங்கு பார்த்தாலும் பரபரப்பு தொற்றிக் கொண்டு பணியாளர்கள் சுறு சுறுப்பாக பொருட்களை அடுக்கிக் கொண்டிருந்தார்கள்.

குறிப்பாக விருந்து பரிமாறும் அறையில் மேசை விரிப்புகள் பாத்திரங்கள் நாற்காலிகள் என்று ஒழுங்குபடுத்துவதில் பணியாட்கள் பம்பரமாக சுழன்று வேலை செய்து கொண்டிருந்தார்கள். அத்தனை வேலைகளும் தலைமைப் பணியாள் பீட்டரின் மேல் தான் அன்று வந்து விழுந்திருந்தன. முதலாளி முதிய கேபுலட்டின் மனது நோகாமல் இந்த விருந்தை அற்புதமாக நடத்தி முடிக்க வேண்டும். எனற எண்ணம் அவனை பம்பரமாக சுழற்றி வேலை வாங்கிக் கொண்டிருற்தது.

முதிய கேபுலட்டிற்கு இந்த நிமிடத்தில் ஒரே ஒரு லட்சியம் தான் பிரதானமாக இருந்தது. ..இந்த விருந்து இந்த நகரத்திலேயே ஒரு பேர் சொல்லும் விருந்தாக அமைய வேண்டும். தனது மகள் ஜுலியட் தனது மனம் கவர்ந்தவனை தேர்ந்தெடுக்கப் போகிறாள். அது மிகவும் இனிமையான தருணமாக மாற வேண்டும்

விண்ணிலிருந்து இறங்கி வந்த நட்சத்திரப் பட்டாளம் போல நடனமாடக் காத்திருக்கும் அழகான இளம் பெண்கள் ஒரு புறம் , நகரத்தின் மரியாகைகுரிய முக்கிய விருந்தினர்கள் அதோ கேபுலட் வகையறாக்களின் பாசத்திற்குரிய உறவுகள் எதிர்புறம் இன்னும் எதிர்பாராமல் இங்கே வர இருக்கும் விருந்தாளிகள் இருக்கிறார்கள். இவர்கள் அத்தனை பேரையும் இந்த விருந்து திருப்திப் படுத்த வேண்டுமே என்ற எண்ணம் முதிய கேபுலட்டிற்குள் இடைவிடாமல் ஓடிக் கொண்டிருந்தது..

தன் உறவினர் இளைய கேபுலட்டோடு தானே சென்று ஒவ்வொருவரையும் வரவேற்று அமர வைத்துக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் தடபுடலான விருந்து நடக்கும் இடத்தையும் அவ்வப்போது பார்வையிடத் தவறவில்லை..

நடன அறை சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது- கணப்பு அடுப்புகள் தேவைக்கு அதிகமான வெப்பத்தை தருவது போல் அவருக்குப்பட்டது.
‘’பீட்டர் இங்கே வா ‘’என்றார் அடுத்த கணம் அவருக்கு முன்னால் பீட்டர் பவ்யமாகத் தோன்றினான்.

‘’ பாரு கணப்பு அடுப்புகள் தேவைக்கு அதிகமாகவே வெப்பத்தை தருதுன்னு நினைக்கிறேன். கொஞ்சம் நெருப்பை கம்மி பண்ணு ‘’ என்று சொல்லி விட்டு அந்த அறையை நன்றாகப் பார்த்தார். கதவுப் பக்கத்தில் பார்வை சென்றது . அங்கே மேசை நாற்காலிகள் கொத்தாக கிடந்தன. .

‘’ பீட்டர் அங்க பாரு கதவுக்கப் பக்கத்தில கிடக்கிற நாற்காலிகளை உடனே அப்புறப் படுத்தனும் இல்லேன்னா நிச்சயமாக நடனத்துக்கு இடையூறாகத்தான் இருக்கும் ‘’என்று சொல்லி விட்டு அவர் வேகமாக வாசலுக்கு விரைந்தார்.

வந்திருந்த விருந்தினர்கள் வாசலில் நின்றபடி ஆளாளுக்கு அரட்டையடித்துக் கொண்டிருப்பது காதில் கேட்டது-

யார் அந்த அதிர்ஷ்டசாலி ஜுலியட்டை மனைவியாக அடையப் போவது பாரி’ஸ் தானா ? அல்லது வேறு யாருமா ? சொல் என்று கேட்டாள் நவ நாகரீகப் பெண்ணொருத்தி

‘’ விண்ணிலிருக்கும் அந்த காதல் கடவுள் குபீட்டுக்கு ( மன்மதன் ) மட்டுமே தெரிந்த ரகசியம் ..’’ என்று கண்ணடித்துச் சொல்லிக் கொண்டிருந்தாள் மற்றொருத்தி.

உண்மை தான் யார் மனதில் யார் நுழைவார்கள் என்பது அந்த காதல் கடவுளுக்கு மட்டும் தானே தெரியும் ? என்று மனதிற்குள்ளேயே சொல்லிக் கொண்டு அடுத்த அறைக்கு நகர்ந்து சென்றார். முதிய கேபுலட்

பாரிஸ் கூட அவர் பார்வைக்கு தென்படும் படி அங்கேயே நின்று கொண்டிருந்தான்.

பாரிஸ் கட்டழகன். கோமான். செல்வச் செழிப்பான சீமான் .அரசில் உயர் பதவி வகிப்பவன். அவனுக்கு ஜுலியட்டை மனைவியாக அடைய வேண்டுமென்று கட்டுக்கு அடங்காத ஆவல். உள்ளது.

இன்று அவரிடம் வந்து பாரிஸ் முறைப்படி மிகவும் பவ்யமாக ‘’ நீங்கள் சம்மதித்தால் நான் உங்கள் பெண் ஜுலியட்டை நான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் ‘’ என்று கேட்ட போது அவனுக்கும் அவர் அதே பதிலைத்தான் பட்டும் படாமலும் சொல்லியிருந்தார்.

‘’ பாரீஸ் நீ என் மகளுக்கு மணமகனாக வந்தால் அது எனக்கும் மகிழ்ச்சி தான் ஆனால் அதற்காக நான் அவளை கட்டாயப்படுத்த மாட்டேன். எங்களுக்கோ அவள் இன்னும் பதினான்கு வயதுகூட நிரம்பாத குழந்தை தான். உனக்கு அவளைப் பிடித்திருந்தால் இன்று இரவு எனது வீட்டில் நடக்கும் விருந்துக்கு வா ‘’ .என்றார் பாரிஸ் ஏன் என்று தெரியாமல் திகைத்துக் கொண்டிருக்கும் போதே அவர் தொடர்ந்தார்.

இந்த நகரத்திலிருக்கும் பேரழகுப் பெண்களெல்லாம் வருகை தர இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் எப்படி இருப்பார்கள் தெரியுமா ?
வானத்திலிருந்து இறங்கி வந்த நட்சத்திரங்கள் போல் இருப்பார்கள். அவர்களோடு என் மகள் ஜுலியட்டும் கலந்து கொள்ளப் போகிறாள். அவள் கலந்து கொண்டால் ஒரு வேளை உன் கண்களுக்கு அவள் பேரழகியாகத் தெரியலாம் அல்லது பத்தொடு பதினொன்றாகவும் தெரியலாம். அப்போது நீ அவளை கடந்து போனாலும் போகலாம் அப்படி நீ சென்றால் கூட அதில் எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை..

ஆனால் உனக்கு ஜுலியட் தான் மனைவியாக வரவேண்டுமென்று நீ விரும்பினால் முதலில் நீ அவளது மனதில் இடம் பிடிக்க வேண்டும் அவள் மனதில் நீ இடம் பிடித்து விட்டால் நீ என் மருமகனாவது உறுதி நீ என் மருமகனாவது எனக்குச் சம்மதமே ‘’என்றார். மகிழ்ச்சியோடு

ஜுலியட்டின் தந்தையே இவ்வளவு சொல்லி விட்டால் போதாதா பாரிஸ் போன்ற துடிப்பான இளைஞனுக்கு ?

காலையிலிருந்தே நடன விருந்து எப்போது வரும் எப்போது வரும் என்று காத்திருக்க ஆரம்பித்து விட்டான். நடன விருந்தும் நடைபெறும் நேரமும் இதோ வந்து விட்டது.

.பாரிஸ் சிறந்த உடைகளை அணிந்து கொண்டு மிக உயர்ந்த பரிசுப்பொருட்களோடு ஜுலியட்டின் வருகையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறான். அவன் இதயம் திக் திக்கென்று அடித்துக் கொண்டிருக்கிறது. ‘’ எப்படி ஜுலியட்டிடம் தன் காதலை அவள் ஏற்றுக் கொள்ளும் படி வெளியிடுவது ?’’ ஏற்றுக் கொள்வாளா அல்லது மறுத்து விடுவாளா ? மன்மதனே ( குபீட் கடவுள் ) நீ தான் மனது வைக்க வேண்டும்.

அந்த விருந்தில் அவனைப் பார்ப்பவர்கள் எல்லாம் சிறு புன்னகையோடு தான் அவனை கடந்து போய்க்கொண்டிருந்தார்கள். முதிய கேபுலட் முகத்திலும் கூட ஒரு புன்னகை மலர்ந்து. மலர்ந்து. மறைந்து கொண்டிருந்தது.

தன் மனைவியை மனதுக்குள் மற்றுமொரு முறை கடிந்து கொண்டார். ஏன் ஒரு பெண்ணை அலங்கரித்து அழைத்து வருவதற்கு இவ்வளவு தாமதப்படுத்துகிறாள். இவள் ? விருந்தினர்கள் வந்ததிலிருந்தே வைத்த கண் வாங்காமல் ஜுலியட்டின் வருகையை அல்லவா எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். ? பீட்டரை அழைத்து தனது மனைவியிடம் சொல்லி மகள் ஜுலியட்டை உடனே கீழே அழைத்து வரச் சொல்லி உத்தரவிட்டார்

‘’ அப்பப்பா இந்தப் பெண்களுக்குத் தான் எத்தனை அலங்காரம் செய்தாலும் போதாது போல இருக்கிறது. . இவள் எப்பொழுது ஜுலியட்டை அழைத்துக் கொண்டு கீழே வருவது. ? எப்போது பெண்ணை இந்த விருந்தினர்களுக்கு முன்னால் நாம் அறிமுகப்படுத்துவது ‘’ ?

மனதிற்குள் பல வித எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்க அங்கே காத்துக் கிடக்கும் அத்தனை கண்களையும் போலவே முதிய கேபுலட்டின் கண்களும் தனது மகளின் வரவை எதிர்பார்த்து மாடியை நோக்கியே தவம் கிடந்தன.’’

அதிசயங்கள் நிகழ்வதை சில அறிகுறிகளை வைத்து நாம் கண்டு கொள்கிறோம். என்று சொல்வார்கள். வரவேற்பறையில் சல சலவென்ற பேச்சுக்கள் சட்டென்று அமைதியாகிறது. ஒரு கணம். அதோ மாடி வாசலில் முதலில் ஒரு உருவம் தோன்றுகிறது. . கேபுலட் அங்கே பார்க்கிறார்.

அது அவரின் மனைவி திருமதி கேபுலட். அடுத்ததாக ஒரு உருவம் அது ஜூலியட்டின் தாதி. .இதோ இப்போது வாசலில் வெளிச்சம் படருகிறது. சர்வ நாடியும் உலகில் அடங்கி விட்டது போல பேரமைதி. அப்படியென்றால் ஜுலியட் அங்கே தோன்றுகிறாள். என்று அர்த்தம்

அவள் தோன்றிய கணம் நிலவு பொறாமையில் வெந்து மேகத்திற்குள் போய் தன்னை மறைத்துக் கொண்டது. விண்ணகத்து நட்சத்திரங்கள் பொறாமையில் வெந்து பொத்து பொத்தென்று கீழே விழுந்து கொண்டிருக்கின்றன.

மெல்ல காலடி எடுத்து வைத்து வா ஒளித்தாரகையே ! இந்த உலகம் ஓர் ஒப்பற்ற அழகியை இன்று தான் கண்கூசாமல் கண்டு களிக்கப் போகிறது.

திருமதி கேபுலட் மாடிப்படிகளின் வழியே இறங்கி வரும் போது மகளின் காதில் ஏதேதோ அறிவுரைகள் சொல்லிய படியே வருகிறாள்

அவரது மனைவி என்ன சொல்லிகக் கொண்டு வருகிறாள் என்று இவருக்கு நன்றாகவே தெரியும் .

ஜுலியட்டின் தாய்க்கு பாரிஸ் தான் தன் மகளுக்கு கணவானாக வரவேண்டுமென்று விருப்பம் உண்டு .அவள் ஏற்கனவே ஜுலியட்டிடம் இதைப்பற்றி சொல்லியும் விட்டாள்.

‘’ அவனோடு பழகிப் பார் பெண்ணே ! அவனை உனக்குப் பிடித்திருந்தால் அவனையே நீ கணவானாக தேர்ந்தெடுத்துக் கொள் ஒருவேளை அவனை உனக்குப் பிடிக்கா விட்டாலும் பரவாயில்லை அவனையே கணவனாக தேர்ந்தெடுத்து விடு . ஏனென்றால் பேரதிர்ஷ்டம் ஒவ்வொரு முறையும் வந்து நம் வீட்டுக் கதவை தட்டிக் கொண்டிருக்காது
அதுமட்டுமல்ல நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டால் உங்களைப் போல பொருத்தமான ஜோடியை இந்த வெரோனோ நகரத்திலேயே வேறு எங்குமே பார்க்க முடியாது ‘’ என்றாள்.

செவிலியும் அவள் பங்கிற்கு ‘’சீக்கிரமாகவே ஒரு குழந்தையைப் பெத்துக்கோ பெண்ணே ‘ என்றாள். அதை அவள் பெரிய நகைச்சுவையென்று நினைத்துக்கொண்டு தானாகவே சிரித்துக்கொண்டிருந்தது தான் பெரிய அபத்தமாக இருந்தது –

ஆனால் ஜுலியட் என்னும் அழகின் தேவதை தன் தாயிடம் என்ன சொன்னாள் தெரியுமா ? ஒரு வேளை பேரழகிகள் எல்லோரும் அப்படித்தான் பேசுவார்களோ ?

‘’ அம்மா நீ சொல்றதுக்காக அந்தப் பாரிஸைப் போய் பார்க்குறேன். அவ்வளவு தான் .எனக்கு அவர் மேல தனிப்பட்ட விருப்பு வெறுப்பு எதுவும் கிடையாது. அவரை நேசிக்க வேண்டுமென்று தான் அவரை போய் பார்க்கப் போகிறேன். பிடித்திருந்தால் நேசிப்பேன் . பிடிக்கா விட்டால் காயப்படுத்தாமல் விலகி விடுவேன் அதற்கு மேலும் நான் அந்த சம்பவத்தை வளர்த்தெடுக்க மாட்டேன் ‘’ இதை நீ புரிந்து கொள்ள வேண்டுமென்றாள்..

தாய் அவளை விநோதமாகப் பார்த்தாள். அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அது எப்படி அவனை இவளால் நேசிக்க முடியாமல் போகும் என்று நினைக்க கூட முடியவில்லை.

ஜுலியட்டை தந்தை கேபுலட் கர்வமாகப் பார்த்தார். பிறகு தனக்குள்ளேயே ‘’ எப்போதுமே என் பெண் புத்தியசாலி தான் ‘’ என்று தனக்குள் பூரிப்பாக கூறிக்கொண்டார்.

அழகு நிலா இறங்கி வருகிறது. அங்கே குழுமியிருந்த இளம் பெண்கள் ஆச்சரியத்தில் மூர்ச்சையாகி பேச்சற்று நிற்கிறார்கள். ஓஓஓ என்ற ஒட்டு மொத்த குரலில் எல்லோரும் உற்சாகத்துடன் கூச்சலிடுகிறார்கள். பாரிஸ் கையில் விலை உயர்ந்த பரிசுப் பொருளோடு அவளை நெருங்கிப் போகிறான்.

அப்போது அங்கே வாசலில் கேட் திறக்கப்படும் சத்தம் கேட்கிறது. அதை கேட்டு முதிய கேபுலட் வாசலுக்கு விரைகிறார்.

ஏற்கனவே இருள் பரவ ஆரம்பித்து விட்டது. ஆட்களை அடையாளம் தெரியவில்லை முகத்திற்கு முகமூடி அணிந்த படி ரோமியோ தன் நண்பர்களு குழுவோடு அங்கே நிற்கிறான்.

அவனோடு அவனைப்போலவே முகமூடி அணிந்த பென்வாலியோ மெர்குஷியோ இன்னும் ஐந்து இளைஞர்கள். கையில் டார்ச் விளக்கோடு நடன விருந்தில் கலந்து கொள்ள வந்திருக்கிறார்கள்.

கேபுலட் ஒரு கணம் திகைத்து விட்டு பிறகு சுதாரித்துக் கொண்டு அவர்களை உற்சாகத்தோடு வரவேற்கிறார்.

‘’ வாருங்கள் இளைஞர்களே உங்கள் வரவு நல்வரவாகுக. உங்களது தோற்றம் என்னை என் இளமைக்காலத்திற்கு கடத்திக் கொண்டு போகிறது. நினைவுகளின் வழியே நான் என் இளமைக்குள் ஒரு கணம் போய் மீண்டு வந்து விட்டேன்.** என்று வரவேற்று விட்டு நடன அறைக்குள் சென்றார்.

நடன அறைக்குள் சென்று ‘’ம்மம் ‘’ தட் தட் நடனம் ஆரம்பிக்கட்டும். இசைக்க ஆரம்பியுங்கள் இசைக்கலைஞர்களே இன்று மகத்தான நாள். இசை இன்னும் போதாது ம்ம்ம்ம் சூடு பிடிக்கட்டும்.
கன்னிப் பெண்கள் எல்லோரும் வாருங்கள் உங்களில் யாராவது நடனம் ஆடாமல் இருந்தால் உங்கள் கால்களில் கோளாறு இருக்கிறதென்று அர்த்தம் அதை நீங்கள் ஒத்துக் கொள்ள வேண்டும் ‘’ என்று சொல்லவே அங்கே ஒரே சிரிப்பு.. சத்தமாகக் கேட்கிறது.

‘’ நடனமாடாத நங்கைகளுக்கு காலில் கொப்புளம் இருக்கலாம்
இந்த விருந்தை உங்களில் நளினமான நடனத்தால் சிறப்பியுங்கள் தேவதைகளே ‘ ‘ என்று சொல்லி விட்டு தன் உறவினன் இளைய கேபுலட்டிடம் கொஞ்சம் வம்பிழுக்கிறார்.

‘’ நாம ரெண்டு பேரும் இது மாதிரி முகமூடி போட்டுகிட்டு நடனமாடி எவ்வளவு காலம் இருக்கும் தம்பி ?‘’

‘’ம்ம் ஒரு முப்பது வருடம் இருக்கும்’’ என்று பதிலளித்தார் உறவினர்

‘’ம்ம் அதெல்லாம் அவ்வளவு காலம் ஆகாது ஆமா அவ்வளவு ஆகாது அதிகபட்சம் ஒரு இருபத்தைந்து வருடம் ஆகியிருக்கலாம். அவ்வளவு தான் அதாவது லூசெண்டியா திருமணத்துக்குத்தானே நாம கடைசியா நடனமாடியது ‘’

‘’ லூசெண்டியா மகனுக்கே இப்ப முப்பது வயதுக்கு மேல ஆகுது ‘உங்களுக்கு தெரியமா என்று கேட்டார் அவர்

‘’ பொய் பொய் சொல்லாத ரெண்டு வருசத்துக்கு முன்னால கூட அவன் சின்னப் பையனாத்தான் இருந்தான் அதவாது மைனர் ‘’

அப்போது தான் விண் வெளியில் ஒரு தேவ வேளை ஆரம்பிக்கிறது. ரோமியோ ஜுலியட்டை முதன் முதலாகப் பார்க்கிறான். அந்தக் கணம் சகலமும் அவனை விட்டுப் போனது போல் இருந்தது. அதாவது சகலமும் போய் விட்டது. அவனே அவனை விட்டுப் போனது போல

திடீரென்று ஒரு வெற்றிடம் அவன் இதயத்தில் உருவாகி விட்டது. இந்தப் பூமி காலடியில நழுவிப் போய்கொண்டே இருந்தது. தான் இந்தப் பூமியில் பிறந்து இத்தனை காலம் வளர்ந்ததே இவளைப் பார்ப்பதற்காக மட்டும தானோ என்று என்னவோ என்று பலபல கட்டற்ற சிந்தனைகள் அவனுக்குள் ஓடி மறைந்து கொண்டிருந்தது.

ஒரு கணம் அவனுக்குள் ரோசலின் மின்னலென வந்து போனாள். ஆனால் அவளைத்தான் எங்கேயும் காணவில்லையே. அவள் இங்கே வருவாளென்று தானே ரோமியோ இந்த நடன விருந்திற்கு வருவதற்கே சம்மதித்திருந்தான்.

ஆம் ரோமியோ ரோசலினை ஒரு தலையாக காதலித்து வந்தான் .ரோசலினும் ஒரு கேபுலட் குடும்பத்துப் பெண் தான்.
ஆனால் அவள் ரோமியோவை ஏறெடுத்தும் பார்ககவில்லை. அவன் மனம் கனத்து வெந்து போனது தான் மிச்சம் .

உண்மையை சொன்னால் ரோமியோ எத்தனை நாட்கள் அந்த ரோசலின் பின்னால் சோறு தண்ணியில்லாமல் அலைந்திருக்கிறான். எவ்வளவு கண்ணீர் ? எவ்வளவு சோகம் ? ம் ஹூம் அவள் மனம் இரங்கவேயில்லையே ‘’

ஆனாலும் அவளையே மனம் சுற்றி வந்தது. அவளது அலட்சியம் அவளை அடைய வேண்டுமென்ற எண்ணத்தை அவனிடம் உக்கிரமாகத் தோற்றுவித்துக் கொண்டேயிருந்தது.
தாய் தந்தை நண்பர்கள் உறவினர்கள் என யாரிடமும் அவனால் முகம் கொடுத்துப் பேச முடியவில்லை . பல கவிதைகளைப் படித்து படித்து சுவைத்த இளைஞனான ரோமியோ தனது நிறைவேறாத காதலை கண்ணீர் கவிதைகளாக மாற்றி தனது நண்பன் மெர்குஷியோவிடம் புலம்பித் தள்ளினான்.

அடடா என்னே விதியின் விசித்திரம் . ரோமியோவைப் போன்ற ஒரு கட்டழகனை ரோசலின் நிராகரிக்கிறாள் என்றாள் அவனை ஆதியந்தமாய் நேசிப்பதற்கென்றே இந்த பூமியில் ஏற்கனவே ஒருத்தி படைக்கப்பட்டிருக்கிறாள் என்று தானே அர்த்தம்

அந்த இன்னொருத்தி தான் ஜுலியட்டா ?

ஆனால் மெர்குஷியோ இளைஞனானாலும் ரோமியோவை விட உலக ஞானம் அதிகம் உள்ளவன். அவன் ரோமியோவுக்கு முள்ளைப்போல சுருக்கென்று தைக்கும் அறிவுரை தான் வழங்கினான்.

‘’ நண்பா
காதல் உன்னிடம் கரடு முரடாக நடந்து கொண்டால்
நீயும் அதனிடம் அவ்வாறே நடந்து கொள்.
காதல் உன்னை முள்ளைப்போல குத்தினால்
நீயும் பதிலுக்கு அதை முள்ளைப்போல் குத்து.
காதல் உன்னைத் தாக்கினால்
நீயும் அதைத் தாக்கி வீழ்த்து.’’

ஆனால் ரோமியோவால் அப்படி இருக்க முடியவில்லை. அவனது நண்பன் பென்வாலியோ இந்த விழாவுக்கு அழைத்த போது முதலில் வர முடியாது என்று தான் மறுத்தான்.
அதற்குப் பல காரணங்கள் இருந்தன. அதில் முக்கியமான காரணம் கேபுலட் அவர்களது சென்ம விரோதி. என்பது தான். அங்கே தான் சென்றால் ஏதாவது அசம்பாவிதம் நிகழலாம் என்று நினைத்தான்

ஆனால் பென்வாலியோவுக்கு நண்பனை அங்கே எப்படி அழைத்துச் செல்ல வேண்டுமென்று தெரியும் அவன் ரோமியோவிடம் வேறு உபாயங்களை உபயோகித்துப் பார்த்தான்.

‘’ கேபுலட்டின் விருந்து நடனத்திற்கு நீயும் வரவேண்டும் நண்பா. அங்கே நீ உன் ஆளைப் பார்க்கலாம் ஆம் ரோசலினும் அங்கே வருகிறாள் தெரியுமா ? அவளும் கேபுலட் குடும்பத்துப் பெண் தானே ?

ரோமியோவின் இமைகள் அதைக்கேட்டதும் ஆச்சரியத்தால் அசைந்தன.

‘’ ஆனால் நான் அங்கே உன்னை அழைப்பது ரோசலினைப்பார்ப்பதற்கு அல்ல . அங்கே ஏராளமான அழகிகள் இன்று வரப் போகிறார்கள். அங்கே உன்னுடைய அழகியும் வருவாள். தனியாகப் பார்க்கும் போது உன்னவள் பேரழகியாகக்கூட உனக்குத் தெரியலாம். ஆனால் மற்ற அழகிகளோடு சேர்த்து வைத்து அவளைப் பார்க்கும் போது அவள் காக்கை குஞ்சு போல் தெரிவாள் என்பது தான என் கருத்து ‘’ ‘’என சீண்டி வேறு விட்டான் .

ரோமியோவுக்கு அவனது அலட்சியமான பேச்சு உண்மையிலேயே கோபத்தை எற்படுத்தி விட்டது.

சவாலை தைரியமாக ஏற்றுக்கொண்டான்.
‘’ நண்பா நான் உன் சவாலை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் உன்னிடம் சொல்வதற்கு உண்மை ஒன்று உண்டு. என்னவளை விட பேரழகி இந்த உலகத்திலேயே இருக்க முடியாது. அப்படி வேறொருத்தியை பார்த்தால் அந்த நிமிடமே என் கண்கள் தீச்சுவாலையாகி என்னை எரித்துவிடும்.
எனக்கு உண்மையிலே அங்கே வருவதற்கு விருப்பமில்லையென்றாலும் என்னவளைப் பார்ப்பதற்காகவாவது அங்கே வருகிறேன். ‘’ என்று கூறி விட்டு முகமூடியை வீம்பாக எடுத்து மாட்டிக் கொண்டு இங்கே வந்தான்.

ஆனால் என்ன நடந்தது ? இப்போது . பென்வாலியாவின் வாய் நிறைய சர்க்கரையை அள்ளிக் கொட்ட வேண்டும் போல இருக்கிறது.

ஜுலியட்டைப் பார்த்த நொடி சகலமும் சகலமும் மறந்து விட்டது. ரோசலின் பெயரே கூட மறந்து விட்டது. இந்த பேரழகிக்கு முன்னால் ரோசலினின் பெயரே அவனுக்கு மறந்து விட்டது. அவன் தன்னையே கிள்ளிப்பார்த்துக்கொண்டான்.

‘’ இவளைப்பார்க்கும் இரவின் இந்த நொடி வரையில் இவளைப் போல ஒரு பேரழகியை என் கண்கள் கண்டதேயில்லை.
அடடா அறியாமையில் நண்பர்களிடம் காதலைப்பற்றி என்னவெல்லாம் பினாத்தி விட்டே.ன். ‘’ என்ற வருந்தினான் ரோமியோ.

உண்மையிலேயே கடந்த காலத்தில் நான் காதலித்தேனா ? தன்னையே கேட்டுப் பார்த்தான் ம்ஹும் சத்தியமாக இல்லை …

‘’ இதோ என் முன்னால் நிற்கிறாளே இந்த தேவதை இவள் யாரென்று எனக்குத் தெரியாது. ஆனால் இவளை நான் நீங்கினால் எனக்கு வாழ்வில்லை என்பது மட்டும் நன்றாக தெரிகிறது. அடடா என்ன மாயம் செய்கிறாள். இந்த மங்கை அசையக்கூட முடியவில்லை. ‘ ரோமியோ நீயாக நீயில்லையடா..’

பணியாளரை நெருங்கி ஜுலியட்டை பற்றி கை நீட்டி விபரம் கேட்டான்.

‘’ அதோ அந்த முதியவரின் மார்பில் சாய்ந்திருக்கிறாளே முல்லை போன்ற இளம் பெண் யார் அவள் என்று சொல்வாயா ?

பணியாள் சரியாகப் பாராமல்கூட ‘’ எனக்குத் தெரியாது ‘’ என்று சொல்லி விட்டு நகர்ந்து விட்டான்.

ரோமியாவால் இந்த ஏமாற்றத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை. விருந்துக்கு தான் மாறு வேடத்தில் வந்திருக்கிறோம் என்பதையும் மறந்து வாய்விட்டே புலம்ப ஆரம்பித்து விட்டான்.

‘’ அடப்பாவி விளக்குகளுக்கே எப்படி ஒளி வீசுவது என்று வகுப்பெடுத்துக்கொண்டிருக்கிறாள். அவளையா தெரியாது என்கிறாய். ?

அவளைப் பார் இரவின் கன்னங் கருமையான கன்னத்தின் சொலி சொலிக்கும் வைர ஆபரணமாக தக தகத்துக் கொண்டிருக்கிறாள் அவளையா தெரியாது என்கிறாய்?

அவளுடைய அழகெல்லாம் இந்தப் பூமிக்கு ரொம்ப ரொம்ப அதிகம் தெரியுமா ?

இந்தப் பூமியால் அவளோட அழகை தாங்கவே முடியாது.
அது தெய்வீகத்திலும் தெய்வீகம் தேவ உலகத்துக்கு சொந்தமானது.
அவள் மற்ற பெண்களோடு நிற்கும் போது அவளுடைய அழகைப் பாரேன்.
காக்கா கூட்டத்திற்குள் ஒரு வெண்புறா வந்து நிற்கிற மாதிரி இல்லையா ?.
வேணா பாரு இந்த நடன விருந்து முடியும் போது அவள் தான் அழகின் தேவதையாய் உயர்ந்த சீமாட்டியா சொலிக்கப் போறா. ‘’

ரோமியோவின் ஆவல் அளவில்லாமல் எகிறிக் கொண்டிருந்தது-

நான் அவளுடைய அருகில் போய் என்னுடைய கரடு முரடான கைகளால் அவளுக்கு கை குலுக்குவது மாதிரி அவளுடைய புனிதமான கரங்களை கொஞ்சம் தொட்டுப் பார்ப்பேன்.
ஆனால் அப்போது என்னுடைய கைகளில் படர்ந்திருக்கும் கரடு முரடுகள் எல்லாம் அவளோட புனிதமான கரங்கள்ல ஒட்டிக் கொள்ளுமே நான் என்ன செய்வேன். ?

அதற்கும் ஒரு வழி இருக்கிறது… என்னுடைய உதடுகளால முத்தம் என்ற ஒத்தடம் கொடுத்து அந்த கரடு முரடுகளை கரைத்து விட மாட்டேனா ?

என் வாழ்க்கையிலே எந்தக் காதலும் இதுவரை வந்ததில்லை வந்ததா ? ( அட பாவிப்பயலே ! ) இனியும் வரவே வராது ஆனால் இவளிடம் தவிர ‘’ என்று அவன் பிதற்றிக் கொண்டிருக்கும் போதே கேபுலட்டின் உறவினன் டைபால்ட் அதை ஒட்டுகேட்டு விடுகிறான்.

அவனுடைய குரலை வைத்து அது ரோமியோ தான் என்று கண்டு கொள்கிறான்.
டைபால்டின் ரத்தம் கொதிக்கிறது- முகம் சிவக்கிறது.

‘’என்ன தைரியம் இருந்தால் எதிரி எங்கள் வீட்டுப் படியேறி வந்து எங்கள் வீட்டுப் பெண்ணை பற்றி இப்படிப் பேசிக் கொண்டிருப்பான். ? இவனை உயிரோடு விட்டு விட்டால் அது எங்களுக்குத்தான் அவமானம் என்று பணியாளைப் பார்த்து கத்துகிறான்.

‘ டேய் என் உடைவாளை உடனே நீ எடுத்து வா இப்போதே எதிரியின் தலையை சீவி இந்த இரவுக்கு காணிக்கையாக்கி விடுகிறேன். ‘’

அவன் பதட்டமாக கத்துவதைப்பார்த்து முதிய கேபுலட் வேகமாக வந்து அவன் கைகளைப்பிடித்துக் கொண்டு என்ன நடந்ததென்று விசாரிக்கிறார்.

டைபால்ட் கொதித்துப் போய் இருக்கிறான். ‘’
மாமா அதோ நமது சென்ம எதிரி மாண்டேக்
நம் விருந்துக்கு திருட்டுத்தனமாக வந்திருக்கிறான்.
என்ன தைரியம் இருந்தால் அவன் இங்கேயே நுழைந்திருப்பான். ?
நமது விருந்தை எள்ளி நகையாடவும் சீர்குலைக்கவும் தான்
அவன் இங்கே வந்திருக்க வேண்டும்..’

முதிய கேபுலட்டுக்கு ஆச்சரியமாக இருந்தது. ‘’ யாரைச் சொல்கிறாய் அதாவது ரோமியோவா இங்கே நம் விருந்துக்கு வந்திருக்கிறான் என்கிறாய் ‘’ ?

‘’ ஆம் மாமா அவனே தான் அவன் குரலை வைத்தே அவனை
அடையாளம் கண்டு கொண்டேன்.

‘ அவன் ஏன் நமது விருந்துக்கு வரவேண்டும் ? ‘’

‘’ நமது விருந்தின் மாண்பை சீர்குலைப்பதற்குத்தான் வந்திருக்கிறான் வேறு எதற்கு ?’’

‘’ ஆனால் இந்த நகரத்தில் எல்லோரும் அவன் மிகவும் நல்லவன் பண்பாடுள்ளவன் என்றல்லவா சான்றிதழ் தருகிறார்கள் ‘’

‘’ மாமா அவனை அதிகம் புகழவேண்டாம் அவன் நமது எதிரி ‘’
‘’சரி அவனை என்ன செய்யலாம் என்கிறாய் ‘’

‘’சற்றுப் பொறுங்கள் அவனை என் வாளுக்கு இரையாக்கி விடுகிறேன் ‘
‘’ அதை நான் ஒருக்காலும் இங்கே அனுமதிக்க மாட்டேன் ‘’ என்று உறுதியாகச் சொன்னார் முதிய கேபுலட்.

‘’ மாமா அவன் நமது எதிரி அவன் நமது விருந்தை எள்ளி நகையாட இங்கே வந்திருக்கிறான் .அவனை உயிருடன் விட்டு விட்டால் அது நமக்கு தீராத அவமானம் ‘’ என்று கொதித்தான் டைபால்ட்

முதிய கேபுலட் நிதானமாகச் சொன்னார் ‘’ அவனை இங்கே இந்த விருந்தில் கொன்று போட்டால் அதை விட நமக்கு அவமானம்.
உன்னைப்போல் கோபத்தை அடக்க முடியாத முரட்டு இளைஞனுக்கெல்லாம் இங்கே இடமில்லை. உன்னால் உன்னை கட்டுப்படுத்த முடியவில்லையென்றால் நீ இந்த விருந்தில் இருந்தே வெளியேறி விடு இது என் மீது ஆணை ‘ என்று சொல்லிட்டு விட்டு விருந்தினர்களை கவனிக்க சென்று விட்டார் முதிய கேபுலட்.

டைபால்டிற்கு கோபத்தில் கை கால்கள் ஆடின. அவன் நிலை கொள்ளாமல் தவித்தான். ரோமியோவை கொல்லாமல் இங்கிருந்து போவதில்லையென்று அங்கேயே ஓரிடத்தில் கறுவிக் கொண்டு நின்று கொண்டிருந்தான்.

இதற்கிடையே பேராவலை அடக்க முடியாத ரோமியோ ஜுலியட்டின் அருகிலேயே சென்று விட்டான். முதன் முதலில் ஒரு தேவதையோடு எப்படி உரையாட வேண்டும் என்று அவன் ஒத்திகை பார்த்தது கிடையாது. ஆனால் வார்த்தைகள் எல்லாம் றெக்கை கட்டி வரிசையாக அவனிடம் வந்தன.

ரோமியோ ஜுலியட்டின் அவள் கரங்களை தன் கரங்களால் எடுத்துக்கொண்டு பேச ஆரம்பித்தான்
‘’ கோவிலைப் போன்ற புனிதமான உங்களின் கரங்களை கரடுமுரடான என் கரங்கள் அசுத்தப்படுத்தியிருந்தால் சொல்லி விடுங்கள்,கடவுளை தரிசிக்க வந்த இரண்டு பக்தர்களைப் போல பரவசத்திலிருக்கும்
என் இதழ்களால் அவைகளை மீண்டும் புனிதமாக்கி விடுகிறேன்.. என்றான்

ஜுலியட்டின் மனதிற்குள் மழைக்கால தும்பிகள் பறக்க ஆரம்பிதது விட்டன.

‘’ ஜுலியட் அவனைப் பார்த்து ‘’ :எப்படி புனிதப்படுத்துவாய் பக்தனே ‘’ ? என்று கிண்டலாக கேட்டாள்.

ரோமியோ :’’ முத்தங்களால் மென்மையான முத்தங்களால் ‘’ என்று பரவசமாக பதில் சொன்னான்

ஜுலியட் :‘’ பரிவுள்ள பக்தனே ! உன் கரங்கள் அளவுக்கு அதிகமான
பக்தியை காட்டுகின்றன. ஆனால் புனிதர்களைத் தேடி வரும் பக்தர்கள்
இப்படி இதழ்களால் பக்தியை காட்டுவதில்லை.
புனிதர்களின் கரங்களை தங்களின் கரங்களால் தொட்டுத்தான் தங்கள் பக்தியை தெரிவிப்பார்கள். உள்ளங்கைகளை உள்ளங்கைகளோடு சேர்த்து
தான் உறவாட வைப்பார்களே தவிர நீ சொல்வதைப்போல உதடுகளால் அல்ல ’ என்று சொன்னாள்.

ரோமியோ உண்மையிலேயே புனிதரின் முன் நிற்கும் பக்தனாய் பரவசம் கொண்டான்.ஏன் புனிதர்களுக்கும் பக்தர்களுக்கும் உதடுகள் இல்லையா?
என்று ஹார்மோன்கள் துள்ளிக் குதிக்க கேட்டான்.

ஜுலியட் பரிகாசமாக ‘’ போலி பக்தனே அதை அவர்கள் பக்திக்கு
மட்டும் தான் பயன்படுத்துவார்கள் ‘’ என்றாள்.

ரோமியோவுக்கு பித்து உச்சத்தை தொட்டு விட்டது போல .,காதலின் ஒரு படி மேலே சென்று ஜுலியட்டைப் பார்த்து சொன்னான்

‘’ புனிதரே ! அப்படி என்றால் உங்களிடம் ஒரு வேண்டுதல்
எனக்கு பக்தி அதிகம் என் கரங்கள் செய்கின்ற வேலையை
என் உதடுகள் செய்யட்டும். என் நம்பிக்கை பொய்த்துப்போனால்
நான் அவநம்பிக்கைக்கு ஆளாகி விடுவேன்
தெரியுமா ? ‘’ என்று கடைசி அம்பைத் தொடுத்தான்.

ஜுலியட் வெட்கத்தில் சிவந்து நாணத்தில் மிதந்தபடியே சொன்னாள் ‘புனிதர்கள் இந்த போலி பக்திக்கெல்லாம் அசைவதில்லை
அவர்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதோடு சரி’

ரோமியோவும் விடுவதாயில்லை’ அப்படியென்றால் என் பிரார்த்னைகள் நிறைவேறும் வரை நீங்கள் நகராதீர்கள் புனிதரே ‘’ என்று சொல்லியபடி ஜுலியட்டை முத்தமிடத் தொடங்கினான். அவள் அவன் சொன்னபடியே அந்த இடத்தை விட்டு நகரவுமில்லை. .முத்தமிடும் அவனை தடுக்கமில்லை.

ரோமியோ தைரியம் பெற்றவனாக ஜுலியட்டிடம்
‘’ இப்போது என்னுடிடய உதடுகளிலிருந்த பாவத்தை எல்லாம்
உன்னுடைய உதடுகள் எடுத்துக் கொண்டன
அதனால் என்னுடைய உதடுகள் பாவத்திலிருந்து மீட்சிமை பெற்று விட்டன.ஆனால் இப்பொழுது உன்னுடைய உதடுகளில்
என்னுடைய பாவங்கள் எல்லாம் ஒட்டிக்கொண்டிருக்கின்றன
பரிகாரம் தான் என்ன ? என்று கிண்டலாக கேட்டான்.

ஜுலியட் :பொய் கோபத்துடன் ‘’ அடப் பாவி அப்படியானால் என்னுடை உதடுகளில் ஒட்டியிருக்கும் உன்னுடைய பாவங்களை உடனே நீ எடுத்து விடு ‘’ என்று அனுமதி கொடுத்தாள்.

ரோமியோ:’ ’என்னுடைய உதடுகளிலிருந்து புறப்பட்டு
உன்னுதட்டில் ஒட்டிக்கொண்டனவா பாவங்கள்
அதை என்னுதட்டிற்கே மறுபடியும் எடுத்துக்கொள்ள வேண்டுமென்றால்
மறுபடியும் முத்தமிட்டே எடுக்க வேண்டும்.
புனிதரே என்னை மீண்டும் மீண்டும் இப்படிப்பட்ட பாவங்களையே செய்யத் தூண்டினால் நான் சளைக்காமல் பாவங்களை செய்து கொண்டேயிருப்பேன்.என்று சொல்லி விட்டு ஆவல் தீராமல் முத்த மழை
பொழிகிறான்

ஜுலியட் டிற்குள் பரவசமும் நாணமும் ஒரு சேர குடிகொள்கின்றன.

‘’புனித புத்தகத்தில் சொல்லிய படி மென்மையாக முத்தமிடு
அத்து மீறாதே ‘’ அவனை அழகாகக் கண்டிக்கிறாள்.

அந்த வார்த்தைகள் ரோமியோவின் காதில் விழுந்தன. ஆனால் இதயத்தில் விழவில்லை.

முத்தம் தான் காதலின் தொடக்கம் என்பதை அப்போது தான் காதலர்கள் இருவரும் அறிந்து கொண்டார்கள். கண்ணோடு கண்இணை நோக்கினால் வாய்ச் சொற்களால் எந்தப் பயனும் இல்லை என்றார் வள்ளுவர் . ஆனால் இங்கே இதழோடு இதழ் சேர்ந்து விட்டால் கண்களால் கூட எந்தப்பயனும் இல்லை என்றாகி விட்டது. உலகம் மறந்து விட்டது. ஒரு கார்காலத்தில் விண்வெளி திறந்து விட்டால் என்னவாகும் ?
ஒரு அடைமேகம் குளிர்காற்றிடம் விலாசம் கேட்டால் எப்படி இருக்கும் ?

திடீரென்று ‘’ஜுலியட் அம்மா அழைக்கிறார்கள் வா ‘’என்று ஒரு குரல் அவளை அழைக்கிறது.
இருவரின் இதழ்களும் பிரிகின்றன. புதிய ஜென்மம் எடுத்தது போல் இருக்கிறது இருவருக்கும். ‘அடடா அம்மா ஏன் அழைக்கிறாள் ‘’ என்று நினைத்தபடி செல்கிறாள்.
ரோமியோவைப் பார்த்து இரு என்றும் சொல்லவில்லை.. போ என்றும் ஒரு வார்த்தை சொல்லவில்லை
இப்பொழுது தான் இவளுக்கு ஞாபகம் வருகிறது. அடடா அவன் பெயரையே கேட்கவில்லையே. ஞாபகம் வந்தால் தானே ?
ரோமியோ செவிலியிடம் சென்று இவளுடைய தாய் யார் ? என்று கேட்கிறான்.
செவிலி ‘’ இவளுடைய தாய் தான் இந்த வீட்டின் எசமானி நீ இவ்வளவு நேரம் ஒரு அழகுப் பொக்கிஷத்துடன் பேசிக்கொண்டிருந்தாயே அந்த ஜுலியட்டின் தாய் திருமதி கேபுலட் ‘’ என்றாள்.
ரோமியோ இதைக் கேட்டதும் சிலையாகி விட்டான். அடடா எங்கள் எதிரியின் மகளா இவள்.
தேவதைகள் எதிரிகளின் மகள்களாக இருப்பது எவ்வளவு துயரம் ?

செவிலி மீண்டும் அழுத்தமாகச் சொன்னாள் ‘’ இதையும் கேட்டுச் செல் இளைஞனே ஜுலியட்டிற்கு மணம் பேசி முடித்தாயிற்று. அழகும் அறிவும் செல்வமும் செல்வாக்கும் பெற்ற பாரிஸ் கோமானுக்கு அவள் விரைவில் மனைவியாகப் போகிறாள் ‘’
ரோமியோவுக்கு இதைக் கேட்டதும் காலடியில் பூமி நழுவ ஆரம்பித்து விட்டது. தனக்குள்ளேயே அதிர்ச்சியாகி அவள் கேபுலட்டா !….
என்னுடைய வாழ்க்கை என் எதிரியின் கரங்களிலா இனி ?
என் செய்வேன் நான் !. என்று புலம்ப ஆரம்பித்து விட்டான்.

விதியின் விளையாட்டை யார் கணிக்க முடியும். பென்வாலியா ரோமியோவின் அருகே வந்து ‘’ வா ரோமியோ எல்லாம் சிறப்பாக முடிந்து விட்டது கிளம்பலாம் ‘’ என்றான்

ரோமியோ ‘’நண்பா இது வரை எல்லாம் சிறப்பாக முடிந்து விட்டது.
என்கிறாய் இனி முடியவேண்டியது அப்படி இருக்காது . ‘ என்ற படி அவன் பின்னாலேயே செல்கிறான்.
அவன் மட்டும் தான் போகிறான். அவன் மனது அங்கேயே தான் சுற்றி சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தது.’’

ஜுலியட் மறுபடியும் அவசர அவசரமாகத் ஓடோடி வருகிறாள். அங்கே ரோமியோ அவ்விடத்தை விட்டு அகன்று கொண்டிருக்கிறான் .உயிரே தன்னை விட்டுப் பிரிந்து போவது போல் வலிக்கிறது அவளுக்கு. .செவிலியை அனுப்பி அவன் யார் ? பெயர் என்ன ? விலாசம் என்ன? என்ற விவரங்களையெல்லாம் உடனே விசாரித்து வா என்று அனுப்புகிறாள்.

செவிலி வரும் வரையில் அவள் கால்கள் தரையிலேயே படர்ந்திருக்கவில்லை.

செவிலி மிகப் பெரிய அதிர்ச்சியை அவளுக்கு கொண்டு வந்து சேர்க்கிறாள். ‘’ .பாப்பா அவன் பெயர் ரோமியோ அவன் உங்களின் பரம்பரை எதிரியான மாண்டேக் குடும்பத்தை சேர்ந்தவன்’’ என்று முடித்துக் கொண்டாள்….

தலையில் இடி விழுந்தது போல இருக்கிறது. ஜுலியட்டிற்கு . சற்று முன் தானே அவள் வானில் சிறகடித்துப் பறந்த பட்டாம் பூச்சியாகத் வலம் வந்தாள். அதற்குள்ளாகவா விதி அவளின் சிறகுகளை முறித்து சின்னாபின்னமாக்க வேண்டும் ?

ஏன் ஜுலியட்டே உனக்கு முன்பே எதுவும் தோன்றாமல் போய் விட்டது. ?. அத்தனை கேள்விகள் அவனை கேட்டாய் அல்லவா ? ஒரு வார்த்தை ஒரே வார்த்தையில் அவன் பெயர் என்ன என்று கேட்டிருக்க கூடாதா? அது ஏன் மறந்து விட்டது ?

காதல் என்பதே மறதி தானோ ? காதலே காதலே என்னை என்னவெல்லாம் செய்யக் காத்திருக்கிறாய் ?

இந்தக் கணம் அவளை உயிரோடு புதைத்தால் கூட சந்தோசமாக செத்துப் போய் விடலாம் போல் இருந்தது.

‘’ விதியோ எதிரியோடு அல்லவா என் இதயத்தை இணைத்து வைத்திருக்கிறாய் காதலே எவ்வளவு கொடியவன் நீ ?’’ என்று அவள் தன்னையே நொந்து கொண்டாள்.

‘’ என்னுடைய எதிரியின் மகனை என்னை நேசிக்க வைத்து
என் வாழ்வை எள்ளி நனகையாடி விளையாடுகிறாய் நீ ’’ யாரையோ பார்த்து இருளில் கேட்டுக் கொண்டேயிருந்தாள். ஆனால் யாருமே அவள் முன்னால் நின்றிருக்கவில்லை..

அவன் பெயர் என்ன ரோமியோவா ? நல்ல பெயர் தான் வைத்திருக்காய் நீ ? ரோமியோ ரோமியோ உடனே ஓடிப் போய் விடு என்று சத்தமிட்டுச் சொன்னாள். உடனே அந்தப் பெயர் சட்டென்று அவளது .இதயத்தில் ஒட்டிக் கொண்டது .

அவள் தனியாக நின்று புலம்பிக்கொண்டிருப்பதைப் பார்த்ததும் செவிலி பதை பதைத்த படியே அவள் பக்கத்தில் வந்து ‘’ பெண்ணே உனக்கு என்ன ஆகி விட்டது நீ என்ன பினாத்துகிறாய் ? ‘’ என்று கேட்டாள்.

ஜுலியட் ‘’ நீ ஒன்றும் கவலைப்படாதே என்னுடன் நடனமாடியவரிடமிருந்து நான் இப்பொழுது தான் ஒரு பாடலை கற்றுக் கொண்டேன் ,அதை தான் பாடிக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னாள்.

அப்போது அரண்மனைக்குள் இருந்து ஜுலியட்டை யாரோ அழைப்பது கேட்டது. . அவளுக்கு குரல் மட்டும் தான் கேட்டது பொருள் எதுவும் புரியவில்லை .. அடடா மொழியும் மறந்து போய்விட்டதா கடவுளே ?. .

ஆனால் செவிலிக்கு யார் அழைக்கிறார்கள் என்ற விவரம் புரிந்து விட்டது ’ ‘’இதோ வருகிறோம் இதோ வருகிறோம் ‘’’ என்று சொல்லிய படியே ஜுலியட்டின் கைகளைப் பிடித்து இழுத்துக்கொண்டு ‘’ வா ஜுலியட் கிளம்பலாம் ‘’ என்றபடி முன்னாள் நகர்ந்தாள். ..

ஜுலியட் புத்தி சுவாதீனமற்ற ஒரு சின்னஞ் சிறிய ஆட்டுக்குட்டி போல அவளை பின் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறாள். ஏதோ .சட்டென்று ஏதோ ஞாபகத்திற்கு வந்தவளாக செவிலி ’ ஆமா பாப்பா இப்போ நீ பாடுன பாடலை நானும் ஒரு தடவை கேட்கலாமா ? என்றாள்

ஜூலியட் பதறிப்போய் ‘’ இல்லை இல்லை உன்னால் அதைக் கேட்க முடியாது. அது எப்போதுமே நான் மட்டுமே பாடவேண்டிய பாடல் ‘’ என்று சொல்லி விட்டு ‘’ ரோமியோ ரோமியோ ரோமியோ ‘’ என்று மனதுக்குள்ளேயே அரற்றத் தொடங்கி விட்டாள்.

சுற்றிலும் கன்னங்கரிய இருள் அவர்களை சூழ்ந்து கொண்டிருந்தது. முகம் தெரியாத . அந்த இருளிலும் தன்னைச்சுற்றிலும் நிறைந்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத தேவதைகளைப் பார்த்து அவளது இதயம் ஒரே கேள்வியைத் தான் கேட்டபடி சென்று கொண்டிருந்தது ‘

’ தேவதைகளே உண்மையை சொல்வி விடுங்கள் ரோமியோ என்ற பெயர் இந்த ஜுலியட்டின் வாழ்வில் கடவுள் அளித்த ஒரு வரமா அல்லது பிசாசு அளித்த சாபாமா ? ஒரு வேளை அது சாபம் தான் என்றால் அந்த சாபமே தான் என் மரணமா ?

தொடர்ந்து அவள் தேவதைகளிடம் அந்தக் கேள்வியை கேட்டுக் கொண்டே சென்று கொண்டிருந்தாள். ஆனால் எந்த தேவதைகளும் அப்போது அவளுக்கு பதில் சொல்லவேயில்லை.

மூலம் ஷேக்ஸ்பியர்
தமிழில் சிறுகதை வடிவில் தங்கேஸ்

தொடர் 30: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

தொடர் 30: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்



பிரெஞ்சு சினிமா -3 புதிய அலை

செய்ன்! [SEIN]. பாரிஸ் நகரில் ஓடும் புகழ்பெற்ற அழகிய ஆறு, இதன் அழகிலும் இது இருப்பதின் பெருமையிலும் எழுதப்பட்ட பிரெஞ்சு கவிதைகளும் நிறைய உண்டு. மோலியரின் நாடகங்கள் சிலவற்றில் இடம் பெற்ற வசனங்களிலும் செய்ன் புகழாரம் சூட்டப்பட்ட நதியாகும்.. எனவே இவ்வாற்றின் இடது – வலது கரைகளும் பெருமைக்குரியவை. செய்ன் நதியின் இடது – வலது புறக் கரைப்பகுதிகளிலிருந்து படைக்கப்பட்ட நாடகங்கள், பிற எழுத்து வடிவங்கள், ஓவிய – சிற்ப காரியங்கள், திரைப்படங்கள் என்பவை மிகவும் உன்னிப்பாகவும் எச்சரிக்கை மிக்க மரியாதையோடும் கவனிக்கப்பட்டன. செய்ன் நதியின் வலதுபுறக் கரைப்பகுதியிலிருந்து பிரெஞ்சு புதிய அலை திரைப்பட இயக்கமும் அதன் கர்த்தாக்களான ழான் லக் கோதார், [JEN-LUC GODARD], ராபர்ட் ப்ரெஸ்ஸோன் [ROBERT BRESSON], ஃப்ரான்ஸ்வா த்ரூஃபா [FRANCOIS TRUFFAUT] ஆகியோர் புறப்பட்டனர். அதே சமயம், செய்ன் நதிக்கு இடது புறத்து கரைப்பகுதியிலிருந்து (பெண் இயக்குனர்) ஆக்னஸ் வார்தா [AGNES VARDA], கிறிஸ் மார்கர் [CHRIS MARKER] ஆகியோர் புகழ்பெற்ற புதிய அலைக்காரர்கள்.

“கோதிக்” [GOTHIC] எனும் சிக்கல் – கோலம் போன்ற அலங்கார வடிவமைப்பு கொண்ட கலைப்பாணி முதல் ஓவியம், சிற்பம், நாடகம், எழுத்து, திரைப்படம் வரை சர்வதேச அளவில் எல்லா நாட்டு கலைக் காரியங்களையும் பாதித்துத் தொட்டிருப்பது – இன்றுவரை பிரெஞ்சு கலையலைகள். பிரெஞ்சு புதிய அலையும் அதற்கடுத்த கட்டத்து படைப்புத் தோன்றல்களும் கீழை நாட்டு கலையிலக்கிய வெளிகளிலும் ஒரு தைரியத்தை – தைரியமிக்க முயற்சியை மேற்கொள்ள ஏதுவாயிருந்திருக்கிறது. இந்த கலப்புச் சிந்தனை – முயற்சி – வெற்றி முகங்களை சுமார் இரு நூற்றாண்டுக்கு முன்பே வங்க மறுமலர்ச்சியும், இராஜாராம் மோகன்ராய் – மைகேல் மதுசூதன் – இரவீந்திரநாத் தாகூர் – சத்யஜித்ரே ஆகியோர்களால் சாத்தியமாகியிருக்கிறது. தத்துவ ரீதியாக பிரம்ம சமாஜமும் கலப்பில் புதுமை காட்டியது.

ழான் –லக் கோதார் [JEAN-LUC GODARD] பாரிஸ் நகரில் 1930-ல் பிறந்தவர். இளம் வயதில் – தமது இருபதுகளில் இவர் பாரசிலிருந்த புகழ்பெற்ற “CINE CLUB SCENE” என்ற திரைப்படக் குழுவில் இணைந்து திரைப்பட விமர்சனத்தை மேற்கொண்டவர், இச்சமயம் இவரோடு நட்பு கொண்ட த்ரூஃபா இவரைப் பெரிதும் ஊக்குவித்தார். த்ரூஃபா நன்கு அறியப்பட்ட பிரெஞ்சு நவீன கவிஞரும் இளம் திரைப்பட விமர்சகரும், புதிய அலையின் மற்றொரு ஆரம்ப கர்த்தாவுமாவார். த்ரூஃபாவும் இதே சமயம் திரைப்படங்களை இயக்கத் தொடங்கியிருந்தார். கோதாரும் தமது படங்களை இயக்கத் தொடங்கின காலம் அது. கோதாரின் முதல் படம் “மூச்சிரைப்பு” [ABOUT DE SOUFFLE- அதாவது BREATHLESS]. இப்படம் 1959-60ல் வெளிவந்தது. “பிரெத்லெஸ்” படத்தில் கையாளப்பட்டிருந்த புதிய நடை சினிமா உலகில் புயலைக் கிளப்பிற்று. கோதாரின் படங்களான CONTEMPT; BAND OF OUTSIDERS [1964] ALPHAVILLE மற்றும் A MARRIED WOMEN [1965] என்பவை தோற்றத்திலும் உள்ளடகத்திலும் புரட்சிகரமாகவும் தீவிரமாயும் இருப்பவை. 60-களின் இறுதிக்கு முன்னர் கோதார் இயக்கிய மேற்சொன்ன திரைப்படங்களைப் பார்த்தளவில், அவை வெகுஜன – வணிகத்தனத்தையே புதிய வடிவிலும் உத்திகளோடும் கொண்டிருப்பதாய் எனக்குப்படுகிறது. 60-களின் இறுதியில் அவர் வணிகத்தனமான படைப்பச் செயல்பாட்டிலிருந்து முற்றிலும் விலகிப் போனவர் என்பது உண்மை.

கோதாரின் “மூச்சிரைப்பு” [BREATHLESS] திரைப்பட உலகில் ஒரு திருப்பு முனையாகக் கருதப்படுகிறது. திருட்டை, ஏமாற்று வித்தையை, பெண்கள் உறவை, கொலை திருட்டை, ஏமாற்று வித்தையை, பெண்கள் உறவை, கொலை ஆகியவற்றில் சமரசமின்றி சாதாரணமாய் புழங்கும் இளைஞன் ஒருவன். எளிதாக கார் திருடுபவன். திருட்டுக்காரில் ஓடுகையில் பைக்கில் துரத்திவரும் போலீஸ்காரர் ஒருவரைச் சுட்டுக்கொன்று விட்டு, திருட்டுக் காரையும் அடகு வைக்கிறான் அந்த டுபாகூர் இளைஞன் மிச்செல் [MICHEL]. மிச்செலின் இளம் அமெரிக்க காதலி பட்ரீஷியா [PATRICIA]. அந்த இளம் அடிமரிக்க பெண் ஒரு பத்திரிகையாளர், எழுத்தாளர், போலீஸ்காரனை கொலை செய்து விட்டு ஓடிவந்து பட்ரீஷியாவின் அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டில் ஒளிந்திருக்கிறான். அவளுக்கு மிச்செலின் மறுபக்க வாழ்க்கை தெரியாது. இருவரும் இத்தாலி-ரோம் என ஓடிபே்போய் ஹாயாக இருக்கலாமென அவளுக்கு ஆசை காட்டி கார் திருடி விற்று இறுதியில் அவன் கொலைகாரன் என்பதை அறியும் பட்ரீஷியா அவனைப் போலீசுக்கு காட்டிக் கொடுக்க, அவன் தப்பியோடுகையில் சுடப்பட்டு இறக்கிறான். இப்படி சட்டுபுட்டென்று சொல்லப்படும் கதைக்குள் காமிரா புரியும் விந்தை ஒளிப்பதிவு, நிதானமற்ற வேக நகர்வு, அப்படியும் இப்படியுமாய் தாவிக்குதித்து தாண்டி நொண்டியடித்துப் பாண்டியாடும் புதிய காட்சியாடல் உத்திகள் என்று கண்விரித்து வாய் பிளக்க, கோதாரின் முதல் முயற்சியான “மூச்சிரைப்பு” படத்தில் நிறைய இருக்கின்றன. இந்த கோணங்கள், உத்திகளைத் தவிர மற்றவை ஏற்கனவே பார்த்திருக்கும் பல திரைப்படங்களில் ஏற்பட்ட அனுபவங்களின் மறுவார்ப்பாகவே அனுபவமாகிறது. கோதாரின் உத்திகளும் நடையும் கோண வகைமையும் நம் நாட்டு புதிய அலை சினிமாவின் ஆரம்ப பூஜை கர்த்தாவாகிய மிர்னாள் சென்னுக்கும் பேய்பிடித்திருந்தது என்று கூற வேண்டும் [உ.ம்: மிரினாள் சென்னின் புகழ்பெற்ற புவன்ஷோம், இண்டர்வியூ முதலான இந்திய புதிய அலைத் திரைப்படங்கள்]
ழான் – லக் கோதார் ஹாலிவுட்டுக்கு அந்நியமானவராகவோ, அதிருப்தியாளராகவோ தோன்றவில்லை. இந்தப் படத்தையோ [BREATHLESS] எடுத்துக் கொண்டால், இதில் அவரது கதாபாத்திரம் மிச்செல் வாயிலாக கோதார் ஹாலிவுட் மீதானதமது அபிமானத்தை கோடிகாட்டும் காட்சியொன்றை வைத்துள்ளார். மிட்செல் தெருவில் நடந்து போகையில் ஹாலிவுட் சினிமா நடிகர்களின் பெரிய அளவு படங்களை நின்று ஆவலோடு கவனிப்பான். அந்தப் படங்களிலொன்று அன்றைய நாள் ஹாலிவுட் பிரபலமான ஹம்ஃப்ரி போகார்டின் [HUMPHREY BOGART] பெரிதாக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ள படம். அதைச் சிறிது நேரம் பார்த்துவிட்டு தனது உதடுகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளுவான். புதிய அலையென்று அழைக்கப்பட்டகோதார் குழுவின் படங்கள் எல்லா திரைப்பட ரசிகர்களையும் கவர்ந்ததாகவோ, சென்றடைந்ததாகவோ சொல்லிவிடவும் முடியாது. சமூகத்தில் வழக்கமாயிருந்து வரும் ஆண்-பெண் ஒழுக்கவியல் – தர்மத்தை குடை சாய்க்கும் அதே சமயம், இறுக்கமில்லாத கதைப்போக்கும், காட்சி ரூபங்கள் நாம் எதிர்பாரா வண்ணம் மாறியும், வெட்டியும் துரித கதியில் நகரும் உத்தியும் இந்த அலைவரிசைப்படங்களில் புகுந்தவை. இதையே, பின்னால் வந்த ஹாலிவுட் இயக்குனர் – பிரபலங்களும் பின்பற்றியிருக்கிறார்கள். புகழ்பெற்ற மார்டின் ஸ்கார்சீசும் [SCORSES] டரண்டினோவும் [TARANTINO] கோதாரின் பங்களிப்புக்கு தாங்கள் கடமைபட்டிருப்பதாக தங்களைப் பிரகடனப்படுத்திக் கொண்டவர்கள்.

ஓர் ஓடுகாலி இளைஞனான மிச்செல் [MICHEL] ஒரு கார் திருடன். காரை திருடி விற்பன். காரைத் திருடி ஓடும்போது துரத்தி வந்த போலீஸ்காரரை சுட்டுக் கொன்றுவிட்டு தனது காதலியான பட்ரீஷியா எனும் [PATRICIA] அமெரிக்க மாணவியின் அறையில் போய் ஒளிந்து கொள்ளுகிறான். இவனது செயல்பாடுகள் எதுவும் அறியாத பெண் அவள். கடைசியில் அறிய வருகையில் இவனது தொந்தரவு தாளாது பட்ரீஷியா மிச்செலைப் போலீசிடம் காட்டிக்கொடுத்து விடுகிறாள், அவன் ஓடுகையில் போலீஸ் சுட்டுத்தள்ளுகிறது.

BREATHLESS – படத்தைச் செய்வதற்க முன் கோதார் பிரெஞ்சு சினிமா பத்திரிகை CAHIERS DU CINEMA-வில் சினிமா விமர்சனம் செய்து வந்தவர். இவரும் மற்ற புதிய அலைக்காரர்களும் “CINEMA DE PAPA” – அதாவது அப்பா காலத்து சினிமா எனும் பழைய “ஸ்டூடியோ பாணி” சினிமாவை தூக்கியெறிவதில் உறுதியணாக செயல்பட்டவர்கள். மிகவும் கடினமான சமூக விஷங்களை வெளிப்புறஙய்களில் படப்பிடிப்பு செய்து திரைப்படங்கள் செய்வதில் ஆழ்ந்து இருந்தனர். இவர்களுக்கு முந்தைய இத்தாலிய நியோரியலிஸமும் ஏகதேசம் இப்படித்தான் இருந்தது. சினிமாவின் எதிர்கால பிரச்சினைகளின் மையம் சந்திக்கவிருக்கும் பிரச்சினையோடு மோதுவதில் தம் வாழ்நாளைக் கழித்தவர் கோதார். ஒரு திரைப்படத்துக்கு மிக நன்கு கதையம்சமிக்க கரு இருக்கவேண்டுமென்ற கருத்தை நிராகரித்தவர் கோதார், “ஒரு திரைப்படத்துக்கு வேண்டியது ஒரு பெண்ணும் துப்பாக்கியும்தான்”, என்பார் கோதார்.

1952-ன் பிரான்சிலிருந்த மிச்செல் பொர்டெய்ல் [MICHEL PORTAIL] என்பவன் மோட்டார் சைக்களில் தன்னை விரட்டிய போலீஸ்காரனைச் சுட்டுக்கொன்றவன். அவனது காதலியும் ஓர் அமெரிக்க பெண்ணே. மேற்சொன்ன உண்மை நிகழ்வை தோரயமாகத் தழுவியது கோதாரின் படம் “BREATHLESS”, ஓரிடத்தில் கதாநாயகி பட்ரீஷியா சொல்லுவாள், “நான் சுதந்திரமாயில்லாததால் சந்தோஷமாயில்லை என்பது எனக்குத் தெரியவில்லை.

கஜககஜவென்று நெருக்கமான தெருக்களில் கையிலேந்தும் காமிராவால் படமாக்குவதும், வேகமாய் பதிவாக்க “டிராலிஷாட்”களுக்கு, நோயாளியின் சக்கர நாற்காலியில் அமர்த்தித் தள்ளச் செய்தும் படமாக்குவார் கோதார். புதியவகை சினிமாவின் வியத்தகு தொழில் நுணுக்க படப்பிடிப்பு உத்தியான “ஜம்ப் கட்” [JUMP CUT] எனும் காமிராவை விந்தை வித்தையும் இவரது கண்டுபிடிப்பு என்றே கூறப்படுகிறது. BREATHLESS முதல் பிரெஞ்சு புதிய அலைத் திறப்படமாகும். ஒளிப்பதிவாளர் ராவுல் கௌடார் [RAOUL COUTAR]ன் காமிரா சுரு சுருவென அழகு விளயைாட்டு காட்டுகிறது இசையமைப்பாளர் மார்ஷல் சோலால்-ன் [MARTIAL SOLAL] இசை அறிவு ஜீவித்தனம் கொண்டது. ஐரோப்பாிய இசை மேதை மொஸார்ட்டின் [MOZART] சிம்ஃபனி ஒன்றை தாம் ஜாஸ் இசையில் உள் நகர்த்திக் காட்டியிருப்பது மிக அரிதான இசைக் கோர்வைச் செயல் இப்படத்தின் துரிதகதி நகர்வுகள் ஒரு சில அமெரிக்க ஆர்சன் வெல்ஸ் [ORSON WELLES] படங்களில் காணும் துரித வகைமையானது. மிச்செல்லாக ழான்-பால் பெல் மாண்டோவும் [JEAN-PAUL BELMANDO] பட்ரீஷியாவாக ழான் செபர்ஜும் [JEAN SEBERG] சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

கோதார் “ஆல்ஃபாவில்” [ALPHAVILLE] என்று ஒரு ஜேம்ஸ்பாண்ட் – பாணியிலான விஞ்ஞான கற்பனைத் திரைப்படமொன்றை 1965-ல் இயக்கி வெளியிட்டார். ஆல்ஃபாவில் திரைப்படத்தின் கதை, எதிர்கால அதிசக்திமிக்க விஞ்ஞான வளர்ச்சியின் விளைவில் உருவானதாகக் கொள்ளப்பட்டது. கம்யூட்டரின் மேலாதிக்கம் மனிதனை அடிமைபடுத்துவதாயும் கதை.

ஆல்ஃபாவில், பிரெஞ்சு கலாச்சார மையத்தில் திரையிடுவதற்கு முன்பாக 1965-களில் ஜேம்ஸ்பாண்ட் படங்கள் தொடர்ந்து சென்னையில் ஓடியன், மற்றும் நியூ குளோப் தியேட்டர்களில் திரையிடப்பட்டு வந்தன. ஷான்கானரி நடித்த புகழ்பெற்ற ஜேம்ஸ்பாண்ட் படங்கள் அன்றைய சென்னை சினிமா ரசிகர்களுக்கு கொலை குத்து ஒரு வழியாக ஆல்ஃபாவில் பிரெஞ்சு படமும் பிரெஞ்சு கலாச்சார மையத்தில் திரையிடப்பட்டு ஆவலோடு பார்த்தபோது பெரும் ஏமாற்றமாகவே போயிற்று.

ழான்-லக் கோதார் ஹாலிவுட் ஜேம்ஸ்பாண்ட் படங்களிலிருக்கும் எவ்வித சிறப்பு தந்திர யுக்தி [SPECIAL EFFECT]யுமின்றி, பொருட்செலவுமிக்க செட்டுகள் எதுவுமின்றி ஓர் அறிவியல் – கற்பனைக் கதையைக் கொண்ட திரைப்படத்தை 1965-ல் உருவாக்கியதை வைத்துத்தான் மேற்கூறிய ஜேம்ஸ்பாண்ட் படங்கள் குறித்த அடிக்கோடு, பாரிஸ் நகரில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களிலுள்ள ஓட்டல் வரவேற்பறைகள், நியான்சைட் அறிவிப்புகள், அலுவலகக் கட்டிடங்கள், உயர் அதிகாரிகள் கூடுமிடம் ஆகியவற்றைக் கொண்டு அவற்றின் வழியே எதிர்கால யதேச்சாதிகாரத்து மூளைகளையும் ஊற்றுக் கண்களையும் கண்டறியும் முயற்சி இப்படம். எதிர்கால விஞ்ஞான யுகத்து கதைப்போக்கு என்றாலும், இதில் வரும் கம்ப்யூட்டர், “இறந்தகாலமும் எதிர்காலமுமில்லாத ஒரு நிகழ்காலத்தைப் பற்றியது என்றே, “மைக்” குரலில் பேசுகிறது.

தனியார் உளவுத் தளத்தைச் சேர்ந்த எலம்மி காவுஷன் [LEMMY CAUTION] எனும் உளவாளி, லே்ஃபாவில் எனும் நகரத்துக்குள் நுழைகிறான். என்ன நகரம், யார் கட்டுப்பாடிலிருப்பது, என்னவெல்லாம் நடக்கிறது, காவுஷனின் பணி நோக்கம் என்னவென்பதையெல்லாம் அதிதுரிதகதியில் விரிக்கையில், ஆல்ஃபாவில் பிற உளவாளி – விஞ்ஞான சாகசத் திரைப்படங்களினின்றும் புதிய அலையால் மேலெழும்புவதைக் காட்டுகிறார் கோதார். காவுஷன் ஆல்ஃபாவில் பகுதியில் நுழைந்தவுடன் அவருக்கிருந்த தொடர்பாளர் ஆல்ஃபாவில்லை கட்டுப்படுத்தும் மாபெரும் கம்ப்யூட்டரால் கொல்லப்படுகிறார். அந்த கம்ப்யூட்டர் தன் மகா சக்தித் திறனால், ஆல்ஃபாவில் பிரஜைகள் ஒவ்வொருவரும் தமது தனித்தன்மை – தனித்துவத்தையும், சாதாரண மனிதனுக்குள்ள உணர்வுகளையும் இழக்கச் செய்து இயந்திரங்கள் மாதிரி இயங்க வைத்துள்ளது. ஆல்ஃபாவில் என்பது எந்தவித நகரமோ அல்லது விண்வெளி கிரகமோ அல்ல. அண்டவியல், அணு ஆகியவற்றின் அறிவுள்ள பேராசிரியர் வான் ப்ரான் [VON BRAUN] என்பவர் காணாமற்போய்விடுகிறார். அவர் ஆல்ஃபாவில்லில் சிக்கிக் கொண்டிருப்பதை யூகித்து காவுஷன் அங்கு சென்று அவரை விடுவிக்க வேண்டும் அல்லது ஒழித்துக் கட்டிவிட வேண்டும் என்ற முடிவோடு பயணப்பட்டு நுழைகிறார். அங்கு அவர் சந்திக்கும் முதல் மனிதன் ஹென்றி டிக்சன் [HENRI DICKSON] என்ற இன்னொரு உளவாளி. இவனை கம்ப்யூட்டர் கொன்றுவிடுகிறது. விஞ்ஞானி டாக்டர் வான் ப்ரானினின் மகள் நடஷா [NATACHA]வையும், காவுஷன் சந்திக்கிறார். பேராசிரியர் அவளையும் தன் தனித்தன்மையான பெண்மை உணர்வுகளையும், பிற சிந்தனையையும் அறியாதவளாக ஆக்கியுள்ளார். காவுஷன் நடாஷாவுடன் பேச்சு கொடுக்கையில் அவளுக்கு “காதல்” என்பதே அறிந்திராத விஷயமாகவும், பாலுணர்வு எழுச்சியற்றவளாயும், எவ்வித உள்ளுணர்வும் அற்றவளாய் பொம்மையாக நடமாடுகிறாள். யதேச்சதிகாரத்தின் ஆட்சிக்குட்பட்ட தேசத்து பிரஜைகளின் கதியை இவ்வாறு விமர்சிப்பதாய் கோதாரை எடுத்துக்கொள்ளலாம். ஆல்ஃபாவில் ஒரு அற்புத-பிரம்மாண்ட கம்ப்யூட்டரால் நடத்தப்படுகிறது. இச் சாதனம் உண்மையான மனித உணர்ச்சிகள், பந்தங்களையெல்லாம் மரணதண்டனைக்குரிய குற்றமாகச் செய்திருப்பதோடு, அப்படியாக கம்யூட்டர் தண்டனையளிக்கும் பிரஸைகளை ஒரே சமயத்தில் ஒரு நீச்சல் களத்தில் குதிக்க வைத்து, குதிக்கையிலேயே சிப்பாய்களால் சுட்டுக்கொன்று குளத்தில் தள்ள வைக்கிறது. இந்த கம்யூட்டரையும் பேராசிரியரையும் அழிப்பதுதான் காவுஷன் வேலை. கம்யூட்டருக்கு மனித அறிவார்த்த படைப்பான கவிதைகளை உணவாக ஊட்டுவதன்ள வாயிலாக அதன் பிரதான மூளை மண்டலத்தைக் குழப்பி நாசமாக்கி அழிப்பதுதான் உளவாளி லெம்பி காவுஷன் ஏற்றிருக்கும் கடமை. இந்த கம்யூட்டர் – மனிதன் மோதல் 2001- A SPACE ODYSSEY [STANLEY KUBRIC-இயக்கிய அதி உயரிய திரைப்படம்] திரைப்படத்திலும் வருகிறது. மனிதனின் படைப்பான கம்யூட்டர் மனிதனையே ஆட்டிப் படைப்பதும் அழிப்பதும் விஞ்ஞான ஐரனி!

கோதாரின் பல்வேறு திரைப்படங்களில் ஏற்படும் அனுபவம் போலவே ஆல்ஃபாவில் படத்திலும்முதல் கணிசமான நேரத்துக்கு கதையே கிடையாது. உற்று கவனிக்க இப்படத்தில் வறட்சியான நகைச்சுவையும், கவித்துவமான தீவிரத்தன்மையும் கொண்டிருப்பது விளங்கும்.

ழான்-லக் கோதார் தமது 91-வது வயதில் செப்டம்பர் 13ந்தேதியன்று 2022-ம் ஆண்டில் அமைதியாக காலமானார்.

கோதாரின் சமகாலத்தவர், நெருங்கிய நண்பர், அவ்வப்போது யோசனை. அறிவுரைகளைப் பகிர்ந்து கொண்டவர் என ஒருவரைக் கறிப்பிட்டால் அது ராபெர்ட் ப்ரெஸ்ஸோன் [ROBERT BRESSON]. 1907-ல் பிரெஞ்சு சிறு நகரமொன்றில் பிறந்து கல்லூரியில் தத்துவம் படித்து புகைப்படக்கலை, ஓவியக்கலைகளில் கை நனைத்து, பிறகு திரைபடங்களுக்குக் கதை வசனமெழுதியவர். ப்ரெஸ்ஸோன் முழுசாக ஒரு பதிமூன்று திரைப்படங்கள் இவரது பங்களிப்பாக சொல்லப்படுகின்றன. ப்ரெஸ்ஸோன், 2-ம் உலகப்போரின்போது, நாஜிப்படைகளால் பாரிஸ் ஆக்கிரமிக்கப்பட்டபோது, ஆக்கிரமிப்பை எதிர்த்த புரட்சியாளர்களோடு இணைந்து போராடி, ஜெர்மன் படையால் சிறையிலடைக்கப்பட்டார். ப்ரெஸ்ஸோனின் படங்கள் ஆன்மீக வழியில் மெய்ப்பொருள் உணர்த்தும் வகையானவை. கிறிஸ்துவம் கூறும் கருணை, இறை நம்பிக்கை, விடுதலை, மன்னிப்பு மனிதத்தன்மை ஆகியவற்றுக்கும் மன வக்கிர குரூரங்கள் பொறாமை, கோபதாபம், தண்டிக்கும் மனப்போக்கும் செயலும், பழிவாங்கல் ஆகியவற்றக்கும் இடையே நிகழும் போராட்டங்களை உள்ளடக்கிய கதையாளடல்களைக் கொண்டவை இவரது திரைப்படங்கள். ராபெர்ட் ப்ரெஸ்ஸோன் 1999-ல் காலமானார்.

ப்ரெஸ்ஸோன்1951-ல் இயக்கிய “JOURNAL D”UN CURE DE CAMPAGNE” [DIARY OF ACCOUNTRY PRIEST] எனும் திரைப்படம் உலக சினிமா ரசிகர்களையும் விமர்சகர்களையும் கவனமீர்த்தது. திரைப்படமாக்கலுக்கு பெரிய மூலதனமோ, புகழ்வாய்ந்த நட்சத்திரங்களோ, ஸ்பெஷல் EFFECT எனும் உத்திகளோ தேவையில்லாமலே சிறந்த படத்தைச் செய்ய முடியுமென்பதை நிரூபித்துக் காட்டினார் ப்ரெஸ்ஸோன். ஒரு நல்ல திரைப்படம் எந்த கதையையும் சொல்ல வல்லது. எவ்வித உணர்வையும் தட்டியெழுப்ப வல்லது. எல்லா தேவை – தேவையற்ற – அவசிய – அவசியமற்ற – தனியார் மயம் அல்லது பொதுமயம் கொண்ட கருத்தாக்கத்தையும் தனது அடிப்படையான நிஜ கட்டமைப்பு வழியே தன்னை ஆட்படுத்திக்கொள்ள சக்தி கொண்டது என்பார் ப்ரெஸ்ஸோன்.

ஜார்ஜஸ் பெர்னனோவின் [GEORGES BERNANOS] நாவலை தழுவி செய்யப்பட்ட படம் “ஒரு கிராமத்து புரோகிதனின் நாட் குறிப்பு” நகருக்கு ளெியில் சிற்றூர் ஒன்றிலுள்ள ஆலயத்தின் இளம் பூசாரி ஒருவன், பூஜை, தினசரி, வாராந்திர ஜெபகாரியத்தோடு ஊரிலுள்ளோரின் அன்றாட வாழ்க்கையை – அதிலுள்ள வாழ்வியல் கஷ்டங்களையும் கவனித்து தன்னால் ஆவன செய்கிறான். இதன் காரணமாய் கேள்விகள் எழும்போதும் தன் நம்பிக்கை விசாரணைக்கு உள்ளாகும்போதும் அவற்றை எதிர்கொள்ளுகிறான். கிறிஸ்தவ சமயம் உலகிற்கு முன் வைக்கும் செய்தியை, ப்ரெஸ்ஸோனின் திரைப்படம் லியோன் ஹென்றி பியூரெல் [LEONCE-HERI BUREL]-ன் அற்புத காமிரா ஒளிப்பதிவில், அசையும் உருவங்களையும், ஒலியோடும் நாவலின் வார்த்தைகளை சதையும் ரத்தமுமாக்கியிருக்கிறது, ப்ரெஸ்ஸோனின் மற்றொரு சிறந்த படம் ‘A MAN ESCAPED” (1956)

ஒரு கைதி அல்லது கைதிகள் பலர் நாஜி கைதி முகாம்களிலிருந்து சுரங்கம் தோண்டி தப்பித்தல், பிடிபடுதல் என்ற மனிதனின் விடுதலை மற்றும் ஜீவித்திருத்தல் கருத்தைச் சொல்ல யுத்த கால உண்மை நிகழ்வுகளையும் அவற்றினடிப்படையிலமைந்த கற்பனைக் கதைகளையும் கொண்டு எடுக்கப்பட்ட அரிய ஹாலிவுட் படங்கள் கண்முன் நிற்கின்றன. பிரிட்டிஷ் சிறையிலிருந்து தப்பிச் சென்ற ஜெர்மன் கைதியைப் பற்றி “ONE THAT GOT AWAY”-யை மறக்க முடியுமா? அல்லது “STALAG-17”, ‘THE GREAT ESCAPE” போன்ற படங்களை மறக்க முடியுமா. பிரான்சிலிலேயே எடுக்கப்பட்ட மகத்தான ஃபிரெஞ்சு சிறை-தப்பியோட்டப்படங்களான JACQUES BECKER இயக்கிய “THE HOLE” [1960] JEAN GENET-ன் “A SONG OF LOVE” 91950] போன்ற கைதி தப்பியோடும் படங்கள் மறக்க முடியாதவை.

ப்ரெஸ்ஸோனின் திரைப்படம் “A MAN ESCAPED” மேற்கூறிய சகாசச் சித்தரிப்பையே முதன்மையாக வைத்து பிண்ணப்பட்ட ஜனரஞ்சக – வணிகத்தன படங்களிலிருந்து வெகுவாக தனித்து நிற்கிறது. தொழில் முறையில்லாத கலைஞர்களைக் கொண்டு நாடகத்தனத்தை முற்றிலும் புறந்தள்ளி நடிக்க வைத்திருக்கிறார் ப்ரெஸ்ஸோன், படத்தில் கைதி ஃபாண்டேன் [FONTAINE] யாரும் கூட இல்லாத தனிச் சிறையில் தனிமையென்னும் மனச் சித்ிரவதையில் புழுதெளிவதும் விடுதலைமூலம், இருத்தல் நிலையில் உத்தரவாதத்தை அடையத் துடிப்பதும் இறுதியாக தப்பித்து வெளியேறுவதும் திரைப்படம். இந்த ஓட்டத்தில் எவ்வித தொய்வுமின்றி ஒரு ஆல்ஃப்ரட் ஹிட்ச் காக்கின் படத்திலுள்ள “சஸ்பென்ஸ்” கொண்டாயும் இயக்கியிருக்கிறார் ப்ரெஸ்ஸோன். கைதி ஃபாண்டேனாக FRANCOIS LETTERRIER அற்புதமாகச் செய்திருக்கிறார் LEONCE HENRI BUREL-ன் காமிரா ஒளிப்பதிவும் மிகவும் குறிப்பிடத்தக்கது. ப்ரெஸ்ஸோன் என்றாலே அவரது திரைப்படம் “ஜேப்படிக்காரன்” [PICKPOCKET-1959] பிரபலமாய் தெரியும். ஒன்றுக்கு மேற்பட்ட விஷயற்களால் ப்ரெஸ்ஸோனின் ஜேப்படிக்காரன் முக்கியமான படமாகிறது.

1959-ல் இயக்கி வெளியிட்ட PICKPOCKET, திரைப்படத்தில் கதையை படத்தின் நடிப்பு, காமிரா நகர்வுகள் வாயிலாக ஓட வைக்கிறார் ப்ரெஸ்ஸோன். மிச்செல் எந்த வேலையும் கிடைக்காத, படித்த புத்தி ஜீவித்தனமான இளைஞன். ஓர் சிறிய இருப்பிடத்தில் வாழ்கிறான். நோய்வாய்ப்பட்டதாய் மருத்துவமனையில், ரயிலில், பஸ்ஸில் கூட்டத்தில் ஜேப்படி செய்கிறான். படத்தின் நகர்வுகளிடையே, பா்திரங்களின் உள்நோக்க ஓட்டத்தையும், பண ஓட்டத்தையும் நமக்குச் சொல்ல “பின்குரல்” [voice-over] மூலம் மிகவும் தணிந்த குரலில் பேசிச் சொல்கிறார். இந்த உத்தி பல்வே இயக்குனர்களின் பல்வேறு திரைப்படங்களிலும் கையாளப்பட்ட / நுணுக்க வகை, ப்ரெஸ்ஸோன் தம் படங்களில் பின்னணி இசையைக் கூட கராறாக கதையின் முக்கிய கட்டங்களிலும், வார்த்தைகளைக் கொண்டு வெளியிட முடியதத தருணங்களிலும் மட்டுமே இசையை உபயோகிப்பார். இந்த வகையான எளியபடமாக்கலில் பார்வயைாளர்கள் மிக்க சுதந்திரத்தோடு காட்சிரூப நடப்புகளை ரசிகர்களே சிலாகித்து விமர்சிக்கும்படிக்கு அவர்களுக்கு கிடைத்த சலுகையாகிறது. இவ்வகைத் திரைப்படம் ஒன்று முன் வைக்கும் கேள்விகளுக்கு அப்படத்தின் கதாபாத்திரங்களோடு, படம் பார்ப்பவனும் ஒன்று சேர்ந்து எதிர்கொண்டு விடை தேடும்படியாகிறது.

படத்தில் மிச்செல் ஒரு அமெச்சூர் ஜேப்படிகாரன், தன் அன்றாட செலவினங்களுக்காக அதை கைக்கொண்டவன் போகப்போக அதில் கைதேர்ந்த தொழில்முறை ஜேப்படிக்காரர்களுடன் அறிமுகமாகி அவர்கள் உதவியால் அதில் பயிற்சியளிக்கப்பட்டு பல்வேறு நுணுக்கங்களைக் கற்று அதிலேயே முழுநேர தொழிலாளியாகிறான். அமெச்சூராக இருந்தபோது ஒருமுறை எக்கச்சக்கமாய் மாட்டிக்கொண்டு சமாதானமாய் எடுத்ததை உரியவரிடம் கொடுத்துவிட்டு வேகமாக மிச்செல் ஓடி மறைவதை கூடி நிற்பவர்கள் கவனிக்கும் கட்டம் நடிப்பு காமிரா அனைத்துமே அருமை. ஜேப்படியடிக்கும் காட்சிகளை மயிர்கூடச் செறியும்படி இயக்கியிருக்கிறார் ப்ரெஸ்ஸோன். திரைப்பட வரலாறில் இவர்போல எவருமே செய்ததில்லை, தாய் இறந்துபோய், அவளுக்கும் மிச்செலுக்கும் இடையே வெறும் சேதியேதும் அளவில் தோன்றும் இளம் பெண் ஜீன் [JEANNE] அவனது வாழ்வில் பெரும் பங்கு வகிப்பதில்லை. மிச்செலுக்கு வெளியுலகையும், வெளி மனிதர்களோடும் அவனால் ஒருவித உணர்ச்சிவயப்படலோடும் திருப்தியுடன் மனித உணர்வோடும் தொடர்புகொள்ள ஜேப்படித்தல் துணையாயிருப்பதாயும் உணர்கிறான். இறுதியில் பணத்துக்காக ஜேப்படிப்பதையே அவன் விரும்பாது ஒரு கலையாகவும் அதைநினைத்து பிடிபடுவதையும் எதிர்க்காமல் ஏற்கிறான். மிச்செலாக மார்டின் லசேல் [MARTIN LASALLE], [MARIKA GREEN] மரிகா கிரீன் எள்பவர்கள் மிக இயல்பாக தொழில்முறை நடிகர்களை விட சிறப்பாக நடித்திருக்கிறார்கள். லியோன் ஹென்றி பியூரெலின் [LEONCE HENRI BUREL] காமிரா மிக முக்கியமான பாத்திரம்.

பிரெஞ்சு புதிய அலை சினிமாவின் முக்கியமான திரைப்பட கர்த்தா ஃப்ரான்ஸ்வா த்ரூம்பா [FRANCOIS TRUFFAUT]. த்ரூஃபா என்ற பெயர்சொல் என்னை ஈர்த்ததற்கு முக்கிய காரணம் ஆல்ஃபிரட் ஹிட்ச்காக். ஹிட்ச்காக்க பற்றின கட்டுரையை “சுபமங்களா” இதழில் 90களில் எழுதவேண்டியிருந்தது. கராறான ஆசார சினிமா விமர்சகர்கள், கலையழகோடு திகில் சினிமா செய்து வந்த ஹிட்ச்காக்கை எவ்விதத்திலும் தீவிரமாக எடுத்துக்கொள்ளாமல் திகில் படங்களை சஸ்பென்ஸ்ஸோடு செய்யும் வெறும் ஜனரஞ்சக சினிமாக்காரன் என்றே தீண்டத் தகாதவராய் தள்ளி வைத்தனர். அந்த சமயத்தில்தான் நன்கறியப்பட்ட ஃபிரெஞ்சு கவிஞரும், பத்திரிகையாளரும், பிரெஞ்சு புதிய அலை சினிமாவின் தோற்றுவாய்களில் முக்கியமான ஒருவரான ஃப்ரான்ஸ்வா த்ரூஃபா ஹிட்ச்காக்கை சந்தித்து அரிய நீண்ட நேர்காணலை செய்திருந்தார். அதைஒட்டி ஹிட்ச்காக்கின் கலை நேர்த்தியும் அழகியலும் மிக்க திரைப்படங்களைப் பற்றியும் அவரது பங்களிப்பு வாழ்க்கை குறித்தும் நீண்ட பெரிய நூலை எழுதி, அந்த நேர்காணலையும்சேர்த்து வெளியிட்டார். அதன்பிறகுதான் ஹிட்ச்காக்கின் திரைப்படங்கள் அழகியல் மிக்க கலைப்படங்களாக அங்கீகரிக்கப்பட்டன. அந்த நூல் மூலம் த்ரூஃபாவை நான் அறிந்தவனாகி அதன் பின்னரே அவரது திரைப்படங்களைப் பார்க்கலானேன்.

ஃப்ரான்ஸ்வா த்ரூஃபா பாரிஸ் நகரில் 1932-ல் பிறந்தார். அதிகம் படிக்கவில்லை. பட்டறையில் வெல்டர் வேலை முதல் கடின வேலைகள் செய்து வந்தவர். புத்தகப் பிரியரும் சினிமா பித்தும் கொண்டவர். CAHIERS DU CINEMA –திரைப்பட இதழில் நிறைய எழுதியவர். 20-திரைப்படங்களுக்கு மேல் இயக்கிய த்ரூஃபா 1984-ல் காலமானார்.

த்ரூஃபா 1955-ல் “THE VISIT” எனும் காதல் கதை பற்றிய குறும்படமொன்றை இயக்கித் தயாரித்த ஒரு சில நண்பர்களுக்கு மட்டும் போட்டுக் காண்பித்தார். அதன்பிறகு 1958-ல் “வால்கள்” [THE BRATS] எனும் குறும்பு மிக்க சிறுவர்களை பற்றின குறும்படத்தை இயக்கினார். இவரது முதல், முழு திரைப்படம் “400 உதைகள்” [400 BLOWS] 1959-ல் இயக்கி வெளிவந்தது. யாருக்கும் யாரும் எந்த உதையோ அடியோ படத்தில் கொடுப்பதில்லை. வாழ்க்கையில் படாத கஷ்டங்கள் பட்டு அனுபவித்தவனைப் பார்த்து சின்னவயசில நல்லா அடிபட்டவன்… செம்ம அடிபட்டவன்”, என்று கூறுகிறோம். இப்படி சொல்லுவது ஒரு சொல்வழக்கு – சொல்லாடலின் மரபுத் தொடர். பிரெஞயு்சு மொழியில், “நானூறு உதைகள் அறிந்தவன்”, என்றால் பல வித கஷ்டங்கள்பட்டு சமாளித்த / அனுபவசாலி என்றாகிறது. 400 BLOWS [LES QUATRE CENTS COUPS] திரைப்படம் பெரும்பான்மைக்கு த்ரூஃபாவின் இளம்பருவத்து நிகழ்வுகளைக் கொண்ட சுயவராற்றுப் படம் எனலாம். படத்தில் – ஆண்ட்வா டய்னெல் [ ] எனும் மைய பாத்திரம் த்ரூஃபா இளமையிலிருந்தது எனப்படுகிறது. சதா குறும்பு செய்யும் பையன், உண்மையை திருத்திச் சொல்லும் பையன். அவனை சோதிக்கும் உளநல மருத்துவர் ஒருநாள் கூறுவார்,

“நீ எப்பப் பாத்தாலும் பொய்யே சொல்றதா ஒங்கம்மா அப்பா சொல்றாங்க”, என்று அதற்கு உடனே ஆண்ட்வா கூறுவான்,

“சில சமயம் அவங்ககிட்டே நா நிழமே பேசுவேன். ஆனா, அப்பவும் அவங்க நம்பறதில்லே, என்று ஆண்ட்வா ஒரு புத்தகப் பிரியன். நிறைய படிப்பான். பால்ஹாக் என்றால் உயிர். ஒரு பள்ளிக்கூட கட்டுரையை எழுதுகையில், தன் சொந்த உணர்வுகளை அதில் வெளியிட்டுக்காட்ட, பால்ஸாக்கின் [HONORE DE BALZA ] ஒரு நூலின் கருத்துக்களை உபயோகித்து எழுத, கருத்துக் களவாடல் [PLAGIARISON] குற்றம் கண்டுபிடிக்கப்பட்டு ஆசிரியரால் தண்டிக்கப்படுகிறான். த்ரூஃபா தன் சிறுவயது நிகழ்வுகளை நினைவு கூர்ந்து ஆண்ட்வா எனும் சிறுவன் பாத்திரம் வழியே படமாக்குகையில் தனது விடலைப் பருவ நிகழ்வுகளை வயது வந்த மனிதனின் பார்வை வழியே யோசித்து சொல்லுவதில்லை. ஒரு நிகழ்கால நடப்பாகவே சித்தரித்துள்ளார். ஆண்ட்வா தன் வளர்ப்புத் தந்தையின் தட்டெழுத்து எந்திரத்தைத் திருடி விற்று பாரிஸிலிருந்து ஓடிப்போக பணம் திரட்ட திட்டமிடுகிறான். பிறகு மனம் மாறி அதை எடுத்த மாதிரியே வைக்க முற்படுகையில் அவரிடம் பிடிபட்டு போலீசில் ஒப்படைக்கப்படுகிறான். திருடர்கள், வேசிகளோடு வைக்கப்பட்ட நிலையில் அவன் தப்பி வெளியேறி கடற்கரையை அடைகிறான். இந்த இறுதிக் காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் அபராம். HENRI DECAE-ன் காமிரா கலை அபாரம். ஆண்ட்வாவாக ழான் பியர் லாட் [JEAN – PIERRE LEAUD] சிறப்பாக நடித்துள்ளார். அவ்வாண்டின் [1859] குறைந்த இயக்குனருக்கான விருது கான் திரைப்பட விழாவில் த்ரூஃபாவுக்கு தரப்பட்டது.

973-ல் த்ரூஃபாவும் திரைப்பட இயக்குனர் ஃபெர்ராண்டு [ ] எனும் பாத்திரத்தில் நடித்து வெளியான படம் “இரவுக்கு பகல்” [DAY FOR NIGHT]. இப்படத்தை புதிய அலை வகைமையில் அமையாத ஒரு படமாகச் செய்தார் த்ரூஃபா. திரைப்படமாக்கல் என்பது ஒரு கலை என்பதைக் காட்டிலும் ஒரு கைவினைக் கலை [CRAFT] யத்தனிப்பென்று உணர வைக்கிறது இத்திரைப்படம். [MEET PAMELA] என்ற திரைப்படம் படமாக்கப்படுகையில் எழும் சிக்கல்கள் இடையூறு என்று “திரைப்படத்துக்குள் திரைப்படம்” எனும் வரிசையிலான படம் இது. எல்லாம் தயார். இயக்குநர், ஒளிப்பதிவாளர், நடிக, நடிகையர் மற்ற எல்லாரும் ஒரே குடும்பமாய் பழகும் சூழலை படம் காட்டுகிறது. படப்பிடிப்பின்போது முக்கிய கதாநாயகியாக நடிப்பவர் உடல்நிலை மோசமாகி வரமுடியவில்லை. வேறு நபரை கொண்டு வருகையில், தொழிற்சங்கம்போராடத் தொடங்குகிறது. இப்படம் அவ்வாண்டுக்கான சிறந்த வெளிநாட்டுப்படம் ஆஸ்கர் விருதைப் பெற்றது.

1975-ல் த்ரூஃபா ஹாலிவுட் மாதிரியில் ஒரு காதல் கதை திரைப்படத்தைச் செய்தார். ஒரு வகையில் பொருட் கெலவுமிக்க வராற்றுப் பின்னணியிலான படம் என்று கொள்ளலாம். THE STORY OF அதேல் ஹியூகோ [THE STORY OF ADELEH] என்ற படம். அதேல் பிரபல 19-ம் நூற்றாண்டு பிரெஞ்சு கவிஞர் – நாவலாசிரியர் விக்டர் ஹியூகோவின் இரண்டாவது மகள். நெப்போலிய ரெசுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டதின் மூலம் தாம் கைதாவதை தவிர்க்க விக்டர் ஹியூகோ ஒரு தீவுக்கு குடும்பத்தோடு போயிருக்கிறார். அத்தீவு பிரிட்டிஷ் ஆளுகைக்குட்பட்டதாயிருக்க, நாவலாசிரியரின் இரண்டாவது மகளள் அதேல் ஆல்பெர்ட் என்ற பிரிட்டிஷ் போர் வீரனைக் காதலிக்கிறாள். ஆல்பெரட் அதேலை மேலெழுந்தவாரியாக நேசிப்பதோடு வரைவில் HALIFAX எனும் வெகுதூரத்திலுள்ள இடத்துக்கு லெஃப்டினெண்டாக பதவி உயர்ந்து போய்விடுகிறான். விக்டர் ஹியூகோவின் புகழ்பெற்ற நாவல்கள் “லே மிஸிரப்ளே”யும் “நாட்டர்டாம் கூனன்” என்பதும். லே மிஸரப்ளே, பிரெஞ்சிலும் ஆங்கிலத்திலும் பலமுறை திரைப்படங்களாய் திரும்பத் திரும்ப எடுக்கப்பட்டு வெற்றிபெற்றது. தமிழிலும் “ஏழைப்படும் பாடு” என்ற 50-களில் ராம்நாத் இயக்கத்தில் படமாகி பெரும் வெற்றி பெற்றது. நாட்டர்டாம் கூனனும் இருமுறை வெற்றிகரமான படங்களாயின. அதேலும் தந்தையைப் போல எழுதுபவன். ஆல்பெர்ட் மீது கொண்ட ஆழ்நத காதலால் வீட்டை விட்டு ஓடி கப்பலில் ஆயிரம் மைல் கடந்து ஹாலிஃப்பாக்ஸை அடைகிறான் அதேல். ஓப்ரியன் என்ற வயதான நல்லுள்ளம் கொண்ட கோச்சுவண்டியோட்டியின் நட்பில் பாக்டர் ஸாண்டர் எனும் வயதான மருத்துவரின் விடுதியில் தங்குகிறாள். எல்லாரிடமும் நேரத்துக்கு ஏற்றாற்போல பொய் சொல்லுகிறாள். ஆல்பெர்டை கண்டுபிடித்து தன் காதலை பலவழியிலும் எடுத்துச் சொல்லி தன்னை மணக்கும்படி மன்றாடியும் அவன் அவளை அறவே நிராகரிக்கிறான். அவன் ஒரு பெண்பித்தன், பல பெண்களோடு உறவு வைத்திருப்பதையும் அவள் ஏற்றுக்கொண்டு தன்னை மணக்க கெஞ்சுகிறாள். அவன் மறுத்துவிட்டு பதவி உயர்வில் எவளோடோ எங்கேயோ போய்விட அதேல் புத்தி பிறழ்ந்து வண்டியோட்டியின் உதவியில் விடுதியில் சேர்கிறாள். அங்கிருந்து புத்திபேதலித்து பார்படோஸ் [BARBADOS] எனும் இடத்திலுள்ள கருப்பு இன மக்களின் குடியிருப்பில் அவளை மீட்டெடுத்து வந்து வைக்கிறார்கள். புத்தி பிறழ்ந்த நிலையிலுள்ள அவனை கவனித்து யார் என்பதை அறிந்து கொண்ட பிரிட்டிஷ் சிப்பாய் ஒருவன் அங்கு தன் உயரதிகாரியான ஆல்பெர்டைக் கண்டு கூறி அழைத்து விடுகிறான். அதேலுக்கு சுயநினைவும் இன்றி ஆல்பெர்டை பாராது போய்விடுகிறாள். கருப்பின மக்களின் அதிகாரி ஒருவர் விவரமறிந்து அவள் தந்தையும் உலகப் புகழ்பெற்றஎழுத்தாளருமான விக்டர் ஹியூகோவுக்கு கடிதமெழுதுகிறார். இதற்குள் நெப்போலியன் மரணமடையவும், ஹியூகோ ஊர் திரும்புகிறார். அதேல் ஊருக்கு அனுப்பப்படுகிறாள். விக்டர் ஹியூகோ 1895-ல் காலமாகிறார். அதன்பிறகு அதேல் 1915-ல் முதல் உலக மகாயுத்தத்தின்போது காலமானாள். இந்த உண்மை நிகழ்வைக் கொண்டு த்ரூஃபோ எடுத்த இப்படத்தில் அதேலாக நடித்த இஸபெல் அட்ஜான் [ISABELLE ADJANI] பிரம்மாதமாக நடித்து சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். இப்படத்தின் வியத்தகு ஒளிப்பதிவை புகழ்பெற்ற காமிரா கலைஞர் நெஸ்டர் அல்மெண்டரோஸ் [NESTOR ALMENDROS] செய்திருக்கிறார்.

நெஸ்டர் அல்மெண்ட்ரோஸின் மிகச் சிறப்பான ஒளிப்பதிவில் 1980-ல் த்ரூஃபா இயக்கிய “கடைசி ரயில்” [LAST METRO] என்ற திரைப்படம் வெளிவந்தது. இரண்டாவது உலகப்போர் பின்னணியில் – பாரிஸ் ஹிட்லரின் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டு யூதர்கள் தேடி வேட்டையாடப்பட்ட நிகழ்வுகளைக் கொண்டு வெளிவந்த பல்வேறு திரைப்படங்களில் லாஸ்ட் மெட்ரோ முக்கியமான திரைப்படம், புகழ்பெற்ற யூத நாடகத் தியேட்டர் குழுவின் சிறந்த இயக்கனர் லூகாஸ் ஸ்டைனர் [LUCAS STIENER] என்பவர் நாஜிகளால் தேடப்படுவதால் தியேட்டரின் ரகசிய பாதாள அறையில் ஒளிந்திருக்கிறார். அவரது மனைவி மரியன் [MARION] தியேட்டரை நிர்வகித்து புதியதாக வந்து சேர்ந்த பெர்னார்டு கிரேஞ்சர் என்பவனைக் கொண்டு தொடர்ந்து நடத்துகிறார். அதே சமயம் நாஜி ஆதரவாளனும் நாடக விமர்சகனுமான ஒருவனின் இடையூரும் சேருகிறது. மிகத்துல்லியமான காட்சி கூறலோடு சிறந்த நடிப்பும் இணைந்து படத்தை சிகரத்துக்கு இட்டுச் செல்லுகிறது. உடை, காட்சி ஜோடனை சூழ்நிலை என சகலமும் அந்த நாட்களுக்கே இட்டுச் செல்லுகின்றன. பெர்னார்டாக ஜெரார்டு டிபார்டியோவும் [GERARD DEPARDIEU] லூகாசாக ஹைன்ஸ் பென்னன்டும் [HEINZ BENNENT] மரியமாக காத்தரின் டெனும் வயும் [CATHERINE DENUEUVE] மிக இயல்பாக நடித்திருக்கும் த்ரூஃபாவின் சிறந்த படங்களில் ஒன்றான லாஸ்ட் மெட்ரோ மிகச்சிறந்த அயல்மொழி திரைப்பட விருதையும் பிரெஞ்சு அகாதமி விருதுகளையும் பெற்றிருப்பதாகும்.

பிரெஞ்சு புதிய அலை சினிமாவின் முக்கிய இயக்குனரும் பெண் திரைப்படக்கலைஞருமான ஆக்னஸ் வார்ததா [AGNES VARDA] பாரிஸில் ஓடும் செய்ன் நதியின் இடப்புறக் கரைப் பகுதியிலிருந்து வந்தவர். பெல்ஜியத்தில் பிறந்து பிரான்ஸில் வளர்ந்த வார்தா 1928-ல் பெல்ஜியத்தில் பிறந்தவர். இவர் சிறந்த தொழில் முறை புகைப்படக் கலை நிபுணர், திரைக்கதை எழுத்தாளரும் கூட, இவரது CLEO FROM 5-9 என்ற திரைப்படமும் (1962) வேகபாண்ட் [VAGABOND] என்ற படமும் [1985] புகழ்பெற்றவை. இவரது தந்தை கிரேக்கர். தாஸ் பிரெஞ்சுக்காரர். ஆகனஸ் வார்தா 2019-ல் தம் 91-வது வயதில் காலமானார்.

வார்தா 1962-ல் செய்த CLEO FROM5-7 என்ற படத்தில் புகழ்பெற்ற பெண் இசைக்கலைஞர் – பாடகி கான்சர் நோய் இருக்குமாவென பரிசோதிக்கச் சென்று பரிசோதனை விடைக்காக காத்திருக்கிறாள். புதிய அலையின் ஒரு கோட்பாடாக கொள்ளப்பட்ட “நேரடியான சினிமா” [DIRECT CINEMA] என்பதற்கு தக்கவாறு வார்தா இப்படத்தை நேரடியான நேரம் காலம் இடம் உத்தேசித்தே படமாக்கியுள்ளார். சாதாரணமான காட்சி நகர்வுகள் புனைகதை சங்கதியை ஆவணப்பட சங்கதியோடு இணைந்து சங்கமித்து, இளம் கதாநாயகியான பாடகி செய்ன் நதியின் இடது கரையில் திரிவதை புதிய ரசனை எழ நம்மை இழுக்கின்றன. அந்தப் பெண்ணின் முக மாறுதல்கள் அற்புதமாக உள்ள ஓட்டத்தைக் காட்டுகின்றன.

க்ளியோ, அன்றைய சமூக அரசியல் சூழலை சிறிதளவே கோடிட்டு காட்டுகிறது. ஒரு மதுக்கடையில் நிகழும் சண்டையையும் தாக்குதலையும் க்ளியோ பார்க்கிறாள். அது சமயம் அல்ஜீரிய போரிலிருந்து விடுப்பில் வந்திருக்கும் சிப்பாய் ஒருவனை அவள் சந்திப்பதும் அந்த சிப்பாய் அல்ஜீரியாவுக்கு திரும்பிப் போக இருப்பதையும் அவள் அறியும் விதத்தில் நமக்கும் தெரிவிக்கிறார் வார்தா.

ஆக்னஸ் வார்தாவின் “திரிந்தலையும் தத்தாரிப்பெண்” [VAGABOND] எனும் படத்தைப் பற்றி பேசுமுன் இதே உணர்வுகளை கொண்டெழுப்பிய கழைய படமொன்றை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. 1956-ல் ரோஜர் வாடிம் [ROGER VADIM] என்ற இயக்குனர் “கடவுள் மேலும் பெண்ணைப் படைத்தார்” [AND GOD CREATED WOMAN] எ்ற பிரெஞ்சு திரைப்படத்தை எடுத்தார். யாருக்கும் எந்த நிறுவனத்துக்கும் கட்டுப்படாது அலைத்து, காம வேகத்தில் ஆண்களோடு உறவு கொண்டாடும் இளம் பெண்ணொருத்தியின் கதைப் படம் இதே தலைப்பில் கதையை மேலும் திருத்தியும் நவீனமாக்கியும் 1987-ல் மீண்டும் AND CREATED WOMAN என்ற படத்தை வேறு நடிகை – நடிகர்களை வைத்து இயக்கி வெளியிட்டார் ரோஜர் வாடிம்.

ஆனால் ஆக்னஸ் வார்தா மிக்க பொறுப்போடு பொறுப்பற்ற இளம்பெண் ஒருத்தியின் கதையை வேகபாண்டில் [VAGABOND] சொல்லுகிறார். இந்தப் படத்திலும் வார்தா உயர்ந்த ஆவணப்பட வகைமையையும் மிகவும் பாரம்பரிய கதை கூறல் சினிமா வகைமையையும் இணைந்ததாக்குகிறார். அதன் காரணம் அவர் அடிப்படையில் ஒரு புகைப்படக் கலைப் பயிற்சி பெற்ற புகைப்படக் கலைஞர் என்பதே.

ஒரு நாள் காலையில் பள்ளத்தில் பணியில் உறைந்து கிடக்கும் இளம்பெண்ணின் உடலைக் கண்டு ஓடிப்போய் பிறரை அழைத்து வருகிறான். போலீசும் வருகிறது. யாருக்கும் சட்டென்று அந்தப் பெண்ணைப் பற்றி தெரியவில்லை. அவள் தங்க ஓரிடமின்றி, வேலை எதுவுமின்றி கிடைத்ததைத் தின்று கொட்டைகையில் உறங்கி ஆண்களோடு சேர்ந்து ஒரு தத்தாரியான பெண்ணாக திரிந்து வந்ததை ஒவ்வொருவராக விசாரிக்க விசாரிக்க தெரிய வருகிறது. இத் தருணங்களில் வார்தாவின் குரலிலேயே விவரணை பேசப்படுகிறது. பிறகு ஒவ்வொரு ஆளாக நேர்காணலாகி, காட்சிகள் பின்னோக்கி நகர்த்தப்படுகையில் அந்தப் பெண்ணின் பெயர் மோனா பெர்ஜரோன் [MONABERGERON] என்பது அறிய வருகிறது. அப்படியும் இப்படியுமாய் கொஞ்சமே அவளைப் பற்றி தகவல் கிடைக்கிறது. அந்த விதமாகவே படத்தின் FLASH BACK காட்சிகளும் அமைந்துள்ளன. நமது அன்றாட வாழ்நாளில் தாம் சந்திக்கும் எவ்வளவோ ஆண் பெண்களை நாம் கவனித்து எடுத்துக்கொள்ளும் விதமும் இப்படித்தான். ஒரு வகையில் அதைத்தான் வார்தாவும் சொல்லுகிறார் போலும். மோனா ஒவ்வொரு இடமாய் நாய் போல சற்றுவது, உணவு, இடம் கிடைத்தால் அவற்றைப் பெற்றுக் கொண்டதற்கான எவ்வித நன்றியுணர்வும் காட்டாதவள். அவள் உடலில் எவ்வித தாக்குதலுக்கான காலமுமில்லை இரவில் தவறி பள்ளத்தில் விழுந்து மோதி அடிபட்டு இறந்திருக்கவேண்டும் என்று தீர்மானிக்கப்படுகிறது. மோனாவாக சாண்ட்ரின் பொன்னேர் [SANDRINE BONNAIRE] எனும் இளம் நடிகை – பரவாயில்லை – நடித்திருக்கிறார்.

பிரெஞ்சு சினிமா நிறைவுறுகிறது.

நூல் அறிமுகம்: ச.சுப்பாராவின் சில இடங்கள்… சில புத்தகங்கள்… – இரா.சண்முகசாமி

நூல் அறிமுகம்: ச.சுப்பாராவின் சில இடங்கள்… சில புத்தகங்கள்… – இரா.சண்முகசாமி




நூல் : சில இடங்கள்… சில புத்தகங்கள்…
ஆசிரியர் : ச. சுப்பாராவ்
விலை : ரூ. 140/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

சிறந்த சிறுகதை எழுத்தாளரும் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பல விருதுகளை பெற்றவருமான நமது அருமைத்தோழர் சா.சுப்பாராவ் அவர்கள் தன்னுடைய மகளும், மருமகனும் வேலை காரணமாக ஓராண்டு ஐரோப்பாவில் தங்கியிருக்கும் பொழுது, நமது எழுத்தாளருக்கு வெளிநாடு செல்ல அழைப்பு வந்து புறப்பட்டுச் சென்றார். அப்படி அவர் சென்ற பொழுது ரோட்டர்டாமில் தங்கியிருந்து பல முக்கிய இடங்களை கண்டுணர்ந்தார். அவர் பார்த்தது மட்டுமல்லாமல் நம்மிடமும் பகிர்ந்தும் கொள்கிறார். ஆஹா என்ன அற்புதமான பயண அனுபவம்!

35 ஆண்டு காலமாக ஆங்கில புத்தகங்கள் மூலம் பார்த்த ஐரோப்பாவை, அது எந்த முக்கியமான நகரமாக இருந்தாலும் அதை களமாக வைத்து எழுதப்பட்ட ஒரு புத்தகம் அவர் மனதில் வந்து போனதாக நம்மிடையே பகிர்கிறார். அவர் பார்த்த சில இடங்களைப் பற்றி உங்களோடு…

ஐரோப்பாவில் தன் மகள் வாழும் நெதர்லாந்து ரோட்டர்டாமில் ஆசிரியர் தன் பயணத்தை தொடங்குகிறார். மக்கள் பெரும்பாலும் மிதிவண்டிகளிலேயே பயணம் செய்கின்றனர். இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரின் நாஜிப் படை இரண்டு மணி நேரத்தில் 86 ஆயிரம் மக்களை கொன்றொழித்த கொடுமையான வரலாற்றை ஆசிரியர் குறிப்பிடுகிறார். அந்நகரம் மீண்டும் புத்துணர்ச்சியோடு நிர்மாணிக்கப்படுகிறது. அங்குள்ள வீடுகள் மிகவும் வித்தியாசமாக உள்ளது. ‘கியூப் வீடு’ என்று யூட்யூபில் பதிந்தால் அருமையான வீடுகளை நாம் காணலாம். ஆச்சரியம் என்னவென்றால் அங்க மருந்து கடைகளே இல்லையாம்! மருத்துவமனை கூட அரசு மருத்துவமனை மட்டுமே. நம்ம ஊர்ல தலைவலிக்கு, காய்ச்சலுக்கு என ஓடிப்போய் மெடிக்கலில் மாத்திரை வாங்கி சாப்பிடுவோம். ஆனால் அந்த மாதிரி எதுவும் அங்கே கிடையாதுங்க. எதுக்கெடுத்தாலும் அங்கு ஆஸ்பத்திரிக்கு ஓடற நிலைமையும் இல்லை. சளி, ஜலதோஷம் அப்படின்னு மருத்துவமனைக்கு போனா ‘அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க சரியாயிடும் போயிட்டு வாங்க’ என்று மருத்துவர்கள் திருப்பி அனுப்பி விடுவார்களாம். இன்னும் நிறைய இருக்குங்க. இரண்டு நதிகளுக்கு இடையில் இருக்கிற கிண்டர்டையக். அப்பப்பா நிறைய இருக்கு. இதையெல்லாம் எழுதி முடிக்க நான் ஒரு புத்தகம் தனியாக போடணும் போல.

அடுத்ததாக வான்கோ வாழ்ந்து துன்புற்ற இடமான ஹேக் அதாங்க சர்வதேச நீதிமன்றத்திற்கு தான் ஆசிரியர் செல்கிறார். உள்ளே செல்ல அனுமதி இல்லை. அருமையான அருங்காட்சியகம் இருக்கிறது. அங்கேயும் ஒரு மரம். நம்ம கந்தசாமி படத்தில் வருவது போல துண்டு சீட்டுகள் அட்டைகள் தொங்குகின்றன. நம்ம ஆசிரியரும் ‘உலகினை அழித்துவிடும் யுத்தமே வேண்டாம் வேண்டும் சமாதானம் என்றும் வேண்டும் சமாதானம்’ எழுதி மரத்தில் கட்டி வைத்தார். அந்த மரத்தில் தமிழில் எழுதிய ஒரே ஒருத்தர் அவர் நம்ம தோழராத்தான் இருக்கும். அடுத்ததாக உலகை வலம் வந்த கம்யூனிஸ்ட் அறிக்கை பிறந்த இடத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறார். ஆம் காரல் மார்க்ஸ் பாரிஸிலிருந்து நாடு கடத்தப்பட்டு அவர் வந்து சேர்ந்த இடம் தான் பெல்ஜியத்தின் தலைநகர் பிரஸ்ஸலஸ். ‘உலகத் தொழிலாளர்களே! ஒன்று கூடுங்கள்! என்று எழுதிய மாமேதையின் இடத்தை பார்க்க வருகிறார். ஆனால் அந்த சசுவான் ரெஸ்டாரண்ட் இடம் இப்போது ஒரு தனியார் உணவு விடுதியாக மாற்றப்பட்டதால் அங்கே மார்க்ஸ் இருந்த அடையாளமாய் அன்னப்பறவை சிலையைக் கண்டு ஆனந்தமாகி அந்த விடுதியின் முன்பு புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார். மக்களின் வரலாற்றை யாரேனும் ஒருவர் புதுப்பிப்பார் என்கிற உணர்வு ஏற்பட்டது தோழர்களே. இப்படியாக வான்கோ மற்றும் பல்வேறு வரலாற்றுத் தரவுகளை சலிப்பில்லாமல் மிகவும் அருமையாக தரவுகளை வாரி வழங்கியபடியே பயணம் செய்கிறார். வான்கோவின் ஓவியங்கள் உலகப் பிரசித்தி பெற்றவை. அவருடைய வாழ்வும் மிகவும் துயரம் நிறைந்தது. தன்னுடைய சகோதரன் அனுப்பும் தொகை மட்டுமே வான்கோவுக்கு உயிர்நாடி. அப்படி துன்பப்பட்டவர்தான் உலக அதிசயங்களை அள்ளி வழங்கினார்.

அடுத்ததாக பாரிசுக்கு பயணம் செய்கிறார். எந்த நகரத்துக்குச் சென்றாலும் அந்த நகரத்தை பற்றிய ஒரு நூலை நமக்கு அறிமுகப்படுத்திக் கொண்டே செல்கிறார். அப்படித்தான் ஈபிள் டவருக்குச் சென்றார். இரண்டாம் உலகப்போரில் ‘பாரிஸ் என்னும் நகரமே இருக்கக்கூடாது அதை அழித்து விடு’ என்று ஹிட்லர் கூறியபோது, கோல்டிஸ்ட் அப்படி செய்யாமல் விட்டு விடுகிறார் என்கிற செய்தி வியப்பைத் தருகிறது.

கோபுரத்தின் உச்சிக்கு கூட உணவு பொருள் எடுத்து செல்லலாம் என்பது வியப்பை தருகிறது. நம்மூர்ல இதெல்லாம் எப்போது சாத்தியமோ. நாஜிக்களிடமிருந்து பாரிஸை காப்பாற்றுவதற்காக 18 முதல் 50 வயது வரையிலான அத்தனை பேரும் நாட்டர்டாம் தேவாலயம் முன்பு கூடி போலீஸ் தலைமையகத்தைக் கைப்பற்றிய காட்சியை லாரி காலின்ஸூம், டொமினிக் லாப்பியரும் அவ்வளவு நுணுக்கமாக விவரித்த விஷயத்தை நம் ஆசிரியர் மிக அழகாக குறிப்பிடுகிறார்.

அடுத்து லூவர் அருங்காட்சியகத்தில் நம்மை அழைத்துச் செல்கிறார். இந்த ஒரு நாவல் டான் பிரவுன் எழுதிய ‘டாவின்சி கோட்’ மோனலிசா பற்றிய நூல். என்ன ஒரு எழுத்தாளர் எப்படித்தான் இதெல்லாம் படிச்சிருக்காரோ தெரியல. அப்பப்பா அருங்காட்சியகத்தை பாக்கணும்னா பயங்கர பிரம்மாண்டம்! மூன்று ஈபில் டவர் கோபுரங்கள் ஒன்றாக படுக்க வைத்திருக்கும் அளவு தூரம் 46,000 கலைப் பொக்கிஷம். மோனலிசா பற்றிய செய்திகள் நிறைய தெரிஞ்சிக்கலாம். மோனலிசா ஓவியம் ஆயிரத்து பதினொன்றில் திருடு போய் இருக்கு. அதிலிருந்து அதை காப்பாற்றுவதற்கு, அவ்வளவு பாதுகாப்பு போட்டு இருக்காங்க. இரண்டாம் உலகப் போரின் போது அந்த மோனலிசா ஓவியத்தை காப்பாற்றுவதற்கு பல திட்டம் போட்டிருக்கிறார்கள். 10 லட்சம் மணல் மூட்டை கட்டி காப்பாற்றியிருக்கிறார்கள் என்றால் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள் என்று தெரிய வருகிறது. டான் பிரவுன் ஓவியங்கள் அனைத்தும் 95 லாரிகளில் வெளியூருக்கு அனுப்பி இருக்கிறார்கள். மோனலிசா மட்டும் அங்கேயே தனியே ஒரு ரகசியமான இடத்தில் வைத்திருக்கிறார்கள். 1939 லிருந்து 1945 வரைக்கும் லூவர் அருங்காட்சியகத்தில் காப்பாற்றுவதற்கு அவ்வளவு சிரமப்பட்டு இருக்கிறார்கள்.

அவர் போன இடத்தை எல்லாத்தையும் குறிப்பிடலாம் என்றால் அவர் மாதிரியான ஒரு புத்தகத்தை எழுதினால் தான் சரியாக இருக்கும். ஆனால் கண்டிப்பா யாரும் படிக்க மாட்டீங்க. அதனால அவர் எழுதிய இந்நூலில் முழுவதும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.

இரண்டாம் உலகப்போர் நெதர்லாந்து ‘ஆஸ்ட்விட்ச் சர்வைவல் இன் ஆப் சுவிட்ச்’ என்கிற கொடுமையை பற்றிய எழுதிய நூல் மிகவும் புகழ்பெற்றது கண்கலங்காமல் யாராலும் படிக்க முடியாது. முகாமில் காலையில் ஆட்களைக் எண்ணுவார்கள். ஒருவர் குறைந்தால் கூட பத்து பேரை சுட்டுக் கொள்வார்கள். முகாமில் கைதிகளே யாராவது தப்பித்து போனாலும் மற்றவர்கள் தப்பிக்காமல் பார்த்துக்கொள்வார்கள். கொடுமைகள் ஏராளம். சாகப்போகிற ஒருவர் தனக்கான குழியை தானே வெட்டிக் கொள்ள வேண்டும். குழி வெட்டிய பின்பு குழியின் மூளையில் நிற்க வேண்டும். நாஜி துப்பாக்கியால் சுடுவான் அப்படியே குழிக்குள் விழ வேண்டும் தள்ளுவதற்கு வேலை மிச்சமாம்.
பசிக்கு சூப்பு கொடுப்பானுங்க. அத குடிச்ச பின்னாடி தெரியும் அது இறந்தவர்களுடைய உறுப்புதான் அதில் கிடக்கிறது என்று. குடித்தவர்கள் அப்படியே வாந்தி எடுப்பார்கள். எவ்வளவு கொடுமையான நாஜிக்கள். சோவியத் வீரர்கள் வந்து காப்பாற்றும் வரை இதுதான் நிலைமை. இன்னும் நிறைய கொடுமைகளையும் நூல்களை வாசிப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம் தோழர்களே.

இறுதியாக ஆம்ஸ்டர்டாம் செல்கிறார் ஆசிரியர். ‘ஆசிரியர் குடும்பத்தோட வா செல்கிறார்?’ என்று கேலியாக பேச்சு வரும். ஏனெனில் அங்கு இரவு விடுதி புகழ் பெற்றது. ஆனால் நமது ஆசிரியரோ பார்க்கச் சென்றது வேறு ஒன்றை. ஆம் வான்கோ, ஆன் பிராங்க் நடந்த, உலாவிய ஆம்ஸ்டர்டாம் வீதியில் தான் பேராசிரியரும் நடந்தார். மிகப்பெரிய அருங்காட்சியகம்! அப்பப்பா மிகவும் பிரமிப்பான அருங்காட்சியகம்! வான்கோவினுடைய கையெழுத்து கடிதத்தைக் கண்ட ஆசிரியர் மொழி தெரியாவிட்டாலும் கண்கலங்கினார். ஆன் ஃபிராங்க் குடும்பம் நாஜி படையினரிடம் இருந்து தப்பிக்க தன் அப்பா பணிபுரியும் நிறுவனத்தில் ஒரு புத்தக அலமாரிக்கு பின்புறம் ரகசியமாக சிறு வீடு கட்டி மறைவாக வாழ்ந்து வந்தனர். சிலரின் நம்பிக்கைத் துரோகத்தால் காட்டிக் கொடுக்கப்பட்ட அவர்கள் கைது செய்யப்பட்டு கொடுமைக்கு ஆளாகினர். ஆன் பிராங்க் சிறையில் கொடும் நோயில் இறந்துவிட, அவர் தந்தையார் மட்டும் பிழைக்க பிறகு ஆன் அவர்கள் இளம் வயதில் நாஜி கொடுமைகளை தனது டைரியில் எழுதி வைத்த குறிப்புகளை கொண்டு அவற்றை நூலாக வெளியிட்டார். சிறிய வயதில் மிகவும் அபாரமான திறமை கொண்டவராக திகழ்ந்துள்ளார் ஆன். அப்படி அவர்கள் வாழ்ந்த இந்த மறைவான இடம் தான் தற்போது அருங்காட்சியமாக உள்ளது. பார்வையிட வருபவர்கள் அந்த அலமாரியை விலக்கி உள்ளே சென்று பார்ப்பது போன்று பழைய நடைமுறையில் இன்னும் இருப்பது சிறப்பு.

அப்பப்பா ஆசிரியரின் வாசிப்பு எவ்வளவு தூரம் அவரை இழுத்துச் சென்றிருக்கிறது என்பதை பார்க்கும் பொழுது நமக்கெல்லாம் அந்த வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமே! ஆனால் மனிதராகப் பிறந்தவர்கள் ராகுல சாங்கிருத்தியாயன் சொல்வதுபோல் ஊர்சுற்றிப் புராணமாக நாம் உலகை வலம் வர வேண்டும். நிறைய பொக்கிஷங்களை கொண்டுள்ள பூமியின் ஓவியத்தைக் கண்டு உணர்வதற்காக அவசியம் உலகை வலம் வர வேண்டும். அதற்கு வாசிப்பு மிக மிக அவசியம். அப்படி உலகை வாசித்து நமக்கு அளித்த எழுத்தாளர் தோழர் சா. சுப்பாராவ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியினையும், நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்!

நான் உங்களிடம் சொன்னது தம்மாத்தூண்டு. ஆனால் அறிய தகவல் களஞ்சியங்கள், புகைப்படக் காட்சிகள் இந்நூலில் நிறைய கொட்டிக்கிறது!
வாசியுங்கள் தோழர்களே!

வாசிப்போம்!
உலகை நேசிப்போம்!!

தோழமையுடன்
இரா.சண்முகசாமி 
புதுச்சேரி.

வில்லியம் ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜுலியட் நாடகம் (காட்சி 1) : தமிழில் – தங்கேஸ்

வில்லியம் ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜுலியட் நாடகம் (காட்சி 1) : தமிழில் – தங்கேஸ்



ரோமியோ , ஜூலியட் நாடகம்
காட்சி 1 

இடம் : வெரேனா வீதி
பொழுது – பகல்
பாத்திரங்கள்
கேபுலட் கேபுலட்டின் உறவினன் பாரிஸ்
மற்றும் கேபுலட்டின் வேலைக்காரன் பீட்டர்
மற்றும் ரோமியோ பென் வாலியோ

( முதிய கேபுலட்டும் அவரது வருங்கால மருமகன் பாரிசும் வீதியில் பேசிக்கொண்டே
நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள். கேபுலட்டின் வேலைக்காரன் பீட்டர் )

கேபுலட் :
நான் ஏற்றுக்கொண்ட உறுதிமொழியைத் தானே
மாண்டேக்கும் ஏற்றுக்கொண்டுள்ளான்.

அதை மீறுவானாகில் அவனுக்கும் அதே தண்டனை தானே.

என்னைப் போன்ற முதியவனான மாண்டேக்கிற்கு
அமைதியை காப்பது அத்தனை கடினமல்ல என்று தான் தோன்றுகிறது

பாரிஸ் :
நீங்கள் இருவருமே சம அந்தஸ்து உடையவர்கள் .
ஆனால் காலத்தின் கோலம் ஒருவருக்கொருவர் எதிரியாக இருக்கிறீர்கள்.

ஆனால் அது இருக்கட்டும் என்னுடைய கோரிக்கைக்கு
நீங்கள் எந்த பதிலும் சொல்லவில்லையே ?

கேபுலட் :
நான் ஏற்கனவே உன்னிடம் சொன்னதை தான் இப்பொழுதும் சொல்கிறேன்.

என் மகள் இன்னும் பதினான்கு வயது கூட நிரம்பாத பெண் குழந்தை.

இன்னும் கூட இளமையை முழுமையாக எட்டாத இளம் பெண் அவள்.
இன்னும் இரண்டு கோடை காலங்கள் உருண்டோடினால் காலம் கனிந்து விடும்

அவளும் உனக்கேற்ற மணப் பெண்ணாக மலர்ந்திருப்பாள்

பாரிஸ் :

உங்கள் மகளை விட இளைய பெண்களெல்லாம் மணமுடித்து
இப்பொழுது தாயாக இருக்கிறார்கள் அல்லவா ?

கேபுலட் :

மிக விரைவாகத் திருமணம் செய்து கொள்ளும் பெண்கள்
விரைவிலேயே முதுமையை எட்டுகிறார்கள்

எனக்குப் பிறந்த குழந்தைகளில் இவளைத் தவிர
மற்ற குழந்தைகள் எல்லாம் இப்போது மண்ணுக்குள் உறங்குகிறார்கள்

அதனால் எனது எல்லா நம்பிக்கைகளையும்
அவள் மீதுதான் ஏற்றி வைத்திருக்கிறேன்.

பாரிஸ் நீ உன் அன்பை அவளிடம் வெளிப்படுத்து

அவளது இதயத்தில் இடம் பிடி

அவளது காதலை நீ பெற்று விட்டால்
அவளை மணமுடிப்பதற்கு எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை

என்னுடைய ஆசீர்வாதம் எப்போதுமே உனக்குக் கிடைக்கும்

ஆனால் இளைஞனே கவனித்துக் கொள் !
அவள் உன்னை மணந்து கொள்ளச் சம்மதிக்க வேண்டும்.

அதன் பின் எனது வாழ்த்துக்கள் என்றுமே உனக்கு

இன்று இரவு என் வீட்டில் நான் ஒரு விருந்தளிக்கப் போகிறேன்.

அது வருடா வருடம் எப்போதும் நடப்பது தான்.

அந்த விருந்திற்கு நிறைய விருந்தினர்களையும்
நண்பர்களையும் நான் அழைத்திருக்கிறேன்.

ஆனாலும் இன்று என் இனிய சிறப்பு விருந்தினன் நீ தான்
உன்னை அன்போடு அந்த விருந்துக்கு அழைக்கிறேன் .

இன்று என் எளிய இல்லத்தில்
வானில் இருந்து இறங்கி வந்த நட்சத்திரங்களைப் போல
ஏராளமான இளம் பெண்களை நீ காணலாம்

அவர்கள் மண்ணில் தான் நடப்பார்கள்
ஆனால் விண்ணை ஒளி வீசச் செய்வார்கள்

ஆவல் அதிகம் கொண்ட எல்லா இளைஞர்களையும் போலவே
நீயும் அவர்களின் அருகாமையில் ஆனந்தத்தைக் காண்பாய்

ஏனென்றால் நீ அங்கே காணப்போவது
வசந்த காலத்தில் பூத்துக் குலுங்கும் அழகிய மலர்களை

அந்தக் கன்னி மலர்களையெல்லாம்
நீ கண்டு
உனக்கு உரியதாக ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்

அத்தனை கன்னியரையும் உன் கண்கள் காணும் போது
என் மகள் தான் அழகு என்ற எண்ணமே உனக்கு அங்கே எழாது.
வா செல்வோம்

( பணியாள் பீட்டரிடம் திரும்பி
அவனிடம் விருந்தினர்களின் பெயர்கள் எழுதப்பட்ட ஒரு காகிதத்தைத் தந்த படி

உத்தரவிடும் குரலில் )

வெரோனா நகரம் முழுவதும் சென்று வா
இந்தப் பட்டியலில் இருக்கும் அனைத்து விருந்தினர்களையும்
இன்றிரவு என் வீட்டில் நடக்கும் விருந்துக்கு நீ அழைத்து வரவேண்டும்

( கேபுலட் பாரிஸ் இருவரும் மறைகிறார்கள் )

தமிழாக்கம் : தங்கேஸ்
(தொடரும்)

நூல் அறிமுகம்: ச. சுப்பாராவின்  சில இடங்கள்… சில புத்தகங்கள்… – சிந்துஜா சுந்தரராஜ்

நூல் அறிமுகம்: ச. சுப்பாராவின் சில இடங்கள்… சில புத்தகங்கள்… – சிந்துஜா சுந்தரராஜ்



நூல்: சில இடங்கள்… சில புத்தகங்கள்…
ஆசிரியர்: ச. சுப்பாராவ்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: 140
தொடர்பு எண்; 044 24332924
புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்யவும் : thamizhbooks.com

பயணம் என்ன செய்யும் மாற்றத்தை நம்முள் நிகழ்த்தும். நேற்று தான் தோழர். சுப்பாராவ் எழுதிய ” சில இடங்களும் சில புத்தகங்கள் ” என்ற நூலை படித்து முடித்தேன். சிறு வயது முதலே ஐரோப்பிய நாடுகள் மீது ஓரு அதீத ஈர்ப்பு. அதற்கு காரணம் ஐரோப்பியர்கள் கலை,இலக்கியத்தில் பெரும் பங்கு ஆற்றிய வர்கள் என்பதாலோ என்னவோ. எங்கள் உறவினர்களில் சிலர் பிரான்ஸ் இருக்கின்றனர். அவர்களுடன் பேசும் போது எல்லாம் ஓரு முறை ஐரோப்பிய நாடுகள் சென்று அப்படி என்ன இருக்கும் என்று நினைத்து உண்டு. அதன் பின் பணி நிமித்தமாவது மட்டுமாட்சி போகலாம் என்று நினைத்தேன. அதற்கு பின் நான் எடுத்த படித்து வேலை பார்த்தது  வேறு  எதுவோ…பாரிஸ்  மேற்கத்திய ஆடை வடிவ உலகத்தின் ஜாம்பவான். ஆகையால் பேஷன் துறையை எடுக்க  வேண்டும் என்று நினைத்தேன். இங்கு பாண்டிச்சேரியில் பலர் இரட்டை குடியுரிமை உள்ள குடும்பங்கள் உள்ளது. ஏன் எங்கள் வீட்டில் எங்கள் பாட்டிக்கும் கூட இரட்டை குடியுரிமை உள்ளது என்பதே பின் நாட்களில் தான் தெரியும். பிரான்ஸ் பற்றி கேட்க கூடவே ஓட்டிக்கொண்டது போன்று வரும்  அதன் இலக்கியமும், அழகியலும், சுதந்திரமான நாடு என்றும். ஆகையால் நிறைய பிரஞ்சு படங்களை பார்த்திருக்கிறேன். அவற்றில் மிட்நைட் இன் பாரிஸ், ரோடு டு பாரிஸ், விவி டடூர், பிரஞ்சு கிஸ் போன்ற படங்களின் வழி ரசித்து இருக்கிறேன்.அதே போன்று இலக்கியங்களிலும் கலையும்  கைதேர்ந்த கலைஞர்ள்  நிரம்பிய  ஊர், ஈபிள்

கோபுரம்,,  ஷேக்ஸ்பியர் புத்தக கடை,  மார்கஸ் வாழ்ந்த Rue Vanue,, venice ,, கம்யூனிஸ்ட்டு கட்சி அறிக்கை  பிறந்த இடம் இவையெல்லாம் ஒரு பக்கம். மற்றொரு  பக்கம் அவர்களின் வாழ்க்கை சௌகரியம.இவற்றை எல்லாம் டேவிட் லேபோ எழுதிய நூலான The Sweet Life in Paris ஓரு  பகுதியை   உணர முடிகிறது. ஆனால் நம்  ஊராகாரர்  நாம் பார்க்கும் பார்வையில் எழுதுவது ஆலாதி சுகம் தான். அதிலும் புளியோதரையுடன் உங்களுடனே நானும் கூடவே  ஈபிள் டவர், காலோஷியம்,பைசா கோபுரம் வந்து கடைசியாக வால்காவின் ஓவியத்தை ரசித்துப், அனா பிரங்கின் துயரத்தையும்  அறிய முடிந்தது. புத்தகத்தில் வரும் புத்தகத்தை எல்லாம் படிக்க முடியவில்லை யென்றாலும் சிலவற்றை குறித்து வைத்திருக்கிறேன் படிக்கலாம் என்று. அடுத்த முறை ஓரு வேலை போக வாய்ப்பு இருப்பின் நான் போனவற்றையும் சேர்த்து பேசலாம் தோழர்.  உங்களின் இப்புத்தகத்திற்கு என் நன்றியும் அன்பும்