தனித்து ஒரேயொரு நிருபராக பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அனுபவம் : ஏ.எம்.ஜிகீஸ் – தமிழில்: தா.சந்திரகுரு
பாஜக வின் ச.ம.உ. சந்தை கட்டுரை – அ.பாக்கியம்
சந்தை மடம் ஆளுநர் மாளிகை:
சரக்குகளின் வகைகளுக்கு ஏற்ற முறையில் பல சந்தைகள் உள்ளது.
அப்படி ஒரு சந்தையாக பாஜக ச.ம.உ. களை வாங்க ஒரு சந்தையை உருவாக்கி உள்ளது.
மக்களிடம் வசூலிக்கும் வரிகளை எல்லாம் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கொடுத்து முதலாளிகள் மூலம் பணத்தைப் பெற்று ச.ம.உ.சந்தைக்கு பல்லாயிரம் கோடி முதலீடு செய்து வருகின்றனர்.
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவு 277 ச.ம.உ. களை வாங்கி உள்ளார்கள்.
கடந்த சில ஆண்டுகள் மட்டும் 6,300 கோடி ரூபாய் ச.ம. உ. க்களை வாங்குவதற்கு செலவு செய்துள்ளார்கள்.
கர்நாடகாவில், கோவா, மத்திய பிரதேசம், அருணாச்சல பிரதேசம், மேகாலயா, குஜராத் என பல மாநிலங்களில் விலை கொடுத்து வாங்கி ஆட்சியைப் பிடித்துள்ளார்கள்.
தெலுங்கானாவில் டி ஆர் எஸ் கட்சியின் ஒருச.ம.உ. விற்கு 100 கோடி ரூபாய் வரை விலை பேசி உள்ளனர்.
பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியின் ச.ம.உ. களை வாங்குவதற்கு 25 கோடி ரூபாய் வரை பேரம் பேசி, அதிக எம்எல்ஏக்களை சந்தைக்கு கொண்டு வந்தால் 75 கோடி ரூபாய் வரை கொடுக்கப்படும் என்று விலை பேசி உள்ளனர்.
டெல்லியில் ஆம் ஆத்மி ச.ம.உ. களை வாங்குவதற்கு 800 கோடி வரை பேரம் பேசியுள்ளனர்.
ராஜஸ்தானிலும் ராஜேஷ் பைலட் மூலம் ச.ம.உ. களை வாங்க சந்தைக்கு அழைத்து உள்ளனர் .
இந்தியாவில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களை இதுவரை ஒரு சிலர் கட்சி மாறுவது கட்சி தாவுவது சில சலுகைகளை வாங்குவது என்ற நிலையை மாற்றி மக்களின் ஆதரவோடு என்றைக்கும் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டவுடன் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற வெறித்தனத்தோடு ச.ம.உ. களை வாங்கும் சந்தையை பகிரங்கமாகத் தெரிந்து உள்ளனர்.
இந்தியாவின் ஜனநாயகத்தின் அடிப்படை அமைப்பான மக்களின் அதிகாரத்தை உடைத்தெரியும் முயற்சியாகும். சந்தை மடமாக ஆளுநர் மாளிகை செயல்படுகிறது.
– அ.பாக்கியம்
கவிதை தமிழனின் கவிதைகள்
உழைப்பின் உயர்வை
உலகிற்கு உணர்த்தும்
உன்னதப் பேரினமே….!
உலகே வியந்து
உமக்காய் தந்தது,
இன்றைய மே தினமே….!
வியர்வை துளிகளின்
விலையை அறிந்தோர்
உமைபோல் எவருமில்லை…!
நேரம், நேர்மை
இரண்டையும் உணர்ந்தோர்
நீயின்றி எவருமில்லை…!
உடலை வருத்தி
ஓய்வை மறந்து
இயங்கும் உயர்பிறப்பே…!
உலகம் சுழல
உறவுகள் மகிழ
உழைக்கும் எம்மக்களே…!
உழையுங்கள் உயருங்கள்
உறவோடு மகிழுங்கள்….!
மேன்மைமிக்க உங்களுக்கு
மே தின வாழ்த்துக்கள்…!
**********************************************************
கல்லூரி வாழ்கைபோல இருந்ததில்லை எங்கும்…..!
கரையாத நினைவுகள் நெஞ்சின் ஓரமாய் தங்கும்….!
அரட்டைகள் அடித்துவிட்டு
நள்ளிரவே தூங்கும்….!
தருணங்கள் மீண்டும்வருமா என்றுமனம் ஏங்கும்….!
அதுபோல ஓர்நாளை
எதிர்நோக்கி காத்திருந்தேன்….!
ஆனாலும் இதுவரையில்
ஈடேற மறுக்கிறதே…..!
எங்கெங்கோ பிறந்திருந்தோம்,
நாமங்கே இணைந்திருந்தோம்…..!
நட்பென்ற ஓர்மொழியால்,
நகம்சதைபோல் பிணைந்திருந்தோம்…..!
அந்தநான்கு வருடங்கள்,
நினைவில்நீங்கா நிமிடங்கள்….!
இடையிடையே திருப்பங்கள்,
ஈடில்லா சொந்தங்கள்….!
எதிர்பாலின ஈர்ப்பியலால்,
மலர்ந்திருந்த காதல்கள்…..!
எதிர்கால இலக்கறியாது
கடந்துவிட்ட காலங்கள்…..!
எதிர்கால சிந்தனையில்லை,.
எதைப்பற்றியும் கவலையுமில்லை….!
குடும்பச்சுமை முதுகில்இல்லை,
கொடுத்துவைத்த வாழ்க்கையிதுவோ…!
பையில்பெரும் பணமுமில்லை,
எம்தலையில் கணமுமில்லை…..!
எதிர்கொண்ட இன்பமதற்கோ,
எல்லையும் இல்லவே இல்லை….!
************************************
மெய்போல பொய்யையும்
பாரெங்கும் பரப்பும்…!
ஒருபடத்தை பலகுழுவில்
பதிவிட்டு வருத்தும்…!
இவனாலே இளம்விழிகள்
இரவெங்கும் விழிக்கும்…!
நேரத்தின் மாண்பினையும்
நேர்த்தியாக அழிக்கும்…!
அப்டேட் செய்யச்சொல்லி
அவ்வப்போது வதைக்கும்…!
ஆண்ட்ராய்டு போன்களின்
ஆயுளையும் குறைக்கும்…!
நாம்தொலைத்த உறவுகளை
எளிதாக இணைக்கும்…!
நாள்முழுக்க நம்மோடு
பயணிக்க துடிக்கும்…!
காலத்தை விரயமாக்கும்
சதிகாரன் கண்டுபிடிப்பு…!
நண்பர்கள் கைகோர்க்கும்
அறிவியலின் அன்பளிப்பு…!
ஆயிரமாயிரம் தகவல்களின்
ஒட்டுமொத்த அணிவகுப்பு…!
அவ்வப்போது சலசலப்பு
அளவற்ற கலகலப்பு – அட
அதுதாங்க நம்ம வாட்ஸ்அப்பு…!
***************************************
ஆண்டவன் நேரில் வந்திட மாட்டான்…!
அதனால் அன்னையை அனுப்பிவைத்தான்.!
ஆனால் அவளோ,கடவுளை விஞ்சி
அன்பை பகிர்ந்தே, உயர்ந்து நின்றாள்..!
கேட்டது யாவையும், எம்மத இறைவனும்
உடனடியாகத் தருவதும் இல்லை..!
கேட்காமலே தந்திடுவாளே அவள் போல்
உலகில் எவருமே இல்லை…!
பிள்ளையின் சிறு வெற்றியைக்கூட,
சாதனை போலவள் மெச்சிடுவாளே….!
உதட்டில் நாளும் உச்சரித்தே
ஊரார் முன்பவள் உளமகிழ்வாளே…!
பிழையாய் அவளை ஒதுக்கி வைத்தாலும்
பிள்ளைகள் நம்மை வெறுத்திட மாட்டாள்…!
அன்பை நாமும் தர மறுத்தாலும்
அன்னை அவளோ, ஒதுங்கிட மாட்டாள்…!
கள்ளங் கபடம், இல்லா அன்பை
கடவுளர் கூட காட்டுவதில்லை..!
காசு கொடுத்த மாந்தருக்கே
கருவறை வரையில் தரிசனம் தருவார்…!
முந்நூறு நாட்கள் நம்மை சுமந்து
கருவறை தன்னில் இடமும் தந்து
வாழ்கிற வரையில், நம்மை நினைந்து
வீழ்கிற உயிரை, மறந்திடலாமா…!
அவள்செய்த தியாகத்திற்கு தந்திட ஈடாய்
அவனி முழுவதும் போதாது, உணர்வாய்..!
குருதியை பாலாய், கொடுத்தவள் அறிவாய்…!
தாயென்னும் இறைவியை நித்தம் தொழுவாய்…!
*****************************************************
எளியோர்க்கும் புரியும்படி
எழுதி வைப்பது
எளியநடையில் தமிழ்ச்சொற்களை
தொகுத்து அமைப்பது
வந்துவிழும் வார்த்தைகளை
அடுக்கி வைப்பது….!
வரிமுழுதும் எதுகை,மோனை
அமைத்து வைப்பது…!
கனவுகளை நடுநடுவே
திணித்து வைப்பது…!
கற்பனைகளை கண்முன்னே
விரிய வைப்பது…!
கவிதைபற்றி இதற்குமேலே
என்ன சொல்வது..?
மொத்தத்தில் அதன்பணியோ
மனதை வெல்வது…!
*****************************
அண்ணா…
நாடாளும் மன்றத்தினை
நாவாலே வென்றவனே…! தமிழ்நாடென பெயர்சூட்டிய
தன்மானத் தமிழ்மகனே…!
விந்திய மலைதாண்டி
இந்திக்கு வேலையில்லை…!
திராவிட இனம்போல
திராணிகொண்டோர் எவருமில்லை…!
கலப்புத் திருமணத்தை
கலங்காமல் ஆதரித்தாய்….!
சட்டத்தை கொண்டுவந்து
சரித்திரத்தில் இடம்பிடித்தாய்…!
சமூக நீதிகாக்க
சளைக்காமல் நீ உழைத்தாய்…!
சாதியத்தை வேரறுக்க
சட்டங்கள் இயற்றிவைத்தாய்…!
பெரியாரியம் பேசிவந்த
பெருமைமிகு தலைமகனே….!
மகத்தான ஆட்சியினை
மறவாது தமிழினமே…!
*******************************
நம்மாழ்வார் நம்மை ஆள்வார்…!
இவரை யாரென்றறியா தமிழினம்-இங்கு
இருப்பதால் வலிக்கிறது என்மனம்…!
தன்னலம் அறியா இவர்குணம்-இவர்
தமிழ்நில இயற்கையின் நூலகம்…!
இயற்கை வேளாண்மை இவர்மூச்சு-நம்மை
இழுத்து கிறங்கடிக்கும் இவர்ப்பேச்சு…!
சற்றும் ஓய்வறியா இளைஞரிவர்- சூழலில்
சர்வமும் கற்றறிந்த கலைஞரிவர்…!
ஒருபோதும் அழிவில்லா ஒருதலைவர்-இவர்
ஒருவரே வேளாண்மைத் தமிழ்த்தலைவர்…!
இன்றென் வரிபோற்றும் நம்மாழ்வார்…!
என்றும் நல்வழியில் நமை ஆள்வார்…!
*******************************************
வ.உ.சி வரலாற்றை
வாசித்து முடிப்பதற்குள்,
கண்கள் குளமாகி,
கசிந்துருகிப் போகுமையா…!
அமுதத் தமிழ் மொழியில்
ஆழ்ந்த அறிவு மிக்கார்…!
வறுமையில் உழல்வோர்க்கு
வழக்காடும் குணம் உடையார்…!
அந்நிய நாட்டுப் பொருட்களை
அவர்கள் முன்னே தீயிட்டார்…!
பாரதியுடன் நட்பு கொண்டு,
பட்டாளிக்காய், பாடு பட்டார்…!
சுப்பிர மணிய சிவாவோடு,
சுதந்திரப் போரில் ஈடுபட்டார்…!
விடுதலை வீர வரலாற்றில்
விபரீத தீர்ப்பைப் பெற்றார்…!
சணல் நூற்கப் பணிக்கப்பட்டு
சகிக்க முடியா இன்னலுற்றார்…!
சிறப்பு மிக்க வழக்கறிஞன்
சிறை பட்டு செக்கிழுத்தார் …!
மண்ணுக்காய் மக்களுக்காய்
பொன்பொருளை இழந்திருந்தார்…!
சிறை முடிந்து திரும்புகையில்
மறுபடியும், மனம் நொந்தார்…!
வரவேற்க எவரும் இல்லை
வந்து தங்க வீடுமில்லை
வாங்கி மேவிய கப்பலில்லை
ஏங்கி தவித்தான் குறைவாழ்வில்…!
தென்னாட்டுத் திலகரின்,
தியாகப் பெரு வாழ்வை,
இந்நாட்டில் வாழுகிற
மக்கள் நாம் மறவலாமா…!
அவர்தம் தியாகம்,
அறியாத் தலைமுறை
இருப்பது வன்றோ
இழி நிலைமை…!
அவர்தம் நூற்றாண்டை
அழகுற நடத்துதல்
அரசின் இன்றைய
முதல் கடமை…!
மக்களவையில் ராகுல்காந்தியின் உரை பிரதமரை உறுத்தியிருப்பதையே மோடியின் மோசமான பாராளுமன்றப் பேச்சு வெளிப்படுத்தியிருக்கிறது – அசுதோஷ் | தமிழில்: தா. சந்திரகுரு
பிரதமர் நரேந்திர மோடி 2022 பிப்ரவரி 07 அன்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையைத் திரும்பிப் பார்க்கின்ற போது அந்த உரை அவருக்குப் பெருமை சேர்த்திருப்பதாகத் தெரியவில்லை. பிரதமர் ஒருவர் நாடாளுமன்றத்தில் பேசுகின்ற போது குடிமக்கள் அவரிடமிருந்து நாட்டின் மீது அரசியல்வாதி ஒருவர் கொண்டிருக்கும் தொலைநோக்குப் பார்வையையே எதிர்பார்ப்பார்கள்; அனைத்துக் கட்சிகள், எம்.பி.க்களிடம் அடிப்படையான மரியாதையை அவர் வெளிப்படுத்துவார் என்றே அவரிடமிருந்து எதிர்பார்ப்பார்கள். பாராளுமன்ற ஜனநாயகத்தில் பிரதமர்தான் அவையின் தலைவர். அவர் அங்கே தன்னைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சியின் தலைவராக இருப்பதில்லை. அவரையும், அவரது அரசாங்கத்தின் செயல்பாட்டையும் விமர்சிப்பதற்கான அனைத்து உரிமைகளும் எதிர்க்கட்சிகளுக்கு உண்டு. எதிர்க்கட்சியினர் எழுப்புகின்ற கேள்விகளின் மூலமாக பாராளுமன்றம் மற்றும் மக்களுக்குப் பதிலளிக்க வேண்டியவர்களாகவே பிரதமரும், அவரது அரசாங்கமும் இருக்கின்றனர்.
எதிர்க்கட்சிகளும் நெறிமுறைகளை மதித்து நடக்க வேண்டும் என்றாலும் பிரதமர் வேறு தரத்திலேயே வைக்கப்பட்டிருக்கிறார். திமிர் பிடித்தவராக அல்லது விமர்சனங்களை சகித்துக் கொள்ள முடியாதவராக பிரதமர் இருக்க முடியாது. துரதிர்ஷ்டவசமாக இத்தகைய எதிர்பார்ப்புகள் அனைத்தையும் பிரதமர் மோடியின் அன்றைய பேச்சு பொய்யாக்கியுள்ளது. தன்னுடைய பொறுமையை இழந்து போன அவருடைய பேச்சின் தொனி ‘என்னை விமர்சிக்க உங்களுக்கு எவ்வளவு தைரியம்?’ என்று கேட்பதாகவே இருந்தது. மேலும் அன்றைய தினம் காங்கிரஸ் கட்சியை அதாவது எதிர்க்கட்சியை மிகவும் மலினமாகவே அவர் நடத்தியிருந்தார்.
பிரதமரின் பேச்சிற்கு சில நாட்களுக்கு முன்பாக நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசிய பேச்சு மிகவும் காரசாரமாக இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை. ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத பிரதமரை ‘ராஜா’ என்று அன்றைய தினம் ராகுல் விளித்திருந்தார். நீதித்துறை, தேர்தல் ஆணையம் போன்ற அரசியலமைப்பு அமைப்புகளை பிரதமர் சிறுமைப்படுத்தி இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார். பன்முகத்தன்மையைப் புறக்கணிப்பது, பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய வகையில் ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கிடையேயான பலவீனமான உறவைச் சிதைப்பது குறித்து ராகுலால் மோடி மீது விமர்சனம் முன்வைக்கப்பட்டது. இந்தியாவை ஒன்றிய அரசால் மட்டுமே ஆள முடியாது என்றும், மாநிலங்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து முடிவெடுப்பது மிகவும் அவசியம் என்றும் ராகுல் காந்தி திட்டவட்டமாகப் பேசியிருந்தார். அரசியலமைப்பு ரீதியாக இந்தியா மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கிறது என்றும், பாஜகவின் பார்வையில் இருப்பதைப் போல அது ஒரு தேசமாக இல்லை என்றும் பிரதமருக்கு ராகுல் நினைவூட்டிக் காட்டினார்.
ஏழைகளுக்கு ஒன்று, பணக்காரர்கள் செல்வந்தர்களுக்கு மற்றொன்று என்று இரு வகை இந்தியா இருந்து வருகிறது என்று ராகுல் கூறிய போது அது பிரதமரைச் சற்றே அசைத்துப் பார்த்தது; அம்பானி, அதானி ஆகியோரைக் குறிப்பிட்டுப் பேசிய ராகுல் மூலதனத்தின் மோசமான மையப்படுத்தல் மோடி பொறுப்பேற்றதிலிருந்தே இந்தியாவில் மிகவும் யதார்த்தமான ஒன்றாகி விட்டது என்று கூறினார்.
ராகுல் காந்தி இன்னும் கண்ணியமாகப் பேசியிருந்திருக்கலாம் என்று சொல்பவர்கள்கூட பிரதமர் அவ்வாறாகப் பதிலளிப்பார் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். மோடி நுணுக்கம் அறிந்தவரில்லை. யாரையும் விட்டுவைக்காமல் அனைவரையும் நெட்டித் தள்ளுகின்ற அணுகுமுறையே அவருடைய தனிச்சிறப்பான ஆளுமையாக இருந்து வருகிறது. அடல் பிஹாரி வாஜ்பாயைப் போல மோடி ஒன்றும் பாராளுமன்ற மரபுகளால் வளர்த்தெடுக்கப்பட்டவர் இல்லை. பாராளுமன்றத்திற்குள்ளே முதன்முறையாக அவர் பிரதமரான 2014ஆம் ஆண்டில்தான் மோடி நுழைந்திருந்தார். ஆனால் ஏற்கனவே பாராளுமன்றத்தில் பேசியதன் மூலமும், இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தில் இருந்த மகத்தான தலைவர்களுடன் உறவாடியதன் மூலமும் தனது அரசியல் வாழ்க்கையைக் கட்டமைத்துக் கொண்டவராக அடல் பிகாரி வாஜ்பாய் இருந்தார். அப்போதெல்லாம் சிறுபான்மையினராக இருந்தாலும் எதிர்க்கட்சிகளின் குரல் கவனித்துக் கேட்கப்பட்டது மட்டுமல்லாமல் உரிய மரியாதையும் தரப்பட்டது. நாடாளுமன்ற அமைப்பு முறையின் சுமூகமான செயல்பாட்டிற்கு எதிர்க்கட்சிகள் மிகவும் தேவையென்று கருதப்பட்ட அந்த நேருவிய காலத்தின் தயாரிப்பாகவே வாஜ்பாய் இருந்து வந்தார். நேருவைக் கடுமையாக விமர்சித்த போதிலும் நேருவின் பாசத்தை வாஜ்பாயால் பெற முடிந்தது.
ஆனால் இப்போது மோடி வித்தியாசமான காலகட்டத்தின் தயாரிப்பாக இருக்கிறார். ஆர்எஸ்எஸ் பிரச்சாரகராகத் தனது வாழ்க்கையை தொடங்கிய அவர் முதலமைச்சராக இரும்புக்கரம் கொண்டு குஜராத் மாநிலத்தை ஆட்சி செய்தார்; சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளை அவர் பொருட்படுத்தியதே இல்லை. தான் தவறு செய்யவே முடியாதவர், கட்சியில் அல்லது வெளியில் இருந்து ஒருபோதும் யாராலும் விமர்சிக்கப்படக் கூடாதவர் என்ற மனநிலையுடனே அவர் இருந்து வருகிறார். அவரைப் பொறுத்தவரை – நான் எந்தத் தவறும் செய்வதில்லை; என்ன செய்ய வேண்டும் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்; நாட்டை எப்படி நடத்துவது, எப்படி நடந்துகொள்வது என்பது பற்றி யாரும் எனக்குக் கற்றுத் தர முயற்சி செய்யக்கூடாது என்ற மனநிலையிலேயே இருந்து வருகிறார். ராகுல் காந்தியின் பேச்சு முழுக்க முழுக்கப் பொதுக் கண்ணோட்டத்தில் பிரதமரின் அந்த பிம்பத்தை உடைப்பதற்கான முயற்சியாகவே இருந்தது. மோடியின் ஆளுமையின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகவே ராகுல் காந்தியின் அந்தப் பேச்சு அமைந்திருந்தது. அதை அலட்சியப்படுத்துவது பிரதமருக்கு மிகவும் கடினமான காரியமாகவே இருந்திருக்கிறது.
ராகுல் காந்தி அவரிடமிருந்து தகுந்த பதிலைப் பெறுவார் என்று மோடி பேச ஆரம்பிப்பதற்கு முன்பாக அனைவருமே எதிர்பார்த்திருந்தனர். நிச்சயம் இதுபோன்ற தனிப்பட்ட தாக்குதலை நான் எதிர்பார்க்கவே இல்லை. ஆரம்பத்தில் பிரதமர் அமைதியாக இருக்கவே முயன்றார் என்றாலும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குறுக்கிட்ட பிறகு அவர் பொறுமையிழந்து விட்டார். தான் இதுவரை யாரையும் குறிப்பிட்டுப் பேசவில்லை என்றும், இப்போது காங்கிரஸின் பெயரைச் சொல்லிக் குறிப்பிடுவதாகவும் அவர் அப்போது கூறினார். அது தரம் தாழ்ந்த அவரது பேச்சின் ஆரம்பமாக மாறியது. அவர் கோபத்தில் கொதித்துக் கொண்டிருப்பதை எளிதில் காண முடிந்தது.
மோடி எப்போதும் தேர்தல் களத்திலேயே இருக்கும் அரசியல்வாதி. வாக்காளரிடம் பேசுகின்ற வாய்ப்பை ஒருபோதும் அவர் நழுவ விடுவதே இல்லை. ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகின்ற நிலையில், உத்தரப்பிரதேசத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்னும் ஓரிரு நாட்களில் நடைபெற உள்ளது. பாராளுமன்றத்தில் ஆற்றுகின்ற உரை நாடு முழுவதும் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்பதால் அவரைப் பொறுத்தவரை அது வாக்காளர்களிடம் உரையாடுவதற்கான சிறந்த வாய்ப்பாகும். எனவே, மக்களவையில் தனது பேச்சில் அறுபது சதவிகிதத்திற்கும் மேலான நேரத்தை காங்கிரஸ் கட்சியை விமர்சிக்க மட்டுமே அவர் பயன்படுத்திக் கொண்டதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. ‘காங்கிரஸ் அழிந்து கொண்டிருக்கும் கட்சி. மாநிலங்களுக்கும், நாட்டிற்கும் எந்தவொரு நன்மையும் அந்தக் கட்சி செய்திருக்கவில்லை, அதனால்தான் பல மாநிலங்களில் காங்கிரஸ் அழிக்கப்பட்டிருக்கிறது’ என்று வாக்காளர்களிடம் அவர் அந்த உரையின் மூலம் கூறினார்.
ஆனாலும் மத்தியில் தனக்குச் சவால் விடக் கூடிய ஒரே கட்சி காங்கிரஸ் மட்டுமே என்று மோடி கருதுவதையும் அவரது பேச்சு வெளிப்படுத்தவே செய்தது. காங்கிரஸிற்கு மாற்றாக மத்தியில் பாஜக எதிர்ப்பு முன்னணியாக தன்னுடைய கட்சி உருவெடுத்துள்ளதாகக் கூறி வருகின்றது என்பதாக மம்தா பானர்ஜியின் சாகச அரசியல் பேச்சுகள் இருந்த போதிலும், ‘காங்கிரஸை மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது; காங்கிரஸ் கட்சி மீது தொடர்ந்து மிருகத்தனமாகத் தாக்குதல் நடத்தப்பட வேண்டும்; இடைவிடாது தொடர்ந்து அந்தக் கட்சியை மக்கள் மத்தியில் மதிப்பிழக்கச் செய்ய வேண்டும்; மத்தியிலும், மாநிலங்களிலும் இருந்து அந்தக் கட்சி நிரந்தரமாக வெளியேற்றப்பட வேண்டும்’ என்பதில் மோடி மிக உறுதியாக இருந்து வருகிறார். மக்களவைக்குப் பிறகு மாநிலங்களவை என்று மீண்டும் மோடியின் உரையில் பெரும்பான்மை பங்கை காங்கிரஸ் கட்சியே ஆக்கிரமித்துக் கொண்டது ஒன்றும் தற்செயலாக நடந்த நிகழ்வு அல்ல. ஆனால், பரம்பரை அரசியல், 1984 கலவரங்கள், நெருக்கடி நிலை, ஏழ்மை என நாட்டில் நடக்கும் அனைத்து தவறுகளுக்கும் காங்கிரஸே காரணம் என்று வெறியுடன் அவர் குற்றம் சாட்டியது அவரது சிந்தனைச் செயல்பாட்டின் பின்னணியில் உள்ளவற்றையே நமக்கு நினைவூட்டியது.
காங்கிரஸின் மீது மோடி கொண்டிருக்கும் ஆவேசம், காங்கிரஸின் மீதான அவரது மனவேதனை அல்லது வெறுப்பின் பிரதிபலிப்பாக அல்லது நேரு-காந்தி குடும்பத்தின் மீதான வெறுப்பின் பிரதிபலிப்பாக மட்டுமே இருக்கவில்லை. மிகப் பெரிய அரசியல் தந்திரத்தின் பகுதியாகவே அவரது பேச்சு பொதுவாக இருக்கிறது. தனது ‘புதிய பாஜக’ (தி நியூ பிஜேபி) என்ற புத்தகத்தில் காங்கிரஸுக்கு எதிரான பாஜகவின் இடைவிடாத வெறித்தனமான பேச்சுகள் குறித்து மிகவும் சுவாரஸ்யமான தரவுகளை நளின் மேத்தா தந்துள்ளார். பாஜக தனது வெளியுலகத் தொடர்புகளில் – அதாவது பேச்சுகள், கட்டுரைகள், பத்திரிகைச் செய்திகளில் – காங்கிரஸையே அதிகம் குறிப்பிட்டு வருகிறது என்று அவர் எழுதியிருக்கிறார். 2019ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டிருந்த தரவரிசையில் காங்கிரஸ் என்ற வார்த்தையே அவர்களுடைய பேச்சுகளில் முதலிடத்தைப் பெற்றது. மோடி, பாஜக, வளர்ச்சி போன்ற வார்த்தைகள் பின்தங்கி காங்கிரஸ் என்ற வார்த்தைக்குப் பின்னரே இடம் பெற்றுள்ளன. ‘இந்த பெரிய அரசியல் தொடர்பு மாற்றம் 2016ஆம் ஆண்டில் தொடங்கியது, அதற்குப் பிறகு காங்கிரஸ் தொடர்பான பாஜகவின் பேச்சுகளில் வியத்தகு மாற்றத்தை நம்மால் காண முடிந்தது. அடுத்த மூன்று ஆண்டுகளில் காங்கிரஸுக்கு எதிரான பேச்சை படிப்படியாக பாஜக அதிகரித்துக் கொண்டே வந்தது. பாஜகவின் தகவல் தொடர்புகளில் 2019ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்களின் போது காங்கிரஸிற்கு எதிரான பேச்சு மற்ற அனைத்து விஷயங்களையும் முந்திவிட்டது’ என்று நளின் மேத்தா குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் ‘காங்கிரஸின் முதன்மையான சித்தாந்த எதிர்ப்பாளராக, தனது போட்டியாளரைப் பற்றி பாஜக அதிகம் பேசுவது மிகவும் இயல்பானது என்றாலும் பாஜகவை காங்கிரஸுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது என்ற முக்கிய அரசியல் பாடத்தை கட்சியின் நடவடிக்கைகளைத் திட்டமிடுபவர்கள் பெற்றிருப்பதைச் சுட்டிக்காட்டுவதாகவே காங்கிரஸுக்கு எதிரான அதன் பேச்சுகளில் ஏற்பட்டிருக்கும் குறிப்பிடத்தக்க அளவிலான அதிகரிப்பு இருக்கிறது’ என்று எழுதியுள்ளார்.
எனது பார்வையில் பிரதமர், அவரது கட்சியினரிடம் உள்ள இந்த வெறுப்பு வரப் போகின்ற எதிர்காலத்தில் இன்னும் அதிகரிக்கவே செய்யும். ஏனென்றால் பாஜகவிற்கு எதிரான ஆட்சி எதிர் மனோநிலை மத்தியிலும் மாநிலங்களிலும் அதிகரித்து வருவதால், மோடி தன்னை பாதிக்கப்படக்கூடியவராகவே உணருவார். மேலும் காங்கிரஸ் இழைத்துள்ள தீமைகளை வாக்காளர்களும் நாட்டு மக்களும் மறந்து விடக் கூடாது என்றும், அவர்கள் தன்னுடைய தலைமையின் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும் என்றும் அவர் நிச்சயம் விரும்புவார். அதற்காக நாகரீகமான விவாதங்கள், உரையாடல்களுக்கு நமது பிரதமர் அதிக அளவிலே தடையை ஏற்படுத்துவார் என்றே நாம் எதிர்பார்க்கலாம். அவர்களிடமிருந்து வேறு என்ன நமக்கு கிடைக்கப் போகிறது?
(‘ஹிந்து ராஷ்டிரா’ என்ற புத்தகத்தை எழுதியுள்ள அசுதோஷ் satyahindi.com என்ற இணையதளத்தின் ஆசிரியராக உள்ளார்)
https://www.ndtv.com/opinion/pms-speech-reveals-rahul-gandhi-got-under-his-skin-2755902
நன்றி: என்டிடிவி
தமிழில்: தா.சந்திரகுரு
நாடாளுமன்றத்தை அவமதித்திடும் பாஜக – தமிழில்: ச. வீரமணி
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளன்றே, ஆளும் பாஜக அரசாங்கம் எந்த அளவிற்கு, நாடாளுமன்றத்தையும் அதன் ஜனநாயகபூர்வமான செயல்பாட்டையும் அவமதித்திடும் என்பதைக் காட்டிவிட்டது.
அரசாங்கம் எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் அதனை விவாதிக்கத் தயார் என்றும், எதிர்க்கட்சியினரால் எழுப்பப்படும் எந்தக் கேள்விக்கும் பதில் கூறத் தயார் என்றும் பிரதமர் மோடி அறிவித்ததற்கு முற்றிலும் முரணாக, மூன்று வேளாண் சட்டங்களை விலக்கிக்கொள்வது தொடர்பாக எவ்விதமான விவாதத்தையும் நடத்த ஆளும் கட்சி மறுத்துவிட்டது.
எப்படி 2020 செப்டம்பரில் நாடாளுமன்றக் குழுக்களில் முறையான விவாதம் மற்றும் ஆய்வு எதுவுமின்றி மூன்று வேளாண் சட்டங்களையும் கொண்டுவந்து நிறைவேற்றியதோ, அதேபோன்றே இப்போதும் அவற்றின்மீது எவ்விதமான விவாதத்தையும் நடத்த அனுமதிக்காது, ஒருசில நிமிடங்களிலேயே வேளாண் சட்டங்களை ரத்து செய்துள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைத் தலைவர்களுமே நாடாளுமன்றத்தின் உரிமைகளுக்கு உரிய மதிப்பளித்திடவில்லை என்பதைக் காட்டின.
மாநிலங்களவையில் பெரும்பான்மை கிடைப்பதில் தங்களுக்கு நிச்சயமற்ற தன்மை இருப்பதால், அங்கே ஆட்சியாளர்களின் எதேச்சாதிகாரத் திமிர் மிகவும் மோசமானமுறையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால், அங்கே அது, முக்கியமான சட்டமுன்வடிவுகள் எதையும் கூட்டு நாடாளுமன்றக் குழுவிற்கு அனுப்ப மறுப்பதையும், சட்டமுன்வடிவுகளின் மீது ஒருங்கிணைந்த விவாதம் எதையும் நடத்த மறுப்பதையும், எல்லாவற்றையும்விட மிக மோசமான முறையிலும் ஆட்சேபகரமான முறையிலும் உறுப்பினர்கள் வாக்களிக்கும் உரிமையையே (division and voting) அனுமதிக்க மறுப்பதும் போன்று எதிர்க்கட்சிகளைப் பேசவிடாது செய்திடும் அணுகுமுறையைப் பின்பற்றியுள்ளது.
மாநிலங்களவை, முதல் நாளன்றே ஒட்டுமொத்த கூட்டத்தொடர் காலத்திற்கும் 12 உறுப்பினர்களை இடைநீக்கம் செய்து தீர்மானத்தை நிறைவேற்றியிருப்பதைப் பார்த்தோம். அவர்கள் அனைவரும் சென்ற கூட்டத்தொடரின்போது ஆகஸ்ட் 12 அன்று கட்டுப்பாடில்லாமல், வன்முறை பாணியில் நடந்துகொண்டார்கள் என்று குற்றஞ்சாட்டி இவ்வாறு இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இவ்வாறு செய்தால் எதிர்க்கட்சியினர் ஆவேசம் கொண்டு எதிர்வினையாற்றுவார்கள், அதனைப் பயன்படுத்திக்கொண்டு சட்டமுன்வடிவுகள் அனைத்தையும் எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பின்றி எளிதாக நிறைவேற்றிக்கொண்டு விடலாம் என்கிற சூழ்நிலையை உருவாக்கியுள்ளனர்.
இந்த சமயத்தில் சென்ற கூட்டத்தொடரின்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் “கட்டுப்பாடின்றி நடந்துகொண்டதாகக்” கூறப்பட்ட நிகழ்வின்போதுதான், பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்த்திடும் சட்டமுன்வடிவானது நாடாளுமன்றத் தெரிவுக் குழுவிற்கு அனுப்பப்படாமலேயே நிறைவேற்றப்பட்டது என்பதையும், இதன்மீது வாக்கெடுப்பிற்கு விடக்கூட மறுக்கப்பட்டதையும் நாம் நினைவுகூர்ந்திட வேண்டும்.
சென்ற கூட்டத்தொடரின்போது நடைபெற்ற சில நிகழ்வுகளுக்காக “ஒழுங்குபடுத்தப்படுவதற்காக” (“disciplining”) மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை என்பது செல்லத்தக்கதல்ல என்பதுடன், அந்த சமயத்தில் கட்டுப்பாடின்றி நடந்துகொண்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ள 33 உறுப்பினர்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் இளமாரம் கரீம் பெயரையும் இணைத்து இப்போது நடவடிக்கை எடுத்திருப்பதன் மூலம், மாநிலங்களவையில் வலுவாக இருக்கக்கூடிய எதிர்க்கட்சிகளின் குரலை எப்படியாவது நசுக்கிட வேண்டும் என்கிற ஆளும் கட்சியினரின் நோக்கம் தெளிவாகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சியினரின் உரிமைகள் மீதான தாக்குதல்களை, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட்டு எதிர்த்துக் கொண்டிருக்கின்றன. நாடாளுமன்றத்திற்குள் கொண்டுவரப்படும் பிரச்சனைகள் மீது எதிர்க்கட்சிகள் இவ்வாறு ஒன்றுபட்டு செயல்படுவது, எப்படி ஒன்றுபட்ட எதிர்ப்பினை, நாடாளுமன்றத்திற்குள்ளே, கட்டி எழுப்ப முடியும் என்பதைக் காட்டுகிறது.
ஆனால், நாடாளுமன்றத்திற்கு வெளியே, எதிர்க்கட்சிகளின் ஒன்றுபட்ட எதிர்ப்புக்குத் தலைமையேற்பதற்காக, மமதா பானர்ஜி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மேற்கொள்ளும் முயற்சிகள், பலனளிக்கப்போவதில்லை. எப்படி காங்கிரஸ் கட்சி முன்னணிப் பாத்திரம் வகிப்பதற்கான விருப்பம் ஒன்றுமில்லாது ஆயிற்றோ அதேபோன்றே இவர்களின் முயற்சிகளும் பலனளிக்கப் போவதில்லை.
உறுதியான ஒன்றுபட்ட போராட்டத்தால் கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும் என்பதை விவசாயிகள் போராட்டம் காட்டியிருக்கிறது. இதிலிருந்து எதிர்க்கட்சிகள் உரிய படிப்பினையைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அகில இந்திய அளவில் அனைவருக்குமான “தலைவர்” ஒருவருடன் ஒற்றுமை என்பது காரியசாத்தியமில்லை. உழைக்கும் மக்களின் பல்வேறு தரப்பினரின் ஒன்றுபட்ட நடவடிக்கைகள் மூலமாகவே விரிவான ஒற்றுமையை உருவாக்கிட முடியும். இதற்கு, இந்துத்துவா எதேச்சாதிகார ஆட்சிக்கு எதிராக, மாற்றுக் கொள்கைகள் மற்றும் அரசியலை முன்னிறுத்துவதன்மூலமும், அதனைச் சுற்றி அனைத்து ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற சக்திகளை அணிதிரட்டுவதன் மூலமும் மட்டுமே சாத்தியம்.
(டிசம்பர் 1,2021)
நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்.