Nilaiyillatha kalathin varai padam Kavithai By Vasanthadheepan. நிலையில்லாத காலத்தின் வரைபடம் கவிதை - வசந்ததீபன்

நிலையில்லாத காலத்தின் வரைபடம் கவிதை – வசந்ததீபன்

கண்கள் தோட்டாக்களை
உமிழத் தயாராகிறது
இதயம் விசையை முடுக்க
தருணம் பார்க்கிறது
குறிக்குத் தப்ப
கனவுகள் முயல்கின்றன
நிலங்களைத் தின்கின்றன தொழிற்சாலைகள்
கிராமங்கள் கரைகின்றன
ஒளிய இடந்தேடுகின்றன பறவைகளும், மிருகங்களும்
துக்கத்தை துக்கத்தால் துரத்தமுடியாது
சந்தோஷம் சகல வேதனைகளை மூழ்கடிக்கும்
காலாற நடந்து செல்வது சுகம்
மர்மமுடிச்சு இறுகுகிறது
புனைவாளனின் மூளை வெடிக்கிறது
புழுக்கள் பேசிக்கொண்டு வெளியேறுகின்றன
எவள் எவளோடவோ திரிந்தவன்
அவளோட சேர வந்திருக்கிறான்
அவனோடு இணைய
அவள் தயாரில்லை
கடந்து தான் செல்ல போகிறோம்
கசிந்து உருகித் தேங்காதே
காட்டாற்று வெள்ளமாய் பிரவகித்திடு
நொடி மணியாக விரைகிறது
மணி பெருகி நாளாய் வழிகிறது
நாள் கடந்து கடந்து
மரணமாய் முடிகிறது
நிறங்களின் உடைவில்
சிறகுகள் துளிர்க்கின்றன
விரிவோடுகிறது வானம்
பெருங்களிப்பின் உற்சவ சீழ்க்கையொலி தெறிக்கிறது.
நீலப்பளிங்காய் மிளிர்கிறது
நீருக்குள் கிடக்கும்
வாளாய் ஒளிர்கிறது
முப்பாட்டனின் முகச்செழுமையாய் மரக்கா மலை
உடைந்த நீர்க்குமிழியாக
மறைந்து போனது பால்யம்
தானியங்கள் கொழித்த
இறந்த காலங்கள்
பேரன்பின் சுடருள் கருமை படர்கிறது
நிலங்கள் வழியாக
வாழ்க்கை நகர்ந்தது
தாவரங்களாகவே மனிதர்கள்
வேரற்று காற்றோடு அலைபடுதல் இக்கால நீங்கா சாபம்.

Kaala Paani Novel By M Rajendran Novelreview By S Subbarao. நூல் அறிமுகம்: டாக்டர். மு. ராஜேந்திரனின் காலா பாணி - ச.சுப்பாராவ்

நூல் அறிமுகம்: டாக்டர். மு. ராஜேந்திரனின் காலா பாணி – ச.சுப்பாராவ்



காலா பாணி

பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன், வரலாறு குறித்த பாரதி புத்தகாலயத்தின் ஒரு சிறு வெளியீட்டில் ஒரு முக்கியமான விஷயத்தைப் படித்தேன். நமக்கு காய்ச்சல், வயிற்றுப் போக்கு என்றால் மருத்துவர் வெளியூர் சென்றீர்களா? கடந்த  2- 3 நாட்களில் வெளியில் சாப்பிட்டீர்களா? என்ன சாப்பிட்டீர்கள் ? என்று கேட்கிறார். இன்னும் சில நாள்பட்ட நோய்களுக்கான சிகிச்சைக்குப் போனால் கடந்த சில வருடங்களாக உங்கள் வேலை, உணவுப் பழக்கம், தூக்கம் போன்ற விபரங்கள் தேவைப்படுகின்றன. சர்க்கரை நோய் போன்ற நோய்களுக்கு உங்கள் பெற்றோர், தாத்தா பாட்டிக்கு இந்த நோய் இருந்ததா என்ற பழைய கதை தேவை. எனவே தனி மனிதனின் நோயைத் தீர்க்க அவனது பழைய வரலாறு அவசியம்.

சமூகத்தின் நோயைத் தீர்க்க சமூகத்தின் பழைய வரலாறு அவசியம் என்று அந்த நூலாசிரியர் சொல்லியிருப்பார்.  நான் அதற்கு முன்பிருந்தே வரலாற்று நூல்களை மிக ஆர்வமாகப் படிப்பேன் என்றாலும், மேற்சொன்ன கருத்தைப் படித்த பிறகு கூடுதல் அக்கறையோடும், கவனத்தோடும் வரலாற்று நூல்களைத் தேடித் தேடிப் படிக்க ஆரம்பித்தேன். அப்படியான தேடலில் சமீபத்தில் கிடைத்தது தான் டாக்டர்.மு.ராஜேந்திரன், இ.ஆ.ப அவர்கள் எழுதியிருக்கும் காலா பாணி என்ற வரலாற்று நாவல்.

இந்திய விடுதலை இயக்கத்தின் துவக்கப் புள்ளியாக இருந்தது கட்டபொம்மன், மருதுபாண்டியர்களின் வீரம் செறிந்த எதிர்ப்பியக்கங்கள்தான்.  ஏற்கனவே டாக்டர் ராஜேந்திரன் அந்த வீர வரலாற்றை 1801 என்ற நாவலாக எழுதியிருக்கிறார். அது பரவலான கவனத்தையும் பெற்றது. மருது சகோதரர்களுடம் 512 பேரை ஒரே நாளில் தூக்கிலிட்ட கிழக்கிந்தியக் கம்பெனி சிவகங்கை அரசர் வேங்கை பெரிய உடையணத் தேவன், சின்ன மருதுவின் புதல்வன் 12 வயது சிறுவன் துரைசாமி உட்பட 73 பேரை நாடு கடத்தியது. பிரிட்டிஷ் இந்திய வரலாற்றில் நாடுகடத்தப்பட்ட முதல் அரசர் னஉடையணத் தேவன்தான்.  இப்படி நாடு கடத்தப்பட்டவர்களை கம்பெனி காலா பாணி என்ற குறிப்பிட்டது.

காலா பாணிகள் 11.02.1802 அன்று தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கிளம்பி 66 நாட்கள் பயணத்தில் பினாங்கு வந்து சேர்கிறார்கள். இதில் உடையணத் தேவன் மட்டும் பிரி்ககப் பட்டு மால்பரோ கோட்டையில் சிறை வைக்கப்படுகிறார்.  19.09.1802 தனது முப்பத்திநான்காவது வயதில் தனிமைச் சிறையில் இறந்து போகிறார் உடையணத் தேவன். அந்தக் கண்ணீர்க் கதைதான் காலா பாணி. இந்தியாவின் முதல் சுதந்திர எழுச்சி தமிழகத்திலிருந்து தான் துவங்கியது என்பதை மிக ஆதாரபூர்வமாக நிறுவும் படைப்பு.  படைப்பிற்கு உதவிய துணைநூல்களின் பட்டியலைப் பார்த்தாலே தெரியும்.

கிழக்கிந்தியக் கம்பெனியின்  ஏராளமான ஆவணங்களை ஆராய்ந்து எழுதப்பட்ட நாவல். ஆனால் இன்று வந்து கொண்டிருக்கும் பல டாக்கு ஃபிக்ஷன் போல் கூகுள் செய்து உட்கார்ந்த இடத்திலிருந்து எழுதப்பட்டதல்ல.  உடையணத் தேவனின் மதுரை சக்கந்தி அரண்மனையிலிருந்து, பினாங்கு, பென்கோலன் என்று உடையணத் தேவனின் அந்த இறுதிப்பயண இடங்கள் அனைத்திற்கும் நேரில் சென்று ஆய்வு செய்திருக்கிறார். கட்டபொம்மன், உடையணத் தேவன் போன்றோரின் இன்றைய வாரிசுகளிடம் நேர்காணல் செய்திருக்கிறார். உடையணத்தேவனின் வாளைக் கையில் ஏந்திப் பார்த்திருக்கிறார்.  கள ஆய்வு ஒரு நாவலுக்கு எந்த அளவு முக்கியம் என்பதை, அதுதான் நாவலின் வெற்றியைத் தீர்மானிக்கிறது என்பதைக் காட்டும் நாவல்.

காலா பாணி அன்றைய கிழக்கிந்தியக் கம்பெனி காலத்து தமிழகம், தமிழகம் மட்டுமல்ல,  அன்றைய  உலகம் பற்றிய ஒரு விரிவான சித்திரத்தைத் தருகிறது. பிரான்ஸில் பிரெஞ்சுப் புரட்சியின் சிறைத் தகர்ப்பை அறிந்து அதைப் போல கோயம்புத்தூரில் ஒரு சிறை உடைப்பை போராளிகள் நடத்துகிறார்கள் என்பது வியப்பாக இருக்கிறது. சோஸ் லெப்டினென்ட், ஆப்காரி காண்ட்ராக்டர், மிஸ்தீஸ், பேஷ்குஷ் கலெக்டர், இஸ்திமிரார் என்று எத்தனை எத்தனை புதுப் புது வார்த்தைகள் ! கம்பெனி பதவிகள், அதிகாரப் படிநிலைகள், அலுவலக நடைமுறைகள், எந்தப் பதவியில் உள்ளவர் வரும் போது எத்தனை குண்டு முழங்க வரவேற்க வேண்டும் என்பது போன்ற சம்பிரதாயங்கள், அன்றைய மருத்துவ முறைகள், பானர்மேனின் சமாதி பினாங்கில் இருப்பது, என்று ஏராளம் ஏராளமான தகவல்கள். 

துலுக்கப் பெண்ணை சாகிபா என்றும், மலாயா பெண்ணை நயோன்யா என்றும், மராட்டிய பெண்ணை மாதுஸ்ரீ அல்லது பாயி சாகேப் என்றும். வெள்ளைக்காரியை மேம் சாகிபா என்றும், பிரெஞ்சுக்காரியை மதான் என்றும் தமிழ் பெண்ணை நாச்சியார் என்றும் அழைக்க வேண்டும் என்ற ஓரிடத்தில் ஒரு படை வீரன் சொல்கிறான். இந்தியாவைச் சுற்றியுள்ள சின்னச் சின்னத் தீவுகளில் கம்பெனியின் ஆட்சி, அங்கு அடிமையாகவும்,  கைதியாகவும் போய் வாழ்நாள் முழுதும் துன்பத்தில் உழலும் தமிழர்கள், சந்தர்ப்பவசத்தால் சற்றே வசதியான வாழ்க்கை கிடைக்கப் பெற்றவர்கள், அவர்கள் தம் சக தமிழர்களுக்குச் செய்யும் மிகச் சிறிய உதவிகள் எல்லாமே மிகையின்றிச் சொல்லப்பட்டுள்ளன.

ஆனால் நாவலில் ஆடம்பரமான மொழிநடை, வர்ணனைகள் எதுவும் கிடையாது. இயல்பான மொழி. ஆசிரியர் தனது மொழித் திறமையைக் காட்ட வேண்டும் என்று எந்த இடத்திலும் வலிந்து மிகையாக எதையும் எழுதவில்லை. ஆனாலும், பெரிய உடையணத் தேவன் தன் சகாக்களோடும்,  கம்பெனி அதிகாரிகளோடும் கையறு நிலையில் பேசும் போது எனக்கு கண் கலங்குகிறது. அதுவும் அந்த கடைசி மூன்று பக்கங்கள்….

அன்றாடம் நான்  பெரியார் பேருந்து நிலையத்திற்கு எதிரே மதுரையின் கோட்டையின் மிச்சத்தைப் பார்ப்பேன். என் மதுரைக் கோட்டை என்று என்னையறியாமல் பெருமிதம் கொள்வேன். நாவலைப் படித்து முடித்த அன்று அந்தக் கோட்டை மதிலைப் பார்த்த போது அந்த பெருமிதம் இல்லை. நாடு கடத்தப்பட்ட உடையணத் தேவனைக் கடைசியாகப் பார்ப்பதற்காக அந்தக் கோட்டை வாசலில் நின்று அவரது மனைவி மருதாத்தாள் கெஞ்சிக் கதறியதும், காவலன் அவளை விரட்டி விட்டு கோட்டைக் கதவை இழுத்து மூடியதும் தான் கண்முன் நின்றன. முதன் முறையாக என் மதுரைக் கோட்டை மதிலைப் பார்த்து நான் கண்கலங்கி நின்றேன்.

பழைய வரலாற்றைச் சொல்வதன் வழியே,  இன்றும் நாம் கைவிடக் கூடாத ஏகாதிபத்திய எதிர்ப்பை ரத்தமும், சதையுமாகச் சொல்லிய டாக்டர்.மு.ராஜேந்திரன், இ.ஆ. ப அவர்களின் கரம் தொட்டு வணங்கி வாழ்த்துகிறேன்.

நூல்: காலா பாணி
ஆசிரியர்: டாக்டர். மு. ராஜேந்திரன், இ.ஆ.ப
வெளியீடு: அகநி வெளியீடு
விலை: ரூ650.00
பக்கம்: 536

Vara mudindhal Vandhuvidungal Thozhar Book By Sirajudeen Bookreview By Sekaran நூல் மதிப்புரை: சிராஜூதீனின் வர முடிந்தால் வந்துவிடுங்கள் தோழர் - பெரணமல்லூர் சேகரன்

நூல் மதிப்புரை: சிராஜூதீனின் வர முடிந்தால் வந்துவிடுங்கள் தோழர் நினைவுக் கட்டுரைகள் – பெரணமல்லூர் சேகரன்




நூல்: வர முடிந்தால் வந்துவிடுங்கள் தோழர் நினைவுக் கட்டுரைகள்
தொகுப்பு: சிராஜூதீன்
பக்கங்கள்: 232
விலை: ₹225
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்: thamizhbooks.com

“மனிதனுக்கு மிகவும் பிரியமானது அவனுடைய வாழ்க்கை! மனித வாழ்க்கை வாழ்வதற்கே! ஆனால் ஒருமுறை திரும்பிப் பார்த்துக் கொண்டால், பயந்தாங் கொள்ளி யாகவும், பயனற்றவனாகவும் வாழ்ந்தேன் என்று வெட்கத்துடன் தலைசாயும் நிலைமை வரக்கூடாது. அர்த்தமற்ற மனவேதனையுடன், சித்ரவதையுடன் வருடங்கள் உருண்டோடி விட்டனவே என கழிவிரக்கம் கொள்ளும் பிழைப்பு வேண்டாம்! என் வாழ்க்கை பூராவும் என் திறமைகள் அனைத்தையும் மனித சமுதாய விடுதலையென்னும் உலகிலேயே மகோன்னதமான இலட்சியத்திற்கே அர்ப்பணித்தேன் என்று கண்ணை மூடும் போது நினைக்கும்படி வாழ்வதுதான் மனித வாழ்க்கைக்குப் பெருமை அளித்திடும்”..ஆஸ்த்ரோவ்ஸ்கி

ஆஸ்த்ரோவ்ஸ்கியின்அர்த்த அடர்த்தி மிக்க வார்த்தைகள் கறுப்பு கருணாவுக்குப் பொருந்தியதால்தான் தான் இறப்பதற்கு முன் ” ஐ ஆம் எஸ்.கருணா, மெம்பர் ஆப் கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆஃப் இந்தியா மார்க்சிஸ்ட்” என்னும் வார்த்தைகளை உதிர்த்துவிட்டு மறைந்தார் கறுப்பு கருணா. இவர் அர்ப்பணிப்பு மிக்க வாழ்க்கையை வாழ்ந்ததால்தான் ‘வர முடிந்தால் வந்துவிடுங்களேன் தோழர் கருப்பு கருணா’ என்று உளப்பூர்வமான அஞ்சலி உரையை வழங்கியுள்ளார் இ.பா. சிந்தன். இதையே நூலின் தலைப்பாக்கி கறுப்பு கருணா குறித்த அஞ்சலி உரைகளின் தொகுப்பை உருவாக்கியுள்ளார் சிராஜூதீன்.

இந்நூலில் 34 தோழர்கள் கறுப்பு கருணாவுடனான தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். இத்துடன் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் இரங்கல் செய்திகளும் தொகுப்பாளர் சிராஜூதீனின் தொகுப்புரையும், சில கவிதைகளும் முத்தாய்ப்பாய் கறுப்பு கருணாவின் ‘ஒரு பெரும் கனவின் வெளிப்பாடு’ எனும் கட்டுரையும் இடம் பெற்றுள்ளன.

இந்நூல் கறுப்பு கருணாவின் இறுதி வார்த்தைகளில் இழைந்த பெருமைக்குரிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவண்ணாமலை மாவட்ட மாநாட்டில் அனைத்து பிரதிநிதிகளுக்கும் இலவசமாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

“நான் சுயமாக நிற்கவும் செயல்படவும் கற்றுக் கொண்டேன். கருணா தன்னை முழுமையாக பொது வாழ்க்கையில் ஈடுபடுத்திக் கொண்டதால் மொத்த குடும்ப பொறுப்புகள், முடிவுகள் என நானே எடுக்க அவர் கற்றுத் தந்தார்.” என்னும் கருணாவின் துணைவியார் செல்வியின் வார்த்தைகள் கருணாவுக்குப் புகழ் சேர்ப்பதோடு ஆண் கம்யூனிஸ்டுகள் தங்கள் வீட்டுப் பெண்களைப் பயிற்றுவிக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துவதாகவே உள்ளன.

திருவண்ணாமலை மலைமேடுகளில் போலித் திருட்டு சாமியார் நித்யானந்தா தனது அடிப் பொடிகளைத் தூண்டிவிட்டு குடில்கள் அமைத்து மலையை ஆக்கிரமிக்க இருந்த திட்டத்தைத் தனது தோழர்களுடன் தவிடுபொடியாக்கியிருக்கிறார் என்பதையும் சமூக ஊடகங்களில் கருணா குறித்தும் அவரின் மகள் குறித்தும் மிரட்டல் பதிவுகள் இடுவதும், கொலை மிரட்டல்கள் விடுப்பது எனவும் வழக்கம் போல ஆட்டங்கள் ஆடிய நித்யானந்தா கும்பலிடமிருந்து மலையை மீட்டு அண்ணாமலையாருக்குத் திருப்பித் தந்த கருணா ஒரு நாத்திகர் என்பதையும் இந்நூல் பதிவு செய்கிறது.

பாப்பம்பாடி ஜமாவின் அதிரும் பறையொலியில் எப்போதும் கருணா எழுப்பும் ஒலியும் கலந்திருக்கும் என்பதைப் பாராளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் இரங்கல் உரையில் காணமுடிகிறது.

கருணாவின் இன்னொரு முகமாக நகைச்சுவை ததும்பும் நடவடிக்கைகள் இருந்துள்ளன. சான்றாக தமுஎகச மாநிலப் பொருளாளர் ராமச்சந்திரன் நாடகச் சூழல் ஒன்றை விவரிக்கிறார்.

பிரளயன் டாக்டர்..
கிராம ஆஸ்பத்திரி சூழல்..
டாக்டர் ரூமுக்குள் நுழைவார்..

எஸ்…பேஷண்ட்..
ஒரு கையில் கட்டுடன் பேஷண்டாக கருணா…
டாக்டர்..என்னய்யா..
டாக்டர், என் கையில் அடி பட்டிடுச்சி சார்,
எங்கய்யா காமி,
கட்டுப்போடாத கைய காண்பிப்பார் பேஷண்ட்.
ஏன் அந்தக் கையில கட்டுப் போட்டு இருக்க?
அந்தக் கையிலும் அடிபடாமல் இருக்கத்தான் சார்,
பார்வையாளர்கள் மத்தியில் ஒரே ஆரவாரம்.

இப்படி கருணாவின் பிரசன்ஸ் ஆஃப் மைன்டும் நகைச்சுவையுணர்வும் நூலின் பல இடங்களில் காண முடிகிறது. “காவியற்ற தமிழகம், சாதியற்ற தமிழர், கீழடி நம் தாய்மடி” போன்றவை கருணாவின் மூலமாகவே உருவானவை என்பதை இந்நூலைப் படிப்பதன் மூலம் மட்டுமே உணர முடிந்தது.

கோட்டைப்பட்டி கிராமத்தின் கலை இரவுக்காக திருவண்ணாமலையிலிருந்து கிளம்பும்போது பணமில்லாத கையறு நிலையில் சமயோசிதமாய் கருணா பஸ்சில் மேளத்தை அடித்தபடியே மக்களிடமிருந்து பணம் வசூலித்த பாங்கினை இலட்சுமிகாந்தன் தனது அனுபவப் பகிர்வால் உணர்த்தும்போது கருணா கள செயல்பாட்டாளராய் ஜொலிக்கிறார் எனின் மிகையன்று.

இறப்பிற்குப் பின் தன் உடலை மருத்துவமனை ஆய்விற்குக் கொடுத்தது; உறவினர்கள் யாரும் எந்தச் சடங்குகளையும் தன் உடல்மீது செலுத்திவிடாதபடி தன் குடும்பத்தை அவ்வளவு துயரத்திலும் உறுதியுடன் இருக்க வைத்தது; அவரின் சவ ஊர்வலம் புறப்படும் முன்பு “யாரும் பூக்களைத் தூவி சாலையை மாசுபடுத்த வேண்டாம். அது கருணாவிற்குப் பிடிக்காது” என்று அந்தக் குடும்பம் அறிவித்தது, போன்றவைகள் எல்லாம் ஒரு நாளில் நடந்துவிட்ட ஒன்று அல்ல. அது தனது குடும்பத்தை ஒரு தோழர் எவ்வாறு உறுதியுடன் தயார் செய்துள்ளார் என்பதன் வெளிப்பாடுகள்தான் அவை என்று பிரளயன் கூறியிருப்பது பொருத்தமானதே.

இந்நூலில் சில ஆளுமைகள் கருணாவின் இயல்பான முரண்களைச் சுட்டிக் காட்டினாலும் “முரண்களோடு வாழ முடியும், தோழமை சேர முடியும், முன்னேறிக் காட்ட முடியும்-நோக்கம் உயர்வானதாக, சமுதாயத்துக்காக இருக்காமானால். அதற்கு நம்மோடு ‘வாழும்’ சாட்சிதான் கருணா” என்னும் அ.குமரேசனின் வார்த்தைகள் கருணாவின் யதார்த்த வாழ்வின் வெற்றியைப் படம் பிடித்துக் காட்டுகின்றன.

“முகநூல் வெளியில் தனக்கென பல்லாயிரக்கணக்கில் பின்தொடர்பவர்களை, கிட்டத்தட்ட 26000 பேர் வரை கொண்டிருந்தவர் கருணா. அவரது கூர்மையான எழுத்தும், பேச்சு பாணியிலான நகைச்சுவையும், எதையும்
இடதுசாரி, பெரியாரிய, அம்பேத்கரியப் பார்வைகளோடு வழங்குகிற பாங்கும் அவருக்கென தனித்த வகையிலான பின் தொடர்பவைகளை அதிகரித்தன” என்னும் சிரீரசாவின் வார்த்தைகளிலிருந்து கருணாவின் முகநூல் மேன்மையை உணர முடிகிறது.

“பொது நிகழ்வுக்கு வசூல் பண்றப்போ கூச்சமே படக்கூடாது தோழா.. மக்கள் கிட்ட காசு வாங்கிதான் தோழா நிகழ்ச்சி நடத்தனும்” எனும் கிருஷ்ணமூர்த்தியின் பதிவு மூலம் உண்டி குலுக்கிககள் கம்யூனிஸ்டுகள் என்பதை கருணா நினைவுபடுத்தியுள்ளார்.

பவாவின் ‘ஏழுமலை ஜமா’ வை கருணா படமாக உருவாக்கினார் என்பதை விட மு. பாலாஜி கூறியுள்ளதைப் போல மக்களிடம் வசூலித்து உருவாக்கப்பட்ட படம் நாமறிந்த வகையில் இது ஒன்றுதான் என்னும்போது மெய் சிலிர்க்கிறது.

“அமைப்பைக் குடும்பமாகவும்
குடும்பத்தை அமைப்பாகவும்
கலைத்துப் போட்டு கொண்டாடிய
சமகாலச் சித்தன் அவன்”
என கவிஞர் வெண்புறா குறிப்பிட்டுள்ளதன் அர்த்தம் கருணாவைக் கொண்டாடும் அவரது துணைவி செல்வி கருணாவை பொக்கிஷம் என்பதிலிருந்தும் அவரது மகள் “எங்கப்பா எங்களுக்கு எதையும் போதிக்கவில்லை. சுயசிந்தனையோடு வாழக் கற்றுக் கொடுத்தார்” என்பதிலிருந்தும் புலனாகும்.

“இப்போது வரை ஒன்றை எனக்குள் கேட்டுக்கொண்டே இருக்கிறேன். எப்படி ஒரு மனிதனால், தன் வாழ்வின் இறுதி நொடிகளில் தன் நிலை குறித்தோ, தன் குடும்பத்தார் குறித்தோ ஒரு வார்த்தையையும் உச்சரிக்காமல், தன்னை ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் என்று பெருமையோடு அறிவித்துக் கொள்கிறபடி ஒரு வாழ்வை வாழ்ந்து காட்டினார். நம்மால் வாழ்ந்துவிட முடியுமா?” என் வினவும் வசந்துக்கு..

“போய் வா கருணா! உன் தொடர்ச்சியில் தமிழகமெங்கும் நிறைந்திருக்கிறார்கள். அதுபோதும். ஒரு களப்பணியாளனின் மரணத்தை மதிப்பிட..சமூகம் பெருமிதத்தால் நிறைய” என்ற பவாவின் கூற்றே பதிலாக உள்ளது.

இந்நூலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோரின் புகழுரைகள் சிறப்பு மிக்கவை.

அற்புதமான தோழரின் இழப்புக்குக் காரணமான புகைக்கும் பழக்கத்தை முன்னிறுத்தி “ஓர் இலட்சியத்துக்காக நம் உடல், பொருள், ஆவியை இயக்கத்துக்கு அளித்துவிட்டவர்கள் தம் உடலைப் பேணுவது ஓர் ஸ்தாபனக் கடமை என்று நம் முன்னோடிகள் சொல்லுவார்கள். இந்த உடல் உனக்கானதில்லை. இயக்கத்துக்கானது என்பார்கள். அச்சொற்களை தோழர்கள் மதிக்க வேண்டும். உடலைப் பேண வேண்டும். கருணாவின் பாதியில் முடிந்த வாழ்வு நமக்குச் சொல்லும் பாடம் அது” எனும் ச. தமிழ்ச்செல்வனின் வார்த்தைகள் முக்கியமானவை.

இந்நூலை வாங்கிப் படிக்க வேண்டியதும் தத்தம் வாழ்க்கையில் பொருத்திப் பார்த்து முன்னேற வேண்டியதும் முற்போக்காளர்களின் மகத்தான கடமை.