செஞ்சி தமிழினியன் எழுதிய அஞ்சாங்கல்லு சிறார் பாடல்கள் (Anjjankallu Sirar Padalgal) - நூல் அறிமுகம் | தமிழ் புத்தகம் (Tamil Books)

செஞ்சி தமிழினியன் எழுதிய அஞ்சாங்கல்லு – நூல் அறிமுகம்

அஞ்சாங்கல்லு சிறார் பாடல்கள் நூலில் இருந்து.. விலைமதிப்பில்லாத வைரங்கள் - பாவண்ணன் ஒருநாள் மாலை வழக்கம்போல எங்கள் குடியிருப்புப் பகுதியை ஒட்டிய  ஏரிக்கரையில் வேடிக்கை பார்த்தபடி நடந்துகொண்டிருந்தேன். எனக்கு முன்னால் பத்து பதினைந்தடி தொலைவில் நாற்பது வயதையொட்டிய ஒருவர் ஏழெட்டு வயதுள்ள…
பாவண்ணன் எழுதி சந்தியா பதிப்பகம் வெளியீட்டுள்ள "விட்டல்ராவின் உரையாடல்கள் (VittalRaovin Uraiyadalgal); சில நினைவுப்பதிவுகள் - நூல் அறிமுகம் | VittalRaovin Uraiyadalgal Sila Ninaivupathivugal Book Review By Jayashri Raghuraman

விட்டல்ராவின் உரையாடல்கள்; சில நினைவுப்பதிவுகள் – நூல் அறிமுகம்

விட்டல்ராவின் உரையாடல்கள்; சில நினைவுப்பதிவுகள் - நூல் அறிமுகம் இந்த வருடத்திற்கான புதுமைப்பித்தன் விளக்கு அறிவிக்கப்பட்டுள்ள விட்டல்ராவ் அவர்கள், கடந்த 40 வருடங்களாக தமிழ் இலக்கியத்தில் இயங்கிக் கொண்டிருக்கக் கூடிய மிகப் பெரிய ஆளுமையாக இருக்கிறார் 82 வயதிலும் 20 வயது…
புதுவை இளவேனில் (Puduvai Ilavenil) எழுதி டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ் வெளியீட்ட நிச்சலனத்தின் நிகழ்வெளி (Nichchalanaththil Nigazhveli) Book

நிச்சலனத்தின் நிகழ்வெளி – நூல் அறிமுகம்

ஒளி ஓவியமும் சொல்லோவியமும் பாவண்ணன் மனித உருவத்தை வரையும் பழக்கம் குகைகளில் மனிதர்கள் வசித்த காலத்திலேயே தொடங்கியிருந்தாலும், அது பல நூற்றாண்டுகள் வரைக்கும் தோராயமான ஒரு வடிவமாகவே இருந்தது. அதற்குப் பிறகான காலகட்டத்தில்தான், நேருக்கு நேர் ஒரு மனிதரைப் பார்த்து அவரைப்போலவே…
எழுத்தாளர் விட்டல்ராவ் அவர்களுக்கு விளக்கு விருது (Vizhakku Award) அறிவிப்பு, இத்தருணத்தில் அவரைப் பற்றிய ஒரு சிறு வாழ்த்துக்கட்டுரை

விட்டல்ராவுக்கு விளக்கு விருது – பாவண்ணன்

விட்டல்ராவுக்கு விளக்கு விருது - பாவண்ணன் அமெரிக்காவில் வசிக்கும் தமிழிலக்கிய ஆர்வலர்களின் அமைப்பு கடந்த 27 ஆண்டுகளாக கலை இலக்கியத்தில் சிறப்பாகப் பங்காற்றியவர்களைக் கெளரவிக்கும் விதத்தில் புதுமைப்பித்தன் நினைவாக விளக்கு விருது அளித்து வருகிறது. இவ்விருது ஒரு லட்ச ரூபாய் பரிசுத்தொகையும்…
வ.அதியமான் (Va.Athiyaman) எழுதி சால்ட் பதிப்பகம் (Salt publications) வெளியீட்ட "குடைக்காவல்" (KudaiKaval) கவிதைத்தொகுதி - நூல் அறிமுகம்

“குடைக்காவல்” கவிதைத்தொகுதி – நூல் அறிமுகம்

கற்பனையின் பாதை பாவண்ணன் "குடைக்காவல்" (KudaiKaval) தொகுதியைப் பிரித்து முதல் கவிதையைப் படித்ததுமே, இது எனக்கான கவிதை என்றும் இவர் எனக்கான கவிஞர் என்றும் என் மனம் உணர்ந்துவிட்டது. ஒவ்வொரு பக்கத்தையும் புரட்டி, கவிதையைப் படித்தபோது, என்னிடம் சில விஷயங்களைத் தெரிவிப்பதற்காக…
போதமும் காணாத போதம் (Bothamum Kanadha Botham). ஆசிரியர்: அகரமுதல்வன் (Akara Muthalvan). Book Review | கதை சுருக்கம் - https://bookday.in/

“போதமும் காணாத போதம்” நாவல் – நூல் அறிமுகம்

போதமும் காணாத போதம் (Bothamum Kanadha Botham) சலியாதிரு ஏழை நெஞ்சே 1968இல் தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் கீழ்வெண்மணி கிராமத்தில் குடிசைகள் தீக்கிரையாக்கப்பட்டு ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என நாற்பத்து நான்கு பேர் கொல்லப்பட்டபோது, அந்த நிகழ்ச்சியைக் கண்டித்து ஏராளமான…
nool arimugam : ganavaabi - paavannan நூல் அறிமுகம் : ஞானவாபி - பாவண்ணன்

நூல் அறிமுகம் : ஞானவாபி – பாவண்ணன்

எஸ்ஸார்சியின் கதையுலகம் : ஆவணப்படுத்தும் கலை பாவண்ணன் அரிச்சந்திரன் கதையை அறியாதவர்களே இருக்கமுடியாது. ஒரு பக்கத்தில், சத்தியத்தின் உறைவிடமாக இருக்கிறான் அரிச்சந்திரன். எதை இழந்தாலும் சத்தியத்தின் மீது தான் கொண்டிருக்கும் பற்றை அவன் துறப்பதில்லை. அதற்காக மலையளவு துன்பம் வந்தாலும் எதிர்கொள்ளும்…
நூல் அறிமுகம்: விட்டல்ராவின் ”வெளிமனிதன்” – பாவண்ணன்

நூல் அறிமுகம்: விட்டல்ராவின் ”வெளிமனிதன்” – பாவண்ணன்



பெரிய மீனும் சின்ன மீனும்
பாவண்ணன்

ஒரு நாட்டுப்புறக்கதை. ஒரு குளத்தில் ஏராளமான மீன்கள் வாழ்ந்து வந்தன. அந்தக் கூட்டத்தில் ஒரு பெரிய மீன் இருந்தது. அதற்கு உணவு தேவைப்படும்போதெல்லாம், தன்னைச் சுற்றி நீந்தி விளையாடிக்கொண்டிருக்கும் சின்ன மீன்களை விழுங்கியது. பெரிய மீனைக் கண்டாலே சின்ன மீன்கள் அஞ்சத் தொடங்கிவிட்டன. அதன் வருகையை உணர்ந்ததுமே எல்லா மீன்களும் வேறு திசையை நோக்கி நீந்தித் தப்பிக்க முயற்சி செய்தன. ஆனால் பெரிய மீனின் வேகத்துக்கு அவற்றால் ஈடுகொடுக்க முடிவதில்லை. இப்படியாக சின்ன மீன் கூட்டத்தில் ஒரு பகுதி தொடர்ந்து பெரிய மீனுக்கு இரையாகி வந்தது.

தன் இயலாமையை நினைத்தும் பெரிய மீனின் கருணையின்மையை நினைத்தும் வருத்தத்தில் மூழ்கியிருப்பதைத் தவிர, சின்னமீன் கூட்டத்தால் எவ்விதமான தீர்வையும் எட்ட முடியவில்லை. ஒருநாள் எதிர்பாராத விதமாக தண்ணீருக்குள் வீசப்பட்ட தூண்டிலுக்கு பெரிய மீன் இரையாகி விட்டது. நல்ல வேளை, பிழைத்தோம் என சின்ன மீன்கள் நிம்மதியாக நீந்திக் களித்தன. பிழைத்த சின்ன மீன்கள் ஒரு கட்டத்தில் வளர்ந்து பெரிய மீன்களாகின. அவற்றுக்குப் பசி எடுத்தது. நாலா பக்கமும் அலைந்து திரிந்து தம்மைச் சுற்றி நீந்தித் திரியும் சின்ன மீன்களை விழுங்கத் தொடங்கின.

சின்ன மீனை பெரிய மீன் விழுங்குவது இயற்கையான பண்பு என இக்கதை சுட்டுவதாக பலர் நினைத்துக்கொண்டிருக்கக்கூடும். ஆனால் அதுவல்ல உண்மை. கண்ணுக்கு முன்னால் கிடைத்த ஒரு வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் தன்னலத்தையே அந்தப் பண்பு அடையாளப்படுத்துகிறது. மீன் இனத்தில் காணக்கூடிய இப்பண்பை, நாம் மனிதர்களிடத்திலும் பார்க்கமுடியும். அன்பு, பாசம், இரக்கம், நட்பு, பணிவு, கடமை, மதிப்பு என வெவ்வேறு பெயர்களில் தனக்கு நன்மை கிட்டும் வகையில் இன்னொருவரை வளைத்து, இழுத்து, நெருக்கி காரியங்களைச் சாதித்துக்கொள்ளும் மனிதர்கள் எங்கெங்கும் நிறைந்திருக்கின்றனர். சுரண்டுவதை முன்னிட்டு எவ்விதமான குற்ற உணர்வும் இல்லாதவர்களாகவே அவர்கள் வாழ்கிறார்கள். சுரண்டுவதை தன் உரிமையென்றும் இயல்பென்றும் நினைக்கும் அளவுக்கு அவர்கள் வாழ்க்கை அமைந்துவிடுகிறது.

விட்டல்ராவ் எழுதிய வெளிமனிதன் என்னும் தொகுப்பில் உள்ள நான்கு குறுநாவல்களிலும் இத்தகு மனிதர்களின் சித்திரங்கள் தீட்டப்பட்டுள்ளன. இவை எழுதப்பட்டு ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் கடந்திருந்தபோதும், இக்கதைகளில் காணப்படும் எந்தச் சித்திரமும் இன்றுவரை மாறாமல் அப்படியே நீடிக்கிறது. மனிதன் மகத்தான சல்லிப்பயல் என்று குத்தலாக ஓரிடத்தில் எழுத்தாளர் ஜி.நாகராஜன் குறிப்பிட்டிருக்கிறார். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு மனிதனின் சல்லித்தனம் பெருகியிருக்கிறதே தவிர, குறையவோ மறையவோ இல்லை என்பது சங்கடமான உண்மை. விட்டல்ராவின் குறுநாவல்கள் அந்த உண்மையின்மீது வெளிச்சத்தைப் பாய்ச்சுகின்றன.

வெளிமனிதன் குறுநாவலில் மூன்று முக்கியமான பாத்திரங்களை நம் முன்னால் நிறுத்தியிருக்கிறார் விட்டல்ராவ். ஒருவர் மானிஷி டே. கல்வித்துறைசார் ஆவணப்படங்கள், அனிமேஷன் படங்கள் போன்றவற்றை தயாரித்துக் கொடுக்கும் நிறுவனத்துக்குச் சொந்தக்காரர். இன்னொருவர் ரங்கராஜ். ஓவியர். இளமையில் ஆதரவின்றி நின்ற ஒரு தருணத்தில் அடைக்கலம் கொடுத்து குடும்பத்தில் ஒருவனாகவே கருதி காப்பாற்றி வரும் செஞ்சோற்றுக்கடனுக்காக மானிஷி டேயின் எல்லாச் செயல்களுக்கும் பின்னால் தூணாக நின்று பணியாற்றுபவர். மூன்றாவது நபர் ரங்கராஜின் அப்பா. சிறுவயதிலேயே அவனையும் அவன் தாயையும் கைவிட்டு பெங்களூரைவிட்டு சென்னைக்கு இடமாற்றல் வாங்கிக்கொண்டு வந்து இன்னொரு பெண்ணை மணந்து வாழ்க்கை நடத்துபவர். மகன் வசிக்கும் இடத்தை எப்படியோ தெரிந்துகொண்டு வந்து அடிக்கடி பண உதவிக்காக கை நீட்டுபவர். ஒருவர் செஞ்சோற்றுக்கடனுக்காக இன்னொரு மனிதனை பயன்படுத்திக்கொள்வதை தன் உரிமையாக நினைக்கிறார். இன்னொருவர் பெற்ற உரிமைக்காக, மற்றொருவரை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கருதுகிறார். அன்பும் கசப்பும் வெறுப்பும் படிந்த இந்த உறவுகளின் சிற்சில பரிமாணங்களை இந்தக் குறுநாவலில் சித்தரிக்கிறார் விட்டல்ராவ்.

ரங்கராஜ் என்னும் சிறுவனுக்கு இரக்கத்தின் காரணமாக அடைக்கலம் தந்தவர் டே. அத்தகு நல்ல குணம் என்றென்றும் வணக்கத்துக்குரியது. அதில் ஐயமே இல்லை. குடும்பத்தில் ஒருவன் என்னும் இனிப்பான அடைமொழி வழியாக உணவும் உறைவிடமும் மட்டும் கொடுத்துவிட்டு, பத்தாண்டுகளுக்கும் மேலாக அவனுக்கு ஊதியமே தராமல் அவன் உழைப்பில் வாழும் டே போன்ற மனிதர்களை வரையறுப்பது மிகவும் கடினம். வாழ்க்கை பற்றிய அவர்களுடைய கணக்கை ஒருவராலும் புரிந்துகொள்ள முடியாது. டே மீது ரங்கராஜின் மனத்தில் கசப்பு பெருகிக்கொண்டே போகிறது. ஆனால் அதை வெளிப்படுத்த இயலாதபடி ஏதோ ஒரு நாகரிக உணர்வு அவனைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது. அது வெடித்துவிடும் முன்பாக வெளியேறிவிட வேண்டும் என்பது அவன் எண்ணமாக இருக்கிறது. அப்படிப்பட்ட தருணத்தில் டேயின் குடும்பம் மகள் தொடர்பாக ஒரு சிக்கலில் சிக்கிகொண்டபோது, அச்சிக்கலிலிருந்து மீண்டு வர ரங்கராஜ் உள்ளார்ந்த வேகத்துடன் உதவி செய்கிறான்.

இன்னொரு பக்கத்தில் பெற்ற தந்தையின் சுரண்டல். தன்னிடமிருந்து பணம் பறிப்பதற்காகவே தன் இருப்பிடத்துக்கு மீண்டும் மீண்டும் வந்து அவமானத்தைத் தேடி வைத்துவிட்டுப் போகும் அவரை வெறுத்து ஒதுக்கினாலும் எதிர்பாராத அவருடைய மரணத்துக்குப் பிறகு அந்தக் குடும்பத்துக்கு தேவையான எல்லா உதவிகளையும் அவன் செய்தாக வேண்டிய நெருக்கடி உருவாகிறது. அவை அனைத்தையும் எவ்விதமான பற்றுணர்வுக்கும் இடம் கொடாமல் நிறைவேற்றுகிறான்.

எல்லாத் திசைகளிலும் அவன் ஒருவித சுரண்டலுக்கு இலக்கானவன். வாழ்நாள் முழுதும் பெரிய மீன்களால் விழுங்கப்படும் சின்ன மீனாகவே வாழ்ந்துவந்தவன். ஆனால் தான் பெற்ற கசப்பை அவன் யாருக்கும் திருப்பியளிப்பதில்லை. மாறாக, அவர்கள் உடைந்து விழும் தருணத்தில் துன்பம் துடைத்தூன்றும் தூணாக நிற்கிறான். ஒருவன் வீட்டு மனிதனாக இருப்பதிலோ, வெளிமனிதனாக இருப்பதிலோ எவ்விதமான பெருமையும் இல்லை. மாறாக மற்றவர்களைச் சுரண்டாத, மற்றவர்களுக்குத் தூணாக விளங்கும் மனிதனாக வாழ்வதுதான் முக்கியம். குறுநாவலுக்குள் விட்டல்ராவ் எந்த இடத்திலும் அந்த எண்ணத்தை முன்வைக்கவில்லை. மாறாக, ஒரு வாசகன் தன் வாசிப்பின் வழியாக அதைப் பெற்றுக்கொள்ளும் வகையில் கதையின் கட்டமைப்பு அமைந்திருக்கிறது.

புளி இத்தொகுப்பில் உள்ள இன்னொரு முக்கியமான குறுநாவல். வெவ்வேறு ரகமாக பிரிக்கப்பட்ட புளியை கொட்டையை நீக்கி, நார்ப்பகுதியை அகற்றும் வேலையில் நாள்முழுக்க ஈடுபட்டிருக்கிறார்கள் தொழிலாளர்கள். அந்தத் தொழிற்கூடம்தான் கதையின் களம். அங்கு பணிபுரியும் ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒவ்வொரு விதமான சிக்கல். சிலர் அதை வெளிப்படுத்துகிறார்கள். சிலர் அதை மனத்துக்குள்ளேயே அடக்கிவைத்துக்கொள்கிறார்கள். மற்ற தொழிற்கூடங்களில் அளிக்கும் கூலியைவிட குறைவான கூலியைத்தான் கொடுக்கிறான் முதலாளி. அந்த முதலாளியை ஏமாற்றி மாலை வேளையில் கூடத்தைவிட்டு வெளியேறி வீட்டுக்குச் செல்லும் வழியில் கூடத்திலிருந்து திருட்டுத்தனமாக உருட்டி எடுத்துவரும் புளிப்பந்தை பலசரக்குக்கடையில் கொடுத்துவிட்டு பணம் வாங்கிக்கொண்டு செல்கிறார்கள் பெண்கள். ஒவ்வொரு மீனுமே தன்னை பெரிய மீனாகக் கருதி, அடுத்த மீனை விழுங்கப் பார்க்கிறது.

சொந்த மகளின் திருமணத்தை நடத்த தேவைப்படும் பணத்தை கடனாகப் பெற்றுக்கொண்டு, அதற்கு ஈடாக மகள் போல வளர்த்த இன்னொரு இளம்பெண்ணை முதலாளி வீட்டுக்கு பணிப்பெண்ணாக நெஞ்சத்தை கல்லாக்கிக்கொண்டு அனுப்பிவைக்கிறாள் ஒரு தாய். ஒவ்வொருவரும் தன் சொந்த நலத்தையே முக்கியமாக நினைக்கிறார்கள். அதற்காக எந்த எல்லைக்கும் கீழே இறங்கிச் செல்ல தயாராக இருக்கிறார்கள். இதில் ஒருவருக்கும் குற்ற உணர்ச்சியில்லை. புளி எந்த வடிவத்தில் இருந்தாலும் அதன் சுவையில் மாற்றம் இருப்பதில்லை. மனிதர்களும் எந்தத் தட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் தத்தம் எல்லைக்கு உட்பட்ட வகைகளில் சுரண்டுவதற்கு நாணமற்றவர்களாகவே இருக்கிறார்கள். இது மிகப்பெரிய துரதிருஷ்டவசமான உண்மை.

மிக அருகில் ஒரு பாலம் சுரண்டலின் இன்னொரு வடிவத்தை முன்வைக்கும் கதை. பெருமழையின் காரணமாக இடிந்துபோன பாலத்தைப் பழுதுபார்த்து புதுசாகக் கட்டியெழுப்ப தொழிலாளர்களை ஓர் ஊரிலிருந்து நகரத்துக்கு அழைத்துவந்து அருகிலேயே இருக்கும் ஒரு மேட்டுப்பகுதியில் குடிவைக்கிறார் ஓர் ஒப்பந்ததாரர். அங்கிருந்து சிறிது தொலைவில் அதே நகரத்தைச் சேர்ந்த குடிசைவாசிகள் வசிக்கும் மற்றொரு பகுதி உள்ளது. அவர்களும் எங்கோ நகரத்துக்குள் வேலை செய்யும் தொழிலாளர்களே. குடிசைவாசிகளில் ஒருவன் வந்து ஒரு தொழிலாளிக்கு பொருளாசை காட்டி மயக்க நினைக்கிறான். சிமெண்ட் மூட்டையை திருட்டுத்தனமாக எடுத்துக் கொடுக்கும்படி கேட்கிறான். கட்டுமானத் தொழிலாளி அதற்கு இசைவதில்லை. நினைத்த அளவுக்கு பால வேலை வேகமாக நடைபெறவில்லை. யாராரோ எங்கெங்கோ பணத்தைச் சுருட்டுகிறார்கள். ஒரு கட்டத்தில் வேலை நின்றுவிடுகிறது. சிறிது கால இடைவெளியில் மீண்டும் தொடர்கிறது. நிற்பதும் தொடர்வதுமாக பாலவேலை நடப்பதுபோலவே அவர்கள் வாழ்க்கையும் தேக்கமும் அசைவும் கொண்டதாகவே இருக்கிறது. அவர்கள் ஒப்பந்ததாரரால் கைவிடப்படுகிறார்கள். வாழ்க்கையின் நிமித்தமாக உள்ளூர் குடிசைவாசிகள்போல எங்கெங்கோ பொருளியல் தேவைக்காக வழி தேடி அலைகிறார்கள். அவர்களுக்கு நட்பாகக் கிடைக்கும் ஒருவன், அக்குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை தன் பாலியல் தேவைக்குப் பயன்படுத்திக்கொள்கிறான். நீரின் பெருக்கால் அடிக்கடி இடிந்து விழும் பாலத்தைப்போல அவர்கள் வாழ்வும் சிதைவதும் எழுந்து நிற்பதுமாக அமைந்துவிடுகிறது.

குடும்ப அமைப்புக்குள்ளேயே திகழும் தன்னலப்போக்கை இன்னொருத்தி குறுநாவல் முன்வைத்திருக்கிறது. சொந்த ஊரில் கணவன் செய்யும் கொடுமைகளைத் தாங்கிக்கொள்ள முடியாமல் பெற்ற மகனைக்கூட உதறிவிட்டு வெளியேறிவிடுகிறாள் ஒருத்தி. அவள் இறங்கிய இடத்தில் அவளை ஏற்று அடைக்கலம் கொடுக்கிறான் இன்னொருவன். ஏற்கனவே திருமணமாகி பிள்ளைகள் இருப்பவன் அவன். அவளை இன்னொரு மனைவியாக ஏற்று அவளோடு குடும்பம் நடத்துவதில் அவனுக்கு எவ்விதமான மனத்தடையும் இல்லை. அவளுடைய உழைக்கும் வேகமும் அர்ப்பணிப்பும் அவளை பொருளாதார அளவில் சொந்தக் காலில் நிற்க துணையாக இருக்கின்றன. அவளோடு தொடக்கத்தில் மோதும் முதல் மனைவி அவளிடமிருந்து கிட்டும் லாபங்களைக் கணக்கிட்டு அமைதியாகிவிடுகிறாள். ஒருவரை ஒருவர் பயன்படுத்திக்கொள்கிறார்கள். எதிர்பாராத கணத்தில் அவள் வசிக்கும் தெரு வழியே செல்லும் கட்சி சார்ந்த வாகன ஊர்வலத்தில் பழைய கணவனைப் பார்க்கிறாள் அவள். தன் இருப்பிடம் தெரிந்துவிட்டதே என்று குழம்புகிறாள். சில நாட்களிலேயே அவன் அனுப்பிவைத்த சமாதானத்தூதுவன் அவளைச் சந்தித்து பல வாக்குறுதிகளை அளிக்கிறான். பழைய குடும்ப அமைப்புக்குள் பொருந்தும் வேகம் உந்தித் தள்ள ஒருவரிடமும் தெரிவிக்காமல் இரவோடு இரவாக அவனை நாடிச் சென்றுவிடுகிறாள் அவள்.

ஒவ்வொருவரும் இன்னொருவரை, ஒரு பாத்திரத்தைப்போல பயன்படுத்திக்கொள்வதை பல்வேறு காட்சிகள் வழியாக அடுக்கிக்கொண்டே செல்கிறார் விட்டல்ராவ். ஒளவையாரின் மூதுரை உறவைப்பற்றிய ஒரு வரையறையை அளிக்கிறது. அற்ற குளத்தில் அறுநீர்ப்பறவைபோல் உற்றுழி தீர்வார் உறவல்ல என்றும் அக்குளத்தில் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே ஒட்டி உறுவார் உறவு என்றும் கூறுகிறது அந்த வரையறை. ஆனால் எதார்த்தம் வேறொன்றாக இருக்கிறது. ஒருவன் தன் மனைவியோடு சேர்ந்திருப்பதும் அடித்து வதைப்பதும் விரட்டுவதும் தேவையான போது அழைத்துச் சேர்த்துக்கொள்வதும் தன் விருப்பம் சார்ந்த உரிமைகளாக நினைக்கிறான். இன்னொருவனோ அடைக்கலம் தேடி வந்தவளுக்கு அளிக்கும் ஆதரவை ஆட்கொள்ளும் உரிமையாக நினைத்துக்கொள்கிறான். அவளோ, யார் தனக்குரியவர் என்னும் முடிவை அடையமுடியாமல் தடுமாறுகிறாள். அனைவரும் அந்தந்த நிமிடத்தில் தோன்றுவதைச் செய்கிறவர்களாக இருக்கிறார்களே தவிர, வரையறையை ஒட்டி வாழ்கிறவர்கள் யாருமில்லை.

காற்றின் போக்கில் அலையும் காகிதத்துண்டுபோல மனிதவாழ்வு தன்னலத்தின் வேகத்துக்கு ஆட்பட்டு அலைந்துகொண்டே இருக்கிறது. இன்னொருவரை இரையாக்கிக்கொள்வது பற்றிய நாணமற்றதாக கொஞ்சம் கொஞ்சமாக சமூகம் மாறிக்கொண்டே செல்கிறது. விட்டல்ராவின் குறுநாவல்கள் அந்த மாற்றத்தின் பதிவுகளாக மலர்ந்திருக்கின்றன.

– பாவண்ணன்

நுல் அறிமுகம்: எஸ்.மாணிக்கவாசகனின் தூங்காமல் தூங்கி Thoongamal Thoongi Book By S. Manikkavasagan Bookrevirew By Pavannan

நுல் அறிமுகம்: எஸ்.மாணிக்கவாசகனின் தூங்காமல் தூங்கி



போற்றத்தக்க பெருவாழ்வு
– பாவண்ணன்

அந்தக் காலத்தில் கதை கேட்கும் பேரக்குழந்தைகளிடம் “நான் வாழ்ந்த கதையைச் சொல்லவா, வளர்ந்த கதையைச் சொல்லவா?” என்று சற்றே செல்லமான சலிப்போடுதான் பெரியவர்கள் தொடங்குவார்கள். பிறகு சுவரோடு ஒட்டிச் சாய்ந்தபடி காலை நீட்டி உட்கார்ந்துவிட்டால், கதைகள் அருவியாகக் கொட்டத் தொடங்கிவிடும். கால்மீது படுத்துக்கொண்டிருக்கும் பேரனின் முதுகைத் தட்டியபடியோ அல்லது தோள்மீது சாய்ந்திருக்கும் பேத்தியின் காலைத் தட்டியபடியோ ஒன்றையடுத்து ஒன்றென கதைகளைச் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். வாழ்க்கையில் அவர்கள் கண்ட ஒவ்வொரு அனுபவத்துக்கும் காலும் கையும் இறக்கையையும் ஒட்டி கதைகளாக மாற்றிவிடுவார்கள். விவசாயக்குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடமும் அத்தகு கதைகள் இருக்கும். வியாபாரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடமும் அத்தகு கதைகள் இருக்கும். கதைகள் இல்லாத மனிதனே இல்லை.

இன்று தொழில்கள் பல்கிப் பெருகியிருக்கின்றன. கல்வி பல கதவுகளைத் திறந்துவைத்திருக்கிறது. வண்டலைக் கொண்டுவந்து சேர்க்கும் ஆற்றுவெள்ளத்தைப்போல புதிய கல்வியும் புதிய வேலையும் வாழ்க்கையில் புதிய அனுபவங்களைக் கொண்டுவந்து சேர்த்திருக்கின்றன. தொழில்சார் அனுபவப்பதிவுகள் இலக்கியத்தில் ஒரு முக்கியமான வகைமையாக இடம்பெறத் தொடங்கிவிட்டன.  மயக்க இயல் மருத்துவராக முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்த எஸ்.மாணிக்கவாசகன் என்னும் மருத்துவர் தன் பணிக்கால அனுபவங்களை தூங்காமல் தூங்கி என்னும் தலைப்பில்  2008இல் ஒரு புத்தகமாக எழுதி வெளியிட்டார். 

ஒரு மருத்துவமனையில் அறுவைசிகிச்சைக்கு வரும் நோயாளிகளை மயக்கவியல் மருத்துவர்தான் முதலில் சந்திக்கிறார். நோயாளியின் வயது, ஆரோக்கியம், நோயின் தன்மை அனைத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு நோயாளிக்குக் கொடுக்கவேண்டிய மயக்க மருந்தின் அளவை அவர் தீர்மானிக்கிறார். மருந்து வேலை செய்யத் தொடங்கியதும் நோயாளி மெல்லமெல்ல மயங்கி ஒருவித தூக்கநிலைக்குச் சென்றுவிடுகிறார். தசைகள் தளரத் தொடங்குகின்றன. அறுவை சிகிச்சை முடிந்ததும் மீண்டும் சுய உணர்வுக்கு மீட்டு வரும் மருந்தை அளித்து கொஞ்சம் கொஞ்சமாக விழிப்பு நிலைக்குக் கொண்டு வருகிறார் மருத்துவர். 

கோட்பாடு அளவில் இப்படி சுருக்கமாகச் சொல்வது வேறு. வெற்றிகரமாக செயல்படுத்து வேறு. இடையில் எதிர்பாராத விதமாக சிக்கல்கள் நேரக்கூடும். ஒவ்வொரு சிக்கலும் ஒவ்வொரு விதமாக இருக்கும். அறிவையும் அனுபவத்தையும் உள்ளுணர்வையும் துணையாகக் கொண்டு மருத்துவர் அவற்றை எதிர்கொள்கிறார். மருத்துவரைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு அறுவை சிகிச்சையும் ஒரு புத்தம்புதிய அனுபவம். ஒவ்வொன்றிலும் ஒரு சாகசம் நிறைந்துள்ளது. தன் மருத்துவமனை வாழ்வில் தான் பெற்ற அனுபவத்தொகையிலிருந்து ஒருசில அனுபவங்களை மட்டுமே மருத்துவர் மாணிக்கவாசகன் இந்த நூலில் பதிவு செய்துள்ளார். அவர் இன்று இல்லை.

ஒவ்வொரு அனுபவப்பதிவிலும் சிகிச்சைக்கு வந்த நோயாளிகளின் வாழ்க்கைச்சூழலைப்பற்றிய குறிப்புகள் உள்ளன. அறுவைக்கூடத்திற்குள் நோயாளி இருக்கும்போது, நோயாளியோடு தொடர்புடைய மனிதர்கள் வெளியே நின்றிருக்கிறார்கள். அவர்களிடையே வெவ்வேறு விதமான  உறவுகள். உரசல்கள். மோதல்கள். ஒரு விரிவான காட்சியில் சிற்சில சொற்களோடு அவர்கள் அனைவருடைய சித்திரங்களும் இடம்பெற்றுவிடுகின்றன. இக்குறிப்புகள் ஒரு வாசகனை உடனடியாக ஒரு வாழ்க்கைக்குள் அழைத்துச் செல்கிறது. இத்தகு அனுபவப்பதிவுகளின் வெற்றி என்பது, இவை ஏதோ ஒரு வகையில் மானுடவாழ்வுடன் நேரடியாகத் தொடர்புகொண்டிருக்கிறது என்னும் அம்சமே. அக்குறிப்புகள் பக்கம் பக்கமாக நீண்டிருக்கவேண்டிய அவசியமில்லை. பத்து வரிகள் இருந்தாலும் போதும், வயல்சேற்றோடு கலந்து கரைந்துபோகும் உரப்பொடியைப்போல நெஞ்சின் ஆழத்தில் சென்று அவை தங்கிவிடுகின்றன. 

இப்படிப்பட்ட அனுபவ நினைவோடைகள் ஏன் எழுதப்படவேண்டும் என்னும் கேள்விக்கு வேறெங்கும் காணமுடியாத மனிதர்களை இத்தகு அனுபவப்பதிவுகளே நமக்கு வழங்குகின்றன என்பதுதான் சிறந்த பதில். எல்லாப் பதிவுகளிலும் இழையோடிக்கொண்டிருக்கும் மருத்துவரின் கனிவும் மனிதாபிமானமும்  இப்பதிவுகளை மிகமுக்கியமான தொகுதியாக மாற்றிவிடுகின்றன.

ஒரு பதிவு. இரு குழந்தைகளுக்குத் தாயான பிறகு நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக கருத்தடை அறுவைசிகிச்சை செய்துகொண்ட ஒரு பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தாள். கருக்குழாய் இணைப்பு சிகிச்சைக்காக அவள் வந்திருந்தாள். குழம்பிப்போன மருத்துவர் அவளிடம் கனிவோடு பேசியபோது உண்மை விவரம் தெரிந்தது. அவள் கடலோரத்தில் வசிக்கும் குடும்பத்தைச் சேர்ந்தவள். ஆழிப்பேரலை அவளுடைய கணவனையும் குழந்தைகளையும் இழுத்துச் சென்றுவிட்டது. யாரும் இப்போது உயிருடன் இல்லை. கணவனின் தாயார் அவளுக்கு ஆறுதல் சொல்லி தம் குடும்பத்திலேயே தங்கவைத்துக்கொண்டார். பற்றற்ற பார்வையுடன் நடைப்பிணமாக இருந்த அவளுக்கு வாழ்வில் ஒரு பிடிப்பை உண்டாக்குவதற்காக, கணவனின் தம்பியையே அவளுக்குத் திருமணம் செய்துவைத்தார். குழந்தை இல்லாத வாழ்க்கை அவளுக்கு வெறுமை சூழ்ந்ததாக இருந்தது. ஒரு குழந்தை அவளுடைய வாழ்க்கைக்கு மலர்ச்சியைக் கொண்டுவந்து  சேர்க்கக்கூடும் என அவள் குடும்பம் நினைத்தது. மருத்துவத்தில் கருக்குழாய் இணைப்புக்கு வழி இருக்கிறது என எப்படியோ யார்மூலமாகவோ அவர்கள் தெரிந்துவைத்திருந்தார்கள். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துவந்து சேர்த்துவிட்டனர். எந்த முடிவையும் சொந்தமாக எடுக்கும் சூழலற்ற அந்த அபலைப்பெண் பற்றற்ற குரலில் பகிர்ந்துகொண்ட சொந்தக்கதையைக் கேட்டு மருத்துவரும் ஒருகணம் நிலைகுலைந்து போய்விட்டார். மனபாரத்துடன் மெளனமாக சிகிச்சைக்காக அவளைத் தயார்ப்படுத்தினார். சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.

இன்னொரு பதிவு. கழுத்துக்கழலையுடன் அறுவைசிகிச்சைக்காக ஒரு பெண்மணி மருத்துவமனைக்கு வந்தார். அவருக்குத் துணையாக பதினாலு வயதுப் பையனொருவனும் வந்திருந்தான். அறுவைக்கூடத்தில் மருத்துவர் மாணிக்கவாசகம் மயக்கமருந்து கொடுக்க ஏற்பாடு செய்துகொண்டிருந்தபோது மூத்த மருத்துவர் ஒருவர் வந்து, அதைத் தான் கவனித்துக்கொள்வதாகச் சொல்லி, அவரை மற்ற நோயாளிகளைக் கவனிக்க அனுப்பிவிட்டார். துரதிருஷ்டவசமாக மயக்க மருந்து செலுத்தியதும் நோயாளியின் உடலில் நீலம் பரவத் தொடங்கிவிட்டது. மாணிக்கவாசகம் அவசரமாக அறுவைக்கூடத்துக்கு அழைக்கப்பட்டார். நீண்ட நேர போராட்டத்துக்குப் பிறகு நோயாளியைத் தூக்கநிலையில் வெற்றிகரமாக மூழ்கவைத்தார் மாணிக்கவாசகன். அதற்குப் பிறகு அந்தக் கழலைநீக்க அறுவைசிகிச்சையும் வெற்றிகரமாக நடந்துமுடிந்தது. கூடத்தைவிட்டு வெளியேறியபோது, அந்தத் தாயின் பையன் மாணிக்கவாசகத்தின் காலில் விழுந்து நன்றி சொன்னான். அதற்குப் பிறகுதான் பேச்சுக் கொடுத்து அவர்களைப் பற்றிய தகவல்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டார் மாணிக்கவாசகன். தந்தை இல்லாத குடும்பம். கொஞ்சம் நிலங்கள் உண்டு. சொந்தமாக பம்ப்செட்டும் இருந்தது. தாயும் மகனும் நிலத்தில் கஷ்டப்பட்டு உழைத்து குடும்பம் நடத்தினர். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அந்தப் பெண்மணி மருத்துவமனைக்கு வந்தார். அப்போது கருப்பைநீக்க அறுவை சிகிச்சை செய்துகொண்டாள்.

பையன் இப்போது இளைஞனாகிவிட்டிருந்தான். தன் அம்மாவை கண்ணும் கருத்துமாக கவனித்துக்கொண்டான். ஐந்தாறு ஆண்டுகளுக்குப்  பிறகு மீண்டும் அவள் மருத்துவமனைக்கு வந்தாள். வயிற்று வீக்கம். வலி. சோதனைகளில் புற்றுநோய் இருப்பது தெரிந்தது. அப்போதும் அவன் துணைக்கு வந்திருந்தான். கையிலும் கழுத்திலும் தங்கச்சங்கிலிகள் கண்ணைப் பறித்தன. அவனுடைய புதுக்கோலம் அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. புற்றுநோயைப்பற்றியும் அவளைப் பிழைக்கவைப்பது கடினம் என்பதையும் நோயாளியிடம் எப்படி தெரிவிப்பது என்று மருத்துவருக்கு ஒரு தயக்கம் இருந்தது. அதனால் அவரைப் பார்ப்பதை ஒன்றிரண்டு நாட்கள் தவித்தார். பிறகு உண்மையைச் சொல்வதற்காக  அந்தப் பெண்மணியைச் சந்தித்தார். துணைக்கு இருந்த மகனை சாப்பிட்டு வருமாறு சொல்லி அனுப்பிவைத்தாள்  அவள். பிறகு, மருத்துவர் பேசுவதற்கு முன்பாக, மருத்துவரிடம் அவள் மனம் திறந்து பேசத் தொடங்கினாள். தனக்கு வந்திருக்கும் நோய் பற்றியும் தான் பிழைப்பதற்கு வாய்ப்பில்லை என்பது பற்றியும் தனக்கு ஏற்கனவே தெரியும் என்று சொன்னாள்.

நிலத்தில் தன்னோடு உண்மையாகப் பாடுபட்டு உழைத்த மகனுக்கு திருமணம் செய்துவைத்ததையும் அதற்குப் பிறகு அவனுடைய இயல்பு கொஞ்சம் கொஞ்சமாக திரிபடைந்துவிட்டது என்றும் சொன்னாள். செல்வம் சேர்க்கும் ஆசையால் மகன்  சேரத் தகாதோரிடமெல்லாம் கூட்டுசேர்ந்து கெட்டுப் போனதையும் அவர்களோடு சேர்ந்து கோவில் நகைகளைத் திருடி விற்றுப் பணமீட்டுவதையும் சொன்னாள். ஒரு நள்ளிரவில் வீட்டுக்குப் பின்பக்கம் ஒரு சிலையைப் புதைத்துவைப்பதை நேருக்கு நேர் பார்த்தபோது அடிவயிற்றில் சுருக்கென்று ஒரு வலி படர்ந்ததையும் அக்கணத்திலிருந்து அந்த வலி பாடாய்ப்படுத்துவதையும் சொன்னாள். “என்னைத் தண்டிச்சதோடு விட்டுடு தெய்வமே, என் குடும்பத்தை ஒன்னும் செஞ்சிடாத. என் புள்ளைக்கு நல்ல புத்தியை கொடு” என்பது மட்டுமே இறைவனிடம் தான் முன்வைக்கும் பிரார்த்தனை என்றும் சொன்னாள். “அறுதலை பெத்த தருதலையாயிடுச்சின்னு நாலு பேர் சொல்றத காது கொடுத்து கேக்கறதுக்கு முன்னால நான் போய் சேர்ந்துடணும். என்னை டிஸ்சார்ஜ் பண்ணிடுங்க டாக்டர். எனக்கு ஆப்பரேஷன்லாம் செய்யவேனாம். போற உயிர் என் வீட்டுலயே போகட்டும்” என்று  கேட்டுக்கொண்டாள். ஒழுக்கத்துக்கும் பாசத்துக்கும் நடுவில் ஊசலாடும் அந்தத் தாயின் வேதனை பல நாவல்களுக்குரிய களம்.

செயற்கை சுவாசம் கொடுக்கக்கூடிய வென்டிலேட்டர் கருவிகள் இல்லாத ஒரு காலத்தி மாணிக்கவாசகம் பணிபுரிந்திருக்கிறார்.  மூச்சுக்குத் தேவையான ஆக்சிஜனை ஒரு பையில் நிரப்பி, அதை ஒருவர் ஒரு நிமிடத்துக்கு பதினைந்து முறை என்கிற கணக்கில் சீராக அழுத்தி அழுத்தி சுவாசத்துக்காக இணைக்கப்பட்டிருக்கும் குழாய் வழியாக அனுப்புவதுதான் அன்றைய நடைமுறையாக இருந்தது. ஒருமுறை, திடீரென மயக்கமுற்று கீழே விழுந்துவிட்ட மருத்துவக் கல்லூரி மாணவியொருத்தியை அறுவைக்கூடத்தில் சேர்த்து சிகிச்சையளிக்கும் நெருக்கடி உருவானது.  அறுவை முடிந்த பிறகும் சுயநினைவு திரும்புவதற்குத் தேவையான மருந்துகளை அளித்தபோதும் அவள் சுயநினைவுக்குத் திரும்பவில்லை. அவள் பிழைப்பாளா மாட்டாளா என்பதைத் தெளிவுற எடுத்துச் சொல்ல இயலாத நிலையில், இரவும் பகலும் மருத்துவர்கள் மாறிமாறி உட்கார்ந்து பன்னிரண்டு நாட்கள் தொடர்ச்சியாக செயற்கை சுவாசமளித்தனர். பதின்மூன்றாவது நாள் அவள் மெதுவாக கண்விழித்துப் பார்த்தாள். பிறகு மெல்ல மெல்ல சுயநினைவு பெற்றாள். ஓர் உயிரைக் காப்பாற்றுவது எவ்வளவு பெரிய மனநிறைவு என்பதை அனைவருமே அக்கணத்தில் உணர்ந்துகொண்டனர்.

தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுக்கவில்லை என்பதற்காக பெற்றோர்கள் மகனிடம் சில கடுமையான சொற்களைச் சொல்லிவிட்டனர். அதைக் கேட்டு மனமுடைந்த மகன் மூட்டைப்பூச்சி மருந்தை எடுத்துக் குடித்துவிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறான். உண்மையைத் தெரிந்துகொண்ட அவனுடைய பெற்றோர் அவசரமாக அவனை மருத்துவமனைக்கு அழைத்துவந்தனர். உடனடியான முதலுதவி அவனுக்கு வழங்கப்பட்டது. பல மணிப் போராட்டத்துக்குப் பிறகும் அவனைக் காப்பாற்ற இயலவில்லை. அனைவரும் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அவனுடைய மரணம் நிகழ்ந்தது. 

மருத்துவரின் ஆசிரியர் ஒருவர் தன் மனைவியை அறுவைசிகிச்சைக்காக சேர்த்திருந்தார். கருணை நிறைந்தவர் அந்த ஆசிரியர். பள்ளியிறுதிக்கான தேர்வுகளை எழுதிக்கொண்டிருந்த சமயத்தில் ஒரு மாணவனுடைய தந்தையார் இறந்துவிட்டார். அன்றுதான் இறுதித்தேர்வு. அவனுடைய வீட்டுக்குச் சென்ற அந்த ஆசிரியர் அவனுக்கு ஆறுதல் சொல்லி, மெல்ல பள்ளிவரைக்கும் அழைத்துவந்து தேர்வெழுத வைத்து, மீண்டும் அவனை வீடு வரைக்கும் அழைத்துச் சென்று இறுதிச்சடங்கு முடியும் வரைக்கும் உடனிருந்துவிட்டுத் திரும்பிய பெருந்தன்மையாளர். அப்படிப்பட்டவரின் மனைவிக்குத்தான் அறுவைசிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். அறுவைசிகிச்சை நல்லபடியாகவே முடிந்தது. மயக்கம் தெளிவதற்கான மருந்துகளைக் கொடுத்தபோது பிரச்சினை உருவானது. எதிர்பார்த்தபடி அம்மருந்து வேலை செய்யவில்லை. தசைகள் ஊக்கம் பெற்று மீண்டும் செயல்படத் தொடங்கி சுயநினைவு கூடிவர வேண்டிய நிலையில் அவர் நினைவு திரும்பாமலேயே இருந்தது. ஏன் அந்தச் சிக்கல் ஏற்பட்டது என்பதை ஒருவராலும் ஊகிக்கமுடியவில்லை. அறிந்துகொள்ள முடியாத ஏதோ ஒரு ரசாயனமாற்றம் உடலுக்குள் நிகழ்ந்து அவருடைய உயிரைப் பறித்துவிட்டது. ஆசிரியரின் மனைவியுடைய உயிரைக் காப்பாற்ற முடியவில்லையே என்பது நினைவில் ஆறாத வடுவாக பதிந்துவிட்டது.

இரு மாத இடைவெளிக்குப் பிறகு ஆசிரியரைச் சந்தித்து ஆறுதலாகப் பேசிவிட்டு வரலாம் என்று சென்றார் மருத்துவர். எதிர்பாராத கணத்தில் பள்ளியில் ஒரு மாணவர் தவிர்க்கவேண்டிய பிழைகளைப்பற்றி அவர் எடுத்த பாடத்தைப்பற்றியதாக பேச்சு திரும்பியது. கல்லாப்பிழை, கருதாப்பிழை, நெஞ்சில் நில்லாப்பிழை, நினையாப்பிழை, சொல்லாப்பிழை, எழுதாப்பிழை என பிழைகளின் பட்டியலை மீண்டும் பகிர்ந்துகொண்டனர். அந்த மரணத்தில் என்ன பிழை நடந்தது என்று எங்களால் கண்டுபிடிக்கவே முடியவில்லை ஐயா என்று வருத்தத்துடன் அவர் தெரியப்படுத்தினார். அப்போது “இன்னொரு பிழையும் அப்பட்டியலில் உண்டு. சின்ன வயதி உங்களுக்குப் புரியாது என்பதால் நான் சொல்லவில்லை. இப்போது புரியும். அது முன்னம் எழுதினவன் கைப்பிழை” என்றார் ஆசிரியர். அது ஒரு ஆறுதல் சொல் என இருவருக்குமே தெரியும். மனிதர்கள் தம்மைத்தாமே தேற்றிக்கொள்ள இப்படி சில ஆறுதல் சொற்கள் சில நேரங்களில் தேவைப்படுகின்றன.

நூல் முழுக்க இப்படி எண்ணற்ற அனுபவக்குறிப்புகள். தொழிலில் அர்ப்பணிப்பு உணர்வு மிக்க ஒரு மருத்துவரின் வாழ்க்கையில் எண்ணற்றோரின் வாழ்க்கைத்துளிகள் கலந்திருக்கின்றன. மருத்துவர் மாணிக்கவாசகம் வாழ்ந்த வாழ்க்கையை போற்றத்தக்க பெருவாழ்வு என்று சொல்லலாம்.

(தூங்காமல் தூங்கி.- அனுபவக்கட்டுரைகள். எஸ்.மாணிக்கவாசகன். ஒரு மயக்க இயல் மருத்துவரின் நினைவோடை. சந்தியா பதிப்பகம், 53வது  தெரு, 9வது அவென்யு, அசோக் நகர், சென்னை -83. விலை.ரூ.110)