பேரழகியின் பேனா…!!!! கவிதை – கவிஞர் ச.சக்தி
அந்த கருப்பு நிற பேனாவும்
வெள்ளைப் பேப்பரும்
ஈரக்காற்றிலே மிதக்கின்றன.
மனமெனும் பந்தலில்
அடுக்கி வைக்கப்பட்ட
எழுத்துக்களைச் சுமந்தவாறு,
இரவு முழுவதும்
கண்களில் மேய்ந்து
கொண்டிருந்த
பல எழுத்துக்கள்
கண்களை
திறந்ததும் மறைந்து
கொள்கின்றன
இமைகளென்னும்
கதவுகளுக்கு பின்னே ,
“வானத்திலிருந்து
கீழ் நோக்கி வரும்
மழைத்துளி தரையில்
விழும் பொழுது
பூத்துக் கரைந்து விடுகிறது
கானல் நீராகிய கனவுக்குள்ளே ”
“ஊர்ந்து
செல்லும் கட்டெறும்பு
ஒன்று கருப்பு மையினைத்
தடவியவாறு ஊர்ந்து செல்கிறது
அவள் எழுத முற்பட்ட
எழுத்துக்களை எழுதியவாறு ”
கவிஞர் ச.சக்தி
அழகு பெருமாள் குப்பம்,
பண்ருட்டி,
சுதாவின் கவிதைகள்
அவளும் நானும்
அரிதாகவே பேசிக் கொள்கிறோம்…
எப்போதாவது எதிர்ப்பட்டாலும்
புன்னகை இதழ்கள்
ஆழ விரியாமலும்
அகல விரியாமலும்
கடந்து செல்கின்றன…
எங்களின் பெயரிடப்படாத உறவில்
அப்படி என்ன நேர்ந்து விடப் போகிறது…
இல்லை அப்படி என்ன நேர்ந்துவிட்டது…
என்று மட்டும் இப்போது வரை புரியவில்லை…
இருந்துவிட்டுப் போகட்டும் அதனாலென்ன?…
சில மணித்துளிகளுக்கு முன்பு
நானும் அவளும் சேர்ந்து வாங்கிய
தோட்டை மாற்ற நினைத்தேன்…
அப்போது என் தொங்கட்டான்
சொல்லியது நீங்கள்தான்
பேசிக்கொள்வதில்லை
நீங்கள் கடந்து போகும்போது
நாங்கள் பேசிக் கொள்கிறோமென…
இருந்துவிட்டுப் போகட்டும் அதனாலென்ன?…
******************************
மை தீர்ந்த
பந்து முனை
பேனாவின் தனிமை…
மை இருந்தும்
முனை ஒடிந்த
பேனாவின் இயலாமை…
தவறி விழுந்த பேனாவை
தழுவ விரலின்றி
குப்பையில் சேர்ந்த
பேனாவின் இறுதிநாட்கள்…
எழுத்தை முன்வைத்துப்
பிரித்த பேனாவையும்
மூடியையும்… எழுதி முடித்தபின்
இணைக்க மறந்ததால்…
வருத்தத்தில் காற்றைக் குடித்து
இறந்த பேனாக்கள் பல…
அந்த வரிசையில் நிற்க மனமின்றி
உன் விரல் தேடி அலைகின்றேன்…
எழுதித் தீர்த்துவிடு…
ஏனெனில் பாதியில் பரிதவிக்கப்
பயமாக இருக்கிறது…
****************************
நான்கு சுவர்களுக்கு
மத்தியில் நான்
மட்டும் தனியே…
தனிமைப் படுத்திக் கொள்
எனச் சொல்லும் வைத்தியருக்குத்
தெரிந்திருக்க வாய்ப்பில்லை…
தனிமை
சில அமானுஷ்யங்களையும்…
சில அழகான நினைவுகளையும்…
கவிதைக்கு இட்டுக்கட்டும்
வார்த்தைகளையும்…கடத்த வல்லது…
நான்கு சுவர்களுக்கு
இடையே மரப்பலகையில் இருக்கும்
சிறு துவாரத்தின் வழி
என் உலகம் விரிகிறது…
இருளும் இருளின் பொருட்டு
சில வெளிச்சமும்…ஊரே
உறங்கும்போது உறங்கா விழிகளும்…
இந்தக் கவிதையைப் போல்
முற்றுப்பெறாமல் தொடர்கிறது…
என் பிரியமான காய்ச்சலும்…
********************************
இன்று இல்லாது போனாலும்
என்றோ ஒரு நாள்…
அது வருடத்தின் முதல் நாளோ
என் பிறந்த தினத்தின் முதல் நிமிடமோ…
விடியலின் சில மணித்
துளிகளுக்கு முன்போ…இல்லை
அடர்ந்த இருளின் மத்தியிலோ…
இதில் ஏதும் நிகழாது போனாலும்
என் இறுதிப் பயணம் முடியும்
சில நிமிடங்களுக்கு முன்போ…
கட்டாயம் நிகழ்ந்துவிடும்…
என் அடர்ந்த நெத்தியில்
உன் சிறு இதழ் முத்தம்…
-சுதா
பெண்ணியம் பேசிப் பறக்கும் தமிழ்த்தும்பி கவிதை – பேசும் பிரபாகரன்
கண்டம் விட்டு கண்டம் பாயும்
தட்டான்பூச்சி தம்பி
நீ உயிருள்ள ஹெலிகாப்டர் தும்பி !
நீ தூரத்தில் பறந்தால்
தொலைவில் மழை !
நீ தொடும் தூரத்தில் பறந்தால்
படும் தூரத்தில் மழை !
காலம் காட்டும் கணவானே
கொஞ்சம் கருத்துப் பேசலாம் வா !
நீ நீருக்குள் நெடுங்காலம் வாழ்ந்தாலும்
உன்னிடம் தடுமாற்றம் இல்லை
பாருக்குள் இருக்கும் நீருக்குள்
சென்றுவிடாதே
பறக்கும் பூச்சியான நீ
பாடும் பூச்சி ஆகிவிடுவாய் !
மதுபானம் குடித்து
புது கானம் பாடிவிடுவாய் !
தன் வலிக்கு மருந்தென்று , மது வழிக்கு போவோன்
தனித்தெளிவு பெற
தனித்தமிழ் தும்பியே
தரணியெங்கும் நீ பற !
வசதியான பெண் தேடும்
வக்கில்லா குடும்பத்தார்
அழகான பெண் வேண்டும்
மன அழுக்கான வம்சத்தார்
தகுதி மீறி பெண் பார்க்கும்
தன்னை தான் இகல் பரம்பரையினார்
மனத் திசைகளில் தீ மூட்ட
கொடுந்தமிழ் தும்பியே
குரல் கொடுத்து நீ பற !
பெண்ணடிமை பேதைமை !
பெண்ணுரிமை தோழமை !
பெண் குழந்தை பால் உரிமை !
பெண் விடுதலை பார் கடமை !
என பெண்ணியம் பேசவே
கன்னித்தமிழ் தும்பியே
கானம் பாடி நீ பற!
படித்த பெண் தருவாள் ,
பாருக்கு புத் உலகம் !
பணி செல்லும் பெண் படைப்பாள் ,
தொழில் கூறும் நல்லுலகம் !
எடுத்த செயல் முடிப்பாள் ,
எமனுக்கே வழி சொல்வாள் !
கொடுத்துப்பார் அவளிடத்தில்
கொள்கையும் லட்சியமும்
அவளின்றி ஒரு பொருளும்
அசையாது என்றுணர்வோம்!
அருந்தமிழ் பெருந்தும்பி ,
அழகாக நீ பற!
பேனாவே நீ வா ,
அவள் பெருங்காவியம் படிக்கவுள்ளாள் !
பெரும் படிப்பே நீ வா
அவள் நீ பெருமை பட பணிசெய்வாள் !
முதலாளியே நீ வா
அவள் உனக்கு மூலதனமாய் தானிருப்பாள் !
கலையனைத்தும் கிளம்பி வா ,
அவள் கலை மகளாய் உனக்கருள்வாள் !
அவள் தானே சக்தியென்று
செந்தமிழ் தும்பியே
செம்மையாக நீ பற !
பின் பறக்கத்தெரியும் உன்னைப்போல் ,
பறப்பதிலல்ல சோம்பலில் !
முன் பறக்கவும் தெரியும் உன்னைப்போல்
பறப்பதிலல்ல முன்னேற்றமாய் !
சுற்றி சுற்றி நீ பறப்பாய் 360 பாகையிலும் ,
சுற்றி சுற்றி தான் உழைப்பாள்
அவள் தன் வீடு , தன் நாடு என்று
அவள் வாழ்க்கை நம் வாழ்க்கை
அவள் வாழ்க்கை சமூக வளர்ச்சி
அவள் என்று சொல்லாமல்
அவளை அவர் என்று சொல்லி
அருந்தமிழ் தும்பியே
அவனியெங்கும் நீ பற