அக்னிபாத் நாசகரமான நயவஞ்சகமான திட்டம் கட்டுரை – தமிழில் : ச.வீரமணி

அக்னிபாத் நாசகரமான நயவஞ்சகமான திட்டம் கட்டுரை – தமிழில் : ச.வீரமணி




ராணுவத்திற்கு வீரர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையில் மிகவும் தீவிரமான மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் அக்னிபத் திட்டம், இளைஞர்கள் மத்தியிலிருந்தும், முன்னாள் ராணுவத்தினரின் பல்வேறு வகையினரிடமிருந்தும் மிகவும் விரிவான அளவில் எதிர்ப்புகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு கடும் எதிர்ப்புகள் இருந்தபோதிலும் ஒன்றிய அரசாங்கம் இந்தத் திட்டத்தை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்று ரணுவ அதிகாரிகளுக்குக் கட்டளையிட்டிருக்கிறது.

இந்தத் திட்டத்திற்கு ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற மூத்த அதிகாரிகள் மற்றும் ராணுவத்துறையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் பலரும் கடும் ஆட்சேபணைகளைத் தெரிவித்திருக்கிறார்கள். இவற்றில் மிகவும் முக்கியமானது, ‘அக்னிவீரர்கள்’ (‘agniveers’) என்று பகட்டாரவாரமாகப் பெயரிட்டுள்ள இந்த நாசகர நயவஞ்சத் திட்டத்தை இளைஞர்கள் அதிலும் குறிப்பாக கிராமப்புற இளைஞர்கள் மிகச் சரியாகவே புரிந்துகொண்டிருக்கிறார்கள்.

குறைந்தகாலத்தில் ஒப்பந்த முறையில் ராணுவத்தினரைத் தெரிவு செய்வது அவர்களின் தரத்தையும், செயல் நோக்கத்தையும் பாதித்திடும் என்றும், இவ்வாறு தேர்வு செய்யப்படுபவர்களில் 25 விழுக்காட்டினர் மட்டுமே நீண்ட காலத்திற்கு நிரந்தரமான ராணுவ வீரர்களாக மாற்றப்படுவார்கள் என்பது இவர்களுக்கிடையே உள்ளார்ந்தரீதியாக பாகுபாட்டை ஏற்படுத்திவிடும் என்றும், நான்கு ஆண்டுகள் கழித்து எவ்விதமான பணிப்பாதுகாப்பும் ஓய்வூதியமும் இன்றி அவர்களை வீதிகளில் தூக்கி எறிவது அவர்களுக்கு நிச்சயமற்ற எதிர்காலத்தை ஏற்படுத்திடும் என்றும் மிகச்சரியாகவே வாதங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

இந்தத் திட்டத்தை அரசுக்கும் சமூகத்திற்கும் மிகவும் ஆபத்தானதாக மாற்றக்கூடிய விதத்தில் ஆழமான பல அம்சங்கள் இதில் ஒளிந்திருக்கின்றன. அக்னிபாத் திட்டம் ஆட்சியாளர்களால் இந்திய அரசையும், அதன் நிறுவனங்களையும் இந்துத்துவா சித்திரத்துடன் பொருத்துவதற்கான, அவ்வாறு மாற்றியமைப்பதற்கான பெரிய திட்டம் ஒன்றின் பகுதியாகப் பார்க்கப்பட வேண்டும். இந்துத்துவா ஆட்சியாளர்கள், அரசின் மற்ற அங்கங்களைப்போலவே ராணுவத்தையும் தங்களின் சித்தாந்தக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் மாற்றியமைப்பதற்காகவே செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். ராணுவப் பயிற்சி பெற்ற பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் ஒவ்வோராண்டும் ராணுவத்திலிருந்து கழட்டிவிடப்பட்டு சமூகத்துடன் இணைவது என்கிற உண்மை ஒருவிதத்தில் இந்து சமூகத்தை ராணுவமயப்படுத்தும் (militarizing Hindu society) சாவர்க்கரின் இலட்சியத்தை நிறைவேற்றுவதற்கான வழியாகும்.

இதனுடன் சேர்த்து, ராணுவத்தின் உச்சபட்ச தலைமையான முப்படைத் தளபதி (Chief of Defence Staff-CDS) பதவி நியமனம் செய்யப்படும் விதமும் பெரிய அளவில் அரசியல்மயமாக்கும் விதத்திற்கு விரிவானவகையில் வழிதிறந்துவிட்டிருக்கிறது. ‘அக்னிபத்’ திட்டத்தின்கீழ் தேர்வுசெய்யப்படும் ‘அக்னிவீரர்கள்’ எப்படி பயிற்றுவிக்கப்படப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏனெனில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகரான அஜித் டோவல், “இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் அக்னிவீரர்களிலிருச்து தேச உணர்வுகளைப் பெற்றிருக்கக்கூடிய, தேச நலன்களைப் பாதுகாக்கக்கூடிய சிறந்த பிரஜைகள் உருவாவதை நீங்கள் பார்ப்பீர்கள்,” என்று கூறியிருக்கிறார். அவர்கள் புகுத்தப்போகும் தேசியவாதம் “இந்துத்துவா தேசியவாதமா” என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ராணுவத்தில் சேரவேண்டும் என்று துடிப்புடன் இருந்த இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கோபாவேசத்தை எதிர்கொள்ளமுடியாது, அரசாங்கம் அவசரகதியில் சில அறிவிப்புகளை அறிவித்திருக்கிறது. தேர்வு செய்யப்படும் அக்னிவீரர்களில் 10 விழுக்காட்டினருக்கு ஒன்றிய ஆயுதப் படைப் பிரிவுகளிலும், ராணுவ உற்பத்திப் பிரிவுகளிலும், இதர நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு உத்தரவாதப்படுத்தப்படும் என்று அறிவித்திருக்கிறது. அரசாங்கத்தின் பல்வேறு அமைச்சகங்களும் இதேபோன்று உறுதிமொழிகளை வாரி வழங்கியிருக்கின்றன. எனினும், இவை எதுவும் கோபாவேசத்துடன் கிளர்ந்தெழுந்துள்ள இளைஞர்களைக் குளிர்விக்கவில்லை. ஆட்சியாளர்களின் இத்தகைய உறுதிமொழிகளின் இலட்சணம் என்ன என்பது முன்னாள் வீரர்கள்களுக்கும், இவர்களுக்கும் நன்கு தெரியும்.

ஏற்கனவே ஒன்றிய அரசாங்கத்தின் ‘சி’ பிரிவு பணியிடங்களில் 10 விழுக்காடும், ‘டி’ பிரிவு பணியிடங்களில் 20 விழுக்காடும் முன்னாள் ராணுவத்தினருக்கு இட ஒதுக்கீடு உண்டு. ஆனாலும் ராணுவ அமைச்சகத்தின் கீழ் செயல்படும் முன்னாள் ராணுவத்தினர் நலத்துறையின் கீழ் உள்ள மீள்குடியேற்ற பொது இயக்ககம் (Directorate General Resettlement) வெளியிட்டுள்ள தரவின்படி, இந்தப் பணியிடங்களுக்கான இட ஒதுக்கீடுகள் எப்போதுமே நிரப்பப்பட்டதில்லை.

தற்போது ஒன்றிய அரசாங்கத்தின் கீழ் உள்ள ‘சி’ பிரிவின்கீழ் உள்ள மொத்தப் பணியிடங்களில், முன்னாள் ராணுவத்தினர் வெறும் 1.29 விழுக்காடு அளவிலும், ‘டி’ பிரிவு பணியிடங்களில் நாடு முழுதும் உள்ள 77 துறைகளில் வெறும் 2.66 விழுக்காடு அளவிலும் மட்டுமே நிரப்பப்பட்டிருக்கின்றன.

இதேபோன்றேதான் பிறதுறைகளின் நிலையுமாகும். ஒன்றிய துணை ராணுவப் படையில் முன்னாள் ராணுவத்தினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். ஆனால் 2019 ஜூன் 19ஆம் தேதி வெளியாகியுள்ள கணக்கின்படி இவர்களில் ‘சி‘ பிரிவு பணியிடங்களில் வெறும் 0.47 விழுக்காட்டினரும், ‘பி’ பிரிவு பணியிடங்களில் 0.87 விழுக்காட்டினரும், ‘ஏ’ பிரிவு பணியிடங்களில் 2.20 விழுக்காட்டினரும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அரசாங்கத்தின் துறைகளில் முன்னாள் ராணுவத்தினர் பணிபுரிவது இவ்வளவு பரிதாபகரமாக இருக்கும் இந்த நிலையில்தான், அக்னிவீரர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பின்னர் வீதிகளில் தூக்கி எறியப்படும்போது அவர்களுக்கு தனியார் துறைகளில் பிரகாசமான எதிர்காலம் இருக்கும் என்று அரசாங்கம் உறுதியளித்துக் கொண்டிக்கிறது.

அரசாங்கம் நாட்டிலுள்ள 85 இந்தியக் கம்பெனிகளைக் கேட்டுக்கொண்டதற்கிணங்க நாட்டிலுள்ள பெரும் கார்ப்பரேட்டுகளும் அக்னிபத் திட்டத்தைப் பாராட்டியிருக்கிறார்கள். அக்னிபத் திட்டத்தை வரவேற்று டாட்டா குழுமத்தைச் சேர்ந்த என்.சந்திரசேகரன், மஹிந்த்ரா குழுமத்தைச் சேர்ந்த ஆனந்த் மஹிந்த்ரா, ஆர்பிஜி குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, ஜேஎஸ்டபிள்யு குழுமத்தைச் சேர்ந்த சஜ்ஜன் ஜிண்டால் முதலானவர்கள் அறிக்கைகள் வெளியிட்டிருக்கிறார்கள். ஆனந்த் மஹிந்த்ரா தன்னுடைய அறிக்கையில், “அக்னிவீரர்கள் பெறும் ஒழுக்கமும் திறமைகளும் அவர்களைச் சிறந்த வேலையாட்களாக மாற்றிடும். இத்தகைய பயிற்சி பெற்றோரிலிருந்து, திறன்மிக்க இளைஞர்களைத் தேர்வு செய்வதற்கான வாய்ப்பு கிடைத்திருப்பது, வரவேற்கத்தக்கது,” என்று மேலும் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்துத்துவா-கார்ப்பரேட் பேர்வழிகளின் கூட்டணி செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும். இந்தத் திட்டத்தை கார்ப்பரேட் துறை புகழ்ந்து துதிபாடியிருக்கும் விதத்திலிருந்தே, ராணுவம் இப்போது இவர்களின் பெரிய தொழிற்சாலைகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் பயிற்சிப் பள்ளிகளாக மாறியிருப்பதாகவே தோன்றுகிறது. எனினும், பல்லாயிரக்கணக்கான முன்னாள் ராணுவத்தினரும், ராணுவ அதிகாரிகளும் கூறுவதுபோல், எதார்த்த உண்மை என்னவென்றால், கார்ப்பரேட்டுகள் முன்னாள் ராணுவத்தினரை வேலைக்கு எடுத்துக்கொள்வது என்பது மிகவும் அற்பமாகும்.

அக்னிபத் திட்டத்திற்கு கார்ப்பரேட்டுகள் ஆதரவு அளிப்பதற்கான காரணம் வேறாகும். ராணுவத்திற்கான உற்பத்தித் தொழிற்சாலைகள் தனியார்துறைக்குத் தாரை வார்க்கப்பட்டிருப்பதால், டாட்டாக்கள், மஹிந்த்ராக்கள் போன்ற பெரிய அளவிலான தொழில் நிறுவனங்கள் ராணுவ உற்பத்தித் திட்டங்களை எளிதாகப் பெற்றுக்கொண்டுவிடும். அப்போது ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்தினரைப் பணியில் அமர்த்துவதற்கு இவ்வாறு வீதியில் எறியப்படும் அக்னிவீரர்கள் அதிகமான அளவில் தேவைப்படுவார்கள். அவர்களைத் தங்களின் எதிர்கால நலன்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு கார்ப்பரேட்டுகள் வெளிவரும் ராணுவத்தினரைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என யோசித்துக்கொண்டிருக்கக்கூடிய அதே சமயத்தில், இந்துத்துவா சக்திகளோ வேலையிலிருந்து தூக்கி எறியப்பட்டு விரக்தியுடன் வெளிவரும் ராணுவத்தினரைத் தங்களின் மதவெறி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம் எனப் பார்க்கின்றன.

பாஜக தலைவர்களில் ஒருவரான கைலாஷ் விஜயவர்க்யா இவர்கள் குறித்துக் கூறியதைப் பார்க்க வேண்டும். பாஜக அலுவலகத்திற்குப் பாதுகாப்பிற்கு ஆட்களை வாடகைக்கு அமர்த்த வேண்டியிருந்தால், அவர் அக்னிவீரர்களுக்கு முன்னுரிமை கொடுப்பாராம். பஜ்ரங் தளத்திற்கும், இந்துத்துவா படைக்கும் ஆட்களைத் தேர்வு செய்யும்போதும் இதேபோன்று முன்னுரிமை விரிவாக்கப்படுமாம்.

அக்னிபத் திட்டமானது இந்திய அரசின் கேந்திரமான நிறுவனமான ராணுவத்தின் மீதான தாக்குதலாகும். இது எதிர்க்கப்பட வேண்டியதும், இதற்கெதிராகக் கிளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டியதும், இது திரும்பப்பெறப்பட வேண்டியதும் அவசியமாகும்.

(ஜூன் 22, 2022)
நன்றி : பீப்பிள்ஸ் டெமாக்ரசி

Porada Va En Thozha Kavithai By Theni Sundar. போராட வா என் தோழா கவிதை தேனி சுந்தர்

போராட வா என் தோழா கவிதை – தேனி சுந்தர்




இழந்தால்
இரண்டு நாள் சம்பளம் தான்..
அதுவும் இப்போதைக்கு..!
வாய்ப்புகள் நெறய இருக்கு..
அதையும் திரும்ப பெறுவதற்கு..!!

கடந்த கால
வேலை நிறுத்தங்களில்
அதிகம் இழந்தவர்கள் தான்
இன்று
மற்றவர்களை விட
அதிகம் அடைந்தும் இருக்கின்றனர்..!

இன்றைய இழப்பு முக்கியமா..?
நிரந்தர பென்சன் முக்கியமா..?
முடிவெடு நண்பா..
முடிவெடு தோழி..!

இவர் வேண்டாம் என்கிறார்..
அவரெல்லாம் பங்கெடுக்கவில்லை..
நீஙகள் காரணமாய் சொல்லும்
இவரும் அவரும்
உங்க பென்சனில்
துண்டு விழுகும் போது
எங்கிருப்பர்..??

நிரந்தர பென்சன்
நிச்சயம் என்றால் தான்
நம் குடும்பமே
நம்மோடு இருக்கும்..!!

தெம்போடு இருக்கும் போதே
போராடு..
வர மறுப்பவர்களுடன்
வாதாடு..

போராட்டக் களத்தில்
நீயும் நானும் முன் ஏரு..
இப்போதைக்கு
குழுவில் உந்தன் பேர் போடு

நம் ஊதியம்..
நம் பென்சன்..
நம் வாழ்வாதாரம்..
நம் போராட்டம்..
நமக்கான போராட்டம்..!

நிலம், விதை, உணவை
நம் கையில் இருந்து பறித்து
பகாசுர கம்பெனிகளிடம் ஒப்படைக்கும்
நாசகார அரசுக்கு எதிரான போராட்டம்..

உழைப்பைச் சுரண்டி விட்டு
தொழிலாளர்களை
தெருவில் எரியும் சட்டங்களுக்கு எதிரான போராட்டம்..
இது
விவசாயிகள் தொழிலாளிகள்
இணைந்து நடத்தும் போராட்டம்..!

நாடு முன்னேறவில்லை..
பிரதமரின்
நண்பர் தான் முன்னேறி இருக்கிறார்..

300வது இடத்தில் இருந்தவர்
இப்போது 12வது இடத்தில்..!

நாடு முழுவதும் உள்ள
அரசு ஊழியர் CPS தொகை
5 இலட்சம் கோடி..
அதானி ஒருவரின்
சொத்து மதிப்பும்
5 இலட்சம் கோடி..!
யாருக்கான அரசாங்கம் தெரிகிறதா..?
எனவே ஆசிரியர், அரசு ஊழியர்
இணைந்து நடத்தும் போராட்டம்..!

தடுப்பூசி உற்பத்தி செய்தவர்
இப்போது
உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவர்..!

எல்.ஐ சி. முதற்கொண்டு
எதையும் விற்கத் துணிந்த
ஊதாரி அரசாங்கத்திற்கு
எதிரான போராட்டம்…

மத்திய, மாநில அரசு ஊழியர்
இணைந்து நடத்தும் போராட்டம்..!

ஒட்டு மொத்த
உழைக்கும் வர்க்கமும்
ஒன்றாய் அழைக்கிறது..
தமிழகத்தில் ஆளும் கட்சியும்
ஆதரவாய் இருக்கிறது..

மறக்காதே என் தோழா..
மார்ச் 28,29..!
அறைகூவி அழைக்கிறது
அகில இந்திய வேலை நிறுத்தம்..!

வா.. என் தோழா..
துணிந்து களமிறங்கு..!

Pension Short Story by Jeyasri ஜெயஸ்ரீயின் ஓய்வூதியம் குறுங்கதை

ஓய்வூதியம் குறுங்கதை – ஜெயஸ்ரீ



ஈமச்சடங்குகளை எல்லாம் முடித்து. வெறுமையாய் இருந்த வீட்டைப் பார்த்துக் கொண்டிருந்தான் மதன். அவன் நிலையை உணர்ந்த காயத்திரி, “அப்பா எங்கயும் போகல.. நம்ம கூட தான் இருப்பாரு..”

“டாயிங் பண்ண போதேன்..” ஒரு டைரியும் ஒரு மூக்குக் கண்ணாடி பெட்டியும் கையில் பிடித்து தத்தக்கா பித்தக்கா என்ற மழலை நடையில் இரண்டரை வயது பால் மணம் மாறாத ஸ்ரீநிதி வந்து மதனின் மடியில் அமர்ந்தாள்.

“குட்டிம்மா.. இதெல்லாம் தாத்தாவோடது. தாத்தா உம்மாச்சி கிட்ட போய்டாங்க. இதெல்லாம் எடுத்தா கோபிச்சுக்குவாங்க. குடுத்துடு டா கண்ணு.. ”

அப்பாவின் உடலைக் கட்டிலில் இருந்து எடுக்கையில், அவரது தலையணைக்கு கீழே இருந்த டயரி அது. குழந்தையிடம் இருந்து வாங்கிப் புரட்டிப் பார்க்க ஆரம்பித்தான் மதன் . பத்தாவது பக்கத்தில்.

“அன்பு மகன் மதன், காலன் பாசக்கயிறை கட்டிவிட்டான். எனது பென்ஷன் பணத்தை மாதா மாதம் என் பீரோ லாக்கரில் உள்ள அம்மாவின் கைப்பையில் போட்டு வைத்துள்ளேன். லாக்கர் சாவி என் மூக்குக் கண்ணாடி பாக்ஸில்
இருக்கிறது. ஸ்ரீநிதியை நன்றாக படிக்க வை.

இப்படிக்கு ராஜன்”

“அப்பா…. ஓவென்று அலறினான். லாக்கரில் எட்டு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் சுளையாக ஓய்வூதிய பணம் .

“ஐயோ… அப்பா.. பென்ஷன் பணம் எங்கே என்று எத்தனை முறை உங்களை திட்டி இருப்பேன். சாப்பாடு போடாமல் பட்டினி போட வைத்திருப்பேன்.
உன் அருமை புரியாமல் போனதே.. தலையிலடித்து கொண்டு கீழே விழுந்து அழுதான் மதன். அடம்பிடித்துக் கொண்டிருந்த ஸ்ரீநிதி அழுகையை நிறுத்தி மதன் அழுவதை பார்த்துக் கொண்டிருந்தாள்.

“தாத்தா.. உம்மாச்சி… என்று மழலையில் சொல்லிக் கொண்டே மதனை குனிந்து உற்று நோக்கினாள்.