மனிதனை மனிதன் சுரண்டும் அமைப்பு முறை மாறும் வரை இந்தப் போராட்டம் தொடரும்  பகத்சிங் – பேரா எ. பாவலன்

மனிதனை மனிதன் சுரண்டும் அமைப்பு முறை மாறும் வரை இந்தப் போராட்டம் தொடரும் பகத்சிங் – பேரா எ. பாவலன்




இதுவரை உலகில் எண்ணற்ற பல மனிதர்கள் வாழ்ந்து இறந்துள்ளனர். ஆனால் ஒரு மரணம் மட்டும் உலக மக்களின் தூக்கத்தை தொலைத்தது‌. சூரியன் மறையாத பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை குலைநடுங்க செய்தது. ஒரு மரணம் இந்திய விடுதலைக்கு அடிகோலியது. ஒரு மரணம் எல்லோரையும் ஒரே மையப்புள்ளியில் சங்கமிக்க செய்தது. ஒரு மரணம் சாவையும் வாழவைத்தது. ஒரு மரணம் சூரியனை சுட்டெரித்தது. ஒரு மரணம் மரணத்தைக் கொன்று புதைத்தது. ஒரு மரணம் பிறிதொரு மரணத்தைக் கண்டு அஞ்சி நடுங்கியது. ஒரு மரணம் முழு பௌர்ணமி நாளை இருளாக்கியது. தன் மரணத்தை, மரணத்தாலே வாழவைத்தவர்தான் தோழர் பகத்சிங். பகத்சிங் மறைந்து ஏறக்குறைய ஒரு நூற்றாண்டாகப் போகிறது. இன்றும் மார்ச் 23ஆம் நாள் அன்று அவர் குறித்த வரலாறு நம் சிந்தனையை தழுவுகிறது. இந்தியர்கள் நாடு விடுதலை அடைந்ததை எந்த அளவிற்கு கொண்டாடுகிறோமோ? அதே அளவிற்கு பகத்சிங், சுகதேவ், ராஜகுருவின் மரணத்தை நினைக்கும் பொழுது சோகம் நம்முள் குடிகொள்கிறது.

தோழர் பகத்சிங், இந்திய சுதந்திரப் போராட்டத்திற்காக தன் உயிரைக் கொடுத்ததை போன்றே உள்நாட்டு பிரச்சனைகளிலும் கவனம் செலுத்தியவர். ஆனால் அவரை ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் என்று சொல்லியே நம் மூளையை சலவை செய்யப்பட்டுள்ளது.

அவர் இந்தியாவில் நிலவிய சாதி கொடுமையை எதிர்த்துள்ளார். சாதிக் கொடுமைக்கு காரணமாக இருந்த இந்து மதக்கொடுங்கோன்மையை எதிர்த்து களமாடினார். விடுதலைப் போராட்டங்களை இந்துத்துவ மற்றும் முஸ்லிம் மதவாத கிரிமினல் கும்பல்கள் பிளவுபடுத்துவதை கவனித்து அவற்றை கடுமையாக சாடியவர். நாட்டில் வெடித்த மத கலவரத்தின் காரணமாக மத நம்பிக்கையை மறுக்கத் தொடங்கினார். ஒரே நேரத்தில் இந்திய விடுதலைப் போராட்ட களம் சாதி மத எதிர்ப்பு என்று தன்னுடைய இலக்கை தீர்மானித்து சனாதன சக்திகளை எதிர்த்தும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும் தன்னுடைய இறுதி மூச்சு உள்ளவரை போராடினார். இந்தியாவில் மதவாத பிரச்சனைகளின் அடிப்படை எங்கிருந்து வருகிறது என்பதையும் சாதிய தீண்டாமை எவ்வளவு இழிவானது என்பதையும் இளைஞர்கள் மத்தியில் விரிவாக விளக்கினார். நாட்டில் வெடித்த மதக்கலவரத்தின் காரணமாக மத நம்பிக்கையை மறுக்கத் தொடங்கினார். இந்தியாவை விடுதலை அடையச் செய்வது மட்டுமல்ல இந்திய முதலாளிகளிடமிருந்தும், உழைக்கும் மக்களுக்கும் விடுதலை பெற்றுத்தர வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தவர்.

விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் சுதந்திர குடியரசை நிறுவுவது ஓர் ஐக்கிய இந்திய அரசை நிறுவிட இளைஞர்களிடையே தேசப்பற்றை ஊட்டுவது மதவாத போக்குகள் அற்ற தொழில் மற்றும் சமூக இயக்கங்களை ஆதரிப்பது தொழிலாளர்களையும் விவசாயிகளையும் திரட்டுவது போன்ற அரசியல் நோக்கங்களுடன் இளைஞர்கள் செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில் மக்களை அரசியல் படுத்த நினைத்த நினைத்தார். இவை எல்லாவற்றிற்கும் காரணம் அவரின் தெளிந்த அரசியல் பார்வை.

அப்பொழுது மார்க்சியம் அவருக்கு வர்க பார்வையை ஊட்டியது. மதவாத பிரச்சனைகளை தீர்ப்பதற்கு ஒரே வழி வர்க போராட்டங்களை என தனது இருபதாவது வயதில் பிரகடனப்படுத்திக் கொண்டார். விரல் விட்டு எண்ணக்கூடிய சில ஒட்டுண்ணிகளால் இந்தியா உழைக்கும் மக்கள் அவர்தான் இயற்கை வளங்களும் சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கும் வரை இந்த போர் தொடரும், தொடர வேண்டும். கலப்பற்ற பிரிட்டிஷ் முதலாளியாக இருக்கலாம் அல்லது பிரிட்டிஷ் முதலாளிகள், இந்திய முதலாளிகளின் கலப்பாக இருக்கலாம். அல்லது கலப்பற்ற இந்திய முதலாளிகளாகக் கூட இருக்கலாம் என்று தெளிந்த சிந்தனை கொண்டவர்.

அதன் அடிப்படையில் சிறையில் இருந்தபோது நான் ஏன் நாத்திகன் ஆனேன் என்ற நூலையும் படைத்தார்.

கடவுள் நம்பிக்கையும், மதக் கோட்பாடும் அவரிடம் எள்ளளவும் இருந்ததில்லை. தூக்கு கயிற்றின் முன்னாள் நின்ற பகத்சிங்கிடம் சிறை வார்டன் சரத் சிங் கடவுளை போற்றி துதிக்கும் சீக்கியர்களின் புனித வார்த்தையை நினைவில் கொள்ள வலியுறுத்தினார். அதற்கு பகத்சிங் அதை மறுத்து வாழ்க்கையில் நான் ஒருபோதும் கடவுளை வணங்கவும் இல்லை, போற்றவும் இல்லை. உண்மையில் ஏழைகளின் துயரம் கண்டு கடவுளை விமர்சித்துள்ளேன். அதற்காக இப்பொழுது மன்னிப்பு கேட்டால் என்னைவிட கோழை யாரும் இருக்க முடியாது. இறுதி காலம் வந்து விட்டதால் மன்னிப்புக் கேட்கிறான் என மக்கள் தூற்றுவர் என்று மறுத்துவிட்டார்.

தன் கொள்கையில் இத்தனை உறுதிப்பாடு மிக்க காரணமாக இருந்தது அவருடைய குடும்பம் என்று சொல்ல முடியும். அவருடைய குடும்பம் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்காக சிறை கம்பிகளுக்கு பின்னால் நின்றவர்கள். அதனால் அவருக்கு, இளம் வயதிலேயே சுதந்திரப் போராட்ட உணர்வும், உறுதியான கொள்கையும் பசுமரத்த அணியில் போல் ஆழமாக பதிந்தது. பகத்சிங் பிறந்தநாளில் தாத்தா மற்றும் அஜித் சிங், ச்வரவன் சிங் ஆகிய இரண்டு மாமாக்களும் சிறையில் இருந்து வெளியான நாளாகவே அமைந்தது.

ஆயுதம் தான் பிரிட்டிஷ் ஆட்சியை நாட்டை விட்டு துரத்தும் என்ற கொள்கை இளம் வயதிலேயே இருந்துள்ளது. பகத்சிங் சிறுவனாக இருந்தபோது தந்தை கிஷன் சிங்சந்துடன் வயலுக்கு சென்றார். அப்பொழுது இந்த தானியங்கள் எப்படி வந்தது? என்ற கேள்விக்கு, தந்தை ஒரு விதையிலிருந்து இத்தனை மகசூல் கிடைத்தது என்றார். எல்லாவற்றையும் கவனமாக கேட்டு வந்த அந்தச் சிறுவன், சற்று நேரத்தில் அவனுடைய குரல் கேட்கவில்லை. அவருடைய தந்தை திரும்பி பார்த்தார். அப்பொழுது கொஞ்சம் தூரத்தில் அந்த சிறுவன் வயலில் குழிதோண்டி எதையோ நட்டு கொண்டு இருந்தான். அவனுடைய அப்பா என்ன செய்கிறாய் என்று கேட்டதற்கு, அச்சிறுவன் நான் ஒரு துப்பாக்கியை நடுகிறேன். அது இன்னும் சில நாட்களுக்குப் பிறகு மரமாகி எல்லா கிளைகளிலும் துப்பாக்கிகள் காய்த்து தொங்கும் என்று கூறினான். அப்படி சொல்லும் பொழுது பகத்சிங்குக்கு வயது ஐந்து.

எண்ணம் தான் ஒரு மனிதனை உருவாக்கும். எண்ணம் தான், தான்யார் என்பதை இவ்வுலகிற்கு உணர்த்தும். எண்ணம் தான் மாற்றத்தை உண்டாக்கும். எண்ணம் தான் போராடும் எண்ணத்தை உருவாக்கும். போராடும் எண்ணம் கொண்ட ஒவ்வொரு மனிதனும் பகத்சிங் வரலாற்றை எளிதாக கடக்க முடியாது. இந்திய விடுதலைக் கனவு பகத்சிங் கண்களில் மின்னியது. எப்படியாவது தன் காலத்திலேயே இந்தியா சுதந்திரம் பெற்று விட வேண்டும் என்று உறுதியாக இருந்தவர். அதன் தாக்கம் தான் புரட்சி என்பது மனித சமுதாயத்தில் பிரிக்க முடியாத ஓர் அங்கம். சுதந்திரம் என்பது ஒவ்வொரு குடிமக்களின் பிறப்புரிமை அதை யாரும் தடுக்க முடியாது என்ற கொள்கைக் கோட்பாட்டுடன் செயலாற்றியவர்.

தன்னுடைய 14 வது வயதில் நெஞ்சு உறுதியுடன் நாட்டு விடுதலைக்காக காந்தியடிகளுடன் இணைந்து பணியாற்றியவர். ஆனால் அவருடைய ஒத்துழையாமை இயக்கம் காந்தியை விட்டு விலகுவதற்கு ஒரு காரணமாக இருந்தது. அதன்பிறகு இளம் புரட்சியாளர்கள் இயக்கத்தில் இணைந்து மக்கள் விடுதலைக்காக பணியாற்றியவர்.

பகத்சிங்கின் திசைவழி பயணத்தை மாற்றியது ஜாலியன் வாலாபாக் படுகொலை. 1919 ஏப்ரல் 13 இல் நடந்த அந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம் அவர் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த படுகொலைக்குப் பிறகு அவர் நிம்மதி இன்றி இருந்தார். அன்று அவருக்கு வயது பனிரெண்டு. பனிரெண்டு வயது சிறுவனாக இருந்த பகத்சிங் அந்தப் படுகொலை நடந்த சில மணித்துளிகளிலேயே காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதைப் போல் மனித சடலங்கள் மிதந்துக் கிடந்தன. மனித சடலங்களின் இருந்து ஒழுகிய ரத்தம் மண்ணில் கலந்து உறைவதற்கு முன்பாகவே அந்த ரத்தம் கலந்த மண்ணை ஒரு பிடி எடுத்து ஒரு பாட்டிலில் நிரப்பி வைத்துக் கொண்டார். இந்த மண் தான் அவரை உறங்கவிடாமல் செய்தது. இந்த மண்தான் அவரை விடுதலைக்கான பாதையை சமைக்கச் சொல்லி கற்றுத்தந்தது. இந்த மண்தான் அவர் கண்களை சிவப்பாக்கியது. இந்த மண்தான் அப்பாவி மக்களின் உயிரைக் குடித்த வெள்ளைப் பரங்கியர்களின் துப்பாக்கிகளிலிருந்து வெளியேறிய ரவைகளுக்கு பதில் சொல்லத் தூண்டியது.

ஒரு பக்கம் ஜாலியன் வாலாபாக் படுகொலை மற்றொரு பக்கம் லாலா லஜபதிராயின் மரணம். லாலா லஜபதி ராய் சைமன் கமிஷனை எதிர்த்து போராடிய காரணத்திற்காக அன்றைய பிரிட்டிஷ் ஏவலர்கள் அவரை அடித்து கொலை செய்தனர். இந்த கோர சம்பவம் இன்னும் கோபத்தின் உச்சாணிக்கையே அவரை கொண்டு சென்றது. அல்லது அவரை மரணத்துடன் இணைத்தது என்று சொல்ல முடியும்.

லாலா லஜபதிராயை அடித்து கொன்ற காட் என்ற வெள்ளையனை சுட்டுக் கொள்வதற்கு நாள் குறிக்கப்பட்டது. லாலா லஜபதிராயை கொலை செய்யப்பட்டது நவம்பர் 17. லாலா லஜபதி ராய்டிசம்பர் 17 ஸ்காட்டுக்கு தேதி குறிக்கப்பட்டது. ஆனால் விதி அவனை வேறு திசையில் அழைத்துச் சென்றது. ஸ்காட்டுக்கு விரித்த வலையில் சாண்டர்சன் விழுகிறான். அவன் கொலை செய்யப்படுகிறான்.

இந்தக் கொலையை ஹிந்துஸ்தான் ரிபப்ளிக்கன் அசோசியேசன் அமைப்பு முன்னெடுத்தது. அதை முன் நின்று நடத்தியவர் இருவர் ஒருவர் பகத்சிங் மற்றொருவர் சுகதேவ். இந்தக் கொலையை அந்த அமைப்பும் நியாயப்படுத்தவும் இல்லை, மறுக்கவும் இல்லை. சாண்டர்சன் ஒரு துருப்பாக இருந்தான் அதனால் அவனை கொலை செய்தோம். இந்தப் போர் எங்களோடு தொடங்கவும் இல்லை எங்களோடு முடியப்போவதுமில்லை மனிதனை மனிதன் சுரண்டும் அமைப்பு முறை மாறும் வரை இந்த போராட்டம் தொடரும் நாளைய இளைஞர்கள் தொடர்வார்கள் என்று எழுதி ஆங்காங்கே சுவரொட்டிகளாக ஒட்டப்பட்டு இருந்தது. இந்தியாவை விடுதலை அடையச் செய்வது மட்டுமல்ல இந்திய முதலாளிகளிடமிருந்து உழைக்கும் மக்களும் விடுதலைப் பெற்றுத் தர வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தவர்.

ஒரு மனிதனை கொலை செய்வது எந்த அளவுக்கு தவறானதோ அதே அளவிற்கு இந்திய சுதந்திர கனல் அவர் நெஞ்சில் எரிந்து கொண்டிருந்தது. இதற்கிடையில் நாடாளுமன்றத்தில் குண்டு வீசுவது என்று முடிவு எடுக்கப்பட்டது. அதற்கு பகத்சிங்கே தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டார். சுகதேவ் பகத்சிங்கடம் பாராளுமன்ற குண்டு வீசற்கு செல்லக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்த பின்பும் பகத்சிங் மற்றும் டெட் இருவரும் பாராளுமன்ற குண்டு வீச்சில் தேர்வாகினர்.

1929 ஏப்ரல் 8ஆம் நாள் காலை 11.00 மணி அளவில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் யாருக்கும் எந்த அசம்பாவிதம் ஏற்படாமல் குண்டு வீசப்பட்டது. அந்த குண்டு வீச்சு காட்சியைப் பார்த்தவர்கள் சிதறி ஓடினர். பகத்சிங் கையில் வைத்திருந்த துப்பாக்கியும் அவர் எரிந்த குண்டும் அவருக்கு மரண தண்டனைக்கு ஆளானது.

அவரை குற்றம் சுமத்தி சிறையில் அடைக்கப்பட்டாலும் சிறைச்சாலையை கூட ஒரு போராட்டக் களமாக மாற்றியவர். சிறையில் மற்ற கைதிகளுக்கு இருக்கும் நெருக்கடியை கண்டு அவர்களுக்காகவும் போராடினார்.

அவர் சிறையில் இருந்த பொழுது 151 புத்தகங்களை வாசித்துள்ளார். நானூறு பக்கங்களுக்கு மேலாக குறிப்புகளை எடுத்துள்ளார். அதன் அடிப்படையில் அவர் பல புத்தகங்களையும் எழுதியுள்ளார். கனவுலகத்திற்கு ஓர் அறிமுகம் நான் ஏன் நாத்திக நானே இந்தியாவில் புரட்சி இயக்கத்தின் வரலாறு சோசியலிச கோட்பாடு சுயமரியாதை மரண வாசலில் உள்ளிட்ட பல நூல்களை எழுதி இருந்தாலும் இன்று நமக்கு கனவுலகத்திற்கு ஓர் அறிமுகம் நான் ஏன் நாத்திகன் ஆனேன் என்ற இரண்டு புத்தகங்கள் தான் நம் கரங்களில் தவழ்கிறது. இதில் why am I atheist என்று ஆங்கிலத்தில் எழுதிய நூலை தோழர் ஜீவானந்தம் அவர்கள் தமிழில் மொழிபெயர்ப்பு செய்துள்ளார். அதை நூலாக வெளியிட்டவர் பெரியார்.

பெரிய அளவிற்கு பள்ளிக்கூடம் செல்லாதவர் என்றாலும் அவர் பஞ்சாபி உருது இந்தி ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை மிக்கவராக இருந்தார். புத்தகம் வாசிப்பதில் ஆழ்ந்த கவனம் செலுத்தினார்.

பகத்சிங் இடம் அன்பு கொண்ட சிறை கண்காணிப்பாளர் சரத் சிங் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வந்தார் அவரின் உதவியாள்தான் லாகூரின் துவாரகா தாஸ் நூலகத்தில் இருந்து பகத்சிங்கத்திற்காக புத்தகங்கள் சிறைச்சாலைக்குள் வந்தன. புத்தகப் பிரியரான பகத்சிங் தன்னுடைய பள்ளி தோழர் ஜெயதேவ் கப்ருக்கு எழுதிய கடிதத்தில் கார்ல் லிப்னேக்கின் மிலிட்டரி எஸ் எம் லெனின் இடதுசாரி கம்யூனிசம் அப்ஸன் சின்க்லேயரின் தி ஸ்பை ஆகிய புத்தகங்களை குல்வீரிடம் கொடுத்து அனுப்புமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

முனைவர் எ. பாவலன்,
உதவிப் பேராசிரியர்,
இலயோலா கல்லூரி,
சென்னை – 600 034.

விடிந்துவிட்டது எழுந்திருங்கள் சிறுகதை – பேரா. எ. பாவலன்

விடிந்துவிட்டது எழுந்திருங்கள் சிறுகதை – பேரா. எ. பாவலன்




அது ஒரு பாழடைந்த குகை. ஆள் அரவமற்று பார்ப்பதற்கே மிக பயங்கரமாக அச்சமூட்டியது. தப்பித்தவறி கூட அங்குச் சென்றால் பயத்தாலேயே செத்து விடுவோம். ஆனாலும், அங்கு அச்சத்தைத் தாண்டி ஒரு வசீகரம் மின்னியது. தன் வாழ்நாளில் ஒரே ஒரு முறையாவது அந்த இடத்திற்கு சென்று வரவேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.

ஏனென்றால்? அந்தக் கட்டுக்கதைகளையும், அச்சத்தையும் தாண்டி, ஒரே ஒரு முறையேனும் அந்த ராணுவ ரகசியத்தை மிஞ்சும் இரகசியம் பொதிந்த அவ்விடத்தைக் காணவேண்டும் என்ற ஒரு பேராசை எல்லோருக்கும் எழுவது இயல்புதானே? நான் மட்டுமென்ன விதிவிலக்கா?.

நானும், என் எழுத்தாள அண்ணனும் இருள் மண்டிக் கிடந்த அந்தக் குகையை தாண்டி உள்ளே சென்றோம். புதர்கள் அண்டிய இரண்டடுக்கு மாடிவீடு ஒன்று தெரிந்தது.

சிறிய வெளிச்சத்தில் ஆறடி உயரத்தில் கட்டுக்கோப்பான உடலமைப்புக் கொண்ட சிலர் எங்களைப் பார்வையாலேயே அளந்தனர்; அச்சமூட்டினர்.

சாம்பல் நிறத்தில் சபாரி உடை அணிந்து கொஞ்சம் மிடுக்கான இருவர் எங்கள் இருவர் மீதும் மெட்டல் டிடெக்டர் வைத்து சோதித்தனர். சோதனையில் வென்றதால் உள்ளே செல்ல அனுமதிபெற்றோம்.

எதிரே தெரிந்த படிக்கட்டுகளில் ஏற முயன்ற எங்களுக்குச் சரியான பாதையைக் காட்டினார் முறுக்கு மீசைக்காரர். எங்களிடம் மட்டுமல்ல அவர்களுக்குள்ளேயும் ஒருவரும் பேசிக் கொள்ளவில்லை. அந்த இடம் பெரிய மயான அமைதியால் சூழப்பட்டிருந்தது. வார்த்தைகள் என்னுள் எழுந்து எழுந்து அமிழ்ந்தன. சமயம் வாய்க்கையில் பேசலாமென்று, வார்த்தைகளில் சிலவற்றைத் தடவி எடுத்து தயார் நிலையில் வைத்துக்கொண்டேன். மற்றவர்களைப்போல உடன்வந்தவரும் பேசாதவராக மாறியிருந்தார். எல்லாவற்றையும் அதன் எதிர் – நேர், குறுக்கு – நெடுக்கு என எல்லாத் திசைகளிலும் துருவி ஆராய்ந்து கூடுதலாகப் பேசிவிடும் அவர் எதுவுமே பேசவில்லை. எதற்காகப் பேச வேண்டும் என்பதை அவரின் செயல்கள் அப்பட்டமாகத் தெரிவித்தன. மொழி உயர்ந்ததுதான் – மொழியின்றி எதுவுமில்லைதான். எல்லா நேரங்களிலும் மொழி அவசியமில்லை என்பதை மெதுவாகப் புரிந்துகொண்டேன்.

முதல் தளத்தில் மருத்துவர்கள் பரபரப்புடன் இருந்தனர். அவரைப் பற்றிய கூடுதல் அச்சம் என்னைத் தொற்றிக் கொண்டது. அவர் இறந்து விடக்கூடாது. ஒருமுறையேனும் அவரை உயிரோடு பார்க்க வேண்டும் என்பது என் வாழ்நாள் பெருங்கனவு. அதுமட்டுமல்ல.

இலட்சக்கணக்கான குரலற்ற அடிமைகளின் நல்வாழ்வும் சுதந்திரமும் அவர் உயிருடன் பிணைக்கப்பட்டிருந்தது. அவர் உயிர் அவரைவிடவும் குரலற்ற அந்த மக்களுக்குத்தான் அதிகம் தேவைப்பட்டது. அந்த மனிதரின் ஒற்றை அதட்டலுக்குத்தான் அரசாங்கம் அடங்கும். அவர் பேசினால் ஆதிக்க மனதுடையோர் வாய்களை மூடிக் கொள்வார்கள். இப்படியான துழாவல்களோடு அவரைக் காணச் சென்றேன்.

அங்கிருந்த அழகான வெள்ளைக்கார மருத்துவப் பெண்மணிகளில் ஒருவர், மௌனம்மீறி ப்ளீஸ் வெயிட் என்றார். அந்த ஒரு வார்த்தை மட்டும் தான் உதட்டிலிருந்து கொஞ்சம் மென்மையாக அவருக்கே தெரியாமல் உடைந்து கீழே வீழ்ந்து அந்த இடம் முழுவதையும் நிறைத்தது.

நூல் அளவு மட்டுமே திறந்திருந்த கதவு. எங்கள் கண்கள் கதவின் இடுக்கில் நுழைந்திட விரும்பின. அந்த அறைக்குள் மென்மையான இரைச்சல் ஒலி. அந்த குரலை கேட்டதும் ஆனந்தம்….. பேரானந்தம். சிலவற்றைப் பேசலாம் – சிலவற்றை எழுதலாம் – சிலவற்றை உணரமட்டுந்தான் முடியும். அது அந்தக் கணத்துக்கானது மட்டுமல்ல. எண்ணி எண்ணி சுவைத்து அசைபோடத் தூண்டுபவை. உயிர் திரும்ப வந்ததைப் போன்ற உணர்வு. நாங்கள் இருவரும் நெடுநேரம் கழித்துப் பார்த்துக் கொண்டோம்.

காத்திருந்த கணம் வந்தது. சிலையானேன். மீண்டும் உயிர்த்தேன். ஒரு மனிதன் உள்ளிருந்து கதவைத் திறந்தான். முதல் நபரைப் பார்த்தோம். பெருத்த ஏமாற்றம். அடுத்த நபரைப் பார்த்தோம். மூச்சு உள் ஒடுங்கியது. அதோ!…. அதோ!….. அவர்தான்! ……அவரேதான்!…….. அவரைப் பார்த்தவுடன் ஆனந்தத்தில் பூரிப்படைந்தோம். மகிழ்ச்சியில் திக்கமுக்காடினோம்.

அவரும் எங்களைப் பார்த்தார். புன்முறுவல் பூத்தார். இருவரும் எழுந்து நின்றோம். இரு கைகளை கூப்பியதைத்தவிர வேறு ஒன்றும் தோன்றவில்லை. பொறுக்கி வைத்திருந்த சொற்களும் தொலைந்து போயின.

நல்லா இருக்கிறீர்களா என்பதற்கு எழுத்தாள நண்பர் நல்லா இருக்கிறேன் அய்யா என்கிறார்.

அடுத்து என்னைப் பார்த்து நீங்கள்?

பதட்டத்தில் வார்த்தைகள் வரவில்லை…….. ஆசை இருந்தது. பேசுவதற்குத்தான் சொற்கள் இல்லை.

கட்டுக்கோப்பான உடல் – நல்ல உயரம் – சிவந்த மேனி – எந்த உடைக்கும் கச்சிதமாகப் பொருந்தும் உடல்வாகு. 128, 129 வயது என்கிறார்கள். நம்பமுடியவில்லை. 80ஐ தாண்டாதவர்போன்ற தோற்றம்.

பல்லாண்டுகள் கழித்து வீடுவந்த தகப்பன், தன் குழந்தைகளைக் கொஞ்சுவதைப்போல் அவரைத் தூக்கிக் கொஞ்சிட தோன்றியது. குழந்தைக்கும் தெரியாமல் முத்தங்களைப் பதிக்கும் தந்தையாக மாறிட ஆவலித்தேன். முடியவில்லை.

என் அன்பனைத்தும் கண்ணீரானது. ஆனமட்டும் தேம்பி தேம்பி அழுதேன்.

ஏன் அழுகிறாய்? என்றார்.

இல்ல…. இல்ல….. நீங்க 1956 டிசம்பர் மாசம் ஆறாம் தேதியே செத்துப் போயிடிங்கனு சொன்னாங்க. குந்திக் குந்தி தெளிவற்று வெளிவந்தன வார்த்தைகள்.

சிரித்தார்.

அதற்குத் தாம்தான் காரணம் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.

என் உருவம் தாங்கிய பிணத்திற்குத் தீ மூட்டி இறந்துவிட்டதாகப் பொய்க்கதை பரப்பச்சொன்னேன். மக்கள் சமமாகப் பார்க்கப்படுகிறார்களா? சட்டத்தின் அடிப்படையில் ஆட்சி நடைபெறுகிறதா? என்று வேவு பார்க்கவே யார் கண்ணிலும் படாமல் மறைந்திருக்கிறேன். என்னை பெரும் படிப்பாளி என்கிறார்கள். நான் படிப்பதற்கு இன்னும் இருக்கிறது என்பது எனக்குத்தான் தெரியும். உடல்மெலிவும் என்னை வருத்துகிறது. ஆகவேதான், நான் விலகி நின்று வேலை பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்று பதில் அளித்தார்.

உங்களுக்கு வெண்கலத்தில் சிலை வைத்து, மலர் தூவி, மரியாதை செய்து – உம்மால் உயர் பதவிகளை அடைய முடிந்தது என எங்கள் ஆட்சியாளர்கள் வானளாவ உம்மைப் புகழ்வது உமக்குத் தெரியுமா? உம் சட்டம்தான் தங்களின் பாதுகாப்பரண் என்பது நீர் அறியாததல்ல என்றே நினைக்கிறேன் என்றார் எழுத்தானள நண்பர்.

சட்டமா? இந்த நாட்டிலா? நீண்ட அமைதி நெடுநேரம் தங்கியது.

நாங்களும் மௌனித்தோம்.

அவரே தொடர்ந்தார்.

சட்டத்தை மதிக்காத இதுபோன்ற ஆட்சியாளர்களை என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை.

நீங்கள்தான் அப்படிச் சொல்கிறீர்கள். ஆனால், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம், குடியுரிமை திருத்தச் சட்டம் எல்லாவற்றுக்கும் நீங்கள்தான் துணையாக இருப்பதாகக் கூறுகிறார்களே என்றேன் அடக்கமாக. இன்னும் நீங்கள் விரும்பிய தேசத்தை கட்டமைக்க வில்லை. நீங்கள் எதையெல்லாம் எதிர்த்தீரோ அதையெல்லாம் அடாவடியாய்த் திணித்து எல்லோரையும் ஏற்க செய்கின்றனர். மதச்சார்பற்ற இந்த நாட்டை இந்து நாடாக்கும் பணிகள் வேகமாய் நிகழ்கின்றன. சனாதனம் உயிர் பெற்றுள்ளது. அது சரியென மக்கள் மூளைகளை சலவை செய்யப்படுகிறன. மாட்டுக்காக சிறுபாண்மை மக்களும் பட்டியலினத்தவரும் அவமானப்படுத்துகிறார்கள். கொல்லப்படுகிறார்கள்.

கல்வி பொதுவில் இல்லை. கல்வி எளியவர்க்குக் கூடவே கூடாது என்கிற புதிய மனப்போக்குடன் செயல்பாடுகள் மிகுந்துவிட்டன. கல்விக்காக நீங்கள் உன்னத சட்டங்கள் மழுங்கடிக்கப்படுகின்றன. கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதிகள் முறையாக பயன்படுத்துவதில்லை. உயர் பதவிகள் வகிப்பதற்கான ஒரே தகுதி பூநூல் மட்டுமே என்றாகிவிட்டது. நீதிபதிகள் விலைபோய்விட்டனர். அவர்களின் பணிவிடைக்கு நாடாளுமன்ற பணிகள் தானாகக் கிடைக்கின்றன.

இஸ்லாமியர்களைத் தனிமைப்படுத்த வேண்டுமென்ற திட்டமிடலும் அதற்கான செயல்பாடுகளும் அதிதீவிரமாக நடைபெற்று வருகின்றது.

ஒவ்வொரு நாளும் உயிரோடு போராடிக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு நாளும் எங்களுக்கு மரணம் எந்த வகையில் மரணம் வருமென்றுதெரியாது? நீங்கள் இதுபோல மறைந்திருந்தால்…. எங்களுக்கு யார் பக்கத் துணையாக நிற்பார்கள்? என்று வினவினேன்.

எல்லாம் மாறும். எதுவும் நிரந்தரமில்லை. விரைவில் நான் இந்த உலகில் புதிய மனிதனாக வலம் வருவேன். சாதி என்பது அடையாளம் அல்ல அது ஒரு அவமானச் சின்னம் என்பதை உணருங்கள், சாதியைத் தூக்கி எறிந்துவிட்டு, தாழ்வு மனப்பான்மையை அகற்றி, பொதுவெளியில் மைய நீரோட்டத்தில் வருவதற்கு முயற்சியுங்கள், அறிவைக்கொண்டு கேள்வி கேளுங்கள், போராடுங்கள், எல்லோரையும் தன் வசப்படுத்துங்கள், புத்தரையும் அவர் அன்பையும் அவர் போதித்த கருத்துகளையும் கொண்டு சேருங்கள், அது போதும் என்றார்.

அடுத்த வார்த்தையைப் பேச எத்தனிக்கையில்,

மாமா மணி 6.10 ஆயிடுச்சு பசங்களை எழுப்பி குளிப்பாட்டுங்க…… என்றவுடன் திடுக்கிட்டேன்… என் முன்னால் நவீனமான தோற்றத்தில் நின்று கொண்டு புன்னகை பூத்தார் சட்டமேதை படுக்கையிலிருந்து எழுந்து அன்றாடத்தில் நுழைந்தேன்.

பேரா. எ. பாவலன்
[email protected]

மாறாத மானுடம் (குறும்பட விமர்சனம்) – பேரா எ. பவலன்

மாறாத மானுடம் (குறும்பட விமர்சனம்) – பேரா எ. பவலன்



மாற்றம் என்ற சொல்லைத் தவிர மற்ற அனைத்தையும்
மாற்றத்துக்கு உட்படுத்த வேண்டும்

மாறாத மானுடம் என்னும் குறும்படம் தமிழ் சமூகத்தில் மிகுந்த வரவேற்பையும், எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது. ஆண்டாண்டு காலம் சாதி ஆதிக்கத்தால் ஒடுக்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்டு, வறுமை சேற்றில் வாரிதூர வீசப்பட்டு ஒரு குறிப்பிட்ட இன மக்களை விலங்குகளைவிட, அவர்கள் வாழத் தகுதியற்றவர்கள் என்ற எண்ணத்தை உருவாக்கியுள்ளனர். இந்த சாதிக் கொடுமை இந்தியா, இலங்கை, நேபாளம் என்று ஒரு சில தென்கிழக்கு ஆசிய நாடுகளை தவிர வேறு எங்கும் இல்லை. அதிலும் குறிப்பாக இந்தியாவில் நான்கு வர்ண கோட்பாடும், மனுதர்மமும் மக்களைப் பிளவுபடுத்தி பிரித்தாளும் சூழ்ச்சியை மக்கள் மத்தியில் ஆழமாக புதைத்து விட்டது. சமகாலத்தில் அறிவியல் வளர்ச்சி அடைந்து, உலகத்தில் பல நாடுகளில் புதியபுதிய கண்டுபிடிப்புகள் கண்டுபிடித்து முன்னேறி சென்றாலும், இந்தியாவில் மட்டும் விஞ்ஞான ரீதியிலும் சாதி வளர்ந்து கொண்டுள்ளது.

அமெரிக்காவில் துணை அதிபராக வெற்றி பெற்ற கமலா ஹாரிஸ் அவர்களையும், கூகுள் நிறுவனத்தின் CEOவாக தேர்வான சுந்தர் பிச்சை உள்ளிட்டவர்களை அவர்களின் சாதியைச் சொல்லி பெருமை தேடிக் கொள்ளும் மனநிலை தான் இந்தியர்கள் உள்ளனர். தமிழ்நாடு சேலத்தைச் சேர்ந்த நடராஜன் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு தேர்வாகிய போது அவர் எந்த சாதியைச் சேர்ந்தவர் என்று கூகுளில் தேடியவர்களில் எண்ணிக்கை அதிகம். இதை அந்த நிறுவனம் வெளிப்படுத்தியிருந்தது. இப்படிதான் எல்லா செயல்களுக்குப் பின்னாலும் அவர்களின் சாதி ஒளிந்து இருக்கிறது. இதுதான் இந்தியர்களின் மனோபாவம். இன்னும் சொல்லப்போனால் வள்ளுவரையே தங்களுடைய சாதிக்காரர் என்று சாயம் பூசுவதும், கடவுளாக வழிபடும் ராமனின் சாதிச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்ததையும் எப்படி மறக்க முடியும்.

இதற்கிடையில் தான் ஒடுக்கப்பட்ட மக்கள் சாதி இழிவை துடைத்தெறிவதற்காக சாதியை எதிர்த்துப் போராடியும், கல்வி ஒன்றே தங்களை விடுதலை செய்யும் என்பதனாலும் கல்வி பெறுவதற்காகவும் போராடுகிறார்கள். இப்படி ஒரு பக்கம் சாதி ஆதிக்க மனநிலை கொண்ட அதிகார வர்க்கத்தை எதிர்த்தும், மற்றொருபுறம் கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக போராடி கல்வி கற்கவும் வேண்டி இருக்கிறது. இன்றும் கிராமத்தில் இருந்து சென்னை உள்ளிட்ட நகரங்களில் படிக்க வரும் மாணவர்களின் மனோபாவம் என்னவாக இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

கல்வியை ஏன் கற்க வேண்டும் என்பதற்கு கல்வி தான் சிந்திக்கும் ஆற்றலைத் தூண்டுகிறது. கல்விதான் ஒருவனை பண்படுத்துகிறது. கல்விதான் ஒருவனை பக்குவப்படுத்துகிறது. கல்விதான் சரியானவற்றை சரியானது என்றும், தவறானவற்றை தவறு என்றும் கற்றுக் கொடுக்கிறது. கல்விதான் ஒருவனுக்கு சுதந்திரமான மனநிலையைக் கொடுக்கிறது. கல்விதான் போராட கற்றுத் தருகிறது. கல்வியால் மட்டும் தான் சமமாக பார்க்கும் எண்ணத்தை உண்டாக்குகிறது (உண்மையான அர்த்தத்தில்). கல்வி கற்பதால் வாழ்க்கைத் தரம் உயர்கிறது. கல்விக் கற்பதால் சாதி ஏற்றத் தாழ்வை நீர்த்துப் போகச் செய்கிறது. அதனால் சாதியை இறுகப் பிடித்துக் கொண்டிருக்கும் இந்த கலாச்சார கயவர்கள் அனைவரும் சமம் என்ற சொல்லை வெறுக்கிறார்கள். மட்டுமல்ல அனைவருக்கும் கல்வித் தரவும் மறுக்கிறார்கள்.

தட்டு தடுமாறி மேலே படிக்க வந்து விட்டால் போதும். அவர்களின் கண்களை உறுத்துகிறது. அவர்களை எப்படியாவது ஒழித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்களுக்கு எதிராக சதி வலைகள் பின்னப்படுகிறது. இதற்கிடையில் அந்த சதி வலையில் சிக்காமலும், எப்படியாவது படித்து உயர்ந்து தனக்கு பின்னால் இருக்கும் குடும்பத்தையும் தன் கிராமத்தையும் முன்னேற்ற வேண்டும் என்று போராடும் இளைஞர்களின் எண்ணம் எப்படி இருக்கும் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

மாறாத மானுடன் குறும்படம் இந்த மன ஓட்டத்தை தான் நுட்பமாக அறிந்து அதற்குப் பின்னால் இருக்கும் அரசியலை வெளிப்படுத்தி உள்ளது என்று கூற முடியும்.

கதைக்கு வருவோம்…. ஒரு கிராமம் அதில் மக்கள் இரு பிரிவுகளாக பிரிந்து வாழ்கின்றனர். அதில் ஒரு பிரிவினர் உயர்ந்தவர்கள். மற்றொரு பிரிவினர் சாதி ஒடுக்கு முறைக்கு உள்ளானவர்கள். குப்பன் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த ஒரு முதியவர். அவருக்கு ஒரு மகன். அவன் நன்றாக படிக்க வேண்டும் என்று எண்ணி பட்டப்படிப்பு படிக்க வைக்கிறார். அவன் பாட புத்தகங்களுடன் நின்று விடாமல் தலைசிறந்த போராளிகளையும், அறிஞர்களையும் தேடித் தேடிப் படிக்கிறான். அவனுக்கும் அவர்களைப் போலவே தன் கிராமத்து மக்களின் அடிமை மனநிலையில் இருந்து அவர்களை வெளிக்கொண்டு வருவதற்காக கிளர்ச்சியாளராக போல மாறுகிறான். இது அவனுடைய அப்பா குப்பனுக்கு துளியும் பிடிக்கவில்லை. அவனுடைய எதிர்காலத்தைக் குறித்தக் கவலை அவருக்கு எப்பொழுதும் இருந்து வருகிறது.

அந்த இளைஞன் ஒரு முற்போக்கு வாதியாக இருக்க முயற்சிக்கிறான். அதனால் தான் அவனுடைய அப்பா கூடகும்பிடும் போடுவதைக் கண்டிக்கிறான். ஆனால் குப்பன் அதை ஏற்கமறுக்கிறார். இதற்கிடையில் தான் அந்த கிராமத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. அப்பொழுது ஆண்ட சாதி பரம்பரையைச் சார்ந்தவர் இந்த தேர்தலில் எனக்கு விருப்பமான ஒருவரை வேட்பாளராக நிற்க வைத்துள்ளேன். அவருக்கு தான் உங்க எல்லோருடைய ஓட்டும். உங்க ஆளுங்கள வேற யாரும் தேர்தல்ல நிற்கக் கூடாது என்று மிரட்டுகிறார். ஆனால் அந்த இளைஞன் அதையும் மீறி தேர்தலில் நிற்பதற்கு விருப்பமனு அளித்து விடுகிறான். இதை ஏற்க மனம் இல்லாத அந்தப் பெரியசாதிக்காரர் அந்த இளைஞனை கண்டம் துண்டமாக வெட்டி அவனுடைய வீட்டு வாசலிலே கொண்டு போய் போட்டு விட்டு வந்து விடுகிறார். இதுதான் கதை.

இது வெறும் கதை அல்ல. இந்தக் கதைக்குப் பின்னால் பெரிய பெரிய வரலாற்று நிகழ்வுகள் மையங் கொண்டுள்ளது. இன்றும் ஒரு பொதுத் தொகுதியில் பட்டியலின மக்கள் சுதந்திரமாகவும், சுயேட்சையாகவும் நின்று வென்றதாக வரலாறு இல்லை. பொதுத் தொகுதியில் நின்று வெற்றி தோல்வி அடைவதைத் தாண்டி தனித் தொகுதியில் கூட நிற்க முடியாத ஓர் அவலம் வரலாற்று நெடுங்கணக்கில் அரங்கேறியுள்ளன.

மதுரை மாவட்டம் 1997 ஜூன் 30-ஆம் நாள் மேலவளவு ஊராட்சி தலைவர் முருகேசன் துணைத்தலைவர் மூக்கன், ராஜா, செல்லதுரை, சேவக மூர்த்தி, பூபதி, சௌந்தரராஜன் என மொத்தம் ஏழு பேரை ஓடும் பேருந்திலும் பொது இடங்களிலும் ஓடஓட விரட்டி கொலை செய்யப்பட்டனர். கூலி உயர்வு கேட்டு போராடிய பட்டியலின மக்களை கீழ்வெண்மணியில் ஒரு குடிசைக்குள் அடைத்து 44 பேரை எரித்து கரிகட்டையாக்கினர். இதுபோன்ற கொடுமைகள் பொது சமூகத்தின் மனசாட்சியை எந்த அளவுக்கு கேள்விக்குட்படுத்தியது? மட்டுமல்ல இந்த கொடுமைக்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போது நீதிபதி வழங்கிய தீர்ப்பு இன்னும் காலக்கொடுமை.

2012 ஆம் ஆண்டு இளவரசன், திவ்யா காதல் திருமணம் பெரிய கலவரத்தில் முடிந்தது. தான் விருப்பப்பட்ட பெண்ணும் ஆணும் சேர்ந்து வாழ்வதற்கு கூட உரிமை மறுக்கப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் என்றாலும் இன்னும் சமூக தளங்களில் இளைஞன் ஒருவன் அம்பேத்கர் டிஷர்ட் அணிந்ததற்காக ஊர் பொது இடத்தில் அடுத்து, துன்புறுத்தி முட்டி போட வைத்து அவனை மானபங்கம் படுத்தியுள்ளனர். இது போன்ற கொடுமைகள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவெங்கும் இதே சூழல் தான். கயர்லாஞ்சி கொடுமை இன்னும் நம்மை விட்டு அகலவில்லை.

இந்த எல்லா கொடுமைகளையும் மாறாத மானுடம் குறும்படம் நம் அகக்கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. வெறும் 8.22 நிமிடங்களில் முடியும் இந்தப் படம் ஒரு அரசியல் புரிதலை ஏற்படுத்துகிறது. குறிப்பாக குப்பன் பயந்தது போன்று அவருடைய மகன் கொலை செய்யப்படுகிறான். அவனை கொலை செய்யும் போது பேசும் வசனம், வரும் காலங்களில் இது ஒரு படிப்பினை… இந்த வசனம் தேவையை கருதியே பயன்படுத்தப்பட்டதாக உணர முடியும். அதேபோன்று உரையாடலும், மொழி நடையும் பாராட்டு தக்கது. எலிக்கரிய தின்ன பசங்க, ஈனப் பயல்கள், கூடக்கும்பிடு உள்ளிட்ட வசனம் இன்னும் கிராமத்தில் ஆதிக்க மனோபாவம் கொண்ட பேசுபவர்களின் வசை சொற்களை நினைவுபடுத்துகிறது.

குறிப்பாக படம் முடியும் பொழுது சட்டங்கள் மாறினாலும் உரிமைகள் கொடுக்கப்பட்டாலும் மனித மனம் மாறாத வரை அனைவரும் மிருகத்தைவிட மோசமானவர்கள் என்றும், அடிமைப்படுத்துபவன் மட்டும் குற்றவாளி அல்ல அடிமை உணர்வை அறியாதவனும் குற்றவாளியே மாற்றம் காண விதைக்கப்பட்டிருக்கும் ஒரு விதையே இந்த மரணம் என்ற வசனத்துடன் காட்சி முடிவடைகிறது. இந்த இடம்தான் ஒரு கதாசிரியனின் வெற்றி அல்லது ஒரு படிப்பின் வெற்றியாக கொள்ள முடியும்.

குப்பன் பாத்திரத்தை ஏற்று நடித்த திரு. தேவேந்திர பிரபு கனக்கச்சிதமாக இருந்ததோடு மட்டுமல்லாமல் அந்த பாத்திரமாகவே ஒன்றிவிட்டார். உண்மையில் அந்தப் பாத்திரம் அவரை பாதித்திருக்க கூடும். அதனால்தான் குப்பனாக மாறியதை உணர முடிகிறது. அதேபோன்று அவருடைய மகனாக நடித்த இளைஞன் திரு. சுரேஷ் அவர்களும் எந்த இடத்திலும் மிகை நடிப்பை (Over Acting) வெளிப்படுத்தாமல் கிராமத்தில் நிலவும் சூழலை உள்வாங்கி யதார்த்தமாக நடித்துள்ளார். அவர் பேசும் வசனமும், உடல் மொழியும் பாராட்டத்தக்கவை. அதேபோன்று மாது, ஆகாஷ், விஸ்வா உள்ளிட்ட எல்லா நடிகர்களும் தங்களுடைய பங்களிப்பை உள்வாங்கி வெளிப்படுத்தி இந்த படத்திற்கு ஒரு வெற்றியைத் தேடி கொடுத்துள்ளனர்.

அதேபோன்று இந்தப் படத்தின் இயக்குனர் மார்ட்டின் ஆதித்யா ஒரு தேர்ந்த படைப்பாளியைப் போன்று இயக்கியுள்ளார். குறிப்பாக எந்த காட்சியை எந்த இடத்தில் இருந்து எடுக்க வேண்டும், எந்த காட்சிக்கு எவ்வளவு தூரம் காட்சிப்படுத்த வேண்டும் என்பதையெல்லாம் நன்கு அறிந்து காட்சிப் படுத்தியுள்ளார். இசையமைப்பாளர் எஸ். எஸ். அருண் தேஜஸ் ஒளிப்பதிவாளர் எம். பவாஸ் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர். இந்தப் படத்தின் கதையை குப்பனாக நடித்த தேவேந்திர பிரபு எழுதியது குறிப்பிடத்தக்கது.

மாறாத மானுடம் என்னும் இந்த குறும்படத்தில் நடித்த நடிகர்கள் தொழில்நுட்பக் கலைஞர்கள் பெரும்பாலும் சென்னை லயோலா கல்லூரி இளங்கலை தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்கள் என்பது மற்றொரு தகவல். இது ஒரு கூட்டு முயற்சி. இது அவர்களின் புதிய முயற்சி. மட்டுமல்ல முதல் முயற்சியும் கூட. இந்த முதல் முயற்சியிலே முதிர்ச்சி தெரிவதை உணர முடியும். அந்த வகையில் இந்தப் படம் குறும்பட போட்டியில் சிறந்த நடிகருக்கான விருதையும் திரு. தேவேந்திர பிரபு பெற்றுள்ளார். இது அவருக்கு தனிப்பட்ட முறையில் நடிப்புக்கு கிடைத்த வெற்றியாக இருந்தாலும் இன்னும் இந்த படம் மேலும் மேலும் பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெரும் என்ற நம்பிக்கையுண்டு.

பேரா எ, பவலன்
[email protected]