இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @ 75 : தொடர் – 16 வேளாண்மைச் சிக்கல்களும் தீர்வுகளும் – பேரா.பு.அன்பழகன்

இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @ 75 : தொடர் – 16 வேளாண்மைச் சிக்கல்களும் தீர்வுகளும் – பேரா.பு.அன்பழகன்




அரசியலும் பொருளாதாரமும் நெருங்கிய தொடர்புடையது. மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸ் ஆகியோர் பொருளாதார அடிப்படைக்கும் மேற்கட்டுமானம் (அரசியல் மற்றும் சட்டம்) ஆகியவற்றுக்கும் இடையே இயங்கியல் தொடர்புகளைப் பற்றி விளக்கினார்கள். அரசியல்-பொருளாதார அடிப்படையில் உற்பத்தியின் செயல்பாடுகள் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்கள் காணப்படுகிறது என்று குறிப்பிட்டனர். லெனின், அரசியலானது பொருளாதாரத்தைவிட முன்னுரிமை அளிக்கத்தக்கது என்றும் இது குறிப்பாக சமூக போராட்டத்திற்கானது என்கிறார். தொன்மை அரசியல்-பொருளியல் அறிஞர்களின் கருத்துப்படி, அரசியல்-பொருளாதாரமானது முதலாளித்துவப் பிரச்சனைகளை நேரடியாக எதிர்கொள்வதற்கான பொறுப்புகளை உடையதாகும் என்கின்றனர். நவீன அரசியல்-பொருளாதாரமானது சமுதாயத்தில் தலையீடு செய்வதாக இருந்தது. மார்க்ஸ் தன்னுடைய புத்தகமான “A Contribution to the Critique of Political Economy” என்பதில் அரசியல்-பொருளாதாரம் என்பது நாட்டின் மக்கள்தொகை, மக்களிடையே குழுக்களின் பகுப்பு, நகரம், நாடு, ஆண்டு உற்பத்தி, நுகர்வு, விலை போன்றவற்றுடன் தொடர்புடையது என்று குறிப்பிடுகிறார். அரசியல் (மேற்கட்டுமானம்) மற்றும் பொருளாதாரம் (அடிப்படை) என்பது சூழ்நிலைக்கு ஏற்றதாக உள்ளது. மார்க்சிய நிலைப்பாடானது, நிலப்பிரபுத்துவம் அல்லது முதலாளித்துவத்திற்கு முந்தைய விவசாயக் கட்டமைப்பின் மாற்றம் விவசாயப் பிரச்சினையின் தீர்வு மூலம் நிகழ்கிறது என்கிறார். தொழில்துறைக்கு முந்தைய காலத்தில் விவசாயம் எந்த வெளிப்புறத் தூண்டுதலையும் பெறவில்லை விவசாயத்தில் தோன்றிய வெளிப்புறத் தூண்டுதல்களால் தூண்டுதல்கள் மற்றும் தொழில்துறையில் சார்பு தலைகீழாக மாறியது. மேற்கட்டுமானமும், அடிப்படையும் முரண்பாடு உடையது என்று மா சே துங் குறிப்பிடுகிறார்.

இந்தியாவைப் பொருத்த அளவில் பிரதன் என்பவர் அரசியல்-பொருளாதாரம் என்பது சமுதாயத்திற்கு ஆற்றலைப் பகிர்ந்தளிப்பது என்று குறிப்பிடுகிறார். இந்தியாவில் பிரிட்டிஷ் கிழக்கு இந்திய நிறுவனம் வாணிப நோக்கிற்காக நுழைந்து பின்னால் அது அரசியல் சார்ந்த நிலைப்பாட்டில் பயணித்து பொருளாதார வளத்தைச் சுரண்டியது. இதில் வேளாண்மைத்துறையானது முதன்மை பாதிப்பை எதிர்கொண்டது. இடைத்தரகர்களை உருவாக்கி உழவர்களிடமிருந்து கட்டாய வரிவசூல் செய்தது. இந்தியச் சுதந்திரப் போராட்டத்திற்கு விவசாயிகளின் எழுச்சி மிக முக்கியப் பங்கு வகித்தது. இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் பொருளாதார உத்திகளைப் பின்பற்றுவதில் அரசியல் முக்கியப் பங்கினை ஆற்றியது. நேருவின் ஆட்சிக் காலம் தொடங்கி இந்திரா காந்தியின் முதல் கட்ட ஆட்சிக் காலம் முடிய மூடிய பொருளாதார முறை பின்பற்றப்பட்டது. இந்திரா காந்தியின் இரண்டாம் கட்ட ஆட்சிக் காலம் தொடங்கி மன்மோகன் சிங்கின் ஆட்சிக் காலம் முடியச் சந்தைப் பொருளாதார முறைப் பின்பற்றப்பட்டது. மோடியின் ஆட்சிக்காலத்தில் பெருநிறுவனம் சார்ந்த பொருளாதார உத்திகள் பின்பற்றப்பட்டு வருகிறது.

மூடிய பொருளாதார முறையில் உள்நாட்டு அளவில் பல்வேறு சீர்திருத்தங்கள் இந்தியச் சூழலுக்கு ஏற்ப நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன் விளைவு உணவு உற்பத்தியில் பற்றாக்குறை நிலை போக்கப்பட்டு தற்சார்பினை அடைய முடிந்தது. நாட்டை பொருளாதார நிலையில் மேம்படுத்துவதற்காகப் பொதுத்துறைச் சார்பு உத்திகள் முன்னெடுக்கப்பட்டது. சந்தைப் பொருளாதாரத்தில் தாராள மயமாக்கல், உலக மயமாக்கல், தனியார் மயமாக்கல் நடவடிக்கையினால் இந்தியாவின் வர்த்தக நிலை, அந்நிய முதலீடுகள் அதிகரித்தது. இதனால் நுகர்வோர் பெரும் பயனை அடைந்தனர், பொருளாதார வளர்ச்சி முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்தது. ஆனால் சமுதாய ஏற்றத் தாழ்வுகள் அதிகரித்தது. பெருநிறுவனச் சார்பு முறை தற்போது நடைமுறையில் உள்ள நிலையில் விளிம்பு நிலையில் வாழ்கின்ற மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நிலமற்ற விவசாயக் கூலிகள், குறு, சிறு விவசாயிகள், சிறு வணிகர்கள், கிராமப்புற மக்கள் பெருமளவிற்குப் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலையின்மை, வறுமை, சமத்துவமின்மை அதிகரித்து வருகிறது.

இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் 1949ல் வேளாண்மைக்கான ஜெ.சி.குமரப்பா குழுவானது இடைத்தரகர்களை ஒழிப்பது, குத்தகைச் சீர்திருத்தம், நில உச்சவரம்பு, கூட்டுறவு வேளாண்மை போன்றவற்றைப் பரிந்துரை செய்தது. இதில் இடைத்தரகர்கள் ஒழிப்பு நடவடிக்கையைத் தவிற்று அரசியல் காரணங்களால் நிலஉச்சவரம்பு, குத்தகைச் சீர்திருத்தம் போன்றவை இன்றுவரை முழுமைக்காக நடைமுறைப்படுத்த முடியவில்லை. பஞ்சம், பட்டினி, வறுமை, அதிக இறப்பு போன்றவை இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு இருந்த நிலை சுதந்திரம் அடைந்த பிறகும் தொடரக்கூடாது என்ற அடிப்படையில் இந்தியாவின் முதல் பிரதமரான நேரு உடனடித் தீர்வாக உணவு இறக்குமதி செய்தார். நீண்ட கால அடிப்படையில் உணவுப் பற்றாக் குறையைப் போக்க பல்வேறு செயல் திட்டங்களைச் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டன. இதன் பயனாக 1980களில் இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவினை எட்டியது. ஆனால் இது வேளாண்மையில் ஏற்றத் தாழ்வுகளை (வட்டாரம் மற்றும் விவசாயிகளிடையே) அதிகரித்தது.

நில உச்சவரம்பு சட்டத்தின்படி (நில உச்சவரம்புச் சட்டம் 1961) உபரி நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு அவற்றை நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. இதன் விளைவு நிலமற்ற கிராமப்புறக் குடும்பங்கள் மொத்த அளவில் 1953-54ல் 23.09 விழுக்காடாக இருந்தது 2012-13ல் 7.41 விழுக்காடாகக் குறைந்தது. ஆனால் உபரி நிலங்கள் கையகப்படுத்துவது மிகவும் குறைவாகவே இருந்தது. இதே காலகட்டத்தில் சாகுபடி செய்யாதா நில உடைமையாளர்கள் மொத்தத்தில் 4.99 விழுக்காடாக இருந்தது 24.36 விழுக்காடாக அதிகரித்துள்ளது. குத்தகை சீர்திருத்தம் உழுபவருக்கே நிலம் சொந்தம் என்றும், வாடகையின் அளவும் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபாட்டுடன் நடைமுறைப் படுத்தியது. இதனால் 1953-54ல் மொத்த சாகுபடிப் பரப்பில் குத்தகைச் சாகுபடிப் பரப்பானது 20.34 விழுக்காடாக இருந்தது 2012-13ல் 11.30 விழுக்காடாகக் குறைந்தது. நில உச்சவரம்பும், குத்தகை சீர்திருத்தமும் எதிர்பார்த்த வெற்றியைத் தராததால் சமூகத்தில் அமைதியின்மை ஏற்பட்டு நாட்டின் பல பகுதிகளில் நக்சல்பாரி இயக்கங்கள் தோன்றத் தொடங்கியது. இது தொடர்ந்து அரசுக்கு பெரும் சவாலாக உள்ளது. மக்கள் தொகை 1951 முதல் 1981வரை அதிகமாக அதிகரித்தது இதனால் பல்வேறு பயன்பாட்டுக்காக நிலத்தின் தேவையும் அதிகரித்தது. 1991க்குப்பின் புதியப் பொருளாதாரச் சீர்திருத்த நடைமுறையினால் உள்கட்டமைப்பினை உருவாக்க முன்னுரிமை அளிக்கப்பட்டது. இதனால் நிலம் மாற்றுப் பயன்பாட்டிற்குப் (குடியிருப்பு, பல்வேறு உள்கட்டமைப்புகள்) பயன்படுத்தப்பட்டது இதற்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவது தொடர் நிகழ்வாகிப் போனது. சாகுபடி செய்யத் தகுதி வாய்ந்த நிலங்கள் தரிசு நிலங்களாக மாற்றியது. நிகர சாகுபடி பரப்பு குறையத் தொடங்கியது. இதனால் 1953-54ல் சராசரி நிலக் கையிருப்பு 1.95 ஹெக்டேராக இருந்தது 2013-14ல் 0.59 ஹெக்டேராகக் குறைந்ததுள்ளது.

உயர் விளைச்சல் தரக்கூடிய விதைகள், ரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லி, வேளாண் இயந்திரங்களைப் பயன்படுத்துதல், கடன் பெறுவதற்கான வசதி வாய்ப்புகள் உருவாக்கித் தருதல் ஆகியன பசுமைப் புரட்சியின் முக்கிய உத்திகளாக இருந்தன. இவற்றை 1980-90வரையில் மூன்று கட்டங்களாக நடைமுறைப்படுத்தியது (முதல் கட்ட காலத்தில் உணவு தானியத்திற்கானதாகவும், இரண்டாவது கட்ட காலத்தில் பழம் மற்றும் காய்கறிகள் உற்பத்திக்கானதாவும் மூன்றாவது கட்ட காலத்தில் எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள் உற்பத்திக்கானதாகவும் இருந்தது) இதன் விளைவு உணவுப் பொருட்களின் விளைச்சல் மற்றும் உற்பத்தித் திறன் அதிகரித்தது. பசுமைப் புரட்சியினால் வேளாண்மை மீதான பொதுச் செலவுகள் துவக்கத்தில் அதிகரித்தது, விவசாயிகளுக்கு இடுபொருட்களுக்கான மானியம் வழங்கப்பட்டது, வேளாண் விளைபொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை அறிவிக்கப்பட்டது. இதனால் விவசாயிகளுக்கு வேளாண்மை மூலம் பெரும் வருமானம் அதிகரித்தது, வறுமை குறைந்தது. எதிர் விளைவுகளாக மண்வளம் குறைந்தது, புதிய வகைப் பூச்சிகள் உருவாகி வேளாண் பயிர்களைத் தாக்கியது, நீர் இறைப்பிற்கு மின் மோட்டார்களின் பயன்பாடு அதிகரித்ததால் நிலத்தடி நீர் அதிக அளவில் உறிஞ்சப்பட்டது, பசுமைப் புரட்சி உத்திகளைப் பெரும்பான்மையான சிறு, குறு விவசாயிகளால் அணுக முடியாமல் இருந்தது, வோளண்மையில் முதலாளித்துவம் பெருக்கமடைந்தது, வேளாண் இடுபொருட்கள் விலை தொடர்ந்து அதிகரித்து, வேளாண் சாகுபடியை மேற்கொள்ள விவசாயிகள் முறைசார நிதி நிறுவனங்களில் அதிக வட்டிக்குக் கடன் பெற்று கடன் பொறியில் வீழ்ந்தனர், இதனால் விவசாயத் தற்கொலைகள் அதிகரித்தது.

1980களில் இரண்டாவது பாதியில் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது. சந்தைப் பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. உணவல்லா வேளாண் விளைபொருட்களின் தேவை பன்னாட்டு அளவில் அதிகமானதால் வருமான நோக்கின் அடிப்படையில்; உணவல்லா சாகுபடியை நோக்கி விவசாயிகள் பயணிக்கத் தொடங்கினர். இதனால் பாரம்பரிய வேளாண்மை சாகுபடி குறையத் தொடங்கி நவீன வேளாண்மை அதிகரித்தது. வேளாண் வர்த்தக கட்டுப்பாட்டில் தளர்வுகள் அளிக்கப்பட்டது. வெளிநாடுகளிலிருந்து வேளாண் பொருட்கள் தங்குதடையின்றி வரத் தொடங்கியது. தொழில்நுட்ப இறக்குமதிக்கு அனுமதி அளிக்கப்பட்டதால் வேளாண்மை உற்பத்தி அதிகரிப்பிற்கு இது உறுதுணையாக இருந்தது. இதனால் உள்நாட்டு உணவு உற்பத்தியும் அதிகரித்தது. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, நரசிம்மராவ், வாஜ்பாய், மன்மோகன் சிங் ஆட்சிக்காலங்களில் பன்னாட்டுச் சந்தையில் இந்தியாவின் பங்கெடுப்பினை உறுதிசெய்யவும் அயல் நாட்டு வர்த்தக நிலையை மேம்படுத்தவும் வேளாண்மைத் துறையில் பலவேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டனர். ஆனால் பன்னாட்டு அளவில் இந்தியாவின் தொழில்நுட்பத்தின் பயன்பாடு பின்தங்கிய நிலையில் இருந்ததால், வளர்ந்த மற்றும் இந்தியா போன்றே சில வளரும் நாடுகளுடன் போட்டியிட முடியாத நிலையே இருந்தது. மேலும் அரசானது வேளாண் துறைக்கான முக்கியத்துவத்தைக் குறைத்துக்கொண்டும் தொழில்துறை, சேவைத்துறைக்கும் முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியது. வேளாண்மையின் மீதான பொதுத் துறை முதலீடுகள் குறைக்கப்பட்டது. இந்தியப் பொருளாதாரத்திற்கு வேளாண்மைத் துறையின் பங்களிப்பானது தொடர்ந்து வெகுவாகக் குறைந்தது வந்தது.

1995ல் இந்தியா, உலக வர்த்தக அமைப்பில் உறுப்பு நாடாக இணைந்தபின் அதன் விதிமுறைகளைப் பின்பற்றவேண்டிய நிர்ப்பந்தம் உருவானது. வேளாண் தொழிலுக்கான ஒப்பந்தம் உலக வர்த்தக அமைப்பின் முக்கிய அங்கமாக இருந்தது. வேளாண் மானியம் 10 விழுக்காட்டிற்கு மிகாமல் இருக்கவேண்டும், வேளாண் வர்த்தகத் தடைகளைக் களைவது, நாட்டின் மொத்த நுகர்வில் 3 – 5 விழுக்காடு பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வது, பொதுவிநியோகம் சமுதாயத்தில் விளிம்பு நிலை மக்களுக்கானதாக மட்டுமே இருக்க வேண்டும், காப்புரிமையை நடைமுறைப்படுத்துவது போன்றவற்றை உலக வர்த்தக அமைப்பு நிர்ப்பந்தித்தது. பச்சை அறை (Green Box) மற்றும் நீல அறை (Blue Box) போன்றவற்றில் வளர்ந்த நாடுகள் மட்டுமே இடம்பெற்று, சுற்றுப்புறச் சூழல் மற்றும் தொழிலாளர்கள் ஆகிய நிலையினை அளவுகோலாக்க வைத்து வர்த்தக பரிமாற்றத்தை நடைமுறைப்படுத்தியதால் இந்தியாவின் துணி, தோல் போன்ற முக்கிய ஏற்றுமதி தொழில்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளது. மிகவும் வேண்டிய நாடு (Most Favoured Nation) என்ற அடிப்படையில் பாகுபாடு, இந்தியப் பாரம்பரிய வேளாண் மற்றும் தாவர உற்பத்தி பொருட்கள் பன்னாட்டு பெருநிறுவனங்களால் காப்புரிமையைப் பெற முயன்றது போன்றவை உலக வர்த்தக அமைப்பினால் இந்தியா எதிர்கொண்ட முக்கியச் சவால்களாக இருந்தது. அதேசமயம் உலக வர்த்தக அமைப்பு நடைமுறைக்குப் பின் இந்தியாவில் உணவு தானிய உற்பத்தி இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. மக்களின் உணவு நுகர்வுப் பழக்கத்தில் பெரும் மாறுதலுக்குள்ளானது. இதனால் பருப்பு மற்றும் தாவர எண்ணெய்யின் தேவை பல மடங்கு உயர்ந்துள்ளது. ஆனால் இதற்கு ஏற்ப உள்நாட்டில் உற்பத்தி அதிகரிக்காததால் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டியிருந்து. வேளாண்மை சாகுபடியில் ஈடுபட்டிருந்தவர்கள் குறிப்பாக வேளாண் தொழிலாளர்கள் வோளண் சாரத் தொழிலில் ஒப்பீட்டு அளவில் அதிக கூலி அல்லது ஊதியம் கிடைத்ததால் பெருமளவிற்கு அதிலிருந்து விடுபட்டு மாற்று வேலைகளுக்குச் செல்லத் தொடங்கினர். இக்கால கட்டத்தில் அரசு கிராமப்புறங்களில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தியது. இது பெருமளவிற்குக் கிராமப்புறப் பருவகால வேலையின்மையைக் குறைப்பதற்கு உதவியது. இவ் வேலைவாய்ப்பினால் கிராமப்புற மக்களின் வேளாண் சாரா வருமானம் அதிகரித்து, உணவல்லா நுகர்வுத் தேவையானது உயர்ந்தது. மொத்த நுகர்ச்சி செலவில் உணவல்லாச் செலவினத்தின் பங்கு அதிகரிக்கத் தொடங்கியது. வேளாண்மை இந்தியப் பொருளாதாரத்திற்கு அளித்து வந்த பங்களிப்பு வெகுவாகக் குறைந்தது அதேசமயம் பெருமளவிற்கு ஆண் விவசாயிகள் வோளண்சாரத் தொழிலை நோக்கிச் சென்ற அளவிற்குப் பெண் விவசாயிகள் செல்லாததால் வேளாண் தொழிலில் ஈடுபட்ட பட்டவர்கள் பெருமளவிற்குக் குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் இந்தியா உலக வர்த்தக அமைப்பினால் பெற்ற நன்மையைவிட எதிர்மறையே ஓங்கி இருக்கிறது. 2005ல் உலகமயமாக்கலின் நீட்சியாக இந்தியா ஏற்றுமதியைப் பெருக்கும் நோக்கில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை உருவாக்கியது. இதற்காகப் பெருமளவிற்கான வேளாண் விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. இதன் விளைவு விவசாயிகள் நிலமற்றவர்களாக மாற்றமடைந்தனர்.

மக்கள் தொகை வளர்ச்சி, நகரமயமாதல், தொழில் மயமாதல், உள்கட்டமைப்பு உருவாக்கப்படுதல் போன்ற காரணங்களினால் இந்தியாவில் நீர்நிலைகள் பல்வேறு பயன்பாடுகளுக்கு உள்ளாகியுள்ளது. இதனால் வேளாண்மைச் சாகுபடிக்குப் பயன்பாட்டிலிருந்த பாரம்பரிய நீர் ஆதாரங்கள் ஆக்கிரமிக்கப்படுவதால் வேளாண்மை பெருமளவிற்கு நிலத்தடி நீரைச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் உண்டாகியுள்ளது. மேலும் இந்தியாவில் அதிகமாக நீர் (பயன்படுத்துவது) செறிவுடைய பயிர்கள் அதிகமாகச் சாகுபடி செய்வதாலும், மின்மோட்டார் பயன்பாடு அதிகமாக உள்ளதாலும், குழாய்க் கிணற்றுப் பாசனம் ஆண்டுக்கு 5 விழுக்காடு அதிகரிப்பதாலும் நிலத்தடி நீர் மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது இந்தியா உலகிலேயே அதிக வறண்ட நிலப்பரப்பை உடைய நாடுகளில் ஒன்றாக உள்ளது. எனவே தொழில்நுட்பப் பயன்பாட்டை அடிப்படையாகக்கொண்டு விவசாயிகள் பயிர்செய்ய மானிய அடிப்படையில் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் இம் முறை இந்தியாவில் பாரம்பரிய சாகுபடி முறையிலிருந்து எளிதாக விவசாயிகள் விடுபட முடியாதல் இது தகுந்த வெற்றியடையவில்லை. தற்போது இந்தியா வறட்சியை தாக்குப்பிடிக்கும் பயிர் வகைகளைச் சாகுபடி செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பானது 2023ஆம் ஆண்டைச் சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளது. சிறுதானியங்கள் ஊட்டச்சத்து மிக்கது. இந்தியா உலக அளவில் குறைஊட்டசத்துடன் வாழும் மக்களில் முதன்மை இடத்தில் உள்ளது. சிறுதானியங்கள் வறண்ட பகுதிகளில் சாகுபடி செய்வதற்கு ஏற்றதாகும். இந்தியாவின் அதிக சாகுபடி பரப்பானது ஆண்டில் பெரும் பகுதி வறண்ட நிலையை உடையது. உலக அளவில் சிறுதானிய உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஆண்டுக்கு 12 மில்லியன் மெட்டிரிக் டன் சிறுதானிய உற்பத்தி நடைபெறுகிறது. இந்திய சுற்றுச் சூழல், நீர்வள ஆதாரம் குறைதல், நுகர்வு மாற்றமடைந்திருப்பது போன்ற நிலைகளை முன்னிறுத்தி அரசு சிறுதானிய உற்பத்திக்காக மேலும் முன்னுரிமையை அளிக்க வேண்டும்.

இந்தியா பசுமைப் புரட்சி மற்றும் உலக வர்த்தக அமைப்பு நடைமுறைப் படுத்தப்பட்டபின் அதிக விளைச்சல் தரக்கூடிய விதைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இவற்றைச் சாகுபடி செய்ய ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லி போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதன் விளைவு சுற்றுப்புறச் சூழல் மற்றும் நுகர்வோர் நலன் பாதிப்படைந்துள்ளது. எனவே அரசு இயற்கை வேளாண்மையினை நோக்கிய பார்வையை முன்னெடுத்துள்ளது. ஆனால் அரசு இதற்கான ஆராய்ச்சிக்கு நிதி ஒதுக்கீட்டை போதுமான அளவிற்கு உயர்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இயந்திரங்கள் வேளாண்மையில் அதிக அளவிற்குப் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இது ஒருபுறம் நேர்மறையாக நோக்க முடியும் காரணம் வேளாண்மை தகுந்த நேரத்தில் பயிர் சாகுபடிசெய்யத் துவங்குவது முதல் அறுவடை செய்வது வரை இதற்கான முக்கியத்துவம் காணப்படுகிறது. அதே சமயம் இதனால் இந்தியாவில் அதிக அளவில் வேளாண்மையைச் சார்ந்து வாழ்ந்து வரும் விவசாயக் கூலிகளின் வேலை இழப்பு ஏற்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவு வேளாண் சாரா வேலைகளுக்கு அதிகமாகச் செல்ல வேண்டிய நிலை காணப்படுகிறது. இந்நிலையைப் பொறுத்தவரையில் வேளாண் சார்புத் தொழிலில் தேவைக்கு அதிகமான விவசாயிகள் வேலைக்கான பங்கேற்பு வீணாகுவது குறைக்கப்படுகிறது. அதே சமயம் வேளாண் சாராத் தொழிலை நோக்கிச் செல்லும் வேளாண் தொழிலாளர்களுக்குப் போதுமான வாய்ப்புக்கள் உள்ளுரில் கிடைக்காததால் நகரங்களை நோக்கிச் செல்லுகின்றனர். இதனால் நகரமயமாக்கல் ஏற்பட்டு விளைநிலங்கள் மனைத் தொழிலுக்காகவும், தொழிற்சாலைகளுக்கும், உள்கட்டமைப்பிற்கும், மடைமாற்றம் ஏற்பட்டு நிகர பயிரிடும் பரப்பு குறையத் தொடங்குகிறது.

வேளாண்மையின் முக்கிய இடுபொருட்களாக இயந்திரங்கள் பயன்பாடு உள்ளதால் சிறு குறு விவசாயிகளால் இதனைச் சொந்தமாகப் பெற இயலாத நிலை காணப்படுகிறது. தனியார் வேளாண் இயந்திரங்கள் பயன்படுத்துவதால் வேளாண் இடுபொருட்களின் செலவு அதிகரிக்கிறது. இது போன்றே இதர இடுபொருட்களின் விலைகள் (குறிப்பாக ரசாயன உரம், பூச்சிக்கொல்லி, விதைகள்) பன்மடங்கு உயர்ந்துள்ளது. இவ் அதிகரிக்கின்ற இடுபொருட்களின் செலவிற்கு ஏற்பத் திரும்பு வீதம் விளைபொருட்களுக்குக் கிடைக்கப் பெறாததால் விவசாயிகள் இழப்பினைச் சந்திக்கின்றனர். இதன் எதிரொலியாக விவசாயத் தற்கொலைகள் அதிகரித்துக் காணப்படுகிறது. இயற்கை உரங்களைப் பயன்படுத்த அரசு விவசாயிகளை ஊக்குவித்துவந்தாலும் கடந்த காலங்களில் கால்நடைகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வந்துள்ளதால் இதன் மூலம் பெறப்படும் எருவின் பற்றாக்குறைக் காணப்படுகிறது. இது போல் மரங்கள் வழியாகப் பெறப்படும் தழை உரம், பசுந்தாள் உரம் போன்றவற்றிலும் பல்வேறு காரணங்களால் பற்றாக்குறை நிலவுகிறது. எனவே அரசு இயற்கை உரங்களைப் பயன்படுத்துவதற்கான இயக்கத்தை முன்னெடுப்பது அவசியமாகிறது.

இந்தியா சுதந்திரம் அடைந்து முதல் இரண்டு பத்தாண்டுகளில் தேசிய முன்னுரிமையின் அடிப்படையில் வேளாண்மைக்கான கடன் வழங்கப்பட்டது. ஆனாலும் நிதி நிறுவனங்கள் வேளாண்மைக்கான கடன் மொத்தக் கடனில் சிறிய அளவே பங்கினைப் பெற்றிருந்தது. நிறுவனம்;சாராக் கடன் வழியாக விவசாயிகள் பெருமளவிற்கு அதிக வட்டியில் கடன்பெற்று வந்ததால் விவசாயிகளைக் கடன் பொறியில் சிக்கவைத்தது. இதன் அடிப்படையில் இந்திரா காந்தி இரண்டு கட்டங்களாக வங்கிகளைத் தேசிய மயமாக்கி வேளாண்மைக்கானக் கடன் வழங்குவதை முன்னுரிமை என்று அறிவித்தார். இத்துடன் கிராமப்புற வட்டார வளர்ச்சி வங்கி, கூட்டுறவு வங்கி போன்றவற்றின் செயல்பாடுகள் முடுக்கிவிடப்பட்டது. 1991க்குப்பின் நரசிமம் குழுவின் பரிந்துரையின்படி வங்கிகளின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. 1988ல் தாராளக் கடன் முறையும், 2009-10ல் மிகக் குறைவாக 4 விழுக்காடு வட்டிக்கு வேளாண் கடனும் வழங்கப்பட்டது. தகுந்த காலத்தில் பெறப்பட்ட கடனைத் திரும்பச் செலுத்தும் விவசாயக் கடனின் வட்டி பூஜ்யமாக நிர்ணயிக்கப்பட்டது. உலக வர்த்தக அமைப்பு நடைமுறையில் வந்தபின் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதை ரகங்கள் பயிரிடுவதன் வழியாக வேளாண் செலவுகள் அதிகரிக்கத் தொடங்கியது. இதனை எதிர்கொள்ள விவசாயிகள் அதிக கடன் பெற வேண்டிய நிலை உருவானது. 1995 முதல் விவசாயிகளின் தற்கொலைகள் அதிக அளவில் காணப்படுகிறது இதற்கு முக்கியக் காரணங்களில் முதன்மையானதாக வேளாண் கடன் பளு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2019க்குப்பின் விவசாயிகள் வேளாண் பணிகளைத் துவக்குவதற்காகக் கடனாக இல்லாமல் மூன்று தவணைகளில் ரூ.2000 வீதம் சிறு, குறு விவசாயிகளுக்குப் பணமாக வழங்கி வருகிறது. இவ்வாறு பல்வேறு வேளாண்மைக்கான கடன் அளிப்பு முறைகளில் கடந்த காலங்களில் அரசு மேற்கொண்டாலும் தற்போதும் வேளாண்மைக்கான கடனானது நிறுவனம் சாரா வழியாக மூன்றில் ஒரு பங்கு பெறப்படுகிறது இது 1951ல் 7.2 விழுக்காடாக மட்டுமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையினைப் போக்க அரசு வேளாண்மையைத் தொழிலை லாபகரமானதாக உருவாக்க வேண்டும். குறைந்தபட்சம் வேளாண் விளைபொருட்களுக்குத் தகுந்த விலை கிடைக்க உறுதி செய்ய வேண்டும்.

வேளாண்மை உற்பத்தியில் உபரியை விவசாயிகள் விற்பனை செய்து வருமானத்தை ஈட்டுகின்றனர். வேளாண் பொருட்கள் சந்தைப் படுத்துதலின் வழியாகப் பெறப்படும் வருமானமானது விவசாயக் குடும்ப வருமானத்தில் முக்கியப் பங்கினை வகிக்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்தபின் வேளாண் பொருட்களைச் சந்தைப் படுத்த வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் ஏற்படுத்தப்பட்டு அதன் வழியாக வேளாண் உற்பத்தியை விற்பனை செய்ய வசதி ஏற்படுத்தித் தரப்பட்டது. இதனால் இடைத் தரகர்களின் சுரண்டல்கள் கட்டுப்படுத்தவும், உரிய விலை கிடைக்கவும் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டது. ஆனாலும் விவசாயிகள் பெருமளவிற்கு முறைப்படுத்தா விற்பனை அமைப்புகள் வழியாகவே அதிகமாக விளைபொருட்களைத் தற்போதும் விற்பனை செய்துவருகின்றனர். இதனால் இடைத்தரகர்கள், வணிகர்கள், முகவர்கள், உள்ளிட்டோர் பயனடைகின்றனர். ஆனால் விவசாயிகளுக்குத் தகுந்த விலை கிடைப்பதில் தடைகள் ஏற்படுகிறது. வேளாண் மண்டிகள் போதுமான அளவில் இல்லாததும், கிராமங்களுக்கானப் போக்குவரத்து இன்மையாலும், விவசாயிகள் பயிர் சாகுபடி செய்ய முன்பணமாக வணிகர்களிடம் பெறுவதாலும், சேமிப்பு கிடங்கு வசதியின்மையாலும், விவசாயிகளுக்குச் சந்தைகளைப் பற்றிய தெளிவின்மையாலும் விவசாயிகளின் விளைபொருட்களுக்குத் தகுந்த விலை கிடைக்காததற்கு முக்கியக் காரணங்கள் ஆகும். இதனைப் போக்க அடுத்த தலைமுறைக்கான சந்தை சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு APMC மாதிரிச் சட்டம் 2003 கொண்டுவரப்பட்டது. இதன்படி விவசாயிகளிடமிருந்து நேரடியாக விளைபொருட்களை வாங்குவது, ஒப்பந்தச் சாகுபடி முறையை மேற்கொள்வது, தனியார் மற்றும் கூட்டுறவுச் சந்தைகளை நிறுவுதல், சிறப்புச் சந்தைகளை உருவாக்குவது, தனியார்-பொது பங்கேற்புடன் சந்தைகளை மேம்படுத்துவது, தரம் பிரித்தல் மற்றும் தரப்படுத்துதல் போன்ற நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டது. 2016ல் நிதி அயோக்கினால் மாதிரிச் சட்டத்தில் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டி அவற்றைக் களைய முற்பட்டது. இதனைத் தொடர்ந்து ந- e-NAM 2016ல் நடைமுறைப்படுத்தப்பட்டு APMC கள் இத்துடன் இணைக்கப்பட்டு விவசாயிகள் தங்களின் பொருட்களை நாடுமுழுவதும் அதிக விலைக்கு விற்பனைச் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. 2020ல் இந்திய அரசானது மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்து அதன்வழியாக விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை அதிக விலைக்கு இந்தியாவின் எப்பகுதியிலும் விற்பனை செய்ய வழி வகுத்தது. ஆனால் இச்சட்டத்தால் சிறு, குறு, நடுத்தர விவசாயிகள் பயனடைவது சாத்தியமற்றது என்ற அடிப்படையில் இச்சட்டங்களுக்கு எதிராகப் பெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர். இக் கடுமையான எதிர்ப்பினால் அரசு இச் சட்டங்களை விலக்கிக்கொண்டது. இந்திய விவசாயிகள் பெருமளவிற்கு APMC மண்டிகளில் தங்களின் விளைபொருட்களை விற்க முடியாத நிலை நீடிக்கிறது. இதனால் விவசாயிகள் இழப்பினைச் சந்திக்கின்றனர். எனவே அரசு அதிக அளவிற்கான மண்டிகளை உருவாக்கித் தருவதும், அம் மண்டிகளில் அனைத்துவிதமான கட்டமைப்பினை உறுதி செய்வதும், இதில் ஏறப்படும் ஊழல்களைத் தடுப்பதும், வேளாண் பொருட்களுக்கு அரசு அறிவிக்கின்ற விலையினைக் கிடைக்க வழிவகை செய்வதும், கிடங்குகளை உருவாக்குவதும் முக்கியத் தீர்வாக அமையும். இத்துடன் அறுவடைக் காலங்களில் தேவைக்கு ஏற்ப கொள்முதல் நிலையங்களை உருவாக்கித் தருவதுடன் உடனுக்கு உடன் கொள்முதல் நடவடிக்கையை மேற்கொள்வதும் தலையாயக் கடமையாக இருக்கும்.

அரசு விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவது என்ற அறிவிப்பை 2016ல் வெளியிட்டு 2022ல் இதனை அடைய காலநிருணயம் செய்தது ஆனால் 2016ல் ரூ.8000 ஆக இருந்த வருமானம் 2022ல் ரூ.12400 என்ற அளவை மட்டுமே அடைந்துள்ளது. அதாவது மூன்றில் ஒரு பங்கு வருமானம் மட்டுமே அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடிப்படைக் காரணம் விவசாயிகளின் விளைபொருட்களுக்குச் சந்தையில் தகுந்த விலை கிடைக்காததாகும். குறைந்த பட்ச ஆதார விலையானது 23 விளைபொருட்களுக்கு மட்டுமே தகுதி உடையதாக உள்ளது. இதுவும் அனைத்து விவசாயிகளுக்கும் கிடைப்பதில்லை. குறைந்த பட்ச ஆதார விலை நிருணயம் செய்வதிலும் தேசிய விவசாயிகள் குழு அறிக்கையின் அடிப்படையில் பின்பற்றவில்லை. இதற்கு மாற்றாக அரசு பன்னாட்டுப் பெரிய நிறுவனங்களைக் களம் இறக்கி விவசாயத்தை ஒப்பந்த அடிப்படையில் சாகுபடி செய்ய முயற்சி செய்கிறது. அரசு குறைந்த பட்ச ஆதார விலைக்கு அளிக்கப்படும் மானியத்தை படிப்படியாகக் குறைக்க முயல்கிறது. இதனால் இந்தியாவில் பெருமளவிற்குச் சாகுபடி செய்யும் சிறு, குறு, நடுத்தர விவசாயிகளின் வாழ்வாதாரங்கள் பறிக்கப்படும் சூழல் நிலவுகிறது. இதனைப் போக்க அரசு குறைந்த பட்ச ஆதார விலையை அனைத்து வேளாண் விளைபொருட்களுக்கும், அனைத்து விவசாயிகளும் பயனடையவும் சட்டப்பூர்வமாக்குவதைத் தவிர வேறு வழியில்லை. இதனைச் சாக்குப் போக்கு காட்டி காலம் தாழ்த்துவது என்பது விவசாயிகளுக்கான சமூகநீதியைப் புறந்தள்ளுவதற்கு ஒப்பானதாகும்.

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது பசி, பட்டினி அதிகமாக இருந்தது. கிராமப்புறங்களில் வறுமையின் தாக்கம் பெரும் எண்ணிக்கையில் இருந்தது (1951-51ல் 47.4 விழுக்காடு மக்கள் கிராமப்புறங்களில் வறுமையில் இருந்தனர் இது 1966-67ல் 64.30 விழுக்காடாக அதிகரித்தது). உணவுப் பொருட்களின் பற்றாக்குறை தொடர்ந்து காணப்பட்டது. உணவு தானியத்திற்கு வெளிநாடுகளைச் சார்ந்து வாழ வேண்டிய நிலை இருந்தது. எனவே ஒரு நிரந்தரத் தீர்வாகப் பசுமைப் புரட்சி தொடங்கப்பட்டது. 1980களின் இரண்டாம் காலகட்டத்தில் இந்த நிலையிலிருந்து இந்தியா மீளத் தொடங்கியது, 1990களில் உணவு உற்பத்தியில் தன்நிறைவு என்ற நிலையினை அடைந்தது. இதனால் வறுமை பெருமளவிற்குக் குறைந்தது (1993-94ல் கிராமப்புற வறுமை 36.66 விழுக்காடாக இருந்தது 2011-12ல் 25.7 விழுக்காடாகக் குறைந்தது). 1991ல் நடைமுறைப்படுத்தப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்கள் பெருமளவிற்கு தொழில்துறையினையும், சேவைத் துறையினையும் நோக்கியதாக இருந்ததால் சமுதாய ஏற்றத்தாழ்வுகள் உருவாகத் தொடங்கியது. 1995ல் உலக வர்த்தக அமைப்பு ஏற்படுத்தப்பட்டபின் உலகமயமாக்கல் கொள்கை பின்பற்றப்பட்டதால் உணவுப் பொருட்களின் விலை பன்னாட்டு அளவில் ஏற்றத்தாழ்வுடன் காணப்பட்டது. பொது விநியோக முறையில் சமுதாயத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நோக்கியதாக இருக்க வேண்டும் என நிர்ப்பந்திக்கப்பட்டது. அதே சமயம் உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரிக்கத் தொடங்கியது. மக்களின் நுகர்வுக் கலாச்சாரம் மாற்றமடைந்தது. இதனால் இந்திய விவசாயிகள் அதிகமாகப் பாதிக்கப்பட்டனர். சமுதாயத்தின் கீழ் மட்டத்திலிருந்த பெருமளவிற்கான மக்களிடையே வறுமை அதிகமாக இருந்தது. எனவே இதனைக் கருத்தில் கொண்டு அரசு உணவுப் பாதுகாப்புச் சட்டம் (2013ல்) கொண்டுவரப்பட்டது. இதன் முக்கிய நோக்கமாக அனைவருக்குமான உணவு மற்றும் ஊட்டச்சத்து உறுதியளிப்பாக இருந்தது. இந்த அடிப்படையில் இந்திய உணவுக் கழகம் மற்றும் மாநில உணவுக் கழகங்கள் தங்களின் உணவு தானியப் பொருட்களின் இருப்பினை அதிகரிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உணவுக் கொள்முதல் நடவடிக்கையை மேற்கொண்டது. இதில் முக்கியமானது இக்கொள்முதல் வியாபாரிகள் வழியாக முதலில் நடைமுறைப்படுத்தப்பட்டது பின்னால் இது நேரடியாகவே அரசு கொள்முதல் நிலையங்களை அறுவடைக் காலங்களில் திறந்து உணவு தானியங்களை விவசாயிகளிடமிருந்து வாங்கியது. விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை நேரடியாக விற்பனைச் செய்வதால் அரசு கொள்முதல் விலை கிடைக்கப்பெற்று (இது குறைந்தபட்ச ஆதார விலையைவிடச் சற்றே அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது) பயன் அடைந்தனர். ஆனால் இம்முறையில் மிகக் குறைவான விவசாயிகளே பயன் அடைந்து வருகின்றனர் (அதிலும் பெரிய மற்றும் நடுத்தர விவசாயிகள் அதிகப் பயன் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது). அனைத்து விவசாயிகளும் பயனடையும் வகையில் அரசுக் கொள்முதல் நிலையங்களை அதிகரிப்பதும், குறைந்தபட்ச ஆதார விலையை அனைத்து விவசாயிகளுக்கும் கிடைப்பதை உறுதி செய்வதும் தற்போது முதன்மையான நடவடிக்கையாக இருத்தல் அவசியமாகிறது.

நாட்டின் மொத்த மதிப்புக் கூட்டலின் அடிப்படையில் பார்த்தால் இரண்டாம் நிலைத் துறையானது (தொழில் துறை உள்ளிட்டவை) 1950-51ல் 16.59 விழுக்காடுப் பங்களிப்பினை அளித்து வந்தது 2020-21ல் 26.98 விழுக்காடாகவும், சேவைத்துறையானது இவ்வாண்டுகளில் 25.74 விழுக்காடாக இருந்தது 54.27 விழுக்காடாகவும் அதிகரித்துள்ளது ஆனால் முதன்மைத் துறையானது (வேளாண்மை உள்ளிட்டவை) இவ்வாண்டுகளில் 57.67 விழுக்காட்டிலிருந்து 21.82 விழுக்காடாகக் குறைந்துள்ளது. அதேசமயம் வேளாண்மைத் துறையில் வேலை பங்கேற்பு ஆற்றலானது 1961ல் 72.50 விழுக்காடாக இருந்தது 2011ல் 57.41 விழுக்காடாகக் குறைந்துள்ளது. அதாவது இந்தியப் பொருளாதாரத்திற்கு வேளாண்மைத்துறை பங்களிப்பு பெருமளவிற்குக் குறைந்திருந்தாலும் அதிக அளவிலான வேலைவாய்ப்பை அளிக்கும் துறையாக தற்போதும் வேளாண் துறை இருந்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பருவகால வேலையின்மை, குறைவான வருமானம், வறுமை போன்ற அறைகூவல்களைத் தற்போது இத் துறையினைச் சார்ந்து வாழ்பவர்கள் எதிர்கொள்கின்றனர். எனவே அரசு ஆண்டு முழுவதும் விவசாயிகள் வேலைவாய்ப்பினை பெறும்வகையில் வேளாண் வழியாகவே அந்தந்தப் பகுதிகளில் பெறக்கூடிய விளைபொருட்களை அடிப்படையாகக் கொண்டு வேளாண் சார் தொழில்களை வட்டார அளவில் உருவாக்கித் தொடர் வேலைவாய்ப்பை அளிப்பது முக்கியமானதாகும். இதனால் வேளாண்மை, தொழில் வளர்ச்சி, ஏற்றுமதி போன்றவை மேம்படும் விவசாயிகளுக்கும் வருவாய் கிடைக்கும்.

சமனற்ற நிலப் பகிர்வு, நிலம் துண்டாடப்படுதல், சிறிய அளவிலான நிலக் கைப்பற்று, வேறுபட்ட குத்தகை முறை, என்ற பிரச்சனைகள் வேளாண்மையில் பெருமளவிற்குக் காணப்படுகிறது. உழுபவருக்கு நிலம் சொந்தம் என்ற முயற்சி முழுமை பெறவில்லை. கூட்டுறவு வேளாண்மை முயற்சியும் தோல்வியினை தழுவியுள்ளது. அன்மைக் காலமாக விவசாயிகள் காலநிலை மாற்றத்தினால் பருவம் தவறி மழை பொழிவு, கடுமையான வெப்பக் காற்று, புயல், வெள்ளம், போன்றவற்றால் பெரிதும் பாதிக்கின்றனர். பன்னாட்டு உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் கணிப்புப்படி (International Food Policy Resarch Institute) காலநிலை மாற்றத்தின் விளைவால் இந்தியாவில் உணவு உற்பத்தியானது 2030ல் 16 விழுக்காடு குறையும் இதனால் பசித்திருப்போர் எண்ணிக்கை 23 விழுக்காடு அதிகரிக்கும் என்கிறது. எனவே அரசு இவற்றை எதிர்கொள்ளக் காலநிலைக்கு ஏற்றப் பயிர்களைச் சாகுபடி செய்யவும், வேளாண் விளைபொருட்களைப் பாதுகாக்க உலர் இயந்திரங்கள், உடனடியாக விளைபொருட்களை விளைநிலங்களின் பகுதிகளிலே கொள்முதல் செய்தல், விவசாயிகளுக்கு வேளாண் சாகுபடியில் ஏற்படும் தோல்விகளுக்குத் தகுந்த இழப்பீடு, நீர் வடிகால்களை போர்க்கால அடிப்படையில் சீர் செய்தல், நீர்வழித் தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் போன்ற நடைமுறைகளை மேற்கொள்ளவேண்டும்.

இந்தியா சுதந்திரம் அடைந்தபின் அரசு வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டிற்கும் பல்வேறு கொள்கைகளை நடைமுறைப்படுத்தியது இதனால் வேளாண்மை உணவு தானியப் பற்றாக்குறையிலிருந்து தன்னிறைவும், அதனைத் தொடர்ந்து வேளாண் விளைபொருட்கள் ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடாகவும் மாற்றமடைந்தது. தற்போதைய நிலையில் பன்னாட்டு அளவில் உணவு தானிய விளைபொருட்களின் விலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுவதும், வேளாண் இடுபொருட்களின் விலை தொடர்ந்த அதிகரிப்பதும், உலகளாவிய அரசியல் சூழல் நிர்ப்பந்தங்கள் போன்ற நிலையினால் இந்திய வேளாண்மை பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளது. இதனை எதிர்கொள்ள வேளாண் விளைபொருட்களுக்கான சட்டப்பூர்வமான விலை உறுதியும், வேளாண்மைக்கான மானியங்கள் தொடர்ந்து அளிப்பது. வேளாண் சாகுபடியில் தேவைக்கு ஏற்ப மாற்றத்தை உருவாக்குவதும் தற்போது முன்னெடுக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு உள்ளது. இச் செயல்பாட்டிற் கு அரசியல் சார்ந்த முடிவுகள் முக்கியமானதாக இருக்கிறது. இந்திய வேளாண்மை என்பது வாணிபம் சார்ந்தது மட்டுமல்ல வாழ்வாதாரம், கலாச்சாரம், பண்பாட்டுச் சார்புடையது என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும்.

(முற்றும்)

இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @75 என்ற தொடரை வெளியிட்ட பாரதி புத்தகாலயத்திற்கும் இதற்கு உறுதுணையாக இருந்த அனைத்து தோழர்களுக்கும் வாசகர்ளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி – முனைவர் பு.அன்பழகன்

இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @ 75 : தொடர் – 15 நரேந்திர மோடியின் 2.0வும்  வேளாண்மையும் – பாகம்-2  பேரா.பு.அன்பழகன்

இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @ 75 : தொடர் – 15 நரேந்திர மோடியின் 2.0வும் வேளாண்மையும் – பாகம்-2 பேரா.பு.அன்பழகன்




2019ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையில். இந்தியாவை உலகளவில் முதன்மை தேசமாக்குவது, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது, இந்தியாவில் தயாரிப்பது, அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் சுகாதாரப் பாதுகாப் பு, பெண்களுக்கானச் சமத்துவம், நல்லாட்சி, உள்ளடக்கிய வளர்ச்சி, உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டது. இத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியானது 354 இடங்களில் வெற்றிபெற்றது. இதில் பா.ஜ.க தனித்து 303 இடங்களில் வெற்றிபெற்றது. இது பா.ஜ.க 2014ல் வெற்றி பெற்றதைவிடக் கூடுதலாக 21 இடங்களில் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது முறையாக மோடி தலைமையிலான ஆட்சியானது பா.ஜ.க சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டு அதிரடி நடவடிக்கைகளை அரங்கேற்றியது.

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தான அரசியல் சாசனப் பிரிவு 370 விலக்கிக்கொள்ளப்பட்டது. குடியுரிமை சட்டம் முஸ்லீம் அல்லாத இந்தியாவில் குடியேறிய மூன்று நாடுகளின் (பாக்கிஸ்தான். பங்களாதேஷ்; ஆப்கானிஸ்தான்) மக்களுக்குக் குடியுரிமை, முஸ்லீம் மக்கள் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை வெளியேற்றுதல், ராமர் கோவில் கட்டுவதற்கானப் பணிகள் துவக்கம், புதிய பாராளுமன்றக் கட்டிடம் கட்ட அடிக்கல், முஸ்லீம் பெண்களுக்கு எதிரான மும்முறை தலாக் ஒழிப்புச் சட்டம், புதிய கல்விக் கொள்கை போன்ற அதிரடி அரசியல் நிகழ்வுகள் நடந்தேறியது. 2019ன் இறுதியில் கொரோனா வைரஸ் பரவியதை அடுத்து, 2019 மற்றும் 2021களுக்கிடையே மூன்று அலைகளின் தாக்கத்தினால், நாடுமுழுவதும் முழு அடைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டதால் இந்தியா பொருளாதார அளவில் நிலைகுலைந்து போனது. உற்பத்தி நிறுத்தம், வேலையின்மை அதிகரிப்பு, வறுமை, போக்குவரத்து தொடர்பு அறுபடுதல், அரசுச் செலவு அதிகரிப்பு போன்ற விளைவுகள் உருவானது. இதில் வேளாண்மைத் துறை உட்பட அனைத்து துறைகளும் பெரும் பாதிப்பிற்கு உண்டானது. வேளாண்மையில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் கூலித் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பியதால் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டு வேளாண்மை நடவடிக்கைகள் பெருமளவிற்குப், (குறிப்பாகப் பஞ்சாப். ஹரியானா. உத்திரப் பிரதேசம். கேரளா) பாதித்தது. 2019ல் கொண்டுவரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்கள் இந்திய அளவில் விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பினை உருவாக்கியது. மோடி அரசு 2022ல் விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக அதிகரிப்பது, 2024ல் இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவது, நீர் சேமிப்பைத் தீவிரமாக நடைமுறைப்படுத்துவது, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை முற்றிலும் நிறுத்துவது, சுகாதார அளிப்பை மேம்படுத்துவது, அனைவருக்கும் வீட்டு வசதி, உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.102 கோடி மதிப்பீட்டில் 7000 திட்டங்களுக்கு (குழாய் நீர் இணைப்பு, சாலை, நீரப்பாசனம், சுகாதாரம், டீஜிடல் இந்தியா, நகர்ப்புற வசதி) ஒதுக்கப்பட்டு நடைமுறைகளை மேற்கொள்வது என்று பல செயல்பாடுகளை மோடியின் 0.2வில் முன்னெடுத்தது.

நீர் சேமிப்பு நடவடிக்கையின் முதல் படியாக ஜல சக்தி என்ற புதிய அமைச்சரவை உருவாக்கப்பட்டு ஜல சக்தி அபியான் (Jan Shakti Abhiyaan) மற்றும் ஜல ஜீவன் மிஷ்ன் (Jal Jeevan Mission) என்ற இரு திட்டங்கள் நீர் சேமிப்பிற்காக நடைமுறைப்படுத்தப்பட்டது. இவற்றின் முக்கிய நோக்கம் அனைத்துக் குடியிருப்புகளுக்கும் 2024குள் குடிநீர் இணைப்பை ஏற்படுத்தித் தருதல். நீர் வீணாகுவதைத் தடுக்கப் புதிய உத்திகளைக் கடைப்பிடித்தல். ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 43 முதல் 55 லிட்டர்வரை தண்ணீர் அளிப்பது போன்றவையாகும். சுகாதாரம் அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என்பது அரசின் கொள்கையாகும். 2018ல் ஆயுஷ்மான் பாரத் தொடங்கப்பட்டு தரமான மருத்துவத்தைச் சமுதாயத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்காக மருத்துவக் காப்பீடு மற்றும் நல மையங்கள் வழியாகச் சுகாதாரம் அளிக்க ரூ.1.50 லட்சம் கோடியில் சுகாதார மையங்கள் கிராமப்புறங்களில் 2022ல் உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இதுபோன்று இருக்க இருப்பிடம் அடிப்படையானதாக உள்ளதால் பிரதம மந்திரி அவாஸ் யோஜனா தொடங்கப்பட்டு 20 மில்லியன் வீடுகளுக்குப் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்க 2016ல் திட்டமிடப்பட்டது. இவ்வீடுகள் அனைத்து வசதிகளும் (தண்ணீர் குழாய் இணைப்பு. மின் இணைப்பு உட்பட) உள்ளடக்கியதாக இருந்தது.

2021ல் வெளியிடப்பட்ட SAS அறிக்கையின்படி இந்தியாவில் விவசாய குடும்பங்கள் தங்களின் மாத வருமானத்தில் 37 விழுக்காடு மட்டுமே வேளாண் சாகுபடி வழியாகப் பெறுகின்றனர். 40 விழுக்காடு வருமானம் கூலியின் வழியாகவும் , 15 விழுக்காடு கால்நடை வளர்த்தல் மூலமாகவும் , 6 விழுக்காடு வேளாண் சாரா வணிகம் மூலமாகவும் , 1 விழுக்காடு நிலம் குத்தகைக்கு விடுவதன் மூலமாகவும் பெறப்படுகிறது. 2022ல் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்தது. இடுபொருட்களுக்கான மானியத்தைத் தொடர்ந்து வழங்குதல், உற்பத்தித் திறனை அதிகரிக்கத் தரமான இடுபொருட்களைப் பயன்படுத்துதல், வேளாண் உற்பத்திப் பொருட்களின் விலையினை அதிகரிக்கக் குறைந்த பட்ச ஆதரவு விலையினை அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்கச் செய்வது, வேளாண் உற்பத்தியில் அதிக அளவிற்கு உபரியை உருவாக்கிச் சந்தை படுத்துதல் , வேளாண் மற்றும் வேளாண் சாரா இரண்டுக்குமான வர்த்தக நிர்யினை அதிகரிப்பது, நேரடியாக விவசாயிகளுக்கு வருமானம் அளிப்பது போன்ற நடவடிக்கைகளை அரசு தீவிரமாக நடைமுறை படுத்திவருகிறது.

10000 புதிய விவசாயிகள் உற்பத்தி அமைப்பை அடுத்த ஐந்தாண்டுகளில் தொடங்கி விவசாயிகள் பலன்பெற மாநில அரசுகள் மின்-சந்தை (e-NAM) தொடங்க அனுமதி அளிப்பது, வேளாண்மையில் பூஜ்ய செலவிலான திட்டம் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும்.

வேளாண்மையில் மின்சாரப் பம்பு செட்டுகள் நீர்ப்பாசன வசதியினை அளிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பல மாநிலங்களில் விவசாய பம்பு செட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கி வருகிறது. ஆனால் மின் பற்றாக்குறை நிலவிவருவதால் தடையற்ற மின்சாரம் கிடைப்பது இல்லை. எனவே அரசு முறைசார ஆற்றலைப் பயன்படுத்திப் பம்பு செட்டுக்களை நீர் இறைப்பிற்குப் பயன்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக ஜூலை 2019ல் நீர்ப்பாசன வசதிக்காக மோட்டார் பம்பு செட் பயன்பாட்டிற்குப் பிராதான் மந்திரி கிசான் உர்ஜா சுரகூஷ உத்தன் மஹாவியான் திட்டம் (PM-KUSUM) அறிமுகப்படுத்தப்பட்டது. டீசல், மண்ணெண்ணெய் பயன்பாட்டிற்கு மாற்றாகச் சூரியஒளியினைப் பயன்படுத்த முடிவுசெய்யப்பட்டது. இதன்படி 20 லட்சம் விவசாயிகளுக்குப் பம்பு செட்டுகள் அளிக்க முடிவு செய்யப்பட்டது. இத்துடன் 15 லட்சம் விவசாயிகளுக்குச் சோலார் பம்பு செட்டுகள் 60 விழுக்காடு மானியத்துடன் , 30 விழுக்காடு அரசுக் கடனுடன் அமைத்துத் தர முடிவெடுக்கப்பட்டது. சோலார் பேனல் வழியாக உற்பத்தியாகும் உபரி மின்சாரத்தை விற்கவும் விவசாயிகளுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

உபரியாக உள்ள வேளாண் விளைபொருட்களை வெளிநாடுகளில் சந்தைப் படுத்துவதால் விவசாயிகளுக்கு அதிக வருமானத்தையும் பெற இயலும். இதற்கு முக்கியத் தேவையாகக் கிடங்குகள், குளிரூட்டப்பட்ட சேமிப்பு கிடங்குகளை உருவாக்கித் தரப்படுகிறது. 162 மில்லியன் மெட்ரிக் டன் கொள்ளவுக் கொண்ட சேமிப்புக் கிடங்குகள், குளிர்பதன கிடங்குகள் போன்றவை நபார்டு (NABARD) உதவியுடன் அமைக்கப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் அழுகக்கூடிய பொருட்களான பால், இறைச்சி, மீன் ஆகியவற்றை விரைவுப் பரிவர்த்தனைக்குக் கொண்டு செல்லா ஏதுவாக இந்திய ரயில்வே ‘விவசாயி இரயில்’ பொது-தனியார்-பங்கேற்புடன் இயக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சுய உதவிக் குழு உதவியுடன் கிராமப்புறச் சேமிப்புக் கிடங்குகள் உருவாக்கப்பட்டது. ஒருங்கிணைந்த முறையில் தோட்டக்கலையை மேம்படுத்த ஏற்றுமதி சந்தைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. மானாவாரி பயிரிடும் பகுதிகளை ஒருங்கிணைந்த முறையில் பல்லடுக்கு பயிர்செய்தல், தேனி வளர்த்தல், சூரியஒளி பம்புகள், சூரியஒளி உற்பத்தி போன்றவை ஏற்படுத்தவும், வேளாண்மையில் பூஜ்ய செலவின் அடிப்படையிலான திட்டத்தை விரைவுபடுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

பொருளாதார வளர்ச்சி மற்றும் நீடித்த மேம்பாட்டுக்குப் பிரதம மந்திரி கதி சக்தி என்ற திட்டத்தின்படி சாலை, ரயில்வே. விமான நிலையம், துறைமுகம், பொருண்மை போக்குவரத்து, நீர் வழிப் போக்குவரத்து, போக்குவரத்து உள்கட்டமைப்பு, போன்றவற்றை வலுப்படுத்த முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளது. விரைவுச் சாலைகளை உருவாக்க ரூ.2000 கோடியில் 25000 கி.மீ அமைக்கவும், மக்கள் மற்றும் பொருட்களை வேகமாகப் பயனிக்கவும், எடுத்துச் செல்லவும் பலநிலை போக்குவரத்து வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் ட்ரோன்கள் முறையைப் பயன்படுத்தி வேளாண் விளைச்சலைக் முன் கணிப்பு செய்தல், நில ஆவணங்களை டிஜிட்டல் முறைக்கு மாற்றுதல், வேளாண்மையைத் தாக்கும் புதியவகைப் பூச்சிகள் அழிப்பு, மண்ணின் உயிர்ச்சத்தை அதிகரிப்பது போன்றவை நடைமுறையில் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதுபோல் வேளாண்மை மீதான முதலீடுகள் குறிப்பாக நீர்ப்பாசம், ஆராய்ச்சி, சந்தை உள்கட்டமைப்பை மேம்படுத்துவது போன்ற முயற்சிகளும் அரசு மேற்கொள்கிறது. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கு வேளாண் சார்புத் துறைகளை மேம்படுத்துவதற்கான முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் என்று குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.

பிரதான் மந்திரி கிராமப்புறச் சாலை இணைப்புத் திட்டம் 2000ல் அன்றைப் பிரதமர் வாஜ்பாயால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் செயல்பாடுகள் அரசியலைக் கடந்து கிராமப்புறச் சாலை இணைப்பு மற்றும் மேம்பாட்டில் நல்ல முன்னேற்றம் கண்டதால் கிராமங்களில் சமூக-பொருளாதாரத் தளங்களில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது 97 விழுக்காடு குடியிருப்புகள் சாலை இணைப்பைப் பெற்றுள்ளது. மோடியின் ஆட்சியில் பிரதான் மந்திரி கிராமப்புறச் சாலை இணைப்பு திட்டம் பகுதி மூன்றுக்கு ரூ.8020 கோடியில் 1.25 லட்சம் கி.மீ சாலை அமைக்க 2019ல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அடுத்து வரும் 1000 நாட்களுக்கு ஒருநாளைக்கு 130 முதல் 135 கி.மீ சாலை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 30000 கி.மீ சாலைகள் பசுமை தொழில்நுட்பம் முறையிலும், பிளாஸ்டிக் கழிவுகளை அடிப்படையாகக் கொண்டும் அமைக்கத் திட்டம் வகுக்கப்பட்டது.

ஜூன் 2020ல் பாராளுமன்றத்தில் மூன்று புதிய வேளாண் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு செப்டம்பர் 2020ல் இவற்றைச் சட்டமாக்கியது. அதன்படி ‘அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம்’, ‘வேளாண் விளைபொருள் வணிகம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம்’, ‘விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் வேளாண் சேவைகள் சட்டம்’ நடைமுறைக்குக் கொண்டுவந்தது. இச்சட்டங்களின் முதன்மை நோக்கங்களாக, இடைத்தரகர்களின் ஆதிக்கத்தை ஒழிப்பது, விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை நாட்டின் எப்பகுதியிலும் நல்ல விலைக்கு விற்கத் தடையற்ற நிலையினை உருவாக்குவது, தனியார் மண்டிகளை ஊக்குவித்து வேளாண் விவசாயிகளுக்கு வருவாய் பெறும் நோக்கினை மேம்படுத்துதல். வேளாண் விளைபொருட்களை அறுவடைக்காலங்களில் கொள்முதல் செய்து அவற்றைச் சேமித்துவைத்தல் போன்றவை ஆகும். இதனால் வேளாண் உள்கட்டமைப்புகள் தனியார் முதலீடுகளால் வலுப்பெறும், வேளாண் பொருட்கள் ஏற்றுமதி அதிகரிக்கும், விவசாயிகள் லாபமடைவார்கள் என்று எடுத்துரைக்கப்பட்டது. ஆனால் இச்சட்டத்தினால் விவசாயிகளுக்கு கிடைக்கக்கூடிய குறைந்த பட்ச ஆதரவு விலை நாளடைவில் நீர்த்துப்போகக்கூடும். விவசாயிகளுக்கு உறுதுணையாக உள்ள ஏபிஎம்சி என்கிற மண்டி அமைப்பு நடைமுறையில் காணாமல் போகலாம். வேளாண்மை பன்னாட்டுப் பெருநிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்குச் சென்றடையும் இதனால் விவசாயிகளின் உரிமைகள் பறிபோகும் போன்ற காரணங்களில் விவசாயிகளிடம் கடுமையான எதிர்ப்பு உருவானது.

வேளாண் ஒப்பந்த முறை 1960களில் இந்தியாவில் ஏற்கனவே நடைமுறையில் இருந்தது. பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் 1990களில் தக்காளி, மிளகாய், உருளைக்கிழங்கு போன்ற பயிர்கள் ஒப்பந்த முறையிலான சாகுபடி செய்யும் முறையிருந்தது. பின்னால் இது 12க்கு மேற்பட்ட வேளாண் பயிர்கள் என விரிவானது. இவ்வொப்பந்தத்தில் உள்நாட்டுத் தனியார் மற்றும் பன்னாட்டுப் பெருநிறுவனங்கள் விவசாயிகளுடன் ஒப்பந்த வேளாண்மையை மேற்கொண்டது.

2003ல் மாதிரி வேளாண் உற்பத்தி மற்றும் கால்நடை ஒப்பந்த வேளாண்மை மற்றும் சேவைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தியாவில் உள்ள மாநிலங்களில் முதன் முதலில் தமிழ் நாட்டில் இச்சட்டத்தை அடிப்படையாகக்கொண்டு 2019ல் வேளாண் ஒப்பந்தச் சட்டம் கொண்டுவந்தது அதனைத் தொடர்ந்து ஒடிசாவில் 2020ல் கொண்டுவரப்பட்டது.

வேளாண் ஒப்பந்தச் சட்டத்தினால் புதிய தொழில்நுட்பம் பயன்படுத்துதல், தரமான விதைகள், வேளாண் விரிவாக்கம், உறுதிப்படுத்தப்பட்ட சந்தைப் படுத்துதல் மற்றும் விலை போன்றவற்றில் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும் என்றாலும் நடைமுறையில் கடந்த காலங்களில் இம்முறையில் வேளாண் விளைபொருட்களின் தரத்தைக் காரணம் காட்டி ஒப்பந்த நிறுவனங்கள் கொள்முதல் செய்ய முன்வராத நிலையும், நிறுவனங்கள் தாமதமாகப் பணம் வழங்குதல், குறைவான விலைக்குக் கொள்முதல், தரம் குறைந்த இடுபொருட்கள் அளிப்பு, பயிர் செய்வதில் இழப்பு ஏற்படும்போது எந்தவித இழப்பீடும் வழங்கப்படாதது. அதிக அளவில் இடுபொருட்களின் செலவு, நிலைத்த நிலையிலான ஒப்பந்த விலை, நிறுவனங்கள் ஒப்பந்தத்தைத் தன்னிச்சை செய்யும் உரிமை போன்றவற்றால் பாதிக்கப்பட்டது. வேளாண் ஒப்பந்த நிறுவனங்கள் குறைந்த பட்ச நிலம் என்ற வரையறையை நிபந்தனையாக வைத்ததால் சிறு, குறு விவசாயிகள் இதனால் பயன் பெற முடியாத நிலை உள்ளது. இதற்கான முக்கியக் காரணம் குறைந்த அளவு நில உடைமையாளர்கள் அனுமதிப்பதால் போக்குவரத்துப் பரிமாற்றச் செலவு அதிகமாகும் என்பதாகும் (Sukhpal Singh 2022).

அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் மாநில விவசாயிகளால் டெல்லியை முற்றுகையிடும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நாளடைவில் ஹரியானா, ராஜஸ்தான், உத்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களைச் சார்ந்த விவசாயிகள் பெருமளவிற்குத் திரண்டு ‘டெல்லி சலோ’ என்ற முழக்கத்துடன் டெல்லியை நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலைகளில் அறவழியில் முற்றுகைப் போராட்டத்தினை நவம்பர் 25, 2020இல் முன்னெடுத்தனர். இப்போராட்டத்திற்கு இந்தியாவில் உள்ள 500க்கு மேற்பட்ட விவசாயச் சங்கங்கள் ஒன்றிணைந்து அனைத்து இந்திய விவசாயிகள் போராட்ட கூட்டு ஒருங்கிணைப்புக் குழு (All India Kisan Sangharsh Coordination Committee) உருவாக்கப்பட்டது. போராட்ட காலங்களில் 750க்கு மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தனர். 358 நாட்கள் பல்வேறு வடிவங்களில் நடைபெற்ற இந்த அறவழிப் போராட்டத்திற்கு இந்திய அரசு வேறு வழியின்றி அடிபணிந்து இந்த மூன்று சட்டங்களையும் நவம்பர் 19, 2021 அன்று திரும்பப் பெறுவதாக அறிவித்தது. விவசாயிகள் சில நிபந்தனைகளின் அடிப்படையில் இப்போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.

இந்தியாவில் இயற்கை வேளாண்மைக்கான சூழலைப் பற்றி பன்னாட்டு நிபுணர்களின் பங்கேற்புடன் நிதி ஆயோக்ஏ ஏற்பாட்டில் மே 2020ல் நடந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு இயற்கை வேளாண்மையை முன்னெடுக்கப் பாரதிய ப்ராக்ரித்திக் க்ரிஷ் மேம்பாட்டுத் திட்டம் (Bharatiya Prakritik Krishi Paddhati Programme) தொடங்கப்பட்டது. இதற்காக அடுத்த மூன்றாண்டுகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.12200 நிதி உதவி அளிப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தினால் ஆந்திரப் பிரதேசத்தில் 1 லட்சம் ஹெக்டேரும், மத்தியப் பிரதேசத்தில் 0.99 லட்சம் ஹெக்டேரும் பயனடைந்திருக்கிறது.

விவசாயிகளின் முக்கிய வருமான ஆதாரங்களில் கால்நடைகள் வளர்த்தலும்; ஒன்றாகும். இதற்காகப் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தியுள்ளது. இதில் முக்கியமாகப் பால் உற்பத்தியானது இந்தியப் பொருளாதாரத்திற்கு 5 விழுக்காடுப் பங்களிப்பினைத் தருகிறது. இத்துறையில் 8 கோடி விவசாயிகள் வேலைவாய்ப்பைப் பெறுகின்றனர். இந்தியா உலக அளவில் பால் உற்பத்தியில் முதல் இடத்தைப் பெற்றுள்ளது. உலக பால் உற்பத்தியில் இந்தியா 23 விழுக்காடுப் பங்களிப்பினைத் தருகிறது. 2014-15ல் 146.31 மில்லியன் டன் பால் உற்பத்தியாக இருந்தது. 2020-21ல் இது 209.96 மில்லியன் டன்னாக அதிகரித்தது. தலா பால் நுகர்வானது 427 கிராம் என்ற அளவில் தற்போது உள்ளது. 2020ல் ரூ.15000 கோடி மதிப்பில் கால்நடை உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதி உருவாக்கப்பட்டது. இதன் முக்கிய நோக்கம் பால் மற்றும் இறைச்சி பதப்படுத்தும் உள்கட்டமைப்பை உருவாக்குவதாகும்.

மே 2020ல் பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா (Pradhan Mantri Matsya Sampada Yojana) என்ற திட்டம் ரூ.2050 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டது. இதன்படி மீன் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிப்பது, போக்குவரத்துச் சங்கிலித் தொடரை மேம்படுத்துவது, மீன் சந்தைப் படுத்துதலுக்கான கட்டணம் உருவாக்குவது போன்றவை ஆகும். இதுபோல் வேளாண்மையை வளப்படுத்த டிராக்டர், விசை கலப்பையின் பயன்பாட்டை அதிகரிக்கவும், உணவுப் பதப்படுத்தும் துறையை மேம்படுத்தவும் ஒரு குடையின் கீழ் நடைமுறைப்படுத்த பிரதான் மந்திரி கிசான் சம்பதா திடடம் (PM Kisan SANOADA Yojana) அறிமுகப்படுத்தப்பட்டது.

உணவு தானியம் மற்றும் எண்ணெய் வித்துகள் உற்பத்தியானது தொடர்ந்து அதிகரித்துள்ளது. இந்தியாவில் நகரமயமாதல் அதிக அளவில் காணப்படுவது, மக்கள் தொகை அதிகரிப்பு, நுகர்ச்சியில் பெருமளவிற்குக்காண மாறுபாடுகள் போன்ற நிலையில் தாவர எண்ணெய்யின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் உள்நாட்டு எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி அதிகரித்திருந்தாலும் பற்றாக்குறை நிலவிவருகின்றது. எனவே அரசானது உடனடியாக தீர்வாகச் சமையல் எண்ணெய் இறக்குமதி செய்து தேவையினை நிவர்த்தி செய்கிறது (Sekhar 2022). இந்தியாவில் அன்மைக் காலமாகச் சமையல் எண்ணெய்க்கு இறக்குமதியை அதிகமாக சார்ந்திருக்கவேண்டிய நிலை உள்ளதால் உள்நாட்டில் எண்ணெய் வித்துக்களை அதிகமாக உற்பத்தி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆகஸ்ட் 2021ல் தேசிய சமையில் எண்ணெய் இயக்கம் – பனை எண்ணெய் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன்படி பனை எண்ணெய் பயிர்செய்யும் விவசாயிகளுக்கு அதற்கான விலையினை அரசு உறுதி செய்கிறது. இதன் விளைவு தற்போது 3.70 லட்சம் ஹெக்டேர் பனை பயிரிடப்பட்டுள்ளது. பனை எண்ணெய் வழியாகப் பெறப்படும் தாவர எண்ணெய்யானது மற்றவற்றைக் காட்டிலும் 10 – 46 மடங்கு ஒரு ஹெக்டேருக்கு எண்ணெய் பெறப்படுகிறது. அதுபோல் உற்பத்தித் திறன் மற்றவற்றைவிட 4 டன் ஒரு ஹெக்டேருக்குக் கூடுதலாக விளைச்சல் தரக்கூடியதாக இருக்கும். இதனால் இந்தியாவில் பனை எண்ணெய் இறக்குமதி வரும் காலங்களில் குறையக்கூடும்.

இந்தியா உலக அளவில் சர்க்கரை உற்பத்தியில் இரண்டாம் இடத்தை வகிக்கிறது. கரும்புச் சாகுபடியில் 5 கோடிக்கு அதிகமான விவசாயிகள் ஈடுபடுகின்றனர். ஆண்டுக்குச் சராசரியாக 35.5 கோடி கரும்பும். 3 கோடி டன் சர்க்கரையும் உற்பத்தி செய்யப்படுகிறது. சர்க்கரை உற்பத்தியானது உள்நாட்டு நுகர்விற்குப் போக எஞ்சியதை உலகநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கரும்புக்குக் குறைந்த பட்ச ஆதரவு விலையும். தனியார் சர்க்கரை ஆலைகள் அதிகமாக இயங்கிவருவதால் சர்க்கரை உற்பத்தியானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

2018-19 நடைமுறைப்படுத்தப்பட்ட தேசிய உணவு பாதுகாப்பு இயக்கமானது தற்போது 36 விதை ரகத்தைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவந்தது. உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்தச் செயல்படுத்துகிறது. ஒன்றிய அரசானது இயற்கை விவசாயத்தைச் செயல்படுத்தி ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்து பயன்பாட்டை நீக்கும் நோக்கத்தை தற்போது நடைமுறைப்படுத்துகிறது. இயற்கை விவசாயமானது சுற்றுப்புறச் சூழல் சார்ந்த நீடித்த வளர்ச்சி மூலம் மண்வளத்தைப் பாதுகாப்பது, ரசாயன உரப்பயன்பாட்டிலிருந்து விடுபடுவது, குறைவான நீர்ப்பாசன முறையைப் பயன்பாட்டில் கொண்டுவருவது போன்றவை அடிப்படையாகக் கொண்டது. பாரதியா பிரகிருதிக் கிருஷ் பத்திதி திட்டம் (Bharatiya Prakritik Krishi Paddhati Programme -BPKP) இயற்கை வேளாண்மைக்காகக் கொண்டுவரப்பட்டது. இத் திட்டத்தில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.12200 நிதி அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. அதிகபட்சமாக இந்த திட்டத்திற்கு ஆந்திரப் பிரதேசத்தில் 1 லட்சம் ஹெக்டேர், மத்தியப் பிரதேசத்தில் 0.99 லட்சம் ஹெக்டேர் பயனடைகிறது.

Source: GoI (2022): “Economic Survey 2021-22”, Government of India.

வேளாண்மையும் அதனைச் சார்ந்த துறைகளின் வளர்ச்சியானது 2017-18ல் 6.6 விழுக்காடு என்று இருந்தது அடுத்த வந்த ஆண்டுகளில் 2.6 விழுக்காடு (2018-19) , 4.3 விழுக்காடு (2019-20) , 3.6 விழுக்காடு (2020-21) , 3.9 விழுக்காடு (2021-22) என மாற்றமடைந்தது. வேளாண்மை மற்றும் அதனைச் சார்ந்த துறைகள் பொருளாதாரத்திற்கான பங்களிப்பாக 18.3 விழுக்காடாக 2017-18ல் இருந்தது 2021-22ல் 18.8 விழுக்காடாக விளிம் பு அளவில் அதிகரித்துள்ளது. இக்கால கட்டத்தில் அரசு முதலீடானது நிலையாக 2 – 3 விழுக்காடு அளவிற்கானதாக இருந்தது ஆனால் தனியார் முதலீடானது ஏற்ற இறக்கங்களுடன் இருந்தது.

2020ல் கொண்டுவரப்பட்ட வேளாண் சட்டங்கள் விவசாயிகளைப் பெருமளவிற்குப் பாதிக்கும் சூழல் உருவாக்கியது. இச்சட்டத்தால் குறைந்த பட்ச ஆதார விலையினை இழக்கவும், வேளாண் விளைபொருட்களின் விலையினைத் தீர்மானிப்பதில் பெருநிறுவனங்கள் முக்கிய பங்காற்றவும் வாய்ப்பு இருப்பதால் விவசாயிகள் பாதிப்படையலாம், மானியங்கள் குறைக்கப்படலாம், மண்டிகளின் (APMC) செயல்பாடுகள் முடக்கப்படும், என்ற அடிப்படையில் விவசாயிகளிடையே அச்சம் ஏற்பட்டு இச்சட்டங்களுக்கு எதிராகக் கடுமையான முற்றுகைப் போராட்டத்தை முன்னெடுத்தனர். அரசு வேறு வழியின்றி இச்சட்டங்களை விலக்கிக்கொண்டாலும், எதிர்காலத்தில் வேறுவழிகளில் இவற்றை முன்னெடுக்க வாய்ப்புண்டு. ஒப்பந்த முறை விவசாயத்தில் அரசு அதிகமாக அக்கறை காட்டி வருகிறது. இம் முறை பல மாநிலங்களில் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டதில் பல பின்னடைவுகளை (ஒப்பந்தத்தைத் தன்னிச்சையாக நிறுவனங்கள் முறித்துக்கொள்ளுதல், பெருநிறுவனங்கள் விவசாயிகளைக் கட்டாயப்படுத்தப்படுத்தி தங்களின் நோக்கிற்காகச் சாகுபடி செய்ய வலியுறுத்துதல், லாபம் இன்மை) விவசாயிகள் எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்தியாவில் குறு விவசாயிகள் (ஒரு ஹெக்டேர் கீழ்) மொத்த விவசாயிகளில் 1960-61ல் 40.7 விழுக்காடாக இருந்தவர்கள் 2018-19ல் 76.5 விழுக்காடாக அதிகரித்திருந்தனர். இவர்களின் சராசரி சாகுபடி நிலப்பரப்பு 0.41 ஹெக்டேராக இருந்தது 0.38 ஹெக்டேராக இவ் ஆண்டுகளில் குறைந்துள்ளது. இந்தியாவில் தீவிர வறுமைக் கோட்டின் கீழ் 80 விழுக்காடு மக்கள் கிராமப்புறங்களில் வசிக்கின்றனர் என்கிறது தரவுகள். இதில் பெருமளவிற்குச் சிறு, குறு விவசாயிகள் இருக்கின்றனர். தேக்க நிலையிலான இந்திய வேளாண் துறையின் வளர்ச்சி, குறைவான வேளாண் வருமானம், அளவிற்கு அதிகமான உரப் பயன்பாடு, இடுபொருட்களுக்கானச் செலவு அதிகரிப்பு, குறைந்து வரும் மண் வளம், நிலத்தடி நீர் தொடர்ந்து குறைந்தது வருதல் போன்றவை பெரும் அறைகூவல்களாக இந்திய வேளாண்மை எதிர்கொண்டு வருகிறது. இவற்றின் விளைவு விவசாயிகள் தாங்கள் பெற்ற கடனைத் திரும்பச் செலுத்த இயலாத நிலையினால் விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரிக்கிறது. கடந்த 30 ஆண்டுகளில், ஆண்டுக்குச் சராசரியாக 10000 விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர். ஒவ்வொரு 32 நிமிடத்திற்கு ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்வதாகத் தரவுகள் தெரிவிக்கிறது. மொத்த விவசாயிகளில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் பங்கு 0.006 விழுக்காடாகும். மொத்த தற்கொலையில் 11.2 விழுக்காடு விவசாயத் தற்கொலைகளாக உள்ளது பெரும் அதிர்ச்சியைத் தரக்கூடியதாகும் (Chris J Perry et al 2022).

இந்தியாவில் நீர் செறிவு சாகுபடி பயிர்களான நெல், கோதுமை. கரும்பு அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. இது நிலத்தடி நீர் குறைவதற்கான முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. எனவே இதற்கு மாற்றான அதே சமயம் ஊட்டச்சத்து மிக்க உணவுப் பயிர்களைச் சாகுபடி செய்யவேண்டிய கட்டாயம் உள்ளது (உலகிலே அதிக ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ள நாடாக இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது). இப்பயிர் ரகங்கள் வறட்சியினை தாங்குவதாகவும், நீர் பயன்பாட்டைக் குறைப்பதாகவும் இருக்க வேண்டும். பல் வேறு ஆய்வுகளின்படி இவ்வகைப் பயிர்களின் உற்பத்தித் திறன் குறைவாக இருக்கிறது, ஆனால் இதற்கான இடுபொருட்கள் அதிகமாக உள்ளது. எனவே அரசு இதற்கான விலை உறுதிப்பாட்டை அளிக்க வேண்டும். அப்படிப்பட்ட நிலையில் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு ஏற்படும். விவசாயத் தற்கொலைகளும் குறையும் (Chris J Perry et al 2022).

வேளாண்மைக்கு சில வளரும் நாடுகளும், வளர்ந்த நாடுகளும் மானியங்கள் தொடர்ந்து அதிக அளவில் வழங்கிக்கொண்டு வருகிறது. இது விவசாயிகளை ஊக்குவிப்பது மட்டுமல்ல உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனையும் அதிகரிக்கச் செய்கிறது. பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (OECD) நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகள் வேளாண் மானியம் 15 முதல் 20 விழுக்காடுவரை அளிக்கிறது. நார்வே. ஜப்பான். தென்கொரியா நாடுகளில் 40 முதல் 60 விழுக்காடுவரை மானியங்கள் வழங்குகிறன. இந்தியாவில் வேளாண்மைக்கான மானியம் 10 விழுக்காட்டிற்குக் குறைவாகவே வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் சில மாநிலங்கள் (குறிப்பாகப் பஞ்சாப், ஹரியானா) மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது அதிகமாக மானியங்கள் வழங்கப்படுகிறது. மானியங்கள் உரம், பூச்சி மருந்துகள், விதைகளுக்கு அதிகமாக வழங்கப்படுகிறது. இந்தியாவில் வட இந்திய மாநிலங்கள் தென்னிந்திய மாநிலங்களுடன் ஒப்பிடும்போது அதிக உற்பத்தித் திறன் உடையதாகவும். நீர்ப் பாசன வசதியினை உடையதாகவும் உள்ளது. சராசரி நில உடைமையானது வட இந்திய மாநிலங்கள் ஒப்பீட்டு அளவில் அதிகமாக உள்ளது. இதுபோல் குறைந்த பட்ச ஆதரவு விலையினை முதலில் கோதுமைக்கு வழங்கப்பட்டது, பின்னால் பிற பயிர் வகைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. பசுமைப் புரட்சியும் அதிகமாக வட இந்திய மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இவற்றின் காரணமாகவே வட இந்திய மாநிலங்கள் தென்னிந்திய மாநிலங்களைவிட மானியங்கள் அதிகமாகப் பெறப்படுகிறது. இந்தியாவில் அதிக அளவிலான மக்களின் முக்கிய உணவாக அரிசி உள்ளது. இது பொது விநியோகம் வழியாக மக்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்காக விவசாயிகளிடமிருந்து குறைந்த பட்ச விலையை அடிப்படையாகக் கொண்டு கொள்முதல் விலையில் (அதாவது குறைந்த பட்ச ஆதரவு விலையுடன் அம் மாநில அரசு அளிக்கக்கூடிய ஊக்கத் தொகையும் சேர்ந்தது) வேளாண் விளைபொருட்கள் வாங்கப்படுகிறது. இதனால் வட மாநில விவசாயிகள் நெல் சாகுபடியினை நோக்கிச் சென்றனர். நெல் பயிர் செய்ய அதிக அளவிற்கான தண்ணீர் தேவை (சராசரியாக 8 இன்ச் தண்ணீர் தேக்க வேண்டும்) உள்ளது. வட இந்திய மாநிலங்களில் தண்ணீர் ஆதாரம் தென்னிந்திய மாநிலங்களைவிடச் சிறப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வட இந்திய மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா. மேற்கு உத்தரப்பிரதேச மாநிலங்களில் கோதுமை சாகுபடி செய்பவர்கள் நெல்லை அரசு கொள்முதல் செய்வதால் அதிக அளவில் பயி ரிடத் தொடங்கினர். ஆனால் இதற்கான தண்ணீர் பயன்பாட்டினால் நிலத்தடி நீர்மட்டம் இம் மாநிலங்களில் வெகுவாகக் குறைந்துள்ளது. குறிப்பாகப் பஞ்சாப் மாநிலத்தில் ஒரு ஆண்டுக்கு ஒரு இன்ச் அளவிற்கு நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது. தண்ணீரின் தன்மையும் குறைந்துவருகிறது. இதனால் சுற்றுப்புறச் சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தண்ணீரின் பயன்பாட்டைக் குறைக்கும் வகையிலான சாகுபடியினை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது (Nitya Nanda 2021).

குறைந்த பட்ச ஆதார விலையைப் பொருத்தவரையில் மொத்தமாக நாட்டின் உற்பத்தியாகும் வேளாண் விளைபொருட்களின் மதிப்பில் 6 விழுக்காடு மதிப்புடைய விளைபொருட்கள் மட்டுமே இதனைப் பெறுகின்றன. மாநில அளவில் பார்த்தால் பஞ்சாப், ஹரியானா மாநிலங்கள் 75 விழுக்காடு நெல், கோதுமை உற்பத்திக்குக் குறைந்த பட்ச ஆதரவு விலையினைப் பெறுகின்றன. மற்ற மாநிலங்களில் 10 விழுக்காட்டிற்குக் குறைவாகவே இவ்விலை கிடைக்கப்பெறுகிறது. இந்த நிலையினைப் போக்க அரசு சாகுபடி செய்கின்ற பயிர்களில் பன்முக முறைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதனால் அளவிற்கு அதிகமாக சில பயிர்களின் சாகுபடி குறைந்து தேவையான வேறு பயிர்கள் சாகுபடி செய்யப்படும். அவை விவசாயிகளுக்குப் பயனளிப்பதாக இருக்கும். இம்முறையினை மேம்படுத்த மேலும் பல பயிர்களுக்குக் குறைந்த பட்ச ஆதரவு விலை வழங்கப்படவேண்டும். குறைந்த பட்ச ஆதரவு விலை அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். ஏற்கனவே நடைமுறையில் இருந்த கூட்டுறவு முறைகளுக்கு உயிர்கொடுத்து விவசாய முறையை முன்னெடுக்க வேண்டும். இதனால் விவசாயிகள் இழப்பினைத் தவிர்ப்பதுடன் வேளாண்மையானது சமநிலை வளர்ச்சியினை அடையும் (Nitya Nanda 2021).

மோடியின் இரண்டாம் கட்ட ஆட்சி நிறைவுறும் நிலையில் உள்ளது. பூட்டன் (Bouton) என்ற ஆய்வாளரின் கருத்துப்படி இந்தியா கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையின்மை அதிகரித்துள்ளது, வேளாண்மையில் கடுமையான வீழ்ச்சி, வங்கி முறையில் பலவீனம், கடன் வழங்குதலில் பின்னடைவு பொன்றவை காணப்படுகிறது. 2014ல் ஆட்சிக்கு வரும்போது ‘அனைவருக்குமான பொருளாதார வளர்ச்சி’ என்ற உறுதியை அளித்து வென்ற மோடி தற்போது 9 ஆண்டுகள் கடந்தும் இந்த உறுதிமொழியை நிறைவு செய்யப்படாமல் உள்ளது. மோடி நான் ‘இந்தியாவின் காவலன்’ என்று கூறி இரண்டாவது முறையாக வெற்றிபெற்று ஆட்சியமைத்தார். ஆனால் சமுதாயத்தில் விளிம்பு நிலையில் வாழும் மக்களின் நிலை மேலும் பரிதாப நிலைக்குச் சென்றுள்ளது. கோவிட் தொற்றுப் பரவலால் வறுமையிலிருந்து ஏற்கனவே விடுபட்டவர்கள் வறுமைக்குள் மீண்டும் தள்ளப்பட்டதும். வறுமைக் கோட்டிற்கு மேல் இருந்தவர்கள் வறுமையில் சென்றதுமான நிலை உள்ளது. தொழிலாளர்களைப் பாதுகாக்கும் சட்டங்கள் ஒன்றிணைக்கப்பட்டு நீக்குப்போக்குடன் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதனால் தொழிலாளர்களின் உரிமைகள் இழக்கப்பட்டுள்ளது (Marshall Bouton 2019). பணமதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரியினால் தொழில் துறை பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயச் சட்டங்களைக் கொண்டுவந்து பெருநிறுவனங்களுக்குச் சாதகமான நிலை உருவானது. இதனை எதிர்த்து விவசாயிகள் பெரும் போராட்டத்தை முன்னெடுக்கவேண்டிய நிலை உருவானது. இந்தியா கூட்டாட்சித் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒரு நாடு ஒரே தேசம் என்ற உத்தியை மோடி அரசு நடைமுறைப்படுத்துவதால் தற்போது மாநில அரசுகளின் உரிமைகளில் ஒன்றிய அரசு பறித்துக்கொள்கிற நிலை பரவலாகி வருகிறது. இதனால் வேளாண்மைத் துறை பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. இந்தியாவில் தயாரிப்போம் (Make in India) என்ற கொள்கையை நடைமுறைப்படுத்தி பன்னாட்டுத் தனியார் நிறுவனங்களை இந்தியாவில் முதலீடு செய்ய அழைக்கிறது. அரசியல் சூழலும், வாணிப சூழலும் இதற்குச் சாதகமாக உள்ளதால் பன்னாட்டு அளவில் வரிசைப்படுத்தப்படும் ‘எளிமையாக வணிகம் மேற்கொள்ளும் குறியீடு’ என்பதில் இந்தியா 2014ல் 134வது இடத்தில் இருந்தது தற்போது 77வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பொதுத் துறை நிறுவனங்கள் தாரைவார்க்கப்படுகிறது, பெருநிறுவனங்கள் கோலோச்சுகிறது, சந்தைப்பொருளாதார நிலைக்கு இந்திய வேளாண்மையைக் கொண்டுசெல்ல அரசு துடிக்கிறது இதனால் பெருமளவிலான விவசாயிகள் பாதிக்கப்பட்டு வேளாண்மையிலிருந்து வெளியேற அதிக வாய்ப்புள்ளது. இது விவசாயிகளை மட்டும் பாதிப்பாக பார்க்க முடியாது, நுகர்வோர், வணிகர்கள், சமுதாயத்தில் வாழும் விளிம்பு நிலை மக்கள் எனப் பரவலாகப் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. வருங்காலத்தில் இதற்காக அனைத்து தரப்பினரும் போராடவேண்டிய கட்டாயம் உள்ளது. இதுவரை விவசாயிகள் இயற்கையின் போக்கினால் பாதிப்படைந்து வந்தனர் ஆனால் தற்போது அரசியல் காரணங்களையும் எதிர்நோக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. அனைத்து வேளாண் விளைபொருட்களுக்கு விலை உத்தரவாதம், வேளாண்மை மீதான அரசு முதலீட்டை அதிகரிப்பது, வேளாண் இடுபொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்துவது, தேவையை நோக்கிய சாகுபடி செய்தல் போன்ற நிலைகளில் அரசு கவனம் செலுத்த வேண்டிய கட்டாம் தற்போது உள்ளது.

பேரா.பு.அன்பழகன்

இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @ 75 : தொடர் – 14 நரேந்திர மோடியும் வேளாண்மைச் சந்தைப் பொருளாதாரமும் – பாகம்-1 பேரா.பு.அன்பழகன்

இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @ 75 : தொடர் – 14 நரேந்திர மோடியும் வேளாண்மைச் சந்தைப் பொருளாதாரமும் – பாகம்-1 பேரா.பு.அன்பழகன்




மன்மோகன் சிங்கின் முதல் கால கட்ட ஆட்சி சிறப்பானதொரு பொருளாதார வளர்ச்சியைக் கண்டது ஆனால் இரண்டாம் கால கட்ட ஆட்சியில் அந்த அளவிற்கு சோபிக்கவில்லை. அதற்கு முக்கியக் காரணம் வேளாண்மையில் ஏற்பட்ட சில நிகழ்வுகளாகும். காலம் தவறிய பருவ மழை, சில மாநிலங்களில் வறட்சி, சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு போன்றவை முக்கிய காரணிகளாக இருந்தன. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தாலும் விலை உயர்வு, நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு, அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் போன்றவை பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த நிலையில் ஏப்ரல் – மே 2014ல் நடைபெற்ற தேர்தலில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது, ஊழல் ஒழிப்பு, வேலைவாய்ப்பை உருவாக்குவது போன்ற உறுதிமொழிகளைப் பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க) தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவித்தது. இதன் பலன் இக் கூட்டணி 336 இடங்களில் பெரும் வெற்றியைப் பெற்றது. பா.ஜ.க தனித்து 282 இடங்களில் வெற்றி பெற்றது. நரேந்திர மோடி நாட்டின் 16வது பிரதமராக மே 26, 2014ல் பிரதமராகப் பதவி ஏற்றார். முழுமையாக ஐந்து ஆண்டுகள் 2019வரை பிரதமராக ஆட்சி செய்தார்.

இந்தியாவில் மோடிக்கு முன்பு நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் சுயச்சார்பை நோக்கிய பொருளாதாரக் கொள்கைகளை முன்னெடுத்திருந்தனர். நரசிம்ம ராவ், வாஜ்பாய், மன்மோகன் சிங் ஆகியோர்களின் ஆட்சி சந்தை சார்ந்த பொருளாதாரக் கொள்கைகளை நோக்கமாகக் கொண்டிருந்தது. ஆனால் மோடி அரசு துவக்கத்தில் தனித்துவமான கொள்கைகள் எதையும் முன்னெடுக்கத் திட்டமிடவில்லை. ஆனால் தேசிய அளவில் பல பிரதமர்கள் இதுவரை கடைப்பிடித்த கொள்கைகளை மாற்ற முனைந்தது. இந்தியக் கூட்டாட்சித் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்தியா பல்வேறு மொழி, கலாச்சாரம், இனம், இயற்கை சூழலைக் கொண்ட நாடு. இதற்கான முக்கியத்துவம் இவற்றின் இயல்பிற்கு ஏற்ப கொடுத்து வந்தநிலையில் ஒரே நாடு ஒரே கொள்கை என்பதை மோடி அரசு பின்பற்றியது.

இந்தியாவில் ஐந்தாண்டு திட்டங்களை உருவாக்கச் சோவியத் ரஷ்யாவை முன்மாதிரியாகக் கொண்டு மார்ச் 15, 1950ல் அன்றைய பிரமர் நேருவால் உருவாக்கப்பட்ட திட்டக்குழு 12 ஐந்தாண்டு திட்டங்களைத் தந்தது. இது கலைக்கப்பட்டு ஜனவரி 1, 2015ல் பிரதம மந்திரியைத் தலைவராகக் கொண்ட நிதி ஆயோக் (NITI Aayog) என்ற அரசுக்கு (ஒன்றிய, மாநிலங்கள்) உத்திகளையும், ஆலோசனைகளையும் வழங்கும் அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பானது திட்டக்குழு போல் அல்லாமல் அரசுக்கு ஆலோசனைகளை வழங்கும் ஆனால் கொள்கைகளை நடைமுறைப்படுத்தாது, நிதி ஒதுக்கீடு செய்யும் அதிகாரமற்றதாக இருக்கும், பகுதி நேர உறுப்பினர்களை நியமித்துக்கொள்ளும் என்ற இயல்புகளைக் கொண்டதாக உள்ளது. நிதி சார்ந்த நடவடிக்கைகளில் கவனம் செலுத்து பட்டு பணமதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரியினை நடைமுறைப்படுத்தியது. மோடியின் முதல் கட்ட ஆட்சிக் காலத்தில் இவ்விரண்டு நடவடிக்கைகளும் பெருமளவிற்குப் பொருளாதாரத்தின் மீது தாக்கங்களை ஏற்படுத்தியது.

நவம்பர் 8, 2016ல் 86 விழுக்காடு பண சுழற்சியைக்கொண்ட உயர் மதிப்புடைய ரூ.500, ரூ.1000 பணங்களை மதிப்பிழக்கச் செய்யப்பட்டது. இதன் வழியாகக் கருப்புப் பணம், கள்ளப் பணம், தீவிரவாதம் ஒழிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் அதிக அளவில் நீர்மப் பணம் புழக்கத்தில் பொருளாதார நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பண மதிப்பிழப்பு நடைமுறைப்படுத்தப்படும்போது உழவுப் பணிகள் துவங்குகிற காலம் எனவே அதிகமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இதுபோல் கட்டுமானத்துறை, சிறு, குறு தொழில்கள் பெருமளவிற்குப் பாதிப்பிற்கு உள்ளானது. இதனால் வேலை இழப்பு ஏற்பட்டு வேலையின்மை அதிகரித்தது. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவாக 6.1 விழுக்காடாக வேலையின்மை 2017-18ல் காணப்பட்டது.

காலம் காலமாக ஒன்றி, மாநில அரசுகள் பல்வேறு வரிகளை விதித்து வந்த நிலையில் இதனை முறைப்படுத்த ஒரே நிலையிலான வரியினை நாடு முழுவதும் விதிக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசானது சரக்கு மற்றும் சேவை வரியினை (ஜி.எஸ்.டி) கொண்டுவர முயற்சிகள் மேற்கொண்டது. நரேந்திர மோடி அரசு பதவி ஏற்றபின்பு இதனைச் சட்டமாக்கி ஜூலை 1, 2017ல் 17 மறைமுக வரிகளை ஒன்றிணைத்து நடைமுறைப் படுத்தியது. இது ஐந்தடுக்கு முறையில் மத்திய ஜி.எஸ்.டி, மாநில ஜி.எஸ்.டி, ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி என்ற வழிகளில் வரி விதிக்கப்படுகிறது. இந்த நடைமுறையினால் நுகர்வோர் அதிகம் பயனடைவார்கள் என்று கூறப்பட்டது. உண்மை நிலையில் இதனால் அரசுக்கான வருமானம் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது ஆனால் இது நடைமுறைப்படுத்தப்பட்டபின் நுகர்வுப் பொருட்களின் விலை குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நுகர்வோர், உற்பத்தியாளர்கள், சிறு வணிகர்கள், விவசாயிகள் பெருமளவிற்கு ஜி.எஸ்.டியால் பாதிக்கப்பட்டனர். பல மாநிலங்களின் சொந்த வரி மூலம் பெறப்படும் வருவாய் குறைந்தது. ஜி.எஸ்.டி வழியாகப் பெறப்பட்ட வருவாயையும் ஒன்றிய அரசு சரியாக மாநில அரசுகளுக்குப் பகிர்ந்தளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. பல சிறு, குறு தொழில்கள் இவ் வரியினால் பாதிக்கப்பட்டு, மூடப்பட்டது.

பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கையில் வேளாண்மை மேம்பாட்டிற்கான உறுதி மொழி, வாசகங்கள் (slogam), புதிய திட்டங்கள், நடவடிக்கைகள், ஏதும் பெரிய அளவில் இடம்பெறவில்லை. ஆனால் சில குறிப்பிட்ட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளாக இந்திய உணவுக் கழகம் திறம்படச் செயல்பட வைப்பது, விவசாயிகள் மேம்பட புதிய தொழினுட்பங்களைப் புகுத்துவது, தேசிய வேளாண் சந்தை அமைப்பது, மக்களின் பழக்கங்களோடு தொடர்புடைய வேளாண் விளைபொருட்களை மேம்படுத்துவது, விலை நிலைப்பு நிதியை உருவாக்குவது, வேளாண்மையை லாபகரமானதாக மாற்றுவது, மண் வளத்தைப் பாதுகாக்க நடவடிக்கை, இயற்கை சீற்றங்களால் ஏற்படும் வேளாண் இழப்பினைச் சரிசெய்யக் காப்பீட்டை நடைமுறைப்படுத்துதல் போன்றவை பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் வேளாண்மை சார்ந்ததாக இருந்தது.

மோடியின் முதல் கட்ட ஆட்சிக்காலமான 2014-15 முதல் 2018-19வரையில் மேற்கொண்ட முக்கியமான நடவடிக்கைகள், 1) நீர் பாதுகாப்பு மற்றும் அதன் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கும் பிரதம மந்திரி கிரிஷ் சிஞ்சாய் யோஜனா 2015ல் தொடங்கப்பட்டது. 2) பிப்ரவரி 2016ல் விவசாயிகளின் வருமானத்தை இரண்டுமடங்காக 2022க்குள் அதிகரிப்பது. 3) நிதி ஆயோக்கால் மார்ச் 2016ல் மாதிரி நில குத்தகைச் சட்டம் வடிவமைக்கப்பட்டுக் குத்தகைச் சட்டத்தை மேம்படுத்தி குத்தகை தாரர்கள் பயனடையச் செய்யப்பட்டது. 4) ஏப்ரல் 2016ல் பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா என்ற விரிவான பயிர்க் காப்பீடுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. 5) வேளாண் உற்பத்தி மற்றும் கால்நடை சந்தை படுத்துதல் (மேம்பாடு மற்றும் வசதியளிப்பு) சட்டம் 2017 நடைமுறைப்படுத்தப்பட்டது (ஏப்ரல் 2017ல்). இதன்படி மாநிலங்களில் இனம்கண்டுள்ள அனைத்து சந்தைகளையும் ஒருமுகப்படுத்துதல், தனியார் சந்தை, நுகர்வோர் சந்தை, நேரடிச் சந்தைப் படுத்துதல் போன்றவை அமைத்தல், கிடங்குகள், குளிரூட்டப்பட்ட சேமிப்பு கிடங்குகள் அனைத்தையும் சந்தை முற்றமாகப் பிரகடனப் படுத்துதல், சந்தை கட்டணம், முகவர் கட்டணம் போன்றவற்றில் நியாயமான முறையினைப் பின்பற்றுதல், மின்னணு வர்த்தகத்திற்கு ஒருநிலையிலான அனுமதி, சந்தைக் கட்டணங்கள் ஒரு நிலையில் மட்டும் விதிப்பது, கிராமிய சந்தைகளில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக வேளாண் விளைபொருட்களை வாங்க வழி செய்தல் போன்றவை நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டது.

6) ஆகஸ்ட் 2017ல் தண்ணீரை உச்ச அளவிற்குப் பயன்படுத்த நுண்ணீர் பாசன முறையினை ஊக்குவிக்க ‘ஒரு சொட்டு நீரில் அதிக விளைச்சல்’ (per drop, more crop) என்ற முறை முன்னெடுக்கப்பட்டது. 7) ஏப்ரல் 2018லிருந்து வேளாண் விளைபொருட்கள் ஏற்றுமதியை 2022-23ல் இரட்டிப்பாக்குதல். 8) பாரம்பரிய விவசாய மேம்பாட்டுத் திட்டம் (Paramparagat Krishi Vikaas Yojana) மார்ச் 2018ல் தொடங்கப்பட்டு இயற்கை வேளாண்மையை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. 9) பிரதான் மந்திரி அன்னதாதா வருவாய் பாதுகாப்பு இயக்கம் (Pradhan Mandri Annadata Aay Sanrakshan Abhiyan) செப்டம்பர் 2018ல் தொடங்கப்பட்டு விவசாயிகளுக்குக் கட்டுபடியாகும் விலையை வேளாண்மை விளைபொருட்களுக்கு உறுதி செய்வதாகும். 10) டிசம்பர் 2018ல் ‘வேளாண் ஏற்றுமதிக் கொள்கை’ வெளியிடப்பட்டது இதன்படி ஏற்றுமதியை இரட்டிப்பாக்குதல், இந்திய விவசாயிகளை ஒன்றிணைப்பது, வேளாண் விளைபொருட்களை உலகளாவிய மதிப்பு சங்கிலத் தொடரை உருவாக்குவதாகும். 11) குறு, சிறு விவசாயிகளின் வருமானத்தை உறுதிசெய்யும் விதமாகப் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா என்ற திட்டம் பிப்ரவரி 2019ல் தொடங்கப்பட்டது. 12) வேளாண்மைக்குப் பயன்படுத்தப்படும் யூரியாவினைப் பாதி அளவாக்க 2022-23 குறைத்தல்.

இந்தியாவில் விவசாயக் குடும்பங்கள் வேளாண்மை மற்றும் கால்நடைகள் வளர்த்தல் வழியாக மொத்த வருவாயில் 2002-03ல் 50.1 விழுக்காடு பெற்றிருந்தனர் இது 2015-16ல் 43.1 விழுக்காடாகக் குறைந்தது. இதே காலகட்டத்தில் கூலி வழியாகப் பெறும் குடும்ப வருமானமானது 38.7 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடாக அதிகரித்துள்ளது (Ashok Gulati 2021). பிப்ரவரி 28, 2016ல் பெல்லாரியில் நடந்த விவசாயிகளின் பேரணியில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளின் வருமானத்தை 2022ல் இருமடங்காக அதிகரிக்க உள்ளதாகக் குறிப்பிட்டார். அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜேட்லி 2017ல் தாக்கல் செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கையில் விவசாயிகள் வருமானத்தை இருமடங்கு அதிகரிப்பதைப் பற்றிக் குறிப்பிட்டார். இதற்காக அசோக் தல்வாய் தலைமையில் ஏப்ரல் 2016ல் ஒரு குழு அமைத்து ஆய்வு செய்யப்பட்டது. செப்டம்பர் 2018ல் இக் குழு அறிகையினை அரசுக்கு அளித்தது. இதன்படி 2012-13ல் விவசாயிகளின் மாத வருமானம் ரூ.8059 ஆக இருந்ததை 2022-23ல் ரூ.17862 ஆக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதன்படி ஆண்டுக்கு 10.4 விழுக்காடு வருமானத்தை 2015-16 மற்றும் 2022-23 இடையில் உயர்த்த இலக்கு வகுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் வேளாண் உற்பத்தித் திறனை அதிகரிப்பது, கால்நடை உற்பத்தித் திறனை அதிகரிப்பது, வள ஆதாரங்களைத் திறனாகப் பயன்படுத்துவது, வேளாண் உற்பத்திக்குத் திறனான பணமதிப்பினை உருவாக்குவது, இரண்டாம் நிலையிலான வேளாண் நடவடிக்கைகளின் பரவலை ஏற்படுத்துதல் போன்றவை முன்னெடுக்கப்பட்டது.

உணவு தானிய மேலாண்மை முறையினை அரசு தலையிட்டு நடைமுறைப்படுத்தியது. இதன்படி அரசு நெல், கோதுமைக்குக் குறைந்த பட்ச ஆதரவு விலையினை அளித்து கொள்முதல் செய்வது, கொள்முதல் செய்யப்பட்ட உணவு தானியங்களை 5 லட்சம் நியாய விலைக் கடைகள் வழியாகப் பொது விநியோக முறையில் பகிர்ந்தளிக்கப்பட்டது. 2013ல் பொது விநியோக முறையானது தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வந்தது. இதனை இந்திய உணவுக் கழகம் ஒருங்கிணைப்பு முகவராக இருந்து செயல்படுத்துகிறது. இதன்படி ஆண்டுக்கு 61.4 மில்லியன் மெட்ரிக் டன் தானியங்கள் 8.13 மில்லியன் மக்களுக்கு வழங்கப்பட்டது. மொத்த மக்கள் தொகையில் 67 விழுக்காட்டினர் இதனால் பயனடைந்தனர். பொதுவாக உணவுக்கான அதிகபட்ச மானியம் 2001-02முதல் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் 2016-17 மற்றும் 2017-18ல் இதற்கான மானியம் ரூ.1.1 லட்சம் கோடி, ரூ.1.0 கோடி என்று முறையே வழங்கப்பட்டது. 2017-18லிருந்து 2018-19ல் மானியமானது 71 விழுக்காடு அதிகரித்தது. 2001-02லிருந்து அடுத்து வந்த 17 ஆண்டுகளில் 10 மடங்கு உணவுக்கான மானியம் அதிகரித்திருந்தது.

உணவு தானிய மேலாண்மை முறையில் கிடங்குகள் பற்றாக்குறை, போக்குவரத்தில் முறையற்ற மேலாண்மை, கசிவுகள், போக்குவரத்து வழியாகப் பரிமாற்றம் செய்யும்போது தானியங்கள் சிந்துதல், இந்திய உணவுக் கழகம் திறனற்று இருப்பது போன்றவற்றால் அதிக செலவுகள், விரயங்கள் ஏற்படுகிறது எனவே இதனைச் சரிசெய்ய மோடி அரசானது சாந்த குமார் தலைமையில் உயர் மட்டக் குழு ஒன்றை அமைத்தது. இக்குழுவானது ஜனவரி 2015ல் தனது அறிக்கையை ஒன்றிய அரசுக்குச் சமர்ப்பித்தது. அதன்படி 1) நடைமுறையில் உள்ள உணவு தானிய வழங்கலைக் குறைத்து அதற்குப் பதில் ரொக்கப் பண மாற்றத்தை அனுமதிப்பது, 2) இந்திய உணவு கழகம் நடைமுறையினைச் சரிசெய்து புறக்கணிக்கப்பட்ட மாநிலங்களில் கொள்முதல் வழியாக உணவுப் பொருட்களைத் தகுந்த விலைகொடுத்து வாங்குதல், 3) தேசிய உணவுப் பாதுகாப்பினால் பயனடையும் 67 விழுக்காடு மக்களின் பங்கை (மொத்த மக்கள் தொகையில்) 40 விழுக்காடாக்கக் குறைத்தல், 4) மாநில மற்றும் தனியார்த் துறையினை ஈடுபடுத்தி வெளிப்புற நடவடிக்கைகளின் வழியாக உணவு தானிய இருப்பை அதிகரிப்பது, 5) அதிக அளவிற்கு விளைபொருட்களைக் கையாள வினியோகச் சங்கிலியை மேம்படுத்துவது, கணினி மயமாக்குவது, அதிக அளவிற்கு உழலுக்கு வழி வகுக்கும் உணவு தானியம் கையாளும் முறையினை ஒழிப்பது போன்றவை பரிந்துரைக்கப்பட்டது.

மார்ச் 31, 2018ன்படி இந்தியாவில் 6676 முறைப்படுத்தப்பட்ட மொத்த விலைச் சந்தைகள் இயங்கிவந்தது. ஆனால் தேவைக்கு ஏற்ற அளவில் இச் சந்தை இல்லாததால் அரசு பல்வேறு திட்டங்கள் வழியாக வேளாண் சந்தைகளைத் தொடங்கியது. வேளாண்மை மற்றும் கால்நடைகளைச் சந்தைப்படுத்துதல் சட்டம் 2017, 2018-19ல் கிராம வேளாண் சந்தை, 2016ல் தேசிய வேளாண்மைச் சந்தை, 2018ல் பிரதான் மந்திரி அன்னதாதா வருவாய்ப் பாதுகாப்பு இயக்கம், 2018ல் வேளாண் ஏற்றுமதி கொள்கை, வேளாண் உற்பத்தி மற்றும் கால்நடை ஒப்பந்த வேளாண் மற்றும் சேவைச் சட்டம் 2018, 2016ல் சந்தைப் படுத்துதலுக்கான உரிமத்தை விலக்கிக் கொண்டது போன்றவை வழியாக வேளாண் சந்தைப் படுத்துதலை மேம்படுத்தியது.

குறைந்த பட்ச ஆதார விலையை 2003ல் மாதிரி வேளாண் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதல் குழு (APMC) என்பதை ஏற்றுக்கொண்டு பல மாநிலங்கள் நடைமுறைப்படுத்தியது. இதனால் ஒப்பந்த மற்றும் நேரடிச் சந்தை படுத்துதலுக்குத் தனியாரை அனுமதித்ததால் இச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு 15 ஆண்டுகள் முடிவடைந்த நிலையிலும் பல மாநிலங்களில் குறைந்த அளவிலே சந்தைப்படுத்துதலில் சீர்திருத்தங்களைக் கொண்டுவர முடிந்தது. பொதுவாக வேளாண்மைச் சந்தையானது திறனற்றதாகவும், வெளிப்படைத் தன்மையற்றதாகவும், முற்றுரிமை உடையதாகவும் இருந்ததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். எனவே ஏப்ரல் 2017ல் வேளாண்மை உற்பத்தி மற்றும் கால்நடைகளைச் சந்தைப் படுத்துதல் (APLM) சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்படி மாநிலம் முழுவதும் ஒத்த நிலையிலான சந்தைகளைப் பிரகடனம் செய்தல், தனியார்ச் சந்தைகளை அமைப்பது. விவசாயி-நுகர்வோர் சந்தைகளை உருவாக்குதல், நேரடிச் சந்தையை ஏற்படுத்துவது, கிடங்குகள் மற்றும் குளிரூட்டப்பட்ட சேமிப்புக் கிடங்குகளைச் சந்தை முற்றமாக அறிவிப்பது, நியாயமான சந்தைக் கட்டணம் மற்றும் முகவர் கட்டண விதிப்பு, மின் சந்தை அமைப்பது போன்றவை உருவாக்கப்பட்டது.

மாதிரி ஒப்பந்த வேளாண் சட்டம் 2018ல் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன்படி விவசாயிகளுக்கும் வாங்குபவருக்கும் இடையே நேரடி ஒப்பந்த முறை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டது. ஏற்கனவே ஒப்புக் கொள்ளப்பட்ட ஒப்பந்த அடிப்படையில் விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை விற்றுப் பணம் பெறலாம் என்பதால் இழப்புகள் தவிர்க்கப்படும். வாங்குபவர்களும் குறிப்பிட்ட காலத்தில் விளைபொருட்களை விவசாயிகளிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். இந்த முறையில் இடைத் தரகர்கள் இல்லாமல் நடைபெறுவதால் விவசாயிகள் லாபம் பெற இயலும் (Pavneet Kauris et al 2018).

கிராமப்புற வேளாண் சந்தைகள் 2018-19ல் 22941 இருந்தன இதில் 22000 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் உதவியுடன் மேம்படுத்தப்பட்டது. 10000 கிராமப்புறச் சந்தைகள் வேளாண் சந்தைப்படுத்துதல் உள்கட்டமைப்பு நிதியினைப் பயன்படுத்தி உள்கட்டமைப்புகளை மேம்படுத்தப்பட்டது. வேளாண் நுட்ப உள்கட்டமைப்பு நிதியின் வழியாக ரூ.200 கோடி மதிப்பீட்டில் ஜூலை 1, 2015ல் தேசிய வேளாண்மைச் சந்தை அமைக்கப்பட்டது. ஏப்ரல் 14, 2016ல் மின்னணு தேசிய வேளாண்மைச் சந்தை தொடங்கப்பட்டது. இதன் முக்கிய நோக்கம் வெளிப்படைத்தன்மையைப் பின்பற்றுவது, உழவர்களின் வருமானத்தை அதிகரிப்பது, அதிக அளவில் வாங்குபவர்களை அந்த அந்த மாநிலத்திற்கு உள்ளேயும், வெளியேயும் உருவாக்கித்தருவது போன்றவையாகும். மின்னணு தேசிய வேளாண்மைச் சந்தையானது மூன்று முக்கிய முன் தேவைகளைக் கொண்டது. இதன்படி 1) மாநிலம் முழுவதும் வர்த்தகம் செய்ய ஒரே உரிமத்தை உறுதிசெய்வது, 2) மாநிலம் முழுவதும் ஒரே முனையத்தில் கட்டணம் விதிப்பது அல்லது மாநிலம் முழுக்க கட்டணமற்ற சந்தையினை அளிப்பது. 3) மின்னணு முறையில் ஏலம் நடத்துவது போன்றவையாகும். இத் திட்டத்தின்படி நாடுமுழுவதும் 585 வேளாண் உற்பத்தி மற்றும் சந்தைப் படுத்துதல் குழுக்கள் இணைக்கப்பட்டது. இதனால் 1.66 கோடி விவசாயிகள் பயனடைந்தனர். அதே சமயம் மின்னணு தேசிய வேளாண்மைச் சந்தையில் கட்டணமற்ற முறை பின்பற்றப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றது, விவசாயிகளுக்குத் தகுந்த விலை கிடைக்கவில்லை, விவசாயிகளுக்குப் பணம் செலுத்த மின்னணு பரிமாற்றம்; பயன்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் காணப்படுகிறது.

மோடி தலைமையிலான ஆட்சியின் முதல் கால காட்டத்தில் 2014ல் வறட்சி ஏற்பட்டது, அடுத்து 2015ல் கடுமையான வறட்சி நிலவியது இதனால் உணவு தானிய உற்பத்தி 13.03 மில்லியன் மெட்ரிக் டன், 0.5 மில்லியன் மெட்ரிக் டன் என்ற அளவு குறைந்தது. பருப்பு உற்பத்தி 2.1 மில்லியன் மெட்ரிக் டன், 0.8 மில்லியன் மெட்ரிக் டன் எனக் குறைந்தது. இதனால் உணவுப் பணவீக்கம் அதிகரித்தது. பருப்பிற்கான நுகர்வோர் விலையானது 2016ல் முதல் பாதியில் 33 விழுக்காடு அதிகரித்தது. உணவுப் பணவீக்கத்தில் குறிப்பாகப் பருப்பு விலை உயர்வினைக் கட்டுப்படுத்த அதன் உற்பத்தியை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி பருப்பிற்கானக் குறைந்த பட்ச ஆதரவு விலையினை அதிகரித்தது, பருப்பு இறக்குமதி செய்தது இதனால் விலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அடுத்தடுத்து வந்த ஆண்டுகளில் பருவமழை நன்றாக இருந்ததால் பருப்பு உற்பத்தி அதிகரித்தது. இந்த நிகழ்வுகளால் பருப்பு விலையானது 2017-18ல் கடுமையாக வீழ்ச்சியடைந்தது. இதுபோன்ற நிலையே எண்ணெய்வித்திலும் ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்பிற்கு உள்ளானார்கள். இதனைப் போக்க அரசு பிரதான் மந்திரி அன்னதாதா வருவாய்ப் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்பட்டது. இத் திட்டத்தின் முக்கிய நோக்கம் விவசாயிகளின் வேளாண் விளைபொருட்களுக்குக் கட்டுபடியாகும் விலையினை உறுதி செய்வதாகும். இத்திட்டத்தின் மூன்று உபதிட்டங்கள் இடம் பெற்றிருந்தது. 1) விலை ஆதரவு திட்டம்: இதன்படி ஒன்றிய அரசு இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் முகவராகச் செயல்பட்டுப் பருப்பு, எண்ணெய் வித்துக்கள், கொப்பரை போன்றவற்றுக்குத் தகுந்த விலையினை அளித்தது. இந்திய உணவுக் கழகத்தை இதில் ஈடுபடச் செய்தது. 2) விலைப் பற்றாக்குறையைச் செலுத்தும் திட்டம் (PDPS): இதன்படி இனம்காணப்பட்ட வேளாண் சந்தையில் பதியப்பட்ட விவசாயிகளுக்குத் தங்களின் விளைபொருட்கள் விற்பனையில் குறைந்த பட்ச ஆதார விலைக்கும் உண்மையில் விற்கப்படும் விலைக்கும் உள்ள வேறுபாட்டு விலைப் பற்றாக்குறையினை அறிந்து விவசாயிகளுக்கு நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கிற்குப் பணம் செலுத்துவதாகும். மேலும் வெளிப்படையான ஏலச் சந்தையினை விவசாயிகளுக்கு உருவாக்கித் தருவதாகும். 3) தனியார்த் துறை அனுமதி: கடந்த கால அனுபவத்தின் அடிப்படையில் அரசானது தனியார்த் துறையினை வேளாண் விளைபொருட்கள் கொள்முதல் செய்ய முன்னோட்ட அடிப்படையில் நடைமுறைப்படுத்தியது. ஆனால் மாநில அளவில் இதற்கான தகுந்த வரவேற்பு இல்லை. பிரதான் மந்திரி அன்னதாதா வருவாய்ப் பாதுகாப்பு இயக்கமானது சிறு, குறு விவசாயிகளிடையே சென்றடையாததால் இத் திட்டம் வெற்றிபெற இயலவில்லை.

2014ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் வேளாண் விளைபொருட்களுக்கு அதன் செலவுடன் 50 விழுக்காடு கூடுதலாக விலை அளிப்பதாக அறிவித்தது. இதன்படி 2018-19ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் குறைந்த பட்ச ஆதரவு விலையை A2 + FL என்ற அடிப்படையில் விலை தீர்மானம் செய்து அத்துடன் 50 விழுக்காடு கூடுதலாக சேர்த்து குறைந்த பட்ச ஆதரவு விலை அறிவிக்கப்பட்டது. ஆனால் C2 என்ற செலவினை கணக்கில் கொள்ளாமல் இவ்விலை அளிக்கப்பட்டதால் A2 + FL வானது C2 வைவிட 38 விழுக்காடு குறைவாக இருந்தது. அதே சமயம் இவ் விலை அறிவிக்கப்பட்டபோது பன்னாட்டுச் சந்தையில் வேளாண் விளைபொருட்களின் விலை வீழ்ச்சியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதுபோல் இவ் குறைந்தபட்ச விலை அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்கவில்லை காரணம் அரசு கொள்முதல் செய்யப்படும் கொள்முதல் மையங்களில் மட்டுமே இது பின்பற்றப்பட்டது. மேலும் இவ்விலை அறிவிக்கப்பட்டபோது எற்கனவே நடப்பில் இருந்த குறைந்த பட்ச ஆதரவு விலையைனைத்தாண்டி எந்த பெரிய மாற்றமும் எற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறைந்த பட்ச ஆதரவு விலையானது மொத்த வேளாண் விளைபொருட்களின் மதிப்பில் 6 விழுக்காடு மதிப்புடையவற்றுக்கு மட்டுமே பயனளிப்பதாக இருந்தது. இக் குறைந்த பட்ச ஆதரவு விலையானது மிகக்குறைவான விவசாயிகளுக்கு மட்டுமே பலனை அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரங்களைத் திறம்படப் பயன்படுத்தி வேளாண் வருமானத்தை அதிகரிக்க அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டது. இந்தியாவில் பாதிக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் இயற்கையைச் சார்த்திருக்கிறது. நீர்ப்பாசனம் அனைத்து விவசாயிகளின் நிலங்களுக்கும் கிடைக்கப்பெற வேண்டும் என்பதற்காகப் பிரதான் மந்திரி கிரிஷ் சிஞ்சாய் யோஜனா என்ற திட்டம் 2015ல் அறிமுகப்படுத்தப்பட்டது. 6 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்களுக்குச் செயற்கை நீர்ப்பாசன வசதி, 5 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலத்திற்குச் சொட்டுநீர் பாசனம், விவசாயப் பண்ணைகள் அமைப்பது, போன்றவற்றை இத்திட்டம் நிறைவேற்ற முனைந்தது. இதன்படி 99 முதன்மையான நீர்ப்பாசன திட்டங்களை இனம்கண்டு நீர்ப்பாசன வசதியை 2019க்கு முன்பு மேம்படுத்தத் திட்டம் வகுக்கப்பட்டது ஆனால் பிப்ரவரி 2019ல் 4 திட்டங்கள் மட்டுமே முடிவுறும் தறுவாயில் இருந்தது, 51.4 விழுக்காடு திட்டங்கள் டிசம்பர் 2019ல் முடிவுபெறும் தறுவாயில் இருந்தது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரண்டாம் கட்ட ஆட்சிக் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட மாற்றியமைக்கப்பட்ட தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில் இருந்ததை பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா (PMFBY) என்று பெயர் மாற்றம் செய்து 2016ல் இவ் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது. இப் புதிய திட்டம் விவசாயிகள் செலுத்தவேண்டியப் பிராமியத்தினை குறைத்துச் செலுத்த வழிவகுத்தது மட்டுமல்ல சில கட்டுப்பாடுகளையும் விலக்கிக் கொண்டது. 2015-16ல் இத் திட்டமானது மொத்த விளைநிலப் பரப்பில் 22 விழுக்காடு நிலங்களை உள்ளடக்கியிருந்தது, 2017-18ல் இது 29 விழுக்காடாகவும், 2018-19ல் 29.33 விழுக்காடாகவும் அதிகரித்தது. இதனால் 1.56 விவசாயிகள் பயனடைந்தனர். இக் காப்பீட்டில் பயனடைய ஆதார் இணைப்பு கட்டாயம் என்பதால் முழு அளவிற்கு விவசாயிகளுக்குப் பலன் சென்றடையவில்லை. நெசவாளர்கள் இத்திட்டத்தின் வழியாகக் கடன்பெற வசதி ஏற்படுத்தித் தரப்பட்டது ஆனால் இதில் பல முறைகேடுகள் காணப்பட்டது, மாநில அரசு கால வரையறைக்குள் விவரங்களைச் சமர்ப்பிக்கவில்லை என்பதால் காப்பீட்டுத் தொகை பெறுவதில் கால தாமதம் ஏற்பட்டது. காப்பீட்டு நிறுவனங்கள் தாமதப்படுத்திக் காப்பீட்டுத் தொகையை வழங்கியது. காப்பீட்டு நிறுவனங்கள் அதிகமாக இந்த திட்டத்தால் லாபம் அடைந்தது. தோட்டக்கலை மற்றும் அதனைச் சார்ந்த துறைகளுக்கு இந்த காப்பீடு நடைமுறைப்படுத்தவில்லை. எனவே அக்டோபர் 1, 2018ல் அரசு இந்த திட்டத்தில் சில மாறுதல்களைச் செய்து (தாமதமாக வழங்கும் காப்பீட்டுத் தொகைக்கு அதற்கான வட்டியையும் சேர்த்து வழங்குதல், சராசரி நகர்விற்குக் கடந்த 7 ஆண்டுகளில் 5 ஆண்டுகளை எடுத்துக்கொள்வது, விவசாயிகளுக்குக் காப்பீடு செய்ய மேலும் கால அவகாசம் அளிப்பது, அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளையும் கணக்கில் கொள்வது) நடைமுறைப்படுத்தியது. ஆனால் திறனற்ற நடைமுறை, வெளிப்படைத் தன்மையற்ற நிலை, தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டாதது போன்ற பின்னடைவுகள் இத் திட்டத்தில் காணப்பட்டது.

இந்தியாவில் குறு, சிறு விவசாயிகள் (2 ஹெக்டேர் நிலத்திற்குக் கீழ் வைத்திருப்பவர்கள்) 2015-16ஆம் ஆண்டு தரவுகளின்படி மொத்த விவசாயிகளில் 86 விழுக்காடு உள்ளனர். இவர்கள் தங்களின் வேளாண் பணியினை மேற்கொள்ள முறைசாராக் கடன்களை அதிமாகப் பெறுவதால் கடன் தொல்லைக்கு ஆளாகி தற்கொலை செய்துகொள்கின்றனர். NCRBயின் தரவுகளின்படி 1995முதல் 2016ஆம் ஆண்டுவரை 3 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 2012-13ஆம் ஆண்டு தரவுகளின்படி பெரிய விவசாயிகளின் குடும்ப வருமானம் சிறு விவசாயிகளின் குடும்ப வருமானத்தைவிட 5.6 மடங்கு அதிமாக உள்ளது. பெரிய விவசாயிகள் ஒரு ஹெக்டேருக்கு சராசரியாக ரூ.46307 வருவாய் ஈட்டுகின்றனர் ஆனால் சிறு விவசாயிகள் ரூ.44345 மட்டுமே ஈட்டுகின்றனர். விவசாயிகளின் மொத்த வருமானத்தில் 47.9 விழுக்காடு மட்டுமே வேளாண்மை சாகுபடியினால் கிடைக்கிறது (Suijit Mistra et al 2021). இயற்கைச் சீற்றங்கள், காலநிலை மாறுபாடு போன்றவற்றால் சிறு, குறு விவசாயிகள் அதிக இழப்பினை எதிர்கொள்கின்றனர். இதன்பொருட்டு ஒன்றி அரசானது பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தை 2019ல் நடைமுறைப்படுத்தி குறு, சிறு விவசாயிகளுக்கு எந்த விதக் கட்டுப்பாடுமின்றி ஆண்டுக்கு ரூ.6000 ரொக்கத்தை அவர்களின் வங்கிக் கணக்கில் மூன்று தவணைகளில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது. 2019-20ல் இத் திட்டத்திற்கு ரூ.75000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு முதல் தவணையினை ஏப்ரல் 1, 2019ல் விவசாயிகளின் கணக்கில் செலுத்தப்பட்டது. மார்ச் 7, 2019ன் படி 2.2 கோடி விவசாயிகள் இதனால் பயனடைந்தனர். இத்திட்டமானது நில உடைமையாளர்களுக்கும், பயிரிடப்படக்கூடிய நிலத்திற்கு மட்டுமே பொருந்தக்கூடியதாகும். அரசு ஊதியம் பெறுபவர்கள், குத்தகை தாரர்கள், நிலமற்ற விவசாயிகள் இத்திட்டத்தைப் பயன்படுத்தமுடியாது. மேம்படுத்தப்படாத நில ஆவணங்கள், விவசாயிகளிடையே வங்கிப் பழக்கமின்மை போன்ற காரணங்களால் இத்திட்டம் முழு அளவிற்கு வெற்றிபெறவில்லை. அத்திமான அளவிற்கு இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படுவதால் (ஜி.டி.பியில் 0.4 விழுக்காடு) அரசின் நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கக் காரணமாக உள்ளது.

வேளாண்மை மற்றும் அதனைச் சார்ந்த துறைகளின் உள்கட்டமைப்பினை மேம்படுத்தி வேளாண் தொழில் முனைவோர்களை ஈடுபடச் செய்யவும், வேளாண் வணிகத்திற்கு நிதி உதவியினைச் செய்யவும், ராஷ்டிரிய கிரிஷ் விகாஸ் யோஜனா திட்டத்தை 2018-19ல் தொடங்கப்பட்டது. இதுபோன்று வேளாண்மை இயந்திரமயமாக்கலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. வேளாண் கழிவுகளால் பஞ்சாப், ஹரியானா, உத்திரப் பிரதேசம் மாநிலங்களில் வேளாண் கழிவுகளை எரிப்பதால் டெல்லியில் சுற்றுச் சூழல் பாதிப்படைகிறது எனவே இதனைக் கையாள்வதற்கு நிதி உதவி மற்றும் மானியத்தில் இயந்திரங்கள், கருவிகள் வழங்கும் திட்டமும், வாடகைக்கு இயந்திரங்கள் அளிக்கும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டது. விவசாயிகளிடையே சுற்றுப்புறச் சூழல் மாசடைவதை அறியவும் மாற்று நடைமுறையினைக் கடைப்பிடிக்கவும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. உள்நாட்டுக் கால்நடைகளைப் பாதுகாக்கவும் அவற்றை அதிகரிக்கவும் ராஷ்டிரிய கோகுல் திட்டம் 2014ல் தொடங்கப்பட்டது. பிரதான மந்திரி கிசான் சம்பதா யோஜனா என்ற திட்டம் ரூ.6000 கோடி செலவில் 2016-2020க்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன்படி உணவுப் பூங்கா அமைத்தல், முன்னோக்கி-பின்னோக்கிய தொடர்புகளை உருவாக்குவது, உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டுக்கு உள்கட்டமைப்பை அமைப்பது, சங்கிலித் தொடர் குளிர்பதனக் கிடங்கு மற்றும் மதிப்புக் கூட்டல் கட்டமைப்பை ஏற்படுத்துதல், வேளாண்-செயல்பாட்டுத் தொகுதிகளுக்குக் கட்டமைப்பை உருவாக்குதல் போன்றவை வலுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

Source: Pulapre Balakrishnan 2022.

மோடி பிரதமராகப் பதவி ஏற்றபோது நிதிப் பற்றாக்குறையானது 2013-14ல் 4.4 விழுக்காடாக இருந்தது இது அடுத்து வந்த ஆண்டுகளில் குறைந்து 3.4 விழுக்காடாக 2018-19ல் இருந்தது. பணவீக்கம் பொருட்களின் விலையினைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பெட்ரோல் விலை, உணவுப் பொருட்களின் விலைகள் குறைந்ததால் பணவீக்கமானது 2013-14ல் 9.5 விழுக்காடாக இருந்தது 2018-19ல் 3.4 விழுக்காடாகக் குறைந்தது (Pulapre Balakrishnan 2022). இதில் அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் பணவீக்கம் குறையவில்லை என்றும் எரிபொருள் (பெட்ரோல்-டீசல்) விலை பன்னாட்டு அளவில் குறைவது என்பது பணக் கொள்கைக்கு அப்பாற்பட்ட புறக் காரணியாகும் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. பொருளாதார வளர்ச்சி 2013-14லிருந்து 2016-17 வரை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும் 2017-18ல் 1.3 விழுக்காட்டுப் புள்ளிகள் குறைந்தது. இது மேலும் 2018-19ல் 0.9 விழுக்காட்டுப் புள்ளிகள் குறைந்தது. இதற்கு முக்கியக் காரணம் பணமதிப்பிழப்பு நடைமுறைப்படுத்தப்பட்டதும், சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்பட்டதுமாகும். இதன் விளைவு வேலையின்மை அதிகரிக்கத் தொடங்கியது (வேலையின்மை 2015-16ல் 5 விழுக்காடும், 2017-18ல் 6.1 விழுக்காடும், 2018-19ல் 5.8 விழுக்காடுமாக இருந்தது). இத்துடன் தொழிலாளர் பங்கேற்பு ஆற்றலும் குறையத் தொடங்கியது. மோடி தொன்மைப் பொருளியல் அறிஞர்கள் கடைப்பிடித்த “குறைந்த பட்ச அரசு” என்ற உத்தியைப் பின்பற்றி பன்னாட்டு நிறுவனங்கள், பெருநிறுவனங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். 2008ல் ஏற்பட்ட உலகளாவிய நிதிச் சிக்கலிருந்து பல நாடுகள் முழுமையாக இயல்பு நிலைக்குத் திரும்பாததால் இந்தியாவின் அயல்நாட்டு வர்த்தகம் பெருமளவிற்குப் பாதிக்கப்பட்டிருந்தது. மோடி பதவி ஏற்ற அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு வேளாண்மையின் வளர்ச்சியானது பூஜ்யத்திற்குக் கீழ் சென்றது. வெளிநாட்டு முதலீடு வரத்து குறைந்தது, தேவை குறைந்தது. உற்பத்தியாளர்கள் பணமதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரியால் பாதிக்கப்பட்டு உற்பத்தியை நிறுத்தி இருந்தனர்.

வேளாண் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது மோடியின் முதல் கட்ட ஆட்சிக் காலத்தில் சராசரியாக 2.9 விழுக்காடு வளர்ச்சியடைந்தது இது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அடைந்ததைவிட (4.3 விழுக்காடு) குறைவாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய வேளாண் துறையின் செயல்பாடுகள் ஏற்ற இறக்கங்களுடன் காணப்படுவதற்கு முக்கியக் காரணம், இந்திய வேளாண்மை அதிக அளவில் பருவமழையினை சார்ந்திருப்பதாகும். 49 விழுக்காடு விளைநிலங்கள் மட்டுமே நீர்ப்பாசன வசதியைப் பெற்றுள்ளது. பருவமழையானது 2002ல் -19.2 விழுக்காடு குறைவான மழையும், 2004ல் -13.8 விழுக்காடும், 2009ல் -21.8 விழுக்காடும், 2014ல் -12 விழுக்காடும், 2015ல் 14 விழுக்காடு குறைவாக மழையினைப் பெற்றுள்ளது. இதனால் உணவு தானிய உற்பத்தியானது இக்கால கட்டங்களில் குறைந்திருந்தது. இந்தியச் சுதந்திரம் அடைந்து தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு ஆண்டுகள் வறட்சியினை 1965 மற்றும் 1966லும், 1986 மற்றும் 1987லும், 2014 மற்றும் 2015லும் எதிர் கொண்டுள்ளது. மோடி ஆட்சியில் இத்தகைய தொடர் இரண்டு ஆண்டுகள் வறட்சியினை சந்தித்தால் வேளாண்மை பாதிக்கப்பட்டது. இதைத் தவிர உள்நாட்டில் விலையில் எற்றத் தாழ்வு நிலவியதும், உலகளாவிய அளவில் வேளாண் விளைபொருட்களின் விலை வீழ்ச்சி அடைந்திருந்தது. இத்துடன் மின்னணு தேசிய வேளாண்மை சந்தை (e-NAM) மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் (Farmer Producer Company) போன்றவற்றால் வேளாண்மையின் லாபம் பாதிக்கப்பட்டது. அரசியல் கட்சிகளின் உறுதிமொழிகள் நிறைவேற்றாமல் இருந்தது, பண மதிப்பிழப்பு நடவடிக்கையினால் நீர்மமாகப் பணம் பயன்படுத்த முடியாமல் போனது போன்றவை வேளாண்மை வளர்ச்சிக்கான தடைகளாக இருந்தது. இதன் காரணமாக மோடி ஆட்சியின் முதல் கால கட்டத்தில் வேளாண் வளர்ச்சி குறைந்ததற்கான முக்கியக் காரணமாக அறியப்படுகிறது.

அசோகா குலாட்டி, ஸ்வேதா சைனி மற்றும் ரஞ்சனா ராய் (2021) என்பவர்களின் ஆய்வுப்படி A2 செலவை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால் நெல்லின் லாப விளிம்பானது (விழுக்காட்டில்) 2012-13 108 ஆக இருந்தது 2015-16ல் 90 ஆகக் குறைந்துள்ளது, கோதுமை 183லிருந்து 155 ஆகக் குறைந்துள்ளது, கரும்பு 183லிருந்து 153ஆகக் குறைந்துள்ளது, சோளம் 101லிருந்து 79ஆகக் குறைந்துள்ளது. பருப்பு வகைகள் மட்டும் அதிகரித்துள்ளது. இச்செலவுடன் சொந்த உழைப்பிற்கான பணமதிப்பு, சொந்த நிலத்தின் வாடகை மதிப்பு, சொந்த மூலதனத்திற்கான வட்டியும் சேர்த்துப் பார்த்தால் லாப விளிம்பானது எதிர்மறையில் காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ரிச்சா குமாரின் (2019) ஆய்வின்படி வேளாண் பயிர்களில் புதிய பூச்சிகளின் தாக்குதல் ஏற்படுவது, அதிக களைகள் உருவாகுவது, மண்ணின் வளத் தன்மை குறைந்து வருவது, ரசாயன உரத்திற்கு மாற்று நடைமுறையில் பயன்படுத்த முன்வராத நிலை, இடுபொருட்களின் விலைகள் கணிசமாக அதிகரித்திருப்பது, மானியம் மற்றும் கடன் நிவாரணம் தொடர்ந்து அதிகரித்திருப்பது போன்றவை அன்மைக் காலங்களில் வேளாண்மையில் காணப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார் (Richa Kumar 2019).

சுக்பால் சிங்கின் (2013) ஆய்வுப்படி 2003ஆம் ஆண்டு தரவுகளின்படி 40 விழுக்காடு இந்திய விவசாயிகள் வேளாண் தொழிலை விருப்பமின்றி தொடர்வதாகவும், இதற்கு முக்கியக் காரணம் குறைவான லாபம், அதிகமான இடர், வேளாண் தொழிலில் ஈடுபடுவதால் சமூகத்தில் குறைத்து மதிப்பீடு செய்யப்படுவது போன்றவை என்று குறிப்பிட்டுள்ளார். இவர்கள் நல்வாய்ப்புகளை எதிர்நோக்கியுள்ளனர், அவ் வாய்புகள் அமையப்பெற்றால் வேளாண்மையிலிருந்து வெளியேறத் தயாராக உள்ளனர் என்கிறார். மற்றொரு வகையில் வேளாண்-வேளாண் சாரா வருமானத்தின் இடைவெளியானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று இவ் ஆய்வு குறிப்பிடுகிறது. 1980களின் இடையில் இவ் இடைவெளியானது 1:3 என்று இருந்தது, 1990களின் மத்தியில் இது 1:4.8 என அதிகரித்தது, 2011-12ல் இது 1:3.12 என்று மாற்றமடைந்தது. வேளாண்மையில் வருமானம் இரு மடங்காக அதிகரிக்க வேண்டுமென்றால் 20 ஆண்டுகளுக்கு மேல் எடுத்துக்கொள்ளும் என்று புள்ளிவிவர ஆதாரங்களுடன் இவ் ஆய்வு தெரிவிக்கிறது (Sukhpal Singh 2018 2018).

இந்தியா இத்துவரையில்லாத காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டுள்ளது, விவசாயிகள் லாப விளிம்புநிலை குறைந்து வருவது என்பது வேளாண்மையின் இந்திய தற்போது எதிர்கொள்ளும் மிகப் பெரிய அறைகூவலாக உள்ளது. இந்தியாவில் சராசரி சாகுபடிப் பரப்பானது தொடர்ந்து குறைந்து வருகிறது இதற்கு முக்கியக் காரணம் குடும்ப அமைப்பின் பிரிகையால் நிலம் துண்டாடப் படுவதாகும். இந்த நிலை தொடர்ந்தால் விவசாய வருமானம் மேலும் குறையும். தற்போது அதிகரித்திருக்கும் வேளாண் உற்பத்தி போதுமான அளவில் இல்லை. இதனை மேலும் அதிகரிக்க அரசு அடிப்படையாக வேளாண் துறையுடன் தொடர்புடைய உள்கட்டமைப்பினை உருவாக்க வேண்டும், காலநிலை மற்றும் பருவநிலை மாற்றம் போன்றவற்றை உணர்ந்து இடுபொருட்களை மாற்றிப் பயன்படுத்தவேண்டும். இந்திய விவசாயிகள் வேளாண் செயல்பாடுகளில் எவ்வித திறன் மேம்பாட்டையும் பெற்றிருக்கவில்லை என்பதால் அவர்களின் திறன் மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும்.

-பேரா.பு.அன்பழகன்

இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @ 75 : தொடர் – 13 ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் (மன்மோகன் சிங்), புதுத் தாராளமயக் கொள்கையும்,  வேளாண்மையும் – பேரா.பு.அன்பழகன்

இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @ 75 : தொடர் – 13 ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் (மன்மோகன் சிங்), புதுத் தாராளமயக் கொள்கையும், வேளாண்மையும் – பேரா.பு.அன்பழகன்




இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி அரிதான வளர்ச்சியினைக் காண முடிந்தது, அடுத்த கால் நூற்றாண்டில் 3லிருந்து 4 விழுக்காடு வளர்ச்சியினையும், 20ஆம் நூற்றாண்டின் கடைசி கால் பகுதியில் 6 விழுக்காடு வளர்ச்சியினையும் கண்டது. இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் தொடக்க நிலையில் தொடர்ந்து விரைவான விரைவான வளர்ச்சியினைப் பெற்றிருந்தாலும் அத்துடன் சமுதாயத்தில் சமனின்மை என்ற நிலையும் காணப்பட்டது. 1980க்கு முன்பு அரசியல் மற்றும் கொள்கைகள் வாணிபச் சார்பு, வளர்ச்சிச் சார்பு என்ற இரண்டிற்கும் எதிரானதாக இருந்தது. ஆனால் 1980க்கு பின் வளர்ச்சிச் சார்பு மற்றும் வாணிபம் சார்பு நிலைக்கு ஆதரவான அரசியலும், கொள்கைகளும் உருவானது. 1990களில் சந்தைச் சார்பு நிலையினைப் பின்பற்றிய இந்தியா பன்னாட்டுப் பொருளாதாரத் தளங்களில் தடம் பதிக்கத் தொடங்கியது. வாணிபச் சார்பின் உத்திகள் உற்பத்தியாளர்களுக்கு ஆதரவானது ஆனால் சந்தத்தைச் சார்பு உத்திகள் நுகர்வோர்களுக்கான ஆதரவான நிலையுடையது. சந்தை சார்பு உத்திகள் போட்டியினை உருவாக்கி உற்பத்தியைப் பெருக்கும். இந்த நிலையில் பொருளாதார வளர்ச்சியும் உள்நாட்டு வாணிபம் மேம்பாடு அடையத் தொடங்கியது. அதே சமயம் இதன் விளைவுகள் அரசியல் பெருக்கத்தினால் வட்டார மற்றும் வகுப்புச் சமனின்மை அதிகரித்தது, மொழிசார் தேசியத்தின் தாக்கம் குறைந்தது, அரசியல் காரணங்களினால் நலன் சார் அணுகுமுறைகள் உருவாகியது.

இந்தியாவில் தனிக் கட்சி ஆதிக்கம் முடிவுற்று கூட்டணி ஆட்சிகள் ஒன்றி அரசியல் தொடர்ந்து நடைமுறையிலிருந்தது. 2004ல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியும் (ஐ.மு.கூட்டணி), பாரதிய ஜனதா கட்சித் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் (தே.ஜ.கூட்டணி) போட்டியிட்டது. தேர்தல் முடிவில் ஐ.மு.கூட்டணி 218 இடங்களிலும், தே.ஜ.கூட்டணி 181 இடங்களிலும் வெற்றிபெற்றது. இதனைத் தொடர்ந்து ஐ.மு.கூட்டணியானது மன்மோகன் சிங் தலைமையில் ஆட்சியமைத்தது. இக் கூட்டணி 2004 முதல் 2009 முடிய ஆட்சியில் இருந்தது. மீண்டும் 2009ல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் 262ல் ஐ.மு.கூட்டணியும், 159ல் தே.ஜ.கூட்டணியும் வெற்றிபெற்றது. இதனைத் தொடர்ந்து மீண்டும் மன்மோகன் சிங் தலைமையில் ஆட்சி அமைந்தது. இக் கூட்டணி ஆட்சி முழுமையாக பத்து ஆண்டுகள் மே 2009 முதல் மே 2014வரை நீடித்திருந்தது. பல மாநிலக் கட்சிகள் ஐ.மு.கூட்டணியில் இடம் பெற்றிருந்ததால் குறைந்தபட்ச பொது செயல் திட்டமானது உருவாக்கப்பட்டது. இதன்படி ஆண்டுக்கு 7 – 8 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி, வேளாண்மை, உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் வேலைவாய்ப்பினை உருவாக்குதல், முதலீட்டைப் பெருக்குவது, வேலைவாய்ப்பு திட்டம் மூலம் கூலியினை அளித்து குடும்பத்திற்கான சம்பாத்தியத்தை உருவாக்குவது, வேளாண்மை மற்றும் உள்கட்டமைப்புகள் மீது கவனம் செலுத்துவது போன்றவை இடம் பெற்றிருந்தது (GoI 2004).

ஐ.மு.கூட்டணி அரசின் ஜனரஞ்சக திட்டங்களான தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டம், தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம், சீர்திருத்தங்களை மறுசீரமைப்பிற்கு உட்படுத்தியது மற்றும் உள்கட்டமைப்புகள் மீது அதிக கவனம் செலுத்தியது போன்றவற்றைக் குறிப்பிடலாம் (Maitreesh Ghatak et al 2014). அதே சமயம் பொருளாதார வளர்ச்சியில் தடுமாற்றம், விலை உயர்வு, இந்தியப் பணம் வலுவிழந்தது, நிதிப் பற்றாக்குறை போன்றவை ஐ.மு.கூட்டணி அரசில் காணப்பட்டது. மார்ச் 7, 2005ல் பிரதமர் மன்மோகன் சிங் பன்னாட்டு உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தில் உரையாற்றும்போது, இரண்டாவது பசுமையை புரட்சியானது பழம், காய்கறிகளின் உற்பத்தியினைப் பெருக்குவதை நோக்கமாகக் கொண்டது என்றார். இதற்காகத் தோட்டக்கலை இயக்கம் (mission) உருவாக்கப்பட்டு நகர்ப்புற, கிராமப்புற ஏழைகள், கருவுற்ற தாய்மார்கள் பயனடையும் வகையில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புத் திட்டம் இந்தியத் திட்டக் குழுவினால் வடிவமைக்கப்பட்தைக் குறிப்பிட்டார். இரண்டாவது பசுமைப் புரட்சியானது, பொது-தனியார்-பங்கேற்புடன் நடத்தப்படும் என்றும், இதனை நடைமுறைப்படுத்த அமெரிக்காவுடன் ஒன்றிணைந்து செயல்படத் தீர்மானிக்கப்பட்டது என்றார். இதன்படி 1) நீர் ஆதாரப் பிரச்சனையை அடிப்படையாகக் கொண்டு உணவு உற்பத்தியை எதிர்கொள்ளும் வழிமுறைகளைக் காண்பது, 2) அறுவடைக்கும் பிந்தைய நிலைகளில் வீணாகும் விளைபொருட்களின் அளவினைக் குறைப்பது, சேமிப்புக் கிடங்குகளை மேம்படுத்துவது, பன்னாட்டு அளவில் விவசாயிகள் வேளாண் வாணிபத்தில் பங்கேற்பை ஊக்குவிப்பது போன்றவை முன்னெடுக்கப்பட்டது. இனி வரும் காலங்களில் இந்தியா உலக உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் உணவு உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சியினை மேற்கொள்ளத் திட்டங்கள் தீட்டப்பட்டது.

ஐ.மு.கூட்டணி அரசைப் பொறுத்தவரையில் இரண்டு முக்கிய அறைகூவல்களை எதிர்கொண்டது. அவை, 1) பொருளாதார அறைகூவல்கள் 2) அரசியல் அறைகூவல்கள் ஆகும். பொருளாதார அறைகூவல்களைப் பொருத்த அளவில் உள்கட்டமைப்புகளுக்காக விளைநிலங்களைக் கையகப்படுத்துதலின்போது பெரும் எதிர்ப்புகளை அரசு எதிர்கொண்டது. உயர் பொருளாதார வளர்ச்சியானது திறனுடைய தொழிலாளர்களின் தேவையினை அதிகரித்தது. ஆனால் அடிப்படையில் இந்தியாவால் குறைந்த திறனுடையவர்களையே உருவாக்கிக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.மு.கூட்டணி அரசானது தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியது. ஆனால் அதில் பல்வேறு குளறுபடிகள் காணப்பட்டது. ஏழைகளுக்கான திட்டமாக இது இருந்தாலும் அரசியல் தலையீடுகள் அதிகமாக இருந்தது. அரசியல் ரீதியாகக் காங்கிரஸில் இரட்டைத் தலைமை காணப்பட்டது. பா.ஜ.கவின் இந்துத்துவ கொள்கை வேரூன்றி இருந்தது. காங்கிரஸ் தலைமுறை, வாரிசு அரசியல் பெரும் விவாதப் பொருளாக மாறியது. அரசியல் ரீதியாகச் செயல்பாடுகள் மக்களுக்கு எடுத்துச் செல்வதில் தோய்வு காணப்பட்டது. நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு போன்றவற்றில் ஊழல் நடந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.

2004-05ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்விக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டது. 2005-06ல் தேசிய தோட்டக்கலை இயக்கம் செயல்படுத்தப்பட்டது. இதன்படி பழங்கள், காய்கறிகள், மருத்துவத் தாவரங்கள், வாசனைப் பொருள் உற்பத்தித் தாவரங்களை விளைவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. 2005-06ல் ஒன்றிய அரசின் உதவியுடன் வேளாண் சீர்திருத்த விரிவாக்கத்திற்கு மாநில அரசுகள் திட்டம் செயல்படுத்த நிதி உதவி அளிக்கப்பட்டது. 2005-06ல் வேளாண்மைக்கான நடைமுறை ஆராய்ச்சி முன்னோடித் திட்டத்திற்கான தேசிய நிதி உருவாக்கப்பட்டது. இத்துடன் இதே ஆண்டில் தேசிய வேளாண் கண்டுபிடிப்புகளுக்கான திட்டம் தொடங்கப்பட்டது. வேளாண் சந்தை படுத்துதலுக்கு 2003 வேளாண் உற்பத்தி சந்தை குழு சட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. 2006ல் பாரத் நிர்மாண் என்ற கால வரம்பு (2005 – 2009) திட்டம் அறிவிக்கப்பட்டது. விரைவுபடுத்தப்பட்ட நீர்ப்பாசன நன்மையளிக்கும் திட்டம், பிராதான மந்திரி கிராம சாலை திட்டம், விரைவுபடுத்தப்பட்ட கிராமப்புற குடிநீர் வழங்கல் திட்டம், இந்திரா வீட்டு வசதி திட்டம், ராஜீவ் காந்தி கிராம மின் இணைப்பு திட்டம், கிராம பொது தொலைப்பேசி போன்றவற்றை உள்ளடக்கி ஒரு குடையின் (பாரத் நிர்மாண்) கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டது. நீர் ஆதாரம். வெள்ள மேலாண்மை மற்றும் மண் அரிப்பு தடுப்பு திட்டம் மார்ச் 2005ல் தொடங்கப்பட்டது. நீர்த் தேக்கம் பழுது பார்த்தல், மறுசீரமைப்பது, நீர்த் தேக்கத்தை மீண்டும் பெறுவது போன்றவை இந்தியாவில் 16 மாவட்டங்களில் 700 நீர்த் தேக்கங்கள் வழியாகச் செயல்படுத்தப்பட்டது. இதனால் 20000 ஹெக்டேர் விளைநிலங்கள் பயனடைந்தது (GoI 2005).

இந்திய விவசாயிகள், நிதி நிறுவனங்கள், கூட்டுறவு, தனிநபர், உறவினர்கள்;, முகவர்கள், வண்டிக்காரர்கள், வியாபாரிகள் போன்ற ஆதாரங்களின் வழியாக அதிக அளவிற்குக் கடன் பெற்று வேளாண் சாகுபடி செய்பவர்களாக இருக்கின்றனர். 1951-61ல் கிராமப்புறக் கடனில் 75 விழுக்காடு முறைசாரா வழியாக அதிக வட்டிக்கு வண்டிக்காரர்களிடம் பெற்றிருந்தனர். இதனைப் போக்க 1969, 1980ல் இந்திய அரசு வங்கிகளை தேசியமயமாக்கியது. இதன் விளைவு 1991ல் இவ்வகைக் கடன் 25 விழுக்காட்டிற்குக் கீழ் குறைந்தது. ஆனால் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டபின் முறைசார் (நிறுவனக் கடன்) திடீரென வீழ்ச்சியடைந்தது. 1992ல் நரசிம்மம் குழுவின் பரிந்துரையான வேளாண்மைக்கு “இலக்கின் முன்னுரிமை அடிப்படையில் கடன் வழங்குதல்” பரிந்துரைக்கப்பட்டதால், விவசாயிகள் அதிக வட்டிக்கு முறைசாரா வழியாக மீண்டும் கடன் பெறத் தொடங்கினர். அரசு அளித்த வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்த பட்ச ஆதார விலை அவர்களின் சாகுபடி செலவை எதிர்கொள்ள முடியாத நிலையே இருந்தது. இதனால் விவசாயிகள் மேலும் அதிகமாகக் கடன் பெறத் தொடங்கினர். எனவே, ஐ.மு.கூட்டணி அரசானது 2004-05 முதல் 2007-08 முடிய வேளாண் கடன் வழங்கலை இரட்டிப்பு ஆக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. 2003ல் வேளாண் குடிகளில் கடன்பட்டோர் 48.6 விழுக்காடாக இருந்தது 2013ல் 51.9 விழுக்காடாக அதிகரித்தது. இக் கடன் நிலை மாநிலங்களுக்கிடையே பெருத்த வேறுபாட்டுடன் காணப்பட்டது. கடன்பட்ட விவசாயிகளின் பங்கானது உச்ச அளவாக ஆந்திரப் பிரதேசத்தில் 93 விழுக்காடாகும். தேசிய அளவில் வேளாண் குடிகளில் கடன் பெற்றோரில் 60 விழுக்காட்டினர் நிறுவனம் சார் கடனாளிகள் ஆவார்கள். விவசாயப் பணிகள் மேற்கொள்ளக் குறைந்த வட்டியில் குறுகிய கால கடன் வழங்க 1998ல் கிசான் கிரெடிட் அட்டை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கியானது உள்ளடக்கிய நிதி முறையினைப் பின்பற்றியதால் ஐ.மு.கூட்டணி ஆட்சியின் இறுதியில் (2013ல்) விவசாயிகளுக்கு 392 லட்சம் கடன் அட்டைகள் வழங்கப்பட்டது. இவர்கள் பெறும் கடனைச் சரியான தவணைக்குள் திருப்பிச் செலுத்தப்பட்டால் பூஜ்ய வட்டி என்று அறிவிக்கப்பட்டது. அரசின் விவசாயிகளுக்குக் கடன் வழங்கும் திட்டம் சீரிய முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டதன் விளைவு 2003ல் வேளாண் குடிகளின் சராசரிக் கடன் ரூ.12885லிருந்து 2013ல் ரூ.47000ஆக அதிகரித்தது. இந்த வளர்ச்சியானது 375 விழுக்காடாக இருந்தது குறிப்பிடத்தக்கது (Sher Singh Sangwan 2015).

2008-09ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் விவசாயிகள், நெசவாளர்களின் கடன் ரூ.6000 கோடி தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் 3 கோடி சிறு, குறு விவசாயிகள் பயனடைந்தனர். தேசிய விவசாயக் கொள்கை செப்டம்பர் 2007ல் தேசிய விவசாயக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. 2007-08ல் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகவர் விரிவாக்கத் திட்டம் 300 மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது. 2007-08ல் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் துவக்கப்பட்டது. இதன்படி வேளாண் உற்பத்தித் திறனை அதிகரிக்கக் கோதுமை, நெல், பருப்பு உற்பத்தியை 10 மில்லியன் டன், 8 மில்லியன் டன், 2 மில்லியன் டன் என்று முறையே 11வது திட்ட கால முடிவிற்குள் அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தேசிய தோட்டக்கலை இயக்கம் மே 2005ல் தொடங்கப்பட்டது. இதன்படி தோட்டக்கலை வட்டார அணுகுமுறையின் அடிப்படையில் உற்பத்தியினை அதிகரிப்பது, ஊட்டச்சத்து உறுதியினை சாத்தியமாக்குவது, வேளாண் குடிகளின் வருமானத்தை உயர்த்துவது போன்றவை முன்னெடுக்கப்பட்டது. மார்ச் 2005ல் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகவர் திட்டம் தொடங்கப்பட்டது. இதன்படி மாநில அரசுகளுக்கு தொழில்நுட்ப விரிவாக்கத்திற்கு உதவி செய்தது. மார்ச் 2006ல் தெளிப்பு நீர் மற்றும் சொட்டு நீர்ப் பாசனத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன்படி நாடு முழுவதும் 3.4 லட்சம் ஹெக்டேர் பயனடைந்தது. அக்டோபர் 2006ல் தேசிய மூங்கில் இயக்கம் தொடங்கப்பட்டது இதன்படி மூங்கில் உற்பத்தியினை விளைவித்து வேலைவாய்ப்பை உருவாக்க முனைந்தது. 1996-97ல் தொடங்கப்பட்ட விரைவுபடுத்தப்பட்ட நீர்ப்பாசன நன்மையளிக்கும் திட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்து டிசம்பர் 2006 முதல் புதிய வழிகாட்டுதலுடன் நடைமுறைப்படுத்தப்பட்டது. தேசிய நீர்த் தேக்கங்கள் பழுதுபார்த்தல், மறுசீரமைத்தல், புதுப்பித்தல் திட்டம் 2005ல் ரூ.300 கோடியில் தொடங்கப்பட்டது. தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் ஆகஸ்ட் 2007ல் தொடங்கப்பட்டது. தேசிய விவசாய மேம்பாட்டுத் திட்டம் ஆகஸ்ட் 2007ல் வேளாண் வளர்ச்சியினை அதிகரிக்க ரூ.2500 கோடி செலவில் தொடங்கப்பட்டது. எண்ணெய் வித்துக்களுக்கான தொழில்நுட்ப இயக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டதன் விளைவு 1980கள் மற்றும் 1990களின் முற்பகுதியில் விளைச்சல் விரைவான அதிகரிப்பை அடைந்தது. ஆனால் 1990களில் வர்த்தகக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் சமையல் எண்ணெய் அதிகமாக இறக்குமதியானது இதனால் உள்நாட்டில் எண்ணெய் வித்துக்கள் பயிரிடும் விவசாயிகள் இழப்பினை எதிர்கொண்டனர், சாகுபடி செய்யும் விளைநிலப் பரப்பும் குறையத் தொடங்கியது. மீண்டும் 2001ல் இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் வித்துக்கள் மீது வரி விதித்ததால் சமையல் எண்ணெய் விலை உயர்வடைந்தது. இதன் தொடர்ச்சியாக விவசாயிகள் எண்ணெய்வித்துக்கள் சாகுபடி செய்ய ஆர்வம் காட்டினர். 2010-11ல் இறக்குமதிக்கான சமையல் எண்ணெய் மீது வரிவிதித்தது இதனால் உள்நாட்டில் எண்ணெய் வித்துக்களின் சாகுபடிப் பரப்பு அதிகரித்தது.

Source: Government of India (2016): Indian Public Finance Statistics 2015-2016,” Ministry of Finance, Department of Economic Affairs, Economic Division.

Source: GBGA (2013) “How has the Dice Rolled: Response to Union Budget 2013-14,” Centre for Budget and Governanace accountability, New Delhi, www.cbgaindia.org.

ஐ.மு.கூட்டணி அரசானது கிராமப்புற மேம்பாட்டிற்குப் பல்வேறு திட்டங்களை நடைமுறைப் படுத்தியது. மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி சட்டம், பிரதான மந்திரி அவாஸ் யோஜனா, பிரதான மந்திரி கிராம சதக் யோஜனா, தேசிய சமுதாய உதவி திட்டம், தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கம் போன்றவை கிராமப்புற மேம்பாட்டிற்கு மன்மோகன் சிங் அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்டது (Amit Basole 2017). ராஷ்டிரிய கிரிஷ் விகாஸ் யோஜனா திட்டம் 2007ஆம் ஆண்டு விவசாயம் சார்ந்த துறைகளிலிருந்து வருகின்ற வருமானத்தை ஆண்டுக்கு 4 விழுக்காடு அளவிற்கு உயர்த்த கொண்டுவரப்பட்டது. இதற்கான ரூ.25000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. விதை, உரம், தோட்டக்கலை, வேளானமை இயந்திரமயமாக்கல், வேளாண் விரிவாக்கம், பயிர்ச் சாகுபடி, சந்தைப் படுத்துதல், பரிசோதனை ஆய்வகம், நீர்ப்பாசனம், வேளாண் ஆராய்ச்சி, நீர்த் தேக்கம் மற்றும் கூட்டுறவு போன்றவற்றின் மீதான மேம்பாட்டிற்கு கவனம் செலுத்துவதற்காக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. கிராமப்புறங்களில் தொடர் வேலை என்பது இயலாத நிலையினை உணர்ந்து தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதியளிப்பு சட்டம் செப்டம்பர் 2005ல் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இத் திட்டம் பிப்ரவரி 2, 2006ல் நாட்டில் முதல்கட்டமாக 200 மாவட்டங்களில் ரூ.11300 கோடி ஒதுக்கீட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டது. 2009ல் இத்திட்டத்தை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இத்திட்டம் கிராமப்புறத்தில் திறன் குன்றிய உழைப்பாளர்களுக்கு ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு ஆண்டுக்கு 100 நாள் வேலைவாய்ப்பினை அளிப்பதை நோக்கமாக்க கொண்டது. இத் திட்டத்தினால் கிராமப்புற உள்கட்டமைப்பு வலுப்படுத்தக் குறிப்பாக நீர் ஆதாரங்களை மேம்படுத்துவதை முதன்மைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தது. இத் திட்டத்தில் சம்பூர்ணா கிராமின் ரோஜ்கர் யோஜனா திட்டமும், உணவுக்கு வேலைத் திட்டமும் ஒன்றாக இணைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. 2007-08ல் இத் திட்டம் 330 மாவட்டங்களிலும், 2008-09ல் 596 மாவட்டங்களிலும் விரிவுபடுத்தப்பட்டது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் வழியாக ஐ.மு.கூட்டணி ஆட்சி காலத்தில் 2006-07ல் 90.5 கோடி மனித வேலைநாட்கள் உருவாக்கப்பட்டது. 2009-10ல் இது 283.6 கோடியாகவும், 2013-14ல் இது 220.4 கோடியாகவும் அதிகரித்தது (Ashok Pankaj 2017). இத்திட்டத்தைக் கிராமப்புற பஞ்சாயத்துகள் வழியான நடைமுறைப்படுத்தப்பட்டது. ஐ.மு.கூட்டணி அரசானது 2004ல் முதல் முறையாக பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தைத் துவக்கி கிராமப்புற மேம்பாட்டிற்கும் தனிக் கவனம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது (GBGA 2009). கால்நடைகள் வேளாண்மை வளர்ச்சிக்கும், கிராமப்புற வருமான பெருக்கத்திற்கும் முக்கிய பங்காற்றுவதால் 2013-14ல் தேசிய கால்நடை இயக்கம் ரூ.307 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது. 2014ல் ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டு இயக்கம் தொடங்கப்பட்டது. இதன்படி பழங்கள், காய்கறிகள், காளான், பூக்கள், நறுமணப் பொருட்கள், மரங்கள் போன்றவை வளர்ப்பதாகும். இதன்படி 11வது திட்டக் காலத்தில் இவற்றை பயிரிட 23.4 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்களை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டது. 2012ல் சி.ரங்கராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட இந்தியாவின் சர்க்கரை துறை முறைப்படுத்துதல் அறிக்கையின்படி கரும்பு விவசாயிகள் பயனடையும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதில் முக்கியமானது, சர்க்கரையைக் கொள்முதல் செய்து பொது விநியோக முறையில் மக்களுக்கு வழங்கப்படவேண்டும் என்பதாகும். 2010-11ல் இந்தியாவின் கிழக்குப் பகுதியில் பசுமைப் புரட்சியை நடைமுறைப்படுத்த ரூ.400 கோடி 2010-11 மற்றும் 2011-12ஆம் ஆண்டுகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது, இது 2012-13ல் ரூ.1000 கோடியாக அதிகரித்தது (GoI 2013).

விவசாயிகள் தற்கொலைகள் அதிகரித்து வருவதைத் தடுப்பதற்காகப் பேரா.ராதாகிருஷ்ணன் தலைமையில் கிராமப்புற கடன் நிலைக்கான வல்லுநர் குழு 2006ல் அமைக்கப்பட்டது.

இக்குழு ஜூலை 2007ல் தனது அறிக்கையை அரசுக்குச் சமர்ப்பித்தது. அதில் அளவுக்கு அதிகமான மக்கள் வேளாண்மையினைச் சார்ந்திருக்கின்றனர், கிராமப்புறம் தொடர்ந்து பெருமளவிற்கு பன்முகமடையாமல் உள்ளது, தலா வேளாண் சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது, பாசனத்திற்கான தண்ணீரின் தேவை அதிகரித்து வருகிறது, வட்டார ஏற்றத் தாழ்வு அதிகரிப்பு, கடன் இருப்பில் பற்றாக்குறை, வேளாண்மையின் மீதான பொதுத் துறை முதலீடு போதுமான அளவிற்கு இல்லாமல் உள்ளது, குறைவான தொழில்நுட்ப பயன்பாடு, சுற்றுப்புறச் சூழல் பாதிப்படைந்திருப்பது போன்ற அறைகூவல்களை இந்திய வேளாண்மை சந்திக்கிறது என்று குறிப்பிட்டுள்ளது. இந்த அடிப்படையில் பிரதம மந்திரி தொகுப்பை நாட்டில் 31 மாவட்டங்களில் ரூ.28000 கோடிக்கு அடுத்த மூன்றாண்டுகளுக்கு நடைமுறைப்படுத்தியது (GoI 2007). 2007-08ல் கிராமப்புறத்தில் உள்ள நிலமற்ற குடும்பங்களுக்கான சமூகப் பாதுகாப்பு திட்டமான ஆம் ஆத்மி பீமா யோஜனா தொடங்கப்பட்டது. வேளாண் துறையின் வளர்ச்சி ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. 2009ல் தென்மேற்கு பருவமழை பற்றாக்குறை, 2010-11ல் சில மாநிலங்களில் வறட்சி, 2012-13ல் தாமதமான பருவ மழை போன்ற நிலை நிலவியது. அதே சமயம் எப்போதும் இல்லாத அளவாக 2011-12ல் உணவு தானியம் 259.32 மில்லியன் டன் உற்பத்தியானது. எட்டாவது திட்ட காலத்தில் வேளாண் வளர்ச்சி சராசரியாக 4.8 விழுக்காடும், 9வது திட்டத்தில் 2.5 விழுக்காடும், 10வது திட்டத்தில் 2.4 விழுக்காடும், 11வது திட்ட காலத்தில் 3.6 விழுக்காடும் இருந்தது (GoI 2013) எனவே நீடித்த வேளாண் வளர்ச்சியினைக் கருத்தில் கொண்டு 12வது திட்டக் காலத்தில் ஆண்டுக்கு 4 விழுக்காடு வேளாண் வளர்ச்சியினை உறுதிசெய்ய முடிவெடுத்தது. ஆனால் இத்திட்டம் நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு ஐ.மு.கூட்டணி ஆட்சி முடிவுற்றதால் இதனை நடைமுறைப்படுத்த இயலவில்லை.

இந்தியாவில் பொருளாதாரச் சீர்திருத்த நடைமுறைக்குப் பிந்தைய காலங்களில் பல முதன்மைப் பயிர்களின் உற்பத்தியும், உற்பத்தித் திறனும் 1980களில் அதிகரித்திருந்தது. ஆனால் 2001 – 2010ஆம் ஆண்டுகளுக்கிடையே பருப்பு மற்றும் பருத்தியின் உற்பத்தியும், உற்பத்தித் திறனும் அதிகரித்தது. நெல், சர்க்கரை, கோதுமை உற்பத்தியும், உற்பத்தித் திறனும் 1980களுடன் ஒப்பிடும்போது 1990களில் அதிகரித்திருந்தது. பருத்தி உற்பத்தி 2000-01 மற்றும் 2009-10ஆம் ஆண்டுகளுக்கிடையே அதிக வளர்ச்சியை அடைந்ததற்கு முக்கியக் காரணம் பி.டி.பருத்தி ரக தொழில்நுட்பமாகும். ஆனால் இதனைச் சாகுபடி செய்ய அதிக செலவும், இடரும் இருந்ததால் 2010-11 மற்றும் 2015-16ல் உற்பத்தி வளர்ச்சி, உற்பத்தித் திறன் குறைந்தது.

அட்டவணை: வேளாண்மை செயல்பாடுகள் (விழுக்காடு)

விவரங்கள்1981-82 முதல் 1989-90 வரை1990-91 முதல் 1999-00 வரை2000-01 முதல் 2009-10 வரை2010-11 முதல் 2013-14 வரை
வேளாண் வளர்ச்சி 2.92.82.42.1
மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி4.75.36.83.7
மொத்த நீர்பாசன பரப்பு வளரச்சி2.072.281.111.36
உணவு தானிய உற்பத்தி வளர்ச்சி2.81.791.030.66

Source: Shantanu De Roy (2014): “Economic Reforms and Agricultural Growth in India,” Economic and Political Weekly, Vol 52 (9). Pp 67-72.

 

அட்டவணை: ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் வேளாண்மையின் போக்கு

விவரங்கள்2003-042004-052005-062006-072007-082008-092009-102010-112011-122012-132013-14
உண்மை வேளாண் வளர்ச்சி9.00.25.14.25.80.11.07.73.61.83.7
ஜிடிபி-க்கு வேளாண்மையின் பங்கு20.319.018.317.416.815.814.714.514.113.713.9
வேளாண்யின் மூலதன ஆக்கம் (ஜிடிபி-யில் மூ)2.12.12.22.22.32.72.62.32.4NANA
உணவு தானிய உற்பத்தி (மி.ட)213198209217231236218245259255266
தலா உணவு தானிய இருப்பு (கிராம்)438463422445443436444437454450401
குறைந்த பட்ச ஆரவு விலை(ரூ)

நெல் (சாதாரணம்)

கோதுமை

550

630

560

540

570

700

620

850

745

1000

900

1080

1000

1000

1000

1170

1080

1285

1250

1350

NA

NA

Source: GoI (2017): “Economic Survey 2016-17,” Ministry of Finance, Government of India. 

 

அட்டவணை: ஐக்கிய முற்போக்கு கூட்டணி, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒப்பீடு

ஆண்டு சராசரிதேஜகூ (1998-04)ஐமுகூ-I (2004-09)ஐமுகூ-II (2009-13)ஐமுகூ

(2004-13)

உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி  (%)5.98.07.07.6
பொதுப் பணவீக்கம் (தொழிற்சாலைப் பணியாளர்கள்) (%)5.46.110.48.1
உணவுப் பணவீக்கம் (தொழிற்சாலைப் பணியாளர்கள்) (%)4.27.011.69.0
நிதிப்பற்றாக்குறை (ஜிடிபி யில் % ஆண்டுக்கு)5.53.95.54.6
அந்நியச் செலாவணி  வரத்து (பில்லியன் டாலர்)2.8515.4416.1920.22
வேளாண்மைக்கான விவசாயக் கடன் வளரச்சி (%)135.97140.93132.90*307.81*
உணவு தானிய உற்பத்தி (%)202218244229.6

குறிப்பு: * 2011-12 வரை

Source: Maitreesh Ghatak, Parikshit Ghosh, Ashok Kotwal (2014): “Growth in the Time of UPA – Myths and reality,” Economic and Political Weekly, Vol 49 (16), pp 34-43 and 

http://www.rgics.org/sites/default/files/Facts-NDA-UPA.pdf.

Source: Shantanu De Roy (2014): “Economic Reforms and Agricultural Growth in India,” Economic and Political Weekly, Vol 52 (9). Pp 67-72.

ஒப்பீட்டு அளவில் பொருளாதார வளர்ச்சியானது தே.ஜ.கூட்டணி ஆட்சியில் 5.9 விழுக்காடாக இருந்தது, ஐ.மு.கூட்டணி ஆட்சியின் முதல் காலகட்டத்தில் 8.0 விழுக்காடாகவும், இரண்டாவது காலகட்டத்தில் 7.0 விழுக்காடாகவும், ஒட்டுமொத்தமாக 7.6 விழுக்காடாகவும் இருந்தது. பொருளாதார வளர்ச்சியானது தே.ஜ.கூட்டணி ஆட்சியைவிட ஐ.மு.கூட்டணி அரசின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்தது. ஆனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் கடைசி ஆண்டான 2012-13ல் பொருளாதார வளர்ச்சி அதிக அளவில் குறைந்தது. தொழில் மற்றும் சேவைத் துறையின் வளர்ச்சியானது ஐ.மு.கூட்டணி ஆட்சிக்காலத்தில் தே.ஜ.கூட்டணியின் ஆட்சியைவிட செயல்பாடுகள் சிறந்து காணப்பட்டது. ஆனால் உணவு பணவீக்கம், தே.ஜ.கூட்டணி அரசியைவிட (4.2 விழுக்காடு) ஐ.மு.கூட்டணி அரசில் (9.0 விழுக்காடு) அதிகமாக இருந்தது. ஆனால் அந்நியச் நேரடி முதலீடானது தே.ஜ.கூட்டணி ஆட்சியில் ரூ.2.35 பில்லியன் டாலராக இருந்தது ஐ.மு.கூட்டணி ஆட்சியில் 20.22 பில்லியன் டாலராக அதிகரித்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மானியமானது தே.ஜ.கூட்டணி ஆட்சியில் 1.6 விழுக்காடாக இருந்தது ஐ.மு.கூட்டணி ஆட்சியில் இது 2.6 விழுக்காடாக அதிகரித்தது. இதுபோல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடன் அளவு தே.ஜ.கூட்டணி ஆட்சியில் 50 விழுக்காடாக இருந்தது ஐ.மு.கூட்டணி ஆட்சியில் 61 விழுக்காடாக அதிகரித்தது. ஐ.மு.கூட்டணி அரசு பதவி ஏற்றபோது வேளாண்மை மீதான பொது-தனியார்-பங்கேற்பு முதலீடானது 2003-04ல் 20:80ஆக இருந்தது 24:76 என்று 2013-14ல் மாற்றம் அடைந்தது. மொத்த வேளாண்மைக்கான முதலீட்டில் பொதுத்துறை 20 முதல் 25 விழுக்காடு என்ற வீச்சில் 2003-04 மற்றும் 2013-14ஆம் ஆண்டுகளுக்கிடையே இருந்தது. நீர்ப்பாசனமும் உணவு உற்பத்தியும் நேர்மறைத் தொடர்புடையது. 1980ல் நீர்பாசனப் பரப்பளவு அதிகமாக அதிகரித்திருந்தது ஆனால் 1990களில் இது குறைவான அளவிற்கே உயர்ந்தது. இதற்கு முக்கியக் காரணம் பொதுத் துறை முதலீடு நீர்ப்பாசனத்திற்குக் குறைவான நிதி ஒதுக்கீடு செய்ததாகும். மொத்த உற்பத்தியில் நீர்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டிற்கு 2005-06ல் 0.8 விழுக்காடு ஒதுக்கீடு செய்யப்பட்டது 2013-04ல் இது 0.6 விழுக்காடாகக் குறைந்தது. இது போல் வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்விக்கான ஒதுக்கீடு 1998-99ல் ஜி.டி.பியில் 0.44 விழுக்காடாக இருந்தது 2011-12ல் இது 0.32 விழுக்காடாகக் குறைந்தது. இதே ஆண்டுகளில் வேளாண் விரிவாக்கத்திற்கு 0.15 விழுக்காடாக இருந்தது 0.05 விழுக்காடாகக் குறைந்தது (Shantanu De Roy 2017).

உணவு விலையானது தே.ஜ.கூட்டணி ஆட்சியில் மெதுவாக அதிகரித்தது ஆனால் ஐ.மு.கூட்டணி ஆட்சியில் இது வேகமாக அதிகரித்துக் காணப்பட்டது. குறைந்த பட்ச ஆதரவு விலையானது ஐ.மு.கூட்டணி காலத்தில் முன்பு எப்போதும் இல்லாத அளவில் 2005-06 மற்றும் 2013-14ஆம் ஆண்டுகளுக்கிடையே நெல்லுக்கு 11.3 விழுக்காடும், கோதுமைக்கு 10.1 விழுக்காடும், கரும்புக்கு 12.9 விழுக்காடும், பருத்திக்கு 9.2 விழுக்காடும் உயர்த்தி வழங்கப்பட்டது (Krishnasamy et al 2015). மேலும் இக் காலகட்டத்தில் 650 லட்சத்திற்கு மேல் விவசாயிகள் கடன் பெற்றனர். உணவிற்கான மானியம் மூன்று மடங்கு அதிகரித்தது. உணவுப் பாதுகாப்பு சட்டத்தின்படி 35 கிலோ உணவு தானியம் ஏழைகளுக்கு வழங்கப்பட்டது. ஐ.மு.கூட்டணியில் தலா வருமானம் மூன்று மடங்கு அதிகரித்தது. இரண்டு லட்சம் கி.மீட்டருக்குமேல் கிராமப்புற சாலைகள் கட்டமைக்கப்பட்டது. வறுமையானது ஆண்டுக்கு 2 விழுக்காடு குறைந்தது (Govardhana Naidu 2016). ஐ.மு.கூட்டணி ஆட்சிக்காலத்தில் வேளாண் வருமானம் 2004-05 மற்றும் 2011-12ஆம் ஆண்டுகளுக்கிடையே 5.36 விழுக்காடு அதிகரித்தது. குறிப்பாக வேளாண் சாகுபடியாளர்களின் வருமானம் 7.29 விழுக்காடு இதே காலகட்டத்தில் அதிகரித்திருந்தது (Ramesh Chand et al 2015).

ஐ.மு.கூட்டணி அரசில் எரிசக்தி உருவாக்கம், சாலைக் கட்டமைப்பு, ரயில் கட்டமைப்பு, கனிம வளங்களை எடுத்தல், தொலைத் தொடர்பு விரிவாக்கம் போன்ற முக்கியக் கட்டமைப்பின் மீது முதலீடுகள் செய்யப்பட்டது. மொத்த உள்நாட்டு உற்பதியல் உள்கட்டமைப்பின் மீதான முதலீடு 4.76 விழுக்காடாக தே.ஜ.கூட்டணியில் இறுதி காலமான 2003-04ல் இருந்தது 2008-09ல் 7.32 விழுக்காடாகவும், 2010-11ல் 8.4 விழுக்காடாகவும் ஐ.மு.கூட்டணி ஆட்சியில் அதிகரித்தது. ஐ.மு.கூட்டணி ஆட்சிக் காலத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உள்கட்டமைப்பின் மீதான முதலீடு 7-8 விழுக்காடு அளவிலிருந்தது ஆனால் இது தே.ஜ.கூட்டணி ஆட்சியில் 5 விழுக்காடாக இருந்தது குறிப்பிடத்தக்கது. உள்கட்டமைப்பை ஏற்படுத்த அதிக அளவிலான வேளாண் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. இதனால் விவசாயிகள், கிராமப்புற ஏழைகள், பழங்குடியினரிடையே பெரும் கொந்தளிப்பு உருவானது. அதே நேரம், ஏழைகள் பெருமளவிற்குக் குறைந்தனர். 1993-94 மற்றும் 2004-05ஆம் ஆண்டுகளுக்கிடையே ஆண்டுக்கு 0.74 விழுக்காடு ஏழ்மை குறைந்தது ஆனால் இது 2004-05 மற்றும் 2011-12ஆம் ஆண்டுகளுக்கிடையே ஆண்டுக்கு 2.18 விழுக்காடு ஏழைகள் குறைந்தனர், குறிப்பாக இது கிராமப்புறங்களில் 0.75 விழுக்காடு மற்றும் 2.32 விழுக்காடு என்று முறையே குறைந்தது குறிப்பிடத்தக்கது (Maitreesh Chatak et al 2014).

பொருளாதார சீர்திருத்தமானது வேளாண்மையில் சிறிய அளவில் பயிர் தொழிலில் ஈடுபட்டவர்களைப் பெரிதும் பாதித்து. கிராமப்புற உள்கட்டமைப்பு மீது பொதுத்துறை முதலீடு குறைந்தது, குறிப்பாக நீர்ப்பாசனம், வேளாண் ஆராய்ச்சி, வேளாண் விரிவாக்கம், சிறு விவசாயிகளுக்குக் கொடுக்கும் கடன் குறைந்தது போன்றவை வேளாண் செயல்பாட்டை வலுவிழக்கச் செய்தது. 2011-12ல் வேளாண்மையை 59 விழுக்காடு ஆண் உழைப்பாளர்களும், 75 விழுக்காடு பெண் உழைப்பாளர்களும் சார்ந்திருந்தனர். உயர் பொருளாதார வளர்ச்சி கிராமப்புற வறுமையைக் குறைக்கக் கூடியதாகும். வேளாண் வளர்ச்சி 2விழுக்காட்டிலிருந்து 4 விழுக்காடு வரை அதிகரித்து இத்துடன் பொருளாதாரமும் 9 விழுக்காடு அதிகரித்தால் வேளாண் சார் துறைக்கும் வேளாண் சாரத் துறைக்கும் உள்ள வருமான இடைவெளியினை குறைக்கும் என்று திட்டக்குழு (2006ல்) கணித்துள்ளது. வேளாண்மையின் வளர்ச்சியானது 1981-82 முதல் 1989-90க்கும் 2010-11 முதல் 2013-14க்குமிமையே அதிக அளவில் குறைந்துள்ளது. வேளாண்மையின் முக்கியப் பயிர்கள் சீர்திருத்தக் காலங்களுக்குப்பின் பொதுவாகக் குறைந்த அளவு வளர்ச்சி காணப்படுகிறது (Shantanu De Roy 2017).

இந்தியப் பொருளாதாரத்தை பொருத்த அளவில் வேளாண்மையினை உள்ளடக்கிய முதன்மைத் துறையானது மற்ற இரு துறைகளான தொழில் மற்றும் சேவையைவிட மிகவும் பின்தங்கியதாகவும், அதிக பாதிப்பினை உடையதாகவும் கடந்த பல ஆண்டுகளாகத் தொடர்கிறது. அதே சமயம் வேளாண்மை சார் வேiவாய்ப்பு மற்றும் உற்பத்தியும் திடமான முன்னேற்றம் கண்டுள்ளது. கிராமப்புறங்களில் உள்ள வேளாண் குடிகள் 70 விழுக்காட்டினர் போதுமான வருமானமின்றி வாழ்ந்து வருகின்றனர். வேளாண் சாராத துறையானது கிராமப்புற வேலைவாய்ப்பை உருவாக்குவதில் தொடர்ந்து முக்கியப் பங்காற்றுகிறது. ஆனால் வேளாண் சார் வேலைவாய்ப்பு குறைந்து வருகிறது. கிராமப்புறங்களில் 2005ல் வேளாண் சாரா வேலைவாய்ப்பு 27 விழுக்காடாக இருந்தது 2010ல் 32 விழுக்காடாகவும், 2015ல் 42 விழுக்காடாக அதிகரித்தது. வேளாண்மை மூலம் போதுமான வருமானம் ஈட்ட முடியாதல் 52 விழுக்காடு வேளாண் குடிகள் கடனாளிகளாக உள்ளனர். இவர்கள் சராசரியாக ரூ.47000 கடனை உடையவர்களாக உள்ளனர். தொழிலாளர் அமைச்சகத்தின் கணக்கின்படி 76.9 விழுக்காடு கிராமப்புற குடிகள் மாதம் ரூ.10000 வருமானம் பெறுகின்றனர். 90 விழுக்காட்டுக் கிராமப்புறக் குடிகள் குறிப்பாக விவசாயிகள், கைவினைஞர்கள் அரசின் குறைந்தபட்ச கூலியினைக்கூட பெறமுடியாத நிலையில் உள்ளனர். தேசிய மாதிரி கணக்கெடுப்பின்படி வேளாண்மை மூலம் பெறும் வருமானம் 2003ல் ரூ.1060 ஆக இருந்தது 2013ல் ரூ.3844 ஆக அதிகரித்தது. இந்தியாவில் தற்போது 30 விழுக்காடு வேளாண் குடிகள் வண்டிக்காரர்கள், வணிகர்களிடம் கடன் பெற்றுள்ளனர் (Amit Basole 2017). இந்தியாவின் வேளாண்மையின் வழியாக பெரும் வருமானமானது 2004-05ல் ரூ.434160 கோடியாக இருந்தது 2011-12ல் ரூ.1144363 கோடியாக அதிகரித்தது. அதேசமயம் வேளாண் சார் தொழிலாளர்களின் எண்ணிக்கையானது 9.27 கோடியிலிருந்து 7.82 கோடியாகவும், வேளாண் சாகுபடியாளர்களின் எண்ணிக்கை 16.61 கோடியிலிருந்து 16.62 கோடியாகவும் இவ் ஆண்டுகளில் குறைந்துள்ளது (Ramesh Chand et al 2015).

மன்மோகன் சிங்கின் தலைமையிலான ஐ.மு.கூட்டணி அரசு பணவீக்கம், பன்னாட்டு நிதி சிக்கல், எரிபொருள் விலை ஏற்றம், உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு, அதிக வட்டி வீதத்தினால் முதலீட்டில் பின்னடைவு, ஊழல் போன்ற நிகழ்வுகள் காணப்பட்டது. அதே சமயம் கிராமப்புற வேலை வாய்ப்பு உருவாக்கம், கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாடு, நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், உணவு பாதுகாப்புச் சட்டம், கல்வி உரிமைச் சட்டம், கிராமப்புற சுகாதார இயக்கம், தகவல் அறியும் சட்டம், தொழில்நுட்ப மேம்பாடு, உள்ளாட்சி அமைப்புகளுக்கு முன்னுரிமை போன்றவை நடைமுறைப்படுத்தப்பட்டது. (Anil Padmanabhan 2014). இந்திப் பொருளாதாரம் சேமிப்பு மற்றும் முதலீடு அதிகரித்தது, பொருளாதார கட்டுப்பாடு இல்லாமல் தடையற்றதாக இருந்தது, வறுமை துல்லியமாக்கக் குறையத் தொடங்கியது, உள்கட்டமைப்புகள் அதிக வேகமெடுத்தது போன்றவை பல்வேறு தளங்களில் இந்தியாவை முன்னோக்கி அழைத்துச் சென்றது (Maitreesh Ghatak et al 2014). ஒப்பீட்டு அளவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியைவிட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அனைத்து பேரியல் பொருளாதார நிலைகளில் சிறந்ததாக இருந்தது.

1991ல் நடைமுறைப்படுத்தப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்களின் முக்கிய நோக்கம், துரிதமான பொருளாதார வளர்ச்சி மற்றும் அதிக திறனை அடைவது என்ற இரட்டை இலக்கைக் கொண்டதாக இருந்தது. இதனைக் கட்டுப்பாடற்ற சந்தை வழியாக அடைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் உற்பத்தித் திறன் அதிகமானது. 1991ல் பொருளாதாரச் சீர்திருத்தின பிந்தைய நிலைகளில் பொருளாதார வளர்ச்சி வேகமெடுத்தது. 2003-04க்கு பிந்தைய ஐந்தாண்டுக் காலத்தில் 10 விழுக்காட்டிற்குச் சற்றே குறைவான வளர்ச்சியினை கண்டது. ஆனால் 2008ல் ஏற்பட்ட உலக நிதிச் சிக்கல் இந்த உயர் வளர்ச்சியினை முடிவிற்குக் கொண்டுவந்தது. இதனால் நீடித்த தொழிற் கொள்கை, வர்த்தகக் கொள்கை போன்றவை உற்பத்தித் துறையினைக் குறிவைத்து உருவாக்கப்பட்டது. ஆனால் சேவைத் துறை விரைந்த வளர்ச்சியினை பெற்றது. வேளாண் துறையினைப் பொருத்தமட்டில் ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டதுமட்டுமல்ல மக்கள் தொகை உயர்விற்கு ஏற்ற வகையில் உணவு உற்பத்தி அதிகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இக்காலத்தில் ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு உணவு தானிய தலா கையிருப்பானது குறைந்தது. இதற்கான காரணம், தாராளமயமாக்கப்பட்ட சந்தை மற்றும் தொழில், சேவைத் துறைகளுக்குக் கொடுத்த முக்கியத்துவம் வேளாண்மைக்கு அளிக்கப்படவில்லை என்பதாகும்.

இந்திய வேளாண்மை அதிக அளவில் பருவ மழையை நம்பி உள்ளது. பருவமழையில் ஏற்றத் தாழ்வு ஏற்படுவதால் நிலத்தடி நீர் பெருமளவிற்கு உரியப்படுகிறது. நீர்ப்பாசன ஆதாரங்களான ஆழ்துளைக் கிணறு, கிணறு போன்றவற்றுக்கு அதிக செலவு ஏற்படுவதால் விவசாயிகள் கடன் பொறியில் சிக்குகின்றனர். இரண்டாம் கட்ட பசுமைப் புரட்சியானது நவீனத் தொழில்நுட்ப பயன்பாட்டுடன் தொடர்புடையது. இதனை அதிக அளவில் உள்ள குறு, சிறு விவசாயிகளால் மேற்கொள்ளாதது வேளாண்மையின் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. அன்மைக் காலமாக பல்வேறு காரணங்களினால் மண் வளம் நிறைந்த பகுதியில்கூட உற்பத்தித் திறன் குறைந்து வருகிறது. வேளாண்மை மீதான பொதுத் துறை முதலீடு குறைந்து காணப்படுவது போன்றவை வேளாண் துறையின் செயல்பாடுகளில் பிற்போக்கான நிலை உள்ளதற்கான காரணங்களாகக் கண்டறியப்படுகிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முதல் கட்ட ஆட்சியில் சிறப்பான பல அம்சங்கள் வேளாண்மையை மேம்படுத்தக் கொண்டுவரப்பட்டது அதன் வளரச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தது. ஆனால் இரண்டாம் கட்ட ஆட்சிக் காலத்தில் இதற்கான முன்னெடுப்பு குறைவாகவே இருந்தது. அளவுக்கு அதிக உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான கவனம் செலுத்தப்பட்டதால், வேளாண் விளைநிலங்கள் அதிக அளவில் கையகப்படுத்தப்பட்டது. இது விவசாயிகளின் மத்தியில் பெரும் எதிர்ப்பினை உருவாக்கியிருந்தது. இதுவே ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கான வாட்டர்லூ வாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

– பேரா.பு.அன்பழகன்