பேசும் பிரபாகரனின் கவிதை
நகரத்தில் தமிழ் பாடும் நல்மூதாய் பூச்சி
நற்றிணை பாடும் நல்மூதாய் !
நகரத்தை பார்க்கலாம் வா என் தோழாய் !
வற்றிய வயிறுக்கும் வாழ் வளிக்கும் !
பணம் கொட்டிட தொழில்கள் வளர்ந்திருக்கும் !
நட்டிய கம்பமும் நகர்திருக்கும் !
நலம் பற்றிய பெயர்கள் மறைந்திருக்கும் !
நகரத்தைக் காணும் நல்மூதாய் !
வயல்களில் கட்டடம் விளையாடும் !
வாய்க்காலில் குடிசைகள் குடியேறும் !
நதிகளில் நகரங்கள் வழிந்தோடும் !
அங்கு நச்சுப்புகை நாகரிக துதி பாடும் !
தண்ணீர் புகுவதற்கு இடம் தேடும் !
அந்தத் தார் ரோட்டில் தவளை உயிர் போகும் !
இயற்கை தண்டனை பெற்ற இடமாகும் !
இங்கே மனிதம் அதிகம் விலைபோகும்
சங்கம் பாடும் புள்ளினமே !
இந்த சங்கடத்தை பாடு மூதாய் இனமே !
ஆறுகளில் நுரைகள் அலை மோதும் !
அந்த சாயங்களால் நிலங்கள் நிறம்மாறும் !
ஏரிகளில் வாரியங்கள் வழிதேடும் !
இந்த ஏமாற்றுத் தனத்தால் பல்லுயிர் மாயும் !
புகையில் பூக்கள் மலர்ந்திருக்கும் !
அங்கு புன்னகைக்க மனங்கள் மறுத்திருக்கும் !
பாரு பாரு பழம் மூதாய் !
பத்துப்பாட்டு பாடும் கோப மூதாய் !
நகரம் என்ற ஒரு சொல்வாழும் !
அது நாகரிகம் என்று தன்னை ஓதும் !
பசுமை என்ற சொல் மாளும் !
அங்கு செயற்கை என்ற செடிகள் உயிர் வாழும் !
என் பப்பாளியும் முருங்கையும் குணம் மாறும்!
சாப்பாட்டில் நெகிழிகள் விளையாடும் 1
வளர்ச்சி என்னும் இயற்கை அபகரிப்பு !
நகர அங்கீகாரம் என்பது விவசாய கருக்கலைப்பு!
இந்த நரகத்தைப் பாரு தாம்பலமே !
இந்த தரணிக்கு கொடு மனோபலமே !
முனைவர் இரா பிரபாகரன்