The story of the lying man (பொய் மனிதனின் கதை 5) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History

பொய் மனிதனின் கதை 5 – ஜா. மாதவராஜ்



“பொய்யையும், வஞ்சகத்தையும் விட
உலகில் எதுவும் சிறந்ததே”- லியோ டால்ஸ்டாய்

”கொலைகாரன் மோடி!”

2003 ஆகஸ்டில், லண்டனின் வடமேற்கில் அமைந்துள்ள விம்ப்லேவில் மோடி கலந்து கொண்டு இருந்த கூட்டத்திற்கு வெளியே கோஷங்கள் உக்கிரமாக எழுந்தன. அப்போது அவர் பிரிட்டனுக்கு ஒரு அழையாத விருந்தாளி. ”அரசு ரீதியாக குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி வரவில்லை. தனிப்பட்ட முறையில் வந்திருக்கிறார்” என தன் தரப்பை பிரிட்டிஷ் அரசு சொல்லி முடித்துக் கொண்டது.

வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் மற்றும் வலிந்து அழைக்கப்பட்ட முதலீட்டாளர்களிடம் மோடி பேசிக்கொண்டு இருந்தார். அடுத்த மாதம் குஜராத்தில் நடக்கவிருக்கும் ‘துடிப்பு மிக்க குஜராத்’ (Vibrant Gujarat) உச்சி மாநாட்டிற்கு அழைப்புகள் விடுத்துக் கொண்டு இருந்தார்.

The story of the lying man (பொய் மனிதனின் கதை 5) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History
2003 Vibrant Gujarat Summit

2003ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி, ஆயுத பூஜை விடுமுறை நாட்களையொட்டி, ‘துடிப்பு மிக்க குஜராத்திற்கான’ உச்சி மாநாடு அகமதாபாத்திலும் சூரத்திலும் ஒரு சேர நடத்தப்பட்டது. அகமதாபாத்தில் இந்தியாவின் துணை பிரதமராயிருந்த அத்வானியும், சூரத்தில் ஒன்றிய நிதியமைச்சராய் இருந்த ஜஸ்வந்த் சிங்கும் துவக்கி வைத்தனர். குஜராத் மாநிலத்தில் தொழில், சுற்றுலா இரண்டையும் ஊக்குவிப்பதே அதன் நோக்கமாய் அறிவிக்கப்பட்டது. உள்நாட்டின் சில கார்ப்பரேட்களும், 48 நாட்டிலிருந்து பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். மாநாட்டின் முடிவில் 14 பில்லியன் முதலீட்டிற்கு 76 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன.

’துடிப்புமிக்க குஜராத்தின்’ நோக்கம் அப்போது மேலோட்டமாகத்தான் பிடிபட்டு இருந்தது. ‘சகிப்புத்தன்மையற்ற’, ‘மதவெறி மிக்க’, ’பாசிசத்தன்மை கொண்ட’, ‘கலவர’ பூமியாகக் கருதப்பட்ட குஜராத் குறித்த அபிப்பிராயத்தை மாற்றுவதற்கும், நேர்மறை சிந்தனைகளை உருவாக்குவதற்கும் மோடி முயற்சிக்கிறார் என்று ஊடகங்கள் கோடிட்டு காண்பித்தன. தன் மீதும், தன் அரசு மீதும் மனித இரத்தத்தோடு படிந்திருக்கும் களங்கத்தை துடைப்பதற்கு மோடி செய்யும் வித்தைகள் என்று ஜனநாயக சக்திகளும், முற்போக்கு சக்திகளும் கருதின.

2003 லிருந்து 2019 வரை இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை ‘துடிப்புமிக்க குஜராத்தின்’ மாநாடுகள் நடத்தப்பட்டன. இந்திய கார்ப்பரேட்களோடு மிக நெருக்கமாகவும், அவர்களுக்கு உகந்தவராகவும் மோடி புதிய அவதாரம் எடுத்த தருணம் அந்த மாநாடுகளுக்கு ஊடேதான் இருந்தது. உருமாறி ‘வளர்ச்சி நாயகனாக’ தோன்ற ஆரம்பித்தது அப்போதுதான்.

மே.வங்கத்தில் இருந்த சி.பி.எம் தலைமையிலான அரசு, அம்மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக டாடாவின் நானோ கார் திட்டத்திற்கு அனுமதி அளித்த காலத்தையும் இங்கு சேர்த்து நினைவுகூர்வது, வரலாற்றை அதன் பரிமாணங்களோடு அறிய உதவியாய் இருக்கும். நிலத்திற்கு ஈடாக உரிய முறையில் நிவாரணமும், வேலைவாய்ப்புகள் போன்ற பரிகாரமும் வழங்க மே.வங்க அரசு ஏற்பாடு செய்து கொண்டிருந்தது. சி.பி.எம்முக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், மாவோயிஸ்டுகள், பிஜேபி எல்லாம் தனித்தனியாகவும், இணைந்தும் இயக்கம் நடத்தின. கம்யூனிஸ்டுகள் என சொல்லிக் கொண்டு கார்ப்பரேட்களுக்கு சோரம் போவதாகவும், மக்களை வஞ்சிப்பதாகவும் பிரச்சாரங்கள் நடந்தன. மக்களும் தங்கள் நிலம் பறிபோவதை ஏற்காமல் போரட்டங்கள் நடத்தினர். இறுதியாக டாடாவின் நானோ திட்டத்தை சி.பி.எம் தலைமையிலான மே.வங்க அரசு கைவிட்டது.

The story of the lying man (பொய் மனிதனின் கதை 5) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History
The Abandoned Singur Tata Nano Factory

உடனடியாக டாடாவின் நானோ திட்டத்திற்கு ’துடிப்புமிக்க குஜராத்தில்’ இடமளிப்பதாக மோடி அழைத்தார். 2008ல் டாடா மே.வங்கத்தில் இருந்து குஜராத்துக்குத் தாவினார். ஒரு புதிய தொழிற்சாலை அமைப்பதற்கான பூர்வாங்க காரியங்கள் முடிவதற்கு குறைந்தது 90லிருந்து 180 நாட்களாகும். மோடி இரண்டே நாட்களில் அனுமதியளித்தார். அதிவிரைவாக எல்லாம் நடந்தன. ஒரு முணுமுணுப்பும் இல்லாமல் மிக எளிதாக குஜராத்தில் 1100 ஏக்கரில் டாடாவின் நானோ கார் தொழிற்சாலை செயல்படத் துவங்கியது.

2009ம் ஆண்டு நடந்த ‘ துடிப்புமிக்க குஜராத்’ உச்சி மாநாட்டில் ரத்தன் டாடா, “மோடியின் தலைமையில் வேறெந்த மாநிலத்தையும் விட குஜராத் நிமிர்ந்து நிற்கிறது.” என உச்சி முகர்ந்தார். 30000 கோடி திட்டத்திற்கு மானியம், 0.6 சதவீத வட்டிக்கு கடன், 15 சதவீத வாட் வரியிலிருந்து விலக்கு எல்லாம் சும்மாவா?

“குஜராத் தங்க விளக்கைப் போல் ஜொலிக்கிறது. தொலைநோக்குப் பார்வையும், பயன் தரக்கூடிய தலைமையும் கொண்ட மோடிக்கே இந்த பெருமைச் சேரும்” என்று முகேஷ் அம்பானி புகழ்ந்து தள்ளினார்.

“ஒற்றை ஆளாக மோடி குஜராத்தை சக்தி வாய்ந்த மாநிலமாக்கி இருக்கிறார். மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக குஜராத் திகழ்கிறது” என்றார் அனில் அம்பானி.

The story of the lying man (பொய் மனிதனின் கதை 5) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History

“இந்தியாவே குஜராத்தை திரும்பிப் பார்க்கிறது. வளர்ச்சியை நோக்கி செலுத்தும் திறன் இந்த அரசுக்கு உள்ளது.” என்றார் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் மேனேஜிங் டைரக்டர் சாந்தா கோச்சார். (இவரும், இவரது கணவரும்தான் இப்போது 1875 கோடி பணமோசடி வழக்கில் சிக்கி இருக்கின்றனர்.)

1980களில் மஞ்சள் நிற பஜாஜ் ஸ்கூட்டர் வண்டியை அகமதாபாத் நகரத்தின் சாலைகளில் ஒட்டிக்கொண்டு குஜராத் அரசு அலுவலகங்களுக்குள் கடன் வாங்கவும், தொழில் துவங்கவும் அலைந்து கொண்டு இருந்த அதானி மோடியின் மிக நெருங்கிய நண்பராகி இருந்தார். அவரது கூரையைப் பிய்த்து மோடி கொடுத்துக் கொண்டு இருந்தார். இந்தியாவின் கார்ப்பரேட்களில் ஒருவராக அதானி வளர்ந்து கொண்டிருந்தார்.

மிக இள வயதிலேயே ஆர்.எஸ்.எஸ் உறுப்பினரான மோடிக்கு, இந்திய முதலாளித்துவத்தின் ஆசியும்,. ஆதரவும் இல்லாமல் அதிகாரத்தைப் பெறவோ, தக்கவைத்துக் கொள்ளவோ முடியாது என்பது தெரிந்திருந்தது. 2008ம் ஆண்டு குஜராத் தலைநகரான அகமதாபாத்தில் சாலைகளை விரிவுபடுத்தும் நடவடிக்கையில், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்த பல இந்துக் கோவில்களை இடித்திட உத்தரவிட்டார். அம்பானி, அதானி, டாட்டா உள்ளிட்ட இந்திய முதலாளிகளின் நம்பிக்கைக்கு உரியவராய், அவர்களுக்கு மிகுந்த விசுவாசமானவராய் மோடி தன்னை உறுதிபடுத்திக் கொண்டார்.

விகாஸ், விகாஸ் என சதா நேரமும், செல்லும் இடமெல்லாம் மக்களிடம் வளர்ச்சி குறித்தே மோடி பேசினார். ”நாங்கள் வளர்ச்சியை நம்புகிறோம். அந்த வளர்ச்சியின் நன்மைகள் கடைகோடி மனிதனையும் சென்றடைய வேண்டும் என நம்புகிறோம். ஒரு நல்ல காரியத்தை செய்கிறோம்.” என்று மோடி பிரகடனம் செய்தார்.

24 மணி நேரமும் தடை இல்லாமல் மின்சாரம் கிடைக்கும் மாநிலம் என்றும், சாலைகள், போக்குவரத்து, தொழில்நுட்பம் எல்லாவற்றிலும் பிரம்மாண்ட வளர்ச்சி கண்ட மாநிலம் என்றும் பெரும் அளவில் பிரச்சாரங்கள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டன. வந்த செய்திகளையும் தகவல்களையும் அப்படியே நம்பி ஃபார்வேர்டு செய்து கொண்டு இருந்தனர் நகரத்து இளைஞர்கள். முதலீட்டாளர்களுக்கு இணக்கமான சூழலும், உள் கட்டமைப்பும் கொண்ட மாநிலமானது. பூவுலகின் சொர்க்க பூமி என்று வேற லெவலுக்கு குஜராத் கொண்டு செல்லப்பட்டது.

என்னதான் குஜராத்தில் நடக்கிறது, ஏன் இப்படி குஜராத் முன்னிலைப் படுத்தப்படுகிறது என்று அரசியலறிந்தவர்கள் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தனர். உண்மையில் குஜராத் வளர்ச்சி அடைந்திருக்கிறதா, மோடி சொன்னது போல் கடைகோடி மனிதனை வளர்ச்சியின் பலன்கள் சென்று அடைந்திருக்கிறதா என ஆய்வுகளும், விவாதங்களும் ஒரு புறம் ஆரம்பித்தன. வளர்ச்சி என்ற பெயரில் பொய்களும், நயவஞ்சகமும் அவிழ்த்து விடப்பட்டு இருப்பதெல்லாம் தெரிய வந்தன.

குஜராத்தில் தனிநபர் வருமானம் அதிகரித்து விட்டது என்று புள்ளி விபரங்கள் காட்டப்பட்டன. அதே வேளையில் தனி நபர் கடனும் கடுமையாக அதிகரித்து இருந்தது. மோடி முதலமைச்சரான போது குஜராத்திற்கு 6000 கோடி கடன் இருந்தது. அவர் முதலமைச்சராக இருந்த பத்து வருடங்களில் இந்த கடன் தொகை 182000 கோடியாக வளர்ந்திருந்தது. அதாவது குஜராத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் 35000/- ருபாய் கடனோடுதான் உலகத்தை கண் திறந்து பார்க்க வேண்டியிருந்தது.

குஜராத்தின் நகர்ப்புறம் கண்ட வளர்ச்சிக்கும், கிராமப்புறம் கண்ட வளர்ச்சிக்கும் சம்பந்தமே இல்லை. கிராமப்புற பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது. அதுகுறித்து மோடியும், அவரது அரசும் பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பது புள்ளி விபரங்களில் அம்பலமானது.

நகர்ப்புறத்திலும் முஸ்லீம்களும் இந்துக்களும் அண்டை வீடுகளில் வசித்து வந்த நிலைமையெல்லாம் காணாமல் போயிருந்து. கலவரங்களால் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் வீடிழந்து, பாதுகாப்பு தேடி வேறு இடங்களுக்கு தஞ்சம் புகுந்திருந்தனர். அவர்கள் மீண்டும் பழைய வாழ்க்கைக்குத் திரும்பவே முடியவில்லை. அரசு அவர்களுக்கு எந்தவித உதவியும் செய்யவில்லை. நகர்ப்புறங்களில் அவலமான பகுதிகளில் ஒதுக்கப்பட்டு அவர்களின் வாழ்க்கை இருந்தது.

தொழில் வளர்ச்சிக்காக கார்ப்பரேட்களுக்கு அள்ளி வழங்கிய அளப்பரிய சலுகைகளால், கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகளுக்கு போதிய நிதியை அரசால் ஒதுக்கீடு செய்ய முடியவில்லை. ஊட்டச்சத்து குறைவால் இறக்கும் குழந்தைகளும், தாய்மார்களும் குஜராத்தில் அதிகமாயிருந்தனர்.

நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென், “குஜராத் தொழில் ரீதியாக முன்னேறி இருந்தாலும் சமூக ரீதியாக பின்னடைவை சந்தித்திருக்கிறது. குறைந்த கல்வி, குறைந்த ஆயுட்காலம், அதிகரித்திருக்கும் ஆண் பெண் பாகுபாடு, சமத்துவமின்மை, மோசமான சுகாதார அமைப்பைத்தான் காண முடிகிறது. தொழில்துறையில் காட்டும் அக்கறையும் வேகமும் மனித வளத்தின் மீது காட்டப்படவில்லை. இதை வளர்ச்சி என்று சொல்ல முடியாது” என மிகச்சரியாக சுட்டிக் காட்டினார்.

The story of the lying man (பொய் மனிதனின் கதை 5) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History

ஊதிப் பெருக்கப்பட்ட ’துடிப்பு மிக்க குஜராத்’ குறித்தும், அதன் வளர்ச்சி குறித்தும் பேச ஆரம்பிக்கும்போது நிலைமை கிட்டத்தட்ட கை மீறிப் போயிருந்தது. குஜராத்தைப் போல இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல மோடி ஒருவரால்தான் முடியும் என தொடர்ந்து கார்ப்பரேட் ஊடகங்கள் ஊத ஆரம்பித்தன. மோடி என்றால் யாரென்று அறியாதவர்களைக் கூட திரும்பிப் பார்க்க வைத்தன. மெத்தப் படித்த இளம் தலைமுறையினரில் ஒரு பகுதியினரை என்ன ஏதென்று தெரியாமலே மோடி என்றவுடன் கையைத் தூக்க வைத்தனர். அதற்கு ‘மோடி அலை’, ‘மோடி அலை’ என அவர்களே பேரும் சூட்டிக் கொண்டனர். 2002ம் ஆண்டு குஜராத் குறித்த கொடும் நினைவுகள் எல்லாம் பழங்கதைகளாகவும், கெட்ட கனவாகவும் மங்கிப் போயின.

வளர்ச்சி என்பது புனிதச் சொல்லாகவும், மந்திரச் சொல்லாகவும் ஆகிப் போனது. வளர்ச்சிக்கு எதிராக சிந்தித்தாலும், பேசினாலும் துரோகிகள் போல சித்தரிக்கப்பட்டார்கள். நாட்டின் வளர்ச்சிக்காக அதன் பிரஜைகள் தங்கள் உடல் பொருள் ஆவி அனைத்தையும் துறக்கும் சித்தம் கொள்வதே அறம் என்பதாக நம்ப வைக்கப்பட்டு இருந்தது.

நாட்டின் வளர்ச்சி என்பது ஸ்டாக் மார்க்கெட்டின் குறியிடுகளோ, வளர்ச்சி விகிதம் குறித்த பொருளாதார புள்ளி விபரங்களோ அல்ல. அந்த நாட்டில் வாழும் அனைவரின் வாழ் நிலையையும்,. அந்த குடும்பங்களின் முன்னேற்றங்களையும் சேர்த்துதான் வளர்ச்சியை ஒட்டு மொத்தமாக கணக்கிட வேண்டும்.

மக்களையும், உழைப்பவர்களையும் விலக்கி வைத்து, அவர்களை ஒரு பொருட்டாக கருதாமல் வளர்ச்சி, வளர்ச்சி என முன் வைக்கப்படும் கோஷங்கள் அனைத்தும் அர்த்தமற்றவை மட்டுமல்ல, அயோக்கியத்தனமானவை. அதன்மூலம் அடைகிற அதிகாரம் மக்களுக்கானது அல்ல, கார்ப்பரேட்களுக்கானது மட்டுமே.

இப்படி குஜராத்திலிருந்து தனது அதிகார எல்லையை இந்தியாவுக்கு வளர்த்துக் கொண்துதான் மோடியின் ‘வளர்ச்சி’.

தனி நபரை விட இயக்கமும், சித்தாந்தமும்தான் பெரிது என சொல்லி வந்த ஆர்.எஸ்.எஸ் மோடியின் இந்த வளர்ச்சி குறித்து மௌனம் சாதித்தது. இந்துத்துவாவின் செல்வாக்கை அதிகரிக்கவும், இந்துத்துவாவுக்கான வெறியர்களை மேலும் உருவாக்கவும் மோடி அவர்களுக்குத் தேவைப்பட்டார். பிரதமர் பதவிக்காக காத்திருந்த அத்வானி ஓரம் கட்டப்பட்டார். மோடி பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

“அடுத்த பிரதமர் யார்?” பாராளுமன்றத் தேர்தல் என்றவுடன் இதுதான் முதல் கேள்வியாகவும், சுவாரசியம் நிறைந்த புதிராகவும் முன்வைக்கப்படுகிறது. தேர்தல் களம் பற்றி உரையாடுகிற அனைத்து ஊடகங்களிலும் ’அடுத்த பிரதமர் யார்’ குரல் திரும்பத் திரும்ப கேட்கப்படுகிறது. கருத்துக்கணிப்பு ஆய்வுகளும் ‘அடுத்த பிரதமர் யார்’ என்பதைக் குறிவைத்தே நடத்தப்படுகின்றன. அனைத்தும் கார்ப்பரேட்களின் பொம்மலாட்டம் என்பது மக்களின் சிந்தனைகளில் படிவதில்லை.

அந்தப் பிரதமரை ஒரு மகத்தான நாயகனாகவும், வானத்திலிருந்து தரையிறங்கி நம் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்கப் போகிறவராகவும் ஒரு சித்திரத்தை முன்வைக்கிறார்கள். அதுகுறித்த மறுபேச்சோ, சிந்தனைகளோ, ஆராய்ச்சிகளோ எதுவும் அற்று எளிய மக்கள் அந்த ‘அவர்’ யாராக இருப்பார் என்று அறிந்துகொள்ள துடிக்கின்றனர். ஒரு‘தேவனின் வருகையை’ எதிர்பார்க்கின்றனர்.

அந்த நாயகனை ‘நீங்கள் தாம் தேர்ந்து எடுக்கப் போகிறீர்கள்’ என இரண்டு அல்லது மூன்று முகங்களை நீட்டுகிறார்கள். ‘அவர் அப்படிப்பட்டவர்’, ‘இவர் இப்படிப்பட்டவர்’ என பின்னணியில் குரல்கள் கேட்கின்றன. ஏற்பாடு செய்யப்பட்ட சிலர் வேகமாக அந்த முகங்களை நோக்கி கை நீட்டுகிறார்கள். மக்களும் தங்களை அறியாமல் அந்த முகங்களை நோக்கி கைகளை நீட்ட ஆரம்பிக்கிறார்கள். அந்த முகங்கள் பெரிது பெரிதாய் ஆகின்றன. ஒன்று மிகப் பெரிதாகிறது. அவரே ‘அடுத்த பிரதமர்’ ஆகிறார். ஒரு மாபெரும் தேசத்தின் மக்கள் தங்கள் மகத்தான ஜனநாயக் கடமையை ஆற்றிவிட்டதாக பெருமை பேசப்படுகிறது.

The story of the lying man (பொய் மனிதனின் கதை 5) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History
Modi in Adani Plane

ஐந்து வருடத்திற்கு ஒருமுறை இப்படி ‘அடுத்த பிரதமர்’கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஐந்து வருடங்களில் அந்த பிரதமர்கள் தங்களுக்கு ஒன்றும் செய்யவில்லை, தங்களை வாட்டி வதைத்து விட்டார் என்று மக்கள் தெரிந்துகொள்கிறார்கள். இங்கு தவறு செய்தது மக்கள் அல்ல. அப்பாவி மக்களை ஏமாற்றிய அந்த பிரதமர்தான். ஆனால் மக்களோ தாங்களும் தவறு செய்துவிட்டதாக உணர ஆரம்பிக்கிறார்கள். மக்களின் சம்மதத்தின் பேரிலேயே அனைத்தும் நடப்பதாக ஒரு மாபெரும் கண்கட்டி வித்தை இது.

2014லிலும் அந்த கேள்வி கேட்கப்பட்டது.

“அடுத்த பிரதமர் யார்?”

மோடி புறப்பட்டார்.

வளர்ச்சியினால் பலனடைந்த அதானியின் விமானத்தில் அவர் வானில் பறந்தார்.

வளர்ச்சியின் பலன் கிடைக்காத கடைகோடி மனிதர்கள் அங்கே கூடியிருந்தார்கள். மோடியின் வருகைக்காக அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அங்கும் மோடி பல பொய்களை சொல்ல வேண்டி இருந்தது.

முந்தைய தொடர்களை படிக்க: 

பொய் மனிதனின் கதை – ஜா. மாதவராஜ்
பொய் மனிதனின் கதை 2 – ஜா. மாதவராஜ்
பொய் மனிதனின் கதை 3 – ஜா. மாதவராஜ்
பொய் மனிதனின் கதை 4 – ஜா. மாதவராஜ்

The story of the lying man (பொய் மனிதனின் கதை 4) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History

பொய் மனிதனின் கதை 4 – ஜா. மாதவராஜ்



“அம்பு போல் நேராக செல்கிறது உண்மை.
பாம்பு போல் நெளிந்து நெளிந்து செல்கிறது பொய்” – சுசி காசிம்

“அவர்கள் 60 பேரைக் கொன்றார்களா,  இல்லையா” என்று மோடி மேடையிலிருந்து கேட்கிறார்.

“ஆம், கொன்றார்கள்” என்கிறது கீழே நின்றிருக்கும் கூட்டம்.

“நாம் அவர்களைக் கொன்றோமா?” அடுத்த கேள்வி. 

“இல்லை” என பெரும் சத்தம்.

“நாம் அவர்கள் கடைகளுக்குத் தீ வைத்தோமா?”. 

“இல்லை”. 

“நாம் யாரையாவது கற்பழித்தோமா?”. 

“இல்லை”. 

“ஆனால் குஜராத்தின் எதிரிகள் குஜராத்தே தீப்பிடித்து எரிவதாகச் சொல்கிறார்கள்” என்று முடிக்கவும் கூட்டம் கோபம் கொண்டு கத்துகிறது.

“நாம் தீவீரவாதிகளா” என்று கேள்வி. 

“இல்லை” என கொந்தளிக்கிறது கூட்டம்.

“நாம் தீவீரவாதிகளானால்…” என்று நிறுத்தி கூட்டத்தைப் பார்க்கிறார் மோடி. நிதானமாய். சட்டென்று உச்சஸ்தாயில் அதி உக்கிரத்துடன்  “பாகிஸ்தான் உலக வரைபடத்திலேயே இருக்காது” என்று முடிக்கிறார். கூட்டம் கட்டுக்கடங்காமல் ஆர்ப்பரிக்கிறது.

குஜராத் கலவரங்களுக்குப் பிறகு நடந்த சட்டசபைத் தேர்தலை ஒட்டி மோடியின் இந்த வெறியேற்றும் பொதுக்கூட்டப் பேச்சினை அப்படியே இயக்குனர் ராகேஷ் சர்மா அவரது ‘இறுதி தீர்வு” (Final Solution)  என்னும் ஆவணப்படத்தில் பதிவு செய்திருக்கிறார், 

மோடி குறிப்பிட்ட ‘நாம்’ இங்கே இந்துக்களின் குறியீடாகவும்,, ‘பாகிஸ்தான்’ என்பதை ’மூஸ்லீம்களின் குறியீடாகவும் பகுத்துப் பார்க்க ஆழமான சமூக அரசியல் ஞானமெல்லாம் தேவையில்லை. இந்தியாவை அப்படி அவர்கள் பழக்கி வைத்திருக்கிறார்கள்.

2002 பிப்ரவரி 27ம் தேதி  காலையில் கோத்ராவில்  சபர்மதி ரெயிலில் ஆறாவது கோச் எரிக்கப்பட்டதில், அயோத்திக்கு சென்று திரும்பி வந்த கரசேவகர்களில் 59 பேர் உடல் கருகி இறந்து விட்டதாக எங்கும் காட்டுத் தீயாய் செய்திகள் பரவின. நாடு முழுவதும் பதற்றம் தொற்றியது. கோத்ரா மாவட்ட கலெக்டர், “இது ஒரு விபத்து. திட்டமிட்ட சதியல்ல” என்றே முதலில் ஊடகங்களிடம் சொல்லி இருக்கிறார். அன்று இரவு 7.30 மணிக்கு குஜராத் ஆகாஷவாணியில் முதலமைச்சராக இருந்த மோடி, இந்த கொடிய சம்பவத்திற்கு பின்னால் ஐ.எஸ்.ஐயின் சதி இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார். ஆரம்பத்தில் இருந்தே  ஐ.எஸ்.ஐ என்றும் பாகிஸ்தான் என்றுமே அவர் கூறி வந்தார். 

இது போன்ற பேச்சுக்களினால் ஏற்பட்ட விளைவுகளையும் அதே ஆவணப்படத்தில் காணலாம். 

வெளிச்சம் குறைந்த டிசம்பர் 15, 2002 இரவு வேளையில், பாரதீய ஜனதா கட்சியினரும், விஸ்வ ஹிந்து பரிஷத்துக்காரர்களும் குஜராத் சட்டசபை தேர்தலில் மோடி அரசு வெற்றி பெற்றதை ஆரவாரித்துக்  கொண்டாடுகிறார்கள். வாகனங்கள் அலறும் சத்தங்களின் நடுவே நின்று தலையில் காவித்துணி கட்டிய ஒருவன் “பி.ஜே.பியின் வெற்றி எனது வெற்றி” என்கிறான். பத்து வயது கூட நிரம்பாத ஒரு சிறுவன் “கடவுளுக்கு நன்றி… முஸ்லீம் தாய்களை புணருங்கள்” என்கிறான்.

மோடியின் வார்த்தைகளையும், அந்த சிறுவனிடம் வெளிப்பட்ட வார்த்தைகளையும் சேர்த்துப் பார்த்தால் குஜராத் வன்முறைகளின் ஊற்றுக்கண்ணை அறிய முடியும். 60 பேரைக் கொன்றார்கள் என கோத்ரா ரயில் எரிப்பை, ஒட்டு மொத்த முஸ்லீம் மக்கள் மீதான இந்துக்களின் வெறுப்பாகவும், ஆத்திரமாகவும், வன்மமாகவும் முன்னிறுத்தியது யார் என்பது தெரியும். 

ரெயில் பெட்டியில் கருகிய கரசேவகர்களின் உடல்களை சட்ட விரோதமாக விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர்களில் ஒருவரான ஜெய்தீப் படேல் வசம் ஒப்படைக்கப்பட்டது. இறந்து போனவர்களின் உடல்களோடு ஊர்வலமாய் சென்று  பெரும் கூட்டமாக கலந்து கொண்ட இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து கலவரங்களும், வன்முறைகளும் வெடித்தது. முஸ்லீம் மக்கள் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். 

மனிதகுலம் அதிர்ச்சியோடு பார்த்த காட்சிகளும் நிகழ்வுகளும் தேசம் குறித்த நினைவுகளில் உறைந்தே இருக்கின்றன. கருகிய உடல்களும், வெட்டப்பட்ட மனித உறுப்புகளும், வாட்களின் முன்பு கதறி கையெடுத்துக் கும்பிட்ட கைகளும், வன்புணர்வு செய்யப்பட்ட பெண்களின் அலறல்களும் நிறைந்த பயங்கரமான நாட்கள் அவை.

2002 பிப்ரவரி 28ம் தேதியும் அப்படியொரு நாள்தான். குல்பர்க் சொஸைசிட்டியில் இந்து மத வெறிக் கும்பலால் முன்னாள் காங்கிரஸ் எம்.பி ஜாஃப்ரியும் 37 பேரும் வெறிகொண்ட இந்துத்துவ கும்பலால் படுகொலை செய்யப்பட்டனர். இறப்பதற்கு முன்பு காவல்துறைக்கும் முதலமைச்சர் மோடிக்கும் மாறி மாறி தங்களைக் காப்பாற்றுவதற்கு ஜாஃப்ரி கதறி போன் செய்திருக்கிறார். எந்த பதிலும் இல்லை. பாதுகாப்பும் கிடைக்கவில்லை. ஜாஃப்ரியின் துணைவியார் ஜாகியா தொடுத்த வழக்கில் மோடியும் முக்கிய குற்றவாளியாய் கருதப்பட்டு இருந்தார். 

வழக்கின் உண்மைகளை அறிய சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வுக்குழு (Special Investigation Team – SIT ) அமைக்கப்பட்டது. குஜராத் முதலமைச்சராக அதிகாரத்தில் மோடி இருந்த காலங்களில்தான் சிறப்பு புலனாய்வுக் குழுவும் செயல்பட்டது. அதில் இருந்த முரண்பாடுகள், குளறுபடிகள், மேலோட்டமான விசாரணை, காலதாமதம் எல்லாம் பெருங்கதை. 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விசாரணை நடத்திய வர்மா கமிஷனால் பாதுகாப்பு ஏற்பாடுகளில் இருந்த குறைகளுக்கு பொறுப்பானவராக சுட்டிக்காட்டப்பட்ட போலீஸ் அதிகாரியும், அதனால் தமிழ்நாடு அரசின் துறை ரீதியான நடவடிக்கைகளால் வெகு காலம் பதவி உயர்வு பெற முடியாமல் போனவரும், வாஜ்பாய் அரசினால் புத்துயிர்ப்பு அளிக்கப்பட்டு சி.பி.ஐ டைரக்டராக ஆனவருமான ஆர்.கே.ராகவன்தான் அந்த சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார் என்பது ஒரு கிளைக்கதை.

கோத்ரா சம்பவம் நடந்து எட்டு வருடங்கள் கழித்து சிறப்பு புலனாய்வுக்குழு 2010ம் ஆண்டு மோடியிடம் மொத்தம் 71 கேள்விகள் கேட்டனர். மோடியின் பதில்களில் அவர் எத்தகைய மனிதர் என்பது புலப்பட்டது.

SIT: கோத்ரா சம்பவத்தை முன்கூட்டியே திட்டமிட்டது என்றும், பாகிஸ்தான் சதி அதில் இருப்பதாகவும் அறிவித்தீர்களா? அப்படியென்றால் அதற்கு ஆதாரமுண்டா?

மோடி : நான் அப்படி எந்த வார்த்தைகளையும் சட்டசபையில் சொல்லவில்லை. ஆனால் ஊடகங்கள் என்னிடம் அதுகுறித்து சில கேள்விகள் கேட்டபோது, விசாரணை முடிவு தெரியாமல் எந்த முடிவுக்கும் வர முடியாது என தெரிவித்திருந்தேன் 

SIT-ன் கேள்விக்கு பதிலாய்ச் சொன்ன மோடியின் வார்த்தைகளுக்கும், இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில் பொதுக்கூட்டத்தில் வெளிப்பட்ட மோடியின் வார்த்தைகளுக்கும் இடையே ஒளிந்திருந்தது பொய். 

தொடர்ந்த கேள்விகளிலும் மோடியின் மழுப்பலான பதில்களிலும் பல பொய்கள் நிறைந்திருந்தன.

சிறப்பு புலனாய்வுக் குழு: 27.02.2002 அன்று கோத்ரா ரெயில்வே ஸ்டேஷனில் சபர்மதி எக்ஸ்பிரஸ்ஸின் கோச் எரிக்கப்பட்டது எப்போது உங்களுக்குத் தெரியும்?

மோடி: 27.2.2002 அன்று காலை ஒன்பது மணி வாக்கில் அடிஷனல் சீப் செக்ரட்டரி  திரு. அசோக் நாராயணன் தகவல் தெரிவித்தார்.

சிறப்பு புலனாய்வுக் குழு: உடனடியாக உங்கள் எதிர்வினை என்னவாக  இருந்தது? அந்த சம்பவம் குறித்து என்ன நடவடிக்கைகள் எடுத்தீர்கள்?

மோடி: உள்ளாட்சித் துறை அமைச்சர் கோர்தான் ஜோடாஃபியா, அடிஷனல் சீப் செக்ரட்டரி அசோக் நாராயணன் மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் பேசினேன். சட்டசபையில் பிரச்சினையாக எழும் என்பதால் அந்த சம்பவம் குறித்த உண்மைகளை கேட்டறிந்தேன். அந்த ரெயிலின் மற்ற பிரயாணிகளுக்கு மேலும் தாமதம் ஏற்பட்டால் பதற்றம் அதிகரிக்கும் என்பதால் தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவு பிறப்பித்தேன். கோத்ரா ஒரு பதற்றம் மிக்க பகுதி என்பதால், அங்கு ஊரடங்கு உட்பட நடவடிக்கைகள் எடுக்கவும், தேவைப்பட்டால் அந்த பகுதியில் பாதுகாப்பை அதிகரிக்கவும் சொன்னேன். 

கோத்ரா ரெயில் எரிப்பு சம்பந்தமாக மோடி தகவல் அறிந்தது காலை 9 மணி. மேற்கண்ட துறை சார்ந்த அதிகாரிகளை சந்தித்து பேசியது காலை 10.30 மணி அளவில். அதற்கு முன்பே குஜராத் முதலமைச்சர் மோடியின் தனி உதவியாளருக்கும் விஸ்வ ஹிந்து பரிஷத் பொதுச்செயலாளர் ஜெய்தீப் படேலுக்கும் இடையே  9.39க்கும் 9.41க்கும் இடையே இரண்டு தடவை தொலைபேசி அழைப்புகள் பதிவாகி இருந்தன. அந்த உண்மையை வெளிக்கொண்டு வருவதில் சிறப்பு புலனாய்வுக் குழுவின் தொடர்ந்த கேள்விகளில் உரிய அழுத்தம் கொடுக்கவில்லை என விமர்சகர்கள் சொல்கிறார்கள்.

சிறப்பு புலனாய்வுக் குழு: விஸ்வஹிந்து பரிஷத் பொதுச்செயலாளர் ஜெய்தீப் படேல் உங்களுக்குத் தெரியுமா?  அவர் உங்களை கோத்ராவில் சந்தித்து, இறந்து போனவர்களை அகமதாபாத்திற்கு கொண்டு செல்லும் போது தானும் உடன் செல்வதற்கு அனுமதி கேட்டாரா?

மோடி: விஸ்வ ஹிந்து பரிஷத் பொதுச்செயலாளர் ஜெய்தீப்பை எனக்குத் தெரியும். அவரை கோத்ராவில் சந்தித்தது ஞாபகமில்லை. இறந்தவர்களின் உடலை அகமதாபாத்திற்கு கொண்டு செல்வது குறித்த வழிமுறைகளை தீர்மானித்தது மாவட்ட நிர்வாகம். எனக்கு அது குறித்த விபரங்கள் தெரியவில்லை.

”ஞாபகமில்லை” என மோடி  உண்மைகளை சாதாரணமாக கடந்தார்.

அடுத்தது  தொடர் கலவரங்களுக்கு வித்திட்ட இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகள். கோத்ரா ரெயில் பெட்டி எரிப்பில் இறந்த கரசேவகர்களுக்கு அகமதாபாத்தில்  நடந்த இறுதிச் சடங்கில் பெரும் கூட்டம் கலந்து கொண்ட காட்சியை ரெய்ட்டர் செய்தி நிறுவனமும், சில இந்துத்துவா அமைப்புகளின் இணைய தளங்களிலும்  பகிரங்கமாக வெளியிட்டு இருந்தன. 

காவல்துறை கண்ட்ரோல் ரூமில் (Police Control Room  – PCR) பதிவான தகவல்களில் பிப்ரவரி 28 காலை 11.58 மணிக்கு ஜந்தநகரிலிருந்து ஹட்கேஷ்வர் மயானத்திற்கு  10 உடல்கள் எடுக்கப்பட்டு ஐயாயிரத்திலிருந்து ஆறாயிரம் பேரோடு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது என்பது பதிவாகி இருந்து. 

Concerned Citizen Tribunal அறிக்கையின் 132ம் பக்கத்தில் பின்வருமாறு விவரிக்கப்பட்டு இருந்தது: ”கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் பெட்டியில் இறந்த பயணிகளின் உடல்கள் சாலை வழியாக அகமதாபாத்தில் உள்ள சோலா சிவில் மருத்துவமனைக்கு குதிரை வண்டியில் கொண்டு செல்லப்பட்டன. குதிரை வண்டிகளில் ராம சேவகர்கள் நிறைந்து இருந்தனர். இந்த செய்தியை ஒளிபரப்ப அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஊடகம் பயன்படுத்தப்பட்டது மற்றும் உள்ளூர் ஆகாஷ்வாணி வானொலி நிலையம் அகமதாபாத்தில் குதிரை வண்டிகள் புறப்படும் நேரத்தை அறிவித்தது. இறந்த உடல்கள் சிவில் மருத்துவமனையை அடைந்தபோது, நாங்கள் பழிக்குப் பழி வாங்குவோம்” போன்ற வெறித்தனமான கோஷங்களை ராம சேவகர்கள் எழுப்பினர். அதிக மக்கள் அங்கு கூடியிருந்தனர்.”

இவ்வாறு வெறியூட்டப்பட்ட, கலவரம் தூண்டப்பட்ட நிகழ்வுகள் சம்பந்தமாகவும் மோடியிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.

சிறப்பு புலனாய்வுக் குழு: கோத்ரா சம்பவத்தில் இறந்த ராமசேவகர்கள் மற்றும் வேறு சிலரும் அகமதாபாத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டனரா?

மோடி: கோத்ராவில் இறந்தவர்களின் இறுதிச் சடங்கில் பதற்றம் அதிகரிக்க விடக்கூடாது என்பதில் அரசு கவனமாய் இருந்தது.  எனக்கு கிடைத்த தகவலின்படி காவல்துறையினர் இதில் முனைப்புடன் செயல்பட்டனர். இறந்தவர்களின் உடலை வாகனங்களில் எடுத்துச் செல்ல உறவினர்கள் சிலருக்கு வலியுறுத்தப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள்  ஒத்துழைத்தார்கள். எந்த அசம்பாவிதம் இல்லாமல் அமைதியாக நடந்தது. அடையாளம் காண முடியாத உடல்களும், சட்ட ரீதியான விதிகளின்படி  அரசு ஆஸ்பத்திரியிலிருந்து 200  மீட்டர் தொலைவில் தகனம் செய்யப்பட்டன. எனவே இந்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. 

கிடைத்த ஆதாரங்கள், ஆவணங்களின் அடிப்படையில் சிறப்பு புலனாய்வுக்குழு மேற்கொண்டு கேள்விகளை எழுப்பி இருக்க முடியும். உண்மைகளை வெளிக்கொண்டு வருவதில் SIT கவனம் செலுத்தவில்லை என்னும் விமர்சனங்கள் மட்டுமே மிச்சமாகிப் போயின. இது போல கலவரங்கள் குறித்து வெளிவர வேண்டிய பல உண்மைகள் காணாமல் போயின. 

2013ல் வெளியான சிறப்பு புலனாய்வுக்குழு அறிக்கையில் மோடி அப்பழுக்கற்றவராய் அறிவிக்கப்பட்டார். தொடர்ந்து நாட்டின் பிரதம வேட்பாளராகவும் முன்னிறுத்தப்பட்டார். வெற்றி பெற்றார். இந்திய அரசியலில் பாசிசப் போக்கு அதிகாரத்தை நோக்கி பாய முடிந்த சம்பவமாக ’கோத்ராவில் சபர்மதி ரயில் எரிக்கப்பட்ட’ தருணம் அமைந்து விட்டது.

இவ்வளவுக்கும் மூல காரணமாக இருக்கும் – சபர்மதி ரயிலை கோத்ராவில் எரித்தது யார்? எப்படி எரித்தார்கள்? அவர்கள் அனைவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனரா? என்ன குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன? அவை நிருபீக்கப்பட்தா? தண்டனை வழங்கப்பட்டனரா?

அதுகுறித்த செய்திகள் முக்கியத்துவம் அளிக்கப்படாமலும் கவனம் பெறாமலுமே இருக்கின்றன. 

ரெயில் பெட்டி எரிக்கப்பட்டு 9 ஆண்டுகளுக்குப் பிறகு, குற்றஞ்சாட்டப்பட்ட 94 பேரில் 63 பேர் விடுதலை செய்யப்பட்டனர். 31 பேரில் 11 பேருக்கு தூக்குத் தண்டனையும் மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. மேல்முறையிட்டில் அந்த 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கூட  ரஃபீக் ஹூசைன் பதுக் என்பவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். 

மிகப் பெரும் வன்முறைகளுக்கு வித்திட்ட  அந்த சபர்மதி எக்ஸ்பிரஸ்ஸின் 6வது பெட்டியை யாரெல்லாம் எரித்தார்கள். எப்படி எரித்தார்கள் என்பது முழுமையாக தெரியவில்லை. ரெயிலின் உள்ளிருந்துதான் தீப்பிடித்திருக்க வேண்டும், வெளியிலிருந்து தீப்படிக்க சாத்தியமில்லை என்ற ஆய்வு உண்மைகளும் இருக்கின்றன. ஜஸ்டிஸ் பானர்ஜி  கமிட்டி அறிக்கையில், “கோத்ரா சம்பவம் சதி அல்ல, விபத்து“ என்று சொல்லப்பட்டு இருக்கிறது. மொத்தத்தில் கோத்ரா ரெயில் பெட்டி எரிப்பு சம்பவம் இன்று வரை மர்மம் நிறைந்ததாகவே இருக்கிறது.

மோடியால் திரும்பத் திரும்ப குறிப்பிடப்பட்ட ’சதி’ இன்னமும் நிரூபிக்கப்படமாலேயே இருக்கிறது.

அவர் குஜராத்தின் 14 வது முதலமைச்சராக  12 ஆண்டுகள் இருந்துவிட்டு, இந்தியாவின் 14வது பிரதம மந்திரியாக ஏழு வருடங்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறார். 

பொய் மனிதனின் கதை – ஜா. மாதவராஜ்
பொய் மனிதனின் கதை 2 – ஜா. மாதவராஜ்
பொய் மனிதனின் கதை 3 – ஜா. மாதவராஜ்

The story of the lying man (பொய் மனிதனின் கதை 3) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History

பொய் மனிதனின் கதை 3 – ஜா. மாதவராஜ்



“உண்மை மௌனத்தால் நிரப்பப்படுமானால், அந்த அமைதியும் பொய்யே!”
– யெவ்டுஷெங்கோ

”வதோராவில் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுவில் அவர் என்னை தனது மனைவியாக குறிப்பிட்டு இருக்கிறார். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இது நடந்திருக்கிறது. அவர் என்னை நினைவில் வைத்திருக்கிறார்.” என்று பா.ஜ.கவின் பிரதம வேட்பாளராக தேர்தலில் போட்டியிட்ட நரேந்திர மோடியின் மனைவியாகிய யசோதாபென் பத்திரிகையாளர்களிடையே 2014ம் ஆண்டு மே 24ம் தேதி சந்தோஷப்பட்டார்.

வேட்பு மனுவில் தனது மனைவியின் பெயராக யசோதாபென் என்று குறிப்பிட்டதைத் தவிர, நரேந்திர மோடி என்னும் ஆண் மகன் தன் திருமணம் குறித்தோ, தன் மனைவி குறித்தோ வேறு ஒரு வார்த்தையும் வேறு எங்கும் எப்போதும் உதிர்த்ததில்லை. .

யசோதாபென் என்னும் பெயரை நரேந்திர மோடியின் பேனா எழுதிய அந்த ஒரே ஒரு கணத்திற்கு பின்னணியாக சதிகளும் சூழ்ச்சிகளும் நிறைந்த அதிகார வேட்கை இருந்தது. இந்திய நாட்டின் அரசியல் இருந்தது. ராஜாவின் வெற்றிக்கு ஆட்டத்தின் துவக்கத்திலேயே பலி கொடுக்கப்பட்ட ஒரு பகடைக்காயின் கதை அது. பொய்யாய்ப் போன ஒரு பெண்ணின் கதை அது.

மோடிக்கு திருமணம் நடந்து 25 ஆண்டுகள் கழித்துத்தான் மோடி திருமணமானவர் என்னும் தகவலே வெளியில் வந்தது. அள்ள அள்ளக் குறையாத மர்மங்களின் மனிதர் அவர்.

பத்திரிகையாளர் வகீல் என்பவர் 1993ல் யசோதாபென்னை நேரில் சந்தித்து குஜராத்தின் அரசியல் பத்திரிகையான அபியானில் எழுதி இருந்தார். அப்போது குஜராத் அரசியலில் செல்வாக்கு பெற்ற கேசுபாய் பட்டேலுக்கு பக்கபலமாக மோடி இருந்தார். கட்சி மட்டத்தில் அறியப்பட்டவராய் இருந்தும், மக்கள் மத்தியில் பெரிய அளவுக்கு வெளிச்சம் பெறாதவர். எனவே அந்த செய்தி, முக்கியமற்ற ஒரு மனிதரின் தனிப்பட்ட விஷயமாய் கரைந்து போயிருக்க வேண்டும். ஆனால் அப்போதே ஆர்.எஸ்,எஸ்ஸும், விஸ்வ ஹிந்து பரிஷத்தும் தனக்கு கண்டனங்கள் தெரிவித்ததாக வகீல் குறிப்பிடுகிறார். ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு மோடியின் திருமணம் குறித்து ஆரம்பத்திலிருந்தே தெரிந்திருந்தது என்கிறார் அவர்.

2000ம் ஆண்டில் குஜராத் புஜ்ஜில் ஏற்பட்ட பூகம்பத்தையொட்டி, நிவாரணப் பணிகளில் கேசுபாய் படேலின் அரசு மக்களின் நம்பிக்கை இழந்து, வெறுப்பை சம்பாதித்தது, 2001ல் ஆர்.எஸ்.எஸ்ஸின் பரிந்துரையின் பேரில் அப்போது நாட்டின் பிரதம மந்திரியாய் இருந்த வாஜ்பாயால் குஜராத் அரசியலில் ஒரு புதிய முகமாக நரேந்திரமோடி களம் இறக்கப்பட்டார். அரசியல் எதிரிகளான கேசுபாய் பட்டேல் சங்கர்சிங் வகேலா இருவருக்கும் மோடி பொது எதிரியாகிறார்.

மோடிக்கு மாநில அளவில் கட்சியில் பெரிய ஆதரவு அப்போது இருக்கவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமலேயே முதலமைச்சரான மோடி ஆறு மாதத்திற்குள் இடைத்தேர்தலில் நின்று ஜெயிப்பதே பெரும் சிரமமாய் இருந்தது. இந்த நேரத்தில்தான், அயோத்திப் பிரச்சினையின் பின்னணியோடு கோத்ரா ரயில் சம்பவம் உருவானது. அதையொட்டி முஸ்லீம்களுக்கு எதிரான கலவரங்கள் குஜராத்தில் திட்டமிடப்பட்டு அரங்கேறின. நிகழ்த்தப்பட்ட வன்முறைகளால் தேசமே பதறியது. உலக நாடுகள் அதிர்ந்து கண்டனக்குரல்கள் எழுப்பின. வெறிபிடித்த இந்துத்துவா சக்திகள் அனைத்தும் மோடிக்கு ஆதரவு தெரிவிக்க, பா.ஜ.கவில் மோடியின் அரசியல் எதிரிகள் அனைவரின் சப்த நாடிகளும் ஒடுங்கிப் போயின. மோடியின் சுயரூபம் வெளிச்சத்துக்கு வந்த இடம் அதுதான். ஒன்றிலிருந்து ஒன்றாய் ஏற்படும் விளைவுகளிலிருந்து வரலாற்றில் தனிநபர் பாத்திரங்களை அறிய முடிகிறது.

குஜராத் கலவரங்களுக்குப் பிறகு 2003லிருந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலர் தங்கள் பகுதியில்தான் மோடியின் மனைவி வசிப்பதாக, முணுமுணுத்தாலும், மூர்க்கத்தனமான அதிகாரத்தின் மீதான பயம் உரக்க பேச விடாமல் செய்திருக்க வேண்டும். 2002 மற்றும் 2007 சட்டசபை தேர்தல்களிலும் அவர் வேட்பு மனுவில், திருமணம் பற்றிய விபரங்களை குறிப்பிடாமல் இருந்தார்.

வகீலுக்குப் பிறகு பதினாறு வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு பத்திரிகையாளர் வந்தார். உண்மையைப் போட்டு சத்தமாய் உடைத்தார்.

”மிகச் சாதாரணமான புடவை, பொருத்தமற்ற ரவிக்கை அணிந்து இருந்தார். லேசாக குனிந்த முகம் சுருக்கம் கொண்டிருந்தது. வாழ்வின் கஷ்டமான நேரங்களைப் பார்த்திருந்தன கைகள். முடியை இறுக்கமாக பின்னுக்கு இழுத்து கட்டியிருந்ததால் ஒரு கடுமையான தோற்றம் ஏற்பட்டிருந்தது.. செருப்பு அணிந்த கால்களில் வெடிப்புகள் நிறைந்து அழுக்காயிருந்தது. குஜராத்தில் ரஜோசனா கிராமத்தின் ஒரு பெண்ணாக அவர் இருந்தார்.”

இப்படித்தான் விவரிக்கிறார் பத்திரிகையாளர் ஹைமா தேஷ்பாண்டே. 2009ம் ஆண்டு மே மாதத்தில் ரஜோசனா கிராமத்துப் பள்ளிக்குச் சென்று அங்கு ஒன்றாம் வகுப்பு டீச்சராய் இருந்த யசோதாபென்னை, அவரது 57வது வயதில் நேரில் சந்தித்திருக்கிறார் ஹைமா. அப்போது குஜராத்தின் முதலமைச்சராய் இருந்த நரேந்திர தாமோதர்தாஸ் மோடிக்கும் யசோதாபென்னுக்கும் இந்து மதச் சடங்கின்படி திருமணம் நடந்து நாற்பத்தோரு வருடங்கள் ஆகி இருந்தது.

ஹைமா தன்னை அறிமுகம் செய்து கொண்டதும் ஒரு குழந்தையைப் போல உற்சாகமாகியிருக்கிறார் யசோதாபென். முகமெல்லாம் அப்படி சிரித்திருக்கிறது. தன்னைப் பற்றிச் சொல்லவும் விரும்பி இருக்கிறார். பள்ளியின் தலைமையாசிரியர் பிரவீன்குமார் வியாஸ் குறுக்கிட்டு, அவர் பத்திரிகையாளரோடு பேசிக்கொண்டு இருப்பதை நினைவுபடுத்தி இருக்கிறார். ”பள்ளி முடிந்ததும் பேசலாம். இப்போது வகுப்பறைக்குச் செல்லுங்கள்’ என உத்தரவிட்டிருக்கிறார்.

“இடைவெளி நேரத்தில் பேசுகிறேனே… கொஞ்ச நேரம்தான்” என்று சொல்லிப் பார்த்திருக்கிறார் யசோதாபென். தலைமையாசிரியர் அசையவில்லை. வேறு வழியின்றி பணிவுடன் அந்த இடத்தை விட்டு சென்றவர் சட்டென திரும்பி வந்து, “நான் என் கணவருக்கு எதிராக எதையும் சொல்ல மாட்டேன். அவர் மிகவும் சக்தி வாய்ந்தவர். இந்த வேலைதான் என் வாழ்க்கை. பயமாய் இருக்கிறது “ என்று சொல்லி அகன்றிருக்கிறார்.

உடனடியாக தலைமையாசிரியர் யாரிடமோ செல்போனில் பேசி இருக்கிறார். அடுத்து யசோதா பென்னின் வகுப்பறைக்குச் சென்றிருக்கிறார். அதன் பின்னர் யசோதாபென் முற்றிலும் வேறொருவராக தென்பட்டிருக்கிறார். முகத்தில் கொஞ்சம் கூட சிரிப்பு இல்லாமல் போயிருக்கிறது. பதட்டமாக காணப்பட்டிருக்கிறார். திரும்ப ஹைமா சென்று அவரை சந்திக்க முயற்சித்தபோது பேசுவதை புறக்கணித்து, என்னை தனியாக இருக்க விடுங்கள் என சத்தம் போட்டிருக்கிறார்.

தொடர்ந்து சில ஆண்கள் அங்கு வாகனங்களில் வந்திருக்கிறார்கள். தலைமையாசிரியரின் அறைக்குள் நேரடியாக சென்றிருக்கிறார்கள். சிறிது நேரத்தில் வெளியேறி இருக்கிறார்கள். பள்ளி முடிந்ததும் வெளியே காத்திருந்த ஆட்டோவில் ஓடிச்சென்று ஏறி முகத்தை கைகளால் பொத்தியவாறு 20 கி.மீ தள்ளி இருக்கும் தன் சகோதரர் வீட்டிற்கு அன்றைக்கு போயிருக்கிறார் யசோதாபென். சில நிமிடங்களில் அரசு பத்திரிகையாளர் என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட ஒரு இளைஞன் வந்து உடனடியாக இங்கிருந்து சென்று விடுங்கள் என ஹைமா தேஷ்பாண்டேவிடம் சொல்லி இருக்கிறான். அவரும், அவரது குழுவினரும் அங்கிருந்து கிளம்ப வேண்டியதாகி இருக்கிறது.

அந்த கிராமத்து மக்களிடம் ஹைமா விசாரித்ததில் சில தகவல்கள் கிடைத்திருக்கின்றன. அதே ஊரில் நூறு சதுர அடிக்கும் குறைவான, தகர கொட்டாய் வேய்ந்த ஒரு சிறு வீட்டில்தான் யசோதா பென் வாழ்ந்து வந்திருக்கிறார். கழிப்பிடம் கூட கிடையாது. ஒத்தாசைக்குக் கூட யாரும் கிடையாது. அவரால் வேறொரு இடத்தில் இதை விட சௌகரியமாகக் கூட வாழ்ந்திருக்க வாய்ப்பிருந்திருக்கிறது. ஆனால் ஏன் அந்த சிறிய ஊரில் அவதிப்பட வேண்டும் என்பது பிடிபடவில்லை. மிக ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அவர்தான் முதலமைச்சர் நரேந்திர மோடியின் மனைவி என அங்கு பெரும்பாலோருக்குத் தெரிந்திருந்தது.

ஹைமா தேஷ்பாண்டே மூலம் பத்திரிகைகளில் இந்த தகவல்கள் வந்த பின்னரும் கூட 2012ம் ஆண்டில் நடந்த சட்டசபை தேர்தலில் மோடி வேட்பு மனுவில் அவரது திருமணம் பற்றி குறிப்பிடவில்லை. “நான் தனி ஆள். எனக்கு குடும்பம் இல்லை. நான் யாருக்காக ஊழல் செய்ய வேண்டும்? என் உடல் உயிர் எல்லாமே மக்களுக்கு சேவகம் செய்யத்தான்!” என தொடர்ந்து கூட்டங்களில் இரண்டு கைகளையும் நீட்டி முழக்கிக் கொண்டிருந்தார்.

People Representation Act ஐ மீறியதற்காக மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி 2013ம் ஆண்டில் வழக்குத் தொடரப்பட்டது.. இதில் தேர்தல் கமிஷனே முடிவெடுக்க வேண்டும் எனச் சொன்னது நீதிமன்றம். தேர்தல் கமிஷனும் பழைய கதைகளை எல்லாம் ஆராய விரும்பாமல், “இனி தேர்தலில் நிற்பவர்கள் வேட்பு மனுவில் எதையும் நிரப்பாமல் விடக் கூடாது, கேட்கப்பட்ட அனைத்து விபரங்களும் தர வேண்டும்” என்று பொதுவான ஒரு விதியை எல்லோருக்குமாக அறிவித்து தன் நியாயத்தை முடித்துக் கொண்டது..

இந்த நேரத்தில்தான் பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.. பாஜகவின் பிரதம வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டார்.

நரேந்திர மோடிக்கும், பாஜகவுக்கும் சத்திய சோதனை ஏற்பட்டது. வேறு வழியில்லாமல் 1968ம் ஆண்டு நடந்த திருமணத்தை 46 ஆண்டுகள் கழித்து நரேந்திர மோடி 2014ம் ஆண்டில் உலகத்தின் முன்னே ஒப்புக் கொண்டார்.

பத்திரிகைகளிலும், சமூக வலைத்தளங்களிலும் இதுகுறித்து விவாதங்களும், மோடியின் மீது கண்டனங்களும் எழுந்தன. “BJP ‘bachelor’ Modi admits marriage” என பிபிசி மானபங்கம் படுத்தியது.

பதில் சொல்ல வேண்டிய மோடியோ கூட்டத்தினிடையே மேடையேறி அங்கும் இங்கும் நகர்ந்து டஸ்டரை வைத்து எதையோ அழிப்பது போல கைகளை அசைத்துக் கொண்டு இருந்தார்.

மோடியின் ஒவ்வொரு பொய்யையும் சமாளிப்பதும், மடை மாற்றுவதும் பாஜக என்னும் ’தூய்மையான’ கட்சி’யின் முக்கிய அலுவல் பணியாகிப் போனது.

“மோடி திருமண விபரத்தை சொல்லவில்லை. அவ்வளவுதானே. திருமணம் ஆகவில்லை எனச் சொல்லி இருக்கிறாரா? இது எப்படி பொய்யாகும், குற்றமாகும்”

“மோடியின் திருமணமா இங்கு முக்கியம்?. நாட்டின் முன் ஊழல் முதற்கொண்டு எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கின்றன. அதைப் பற்றி பேச வக்கில்லை.”

“மோடியின் மனைவியே இதுகுறித்து கவலைப்படாதபோது, சம்பந்தமில்லாதவர்கள் ஏன் அலட்டிக்கொள்ள வேண்டும்”

இதில் நிர்மலா சீதாராமன் பேசியதுதான் உச்சம். “மோடி அவர்களின் திருமணம் ஒரு குழந்தைத் திருமணம். அதற்கெல்லாம் மதிப்பளிக்க வேண்டுமா?”

மோடியின் திருமணம் நடந்தது 1968ம் ஆண்டு. அவரது பிறந்த ஆண்டு 1950 என்று வைத்துக் கொண்டாலும் அவரது 18வது வயதில் திருமணம் நடந்திருக்கிறது. யசோதாபென்னுக்கு 16 வயது. 1929ம் ஆண்டு சட்டப்படி பெண்ணுக்கு திருமண வயது 14 எனவும், ஆணுக்கு 18 எனவும் இருந்தது. எனவே அதனை குழந்தைத் திருமணம் என்று வகைப்படுத்த முடியாது.

திருமணம் நடந்து மூன்றாண்டுகள் மோடி குடும்பத்தாருடன் இருந்தாலும், மோடியுடன் கூட வாழ்ந்தது மூன்று மாதங்கள் போலத்தான் என்றும் அதன் பிறகு அவர் வீட்டை விட்டு சென்று விட்டதாகவும், அவரிடமிருந்து எந்த தகவல்களும் இல்லை என்றான பிறகு அவரது குடும்பத்திலிருந்து விலகி வந்து தனது சகோதரர் குடும்பத்துடன் வாழ்ந்து வந்ததாக யசோதாபென் கூறுகிறார். மீண்டும் படிக்கத் துவங்கியதாகவும், ஆசிரியர் பணிக்குச் சேர்ந்ததாகவும் தனிமை நிறைந்த தன் வாழ்வின் போக்கை தொடர்கிறார்.

மோடியின் சகோதரர் சோமபாய் மோடிவின் கூற்று வேறாக இருக்கிறது. மோடிக்கு அவ்வளவு சிறுவயதில் திருமணம் செய்வது பிடிக்கவில்லை என்றும், குடும்பத்தாரின் கட்டாயத்தினால் திருமணம் செய்ததாகவும், எனவே திருமணம் ஆனவுடன் வீட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும், பின்னர் குடும்பத்தாருடன் வந்து மோடி தங்கவே இல்லை என்றும் அவர் சொல்கிறார்.

திருமணம் பிடிக்கவில்லை என்றால், திருமணத்துக்கு முன்பே மோடி வீட்டை விட்டு சென்றிருக்கலாமே என்னும் கேள்வி எழுத்தான் செய்கிறது. என்ன நடந்தது, ஏன் நடந்தது என்னும் ஆராய்ச்சிகளுக்கும், விவாதங்களுக்கும், ஊகங்களுக்கும் சென்றாலும் யசோதாபென்னுக்கு யாரும் நியாயம் வழங்கிட முடியாது.

அதிகார பீடத்தின் உச்சியில் இருக்கும் சக்தி வாய்ந்த மனிதரின் மனைவியாகிய அந்த மிகச் சாதாரண பெண்மணி தனது சிந்தனைகள் எல்லாவற்றையும் அப்படியே இனி எப்போதும் வெளிப்படுத்திட முடியாது.

ஆனால் இந்தியா டுடே பத்திரிகைக்கு 2014ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி யசோதாபென் அளித்த பேட்டியில் சில உண்மைகள் அவரிடமிருந்து வெளிப்பட்டு இருக்கின்றன.

இந்தியா டுடே: ”இத்தனை நாளும் மனைவி என்ற ஸ்தானத்தை கொடுக்காமல் தாங்கள் அலட்சியப்படுத்தப்பட்டதாக உணர்கிறீர்களா?”

யசோதாபென்: ”இல்லை. நான் மோசமாக உணரவில்லை. விதியாலும் கெட்ட நேரத்தாலும்தான் அவ்வாறு செய்கிறார் என்பது எனக்குத் தெரியும். சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர் அவ்வாறு பேசுகிறார், பொய்யும் சொல்கிறார். என் நிலைமை ஒன்றும் மோசமாகவில்லை. ஒருவகையில் அதிர்ஷ்டம் என்னை மேம்படுத்தியே இருக்கிறது.”

இந்தியா டுடே: ”ஏன் நீங்கள் மறுமணம் செய்து கொள்ளவில்லை?”

யசோதாபென்: ”இந்த அனுபவத்திற்குப் பிறகு எனக்கு திருமணம் செய்து கொள்ளத் தோன்றவில்லை. என் மனம் அதில் இல்லை.”

சில வார்த்தைகளில் ஒரு வாழ்க்கையையே தரிசிக்கும்படி ஆகிவிடும். அப்படி ஒரு உரையாடல் இது.

யசோதாபென் உண்மையாகவும், மோடி பொய்யாகவும் காலத்தின் முன் நிற்கிறார்கள்.

முந்தைய தொடர்களை வாசிக்க: 

பொய் மனிதனின் கதை – ஜா. மாதவராஜ்
பொய் மனிதனின் கதை 2 – ஜா. மாதவராஜ்

The story of the lying man (பொய் மனிதனின் கதை 2) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History

பொய் மனிதனின் கதை 2 – ஜா. மாதவராஜ்



அத்தியாயம் – 2

“சாத்தான் ஆரம்பத்திலிருந்தே பொய் சொல்கிறவனாக இருக்கிறான்”
– ஜோசப் வெர்த்லின்

“பிரதமருக்கு 56 இஞ்ச் மார்பு இருக்கிறதா என்பதை அறிய நாடு விரும்பவில்லை. ஆனால் அவரின் உண்மையான பிறந்த நாள் என்ன, அவர் தனது இளநிலை, முதுகலை பட்டங்களை பெற்ற விபரம், அவருடன் படித்த மணவர்களில் குறைந்த பட்சம் 10 பேர் யார் என்னும் தகவல்களை தெரிந்து கொள்ள விரும்புகிறது” என நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி சக்திசிங் கோஹில் 2016 ஏப்ரல் மாதத்தில் கேட்டார்.

கடந்த காலம் குறித்த தகவல்களில் குழப்பங்களும், மர்மங்களும்  நிறைந்த ஒரு பிரதமரை இந்தியா முதன் முதலாக சந்தித்து இருந்தது.  உலக நாடுகளின் தலைவர்கள் யாருக்கேனும் இப்படியெல்லாம் நேர்ந்திருக்குமா என்று தெரியவில்லை. 

பிரதமர் மோடியின் வலைத்தளத்தில் அவரது கடந்த காலத்திற்கான தகவல்கள் சொற்பமாகவே இருந்தன.  குஜராத்தில் மிகச் சிறிய நகரம் ஒன்றில் 1950ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி பிறந்ததாகவும், ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தால் கடின உழைப்பு குறித்து அவர் அறிந்திருந்ததாகவும், தேசபக்தி இயக்கமான ஆர்.எஸ்.எஸில் சிறுவயதிலேயே இணைந்து பணியாற்றியதாகவும் குஜராத்தில் எம்.ஏ (Political Science)  பட்டம்  பெற்றதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

அப்புறம் சின்ன வயதில் இந்த டீ விற்றது, முதலையைப் பிடித்து வீட்டுக்கு கொண்டு வந்தது எல்லாம் கூட்டங்களில் அவரே பேசி இருந்தார். பள்ளியில் கபடி மேட்சில் ஜெயித்தது, தீண்டாமைக் கொடுமையை விளக்கும் நாடகம் எழுதி அரங்கேற்றியது எல்லாம் யார் சொல்லி பத்திரிகைகளில் வெளியிட்டார்களோ தெரியவில்லை. அவ்வப்போது மோடியின் சின்ன வயதுக் கதைகள் இப்படி ஆதாரங்களோ, சாட்சிகளோ இல்லாமல் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. 

அவைகளையும் பொருட்படுத்தி மெனக்கெட்டு ஆராய்ந்து பார்த்ததில், மோடி எட்டு வயதில், அதாவது, 1958ம் வருடத்தில், டீ விற்ற வடநகரில் ரெயில்வே ஸ்டேஷன் திறக்கப்பட்டதே 1973ம் வருடமாக இருந்தது. மோடி பற்றிய மற்ற கதைகள் குறித்தும் அதையொட்டியே ஒரு அபிப்பிராயத்துக்கு வர, வேண்டி இருந்தது.

The story of the lying man (பொய் மனிதனின் கதை 2) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History

அவரது பிறந்த தேதி, படிப்பு குறித்த கதைகளை அப்படி எளிதாக எடுத்து விட முடியாது. வரலாறு என்பது கற்பனைகளாலோ, கட்டுக் கதைகளாலோ, ஊகங்களாலோ இருந்து விடக் கூடாது. நாட்டின் பிரதம மந்திரியின் வலைத்தளத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட தகவல்கள் மொத்த இந்தியாவுக்கானது. உலகத்திற்கானது. எதிர்காலத்திற்குமானது. எனவே அதையும் சமூக ஆர்வலர்கள் ஆராயத் துவங்க, கிணறு வெட்ட பூதங்கள் கிளம்ப ஆரம்பித்தன.

குஜராத்தில், வடநகரில், பி.என். உயர்நிலைப்பள்ளியில் படித்த நரேந்திர தாமோதர்தாஸ் மோடியின் எஸ்.எஸ்.எல்.சி சர்டிபிகேட்டில் அவரது பிறந்த தேதி 1949ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி என குறிப்பிடப்பட்டு இருந்தது. பிறகு எப்படி அவரது பிறந்த தேதி 1950ம் வருடம் செப்டம்பர் 17ம் தேதி என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பது முதலில் வந்த பூதம்.

சர்ச்சைகளும், விவாதங்களும் கேள்விகளும் எழ ஆரம்பித்தன. வழக்கம்போல் நேரடியாக முகம் காட்டி பதில் சொல்லாமல் இருந்தார் பிரதமர் மோடி. அவரது மூத்த அண்ணன் சோமபாய் மோடிதான் வாயைத் திறந்து பேசினார். 1950ம் வருடம் செப்டம்பர் 17ம் தேதி நரேந்திர மோடி பிறந்ததாகவும், பிறந்தவுடன் எழுதப்பட்ட ஜாதகத்தில் அந்த தேதி குறிப்பிடப்பட்டு இருப்பதாகவும், மோடியை பள்ளியில் சேர்க்கும்போது தவறான பிறந்த தேதியை மோடியின் பெற்றோர்கள் கொடுத்துவிட்டதாகவும், அதை மோடி பின்னாளில் சரி செய்து விட்டதாகவும், பெற்றோர்கள் செய்த தவறுக்கு மோடி எப்படி பொறுப்பாக முடியும் என்று தனக்கு விதிக்கப்பட்ட கடமையை முடித்துக் கொண்டார்.

பள்ளியில் பிறந்த நாளை தவறாகக் கொடுத்து சேர்ப்பது சென்ற தலைமுறை வரைக்கும் சாமானிய மக்களுக்கு நேர்கிற கதி என்பதை ஒப்புக்கொள்ள முடியும். 

The story of the lying man (பொய் மனிதனின் கதை 2) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History

கவனிக்க வேண்டியது என்னவென்றால், சரியோ, தவறோ பள்ளியின் சர்டிபிகேட்தான் செல்லுபடியாகும். ஆதாரமானதாகும். அதிகாரபூர்வமானதாகும். ஜாதகப்படி என்பதெல்லாம் சட்டப்படி செல்லுபடியாகாது. அப்படியென்றால் நரேந்திர மோடி பள்ளியில் தனது பிறந்தநாள் தவறாக கொடுக்கப்பட்டு இருப்பதை எப்போது அறிந்தார், எந்த ஆதாரத்தின் அடிப்படையில் அதை செப்டம்பர் 17, 1950 என மாற்றினார் என்பதெல்லாம் இன்று வரை அவரது தரப்பில் தெரிவிக்கப்படாமலேயே இருக்கின்றன.

இதையொட்டி அடுத்த பூதமாக மோடியின் கல்வித் தகுதி கேள்விக்குள்ளானது. நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி தாக்கல் செய்திருந்த வேட்பு மனுவில் தனது கல்வித்தகுதியாக, 1978ம் வருடம் டெல்லி யூனிவர்சிட்டியில் பி.ஏ படித்ததாகவும், 1983ம் வருடத்தில் குஜராத் யூனிவர்சிட்டியில் எம்.ஏ படித்ததாகவும் சொல்லியிருந்தார். அதாவது, 1950ம் வருடம் பிறந்ததாக சொல்லப்படும் மோடி, அவரது 28வது வயதில் பி.ஏ முடித்து, 33வது வயதில் எம்.ஏ முடித்திருந்தார்.

குஜராத்தில் அகமதாபாத்தைச் சேர்ந்த ரோஷன் ஷா என்னும் அரசியல் செயற்பாட்டாளர், மோடியின் எம்.ஏ கல்வித்தகுதி குறித்து 2013ம் ஆண்டு RTI மூலம் கேள்விகள் எழுப்பி இருந்தார். அப்போது குஜராத்தின் முதலமைச்சராக மோடி இருந்தார். குஜராத் யுனிவர்சிட்டியில் இருந்து பதில் வரவில்லை. திரும்பவும் 2014ம் ஆண்டு பிரதம மந்திரி அலுவலகத்துக்கு கேள்விகள் அனுப்பினார். அப்போது மோடி பிரதம மந்திரியாய் இருந்தார். அது குறித்த ஆவணங்கள் தங்களிடம் இல்லை என பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்துவிட்டது.  

The story of the lying man (பொய் மனிதனின் கதை 2) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History

ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த கெஜ்ரிவால் சந்தேகங்கள் எழுப்ப ஆரம்பித்தார். 1978ல் நரேந்திர மோடி என்பவர் டெல்லியில் பி.ஏ படித்திருப்பதாகவும், அவர் இந்த நரேந்திர மோடி இல்லை என்றும் அவரது முழுப் பெயர் நரேந்திர குமார் மகாவீர் பிரசாத் மோடி என்றும், அவர் 1958ல் பிறந்தவர் என்றும் தகவல்களை வெளியிட்டார். 

ஒரு நாட்டின் பிரதமர் தங்கள் கல்லூரியில் படித்தவர் என்றால் அது அந்த கல்லூரிகளுக்கு எவ்வளவு பெருமை! அதனை தங்கள் வளாகங்களில் பொன்னெழுத்துகளால் குறிப்பிட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைத்திருப்பார்களே, அப்படி எதுவும் ஏன் நிகழவில்லை என்று கேள்வி எழுப்பப்பட்டது. நரேந்திர மோடியுடன் படித்தவர்கள் இந்த நாட்டில் இருப்பார்களே, அவர்களில் ஒருவராவது மோடி என்னோடு படித்தவர் என எந்த அனுபவத்தையும் பகிரவில்லையே என சந்தேகப்பட்டனர்.

மோடி மௌனம் சாதித்ததாலும், டெல்லி யுனிவர்சிட்டியும், குஜராத் யுனிவர்சிட்டியும் காலதாமதம் செய்ததாலும்  மேலும் சந்தேகங்களை எழுப்பினார் கெஜ்ரிவால். ஊடகங்கள் அமைதியாய் இருந்தன. அப்போதைய டைம்ஸ் நவ் – இப்போதைய ரிபப்ளிக் டிவி – அர்னர்ப் கோஸ்வாமிக்கு அடி வயிற்றிலிருந்து கத்த வேறு பிரச்சினைகள் இருந்தன. தன்னைப் போன்று ஒரு மெழுகுச் சிலை வடிவமைப்பதற்காக மணிக்கணக்கில் போஸ் கொடுத்த மோடிக்கு இந்த சந்தேகங்களுக்கு பதில் சொல்ல நேரமில்லாமல் போனது.  அவரது பரிவாரங்களும், பக்த கோடிகளும் “இதுதான் நாட்டின் முக்கியப் பிரச்சினையா?” என்று அலட்சியப்படுத்த முனைந்தனர். என்னமோ, நாட்டின் வறுமை, வேலையின்மை, தீண்டாமை, பெட்ரோல் விலையேற்றம், விவசாயிகளுக்கான நெருக்கடிகளை எல்லாம் தூக்கிப் பிடித்து தீர்க்கிறவர்கள் போல அலட்டிக் கொண்டனர். 

The story of the lying man (பொய் மனிதனின் கதை 2) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History

சமூக ஊடகங்களில் மோடி குறித்த கிண்டல்களும், கேலிகளும் குவிய ஆரம்பித்தன. வெக்கையும், புழுக்கமும் தாங்க முடியாமல், பிஜேபி கட்சித்தலைவர் அமித்ஷாவும், நிதியமைச்சர் அருண்ஜெட்லியும் கூட்டாக இரண்டு காகிதங்களைக் கையில் பிடித்தபடி தங்கள் கூடாரத்தை வெளியே வந்தனர். காத்திருந்த பத்திரிகையாளர்களிடம், “இதுதான் மோடியின் கல்விச் சான்றிதழ்கள். அரவிந்த் கெஜ்ரிவால் நாட்டு மக்களிடமும், நரேந்திர மோடியிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று சொல்லிச் சென்றனர். அதுவரை வாயைப் பொத்திக்கொண்டு இருந்த ஊடகங்கள் அனைத்தும் இதனை ’பிரேக்கிங் நியுஸாக’ வெளியிட்டு கத்தித் தொலைத்தன. அந்த பரபரப்பு கொஞ்சம் கூட நீடிக்கவில்லை. 

நாட்டின் அதிமுக்கிய மனிதர்கள் இரண்டு பேர் தங்கள் பிரதம மந்திரி குறித்து வெளியிட்ட அந்த கல்விச்சான்றிதழ்கள் போலியானவை என்றும், போட்டோ ஷாப்பில் தயாரிக்கப்பட்டவை என்றும், சான்றிதழ்களில் காணப்படும் fontகள் 1991க்குப் பிறகுதான் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது என்றும், தேதிகள், பெயர்களில் மாற்றம் இருக்கின்றன என்றும், மோடி வாங்கிய மார்க்குகளின் கூட்டல்களில் தவறு இருக்கிறது என்றும் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள் எழுந்தன. உண்மைதான். 23+23+67+23 = 136 தான் வரவேண்டும். மார்க்‌ஷீட்டில் 165 என்றிருந்தது.  திரும்பவும் ஊடகங்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட கடிவாளங்களை மாட்டிக்கொண்டு வேறு பிரேக்கிங் நியுஸுக்காக ஓளிந்து கொண்டன.

நாட்டின் பிரதமரின் மானத்தையும், கல்வி அறிவையும் காப்பாற்ற வேண்டிய பாத்திரம் டெல்லி யுனிவர்சிட்டிக்கு இந்த நாடகத்தில் விதிக்கப்பட்டது. “பிஜேபி தலைவர்கள் காட்டிய ரெகார்டுகள் உண்மையானவை. பிரதமர் மோடி டெல்லி யுனிவர்சிட்டியில் படித்து பட்டம் பெற்றிருக்கிறார்.” என்று பஞ்சாயத்தை முடிக்க முயற்சித்தார் யூனிவர்சிட்டி துணை வேந்தர். 

“மார்க்‌ஷீட்களில் இருக்கும் பெயர் வித்தியாசமானதாக இருக்கிறதே?” என்ற கேள்விக்கு அது ஒரு வழக்கமான தவறுதான். இது போன்று வேறு சில மாணவர்களுக்கும் நிகழ்ந்திருக்கிறது என்று மட்டையடியாய் ஒரு பதிலைச் சொன்னார்.

“மோடி டிகிரி முடித்தது 1978ம் ஆண்டு. ஆனால் 1979ம் ஆண்டு என சர்டிபிகேட்டில் குறிப்பிடப்பட்டு இருக்கிறதே?” என்ற கேள்விக்கு,  இது போன்ற சின்ன தவறுகளுக்கு எல்லாம் பதில் அளிக்க முடியாது என்று ஒரேயடியாய் சொல்லி தன் பாத்திரத்தை முடித்துக் கொண்டார்.

அதிகாரத்தில் இருக்கும் ஒருவரின் ஒரு பொய் எவ்வளவு பேரை அலைக்கழிக்கிறது! ஒன்றை மறைக்க எத்தனை எத்தனை பொய்கள் அவதாரமெடுக்கின்றன.

“போட்டோ ஷாப்பால் வாழ்ந்தவன் போட்டோ ஷாப்பால் வீழ்வான்” என்னும் புது நீதிகள் டுவிட்டரில் தெறித்தன. “முன்னாபாய் எம்.பி.பி.எஸ் போல மோடிபாய் பி.ஏ, எம்.ஏ” என கிண்டல்கள் அள்ளின. 

The story of the lying man (பொய் மனிதனின் கதை 2) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History

இன்னொருபுறம், “டெல்லி நிர்வாகத்தை கவனிக்காமல் கெஜ்ரி்வால் ஏன் மோடியையே மோப்பம் பிடிக்கறார்?”, “இதுபோல் தனிநபர் குறித்த ஆராய்ச்சிகளால் நாட்டின் அரசியல் தரம் தாழ்ந்துவிட்டது“, “கெஜ்ரிவால் படித்தவர்தானே, அவர் செய்யக் கூடிய செயலா இது?”, “இதற்காக கெஜ்ரிவாலை டெல்லி மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை”, “மோடியின் படிப்பைத் தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறார்கள்?” என்னும் விமர்சனங்கள் வந்து மோதின. 

மோடி படித்தவரா, படிக்காதவரா என்பது விவாதமே அல்ல. நாட்டு பிரதமரின் நம்பகத்தன்மை குறித்த விவாதம் அது. அவர் எப்படி மக்களை மதிக்கிறார்  என்பதுதான் இதில் கவனிக்க வேண்டியது.

ரோஷன் ஷாவும் விடவில்லை. ”ஏன் அமித்ஷா டூப்ளிகேட் சர்டிபிகேட்களை காண்பிக்க வேண்டும். மோடியிடம் இருந்து ஒரிஜினல் சர்டிபிகேட்களை வாங்கி காண்பிக்கலாமே?” என்று  கேட்டார். ”பள்ளிக் கல்வி முடிந்ததும், வீட்டை விட்டு கிளம்பி விட்டதாகவும், இமாலயக் காடுகளில் எல்லாம் சுற்றித் திரிந்ததாகவும் மோடியே ஒரு பேட்டியில் சொல்கிறார். இமாலயத்தில் இருந்து கொண்டு அவர் டெல்லி யுனிவர்சிட்டியிலும், குஜராத் யுனிவர்சிட்டியிலும் எப்படி பட்டம் வாங்கினார். ஒரு மனிதர் ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் இருக்க முடியுமா?” என கேட்டார். யாரிடமும் பதில் இல்லை.

Rediff.comலிருந்து ரோஷன் ஷாவிடம் கேட்டார்கள். ”நீங்கள் ஏன் மோடியை நம்ப மறுக்கிறீர்கள்?”.

அதற்கு ரோஷன் ஷா, “மோடி தொடர்ந்து தவறுகள் செய்யும் வழக்கம் கொண்டவர். ஒரு தவறை செய்துவிட்டு அதை மறைப்பதற்காக இல்லாத ஆதாரங்களை உருவாக்குவார் அல்லது இருக்கும் ஆதாரங்களை அழித்துவிடுவார். அது அவரது இயல்பு.” என்றார்.

நாட்டின் அதிகாரத்தை தன்னிடம் வைத்திருப்பவர்களுக்கு டெல்லி மற்றும் குஜராத் யுனிவர்சிட்டிகளில் கல்விச் சான்றிதழ்களை உருவாக்குவதோ அல்லது சான்றிதழ்கள் இருக்கின்றன எனச் சொல்ல வைப்பதோ மிகச் சாதாரண விஷயம்தான். 

ஆனால் நாட்டின் பிரதம மந்திரியின் கல்வித்தகுதிக்கான ஒரிஜினல் சான்றிதழ்கள் இதுவரை இல்லையென்பதும், இருந்தவையும் போலியானவை என்பதும் சாதாரண விஷயமல்ல.

பொய் மனிதனின் கதை – ஜா. மாதவராஜ்

The story of the lying man (பொய் மனிதனின் கதை) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). Book Day is Branch of Bharathi Puthakalayam

பொய் மனிதனின் கதை – ஜா. மாதவராஜ்



அத்தியாயம் – 1

“நீ பொய்யன் என்பதை அறிந்து கொள்வதற்கு ஒரு பொய் போதும். கடந்த காலத்தில் நீ செய்தவைகளை மக்கள் மறப்பதற்கும் எதிர்காலம் முழுவதையும் அந்த மக்கள் சந்தேகத்தோடு பார்ப்பதற்கும் பொய்கள் உதவுகின்றன.” – நிஷான் பன்வார்

எழுத்தாளர் சேட்டன் பகத் முதன்முறையாக ஏ.பி.பி செய்தி சேனலில், ‘7 RCR’ என்னும் அந்த தொடரை 2014ம் வருடம் ஜனவரி மாதம் முதல் நடத்தியதற்கு காரணங்களும், பின்னணியும் இருந்தது. இந்திய மத்திய வர்க்கத்தின் இளைய தலைமுறையால் நெருக்கமாக அறியப்பட்டவர் சேட்டன் பகத். 2010ம் ஆண்டு உலகின் மிக செல்வாக்கு பெற்ற நூறு பேரில் ஒருவராக அவரை டைம் பத்திரிகை அறிவித்திருந்தது.

The story of the lying man (பொய் மனிதனின் கதை) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). Book Day is Branch of Bharathi Puthakalayam

2014 பாராளுமன்ற தேர்தலில் டெல்லி ரேஸ் கோர்ஸ் சாலையில். 7ம் நம்பர் வீட்டை அடையக் கூடிய முக்கிய அரசியல் தலைவர்களின் பிம்பங்களை காவியமாக்கும் தன்மையில் அந்த தொடரின் அத்தியாயங்கள் அமைந்திருந்தன. பரந்து விரிந்த இந்திய நிலப்பரப்பின் மீதும் மக்களின் மீதும் செல்வாக்கும், அதிகாரமும் செலுத்தக் கூடிய மனிதர் இவர்களில் ஒருவர் என்று ஆவலைத் தூண்டுவதுதான் அந்த நிகழ்ச்சியின் சாராம்சம்.

மொத்தம் பதினைந்து எபிசோட்களில், நரேந்திர மோடிக்கு ஆறு, ராகுல் காந்திக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் தலா இரண்டு, நிதிஷ் குமார், மம்தா பானர்ஜி, மாயாவதி, முலாயம்சிங் யாதவ், ஜெயலலிதா ஆகியோருக்கு தலா ஒன்று என முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. தங்கள் உள்ளமும் அறிவும் கவர்ந்த எழுத்தாளரின் உள்ளக் கிடக்கையை வாசக பெருமக்கள் பார்த்தார்கள்.

ஒரு மனிதர் எல்லோரும் பார்க்கிற மாதிரி வெளிச்சத்துக்கோ, உயரத்துக்கோ அல்லது முன்னுக்கோ வருகிறபோது, அவர் மட்டும் வருவதில்லை. அவரது கடந்த காலமும் சேர்ந்தே வருகிறது. அதுவரைக்கும் அவரைப் பற்றி அறியாதவர்கள் அவரது கடந்த காலத்தை தெரிந்து கொள்ள முற்படுகிறார்கள். அவர் எப்படிப்பட்டவர் என்பதற்கான தடயங்கள் அங்குதான் இருக்கின்றன. அவ்வகையில் நரேந்திர மோடியின் கடந்த காலம் பலருக்கும் அறியப்படாமல் இருந்ததால் அல்லது அதிகமாக சொல்லப்பட வேண்டி இருந்ததால் அவருக்கு மட்டும் ஆறு எபிசோட்கள் என்றும் அந்த முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளலாம்.

The story of the lying man (பொய் மனிதனின் கதை) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). Book Day is Branch of Bharathi Puthakalayamநரேந்திர தாமோதர்தாஸ் மோடி என்பவர் குஜராத்தில் இப்போதும் ஒரு டீக்கடை நடத்திக்கொண்டு இருப்பவராக வைத்துக் கொள்வோம். அசாமிலோ, தமிழ்நாட்டிலோ உள்ள டீக்கடைகளில் யாராவது அவரைப் பற்றி பேசிக்கொண்டு இருக்கப் போகிறார்களா? அவர் என்ன படித்தார், யசோதா பென்னோடு ஏன் சேர்ந்து வாழவில்லை என்றெல்லாம் யாராவது சிந்திக்கப் போகிறார்களா? அவரது கடந்த காலம், நிகழ்காலம் எல்லாமே அவருக்கும், அவரது குடும்பத்துக்கும், நண்பர்களுக்கு மட்டுமே தெரிந்தவையாக இருக்கும். அவர்களுக்கு மட்டுமே சம்பந்தப்பட்டவையாகவும் இருந்திருக்கும்.

‘அவரே இனி இந்தியாவின் பிரதமர்’ என பெரும் சத்தத்தோடு சங்கு ஊதப்பட்டது. எல்லோருக்கும் சம்பந்தப்பட்ட மனிதராகிவிட்டிருந்தார். அவரை கடுமையாக எதிர்த்தும், கடுமையாக ஆதரித்தும் எங்கும் பேசப்பட்டது. அவரது கொள்கைகள், பார்வைகள், சிந்தனைகள், தத்துவங்கள், அனுபவங்கள் எப்படிப்பட்டவை என ஆராயாமல், அவரது தனிப்பட்ட குண நலன்கள்கள், இயல்புகள், வாழ்க்கை குறித்த அலசலாக மாற்றி, அவரை நாயகனாக்கும் காரியங்கள் கார்ப்பரேட் மூளைகளில் இருந்து அரங்கேறிக் கொண்டு இருந்தன. அதில் ஒரு எபிசோட்தான் சேட்டன் பகத்தின் ’7 RAC’ தொடர். சைரன் பொருத்திய காரொன்று வாசல் திறக்க ஒரு ஒரு மாளிகை நோக்கி பயணிக்கும் காட்சியுடன் துவங்கியது.

அறிந்திராத பல தகவல்களால் மோடி வடிவமைக்கப்பட்டிருந்தார். “டீ விற்றவர் பிரதம வேட்பாளராக..” என்ற பின்னணிக்குரலில் மனதை கவ்வும் ஈர்ப்பு இருந்தது. மோடி பிறந்த வட நகர், அவர் பிறந்த வீடு, படித்த பள்ளி என தொடர்ந்த காட்சிகள் ஆழ்ந்து போக வைத்தன. மோடிக்கு நெருக்கமானவர்கள், மோடியை அறிந்தவர்களின் உரையாடல்கள் அரூபமான இசைச் சேர்க்கையோடு பார்வையாளர்களை தன்னிலை இழக்க வைத்தன.

அப்படித்தான் மோடியின் பள்ளி நண்பர் சுதிர் மிஸ்ரா போகிற போக்கில் அந்த தகவலைச் சொன்னார். தனது பதினான்காவது வயதில் பள்ளியில் நடந்த லீடருக்கான தேர்தலில் கலந்து கொள்ள மோடி ஆசைப்பட்டாராம். அவருக்கு ஏன் இந்த வேண்டாத ஆசை என பள்ளியில் பலரும் எடுத்துரைத்தார்களாம். நண்பர்களேக் கூட அவருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லையாம். மோடி உறுதியோடு தேர்தலில் நின்றாராம். வெற்றி பெற்றாராம். இதைச் சொல்லி, மோடி மிகுந்த மன உறுதி கொண்டவர் என்றும், தான் எடுத்த முடிவில் இருந்து பின் வாங்க மாட்டார் என்றும் தெரிவித்தார்.

இதை கேள்விப்பட்டவுடன் பிரதம வேட்பாளராக மோடி எப்படி ஆனார், கூட்டணிக் கட்சியில் மற்றவர்கள் எதிர்த்தபோதும், அத்வானி போன்ற மூத்த தலைவர்களே ஆதரிக்காத போதும் எப்படி மோடி தன்னை முன்னிறுத்திக் கொண்டார் என்பதெல்லாம் உள்ளுக்குள் ஓடலாம். இங்கு சொல்ல வருவது அவ்வளவு முக்கியமான விஷயங்கள் இல்லை. மிக மிக சாதாரணமான, அல்லது அல்பமான ஒன்றுதான்.

The story of the lying man (பொய் மனிதனின் கதை) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). Book Day is Branch of Bharathi Puthakalayam

தேர்தல் முடிந்து, நரேந்திர தாமோதர்தாஸ் மோடி நாட்டின் 14வது பிரதமராக பதவியேற்று ஒருவருடம் கழித்து நடந்த சம்பவம் இது. 2015ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர்கள் தினத்தில் ‘பிரதமர் தனது நாட்டின் குழந்தைகளோடு கலந்துரையாடுகிறார்’ என பெரும் விளம்பரங்களோடு நிகழ்ச்சியொன்று ஏற்பாடு செய்யப்பட்டது. கருமமே கண்ணாய் அது குறித்து செய்திகளை ஊடகங்கள் தொடர்ந்து வெளியிட்டு பரபரப்பையும், ஆர்வத்தையும் தூண்டின. தூர்தர்ஷனில் நேரடி ஓளிபரப்பு இருப்பது குறித்து பள்ளிகளுக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டு, அனைத்துக் குழந்தைகளையும் பார்க்க வைக்கும்படி அறிவுறுத்தப்பட்டன. மத்திய அரசின் மனித வளத்துறை வரிந்து கட்டிக்கொண்டு களம் இறங்கி இருந்தது.

டெல்லியில் மானெக்சா ஆடிட்டோரியத்தில், ஆயிரக்கணக்கில் திரட்டப்பட்ட பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் கலந்துரையாடல் காலை 10 மணி முதல் 11.15 வரை நடைபெற்றது. இந்தியப் பெருநகரங்களில் குறிப்பிட்ட மையங்களில் பெரிய திரைகளில் கவனிக்கவும் கலந்துரையாடலில் கலந்துகொள்ளவும் உட்கார வைக்கப்பட்டு இருந்தார்கள் குழந்தைகள். எல்லாம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன..

நாடாளுமன்றத்திலோ, வெளியே நிருபர்களிடமோ எந்தக் கேள்விகளையும் எதிர்கொள்ளாத, அவைகளுக்கு பதிலளிக்காத பிரதமர் மோடி நாட்டின் இளம் தலைமுறை கேட்ட கேள்விகளுக்கு அன்று பதில் அளித்தார்.

“அரசியல் மிகக் கஷ்டமானதா? நீங்கள் எப்படி அதன் மன அழுத்தத்தை சமாளிக்கிறீர்கள்?” பள்ளி மாணவன் ஒருவனின் கேள்வி இது.

“அரசியல் ஒரு தொழில் அல்ல. சேவை என்று எடுத்துக் கொண்டால் அழுத்தமே வராது. தேசத்தின் மக்கள் அனைவரும் என் குடும்பம். அவர்களின் சந்தோஷம் என் சந்தோஷம். அவர்களின் வேதனை என் வேதனை.” அப்பழுக்கற்ற எல்லோருக்குமான மனிதராக தன்னை முன்னிறுத்திக் கொண்டார் மோடி.

“ஒரு புத்திசாலி மாணவன். ஒரு சோம்பேறி மாணவன். ஒரு சராசரி மாணவன். ஒரு டீச்சராக யாருக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்?” இன்னொரு மாணவன் கேள்வியை முன்வைத்தான்.

“எல்லா மாணவர்களும் டீச்சருக்கு சொந்தம். ஒவ்வொருவரிடமும் ஒரு திறமை இருக்கிறது. நான் ஒரு ஆசிரியராக இருந்தால் பாகுபாடு காட்ட மாட்டேன்” என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும், வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்திய பாரம்பரியத்தையும் உயர்த்திப் பிடித்தார் மோடி. ஒவ்வொரு கேள்விக்கும், மிக நிதானமாக, சாந்த சொருபியாய், ஒரு ஞானியைப் போல பேசினார். நாட்டின் பிரதமராக இருப்பதால் ஒவ்வொரு வார்த்தையையும் மிகுந்த கவனத்தோடு பேசுவதாகவும் அப்போது தெரிவித்தார்.

மேலும் கேட்கப்பட்ட ஒன்றாக “சிறு வயதில் எப்போதாவது நீங்கள் பிரதமராகும் கனவு கண்டதுண்டா? உலகம் முழுவதும் அறியமுடிந்த ஒருவராய் இருப்போம் என நினைத்ததுண்டா?” ஒரு மாணவனின் குரல் ஒலித்தது.

லேசாக சிரித்துக் கொண்டே “நான் நினைத்ததே இல்லை. பள்ளியில் லீடராகும் போட்டியில் கூட கலந்து கொண்டது இல்லை” என்றார் மோடி.

”நான் நினைத்ததே இல்லை.” என்பது வரைக்கும் உண்மை. இந்திரா காந்தியிடமோ, ராஜீவ் காந்தியிடமோ, ராகுல் காந்தியிடமோ இந்தக் கேள்வி கேட்டிருந்தால் வேறு பதிலை எதிர்பார்க்கலாம். 2001 அக்டோபர் 1ம் தேதி, அன்றைய பிரதமர் வாஜ்பாய் அழைத்து, “நீங்கள் குஜராத் முதலமைச்சராக பணியாற்ற வேண்டும் “ என்று சொல்லும் வரைக்கும் அப்படியொரு எண்ணம் மோடிக்கு வந்திருக்க வாய்ப்பில்லை. அதற்காக பள்ளியில் லீடராகக் கூட ஆசைப்பட்டதில்லை என்று சொன்னதுதான் நெருட வைத்தது.

The story of the lying man (பொய் மனிதனின் கதை) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). Book Day is Branch of Bharathi Puthakalayam

சேட்டன் பகத்தின் நிகழ்ச்சியில் மோடியின் நண்பர் சொன்னதற்கும், பள்ளிக் குழந்தைகளிடம் மோடி சொன்னதற்கும் உள்ள முரண்பாடு வெளிப்பட்ட இடமாக அந்த பதில் இருந்தது. ஒன்று, பிரதமர் நரேந்திர மோடி சொன்னது பொய்யாக இருக்க வேண்டும். அல்லது அவரது பள்ளி நண்பர் சொன்னது பொய்யாக இருக்க வேண்டும். பள்ளி நண்பர் மிகச் சாதாரணமானவர். அவர் மோடி குறித்து பொய் சொல்லத் தேவையில்லை. பொய் சொல்லவும் முடியாது. மோடியைப் பற்றி அவருக்குத் தெரிந்தவர்களின் இயல்பான உரையாடல்களின் மூலம் ஒரு பிம்பத்தை கட்டி எழுப்பவே சேட்டன் பகத் போன்ற ஒரு எழுத்தாளர் முயன்றிருப்பார்.

ஆக, பொய் பேசியது மோடி என்பதை உணர முடியும். அது குறித்து பொதுவெளியிலும், இணையத்திலும் விவாதங்கள் எழுந்தன. ‘இது ஒரு பெரிய விஷயம் போல ஏன் பேச வேண்டும்’, ’ஒரு சாதாரண விஷயத்தை ஏன் கிளறுகிறீர்கள்”, ‘மோடியின் மீது உங்களுக்கு இருக்கும் வெறுப்புத்தான் தெரிகிறது” என மோடியின் ஆதரவாளர்கள், திரும்பத் திரும்பச் சொன்னார்கள்.

அவர்கள் எல்லாம் பெரிய மனுஷன்கள் போலவும், இதுகுறித்து பேசுகிறவர்கள் அல்பர்கள் போலவும் காட்டிவிட்டு கடந்து விட முனைந்தார்கள். நரேந்திர தாமோதர்தாஸ் மோடி இந்த நாட்டின் பிரதமர் என்பதையும், அவர் வகிக்கும் பதவிக்கும் பொறுப்புக்கும் இருக்க வேண்டிய தன்மை குறித்தும் அவர்கள் கவலைப்படவில்லை.

பிரதமரின் ஒவ்வொரு சொல்லிலும் வெளிப்படைத்தன்மையும், உண்மையும் இருக்க வேண்டும் என தேசத்தின் சாமானிய மக்கள் எதிர்பார்க்கவே செய்வார்கள். அந்த பிரக்ஞையற்றவர்களாய் அவர்கள் மோடிக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு இருந்தார்கள்.

மிகச் சிறிய விஷயத்தில் கூட இப்படி பொய் சொல்கிறவர், இந்த தேசத்தின் மிக முக்கிய காரியங்களிலும், பிரச்சினைகளிலும் எவ்வளவு பொய்களைச் சொல்வார் என்ற கேள்விகள் இயல்பாக எழத்தான் செய்யும்.

அந்த கேள்விக்கு ““நான் பிரதமராக நினைத்ததே இல்லை. ஆனால் பள்ளியில் லீடராகும் போட்டியில் கலந்து கொண்டிருக்கிறேன்” என்று புன்னகைத்துக் கொண்டே உண்மை பேசுவதில் என்ன குறைந்து விடப் போகிறார்.

The story of the lying man (பொய் மனிதனின் கதை) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). Book Day is Branch of Bharathi Puthakalayam

பதவிக்கும், அதிகாரத்துக்கும் எப்போதும் ஆசைப்படாதவராய், மற்றவர்களுக்கு சேவை செய்வதற்காய் தன்னைத் தேடி வந்த பொறுப்புகளை ஏற்றுக் கொண்டவராய் காட்டிக் கொள்ள நரேந்திர மோடி நினைத்திருக்க வேண்டும்.

ஏற்றுக்கொண்ட பொறுப்புக்கு உண்மையானவராய், நேர்மையானவராய் செயல்படுவதன் மூலமே தன்னை அவ்வாறு நிலைநாட்ட ஒருவர் முயற்சிக்க வேண்டும். வெறும் வாய் வார்த்தைகளாலேயே தன் பிம்பத்தைக் கட்டமைக்கும் நோக்கம்தான் உண்மையில் அல்பத்தனமானது. உண்மைக்கு மாறாக தன்னை பொதுவெளியில் நிலைநிறுத்த முயற்சிப்பது அருவருப்பானது,.

அதுவும் எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும் போது தேசத்தின் உயர்ந்த பீடத்தில் இருந்து கொண்டு, அவரை அண்னாந்து பார்க்கும் குழந்தைகளிடமா அப்பட்டமாகப் பொய் சொல்வது?

”தரையில் ஊர்ந்து செல்லும் எறும்பொன்றை அவன் கைகளால் நசுக்கிக் கொன்றான். அதை அவன் பின்னால் இருந்து ஒரு குழந்தை உற்றுப் பார்த்துக் கொண்டு இருந்தது.’ என்று எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ஒருதடவை பகிர்ந்த ஜென் கவிதையை நினைக்கும் போதெல்லாம் இனம்புரியாத ஒருவித அச்சத்தை ஏற்படுத்தும். அப்படி ஒரு உணர்வை மோடியின் இந்தப் பொய் தந்தது.

2014ல் மோடியின் பிம்பத்தை ஊதிப் பெருக்கியவர்களில் ஒருவரான சேட்டன் பகத், 2021 மே மாதத்தில் என்.டி.டிவியில் ”மோடியின் பிம்பத்திற்கு இப்போது ஆக்ஸிஜன் நெருக்கடி வந்திருக்கிறது” என்று சொன்னார். மோடியின் தொடர்ந்த பொய்களும், புரட்டுகளும் தந்த அச்சம், அந்த எழுத்தாளரை அப்படி பேச வைத்திருக்க வேண்டும்.