பொங்கலோ பொங்கல் கவிதை – து.பா.பரமேஸ்வரி

பொங்கலோ பொங்கல் கவிதை – து.பா.பரமேஸ்வரி




காணி நிலக் கருது கலத்துமேட்டில் சாடைபேச
கண்டாங்கி சேலை கட்டி கரையோரத்து கன்னிமயில் ஒயில்பயில
கட்டழகு காளையவனை
காடுகரை யாவும் மசமசத்துக் கிடக்க..

புதுப்பானை பொங்கு விழுங்கி வயிறு புடைத்து பெருத்திருக்க
செங்கரும்பு அடியோ
நிண்டமேனியில் ஓய்ந்து
பாக்கவாட்டில் பதமாய் சாய..

மஞ்சக்கிழங்கு மணந்து மங்கயரைச் மருவிக்கிடக்க
சர்க்கரைப் பொங்கலோ சுட்ட சட்டியில் சுருண்டு வெல்லக்கிடங்கில் வெளிறிக்கிடக்க….

சாணத்தின் விரிப்பில்
சந்தனக் கோலம் வாரோரை விளிக்க….
மாக்கோலம் மட்டும் மல்லிப்பூவாய் குறுநகைப்பூக்க..

தோரணமும் மாவிலையும் ஒன்றோடொன்றுக் கொஞ்சிப்பேச..
சுத்திநிற்கும் பெண்டுப் பிள்ளைகள் கூடி மகிழ்ந்துக் கொட்டடிக்க..
குலவையொலியில் பூமகள் ஊர்வலம் கும்மாளம் போட
பொங்கலோ பொங்கல் என்றே பூவுலகெங்கும் பூபாளம் இசைத்தன பூதமைந்தும்..

து.பா.பரமேஸ்வரி

பொங்கலோ பொங்கல் கவிதை – இறைமொழி

பொங்கலோ பொங்கல் கவிதை – இறைமொழி




பச்சரிசி பாகு சேர்த்து
பசுநெய்யோடு முந்திரியும்
வெந்து பொங்கியது
கரும்போடு இனித்தது அங்கு நாவும்.

இருப்பது தெருவோரம்
இதற்கெல்லாம் ஏது நாதி
அரசாணையிலும் இல்லை
எங்களுக்கு இலவசம்

சன்னல் பல வைத்து
கிடைத்தது ஆடை
சிக்கென சிலருக்கு
புதுவருட புத்தாடையின் கொடையில்

பொங்கும் மகிழ்ச்சியில் பொங்கலோ பொங்கல்
கூவியது பல குரல்கள்
கண்கள் தாண்டி பொங்குமா
பொங்கல் எங்களுக்கும்?

– இறைமொழி