இந்திய துணைக் கண்டத்தின் அறிவியல் தொழில் நுட்ப வரலாறு – பொ.இராஜமாணிக்கம்
கட்டுரை: வேத காலத்தில் விமானம் இருந்ததா? – பொ.இராஜமாணிக்கம்
வனப் பாதுகாப்புச் சட்டத் திருத்தங்கள் 2021: வனத்தை அழிக்கச் சதி செய்யும் திருத்தங்களே – பொ. இராஜமாணிக்கம்
ஒன்றிய அரசு அக் 2, 2021 அன்று வனப் பாதுகாப்புச் சட்டத்தில் (1980) கொண்டு வர இருக்கும் திருத்தங்களுக்கான முன் வரைவை வெளியிட்டுள்ளது. வழக்கம் போல் அரசமைப்புச் சட்ட அட்டவணையில் உள்ள வெவ்வேறு மாநில மொழிகளில் வரைவு அறிக்கை தரப்படவில்லை. கருத்துக் கேட்புக்கான வரைவு அறிக்கையை இணைய வழியில் வெளியிட்டுள்ளது .குறைந்தபட்ச நாட்களே கருத்துக்கேட்பு என்ற அடிப்படையில் ஒன்றிய அரசு 15 நாட்கள் அளித்திருந்தது. அது பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பால் தற்போது ஒரு மாத காலம் என்ற அடிப்படையில் நவம்பர் ஒன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
இந்த சட்ட முன்வரைவு குறித்துக் கீழ்க்கண்ட அலுவலர்களுக்கு அனுப்பி கருத்துக் கேட்டு அனுப்பும் படி கோரியுள்ளது.
1. Addl. Chief Secretary (Forest)/Principal Secretary (Forests), All States/UTs
2. PCCF, All States/UTs
3. Regional Officers, All IROs, MoEFCC
4. All concerned
மற்றொன்று இந்த சட்டத் திருத்த முன்வரைவு அக்.2 காந்தி ஜெயந்தி அன்று வெளியிடப்பட்டுள்ளது. அக்.2 முதல் ஒருவாரம் இந்தியாவில் வன விலங்கு வார விழா படு குஷியாய் கொண்டாடப்படும் பொழுது இந்தத் துயரமான திருத்த வரைவு அறிக்கை வெளிவந்து விவாதத்துக்கு விடப்பட்டுள்ளது. உண்மையிலேயே வனவிலங்கு பாதுகாப்பதில் ஆர்வம் உள்ளவர்கள் ஒரு வார காலம் சோக வாரமாகக் கொண்டாடி இருப்பார்கள். மேலும் இந்த வருட சர்வதேச சுற்றுச் சூழல் தினம் என்பது பத்தாண்டுகளுக்கான சூழல் புனரமைப்பு செய்வதற்கான அறைகூவலை விட்டுள்ளது. இது அந்த அறைகூவல் மீது சட்டத் திருத்தங்கள் மண்ணை அள்ளிப் போடுகிறது.
சரி நாம் இப்பொழுது சட்டத் திருத்தங்களுக்கு வருவோம்:
வனப் பாதுகாப்புச் சட்டம்-1980ல் வந்த பின் கடந்த 40 வருடங்களாக ஏற்பட்ட சமூக பொருளாதார மாற்றங்களுக்கு ஏற்றவாறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது ஒரு மேம்பட்ட முறையில் காடுகள் பாதுகாப்பிற்கும் வளர்ச்சிக்கும் ஏற்றவாறு திருத்தங்கள் அவசியமாகிறது. எனவே இந்த சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்படுகிறதா கூறப்படுகிறது சுமார் 15 பிரச்சினைகளைக் கண்டறிந்து இத்திருத்தங்கள் கொண்டு வரப்படுவதாகக் கூறப்படுகிறது.
பொதுவாகப் பார்த்தோமானால் எந்தவிதமான அடிப்படையான தரவுகளோ ஆதாரங்களோ இல்லாமல் திருத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாகத்
தனியார் காடுகளை அவர்கள் காடுகளல்லாத செயல்களுக்கு அனுமதி தரப்படாததால் அவர்கள் காடுகள் வளர்ப்பதில் அக்கறை காட்டுவதில்லை எனக் கூறி தனியார்களுக்குக் காடுகளை அழிக்கத் திருத்தம் தருகிறது
அதே போன்று ரயில்வே உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புத் திட்டங்கள் காடுகள் பாதுகாப்புக் கொள்கையால் தடைப்பட்டுக் கிடக்கின்றன என்றும் இத் திட்டங்களுக்காக கையகப்படுத்தப்பட்ட பகுதிகள் காடுகளாக வளர்ந்து உள்ளதால் அதை தற்போது பயன்படுத்த முடியாத சூழல் உள்ளதால் அதைப் பயன்படுத்துவதற்கான சட்டத் திருத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கும் போதுமான தரவுகள் இல்லை.
அதே போன்று தனியார்கள் தங்கள் தரிசு நிலங்களைக் காடுகளாய் மாற்றினால் அது காடுகள் பாதுகாப்புச் சட்டத்தில் போய்விடும் என்பதால் அவர்கள் அதைக் காடுகளாக மாற்றாமல் தரிசு நிலங்களாகவே விட்டு வைத்துள்ளனர் எனப் பெரிய புராணத்தை அவிழ்த்து விட்டு தற்போதுள்ள தனியார் காடுகளை அவர்கள் பயன்படுத்துவதற்கான திருத்தத்தை முன் வைக்கிறது (பிரச்சினை:3).இதற்கும் போதிய தரவுகள் இல்லை.
1996க்குப் பிறகு காடுகள் அல்லாத பகுதியாக வரையறுக்கப்பட்ட பகுதிகளில் காடுகள் வளர்க்கப்பட்டிருப்பின் அவைகளுக்கு வனச் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் இதனால் காடுகள் வளர்ப்பு அதிகரிக்கும் என ஒரு புதிய தத்துவத்தை முன் வைக்கிறது (திருத்தம்:4) இதனால் தற்போது உருவாக்கப் பட்டிருக்கும் காடுகள் அழிவுக்குச் செல்லும் அபாயம் உள்ளது. உலக வெப்பமயமாதல் அதிகரிக்கும் சூழலில் காடுகளைக் காப்பாற்றுவது முக்கியமாக உள்ள சூழலில் காடுகளை அழிக்க இந்த திருத்தம் வழி வகுக்கிறது.
சில சிறப்பு மிகு காடுகளை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குத் தக்க வைத்து அதனுடைய சூழல் மதிப்புகளை வெளிச்சமிட்டுக் காட்டப்படும் எனக் கூறப்படுவது (திருத்தம்:6) குறிப்பிட்ட காலத்திற்குப் பின் அதை காவு வாங்கும் எண்ணம் போல் இருக்கிறது.
ராணுவ மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான திட்டங்களுக்கு அனுமதி பெறாமலேயே மாநில அரசுகள் காடுகள் சாராப் பயன்பாட்டிற்கு அனுமதிக்கும் சட்டத் திருத்தம் (எண்:7) கொடுக்கப்படுகிறது. காடுகள் பாதுகாப்பு என்பது ஒன்றிய அரசு, மாநில அரசு ஆகிய இருவருக்குமான பொதுப்பட்டியலில் இருக்கும் பட்சத்தில் இது போன்ற விஷயங்களில் தலையிடுவதை தடுப்பதாக தெரிகிறது. ஒன்றிய அரசே இத்திட்டங்களை அமல்படுத்தி காடுகளை அழிக்கும் அபாயம் உள்ளது.
காடுகளைத் தனியாருக்கு அடகு வைப்பதற்கேற்ப சப் செக்ஷன் 2(ஈஈஈ) எடுத்துவிட்டு 2(ஈஈ) போதும் (எண்:8) என்கிறது. இது காடுகள் தனியார்மயத்திற்கும் பேரழிவிற்கு எடுத்துச்செல்லும்
தற்போது காடுகளுக்குள் கனிம வளங்களை எடுப்பதால் ஏற்படும் அழிவுகளைத் தடுக்கும் முகமாகக் காடுகளுக்கு வெளியே தூரத்திலிருந்தே காடுகளுக்கு அடியில் புதைந்து கிடக்கும் எண்ணை, வாயு ஆகியவற்றை எடுக்கும் புதிய தொழில்நுட்பமான எக்ஷ்ஸ்டண்டெட் ரீச் டிரில்லிங் (Extended Reach Drilling (ERD)) போன்ற தொழில்நுட்பங்கள் சூழலுக்கு உகந்ததாக இருப்பதால் அவைகளுக்குக் காடுகள் பாதுகாப்புச் சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இந்தத் திருத்தம் என்பது காடுகளுக்குக் கீழ் புதைந்திருக்கும் கனிம வளங்களைக் கட்டற்ற முறையில் சூறையாட வழி வகுக்கிறது. மேலும் காடுகளின் சூழலியல், மண்ணியல் ஆகியவற்றிற்கிடையேயுள்ள தொடர்புகளை அழிக்கும் திருத்தமாகவே இதைக் கொள்ளலாம்.
தனியார் காடுகளில் அவர்கள் 250 ச.மீ அளவில் சூழல் பாதுகாப்புடன் வசிப்பிடங்கள் கட்டிக் கொள்வதற்குத் திருத்தம் (எண்:10) கொடுக்கப்பட்டுள்ளது. இது காடுகளில் சுற்றுலாவிற்கான ஓய்வு வசிப்பிடங்களை அனுமதிப்பது போன்றதாகும். காடுகளை சுற்றுலா மயமாக்கலினால் சுற்றுப்புறச் சூழல் பாழாகும்.
இது வரை காடு சாரச் செயல்பாடுகளாக இருந்த மிருகக் காட்சி சாலைகள், சஃபாரி எனப்படும் காடுகளுக்குள் சவாரி சுற்றுலா, காடுகள் பயிற்சி நிறுவனங்கள் ஆகியன இனி மேல் காடு சார் செயல்பாடுகளாகக் கருதப்படும் (எண்:11.) இதன் மூலம் தனியார்கள் தங்கள் காடுகளுக்குள் அனுமதி பெறாமலேயே இது போன்ற நடவடிக்கைகளைச் செய்வதற்குப் பச்சைக் கொடி காட்டப்பட்டுள்ளது. இதனால் காடுகளுக்குள் சுற்றுலா நடவடிக்கைகள் அனுமதிக்கப்பட்டு காடுகளின் மொத்த சூழலியலும் கேள்விக் குறி ஆகும் சூழல் உள்ளது.
காடு சார நடவடிக்கைகளுக்கு விதிக்கப்படும் லெவி என்ற கட்டணம் ஒரு முறை வசூலிக்கப்பட்டு அதே நடவடிக்கையைப் புதுப்பிக்கும் போது இரட்டிப்புக் கட்டணம் வசூலிப்பது முறையானதாக இருப்பதால் அதை விலக்கி ஒரு முறை செலுத்தியதையே மீண்டும் லெவியாக வசூலிக்கலாம் (எண்.12). ஒரு முறை லெவி வசூலித்து அதன் பலனைப் பெற்றவர்கள் புதுப்பிக்கப்படும் காலத்தில் அதே லெவியைச் செலுத்துவது தான் முறையற்ற செயலாகும். காடுகளிலிருந்து பெறப்படும் பயன்கள் புதுப்பிக்கப்படும் காலத்தில் வேறுவிதமாக இருக்கும் பட்சத்தில் அதை மாற்றுவது தான் சரியானதாக இருக்கும்.
கணக்கெடுப்பு, கண்டறிதல் போன்ற காடு சாரா செயல்பாடுகளுக்கு அரசின் அனுமதி பெறும் முறை நீண்ட காலம் எடுப்பதால் பாதிப்புகள் உருவாகாத இது போன்ற செயல்பாடுகளுக்கு அனுமதி பெறும் முறை இனித் தேவையில்லை (எண்:14). மேற்சொன்ன செயல்பாடுகளில் இதற்கான வழிமுறைகள் உருவாக்கப்படவேண்டும்.
நிறைவாக..
காடுகள் பாதுகாப்பு என்பது ஒன்றிய மாநில அரசுகளின் பொதுப்பட்டியலில் உள்ளது. எனவே மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்த பின்னரே திருத்தங்களை மக்களிடம் கருத்துக் கேட்புக்குச் சுற்றுக்கு விட வேண்டும்.
2006 காடுகள் உரிமைச் சட்டப்படி காடுகளின் மேலாண்மை, பாதுகாப்பு அனைத்தும் அங்கு வாழும் பழங்குடியினருக்கு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் காடுகளைப் பயன்படுத்தக் கொண்டு வரும் சட்டத் திருத்தங்கள் அவர்களின் ஒப்புதலைப் பெற்றிருக்க வேண்டும். சுமார் 4கோடி ஹெக்டேர் காடுகள் வன உரிமைச் சட்டப்படி அவர்களுக்கு உரிமை கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இதற்குப் பொறுப்பான கிராம சபாக்களை ஒதுக்கிவிட்டு சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வருவது என்பது வன உரிமைச் சட்டத்திற்கு எதிரானது ஆகும். பழங்குடி அமைச்சகத்தைக் கலந்து ஆலோசிக்காமல் கொண்டு வருவதும் தவறானதாகும்.
தற்போது கொண்டு வரப்படும் சட்டத் திருத்தங்கள் ஒன்றிய அரசின் பணமயமாக்கல் திட்டம், சூழல் மதிப்பீட்டுத் தாக்க அறிக்கை-2020 ஆகியனவற்றிற்கு ஏற்றவாறு திருத்தங்களை உள்ளடக்கியதால் காடுகள் தனியார்மயமாகப்படுவதற்கும், அதன் வளங்கள் சூறையாடப்படுவதற்கும், பழங்குடியினரின் உரிமைகளைப் பறிப்பதாகவும் உள்ளதால் இந்தத் திருத்தங்களுக்கு எதிராக அனைத்துத் தரப்பினரும் திரள வேண்டும்.
பொ. இராஜமாணிக்கம்,
பொதுச் செயலர்,
அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு.
தேசிய அறிவியல் மனப்பான்மை தினம்: போலி அறிவியலை முறியடிப்போம்….. அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுப்போம்
ஆகஸ்ட் 20: தேசிய அறிவியல் மனப்பான்மை தினம்
போலி அறிவியலை முறியடிப்போம்…..அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுப்போம்
பொ. இராஜமாணிக்கம்,
பொதுச் செயலர்,
அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு
ஜனவரி 30, 1948 அன்று காந்திஜீ அவர்களை கோட்சே சுட்டுக் கொன்றது போன்ற நிகழ்வு ஆகஸ்ட் 20, 2013 அதிகாலையில் அப்படியொரு ஒரு நிகழ்வு நடந்தது. நடந்த இடம் புனா, மகாரஷ்ட்ரா மாநிலம். காலை 7.20 மணியளவில் தனது வீட்டருகே உள்ள பாலத்தின் மேல் நடைப்பயிற்சி செல்லும் போது, ஓம்கரேஸ்வர் கோவிலுக்கருகில், துப்பாக்கி ஏந்திய இரண்டு நபர்கள் மோட்டர் சைக்கிளில் வந்தபடி தபோல்கரை நேருக்கு நேராகச் சுட்டனர். இரண்டு குண்டுகள் தலையிலும் மார்பிலும் பாய அதே இடத்தில் மரணமடைந்தார்.
அவர் வீர மரணம் அடைந்த இடத்தைப் பார்வையிடுவதற்கான வாய்ப்பு 2018ம் வருடம் கிடைத்தது. மே மாதம் தேசிய அறிவியல் மனப்பான்மை தினப் பயிற்சிக்காக புனே சென்றிருந்தோம். நாங்கள் தங்கி இருந்த இடத்தில் இருந்து அதிகாலை புறப்பட்டு நரேந்திர தபோல்கர் சுட்டுக் கொல்லப்பட்ட பாலத்தைப் பார்வையிடச் சென்றோம். ஒரு சிறிய ஆறு மீது அந்தப் பாலம் கட்டப்பட்டிருந்தது. அந்தப் பாலத்தில் நடந்து சென்ற போது அங்கு நடந்து கொண்டிருந்த நபரிடம் விசாரித்தோம்.
”இது தானே நரேந்திர தபோல்கர் சுட்டுக் கொல்லப்பட்ட பாலம்” என்று கேட்டோம்.
“ஆம் என்றார்”
“எந்த இடத்தில்” என்றோம்.
”இந்த இடத்தில் தான்” என்றார்.
“அப்படியானல் நீங்கள் அப்போது இருந்தீர்களா?”
“ஆம். எனக்குத் தெரியும். நானும் வழக்கமாக இதில் தான் நடைப் பயிற்சி செய்வேன். அப்பொழுது தான் நடந்தது ” என்றார்.
”அப்படியானல் யார் என்று உங்களுக்குத் தெரியும் அல்லவா?”
“இல்லை..தெரியாது” என்று சொல்லிவிட்டு அப்படியே நகர்ந்துவிட்டர்.
அவர் முகத்தில் பயமும் கலவரமும் தென்பட்டது. ஐந்து வருடங்களுக்குப் பின் இது தான் அன்றைய நிலை. ஆனால் இன்றோடு எட்டு வருடங்கள் நிறைவு பெற்றும் இன்று வரை குற்றவாளிகள் தண்டிக்கபபடவில்லை. விக்ரம் பாவே, சச்சின் அண்டுரே, ஷரத் கலாஸ்கர் ஆகிய மூன்று நபர்கள் குற்றாவாளிகளாக கண்டறீயப்பட்டு சிபிஐ மூலம் ஆமை வேகத்தில் வழக்கு சென்று கொண்டிருக்கிறது.
இதற்கு முன் 1983 முதல் பலமுறை தபோல்கருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் எந்த போலீஸ் பாதுகாப்புகளையும் பெறவில்லை. “எனது நாட்டிலேயே என் மக்களிடையே நான் போலீஸ் பாதுகாப்புடன் தான் செல்ல முடியும் என்றால் ஏதோ என்ன்னிடம் தப்பு இருக்கிறது என்று அர்த்தம். நான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்குட்பட்டு போராட்டததை நடத்துகிறேன். நான் யாருக்கு எதிராகவும் செயல்படவில்லை. ஆனால் எல்லோருக்குமாகப் போராடுகிறேன் என்றார்.” எவ்வளவு துணிச்சலான மனிதர்!
தபோல்கரைத் தொடர்ந்து பன்சாரே ( ஃபிப், 2015) , டாக்டர் கல்புர்கி ( ஆக.2015), கெளரி லங்கேஷ் (செப்.2017) என மூவர் கொலை செய்யபப்ட்டனர். இந்தியா முழுவதும் இது அதிர்வலைகளைப் பரப்பியது. இந்த நால்வர் கொலையிலும் இந்து வகுப்பு வாதக் குழுக்கள் சமபந்தபப்ட்டிருக்கிறதென்றும் ஒரே முறையில் இந்தக் கொலைகள் நடந்தேறி இருப்பதும் தெரிய வந்துள்ளது. ஆனால் இவர்கள் இன்னும் தண்டிக்கப்படவில்லை.
எனவே தான் அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு, புவனேஸ்வரில் 2018 பிப்ரவரியில் நடந்த 16வது அகில இந்திய மாநாட்டில், தபோல்கர் சுட்டுக் கொல்லப்பட்ட தினத்தை தேசிய அறிவியல் மனப்பான்மை தினமாக அனுசரிப்பதென தீமானிக்கபப்ட்டது. இதன் மூலம் அறிஞர்கள் படுகொலைகளைத் தடுத்து நிறுத்தவும், கொலைகாரர்களைக் கண்டறிந்து கடுமையான தண்டனை வழங்கவும், மூட நம்பிக்கைகளுக்கு எதிரான சட்டத்தை மாநில அரசுகளும் ஒன்றிய அரசும் கொண்டு வர வலியுறுத்தியும் மக்கள் அறிவியல் இயக்கங்கள் வருடந்தோறும் இத் தினத்தை அனுசரிக்கிறது.
சுதந்திரம் பெற்ற 75 ஆண்டுகளில் கடந்த ஏழு ஆண்டுகளில் தற்போதைய ஒன்றிய அரசின் பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்களும், அரசின் நிர்வாகங்களும் அதன் கொள்கைகளும் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும் குறிப்பாகாக 51 ஏ (எச்) என்ற அறிவியல் மனப்பான்மைப் பிரிவுக்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறனர். புராணங்களில் கூறப்பட்ட கற்பனைகளை அறிவியல் எனச் சித்தரித்து போலி அறிவியலை பிரபலப்படுத்துவதும்; சரஸ்வதி நதியைத் தேடுதல், சஞ்சீவி மலையைத் தேடுதல்; சாணம், சிறுநீர் உள்ளிட்ட பசு ஆராய்ச்சிக்காக SUTRA-PIC India Program என்ற ஆராய்ச்சி அமைப்பை உருவாக்கி போலி அறிவியலுக்கு பெருமளவில் நிதி ஒதுக்கீடு செய்தல் நடைபெற்று வருகிறது. இதனால் முறையான அறிவியல் ஆராய்ச்சிக்கான குறைந்த நிதியும் (0.6% ஜிடிபி) போலி அறிவியல் ஆராய்ச்சிகளுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளது.
இதே போன்று கல்வியில் வாஸ்து சாஸ்திரம், ஜோதிடம், வேத கணிதம் போன்ற படிப்புகளைத் தீவிரமாகத் திணிக்க முயற்சிக்கிறது. பல்கலைக் கழக மானியக்குழு இது வரையிலும் இல்லாத வகையில் வரலாற்றுப் பாடத்திட்டத்தை தானே தயாரித்து அதில் திராவிட சிந்து வெளிநாகரீகத்தை சிந்து-சரஸ்வதி நாகரீகமாகவும், ஆரியர்களின் பிறப்பிடம் இந்தியா தான் எனக் கூறியும், வேத கால நாகரீகத்தை ஆரியரியர்களீன் நாகரீகமாகவும், மத்திய கால இந்திய வரலாற்றை ஆறில் ஒரு பகுதியாகச் சுருக்கியும் இஸ்லாமியர் காலத்தில் தான் நால்வர்ண முறை தோன்றியதென்றும் கடைப்பிடிக்கப் பட்டதென்றும் தயாரித்து இதை தான் பாடமாக்க வைக்க வேண்டும் என நிர்பந்தித்து உள்ளது. இதை விடக் கொடுமையாக பதஞ்சலி ராம் தேவ், வேத பாடங்களை எல்லாம் ஒன்றிணைத்து ”வேதிக் போர்டு ஆஃப் எஜுகேசன்” என்று சிபிஎஸ்சி, ஐசிஎஸ்சிக்கு இணையாக மத்திய கல்வி வாரியமாக ஒப்புதல் பெற்றுள்ளார். இனிமேல் இந்தக் கல்வி வாரியம் மூலம் பள்ளிக் கல்வியைப் படித்து உயர் கல்விக்குச் செல்லலாம் என்ற நிலையை உருவாக்கி உள்ளனர்.
மேலும் கடந்த ஒன்றரை வருடங்கள் கோரோனா நோயின் தாக்குதலை பிரதமர் முதல் பல ஒன்றிய அமைச்சர்கள், அதிகாரிகள் வரை அறிவியல் ரீதியாக அணுகுவதற்குப் பதிலாக மூடநம்பிக்கையின் வழியில் மக்களைத் திசை திருப்பி தங்களது இயலாமையை வெளிபடுத்தியதை உலகமே அறிந்தது. கையையும், தட்டையும் தட்டச் சொன்னது; டார்ச் லைட்டையும், செல் போன் லைட்டையும் வானத்தை நோக்கி அடிக்கச் செய்தது;
சாணம், சிறுநீரை மருந்தாகப் பரிந்துரை செய்தது: ஆக்ஜிசன் பற்றாக்குறையைத் தீர்க்க இயலாமல் தடுமாறி காயத்திரி மந்திரம் சொன்னால் ஆக்சிஜன் அளவு கூடும் என பிரச்சாரம் செய்தது என எண்ணற்ற போலி அறிவியலை பிரச்சாரம் செய்து தோல்வி அடைந்து இறுதியில் அறிவியலே கொரோனாவை வென்றது என்பது உலகறிந்தது.
இதனால் இந்த ஆண்டு தேசிய அறிவியல் தினத்தில் நாடு முழுவதும் உள்ள மக்கள் அறிவியல் இயக்கங்கள் எவ்வாறு கோரோனாப் பெருந்தொற்றை எதிர் கொள்வதில் வைரஸ் நோயின் அறிவியலும், அதற்கான அறிவியல் கண்டுபிடிப்புகளான தடுப்பு மருந்துகளும், அறிவியல் அணுகுமுறையும், அறிவியல் வழித் திட்டமிடலும், அறிவியல் மனப்பான்மையும் முன்னின்று போலி அறிவியலையும் மூடநம்பிக்கைகளையும் முறியடித்தது என்பதை மக்களிடம் எடுத்துச் சென்று கொண்டிருக்கின்றனர்.
அதே போல் ஜோதிடத்தை ஒரு பட்ட மேற்படிப்புப் பாடமாக்கி இந்திரா காந்தி திறந்த வெளிப் பல்கலைக் கழகம் மூலம் ஒன்றிய அரசு, தனது இந்துத்வா குறிக்கோளையும் தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியான கல்வியைக் காவிமயமாக்குவதையும் முயற்சி செய்து வருகிறது. இதைத் தடுக்கும் வகையில் ஜோதிடப் படிப்பை நிராகரிப்போம்; வானவியல் படிப்பை வரவேற்போம் என்ற முறையில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அகில இந்திய, மாநில, இணைய வழிக் கருத்தரங்குகள், பயிற்சிகள், சமூக ஊடகப் பிரச்சாரங்கள்; மாவட்ட அளவில், கிளை அளவில் உறுப்பினர்கள் பங்கேற்கும் வகையில் கூட்டங்கள், செயல் முறை சோதனை விளக்கங்கள் என மாபெரும் மக்கள் இயக்கமாக நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. ஆகஸ்ட் 20க்கான மக்கள் அறிவியல் இயக்கங்களின் நிகழ்ச்சிகள் அறிவியலையும் அறிவியல் மனப்பான்மையையும் வளர்ப்பதற்கான பேரெழுச்சி ஆகும்.