பூக்களின் சேதி கவிதை – நவகவி
“புன்னகை பூக்கின்றீர்கள்
பூக்களே யார் நீங்கள்?”
“மாண்ட பின் மீண்டும் பிறந்த
மழலைகள் ஐயா நாங்கள் ”
“மாண்டவர் வான் போவாராம்
மண்ணில் ஏன் மீண்டும் பிறந்தீர்?”
“அம்மாவின் பக்கம் இருக்கும்
ஆசையால் தங்கி விட்டோம்”
” இவ்விடம் இருக்கும் சேதி
எவ்விதம் அறிவாள் அம்மா?”
“தென்றலில் வாசம் | அனுப்பி
தெரிவிப்போம் அம்மாவுக்கு ”
“ஆயிரம் வகைவா சங்கள்
அறிந்திடல் இயலுமோ சொல்?”
“அவரவர் குழந்தை வாசம்
அம்மாக்கள் அறிவார் ஐயா”
“அன்னையைக் கண்டால்இன்று
அழுவீரோ அம்மா என்று?”
“தேனையே கண்ணீராக்கி
சிந்துவோம் வழியில் நின்று !”
“அல்லியே வெள்ளைக்கார
அம்மாவா உனது அம்மா?”
“இல்லை; என் ஆசை அம்மா
இதயத்தால் வெள்ளை அம்மா!”
“செண்பகப் பூவே உன் தாய்
சிவப்பையா நீயும் பெற்றாய்? ”
“செந்தணல் சிதைத் தீ பட்டு
செந்நிறம் பெற்றேன் ஐயா!”
“புஷ்பங்காள்!நீர் இப்போது
புகல்கின்ற சேதி யாது?
“மலருக்கும் மழலை யர்க்கும்
மரணமே வரக்கூடாது!”