நூல் அறிமுகம் : ஆயிஷா இரா.நடராசனின் வன்முறையில்லா வகுப்பறை – பூங்கொடி கதைசொல்லி

நூல் அறிமுகம் : ஆயிஷா இரா.நடராசனின் வன்முறையில்லா வகுப்பறை – பூங்கொடி கதைசொல்லி




நூல் : வன்முறையில்லா வகுப்பறை
ஆசிரியர் : ஆயிஷா இரா.நடராசன்
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
பக்கங்கள் : 112
விலை : ₹95.00
தொடர்பு எண் ; 044 24332924

புத்தகம் வாங்க இங்கு க்ளிக் செய்யவும்: thamizhbook.com

குழந்தைகளை அறிதல் என்ற ஒரு முக்கியமான பாடநூல் இல்லாத பாடத்தை, ஆசிரியர்கள் அறிந்து கொண்டால், ஒரு வன்முறை இல்லாத வகுப்பறையை உருவாக்கலாம் என்பதுதான் இந்த நூலின் உயிர்நாடியான கருத்து. கல்வியாளர்கள், கல்வி நிலைய அமைப்பினர், நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் இப்படி எல்லாருக்குமே பயன்படுகின்ற வகையில், இந்த நூலை ஆயிஷா நடராஜன் அவர்கள் அற்புதமாய் உருவாக்கித் தந்துள்ளார்.

உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும், துன்புறுத்தும் சம்பவங்கள் வகுப்பறையில் நடைபெறாமல் இருக்க , ஆசிரியர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை 25 கட்டுரைகளின் வழியாக ஆசிரியர், விளக்கியுள்ளார்.

” மாணவன் எதையெல்லாம் செய்தால் ஒரு ஆசிரியரான உங்களுக்குப் பிடிக்கும் என்பதைப் போல, ஒரு ஆசிரியராக நீங்கள் எதையெல்லாம் செய்தால் தனக்குப் பிடிக்கும் என கருத ஒரு மாணவருக்கும் உரிமை உள்ளது” என்ற கரோலின் டிவிக் ( குழந்தை உளவியலாளர்) அவர்களின் வரிகளோடு, குழந்தைகள் ஏன் பள்ளியை வெறுக்கிறார்கள்? என்ற கட்டுரை ஆரம்பிக்கிறது.

தேசிய கல்வி கணக்கெடுப்பு 2006 தந்த இறுதி முடிவில்

1) 99.1 குழந்தைகள் பள்ளியைக் கண்டு அஞ்சுகிறார்கள்.
2) பெரும்பான்மை குழந்தைகள் புரிந்து கற்பது இல்லை.
3) மனச்சோர்வு அவமதிப்பு பெரும் பதற்றம் இவற்றோடு வீடு திரும்புகிறார்கள்.

இந்த மூன்று காட்டமான முடிவுகளை முன்வைத்தது.
இவற்றுக்கெல்லாம் தீர்வு குழந்தைகள் தைரியமாகக் குதூகலிக்கும் ஒரு வகுப்பறை. ஆசிரியர் மாணவர் உறவில் நேர்மறை, குழந்தைகள் தங்களைப் பாதுகாப்பாக உணருகிற, கற்றல் தடையின்றி நடக்கும் ஒரு வகுப்பறை. அதற்கு முதலில் குழந்தைகள் ஏன் ஒழுங்கீனமாக நடக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று கருத்தை வலியுறுத்துகிறது முதல் கட்டுரை.

பள்ளியிலிருந்து குழந்தைகள் வீட்டுக்குத் திரும்பும்போது, என்ன எடுத்துச் செல்கிறார்கள்? குட்டி முயற்சிகளால், பெற்ற ஏராளமான பாராட்டுகள், மதிப்பு மிக்க ஆளுமை தன்னம்பிக்கை இவைகளையா ? அல்லது உடல் வருத்தும் தண்டனையோ மனம் வருந்தும் தண்டனையோ பெற்றுச் செல்கிறார்களா? இதற்கான விடை தான் நீங்கள் ஆசிரியரா? இல்லை குருவா? நீங்கள் ஆசிரியராக வாழ்பவரா? இல்லை ஆசிரியப் பணியாளரா? என்பதைத் தீர்மானிக்கும் முக்கியமான காரணியாகும்.

அவர்களின் ஒவ்வொரு ஒழுங்கீனமான செயல்களுக்கும், பிறழ் நடத்தைக்கும் பின்னேயும் ஒரு காரணம், ஒரு நோக்கம் இருக்கிறது. அதை கண்டறிவது ஒவ்வொரு ஆசிரியரின் முக்கியமான கடமையாகும். ஒரு ஆசிரியர் ஒரு பாடத்தை எவ்வளவு கரைத்துக் குடித்தவராக இருந்தாலும், அவர் குழந்தை உளவியலை எந்த அளவுக்குத் தெரிந்து வைக்கிறார் என்பது அதைவிட முக்கியம் என்று பேராசிரியர் யஷ்பால் அவர்கள் சொல்வது முக்கியமான ஒன்று.

அப்படி எனில் அந்த சூழலை, குழந்தைகளின் பார்வையிலிருந்து அணுகும் போது அவர்கள் நடத்தையின் காரணம் கண்டிப்பாகப் பிடிபடும். இந்த கருத்துக்களை எல்லாம் இந்நூலில் பல கட்டுரைகள் மிக சிறப்பாக விளக்குகின்றன.
மீண்டும் மீண்டும் மன அழுத்தமும் வலியும் தரும் சூழலை சமாளிக்கத் தெரியாமல், குழந்தைகளுடைய ஹார்மோன்களில் வசோப் ரேசின் என்ற ஹார்மோன் அளவுக்கு அதிகமாகச் சுரக்கிறது. எதிர்த்து நில் அல்லது தப்பி ஓடு என்ற இரண்டில் ஒன்றை மட்டுமே தேர்வு செய்யும் பதட்ட நிலையை அடைகிறது. இந்த மனநிலையில் கற்றல் சாத்தியமில்லை என்ற நரம்பியல் நிபுணர் டாக்டர் கிறிஸ்டோபரின் கருத்தை ஆசிரியர் மிக சிறப்பாக எடுத்துரைக்கிறார்.

வளரிளம் பருவத்தினர் அதிகம் நாடுவது அங்கீகாரம்தான், என்ற உளவியல் அறிஞர் ஃபைனஸ்டீன் என்ற கருத்தை தீவிரமாக வலியுறுத்தி, அந்த வளர் இளம் பருவ குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கை, உற்சாகம், ஊக்கம் கண்டிப்பாக அளிக்க வேண்டியது அவசியம் என்று அறுதியிட்டு உரைக்கிறார்.

மேலும் குழந்தைகள் ஏன் தவறு செய்கிறார்கள்? மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் காரணம், குழந்தைகளின் நடத்தையை எவ்வாறு புரிந்து கொள்வது என்பதையெல்லாம் அறிவியல் விளக்கங்களோடு, சில கட்டுரைகளில் விரிவாக விளக்கியிருக்கிறார்.

சமூகநீதியை, மனிதநேயத்தை, இயற்கை பாதுகாப்பைக் கடைப்பிடிக்கப் பயிற்றுவிப்பது தான் கல்வி. அதற்கு குழந்தைகளின் செயல்களுக்குத் தண்டனை தருவதை விட அவர்களை நெறிப்படுத்துவது தான் சாலச் சிறந்தது.

இன்றைய ஆசிரியர்களின் மிகப்பெரிய வேலைச் சவாலாக உள்ளது. குழந்தைகளை அடிக்கக் கூடாது. எதுவுமே சொல்லக்கூடாது என்றால் இதன் பொருள் என்ன? ஒருபுறம் குழந்தைகளின் தலையைத் திறந்து பாடப்பொருளைக் கொட்டித் தீர்க்கத் தூண்டும் பாடச்சுமை. மற்றொருபுறம் குழந்தைகள் உரிமை என்னும் பெயரில் மிரட்டல்… தேர்ச்சி சதவிகிதம் அதிகரித்துக் காட்டாத ஆசிரியர்களுக்கு துறை நடவடிக்கை. இந்தச் சூழல் களையெல்லாம் எவ்வாறு எதிர்கொண்டு சிறந்த ஆசிரியராக இருக்கலாம் என்பதற்கு வழிகாட்டுகிறது இந்த நூல்.

T- Tolerance ( சகிப்புத்தன்மை)

E – Example for all ( அனைவருக்கும் முன்னுதாரணம்)

A – Ability to read child’s mind ( குழந்தை மன நிலையை அறியும் வல்லுநர்)

C- Character builder ( பண்பு நலன் வளர்ப்பவர்)

H – Humanitarian approach ( மனிதநேய அணுகுமுறையாளர்)

E – Enthusiastic ( முயற்சிகளை உற்சாகப் படுத்துவர்)
இத்தனையும் சேரும் போது அந்த ஆசிரியர்
R – Respectable ( மரியாதைக்கு உரியவர்) ..

இப்படியான குணநலன்கள் உள்ள ஆசிரியர்களால், வன்முறை இல்லாத வகுப்பறையைத் தாண்டி, வாழ்வின் அடிநாதமான அன்பான வகுப்பறையைக் கட்டமைக்க முடியும் என்பதை இந்த நூல் தெளிவாக அறிவியல் விளக்கங்களோடு எடுத்துரைக்கிறது.

– பூங்கொடி கதைசொல்லி