கவிதை : பசி – ராஜேஷ் சங்கரப்பிள்ளை
கார்கவியின் கவிதைகள்
உலகின் தலைசிறந்த சொல் ‘வறுமை’
**********************************************
“ஆயிரங்களைத் தாண்டிய பட்டாசுப் புகையில்
நமத்து போகிறது
சில அப்பாக்களின் தீபாவளி,
தூரத்து குடிசையில் வானத்தையும்
பலரின் வீட்டு வெடி ஜாலத்தையும்
காண்பித்துச் செல்கிறது பல அப்பாக்களின் தீபாவளி “
” நூறு சரத்தில் எஞ்சிய ஏழு வெடிகள்
ஏழைக்கு ஒரு சரமாகிப் போகிறதெ,
நெருப்பில் வலு இல்லாமல்
தரையின்கீழே தள்ளப்படுகிறது
பல புதுவானங்கள் “
நேற்று தீபாவளி நன்றாக இருந்தது
அம்மாவின் ஏழு வகையான பலகாரங்கள்,
இன்று மணி ஏழை கடந்தது
இதுவரை எழவில்லை
அம்மாவும்
அவர்களின் இடுப்பு வலியும் ”
ஒவ்வொரு உயிரும் கூறும்
உலகின் தலைச்சிறந்த சொல் ‘வறுமை’
நட்சத்திரக் கிழவி
*********************
அவளின்
யதார்த்த நடைப் பேச்சுவாக்கில்
கிள்ளியெறியக் காத்திருக்கின்றன
வெற்றிலைக் காம்புகள்…
ஓயாமல்
வெற்றிலைக்குப் பாக்கு இடிக்கும்
அவளிடம்
கேட்ட பிறகு
வளைந்து நிமிர்ந்து செல்கின்றன
ஊர்களின் சாலைகள்…
எத்தனை பேர் வந்தாலும்
‘ஏலே நீ அவன் மகன் தான’ என
கையடக்கி வைத்துள்ள டேடா சீட்டுகளின் சொந்தகாரியிடம்
சேகரிக்கப்படுகிறது….
மின்தடையில்லாத
டேடா தொகுப்புகளின் கணினியவள்…
அந்த மூன்று நாள்
********************
விடியல் பல இருப்பினும்
இந்தவிடியல் புதுமையே
ஆறு மணிக்கு எழுந்தவள்
ஐந்துக்கே எழுகை
ஆர அமர துவைத்தவள்
விடியுமுன்னே குளியல்
இரு நாள் யதார்த்த குளியல்
கடைசிநாள் எள் எண்ணெய் கொண்ட குளியல்…
மூன்று நாள் கழிந்து
மிச்சமிருக்கின்றன
வலியும்
ஒரு ரூபாய் சியக்காயும்….
கார்காலம் கவிதை – ஏ. ஆகாஷ்
விளையாடிக்
கொண்டிருந்தேன்
வெளியில் மழை
வீட்டுக்கு
வந்தேன்
வீட்டுக்குள்ளும் மழை…
பலர் சூடாய்
சமைத்து
சாப்பிட்டுக் கொண்டு
இரசிக்கிறார்கள் மழையை
பால்கனியில் நின்று
நாங்களோ
பாலுமில்லாமல்
கனியுமில்லாமல்
சுருன்டு கிடக்கிறோம்
பசியில்..
என் நண்பர்கள்
பேப்பரைக் கிழித்து
கப்பல் விட்டார்கள்
நானோ
வீட்டுக்குள் தேங்கிய
நீரில்
தேடிக்கொண்டிருந்தேன்
புத்தகப் பையை…
பலர்
சுவற்றில் சாய்ந்து
அமருவார்கள்
நாங்களோ
சுவர்
சாய்ந்து விடுமோ
என்ற
அச்சத்திலே
அமருகிறோம்…
இரவில்
தூங்குமெங்களை
தட்டி எழுப்புகிறது
நள்ளிரவு மழை..
விடிந்தது வானம்
விடியவில்லை
எங்கள் வாழ்வு
கொட்டித் தீர்த்த
மழையை
இராவெல்லாம்
திட்டித் தீர்த்தாள்
அம்மா…
காலையில்
சொல்லிக்கொண்டு
போகிறார் ஒருவர்
இரவு நல்ல
மழையென்று…
தேங்கிய நீரை
வெளியேற்றிக்
கொண்டிருந்த
அம்மாவைத் திரும்பிப்
பார்த்தேன் நான்..
பிரில் இங்க் சிறுகதை – மரு உடலியங்கியல் பாலா
“என்னடப்பா கருப்பா! ஏன் சோகமா உக்காந்திருக்க?”.. என கேட்டவாறு ஆஜானுபாகுவாக , நெற்றியில் சந்தனப்பொட்டு, வாயில் பன்னீர்புகையிலை, உதட்டில் புன்னகை சகிதம் நின்றிருந்த, “வி ஜி ஆர் “சாரைப் பார்த்ததும் சட்டென்று எழுந்து நின்று கை எடுத்துக் கும்பிட்டு.. “அது ஒண்ணும் இல்லிங்க ஐயா” என துக்கத்துடன் மழுப்ப, “உன் மகன் குப்பனுக்கு எஸ்எஸ்எல்சி பரீட்சை பீஸ் கட்டாததால, வருத்தமோ?..கவலப்படாதடா ..நான் நேத்தே கட்டிட்டேண்டா”..என கூறி சிரிக்க, அவனோ கண்ணில் நீர் தளும்பிய வண்ணம் அவரை நோக்கி . “ஐயா உங்க செருப்ப குடுங்க, பளபளன்னு பாலிஷ் போட்டு தரேன்.!”.. என்று அவர் கடனை ஏதோ ஒரு வழியில் அடைக்க முற்பட, அவரோ சிரித்தவாறு, சென்றுவிட்டார்.
திருவல்லிக்கேணி…பெரியதெரு, பிள்ளையார் கோயில் அருகில் இருந்த அரசு உதவி பெற்ற அந்த பள்ளிக்கூடம்.. 1970 களில் மிகச் சிறந்த பள்ளிகளில் ஒன்றாகத் திகழ்ந்தது.
வி ஜி ஆர் சார்..அப்பள்ளியின் தலைசிறந்த தமிழாசிரியர்.. ஓரிரு மாதங்களில் ஓய்வு பெற இருப்பவர். முற்போக்கு சிந்தனை கொண்ட பரோபகாரி. குழந்தை பாக்கியம் இல்லாத அவர் மாணவர்களைத் தன் சொந்த பிள்ளைகள் போல் நடத்துபவர். தன் உடல் பொருள் ஆவி அனைத்தையும் மாணவர்களின் நலன் காக்க அர்ப்பணித்தவர்.
கருப்பன் செருப்பு தைக்கும் தொழிலாளி. அந்தப் பிழைப்பில் தன் ஒரே மகன், தாயில்லாப் பிள்ளை குப்பனை, அந்த பள்ளியில் பெரும்பாடு பட்டு சேர்த்து படிக்க வைப்பவன். அவன் பள்ளிக்கு வெகு அருகிலேயே ரோட்டில் கடைவிரித்து பிழைப்பு நடத்திவந்தான்.
குப்பன் அந்த பள்ளியில் சேர மூலகாரணமாக துணை நின்றவர், அப்பள்ளி தமிழாசிரியர் “விஜிஆர் ..சார்” என மாணவர்களால் அன்போடு அழைக்கப்பட்ட வி ஜி . ராமச்சந்திர முதலியார் ஆவார்.
குப்பன் படிப்பில் படு சமர்த்தன்…கலைமகள் கடாட்சம் பபரிபூரணமாகப் பெற்ற அவன், பள்ளி முடிந்து மாலை வேளைகளில் அப்பாவுக்கு செருப்பு தைக்க (அவர் எதிர்ப்பையும் மீறி) உதவுவான். அவனை அவனது தந்தையின் தொழிலைவைத்துத்தான் அவனை சில பல ஆசிரியர்களும் , சக மாணவர்களும், அழைப்பர். அவன் அவமானமாக , எப்போதுமே கருதியதுமில்லை.
அவன் வகுப்பில், படிக்கும், “ரவி” எனும் சகமாணவன், பெரும் பணக்கார வீட்டு பையன். அந்த பள்ளியிலேயே, சொகுசு காரில் வந்து செல்லும் ஒரே மாணவன் அவன்தான். அவனுக்கு பணக்கார திமிர் வெகு அதிகம், அதுவுமன்றி, அவன் தந்தை கிருஷ்ணமூர்த்தி , பெரும் தொழில் அதிபர்..
அரசியல் செல்வாக்கு மிக்கவரான அவர்…அந்த பள்ளி, நிர்வாக அங்கத்தினருள் ஒருவருமான, முக்கிய புள்ளி என்பதால்… ரவியிடம் மூத்த ஆசிரியர்களே சற்று அடக்கி வாசிப்பர். அவன் பளபளக்கும் அலுமினிய புத்தக பெட்டி, அதற்கொரு உயர் ரக பூட்டு, தினம் ஒரு ஷு, வாசனை சென்ட் , தங்க மோதிரம், ரிஸ்ட் வாட்ச் சகிதம் பந்தா காட்டுவான். எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தார் போல், “பிரில்” இங்க் பாட்டில் தினமும் கொண்டு வந்து தன் டெஸ்க் மேல் வைத்து, அனைவருக்கும் அழகு காட்டுவது அவன் பழக்கம்.
அக்கால கட்டத்தில், “இங்க்” பேனா மட்டுமே புழக்கத்தில் இருந்தது, யாரேனும் பால் பாயிண்ட் பேனா கொண்டு எழுதுவது ஆசிர்களுக்கு தெரிந்தால், அவர்களுக்கு அடியுதை கொடுப்பது மட்டுமல்லாது, அந்த பேனாவும், உடனடியாக பறிமுதல் செய்யப்படும்.
ஆகவே… எல்லா பையன்களும், ஓட்டை, உடைசலாகி, ஜி டி நாயுடு பேனாவை தவிர மற்ற எலலா பேனாக்களும் விலை உயர்ந்த சமாச்சாரங்களாகவே அந்நாளில் திகழ்ந்தன. தொடர்ந்து லீக் அடிக்கும் பேனாக்களை கையில் ஏந்தி, கை முழுதும் இங்க் கரைகளுடன் காட்சியளிப்பர். சிலசமயம் இங்க் தீர்ந்து போய்விட்டால்..
எதிர் கடை ,செட்டியாரிடம் 3 பைசா (பெரிய கட்டை பேனாவெனில் 5பைசா) கொடுத்து இங்க் ரீபில் செய்ய ஆசிரியரிடம் மன்றாடுவர், அதன் பயனாய் ஒரு சில ஆசிரியர்களது கோபத்துக்கு ஆளாகி, பெஞ்ச் மேல் ஏற்றப்பட்டு உயர்ந்த மனிதனாக்கபட்டு,அந்த பீரியட் முடிய , சக மாணவர்களை..ஈகில்ஸ் ஐ வியூவில் வேடிக்கை பார்ப்பர். ஒருசில நல்லாசிரியர்கள் அனுமதி அளிப்பதும் உண்டு., அவ்வாறு அனுமதி வாங்கிய, அதிர்ஷடசாலி பையன்கள் ஹாய்யாக வெளியே சுற்றி திரிந்து, நெருங்கிய நண்பர்களுக்கு கடலை மிட்டாய், கமர்கட், வேர்க்கடலை ஆகிய தின்பண்டங்கள் வாங்கி முடித்து, பிறகு சாவகாசமாக, இங்க் நிரப்பி, தன் தீர்த்த யாத்திரையை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு, வகுப்பு முடியும் தருவாயில் உள்ளே நுழைந்து, அனுமதி தந்த ஆசிரியர்களின் சாபத்துக்கு ஆளாவதும் உண்டு..
கையில் காசில்லாத வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பையன்கள், பக்கத்து சீட் நண்பனிடம கெஞ்சி கூத்தாடி, பெஞ்சின் வழவழப்பான பகுதியில், அவர்களை இங்க் தெளிக்க செய்து “இங்க் தானம்” பெறுவதும் உண்டு. காக்கி வெள்ளை சீருடையின்… வெள்ளை சட்டையில் இங்க் புட்டாக்கள், வரைபடங்கள் இல்லாத மாணவர்களை, அக்காலத்தில் காண்பது மிக மிக அரிது. ..
ஏப்ரல் 1 வந்துவிட்டால் போதும், ஏப்ரல் ஃபூல் கொண்டாடுகிறோம் பேர்வழி,என்ற பெயரால் ஒருவர் சட்டையில் ஒருவர் இன்க் அடித்து, வெள்ளை சட்டை நீலமாக நிறம் மாறும் அரியநிகழ்வு வருடாவருடம் தவறாமல் அரங்கேறும் …இதற்காகவே அன்றைய தினம்..பழைய கிழிந்த அழுக்கு சட்டை அணிந்த பையன்கள் நிறய பேர் அங்கும் இங்கும் காணப்படுவர். சில ஏமாந்த சோணகிரி ஆசிரியர்கள் மேல் இங்க் அடித்து சந்தோஷிக்கும் சில வால் பையன்கள் ….அடுத்த நாள் சக நண்பர்களாலேயே காட்டிக் கொடுக்கப்பட்டு, முதுகில் டின் கட்டப்பட்ட நிலையில் வீடு செல்லும் நிகழ்வும் நடைபெறும்.
சிகப்பு இங்க் பச்சை இங்க் .. ஆசிரியர்களுக்கே உரித்தானது… அந்த கலரில் இங்க் நிரப்பிய பேனாக்கள் கண்டுபிடிக்கபட்டால், அது கிரிமினல் குற்றமாக கருதப்பட்டு, உச்சபட்ச தண்டனை வழங்கப்படும். சரி! இங்க்பற்றிய சரித்திர சமாச்சாரங்களை இனி புறம் தள்ளி, மீண்டும் கதைக்கு திரும்புவோம்.
நம் பணக்கார ரவியின் “பிரில்” இங்க் பாட்டில், அவனுக்கு ஒரு தனி அந்தஸ்தையும், கவுரவத்தையும் பெற்று தந்தது என்றால் அது மிகையாகாது. அவனிடம் ஓசியில் பிரில் இங்க் எனும் ஒஸ்தி இங்க்கை … இளிப்புடன்..நிரப்பிக் கொள்ளாத ஆசிரியர்களே இல்லை என்றால் பார்த்து கொள்ளுங்களேன்.!
அவன் நெருங்கிய கூட்டாளிகள் தவிர ஏனையோர்க்கு எந்த சந்தர்ப்ப சூழ்நிலைகளிலும், எம்முறையில் கெஞ்சிக் கூத்தாடினாலும்… அவன், இங்க் தானம் செய்ததாக வரலாறே கிடையாது. அவ்வளவு திமிர் பிடித்த பிடிவாதக்காரன் அவன்.
அன்று …எஸ்எஸ்எல்சி பொது தேர்வுக்கு முந்தைய ரிவிஷன் டெஸ்ட் நடந்து கொண்டிருந்தது… அதில் நல்ல மதிப்பெண் பெறாதவர்களை, பொதுத்தேர்வு எழுத அனுமதிப்பதில்லை எனும் விதி அந்த பள்ளியில், பின்பற்றப்பட்டு வந்தது. ஆகவே, அந்த பரீட்சைகள் மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருந்தது.
நம் அன்பு தமிழ் ஆசிரியர் விஜிஆர் சார் தான் அன்று தேர்வு கண்காணிப்பாளராக இருந்தார். நம் குப்பன் சிரத்தையுடன் கவனமாக பரீட்சை எழுதி கொண்டிருக்க, …அவன் கெட்ட நேரம், அதிகமாக எழுதியதாலோ, என்னமோ, அவன் பேனாவில் இங்க் தீர்த்துவிட, அப்படியே கண்கலங்கி ஆடிப்போய், வி ஜி ஆர் இடம் முறையிட, அவர் சக மாணவர்களிடம், அவனுக்கு ஒரு பேனா கொடுத்து உதவுமாறு விண்ணப்பிக்க, யாரிடமும் மாற்று பேனா இல்லாததால் அனைவரும் கை விரித்தனர். கடைசியில் அவர் ரவியிடம் சென்று குப்பனுக்கு “பிரில்” இங்க் தானம் தர கேட்டுகொண்டார். ஆனால் அவனோ, “தர முடியாது” என திட்டவட்டமாக மறுத்துவிட.. அவர் முடிந்தவரை எவ்வளவோ நல்லதனமாக, அவனிடம் பேசிப்பார்த்தார்,..ஆனால் அவனோ கேட்பதாக இல்லை. ..
ஒரு கட்டத்தில்…என்றுமே, கோபம் கொள்ளாத சாந்த சொரூபியான அவர், பொறுமை இழந்து ..அன்று ஏனோ உணர்ச்சி வசப்பட்டு அவனை கண்டபடி திட்டி தீர்த்து, பிரில் இங்க் பாட்டிலை பலவந்தமாக எடுத்து சென்று , குப்பனுக்கு கொடுத்து உதவினார். ரவி மிகுந்த கோபம் கொண்டு அழுது கொண்டே வீட்டுக்கு சென்று அவன் பணக்கார அப்பாவிடம் வத்திவைத்துவிட்டான்….
அடுத்த நாள்..அவன் தந்தை தன் முழு செல்வாக்கையும் பயன்படுத்தி, பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்து… அவரை “தற்காலிக பதவி நீக்கம்” செய்ததோடு நிற்காமல்.. அவரை எல்லோர் முன்னிலையிலும் அவமானப்படுத்தி அனுப்புகின்றனர்.
அப்பழுக்கற்ற தன் ஆருயிர் ஆசிரிய சேவை அவமதிக்கப்பட்டதால், அவர் கூனி குறுகி, பனித்த விழிகளுடன், வெளியேற… அந்த பள்ளியின் மொத்த மாணவ பட்டாளமும் ஒன்று திரண்டு அவரை போக விடாமல் வழிமறித்து அழுது புலம்பினர் .
அதோடு நிற்காமல், அனைத்து மாணவர்களும், ஒன்று கூடி தொடர்போராட்டத்தில் ஈடுபட..அரசாங்கம் தலையிட்டு பள்ளி தலைமையை கண்டிக்க, மிரண்டுபோன நிர்வாகம், அவர் சஸ்பென்ஷன் உத்தரவை உடனே திரும்பபெறுகிறது. ஆனால், வி ஜி ஆர்.. சாரோ, பள்ளி எவ்வளவு வேண்டியும், திரும்ப பணியில் சேர மறுத்துவிட்டு மிகுந்த மனவேதனையுடன் தன் சொந்த ஊருக்கே சென்று விடுகிறார்.
ஒரு பத்து ஆண்டுகளுக்கு பின்…சென்னை மாவட்ட ஆட்சியராக, தன் அசாத்திய அறிவாற்றலாலும், கடும் உழைப்பாலும் உயர்ந்த குப்பன், தான் பொறுப்பேற்ற அடுத்த நொடியே.. தன் பள்ளிக்கு விஜயம் செய்து.. அன்றைய பள்ளி தலைமை ஆசிரியரிடம்…வி ஜி ஆர் பற்றிய விவரங்கள் சேகரித்து, வி ஜி ஆர் அவர்களின் சொந்த ஊரான, திண்டினத்தில் உள்ள, “நைனார்பாளயம் “எனும் குக்கிராமத்துக்கு, கலக்டர் என்ற, பந்தாவை உதரித்தள்ளி, ஆசானிடம் ஆசிபெறும் நோக்கில் ஏளிமையாய், தனிமையில் ரகசியமாக செல்கிறான். அந்த ஊருக்கு பஸ் வசதி இல்லாததால், ஒரு மைல் தூரம் நடந்தே சென்று, அவர் வீட்டை அடைகிறான்..
அவன் இதயதுடிப்பு அதிகரிக்க … “சார் சார்” என்றபடி மெல்ல கதவை தட்ட …எந்த சலனமும் இல்லை. மேலும் தன் குரல் உயர்த்தி, பலமாய் தட்ட , இருமல் சத்தம் ஈனஸ்வரத்தில் ஒலிக்க “யாருப்பா?” என முனகியடியே ஓர் மூதாட்டி மெல்ல கதவைத்திறக்கிறாள்.
மெலிந்த தேகமும், நரைத்த கூந்தலும், வறுமையால் வாடிய முகத்துடனும் “யாரு தம்பி நீங்க?”என அவள் கேட்க.. “வி ஜி ஆர் சார பாக்கணும் அம்மா.. நான் அவருடைய பழைய மாணவன்!”. என கூறியதும்.. அவள் கண்களில் இருந்து பெருகிய நீரை துடைத்த வண்ணம் “என் மவராசர் போய் அஞ்சு வருசம் ஆச்சுது ராஜா? என்ன கண் கலங்காம கடைசிவரை காப்பாத்துன அந்த புண்ணியவான்! ஏனோ என்ன தனியா தவிக்க விட்டுட்டு.. திடீர்னு போய்ட்டாரு ராஜா”என அழுது புலம்ப, அந்த சிறிய கூடத்தின் சுவற்றில், மாட்டப்பட்ட புகைப்படத்தில் , என்றோ போடப்பட்டு காய்ந்து போன மாலையுடன், சந்தன பொட்டு சகிதம், வி ஜி ஆர் சார்..என்னை பார்த்து அதே பழையவாஞ்சையுடன் சிரித்தார்.
என் கண்கள் குளமாகி நான் விசும்பி நிற்க, “உள்ள வா ராஜா!” என கிராமத்துக்கே உரிய அன்புடன் அழைத்தாள் அந்த தாய். நான் சிறிது நேரம் அவர் படத்தின் முன் நின்று விம்மி விம்மி அழ… அவளும் என்னுடன் சேர்ந்து அழுதாள். நான் அவள் கைகளை அறுதலுடன் பற்றி”அம்மா நான், இப்போ பெரிய உத்யோகத்தில், வசதியாக இருக்கிறேன். எல்லாம் சார் போட்ட பிச்சைதான்.தாங்கள் என்னுடன் வந்து விடுங்கள். என் தாயினும் மேலாய் உங்களை போற்றி பாதுகாக்கிறேன் அம்மா!” என்று அவன் கூற அவளோ “ஐயோ! அதெல்லாம் வேணா ராஜா.. என் பிறந்த மண்ணுல தான் என் உயிர் பிரியனும்!” எனக்கூறி மறுத்துவிட.. அவன் ஒரு நூறு ரூபாய் கட்டை அவள் கையில் திணிக்க, அதை வாங்க மறுத்து “காட்டுக்கு போற வயசுல கட்டு பணம் வச்சுகிட்டு என்ன பண்ண போறேன்?” என்று கூறி பிடிவாதமாய் மறுத்து விட… கனத்த இதயத்துடன் வெளியே வந்த அவன், தன்னை அறியாமலே குலுங்கி குலுங்கி அழுதவாறு,நடக்க துவங்கினேன்.
அந்த தெருவின் முனை திரும்புகையில், “எங்கடா போற குப்பா? என்ன விட்டுட்டு!” என கணீர் குரலில் யாரோ என் தோளை தொட்டு உலுக்க, குப்பன் சட்டென திரும்பி பார்த்து, அச்சு அசல் வி ஜி ஆர் சார் போல அதே அஜானுபாகுவான தோற்றம், அதே சந்தனப்பொட்டுடன், சிரித்த முகத்துடன் நின்றிருந்த.. அந்தப் பெரியவரைப் பார்த்து ஸ்தம்பித்து நின்று ” சார்!” என கூக்குரலிட, அவர் பயந்துபோய் “என்ன மன்னிச்சிடுப்பா தம்பி..என் அக்கா மகன் குப்பன் என நினைத்து உன்னை கூப்பிட்டுவிட்டேன்!” என்று புன்முறுவல் பூத்தபடி அகன்றார்.
ஆனால் இன்றளவும் குப்பனின் உள் மனமோ, அவர் சாட்ஷாத் வி ஜி ஆர் ..சார்தான் என திடமாக நம்பி சந்தோஷித்து ஆறுதல் அடைகிறது…
கடவுளைத் தேடி கவிதை – பிரியா ஜெயகாந்த்
ஏழையின் தேடல் செல்வம் எனும் கடவுள்
செல்வந்தனின் தேடல் பாதுகாப்பு எனும் கடவுள்
மருத்துவனின் தேடல் நோயாளி எனும் கடவுள்
நோயுற்றவனின் தேடல் ஆரோக்கியம் எனும் கடவுள்
குழந்தையின் தேடல் தாய் எனும் கடவுள்
தாயின் தேடல் பாசம் எனும் கடவுள்
அனாதையின் தேடல் உறவு எனும் கடவுள்
துணையிழந்தவனின் தேடல் அன்பு எனும் கடவுள்
கண் இழந்தவனின் தேடல் பார்வை எனும் கடவுள்
ஊனமுற்றவனின் தேடல் ஊன்றுகோல் எனும் கடவுள்
பசித்தவனின் தேடல் உணவு எனும் கடவுள்
புசித்தவனின் தேடல் உறக்கம் எனும் கடவுள்
ஆசிரியரின் தேடல் சிறந்தமாணவன் எனும் கடவுள்
மாணவனின் தேடல் கற்றல் எனும் கடவுள்
அரசியல்வாதியின் தேடல் பதவி எனும் கடவுள்
தொண்டனின் தேடல் அங்கீகாரம் எனும் கடவுள்
போட்டியாளனின் தேடல் வெற்றி எனும் கடவுள்
வெற்றியாளனின் தேடல் பரிசு எனும் கடவுள்
படித்தவனின் தேடல் உத்தியோகம் எனும் கடவுள்
வியாபாரியின் தேடல் லாபம் எனும் கடவுள்
உழைத்தவனின் தேடல் கூலி எனும் கடவுள்
விதைத்தவனின் தேடல் மகசூல் எனும் கடவுள்
விவசாயியின் தேடல் மழை எனும் கடவுள்
மழையின் தேடல் மேகம் எனும் கடவுள்
நானும் தேடுகிறேன் என் கடவுளை !
பாவலர் கருமலைத்தமிழாழனின் கவிதைகள்
ஏழ்மையின் எதிர்பார்ப்பு
*******************************
வாழ்க்கையிலே அமர்தற்குச் சிறிய வீடு
வயிறெரிக்கும் பசிதணிக்கக் கொஞ்சம் சோறு
தாழ்ந்திடாமல் மானத்தைக் காப்ப தற்குத்
தகுவுடலை மறைப்பதற்குக் கீழ்மேல் ஆடை
வீழ்ந்திடாமல் தலைநிமிர்ந்து நிற்ப தற்கு
விளங்குகின்ற அடிப்படையாம் இந்த மூன்றே
ஏழ்மையிலே தவிக்கின்ற மக்கள் எங்கள்
எதிர்பார்ப்பாம் இவைகிடைத்தால் வாழ்வோம் நாங்கள் !
பிச்சையாக இலவசங்கள் தேவை யில்லை
பிறக்கின்ற கருணையதும் தேவை யில்லை
முச்சந்தி தனில்நின்று கையை ஏந்தி
மூச்சுவிடும் வாழ்க்கையினை விரும்ப வில்லை
கச்சிதமாய் மதிப்பளித்துப் பணிகொ டுத்துக்
கரங்களிலே உழைப்பதற்கு வழியை செய்தால்
நிச்சயமாய் ஏழ்மையினை ஓட வைத்து
நிறைவாழ்வு வாழ்ந்திடுவோம் வாய்ப்ப ளிப்பீர் !
மாளிகையின் வசதிகளைக் கேட்க வில்லை
மகிழுந்து சொகுசுதனைக் கேட்க வில்லை
கேளிக்கைப் பொழுதுபோக்கைக் கேட்க வில்லை
கேள்விக்கு விடைதேடும் எங்க ளுக்கு
வாலியினை மறைந்திருந்து கொன்ற தைப்போல்
வளங்களினை சுருட்டுகின்ற கரமி ருந்து
கூலிக்காய் உழைக்குமெங்கள் உழைப்பிற் கேற்ற
கூலிதந்தால் போதுமெங்கள் ஏக்கம் தீரும் !
போனதெங்கே மனிதநேயம்
************************************
ஈரமண்ணாய் மனம்கசிந்து வீட்டுப் பக்கம்
இருப்போரின் துயரினிலும் பங்கு கொண்டு
வேரடியாய் அன்புதனில் கிளைய ணைத்து
வெறுப்பின்றிக் கூட்டமாக ஒன்றி ணைந்து
தூரத்தே அடிபட்டு வீழ்ந்த வர்க்கும்
துடிதுடித்தே ஓடிப்போய் உதவி செய்தும்
பாரத்தைப் பிறருக்காய்ச் சுமந்து நின்ற
பரிவென்னும் மனிதநேயம் போன தெங்கே !
சேற்றினிலே களையெடுக்கும் கரங்க ளாலே
சேர்ந்தணைத்துக் கபடுகளைக் களைந்தெறிந்து
நாற்றுகளை நட்டுவயல் வளர்த்தல் போல
நகையாலே வஞ்சமின்றி வளர்ந்த நட்பால்
வேற்றுமைகள் இல்லாத குடும்ப மாக
வேறுவேறு சாதியரும் நெஞ்ச மொன்றி
போற்றுகின்ற சோதரராய்ப் பிணைந்தி ருந்த
போலியற்ற மனிதநேயம் போன தெங்கே !
காடுகளாய் நம்முன்னோர் வளர்த்து வைத்த
கவின்மிகுந்த மரங்களினை வெட்டி வெட்டிக்
கோடுகளாய் மண்ணுடலைப் பிளக்க வைத்துக்
கொட்டிவந்த மழைவளத்தை அழித்த தைப்போல்
வாடுகின்ற பயிர்கண்டு வாட்டம் கொண்ட
வள்ளலாரின் மனிதநேயம் அழித்து விட்டோம்
பாடுபட்டு யாதும்ஊர் என்ற பண்பைப்
பாதுகாத்துத் தந்ததனைத் தொலைத்து விட்டோம் !
( 1 )
பக்கத்தில் குடியிருப்போர் முகத்தைக் கூட
பார்க்காமல் வாழுகின்ற வகையைக் கற்றோம்
துக்கத்தில் துடிப்போரின் குரலைக் கேட்டும்
துடிக்காமல் இயல்பாக நடக்கக் கற்றோம்
நக்கலாகப் பிறர்துயரில் வாடக் கண்டும்
நகைத்தவரை ஏளனமாய்ப் பழிக்கக் கற்றோம்
வக்கிரமே எண்ணமாகி அடுத்தி ருப்போர்
வயிறதனில் அடிப்பதையே தொழிலாய்க் கற்றோம் !
பிறர்வாழப் பொறுக்காத மனத்தைப் பெற்றோம்
பிறர்நெஞ்சைப் புண்ணாக்கும் கலையில் தேர்ந்தோம்
பிறர்போற்றப் பொதுநலத்தை மேடை மீது
பிசிறின்றிப் பேசிநிதம் கள்ள ராகப்
பிறர்பொருளை அபகரிக்கும் தன்ன லத்தால்
பிறர்காலை வெட்டுவதில் வல்ல ரானோம்
சிரம்தாழ்த்தும் பழிதனக்கே நாணி டாமல்
சிறப்பாக நடிக்கின்ற நடிக ரானோம் !
சாதிகளின் பெயராலே சங்கம் வைத்தோம்
சாதிக்காய்த் தலைவரினைத் தேர்ந்தெடுத்தோம்
சாதிக்கும் சக்தியெல்லாம் ஊர்வ லத்தில்
சாதனையாய்ப் பகையுணர்ச்சி பெருக்கு வித்தோம்
வாதிக்கும் கருத்தெல்லாம் வாயா லன்றி
வாள்தடிகள் சங்கிலியால் மோதிக் கொண்டோம்
போதிக்கும் அன்புவிட்டு மதங்க ளென்னும்
போதையாலே மதம்பிடித்தே அலையு கின்றோம் !
( 2 )
அறிவியலில் உலகமெல்லாம் அற்பு தங்கள்
அரங்கேற்றக் கலவரங்கள் அரங்க மேற்றி
அறிவிலியாய்க் குறுமனத்தில் திகழு கின்றோம்
அணுப்பிளந்து அடுத்தகோளில் அவர்க ளேற
வெறியாலே உடன்பிறந்தோர் உடல்பி ளந்து
வீதியெல்லாம் குருதியாற்றில் ஓடம் விட்டோம்
நெறியெல்லாம் மனிதத்தைச் சாய்ப்ப தென்னும்
நேர்த்திக்கடன் கோயில்முன் செய்யு கின்றோம் !
வானத்தை நாம்வில்லாய் வளைக்க வேண்டா
வாடுவோரின் குரல்கேட்க வளைந்தால் போதும்
தேனெடுத்துப் பசிக்குணவாய்க் கொடுக்க வேண்டா
தேறுதலாய் நம்கரங்கள் கொடுத்தால் போதும்
தானத்தில் சிறந்ததெனும் நிதானத் தில்நாம்
தமரென்றே அனைவரையும் அணைத்தால் போதும்
மானுடந்தான் இங்குவாழும் சமத்து வத்தில்
மன்பதையே அமைதிவீசும் நேயத் தாலே !
ஏகாந்தம் கவிதை – வ.சு.வசந்தா
பாதையில் கிடந்த முள்
பதம் பார்த்தது எந்தன் காலை!
பக்குவமாய் அதை எடுத்து
பார்த்துப் பார்த்துப் பாதம் வைத்தேன்.
நித்திரையில் கண்டது
நிஜத்தில் அரங்கேறியது.
நேரம் காலம் பார்க்காமல்
நெடுந்தொலைவு நடந்து சென்றேன்.
எங்கே செல்வதென ஏதும் தெரியவில்லை!
எண்ணி எண்ணி மாய்ந்து விட்டேன்.
ஏழை துயர் தீர வில்லை.
கந்தல் ஆடையுடன்
கால் போன போக்கினிலே
காலமெல்லாம் நடந்திடுவேன்.
சொன்ன சொல்லை
நான் மறவேன்!
சொந்த பந்தம் ஏதுமில்லை;
சொத்து சுகம் எனக்கு வேண்டாம்.
தொந்தரவு செய்து என்னை
தொல்லைப் படுத்த வேண்டாம்!
மனத்தால் அழுகின்றேன்
பெற்றதை வெறுக்கின்றேன்!
பேதமில்லாமல்
பெருவாழ்வு வாழ்ந்து விட்டேன்.
சாதி மதம் பார்க்காமல்
சகோதரனாய் இருந்து விட்டேன்!
இப்படியே என் வாழ்வு
என்றைக்கும் தொடர்ந்துவரும்
நூல் விமர்சனம்: ச.சுப்பாராவின் நண்பர்களின் பார்வையில் மார்க்ஸ் – சகுவரதன்
மொழிபெயர்த்து எழுதியவர் ச. சுப்பாராவ் அவர்கள். சிறந்த மொழிபெயர்ப்புக்கான பல விருதுகளை பெற்றுள்ளார். “நிகழ்ந்த போதே எழுதப்பட்ட வரலாறு” இந்திய பொருளாதார தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்” உள்ளிட்ட பல நூல்களை மொழிபெயர்த்துள்ளார்.
23 ஆண்டுகாலம் நூலகத்திலேயே வாழ்க்கையை கழித்து, நாற்பதாயிரம் புத்தகங்களைப் படித்துக் குறிப்பெடுத்து, தான் புகைத்துப்போடும் போடும் சுருட்டுக்குக்கூட தான் எழுதும் புத்ககத்தின் வருவாய் போதாது எனத் தெரிந்தும் மூலதனம் என்னும் நூலை உலக மக்களுக்குத் தந்த காரல்மார்க்ஸ். உறவுகளை நிர்ணயிப்பதே பொருளாதாரம்தான் என்று சொன்னவர்.
வாழ்நாள் முழுக்க பொருளாதாரச் சிக்கலில் தவித்தாலும் மனிதகுல சமூக மாற்றத்திற்கு புதியதொரு விடியலுக்காக இறுதிவரை சிந்தித்த மாமனிதனின் வாழ்க்கை அம்சங்களை அவருடன் பயணித்த இரு நண்பர்களின் வாக்குமூலம்தான் இந்நூல். ஒருவர் ஜெர்மன் சோஷலிஸ்டும் ஜெர்மன் சோசலிஸ்டு டெமாக்ரஸி கட்சித் தலைவருமான கார்ல் லீப்னெஸ்ட். மற்றொருவர் பிரெஞ்ச் புரட்சியாளரும் மார்க்சின் இரண்டாவது மகளை மணந்தவருமான பால் லஃபார்கே.
இருவரது நினைவலைகளில் ஏராளமான செய்திகள் அறிய முடிகின்றன. மார்க்ஸ் என்ற அற்புத மனிதரை, பொருளாதார மேதையை, உலகத்திற்கே மார்க்சிய தத்துவத்தை போதித்த அறிஞரின் குழந்தைத்தனமான செய்கைகளை, இன்புற்று மகிழ்ந்த தருணங்களை, அல்லல்படும் துயரங்களை, விளையாட்டுகளை நண்பர்களிடம் கழித்த பொழுதுபோக்குகளை, விவாதங்களை, நூலக தேடல்களை என பல சம்பவங்கள் விவரித்துக் கொண்டே செல்வதை வாசிக்க பெருமூச்சு கிளம்புவது நிச்சயம். கார்ல் லீப்னெஸ்ட், மார்க்ஸைப்பற்றி கூறும்போது அடிக்கடி “மார்க்ஸ் பாணி” என்று ஒன்றைக்குறிப்பிடுகிறார்.
மார்க்ஸ் ஒரு கருத்தாக்கத்தை சாத்தியப்படும் அளவு சுருக்கமாக உருவாக்கிக் கொள்வார். அதை தொழிலாளர்களால் புரிந்து கொள்ளப்படாத வார்த்தைகள் எதுவும் வந்துவிடக்கூடாது என்று மிகக் கவனத்தோடு சொற்களைத் தேர்ந்தெடுத்து விரிவாக விளக்குவார். பிறகு பார்வையாளர்களை கேள்விகேட்கச் சொல்லுவார். யாரும் கேள்வி கேட்கவில்லை என்றால் பார்வையாளர்கள் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடாது, புரிதலில் எந்த இடைவெளியும் இருக்கக்கூடாது என்பதற்காக பார்வையாளர்களை கேள்வி கேட்டு பரிசோதித்துக்கொள்வார்.
உரையாடும் போது கரும்பலகையைப் பயன்படுத்துவதும் அதில் பல சூத்திரங்கள் எழுதுவதுமான செயல்பாடுகளை மார்க்ஸ் தொடர்ந்து செய்து வந்திருக்கிறார் என்கிற தகவல் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. “மார்க்ஸ் மற்றும் அவரைச்சேர்ந்தவர்களை” “கொள்ளைக்காரர்கள்” என்றும் “மனித இனத்தின் சக்கைகள்” என்றும் பிறரால் அழைக்கப்பட்டதை நகைச்சுவையாக விளக்கி, தாங்கள் ஏன் அடிக்கடி நூலகம் சென்று அங்கேயே இருந்து வாசிப்பில் ஈடுபட்டோம் என்பதையும் அழகுற கூறுகிறார்.
சில சமயங்களில் எங்களுக்கு சாப்பிட ஒரு பருக்கைக்கூட இருக்காது. ஆனால் அதற்காக நாங்கள் பிரிட்டிஷ் மியூசியம் போகாமல் இருக்கமாட்டோம். ஏனெனில் அங்கு வசதியான நாற்காலிகள் இருக்கும். குளிருக்கு கதகதப்பாக, வசதியாக இருக்கும். அது வீட்டைவிட வசதியானது. அதாவது வீடு இருந்தவர்களின் வீட்டைவிட மார்க்ஸ் வீட்டில் ஏழ்மை மட்டும் தங்கியிருக்கவில்லை. பல்வேறு ஆளுமைகள் தங்கி கற்றுச்செல்லும் பள்ளியாகவும் திகழ்ந்திருக்கிறது. இரவு முழுக்க விவாதம், நடைமுறை தந்திரங்கள் பிற நாடுகளின் அரசியல் பண்பாட்டு நிலைமைகள் என பல்வேறு விஷயங்களில் உரையாடல்கள் அமையுமாம். மார்க்ஸ் தன் குழந்தைகளிடம் காட்டும் அன்பு அபாரமானது. குழந்தைகளோடு ஓடி விளையாடுவார். அவர்களின் குழந்தைத்தனமான விளையாட்டுகளில் குழந்தையாக பங்கேற்பார்.
மார்க்சின் ஆண்குழந்தைகள் சிறுவயதிலேயே இறந்துபோனார்கள். பெண் குழந்தைகள் ஆண் குழந்தைகளைப்போலவே படு சேட்டைகளுடன் இருப்பார்களாம். மார்க்சின் மகன் இறந்தபோது அதன் சூழ்நிலையை இப்படி விவாதிக்கிறார்.
அந்த காட்சியை என்னால் மறக்கவே முடியாது. இறந்த தன் குழந்தை அருகே குனிந்து அந்தத் தாய் மௌனமாக அழுது கொண்டிருந்தாள். லென்சன் நின்றபடி அழ மார்க்ஸ் சமாதானம் சொல்வோர் மீது கடுமையாக கோபமிட்டபடி தாங்க முடியாத துக்கத்தில் இருக்க, இருபெண் குழந்தைகளும் சத்தமில்லாமல் அழுதபடி அம்மாவிடம் ஓட்டிக்கொண்டிருந்தன. அவர்களை விட்டால் மரணம் பிடித்துக்கொண்டு போய்விடுமோ என்பதுபோல் அந்தத் தாய் குழந்தைகள் இருவரையும் இறுக்கி அணைத்திருந்தார். செஸ் விளையாட்டில் மார்க்ஸ் காட்டிய ஈடுபாடு குறித்து இவ்வாறு கூறுகிறார்.
மார்க்ஸ் செஸ் விளையாட்டில் இக்கட்டான நிலையில் மாட்டிக்கொண்டால் எரிச்சலடைவார். தோற்றுப்போனால் கடுப்பாகி விடுவார். புதுப்புது உத்திகளோடு களமிறங்குவார். வெற்றிபெற்றால் அறையே எதிரொலிக்கும் அளவிற்கு சத்தமிட்டு சிரிப்பார் பால் லஃபார்கே வின் நினைவலைகள் இன்னும் பல செய்திகளைக் கூறுகிறது.
நான் இந்த உலகத்தின் குடிமகன் என அடிக்கடி கூறிக் கொள்வாராம். பிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலார்ந்து என எந்த நாட்டிற்கு துரத்தப்பட்டாலும் அந்நாட்டில் உருவாகிக் கொண்டிருந்த புரட்சிகர இயக்கத்திற்கு இவரே காரணமாக இருப்பாராம். தான் மார்க்ஸூடன் வேலைபார்த்து வந்ததாகவும் அவரது படைப்புகளை எழுதும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றவன் என்றும் அதே சமயத்தில் அது கடினமான பணி என்றும் பால் லஃபார்கே கூறுகிறார்.
நூலக அறையில் புத்தகங்கள் தாறுமாறாக சிதறிக் கிடைக்குமாம். யாரையும் சரிசெய்ய அனுமதிக்கமாட்டாராம். அந்தந்த புத்தகத்தை அதனதன் இடத்திலேயே அமர்ந்து படிப்பாராம். அவருடைய சொந்த உறுப்புகளைப்போல் பாதுகாப்பாராம். விஞ்ஞானம் ஒரு சுயநலமான இன்பமாக இருக்கக்கூடாது. மனித சமூக தேவைக்கு தங்களின் விஞ்ஞான அறிவை பயன்படுத்துவதில் விஞ்ஞானிகள் முன்னிற்கவேண்டும். விஞ்ஞானம் பற்றிய மார்க்சின் ஜனநாயகப் பூர்வமான கருத்தாக லஃபார்க் கூறுகிறார்.
சாதாரண மனிதனின் வாழ்க்கையைத்தான் மார்க்ஸ் வாழ்ந்துள்ளார். இன்பம் துன்பம் வரவு செலவு இழப்புகள் பொருளாதார சிக்கல்கள் கையறுநிலைமைகள் என அத்தனை அம்சங்களும் நம் வாழ்வைப்போலவே அவர் வாழ்விலும் கடந்து சென்றிருக்கின்றன. ஆனால் அவர் அப்படியே மாய்ந்துவிடவில்லை. நிலையான வீடு மட்டுமல்ல நிலையான நாடே இல்லாமல் அகதியாய் உலகை சுற்றினாலும் இந்த உலகத்திற்கான பொன்னுலகம் மின்னிக்கொண்டிருப்பதை மக்களுக்கு காட்டியவர்.
இரு நண்பர்களின் பார்வையில் என்ன தெரிந்துகொண்டோம்.?
அசாதாரண நிலையிலும் தன் வாழ்க்கையின் பெரும்பகுதியை ஒட்டு மொத்த மக்களின் வாழ்க்கைக்கான உயரிய தத்துவத்தை வரையறுப்பதிலும் நடைமுறைபடுத்துவதிலும் செலவிட்டார் என்பதே ச.சுப்பாராவ் அவர்களுடைய மொழிபெயர்ப்பு, மொழிபெயர்ப்பு போலவே தெரியவில்லை. விறுவிறுவென, எளிமையாக, புரியும் நடையில் வாசிப்பு நகர்கிறது. மிக அற்புதமான பணி. பாரதி புத்தகாலயம் இப்புத்தகத்தை நல்ல அட்டையில், நல்ல தாளில், நல்லமுறையில் அச்சிட்டு வெளியிட்டுள்ளது.